privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

மூலதனத்தின் தத்துவஞானம் !

-

மூலதனத்தின் தத்துவஞானம்!

முன்னுரை:

மார்க்ஸின் மூலதனம் ஒரு பொருளாதார ஆய்வு நூலா, வரலாற்று ஆய்வா, தத்துவஞானமா அல்லது இவை அனைத்துமா? மற்ற தத்துவஞானங்களின் ஆய்வு முறையிலிருந்து மார்க்சியம் எப்படி வேறுபடுகிறது, ஏன் வேறுபடுகிறது என்பதை விளக்குகிறது இக்கட்டுரை. ஹென்றி வோல்கவ் எழுதிய “மார்க்ஸ் பிறந்தார்” எனும் நூலில் (முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ) மூலதனத்தின் தத்துவஞானம் என்ற அத்தியாயத்திலிருந்து சில பகுதிகளை மட்டும் தருகிறோம்.

***

மார்க்ஸ் தனக்குப் பின்னால் ஒரு தர்க்கவியலை விட்டுச் செல்லவில்லை என்றாலும் அவர் மூலதனத்தின் தர்க்கவியலை விட்டுச் சென்றிருக்கிறார்… மார்க்ஸ் மூலதனத்தில் ஒரே விஞ்ஞானத்துக்குத் தர்க்கவியலை, இயக்கவியலை மற்றும் ஹெகலிடம் மதிப்புள்ளதாக இருந்த ஒவ்வொன்றையும் எடுத்துக்கொண்டு, அதை மேலும் வளர்த்துச் சென்ற பொருள்முதல்வாதத்தின் அறிவுத் தத்துவத்தைக் (மூன்று சொற்கள் அவசியமல்ல, அது ஒரே பொருள் குறித்ததே) கையாண்டார்.

– வி.இ. லெனின்

மூலதனத்தின் தத்துவஞானம் என்ற தலைப்பு விசித்திரமான சொற்றொடராகத் தோன்றலாம். மூலதனம் முதலாளித்துவச் சமூகத்தில் பொருளாதார உறவுகளைப் பற்றிய ஆராய்ச்சி என்பது நமக்குத் தெரியும். சில மேற்கத்திய அறிஞர்கள் மூலதனத்தில் எந்தத் தத்துவஞானமும் இல்லை, மார்க்சும் ஒரு தத்துவஞானி அல்ல என்று மறுப்புரைக்கிறார்கள்.

ஒரு தத்துவஞானி என்பவர் தன்னுடைய சொந்தக் கருத்துக்களின் அமைப்பு குறித்து விசேஷமான தத்துவஞான நூல்களை எழுதியிருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள். மார்க்ஸ் அப்படிப்பட்ட புத்தகங்களை எழுதவில்லை. அவர் எந்தவொரு இடத்திலும் தத்துவஞானக் கோட்பாட்டை விசேஷமாக விளக்கவில்லை. எனினும், அவரே தலைசிறந்த தத்துவஞானியாக இருக்கிறார்.

மார்க்சின் தத்துவஞானம் – இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் – அவர் எழுதிய எல்லா நூல்களிலும் விளக்கப்படுகிறது. அத்தத்துவஞானத்தை அறிந்து கொள்வதற்கு மார்க்ஸ் எழுதிய எந்த நூலைப் படிக்க வேண்டும் என்று கேட்டால், அவருடைய வாழ்க்கையின் முக்கியமான சாதனையாகிய மூலதனத்தைப் படியுங்கள் என்பதே சரியான பதிலாகும்.

சென்ற நூற்றாண்டின் கடைசியில் ருஷ்ய மிதவாதப் பிரமுகரும் சமூகவியலாளருமான நி.மிஹயிலோவ்ஸ்கிக்கு லெனின் தந்த பதில் இதுவே. மிஹயிலோவ்ஸ்கி மார்க்சியத்தை மறுத்து எழுதிய கட்டுரைகளில் ஒன்றில் இக்கேள்வியைக் கேட்டிருந்தார்: மார்க்ஸ் தன்னுடைய வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை எந்த நூலில் எடுத்துக் கூறியிருக்கிறார்?

