விழுப்புரம்
இந்தியாவில் நவம்பர் 8-ம் தேதி 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்து “பணப்புரட்சி” செய்தார் முதலாளிகளின் கைக்கூலி மோடி. அன்று முதல் நடுத்தர மக்களும், ஏழை எளிய மக்களும் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
உழைக்கும் மக்கள் மீது தொடுத்திருக்கும் இந்த தாக்குதலை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில், பேருந்து நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக 18.11.2016 அன்று மாலை 4.00 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கண்டாச்சிபுரம் ஒருங்கிணைப்பாளர் தோழர். தொல்காப்பியன் அவர்கள் தலைமை தாங்கி பேசுகையில், “மோடி அரசின் இந்த திடீர் அறிவிப்பு என்பது ஏழை எளிய மக்களின் சிறு சேமிப்புகளை பிடுங்கி பெருமுதலாளிகளிடம் ஒப்படைக்கும் சதிசெயல்” என்பதை விளக்கினார்.
அடுத்ததாக, கண்டாச்சிபுரம் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர். ராஜேந்திரன் பேசுகையில், “மக்கள் மீது தொடுத்திருக்கும் இந்தத் தாக்குதலை முறியடிக்க தனித்தனியாக போராடுவது தீர்வு இல்லை. மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும்” என்று அறைகூவல் விடுத்தார்.
அவரைத் தொடர்ந்து, மக்கள் அதிகாரம் விழுப்புரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன்ராஜ் பேசுகையில், “கருப்பு பணத்தை ஒழிக்கப் போவதாக இந்த அரசு கூறுகிறது. உண்மையான கருப்பு பண முதலைகள் யார் என்று இந்த அரசுக்கு தெரியும். அவர்களை பாதுகாக்கிறது இந்த அரசு. இந்த அறிவிப்பால் மக்கள் துன்படுகிறார்கள். இதனை கண்டித்து ஆர்பாட்டத்திற்கு அனுமதி கேட்டால் தர முடியாது என்று மறுக்கிறது காவல்துறை. இவர்கள் கருப்பு பணத்தை ஒழிக்க போகிறார்கள் என்பது கேலிக்கூத்து. கருப்பு பண ஊற்றுகளே இந்த அதிகார வர்க்கம் தான்” என்பதை அம்பலபடுத்தி பேசினார்.
இறுதியாக சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் பேசுகையில் “500, 1000 செல்லாது என்று அறிவித்த உடனே இது மோசடி என்று முதன்முதலில் சென்னையில் போராட்டம் நடத்தி கைதானோம். தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கிறோம். ஏனென்றால் மோடியின் இந்த அறிவிப்பு கருப்பு பணத்தை ஒழிக்காது. பெரும் கருப்பு பணம் அம்பானி, அதானி போன்ற தரகு முதலாளிகளின் கையில் தான் உள்ளது. மோடியோ, அவர்களின் சட்டைப்பையில் உள்ளார். அவர்களின் பெயர் பட்டியலை கூட வெளியிட முடியாத மோடியா கருப்பு பணத்தை ஒழிக்கப் போகிறார். முதலாளிகளின் கைப்புள்ளையாக மோடி இருப்பதால் தான் வங்கிகளில் கடன் பெற்று ஏமாற்றிய கருப்பு பண முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்கிறார். மற்றொரு புறம் இந்த மோசமான அறிவிப்பால் பல திருமணங்கள் நின்று போயுள்ள சூழலில் கர்நாடகாவில் உள்ள பா.ஜ.க-வின் பாசப் பிள்ளைகளான ரெட்டி சகோதரர்கள் குடும்பத் திருமணம் 650 கோடியில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இந்த பணம் எப்படி வந்தது என்ற கேள்வியை கூட மோடி அரசு எழுப்பவில்லை. ஏனென்றால் “கருப்பு பணம்” என்றாலே அது பா.ஜ.க- தான். இந்த கட்டமைப்புக்குள்ளேயே இதனை ஒழிக்க முடியாது. அதற்கு மக்களே தங்கள் அதிகாரத்தை கையில் எடுத்தால் தான் ஒழிக்க முடியும்” என்பதை விளக்கி தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தை பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் இறுதி வரை நின்று கவனித்தனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்:
மக்கள் அதிகாரம்
விழுப்புரம் – 9944117320
உடுமலை
கடந்த 16.11.2016 அன்று மக்கள் அதிகாரம் உடுமலை பகுதியின் சார்பாக ரூ 500, 1000 செல்லாது என்ற மோடியின் கருப்புப்பண மோசடியை அம்பலப்படுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தோழர் மணிகண்டன் தலைமை ஏற்க தோழர் சூர்யா உரையாற்ற தோழர் ஆனந்தராஜ் சிறப்புரையாற்றினார்.
