காஞ்சிபுரம்
கடந்த ஜனவரி 17 முதல் 23 வரை சென்னை மெரினாவில் துவங்கிய போராட்டம் மதுரை கோவை திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் ஜல்லிகட்டு உரிமைக்கான போராட்டமாக துவங்கி தமிழக மக்களின் உரிமைக்கான போராட்டமாக வளர்ந்தது. பல லட்சகணக்கான மக்கள் திரண்ட போராட்டம் பாசிச மோடி தலைமையிலான மத்திய அரசையும் மாநில அரசையும் பணிய வைத்தது.
மாணவர்கள் – இளைஞர்கள் துவங்கிய இப்போராட்டத்தில் “மக்கள் அனைவரும் உணர்வுப் பூர்வமாகவும் சுய கட்டுப்பாட்டுடனும் போராடியது அரசு அதிகார வர்க்கத்திற்கு அச்சத்தை ஏற்படுத்தியது. வெற்றியடைந்து விட்டோம் என்ற பெருமித உணர்வை அனுபவத்தையும் மாணவர்கள் இளைஞர்கள் மக்கள் பெற்று விடக் கூடாது என்பதற்க்காகதான் போலீசு கும்பல் கொலை வெறித் தாக்குதலை நடத்தியது. இதற்கெதிராக மக்களை திரட்டி உடனடியாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என்ற அடிப்படையில் மாவட்ட தலைநகரான காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே “ போலீசு ராஜ்ஜியம் காட்டு மிராண்டி தர்பாரை கண்டித்து ” என்ற முழக்கத்தின் அடிப்படையில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் தோழர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
தனது தலைமை உரையில் “போலீசின் காட்டு மிராண்டித் தனத்தை கண்டித்தும் மாணவர்கள் – மக்கள் போராட்டத்தை உயர்த்திப் பிடித்தும் பேசினார். அதைத் தொடர்ந்து போலீசின் கொலை முகத்தை அம்பலப்படுத்தியும் அதன் தாக்குதலை கண்டித்தும் அதேப் போல மோடி தலைமையிலான மத்திய அரசை அம்பலப்படுத்தியும் முழக்கமிடப்பட்டது. அடுத்து பு.மா.இ.மு – வின் தோழர் துணை வேந்தன் பேசுகையில் ” இளைஞர்களின் போராட்டத்தில் சுயகட்டுப்பாடும் ஒழுங்கும், அதிகார வர்க்கத்தின் அதிகாரத்தையும் அவர்களது இருப்பையும் செல்லா காசாக்கி விட்டது. மாணவர்கள் எல்லாவற்றையும் பேசினார்கள் அதன் விளைவு கோக் –பெப்சி புறக்கணிக்கும்படி முழங்கிய அவர்களது முழக்கம் நடை முறை சாத்தியமாயிருக்கின்றது இப்படிப்பட்ட சீரிய போராட்டத்தை திட்டமிட்டுதான் போலீசு தாக்குதல் நடத்தி தடுத்திருப்பதை சுட்டிக்காட்டி தமது கண்டனத்தை பதிவு செய்தார்”
இறுதியாக கண்டன உரையாற்றிய பு.ஜ.தொ.மு – வின் மாவட்டச் செயலாளர் தோழர் சிவா பேசுகையில் ”மாணவர்கள் – இளைஞர்கள் மெரினாவில் மூட்டிய தீ தமிழகம் முழுவதும் பற்றி படர்ந்தது. தன்னெழுச்சியாக திரண்ட பல லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களை ஒழுங்குப்படுத்தியதும் அதற்கு கட்டுப்பட்டு மற்றவர்கள் ஒத்துழைப்புக் கொடுத்தது என்பதை மக்கள் ஒவ்வொருவரும் போராட்டத்தை உணர்வு பூர்வமாக பார்த்தனர்”. நாளை ஒவ்வொரு பிரச்சனைக்கும் இப்படி திரண்டு விட்டால் தமது கொள்ளையை, சுரண்டலை நடத்த முடியாது அல்லவா ! அதன் வெளிப்பாடுதான் போலீசு கும்பலின் கொலை வெறித்தாக்குதல். இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டு உத்தரவிட்டது RSS – ன் அடியாளான ஆளுநர் வித்யசாகர்தான் இதற்கு பன்னீரும் பக்க வாத்தியம் வாசித்திருக்கின்றார். இந்த போலீசு கும்பலை தற்போது இருக்கும் சட்ட – நீதிமன்ற முறையில் ஒரு போதும் தண்டிக்க முடியாது. இதுவரை தண்டித்ததாக வரலாறும் இல்லை. ஏனெனில் மக்களுக்கு எதிராக இருக்கும் அரசமைப்பின் ஒர் அங்கம்தான் இந்த போலீசு. ஆகவே மக்களுக்கு எதிராக இருக்கும், நிலுவுகின்ற அரசமைப்பை துக்கியெறிந்து விட்டு மக்களுக்கு அதிகாரம் அளிக்க கூடிய புதிய ஜனநயக புரட்சிக்கு அணி திரள வேண்டுமென கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
