privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கபணமதிப்பழிப்பு : மீசை வைத்தால் வீரன் ! மீசையை மழித்தால் ஞானி !

பணமதிப்பழிப்பு : மீசை வைத்தால் வீரன் ! மீசையை மழித்தால் ஞானி !

-

பணமதிப்பழிப்பு நடவடிக்கை : மீசை வைத்தால் வீரன் ! மீசையை மழித்தால் ஞானி !!

ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, செல்லாது என அறிவிக்கப்பட்ட 15.44 இலட்சம் கோடி ரூபாயில், வெறும் 16,000 கோடி ரூபாய்தான் வங்கிக்குத் திரும்பவில்லை. இந்தத் தொகை, நாலு இலட்சம் கோடி, ஐந்து இலட்சம் கோடி ரூபாய் பெறுமான கருப்புப் பணம் வங்கிக்குத் திரும்பி வராது எனச் சொல்லி வந்த மோடி அரசின் கணக்கில், 1 சதவீதம்கூட இல்லை. இந்தியாவில் புழங்கும், உருவாகும் கருப்புப் பணம் குறித்து ஆய்வு செய்திருக்கும் பேராசிரியர் அருண் குமார், ”பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் நோக்கம் கருப்புப் பணத்தை ஒழிப்பதுதான் என்றால், அந்நடவடிக்கை 0.01 சதவீத கருப்புப் பணத்தைக்கூட ஒழிக்கவில்லை” எனக் கூறுகிறார்.

இதுதான் மோடியின் நடவடிக்கை சாதித்திருக்கும் உண்மை. இந்த உண்மை ரிசர்வ் வங்கி அளித்திருக்கும் அறிக்கையின் வழியாகவே உறுதி செய்யப்பட்டிருக்கிறது எனும்போது மோடியும் அவரது அரசும் தமது தோல்வியை ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். மக்களிடம் மன்னிப்புக் கோரியிருக்க வேண்டும். ஆனால், பா.ஜ.க. கும்பலோ, பாசிஸ்டுகளுக்கே உரித்தான நாக்குமாரித்தனத்தோடு, தட்டைத் திருப்பிப் போட்டுத் தட்டி, மக்களை மீண்டும் முட்டாளாக்க முயலுகிறார்கள்.

நான்கு இலட்சம் கோடி ரூபாய் பெறுமான கருப்புப் பணத்தை வங்கிக்குள் வரவிடாமல் தடுத்துவிடுவோம் என அப்பொழுது பேசியவர்கள், இப்பொழுது அத்துணை பணமும் வங்கிக்குள் கொண்டுவந்துவிட்டதுதான் எங்களது வெற்றி எனக் கூசாமல் கூறுகிறார்கள்.

”வங்கிக்குள் வராத பணம் எத்துணை கோடி என்பதை வைத்துப் பணமதிப்பழிப்பு நடவடிக்கையின் வெற்றியைத் தீர்மானிப்பது தவறானது. ஏனென்றால், பணத்தைப் பறிமுதல் செய்வது இந்த நடவடிக்கையின் நோக்கமாக ஒருபோதும் இருந்ததில்லை. கருப்புப் பணத்தையும் வங்கியில் போடும்படியான கட்டாயத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியிருப்பதே இந்த நடவடிக்கையின் வெற்றிக்கான சாட்சி” என்கிறார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி.

”செல்லாத நோட்டுக்களில் ஒரு பகுதி வங்கிக்குள் வராது என்று அரசு ஒருபோதும் சொன்னதில்லை” என்கிறார் நிதியமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி.

இந்தப் பித்தலாட்டத்தனத்தையெல்லாம் தூக்கி சாப்பிடும் வண்ணம் துக்ளக் இதழில் எழுதுகிறார், தமிழ்நாட்டுப் பார்ப்பனரும் ஆர்.எஸ்.எஸ். பிரமுகருமான குருமூர்த்தி. ”பல பொருளாதார நோக்கங்களை உள்ளடக்கிய நோட்டுத் தடையை சாமான்ய மக்களுக்கு எளிமையாக விளக்க, கருப்புப் பணத்தை ஒழிக்கக் கொண்டுவரப்பட்ட திட்டம் என மோடி கூற வேண்டிய நிலை ஏற்பட்டதாக”ச் சப்பைக்கட்டு கட்டுகிறார், அவர். (துக்ளக், 13.09.2017)

1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் மாற்றுவதற்கும் செலுத்துவதற்கும் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் ஒன்றா, இரண்டா? மோடி அரசு அடுக்கடுக்காக விதித்த நிபந்தனைகளால் பொதுமக்கள் எரிச்சலும் ஆத்திரமும் கொண்டபோது, ”கருப்புப் பணம் வங்கிக்குள் நுழைவதைக் கிடுக்கிப்போட்டுப் பிடிக்கத்தான் இவ்வளவு நிபந்தனைகள்; இதனை மீறி யாரும் வங்கியில் கருப்புப் பணத்தை மாற்றிவிட முடியாது; ஒவ்வொரு ரூபாய்க்கும் வங்கியிடம் கணக்குச் சொல்ல வேண்டும்” என்றெல்லாம் சமாதானம் சொல்லி, தனது பாசிச கோமாளித்தனத்தை நியாயப்படுத்தியது பா.ஜ.க. கும்பல்.

இப்பொழுது தங்களது நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் மீறி 98.8 சதவீத செல்லாத நோட்டுக்கள் வங்கிக்குள் நுழைந்துவிட்டதைக் கண்டு அக்கும்பல் வெட்கப்படவில்லை. மாறாக, அதனை வெற்றி எனக் கூசாமல் கொண்டாடுகிறார்கள். இது வெற்றி என்றால், பணத்தை மாற்றுவதற்கு அடுக்கடுக்காக நிபந்தனைகள் விதிக்க வேண்டிய அவசியம் எங்கே வந்தது? அந்நிபந்தனைகள் வங்கி வாசலில் நின்ற சாமானிய மக்களை அவமானப்படுத்தி, அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதைத் தாண்டி வேறு எதையும் புடுங்கிவிடவில்லை.

– திப்பு

– புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2017.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க