privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்வாழ்க்கைவாழ வழி காட்டுயான்னா பேள வழி காட்டுறாரு மோடி !

வாழ வழி காட்டுயான்னா பேள வழி காட்டுறாரு மோடி !

-

ற்ற மாவட்டங்களை விட தஞ்சையின் பசுமைக்கு தனி அழகுண்டு. அடர்ந்த மரங்கள் கிடையாது. மலை குன்றுகள் கிடையாது. பரந்த வெளியில் பயிர்களும் அதன் மேல் கடல் அலை போல வருடும் காற்றும் தனியொரு கவர்ச்சிதான். ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமையின் காட்சியை விவரித்தும் வர்ணித்தும் எழுத வேண்டிய அந்த் மண் இன்று வறண்ட கற்பாறை போல கண்ணை உறுத்துகிறது. தஞ்சையின் கடந்த கால  பசுமையை நினைத்துப் பார்க்கும் நேரத்தில் தமிழகத்திற்கு இனி எந்த நெற்களஞ்சியம் சோறு போடும் என்ற பயமும் வருகிறது.

மே தினத்தன்று விவசாயத் தொழிலாளர்களை சந்திக்க வெகு தூரம் அலைந்தோம். ஆழ் குழாய் பாசனம் வைத்துள்ள வெகு சிலரே விவசாயம் செய்திருந்தனர். அங்கு மட்டுமே சிலரை சந்திக்க முடிந்தது. நிலத்தடி நீர் குறைந்து விட்டதால் ஆழ்குழாய் பாசனத்திலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு பாதி பயிரைத்தான் காப்பாற்றி உள்ளனர். கண்ணுக்கு எதிரே குழந்தை நோய்வாய்பட்டு இறக்கும் போது காப்பாற்ற முடியாத கையறு நிலையை போன்றதுதான் பாதியிலே பயிர் வாடும் காட்சியும். அதை ஒரு விவசாயி போல நம்மால் கற்பனை செய்ய முடியாது.

தட்டுப்படும் சில விவசாயத் தொழிலாளிகளிடம் அரசியல் தவிர்த்து அன்றாட வேலைகளைப் பற்றிதான் கேட்டோம். ஆனால் அவர்களோ எதை ஆரம்பித்தாலும் அரசியல் ரீதியிலேயே பேசினார்கள். பார்க்கும் வேலைக்கும் பாராளுமன்றத்துக்கும் முடிச்சுப் போட்டு பேசுவதை பார்த்து வியப்பதா? விழிப்புணர்வு என்பதா? சற்று கவனித்தால் தம் வாழ்வில் நடக்கும் நல்லது கெட்டதுக்கு விதியையும் கடவுளையும் கைக்காட்டும் மக்கள் இப்போது அடிப்படையானகாரணத்தை தேட தொடங்கிவிட்டார்கள் என்பது தெரிகிறது. மெரினாவிற்கு பிறகு தமிழகத்த்தில் தோன்றியுள்ள மாற்றமிது.

எள்ளு செடி எடுக்கும் விவசாயத் தொழிலாளிகள், சேதுராயன் குடிகாடு.

“எங்கள ஆத்துதண்ணியும் ஏமாத்திட்டு மழத்தண்ணியும் ஏமாத்திட்டு. எங்குட்டு திரும்புனாலும் வேல இல்ல. ஐநூறுவா கூலி வாங்குனா அடுத்த நிமுசம் போன எடந்தெரியல. என்னத்த சொல்ல எங்கப் பொழப்பப்பத்தி.”

ஏனுங்கக்கா அம்புட்டு செலவு செஞ்சு அப்படி என்ன ஆடம்பரமான வாழ்க்கை வாழ்றீங்க?

“ஏஞ்சொல்ல மாட்டிங்க. ஒங்களுக்கு மாசம் பொறந்தா 1 தேதி சம்பளம் வந்துரும். ஆத்துல தண்ணி வந்தா ஒங்களுக்கென்ன வரலண்ணா ஒங்களுக்கென்ன. பின்ன என்னங்க! ஒரு ஆளு கூலி மிச்சமாகாதான்னு வயக்காரவங்களும் எங்கக்கூட வேல செய்ராங்க. நீங்க சொல்றாப் போல வெவசாயத்துல மட்டும் லாபம் பாத்து பெருங்குடியா ஆக முடியாது.

