privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்சென்னையில் பகத்சிங் நினைவுநாள் கருத்தரங்கம் ! செய்தி - படங்கள்

சென்னையில் பகத்சிங் நினைவுநாள் கருத்தரங்கம் ! செய்தி – படங்கள்

-

மார்ச், 23 – பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவுநாளை ஒட்டி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் சென்னையில் கருத்தரங்கம் எழுச்சியுடன் நடந்தது.

தோழர் ராஜா

இந்த கருத்தரங்கிற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சென்னை செயலர் தோழர் ராஜா தலைமையேற்றார்.

அவரைத் தொடர்ந்து இளைஞர் இயக்கத்தின் நிறுவனர் டாக்டர் எழிலன், தனது உரையில் “எனது துறையிலிருந்தே ஆரம்பிக்கிறேன். நான் படிக்க சேர்ந்த போது என்னுடன் இருந்த சக நண்பர் ஒருவர் திருப்பதிக்கு மொட்டை போட்டு இருந்தார். அதே போல மற்றொருவர் சபரிமலைக்கு மாலையணிந்து இருந்தார். முதல் தலைமுறை மருத்துவராக வந்திருப்பதால் கடவுளுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதாகக் கூறினர்,  இன்று நீயும், நானும் மருத்துவர்களாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் அவர்கள் பெற்றுத்தந்த இடஒதுக்கீடு தான் காரணம். அவர்களை நாம் நினைவு கூற வேண்டும்.

டாக்டர் எழிலன்

இந்த தகவலைச் சொல்லக் காரணம் இன்று ஓரளவுக்கு கல்வி நிலையங்களில் சமூக நீதி உள்ளது. ஆனால் இவற்றை அழிக்கவே மோடி அரசானது நீட் தேர்வை அமல்படுத்தியுள்ளது. மாநிலஉரிமையில் இருந்து கல்வியை பிரிக்க நினைக்கிறது. இதனை நாம் வீழ்த்த வேண்டியுள்ளது.

இன்னொருபக்கம் சுதேசி என பேசிக்கொண்டே ஆர்.எஸ்.எஸ்- கும்பல் நாட்டை தனியாருக்கு விற்றுக் கொண்டிருக்கிறது. ஆக இதையெல்லாம் முறியடிக்க நாம் பெரியாரையும், அம்பேத்கரையும், சிவப்பையும் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அதை இந்த போராளிகளின் நினைவு நாளில் நாம் தொடங்க வேண்டியுள்ளது.” என தனது உரையை முடித்தார்.

தோழர் ரமேஷ்

அவரைத் தொடர்ந்து அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ( சென்னை – ஐ.ஐ.டி ) நிறுவன உறுப்பினர் தோழர் ரமேஷ். “ ஸ்மிருதி இரானி, மனிதவள அமைச்சராக இருந்த போது ஐ.ஐ.டிக்களில்  சமஸ்கிருதத்திற்கு தனித்துறையைக் கொண்டுவந்தார். அதற்கு அவர் கூறிய காரணங்கள் நகைக்கத்தக்கது. நமது நாட்டின் பாரம்பரிய அறிவுச் செல்வங்கள் சமஸ்கிருதத்தில் பொதிந்துள்ளனவாம். அதனைக் கண்டுபிடிக்க மாணவர்கள் சமஸ்கிருதம் தெரிந்து கொள்ள வேண்டுமாம். எவை அந்த அறிவுச் செல்வங்கள்? பிரம்மாஸ்திரம் – அணுகுண்டு, பிள்ளையார் – பிளாஸ்டிக் சர்ஜரி என நீள்கிறது பட்டியல். அது தவிர யோகாவிற்கு தனித்துறை. அதற்கு பாடத்திட்டம் உருவாக்க அமைக்கப்பட்ட குழுவில ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி, பாபா ராம்தேவ் போன்ற தற்குறிகளே உறுப்பினர்கள், இதெல்லாம் மக்கள் வரிப்பணத்தில் செய்யப்படுகின்றன.

நாட்டின் பிரதமரும் இதையே அறிவியல் மாநாட்டில் பேசுகிறார். இப்படி இவர்கள் ஏன் கல்வியை காவிமயமாக்க நினைக்கின்றார்கள். ஏனெனில் ஒருபக்கம் பார்ப்பன மேலாண்மையை உறுதிப்படுத்துவது, மற்றொன்று ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்வது. இவை இரண்டுக்குமே எதிரி தான் பகத்சிங். ஆகவே அவரது நினைவு நாளில் இரண்டையும் வீழ்த்த உறுதி ஏற்போம்.” எனப் பேசினார்.

அதன் பின்னர் பேசிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலர் தோழர் ம.சி. சுதேஷ்குமார் “ பகத்சிங் நாட்டின் அனைத்து பிரிவு உழைக்கும் மக்களுக்காகவும் தொழிலாளிகளின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கெதிராகவும் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடினார்.

தோழர் ம.சி. சுதேஷ்குமார்

ஆனால் இன்றும் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. அன்றாடம் தொழிலாளிகள் செத்துக் கொண்டிருக்கின்றனர். இன்னொருபக்கம் நாட்டையே இந்த காவிக்கும்பல் கபளீகரம் செய்து வருகிறது. நம்முன் இந்த இரட்டை அபாயங்கள் உள்ளது, இந்த கொடுமைகளுக்கு முடிவுகட்ட நாம் பகத்சிங்கின் வாரிசுகளாக மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையுடன் களத்தில் நிற்க வேண்டியுள்ளது.” என தனது உரையில் குறிப்பிட்டார்.

அவரைத் தொடர்ந்து மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் துரை. சண்முகம் அவரது உரையில் இன்று ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங்கின் நினைவு நாள். பகத்சிங் என்ற ஒற்றைச் சொல்லானது அவரை மட்டும் குறிப்பிடவில்லை. மாறாக தன்னுள்ளே சுகதேவையும், ராஜகுருவையும், பட்டுகேஷ்வர் தத்தையும், யஷ்பாலையும், சிவவர்மாவையும், ஆசாத்தையும் இன்னும் எண்ணற்ற தோழர்களின் தியாகத்தையும் ஒரு தலைமுறையையும் குறிக்கிறது. இன்று தியாகம் என்பதையும் கூட நாம் பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது. அந்த வார்த்தைக்கூட யார் வாயிலிருந்து வருகிறது என்பதை பகுத்தாய்வுக்குட்படுத்த வேண்டியுள்ளது.

நமது தோழர்கள் இந்த கருத்தரங்கப் பிரச்சாரத்திற்கு ரயிலில் சென்றிருந்த போது ஒரு வடமாநில இளைஞருக்கு தமிழ் புரியவில்லை. இருந்தாலும் படத்தைப் பார்த்து பகத்சிங் என்று கூறுகிறார். சுகதேவ், ராஜகுரு படங்களைக் காட்டி அவர்களது பெயரைக் கோட்கிறார் தனது சைகைளால் கேட்க முற்படுகிறார். அவரிடம் நமது தோழர்களும்  அந்த வார்த்தையற்ற மொழியினை புரிந்து கொண்டு பெயர்களைச் சொல்கின்றனர். அந்த வடமாநில இளைஞர் ஓ…அச்சா எனக்கூறி தனது சட்டைபையில் வியர்வையில் நனைந்திருந்த 10 ரூபாய் நோட்டை உண்டியலில் போடுகிறார்.

தோழர் துரை. சண்முகம்

ஆனால் இன்று காலை செய்தித் தாள்களில் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு படங்களைப் போட்டு மகத்தான தியாகிகள் கண்ட கனவு இந்தியாவை உருவாக்கும் சபதமேற்போம் என தனது பற்பசைக்கும், சோப்புக்கும் விளம்பரம் செய்கிறான்.

ஆக பகத் சிங்கின் தியாகம் இவர்களில் யாருக்கானது அந்த தொழிலாளி இளைஞனுக்காகவா. இல்லை பாபா ராம்தேவுக்கானதா ? அதனால் தான் பொதுவாக தியாகம், தியாகி என்பதைவிட அதை எதற்காகச் சொல்கிறார்கள் யார் சொல்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது. ஒரு மனிதன் தன் கடமையைச் செய்தானா இல்லையா என்பதில் இருந்து தான் அவனை மதிப்பிட வேண்டும் என தந்தை பெரியார் பகத்சிங்கின் தியாகத்தைப் பற்றி எழுதியுள்ளார்.

இன்று நாமும் கூட நம் முன் உள்ள கடமைகளைச் செய்கிறோமா என்பதில் இருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது. அறிவு என்பது பிறர் துன்பம் அறிதல் என்கிறார் வள்ளுவர். நாமும் பிறர் துன்பம் அறிந்து நம் கடமையைச் செய்ய வேண்டியுள்ளது. அதற்காக உழைக்க வேண்டியுள்ளது.

நம் முன் உள்ள கடமை இந்த நாட்டை விழுங்கவரும் காவிபயங்கரவாதத்தை வீழ்த்த வேண்டியது தான். அதைச் செய்யும் போது தான் நாமும் பகத்சிங்கின் வாரிசுகள்.” என பேசியமர்ந்தார்.

கூட்டத்தில் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர் தூக்கிலிடப்பட்ட இரவு 7:35 மணியில் அவர்களுக்கு சிவப்பஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன் பின்னர் டெல்லி பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் சம்சுல் இஸ்லாம் ஆங்கிலத்தில் தனது உரையைத் தொடங்கினார். அதனை பு.ஜ.தொ.மு-வின் மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமார் மொழிபெயர்த்து வழங்கினார்.

