மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும் நெடுவாசல் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் 07-03.2017 அன்று சென்னை கவின் கலைக் கல்லூரி (சென்னை ஓவியக் கல்லூரி) மாணவர்கள் தங்கள் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்கள் மோடி அரசின் பல்வேறு திட்டங்களை எதிர்த்து முழக்கங்களை எழுப்பினர். கல்லூரியின் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்றிருந்தாலும் மீதமிருக்கின்ற மாணவர்கள் அணிதிரண்டு எதிர்ப்பை காட்டியுள்ளனர்.
போராட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திணிப்பு, நியுட்ரினோ திணிப்பு, மீத்தேன் திட்டம் திணிப்பு, நீட் தேர்வு திணிப்பு போன்ற மக்களுக்கு எதிரான திட்டங்களை ஒரு போதும் அனுமதிக்க கூடாது என்ற எதிர்ப்பு குரலை எழுப்பியுள்ளனர். தங்களுடைய எதிர்ப்பை ஓவியங்கள் மூலம் காட்டியுள்ளனர். மத்திய , மாநில அரசுகள் மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது என்பதை அனைத்து மாணவர்களும் உணரத் தொடங்கியுள்ளனர் என்பதற்கு இப்போராட்டமும் ஒரு சான்று.
இந்த போராட்டத்திற்கு பேராசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் உட்பட அனைவரும் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். சுமார் 3 மணி நேரமாக நடந்த போராட்டத்தின் இறுதியில் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் நடத்த போவதாக கவின்கலைக் கல்லூரி மாணவர்கள் அறிவித்துள்ளனர்.