privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்ஐ.டி ஊழியர்களை சதி செய்து வெளியேற்றும் காக்னிசண்ட் நிறுவனம் !

ஐ.டி ஊழியர்களை சதி செய்து வெளியேற்றும் காக்னிசண்ட் நிறுவனம் !

-

லகம் முழுவதும் சுமார் 2.6 இலட்சம் பேரை ஊழியர்களாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது காக்னிசண்ட் டெக்னாலஜி சொலுசன்ஸ் (சி.டி.எஸ்) நிறுவனம். அந்நிறுவனத்தில் இந்தியாவில் மட்டும் சுமார் 1.8 இலட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர். அதில் சுமார் 6,000 முதல் 10,000 பேரை பணி நீக்கம் செய்யவிருப்பதாக ஊடகங்களுக்குக் கடந்த மார்ச் மாத இறுதியில் தகவல்களை கசிய விட்டது சி.டி.எஸ் நிறுவனம். இச்செய்தி சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பேசு பொருளாக மாறிய பின்னர், தகுதி குறைந்தவர்களை நீக்கிவிட்டு, புதிய ஊழியர்களை ஒவ்வொரு ஆண்டும் எடுப்பது இயல்பாக நடக்கும் ஒன்று தான் என்று கார்ப்பரேட் அறிவுஜீவிகளும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மனித வளத்துறை அதிகாரிகளும் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்தனர்.

இந்த தகுதி குறைவு பூச்சாண்டியே ஒரு மோசடி என்பது ஒருபுறமிருக்க இதன்  காரணமாகத் தான் ஆட்குறைப்பு செய்யப்படுகிறதா ?

பணிநீக்க செய்திகள் வெளியாவதற்கு முன்பே, அதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்யத் தொடங்கியிருந்தது சி.டி.எஸ். நிறுவனம். அந்நிறுவனத்தின் மனித வளத்துறை அதிகாரிகள் (HR), ஊதிய உயர்வுக்கான ஊழியர் பரிசீலனையில்(Appraisal), ஒவ்வொரு குழுவிலும்(Team) இருக்கும் மொத்த நபர்களில் ஒன்று அல்லது இரண்டு நபர்களுக்கு தர வரிசைப் பட்டியலில் கண்டிப்பாக 4 வது தரநிலை (4th Grade) கொடுக்க வேண்டும் என அனைத்து செயல்திட்ட மேலாளர்களிடமும் (Project Manager) வலியுறுத்தியுள்ளனர்.  அதாவது ஒரு குழு முழுவதுமே சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், அதிலிருந்து ஒருவர் அல்லது இருவர் கண்டிப்பாக பலிகடாவாக்கப்பட வேண்டும் என்பது தான் அதன் பொருள்.

இவ்வாறு 4-வது தரநிலை கொடுக்கப்பட்டுள்ள ஊழியர்களை, அவர்கள் வேலை பார்த்து வரும் குறிப்பிட்ட செயல்திட்டத்திலிருந்து (Project) இருந்து நீக்கி காத்திருப்புப் பட்டியலில் வைத்தது நிர்வாகம். அவர்களை இரண்டு மாதங்களுக்குள் வேறு செயல்திட்டங்களில் ஏதேனும் ஒன்றுக்கு நேர்முகத் தேர்வில் பங்கேற்று சேர்ந்து கொள்ளுமாறும், ஒரு வேளை இரண்டு மாதங்களுக்குள் வேறு எந்த ப்ராஜெக்ட்களிலும் சேரவில்லை எனில் அவர்கள் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது. அதே சமயத்தில் செயல்திட்ட மேலாளர்களிடம், அவர்களது செயல்திட்டங்களில் காத்திருப்புப் பட்டியலில் இருக்கும் ஊழியர்களை எடுக்கும் போது 4-வது தரநிலை கொடுக்கப்பட்ட ஊழியர்களைக் கண்டிப்பாக எடுக்கக் கூடாது என்றும் கூறியுள்ளது.

