privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்மாருதி தொழிலாளர் நிலைமை - நேரடி அறிக்கை

மாருதி தொழிலாளர் நிலைமை – நேரடி அறிக்கை

-

புது தில்லி துணை நகர தொழிலாளர்கள் நிலைமை – நேரடி செய்தியறிக்கை பாகம் 1

கீழமை விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது! 13 பேருக்கு வாழ்நாள் சிறை; 4 பேருக்கு 5 ஆண்டுகளும், 14 பேருக்கு 3 ஆண்டுகளும் சிறைத்தண்டனை. 117 பேர் எந்தக் குற்றமும் செய்யாதவர்கள் என விடுவிப்பு. விடுவிக்கப்பட்டவர்கள் சுமார் நான்கரை ஆண்டுகள் பழியைச் சுமந்தனர்; கொலைப்பழி. அவர்கள் அனைவரும் வாழ்விழந்து, வேலையிழந்து, வருமானமிழந்து, வாழும் வழியிழந்து நிற்கின்றனர்.

இவர்களோடு சேர்த்து சுமார் 2,347 தொழிலாளர்களின் வேலை ஒரே நாளில் பறிக்கப்பட்டு அவர்களது குடும்பங்கள் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டன. அவர்கள் ஹரியானா மாநிலம் குர்கான்னை அடுத்துள்ள மானேசர் மாருதி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள்.

அவர்கள் செய்த குற்றம்? உரிமைகளைக் கோரியது.

தங்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கோரிப் போராடிய மாருதி தொழிலாளர்களின் மீது கொலைப்பழி சுமத்தியது போலீசு. ஜூலை 18, 2012-ம் ஆண்டு நடந்த சிறிய வாய்த் தகறாரை பெரும் தீவிபத்தாக மாற்றியது மாருதி நிர்வாகம். அப்போது மாருதி நிர்வாகத்தால் அழைத்து வரப்பட்ட குண்டர்படையால் கொல்லப்பட்ட மேலாளர் ஒருவரின் மரண கணக்கை தொழிலாளர்களின் தலையில் சுமத்தி வழக்கு நடத்தியது மாநில அரசு.

அந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகி அதில் தண்டிக்கப்பட்டவர்களுக்கான தண்டனை விவரங்கள் கடந்த மார்ச் 18, 2017 அன்று கீழமை விசாரணை நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து வினவு செய்தியாளர் குழு மானேசரில் களமிறங்கியது.

“முதலில் தீர்ப்பை அறிவித்த நீதிமன்றம், 117- பேரை விடுவித்து 31- பேரை குற்றவாளிகளென அறிவித்தது. 18-ம் தேதி தண்டனை விவரங்களை அறிவிக்க உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை கேட்டிருந்தார். எங்கே தங்களது தோழர்களைக் தூக்கில் போட்டுக் கொன்று விடுவார்களோ என பல்வேறு ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளிகள் பதறி விட்டார்கள்” என்றார் இந்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பைச்(IFTU) சேர்ந்த  தோழர் அபர்னா.

இந்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பைச்(IFTU) சேர்ந்த தோழர் அபர்னா

மாருதி தொழிற்சங்க வரலாறு மட்டுமின்றி, தில்லியைச் சுற்றியுள்ள நொய்டா, கிரேட்டர் நொய்டா, காஸியாபாத், குர்கான் மற்றும் மானேசர் போன்ற துணை நகரங்களின் தொழிற்சாலை மற்றும் தொழிற்சங்க வரலாற்றைக் குறித்து கேட்டறிய அவரைச் சந்தித்தோம். தில்லி டிஃபென்ஸ் காலனியை அடுத்த கோட்லா பகுதியில் இருந்த ஒரு நெரிசலான இடுக்கினுள் அமைந்திருந்த தொழிற்சங்க அலுவலகத்தில் தோழர் அபர்னாவுடன் பேசினோம்.

