privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஅஜித்தின் விவேகம் படத்தைக் கொண்டாடும் விஜய் ரசிகர்கள் !

அஜித்தின் விவேகம் படத்தைக் கொண்டாடும் விஜய் ரசிகர்கள் !

-

கொஞ்சநாள் முன்னால வரைக்கும் அஜித் – விஜய் ரெண்டு பேர்ல யார் நல்ல ஹிட்டு குடுத்து அவங்கவங்க ரசிகர்கள சந்தோஷப்படுத்துறதுங்குற போட்டி இருந்துட்டு வந்துச்சி. ஆனா இப்ப அது அப்டியே தலைகீழா மாறி, யாரு மொக்கை படம் குடுத்து மத்த ரசிகர்கள் குஷிபடுத்துறதுங்குற போட்டி போயிட்டு இருக்கும்போல.

ஆறு மாசத்துக்கு முன்னால விஜய் “பைரவா”ன்னு ஒரு படத்த அஜித் ரசிகர்கள சந்தோஷப்படுத்த எடுத்தாப்ல. இப்ப அதுக்கு கைமாறா விஜய் ரசிகர்கள சந்தோஷப்படுத்த நம்ம அல்டிமேட்டு விவேகம் எடுத்துருக்காரு.

வீரம், வேதாளம்னு இரண்டு வெற்றிப் படங்களைக் குடுத்தப்புறம் மூன்றாவதா சிவா அஜித் கூட்டணியில் அடுத்த படம். போஸ்டர், டீசர் ட்ரெயிலர் அத்தனையும் ரசிகர்களை குஷி படுத்தியிருக்க, படம் எப்டி இருக்குன்னு பாப்போம். “தலை கெத்துடா, 1500 ஆப்ரேஷண்டா, ஒன் இயர் ஆப் ஹார்டு ஒர்க்குடா, சிக்ஸ் பேக்குடா” இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அதெல்லாம் அந்தந்த சீசன்ல அவன் அவன் செய்யிறதுதான். ஒரு படமா விவேகம் எப்டி இருக்குன்னு பாக்கலாம்.

விவேகம் டீசர் வெளியான ஓரிரு தினங்கள்ல அந்த டீசர ஃப்ரேம், பை ஃப்ரேமா அலசி ஆராஞ்சி பாத்து ஒருத்தர் விவேகம் படத்துக் கதை இப்டித்தான் இருக்கும்னு ஒரு கதை சொல்லிருந்தாரு. அதாவது டீசர்ல வர்ற ஒரு அஜித் போலீஸ்னும், பேக் சாட்ல திரும்பி நிக்கிற அஜித் உலக நாடுகள் பலவற்றில் தேடப்படுற மிகப்பெரிய கிரிமினல்னும் அவர் தான் படத்தோட வில்லன்னும் சொல்லிருந்தாங்க.. இப்ப நா என்ன சொல்றேன்னா சிவாவும் அவரோட டீமும் இந்தக் கதை எழுதுனவர தேடிக் கண்டுபுடிச்சி அவர அவங்களோட அடுத்த படத்துக்கு கதை எழுத யூஸ் பன்னிக்குங்கன்னு சொல்றேன். ஏன்னா அந்தக் கதையே நல்லாருந்துச்சி.

இந்த ஹாலிவுட் படங்கள்லதான் டாம் க்ரூஸு, மேட் டாமன், டாம் ஹாங்க்ஸெல்லாம் குறுக்கயும் மறுக்கயும் ஓடி ஓடி சண்ட போட்டுக்கிட்டு இருப்பாய்ங்க. என்னடான்னு கேட்டா உலகத்தையே அழிக்கப்போற பெரிய திட்டம் எதையோ முறியடிக்க போராடிக்கிட்டு இருக்கேன்னுவானுங்க. அந்தத் திட்டம் உலகத்துலயே இவனுங்களுக்கு மட்டுதான் தெரியும். ஒட்டுமொத்த கவர்மெண்ட்டே இவய்ங்களுக்கு எதிரா இருக்கும்.

ஆனாலும் இவங்க தனி ஆளா நின்னு உலகத்த காப்பாத்திருவாங்க. மிஷன் இம்பாஸிபிள், Bourne, ஜேம்ஸ் பாண்டு படங்கள்னு பல படங்கள்ல இதான் கதை., இப்ப அதே கதையிலதான் தல அஜித்தும் நடிச்சிருக்காரு. யப்பா.. தல ஹாலிவுட் கதையில நடிக்கப் போறாரு ஹாலிவுட் கதையில நடிக்கப்போறாருன்னு சொன்னீங்களே.. அது இதானாடா?

