privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.ககோமாதாக்களின் குலத்தையே அழிக்கும் ஆர்.எஸ்.எஸ். - பாஜக கும்பல் !

கோமாதாக்களின் குலத்தையே அழிக்கும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் !

-

பசுவைக் கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை – குஜராத் முதல்வர் விஜய் ரூபானி

டந்த 2017 மார்ச் மாதம் குஜராத் அரசு தனது மாநிலத்தின் ’விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தில்’ ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. பசுவைக் கொல்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க இச்சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது. அதே போல, பசுப்பாதுகாப்பு குறித்து சமீபத்தில் பேசியுள்ள சட்டீஸ்கர் முதல்வர் இராமன் சிங், பசுவைக் கொல்பவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அவருக்கு ஒரு படி மேலே போய் பாஜக எம்.எல்.ஏ. ஒருவர், பசுவுக்கு அவமரியாதை செய்பவனின் கைகளை உடைப்பேன் என கூவியுள்ளார்.

பசு வதையைத் தடுப்பதாகக் கூறிக் கொண்டு சட்டரீதியாகவும், தாத்ரி, அல்வார் சம்பவங்கள் போன்று சட்டவிரோதமாகவும் பாஜக மற்றும் சங்க பரிவாரக் கும்பல்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள், மாட்டுக்கறி மற்றும் தோலுறிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் இசுலாமியர்கள் மற்றும் தலித்துகளை மட்டும் பாதிப்பதாகப் பலர் கருதுகின்றனர். ஆனால் இந்நடவடிக்கைகள் பசுக்களை வளர்க்கும் பெரும்பாண்மை விவசாயிகளுக்குத் தான் மிகப் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகளைப் பொறுத்தவரையில், பால் கொடுப்பதை நிறுத்திவிட்ட பசுக்களையும், எருதுக் கன்றுகளையும் வளர்ப்பது என்பது தற்போதைய சூழலில் வாய்ப்பில்லாத ஒன்றாகும். ஆகவே விவசாயிகள் பால் கறப்பதை நிறுத்திவிட்ட பசுக்களையும், எருதுகளையும், அடிமாட்டிற்கு விற்றுவிட்டு அதன் மூலம் வரும் பணத்தைக் கொண்டு மீண்டும் பசுக்களை வாங்கி வளர்க்கும் போது மட்டும் தான் இத்தொழிலில் சிறிதாவது வருமானம் பெற முடியும். ஆனால், தற்போதைய கடும் சட்டங்களின் காரணமாக விவசாயிகள் எருதுக் கன்றுகளையும், பால் கறப்பதை நிறுத்திவிட்ட பசுக்களையும் விற்பனை செய்வது சிக்கலாகி இருக்கிறது.  இதனால் அவர்களுக்கு புதிய மாடுகளை வாங்கி வளர்ப்பதில் மிகப் பெரிய பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பசுவைக் கொல்பவர்களுக்கு தூக்குத் தண்டனை – சட்டீஸ்கர் முதல்வர் இராமன் சிங்

இதன் தாக்கத்தால், பால் உற்பத்திக்கு பசுக்களை வாங்குவதை விட எருமைகளை வாங்கினால், பால் கறப்பதை நிறுத்திய பிறகும் அவற்றை அடிமாட்டிற்கு விற்க முடியும் என்பதாலேயே பசுக்களைத் தவிர்த்து எருமைகளை வாங்க ஆரம்பித்திருக்கின்றனர் விவசாயிகள்.  இதன் காரணமாக எருமைகளின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. 100 கிலோவிற்கு சுமார் 10,000 ரூபாய் முதல் 11,000 வரை விற்பனையாகிக் கொண்டிருந்த எருமை மாடுகளின் விலை 13,000 முதல் 14000 வரை விலையேற்றம் அடைந்தது. பசுக்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துவிட்டது.

2012-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கால்நடை கணக்கெடுப்பின் படி பசுவதைத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டு அமல்படுத்தப்பட்டிருக்கும் மாநிலங்களான ஹரியானா(77%), பஞ்சாப்(67%), உத்திரப்பிரதேசம்(61%), குஜராத்(51%), ராஜஸ்தான்(50%) ஆகிய மாநிலங்களில் பால் உற்பத்தியில் பெருமளவு எருமை மாடுகளே ஈடுபடுத்தப்படுகின்றன. மொத்த பால் உற்பத்தியில் பசுக்களின் பங்கு பாதி அளவிற்கும் குறைவாகவே உள்ளது.