இக்கேள்விக்கு அவரே உடனடியாகக் கண்டுபிடிப்பவரின் சுயதிருப்தியோடு, அப்படி எந்த நூலையும் மார்க்ஸ் எழுதவில்லை, மார்க்சிய இலக்கியம் முழுவதிலுமே அப்படி எந்த நூலும் இல்லை என்று பதிலளித்தார்.

மார்க்ஸ் தன்னுடைய வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை விளக்கிக் கூறாத நூல் ஒன்றுண்டா? என்று லெனின் மிகச் சரியாக மறுப்புத் தெரிவித்தார். மார்க்ஸ் தனக்கு முந்திய சமூகவியலிலிருந்து, அதாவது சமூகத்தைப் பற்றிய போதனைகள் மற்றும் தத்துவங்களிலிருந்து அடிப்படையாகவே வித்தியாசமான ஒன்றைப் படைத்த காரணத்தினால், முதலாளித்துவச் சிந்தனையாளர்கள் மார்க்சிடம் சமூக வளர்ச்சி பற்றிய தத்துவஞானத்தைக் காணத் தவறுகிறார்கள் என்று லெனின் எடுத்துக் காட்டினார்.

அக்காலத்திய முதலாளித்துவ அறிவுஜீவிகளின் வட்டாரங்களில் கௌரவம் நிறைந்த, மரியாதைக்குரிய சமூகவியலாளர் என்பவர், பொதுவாக சமூகம் என்றால் என்ன, அதன் நோக்கமும் சாரமும் எவை, மனித இயல்புக்குப் பொருந்துகின்ற சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்பனவற்றைப் போன்ற கருத்தாழமிக்க பிரச்சினைகளை விவாதித்திருக்க வேண்டும் என்று கருதப்பட்டது.

இச்சமூகவியலாளர்கள் இன்றைய அமைப்பு இயற்கைக்கு முரணானது, ‘மனித இயல்புக்கும்’ நீதிக் கோட்பாடுகளுக்கும் பொருந்தாமலிருக்கிறது என்ற உண்மையைப் பற்றித் தங்களது மனப்பூர்வமான ஆத்திரத்தை வெளியிட்டு, தார்மீக செல்வாக்கைப் பெற்று, அநேகமாகப் புரட்சிக்காரர்களாகக் கூடத் தோன்றியிருக்கலாம்.

மார்க்சுக்கு முந்திய சமூகவியலாளர்கள் சமூகத்தின் நிகழ்வுப் போக்குகளை ஆழமாகப் பார்க்கத் தவறியதுடன் அவற்றை அந்தக் கணத்தில் நடைபெறும் சம்பவங்களின் ஒளியில் பார்த்தார்கள். சமூக உலகம் அரசர்கள், சக்கரவர்த்திகளின் முடிவுகளினால் இயக்கப்படுகிறது, சம்பவங்களின் வளர்ச்சி அவர்களுடைய சித்தத்தையும் பொதுமக்களிடம் தாக்கம் செலுத்திய சிந்தனையாளர்களின் கருத்துக்களையும் முற்றிலும் சார்ந்திருக்கிறது என்று நினைத்தார்கள்.

இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டால், வரலாறு என்பது வலிமைமிக்க தலைவர்களின் உணர்ச்சிகளின் போராட்டத்தைச் சார்ந்திருக்கின்ற சம்பவங்கள், நிகழ்வுப் போக்குகள் மற்றும் மெய்விவரங்களின் கதம்பக் குவியலாகத் தோன்றும்; இக்கதம்பக் குவியலில் முக்கியமான நிகழ்வுகளை முக்கியத்துவமில்லாத நிகழ்வுகளிலிருந்து, அதிகச் சிறப்பானவற்றை குறைவான சிறப்புடையவற்றிலிருந்து ஒருவர் வேறுபடுத்திப் பார்க்க முடியாது; இதில் எவ்விதமான விதிகளையும் பார்க்க முடியாது, சமூக வளர்ச்சிக்குப் பின்னே இருக்கின்ற பொறியமைவைப் புரிந்து கொள்ள முடியாது, அல்லது அவற்றின் மீது தாக்கம் செலுத்துவது எப்படி என்பதையும் அறிய முடியாது.

இவையனைத்தும் சமூகவியலில் அகநிலைவாதம், கருத்துமுதல்வாதம். பண்டைக்காலத் தத்துவஞானத்தில் இயற்கையைப் பற்றிய கருத்துக்களில் கருத்துமுதல்வாதம் தொடங்கிய வினாடியிலிருந்தே தீவிரமான எதிர்ப்பு (அதாவது பொருள்முதல்வாதிகள்) இருந்தது என்றால், சமூகத்தைப் பற்றிய கருத்துக்களில் கருத்து முதல்வாதம், மார்க்ஸ் காலம் வரையிலும் ஆட்சி செலுத்தியது.

மார்க்ஸ்தான் சமூகத்தின் வளர்ச்சிக்குப் பொருள்முதல்வாதக் கருத்தை முதலில் கையாண்டவர். இது அவருடைய மேதாவிலாசத்தைக் காட்டுகிறது என்றார் லெனின். உணர்ச்சிகளும் கருத்துக்களும் நலன்களும் காரணமல்ல, அவை விளைவே. மனித உணர்விலிருந்து தனித்திருக்கின்ற மிகவும் ஆழமான காரணத்தின் விளைவு என்று மார்க்ஸ் கண்டார்.

எந்த ஒரு மனிதனுடைய ஏதாவதொரு கருத்து அல்லது நோக்கம், அவனுடைய சமூக வாழ்க்கையினால், சமூகத்தில் அவனுடைய நிலைமையினால் நிர்ணயிக்கப்படுகிறது. கருத்துக்கள் முதிர்ச்சியடைந்த சமூகத் தேவைகளைச் சந்திக்க முடியுமானால், அவை சமூகத்தின் பெரும்பான்மையினரது நலன்களை, முதலாவதாகவும் முதன்மையாகவும் பொருளாயத நலன்களை வெளியிட முடியுமானால், அவை பெருந்திரளான மக்களை ஆட்கொண்டால், அப்பொழுது அவை சமூக வளர்ச்சியில் தாக்கம் செலுத்த முடியும்.

பிரெஞ்சு ஜனநாயகப் புரட்சியால் தூக்கியெறியப்பட்ட பிரெஞ்சு சக்கரவர்த்தி பதினாறாம் லூயி.

உதாரணமாக, பிரெஞ்சு முடியாட்சி 18-ஆம் நூற்றாண்டின் கடைசியில் வீழ்ச்சியடைந்தது ஏன்? பதினாறாம் லூயி இந்த அல்லது அந்தத் தவறைச் செய்தது (அதுவும் கூட முக்கியமாக இருந்தபோதிலும்) அதற்குக் காரணமல்ல; எதேச்சாதிகார ஆட்சியும் நிலப்பிரபுத்துவ சமூக உறவுகளும் நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தன, முதலாளித்துவம் மற்றும் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த முதலாளி வர்க்கத்தின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்தன, அந்த வர்க்கம் ஏற்கெனவே பொருளாதார சக்தியைக் கொண்டிருந்தது, ஆனால் அரசியல் அதிகாரம் இல்லாமலிருந்தது என்பவை அதற்குக் காரணமாகும்.

மனித உணர்விலிருந்து சுதந்திரமான முறையில் வளர்ச்சியடைகின்ற சமூக உறவுகள் கடைசியில் அவ்வக்காலத்திய சித்தாந்த, அரசியல், சட்டவியல் அமைப்புகளை நிர்ணயிக்கின்றன. பொதுவாகப் பார்க்குங்கால், கருத்துக்களின் வளர்ச்சி, சமூக – பொருளாதார நிகழ்வுப் போக்குகளின் வளர்ச்சியைச் சார்ந்திருக்கிறதே தவிர, அதன் எதிர்மறையை அல்ல. அப்படியானால், சமூக உறவுகள் பொருளாயதமானவை, புறநிலையானவை என்பது இதன் பொருளாகும்! மார்க்சுக்கு முந்திய சிந்தனையாளர்கள் அடையத் தவறிய முடிவு இதுவே.

ஆனால், சமூக உறவுகள் மிகவும் பலவிதமாக இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானவை உற்பத்தி நிகழ்வுப் போக்கில் தோன்றுபவை; அவை உற்பத்தி உறவுகள் எனப்படும். அவை முதலாவதாகவும் முதன்மையாகவும் உற்பத்தி செய்பவருக்கும் உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளருக்கும், அதாவது அடிமைக்கும் அடிமை உடைமையாளருக்கும், பண்ணையடிமைக்கும் நிலப்பிரபுத்துவ நிலவுடைமையாளருக்கும், தொழிலாளிக்கும் முதலாளிக்கும் உள்ள உறவுகள்.

இந்த மூன்று உறவுகளும் சுரண்டல் உறவுகளின் வடிவங்கள். இவற்றுக்கு இடையிலுள்ள அடிப்படையான வேறுபாட்டை எளிதில் காண முடியும். ஆகவே உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் விளைவு என்ற முறையில் ஒன்று மற்றொன்றாக இயற்கையாக வளர்ச்சியடைந்த மூன்று சமூக-பொருளாதார அமைப்புகளையும் நாம் எடுத்துக் கொள்வோம்.

சமூக வளர்ச்சி இயற்கையான வரலாற்று நிகழ்வுப் போக்கு, அது மனித உணர்விலிருந்து தனித்திருக்கின்ற, ஆனால், அறியப்படக்கூடிய விதிகளுக்கு உட்பட்டிருக்கிறது என்று மார்க்ஸ் கண்டார்.

இக்கருத்துக்கள் அனைத்தையும் மார்க்சிய மூலவர்கள் மிக முந்திய காலமான 1840-கள் மற்றும் 1850-களிலேயே கூறினார்கள். ஆனால், மூலதனத்துக்கு முன்பு இவை விஞ்ஞான ஆதாரத்தைக் கொண்டிருந்தாலும் வெறும் கருதுகோள் என்ற அளவிலேதான் இருந்தன என்று லெனின் கூறினார். மூலதனம் எழுதப்பட்ட பிறகு வரலாற்றுப் பொருள்முதல்வாதம் வெறும் கருதுகோளாக இனியும் இல்லை, அது விஞ்ஞானரீதியில் நிரூபிக்கப்பட்ட உண்மையாயிற்று, சமூகவியல் விஞ்ஞானமாக மாறியது.

மூலதனம் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை உருவாக்குவதிலும் அதை நிறுவுவதிலும் மிக முக்கியமான பாத்திரத்தை வகித்தது ஏன்? ஏனென்றால், மார்க்ஸ் சமூகம் எப்படி அமைக்கப்படுகிறது என்ற ஊக முறையான பொது விவாதங்களுடன் தன்னை நிறுத்திக் கொள்ளவில்லை, அவர் முதலாளித்துவ அமைப்பை உதாரணமாகக் கொண்டு அதன் செயல்முறை மற்றும் வளர்ச்சிப் பொறியமைவை நுணுக்கமாக ஆராய்ச்சி செய்தார்.

ஆகவே, வாசகர் இந்த அமைப்பு முழுவதையும் அதன் உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகள் என்ற பல்தொகுதியான இயக்கவியல், முதலாளி வர்க்கம் – பாட்டாளி வர்க்கம் என்ற வர்க்கங்களின் முரணியல்பு, தொழிலாளியைச் சுரண்டுவதற்கு முதலாளியின் உரிமையைப் பாதுகாக்கின்ற அரசியல், சட்டவியல் மற்றும் சித்தாந்த அமைப்புகளையும் ஒரு வாழ்கின்ற தொகுதியாகக் காண்கிறார்.

நிலப்பிரபுத்துவம் தவிர்க்க முடியாதபடி முதலாளித்துவத்துக்கு வழி விட்டதைப் போலப் பிந்தியதும், அதன் வளர்ச்சியின் புறநிலையான விதிகளின் விளைவாகத் தன்னுடைய சொந்த அழிவை நோக்கி, ஒரு வர்க்கமில்லாத சமூகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை மார்க்ஸ் மறுக்க முடியாத தர்க்கவியலின் மூலம் நிரூபித்தார். ஏகபோக மூலதனம், அதனுடனும் அதன் கீழும் தோன்றியதும் வளர்ச்சியடைந்ததுமான உற்பத்தி முறைக்குத் தளையாக மாறுகிறது. உற்பத்திச் சாதனங்களை ஒருமுனைப்படுத்துவதும் உழைப்பு சமூகமயமாதலும் எந்த அளவுக்கு முனைப்படைகின்றன என்றால், அவை முதலாளித்துவ மேலோட்டுக்கு முற்றிலும் முரணானதாகின்றன. இந்த மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத் தனியுடைமைக்குச் சாவுமணி அடிக்கப்படுகிறது, உடைமை பறித்தோர் உடைமை பறிக்கப்படுகின்றனர்.

கம்யூனிஸ்டு சமூகம் கனவு காண்பவர்களின் கற்பனாவாத இலட்சியமல்ல, பொருளாதார வாழ்க்கையின் மொத்த இயக்கமுமே அதை நோக்கிச் செலுத்தப்படுகிறது என்பதைச் சந்தேகமில்லாதபடி மார்க்ஸ் விளக்குகிறார். மூலதனம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியலின் வளர்ச்சியை, எல்லா உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியைக் கட்டுப்பாடில்லாமல் துரிதப்படுத்துவதன் மூலம் ஒரு புதிய சமூகத்தின், ஒரு புதிய சமூக-பொருளாதார அமைப்பின் பொருளாயத முன்நிபந்தனைகளைத் தயாரிக்கிறது.

மக்கள் தொகையில் மிகப் பெரும்பான்மையினரைச் சுரண்டப்படுகின்ற கூலித் தொழிலாளர்களாக மாற்றி, பெரிய தொழிற்சாலைகளில் வேலை செய்கின்ற தொழிலாளர்களை ஒன்றுசேர்த்து, பழைய சமூகத்தின் அடிமை விலங்குகளை நொறுக்கக் கூடிய, அதைப் புனரமைப்பதைத் தொடங்கக் கூடிய புரட்சிகர சக்தியை மூலதனம் தயாரிக்கிறது.

ஜெர்மன் தத்துவஞானி ஹெகல்

உழைப்பாளர்கள் அனைத்துப் பொருளாயத மற்றும் ஆன்மிக செல்வத்துக்கு உடைமையாளர்களாக இருக்கின்ற, மனிதன் சமூக உற்பத்திக்குச் சாதனமாக இல்லாமல், அவனே மிக உயர்ந்த மதிப்பாகவும் குறிக்கோளாகவும் இருக்கின்ற, ஒவ்வொருவருடைய சுதந்திரமான, பல்துறையான வளர்ச்சி எல்லோருடைய சுதந்திரமான வளர்ச்சிக்கும் நிபந்தனையாக இருக்கின்ற சமூகமே கம்யூனிஸ்டு சமூகமாகும். மார்க்ஸ் இந்தப் புதிய சமூகத்தின் உருவரையைக் கற்பனாவாதச் சுவடு இல்லாமல், எதிர்காலத்தில் பொற்காலம் என்ற இலட்சியச் சித்திரத்தை மனம் போனபடி வரைவதற்கு மிகச் சிறிதளவு கூட முயற்சி செய்யாமல் தயாரித்தார்.

கம்யூனிசத்தை வரலாற்று ரீதியில் தவிர்க்க முடியாதபடிச் செய்கின்ற போக்குகளையும் விதிகளையும் அவர் தர்க்கவியல் ஆராய்ச்சியின் வன்மையோடு வெளிப்படுத்துகிறார். பாட்டாளி வர்க்கப் புரட்சி, தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தின் மூலம் புதிய சமூகத்துக்குச் செல்கின்ற உண்மையான வழியை எடுத்துக்காட்டுகிறார். இப்படி முதலாளித்துவ உற்பத்தியைப் பற்றிக் கடுமுயற்சி கொண்ட பொருளாதார ஆராய்ச்சியின் போக்கில் மார்க்ஸ் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கருதுகோளைத் தயாரிக்கிறார். அது போல மூலதனம் மார்க்சியத் தத்துவஞானத்தின் உட்கருவான இயக்கவியல்-பொருள்முதல்வாத முறையை உள்ளடக்கியிருக்கிறது.

இயக்கவியல்-பொருள்முதல்வாத முறை விசேஷமான சொற்களில் வர்ணிக்கப்படவில்லை, அது செய்முறையில், முதலாளித்துவச் சமூகத்தின் பொருளாதாரத்தைப் பற்றிய ஆராய்ச்சிக்குச் செய்முறையில் கையாளப்படுவதன் மூலம் தரப்படுகிறது. மார்க்ஸ் இந்த முறையை எப்படி உபயோகித்தார், எப்படிக் கையாண்டார் என்பதை மூலதனத்தை ஆராய்வதன் மூலம் அறிய முடியும். ஆகவே சமூகத்தை ஆராய்ச்சி செய்வதற்கு இந்த இயக்கவியல் – பொருள்முதல்வாத முறையை ஒருவர் எப்படிக் கையாள முடியும், எப்படிக் கையாள வேண்டும், தத்துவச் சிந்தனையில் இந்த வன்மையான கருவியைக் கையாளுவதில் எப்படி முழுத் திறமையைப் பெற முடியும் என்பனவற்றை மூலதனத்தின் வாசகர்கள் கற்றுக் கொள்கிறார்கள்…

பொருளாதார ஆராய்ச்சியில் இயக்கவியல் முறையை உபயோகப்படுத்துகின்ற பிரச்சினையை மார்க்ஸ் முற்றிலும் வேறுவிதமாக அணுகினார். அவர் யதார்த்தத்தின் மீது இயக்கவியல் வடிவங்களைத் திணிப்பதற்கு மறுத்தார். ஹெகல் செய்ததைப் போல, முன்னரே தயாரிக்கப்பட்ட இயக்கவியல் அமைப்புகளுக்குள் யதார்த்தத்தைப் பொருத்துவதற்கு அவர் முயற்சி செய்யவில்லை.

ஆனால், பொருளாதார நிகழ்வுகள் தோன்றுவதையும் முன்னேற்றமடைவதையும், அவற்றின் போக்குகளையும், ஒரு பொருளாதார அமைப்பு முரண்பாடுகளின் வளர்ச்சியின் மூலமாக முன்னேற்றமடைவதின் உள் தர்க்கத்தையும், அந்த முரண்பாடுகள் தமது சொந்த எதிரிடையாக மாறுவதையும், அதாவது உண்மையில் ஆராயப்படுகின்ற பொருளின் இயக்கவியலை அவர் விருப்புவெறுப்பற்ற முறையில் ஆராய்ச்சி செய்தார்; தன்னுடைய முறை, ஹெகலின் முறைக்கு முற்றிலும் எதிரானது என்று மார்க்ஸ் கூறியதற்குக் காரணம் இதுவே.

முதலாளித்துவச் சமூகத்தின் முன்னேற்றத்தின் பொருளாதார விதியைக் கண்டுபிடிப்பது என்னுடைய இறுதியான நோக்கம் என்று மார்க்ஸ் கூறினார். ஆனால், மூலதனத்தில் எந்த ஸ்தூலமான சமூகம் சித்திரிக்கப்படுகிறது? அது ஜெர்மனியல்ல, பிரான்ஸ் அல்ல, (மார்க்ஸ் மற்ற நாடுகளைக் காட்டிலும் இங்கிலாந்தைக் குறிப்பிட்ட போதிலும்) இங்கிலாந்தும் அல்ல. அவர் முதலாளித்துவத்தை அதன் கலப்பற்ற வடிவத்தில் சித்தரிக்கிறார். அது முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தத்துவ ரீதியான மாதிரிப்படிவம், அங்கே அது செத்துப் போன, மாற்றமடையாத ஒன்றாகத் தோன்றவில்லை; ஆனால், மாற்றமடையக்கூடிய, தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருக்கின்ற அமைப்பாகத் தோன்றுகிறது.

இந்த அமைப்பைக் கருத்துக்களில் பிரதிநிதித்துவம் செய்வது எப்படி? அதன் அசாதாரணமான சிக்கல் மற்றும் பல் அடுக்கை சிந்தனையில் எடுத்துக் கூறுவது எப்படி? அதன் அம்சங்களின் உள் காரண காரியத் தன்மையை, அதாவது கட்டமைப்பை, செயல்படுகின்ற நிகழ்வுப் போக்கில் மட்டுமல்லாமல், அதன் வரலாற்றுரீதியான வளர்ச்சியில் புரிந்து கொள்வது எப்படி? முதலாளித்துவ உறவுகளின் மேல்மட்டத்தில் எல்லோரும் பார்க்கின்ற விதத்தில் தோன்றுவதற்கும் அவற்றின் மறைக்கப்பட்ட சாராம்சத்துக்கும் உள்ள தொடர்பை நிறுவுவது எப்படி? முதலாளித்துவப் பொருளாதாரத்தின் மொத்த மனப்போக்கான கட்டுமானத்தைக் கருத்தினங்களின் அமைப்பில் பிரதிபலிப்பது எப்படி?

இது மிகக் கடினமான வேலை; சூக்குமமானவற்றிலிருந்து ஸ்தூலமானவற்றுக்கு முன்னேறுகின்ற இயக்கவியல்-பொருள்முதல்வாத முறையின் உதவியுடன் மார்க்ஸ் இதை நிறைவேற்றினார்…

மார்க்ஸ் பண்டத்தின் மீது தன்னுடைய கவனத்தைக் குவிக்கிறார். அவர் மூலதனத்தின் முதல் பாராவில் பின்வருமாறு எழுதுகிறார்: முதலாளித்துவ உற்பத்தி முறை நிலவுகின்ற சமூகங்களின் செல்வம் ‘பண்டங்களின் மாபெரும் திரட்டாக’த் தோன்றுகிறது. அதன் அலகு ஒரு தனிப் பண்டமாகும். ஆகவே நம்முடைய ஆராய்ச்சி, பண்டத்தைப் பற்றிய பகுப்பாய்விலிருந்து தொடங்க வேண்டும்.

மார்க்ஸ் மூலதனத்தைப் பொருளாதாரத்தின் ஆரம்ப வாழ்க்கையிலிருந்து, பண்டம், பண்டப் பரிவர்த்தனையிலிருந்து தொடங்குகிறார். இது கற்பனையில் தோன்றவில்லை, அது புலன்களால் அறியப்பட்ட ஒன்று, பொருளாயதமானது. ஒவ்வொருவரும் நாள்தோறும் அதனுடன் சம்பந்தப்பட்டிருக்கிறார். முழுப் பொருளாதார அமைப்பின் எல்லாப் பகுதிகளிலும் இடுக்குகளிலும் அது ஊடுருவியிருக்கிறது, வரலாற்று ரீதியில் அதன் தொடக்க நிலையாக இருக்கிறது.

அதே சமயத்தில் பண்டப் பரிவர்த்தனை முதலாளித்துவ (பண்ட) சமூகத்தின் மிகவும் எளிமையான, மிகச் சாதாரணமான உறவு, இந்த உறவை நாம் பல கோடித் தடவைகள் சந்திக்கிறோம். அது சூக்குமக் கருத்தாக்கம். ஆனால், முதலாளித்துவம் தோன்றிய காலத்திலும் வளர்ச்சியடைந்த காலத்திலும் அதன் மிகப் பொருளாயதமான வாழ்க்கையில் வளர்க்கப்பட்ட சூக்குமக் கருத்தாக்கம். ஹெகலின் சூக்குமக் கருத்தாக்கங்களைப் போல அது வெறும் சிந்தனை நடவடிக்கையின் விளைவு அல்ல. பொருளாயத ரீதியில் இருக்கின்ற அமைப்பின் ஒரு பகுதி என்ற முறையில் அது பொருளாயத ரீதியில் தரப்படுகிறது, ஆகவே இந்த அமைப்பின் தத்துவரீதியான மாதிரிப்படிவத்தில் அதற்குரிய இடத்தை அது பெற முடியும், பெற வேண்டும்.

பண்டப் பரிவர்த்தனை என்றால் என்ன? அது எதை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது? பயன் மதிப்புக்கும் பரிவர்த்தனை மதிப்புக்கும் உள்ள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. இந்த எதிரிடைகளின் போராட்டத்தையும் அதன் விளைவாக சூக்கும உழைப்புக்கும் ஸ்தூலமான உழைப்புக்கும் இடையில் ஏற்படுகின்ற முரண்பாட்டையும் மார்க்ஸ் ஆராய்கிறார், இன்னும் அதிகச் சிக்கலான கருத்தாகிய மதிப்பின் எக்காலத்துக்கும் உரிய வடிவத்துக்கு, அதிலிருந்து பணவியல் வடிவத்துக்கு வந்து சேருகிறார்.

அவருடைய சிந்தனை முன்னரே முடிவு செய்யப்பட்ட விதிகளின் அடிப்படையில் முன்னே செல்லவில்லை, ஆராயப்படுகின்ற பொருளின் தர்க்கம், இயக்கவியலின் அடிப்படையில் முன்னேறுகிறது. அது பயனுள்ள முடிவுகளை அடைவதற்குத் துல்லியமான காரணம் இதுவே.

முதலாளித்துவ பொருளியல் அறிஞர் ஆடம் ஸ்மித்

மூலதனத்தில் மார்க்சின் முறையை எங்கெல்ஸ் பின்வருமாறு வர்ணிக்கிறார்: ஜெர்மானிய இயக்கவியல் முறையை, அதன் இன்றைய வளர்ச்சிக் கட்டத்தில் பழைய, மேலெழுந்தவாரியான, வெறும் சொல்லோட்டமுள்ள இயக்கமறுப்பியல் முறையோடு ஒப்பிடும் பொழுது, மத்திய காலப் போக்குவரத்துச் சாதனத்தோடு ஒப்பிடுகையில் ரயில்வேயைப் போன்று முன்னது உயர்வானது. இந்த உண்மைக்கு யாரேனும் குறிப்பிட்ட எடுத்துக்காட்டைப் பார்க்க விரும்பினால் அவர் ஆடம் ஸ்மித் அல்லது வேறு அதிகாரபூர்வமான புகழ் பெற்ற பொருளியலாளர் எவராவது எழுதிய புத்தகத்தை எடுத்துப் படிக்கட்டும்.

பரிவர்த்தனை மதிப்பும் பயன் மதிப்பும் இந்தக் கனவான்களுக்கு எவ்வளவு துன்பத்தைக் கொடுத்தன; இந்த இரண்டையும் சரியான முறையில் வேறுபடுத்துவதிலும் அவை ஒவ்வொன்றுக்கும் உரித்தான வரையறுக்கப்பட்ட வடிவத்தை எடுத்துரைப்பதிலும் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதைப் பார்க்கட்டும். பிறகு மார்க்ஸ் எழுதிய தெளிவான, எளிமையான விளக்கத்தை அவற்றோடு ஒப்பிடட்டும்.

முதலாளித்துவ உற்பத்தியின் கட்டமைப்புக்கு முற்றிலும் பொருந்தக் கூடிய விதத்தில் ஒரு கருத்திலிருந்து மற்றொரு கருத்துக்கு, ஒரு கருத்தினத்திலிருந்து மற்றொரு கருத்தினத்துக்கு முன்னேறிச் சென்று மார்க்சின் ஒருங்கிணைந்த தத்துவ மாளிகை நிர்மாணிக்கப்படுகிறது. அடுத்தடுத்து வருகின்ற ஒவ்வொரு கருத்தினமும் முந்திய கருத்தினத்திலிருந்து அவசியமாகப் பெறப்படுகிறது, அது புதிய உள்ளடக்கத்தைப் பெற்றுச் செழுமையடைந்து நிகழ்வுகளின் பரந்த வட்டத்தை மென்மேலும் அதிகமாக உள்ளடக்குகிறது, அதாவது ஸ்தூலமடைகிறது.

பண்டப் பரிவர்த்தனையில் உள்ளுறையாக இருக்கும் ஆரம்ப முரண்பாட்டைப் பற்றிய பகுப்பாய்வு முதலாளித்துவச் சமூகத்தின் வளர்ச்சியடைந்த முரண்பாடுகளை-அவற்றின் ஸ்தூலமான வெளிப்பாட்டில் – சுட்டிக்காட்டுவதற்கு இட்டுச் செல்கிறது, ஆகவே, இந்தச் சமூகம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற புரட்சிகரமான முடிவுக்கு இட்டுச் செல்கிறது.

முதலாளி வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கம் ஒரு வலிமையான தத்துவ ஆயுதத்தைப் பெறுகிறது.

-புதிய ஜனநாயகம், நவம்பர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க