“மாப்ள… முப்பதாயிரம் ரூவா முழுசா குடுத்ததுக்கு அந்த நேப்பாள் கார கூர்க்கா காலையிலதான் கரெக்டா சோலி பாத்தான்”ன்னு கவுண்டர் புலம்புற மாதிரி மூணு படம் வரிசையா குடுத்ததுக்கு இந்தப் படத்துலதான் சிவா சிறப்பா வேலை பாத்துருக்காரு. ஆரம்பம் படத்து கதைய ((?) லைட்டா பட்டி டிங்கரின் பாத்து விவேகம் கதையாக்கிட்டாரு.

படத்துல மிகப்பெரிய பிரச்சனை கேமராவும், எடிட்டிங்கும். படம் பார்ப்பவர்கள் எதையுமே ஒழுங்காவோ தெளிவவோ பாத்துறக் கூடாதுங்குறதுல இவங்க ரெண்டு பேருமே ரொம்ப கவனமா இருந்துருக்காங்க. பெரும்பால காட்சிகள்ல கேமாராவை தோளில் வைச்சிகிட்டே ஷூட் பன்னிருக்காங்க. ஆட்டி ஆடிக்கிட்டு அதுவே எரிச்சல். ரெண்டு செகண்டுக்கு மேல எந்த ஷாட்டையுமே காமிக்கிறதில்லை. டக்கு டக்குன்னு காட்சிகள் மாறிக்கிட்டே இருக்கு. ஒருவேளை இந்த மாதிரி பன்னா படம் ஸ்பீடா இருக்க மாதிரி இருக்கும்னு யாரும்.. எவனோ ஐடியா குடுத்துருக்கான்.

ஒரு படத்துல எந்த கேரக்டரச் சுத்தி கதை நகருதோ மக்களும் அந்த கேரக்டரா இருந்துதான் படம் பாப்பாங்க. உதாரணமா ஹீரோவச் சுற்றி நடக்குற கதைன்னா, மக்களும் தங்களை அந்த ஹீரோ இடத்துல பொறுத்திக்கிட்டு கதையில பயணிப்பாங்க. இந்தப் படத்துல அந்த மாதிரி கதையோட நம்மால பயணிக்கவே முடியல. அஜித்திடம் இருக்கும் பரபரப்போ இல்லை பதற்றமோ படத்தோட எந்த சூழல்லயும் நமக்கு வரவே இல்ல.

படத்துல சூப்பரா இருக்கது விவேக் ஓபராய் மட்டும்தான். செம கெத்தா இருக்காரு. ஆனா பாருங்க கெத்தா வேஷம் போட்டு சிங்கம் படத்து விஜயகுமார் ரோல்ல நடிக்க வச்சிருக்கானுங்க. சிங்கத்துல விஜயகுமார் “சரியா சொன்னீங்க தொரைசிங்கம்” “சபாஷ் தொரைசிங்கம்” ன்னு சொல்லிக்கிட்டே இருக்க மாதிரி விவேக் ஓபராய் படம் முழுக்க அஜித்துக்கு பில்டப் மட்டுமே குடுத்துக்கிட்டு இருக்காரு. “அவன் யாருக்கும் பயப்பட மாட்டான்” “அவன் போரடாம போவ மாட்டான்” ”அவன கொன்னாலும் சாகமாட்டான்”… நீ இப்புடியே பேசிகிட்டு இருந்தியன்னா ஒரு பய தியேட்டர்ல இருக்க மாட்டான்.

அஜித்துக்கு பில்ட் அப் குடுக்கற வசனங்கள் எழுதுன கேப்புல கொஞ்சம் மற்ற வசனங்களும் படத்துல இருக்குன்னு மைண்டுல வச்சிருந்துருக்கலாம். காஜல் அகர்வால் பேசுற வசனமெல்லாம் ஒண்ணாப்பு ரெண்டாப்பு புள்ளைங்க எழுதிக்குடுத்த மாதிரி இருக்கு. இந்த ஃபீனிக்ஸ் பறவை உதாரணம் ஒண்ணு கிடைச்சி போச்சு இவங்களுக்கு. இவய்ங்க தொல்லை தாங்காம “நா இனிமே எந்திரிக்கவே மாட்டேண்டா”ன்னு சொல்லிட்டு ஃபீனிக்ஸ் பறவையே தூக்கு போட்டு சாகுற வரைக்கும் விடமாட்டாய்ங்க போல..’