ஆனால் இதுவே பசுவதைத் தடைச் சட்டம் நடைமுறையில் இல்லாத கேரளா(93%), மேற்கு வங்கம்(96.5%) மற்றும் அஸ்ஸாம்(91%) ஆகிய மாநிலங்களில் பால் உற்பத்தியில் பசுக்களின் பங்களிப்பு 90% க்கு மேல் இருக்கின்றது.  இந்தக் கணக்கெடுப்பு மிகத் தெளிவாக ஒரு விசயத்தை உணர்த்துகிறது. அதாவது மாட்டுத் தோல், மாட்டுக் கறி சார்ந்த தொழில்கள் தடையின்றி நடக்கும் மாநிலங்களில் விவசாயிகள் அதிக அளவில் பசுவை வளர்க்கின்றனர். ஆனால் பசுவதை தடை செய்யப்பட்ட மாநிலங்களில் பசு வளர்ப்பு குறைந்து எருமை வளர்ப்பு அதிகரித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பலின் இந்துத்துவ வார்த்தைகளில் சொல்லுவதானால், விவசாயிகளிடமிருந்து ’லெட்சுமி’யைப் பிடுங்கி விட்டு அவர்களது கைகளில்  ’எமனைக்’ கொடுத்திருக்கிறது.

இது போக, பசு வதைத் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ள மாநிலங்களில் பல்வேறு நாட்டு மாடு இனங்கள் அழிந்து வருகின்றன. உதாரணமாகக் கடந்த  2006-ம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் தேசிய விலங்கு மரபணு வள ஆணையம் எடுத்த கள ஆய்வின் படி,  ’ஹரியானா பசு’ என்னும் தனி இனத்தின் எண்ணிக்கை தொடர்ச்சியாக சரிவடைந்து வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது, இச்சரிவிற்குக் காரணம், இப்பசுக்கள் பால் கறப்பதை நிறுத்திய பின்னர் இவற்றால் பலனில்லை என்பதால், விவசாயிகள் இப்பசுக்களை வளர்ப்பதற்கே விரும்புவதில்லை என்பதேயாகும்.

கோமாதாவை வீதி வீதியாக கவனிப்பாரற்று அலைய விட்டது தான் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் செய்த மிகப் பெரும் சாதனை.

கடந்த 2015-ம் ஆண்டு முதல் மராட்டிய அரசு, பசுக்கள் மற்றும் காளைகள் வெட்டப்படுவதற்கும், அவற்றை வாகனங்களில் எடுத்துச் செல்வதற்கும் முழுமையான தடை விதித்த பிறகு இம்மாநிலத்தில் மாடு வெட்டும் தொழிலைச் செய்து வரும் குரேசி சமூகத்தினர், மாட்டு வியாபாரிகள், தோல் உரிப்புத் தொழிலாளர்கள் ஆகியோரின் ஒட்டு மொத்த வாழ்வாதாரங்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதன் மூலம் பசு மற்றும் காளைகளுக்கான சந்தை மற்றும் தோல் மற்றும் அது சார்ந்த தொழில்கள் மிகப் பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்தது.

இந்தியாவைப் பொறுத்த வரையில் மாட்டுக் கறி மற்றும் மாட்டுத் தோல் சார்ந்த தொழில்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார்  ரூ. 1,14,338 கோடி (17.8 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்பிற்கு மாட்டுத் தோல் மற்றும் அது சார்ந்த வியாபாரங்கள் நடக்கின்றன. பாஜக கும்பலின் இத்தகைய முட்டாள்தனமான நடவடிக்கையால் இத்தொழில்களிலும் அது சார்ந்த தேசிய வருவாயிலும் மிகப்பெரிய அளவில் இழப்பு ஏற்படும்.

சங்கப் பரிவாரக் கும்பலான விசுவ ஹிந்து பரிஷத்தின் மதிப்பீட்டின் படியே மஹாராஸ்டிராவில் மட்டும் சுமார் 7,50,000 பசுக்களும் எருதுகளும் கேட்பாரற்று, கவனிப்பாரற்று, வீதியில் அலைகின்றன. இக்கால்நடைகள் அனைத்தும் விவசாயிகளால், விற்பனை செய்ய முடியாமலும், உபயோகப்படுத்த முடியாமலும் வீதியில் விடப்பட்டவையே. இப்படி கோமாதாவை வீதி வீதியாக கவனிப்பாரற்று அலைய விட்டது தான் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் செய்த மிகப் பெரும் சாதனை. இந்நிலை தொடருமானால், பசுக்களையும் காளைகளையும் இனி உயிரியல் கண்காட்சிகளிலும், சரணாலயங்களிலும் தான் காண முடியும் !!

மேலும் படிக்க:
The Beef Ban Effect: Stray Cattle, Broken Markets and Boom Time for Buffaloes