தமிழகம் முதல் கம்யூனிஸ்ட்டை பெற்றெடுத்த பெருமையைக் கொண்ட மாநிலம். சமூகநீதி இயக்கங்களையும், சமூக நீதிக்காக போராடிய பெரியார் போன்ற பல்வேறு போராளிகளையும் பெற்றெடுத்தது தமிழகம். தோழர் பகத்சிங் ஒரு தனி நபர் அல்ல. அவர் புரட்சிகர அரசியலின் அடையாளம். அவர் சுகதேவ், ராஜகுரு, ஆசாத், அஷ்ஃபகுல்லா கான், ஆகிய புரட்சியாளர்களின் உள்ளடக்கம்.

பகத்சிங் மற்றும் அவரது தோழர்களின், ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக்கன் அசோசியேசன் அமைப்பு,  வெள்ளைக்காரனின் கைகளில் இருந்து அதிகாரம் பறிக்கப்பட்டு, இங்கிருக்கும் விவசாயிகள், தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள், பெண்கள், தலித்துகள் ஆகியோர் கையில் அதிகாரம் வேண்டும் எனப் பிரகடனம் செய்தது.

பகத் சிங் சிறையில் இருக்கும் போது அவர் தூக்கில் போடப்படுவதற்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன்பும், லாகூரில் நடைபெற்ற இளம் அரசியல் ஊழியர்களின் மாநாட்டிற்கு ஒரு கடிதம் எழுதினார். தாம் தூக்கிலிடப்படுவதற்கு முந்தைய கடைசி நொடி வரை புரட்சிகர அரசியலில் ஈடுபட்டிருந்தார்.

பகத் சிங்கும் அவரது தோழர்களும் புரட்சியில் ஈடுபட்டு சிறையும் தூக்கும் அனுபவிக்கும் போது அவரது வயது வெறும் 21 முதல் 30க்குள் தான்.

பேராசிரியர் சம்சுல் இஸ்லாம்

பகத்சிங் சிறையில் இருக்கும் போது சுமார் 20 முறை கடிதம் எழுதியுள்ளார்.  அனைத்துக் கடிதங்களும் தாம் படிப்பதற்கு புத்தகங்கள் கேட்டு எழுதப்பட்ட கடிதங்களே.

சாவர்க்கரும் தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 50 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டு அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்ட சாவர்க்கர் தனது சிறை வாழ்க்கையில் 5 முறை கடிதங்கள் எழுதியுள்ளார்.  அவை அனைத்தும் மன்னிப்புக் கடிதங்களே. பிரிட்டிஷ் தாயிடம் தம்மைத் தனையனாகக் கருதி  மன்னிக்குமாறு மன்றாடிக் கேட்டுக் கொண்டார். அதன் காரணமாக வெறும் 10 ஆண்டுகளில் சிறையில் இருந்து விடுதலை பெற்று வெளியே வந்தார்.

பகத்சிங்கின் முன் சாவர்க்கர் கால் தூசி பெறுவாரா ?. இவருக்குப் பெயர் ‘வீர்’ சாவர்க்கர் என்று ஆர்.எஸ்.எஸ். கும்பல் கூறுகிறது. ஆர்.எஸ்.எஸ் தலைவரான ஹெக்டேவார் 1921இல் நடைபெற்ற கிலாபட் இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்று ஒராண்டு இருந்தார். வெளியே வரும்போது 25 பவுண்டுகள் அதிகரித்து விட்டது மேலும் அவர் ஜெயிலரோடு நட்பாக இருந்த்தாக அவரது சுயசரிதை கூறுகிறது.

பாஜக ஆர்.எஸ்.எஸ். கும்பல்,  பெண்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானவர்கள். பகத்சிங், மதத் துவேசத்தையும், சாதிய ஒடுக்குமுறையையும் எதிர்த்தவர். அவர் இப்போது இருந்திருந்தால், இந்த இந்துத்துவக் கும்பலுக்கு எதிராகப் போராடியிருப்பார். ஆர்.எஸ்.எஸ். கும்பல் அவர் தலையை எடுத்திருக்கும்.

பகத் சிங்கும் அவரது தோழர்களும் ஏகாதிபத்திய, பார்ப்பனிய எதிர்ப்புப் போராளிகளே. அவர்கள் வழியில் பார்ப்பனியத்தையும், ஏகாதிபத்தியத்தையும் நாமும் எதிர்க்க வேண்டும் ” என்று கூறி தமது உரையை முடித்தார்.

அதன் பிறகு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர் கணேசன் உரையாற்றினார். அதில் அவர் டெல்லியில் இருந்து வந்து கூட்டத்தில் கலந்து கொண்டு பகத்சிங் இன்று இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பார் எனும் வகையில் நம்மத்தியில் உரையாற்றிச் சென்ற தோழர் சம்சுல் இஸ்லாமிற்க்கு நன்றி தெரிவித்து தனது உரையை இறுதி செய்தார்.

இறுதியாக பாட்டாளிவர்க்க சர்வதேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

ஓவியக் கண்காட்சியில் இடம் பெற்ற ஓவியங்கள்

கருத்தரங்க படங்கள்

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

-வினவு செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க