கதைக்கும் கெட்டப்புக்கும் வசனத்துக்கும் சம்பந்தமே இல்லாம காமெடி பண்ண முயற்சி பண்ணிருக்காரு கருணாகரன். ட்ரெயிலர்ல “எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல சார்” ன்னு கருணாகரன் சொன்னதும் “ஒரு டீ சொல்லுங்க”ன்னு தல சொல்லுவாரே. அதுதான் படத்துலயே செம்மையான காமெடி. அப்ப மத்ததெல்லாம் எப்டின்னு நீங்களே யோசிச்சுக்குங்க.

அக்சரா ஹாசன் ஒரு சின்ன ரோல். அவங்க ஒரு ஹேக்கர். நானும் வட ஆப்ரிக்காவுலயும் பாத்துருக்கேன் தென் ஆப்ரிககவுலயும் பாத்துருக்கேன். இப்புடி ஒரு ஹேக்கரப் பாத்ததே இல்லை. ஒரு சின்ன ஃபோன மட்டும் வச்சிக்கிட்டு அவங்க போற இடங்கள்ல உள்ள சிசிடிவி கேமரா, டெலிஃபோனு, Road Block ன்னு கண்ணுல படுற அனைத்தையும் ஹேக் பன்றாங்க. அதும் போற வழியில சும்மா “சூ”ன்னுட்டுதான் போறாங்க. அத்தனையும் இவங்க கண்ட்ரோலுக்கு வந்துருது. யம்மா நீ ஹேக்கரா இல்ல மந்திரவாதியாம்மா? என்னதான் ஹாக்கரா இருந்தாலும் ஒரு நாயம் வேணாமாப்பா? ஹேக்கருக்கு உண்டான மரியாதை போச்சேடா உங்களால..

அஜித் ரெண்டு கடந்த ரெண்டு படத்துல கொஞ்சம் இம்ப்ரூவ் ஆன மாதிரி தெரிஞ்சாரு. இந்தப் படத்துல மறுபடி பழையபடி ஆயிட்டாரு. வசன உச்சரிப்பெல்லாம் சிலது கேக்க முடியல.. “You….. will….. see…….. my….. “ அப்டியே சொல்லிக்கிட்டே இருங்க தல.. அர்ஜெண்ட்டா வருது.. டாய்லெட் வரைக்கும் பொய்ட்டு வந்துடுறேன்னு எழுந்து போயிடலாம். நல்ல வேளை y… o…. u… w… ன்னு ஒத்த ஒத்த எழுத்தா சொல்லாம விட்டாரே. சர்வைவா பாட்டுல மட்டும் ஆளு செமை சூப்பரா இருக்காரு. இண்ட்ரோ சீன் நல்லாருக்கு. அதுலயும் பாலத்துலருந்து பல்டி அடிக்கிற சீன்ல லிங்கா க்ளைமாக்ஸ் கண்ணு முன்னால வந்து போச்சு.

இண்டர்வல்ல வழக்கம்போல அஜித்த ஒரு பத்து பதினைஞ்சி புல்லட்ட்ல சுட்டு, ஒரு மலையிலருந்து தூக்கி வீசிடுறாய்ங்க… நல்ல வேளை பரங்கிமலை பாறை மேல விழுந்ததால தப்பிச்சாறு. இல்லைன்னா என்னாயிருக்கும்? கீழ விழுந்த உடனே கால்ல கையில குத்தியிருந்த குச்சியெல்லாம் புடுங்கி வீசிட்டு எக்ஸர்சைஸ் பண்ண ஆரம்பிச்சிடுறாரு. யோவ் தல… அந்த நாலஞ்சி புல்லட்டு உடம்புக்குள்ள பாய்ஞ்சத எடுக்க மறந்துட்டீயே…. நமக்கு ஞாபகம் இருக்கு கழுத அவரு மறந்துட்டாரு பாருங்க. இத்தனை புல்லட்டு, இத்தனை ஃப்ராக்சரையெல்லாம் ஹாஸ்பிட்டலுக்கு போகாம “நடந்தே” குணப்படுத்திக்கிட்ட ஒரே ஆள் உலகத்துலயே நம்ம தலை ஒருத்தர்தான். இனிமே “தல”க்கு Ultimate Star ங்குற மாத்திட்டு “Walking Star” ன்னு வச்சா பொருத்தமா இருக்கும்.

