கண்ணிர் விட வேண்டாம்!
கண்டோபா,
எல்லம்மா,
சாந்த துர்கா.1
கேட்கின்ற கடவுளரின்
பலிபீடத்தில்,
எங்கள் குழந்தைகளை
மறுக்காமல் படைக்கின்றோம்.
கேட்கின்ற
ஆண்களுக்கு
கசங்குகின்ற பாயாக,
விரிக்கின்றோம்
எங்கள் பெண்களை
அம்மாவைப் புணருகின்ற,
சதைப்பிண்டங்கள் நாங்கள்.
ஊமை விலங்குகள்.
நினைத்துப் பார்க்க
வாழ்க்கை
என்று ஏதுமில்லை.
என்ன இருந்தாலும்
தவறுதான்
என்பீர்கள்
எங்களுக்கும் புரிந்ததுதான்.
முன்னோர்கள்
செய்தார்கள்
இன்று நாங்கள் –
நாளை
எங்கள் குழந்தைகள்
வாழையடி வாழையாக,
அன்று
கூர்முனை வாளால்
சம்புகனை
வெட்டிக் கொன்றான்
ராமன்.
ராமராஜ்யம்
கண்களை
மூடிக் கொண்டோம்
இன்று வரை
திறக்கவில்லை.
மன்றாடுகிறோம்
கெஞ்சுகிறோம்
உங்களை
கையெடுத்துக் கும்பிடுகிறோம்
கண்ணீர் விட வேண்டாம்
கருணை
காட்டவும் வேண்டாம்.
வாழ்க்கை அழுக்கின்
வீச்சம் குமட்டும்
எங்கள் கந்தைகளை
நீங்களொன்றும்
அலசிப் பிழிய வேண்டாம்
ஆண்டுக்கொருமுறை.
ஆம்.
பல நூற்றாண்டுகளாய்
இந்த உலகம்
பார்த்துப் பழகியதுதான்
எங்கள் அம்மணம்.
வேண்டாம்
மீண்டும் ஒரு முறை
உருவாதீர்கள்
எங்கள் ஆடைகளை –
இந்த உலகின் முன்.
– அனுராதா குரவ்
குறிப்பு 1: கர்நாடக மாநிலத்தின் தாசி குலத்தினரின் குல தெய்வங்கள் இந்தக் கடவுள்களின் கோயிலில்தான் பொட்டுக்கட்டும் சடங்கு நடக்கும்.
பெண் கவிஞர்களின் புதிய குரல் என்ற கவிதை நூலில் உள்ள கவிதையை ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்து வெளியிடுகிறோம்.
ஆங்கிலக் கவிதை அனுப்பியவர் – வாசகர் பாரி செழியன், குட்டி மேக்கிபட்டி.
புதிய கலாச்சாரம், பிப். மார்ச் 1995.