privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.ககீழடி : புதைக்கப்படும் தொல் தமிழர் நாகரிகம் - மதுரை கருத்தரங்கம்

கீழடி : புதைக்கப்படும் தொல் தமிழர் நாகரிகம் – மதுரை கருத்தரங்கம்

-

“கீழடி அகழ்வாய்வு முடக்கப்படுகிறது! தொல் தமிழர் நாகரிகம் புதைக்கப்படுகிறது!! என்ன செய்யப் போகிறோம் நாம்!!!” என்கின்ற தலைப்பில் மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில் கடந்த 28‍.05.2017 ஞாயிறு மாலை மதுரை மாட்டுத்தாவணி அருகில் செய்தியாளர் அரங்கத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது.

தோழர் சினேகா தனது வரவேற்புறையில் சிந்து சமவெளி நாகரிகத்தில்கூட உட்புறத்தில் சுடப்பட்ட பானைகள் கண்டறியப்படவில்லை. ஆனால் கீழடியில் இருபுறமும் சுடப்பட்ட மண்பானைகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் அரிய 310 பழம்பொருட்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு நம் தொல்தமிழரின் நாகரிகம் கண்டறியப்படுவதை பொறுக்க முடியாமல் இந்து‍-இந்தி-இந்தியா என்று ஒற்றை கலாச்சாரத்தை நோக்கி செல்ல முயற்ச்சிக்கும் RSS – BJP  கும்பல் கீழடியை முடமாக்கி அழிக்க முயற்சிக்கிறது. ஆனால் ஏற்கனவே ராமன் சிலைக்கு செருப்படி, விநாயகர் சிலை உடைப்பு என ஆரிய எதிர்ப்பு பாரம்பரியம் கொண்டது. எனவே இந்த கருத்தரங்கிற்கு வந்திருப்பவர்கள் இங்கே சொல்லப்படும் கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என உரையாற்றினார்.

தோழர் கதிரவன்

தோழர் கதிரவன் தன்னுடைய தலைமை உரையில் தொடர்ச்சியாக பல்வேறு தளங்களிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதால் மட்டுமே ஒரு போக்கிற்காக‌ 3-வது கட்ட ஆராய்ச்சிக்கு பாஜக அனுமதி வழங்கி 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.  இதை ஜல்லிக்கட்டு போராட்டம் போல் போய்விடக்கூடாது என்று பயந்துபோய் அனுமதியளித்துள்ளனர் என சந்தேகிக்க காரணங்கள் இருக்கின்றன. கிடைத்துள்ள 5,300 பழம்பொருட்களில் குறைந்தது 10 பொருட்களையாவது ஆய்விற்கு அனுப்பவேண்டும் என்று பல்வேறு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவது கூட‌ பொருட்படுத்தாமல் வெறும் இரண்டை மட்டுமே கால கணிப்பு ‍ஆராய்ச்சிக்கு அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது. அதுவும் வெறும் 2 லட்சம் ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளனர்.

வட இந்தியாவில் நடக்கும் அகழ்வாராய்ச்சியிலிருந்து 15, 20 பொருட்களை அனுப்புகின்றனர். ராமாயண அருங்காட்சியகத்திற்கு 150 கோடி ஒதுக்கீடு, இல்லாத சரஸ்வதி நதியை தேட 100 கோடி ஒதுக்கீடு என்பதையும் இதோடு சேர்த்து சிந்தித்து பாருங்கள். கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக விவசாய நிலங்களை விவசாயிகளிடம் கேட்காமல்கூட கையகப்படுத்தும் மோடி கீழடிக்கு கள அருங்காட்சியகம் அமைக்க நிலம் ஒதுக்க மறுக்கிறது. மேலும் வெளிநாட்டு பிரதமர்களை சந்திக்கும் போதெல்லாம் பகவத்கீதையை பரிசளிக்கும் மோடி பிறப்பால் உயர்வு தாழ்வை ஏற்றுக்கொள்ளாத திருக்குறளை பரிசளிப்பதில்லை. இவற்றையெல்லாம் பல ஆயிரக்கணக்கில் பிரசுரங்களிடித்து  மக்களிடம் பிரச்சாரமாக கொண்டு சென்றுள்ளோம் என தனது உரையில் பேசினார்.

தொல்லியல் அறிஞர் முனைவர் சாந்தலிங்கம்

அதன் பின்னர் தொல்லியல் அறிஞர் முனைவர் சாந்தலிங்கம் பேசும்போது பொதுவாகவே வடஇந்தியாவில் JNU    பேராசிரியர்கள்கூட தென்னிந்தியாவில் மூவேந்தர்கள் பேரரசு இருந்தது என்பதையோ அல்லது அசோகர் காலத்திற்கு முன்பாகவே எழுத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள தயங்குவார்கள். கீழடிக்குப் பிறகுதான் ரொமிலா தாப்பரிடம் மாற்றம் வந்துள்ளது. சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த வரலாற்று போராய மாநாட்டின் தலைமையுரையில் கீழடி கண்டுபிடிப்பானது நாம் தமிழக வரலாற்றை மாற்றி எழுதவேண்டிய நிலைக்கு கொண்டுவந்துள்ளது என்றார்.

