காம்பியாவின் தலைநகரும் தனது சொந்த ஊருமான பான்ஜூலை விட்டு 2016-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி ஐரோப்பாவுக்குக் கிளம்புகிறார் பத்தொன்பது வயது மாலிக் ஜெங். அப்போது அவருக்கு தான் வழியில் எதிர்கொள்ளவிருக்கும் அபாயங்களைக் குறித்து ஏதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி நெடுக பரந்து விரிந்து கிடக்கும் பாலைவனத்தை எண்ணை லாரி ஒன்றினுள் மறைந்தவாறே கடந்திருக்கிறார் மாலிக். மூச்சுத் திணறடிக்கும் அந்த நீண்ட பயணத்தின் இடையே லிபியாவைக் கடக்கும் போது மாலிக் பிடிபட்டார். லிபியாவில் மாலிக்குடன் பயணித்துக் கைதானவர்கள் அவரது கண் முன்னே கொல்லப்பட்டனர். நல்லவேளையாக விசயத்தைக் கேள்விப்பட்டு மாலிக்கின் குடும்பத்தார் சரியான நேரத்தில் அனுப்பி வைத்த பணம் அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளது.
லிபியாவின் சிறையில் ஒரு மாதத்தைக் கழித்த பின் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி சட்டவிரோத ஆள் கடத்தல் ஏஜெண்டுகளின் உதவியுடன் திரிபோலி கடற்கரையை வந்தடைகிறார் மாலிக். அங்கிருந்து சுமார் 120 பேருடன் ரப்பர் படகு ஒன்றின் துணையுடன் மத்திய தரைக்கடலைக் கடப்பதாக திட்டம். அந்தப் படகு பயணிகளுடன் தனது பயணத்தைத் துவங்கிய சில மணி நேரங்களிலேயே, லிபிய கடற்கரையிலிருந்து சுமார் 20 கடல் மைல் தொலைவில் தன்னார்வக் குழு ஒன்றின் மீட்புப் படகான லுவெண்டாவால் கண்டறியப்பட்டு மீட்கப்படுகிறது.
மாலிக்கை முதலில் சிசிலியில் உள்ள கடானியா நகரத்திற்க்கும் பின்னர் வடக்கு இத்தாலியின் பெய்லா நகரத்திற்க்கும் மாற்றுகிறார்கள். அவர் தற்போது பெய்லாவில் தற்காலிக அகதிகள் முகாமான கோலிப்ரியில் தங்கியுள்ளார். அது சுமார் பத்தாண்டுகளுக்கு முன் கைவிடப்பட்ட ஓட்டல் ஆகும். தற்போது அந்த ஓட்டலை அகதி மையமாக பராமரித்து வரும் கூட்டுறவு நிறுவனம், தமது மையங்களில் அனுமதிக்கும் அகதி ஒருவருக்கு ஒரு நாள் வாடகையாக 35 யூரோக்களை அரசிடம் இருந்து பெற்றுக் கொள்கிறது. மாலிக்கிற்கும் அவருடன் தங்கியுள்ள குடியேறிகளுக்கும் தினசரி மூன்று வேளை உணவும், உறங்குவதற்கு ஒரு படுக்கையும், ஒவ்வொரு மாதமும் செலவுக்கு 75 யூரோக்களும் கிடைக்கின்றன.
அகதியாக தஞ்சம் கோரும் விண்ணப்பத்திற்கான பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் மாலிக். அந்த விண்ணப்பத்தின் பேரில் அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்தே சட்டப்பூர்வ அகதியாகவோ அல்லது தற்போதைய நிலையைப் போல் தொடர்ந்து போராடியவாறோ அவரது எதிர்கால வாழ்க்கை அமையும்.