அன்றாட வேலைகள் சலித்த ஒருவன் திடீரென்று திரைப்படம் பார்த்ததைப் போலத்தான் வினவும் பிறந்தது. ஜூலை 17, 2008 காலையில் எல்லாத் தினசரிகளிலும் அரசியல் நகைப்பு வெள்ளமென ஓடியது. அணுசக்தி ஒப்பந்தத்திற்காக இடதுசாரிகள் மன்மோகன் அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிய நேரம். குதிரை பேரங்கள் மர்மநாவலைப் போல ஆனால் மக்களுக்கோ எந்த ஆவலும் இல்லாமல் நாட்டை வலம்வந்த காலம். இந்த நாடகத்தில் பஃபூன் வேடம் ஏற்றிருந்த சி.பி.எம் கட்சியினரும், அவர்களது சபாநாயகர் சோமநாத் சட்டர்ஜியும் மாபெரும் ‘கொள்கை’ப் போரில் ஈடுபட்ட கதைகள்தான் அன்றைய செய்திகளின் காமடிச் சுரங்கம்.
கூட இருந்த தோழருடன் இதை விவாதித்த போது இதையே ஒரு வலைத்தளம் ஆரம்பித்து வெளியிட்டால் என்ன என்று கேட்க அவரும் சரியென்றார். இதற்கு சில மாதங்கள் முன்புதான் இணையமும், தமிழ்ப் பதிவுலகமும் ஏதோ கொஞ்சமாக அறிமுகமாயிருந்தன. அதற்கும் சில ஆண்டுகளுக்கு முன்னரே தமிழில் தட்டச்சு செய்வதை “ஆசான்” மூலம் கற்றிருந்தோம். கணினியில் எழுதுவது எங்கள் அரசியல் வேலைகளுக்கு மிகவும் வசதியாக இருந்தது.
பாதியோ முக்காலோ கட்டுரை முடிந்த மாலை நேரம் வேறு தோழர்கள் வந்தார்கள். வலைத்தளத்திற்கு என்ன பெயர் வைப்பது என்ற தேடல் சுமார் மூன்று மணிநேரம், திருக்குறள், பராதி, பாரதிதாசன் கவிதைகள், தமிழ் அகராதி என எல்லா ஆயுதங்களோடும் நடந்தது. கடைசியில் “வினவு” தேர்வாகியது. ஒரு தோழர் உடனே வினைசெய் என்றார். “கேளுங்கள், செயல்படுங்கள்” இந்த விளக்கமும் அந்த அருமையான தமிழ்ப்பெயரும் எங்களுக்கு பிடித்திருந்தன. மற்றபடி ‘தீவிரவாத’ கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும் சிவப்பு, சூரியன், கதிர், போர் போன்ற பெயர்களை வேண்டுமென்றே தவிர்த்தோம். காரணம் புதியவர்களை கருத்தின்பால் வென்றெடுப்பதற்கு இந்த கம்பீரமான வார்த்தைகள் அச்சுறுத்துமோ என்ற தயக்கம்.
தொழில்நுட்பவேலைகளில் கில்லியான தோழர் வலைத்தளத்தை பதிவு செய்தார். பிளாக்ஸ்பாட்டா, வோர்ட்பிரஸ்ஸா எது சிறந்தது என்பது தெரியவில்லை, குத்துமதிப்பாக வோர்ட்பிரஸ்ஸில் வினவு ஒரு குழந்தையாக பதிக்கப்பட்டது. இரவு முழுக் கட்டுரையை முடித்து காலையில் வலையேற்றம் செய்ய திட்டம். காலையில் ஏற்றும் நேரம் எங்கள் பகுதியில் முழுநாள் மின்தடை என்பது தெரியாது. அருகாமை ப்ரவுசிங் சென்டருக்கு சென்றும் முடியவில்லை. மாலையில் மின்பகவான் வந்தார். கட்டுரை எழுதிய நான் இங்கே, தொழில்நுட்பக் கில்லி அவருடைய அலுவலகத்தில், பிழைதிருத்தம் பார்த்த தோழர் வேறு இடத்தில் என மூன்று திசைகளில் முதல் கட்டுரை சரிபார்க்கப்பட்டு ஏற்றப்பட்டது. சிவப்பு தலையில், கருப்பு உடலில் கட்டுரை வந்ததும் குழந்தை பிறந்த உற்சாகம்.
சரி, குழந்தையைக் கொஞ்சுவதற்கு ஆட்கள் வேண்டுமே? பிழையும், கில்லியும் எங்கள் தோழர்கள் வைத்திருக்கும் தளங்களில் வினவின் பெயரில் மொட்டைக் கடுதாசி அல்லது இலவச விளம்பரங்களைப் பின்னூட்டங்களாக போட்டார்கள். தோழர்கள் என்பதால் படித்தே தீரவேண்டுமென்பதால் இந்தப் பணி. அந்த அளவுக்கு நிறைய தோழர்கள் அப்போது எழுதிவந்தார்கள். போலிக் கம்யூனிஸ்டுகளுக்கும், தமிழினவாதிகளுக்கும் இந்த இணையப்படை மிகுந்த பொறாமையை ஏற்படுத்துகிறது. இது இளமை துடிப்புள்ள ஒரு மார்க்சிய லெனினிய இயக்கம். களத்திலும், கருத்திலும், அரசியல் அரங்கிலும், பத்திரிகை துறையிலும் அதே போல இணையத்திலும் இப்படி முன்னணியில் இருப்பது ஆச்சரியமானதல்ல.
தோழர்கள் படிக்க வந்தார்கள். அசுரன் அவரது பதிவில் பதிலளித்தார். அசுரனே வினவை பொருட்படுத்தி எழுதியது எங்களுக்கு ஆச்சரியம். என்ன இருந்தாலும் அவர்தான் அப்போது இணையத்தில் எங்களது தலைவர். தொண்டர்களுக்கு ஆச்சரியம் இருக்காதா? இப்போதும் தலைவர் வேறு வேறு பெயர்களில் எல்லா விவாதங்களுக்கும் வந்து தொண்டர்களுக்கு தெரியாமல் உற்சாகப்படுத்துகிறார். முதல் பதிவேறிய உற்சாகத்தில் அடுத்த இருநாட்களுக்கும் இருபதிவுகள் எழுதினேன். அதிகம் பேர் பின்னூட்டமிட வரவில்லை. ஒருவர் மட்டும் பதிவேற்றியதும் வாழ்த்து தெரிவித்தார். அவர் கில்லிதான் என பிழை சொல்ல நான் கில்லியிடம் கேட்க இறுதியில் ஆரம்பத்தில் இந்தப் பூனையும் பால்குடிக்குமா என்பதாய் மறுத்து பிறகு ஆங்கிலத்திலிருந்து அவரது செந்தமிழ் பிரோயகத்திற்கு மாறியபோது கில்லி பிடிபட்டார். எல்லாம் எழுதுபவர்களை உற்சாகப்படுத்தும் ஒரு நல்ல நோக்கத்திற்காம். அதற்கு வேலை வைக்காமல் புதியவர்கள் வந்தார்கள். மூன்றாவது நாள் இன்றைய ஹிட்ஸ் 20 என உற்சாகமாய் பிழைக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். அதே போல மொத்த ஹிட்ஸ் 500, 1000 தாண்டிய போது கில்லி எனக்கு அனுப்புவார். இவ்வளவு அப்பாவிகளா என சிரிக்காதீர்கள். அப்பாவித்தனத்தையும் ஒத்துக்கொள்வது வீரமில்லையா?
எல்லாத் தளங்களின் ஓரங்களிலும் விதவிதமான அலங்காரங்கள், ஆன்லைன் பார்வையாளர்கள் அது இது என இருக்கிறதே இதை செய்ய முடியாதா என கில்லியிடம் கேட்டபோது அதெல்லாம் பெரிய விசயங்கள் தனக்கு தெரியாது என்பார். இதன் பொருள் அடுத்த நாள் அந்த வேலை நிறைவேறிவிடும் என்பதே. இதற்கு அவ்வப்போது வாலை முறுக்கிவிடவேண்டும். ஒரு காலத்தில் தமிழ் பதிவுலகில் தோழர்கள் எழுதுவது நேரவிரயம் என வாதிட்ட கில்லி அப்புறம் அதனோடே வாழ ஆரம்பித்தது காலத்தின் கோலம். இதற்குள் வினவின் லோகோ, இன்னும் விரிவாக பல இடங்களில் ஆர்குட், பல இணைய குழுமங்களில் வினவை அறிமுகம் செய்வதை கில்லி முடித்தார்.
குஜராத்தில் வெடித்த குண்டுவெடிப்பை பற்றி ஒரு பதிவெழுதியபோது மாற்றுக் கருத்தாளர்கள் விவாதத்திற்கு வந்தார்கள். சில இசுலாமிய தளங்கள் இதை மறுபிரசுரம் செய்தன. இந்த புதிய அனுபவத்தில் பின்னூட்டத்தில் விவாதிப்பது தேவையானால் பதிலை தனி பதிவாக வெளியடுவது என பயணம் சென்றது.எங்களது தாய்த்த்தளமான வோர்ட் பிரஸ்ஸிலிருந்து வந்த குந்தவை வெளியிட்ட விமரிசனத்திற்கான பதிலை தனி பதிவாக உடன் வெளியிட்டோம். ரவி சீனீவாசும், பி.முரளியும் இதில் விடாமல் விவாதிக்க, சீனீவாசின் தொல்லை காரணமாக அவரை சிறப்பாய் கவனித்தோம். இப்போதெல்லாம் அவர் வினவிற்கு வருவதில்லை, ஏனோ? ஆனால் வினவு.காம் வேலைகள் செய்த நண்பர் ரவியின் தளத்திற்கு சென்று தீவிரவாத வினவிற்கு உதவுகிறீர்களா என்றெல்லாம் நைசாக மிரட்டுவதை மட்டும் அவர் விடவில்லை.
இடையில் ஜெயமோகனின் நவ்வாப்பழம் கட்டுரை, இதை இன்னொரு தோழர் எழுதியதை வெளியிட்டோம். இதையும் பலர் மறுபிரசுரம் செய்தார்கள். நான் கடவுள் எனும் அகந்தை முற்றிய மோகனை குறிபார்த்து வெளுத்தது பலருக்கு மகிழ்ச்சியை தந்தது. இந்தக் கட்டுரைக்காக பிழை காலச்சுவடு தொடங்கி பல இலக்கியவாதிகளின் மின்னஞ்சல்களுக்கு விளம்பரம் செய்தார். படித்திருப்பார்கள், ஆனால் முகம் காட்டவில்லை.
அடுத்த மாதம் முழுக்க பண்பாட்டு விசயங்களைக் குறித்த கட்டுரைகள் வந்தன. இது பல புதியவர்களை வினவிற்கு அறிமுகப்படுத்தியது. ஜீன்ஸ் பேண்டும் பாலியல் வன்முறையும், ரிலையன்ஸ் பிரஷ்ஷில் மனிதக்கறி, குசேலன் உள்குத்து, முதலிய கட்டுரைகள் பெரும் வரவேற்பை பெற்றன. ரஜினி கட்டுரைக்கு ஒரே நாளில் 980 பேர் வந்தனர். கில்லிக்கு உற்சாகம் தாங்கவில்ல, மிச்ச இருபதை நானே கிளிக் செய்து ஆயிரம் ஆக்கியிருப்பேனே என்றார். சூப்பர் ஸ்டாரின் கட்டுரைய பாராட்டி பதிவுலகின் சூப்பர் ஸ்டார் லக்கிலுக் பின்னூட்டமிட்டார். ஏயப்பா லக்கிலுக்கா என ஆச்சரியம் தாளவில்லை. கில்லி சொன்னார் லக்கி கமல் ரசிகர் அதனால்தான்…. இருக்கட்டுமே லக்கிலுக் பெயரைப்போட்டு பலரும் ஊசிப்போன போண்டாக்களை பரபரப்பாக விற்ற காலத்தில் வினவுக்கு அவர் வருவது விசேடமில்லையா?
இடையில் தமிலிஷ், மாற்று என மற்ற திரட்டிகளிலெல்லாம் பதிவுகளை இணைப்பதை கில்லி செய்து வந்தார். தமிலிஷில் வாக்களிப்பதற்கு பலரையும் கில்லி படுத்திவந்தார். ஆனால் பிழை மட்டும் இதை சட்டை செய்யாமல் இருக்க ஒரு ஓட்டுகூட போடமாட்டார், இவரும் வினவு குழுவா என கில்லி அங்கலாய்க்க, அதன்பிறகு அதற்கு தேவையே இல்லாமல் மக்கள் வாக்களிக்க நாளுக்கு நாள் புதியவர்கள் வருகை அதிகமானது. “இப்போது எழுதுபவர்களில் வினவு ஆர்ப்பாட்டமின்றி நன்றாக எழுதுகிறார்” என சுகுணா திவாகர் எழுதியதை ஒரு தோழர் மின்னஞ்சல் இணைப்பில் தெரிவித்தார். அப்போது தீவிரமாய் எழுதிவந்த சுகுணாவின் பாராட்டு மற்றொரு அங்கீகாரம்.
நமீதா அழைக்கிறார், நாசரேத் ஆயர் கட்டுரைக்கு செந்தழல்ரவி வந்தார். கிறித்தவத்தின் தவறுகளை விமரிசிப்பதில் அவருக்கு ஆனந்தம். மற்றொரு உண்மைக் கிறித்தவர் அவர் பெயர் ஸ்டான்ஜோ….என ஞாபகம் அவருக்கு கோபம். ஷகிலா இசுலாம் கட்டுரைக்கு புதிய இசுலாமியர்கள் வந்தார்கள். யாரும் எமது விமரிசனத்தை எதிர்க்கவில்லை என்பது ஆச்சரியம். அட்டகாசமாக பின்னூட்டமிட்ட நண்பர் அல்லாபிச்சை அதன்பிறகு ஆளே காணோம். இந்தக்கட்டுரைக்கு ஆலோசனை தந்தவர் பிழை. அதனால்தான் என்னவோ இன்றும் பாலியல் தேடல்களில் பயணம் செய்வோர் ஷகிலா கட்டுரையின் குறிச்சொற்களுக்காக பிழையாக வினவில் விழுந்து திரும்புகிறார்கள்.
இடையிடையே தமிழ்மணத்திலிருந்து நமக்கு நட்சத்திர அழைப்பு வரப்போகிறது தயாராகுங்கள் என கில்லி அச்சுறுத்தியது போல நான்கு மாதங்களுக்கு பிறகு அழைப்பு வந்தேவிட்டது. அடுத்த ஆச்சரியம். முதல் கட்டுரையாக மொக்கை குறித்த பதிவை எமது மூத்த தோழர் எழுதினார். இவ்வளவிற்கும் அவர் பதிவுலகை அறிந்தவரில்லை என்றாலும் கில்லியின் விரல் நுனி விவரக்கிடங்கை வைத்து எழுதிய கட்டுரையின் வரவேற்பு லக்கிலுக்கால் துவக்கிவைக்கப்பட்டது. இதற்காக அவரது தளத்திற்கு சென்ற ஒருவர் இப்படி இங்கே மொக்கைகளாக போட்டுத் தாக்கிவிட்டு, வினவிற்கு சென்று மொக்கைகளை கண்டிக்கும் பதிவுக்கு வரவேற்பா எனக் கேட்க அதற்கு லக்கி அளித்த பதில்? “நான் மொக்கைதான். ஆனால் எனக்கு மொக்கைகளை பிடிக்காது!” இன்னும் புரியாதவர்கள் அவரிடமே கேட்டுப்பார்க்கலாம்.
நட்சத்திர வாரத்தின் போது அவரசமான அமைப்பு வேலைக்காக வெளியூர் சென்று திரும்பினோம். வீடு வந்தபோது சட்டக்கல்லூரி கலவரம் தொலைக்காட்சிகளில் நெஞ்சை பதறவைக்கும் காட்சிகளோடு வெடிக்கத் துவங்கியிருந்தது. அதற்குள் களத்திற்கு சென்ற பு.மா.இ.மு தோழர்கள் பின்னணி விவரத்தை உடனுக்குடன் அறியத் தந்தார்கள். தொலைக்காட்சி, மற்ற பதிவுகளை பார்த்துவிட்டு நான் விவரங்களை சேகரிக்க உடனே விவாதித்து மூத்த தோழர் எழுதினார். முழு இரவுப் பயணத்திற்கு பிறகு அதிகாலையில் எழுத ஆரம்பித்து நண்பகலில் முடித்த பிறகு கில்லி ஏற்றினார். பப்புவின் உலகிலிருந்து வந்த சந்தனமுல்லை, சங்கர பாண்டி முதல் பல பதிவுலக பிரபல நண்பர்கள் சின்னத்திரையில் திணிக்கப்படும் காட்சிக்கு பின்னே தலித் மாணவர்கள் மீது ஏவப்பட்டிருக்கும் வன்முறையை புரிந்து கொண்டு பேசினார்கள். என்றாலும் பெரும்பாலும் பலர் புதியவர்கள் அதிலும் பிற்படுத்தப்பட்ட அல்லது ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் இந்த இடுகையை ஆத்திரத்துடன் எதிர்த்தார்கள். பதிவுலகத்தின் வாசகப் பரப்பை இதுதான் பெரும்பாலும் ஆக்கிரமித்திருக்கிறது என்பதையும், தப்பித் தவறி இந்த மாய உலகில் வந்து போகும் சில தலித் மாணவர்கள் சிறுபான்மை என்றாலும் தங்களது சிறுவயது, கல்லூரி கொடுமைகளை இந்த சம்பவரம் பெரிதும் ஒத்திருப்பதாக எடுத்துச் சொன்னதையும் வைத்துப் பார்க்கும் போது இங்கே இன்னமும் தலித் மக்களின் வலி உணரப்படவில்லை என புரிந்து கொண்டோம்.