“தண்டனை விவரங்களை அறிவித்த 18-ம் தேதியன்று எல்.ஜி, மோசர்பேர், என்.டி.ஐ, டென்சோ உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது மதிய உணவைப் புறக்கணித்தனர். சுமார் 20,000 தொழிலாளர்கள் தங்களது தொழிற்கருவிகளை ஒரு மணிநேரம் எடுக்கவில்லை (Tool Down)… மாருதியின் அனைத்து ஆலைத் தொழிலாளர்களும் அன்றைக்கு மதிய உணவையும் இரவு உணவையும் புறக்கணித்திருந்தனர். சுமார் 25,000 கலவரத் தடுப்புப் போலீசார் மனேசரில் மட்டும் குவிக்கப்பட்டிருந்த நிலையிலும் தொழிலாளிகள் அஞ்சவில்லை”

“தோழர், மாருதி ஆலையில் பற்றிய நெருப்பின் வெளிச்சத்தில் இந்தப் பகுதி தொழிலாளர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரங்கள் நாடெங்கும் அம்பலமாகியிருக்கின்றன.. பொதுவாக இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் இங்கே நிலவும் சுரண்டல்கள் குறித்து சொல்ல முடியுமா?”

மாருதி ஆலையில் பற்றிய நெருப்பு என்று குறிப்பிட்டீர்கள் – அது பற்ற வைக்கப்பட்ட நெருப்பு.

“சொல்லலாம்.. ஆனால், அதற்கு முன் இரண்டு விசயங்களை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். மாருதி ஆலையில் பற்றிய நெருப்பு என்று குறிப்பிட்டீர்கள் – முதலில் அதைத் திருத்திக் கொள்ளுங்கள். அது பற்ற வைக்கப்பட்ட நெருப்பு. அடுத்து, அது முதன் முதலாக நிகழ்ந்த ஒரு தனித்துவமான சம்பவமும் அல்ல. அதற்கு முன்னும் வெவ்வேறு அளவுகளில், வடிவங்களில் இதே போன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளன…” என்றவர் தொடர்ந்தார்.

எழுபதுகளில் சூழலுக்குப் பொருத்தமின்றி தலைநகர் தில்லி வீங்கிச் சென்றதை உணர்ந்தது காங்கிரசு. மொத்த வளர்ச்சியையும் ஓரிடத்தில் ஒன்று குவித்த நகரமயமாக்கலின் விளைவாக ஏற்பட்ட கான்சர் கட்டி விரைவில் வெடித்துச் சிதறும் சாத்தியங்களை உணர்ந்ததால், அதை அக்கம் பக்கத்துப் பகுதிகளுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டதன் விளைவே நொய்டா, காஸியாபாத், குர்கான், மனேசர் உள்ளிட்ட தலைநகரத் துணை நகரங்கள்.

நகரமயமாக்கலின் ஆபாசங்களுக்கு சிறந்த உதாரணம் தில்லியும் அதன் துணை நகரங்களும். பளீர் நகரங்களுக்கும், பின்தங்கிய கிராமங்களுக்கும் ஒரு சில கிலோமீட்டர்களே தொலைவு. தில்லி தௌலா-குவானில் இருந்து குர்கான் – மானேசர் வரையிலான நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது அதன் ஓரங்களில் 21-ம் நூற்றாண்டையும் 10-ம் நூற்றாண்டையும் மாறி மாறிப் பார்க்க முடியும். வறண்ட பாலைவனத்தின் மத்தியில் எங்கிருந்தோ பிடுங்கி வரப்பட்டு நடப்பட்ட மலர்ச்செடிகளைப் போல் வானுயர்ந்த கண்ணாடிக் கட்டிடங்கள் சூழலுக்குப் பொருந்தாமல் உயர்ந்து நிற்கும். அருகிலேயே கயிற்றுக் கட்டிலில் ஹூக்கா புகைக்கும் கிராமத்து ஆதிக்க சாதிப் பெரிசுகளையும் உருவத்திலேயே வதைகளை உணர்த்தும் தலித்துகளையும் பார்க்க முடியும்.

