அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வானதும் NRI(Non Resident Indians) எனப்படும் அமெரிக்கவாழ் இந்தியர்களில் பெரும்பாலானோர் என்ன நினைத்தனர்? வேலை வாய்ப்புக்களில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை தருவார்; நாம் கூடியவிரைவில் விரட்டிவிடப் படுவோம் என்றெல்லாம் கவலைப்பட்டனர். இந்தியாவைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனங்களும் இது போன்ற ஒரு அச்ச உணர்வையே கொண்டிருந்தன. தங்களின் நலன்களிலிருந்து இவர்கள் டிரம்பை மதிப்பிடு செய்கின்றனர். ஆனால் டொனால்ட் டிரம்ப் ஆனாலும் சரி, ஒபாமாவானாலும் சரி, இல்லை புஷ், கிளிண்டன் வகையறாக்களானாலும் சரி; ஏகாதிபத்தியத்தை எவ்வாறு அதிவேகமாக நடைமுறைப்படுத்துவது என்பது ஒன்று மட்டுமே இவர்களின் குறிக்கோளாகும். இதற்குத் தடையாக யார் வந்தாலும் சரி, அது தன் சொந்த மக்களாகவே இருந்தாலும் கொன்றுகுவிக்கக்கூட தயங்க மாட்டார்கள்.
அமெரிக்காவின் வடக்கு டகோட்டா மாகாணத்தில் சுமார் $3.8 பில்லியன் டாலர் திட்ட மதிப்பிலான வேலைகளை டகோட்டா ஆக்சஸ் பைப்லைன் எண்ணெய் நிறுவனம்(DAPL) மேற்கொண்டு வருகிறது. பூர்வகுடி மக்களின் ஒருங்கிணைந்த போராட்டம், உள்ளூர், தேசிய அளவிலான ஆதரவு என்று விரிவடைந்த போராட்டம் இன்று முன்னாள் இராணுவ வீரர்களின் ஆதரவோடு வீரியமடைந்துள்ளது. இவர்களில் பலர் அமெரிக்காவின் பற்பல ஆக்கிரமிப்புப் போரில் கலந்து கொண்டவர்கள்.
இந்த மக்கள் போராடும் போர்க்களத்தின் தன்மை தான் நம்மை மிகவும் நெகிழவைக்கிறது. உறைபனி மற்றும் பனிப்புயலுக்குப் பெயர் பெற்ற அந்த இடத்தில் சற்றும் தளராத மக்கள் உறைபனி பொழியும் அந்த வெட்டவெளியிலேயே தங்குமிடம் அமைத்துப் போராடி வருகின்றனர். உறைபனி மட்டுமன்றி அதனோடு சேர்ந்து வீசும் வேகமான குளிர்காற்றில் எதிரில் வருவோரைக்கூடக் காண இயலாது. முதலாளித்துவத்தின் கொடூர குணம் இவர்களை இப்படிப் போராட வைத்துள்ளது. மிசோரி நதியின் கீழ் எண்ணெய் குழாய் அமைக்க முயற்சிக்கும் அந்த நிறுவனத்தைச் செயல்படாமல் தடுக்க வைக்க இப்படியான ஒரு போராட்டத்தை முன்னெடுக்காமல் பன்னாட்டு நிறுவன முதலாளிகளை வீழ்த்த முடியுமா என்ன? மக்களின் அவல நிலையைப் பார்த்து ஒரு காலத்தில் அரசுக்கு ஆதரவாகப் போரில் ஈடுபட்ட முன்னாள் இராணுவத்தினர் கூட மக்களோடு கைகோர்த்துள்ளனர்.
அமெரிக்காவில் பணியாற்றும் தமிழக நண்பர் ஒருவரிடம் இதுகுறித்துப் பேசுகையில், அமெரிக்க அரசாங்கம் இப்போது அந்த முன்னாள் இராணுவ வீரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதாவது போராட்டத்தில் பங்கேற்பதைத் தவிர்த்தால் பல சலுகைகள் கூடுதலாகத் தரப்படும்; மேலும் எந்த சட்டப்பூர்வமான நடவடிக்கையும் பாயாது என்ற ஆசையைக் காட்டுகிறது அரசு. ஆனால் இராணுவ வீரர்களோ இவர்களது சலுகைகளை எதிர்பார்த்திருந்தால் போரட்டத்திற்கே வந்திருக்க மாட்டார்கள். இன்றைக்கு முன்னாள் இராணுவ வீரர்களுக்கு வந்திருக்கும் புரிதல் இந்நாள் இராணுவ வீரர்களுக்கும் வரும் போது அமெரிக்காவின் படையில் சண்டை போட ஆள் இருக்காது.
அமெரிக்க பூர்வகுடி மக்கள், பிற மக்கள் ஆதரவோடு நடத்தும் இந்தப் போராட்டத்தை அமெரிக்க ஊடகங்களே அதிகம் காட்டுவதில்லை. அவர்கள் காட்டாததால் இந்த போராட்டம் நிற்கப் போவதில்லை.
__________
நீர்ப் பாதுகாவலர்கள் என்றழைக்கப்படும் போராளிகளோடு இணைந்து போராட்டத்திற்காக அணிவகுக்கத் தயாராகும் முன்னாள் இராணுவத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள்
கடும் உறைபனி பொழிவுக்கு மத்தியிலும் மண்ணைக் காக்க முழக்கமிடும் மக்கள்
வடக்கு டகோட்டாவைச் சேர்ந்த தேசிய பாதுகாப்புப் படையின் வாகனங்கள் போராளிகளை ஒடுக்கும் வண்ணம் தேசிய நெடுஞ்சாலை 1806-ல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆர்வலர்கள் தங்குவதற்காகக் கூடாரம் அமைக்கின்றனர்.
முன்னாள் இராணுவ வீரர்கள், பேக்வாட்டர் பிரிட்ஜ்(Backwater Bridge) என்ற இடத்தில் நீர்ப் பாதுகாவலர்களுடன் போராட்டத்தில் இணைகின்றனர்.
வீறுநடை போட்டுச்செல்லும் முன்னாள் இராணுவ வீரர்
ஒட்டுமொத்த போராட்டக்குழுவும் பேக்வாட்டர் பிரிட்ஜ் என்ற இடத்தில் போடப்பட்டுள்ள தடுப்பு வேலிகளை நோக்கி முன்னேறுகிறது.
முழக்கமிட்டுச் செல்லும் போராட்டக் குழுவினர்
படங்கள் : நன்றி – RT