நா.. எத வேணாலும் மன்னிச்சிருவேன்.. ஆனா அந்த சிக்ஸ் பேக்குக்கு நம்மாளுங்க சண்டை போட்டத மட்டும் நா மன்னிக்கவே மாட்டேன். ஒருத்தன் VFX -ங்குறான். இன்னொருத்தன் இல்லடா அது ஒரிஜினல்டா. தலை கஷ்டப்பட்டு கொண்டு வந்துருக்காருடா” ங்குறான். தயவு செஞ்சி படத்துல பாருங்கப்பா.. “இது சிக்ஸ் பேக்கா? இல்லை இதான் உங்க சிக்ஸ் பேக்கா?”ங்குற லெவலுக்கு ஆயிப்போச்சு. மோகன்லால் கொஞ்சம் வேகமா திரும்புனார்னா முகத்துல சதை அதிகமா இருக்கதால திரும்பும் போது கன்னம் கொஞ்சம் ஆடும். உடனே நம்மாளுங்க பாருடா மோகன்லாலோட கன்னம் கூட நடிக்கிதுன்னு ஆரம்பிச்சிருவானுங்க. அதே மாதிரி இந்தப் படத்துலயும் தல சட்டையக் கழட்டிட்டு திரும்பும்போது ஒவ்வொரு பகுதியும் தனித்தனியா ஆடுது. என்னென்ன சொல்லப் போறானுங்களோ….

சக்கரைப் பொங்கல் வடைகறி காம்பினேஷன விட கேவலாமான ஒரு காம்பினேஷன் இருக்குன்னா அது நம்ம அஜித் – காஜல் அகர்வால் ஜோடிதான். கெமிஸ்ட்ரி, பயாலஜி, பிசிக்ஸ்னு எதுவுமே செட் ஆகல. அஜித் – காஜல் சம்பந்தப்பட்ட காட்சிகள் ரொம்பவும் செயற்கைத்தனம். அதும் க்ளைமாக்ஸ்ல அஜித் சண்டை போடும்போது காஜல் “வெறியேற” பாட்டுப் பாடுனதும் எனக்கு தூள் படத்துல விக்ரம் அடிக்கும்போது பறவை முனிம்மா “சிங்கம்போல” பாட்டு பாடுனது மாதிரி இருந்துச்சி. தியேட்டர்ல ஒருசிலர் வாய்விட்டு சிரிக்கவே ஆரம்பிச்சிட்டாங்க.

படத்துல நல்ல விஷயங்கள்னு சொல்லப்போனா இண்ட்ரோ சீன், சர்வைவா பாட்டு, ஒரு சில காட்சிகளில் கேமரா மற்றும் விவேக் ஓபராய். அஜித் ஒரு சில ஆங்கிள்ல செமையா இருக்காரு. மீசையில்லாம இந்த முழு வெள்ளைத் தலையோட பாக்க கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. அனிரூத் குறை சொல்ற அளவுக்கு இல்லை. திரைக்கதை மற்றும் மேக்கிங் மெகா சொதப்பல்.

மொத்தத்துல அஜித் இருக்கார் அப்டிங்குற ஒரே காரணத்துக்காக பாக்கலாம். மத்தபடி சிறப்பா எதுவும் இல்லை. படம் பாக்க உள்ள போறப்போ “சர்வைவா… சர்வைவா” ன்னு சந்தோஷமா பாட்டு பாடிட்டு போனவனுங்கள வெளில வரும்போது “தம்பி நீ survive ah?” -ன்னு கேக்குற அளவுக்கு ஆக்கி விட்டுட்டாய்ங்க..!!!

– முத்து சிவா

(கடந்த எட்டு வருடங்களாக வலைப்பதிவில் எழுதி வரும் முத்து சிவா, செய்தி இணையதளம் ஒன்றி ஃப்ரீலான்சராக பணி புரிகிறார். சினிமா மற்றும் அனுபவப் பதிவுகளை நகைச்சுவையான பாணியில் தனது வலைதளத்தில் எழுதி வருகிறார். அவருக்கு எமது நன்றி!)

 _____________

வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி