மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதில் கடந்த 25 ஆண்டுகளாக விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பில் இருந்து செயற்குழு உறுப்பினராகவும் தற்போது மக்கள் அதிகார அமைப்பின் உசிலம்பட்டி கிளையின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்த தோழர் அ.சந்திரபோஸ் 05.09.2017- அன்று இரவு 9.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார் அவருக்கு வயது-40.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், ஆரியபட்டி கிராமம், ஆ.மேலப்பட்டி ஊரைச் சேர்ந்த தோழர் அ.சந்திரபோஸ் உசிலம்பட்டி பகுதியின் வி.வி.மு முன்னாள் பொறுப்பாளர் தோழர் அ.சிவகாமு அவர்களின் தம்பி என்பதும், தோழர் சிவகாமு சிறை சென்றதால் உசிலை பகுதியில் ஏற்பட்ட வெற்றிடத்தை தோழர் சந்திரபோஸ் பூர்த்தி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தோழர் சந்திரபோஸ் அவர்கள் 15 வயதில் தன்னை வி.வி.மு அமைப்பில் இணைத்து கொண்டு உசிலை வட்டார செயற்குழுவில் முன்னணி தோழராகவும், மக்கள் அதிகார அமைப்பு உசிலை பகுதியின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்தார்.
தோழர் சந்திரபோஸ் தான் சார்ந்த அமைப்பை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காமல் செயல்பட்டவர். முல்லைப் பெறியாறு அணையில் தமிழகத்தின் உரிமைக்கான போராட்டங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி கிராமங்கள் தோறும் அணைப்பாதுகாப்பு குழு கட்டுவதற்கு முனைப்புடன் செயல்பட்டவர்.
மக்கள் அதிகாரம் அமைப்பின் உசிலம்பட்டி பகுதி ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்று தஞ்சையில் நடந்த ‘விவசாயியை வாழவிடு மாநாடு பொதுக்கூட்டம்’ தொடர்பான வேலைகளில் உசிலம்பட்டி பகுதியில் முழுப்பொறுப்பு ஏற்றுக்கொண்டு மைய வேலைகளுக்கு சென்று இரவு பகல் பாராது முழுநேரமும் அயராது பாடுபட்டார்.
உசிலை பகுதி உழைக்கும் மக்களின் பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடி பல முறை சிறை சென்றுள்ளார். அமைப்பு வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட வேறொரு வாழ்க்கைக்கோ, மகிழ்ச்சிக்கோ ஏங்காத ஒரு அரிய தோழர். எளிய உணவு, உடை, வீடு அங்கீகாரத்துக்கு ஏங்காத உழைப்பு அதுதான் தோழர் சந்திரபோஸ்.
அமைப்பையும், குடும்பத்தையும் சரியான பாதையில் வழி நடத்திய தோழர் சந்திரபோஸ் தன் உடல் நலனில் அக்கறை செலுத்தாமல் இறந்து போனது பகுதி தோழர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய அமைப்பு தோழர்கள் காளியப்பன், மருது, வெற்றிவேல்செழியன், கதிரவன், மோகன், லயனல்அந்தோனிராஜ், குருசாமி, வீரணன், ஆசை, 58 கிராம பாசன விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த பச்சைத்துண்டு பெருமாள், சத்துணவு ஊழியர் சங்க பொறுப்பாளர் சோலை, மாற்றுக் கட்சி நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்களும் தோழரது நற்பண்புகளையும், செயல்பாட்டையும் நினைவு கூர்ந்து பேசினர்.
மதுரை, சிவகங்கை, தேனி மாவட்ட அமைப்பு தோழர்களும், பல்வேறு கட்சியினரும், உள்ளூர் மக்களும் திரண்டு செல்ல இறுதி ஊர்வலம் மயானத்தை அடைந்தது. தோழர் சந்திரபோஸ் விடைபெற்று பூமிக்குள் சென்றார். தோழர் இறப்பிலிருந்து பாடம் கற்றுக் கொள்வோம் உடல் நலனில் அக்கறை செலுத்தி அமைப்பையும் குடும்பத்தையும் உயர்த்திப் பிடிப்போம். தோழர் சந்திரபோஸ் அவர்களின் நற்பண்புகளையும், போராட்ட வாழ்க்கையின் தருணங்களையும் நினைவில் இருத்துவோம்.
(தோழரின் இறுதி ஊர்வல படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)
தகவல் :
மக்கள் அதிகாரம்,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
உசிலம்பட்டி.