வரலாற்று ரீதியில் உற்பத்தித் துறையுடன் எந்த தொடர்புமற்ற இந்தப் பகுதியில் பெரும் பன்னாட்டு முதலாளிகள் மற்றும் உள்நாட்டு தரகு முதலாளி வர்க்கத்தின் தொழிற்சாலைகளை நிறுவ எழுபதுகளின் மத்தியிலிருந்தே துணை நின்றது காங்கிரசு அரசு. யாதவ் மற்றும் ராஜ்புத் சாதியினர் கணிசமாகவும் ஜாட் மற்றும் குஜ்ஜார் சாதியினர் ஓரளவிற்கும் வசித்த இப்பகுதியில் முன்பு மானாவரி விவசாயம் நடந்துள்ளது. அதிகம் படிப்பறிவில்லாத மேற்குறிப்பிட்ட சாதியினரிடமே பெருவாரியான நிலம் குவிந்து கிடந்தது.

இந்நிலையில் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் அரசு நினைத்ததைப் போல் அத்தனை எளிதாக நடக்கவில்லை. எனவே கார்ப்பரேட் நிறுவனங்கள் வேறு வழியின்றி மக்களின் முன் கருணை பிரபுக்களாக நடிக்க வேண்டியிருந்தது.

பாலைவனத்தின் மத்தியில் எங்கிருந்தோ பிடுங்கி வரப்பட்டு நடப்பட்ட மலர்ச்செடிகளைப் போல் சூழலுக்கு பொருத்தமில்லாத வானுயர் கட்டிடங்கள்

“அவர்கள் (முதலாளிகள்) முதலில் வந்த போது கேட்காமலேயே அனைத்தையும் கொடுத்தார்கள். அப்போது அவர்களுக்கு நிலம் தேவையாய் இருந்தது.. அவர்கள் கேள்விகளை விரும்பவில்லை; உரிமைக் குரல்களை வெறுத்தார்கள்; எனவே, அக்கம் பக்கத்திலிருந்தவர்களுக்கு வேலை செய்யாமலேயே காசு கொடுத்தார்கள்; மதிய உணவுக்கான இலவச டோக்கன்கள் வழங்கினார்கள்.. ஆலையின் உள்ளே இருக்கும் உணவகங்களுக்கு பொருட்கள் சப்ளை செய்யும் காண்டிராக்டுகளை வாரி வழங்கினர்.. அந்த வட்டாரத்து மண்ணின் மைந்தர்களின் சிந்தனையைக் கறைப்படுத்தினர், ஊழல்படுத்தினர்.. பின், சில ஆண்டுகள் கழித்து தங்கள் சுயரூபத்தை வெளிப்படுத்தினார்கள்..”

“நிலம் கையகப்படுத்தியவர்களுக்கு ஆலைகளிலேயே முறையான வேலை வாய்ப்புகளை ஏன் கொடுக்க வில்லை?”

“வெகுசிலருக்கு கிடைத்தது.. ஆனால் பெரும்பாலானவர்கள் படிப்பறிவில்லாதவர்கள். எனவே பெரும்பாலான தொழிலாளர்கள் வெளிமாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஐ.டி.ஐ படித்து விட்டு வந்தவர்கள் தான். அவ்வாறு வெளியில் இருந்து வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள் என்பது குறிப்பிடத்தகுந்தது”

என அபர்னா சொல்லும் போது குறுக்கிட்டோம்.

“சரி பெரும்பான்மை தலித்துகளாகவே இருக்கட்டுமே. உள்ளூர் ஆதிக்க சாதியினரும் நிலத்தை இழந்திருக்கிறார்கள்.. நீங்கள் சொன்னது போல் சிலரை ஊழல்படுத்தியிருக்கலாம்.. என்றாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது கார்ப்பரேட்டுகள் தங்களை ஏமாற்றி விட்டதாக அவர்கள் உணரவில்லையா? அவர்களும் விவசாய பின்னணி கொண்டவர்கள் என்பதைக் கணக்கில் கொண்டு வர்க்க அடிப்படையில் பார்த்தால் அவர்கள் தொழிலாளர்கள் பக்கம் அல்லவா நின்றிருக்க வேண்டும்?”

“தோழர் நீங்கள் சில விசயங்களைப் புரிந்து கொள்ளுங்கள். முதலில், உள்ளூர் ஆதிக்க சாதியினரை கார்ப்பரேட்டுகள் ஊழல்படுத்தியிருக்கின்றன என்பதை பருண்மையாக புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, இங்கே கம்பெனிகளில் லட்சத்துக்கும் மேலானவர்கள் வேலை செய்கிறார்கள்.. அதில் 80 சதவீதம் காண்டிராக்ட் தொழிலாளிகள். பத்து அல்லது சில பத்து காண்டிராக்ட் தொழிலாளிகளுக்கு ஒரு காண்டிராக்டர் இருப்பார் – அவர் உள்ளூர் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவராக இருப்பார். இப்படி காண்டிராக்ட் எடுத்து செய்ய அவருக்கு திறமை இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் இரண்டாம் பட்சமானது”

குர்கான் – மானேசர் வரையிலான நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது அதன் ஓரங்களில் 21-ம் நூற்றாண்டையும் 10-ம் நூற்றாண்டையும் மாறி மாறிப் பார்க்க முடியும்.

“தாமே நேர்முகத் தேர்வு நடத்தி தெரிவு செய்த படித்த இளைஞர்களை ஒப்பந்த தொழிலாளியாக எடுத்துக் கொள்வார்கள் – இந்த தொழிலாளர்களைப் பிரித்து காண்டிராக்டர்களின் சம்பளப்பட்டியலில்(Payroll) சேர்த்து விடுவார்கள். இதே போல், போக்குவரத்து காண்டிராக்டு, உணவக காண்டிராக்டு, சிறியளவில் பொருட்கள் சப்ளை செய்யும் காண்டிராக்டு என பல்வேறு வாய்புகளை வீசியெறிந்து இந்தப் பகுதி மக்களின் பொருளாதார வாழ்க்கையை கம்பெனிகள் நேரடியாகவே கட்டுப்படுத்துகின்றன. சாதியைப் பொருத்தவரை, வெளியே எங்கிருந்தோ வந்த தலித் அல்லது கீழ்நிலை பிறப்படுத்தப்பட்ட சாதிக்காரன் நம்ம ஊரில் வந்து பிழைக்கிறானே என்கிற ஆத்திரம்…”

“தோழர், இந்தப் பகுதியில் துவங்கப்பட்ட தொழிலாளர் யூனியன்கள் குறித்து சொல்லுங்கள்”

“எந்தவொரு பன்னாட்டுக் கம்பெனியின் உற்பத்தி ஆலையை எடுத்துக் கொண்டாலும் செயல்படத் துவங்கிய ஒரு சில ஆண்டுகளிலேயே தங்களது சுயரூபத்தைக் காட்டிவிடுவார்கள். அதற்கு எதிர்வினையாக தொழிலாளர்களின் உரிமைக் கோரிக்கைகளும் தொழிற்சங்கங்களும் ஏற்படத் துவங்கின”

தில்லி மற்றும் அதன் துணை நகரங்களில் உள்ள உற்பத்தி ஆலைகளில் செயல்பட்டு வரும் பெரும்பாலான யூனியன்கள் அரசியல் சார்பற்றே உள்ளன – குறிப்பாக இடதுசாரிக் கட்சிகளின் சார்பற்று சுயேச்சையானவைகளாக இருக்கின்றன. சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி, ஐ.எப்.டி.யூ (இ.பொ.க – மா.லெ புதிய ஜனநாயகம்) மற்றும் சி.எல்.ஐ (கம்யூனிஸ்ட் லீக் ஆப் இந்தியா) போன்ற கட்சி சார்புள்ள தொழிற்சங்கங்கள் ஓரளவுக்கு உள்ளன. என்றாலும், கணிசமாக சுயேச்சையான சங்கங்களே செயல்பட்டு வருகின்றன.