தோழர் சூர்யா தனது உரையில் “சாமான்ய மக்களுக்கான பாதிப்பு குறித்தும் கறுப்பு பண மீட்பு என்ற கூற்று எவ்வளவு மோசடியானது, சினிமாவில் வருவதுபோல பாதாளத்தில் யாரும் பதுக்கி வைப்பது இல்லை. மாறாக வெளிநாட்டு நீதி நிறுவனங்களின் மூலமாக இந்தியாவிற்குள் வெள்ளை பணமாக உள்ளே வருகின்றது. 7.5 லட்சம் கோடி வராக்கடன், பனாமாலீக்ஸ், ஸ்விஸ் வங்கியில் வைத்திருக்கும் கருப்புப்பண முதலைகளின் பட்டியில் வெளியிடத்திற்கான காரணம் என்ன? என்பதை விளக்கியும் இந்த அரசியல் அமைப்புக்குள் தீர்வு இல்லை மக்கள் அதிகாரமே தீர்வு என்பதை வலியுறுத்தினார்.
தோழர் ஆனந்தராஜ் பேசும்போது எவ்வளவு பெரிய மோசடி என்றும் பணமே இல்லாமல் வர்த்தகம் செய்யும் திட்டம் வரப்போவது குறித்தும் பேசினார். மோடியின் தேர்தல் வாக்குறுதியில் நான் தப்பு செய்தால் தண்டித்து விடுங்கள் என்று கூறினார். இப்போது அவர் செய்த தவறை ஆதாரத்துடன் வெளியிடுகிறோம். அவர் தண்டித்து கொள்வாரா என்று பேசினார்.
ஆர்ப்பாட்டம் மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகளின் காட்சி விளக்கம் அதாவது ஸ்விஸ் வங்கி மற்றும் கார்ப்பரேட் முதலாளிகளோடு மோடி செஃல்பி எடுக்கும் போது விவசாயிகளும் தொழிலாளிகளும் வஞ்சிக்கப் படுவது போல காட்சி விளக்கம் கொடுக்கப்பட்டது, மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
வேறு எந்த கட்சியும் செய்யாத வேளையில் மக்கள் அதிகாரம் போராடுவதாக மாற்று கட்சியினர், ஆதரவாளர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்:
மக்கள் அதிகாரம்
உடுமலை – 97885 58526
சீர்காழி
மோடியின் கருப்புப் பண நாடகத்தைக் கண்டித்து 18.11.16 மாலை 5 மணிக்கு சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது, இதில் மக்கள் அதிகாரத்தின் தோழர் த. ரவி தலைமையேற்று நடத்தினார்.
இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ – விடுதலை), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மா.லெ -மக்கள் விடுதலை), திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புத் தோழர்கள் கண்டன உரையாற்றினர்.
இந்த தெருமுனைப் பிரச்சாரத்திற்கு காவல் துறை அனுமதியளிக்க மறுத்து அடாவடி செய்தது. அதன் பின்னர் ஒரு மணி நேரம் மட்டும் பிரச்சாரம் செய்யலாம், நாற்காலி போடக்கூடாது என எழுதி வாங்கிக் கொண்டு அனுமதி அளித்தனர், அதைத் தாண்டி 2 மணி நேரத்துக்கும் மேலாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அருகில் பாரத ஸ்டேட் வங்கியின் முன் வரிசையில் இருந்த மக்களும், பொதுமக்களும் பரவலாக இந்நிகழ்வைப் பார்த்துச் சென்றனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்
சீர்காழி – 9843480587