privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கஆர்.எஸ்.எஸ் கும்பலை அடித்து விரட்டுவோம் ! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் !

ஆர்.எஸ்.எஸ் கும்பலை அடித்து விரட்டுவோம் ! தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் !

-

1. ஓசூர்:

“திரிபுராவில் பாட்டாளி வர்க்கத்தின் ஆசான் தோழர் லெனின் சிலை தகர்ப்பு! திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலை உடைப்பு! உ.பி -யில் டாக்டர் அம்பேத்கர் சிலை உடைப்பு!” சம்பவங்களை நடத்தி பயங்கரவாத வெறியாட்டம் போட்டுவரும் இந்து மதவெறி பார்ப்பன RSS, BJP கும்பலை கண்டித்து  08. 03. 2018 அன்று மாலை 5 மணியளவில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக ஓசூரி்ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தோழர் ரவிச்சந்திரன் தலைமைதாங்கினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின மாநில துணைத்தலைவர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினார். ” அம்பானி அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் சிம்ம சொப்பனமாக இருந்து லெனின் நமக்கெல்லாம் வழிக்காட்டுகிறார். பெரியார் – அம்பேத்கர் பார்ப்பன பாசிஸ்டுகளின் சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்.

எனவே, உழைக்கும் மக்களின் பொது எதிரிகளான ஆர். எஸ்.எஸ், பி.ஜே.பி காட்டுமிராண்டிகள் நமது உன்னத தலைவர்களை அவமதித்து வெறியாட்டம் போடுகின்றனர். இதனை போராடி முறியடிக்கவேண்டும்” என்றவகையில் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் ஒரே குரலில் RSS, BJP கும்பல்களை கண்டித்து கண்டன முழக்கங்களை முழங்கினர். பெண்கள், சிறுவர்கள், பெரியோர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர். கடை வியாபாரிகள், தேனீர் அருந்தும் பொதுமக்கள் அனைவரும் இறுதிவரை கவனித்து ஆதரித்துச் சென்றனர். தினசரி மற்றும் தொலைக்காட்சி பத்திரிக்கை நண்பர்கள் படம்பிடித்தும் பேட்டிக் கண்டும் சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஓசூர். தொடர்புக்கு – 97880 11784.

2. சென்னை

உழைப்பு சுரண்டல், பாலியல் சுரண்டலிலிருந்து விடுபடுவோம்! உலக உழைக்கும் மகளிர் தினத்தில் உறுதியேற்போம்!’

பெண்கள் விடுதலை முன்னணி சென்னை கிளை சார்பாக திரிபுராவில் பாட்டாளி வர்க்க ஆசான் லெனின் சிலை உடைப்பை கண்டித்தும், தமிழகத்தில் தந்தை பெரியார் சிலை உடைப்போம் என்ற எச்.ராஜாவை கண்டித்தும் சென்னை தியாகராயநகரில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், எச்.ராஜாவின் படத்தை எரித்தும் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. உலக பெண்கள் தினத்தில் தமிழகத்தில் இருந்து பிஜேபி, ஆர்எஸ்எஸ், சங்பரிவாரி கும்பலை நாட்டைவிட்டே விரட்டியடிக்கவும்,
உழைப்பு சுரண்டல், பாலியல் சுரண்டலிலிருந்து விடுபடுவோம்! உலக உழைக்கும் மகளிர் தினத்தில் உறுதியேற்போம்!’

உலக பெண்களின் நாளான இன்றைய தினத்தை 50% தள்ளுபடியுடன்  கல்லா கட்டுகிறார்கள், முதலாளிகள். குடும்பத்தைக் காக்கும் பெண்கள் நாங்கள் தான் என்பதை நீண்ட நெடிய தொடர்கள் மூலம் நிருபிக்க கண்ணீர் கதைகள், பாட்டுப் போட்டிகள், டான்ஸ் போட்டிகள், ரியாலிட்டி ஷோக்கள்  என டிஆர்பி-யை ஏற்றி, ஊடகமும் கொண்டாடுகிறது. பத்திரிக்கைகளும், பெண்கள் பாதுகாப்பிற்கு என்ன செய்யவேண்டுமென்று பெண்ணியவாதிகளின் கட்டுரை ஒரு பக்கம், நான்கு பக்கத்திற்கு திருமணத்திற்குப் போட வேண்டிய நகைகள் பற்றி நான்கு பக்க விலைப்பட்டியலுடன் விளம்பரம், சத்தான, சுவையான சமையல் செய்து குடும்பத்திடம் பாராட்டு வாங்குவது பற்றி இரண்டுப் பக்கம் என்று கொண்டாடுகிறது.

ஆனால், உலக பெண்கள் நாள் பிறந்து 108 ஆண்டுகளாகியும், பெண்கள் தான் விரும்பியதை படிக்க முடியவில்லை. படித்த, படிப்புக்கேற்ற வேலை இல்லை, வேலைக்கேற்ற கூலி இல்லை. வேலைக்கு சென்று பாதுகாப்பாக வீடு திரும்ப உத்திரவாதம் இல்லை.  தான் விருப்பியவனை மணந்தால், ஆணவக் கொலை. பிடிக்காதவனை வேண்டாமென்றால் ஆசிட் வீச்சு. பச்சிளம் குழந்தைகள் முதல் 90 வயது மூதாட்டியர்கள் வரை தொடரும் பாலியல் வன்முறைகள், குடும்பத்தைக் காக்க வேலைக்கு சென்றால் முதலாளிகள் நமது உழைப்பு சக்தியை அட்டைப் போல உறிஞ்சு எடுக்கின்றனர். உழைப்பு சுரண்டல் போதாதென்று பாலியல் சுரண்டல் வேறு, பட்டினிக்கு தள்ளும் விலைவாசி ஏற்றத்திற்கு எதிராக, தாலி அறுக்கும் டாஸ்மாக் எதிராக வீதியில் இறங்கினால் கடித்துக் குதறும் போலீஸ் வெறிநாய்கள், இவைகள் போதாதென்று தினமும் ஒரு வரி விதிப்பு, பணப் பறிப்பு, எப்ப என்ன திட்டத்தை போட்டு நம்மை வழிப்பறி செய்வார் என அஞ்சும் வகையில் மோடி அரசின் அசத்தல் திட்டங்கள் பெண்களின் தலையில் இடியாய் இறங்குகிறது.

இக்கொடுமைகளுக்கு எதிராக வீதிக்கு வந்து போராட விடாமல் ஆணாதிக்கம் அடக்குகிறது. இதற்கு மதங்களும், சாதிகளும், சடங்குகளும், சொந்த பந்தங்களும் ஒத்து  ஊதுகின்றனர்.

இவ்வளவு இன்னல்களுக்கு இடையிலும், தன் பங்கிற்கான போராட்டங்களை பெண்கள் நடத்திக் கொண்டுத்தான் இருக்கிறார்கள்.  பெங்களூரை மிரள வைத்த பெண் தொழிலாளர்கள் போராட்டமானாலும், பணி நிரந்தரம் கோரி செவிலியர் போராட்டமானாலும், டாஸ்மாக்கிற்கு எதிரான பெண்கள் போராட்டமானாலும், கல்வி, மருத்துவம், தண்ணீர், விவசாயம் என்று எந்த போராட்டமானாலும் பெண்களின் பங்களிப்பில்லாமல் இல்லை.

முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. குடும்பத்தை காக்க புயலாகும் நாம். நாட்டையும், சமூகத்தின் விடுதலையையும் காக்க சூறாவளியாக மாற ஏன் தயங்க வேண்டும்?

உதாரணமாக, உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்த மெரினாவில் அல்லவா அது சாத்தியப்பட்டது. உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது. தமிழகத்தின் இளைஞர்களை உலகமே கொண்டாடியது. யார் காரணம்?-  நம் வீட்டு பிள்ளைகளோடு நாமும், இணைந்து சென்றதால்தானே அப்படியான நிகழ்கால சரித்திர மிக்க வரலாற்றை நடத்திக் காட்ட முடிந்தது.

பெண் உரிமைக்கும் விடுதலைக்கும் கிளாரா ஜெட்கினாக, நாட்டைக் காக்க குயிலியாக, ஜாதி ஆணவத்திற்கு எதிராக கௌசல்யாவாக, மதவெறிக்கு எதிராக ஹாதியாவாக, மூடநம்பிக்கைக்கு முடிவு கட்ட பெரியாரின் பேத்திகளாக, முதலாளிகளின் லாபவெறிக்கும், நுகர்வுவெறிக்கும் முடிவு கட்ட மார்க்சின் வாரிசுகளாக வீதியில் இறங்காமல் விடிவு இல்லை என்பதை உணர்ந்து உழைக்கும் பெண்களாய் ஒன்றிணைவோம். சமூக விடுதலையை முன்னெடுப்போம்! பெண் விடுதலையை சாதிப்போம்.

உலக பெண்கள் நாளில் சூளுரைப்போம்!
பாலியல் சுரண்டலுக்கும் – உழைப்பு சுரண்டலுக்கும் முடிவு கட்டுவோம்!
நுகர்வு வெறியையும்- லாப வெறியையும் அறுத்தெறிவோம்.
ஆணாதிக்கத்தையும் – பெண்ணடிமை தனத்தையும் முறியடிப்போம்!
பெண்ணும் – ஆணும் சமம் என்பதை உயர்த்திப் பிடிப்போம்!
சமூக விடுதலையை முன்னெடுப்போம் – பெண் விடுதலையை சாதிப்போம்!

தகவல் :
பெண்கள் விடுதலை முன்னணி
சென்னைக் கிளை

3. விழுப்புரம்

பார்ப்பன பொறுக்கி பி.ஜே.பி எச்ச.ராஜா-வை பெரியார் சிலைக்கு செருப்பால் அடித்து இழுத்து வந்து மண்டியிட வைத்த விழுப்புரம் மக்கள் அதிகாரம்.

எச்ச.ராஜா-வை கண்டிக்கும் விதத்தில் 07-03-18 அன்று விழுப்புரம் “மக்கள் அதிகாரம்” சார்பில் மதியம் 12மணியளவில் விழுப்புரம் நகராட்சி அலுவலகத்திலிருந்து காமராஜர் வீதியிலுள்ள சங்கரமடம் அக்கரகாரத் தெரு பக்கத்திலுள்ள “தந்தை பெரியார்” சிலைக்கு ஒரு கிலோமீட்டர் தூரம் பேரணியாக சென்று மக்கள் அதிகாரம் தோழர்கள் மாலை அணிவித்தனர்.

பேரணியில் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்ட அனைவரும் பெரியாரின் படத்தை முகமூடியாக அணிந்து இருந்தனர். மேலும் இந்து பயங்கரவாதி என்ற எச்ச. ராஜா-வின் முகமூடியை அணிந்து கொண்டும், அவனின் கை, கழுத்தில் கயிரு கட்டி அதை பெரியார் வேடமிட்ட தோழர்கள் கையில் செருப்புடனும், துடைப்பத்துடனும் எச்ச.ராஜா வேடமிட்டவரை அடித்து உதைத்து கண்டன முழக்கங்கள் இட்டவாரே  வீதியில் இழுத்து வந்தனர். இறுதியில் பாஜக- பொறுக்கி எச்ச.ராஜா-வை பெரியாரின் சிலை முன் மண்டியிட வைத்து மன்னிப்பு கேட்க வைத்து தோழர்கள் செருப்பால் சாத்தினர். பின் எச்ச.ராஜா, ஆர்.எஸ்.எஸ் –இன் சித்தாந்த குரு கோல்வால்கர் ஆகியோரின் உருவ படங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. கண்டன முழக்கங்கள் எழுப்பப் பட்டன.

பெரியார் முகமூடி அணிந்து தோழர்கள் வீதியில் முழக்கமிட்டு வந்ததை பார்த்த அணைத்து பொது மக்களும், மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்களும், குறிப்பாக மாணவர்- இளைஞர்களும் நின்று ஏய்! பெரியார் பாரு என்று நின்று தாங்கள் வைத்திருந்த கை பேசியில் படம் பிடித்தனர். வாழ்த்து சொன்னார்கள். அவர்கள் முகத்தில் இருந்த பூரிப்பு இது பெரியாரின் பூமி, நாங்கள் பெரியாரின் வாரிசுகள் என்பதை உணரமுடிந்தது.

பின் மக்கள் அதிகாரம் விழுப்புரம் வட்ட ஒருங்கிணப்பாளர் தோழர்.சிவானந்தம் தலைமையில் உளுந்தூர்பேட்டை வட்டம் மக்கள் அதிகார தோழர் ஏழுமலை பேசும்போது ஏய்! BJP பயங்கரவாதி எச்ச.ராஜா-வே! உனக்கு என்ன தைரியம் இருந்தால் சிலையை உடைப்பேன் என்பாய். உனக்கு பெரியார் என்றால் யார் என்று தெரியுமா?  உங்கள் நான்கு வர்ண கொள்கைக்கு எதிராக கலகம் செய்தவர், நீங்கள் பெண்களை போதைப் பொருளாக அடிமைபடுத்தி வைத்து நீங்கள் செத்தால் கூடவே  அவர்களையும் உடன்கட்டை ஏற செய்த மரபை உடைத்து பெண்களின் அடிமை விலங்கை உடைத்தவர், அடிமை பட்டுக் கிடந்த மக்களுக்கு தன்மான உணர்வை ஊட்டியவர். ஆனா நீங்கள் யார்? அன்று முதல் இன்று வரை கோயில் நிலங்களையும், சொத்துக்களையும் கொல்லைப்புறமாக திருடி தின்பவர்கள், காவிரியை தடுத்து விவசாயிகளை கொன்றவர்கள், அனிதா போன்ற மாணவர்களின் படிப்பை கெடுத்து கொன்றவர்கள், உனக்கு என்ன யோக்கியதை இருக்கு பாட்டாளி வர்க்க தலைவர் மாமேதை லெனின் அவர்களின் சிலையை உடைக்கவும்,  பெரியார் சிலையை உடைக்கவும் என்று முடித்தார்.

அடுத்து பேசிய தோழர் ரவிகார்த்திகேயன் (மருதம் ஒருங்கிணைப்பாளர்- விழுப்புரம்) எவ்வளவு திமிரு இருந்தால் தன் சுய சாதி திமிரோடு தந்தை பெரியாரை சாதி வெறியன் என்று அவனால் பதிவிட முடியும். காலம் காலமாக சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும் மக்களை பிரித்து சூழ்ச்சியின் மூலம் வாழ்ந்து வருபவர்கள், இன்று தன் ஒரு மொழி, ஒரு பண்பாடு கொள்கையை நிறுவ தாங்கள் பதவியின் மூலமும், அதிகாரத்தின் மூலமும் கட்சிகளை விலைக்கு வாங்கியும். இங்கே அடிமை ADMK எடப்பாடி அரசையும் வைத்து அவர்கள் தாங்கள் திட்டத்தை நிறைவேற்ற நினைக்கிறார்கள். ஆனால் இது பெரியாரின் பூமி. இங்கு உங்கள் கனவு பலிக்காது என்பதற்கு இங்கு கூடியுள்ள மாணவ இளைஞர்களே சாட்சி. இப்படி ஒரு நல்ல போராட்டத்தை நடத்தும் மக்கள் அதிகாரம் தோழர்களுக்கு எனது வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முடித்தார்.

இறுதியாக பேசிய விழுப்புரம் மண்டலம் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன்ராஜ் பேசுகையில் தமிழகத்தில் இன்று நாம் பேன்ட்-சட்டை, சூ, போட்டுக்கொண்டு கல்வி அறிவோடு தன்மானத்தோடு வாழ விதை விதித்தவர் பெரியார். வரலாறு முழுவதும் பாசிஸ்டுகள் தாங்கள் அழிவை தாங்களே தேடிக்கொள்வார்கள். எப்படி பாசிஸ்ட் ஹிட்லர் மாமேதை லெனின் சிலையை உடைத்து மாவீரன் ஸ்டாலின் அவர்களால் தன் அழிவை தேடிக்கொண்டானோ அதே போல் இன்று பிஜேபி எச்ச பொருக்கி ராஜாவின் கருத்து என்பதும், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பிஜேபி காரன் முத்துக்குமரன் பெரியார் சிலையை உடைத்த நிகழ்வு என்பதும் இந்த RSS -BJP பயங்கரவாத கும்பல் தங்கள் அழிவை இன்று பெரியார் பூமியான தமிழகத்தில் தங்களுக்கான கல்லறையை தாங்களே உருவாக்கிக் கொண்டது. கட்டாயம் அதில் RSS -BJP புதைக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று முடித்தார்.

இதன்  தொடர்சியாக 07/03/2018 அன்று மாலை விக்கிரவாண்டி வட்டம் தொரவி பகுதியில் இளைஞர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் 50 பேர் மக்கள் அதிகாரம் தோழர் ராஜீவ்காந்தி தலைமையில் இனணந்து ஊர் முழுவதும் எச்ச. ராஜாவின் கழுத்தில் செருப்பு மாலை போட்டு இழுத்து சென்றனர். விக்கிரவாண்டி – புதுச்சேரி பிரதான  சாலையில் அவனது கொடும்பாவியை எரித்து முழக்கம் இட்டனர். பிறகு மக்கள் அதிகார தோழர் ராஜீவ்காந்தி பேசுகையில் பார்ப்பன மதவெறி கும்பலையும் பெரியாரின் மண் இங்கு பார்ப்பான் ஆதிக்கம் செய்ய விடமாட்டோம் என உரையாற்றினார்.

அடுத்து பேசிய விழுப்புரம் பகுதி தோழர் சிவானந்தம் பேசுகையில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கைபர் போலன் கனவாய் வழியாக வந்தேறிய பார்ப்பன கும்பல் இங்கு நமது மொழி, பண்பாட்டை அழித்து பார்ப்பணீய மனித விரோத பண்பாட்டை திணித்து நான்கு வர்ணங்களாக நம்மை இழிவுபடுத்தியது. இந்த இழிவுகளுக்கு எதிராக தமிழகத்தில் பார்பணீயத்தை வீழ்த்தியவர் பெரியார். அது தான் பாஜக- காரர்களுக்கு பெரியார் பெயர் கேட்டாலே சூத்துல பச்ச மிளகாய் வைத்ததுபோல் எரிகிறது.

எனவே தான் பெரியாரை அழிக்க வேண்டும், திராவிட மரபை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எனவே நாம் வந்தோம் சென்றோம் என்று இல்லாமல் இந்துத்துவத்தை ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.-வை நாட்டை விட்டு விரட்ட பெரியார், அம்பேத்கர், மார்க்சியம் கற்க வேண்டும். பெரியாரின் வாரிசுகளாக, அம்பேத்கரின் வாரிசுகளாக, மார்க்சியவாதிகளாக களத்தில் இறங்க வேண்டும். அவர்கள் விட்டு சென்ற பணியை நாம் இனி தொடர வேண்டும். அம்பேத்கர் சொன்னது போல் கற்பி- ஒன்றுசேர்- கலகம் செய் என்பதை உள்வாங்கி அரசியலை கற்று, ஒரு அமைப்பாக திரண்டு இந்துத்துவத்துக்கு எதிராக நமது பிரச்சனைகளுக்கு எதிராக ஒன்றுபட்டு போராடவேண்டும் என்று முடித்தார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம் மண்டலம்

4. பென்னாகரம்

“லெனின் சிலை உடைப்பு! பெரியார் சிலையை உடைப்பு! பாசிச வெறியாட்டம் போடும் பி.ஜே.பி  கொடிக் கம்பத்தை தமிழகம் முழுவதும் மாணவர்கள் அகற்றுவோம்!” என்று பென்னாகரத்தில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்  நடைப்பெற்றது.  தோழர் சத்திய நாதன் தலைமை தாங்கினார். இந்த இந்த ஆர்ப்பாட்டத்தினை விளக்கி  புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் அன்பு பேசினார்.

மக்கள் அதிகாரம் பென்னாகரம் பகுதி கோபிநாத் பேசினார். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கோல்வர்கர், எச்ச ராஜாவின் உருவபடம் எரிக்கப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி.
தருமபுரி, 81480 55539.

5. திருநெல்வேலி

“திரிபுராவில் பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் சிலை உடைத்து வெறியாட்டம் போடும் ஆர். எஸ். எஸ். பா.ஜ.க. கும்பலை கண்டித்தும்! தமிழகத்தில் பெரியார் சிலையை உடைப்போம் என சொன்ன எச்ச ராஜாவை கண்டித்தும்!”

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் 07-03-2018 அன்று மாலை 4.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சந்திப்பு பேருந்து நிலையத்தின் உள்ளிருந்து கண்டன முழக்கங்களுடன் ஊர்வலமாக தோழர்கள் வெளிவர ஆரம்பித்தனர்.

அதன் பின்னர் அங்கிருந்த அம்பேத்கர் சிலை முன்பு தோழர்கள் கோல்வால்கர் மற்றும் எச்.ராஜா ஆகியோரின் படத்தை எரிக்க முற்பட்டனர். அப்போது அங்கு வந்த போலீசு படங்களைப் பறித்துக் கொண்டனர். ஆனபோதும் அவற்றை தோழர்கள் மீண்டும் பிடுங்கி கிழித்தெறிந்து காலில் போட்டு மிதித்தனர். இந்நிகழ்வு அங்கு சுற்றியிருந்த நூற்றுக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

*****

நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் சார்பில் எச்.ராஜாவைக் கண்டித்தும்! அவரது உருவப்படத்தை எரித்தும் மாணவர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து போராட்டம் நடத்தினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
திருநெல்வேலி.

7. கும்பகோணம்

திரிபுராவில் நடத்தப்பட்ட தோழர் லெனின் சிலை உடைப்பை பயன்படுத்தி காவிபரிவாரத்தை உள்நுழைக்க “தந்தைபெரியார் சிலையை உடைக்கவேண்டும்.” என கூறிய எச்(ச).ராஜாவை கைது செய்ய கோரி குடந்தை அரசு கலை கல்லூரி சார்பில் வகுப்பு புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
குடந்தை, தொடர்புக்கு : 96297 01560.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க