இந்த வருசம் ஆத்துல தண்ணி வராம வேலையே இல்ல. வெவசாய வேல இல்லாங்காட்டி நூறு நாள் வேலைக்கி போறோம். வெறும் 60 ரூவாதேன் சம்பளம் தாராக. ஏன்னு கேட்டா வேல இல்லேங்குறாக. அதையும் விட்டுபுட்டு எங்குட்டு போறது நாங்க. வாய மூடிக்கிட்டு வேல செய்றோம். அதுலயும் 240 ரூவா இன்சூரன்சு கட்ட செல்றாக. ஏதாவது அடிபட்டு கெடந்தா தருவாகளாம். வாழும்போது இல்லாத பணம் செத்தப்பொறவு எதுக்கு?

நூறு நாள் வேலைக்கான கூலியெ பேங்குல போயித்தேன் எடுக்கனும். அதுலயும் மோடி ஒரு ஆப்பு வச்சுட்டாரு. அக்கவுண்டுல 500 கொறையாம இருக்கனுமாம். ஒரு நாளைக்கி 60 ரூபா கூலி வாங்கி பேங்குல எப்படிங்க இருப்புப்பணம் வைக்க முடியும். எல்லாரும் பேங்குல அக்கவுண்டு பன்னுங்க லட்ச கணக்குல பணம் போடப்போறேன்னாரு மோடி. இன்னைக்கி கணக்குல இருக்குற ஐநூறையும் எடுக்க முடியல. நாங்க பாக்குற வேலைக்கி பேங்கு எதுக்குங்க?

நாங்க என்ன படிச்சுட்டா உத்தியோத்துக்கு வர்ரோம். யாருக்கு என்ன திட்டம் போட்றதுன்னு தெரிய வேணாம். இப்ப பாருங்க ரேசன் அட்ட, ஆதாரு அட்ட, பேங்கு அட்ட, குழு லோனுக்காக பேனு அட்ட (பேன் கார்டு) எந்த அட்ட எதுக்கு உண்டானதுன்னு ஒரு மண்ணும் தெரியமாட்டேங்குது. வாழ வழி காட்டுய்யான்னா பேல வழி காட்டுறாரு மோடி.

களையெடுக்கும் விவசாயத் தொழிலாளிகள்,  தென்னமநாடு.

ன்னைக்கி தொழிலாளர் தினம் அதுக்காக உக்கள்ள பாத்து பேசிட்டு போகலான்னு வந்தோம், யாராவது பேசுங்கக்கா.

“தொழிலாளர் தெனமா எனக்கு தெரியும்” என்றார் ஒருவர்.

“ஏன்டி நெதமும் எங்க கூடதான் வயக்காட்டுக்கு வர்ரவ நீ எப்படி காலேசல்லாம் போயி படிச்ச?” என்றார் மற்றவர். “டிவியில புதுப் படம் போட்றாக தொழிலாளி தெனமுன்னு சொன்னத வச்சுத்தேன் சொன்னே”
“தொழிலாளர் தெனமெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் எங்கள படம் புடிச்சு மோடிக்கி அனுப்பி வையிங்க. எத்தன செரமப்பட்டு விவசாயம் செய்றமுன்னு தெரிஞ்சுக்கட்டும்.

“இவ ஒருத்தி. மோடி ஊருக்கே போயி நம்ம அய்யாக்கண்ணு ஆயிரத்தெட்டு தினுசுல போராட்டம் பண்ணிப் பாத்தும் என்னான்னு கேக்காத மோடி நம்ம போட்டவ பாத்த்தும் மனசு எறங்கி நம்ம கஷ்டத்த தீத்து வெக்கப் போறாரு. அவருக்கும் நமக்கும் சம்மந்தம் இல்லன்னு நெனைக்காராரு அவரு நெனப்ப நாம நெசமாக்கிற வேண்டியதுதான்.” மற்றவர்களும் சிரித்தபடி ஆமோதித்தனர்.

கதிரு வந்த வயல்ல என்ன வேலை செய்றீங்க?

நெல்லு வயலுல புல்லு அருக்குறோம். நெல்லுக்கு சமமா புல்லும் வெளஞ்சுருக்கு. நெல்லுக்கு மேல தெரியுது பாருங்க இந்த குதுரவாலி புல்லு இத அப்புடியே வச்சு கருதறுத்தா எந்த யாவாரியும் வாங்கவே மாட்டாங்க. சோத்துக்கே ஒதவாத நெல்லு நாத்துக்கு ஒதவுமா.? ஒரு நெல்லு போட்டா பத்து புல்லு மொளைக்கும். இது அத்தனையும் அரசாங்கத்து ஆபீஸ்சுல வாங்குன வெதைங்க. எங்க அனுபவத்துல இதுபோல வேல பாத்த்தே கெடையாது. வயக்காரவுக கணக்குப் பாத்தா நட்டந்தே. அதுக்காக வெளஞ்சத விட்டுற முடியுமா?

உங்க வேலையில லீவெலாம் உண்டாக்கா?

“நீங்க எந்த ஊருலேருந்து வர்ரீங்க. வெவசாயிக்கு ஏதுங்க லீவு. நாங்க லீவு போட்டா நீங்கள்ளாம் எப்புடி சாப்புடுவிங்க. நாங்க வருசம் பூறா வேல செஞ்சாத்தான் உங்களப்போல பேனா தூக்குற ஆளுகளுக்கு சோறு. வேலை இல்லாத நாளு எங்களுக்கு லீவு. லீவுன்னா ஊர சுத்த கெளம்பிருவோன்னு நெனச்சுராதீக. வீட்டு மராமத்து வேலையே சரியாருக்கும்.

வயசான பாட்டி வேல செய்றாங்களே புல்லு எது நெல்லு எதுன்னு கண்ணுக்கு தெரியுமா?

“எங்க வேலைக்கெல்லாம் ரிட்டேர்மெண்டு கெடையாது கண்ணு. எங்கள போட்டா புடிக்க நீங்க வயல்ல எறங்க சொல்ல எத்தன மொற தடுமாறினிங்க. நீங்க சொன்ன பாட்டி இத்தன வயசாகுதே சேத்துல கால விட்டுவிட்டு புடுங்குதே எங்காச்சும் விழுந்துச்சா பாத்திங்களா. அந்தாத்தா பூச்சி மருந்து கலக்காத அந்த காலத்து கேப்ப களி தின்னு வளந்த வைரம் பாஞ்ச ஒடம்பு.

சோமு, உளுந்து செடி காயவைக்கும் விவசாயி, ஊர் பருத்திக்கோட்டை.

“எந்த விவசாயும் நிம்மதியா இல்லன்னு இந்த நாளுல பதிவு பண்ணிக்கங்க. மூனு ஏக்கரு நடவு நட்டேன், ஒரு புடி நெல்லு அறுக்கல. அத்தனையும் காஞ்சுப் போச்சு. சரி போனது போச்சுன்னு மனச தேத்திக்கிட்டு உழுது உளுந்து வெதச்சேன். 1 யூனிட்டு ஒழவு ஓட்ட டிராக்டருக்கு 100 ரூபா. 12 யூனிட்டு ஓடுச்சு. ஒரம் போட்டது பூச்சி மருந்து அடிச்சது 4000 ரூபா. அங்கொன்னும் இங்கொன்னுமா இருந்த உளுந்து பயிர புடுங்க 15 ஆளு. ஒரு ஆளுக்கு 75 ரூபா கூலி.

கணக்குப் போட்டு பாருங்க 6500 ரூபா ஆச்சா. ஈரம் இல்லாததால களையெடுக்கல இல்லாங்காட்டி அது ஒரு செலவு வந்துருக்கும். வெத உளுந்து வீட்டுலேயே இருந்தது. எனக்கு கூலின்னு எதுவும் இல்ல. உங்களால முடிஞ்சா இந்த கணக்க நோட்டிசு அடிச்சு தெரிஞ்சவங்களுக்கு வினியோகம் பன்னுங்க. விவசாயிங்க நெலமைய ஊரெல்லாம் தெரிஞ்சுக்கட்டும்.

விவசாயி அருவண்டு, ஒரத்தநாடு

“உங்கள நெனச்சா பரிதாபமா இருக்கு. ஊரே வறண்டு கெடக்கு எந்த தைரியத்துல தொழிலாளர் தினத்துக்கு விவசாயிகள வயல்லையே சந்திக்க வந்திங்கன்னு தெரியல.

அக்கம் பக்கம் எல்லா நெலமும் காஞ்சு கெடக்கு உங்க நெலம் மட்டும் பசுமையா இருக்கே எப்படி?

உயிர குடுத்து பாடுபடுறேன். எனக்கு எட்டு ஏக்கர் நெலம் இருக்கு. ஆனா நாலு ஏக்கர் நெத்துல மட்டுந்தான் வெவசாயம் பன்னிருக்கேன். அதுக்கும் தண்ணி பத்தல. மனுசனுக்கு தொண்ட காயாம உயிர் தண்ணி விடுவாங்க அதுபோல பயிரு காஞ்சு சுருண்டு வரும் போது தண்ணி விட்டு உயிரு உண்டாக்குறேன். நடுராத்திரி ஒரு மணிக்கி திரிஃபேஸ் கரண்டு வந்தாலும் அலுத்துக்காம வந்து தண்ணி பாச்சுவேன். இத விட்டா எனக்கு வேற தொழில் தெரியாது.