அதைத் தொடர்ந்து முழக்கமிடப்பட்டது இப் போராட்டத்தில் மாணவர்களும், இளைஞர்களும், AX கிளை தொழிலாளர்களும், பெண்களும் உணர்வுடன் முழக்கமிட்டனர். இறுதியாக மாவட்ட செயற் குழு உறுப்பினர் தோழர் பழனி வேல் நன்றியுரையுடன் ஆர்பாட்டம் நிறைவுற்றது.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
காஞ்சிபுரம் மாவட்டக்குழு
8807532859.
***
கும்மிடிப்பூண்டி
போலீசு ராஜ்ஜியம்: காட்டுமிராண்டி தர்பாரைக் கண்டித்து…. கண்டன தெருமுனைக்கூட்டம்.
ஜல்லிக்கட்டு நடத்த கோரி தமிழகமெங்கும் அமைதிவழியில் போராடிய மாணவர்கள் மீது போலீசு நடத்திய வெறியாட்டத்தைக் கண்டித்து பு.ஜ.தொ.மு சார்பாக, கடந்த 02.02.17 அன்று மாலை 5 மணியளவில் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் அருகே கண்டன தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. பு.ஜ.தொ.மு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட குழு உறுப்பினர் தோழர் ஆனந்தபாபு தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் SRF புதிய ஜனநாயக தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தோழர் ரமேஷ் தனது கண்டன உரையில், போலீசை நாம் கண்டிக்க தனியாக கூட்டம் போட்டு கண்டிக்க தேவையில்லை! மக்களே போலீசை பற்றி நன்கு அறிந்து கொண்டுள்ளனர் என்பதையும், மூன்று நாள் தன்னுடைய மெரினா அனுபவத்தில் இளைஞர்களிடமிருந்து கற்றுகொள்ள வேண்டிய அவசியத்தை விளக்கி பேசினார். மேலும் இளைஞர்களின் போராட்டம் என்பது ஜல்லிக்கட்டோடு நின்று விடக்கூடாது. தொடர்ச்சியாக நடைபெறவேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஜனநாயக தொழிற்சங்க மையத்தின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் தோழர் அப்பு தனது கண்டன உரையில் போலீசு திட்டமிட்டு வன்முறை நடத்தி, நடுக்குப்பத்தில் மீன் சந்தையை கொளுத்தியது மட்டுமல்லாமல் அங்கிருந்த மீன்களையும் திருடிச் சென்றுள்ளனர். இது கேவலமாக இல்லையா என சாடினார். இனி வரும் தருணங்களில் புரட்சிகர அமைப்புகள் ஒன்றிணைந்து பாசிச அரசுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது என வலியுறுத்தினார்.
இறுதியாக, பு.ஜ.தொ.மு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் தோழர் இரா.சதீஷ் கண்டன உரையில், போலீசின் வன்முறை வெறியாட்டம் நடத்துவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே நம் கண் முன்னே பல உதாரணங்கள் நடைபெற்றுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் போலீசு உள்ளே புகுந்து வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளை தாக்கியது கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம், முல்லை பெரியாறு போராட்டத்தின் போது போராடிய லட்சக்கணக்கான விவசாயிகளை தாக்கியதை சுட்டிக்காட்டினார். போலீசு என்பது ஒரு அடக்குமுறை கருவி என்பதை நாம் புரிந்துகொள்ள மேற்கண்ட நிகழ்வுகளில் உணரவேண்டும் என்று பேசினார். அரசாங்கத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பில், தான் ஏற்று கொண்ட வேலைகளிலிருந்து எதிராக செயல்படுவது மட்டுமல்லாமல், அதனை திமிர்த்தனமாக செய்யும் அளவிற்கு நடைமுறையில் இன்று மாறிவருகிறது. இதனை மக்கள் சக்தியால் வெல்ல முடியும்! என்பதை வலியுறுத்தி பேசினார்.