இந்தப் பகுதியில் துவக்கத்தில் இருந்தே கம்யூனிஸ்டு கட்சி அமைப்புகள் வலுவில்லாமல் இருந்தது இந்தப் போக்குக்கு முக்கியமான காரணம். இதன் விளைவாக கட்சி சார்பான தொழிற்சங்கங்களும் பல்வேறு துண்டுகளாக சிதறிக் கிடக்கின்றன. மேலும், பல்வேறு என்.ஜி.ஓ குழுக்களும் தொழிற்சங்கங்களை நடத்தி வருகின்றன. அரசியல் ரீதியில் வழிகாட்டுவதற்கு உறுதியான கட்சி அமைப்புகள் இல்லாத நிலையில் தொழிற்சங்கங்கள் மட்டும் கையை மீறி வளர்ந்ததால் இச்சங்கங்களுக்கு இயல்பாகவே சந்தர்ப்பவாத தலைமைகளே அமைந்தன. இதன் காரணமாகவே தொழிலாளர்களுக்கு கட்சி சார்பான தொழிற்சங்கங்களின் மீது ஒருவிதமான அவநம்பிக்கை நிலவுவதைக் காண முடிந்தது.

விசாரனைக்கு அழைத்துவரப்படும் மாருதி தொழிலாளர்கள் ( கோப்புப் படம் )

அரசியல் ரீதியான உறுதியான வழிகாட்டுதல் இல்லாத நிலையிலும், தொழிலாளிகள் தம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட சுரண்டலை தன்னியல்பாகவே எதிர்த்து நின்றனர். குறிப்பாக தொன்னூறுகளின் மத்தியிலிருந்து வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் தலையெடுக்கத் துவங்கின. இரண்டாயிரங்களின் துவக்கத்தில் உரிமைப் போராட்டங்கள் மேலும் உக்கிரமடையத் துவங்கின. இந்நிலையில் அவற்றை முளையிலேயே கிள்ளியெறிய கார்ப்பரேட் முதலாளிகளும் அரசும் சதித்தனமாக கைகோர்த்தனர்.

தோழர் அபர்னா தொடர்ந்து பேசினார்…

“மாருதியின் மானேசர் ஆலையில் 18 ஜூலை 2012-ல் நடந்த வன்முறைச் சம்பவங்களுக்கு ஒரு தொடர்ச்சி உள்ளது. இங்கே நீங்கள் ஒரு மாதிரியை (pattern) கவனிக்க வேண்டும் – அதாவது ஒரு தொழிற்சாலையைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்காக போராடுவார்கள் – முதலில் அது அமைதியான கோரிக்கையாக இருக்கும் – அந்தக் கோரிக்கை புறக்கணிக்கப்பட்ட பின், வேலை நிறுத்தம் நடக்கும், அல்லது ஊர்வலமோ ஆர்ப்பாட்டமோ நடக்கும் – அப்போது திடீரென ஒரு பதற்றமான சூழல் உருவாகும் – அந்த சூழலில் யார் செய்தார்களென்றே தெரியாமல் ஒரு தாக்குதல் சம்பவம் நிகழும் – அநேகமாக அந்த தாக்குதலில் நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் காயம் பட்டிருப்பார் – அதற்காகவே காத்திருந்ததைப் போல் அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போலீசார் உள்ளே புகுந்து தொழிலாளர்களை அடித்து வெளுப்பார்கள் – சில பத்து பேர்கள் மேல் கொலை முயற்சி வழக்கு பதியப்படும் – அவர்கள் தொழிற்சங்கத்தின் முன்னணியில் நின்றவர்களாக இருப்பார்கள் – அதன் பின் அந்த தொழிலாளர்களின் வாழ்கையும், அவர்களின் தொழிற்சங்க முன்னெடுப்புகளும் மொத்தமாக சீரழிந்து போகும் – இறுதியாக பன்னாட்டுக் கம்பெனியின் சுரண்டல் எந்த சிக்கலுமின்றி தொடர்ந்து கொண்டிருக்கும்… “ என்று பேசிச் சென்றவரை இடைமறித்தோம்..

“நீங்கள் சொல்வது ஏதோ சதிக்கோட்பாடு (conspiracy theory) போல் இருக்கிறதே?”