அதாவது ஒரு குழுவிற்கு ஒருவரோ அல்லது இருவரோ கண்டிப்பாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று முடிவெடுத்த பின்னர், அவர்களுக்கு வேண்டுமென்றே 4-வது தரநிலை கொடுத்து, அதன் காரணமாக அவர்கள் வேலை பார்க்கும் செயல்திட்டங்களிலிருந்து நீக்கி, வேறு எந்த செயல்திட்டங்களிலும் சேர முடியாதவாறு நிர்பந்தத்தை உருவாக்கி அதனடிப்படையில் அவர்களைப் பணியை விட்டு நீக்குவது என்பதை திட்டமிட்டு சதி செய்திருக்கிறது சி.டி.எஸ். நிர்வாகம்.

இது தவிர சம்பந்தப்பட்ட ஊழியரை மனித வளத்துறை அதிகாரி அறைக்கு வரவழைத்து ஒரு மணிநேரம், இரண்டு மணி நேரம் அவர்களிடம் அவர்களது குறைகளாக பல்வேறு கதைகளைக் கூறி அவர்களைத் தானாக இராஜினாமா செய்யத் தூண்டுவதன் மூலமும் ஆட்குறைப்பைச் செய்து வருகிறது சி.டி.எஸ். நிறுவனம். இத்தகைய உளவியல் தாக்குதல்களை பல்வேறு ஐ.டி நிறுவனங்கள் நெடுங்காலமாக செய்து வருகின்றன.

இப்படி ஊழியர்களை சட்டவிரோதமாக மனிதத் தன்மையற்று சி.டி.எஸ். நிறுவனம் வெளியேற்றுவதற்கான காரணம் என்ன? ஒரு வேளை அந்நிறுவனம்  நட்டத்தில் செயல்படுகிறதோ? நிச்சயமாக இல்லை, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 8% அதிகமான வளர்ச்சியைச் சாதித்துள்ளது இந்நிறுவனம். தற்போது பணிநீக்கம் செய்யப்படும் இதே ஊழியர்களின் கண் துஞ்சாத  உழைப்பில் தான் இந்த வளர்ச்சியை எட்டியிருக்கிறது சி.டி.எஸ். இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் பெருமுதலாளிகளுக்குக் கொழுத்த இலாபத்தை உறுதி செய்யும் பொருட்டே பல ஆயிரம் ஊழியர்களை ஈவிரக்கமின்றி பணிநீக்கம் செய்துவருகிறது சி.டி.எஸ். நிறுவனம்.

இது வெறுமனே காக்னிசண்ட் நிறுவன ஊழியர்களின் பிரச்சினை அல்ல. அனைத்து ஐ.டி. நிறுவனங்களிலும் இது தான் நடைமுறை. பணிநீக்கம் ஒரு பிரச்சினை என்றால் சம்பளத் திருட்டு அடுத்த பிரச்சினை. ஐ.டி. ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு பகுதித் தொகை திறன் சார்ந்த ஊதியம் என்று பிரிக்கப்படுகிறது, அதாவது நிறுவனத்தின் மொத்த வளர்ச்சித் திறன், சம்பந்தப்பட்ட ஊழியர் பணிபுரியும் ப்ராஜெக்டின் வளர்ச்சித் திறன், சம்பந்தப்பட்ட ஊழியரின் (அடிமைத்) திறன் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இந்த சம்பளப் பகுதியை 200%ஆக அதிகரிக்கவோ அல்லது 0%ஆக குறைக்கவோ செய்யும் உரிமை நிறுவனத்திற்கு உண்டு.

இரவும் பகலும் வேலை பார்த்து கூடவே மேலதிகாரியின் ‘குட் புக்கில்’ இடம்பெறும் ஊழியனுக்கே இச்சம்பளத்தில் அதிகபட்சமாக 95% தான் தரப்படுகிறது என்கிறார்கள் ஐ.டி. ஊழியர்கள்.  அதுவும் ஒட்டு மொத்த நிறுவனமும் அந்த ஊழியர் வேலை செய்யும் ப்ராஜெக்டும் வெற்றிகரமாக இலக்கை அடையும் பட்சத்தில் தான் இதுவும் சாத்தியம்.

இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் சங்கமான நாஸ்காம் ( NASCOMM) தனது ஆண்டுப் பரிசீலனைக் கூட்டத்தில் இன்னும் பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2016-17 நிதியாண்டில் தொழிற்சாலைகளின் வளர்ச்சி 8.6% அளவில் இருந்த போதிலும், வேலை வாய்ப்பின் வளர்ச்சி 5% தான் உயர்ந்திருக்கிறது எனத் தெரிவித்துள்ளது. அதோடு அடுத்த மூன்றாண்டுகளில் இந்தியா முழுவதும் 20 முதல் 25% வேலைகள் பறி போகும் என்றும் கூறியுள்ளது.

இதே போல சமீபத்தில் மும்பையில் நடந்த நாஸ்காம் தலைமை மாநாட்டில் பேசிய கேப்-ஜெமினி என்னும் பிரெஞ்சு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின்  இந்தியப் பிரிவின் தலைமை அதிகாரி சீனிவாச கண்டுலா, ஐ.டி. துறையில் நடுத்தர மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு பெருமளவில் வேலை இழப்பு ஏற்படும் என்று கூறினார். மேலும் தற்போதைய ஐ.டி. ஊழியர்களில்  பயிற்சியளித்தாலும் தேறாதவர்கள் சுமார் 60 முதல் 65% வரை இருப்பார்கள் என்றும் கூறியிருக்கிறார். கேப் ஜெமினி நிறுவனத்தின் இந்திய செயல்பாட்டின் கீழ் மட்டும் 1,00,000 ஊழியர்கள் செயல்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது ஐ.டி. மற்றும் வியாபாரத் துறையில் ஹோம்ஸ் (HOLMES –  Heuristics and ontology-based learning machines and experiential systems ) என்னும் தானியங்கி தொழில்நுட்பத்தைக் கொண்டு வரப் போவதாக தெரிவித்துள்ளது விப்ரோ நிறுவனம். இந்த்த் தானியங்கித் தொழில்நுட்பம் சுமார் 30,000 ஊழியர்களின் வேலைகளைத் தானே செய்ய வல்லது. அந்த அடிப்படையில் விரைவில் சுமார் 30,000 ஐ.டி. ஊழியர்கள் விப்ரோ நிறுவனத்தால் விரைவில் பணி நீக்கம் செய்யப்படும் அபாயம் உண்டு.

முதலாளிகளுக்கு அடிமைச் சேவகம் புரிய, சக ஐ.டி ஊழியர்களை வேவு பார்க்கும் மனித வளத்துறை அதிகாரிகளுக்கும் ஆப்பைத் தயாராகவே வைத்துள்ளன ஐ.டி.நிறுவனங்கள்.  மனித வளத்துறை மற்றும்  நிதித்துறையிலும் தானியங்கித் தொழில்நுட்பத்தை உபயோகித்து ஆட்குறைப்பு செய்ய இருப்பதாகக் கூறியிருக்கின்றனர்.

படிக்கவே அதிர்ச்சியாக இருக்கலாம், ஆனால் இவை யாவும் உங்களை பீதியூட்டுவதற்காக இட்டுக்கட்டி சொல்லப்பட்டவை அல்ல. இவை அனைத்தும் முதலாளித்துவ பத்திரிக்கைகளில், அவர்களது இணையதளங்களில், முதலாளிகளின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளிலும் இதுவரை வெளியிடப்பட்ட தகவல்களே. இன்று “திறமையற்றவர்களாக” காட்டப்படும் சக ஊழியருக்காக குரல் கொடுக்க நீங்கள் தயங்கினால், நீங்களும் உங்கள் நிறுவனத்தால் ‘திறமையற்றவராக’ காட்டப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை மனதில் கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், உங்களது தேவை நிறுவனத்திற்கு மறைந்த உடனோ அல்லது உங்களுக்குப் பதிலாக குறைந்த சம்பளத்தில் வேறொருவர் உருவாக்கப்பட்டவுடனோ, நீங்கள் கருவேப்பிலையாக தூக்கியெறியப்பட்டு விடுவீர்கள்.

– நந்தன்

செய்தி ஆதாரம் :