இந்த கூட்டத்தின் வாயிலாக,
மெரினா போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களையும், இளைஞர்களையும் உடனடியாக எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் பஞ்சாயத்த கலைக்கப் பார்த்தாரு பன்னீரு, சுப்புர.. சுப்புர.. சுப்புமணி சாமி என்ற இரண்டு பாடல்கள் பாடியதில் பெரும் வரவேற்பு கிடைத்தது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தில் கண்டன முழக்கமிட்டு தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டம்.
94444 61480
***
சென்னை பட்டாபிராம்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் 02.02.2017 அன்று மாலை 5.30 மணி முதல் 8 மணி வரை பட்டாபிராம் பேருந்து நிலையம் அருகில், மெரினாவில் கலவரம் செய்த போலீஸ் அதிகாரிகளை கண்டித்து: எழுந்து நின்ற தமிழகமே! எதிர்த்து நில்! என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட பகுதிக்கு உட்பட்ட கிளை மற்றும் இணைப்பு சங்கத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.
தலைமையுரை ஆற்றிய தோழர் சரவணன், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டமாக மட்டும் இப்போராட்டத்தை சுருக்கி பத்திரிக்கைகளும், ஊடகங்களும் பிரச்சாரம் செய்கின்றன. தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டம் மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும், தமிழகத்தின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு வருவதற்கு எதிராக தமிழகத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களும் மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவளித்தனர். அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தை மத்திய-மாநில அரசுகளின் துணையோடு, காவல்துறையினர் கலவரமாக்கினர் என்றும், கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி பேசினார்.
டிஐ மெட்டல் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் சக்திவேல், கூட்டத்தை வாழ்த்தி பேசினார். குறிப்பாக சரியான நேரத்தில் காவல்துறையை கண்டித்து இத்தெருமுனைக் கூட்டம் நடைபெறுவதாகவும். மக்கள் எந்த பிரச்சனைக்காக போராடினாலும் முதலில் வருவது காவல்துறையினர் தான் என்றும், ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கையும் காவல்துறையினர் தான் பாதுகாப்பது போல் போலி மாயையை உருவாக்க முனைகின்றனர். ஆனால் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு நடத்திய போராட்டத்தில் ஒரு வன்முறையோ, வழிப்பறியோ, அசம்பாவிதங்கள் இன்றி கட்டுக்கோப்புடன் நடைபெற்றது. இதனை கலவரமாக்கியது காவல்துறையினர் தான் என்றும், அவர்களை தண்டிக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தை நடத்த வேண்டும் என கூறினார்.
இத்தெருமுனைக் கூட்டத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் செயலாளர் தோழர் முகிலன் சிறப்புறையாற்றினார். காவிரி பிரச்சனை, பாலாற்றில் தடுப்பணை, சிறுவானி ஆற்றில் புதிய அணை டெல்டா விவசாயிகள் தற்கொலை, நீட் தேர்வு, நியூட்ரினோ,கெயில்,மீத்தேன் திட்டங்கள் திணிப்பு ஆகிய ஒட்டு மொத்த பிரச்சனையில் மத்திய – மாநில அரசுகளை கண்டித்து நடைபெற்ற போராட்டம். மீனவர் குடியிருப்புகளை குறி வைத்து தாக்கியுள்ளனர், வீடுகளை அடித்து உடைத்தும், குடிசைகளுக்கும், ஆட்டோக்களுக்கும் தீவைத்தும், வாகனங்களை அடித்து நொறுக்கியும், அப்பகுதி பெண்களுடைய சுருக்கு பை மற்றும் உடைமைகளை திருடியும், தஞ்சம் புகுந்த மக்களுக்கு அரணாக நின்ற மக்களை கண்மூடித்தனமான முறையில் தாக்கியும் வாழ்வாதாரத்தையே சூறையாடியுள்ளனர். கலவரத்தை செய்த காவலர்களையும், வழிநடத்திய அதிகாரிகளையும் கைது செய்யாமல், 250-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். காவல்துறையினர் தான் நாட்டில் சீருடை அணிந்த சமூக விரோத கும்பல் என்றும், அவர்களுடைய சமூக விரோத நடவடிக்கைகளை பட்டியலிட்டு அம்பலத்தினார். காவல் அதிகாரிகளை சஸ்பெண்டு செய்து சிறையிலடைக்க வேண்டும், கைது செய்யப்பட்ட அப்பாவி மக்களை எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அனைத்து உரிமைகளுக்காகவும் நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு போராட வேண்டும் என கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் லெட்சுமணன் நன்றியுரையாற்றினார். பகுதி மக்கள் அனைவரும் கூட்டத்தை ஆங்காங்கே நின்று கவனித்தனர்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
***
பட்டுக்கோட்டை
ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு எதிரான போலீசின் ரவுடித்தனத்தைக் கண்டித்து 01.02.2017 காலை 10.30 மணிக்கு பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் மக்கள் அதிகாரம் மண்டலக்குழு உறுப்பினர் தோழர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது.
சமுக ஆர்வலர் ராமசாமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தோழர் C.பக்கிரிசாமி, தமிழ்நாடு விவசாய சங்க வட்டாரத் தலைவர் தோழர் ராமலிங்கம், உழைக்கும் மக்கள் கட்சி தோழர் மாரிமுத்து, திருவாரூர் மாவட்ட மக்கள் அதிகாரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் முரளி, கவிஞர் முருகையன், மக்கள் அதிகாரம் தோழர் ராஜா ஆகியோர் ஜல்லிக்கட்டுக்கு எதிரான போலீசின் அராஜக ரவுடித்தனத்தைக் கண்டித்தும் குறிப்பாக விசாயிகள், விவசாய தொழிலாளர்கள், உழைக்கும் வர்க்கத்தைச் உழைப்பாளிகள் மற்றும் ஒட்டுமொத்த மக்களுக்கும் இந்த அரசு கட்டமைப்பு எதிராக நிற்கிறது, பச்சை துரோகம் செய்கிறது என்பதை தோலுரித்துக் காட்டினார்கள்.
பெண்கள், சிறுவர்கள் மற்றும் மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
மக்கள் அதிகாரம்
பட்டுக்கோட்டை
***
தருமபுரி
போலீசு ராஜ்ஜியம்…. எழுந்து நின்ற தமிழகமே! எதிர்த்து நில்! என்கிற முழக்கத்தின் கீழ் தருமபுரியில் மக்கள் அதிகாரம் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழமகத்தின் உரிமைகள் பல பறிக்கப்பட்ட நிலையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டையும் ஜல்லிக்கட்டுக்கும் தடைவிதித்தது டெல்லிக்கட்டு. அந்த டெல்லிக்கட்டுக்கு எதிராக மெரினாவில் லட்சகணக்கான மாணவர்கள் இளைஞர்கள் ஒன்று கூடி எந்த அரசியல் கட்சிகளையும் அனுமதிக்காமல் அமைதியான வழியில் போராடிக்கொண்டிருந்த மாணவர்கள் போராட்டத்தை கண்டு உலகமே வியக்கும் வண்ணம் அமைந்த அந்த போராட்டத்தை காவிக்கூட்டமும், காவல்துறையும் கைக்கோர்த்துக்கொண்டு காட்டுமிராண்டிதனமாக தாக்கியும், மீனவ குடும்பங்களை தாக்கியும், அவர்களுடைய சொத்துக்களையும் துவசம் செய்து வெறிக்கொண்டு தாக்கியதையும் உலகமே அறியும்.
போலீசின் ரவுடித்தனத்தை அம்பலப்படுத்தி தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் பல்வேறு கட்ட பிரச்சாரங்களையும், கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகிறது. அதனுடைய ஒரு பகுதியாக தருமபுரியில் 03.02.2017 அன்று மாலை 3 மணியளவில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. காமராஜர் சிலையிலிருந்து பறையிசை முழங்க போலீசு ராஜ்ஜியத்தை அம்பலப்படுத்தி வழிநெடுகிலும் பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. இதனை ஆயிரகணக்கான மக்கள் நின்று கவனித்தனர். ஆர்ப்பாட்டத்தினை தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர். முத்துக்குமார் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், சமூகத்தில் வாழ்வுரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக போராடும் மக்களை எங்குபார்த்தாலும் போலீசு கடுமையாக ஒடுக்கி வருகிறது. மெரினாவில் லட்சகணக்கான மக்கள் ஜல்லிக்கட்டுக்காக தொடங்கிய போராட்டம் அடுத்தடுத்து காவிரிப் பிரச்சினை, விவசாயி பிரச்சினை, மீத்தேன் திட்டம், மீனவர் பிரச்சினை, கல்வி உரிமை பரிப்பு நோக்கி வடிவமெடுத்தது. அப்படி வடிவமெடுக்கும் போதுதான் மோடியும், ஓபிஎஸ்-ம் இந்த அடக்கு முறையை ஏவிவிட்டனர். மக்களின் பாதுகாவலன் மக்களின் நண்பன் எனறு சொல்லிக்கொள்ளும் போலீசு, மக்களின் சொத்துக்களை சூறையாடி தாக்குகிறது. எனவே அரசின் உறுப்பாகிய போலீசும், ராணுவமும் ஆக்டோபஸ் போல மக்களின் உரிமைகளை பறிக்கிறது. இந்த அரசமைப்பே மக்களுக்கு எதிரானது. எனவே ஜல்லிக்கட்டுக்காக லட்சகணக்கான மக்கள் ஒன்றிணைந்தது போல ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்காகவும் போராட வேண்டிய தருணமிது என்று அறைகூவினார்.
அடுத்தாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தருமபுரி மண்டல செயலாளர் நந்தன் பேசுகையில் இந்திய பேரரசால் காவிரி, முல்லை, பாலாறு, மீத்தேன், அணுஉலை என பல்வேறு திட்டங்களால் தமிழினம் வஞ்சிக்கபடுகிறது. தமிழகத்தின் பண்பாடு கலாச்சாரத்தில் கைவைத்ததின் விளைவாக லட்சகணக்கான மாணவர்களும் இளைஞர்களும் ஒன்றிணைந்து அறவழியில் சாதி, மதம் கடந்து குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டு போராடினார்கள். இந்திய பேரரசுக்கு எதிராக, பண்பாட்டை மீட்டெடுக்கும் போராட்டம் நாளுக்கு நாள் அரசியல் பரிமாணமாக மாறியதன் விளைவாக இவ்வளவு பெரிய வன்முறையை கட்டவிழ்த்துவிடப்பட்டுருக்கிறது. தமிழக வரலாற்றில் பரமக்குடி, மாங்குடி, திட்டக்குடி என்று போலீசால் ஒடுக்கப்பட்டுள்ளன. எனவே மிகப்பெரிய காண்டுமிராண்டி, ரவுடித்துறை என்றால் போலீசும், ராணுவமும்தான். இப்படி காஷ்மீரில் இராணுவம் அத்துமீறுகிறது. தமிழகத்தில் போலீசு அத்து மீறுகிறது. இந்தியாவில் மிகப்பெரிய பயங்கரவாதி பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் -ம் தான் இவர்கள் கூட்டம் போட, கொடிபிடிக்க அனுமதி வாங்கவேண்டியதில்லை, ஆனால் மக்கள் அதிகாரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி புடிச்சாலோ குச்சி வைத்து இருந்தாலே தேச விரோதி என்கிறார்கள். காக்கி உடையும், மிடுக்கு மீசையும் யாருக்காக, மேட்டுக்குடிக்காக இருக்கிறார்கள். எனவே அதிகாரத்தை சாதி, மதவாத சக்திகளோடு கைக்கோர்த்து செயல் படுவதை காவல்துறை கைவிடவில்லை என்றால் தமிழகம் மீண்டும் மக்கள் புரட்சியாக வெடிக்கும் என்று காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்தார்.
ஓய்வு பெற்ற ஆசிரியர் திருவேங்கடம் பேசுகையில், மக்களுக்கு நடக்கும் தீய செயலுக்கு எதிராக குரல் கொடுக்கும் இயக்கம்தான் மக்கள் அதிகாரம். சாதி, மதம் கடந்து மாற்றுக்கட்சியினர் ஆசிரியர்கள் உட்பட எங்களை எல்லாம் ஒன்று சேர்த்த மக்கள் அதிகாரத்திற்கு நன்றி. ஜனநாயக நாட்டில் விளையாட கூட உரிமையில்லை, ஐல்லிக்கட்டை நடத்த முடியவில்லை என்று மன்னிப்பு கேட்கிறார் மத்தியமைச்சர் என்றால் இதற்காகவா இவர்களுக்கு ஓட்டுப்போட்டோம். இவர்களை நம்பி ஜல்லிக்கட்டை நடத்த முடியாது போராடினால் தான் தீர்வு என்று அறவழியில் போராடிய மாணவர்களுக்கு பரிசு கொடுக்காமல் லத்திசார்ஜ் கொடுக்கிறார்கள். இருப்பினும் லட்சகணக்கான மாணவர்கள் ஒன்று சேர்ந்து உறுதியாக போராடியது நாங்க எல்லாம் வாழமுடியும் என்ற தன்னம்பிக்கை ஏற்படுத்திருக்கிறது. எனவே தாக்கப்பட்டவர்களுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும், கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும். அதோடு தமிழகம் வீறுகொண்டு எழுந்துவிட்டது இனிமேல் எங்களை ஒன்றும் செய்யமுடியாது என்று கூறினார்.
சி.பி.எம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அர்ச்சுணன் பேசுகையில், தமிழகத்தில் ஜனவரியில் கடுமையான வறட்சி, 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறப்பு, குடிநீர் பஞ்சம், நீட் தேர்வு என பல்வேறு பிரச்சினைகளால் ஆசிரியர், அரசுஊழியர்கள் என பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். எல்லா போராட்டங்களிலும் காவல் துறை வஞ்சகம் செய்துள்ளது. ஜல்லிக்கட்டு மத்திய அரசு கண்டுகொள்ளாத நிலையில் எதிச்சதிகார ஆட்சிக்கு எதிராக ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தொடங்கி விவசாயத்துக்கும் போராடுவோம் என்று அடுத்தக்கட்ட நகர்வை எடுத்த போது லத்தி கம்பு நிற்கிறது. அடுத்ததாக கடுமையான அடக்குமுறையை ஏவிவிடுகிறது. தண்ணீர் பிரச்சினைக்கு ரோட்டுக்கு வந்தால் போலீசின் லத்தி வருகிறது. அதே பால்குடம்,தேன் குடம், ஆர்.எஸ்.எஸ்-ன் ஸ்வாக நடத்தினால் பாதுகாக்கிறது அவர்கள் அனுமதி வாங்க தேவையில்லை, இதிலிருந்தே காவல்துறையில் எந்த அளவிற்கு ஆர்.எஸ்.எஸ் ஊடுருவியிருக்கிறது என்பதை பார்க்க முடியும். காவல் துறை என்பது அடக்குமுறை கருவி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அடக்குமுறைகள் வர, வர உழைக்கும் மக்கள் திரண்டு முறியடிப்பார்கள் என்பதுதான் வரலாறு என்றார்.