எனவே இதற்காக பு.க, பு.ஜ கட்டுரைகளை உள்ளிட்டு மேலும் சில இடுகைகளை வெளியிட்டோம். அவ்வப்போது ஆதிக்க சாதியை இடித்துரைக்கும் வேலையை செய்யவேண்டுமென்பதையும் குறித்துக் கொண்டோம். இந்தப் பிரச்சினைக்குப் பிறகு பின்னூட்டங்கள் ஐம்பது, நூறு என்ற எண்ணிக்கைக்கு விரிந்து சென்றன. வெளியே பரபரப்பாக பேசப்படும் ஒரு நிகழ்வின் உண்மைப் பின்னணியையும் அது குறித்த சமூகக் கண்ணோட்ட ஆய்வையும் வெளியிடுவது என்ற வேலை வினவின் திட்டத்தில் தானாக ஏறியது. இதனால் தமிழகம் மட்டுமல்ல, பல வெளிநாடுகளில் இருக்கும் தமிழ் மக்களுக்கு உண்மை நிலையை எடுத்துச் சொல்லும் பணியை வினவு எடுத்துக் கொண்டது. வினவு நம்பகமான ஒரு தமிழ்பத்திரிகை என்று பாராட்டினார் ஒரு ஈழத்தமிழர்.
சூடான அரசியல் சமூகப் பிரச்சினைகளுக்கு நடுவே தணிப்பது போல இலக்கியவாதிகளை கவனிக்கும் கட்டுரைகளை அதிகம் வெளியிட வேண்டுமென்பதும் எமது விருப்பம். கருத்துரிமைக்காக காலச்சுவடு போராடும் வேடத்தை கலைத்தும், அவ்வப்போது அடித்துக் கொள்ளும் சாரு, ஜெ.மோ இருவரையும் முழு ஃபுளோவில் மோதவிட்டும், சினிமா பாடல் சான்ஸுக்காக கமலிடம் பல்லிளிக்கும் மனுஷ்ய புத்திரன் என அவ்வப்போது வந்தன. இது போதாது என்பதும் இலக்கியவாதிகள் பலர் இலக்கியத்தின் பெயரால் மறைத்திருக்கும் சமூக விரோத ஆன்மாவை வெளிச்சமிடும் வேலையை அதிகம் செய்திருக்கவேண்டும். இதனால் நாங்கள் இலக்கியத்திற்கு எதிரிகள் என நண்பர் ஜயோராம் சுந்தர் கருதவேண்டாம். வினவின் நூலான இலக்கிய மொக்கையை சாரு ரசித்து படித்ததாக அவரது புகழ் பரப்பும் ரசிகர் ஒருவர் – அவர் யார்? – வேறு ஒரு ஃபாரத்தின் பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தார். இது இலக்கிய மொக்கை 2ம்பாகம் எழுதுவதற்கு உந்துதலாக நிச்சயம் இருக்கும்.
சென்னையில் அடை மழையும், மும்பயில் பயங்கரவாதிகளின் தாக்குதலும் ஒருங்கே நிகழ்ந்தன. மும்பை தாக்குதலின் முழுமையான பரிமாணத்தை விளைவை, ஆறு பாகங்களாக வெளியிட்டோம். இத்தொடரிலும் பெரிய விவாதம் நடந்தது. ஆர்.எஸ்.எஸ் பரப்புரையின் தொடர்பு இல்லாமலே பலர் அந்தக் கருத்துக்களை இயல்பாக பேசுவது இங்கே தெரியவந்தது. இசுலாமியர்களைப் பற்றிய பொய்யான கற்பிதங்களும், வெறுப்பும், பொது மனவெளியில் அழுத்தமாக பதிக்கப்பட்டிருக்கிறது. இதையும் நெம்பி எடுக்க வேண்டுமென்பதும் அசாத்தியமான வேலைதான். சிலர் இந்தியாவில் எங்கு குண்டு வெடித்தாலும் வினவு நியாயப்படுத்தும் என முடித்துக் கொண்டனர். ஆனால் மும்பை இறுதி பாகத்தில் சர்வதேசம் பேசும் இசுலாமிய தீவிரவாதத்தின் முகத்தை இந்து மதவெறியரை அம்பலப்படுத்தும் அதே அலைவரிசையில் எழுதியது அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அந்த பாகத்திற்கு மட்டும் அவர்கள் விவாதிக்க வரவில்லை என்பதில் அறிய முடிந்தது.
ஜனவரியில் சென்னை புத்தக கண்காட்சி. இணையத்தில் மட்டும் அறியப்பட்ட இந்தக் கட்டுரைகளை மக்களுக்கு கொண்டு சென்றால் என்று ஒரு தோழர் கேட்க அந்த ஆலோசனைகளை அமைப்புத் தோழர்கள் ஏற்க புயல்வேகத்தில் ஆறு தலைப்புக்களில் புத்தகங்கள் புதிய கலாச்சார வெளியீடாக வந்தன. அரங்கில் கீழைக்காற்று கடையில் மட்டும் மொத்தம் ஆயிரம் புத்தகங்கள் விற்பனையாயின. இலக்கிய மொக்கை பரபரப்பாக விற்பனையாவதாக கிழக்கு பா.ராகவன் அவரது பதிவில் எழுதினார். இதனாலேயே அம்பானியை தெய்வமாக போற்றும் அக்கம்பெனி எழுத்தாளர்களை நாங்கள் மன்னிப்பதாக இல்லை. மும்பை, சட்டக்கல்லூரி இரண்டு நூல்களிலும் வாசகர்களின் பின்னூட்டங்கள் எல்லாம் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது தமிழுக்கு புதியது. வினவின் விவாதங்களில் சண்டாமிருதம் செய்யும் அண்ணன் ஆர்.வியின் வாதங்களெல்லாம் மும்பை நூலில் இருப்பது அவருக்கு தெரியுமா என்பது தெரியாது.
கண்காட்சிக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் திட்டமிடப்பட்டு இந்த நூல்கள் வெளியிடப்பட்டன. கில்லி, பிழை மற்றும் சில தோழர்களின் பங்களிப்பால் இது சாத்தியமாயிற்று. இந்நூல்களின் முன்னுரைகளெல்லாம் வினவில் வெளியிட்டு வாசகர்களை கண்காட்சிக்கு அழைத்தோம். செந்தழல் ரவி புத்தக கண்காட்சியில் வினவு என்று ஒரு பதிவிட்டு உற்சாகப்படுத்தினார். மொக்கைக்குள்ளும் ஈரம் இருக்கிறது என்பதை அவரது அன்பான எதிரிகள் உணரவேண்டும்.
ஆரம்பத்தில் சராசரியாக ஒரு வாரத்திற்கு ஒரு புதிய இடுகையென்பது பின்னர் மூன்று நாட்களுக்கொன்று, இறுதியில் அன்றாடம் ஒன்றாக நிலைகொண்டது. இதுவும் திட்டமிட்டு நடந்ததல்ல. காலத்தைக் கைப்பற்றும் அவ்வப்போதைய பிரச்சினைகளை உடனுக்குடன் கொண்டு செல்ல வேண்டுமென்பதாலும், அதற்கு உதவும் வகையில் புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் இதழ்களின் பல கட்டுரைகள் சேமிப்பு போல காத்துக்கிடந்தன. அமெரிக்க திவால் என்ற கட்டுரை அப்படித்தான் வெளியிடப்பட்டு பல குழுமங்களில் பிரசுரிக்கப்பட்டு பல்லாயிரம்பேர் படித்தனர். இப்படி இணையத்திற்கு வெளியே உள்ள எமது அமைப்பின் செய்திகள் இணைய வாசகர்களுக்காக கொண்டு சேர்த்தது என்ற வகையில் அதன் பயன்மதிப்பு அதிகம். இத்தகைய கட்டுரைகளுக்கும் பெரு எண்ணிக்கையில் பின்னூட்டங்கள் மாதக்கணக்கில் வந்தவண்ணமிருந்தன.
சத்யம் கட்டுரை, ஐ.டி.துறை நண்பா கட்டுரைகள் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களிடம் பெரும் விவாதத்தை கிளப்பின. இந்தக் கட்டுரைக்கு நண்பர் தமிழ்சசி அவரது கட்டுரை ஒன்றோடு இணைப்பு கொடுத்தார். அப்போது வரவிருக்கும் ஆட்குறைப்பு ஆபத்தை மறுத்த நண்பர்கள் விரைவிலேயே அவை பலித்த சோகத்தை கண்கூடாக பார்த்தார்கள். இப்படி சமூகத்தரப்பில் எல்லாத் தரப்பினரதும் பிரச்சினைகளுக்குள்ளும் வினவு நுழைந்து பலரை அழைத்து வந்தது.
ஈழத்தில் சிங்கள இனவெறி அரசு புலிகளை அழிக்கும் பெயரில் தமிழினப்படுகொலையை அரங்கேற்றிய நேரம் அதன் எதிர்விளைவு தமிழகத்தில் கொந்தளித்த நேரம். வினவும் அதில் முடிந்த மட்டும் தீவிரமாக பங்கு கொண்டது. எமது மொத்த இடுகைகளில் மூன்றில் ஒரு பங்கு ஈழத்திற்காக ஒதுக்கப்பட்டது என சொல்லலாம். பொதுவில் ஈழப்பிரச்சினை வெறும் மனிதாபிமானமாக தமிழக அரசியல் வெளியில் சுருக்கப்பட்டபோது புரட்சிகர அமைப்புகள் அவற்றை இந்தியாவின் மேலாதிக்க நலனுக்காக நடத்தப்படும் சதியை எடுத்துரைத்து மக்களை குறிப்பான அரசியல் முழக்கங்களின் கீழ் அணிதிரட்ட முயன்று வந்தன. அந்த அரசியல் வழிகாட்டுதலில் வினவில் பலகட்டுரைகள், ராஜீவ் காந்தி கொலையை வைத்து செய்யப்படும் அவதூறுக்கு மறுப்பு, முத்துக்குமார் தியாகம் என தொடர்ந்தன.
இதன்மூலம் கணிசமான ஈழத்தமிழ் மக்கள் வினவிற்கு அறிமுகமாயினர். இறுதியில் புலிகள் முற்றிலும் வீழ்த்தப்பட்ட நேரத்தில் ஈழப்போராட்டத்தை ஒரு பறவைப் பார்வையில் நடப்பு சம்பவங்களோடு இணைத்து எழுதப்பட்ட ஈழம் போர் இன்னும் முடியவில்லை என்ற கட்டுரை வலியையும், உணர்ச்சியையும் கருத்தில் கொண்டு மிகுந்த ஆயாசத்துடனும், விவாதங்கள் திருத்தங்களுடனும் எம்மால் எழுதப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு பகல் ஒரு இரவு இதற்காக இடைவெளியின்றி ஒதுக்கப்பட்டு அதிகாலையில் வலையேற்றம் செய்யப்பட்டது. அந்த தருணத்தின் அரசியலையும் உணர்ச்சியையும் ஒருங்கே கொணர்ந்த இந்தக் கட்டுரையை யாழில் மட்டும் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோரால் படித்து விவாதிக்கப்பட்டது.
முக்கியமாக ஈழத்தமிழர்களின் இணைய தளங்கள் புலிகள் ஆதரவு, எதிர்ப்பு என தெளிவான இரண்டு முகாம்களாக பிரிந்திருந்த போது வினவு மட்டும் இந்த இரு தரப்பினரும் விவாதிக்கும் களமாக மாறியிருந்தது. இருவரும் தமது தரப்பை மறுபரிசீலனை செய்யும் கடினமான பணியை மிகுந்த போராட்டத்துக்கிடையில் களத்தின் அனுவபங்களோடு கொண்டு சென்றோம். தீவிர புலி ஆதரவாளரான தமிழ் நிலாவும், தீவிர புலி எதிர்ப்பாளரான டெக்கானும் வினவின் விவாதங்களில் கலந்து கொள்வது எங்களுக்கே புதிய அனுபவம்.
ஈழத்தோடு தேர்தல் வந்த நேரத்தில் வினவின் டாட் காம் வேலைகளுக்காக சில நாட்கள் பதிவு போடவில்லை. தேர்தல் குறித்து, தமிழ்சசி, மாற்றம் நண்பர்களின் நிலையை பரிசீலிக்கும் கட்டுரையெல்லாம் எழுத நினைத்து நடக்காமல் போயிற்று. பாசிச ஜெயா தீடிரென ஈழத்தாயக கொண்டாடப்பட்ட போது அந்த பேயை உள்ளது உள்ளபடி அம்பலப்படுத்தியதிலும், அதே போல கருணாநிதியின் துரோகத்தை ஒருங்கே கண்டித்ததும் இங்கு மட்டும் நடந்த விசயம். மற்ற தளங்களெல்லாம் ஜெயா ஆதரவு, கருணாநிதி ஆதரவு என இருமுகாம்களாக பிரிந்து ஈழத்திற்காக பேசியதும் இங்கே இணைத்து பார்க்க வேண்டும்.
போலிக் கம்யூனிஸ்டுகளை அவ்வப்போது விமரிசித்து எழுதியதை இணையத்தில் இருக்கும் சில அரசியல் தெரியாத சி.பி.எம் அப்பாவிகள் திமிருடன் எதிர் கொண்டனர். எங்களது அரசியல் எதிரிகள் எல்லோரும் செய்யும் விதவிதமான அவதூறுகளை தொகுத்து அவர்கள் எங்களுடன் சண்டையிட்டது நல்ல தமாஷ். அப்போதுதான் இந்த அவதூறு பின்னூட்டங்களை வெளியிடக்கூடாது என நாங்கள் பேசிய போது கில்லி மட்டும் இவற்றை வெளியிடுவதன் மூலம் அவற்றை வலுவிழக்கச் செய்யலாம் என்றார். இறுதியில் அவர் சொன்னதுபோலவே நடந்தது. அநேகமாக எந்த பின்னூட்டத்தையும் வினவில் தடை செய்தது இல்லை என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.
ஒரு நாள் மெயிலில் ஒருகேலிச்சித்திரத்தை அனுப்பி அறிமுகமான ரவி அப்புறம் தேர்தல் வரைக்கும் தீவிரமாக பல சித்திரங்களை வரைந்து கொடுத்தார். மற்றொரு தோழர் பெயரெல்லாம் வேண்டாமென்று வரைகலை கேலிசித்திரங்களை அனுப்பி வந்தார். இப்படித்தான் கேலிச்சித்திரப் பகுதி உருவானது. அதே போல இணையத்தில் காத்திரமாக எழுதும் நண்பர்களை தேடிச் சென்ற போது கலையகத்தில் பெரிய ஊடகங்கள் கூட மறுக்கும் முக்கிய சர்வதேச அரசியல் நிகழ்வுகளை கண்ணோட்டத்தோடும், மக்கள் சார்பிலும் வைத்து எழுதும் தோழர் கலையரசனை கண்டோம். எமது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு ஆப்பரிக்க தொடரை எழுதினார். தற்போது அது முடிந்து அடுத்த தொடரை ஆரம்பிக்கும் நிலையில் இன்னும் ஒரு ஐந்து வருடமாவது தோழர் கலையரசன் வினவில் தொடர்களை எழுதுவார் என நம்புகிறோம். விரும்புகிறோம்.
அப்படித்தான் மருத்துவர் ருத்ரனையும் பிடித்துப் போட்டோம். ஆனாலும் அன்றாடம் பெருகி வரும் மனத் துயரர்களை கவனித்து விட்டு எழுதுவதற்கு இயலாத நிலையில் அவர் இருக்கிறார். என்றாலும் எழுதவேண்டுமென நாங்கள் மட்டுமல்ல நீங்களும் வலியுறுத்தினால் அவரை மீட்டு வரலாம். இருப்பினும் பல பதிவர்களின் பதிவுகளை படித்து எல்லோரையும் உற்சாகப்படுத்தும் வேலையை அவர் செய்வது பலருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொம்பன், அருள் எழிலன், இராவணன், முதலான நண்பர்களும், தோழர் துரை சண்முகம் போன்றோரும் அவ்வப்போது எழுதி வருகின்றனர். வாசகரான அறிமுகமான பெண் தோழர் ரதி இப்போது ஈழத்து நினைவுகளை தொடராக எழுத ஆரம்பித்திருப்பது நீங்களே வரவேற்ற சமீபத்திய நிகழ்வு.
இருக்கட்டும் இந்த ஒரு வருடத்தில் நாங்கள் என்ன கற்றுக் கொண்டோம்? விவரப்பிழைகளை உடனுக்குடன் வாசகர்கள் திருத்துவதால் அதில் கவனமாக இருக்கவேண்டுமென்ற பொறுப்பு. இல்லினாய் தான், இல்லியானய்ஸ் இல்லை என்பார் அந்த அமெரிக்க நண்பர். மேல்சாதி என எழுதுவது தவறு ஆதிக்க சாதி என நினைவுபடுத்துவார் இங்குள்ள நண்பர். பார்ப்பனியத்தை பற்றி எழுதினால் விசுவாமித்தரின் போல அண்ணன் ஆர்.வி வாதிடுவார் என்பதால் நாங்களும் பல கோணத்தில் பார்ப்பனியத்தின் மனித குல விரோதங்களை புரியவைக்க முயன்றோம். வித்தகன் போன்ற ‘நடுநிலைமையாளர்கள்’ சுட்டிக்காட்டும் பிரச்சினைகள் நாங்கள் இன்னும் கருவை கன்வின்சிங்காக எழுதுவதற்கு கட்டளையிடுகிறது. வெளி உலகத்தின் நடைமுறை அறிவு இணையத்தில் குறைவாக இருப்பதால் எதனையும் விலாவாரியாக எழுதுவதோடு எச்சரிக்கையோடு அழைத்து செல்லும் பொறுப்பை கற்றுத் தந்திருக்கிறது.
இருவேறு கருத்துக்கள் பின்னூட்டத்தில் உக்கிரமாக வாதிடும் போது இரண்டின் பலமும் பலவீனமும் எங்களுக்கு தெரிய வருகிறது.
சுருங்கக் கூறுவது அழகு என்றாலும் முழுமையை உணர்த்த வேண்டுமென்பதற்காக எமது கட்டுரைகள் நீண்டுவிடுகின்றன. இதை நண்பர் ரவிசங்கர் சுட்டிக்காட்டினார். கில்லியிடம் இந்தக் கட்டுரை ஆயிரம் வார்த்தைகளுக்குள் எழுதுவதாக கூறிவிட்டு பின்னிரவில் ஆரம்பித்து இப்போது அதிகாலை ஐந்து மணிநேர நிலவரப்படி 2050 வார்த்தைகளில் நிற்கிறேன். இன்னும் எழுத வேண்டியது ஏராளமிருக்கிறது, என்ன செய்யப் போகிறேன்?
வினவின் வாசகர்களும், பதிவர்களும், தோழர்களும் பல விதங்களில் எங்களை பயிற்றுவித்திருக்கிறார்கள் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறோம். வினவின் ஆரம்பத்தில் நிறைய தோழர்கள் எழுதிவந்தார்கள், இப்போது கலகம், குருத்து போன்ற ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் நின்று விட்டது எங்களுக்கு பெரும் குற்ற உணர்ச்சியை தருகிறது. அவர்கள் சொந்த தளங்களில் எழுதாவிட்டாலும் வினவில் எழுதலாம். விவாதங்களில் பங்கு பெறலாம். அதே போல பிரபல பதிவர்களும், பிரபல பதிவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டம் போடும் பிரபலங்களும் இங்கே அதிகம் வருவதில்லை. அவர்களின் உலகம் வேறு, எங்களின் உலகம் வேறு இன பிரிந்தே இருப்பதும் புரிகிறது. இதை எப்படி இணைப்பது?
தனிப்பட்ட வாழ்க்கையின் ரசனைகளை தனியொருவர் எழுதுவதே வலைப்பூ என்றாலும் அந்தவர் சராசரியாக மட்டும் வாழும்போது அவரிடத்தில் என்ன நல்ல இரசனை தோன்றிவிடும்? வாழ்வின் வெளியில் அசாதாரணங்கள் இல்லாத போது சாதரணமே சிறப்பாக எப்படி மாறும்? இப்படித்தான் தமிழ்ப் பதிவுலகம் இருக்கிறது என்பதையும் இங்கே வருத்தத்துடன் பதிவு செய்கிறோம். அதனால்தான் ஆனந்த விகடனிலும் அழுகை சீரியல்களிலும் இடம்பெறும் அரதப் பழசான மாமியார் மருமகள் சண்டைகள் போல இங்கே நடக்கின்றன. இதற்கெல்லாம் மொழியின் அதிகாரம் பற்றிய புரிதல்தான் காரணம் என தோழர் பைத்தியக்காரன் நினைத்தால் அதில் நாங்கள் உடன்படவில்லை. உங்களது வினையும், வாக்கும் ஒன்றோடு பின்னிப்பிணைந்திருக்கிறது. வாழ்க்கையின் பொருளில் சமூக நோக்கும் பயன்பாடும் இல்லையென்றால் தனிப்பட்ட வாழ்வு தனது இருத்தலுக்காக அற்ப பிரச்சினைகளின் பால் வேறு வழியின்றி விழுந்து விடுகிறது. பதிவரசியலின் இந்த போக்குகளை இனிமேல் அவ்வப்போது எழுத விருப்பம்.
இந்தக்கட்டுரைகளை மட்டும் தமிழ்மணம் தனித்தெரிவாக வைத்தால் நல்லது என்ற கோரிக்கை வைத்தாலே பலர் சண்டைக்கு வந்துவிடுவார்கள். ஆனாலும் அவர்கள்தான் தமிழ்மணம் பதிவர் போட்டியில் இரண்டு பிரிவுகளில் வினவின் கட்டுரைகளை முதலிடத்திற்கு தெரிவு செய்தார்கள். தமிழ் மணத்திற்கும், தமிலிஷ் , மாற்று, திரட்டி மற்ற சகல திரட்டிகளுக்கும் எமது நன்றிகள்.
தமிழ் ஸ்டூடியோ நண்பர்கள் சிறந்த வலைப்பதிவருக்கு மாதவிருது வழங்கும் திட்டத்தை அறிவித்து முதல் பதிவராக வினவை தெரிவு செய்தார்கள். அவர்களுக்கும் எமது நன்றிகள்.
எதிர்காலத்தில் செய்யவேண்டியதையும் நிறைய யோசித்திருக்கிறோம். எமது இயக்கங்களின் பாடல் தொகுப்புக்கள், உரைகள், ஆடியோ பேட்டி, வீடியோ நிகழ்ச்சிகள், நூல்கள், பு.க,பு.ஜ இதழ்கள் அத்தனையும் வலையேற்றம் செய்யும் பிரம்மாண்டமான கனவும் உண்டு. இதற்கு நாலைந்து கில்லிகள் வேண்டும். மார்க்சியக் கல்வி, அரசியல் வாழ்க்கையின் அனுபவங்கள், கேள்வி பதில் என நீண்ட திட்டங்களும் உண்டு. சில முக்கியமான நிகழ்வுகளை வினவில் நேரடியாக காட்டும் யோசனை கூட இதெல்லாம் எப்படி சாத்தியமென்பது தெரியாவிட்டாலும் உண்டு. ரவிசங்கர் போன்ற நண்பர்கள் அதற்கு உதவுவார்கள்.
ஒரு வருடத்தில் 140 நாடுகளிலிருந்து ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஹிட்ஸ்கள், 6800 மறுமொழிகள், இதில் தவிர்க்க இயலாமல் வினவின் பெயரில் போட்ட மறுமொழிகள் நூறுக்கும் குறைவே. மற்ற நண்பர்களைப் போல நாங்கள் மறுமொழிகளுக்கு நன்றி சொல்வதில்லை. சொல்லியிருந்தால் இன்னும் ஒரு ஐயாயிரம். இருக்கட்டும். பிரமிப்பாக இருக்கிறது. இப்படியெல்லாம் நடக்குமென்று நாங்கள் எதிர்பார்த்ததில்லை. நடந்திருக்கிறது. அதனால் சற்றே பயமாகவும் இருக்கிறது. ஆனாலும் இனி வினவின் பாதையை நீங்களும் வினவுமே தீர்மானித்துக் கொள்வீர்கள். புரட்சியின் ஒரு சிறு மாதிரியை எங்களுக்கே காட்டிய வினவின் இந்த சிறு வெற்றியை எங்களது ஆசான்களுக்கு அர்பணிக்கிறோம். அது சரி, எமது ஆசான்கள் யார்?
நல்லது நண்பர்களே இனி உங்களைப் பற்றி…….
வினவின் இத்தனை பிரயத்தனங்களும் எதற்காக..?வினவு எங்களது மாபெரும் அரசியல் வாழ்வின் ஒரு துளி. இந்தக்கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும் போது ஆயுள்தண்டனை பெற்று சிறையில் அரசியல் உணர்வை இழக்காமல் வாடும் தோழர்களை நினைத்துப் பார்க்கிறேன். கடந்த காலத்தில் எதிரிகளுடனான மோதலில் உயிரை தியாகம் செய்த தோழர்கள் சமீப காலம் வரை உண்டு. ராகுல்காந்தியை மறித்ததில் துவங்கி பல்வேறு வழக்குகளுக்காக எமது தோழர்கள் நீதிமன்றத்திற்கு அலைந்த வண்ணமிருக்கிறார்கள். போராட்டத்தினால் பணியிழந்து அரசியல் வேலையை அதிகப்படுத்தியிருக்கும் தோழர்கள் இருக்கிறார்கள். இளவயதிலேயே தனது வாழ்வை முழுநேர அரசியிலுக்கு அர்ப்பணித்தவர்கள் ஏராளம். கலப்பு மணம் செய்து ஊரையும் உறவையும் பகைத்துக் கொண்டு கிராமங்களில் தம்பதி சகிதராக போராடும் முகங்களும் வந்து போகின்றன. சிறுவயதிலேயே கலைக்குழுவிற்கு வந்து தமிழகம் முழுவதும் தமது குரல்களால் பயணம் செய்த அந்த தோழர்களின் கடுமுழைப்போடு ஒப்பிடும் போது இந்தக் கட்டுரை எழுதுவது ஒன்றும் பெரிய விசயமல்ல. வரும் சனி, ஞாயிறு தமிழகத்தின் எல்லாப் பேருந்து நிலையங்களிலும், சென்னையின் புறநகர் ரயில்களிலும் எமது தோழர்கள் பத்திரிகை விற்பனை, பிரச்சாரம், நிதி வசூல் என தனியாக, சிறு அணியாக செல்வதற்கு முன் இப்போது தூக்கத்தை விட்டு எழுந்திருப்பார்கள். வன்னியிலோ எதுவுமின்றி நம் மக்கள் இன்னும் எத்தனை காலம் சிறைபடநேரிடுமோ என்பது தோழர் இரங்குவோனுக்கு மட்டுமல்ல பலருக்கும் நெருப்பாய்ச் சுடுகிறது.
தண்டகாரண்யாவிலும், பீகாரிலும் கானகத்தில் கடும் இன்னல்களுக்கிடையே மாவோயிச தீவிரவாதிகள் என்ற பெயரில் பழங்குடி மக்களை விடுவிக்கும் அந்த தோழர்களெல்லாம் நகரங்களிலிருந்து தமது நடுத்தர வாழ்வை உதறிவிட்டு சென்றவர்கள். ஈராக்கிலோ நாளைக்கு வெடிப்பதற்கு இன்றைக்கு ஒரு தற்கொலைப் போராளி விழித்துக் கொண்டிருப்பான்.
பழைய உலகின் அநீதிகளுக்கு எதிராக புதிய உலகம் படைக்கும் முயற்சிகள் இப்படித்தான் உலகெங்கும் போராடுகின்றன. மனித குலத்தை வருங்காலத்தில் முற்றிலும் அடிமைச் சிறையிலிருந்து விடுவிக்க எத்தனிக்கும் இந்தப் போராட்டத்தில் நீங்கள் பார்வையாளரா இல்லை பங்கேற்பாளரா?
வந்தவர்கள் பார்ப்பதும், பார்த்தவர்கள் பங்கேற்பதும், பங்கேற்றவர்கள் களத்தில் இறங்குவதும், இறங்கியவர்கள் தோழர்களாக பரிணமிப்பதற்கும்தான் வினவு. இதன்றி வேறு நோக்கம் எதுவுமில்லை என்பதை பகிரங்கப்படுத்துவதில் தயக்கம் இல்லை. அல்லும் பகலும் நெருக்கித் தள்ளும் வாழ்வில் சுயநலத்தினால் உந்திப்பட்டு வாழ்ந்தால் நமக்கும் மந்தைகளுக்கும் என்ன வேறுபாடு? பின்னொரு நாளில் நான் இப்படிக் கழித்தேன் என்று நினைவு கூர்வதற்கு மந்தைகளிடம் ஏதுமில்லை. நானிலிருந்து விடுபட்டு நாமுக்காக வாழ்வதே வாழ்க்கையின் முழுமையை ஒளியூட்டி உணர்த்துகிறது. இது மதவாதிகள் கூறும் ஆன்ம விடுதலை என்ற சொர்க்கத்தின் இன்பத் திறவுகோலல்ல. சமூகவிடுதலைக்காக தன்னை இழந்து தம்மை மீட்கும் மனிதகுலத்தின் ஆகப்பெரும் கனவு. இந்தக் கனவுக்காக வாழ்ந்தோருக்கு நினைவு கூற எதுவுமில்லை. அவர்கள் விட்டுச்சென்ற நினைவடித்தடங்களைத்தவிர. தங்களை கிடத்தி அவர்கள் சமைத்திருக்கும் அந்த ராஜபாட்டையில் நாம் ஓடிச் சென்று அடுத்த பாதையை செதுக்கவேண்டும். அப்போது நீங்கள் கசடுகளை இழந்து நெருப்பில் நுழைந்து வைரமாய் புடம்போடப்பட்டு ஒளிர்கிறீர்கள். அடுத்த தலைமுறையில் வரும் மனிதர்கள் இந்த இருட்டு குகைகளின் தடையை நம் ஒளியால் கடக்கிறார்கள். பாதையும் முடிவதில்லை. பயணங்களும் சோர்வதில்லை. இருப்பது ஒரே வாழ்வு, தடுப்பதும் தாண்டுவதும் ஒரே முறைதான். வாருங்கள் அந்த நெடிய பயணத்தின் சாகசத்திற்கு உங்களையும் அழைத்துச் செல்கிறோம்.
பின்னொரு நாளில் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.
தமிழகத்தில் இருக்கும் நண்பர்கள் எம்முடன் தொடர்பு கொண்டால் இந்தப் பாதையின் அரசியல் பரிமாணத்தை நேரிலே தெரிந்து கொள்ளலாம். உங்களால் இயன்ற அளவு களப்பணியில் இறங்கலாம்.
இந்த மாபெரும் பணிக்கு உங்களது உதவித் தொகையை தருமவானாக அல்ல, குற்ற உணர்ச்சியுடன் கூடிய கடமை உணர்ச்சியுடன், கிள்ளியல்ல அள்ளி, உங்களால் முடிந்ததை அல்ல உங்களால் முடியாததை, கோவில் உண்டியல் போல அல்ல, குடும்ப பொறுப்பைச் சுமக்கும் இன்பச்சுமையாக நிதி வழங்கலாம். வழங்க வேண்டும். புரட்சிகர அமைப்புகள் தமது அரசியல் பணிக்கு மக்களிடம் வாங்கும் மரபை இங்கே நாங்களும் வைத்திருக்கிறோம். எங்களது அரசியல் பணிக்கு நீங்கள் வழங்கும் ஆதரவில் வினவின் இருப்பும் நலமுடன் வளரும். வினவில் இப்போது நிறைய பார்வையாளர்கள் வந்தாலும் எப்போதும் விளம்பரங்கள் போடுவதாக இல்லை. விளம்பர உலகின் வழி முதலாளிகள் ஊடகங்களை அடக்கியாளும் வழியை நாம் அறிவோம். எமது பத்திரிகைள் கூட இப்படித்தான் பல ஆண்டுகளாய் நடத்தப்படுகின்றன. வினவிலும் கம்யூனிஸ்டுகள் உண்டியலேந்த ஆரம்பித்துவிட்டார்கள் என ‘அவர்கள்’ புரளிபேசலாம். ஆனால் மக்களின் புரட்சிக்கு ஆள்பவர்களிடமும், அரசுகளிடமும் கையேந்த முடியாது. ஏந்தினால் அது எதிர்ப்புரட்சி. மக்களிடம் கேட்பது கம்யூனிஸ்ட்டுகளின் உலக வழிமுறை. ஆதரியுங்கள். அமைப்புத் தோழர்கள், வெளிநாட்டில் இருக்கும் தோழர்கள், பு.க, பு.ஜ வாசகர்கள், ம.க.இ.கவின் அரசியலை அறிந்தவர்கள் அனைவரும் இதை கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து உதவ வேண்டும். வினவிற்கு புதிதாய் வந்தவர்கள் எமது அரசியல் செயல்பாடுகளை சீர்தூக்கி பார்த்து இந்த பணிக்கு கடமையுடன் உதவலாம். உங்களது நிதி உதவி எங்களது பல பிரச்சினைகளைத் தீர்க்கும்.
வினவின் வாசகர்கள் தரும் நன்கொடைக்காகவே தனிச்சிறப்பாக ஒரு வங்கிக் கணக்கு ம.க.இ.க மாநிலப் பொருளாளர் தோழர் சீனிவாசன் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு உலகெங்கிலிருந்தும் அனுப்பலாம். விரைவிலேயே இந்த பணியை இன்னும் எளிமைப்படுத்தி வசதிகள் செய்கிறோம். கணக்கு விவரம்,
SRINIVASAN.R
STATE BANK OF INDIA, CHETPUT BRANCH, CODE NO 1852
A/C NO : 3 0 8 2 6 2 2 5 4 2 4
காசோலை, வரைவோலை அனுப்பவிரும்புவர்கள் SRINIVASAN.R என்ற பெயருக்கு எடுத்து அனுப்பலாம். தபால் முகவரி
SRINIVASAN.R, PUTHIYA KALACHARAM,
NO.16, MULLAI NAGAR SHOPPING COMPLEX,
SECOND AVENUE, ASHOK NAGAR, CHENNAI, 600 083.
PHONE:044- 23718706.
நேரில் தரவிரும்பவர்கள் இந்த முகவரிக்கு வருகை தரலாம். தொலைபேசி மூலம் உறுதி செய்து வினவு தோழர்களையும் இங்கு சந்திக்கலாம்.
நன்கொடை அனுப்பும் நண்பர்கள் அதை தனிமடலிலும் தெரிவிக்குமாறு கோருகிறோம். அனைவருக்கும் ரசீதுகள் மின்னஞ்சலில் அனுப்பப்படும்.
ஏற்கனவே நாங்கள் கோராமலேயே சில நண்பர்கள் மாதந்தோறும் உதவித்தொகை அனுப்பிவருகிறார்கள். அவர்களுக்கு எமது நன்றிகள்.
சரி,
ஒராண்டு அனுபவத்தையும், கோரிக்கையும் எங்கள் தரப்பில் வைத்துவிட்டோம். விடுபட்டதை நீங்கள் எடுத்து தருவீர்கள். ஆனால், வினவு குடும்பத்தின் அங்கத்தினரான உங்களது அனுபவத்தை பின்னூட்டத்தில் தெரிவியிங்கள், அப்படி முடியவில்லை என்றால் அலைபேசியில் சொல்லுங்கள்.
பார்க்கலாம்.
ஓராண்டு முடிந்து விட்டது. அடுத்த ஆண்டு துவக்கத்தை ஒட்டி வரும் திங்களன்று ஒரு சிறப்பு கட்டுரை மைக்கேல் ஜாக்சனைப் பற்றியும் அடுத்த நாட்களில் ஆரம்ப கால வினவில் வாசகர் வரவேற்பு பெற்ற கட்டுரைகளும், ஈழம் குறித்த மூன்று முக்கிய வெளியீடுகளும் வழக்கமான தொடர்களும் வெளியிடப்படும்.
ஒரு வழியாய் வினவின் ஒராண்டு அனுபவத் தொகுப்பை எழுதி முடித்த போது வார்த்தைகள் 2984 காட்டுகிறது.
ஆயினும் காத்துக்கிடக்கும் பணிகளைக் காணும்போது இவை போதாது என்றே தோன்றுகிறது ! சரிதானா?
நட்புடன்
வினவு
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
தொடர்புடைய பதிவு
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் . உங்கள் பணி மேலும் தொடரட்டும்.
சின்ன சந்தேகம். என்பெயருக்குப் பக்கத்தில் அடைப்புக்குள் “நடுநிலையாளர்” என்று போட்டு விட்டீர்களே! என் எண்ணப் போக்கில் ஒரு பக்க சார்பு ஏதேனும் தூக்கலாகத் தெரிகிறதா என்ன?
இல்லை, வித்தகன் ஒரு விசயத்தைப் பார்க்கின்ற கண்ணோட்டத்தில் உள்ள வேறுபாடுகள்தான். உங்கள் நோக்கு எங்களது விசயத்தை விமரிசனம் செய்யும் அளவுக்கு எங்கள் தரப்பில் வலு குறைவாக இருப்பதைத்தான் அப்படி சொல்கிறோம். மற்றபடி தூக்க கலக்கத்தில் எப்படியும் வித்தகன் பெயரை சேர்க்கவேண்டுமென்ற ஆவலில் ஒரு ஃபுளோவில் அந்த அடைப்புக் குறி போடப்பட்டு விட்டது. எங்களை பரிசீலிக்கும் விசயத்தில் உங்களை அப்படி போட்டுவிட்டதற்கு பொறுத்தருள்க !
வினவு
🙂 அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!
வினவு கூட்டுழைப்புக்கு கிடைத்த வெற்றி. மொக்கை பதிவுகள் ஆயிரம் இருக்க கருத்து பதிவுகளையும் தமிழர்கள் விவாதிக்க தயாரகவே உள்ளனர் என்பதை அறியும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தங்களின் சமூகப்பணி தொடர வாழ்த்துக்கள்.
நன்றி தோழர் சுனா பானா,
இந்தத் தோழர் வினவின் ஆறுமாத சாதனைகளை பட்டியலிட்டு அவர் தளத்தில் வாழ்த்தினார். வினவில் ஈழம் குறித்த இடுகைகள் எல்லாவற்றுக்கும் இணைப்பு கொடுத்து ஒரு பதிவிட்டிருந்தார். அது பலருக்கும் பயனுள்ளதாக இருந்தது. மேலும் ஐ.டி துறை நண்பா கட்டுரையை அழககாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எமக்கு அனுப்பியிருந்தார். அவருக்கு எமது வாழ்த்துகள்
வினவு
இங்கே பலருக்கு நன்றி சொல்ல விடுபட்டிருக்கிறது. எல்லா முற்போக்கு வலைத்தளங்களுக்கும் இணைப்பு கொடுத்திருக்கும் தோழர் சூப்பர் லிங்கஸ், தோழ்ரகளின் இடுகைகளைத் தேடிப்பிடித்து தமிழரங்கத்தில் வெளியிடும் தோழர் இரயாகரன், மற்றும் வினவுக்கு தங்களது தளங்களில் இணைப்பு கொடுத்த அத்தனை பேருக்கும் நன்றிகள்.
வினவு
இணையம் மூலம் கருத்துகளை எடுத்துச் செல்வதலில் வினவு, தன் சமூகப் பங்கை விரிவுபடுத்தி வருகின்றது. எமது புரட்சிகர வாழ்த்துகள்.
அன்றாட நிகழ்வுகள் பற்றி உடனுக்குடன் புரட்சிகரமான ஒரு சமூகப் பார்வை எடுத்து செல்வதில், வினவு தளம் மேலும் உயிரோட்டத்துடன் வளர வேண்டும் என்ற ஆதங்கத்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
இலங்கை நெருக்கடியின் போது தமிழனவாதப் போலிகளின் புலி வேஷத்தைத் தகர்த்தது வினவு. மாறாக புரட்சிகர மக்கள் கோசங்களை முன்னிறுத்திய போராட்டங்களை, உலகத்தின் முன் கொண்டு வந்தது வினவு தளம்தான். இந்த வகையில் எம் போராட்டத்துக்கு துணைவனாக, தோழனாக வினவு தளம் எம்முடன் எப்போதும் இருந்ததுஈ இருக்கும். ஈழத் தமிழ் மக்களுக்காக, அவர்களின் உரிமைக்காகவும் வினவு தளம், புலி மற்றும் அரச பாசிசத்தை உறுதியுடன் எதிர்த்து நின்றது.
தமிழக புலி ஈழ ஆதாரவளார்களை எதிர் கொள்வதற்கும், புலிப் பாசிசத்ததை நாம் நேரடியாக எதிர் கொள்வதற்கும் இடையில் உள்ள வேறுபாடு, ஒரே வாசகர் தளத்தில் முரண்பாடாக இருப்பது என்பது எமக்கிடையிலான முரண்பாடல்ல. பாசிசத்ததை எப்படி எந்தத் தளத்தில் வைத்து முறியடிப்பது என்பதில், பாசிட்டுகளையும் அதன் பின் தவறாக நிற்பவர்களையும் வேறுபடுத்தி அனுகும் அனுகுமுறை இங்கு எம் அனைவர் முன்னும் அவசியமானது. உதாரணமாக இந்துவ பார்பானிய பாசிட்டுகளையும், இந்து மக்களை எப்படி வேறுபடுத்துகிறோமோ அப்படி. இங்கு பக்தனாக பக்தியின் பெயரில் இரண்டும் நகமும் சதையுமாக உள்ளது. தமிழனின் பெயரில் மனிதபிமானமாக பாசிசம் உரிமையும் கலந்துள்ளது. இதை வேறுபடுத்தி போராடும் நுட்பத்தை, மேலும் நுட்பமாக நாம் கற்றுக் கொள்ளவேண்டும்.
உலகத்ததை சர்வதேசியத்தின் எல்லைக்குள் ஒரு கிரமமாக்கி, எம்முடன் அதை இணைய வைத்த வினவின் தோழமையும், அதன் புரட்சிகர சிந்தனையும் மேலும் மேலும் தொடர வாழ்த்துகள்.
உங்களின் இந்த ஆக்கபூர்வமான பணி சிறக்க வாழ்த்துக்கள். உங்களிடம் ஒரு வேண்டுகோள், வினவிலே உடனுக்குடன் கட்டுரை எழுதும் நீங்கள் புதிய கலாச்சாரம் இதழையும் மாதந்தோரும் வெளியிட்டால் ந்ன்றாக இருக்கும்.
தோழர் neri ,
நாங்களே பு.க, பு.:ஜவில் உள்ள கட்டுரைகளை பாதி நாட்கள் வெளியிட்டு வருகிறோம். இதில் நாங்களெல்லாம் பு.கவில் எழுதும் அளவிற்கு இன்னும் வளரவில்லையே தோழர். எனினும் வினவின் சில கட்டுரைகள் பு.கவில் வந்துள்ளன. எங்களால் முடிந்த ஆதரவை பு.கவிற்கு அளிப்போம்.
வினவு
நன்றி தோழர் இரயாகரன், உங்கள் தோழமையும், அரவணைப்பும் எங்களை எப்போதும் உற்சாகப்படுத்தும்.
வினவு
வினவு குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
என்னை அண்ணன் என்று சொல்லி என் வயதை குத்தி காட்டுகிறீர்களே! 🙂
அதற்குத்தான் ஆர்.வி நீங்களும் தோழர் என்று ஆகிவிடுங்கள் என்று மல்லுக்கட்டுகிறோம். தோழர் ஆர்.வி என ஆகிவிட்டால் அப்புறம் என்ன, எப்போதும் இளமைதான்!
வினவு
வினவு தளத்துக்கு வாழ்த்துகள் – ஒரு பதிவு.
http://koottanchoru.wordpress.com/2009/07/18/வினவு-தளம்/
ஆர்.வி, உங்க விமர்சனம் படிச்சேன், சில விசயங்களை தப்பா புரிஞ்சுகிட்டு எழுதியிருக்கீங்க, இருந்தாலும் நல்ல விமர்சனம். ஆனாலும் தொடர்ந்து வினவுல நீங்க விவாதம் செய்யனும்
வினவு, ஆர்வியோட கருத்த 2ம் வருட இறுதிக்குள்ளார மாத்திடிங்கன்னா அது ஒரு சாதனை
இருவருக்கும் வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி தோழர்,
நெருப்பில் நடந்துகொண்டே நீரை சுமப்பது போலத்தான் இணையத்தில் புரட்சிகர , நடுநிலை அரசியலை பேசுவது. வெல்வதற்கு இமயம் இருக்கும் போது லோக்கல் கரடுகளெல்லாம் ஒரு பொருட்டாகவே இருக்காது. உண்மையில் இது ஒராண்டு நிறைவுக்கான மகிழ்ச்சி பதிப்பு என்பதை விட அதிகமாகவே தலை குனிய வைக்கிறது எங்களை என்ன செய்தாய் மக்களுக்கு? பதில் சொல்ல முடியவில்லை கண்டிப்பாய் காலம் பதில் சொல்லும். மக்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மாபெரும் தோழர்களுக்கு வீர வணக்கம்.
என்ன பண்றது?
ஒவ்வொரு முறையிலும்
பதில்களுக்காய் என் கேள்விகள்
ஆனால் கேள்விகளே உன்னிலிருந்து
பதில்களாய்……
வறுமையில் உழலும் விவசாயி
வேலையிழ்ந்த தொழிலாளி
பாலின் சுரப்பை நிறுத்திய
மார்பகங்கள் அரைக்க
மறந்த இரைப்பைகள்
அடங்கிப்போன கூக்
குரல்கள் எல்லாவற்றுக்கும்
பதில் சொல்கின்றாய் “என்ன பண்றது?”
போதைதலைக்கேறாது கண்டதையும்
குடித்து புரள்கின்றன
மெத்தைகள்….
தெரியும் இடத்திலெல்லாம்
மாட்டிக்கொண்டு திரிகிறார்கள்
இலவசமாய்
துரோகத்தனத்தையும் சேர்த்து…..
எல்லாவற்றுக்கும் ரெடிமேடாய்
பதில் சொல்கிறாய் “அதுக்கு
என்னபண்றது?”,முதல்ல
நம்ம வாழ்க்கையை பார்க்கணும்…..
சரி பார்க்கலாம் உன்
வாழ்க்கயை காலை முதல்
மாலை வரை ஒவ்வொரு நொடியும்
நீ விலை பேசப்படுகிறாயா இல்லையா?
உலகமயம் ஆணையிட்டப்படி
நுகர் பொருட்களால்
நுகரப்படுகின்றாயா இல்லையா?
நீ உண்ணும் உணவை
உடுத்தும் ஆடையை,
ஆபரணங்களை நெஞ்சில்
கை வைத்துசொல் உனக்காகத்தான்
மேற்கொள்கின்றாயா? இப்போதும்
மவுனமாய் உதிர்க்கின்றாய் “என்னபண்றது?”
நான் மவுனமாய் அல்ல
உரக்கச்சொல்லுவேன்
உன் “என்னபண்றது” என்பது
தான் உன் பதில்
தப்பித்தவறி எதுவுமே
உனக்கு செய்து விடக்கூடாது
என்பதில் பிறந்த
பதில் அது…..
தரகர்களின் சூறையாடலில்
சிக்கி திணறுகின்றது உன்
தேவைகள்
நாளை கூட
நாளையென்ன நாளை
இக்கணமே கூட நீ
எறியப்படலாம் சக்கையாய்……
இப்பொழுதாவது உண்மையாய்
கேள் ” என்ன பண்றது?”
இருக்கின்றது அது தான்
போர்
உனக்கான , நமக்கான
வாழ்வை
தேர்ந்தெடுக்க
நாமே போராளியாவோம்.
இனியும் புலம்பிக்கொண்டிராதே
“என்னபண்றது”என்று அது
அடிமைகளின் ஆசை மொழி.
சுமார் ஆறு மாதத்துக்கு முன்னே கலகத்தில் வெளியிட்ட வினவு கட்டுரையிலிருந்து சில பகுதிகள்
கேள்விக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இங்கு இல்லை என்பது தான் உண்மை.ஆனால் கேள்வி கேட்கவே கூடாத பல புனிதங்கள் வரிசையாய் நிற்கின்றன.அவற்றை வெட்டி வீழ்த்தாது மக்களுக்கு கண்டிப்பாய் விடுதலை இல்லை.புனிதங்களுக்கு கல்லறை கட்டும் வேலையை செய்யும் வினவை கண்டிப்பாய் பாராட்டித்தான் ஆக வேண்டும்,பொழுதுபோக்கென கூறி புரளிகளையும் புரட்டுகளையும் பேசும் இந்த வலைஉலகில் வலைக்கு வெளியே பரந்து பட்ட மக்கள் உலகம் இருகின்றது அது இன்னமும் அடிமையாயிருக்கின்றது,அந்த அடிமை விலங்கை உடைக்க போராடி நம்மையும் அப்போர்க்களத்திற்கு அழைத்து செல்லும் வினவின் பதிவுகள் தொடர வேண்டும்.மீண்டும் சொல்வோம் இது மகிச்சிகரமான விசயமே ஏனெனில் மகிச்சி என்பது போராட்டம் தானே.
மன்னிக்கவும் மறுமொழி சற்று பெரிதாகிவிட்டது
வினவின் ஆரம்ப காலம் முதல் எல்லா இடுகைகளுக்கும் வந்து பின்னூட்டமிடுவது, விவாதிப்பது என்று சுறுசுறுப்பாய் இருக்கும் தோழர் கலகத்தைப் போன்று மற்ற தோழர்களும் இயங்கினால் எப்படி இருக்கும்?
வினவு
உங்கள் தளத்தை பற்றி அல்லது உங்கள் எழுத்துகள் பற்றி சொல்ல இதைவிட சிறந்த வார்த்தைகள் எங்களுக்கு கிடைக்கவில்லை என்பதால் ….
//இந்த ஆசாமிகள் தங்கள் கருத்தியல் எதிரிகளிடமும் தங்களுக்குள்ளேயும் ‘ விவாதிக்க ‘ பயன்படுத்தும் வசைகள் [இதற்கு புதிய கலாச்சாரம் கேடயம் முதல் ஒரு பெரிய மரபு உண்டு] குறித்து யாராவது சமூகவியல் ஆராய்ச்சி செய்தால் இவர்களை மேலும் நுட்பமாக புரிந்துகொள்ள முடியும். பெரும்பாலும் அடக்கப்பட்ட பாலுணர்வின் திரிபுநிலைகள் அவை. தஞ்சைப்பகுதி நிலவுடைமைச் சமூகத்தின் உருவாக்கங்கள். பத்துவருடங்கள் முன்புவரை நொண்டி, அலி, பொட்டை என்ற வசைகளை இவர்கள் ஒவ்வொரு எழுத்திலும் காண முடியும். இதோ விளக்குபிடித்தல், மாமா வேலை. [ஏன் தோழர் , பாலியல்தொழிலாளியும் ஒரு பாதிக்கபப்ட்டவர்தானே? விளக்குபிடிப்பவனும் ஒரு அப்பாவி தொழிலாளிதானே? அவனுக்கு உங்கள் புரட்சி உதவாதா? அந்த ‘பொலிடிகல் கரெக்ட் நெஸுக்கு எப்போது வருவீர்கள்?]
சென்ற முப்பது வருடங்களில் இவர்கள் எழுதித்தள்ளிய வசைக்குவியல்கள் தமிழ் பண்பாட்டுத்தளத்தில் உருவான பெரும் குப்பைமேடு. பலவகையான உளவியல் உள்ளோட்டங்கள் கொண்டவை அவை. ஒரு பெரும் சமூகவியல் பகுப்பாய்வுக்குரிய கச்சாப்பொருட்கள்.//
ஜெமோ உங்களை போன்ற இன்னொருவருக்கு எழுதியது உங்களுக்கும் அப்படியே பொருந்துவதால் காப்பி பேஸ்ட்
மேலும் படித்து இன்புற http://jeyamohan.in/?p=544
மதி-இண்டியா
(படிக்காமல் தாண்டிப்போகும் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவது நேரவிரையம் என்றாலும் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்தால் உங்கள் நோய சரியாகலாம் அல்லது அதிகரிக்கலாம் எனல்தால்)
மதி இண்டியா மறக்காமல் உங்கள் கடவுளுக்கு மணியாட்டி, பின்னூட்ட அபிஷேகம் செய்திருக்கும் பக்தியை பார்க்கும் போது ஜேயேந்திர சரஸ்வதிக்கு பாத பூஜை செய்யும் பாலபெரியவாள் தோற்றார் போங்கள், அபாரம். ஆனாலும் நண்பரே உங்கள் சுய இன்ப மேதை பகவான் ஏதோ ஒரு கதையில் மனுஷ்ய புத்திரனை ஏதோ முடமான விலங்கொன்றின் பெயரில் விளித்தாராமே, இத்தகைய பாரத நாடே வியக்கும் வீரமெல்லாம் எம்மிடம் இல்லையே பண்டிதரே, அந்த வகையில் நாங்களெல்லாம் பச்சைப் பிள்ளைகள். எங்களைப் போய் இப்படி……
வினவு
தகவலுக்காக : ஜெயமோகன் ஆசிரியராக இருந்த பத்திரிகையில் வந்தது அது – ஆனால் ஜெமோ அதை எழுதவில்லை.
ஆமாம் சுந்தர் நீங்கள் எழுதியதும்தான் நினைவுக்கு வருகிறது.
// “ஆனாலும் நண்பரே உங்கள் சுய இன்ப மேதை பகவான் ஏதோ ஒரு கதையில் மனுஷ்ய புத்திரனை ஏதோ முடமான விலங்கொன்றின் பெயரில் ஆள் வைத்து எழுதி விளித்தாராமே” // இப்படி திருத்திவிட்டால் சரிதானே?
இன்று மட்டும் பின்னூட்டமிடும் எல்லோருக்கும் நன்றியும் பதிலும் அளிக்கிறோம். இப்படி வருடத்திற்கு ஒரு தடவைதான் செய்ய முடியும், இருக்கட்டும். இன்னும் எங்கள் தலைவர் தோழர் அசுரனைக் காணோம்? இன்று மட்டும் தலைவர் கம்பீரமாக அந்தப் பெயரிலேயே வருவாரா?
வினவு
வாழ்த்துகள். என் தவறு புரிகிறது, விரைவில் சரிசெய்ய முயல்கிறேன்
நன்றி டாக்டர், உங்கள் தொடருக்காக ஏராளமானோர் காத்திருக்கிறார்கள்.
வினவு
நாட்டில் மொள்ளமாரி, முடிச்சவுக்கி, பொறம்போக்கு, ரவுடி, மக்கள்ப் பணத்தை தின்று தீர்ப்பவன் என எல்லோரும் பிறந்தநாள் கொண்டாடும்பொழுது, மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்தின் ஒளியில் உலக விசயங்களை சமரசமில்லாமல் எழுதும் வினவு-க்கு பிறந்த நாள் தாராளமாய் கொண்டாடலாம்.
பதிவுலகம் பற்றி ஒன்றுமறியாத காலத்தில், ஏதோ ஒன்றைப் பற்றி தேடும் பொழுது, பதிவுலகம் அறிமுகமானது. அதற்கு பிறகு பல பதிவர்கள் எழுதியதை படித்த பொழுது, பெரும்பாலும் மொக்கையாக இருந்தது. பொறுத்து, பொறுத்து ஒரு சமயத்தில் வெறுத்துப்போய் தான் “வலையுலகமும் நொந்தகுமாரனும்” என்ற பெயரில் வலைத்தளமே தொடங்கினேன். பல மொக்கைப் பதிவர்களை, பதிவுகளை கலாய்த்தும் பின்னூட்டங்கள் இட்டுக்கொண்டிருந்தேன். எழுதிப் பழக்கமில்லையென்றாலும், நானே சொந்தமாய் சமூக விசயங்கள் குறித்து எழுத துவங்கினேன்.
இந்த நாட்களில் தான் ‘வினவு’ அறிமுகமானது. துவக்க கட்டுரைகளைப் படித்த பொழுது, வலைத்தளம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன். வேலை நிலைமைகள் என்னதான் வாட்டியெடுத்தாலும், வினவு தளத்தை தவறாமல் வாசித்து வருகிறேன். பின்னூட்டங்களும் இடுகிறேன். என்ன ஒரு வருத்தம்! நேரமின்மையால் விவாதங்களில் பங்கு கொள்ள முடியவில்லை.
என்வாழ்வில் சிந்தனையோட்டத்தையும், நடைமுறை வாழ்வையும் மாற்றியமைத்ததில் வினவின் பங்கு அதிகம். சமூக தளத்தில் வினவின் பங்கு, நீங்கள் நினைப்பதைக்காட்டிலும் அதிகம். தன் பாதையில் சற்றும் தளராமல் பயணிக்க வாழ்த்துக்கள்.
சில ஆலோசனைகள் :
வினவு-ல் துவக்க காலங்களில் பண்பாட்டுத் தளத்தில் நிறைய கட்டுரைகள் வெளிவந்து, நிறைய வரவேற்பு பெற்றது. தொடர வேண்டும்
மருத்துவர் ருத்ரன் துவங்கிய தொடரை வெற்றிகரமாக தொடர வேண்டும். மருத்துவர் ருத்ரன் போன்ற பல துறை சார்ந்த பதிவர்கள் தனித்தனியாக எழுதுகிறார்கள். அவர்களையும் எழுத வைக்க வினவு முயற்சிக்க வேண்டும்.
ஊர் கூடி தேர் இழுப்போம். சமூக மாற்றம் நிச்சயம் வரும்.
வளர்ச்சிப் பணிகளுக்காக, நண்பர்களிடம் நன்கொடை கேட்டு வாங்கித்தர முயல்கிறேன்.
மீண்டும் வாழ்த்துக்களுடன்,
சந்தோச குமரன். (இந்த பதிவுக்கு மட்டும்)
தோழர் நொந்தகுமாரன்,
வினவின் வளர்ச்சியோடு ஒரு தோழர் உருவாகியிருக்கிறார் என்பதை விட இந்த முதலாமாண்டின் நிறைவுக்கு முத்திரை ஏது? உங்கள் ஆலோசனைகளை நிச்சயம் செயல்படுத்துவோம். நன்றி
வினவு
நொந்தகுமாரன்,
/“வலையுலகமும் நொந்தகுமாரனும்” என்ற பெயரில் வலைத்தளமே தொடங்கினேன்.//
முடிந்தால் உங்கள் வலைப்பதிவின் முகவரியை கொடுங்கள். நானும் வந்து கொஞ்சம் கலாய்க்கிறேன்.
ரதி அவர்களுக்கு,
தங்கள் வரவு நல்வரவாகட்டும்!
நொந்தகுமாரன்.
http://nondhakumar.blogspot.com
வினவு….
தட்டுங்கள் திறக்கப்படும் என்பதை மதரீதியாக எடுத்துக்கொள்ளாமல் அந்த வார்த்தையின் நிதர்சனத்தை உணர்ந்தோமானால் இங்கே தட்டாமல் திறக்கப்படுவது எவையுமில்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
அது போலவே “வினவு” என்பதையும் வினவினால் தான் பதில் கிடைக்கும்….வாய்மூடி காத்துக்கிடந்தால் எதுவுமே நடக்கப் போவதில்லை…..! இப்படியாக வினவு வலைப்பூவின் தலைப்பிலிருந்தே ஆரம்பிக்கிறது எனது வாசித்தல் அனுபவம்!!!
வினவு எழுதத் தொடங்கியதிலிருந்தே நல்ல பரிச்சயம் உண்டு………நிறைய விமர்சனங்கள்….நிறைய மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் ஒரு வாசகனாகவே வினவின் பயணத்தில் நானும் இணைந்து வந்திருக்கிறேன்…..நிறைய பதிவுகள் நிறைய கருத்துக்களையும் , வார / மாதப் பத்திரிக்கைகளுக்கே உரித்தான நேர்த்தியுடன் வரும் கருத்துப்படங்களும் வெகுவான கவர்ந்தவை.
ஆயிரம் வேலைகளுக்கு நடுவே பிழைப்பினை பார்த்துக்கொண்டு வீட்டேத்தியாக வாழ்க்கையை நடாத்திக்கொண்டிருக்கும் பலருக்கு நடுவே புதியதொரு பாதையில் நாட்டைச் செலுத்திட நினைக்கும் இளைஞர்கள் வெகுவாகப் பாராட்டத் தக்கவர்கள்….!
அந்தப் பாதையில் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் , அந்தப் பணி பாராட்டத்தக்கது…மாற்றத்திற்காக உழைக்கும் அவர்களது முயற்சி பாராட்டத்தக்கது..அவர்களின் அர்ப்பணிப்பு போற்றத் தக்கது…
அவ்வகையில் அவர்கள் பிரசவித்த இணையக் குழந்தையின் முதலாவது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களையும் , தெரிவான சமூகப்பார்வைகளுக்கான பாராட்டையும் தெரிவிக்கிறோம்!!!
மக்கள் கலை இலக்கியக் கழகமோ , மாவோயிஸ்ட் புரட்சியாளர்களோ மக்களோடு அந்நியப்படாமல் மக்களின் உணர்வுகளை பொதுவில் வைத்து மக்கள் இயக்கமாக முன்னேற வாழ்த்துக்கள்….!!!!!
நன்றி
தோழமையுடன்
மதிபாலா.
நன்றி மதிபாலா, மக்களுடன் இணைந்திருப்பதால்தானே வினவின் பங்களிப்பு? மற்றபடி உங்கள் விமரிசனங்களை முழுதாக அறிய விரும்புகிறோம். இன்று வாழ்த்துதல் மட்டுமல்ல, எங்களைப் பற்றிய விமரிசனங்கள்தான் முக்கியம்.
வினவு
கண்டிப்பாக வைக்கிறேன் நண்பரே…
பணிச் சுமையால் இப்போது இணையம் வருவதே குறைந்து விட்டது….பதிவே போடாமல் இருந்து விட்டால் எப்படி என்பதற்காக மீள்பதிவுகளாகவும் , நாலு பத்தி பதிவுகளாகவும் வாரம் ஒருமுறை / இருமுறை போட்டு சமாளிக்கிறேன்…
இப்போது அந்த விவாதத்தை ஆரம்பிப்போமானால் என்னால் அடிக்கடி நேரம் செலவிட இயலாது. அனேகமாக ஆகஸ்டு முதல் அல்லது இரண்டாவது வாரம் அந்த விவாதக் களத்தில் சந்திப்போம்!
நன்றி…
இது சும்மா…
இது பின்னூட்டாங்களை மின்னஞ்சலில் பெறுவதற்காக…!
வன்னி முகாம் மக்களுக்கு உதவ முன்வருபவர்களுக்கு ஆப்படிக்கும் காரைநகர் நலன்புரிச் சங்கம்!!! : த ஜெயபாலன்
≡ Category: புலம்பெயர் வாழ்வியல், ஜெயபாலன் த, ::சாதியம், லண்டன் குரல் | ≅
‘கண்ட கண்ட ஆட்களையும் எங்களின் வீடுகளில் இருத்தவோ?’
http://thesamnet.co.uk/?p=13955
இணையத்தில் வினவு தோழர்களின் பணி தொடரட்டும்… சினிமாவும், தொலைக்காட்சியும், கொடுப்பதை விட கேடுப்பதையே அதிகம் செய்கின்றன… இணையத்திலும், இதழ்களிலும் நடுநிலை செய்திகளை உலகின் பல்வேறு மூளைகளுக்கு / மூலைகளுக்கு எடுத்து செல்வோம்.. தோழர் இராயகரனின் தளத்தில் மேற்கோளை இங்கு நினவு கூற விரும்புகிறேன்.. “கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அது மாபெரும் சக்தியாக உருவெடுக்கும்”
உழைக்கும் மக்களை கருத்தால், செயலால் வெல்வோம், ஒன்றிணைப்போம்…
நன்றி தோழர் பகத்,
ஆரம்ப மாதங்களில் எல்லா விவாதங்களிலும் இருப்பீர்கள், இடையில் காணோம், வேலைப் பளுவா?
வினவு
பொருளாதார நெருக்கடியில் வேலைப்பளு கூடியிருப்பது உண்மை… மீண்டும் விவாதங்களில் பங்கு பெற முயற்சிக்கிறேன்… நன்றி தோழர்களே.
வினவு தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.. புரட்சிகர இணைய பயனம் மேலும் தொடரட்டும்..
முன்பொரு காலமிருந்தது.. தமிழ் இணையம் / வலைப்பூக்கள் என்பதே மடிசார் மாமிகள் ஊறுகாய் தொக்கு செய்முறையை சிலாகித்துக் கொள்வதற்கும் – குடுமி மாமாக்கள் துக்ளக் பாணியில் அரசியல் ‘விவாதித்துக்’ கொள்ளும் இடமாகவும் இருந்தது.. பின்னர் முற்போக்கு அரசியலை ‘நாகரீகமான’ மொழியில் முனகிக் கொண்டிருந்த கூட்டம் உருவானது. இந்தக் கூட்டம் மிக லேசாக திராவிட அரசியலைப் பேசியதையே பொறுத்துக் கொள்ள இயலாமல் முகம் சுழித்துக் கொண்டனர் குடுமிகள்..
இந்த காலத்தில் தான் அசுரன் வந்தார்… பச்சை மிளகாயை நறுக்கென்று கடித்தது போல சொரணையே இல்லாத கும்பலுக்கும் சுளீர் என்று உறைக்கும் பதிவுகளை இட்டு பலருக்கும் மார்க்சிய லெனினிய அரசியலை இங்கும் எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார்… பின்னர் பல தோழர்கள் அந்தப் பணியில் இனைந்து கொண்டது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
வினவு தளம் அசுரனின் பதிவுகளின் அடுத்த கட்ட பரிமாணமாகவே பார்க்கிறேன்… அவரிடம் இருந்த சுள்ளென்ற கோபமோ, இந்துத்துவவாதிகளிடமும் போலிகளிடம் அவர் காட்டிய கடும் சொற் பிரயோகமோ இப்போது அனேகமாக தேவையில்லாத ஒரு சூழலுக்கும் வலையுலகம் மாறி விட்டிருக்கிறது ( அவரே நேரடியான ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களை சும்மா சுத்தி சுத்தி அடிச்சி வெரட்டியதெல்லாம் இப்போது படிக்க படு சுவாரசியமாக இருக்கும் – மறக்கமுடியுமா அரவிந்தன் நீலகண்டன் / ஜடாயு / ரவிஸ்ரீனிவாஸ் VS அசுரன் சண்டைகளை? ) கருத்துக்களத்தில் அப்போது அனல் பறந்ததை இப்போதும் மறக்க முடியாது… குறிப்பாக அரவிந்தன் நீலகண்டன் ஜடாயு கும்பல் அடிவாங்கிப் புலம்பியதைப் படித்தால் புரியும்…
ஆனால் இப்போதும் அந்த விதமான பாணி சிலருக்குத் தேவைப் படத்தான் செய்கிறது.. சிலரின் எருமைத் தோல் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினாலும் கூட உறைக்காது – நான் நமது போலிகளின் இனைய கோமாளிகளைத் தான் குறிப்பிடுகிறேன்… அசுரன் கொஞ்சம் இவர்களுக்கு கொஞ்சம் சிறப்பு கவனம் கொடுத்தால் நன்றாக இருக்கும்..
அவர் எழுதுவதைக் குறைத்துக் கொண்டது ஏன் என்று தான் தெரியவில்லை..
சின்னதாக உருவான ஆறு, காட்டாறாக மாறிப் பின் நின்று நிதானமாய் எல்லாவற்றையும் உள்வாங்கி அரவனைத்து ஓடும் கட்டம் இது என்று நினைக்கிறேன்… படித்த இணையப்பயன்பாடுகள் அறித்தவர்களிடையே வினவு தளமும் அது தாங்கி வரும் கருத்துக்களும் பெரும் ஆதரவு பெற்றிருக்கிறது – ஒரு உதாரணம், தேர்தல் சமயத்தில் வெளியான கட்டுரைகளை ஒரு நெருங்கிய நன்பனுக்கு பரிந்துரைக்க, படித்து இம்ப்ரெஸ் ஆன அவன் தனது மற்ற நன்பர்களை அழைத்துக் கொண்டு தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு அலுவலகம் சென்று 49-O பார்மை சண்டை போட்டு வாங்கிப் பூர்த்தி செய்து கொடுத்து வந்தான்…
இப்படி வினவு தளத்தின் கட்டுரைகள் கருத்துக்கள் வெறும் கருத்துக்களாகவே தங்கிவிடாமல் ஒரு பௌதிக வடிவம் பெறுவது மிக முக்கியம்.. அந்தப் பணியும் நீங்கள் அறிந்தோ அறியாமலோ நடந்து வருவதாகவே உணர்கிறேன்…
ஜே.பி.ஆர் கல்லூரியில் அநியாயங்களுக்கு எதிராக போராட சங்கம் அமைத்த தோழர்கள் வேலையிழந்த செய்தியை படித்த செந்தழல் ரவியின் பின்னூட்டத்தையும் அதற்கு உங்கள் பதிலையும் நினைவூட்டுகிறேன்..
மேலும் மேலும் இந்தப் பணி ஆக்கப்பூர்வமான அடுத்த கட்டம் நோக்கி நகர வாழ்த்துக்கள்..
நன்றி தோழர் ஆர்.கே,
வினவின் வீச்சுக்களை அறிய தந்தமைக்காகவும், வாழ்த்துக்களுக்கும். அசுரனை எப்படியாவது மீண்டும் செயல்பட வைப்போம். தலைவர் தயாரானால் தொண்டர்கள் வீறு கொண்டு எழுவார்கள்!
வினவு
//அசுரனை எப்படியாவது மீண்டும் செயல்பட வைப்போம். தலைவர் தயாரானால் //
அண்மையில் லால் கர் குறித்து கூட எழுதியிருந்தார் .அவ்வப்போது அசுரன் எழுதிக்கொண்டுதானிருக்கிறார். “செயல்பட” என்பதை விட எப்படியாவது தலைமையேற்க என்றால் நன்றாக இருக்கும்.
இந்திய மீடியாக்களின் கயமைத் தனம், கல்வியை அணைத்து நிலைகளிலும் ஒரே மாதிரியாக நாடு முழுவதும் கொண்டுவருதல், பெண்களுக்கு இட ஒதுக்கீடு, மாயாவதி சிலை பிரச்சனை ! இது போன்ற பல பிரச்சனைகளை தீர விவாதிக்க ஏற்றவாறு கட்டுரைகளை எழுதவும் ! மனம் வருந்துகிறது பல நேரங்களில் ! மைகேல் ஜாக்சன் க்கு கதறும் இந்த உலகம் இலங்கை மக்களுக்காக ஒரு விநாடி கூட சிந்திக்க வில்லை ! சினிமா நட்சத்திரங்களுக்கு (mohan lal)லேபிடினட் கர்னல் அளிக்கும் பொது அணைத்து உயர் அதிகாரிகளும் அங்கு கூடி விரைப்பாக சல்யுட் அடிக்கிறார்கள் ! பாவம் என் மீனவனை அங்கு சிங்கள ராணுவம் சுடுகிறது! என்ன செய்கிறது இந்திய கடற் படை ! இந்திய என்ன பணக்காரர்களுக்கு மட்டுமா ! மனது கொதிக்கிறது !
தன்னை சுற்றி சுய சிந்தனை மிகுந்த இளைஞர்கள் பலர் இருக்க, பொது சிந்தனை மனதில் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்த வேளையில், நான் வினவை படிக்க ஆரம்பித்தேன். வினவு மென்மேலும் வளர வாழ்த்துகள்.
ஆனாலும் தோழி உங்கள் வாழ்த்துக்களைவிட உங்களிடம் இழையோடும் ஒரு சோகம் வருந்த வைக்கிறதே! இந்த உலகில் எந்தப் பிரச்சினையானாலும் இரண்டிலொன்று பார்க்கலாம், கவலையை விடுங்கள்.
வினவு
வாழ்த்துகள் வினவு
வினவு தோழர்களுக்கு, புரட்சிகர இணைய பயனம் மென் மேலும் தொடர வாழ்த்துக்கள்….
உங்களிடமிருந்து என்னை போல வரும் புதிய தோழர்கள் கற்று கொள்ள நிறைய இருக்கிறது. உங்களுடைய எழுத்து நடை, அரசியல் வீச்சு, எதிகருத்தாளர்களை கையாளும் திறமை, மற்றும் பல…..
வினவு, அன்றாட நிகழ்வுகளை மார்க்சிய-லெனினிய அடிப்படையில் பார்க்க கற்றுக்கொடுக்கிறது.
////வினவின் ஆரம்ப காலம் முதல் எல்லா இடுகைகளுக்கும் வந்து பின்னூட்டமிடுவது, விவாதிப்பது என்று சுறுசுறுப்பாய் இருக்கும் தோழர் கலகத்தைப் போன்று மற்ற தோழர்களும் இயங்கினால் எப்படி இருக்கும்?
-வினவு/////
நான் இன்னும் கற்றுக்கொண்டிருப்பதால், இதுவரை விவாதங்களில் பங்கு பெறவில்லை… கூடிய விரைவில் தயக்கங்களையும், தவறுகளையும் களைந்து விவாதத்தில் பங்கு பெற முயற்சிக்கிறேன்.
வினவை இன்னும் பலரிடம் அறிமுகம் செய்ய / கொண்டு போய் சேர்க்கவேண்டியுள்ளது. மற்ற தோழர்கள் இதையும் ஒரு பணியாக செய்ய வேண்டும்.
மீண்டும் புரச்சிகர வாழ்த்துகளுடன்,
பாவெல்.
தோழர் வினவு அவர்களுக்கு வணக்கம்.
பெரியார் அவர்களின் எண்ணமும் தொண்டும் இப்போது ‘வினவு’ வடிவில் தொடர்கிறது. ஈழம் பற்றி மேலும் சில ஆழமான கட்டுரைகளை எழுதுங்கள். உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
செந்தில்.
வினவு தோழர்கள் மற்றும் வாசகர்களுக்கு வாழ்த்துக்களும்! நன்றிகளும்!!
இருந்தாலும் பனிப்பொழிவு கொஞ்சம் ஓவர் 🙂
வித விதமான பிரச்னைகள்…
வித விதமான மனிதர்கள்…
வித விதமான விமர்சனங்கள்…
ஏச்சுக்கள்…
பரிகாசங்கள்…
பாராட்டுக்கள்…
திட்டுகள்…
வினவு ஒரு வித்யாசமான உலகம்.
உங்கள் கட்டுரைகளில் உள்ள விஷயங்களுக்காக நீங்கள் எடுக்கும் சிரத்தை புரிகிறது. ஆனால் சாதி வேறுபாடுகள் சமுதாயத்தில் இருப்பதை விட மிக அதிகமாக பல தமிழ் தளங்களில் நான் காண்கிறேன்.
இது எதிர்காலத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்துமோ என்றும் கவலை கொள்கிறேன்.
எவ்வாறாயினும் உங்கள் சமுதாய கட்டுரைகள் நிச்சயம் நல்ல விளைவுகளை ஏற்ப்படுத்தும் என்பது என் எதிர்பார்ப்பு.
வாழ்க வினவு…
வளர்க உம் பணி…
நன்றி கிரி,
பாவெல் விவாதங்களில் பங்கு பெறுவதே கற்றுக் கொள்வதின் அங்கம்தான், கலந்து கொள்ளுங்கள், நன்றி.
நன்றி செந்தில், தொடர்ந்து ஈழம் குறித்து எழுதுவோம்.
அரடிக்கெட்டு பனிப்பொழிவு டவுணில்தான் விழுகிறது, மேலே ஓவரில் போகவில்லை, நன்றி.
என்வழி தனி வழி, வினவு வித்யாசமான உலகம் மட்டுமல்ல சமூகத்திற்கு தேவையான ஆரோக்கியமான உலகமும் கூட. சாதி ஆதிக்கத்தை இல்லாமல் செய்ய இன்னும் போராடுவோம், நன்றி
வினவு
இந்த ஒரு பதிவே சொல்லிவிடுமே ? வினவு தோழர்களின் அயராத உழைப்பை…!!!
இந்த பதிவை குறித்தான எண்ணங்களை தனி மொக்கையாக எழுதினால் தான் தாகம் அடக்கும்போலிருக்கிறதே ?
தளத்தில் கடந்த ஓராண்டை நினைத்துப் பார்த்தால்… பல நல்ல நினைவுகள், விவாதங்கள் வந்து போகிறது. வினவு தளம் மென்மேலும் சிறப்பாய் செயல்பட வாழ்த்துக்கள்.
வினவுக்கு வாழ்த்துகள்!!!
கடந்த ஒரு வருடமாக எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல், கூரிய அவதானிப்போடு வெகுஜன கலாச்சாரம்/அரசியலை நேர்மையாகவும்/கறாராக விமர்சித்தது பாராட்டுதலுக்குறியது. மேலும் களப்பணியாக தில்லை கோவில் விடயத்தில் தீவிரமாக ஈடுபட்டு, அங்கு ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவந்தது ஒரு உன்னதமான செயல். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தோழ்ர்களுக்கும் என் வாழ்த்துகள்!! உங்களின் சட்டக்கல்லூரி மோதல் கட்டுரையில் பல புதிய கோணங்களை சுட்டிக்காட்டியது சிறப்பானது. மேலும் இன்னும் வீர்யமாக கல்லூரிகள்/தனியார் மருத்துவமனைகள் இதற்கு பின்னால் இருக்கும் பினாமி அரசியல்வாதிகள்/சாமியார்கள் இவர்களை பற்றி ஒரு களப்பணி ஆற்றி ஒரு விழிப்புண்ர்வு கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோளாக வைக்கிறேன்.
வாழ்த்துகள் வினவு
வாருங்கள் ரவி, பிஞ்சு செந்தழலிக்கும் ஒரு வயது முடிந்திருக்குமே, நலமா?
நன்றி விக்ரமாதித்யன்!
உங்கள் ஆலோசனைகளை நிறைவேற்ற முயல்கிறோம், ஓல்டு மாங்க்!
நன்றி, அன்பரசு!
நான் மணி…
வாழ்த்துக்களைச் சொல்ல முடியாத சுயபரிசீலனையால் மனம் விம்முகிறது. ஓராண்டு நிறைவு என்பதை எப்படி பார்ப்பது என்ற எண்ணம் தலைதூக்குகையில் வினவின் விவாதங்களை நான் வேலை செய்யும் நிறுவனத்தின் ஊழியர்களிடம் எந்த அளவு கொண்டு சென்று உள்ளேன் என நினைக்கும்போது குற்ற உணர்வால் மனம் குன்றிப் போகின்றது. அதற்கு சோம்பல், கவனமின்மை .. என பல காரணங்களை சல்லிக் கொள்ளலாம்.
ஆனால் நான் வாங்கும் மாதச் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை கடனாகப் பெற்று அதனை செலுத்த முடியாமல் தற்கொலைக்கு தள்ளப்பட்டு, அந்த தற்கொலைக்கு இன்னார்தான் காரணம் என்பதைக் கூட தெரிந்து கொள்ள முடியாத தகவல் அறியும் உரிமை உடைய இந்த நாட்டின் விதர்பா விவசாயிகளின் நிலைமையில் வைத்து அந்த சோம்பல், கவனமின்மை, மந்தம், வேலைப்பளு, குடும்ப கவலை எனப்ப் பார்த்தால், இன்னும் சரியாக சொல்வதென்றால் அந்த தற்கொலை செய்து கொண்ட நேர்மையான எளிய விவசாயிகளின் வரிப்பணத்திலேயே படித்து விட்டு அவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் அல்லது அவர்களையும், இன்றைய வேலையிழந்து கொண்டிருக்கும் ஐடி தொழிலாளியையும் தற்கொலைக்குத் தற்றிக் கொண்டிருப்பது இந்த உலகமயமாக்கம்தான் என்பதை விளக்குவதற்கு நேரமில்லாத்து போல பம்மாத்து பண்ணத் தெரிந்த நான் முதலாளி கேட்டுக் கொண்டால் அவன் வீட்டு நாயிற்கு கூட வாலை ஆட்டி விடுவதற்கும், மேனேஜரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக எதை வேண்டுமானாலும் இழப்பதற்கு தயாராக இருந்த மனநிலையை ஒப்பிடும்போது மனம் அவமானத்தால் குன்றுகிறது.
ஏன் புரட்சி நடக்கவில்லை? என்று சில உலகமயமாக்கலின் ஆதரவாளர்கள் கேட்டால் நான் அதற்கு சித்தாந்த பூர்வமாகவே பதில் சொல்ல முயற்சித்துதான் இருக்கிறேன். ஆனால் ஒருநாள் கூட எனது போன்றவர்களின் பேடித்தனம்தான் காரணம் என்று சொல்ல முன்வந்த்தில்லை. கணிணி யைத் தெரிந்து கொண்டு அதற்காக ஆசான் போன்ற மென்பொருட்களைப் படித்து அரசியலை பரப்பத் துணிந்த வினவு போன்ற தோழர்களுக்கு முன்னால் அவர்களை விட கணிணி அதிகம் தெரிந்தும் அரசியலை மற்றவர்களிடம் கொண்டு செல்ல வேறு என்ன என்ன வழிமுறைகள் உள்ளது என கண்டறிய மறுக்கிறதே என் மனம், இதே மனம் எனது முதலாளி கேட்டுக் கொண்டால் சாப் என்ற பெயரில், ஆட்டோமேசன் என்ற அறிவியல் முறையை பயன்படுத்தி ஆட்குறைப்பு செய்ய வழிமுறைகளை ஆய்ந்து அறியாமல் இருப்பதில்லை…
தன்னுடைய பிள்ளைகள் இருவரை பிணைக்கைதியாகத் தந்தானாம் திப்பு. தன்னுடைய மூத்த மகனை சாக்க் கொடுத்துக் கொண்டிருக்கும் தருணத்தில் வெள்ளையனுக்கு எதிராக கப்பல் கம்பெனி நடத்த கப்பல் வாங்ங பம்பாய் முழுவதும் சுற்றித் திரிந்தாராம் வ.உ.சி. தன்னுடைய மக்களால் வரி கட்ட முடியாத பஞ்சம் ஏற்பட்டதால் 2800 ரூபாய் கட்ட கால அவகாசம் கேட்டு சாக்சன் பின்னால் 23 நாட்கள் சுற்றித் திரிந்தானாம் கட்டபொம்மன். தனக்கு முன்னால் இருந்த வசதி வாய்ப்புகளை புறம்தள்ளி விட்டுத்தான் 23 வயதில் தூக்குமேடை ஏறினான் பகத்… இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.. இந்த வரலாற்றிலிருந்து என்னத்தை கற்றுக் கொண்டேன்…
உலகமயமாக்கல் மக்களை நெருக்கித் தள்ளுகிறது. தினசரி வெவ்வேறு வகையான ஊழியர்களின் போராட்டத்தால் சென்னை மாநகரம் குலுங்குகிறது.. மெய்யுலகம் போராட அழைக்கிறது… மெய்நிகர் உலகத்தின் சுட்டி டிவி ரசிகர்களுக்கு போராட வைக்க ஏன் குறைந்த பட்சம் ஈழ ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிலாவது கலந்து கொள்ள வைக்க முடியாத கையாலாகத்தனத்தால் அவமானமாக இருக்கிறது.
இதோ பதினைந்தாவது நாடாளுமன்றம் ஆரம்பித்து விட்டார்கள்.. உலகமயமாக்கல் என்ற பூத்த்தால் இந்த நாட்டின் விவசாயத்தை அழித்து, விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளி அவர்களில் சாகாமல் மீந்தவர்களுக்கு உலக வங்கியின் வேலைக்கு உணவு திட்டத்தை விரிவுபடுத்தி நூறு நாள் வேலை, நாளொன்றுக்கு 80 ரூபாய் சம்பளம், நாங்கள் வெற்றி பெற்றால் 100 ரூபாய் சம்பளம் மற்றும் பென்சன் தருவோம் என்று கூறி வெற்றி பெற்றுள்ள காங்கிரசு..
அரசு ஊழியர்களுக்கே பென்சன் மற்றும் போனசு இல்லை என வந்த பிறகு இவர்கள் எப்படி மக்களுக்கு தருவார்கள் அப்படியே தந்தாலும் கண்டிசன் போடும் உலக வங்கி விடுவானா என்பதை இந்த நாட்டின் கோடானு கோடி உழைக்கும் விவசாய பெருங்குடி மக்களுக்கு விளக்குவதற்காக ஒரு பத்துநாள் தேர்தல் புறக்க்கணிப்பு பிரச்சாரம் செய்வதற்காக விடுப்பு எடுக்க முடியாத காரியவாத மனநிலை, சுயநலம் … இதெல்லாம் வைத்துக் கொண்டு மத்தவன் இதுல பீ ன்னு கத்துறதுக்கு கஷடமாக இருக்கு.
புதிய ஜனநாயகப் புரட்சி நமக்காக காத்திருக்காதுதான்.. மணவாளனின் வருகைக்காக காத்திருந்த பைபிள் கதைதான் ஞாபகம் வருகிறது. ஆனால் மக்களின் எளிய நம்பிக்கைகளை பல கோமாளிகள் பயன்படுத்தி புரட்சியை திசைதிருப்பும் வேளையில் எண்ணெய் காலியான தீப்பந்தங்களோடு என்ன செய்யப் போகின்றோம் என்ற கேள்வி அரிக்கின்றது..
சொந்தமான புரிதலில் அரசியலை புரிந்துகொண்டு அன்றாட நிகழ்வுகளை ஒரு புரட்சிகர கண்ணோட்டத்தோடு விளக்க முடியாத பலவீன அரசியல் புரிதல்,, அதே நேரத்தில் நயன்தாராவின் புதிய காதல் ஏன் ஏற்பட்டிருக்கும் என்பது பற்றி நக்கீரனை விட தெளிவாக சித்திரம் போல புரிந்து கொள்ள முயற்சிப்பது,,
லேண்டு விலை ஏறியுள்ளதா என்பதை பார்த்து வண்டியில் கே.கே.நகரின் நடைபாதை வாசிகளைக் கடக்கும்போது கூட குற்ற உணர்வு இல்லாமல் கணக்கு போடும் மனம், இன்றைக்கு யாரும் சாதி பார்ப்பதில்லை என்று கூறிக் கொண்டு தன்னுடைய அப்பன் பாட்டன் செய்த கொடுமைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என பார்ப்பன ஆதிக்க சாதி யைச் சேர்ந்த சமூக நண்பர்கள் பேசும்போது அதனை மறுத்துப் பேச எழும்பாத பம்மாத்து நாக்கு,,
போலிகளை வைத்து கம்யூனிசம்னா இதுதான் என தங்களுக்கு தெரிந்த முறையில் எல்லாம் புரிந்து கொண்ட நண்பர்களது கம்யூனிச வெறுப்பு தன்னின் ஒன்றும் இன்மையை அவர்களுக்கு விளக்க முன்வராத தான் தோன்றித்தனம், அறிவியல் அன்றைக்கு பக்கத்து வீட்டுப் பெண் குளிப்பதை பார்க்க உதவுமா இந்த தொலைநோக்கி என்று கேட்ட பிளாரன்சு நகரத்து சீமானின் அறிவுத்தரத்தைப் போல கணிணி என்ற சாதனத்தின் உதவியால் வட்டிக்கடை வேலையும், பதிவுத்துறை வேலையும் செய்து கொண்டு அதன் சம்பள உயர்வாலேயே அது அறிவுப்பூர்வமானது என நினைத்துக் கொள்ளும் அறியாமையிலிருந்து விடுவிக்கப்படாத சக ஊழியர்களை அறிவுமயப்படுத்தாத்து,,
போதும் இந்தச் சாக்கடை என்று மூக்கைப் பொத்த்த் தோன்றுகிறதா… இதுதான் அரசியலை ஓரளவு புரிந்து கொள்ள முயற்சிக்கும் என் போன்றோரின் நிலையே என்றால், இந்த அரசியலின் அரிச்சுவடி கூட தெரிந்து கொள்ள முடியாமல் இருக்கும் பல இலட்சம் இளைஞர்களின் அறியாமையை போக்க வேண்டிய கடமையிலிருந்து தவறிய நான் எப்படி வெளியில் தலைநிமிர்ந்து நடக்க முடியும். இல்லாத சொர்க்கத்தை அல்ல நரகத்தை காட்டித்தான் பயமுறுத்தி ஆள்பிடிக்கிறார்கள் பெந்தோகோஸ்தே கோஷ்டிகள்.. ஆனல் படைக்க இருக்கும் உலக சொர்க்கம் பற்றி சக மனிதர்களிடம் ஒரு கவிஞனின் கற்பனையோடு தாயின் மன உறுதியோடு விளக்கலாமே… அதனை செய்ய முடியாத்தற்கு கூட நேரமில்லை என்றுதான் சொல்வோபா… தனது வாழ்க்கை, தனது சுகம், தனது உறவு, தனது கேரியர் என வரும்போது மாத்திரம் விழித்துக் கொள்கிறதே என் ஆழ்மனது.. ஏன் பொது என வரும்போது மாத்திரம் சுருங்கிக் கொள்கிறது..
இதோ மறுகாலனியாதிக்கம் எல்லோரையும் பிடித்து வீதியில் தள்ளுகிறது..விவசாயிகள், அரசு ஊழியர்கள், மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், நெசவாளர்கள், பொதுத்துறை ஊழியர்கள், கல்வித் தந்தைகளின் ஒரு காலத்திய கொத்தடிமை ஊழியர்கள்… எனப் போராட வரும்போது அதிக சம்பளம் என்ற ஒரே காரணத்தால் நடக்கும் அநியாயங்களை பார்த்தும் பார்க்காமல் இருக்க கற்றுக்கொண்ட இந்த அநியாய வர்க்கமான ஐடி தொழிலாளிகளின் வெள்ளை நிற ஆடை கூட வெளுத்து அதன் உண்மையான அழுக்கு படிந்த நிறத்திற்கு மாறிக் கொண்டிருக்கிறது.. இந்த அடிப்படையற்ற வகைப்பிரிவை வென்றெடுக்க முடியாத நான் ஒரு கம்யூனிஸ்டாக முயற்சிப்பவன் என்ற முறையில் யாரை வென்றெடுப்பேன்? யாருக்கு தலைமை ஏற்கும் தகுதி பெறுவேன் புரட்சியின்போது என நினைக்கும்போது கையாலாகாத்தனத்தால் உடல் நடுங்குகிறது…
போதும் மெய்நிகர் உலகம்… இதில் வேறு ஏதாவது வடிவம் இருந்தால் போகாத மனிதர்களுக்கெல்லாம் செயதி சொல்லுவோம்… மெய்யுலகம் தலைமை ஏற்க ஆள் இல்லாமல் திணறுகிறது.. அந்த இடத்தை முதலாளிகளின் கைக்கூலிகளான என்.ஜி.ஓ க்கள் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்க்ள•. பிறகு ஏன் புரட்சி தள்ளிப் போகாது… அறிவுள்ள பிள்ளைகளெல்லாம் அடிமைத்தனத்தை விரும்பி ஏற்கும் நாட்டில் நாய் கூட முதலாளி ஆகலாம்… தொடர்ந்தும் இருக்கலாம்…
வாழ்த்துச் சொல்ல முடியவில்லை… அடுத்த ஆண்டுக்குள் நமது வேலைகளின் பலனாக ஐடி துறை ஊழியர்கள் குறைந்த்து பல பத்தாயிரம் பேராவது குறைந்த பட்சம் தங்களது கோரிக்கைக்காக வாவது வீதிக்கு வந்து போராடி மற்ற மக்களின் போராட்டங்களில் கலந்து கொண்டு அதனைப்பற்றி இணையத்தில் தாங்கள் கற்றுக் கொண்டதை வலைப்பூவில் பகிர்ந்து கொள்ளும் சூழலை சென்னையில் உருவாக்க முடிந்தால் குறைந்த பட்சம் முன்னேறுகிறது புரட்சி என்றாவது சந்தோசப்பட முடியும்.
-MANI
புரட்சிகர வாழ்த்துக்கள் வினவு ! புதிய ஜனநாயகம் வாசகரான நான்( சந்தா எண் 4313) மாதம் ஒருமுறைதான் அதைப் படிக்க முடியும் என்ற சோகம் இருந்த போது, அதனைச் சரி செய்யும் விதமாகவும், பயிற்சி (ஆயுதப்பயிற்சி இல்லங்க – எழுத்துப் பயிற்சி) எடுக்கும் நிறைய தோழர்களுக்கு வினவு ஒரு அகராதி போன்று உதவுகிறது.செவ்வணக்கங்கள் வினவுக்கு உரித்தாகுக
– அறிவுடைநம்பி
மணி உங்கள் நீண்ட சுயபரிசீலனையை மற்றவர்களும் செய்ய வைக்க வினவு முயலும், நன்றி!
நம்பி எழுத்துப்பயிற்சி என்பதை விட அரசியல்பயிற்சி என்றால் பொருத்தாமாக இருக்குமே, நன்றி!
இந்த பதிவில் நீங்கள் வெளியிட்டுள்ள படம் உங்கள் தோழர்கள் உருவாக்கியதா, மிகவும் அர்த்தம் பொதிந்ததாக இருக்கிறது. தோழர்களுக்கு வாழ்த்துக்கள்
தோழர் உடன்பிற்ப்பு நேற்றுதான் மாங்கு மாங்கென பக்கம் பக்கமாக எழுதும் வினவுக்கே வாக்குகள் குறைவாக எழுதும்போது….. என்று எழுதியதைப் பார்த்தோம். அப்போதே இன்றைய பதிவு சுருக்கமாக எழுத நினைத்து பாருங்கள் மீண்டும் அதே போல பக்கம் பக்கமாகத்தான்……… படம் இணையத்தில் எடுத்ததுதான்… நன்றி ….அப்புறம் லக்கியை இன்னும் காணோம்?
வினவு
நீங்கள் மிகவும் சிரத்தை எடுத்து எழுதுவதை தான் அவ்வாறு குறிப்பிட்டு இருந்தேன். நான் தினப்படி பதிவுலகம் பக்கம் வருவதில்லை அப்படி வரும் நாட்களில் வினவின் கட்டுரைகளும் வந்தால் முதலில் ஒட்டை குத்திவிட்டு தான் கட்டுரையை வாசிப்பது வழக்கம். எல்லாம் வினவின் மீது உள்ள நம்பிக்கை தான். லக்கி மிகவும் பிசி என்பது போல் தெரிகிறது
First read this… This incident has happened for one of our citizen in chennai. Might be it will happen in future for us also.Let us not fear to exercise our rights.
http://thirumbiparkiraen.blogspot.com/2009/07/blog-post.html
உங்கள் பதிவுலக புரட்சி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
ஆரவாரமான அட்டகாசமான ஆர்பாட்டமான அல்லோகல்லோலமான பிறந்தநாள் வாழ்த்து. மிஸ்டர் மணி, நெம்ப ஃபீல் பண்ணாதீங்க.
நன்றி ஹிக்சன்,
மாம்போ நீங்கள்தான் எங்கள் தலைவரென்ற சந்தேகம் உள்ளதால் உங்கள் பூர்வாசிரம பெயர் அதுவும் ஒரிஜினல் பெயர் சொன்னால்தான் வாழ்த்துக்கள் ஏற்கப்படும், மணியும் ஃபீல் பண்ணாமல் இருப்பார்.
வினவு
கொள்கையில் எவ்வளவு பிடிப்பிருக்க வேண்டும் , சற்றே மலைக்க வைக்கிறது. எவ்வளவு திட்டுக்கள் எவ்வளவு ஏச்சுக்கள்.
***
பலர் வந்து விவாதிக்காத காரணம் பல நேரங்களில் தலைப்பை மட்டும் படித்தால் போதும் , உள்ளே யார் நொங்கப்படுகிறார் என்று தெரிந்து விடுகிறது. குழுவாக சேர்ந்து ஒரு அப்பாவி பின்னூட்டமிட்டால் நொங்குவது (கூட்டாக). ஆர்.வி ‘வேல்யூ சிஸ்டம்’ என்று தெரிவித்தாலும் இங்கு அவர் பங்கு குறைந்ததற்கான முக்கிய காரணம் இதுவே.
உரையாடல் குறைந்து பல நேரம், தான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்ற சிக்கிக் கொண்டதால் , விவாதிப்பவர்கள் வேலையைப் பார்க்க சென்று விடுகின்றனர்.
***
சொல்வனத்தில் வெளியான கட்டுரைக்கு எதிர்வினை உண்டா ?
http://solvanam.com/?author=5
முரளி நீண்டநாள் கழித்து வந்திருக்கிறீர்கள். நாங்கள் கருத்தளவில் மட்டும் விவாதிக்கும் நபர்களல்ல, நடைமுறையில் அந்த கருத்தை கொண்டுபோகும் செயலில் இருப்பதால் கருத்தளவில் மட்டும் இருக்கும் பலருடன் கருத்து வேறுபாடு வருவதும், அதை அவர்கள் நடைமுறையில் சோதித்தறியாத படி இருப்பதால்தான் பிரச்சினை.
சொல்வனத்தைப் போல ஆங்கிலத்தில் இலட்சக்கணக்கில் இந்த அவதூறுகள் இருக்கின்றன. எங்கள் தலைவர்களை நடைமுறையின் தேவையோடு கற்றிருப்பதால் இந்த அக்கப்போர்களுக்குள் நாங்கள் சிக்குவதில்லை.
வினவு
இப்போ கொஞ்ச நாளாகத்தான் வினவு பாக்கறேன், அருமையான தளம். தோழர்களுக்கு வாழ்த்துக்கள். பெரிய கட்டுரை மட்டும் இல்லாம, உங்க கில்லி கிட்ட சொல்லி புதுசு புதுசா டெக்னாலஜி பயன்படுத்தி அனிமேஷன் மாதிரி ஏதாவது வித்தியாசமா செய்யுங்களேன்.
செய்துவிட்டால் போச்சு, நன்றி ஜான்.
வினவு
பொதுவில் யாரவது இது எனது நூறாவது பதிவு, வலைப்பதிவு தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துவிட்டது, இருநூறு பேர் என் தளத்தைப் பின்தொடருகிறார்கள், போன்ற விஷயங்களைத் தனிப்பதிவாக வெளியிட்டால் அறுவறுப்பாக இருக்கும். 99 பதிவு எழுதிய பிறகு நூறாவது பதிவுதான் எழுதமுடியும், ஒரு மாறுதலுக்காக நூற்றிப் பத்தாவது பதிவா எழுத முடியும். ஆர்.எஸ்.எஸ் உள்ளீடுகளைக் கொண்டு வினவு தளத்தை அவுட்லுக் எக்ஸ்பிரஸ்சில் படித்து வருகிறேன். என்னைப் போல பலரும் படித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் இதையெல்லாம் விளம்பரத்திற்குறிய விஷயமாக அக்கிக்கொள்ளாமல் இருப்பதே வினவைப் பெரிதும் மதிக்கக் காரணமாயிருக்கிறது. வினவின் இந்தப் பதிவு அப்படியான அறுவறுப்பை ஏற்படுத்தவில்லை. மாறாக இதுவரை வினவு தளத்தைப் படித்தறியாதவர்களுக்கும் இத்தளத்தைக் குறித்த சிறந்த அறிமுகமாக இப்பதிவு இருக்கும் என்றே எண்ணச் செய்கிறது.
தொடர்ந்து வரும் ஆண்டுகளிலும் இதே வீரியம் குறையாமல் எழுதுங்கள். உங்களிடம் எதிர்பார்ப்பதும் இதைத்தான். வாழ்த்துக்கள்.
விஜய்கோபால்சாமி
இந்தப் பதிவே ஒரு அனுபவத் தொகுப்புதான், அதனால்தான் தலைப்பில் கற்றவையும், கடமையும் என வைத்திருக்கிறோம். வீரியத்தை குறைக்காமல் உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவோம். நன்றி விஜய்கோபால் சாமி.
வினவு
இதுதான்டா சைட்டு !…
தமிழ் பிளாக் உலகத்துல இந்த மாதிரி ஆரவாரமான கொண்டாட்டம் இதுவரை இல்லை. ரொம்ப மகிழ்ச்சி. https://www.vinavu.com/2009/07/17/vinavu-year-one/trackback/…
ஓராண்டைப் பூர்த்தி செய்த வினவுக்கு வாழ்த்துக்கள். ஆப்பிரிக்க தொடர் முடிந்து விட்டதை அறிவித்து விட்டீர்களா? விரைவில் தென் அமெரிக்க நாடுகள் கட்டுரைத் தொடரை எழுதவாரம்பிக்கிறேன். இதுவரை பல இணையத்தளங்களும், சிற்றிதழ்களும் என்னிடம் கட்டுரை எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டிருக்கின்றனர். எல்லோருக்கும் எழுதுவதற்கு வாழ்நாள் போதாது. நான் தெரிந்தெடுத்துள்ள குறிப்பிட்ட இணையத்தளங்களில் வினவு முதலிடத்தைப் பெறுகின்றது என்பதை மகிழ்வுடன் அறியத் தருகிறேன்.
மிக்க நன்றி தோழரே, உங்கள் கட்டுரைகள் எங்களை போன்றவர்களுக்கு மிகுந்த பயனளிக்கின்றது. ஆப்ரிக்காவை மார்க்ஸிய கண்ணோட்டத்தில் நீங்கள் வரைந்த தமிழ் சித்திரம் காலத்தால் அழியாத செல்வம். தென்னமெரிக்காவுக்காக காத்திருக்கிறேன்
தோழர் கலையரசன் நீங்கள் வினவு குழுமத்தின் முக்கிய தோழர். என்றாலும் நன்றிகள். ஆப்ரிக்கத் தொடரின் இணைப்புக் கட்டுரை மட்டும் வெளியிடவேண்டும், அத்துடன் தென்னமரிக்காவை அறிவித்துவிடலாம்.தயார் செய்யுங்கள். பலரும் உங்களை கேட்டிருப்பது எங்களுக்கும் மகிழ்ச்சியை தருகிறது. இந்தப் பதிவில் குறிப்பிட்டபடி உங்களது கால்ஷீட்டை ஐந்து வருடத்திற்கு முன்பதிவு செய்துவிட்டோம். மீண்டும் நன்றி.
வினவு
//அசுரனை எப்படியாவது மீண்டும் செயல்பட வைப்போம். தலைவர் தயாரானால் //
அசுரன் அண்ணாச்சியின் பன்னாட்டு கம்பேனியில் பொட்டி தட்டும் வேலைக்கு ஏதும் பிரட்சனையா ?
அப்படியானால் புரச்சி கொண்டு வருவோம் , குண்டுகள் முழங்கட்டும் , தெருவெங்கும் பாலாறு ஓடப்போவதால் அனைவரும் பாத்திர பண்டங்களுடம் தயாராகவும் .
மதி-இண்டியா
வினவு,
வினவுக்கு எனது இனிய முதல் பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க,வளர்க, மேன்மேலும் வெல்க!!
வினவு தொடங்கி ஒரு வருடம் தானா! எனகென்னவோ நீண்டநாள் பழகியது போல் ஒரு பிரமை.
வாழ்த்துகளுடன்,
ரதி.
ரதி,
ஒரு வயது வினவுக் குழந்தையை தாய்ப்பாசத்துடன் வாழ்த்தியமைக்கு நன்றி.
வினவு
//ஜ்யோவ்ராம் சுந்தர்
Posted on July 17, 2009 at 3:24 pm
தகவலுக்காக : ஜெயமோகன் ஆசிரியராக இருந்த பத்திரிகையில் வந்தது அது – ஆனால் ஜெமோ அதை எழுதவில்லை.//
உண்மைக்கு நன்றி சுந்தர் , என்னத்தை சொன்னாலும் உண்மை இவர்களுக்கு கசப்பே,
ஆப்கன் போரின் போது அமரிக்க வீரர்கள் பெண்களை கற்பழித்ததாக செய்தி போட்டு அதற்க்கு ஆதாரமாக மிலிட்டரி செக்ஸ்.காமிலிந்து படம் போட்ட வீரர்கள் அல்லவா இவர்கள் ?
அவதூறுக்கு மட்டுமே எழுதும் மனநோய் கும்பல்
அய்யா,
அவர் மட்டுமல்ல பலர் பன்னாட்டு கம்பேனிக்கு பொட்டிதட்ட போனாலும் உங்களை போன்ற இலக்கிய சுய இன்பங்களுக்கு தலையில் குட்டு வைக்கவும் தவறுவதில்லை. எங்கு வேலை செய்தாலும் மக்களுக்காக சிந்திக்க தெரிந்தவர் தானே என்பதில் எங்களுக்கு பெருமைதான். எங்கு வேலை செய்தாலும் இப்படி சுயமோகனுக்கு சுய இன்பமாகி கழுவிக்குடிக்கும் உனக்கும் ரொம்ப பெருமையாத்தானிருக்கும்.
ஆமா நானும் பாக்குறேன் பொறந்த நாளாச்சே அமைதியா இருந்தா ரொம்ப ஆடுறீயளே. பர்த் டே பேபிய ரொம்ப சீண்டுன தாங்க மாட்ட ,
வினவு உத்திரவிடுங்கள்!!!!!!
உட்டு பிரிச்சு மேஞ்சுடுறோம்
மதி.இந்தியா அவர்களுக்கு, அது ஆஃப்கான் போரில்லை இராக் போர், மேலும் இராக்கில் அமெரிக்க இராணுவம் பெண்களை பாலியல் வல்லுரவு கொண்டதை, அபுகிரைப்பில் ஆண்களை நிர்வானமாக்கி மலம் பூசி மகிழ்ந்ததை புதியகலாச்சாரம் ஒற்றர்படைகொண்டு கண்டுபிடிக்கவில்லை அது இணையம்/ பத்திரிக்கை/ தொலைக்காட்சி என விஷ்னுபுரமளவுக்கு பிரபலமான செய்திதான். அமெரிக்காவின் மலிவுப்பதிப்பாக பிணங்களையும் வன்புணர்வு செய்த இலங்கை இராணுவத்தின் அட்டுழியங்கள் கூட எங்கள் தோழர் இராயாகரனின் தளத்தில் வெளிவந்தது. இப்படி பாலியல் யுத்தம் நடத்தப்படும் போது நீங்களும் உங்கள் ஆசானும் காந்தியவழியில் சுயபரிசோதனை செய்துகொண்டு இருக்கலாம், அதனால் பிழையொன்றுமில்லை, வரலாறு மக்களை கொண்டு மட்டும் செய்யப்படுவதில்லை மேதகு மலங்களையும் கொண்டுதான்.
//விஷ்னுபுரமளவுக்கு பிரபலமான செய்திதான். //
அப்படின்னா! நீங்கள் போகிற போக்கில் விஷ்ணுபுரத்தை பிரபலம் என்கிறீர்கள். பலர் அறிந்திருக்கவேமாட்டார்கள். பின் தொடரும் நிழலின் குரல் படித்து, சகிக்க முடியாமல், கால்வாசியிலேயே நிறுத்திவிட்டேன்.
எனக்கென்னவோ மா.சே விஷ்னுபுரத்தின் அர்ப்பத்தனத்தை அமெரிக்க ஆபாச வழிமுறைகளுக்கு பொருத்தி கின்டல் செய்வதை போலத்தான் புரிந்தது.
தோழர்கள் கலகம், மா.சே
மேதை இந்தியாவின் அடக்கப்பட்ட பாலுணர்வு இப்படி விகாரமாக அலைகிறது. இதை இப்படியே விட்டுவிடலாம். அதுவே ஊளையிட்டுக் கொண்டு அடங்கிவிடும். ஊளைக்கெல்லாம் மெனக்கெட்டு பதில் சொல்லாதீர்கள்.
வினவு
வினவு, வலைப்பதிவு உலகத்திலிருந்து காரணமாக விலகியிருந்த என்னை ஈர்த்த ஒரு விசை, சோர்ந்து போன சமூக உணர்வாளர்கள் மனதில் நம்பிக்கையாய் துளிர்த்த ஒரு வித்து. உழைக்கும் மக்களின் வியர்வையாய் இணையத்தில் கமழும் மணம். தாழ்த்தப்பட்ட ஓடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான குரல், பதிவும் ஒரு ஆயுதம் என உரக்கச் சொன்ன தளம். ரதியாய், அதிரடியாய், ரவியாய், வித்தகனாய் வினாவை தொடர்கிறது வினை.
மா.சே,
உங்களைப் போன்ற தோழர்கள் எப்போதும் சோர்வுறக் கூடாது. செய்யவேண்டியது ஏராளமாய் இருக்கிறது. நன்றி.
வினவு
வாழ்த்துக்கள் வினவு! புதிய ஜனநாயக புரட்சி வெல்லட்டும்!
பிரமிக்க வைக்கும் உழைப்பு ,ஒருங்கிணைப்பு !
மனம் கனிந்த வாழ்த்துகள்.
மாக்சிம்ஸ், ஜோ இருவருக்கும் நன்றிகள். தொடர்ந்து வாருங்கள், நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.
//தோழர்கள் கலகம், மா.சே
மேதை இந்தியாவின் அடக்கப்பட்ட பாலுணர்வு இப்படி விகாரமாக அலைகிறது. இதை இப்படியே விட்டுவிடலாம். அதுவே ஊளையிட்டுக் கொண்டு அடங்கிவிடும். ஊளைக்கெல்லாம் மெனக்கெட்டு பதில் சொல்லாதீர்கள்.
வினவு
//
கமிசார்கள் சொன்னால் அடங்காமல் இருக்க ஏலுமா ? வரலாற்றுணர்வில்லாத மக்கள் மந்தையை வழி நடத்தும் மார்ஸிய மத குருக்களே , இதோ அடங்கிடம்ல..
(புரச்சி கோயமுத்தூரை நெருங்கும் போது ஒரு தகவல் தந்தால் என்றும் உங்கள் பூட்ஸுக்கு பாலீசாக இருப்பேன்)
வயிறு எரியற்து தான் !!! ஆனா அத பாலிசா சொல்லாம சும்மா நொய் நொய்யுன்னு ஏன்யா பொலம்பற.. அந்தான்ட போ,
பாஸ், கோழிக்கரைக்கு எதுக்கு பாஸ் வயிறு எரியனும். அவர்தான் சூவுக்கு பாலிசாவோ, டிஸ்யூவாவோ இருக்க ரெடீயாகீரார்ல
Congratulations Vinavu Team. I have been reading your site for the last 6 months Eventhough I have a 100% opposition to your idealogy and tactics. I admire your commitment to the section of society that is oppressed and your utopian dream society. I hope your end goal succeds but your idealogy and tactics fails.
அட தோ பார்றா, இது ஜென்டில்மேனுக்கு அழகு, கத்துக்கையா மதியில்லா இந்தியா. Well done test
//Well done test//
கிஃகிஃகிஃகி
நன்றி, டெஸ்ட், வழிமுறை சரியாக இருந்தால்தானே இலக்கு வெற்றிபெறும்?
பிரமிக்க வைக்கும் உழைப்பு ,ஒருங்கிணைப்பு !
புரட்சிகர வாழ்த்துகள் தோழர் .
ஓராண்டு நிறைவு பெற்ற வினவுக்கு வாழ்த்துக்கள்!
உண்மையில் உங்கள் அர்ப்பணிப்பு உணர்வு கண்டு நான் பிரமிக்கிறேன். பெருமையாகவும் உள்ளது.
உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசிக்கிறேன். என்ன்னைப் போன்றோருக்கெல்லாம் படிக்கவே நேரம் போதாதிருக்கும் போது (அல்லது பின்னூட்டமிடக்கூட சோம்பலாயிருக்கிற வேளையில்) உங்களுடைய பதிவுகளும், அதற்கான தயார்படுத்தலும் கண்டு எனக்கு பொறாமையாய் இருக்கிறது. இனிமேலாவது என்னை நம் சமூகத்திற்கும் பயன்படுகிற வகையில் வாசிப்பிலும், அரசியல் பயிற்சியிலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் கொள்ள தூண்டுகிறது..
நவீன தொழில்நுட்பத்தையும் மக்களுக்கான அமைப்புகள் அதற்குரிய வரைமுறையோடும், தேவையோடும் பயன்படுத்தி கொள்ள முடியும் என்பதற்கு உங்கள் வலைத்தளம் ஒரு உதாரணம்..
ஒரு காலத்தில் அசுரன் தான் வினவு என்ற பெயரில் தொடங்கி இருப்பாரோ என்று சந்தேகித்ததுண்டு.. (இன்னும் தீரவில்லை.. வினவு தொடங்கிய நாட்களில் அசுரன் தளத்தில் சில காலம் பதிவுகளே இல்லை.)
இங்கே சில சுய மோகிகள் தன் வீட்டு நாய் பற்றியெல்லாம் பதிவு போட்டு பெருமை கொள்கிறார்கள். ஆனால் உங்கள் ஓவ்வொரு பதிவுமே நிகழ் கால அவசியம் கருதியும், சமூகத்திற்கான தேவையை ஒட்டியும் இருக்கிறது.
உங்கள் ஓராண்டு அனுபவப் பதிவும் சிறப்பாக உள்ளது..
மென்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்….
தோழமையுடன்,
பால்வெளி..
(ம்ம்.. இந்தப் பின்னூட்டத்திற்கே அரை மணி நேரம் ஆகிறது..அப்ப உங்க பதிவுக்கெல்லாம்??..)
நன்றி நெல்லைமணி,
பால்வெளி
உங்களிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்து பெரிதும் மகிழ்கிறோம். அசுரனை நாங்களே வலைவீசித் தேடுகிறோம். இங்குதான் எதோ ஒரு பெயரில் பின்னூட்டம் போடுகிறார். அரைடிக்கெட் நினைத்தால் பிடித்து விடலாம்.
புரட்சிகர வாழ்த்துகள்..
நேற்று பதிக்க முடியவில்லை. நமக்கு நல்ல நேரம் கெட்ட நேரமே கிடையாதே.
ஒரு வருட விசை பலகையில் வினையாற்றி சமூக ஆர்வமிக்க இளைஞர்கள் மத்தியில் கருத்தியலில் வினையாற்றிய வினவுக்கு புரட்சிகர வாழ்த்துகள்..
ஒவ்வொரு வினைக்கும் எதற்கு சமமான எதிவினை உண்டு எனும் கோட்பாட்டை நெஞ்சில் நிறுத்தியோ நிறுத்தாமலோ வினவுடன் மல்லுகட்டி நிற்கும் எதிர்கருத்து பதிக்கும் தோழர்களுக்கும் நன்றி!!!
வினவு குழுவினருக்கு பாராட்டுக்கள் பல. தொடரட்டும் தங்கள் பணி
எப்போதும் இணையத்தில் ஏதேதோ தேடிக்கொண்டும், படித்துக்கொண்டும் இருந்தவன், கடந்த ஒரு வருடமாக இணையத்தில் தவறாமல் வாசிக்கிறேன். நண்பர்களுக்கும் அறிமுகம் செய்ததில் மகிழ்ச்சி. எவ்வளவோ மாற்றம். வினவுக்கு வாழ்த்தும் நன்றியும்.
ஃபியூசிக், நித்தில், செங்கதிர் மூவருக்கும் நன்றிகள்! செங்கதிர் உங்கள் தளத்தில் தொடர்ந்து எழுதுங்கள்.
சமூக, அரசியல் விசயங்களில் கருத்து சொல்ல ஏதேனும் ஒன்று இருப்பவர்களுக்கு வினவு தளத்தில் அதனை பதிவிடுவது நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவது போல சுலபமாகவும், இனிய அனுபவமாகவும் இருப்பது வினவின் சிறப்பு. வினவின் கருத்தை ஒட்டியே சிந்திப்பவர்கள், ஒருவித பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் உணர்வில் மாற்றுக் கருத்தாளர்களை வசையுடன் எதிர்கொள்வது நெருடலான விசயம். வினவைப் போலவே சளைக்காமல் பதிவிடும் கலகம் போன்ற தோழர்களும் பாரட்டுக்குரியவர்கள். வாழ்க.
இது சரிதான், ஆனா நம்மள திட்டுறவங்கள திருப்பி திட்டினா என்ன தப்பு? நெட்டுல அது ஒரு பெரிய வசதியாச்சே 🙂
அட்ராசக்கை! அட்ராசக்கை! அப்டி போடு அருவால !
(தோழர் சுகதேவ் கோபப்படதீர்கள் சும்மா காமெடிக்கு)
நன்றி சுகதேவ், வினவின் கருத்தை ஒட்டி சிந்திப்பதோ, அதன் மூலம் மாற்றம் வரும் என நம்புவதோ அந்த நம்பிக்கை அடிப்படையில் விவாதிப்பதிலோ என்ன தவறு? அதையே ஒருவித பாதுகாப்பு வளையம் என்று நீங்கள் வெளியில் நின்று பேசுவதும் கூட ஒருவகை வசைதானே? கேலிதானே? ஆனால் வினவில் இப்படி பூடகமாகவெல்லாம் விவாதம் நடப்பதில்லை, எந்த பின்னூட்டத்தையும் தடுப்பதுமில்லை. அதனால் நீங்கள் உங்கள் கருத்தை தயக்கமின்றி விவாதிக்கலாம். அதை யாரும் வசையுடன் எதிர் கொள்ள கூடாது என மற்ற தோழர்களிடம் வேண்டுமானால் அனுமதி வாங்கித் தருகிறோம். நன்றி.
என்னுடைய கருத்துக்களுக்கு வரும் விமர்சனங்கள் எத்தகையதாக இருந்தாலும் என்னால் எதிர்கொள்ள முடியும் யாருடைய உதவியுமின்றி. பாதுகாப்பு வளையம் என்று நான் சொன்னது வசை என்று நீங்கள் சொல்லித்தான் எனக்கு இப்போது தெரிகிறது. விவாதங்கள் காமன் டெக்கோரத்தை மீறாமல் இருப்பது நல்லது என்ற எண்ணத்திலே சொன்னேன். அது உங்களுக்கு புரியா விட்டால் கவலையில்லை.
வாழ்த்துக்கள்.
பல முக்கிய விசியங்கள் பற்றி, தக்க சமயத்தில்
எழுதும் அபூர்வமான வலைதளம் இது.
மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
தொடரட்டும் தங்களின் பணி …
வாழ்த்துக்கள்.
குழந்தையாக இருக்கும்போதே இப்படீன்னா இன்னும் வளர்ந்த பிறகு ஃ……..
ம்ம்ம்…… கிளப்புங்கள்…..
புரட்சிகர வாழ்த்துக்கள்
அதியமான், டோமி, சுரேஷ் உங்கள் வாழ்த்துக்கள் எங்களது பொறுப்பை கூட்டுகின்றன
அண்ணே..!
இன்னும் பல நூறு கட்டுரைகளை வடிக்க வேண்டி வாழ்த்துகிறேன்..!
கருத்துக்கள் ஏற்புடையதோ இல்லையோ.. சொல்ல வந்த விஷயத்தை சொல்கின்ற பாங்கில் வினவுக்குத் தனி இடம் உண்டு. மிக்காரும் இல்லை.. இணையாரும் இல்லை.. அழகு..!
ஒவ்வொரு விஷயத்திலும் இப்படியும் ஒரு கோணம் உண்டோ என்று யோசிக்க வைக்கிறது வினவில் வருகின்ற கட்டுரைகள்.!
இதுதான் வினவின் சிறப்பு..
வாழ்க வளமுடன்..!
உண்மைத்தமிழன்
வினவின் கட்டுரைகள் பற்றிய உங்கள் மதிப்பீட்டிற்கும் வாழத்துக்களுக்கும் நன்றி
வாழ்த்துக்கள் வினவு தோழர்களுக்கு
நேற்றே வரமுடியாமல் போய்விட்டது
இரண்டாம் ஆண்டில் இருந்து கவிதைகளுக்கும் காரட்டூன்களுக்கும் தனி பக்கம்
ஒதுக்க வேண்டும்,
தினம் தோறும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறையோ கார்டூன்கள்,
கவிதைகள் வெளியிட முயற்சிக்கவும்
முன்னணி தோழர்கள் , கலைக்குழு தோழர்களின் செவ்விகள் வெளியிட முயற்சிக்கவும் (ஆனந்த விகடனுக்கு செவ்வி தரும் தோழர்கள் வினவுக்கும் நேரம் ஒதுக்கினால் நன்றாக இருக்கும் )
வினவின் முதலாமாண்டு நிறைவு இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு கவிதைப்படம் வெளியிட்டுள்ளேன்
தோழர்கள் பார்க்கவும்
தோழர் விடுதலை,
உங்கள் ஆலோசனைகளை நிச்சயம் நிறைவேற்றுகிறோம். உங்கள் கவிதைப் பட வாழ்த்துக்கு நன்றி
vinavukku en manamarntha valthukkal.
சாகீர் விரைவில் கணினித் தமிழ் எழுத கற்றுக் கொண்டு விவாதத்திலும் பங்கு பெறுங்கள், வினவை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்
வினவுக்கு வாழ்த்துக்கள்.
தினமும் வினவை பார்வையிடுவன்.
சிறப்பான கட்டுரைகள். எதிர் கருத்து பின்னுட்டங்களை/விவாதங்களை வெளியிடும் துணிவு.
தொடரட்டும் உமது பணி.
_ மோகன்,
வினவு குழு தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
வாழ்த்துக்களை அள்ளித்தருகிறேன்
அத்துடன் எனக்கு ஒரு விமர்சனமும் உண்டு.
வினவின் துவக்ககால பதிவுகளில் இருந்த இளமை,சொல்முறை
பதிவின் அழகு அனைத்தும் தற்போது கனிசமாக குறைந்துள்ளதாக
கருதுகிறேன்.
மேலும் வினவு சுயமாக முன்பு எழுதியதை விட தற்போது
புஜ புக கட்டுரைகளையே பெரிதும் நம்பியுள்ளதும்,பதிவிடுவது
அதிகமாகியுள்ளது.ஒரு தனி இணையம் என்கிற வகையில்
இது நல்ல வளர்ச்சி போக்கு அல்ல என்று கருதுகிறேன்.
புஜ வினர் தனி ஒரு தளம் துவங்கினால் நீங்கள் புஜ
கட்டுரைகளை போடமுடியாது என்பதையும் கனக்கில் எடுத்து
எமக்கு வினவு துவங்கிய சில மாதங்களில் நீங்கள் எழுதியதை
போன்ற கட்டுரைகளை தொடர்ந்து வழங்க வேண்டும் என்கிற
கோரிக்கையை தோழமையுடன் வைக்கிறேன்.
புரட்சிகரவாழ்த்துக்கள்.
தோழமையுடன்
சூப்பர்லிங்ஸ்
உங்கள் ஆர்வத்திற்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி மோகன்.
தோழர் சூப்பர்லிங்ஸ்
பு.க, பு.ஜ கட்டுரைகள் இதழ் வாங்காத உலகத் தமிழ் மக்களிடம் கொண்டு செல்வதற்காகவே வெளியிடுகிறோம். அதற்கும் நல்ல வரவேற்பு உள்ளது. ஆரம்ப காலத்தில் பண்பாட்டு பிரச்சினைகளை அதிகமும், தற்போது அரசியல் கட்டுரைகள் அதிகமும் வருவதால் உங்களுக்கு அப்படி தோன்றுகிறதா தெரியவில்லை. இருப்பினும் உங்கள் ஆலோசனைகளை நிறைவேற்ற முயல்கிறோம், நன்றி.
I have not seen any articles regarding corruption and other short comings in Judiciary in vinavu. Infact a website ( http://www.judgesplot4plot.com/ ) is boldly showing about the corruption in Karnataka highcourt. You may have accesses through many ways to know about the corruption in judiciary. Plz, try to expose them also. The corrupt judiciary will disrupt the entire nation.
அதிகாலை இணையத் தளத்தில், சில மாதங்களுக்கு முன் நான் எழுதிய ‘அரசியலில் இலக்கியவாதிகள்’ என்ற கட்டுரையில், தங்கள் வினவு வலைப்பதிவைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். படித்துப் பாருங்கள்.
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=11902&Itemid=185
Really a good job.
wishes for the second year.
வணக்கம் தோழர்களே,
கடந்த ஓராண்டில் சமூக அரசியல் தளங்களில் விழிப்புணர்வூட்ட சிறந்த பங்காற்றியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் என்ற ஒற்றைச்சொல்லில் அது அடங்கிடாது. என்னில் ஏற்பட்ட ஐயங்களையெல்லாம் வினவையும், தமிழரங்கத்தையும் கொண்டே தெளிந்திருக்கிறேன். தொடர்ந்து…தொடர்ந்து, இன்னும் வீச்சாக, முன்னிலும் ஆழமாக….
வாழ்த்துக்களுடன்
செங்கொடி
அருமை தோழர்களுக்கு,
வாழ்த்துக்கள்.
பார்வையாளரா? பங்கேற்பாளரா? நீ என்ன செய்யப்போகிறாய்? என்ற
உங்களின் கேள்வி, முன்னர் ஒரு தோழர் என்னிடம் கேட்ட கேள்வியை நினைவுபடுதுகிறது.
பன்னி மாதிரி வாழ்வது வாழ்க்கையா.. பகத்சிங் மாதிரி வாழ்வது வாழ்க்கையா?
என்றார் அந்த தோழர்.
தற்போது நீங்கள் கேட்கிறீர்கள்.
விரைவில் ஒரு முடிவு எடுக்கிறேன்.
உங்களோடு ஒரு தோழராக…
அன்புடன்
ஆதி
தோழமைக்கு வணக்கம்,
வினவின் கருத்துக்கள் சமூகத்தில் வினையாற்றி மேலும் பலரை வென்றெடுக்க புரட்சிகர வாழ்த்துக்கள்.
vrinternationalists.wordpress.com
அதிகாலையில் வினவை அறிமுகம் செய்ததற்கு நன்றி அருளடியான்!
வாழ்த்துக்களுக்கு நன்றி கிருஷ்ணகுமார், விவாதங்களுக்கும் வாருங்கள்!
தோழர் செங்கொடி தொடர்ந்து உங்களது தளத்தில் எழுதுங்கள், நன்றி!
ஆதி எங்களது தோழராக வரும் நாளுக்கு காத்திருக்கிறோம், முதலாமாண்டின் நிறைவில் இதை விட மகிழ்ச்சிக்குரியது ஏது?
சர்வதேசியவாதிகள், நன்றி, உங்கள் புதிய தளம் இளமைத் துடிப்புடன் இயங்குவதற்கு வாழ்த்துக்கள்!