கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோட்டில் அருகே இயங்கி வரும் இரு டாஸ்மாக் மது கடைகளை ((ஒரு கடைமட்டும் 14 ஆண்டு காலமாக உள்ளது) உடனடியாக மாற்ற அரசுக்கு உத்தரவிட்டு சுற்றுவட்டார கிராம்புற மக்கள் போர்க்குணத்துடன் 15.07.17 -ம் தேதி காலை முதல் இரு கடைகளையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.
இரு கடைகளையும் நிரந்தரமாக மூடிவிட்டோம், இந்த சுற்று வட்டாரத்தில் புதிதாக கடை திறந்தாலும் நான் மூட ஏற்பாடு செய்வேன் என்று தக்கலை சரக காவல் துறை ASP மக்கள் மத்தியில் அறிவித்தும் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
இரு கடைகளில் உள்ள சாராயத்தையும் காலிசெய்து எடுத்து சென்றால்தான் கலைந்து செல்வோம் என்று உறுதியோடு ஆண்களும், பெண்களுமாக போராட்டம் தொடர்ந்தது. மதியம் போராட்டக் களத்திலேயே கஞ்சியும் காய்சி சாப்பிட்டு போராட்டத்தைத் தொடர்ந்தனர். மக்கள் அதிகாரம் தோழர்களும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
“கடைகள் காலி செய்து எடுத்து செல்லப்படும் வரை ஒரு பாட்டிலைக்கூட திறந்து எடுக்க விட மாட்டோம்” என்று மூன்று ASP – போலிஸ் அதிகாரிகள் கூட்டாக உத்தரவாதம் கொடுத்ததைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றனர்.
மீண்டும் இதே கடைகள் திறக்கப்பட்டாலோ அல்லது இதே பகுதியில் புதிதாக சாராயக்கடைகள் திறக்கப்பட்டாலோ உடனடியாக முற்றுகையிட்டு போராடுவோம் என்று அறிவித்துச் சென்றனர். தங்கள் போராட்டத்தின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக இனிப்புகளைப் பரிமாரிக் கொண்டனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்