“நான் சொல்வது கற்பனையல்ல; நடந்த உண்மைகளைத் தான் சொல்கிறேன். 2005-ல் ஹீரோ ஹோண்டாவில் இது தான் நடந்தது, 2008-ல் இத்தாலி கம்பெனி கிராசியானோவிலும், அதற்கு ஆறு மாதம் கழித்து ஜப்பான் நிறுவனமான நிப்பானிலும், இவ்வாறு தான் நடந்தது. இவை தவிர வேறு சில கம்பெனிகளிலும் சிறியளவில் இதே போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இதன் தொடர்ச்சியாகத் தான் மாருதியில் நடந்த தீ வைப்புச் சம்பவத்தைப் பார்க்க வேண்டும்”

“அரசு தரப்பில் இதற்கு விசாரணைகள் ஏதும் நடக்கவில்லையா?”

”தோழர்.. அரசு வேறு கார்ப்பரேட்டுகள் வேறா? நீங்க காங்கிரசு பாரதிய ஜனதாவைக் கூட விடுங்கள்… மாயாவதியை எடுத்துக் கொள்ளுங்கள். சமூக நீதி அரசியல் பேசியவர் தானே? கிராஸியான நிறுவனம் நோய்டாவில் அமைந்துள்ளது. நோய்டா உத்திரபிரதேசத்தில் வருகிறது. சம்பவம் நடந்த போது மாயாவதி தான் ஆட்சியில் இருந்தார். என்ன செய்தார் தெரியுமா? உடனடியாக ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்து உத்திரபிரதேச மாநில போலீசாரிடம் பன்னாட்டுக் கம்பெனிகளின் பாதுகாப்பை ஒப்படைத்தார். மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரியின் பொறுப்புகளை மாவட்ட போலீசு கமிசனரிடம் ஒப்படைத்தார். போலீசாரைக் கொண்டு துரித நடவடிக்கைக் குழு (Quick Reaction Team) ஒன்றை ஏற்படுத்தினார். முதலாளிகளுக்கு ஏதும் சிக்கல் என்றால், ஐந்து நிமிடத்தில் போலீசார் உதவிக்குச் செல்ல வேண்டுமென விதிகளை ஏற்படுத்தினார். இப்படி மொத்த போலீசாரையும் முதலாளிகளின் அதிகாரப்பூர்வ குண்டர் படையாக்கினார்… தொழிற்சங்க உரிமைகள் அனைத்தும் போலீசின் பூட்ஸ் கால்களால் மிதித்து நசுக்கப்பட்டன.”

சுரண்டலுக்கு எதிராக சங்கமாகத் திரளும் தொழிலாளர்கள் தங்களது தொழிற்சங்கங்களைப் பதிவு செய்யக் கூட முடியவில்லை – ஏதேதோ உப்பு பெறாத காரணங்களை முன்வைத்து அந்த முயற்சிகள் தடுக்கப்பட்டன. மீறினால் தொழிலாளர்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பது; அதையே முகாந்திரமாக கொண்டு தொழிற்சங்க உரிமைக் கோரிக்கைகளைக் குழிதோண்டிப் புதைப்பது என்ற வெற்றிகரமான சூத்திரத்தை முதலாளிகள் கையிலேந்திச் சுழற்றினர். இதற்கு அரசு, போலீசு மற்றும் நீதித் துறைகள் துணை நின்றன.

இவ்வாறான ஒரு நிகழ்ச்சிப் போக்கின் தொடர்ச்சியாகவே 2012-ம் வருடம் ஜூலை 18-ம் நாள் விடிந்தது. அன்றைய தினம் உண்மையில் நடந்தது என்ன? நெருப்பை மூட்டியது யார்? மாருதியின் மனேசர் ஆலையின் மனிதவளத் துறை மேலாளர் அவனீஷ்குமார் சிங் எப்படி இறந்தார்? தொழிலாளர்கள் ஏன் கிளர்ந்தெழுந்தனர்? வழக்கை எவ்வாறு தொழிலாளர்களுக்கு அநீதியான முறையில் அரசு தரப்பில் நடத்தினார்கள்?

(தொடரும்)

  • வினவு செய்தியாளர் குழு.