லீவு பொழுது போக்கல்லாம் உங்க வாழ்க்கையில உண்டா? எங்கெல்லாம் போவீங்க.?

நேரம் கெடச்சா சம்சாரத்த கூட்டிட்டு மாமியாரு வீட்டுக்கு போவேன் அவ்வளவுதான். சொந்தமா உழவு டிராக்டர் வச்சுருக்கேன். என்னோட நெலத்துக்கு ஓட்டுன நேரம் போக கூலிக்கி ஓட்ட போவேன். இளையராஜாவோட பழய பாட்ட போட்டுட்டு ஆனந்தமா ஏறு ஓட்டுவேன். அதுதான் எனக்கு புடிச்ச பொழுது போக்கு.

விவசாய தொழிலாளருக்கு அரசு நிர்ணயித்த கூலி தொகை எவ்வளவுன்னு தெரியுமா?

அதெல்லாம் நமக்கு தெரியாதுங்க. நம்ம பக்கம் குடுக்குற கூலி நாள் பூறா வேல செஞ்சா ஆம்பளைக்கு 500 பெம்பளைக்கு 300. அரசு இதுபோல சட்ட நடவடிக்கையை நமக்காகவா போடுது நிர்வாக நடைமுறையை சட்டப்பூர்வமா காட்டுரதுக்குத்தானே போடுது. அது நமக்கு ஒதவாதுங்க.

முரளி, டிராக்டர் டிரைவர், ஊர் கண்ணந்தங்குடி.

“தொழிலாளர் தினம் தெரியும் அன்னைக்கிதான் தல அஜித்துக்கு பொறந்த நாள். அம்புட்டுதான் தெரியும்.

“எனக்கு ஒரு நாள் கூலி 500 ரூபா. வேலைக்கி வந்தா பேட்டா காசு 100 தருவாங்க. பொதுவா எல்லா நாளும் வேல இருக்கும். இந்த வருசம் சொல்ல முடியாத அளவு வெவசாயம் நெடிச்சுப் போச்சு. இந்த நெலம இப்படியே போச்சுன்னா விவசாயி மட்டும் தற்கொலை பண்ணிக்க மாட்டான். குடும்பத்தோட வெசத்த குடிச்சுட்டு போக வேண்டியதுதான்.

வீராயி, குத்தகை விவசாயி, ஊர் ஒரத்தநாடு.

“இன்னைக்கி தொழிலாளர் தினம் பாட்டி அதுக்கு உங்கள பாத்து பேசிட்டு போகலான்னு வந்தோம்.”

“அம்புட்டு வெவரமெல்லாம் எனக்கு தெரியாதுங்களே. எம்மொவ(ன்) இதுவரைக்கும் எள்ளுக்காய் அறுத்துப்புட்டு இப்பதானுங்க வீட்டுக்கு போனான். நானு இந்த மாட்ட மேயவிட்டு ஓட்டிட்டு போகலான்னு நிக்கே. செத்த முன்னாடி வந்துருந்தா அவன பாத்துருக்காம்.”

எங்களுக்கு சொந்த நெலமெல்லாம் இல்லைங்க. நாங்க தோப்பு ஆளுக. குத்தகைக்குத்தே வெவசாயம் பாக்குறோம். ஒரு ஏக்கர் நெலத்துக்கு 12 மூட்ட நெல்லு தரனும். இந்த வருசம் நட்ட பயிரெல்லாம் தண்ணி இல்லாமெ பட்டுப்போச்சு. ஆனாலும் குத்தக குடுத்துத்தேன் ஆகனுனுட்டாக. நாமெ அப்புடி இப்புடி பேசுனா நெலத்த புடுங்கிபுடுவாக. எம்பையனும் அடுத்த வெள்ளாமையில பாத்துக்கலாமின்னு நெனச்சு கடன ஒடன வாங்கி குத்தகய குடுத்தான். அடுத்து எள்ளு வெதச்சோம் அதுவும் சரியில்ல. ஒவ்வொரு காய வச்சுகிட்டு ஈக்குமாறு போல நின்னுச்சு. இன்னைக்கிதான் ஒத்த ஒத்தையா அறுத்து சேத்தோம். வெதச்ச கூலிக்கு கண்டாலே சந்தோசந்தேன்.

– நேர்காணல், புகைப்படங்கள்: வினவு செய்தியாளர்கள்