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மாவட்ட செயலாளர் ஜானகிராமன் பேசுகையில், பயங்கரவாதம், தீவிரவாதம் சேர்ந்ததுதான் போலீசு ராஜ்ஜியம். போலீசே வகுத்துக்கொண்ட சட்டத்தை பூட்சு காலால் புதைத்துவிட்டு ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்களை தாக்கியிருக்கிறார்கள். இது உலகத்திலே நடக்காத ஒன்று. மிருகம் வேட்டையாடுவதை போல இங்கே மக்களை வேட்டையாடிருக்கிறார்கள் . தன்னெழுச்சியாக எழுந்த போராட்டம் ஒரு தலைமையின் கீழ் திரண்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த தாக்குதல். கல் எடுத்து மண்டையை உடைக்கிறது காவல் துறை இந்த செயலை ரவுடிகள்தான் செய்வார்கள் . இந்த ரவுடிதனத்தின் மூலம் 7 கோடி தமிழ் மக்களுக்கும் பல கோடிகளை செலவு செய்து அம்பலப்படுத்த வேண்டியதில்லை போலீசே அம்பலப்படுத்திக் கொண்டது. இந்த அரசுகட்டமைவில் நேர்மையாக வேலை செய்யமுடியாது, அதுதான் விஷ்னுபிரியா தற்கொலை எனவே போலீசு, நீதீமன்றம், சட்டமன்றம், எல்லாமே பீட்டாவுக்காக இருக்கிறது. மான்சாண்டோ, பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்களை பாதுகாப்பதற்காக இருக்கிறது. இவர்களை வீழ்த்துவதை தவிர நமக்கு வாழ்வு இல்லை, தாக்குவோம், போராடுவோம் வெற்றிபெறுவோம் என்றார்.
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி செயலாளர் தோழர் பரசுராமன் பேசுகையில், ஜல்லிக்கட்டு போராட்டம் மோடியின் அதிகாரம் தமிழகத்தில் செல்லாது என்பதை நிருபித்திருக்கிறது. பெரியார் பிறந்த மண்ணில் பார்ப்பன பண்பாட்டுக்கு ஒரு செருப்படி விழுந்திருக்கிறது என்றால் மிகையல்ல திட்டமிட்டு சினிமாவால் ஆபாச வக்கிரங்களை பரப்ப படும் தமிழ் மண்ணில் இந்த போராட்டத்தில் அது போன்ற அசம்பாவதம் ஏதும் நடக்கவில்லை, கிடைத்த உணவை சரியாக பகிர்ந்து உண்பது இப்போராட்டத்தில் வெளிப்பட்டது. அப்படி அமைதியான வழியில் போராடி கொண்டிருந்த மாணவர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியது போலீசு, எனவே போலீசு ஆளும் வர்க்கத்தின் அடியாள் படை, கூலிப்படை முசாப் நகர் கலவரத்தில் அடியாட்கள் இருந்தார்கள், தமிழகத்தில் காக்கி உடைகள் கொண்ட அடியாட்களை கட்டவிழ்த்து விட்டுருக்கிறார்கள். இந்த மாணவர்களின் உறுதியான போராட்டம் தமிழக மக்களுக்கு மட்டுமல்ல காஷ்மீர், நாகாலாந்து, உத்திரப்பிரதேசம் மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே மோடியின் அதிகாரம் செல்லாது என்பது அடித்து நொறுக்கிருக்கிறது இந்த போராட்டம் எனவே இது போராடும் தருணம் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி மாவட்ட செயலாளர் தோழர் அன்பு பேசுகையில், தமிழகத்தில் லட்சகணக்கான மாணவர்கள் ஒன்றுதிரண்டு அமைதியான முறையில் போராடி கொண்டிருந்தோம். அதில் யார் வன்முறையை தூண்டியது, ஆட்டோவுக்கு தீ வைப்பது யார்? மீனவர்களின் சொத்துக்களை சூறையாடுவது யார்? போலீசா? மாணவர்களா? காவல்துறை மக்களின் நண்பன் என்கிறார்கள் ஏன் அடிக்கிறார்கள் அடிக்கிறவர்களா நண்பர்கள். டாஸமார்க், சமச்சீர்கல்வி, ஜல்லிக்கட்டு இது போன்ற பல உரிமைகளுக்காக போராடும்போது அடக்குமுறைகள் ஏவப்படுகிறது. இந்த அடக்குமுறைக்கு எதிராக எழுந்து நின்றுவிட்டோம். எதிர்த்து நிற்போம். மீண்டும் இந்த அரசு கட்டமைப்புக்கு எதிராக ஒன்று கூடுவோம். என்று போலீசுக்கு எச்சரிக்கை விடுத்தார். இப்படி போலீசுக்கு எதிராக வலுத்த குரல் ஜனநாயக சக்திகளுக்கும் , மக்களுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக ஆர்ப்பாட்டம் அமைந்தது.
தகவல்: மக்கள் அதிகாரம், தருமபுரி
தொடர்புக்கு: 81485 73417