ஆனால் கீழடியே முதன் முறை அல்ல ஆதிச்சநல்லூரில் தொடங்கி கொடுமணல், புளிமான் கோம்பை என பல இடங்களில் அகழ்வாராய்ச்சி நடந்துள்ளது. இதில் ஆதிச்சநல்லூர் கிட்டத்தட்ட கி.மு.1700-க்கும் முந்தைய நாகரிகமாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் ஏதோ சில சில்லறை விசங்களை கூறி அதன் அறிக்கையை வெளியிடாமல் முடக்கி வைத்துள்ளார்கள். குறிப்பாக வட இந்திய அகழ்வாரய்ச்சிகளில் கிடைத்த மண்பாண்டங்களில் எதிலும் எழுத்துக்கள் குறிக்கப்படவில்லை. தமிழக்கத்தில்தான் எழுத்து பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. அதுவும் பிராமி எழுத்துக்கள் கலக்காத தமிழ் எழுத்துக்களுடைய மண்பாண்டங்கள். மேலும் வட இந்தியாவில் எத்தனையோ அறிஞர்கள் 20 வருடம் வரை ஒரே அகழ்வாராய்ச்சியில் பணி செய்தே ஓய்வு பெறும் சூழலில்
திரு.அமர்நாத் ராமகிருஷ்ணனை மட்டும் 2 வருடத்தில் மாற்றுவது கூடாது. என்னுடைய கணிப்பின்படி கீழடியானது மிகப்பெரிய தொழிற்கூடமாக இருக்கலாம் குறிப்பாக நெசவு அல்லது நூல் தயாரிப்பு செய்யப்பட்ட தொழிற்கூடமாக இருந்திருக்கலாம் என்று பேசினார். முனைவரின் உரையானது இந்தியாவின் மூத்த தொல்குடி தமிழ்குடிதான் என்பதை நிரூபிக்கும் விதத்தில் இருந்தது.

அதன் பின் ம.க.இ.க.வின் மாநில இணை செயலாளர் தோழர் காளியப்பன் பேசும்போது முனைவரின் அனுபவப்படி பல்வேறு ஆராச்சி முடிவுகள் தமிழகத்தின் தொன்மையை பறைசாற்றும் விதமாக வந்திருக்க ஆனால் அது எதுவும் பாடநூல்களில் சேர்க்கப்படாமல் 1960-களில் சேர்க்கப்பட்ட பாடங்களே வரலாற்று நூல்களில் இருக்கிறது என்றால் இந்த பாடத்திட்டமே எவ்வளவு அநாகரிகமானது என்று கேள்வியெழுப்பினார். பொதுவாகவே BJP – RSS   கும்பலை சந்தேகப்பட பல காரணங்கள் இருக்கின்றன. தமிழ் மொழியின் தொன்மை பற்றியும் திராவிட நாகரிகத்தின் தொன்மையை பற்றியும் பல்வேறு கண்டுபிடிப்பு உண்மைகள் வெளியே வந்துள்ளது. ஆனால் BJP – RSS  கும்பல் இவை எவற்றையும் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் சமஸ்கிருதம்தான் இந்தியாவின் தாய்மொழி, சிந்து நாகரிகமே இந்து நாகரிகம்தான் என இன்னுமும் சொல்லி கொண்டிருக்கின்றனர்.

தோழர் காளியப்பன்

பாட நூல்களில் புராணக் கதைகளை நுழைப்பது, திராவிட கருத்தை ஒழிக்க வேண்டும் எனப் பேசுவது இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்த்தால் இவர்கள் கீழடியை விட்டு வைக்க மாட்டார்கள் என்ற முடிவுக்குத்தான் வர வேண்டும். கால்டுவெல் தன்னுடைய ஆராய்ச்சியில் தமிழர்கள் அவ்வளவாக மூடநம்பிக்கை அற்றவர்களாகவும், பொதுவில் பொதுச்சிந்தனை உடையவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் எனக்குறிப்பிட்டுள்ளார். அவருக்கு இந்துத்துவ கும்பல் வைத்துள்ள பெயர் பிரித்தாளும் அந்நிய சூழ்ச்சிக்காரர். மேலும் அத்திரப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றுப்படுகையில் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே மனித இனம் வாழ்ந்த தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்புகளெல்லாம் RSS-ன் இந்துத்துவ சித்தாந்தத்திற்கு வேட்டு வைப்பதாக உள்ளது, எனவேதான் தமிழகத்தில் நடக்கும் எந்த அகழ்வாராய்ச்சிகளை நிறுத்திவிட அவர்கள் துடிக்கிறார்கள்.

தோழர் ராமலிங்கம்

RSS-ன் சாவர்காரின் கருத்துப்படி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா என்று ஒற்றை பண்பாடு கொண்ட நாடாக ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமே இந்துக்கள் என்று கூறியதை யோசித்துப் பார்த்தால் அவர்களின் திராவிட எதிர்ப்பு மனநிலை புரியும். எனவே ஆதிச்சநல்லூர் தொடங்கி கீழடி வரையிலான அனைத்து அகழ்வாராய்ச்சியின் முடிவுகளை வெளியே கொண்டுவர போராடுவதும், அந்த முடிவுகளை வரலாற்று பாடநூல்களில் இடம் பெறச்செய்வதும் ஆரிய இந்துத்துவ சித்தாந்தத்திற்கு பேரிடியாக இருக்கும் என தேவையை உணர வைத்து பேசினார்.

இறுதியாக ம.க.இ.க வின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் நன்றியுரையாற்றினார். கருத்தரங்கத்திற்கு திரளான பார்வையாளர்களும், ஜனநாயக உணர்வு கொண்டவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை.