அன்றாட வேலைகள் சலித்த ஒருவன் திடீரென்று திரைப்படம் பார்த்ததைப் போலத்தான் வினவும் பிறந்தது. ஜூலை 17, 2008 காலையில் எல்லாத் தினசரிகளிலும் அரசியல் நகைப்பு வெள்ளமென ஓடியது. அணுசக்தி ஒப்பந்தத்திற்காக இடதுசாரிகள் மன்மோகன் அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிய நேரம். குதிரை பேரங்கள் மர்மநாவலைப் போல ஆனால் மக்களுக்கோ எந்த ஆவலும் இல்லாமல் நாட்டை வலம்வந்த காலம். இந்த நாடகத்தில் பஃபூன் வேடம் ஏற்றிருந்த சி.பி.எம் கட்சியினரும், அவர்களது சபாநாயகர் சோமநாத் சட்டர்ஜியும் மாபெரும் ‘கொள்கை’ப் போரில் ஈடுபட்ட கதைகள்தான் அன்றைய செய்திகளின் காமடிச் சுரங்கம்.
கூட இருந்த தோழருடன் இதை விவாதித்த போது இதையே ஒரு வலைத்தளம் ஆரம்பித்து வெளியிட்டால் என்ன என்று கேட்க அவரும் சரியென்றார். இதற்கு சில மாதங்கள் முன்புதான் இணையமும், தமிழ்ப் பதிவுலகமும் ஏதோ கொஞ்சமாக அறிமுகமாயிருந்தன. அதற்கும் சில ஆண்டுகளுக்கு முன்னரே தமிழில் தட்டச்சு செய்வதை “ஆசான்” மூலம் கற்றிருந்தோம். கணினியில் எழுதுவது எங்கள் அரசியல் வேலைகளுக்கு மிகவும் வசதியாக இருந்தது.
பாதியோ முக்காலோ கட்டுரை முடிந்த மாலை நேரம் வேறு தோழர்கள் வந்தார்கள். வலைத்தளத்திற்கு என்ன பெயர் வைப்பது என்ற தேடல் சுமார் மூன்று மணிநேரம், திருக்குறள், பராதி, பாரதிதாசன் கவிதைகள், தமிழ் அகராதி என எல்லா ஆயுதங்களோடும் நடந்தது. கடைசியில் “வினவு” தேர்வாகியது. ஒரு தோழர் உடனே வினைசெய் என்றார். “கேளுங்கள், செயல்படுங்கள்” இந்த விளக்கமும் அந்த அருமையான தமிழ்ப்பெயரும் எங்களுக்கு பிடித்திருந்தன. மற்றபடி ‘தீவிரவாத’ கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும் சிவப்பு, சூரியன், கதிர், போர் போன்ற பெயர்களை வேண்டுமென்றே தவிர்த்தோம். காரணம் புதியவர்களை கருத்தின்பால் வென்றெடுப்பதற்கு இந்த கம்பீரமான வார்த்தைகள் அச்சுறுத்துமோ என்ற தயக்கம்.
தொழில்நுட்பவேலைகளில் கில்லியான தோழர் வலைத்தளத்தை பதிவு செய்தார். பிளாக்ஸ்பாட்டா, வோர்ட்பிரஸ்ஸா எது சிறந்தது என்பது தெரியவில்லை, குத்துமதிப்பாக வோர்ட்பிரஸ்ஸில் வினவு ஒரு குழந்தையாக பதிக்கப்பட்டது. இரவு முழுக் கட்டுரையை முடித்து காலையில் வலையேற்றம் செய்ய திட்டம். காலையில் ஏற்றும் நேரம் எங்கள் பகுதியில் முழுநாள் மின்தடை என்பது தெரியாது. அருகாமை ப்ரவுசிங் சென்டருக்கு சென்றும் முடியவில்லை. மாலையில் மின்பகவான் வந்தார். கட்டுரை எழுதிய நான் இங்கே, தொழில்நுட்பக் கில்லி அவருடைய அலுவலகத்தில், பிழைதிருத்தம் பார்த்த தோழர் வேறு இடத்தில் என மூன்று திசைகளில் முதல் கட்டுரை சரிபார்க்கப்பட்டு ஏற்றப்பட்டது. சிவப்பு தலையில், கருப்பு உடலில் கட்டுரை வந்ததும் குழந்தை பிறந்த உற்சாகம்.
சரி, குழந்தையைக் கொஞ்சுவதற்கு ஆட்கள் வேண்டுமே? பிழையும், கில்லியும் எங்கள் தோழர்கள் வைத்திருக்கும் தளங்களில் வினவின் பெயரில் மொட்டைக் கடுதாசி அல்லது இலவச விளம்பரங்களைப் பின்னூட்டங்களாக போட்டார்கள். தோழர்கள் என்பதால் படித்தே தீரவேண்டுமென்பதால் இந்தப் பணி. அந்த அளவுக்கு நிறைய தோழர்கள் அப்போது எழுதிவந்தார்கள். போலிக் கம்யூனிஸ்டுகளுக்கும், தமிழினவாதிகளுக்கும் இந்த இணையப்படை மிகுந்த பொறாமையை ஏற்படுத்துகிறது. இது இளமை துடிப்புள்ள ஒரு மார்க்சிய லெனினிய இயக்கம். களத்திலும், கருத்திலும், அரசியல் அரங்கிலும், பத்திரிகை துறையிலும் அதே போல இணையத்திலும் இப்படி முன்னணியில் இருப்பது ஆச்சரியமானதல்ல.
தோழர்கள் படிக்க வந்தார்கள். அசுரன் அவரது பதிவில் பதிலளித்தார். அசுரனே வினவை பொருட்படுத்தி எழுதியது எங்களுக்கு ஆச்சரியம். என்ன இருந்தாலும் அவர்தான் அப்போது இணையத்தில் எங்களது தலைவர். தொண்டர்களுக்கு ஆச்சரியம் இருக்காதா? இப்போதும் தலைவர் வேறு வேறு பெயர்களில் எல்லா விவாதங்களுக்கும் வந்து தொண்டர்களுக்கு தெரியாமல் உற்சாகப்படுத்துகிறார். முதல் பதிவேறிய உற்சாகத்தில் அடுத்த இருநாட்களுக்கும் இருபதிவுகள் எழுதினேன். அதிகம் பேர் பின்னூட்டமிட வரவில்லை. ஒருவர் மட்டும் பதிவேற்றியதும் வாழ்த்து தெரிவித்தார். அவர் கில்லிதான் என பிழை சொல்ல நான் கில்லியிடம் கேட்க இறுதியில் ஆரம்பத்தில் இந்தப் பூனையும் பால்குடிக்குமா என்பதாய் மறுத்து பிறகு ஆங்கிலத்திலிருந்து அவரது செந்தமிழ் பிரோயகத்திற்கு மாறியபோது கில்லி பிடிபட்டார். எல்லாம் எழுதுபவர்களை உற்சாகப்படுத்தும் ஒரு நல்ல நோக்கத்திற்காம். அதற்கு வேலை வைக்காமல் புதியவர்கள் வந்தார்கள். மூன்றாவது நாள் இன்றைய ஹிட்ஸ் 20 என உற்சாகமாய் பிழைக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். அதே போல மொத்த ஹிட்ஸ் 500, 1000 தாண்டிய போது கில்லி எனக்கு அனுப்புவார். இவ்வளவு அப்பாவிகளா என சிரிக்காதீர்கள். அப்பாவித்தனத்தையும் ஒத்துக்கொள்வது வீரமில்லையா?
எல்லாத் தளங்களின் ஓரங்களிலும் விதவிதமான அலங்காரங்கள், ஆன்லைன் பார்வையாளர்கள் அது இது என இருக்கிறதே இதை செய்ய முடியாதா என கில்லியிடம் கேட்டபோது அதெல்லாம் பெரிய விசயங்கள் தனக்கு தெரியாது என்பார். இதன் பொருள் அடுத்த நாள் அந்த வேலை நிறைவேறிவிடும் என்பதே. இதற்கு அவ்வப்போது வாலை முறுக்கிவிடவேண்டும். ஒரு காலத்தில் தமிழ் பதிவுலகில் தோழர்கள் எழுதுவது நேரவிரயம் என வாதிட்ட கில்லி அப்புறம் அதனோடே வாழ ஆரம்பித்தது காலத்தின் கோலம். இதற்குள் வினவின் லோகோ, இன்னும் விரிவாக பல இடங்களில் ஆர்குட், பல இணைய குழுமங்களில் வினவை அறிமுகம் செய்வதை கில்லி முடித்தார்.
குஜராத்தில் வெடித்த குண்டுவெடிப்பை பற்றி ஒரு பதிவெழுதியபோது மாற்றுக் கருத்தாளர்கள் விவாதத்திற்கு வந்தார்கள். சில இசுலாமிய தளங்கள் இதை மறுபிரசுரம் செய்தன. இந்த புதிய அனுபவத்தில் பின்னூட்டத்தில் விவாதிப்பது தேவையானால் பதிலை தனி பதிவாக வெளியடுவது என பயணம் சென்றது.எங்களது தாய்த்த்தளமான வோர்ட் பிரஸ்ஸிலிருந்து வந்த குந்தவை வெளியிட்ட விமரிசனத்திற்கான பதிலை தனி பதிவாக உடன் வெளியிட்டோம். ரவி சீனீவாசும், பி.முரளியும் இதில் விடாமல் விவாதிக்க, சீனீவாசின் தொல்லை காரணமாக அவரை சிறப்பாய் கவனித்தோம். இப்போதெல்லாம் அவர் வினவிற்கு வருவதில்லை, ஏனோ? ஆனால் வினவு.காம் வேலைகள் செய்த நண்பர் ரவியின் தளத்திற்கு சென்று தீவிரவாத வினவிற்கு உதவுகிறீர்களா என்றெல்லாம் நைசாக மிரட்டுவதை மட்டும் அவர் விடவில்லை.
இடையில் ஜெயமோகனின் நவ்வாப்பழம் கட்டுரை, இதை இன்னொரு தோழர் எழுதியதை வெளியிட்டோம். இதையும் பலர் மறுபிரசுரம் செய்தார்கள். நான் கடவுள் எனும் அகந்தை முற்றிய மோகனை குறிபார்த்து வெளுத்தது பலருக்கு மகிழ்ச்சியை தந்தது. இந்தக் கட்டுரைக்காக பிழை காலச்சுவடு தொடங்கி பல இலக்கியவாதிகளின் மின்னஞ்சல்களுக்கு விளம்பரம் செய்தார். படித்திருப்பார்கள், ஆனால் முகம் காட்டவில்லை.
அடுத்த மாதம் முழுக்க பண்பாட்டு விசயங்களைக் குறித்த கட்டுரைகள் வந்தன. இது பல புதியவர்களை வினவிற்கு அறிமுகப்படுத்தியது. ஜீன்ஸ் பேண்டும் பாலியல் வன்முறையும், ரிலையன்ஸ் பிரஷ்ஷில் மனிதக்கறி, குசேலன் உள்குத்து, முதலிய கட்டுரைகள் பெரும் வரவேற்பை பெற்றன. ரஜினி கட்டுரைக்கு ஒரே நாளில் 980 பேர் வந்தனர். கில்லிக்கு உற்சாகம் தாங்கவில்ல, மிச்ச இருபதை நானே கிளிக் செய்து ஆயிரம் ஆக்கியிருப்பேனே என்றார். சூப்பர் ஸ்டாரின் கட்டுரைய பாராட்டி பதிவுலகின் சூப்பர் ஸ்டார் லக்கிலுக் பின்னூட்டமிட்டார். ஏயப்பா லக்கிலுக்கா என ஆச்சரியம் தாளவில்லை. கில்லி சொன்னார் லக்கி கமல் ரசிகர் அதனால்தான்…. இருக்கட்டுமே லக்கிலுக் பெயரைப்போட்டு பலரும் ஊசிப்போன போண்டாக்களை பரபரப்பாக விற்ற காலத்தில் வினவுக்கு அவர் வருவது விசேடமில்லையா?
இடையில் தமிலிஷ், மாற்று என மற்ற திரட்டிகளிலெல்லாம் பதிவுகளை இணைப்பதை கில்லி செய்து வந்தார். தமிலிஷில் வாக்களிப்பதற்கு பலரையும் கில்லி படுத்திவந்தார். ஆனால் பிழை மட்டும் இதை சட்டை செய்யாமல் இருக்க ஒரு ஓட்டுகூட போடமாட்டார், இவரும் வினவு குழுவா என கில்லி அங்கலாய்க்க, அதன்பிறகு அதற்கு தேவையே இல்லாமல் மக்கள் வாக்களிக்க நாளுக்கு நாள் புதியவர்கள் வருகை அதிகமானது. “இப்போது எழுதுபவர்களில் வினவு ஆர்ப்பாட்டமின்றி நன்றாக எழுதுகிறார்” என சுகுணா திவாகர் எழுதியதை ஒரு தோழர் மின்னஞ்சல் இணைப்பில் தெரிவித்தார். அப்போது தீவிரமாய் எழுதிவந்த சுகுணாவின் பாராட்டு மற்றொரு அங்கீகாரம்.
நமீதா அழைக்கிறார், நாசரேத் ஆயர் கட்டுரைக்கு செந்தழல்ரவி வந்தார். கிறித்தவத்தின் தவறுகளை விமரிசிப்பதில் அவருக்கு ஆனந்தம். மற்றொரு உண்மைக் கிறித்தவர் அவர் பெயர் ஸ்டான்ஜோ….என ஞாபகம் அவருக்கு கோபம். ஷகிலா இசுலாம் கட்டுரைக்கு புதிய இசுலாமியர்கள் வந்தார்கள். யாரும் எமது விமரிசனத்தை எதிர்க்கவில்லை என்பது ஆச்சரியம். அட்டகாசமாக பின்னூட்டமிட்ட நண்பர் அல்லாபிச்சை அதன்பிறகு ஆளே காணோம். இந்தக்கட்டுரைக்கு ஆலோசனை தந்தவர் பிழை. அதனால்தான் என்னவோ இன்றும் பாலியல் தேடல்களில் பயணம் செய்வோர் ஷகிலா கட்டுரையின் குறிச்சொற்களுக்காக பிழையாக வினவில் விழுந்து திரும்புகிறார்கள்.
இடையிடையே தமிழ்மணத்திலிருந்து நமக்கு நட்சத்திர அழைப்பு வரப்போகிறது தயாராகுங்கள் என கில்லி அச்சுறுத்தியது போல நான்கு மாதங்களுக்கு பிறகு அழைப்பு வந்தேவிட்டது. அடுத்த ஆச்சரியம். முதல் கட்டுரையாக மொக்கை குறித்த பதிவை எமது மூத்த தோழர் எழுதினார். இவ்வளவிற்கும் அவர் பதிவுலகை அறிந்தவரில்லை என்றாலும் கில்லியின் விரல் நுனி விவரக்கிடங்கை வைத்து எழுதிய கட்டுரையின் வரவேற்பு லக்கிலுக்கால் துவக்கிவைக்கப்பட்டது. இதற்காக அவரது தளத்திற்கு சென்ற ஒருவர் இப்படி இங்கே மொக்கைகளாக போட்டுத் தாக்கிவிட்டு, வினவிற்கு சென்று மொக்கைகளை கண்டிக்கும் பதிவுக்கு வரவேற்பா எனக் கேட்க அதற்கு லக்கி அளித்த பதில்? “நான் மொக்கைதான். ஆனால் எனக்கு மொக்கைகளை பிடிக்காது!” இன்னும் புரியாதவர்கள் அவரிடமே கேட்டுப்பார்க்கலாம்.
நட்சத்திர வாரத்தின் போது அவரசமான அமைப்பு வேலைக்காக வெளியூர் சென்று திரும்பினோம். வீடு வந்தபோது சட்டக்கல்லூரி கலவரம் தொலைக்காட்சிகளில் நெஞ்சை பதறவைக்கும் காட்சிகளோடு வெடிக்கத் துவங்கியிருந்தது. அதற்குள் களத்திற்கு சென்ற பு.மா.இ.மு தோழர்கள் பின்னணி விவரத்தை உடனுக்குடன் அறியத் தந்தார்கள். தொலைக்காட்சி, மற்ற பதிவுகளை பார்த்துவிட்டு நான் விவரங்களை சேகரிக்க உடனே விவாதித்து மூத்த தோழர் எழுதினார். முழு இரவுப் பயணத்திற்கு பிறகு அதிகாலையில் எழுத ஆரம்பித்து நண்பகலில் முடித்த பிறகு கில்லி ஏற்றினார். பப்புவின் உலகிலிருந்து வந்த சந்தனமுல்லை, சங்கர பாண்டி முதல் பல பதிவுலக பிரபல நண்பர்கள் சின்னத்திரையில் திணிக்கப்படும் காட்சிக்கு பின்னே தலித் மாணவர்கள் மீது ஏவப்பட்டிருக்கும் வன்முறையை புரிந்து கொண்டு பேசினார்கள். என்றாலும் பெரும்பாலும் பலர் புதியவர்கள் அதிலும் பிற்படுத்தப்பட்ட அல்லது ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் இந்த இடுகையை ஆத்திரத்துடன் எதிர்த்தார்கள். பதிவுலகத்தின் வாசகப் பரப்பை இதுதான் பெரும்பாலும் ஆக்கிரமித்திருக்கிறது என்பதையும், தப்பித் தவறி இந்த மாய உலகில் வந்து போகும் சில தலித் மாணவர்கள் சிறுபான்மை என்றாலும் தங்களது சிறுவயது, கல்லூரி கொடுமைகளை இந்த சம்பவரம் பெரிதும் ஒத்திருப்பதாக எடுத்துச் சொன்னதையும் வைத்துப் பார்க்கும் போது இங்கே இன்னமும் தலித் மக்களின் வலி உணரப்படவில்லை என புரிந்து கொண்டோம்.
எனவே இதற்காக பு.க, பு.ஜ கட்டுரைகளை உள்ளிட்டு மேலும் சில இடுகைகளை வெளியிட்டோம். அவ்வப்போது ஆதிக்க சாதியை இடித்துரைக்கும் வேலையை செய்யவேண்டுமென்பதையும் குறித்துக் கொண்டோம். இந்தப் பிரச்சினைக்குப் பிறகு பின்னூட்டங்கள் ஐம்பது, நூறு என்ற எண்ணிக்கைக்கு விரிந்து சென்றன. வெளியே பரபரப்பாக பேசப்படும் ஒரு நிகழ்வின் உண்மைப் பின்னணியையும் அது குறித்த சமூகக் கண்ணோட்ட ஆய்வையும் வெளியிடுவது என்ற வேலை வினவின் திட்டத்தில் தானாக ஏறியது. இதனால் தமிழகம் மட்டுமல்ல, பல வெளிநாடுகளில் இருக்கும் தமிழ் மக்களுக்கு உண்மை நிலையை எடுத்துச் சொல்லும் பணியை வினவு எடுத்துக் கொண்டது. வினவு நம்பகமான ஒரு தமிழ்பத்திரிகை என்று பாராட்டினார் ஒரு ஈழத்தமிழர்.
சூடான அரசியல் சமூகப் பிரச்சினைகளுக்கு நடுவே தணிப்பது போல இலக்கியவாதிகளை கவனிக்கும் கட்டுரைகளை அதிகம் வெளியிட வேண்டுமென்பதும் எமது விருப்பம். கருத்துரிமைக்காக காலச்சுவடு போராடும் வேடத்தை கலைத்தும், அவ்வப்போது அடித்துக் கொள்ளும் சாரு, ஜெ.மோ இருவரையும் முழு ஃபுளோவில் மோதவிட்டும், சினிமா பாடல் சான்ஸுக்காக கமலிடம் பல்லிளிக்கும் மனுஷ்ய புத்திரன் என அவ்வப்போது வந்தன. இது போதாது என்பதும் இலக்கியவாதிகள் பலர் இலக்கியத்தின் பெயரால் மறைத்திருக்கும் சமூக விரோத ஆன்மாவை வெளிச்சமிடும் வேலையை அதிகம் செய்திருக்கவேண்டும். இதனால் நாங்கள் இலக்கியத்திற்கு எதிரிகள் என நண்பர் ஜயோராம் சுந்தர் கருதவேண்டாம். வினவின் நூலான இலக்கிய மொக்கையை சாரு ரசித்து படித்ததாக அவரது புகழ் பரப்பும் ரசிகர் ஒருவர் – அவர் யார்? – வேறு ஒரு ஃபாரத்தின் பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தார். இது இலக்கிய மொக்கை 2ம்பாகம் எழுதுவதற்கு உந்துதலாக நிச்சயம் இருக்கும்.
சென்னையில் அடை மழையும், மும்பயில் பயங்கரவாதிகளின் தாக்குதலும் ஒருங்கே நிகழ்ந்தன. மும்பை தாக்குதலின் முழுமையான பரிமாணத்தை விளைவை, ஆறு பாகங்களாக வெளியிட்டோம். இத்தொடரிலும் பெரிய விவாதம் நடந்தது. ஆர்.எஸ்.எஸ் பரப்புரையின் தொடர்பு இல்லாமலே பலர் அந்தக் கருத்துக்களை இயல்பாக பேசுவது இங்கே தெரியவந்தது. இசுலாமியர்களைப் பற்றிய பொய்யான கற்பிதங்களும், வெறுப்பும், பொது மனவெளியில் அழுத்தமாக பதிக்கப்பட்டிருக்கிறது. இதையும் நெம்பி எடுக்க வேண்டுமென்பதும் அசாத்தியமான வேலைதான். சிலர் இந்தியாவில் எங்கு குண்டு வெடித்தாலும் வினவு நியாயப்படுத்தும் என முடித்துக் கொண்டனர். ஆனால் மும்பை இறுதி பாகத்தில் சர்வதேசம் பேசும் இசுலாமிய தீவிரவாதத்தின் முகத்தை இந்து மதவெறியரை அம்பலப்படுத்தும் அதே அலைவரிசையில் எழுதியது அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அந்த பாகத்திற்கு மட்டும் அவர்கள் விவாதிக்க வரவில்லை என்பதில் அறிய முடிந்தது.
ஜனவரியில் சென்னை புத்தக கண்காட்சி. இணையத்தில் மட்டும் அறியப்பட்ட இந்தக் கட்டுரைகளை மக்களுக்கு கொண்டு சென்றால் என்று ஒரு தோழர் கேட்க அந்த ஆலோசனைகளை அமைப்புத் தோழர்கள் ஏற்க புயல்வேகத்தில் ஆறு தலைப்புக்களில் புத்தகங்கள் புதிய கலாச்சார வெளியீடாக வந்தன. அரங்கில் கீழைக்காற்று கடையில் மட்டும் மொத்தம் ஆயிரம் புத்தகங்கள் விற்பனையாயின. இலக்கிய மொக்கை பரபரப்பாக விற்பனையாவதாக கிழக்கு பா.ராகவன் அவரது பதிவில் எழுதினார். இதனாலேயே அம்பானியை தெய்வமாக போற்றும் அக்கம்பெனி எழுத்தாளர்களை நாங்கள் மன்னிப்பதாக இல்லை. மும்பை, சட்டக்கல்லூரி இரண்டு நூல்களிலும் வாசகர்களின் பின்னூட்டங்கள் எல்லாம் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது தமிழுக்கு புதியது. வினவின் விவாதங்களில் சண்டாமிருதம் செய்யும் அண்ணன் ஆர்.வியின் வாதங்களெல்லாம் மும்பை நூலில் இருப்பது அவருக்கு தெரியுமா என்பது தெரியாது.
கண்காட்சிக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் திட்டமிடப்பட்டு இந்த நூல்கள் வெளியிடப்பட்டன. கில்லி, பிழை மற்றும் சில தோழர்களின் பங்களிப்பால் இது சாத்தியமாயிற்று. இந்நூல்களின் முன்னுரைகளெல்லாம் வினவில் வெளியிட்டு வாசகர்களை கண்காட்சிக்கு அழைத்தோம். செந்தழல் ரவி புத்தக கண்காட்சியில் வினவு என்று ஒரு பதிவிட்டு உற்சாகப்படுத்தினார். மொக்கைக்குள்ளும் ஈரம் இருக்கிறது என்பதை அவரது அன்பான எதிரிகள் உணரவேண்டும்.
ஆரம்பத்தில் சராசரியாக ஒரு வாரத்திற்கு ஒரு புதிய இடுகையென்பது பின்னர் மூன்று நாட்களுக்கொன்று, இறுதியில் அன்றாடம் ஒன்றாக நிலைகொண்டது. இதுவும் திட்டமிட்டு நடந்ததல்ல. காலத்தைக் கைப்பற்றும் அவ்வப்போதைய பிரச்சினைகளை உடனுக்குடன் கொண்டு செல்ல வேண்டுமென்பதாலும், அதற்கு உதவும் வகையில் புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் இதழ்களின் பல கட்டுரைகள் சேமிப்பு போல காத்துக்கிடந்தன. அமெரிக்க திவால் என்ற கட்டுரை அப்படித்தான் வெளியிடப்பட்டு பல குழுமங்களில் பிரசுரிக்கப்பட்டு பல்லாயிரம்பேர் படித்தனர். இப்படி இணையத்திற்கு வெளியே உள்ள எமது அமைப்பின் செய்திகள் இணைய வாசகர்களுக்காக கொண்டு சேர்த்தது என்ற வகையில் அதன் பயன்மதிப்பு அதிகம். இத்தகைய கட்டுரைகளுக்கும் பெரு எண்ணிக்கையில் பின்னூட்டங்கள் மாதக்கணக்கில் வந்தவண்ணமிருந்தன.
சத்யம் கட்டுரை, ஐ.டி.துறை நண்பா கட்டுரைகள் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களிடம் பெரும் விவாதத்தை கிளப்பின. இந்தக் கட்டுரைக்கு நண்பர் தமிழ்சசி அவரது கட்டுரை ஒன்றோடு இணைப்பு கொடுத்தார். அப்போது வரவிருக்கும் ஆட்குறைப்பு ஆபத்தை மறுத்த நண்பர்கள் விரைவிலேயே அவை பலித்த சோகத்தை கண்கூடாக பார்த்தார்கள். இப்படி சமூகத்தரப்பில் எல்லாத் தரப்பினரதும் பிரச்சினைகளுக்குள்ளும் வினவு நுழைந்து பலரை அழைத்து வந்தது.
ஈழத்தில் சிங்கள இனவெறி அரசு புலிகளை அழிக்கும் பெயரில் தமிழினப்படுகொலையை அரங்கேற்றிய நேரம் அதன் எதிர்விளைவு தமிழகத்தில் கொந்தளித்த நேரம். வினவும் அதில் முடிந்த மட்டும் தீவிரமாக பங்கு கொண்டது. எமது மொத்த இடுகைகளில் மூன்றில் ஒரு பங்கு ஈழத்திற்காக ஒதுக்கப்பட்டது என சொல்லலாம். பொதுவில் ஈழப்பிரச்சினை வெறும் மனிதாபிமானமாக தமிழக அரசியல் வெளியில் சுருக்கப்பட்டபோது புரட்சிகர அமைப்புகள் அவற்றை இந்தியாவின் மேலாதிக்க நலனுக்காக நடத்தப்படும் சதியை எடுத்துரைத்து மக்களை குறிப்பான அரசியல் முழக்கங்களின் கீழ் அணிதிரட்ட முயன்று வந்தன. அந்த அரசியல் வழிகாட்டுதலில் வினவில் பலகட்டுரைகள், ராஜீவ் காந்தி கொலையை வைத்து செய்யப்படும் அவதூறுக்கு மறுப்பு, முத்துக்குமார் தியாகம் என தொடர்ந்தன.
இதன்மூலம் கணிசமான ஈழத்தமிழ் மக்கள் வினவிற்கு அறிமுகமாயினர். இறுதியில் புலிகள் முற்றிலும் வீழ்த்தப்பட்ட நேரத்தில் ஈழப்போராட்டத்தை ஒரு பறவைப் பார்வையில் நடப்பு சம்பவங்களோடு இணைத்து எழுதப்பட்ட ஈழம் போர் இன்னும் முடியவில்லை என்ற கட்டுரை வலியையும், உணர்ச்சியையும் கருத்தில் கொண்டு மிகுந்த ஆயாசத்துடனும், விவாதங்கள் திருத்தங்களுடனும் எம்மால் எழுதப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு பகல் ஒரு இரவு இதற்காக இடைவெளியின்றி ஒதுக்கப்பட்டு அதிகாலையில் வலையேற்றம் செய்யப்பட்டது. அந்த தருணத்தின் அரசியலையும் உணர்ச்சியையும் ஒருங்கே கொணர்ந்த இந்தக் கட்டுரையை யாழில் மட்டும் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோரால் படித்து விவாதிக்கப்பட்டது.
முக்கியமாக ஈழத்தமிழர்களின் இணைய தளங்கள் புலிகள் ஆதரவு, எதிர்ப்பு என தெளிவான இரண்டு முகாம்களாக பிரிந்திருந்த போது வினவு மட்டும் இந்த இரு தரப்பினரும் விவாதிக்கும் களமாக மாறியிருந்தது. இருவரும் தமது தரப்பை மறுபரிசீலனை செய்யும் கடினமான பணியை மிகுந்த போராட்டத்துக்கிடையில் களத்தின் அனுவபங்களோடு கொண்டு சென்றோம். தீவிர புலி ஆதரவாளரான தமிழ் நிலாவும், தீவிர புலி எதிர்ப்பாளரான டெக்கானும் வினவின் விவாதங்களில் கலந்து கொள்வது எங்களுக்கே புதிய அனுபவம்.
ஈழத்தோடு தேர்தல் வந்த நேரத்தில் வினவின் டாட் காம் வேலைகளுக்காக சில நாட்கள் பதிவு போடவில்லை. தேர்தல் குறித்து, தமிழ்சசி, மாற்றம் நண்பர்களின் நிலையை பரிசீலிக்கும் கட்டுரையெல்லாம் எழுத நினைத்து நடக்காமல் போயிற்று. பாசிச ஜெயா தீடிரென ஈழத்தாயக கொண்டாடப்பட்ட போது அந்த பேயை உள்ளது உள்ளபடி அம்பலப்படுத்தியதிலும், அதே போல கருணாநிதியின் துரோகத்தை ஒருங்கே கண்டித்ததும் இங்கு மட்டும் நடந்த விசயம். மற்ற தளங்களெல்லாம் ஜெயா ஆதரவு, கருணாநிதி ஆதரவு என இருமுகாம்களாக பிரிந்து ஈழத்திற்காக பேசியதும் இங்கே இணைத்து பார்க்க வேண்டும்.
போலிக் கம்யூனிஸ்டுகளை அவ்வப்போது விமரிசித்து எழுதியதை இணையத்தில் இருக்கும் சில அரசியல் தெரியாத சி.பி.எம் அப்பாவிகள் திமிருடன் எதிர் கொண்டனர். எங்களது அரசியல் எதிரிகள் எல்லோரும் செய்யும் விதவிதமான அவதூறுகளை தொகுத்து அவர்கள் எங்களுடன் சண்டையிட்டது நல்ல தமாஷ். அப்போதுதான் இந்த அவதூறு பின்னூட்டங்களை வெளியிடக்கூடாது என நாங்கள் பேசிய போது கில்லி மட்டும் இவற்றை வெளியிடுவதன் மூலம் அவற்றை வலுவிழக்கச் செய்யலாம் என்றார். இறுதியில் அவர் சொன்னதுபோலவே நடந்தது. அநேகமாக எந்த பின்னூட்டத்தையும் வினவில் தடை செய்தது இல்லை என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.
ஒரு நாள் மெயிலில் ஒருகேலிச்சித்திரத்தை அனுப்பி அறிமுகமான ரவி அப்புறம் தேர்தல் வரைக்கும் தீவிரமாக பல சித்திரங்களை வரைந்து கொடுத்தார். மற்றொரு தோழர் பெயரெல்லாம் வேண்டாமென்று வரைகலை கேலிசித்திரங்களை அனுப்பி வந்தார். இப்படித்தான் கேலிச்சித்திரப் பகுதி உருவானது. அதே போல இணையத்தில் காத்திரமாக எழுதும் நண்பர்களை தேடிச் சென்ற போது கலையகத்தில் பெரிய ஊடகங்கள் கூட மறுக்கும் முக்கிய சர்வதேச அரசியல் நிகழ்வுகளை கண்ணோட்டத்தோடும், மக்கள் சார்பிலும் வைத்து எழுதும் தோழர் கலையரசனை கண்டோம். எமது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு ஆப்பரிக்க தொடரை எழுதினார். தற்போது அது முடிந்து அடுத்த தொடரை ஆரம்பிக்கும் நிலையில் இன்னும் ஒரு ஐந்து வருடமாவது தோழர் கலையரசன் வினவில் தொடர்களை எழுதுவார் என நம்புகிறோம். விரும்புகிறோம்.
அப்படித்தான் மருத்துவர் ருத்ரனையும் பிடித்துப் போட்டோம். ஆனாலும் அன்றாடம் பெருகி வரும் மனத் துயரர்களை கவனித்து விட்டு எழுதுவதற்கு இயலாத நிலையில் அவர் இருக்கிறார். என்றாலும் எழுதவேண்டுமென நாங்கள் மட்டுமல்ல நீங்களும் வலியுறுத்தினால் அவரை மீட்டு வரலாம். இருப்பினும் பல பதிவர்களின் பதிவுகளை படித்து எல்லோரையும் உற்சாகப்படுத்தும் வேலையை அவர் செய்வது பலருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொம்பன், அருள் எழிலன், இராவணன், முதலான நண்பர்களும், தோழர் துரை சண்முகம் போன்றோரும் அவ்வப்போது எழுதி வருகின்றனர். வாசகரான அறிமுகமான பெண் தோழர் ரதி இப்போது ஈழத்து நினைவுகளை தொடராக எழுத ஆரம்பித்திருப்பது நீங்களே வரவேற்ற சமீபத்திய நிகழ்வு.
இருக்கட்டும் இந்த ஒரு வருடத்தில் நாங்கள் என்ன கற்றுக் கொண்டோம்? விவரப்பிழைகளை உடனுக்குடன் வாசகர்கள் திருத்துவதால் அதில் கவனமாக இருக்கவேண்டுமென்ற பொறுப்பு. இல்லினாய் தான், இல்லியானய்ஸ் இல்லை என்பார் அந்த அமெரிக்க நண்பர். மேல்சாதி என எழுதுவது தவறு ஆதிக்க சாதி என நினைவுபடுத்துவார் இங்குள்ள நண்பர். பார்ப்பனியத்தை பற்றி எழுதினால் விசுவாமித்தரின் போல அண்ணன் ஆர்.வி வாதிடுவார் என்பதால் நாங்களும் பல கோணத்தில் பார்ப்பனியத்தின் மனித குல விரோதங்களை புரியவைக்க முயன்றோம். வித்தகன் போன்ற ‘நடுநிலைமையாளர்கள்’ சுட்டிக்காட்டும் பிரச்சினைகள் நாங்கள் இன்னும் கருவை கன்வின்சிங்காக எழுதுவதற்கு கட்டளையிடுகிறது. வெளி உலகத்தின் நடைமுறை அறிவு இணையத்தில் குறைவாக இருப்பதால் எதனையும் விலாவாரியாக எழுதுவதோடு எச்சரிக்கையோடு அழைத்து செல்லும் பொறுப்பை கற்றுத் தந்திருக்கிறது.
இருவேறு கருத்துக்கள் பின்னூட்டத்தில் உக்கிரமாக வாதிடும் போது இரண்டின் பலமும் பலவீனமும் எங்களுக்கு தெரிய வருகிறது.
சுருங்கக் கூறுவது அழகு என்றாலும் முழுமையை உணர்த்த வேண்டுமென்பதற்காக எமது கட்டுரைகள் நீண்டுவிடுகின்றன. இதை நண்பர் ரவிசங்கர் சுட்டிக்காட்டினார். கில்லியிடம் இந்தக் கட்டுரை ஆயிரம் வார்த்தைகளுக்குள் எழுதுவதாக கூறிவிட்டு பின்னிரவில் ஆரம்பித்து இப்போது அதிகாலை ஐந்து மணிநேர நிலவரப்படி 2050 வார்த்தைகளில் நிற்கிறேன். இன்னும் எழுத வேண்டியது ஏராளமிருக்கிறது, என்ன செய்யப் போகிறேன்?
வினவின் வாசகர்களும், பதிவர்களும், தோழர்களும் பல விதங்களில் எங்களை பயிற்றுவித்திருக்கிறார்கள் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறோம். வினவின் ஆரம்பத்தில் நிறைய தோழர்கள் எழுதிவந்தார்கள், இப்போது கலகம், குருத்து போன்ற ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் நின்று விட்டது எங்களுக்கு பெரும் குற்ற உணர்ச்சியை தருகிறது. அவர்கள் சொந்த தளங்களில் எழுதாவிட்டாலும் வினவில் எழுதலாம். விவாதங்களில் பங்கு பெறலாம். அதே போல பிரபல பதிவர்களும், பிரபல பதிவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டம் போடும் பிரபலங்களும் இங்கே அதிகம் வருவதில்லை. அவர்களின் உலகம் வேறு, எங்களின் உலகம் வேறு இன பிரிந்தே இருப்பதும் புரிகிறது. இதை எப்படி இணைப்பது?
தனிப்பட்ட வாழ்க்கையின் ரசனைகளை தனியொருவர் எழுதுவதே வலைப்பூ என்றாலும் அந்தவர் சராசரியாக மட்டும் வாழும்போது அவரிடத்தில் என்ன நல்ல இரசனை தோன்றிவிடும்? வாழ்வின் வெளியில் அசாதாரணங்கள் இல்லாத போது சாதரணமே சிறப்பாக எப்படி மாறும்? இப்படித்தான் தமிழ்ப் பதிவுலகம் இருக்கிறது என்பதையும் இங்கே வருத்தத்துடன் பதிவு செய்கிறோம். அதனால்தான் ஆனந்த விகடனிலும் அழுகை சீரியல்களிலும் இடம்பெறும் அரதப் பழசான மாமியார் மருமகள் சண்டைகள் போல இங்கே நடக்கின்றன. இதற்கெல்லாம் மொழியின் அதிகாரம் பற்றிய புரிதல்தான் காரணம் என தோழர் பைத்தியக்காரன் நினைத்தால் அதில் நாங்கள் உடன்படவில்லை. உங்களது வினையும், வாக்கும் ஒன்றோடு பின்னிப்பிணைந்திருக்கிறது. வாழ்க்கையின் பொருளில் சமூக நோக்கும் பயன்பாடும் இல்லையென்றால் தனிப்பட்ட வாழ்வு தனது இருத்தலுக்காக அற்ப பிரச்சினைகளின் பால் வேறு வழியின்றி விழுந்து விடுகிறது. பதிவரசியலின் இந்த போக்குகளை இனிமேல் அவ்வப்போது எழுத விருப்பம்.
இந்தக்கட்டுரைகளை மட்டும் தமிழ்மணம் தனித்தெரிவாக வைத்தால் நல்லது என்ற கோரிக்கை வைத்தாலே பலர் சண்டைக்கு வந்துவிடுவார்கள். ஆனாலும் அவர்கள்தான் தமிழ்மணம் பதிவர் போட்டியில் இரண்டு பிரிவுகளில் வினவின் கட்டுரைகளை முதலிடத்திற்கு தெரிவு செய்தார்கள். தமிழ் மணத்திற்கும், தமிலிஷ் , மாற்று, திரட்டி மற்ற சகல திரட்டிகளுக்கும் எமது நன்றிகள்.
தமிழ் ஸ்டூடியோ நண்பர்கள் சிறந்த வலைப்பதிவருக்கு மாதவிருது வழங்கும் திட்டத்தை அறிவித்து முதல் பதிவராக வினவை தெரிவு செய்தார்கள். அவர்களுக்கும் எமது நன்றிகள்.
எதிர்காலத்தில் செய்யவேண்டியதையும் நிறைய யோசித்திருக்கிறோம். எமது இயக்கங்களின் பாடல் தொகுப்புக்கள், உரைகள், ஆடியோ பேட்டி, வீடியோ நிகழ்ச்சிகள், நூல்கள், பு.க,பு.ஜ இதழ்கள் அத்தனையும் வலையேற்றம் செய்யும் பிரம்மாண்டமான கனவும் உண்டு. இதற்கு நாலைந்து கில்லிகள் வேண்டும். மார்க்சியக் கல்வி, அரசியல் வாழ்க்கையின் அனுபவங்கள், கேள்வி பதில் என நீண்ட திட்டங்களும் உண்டு. சில முக்கியமான நிகழ்வுகளை வினவில் நேரடியாக காட்டும் யோசனை கூட இதெல்லாம் எப்படி சாத்தியமென்பது தெரியாவிட்டாலும் உண்டு. ரவிசங்கர் போன்ற நண்பர்கள் அதற்கு உதவுவார்கள்.
ஒரு வருடத்தில் 140 நாடுகளிலிருந்து ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஹிட்ஸ்கள், 6800 மறுமொழிகள், இதில் தவிர்க்க இயலாமல் வினவின் பெயரில் போட்ட மறுமொழிகள் நூறுக்கும் குறைவே. மற்ற நண்பர்களைப் போல நாங்கள் மறுமொழிகளுக்கு நன்றி சொல்வதில்லை. சொல்லியிருந்தால் இன்னும் ஒரு ஐயாயிரம். இருக்கட்டும். பிரமிப்பாக இருக்கிறது. இப்படியெல்லாம் நடக்குமென்று நாங்கள் எதிர்பார்த்ததில்லை. நடந்திருக்கிறது. அதனால் சற்றே பயமாகவும் இருக்கிறது. ஆனாலும் இனி வினவின் பாதையை நீங்களும் வினவுமே தீர்மானித்துக் கொள்வீர்கள். புரட்சியின் ஒரு சிறு மாதிரியை எங்களுக்கே காட்டிய வினவின் இந்த சிறு வெற்றியை எங்களது ஆசான்களுக்கு அர்பணிக்கிறோம். அது சரி, எமது ஆசான்கள் யார்?
நல்லது நண்பர்களே இனி உங்களைப் பற்றி…….
வினவின் இத்தனை பிரயத்தனங்களும் எதற்காக..?வினவு எங்களது மாபெரும் அரசியல் வாழ்வின் ஒரு துளி. இந்தக்கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும் போது ஆயுள்தண்டனை பெற்று சிறையில் அரசியல் உணர்வை இழக்காமல் வாடும் தோழர்களை நினைத்துப் பார்க்கிறேன். கடந்த காலத்தில் எதிரிகளுடனான மோதலில் உயிரை தியாகம் செய்த தோழர்கள் சமீப காலம் வரை உண்டு. ராகுல்காந்தியை மறித்ததில் துவங்கி பல்வேறு வழக்குகளுக்காக எமது தோழர்கள் நீதிமன்றத்திற்கு அலைந்த வண்ணமிருக்கிறார்கள். போராட்டத்தினால் பணியிழந்து அரசியல் வேலையை அதிகப்படுத்தியிருக்கும் தோழர்கள் இருக்கிறார்கள். இளவயதிலேயே தனது வாழ்வை முழுநேர அரசியிலுக்கு அர்ப்பணித்தவர்கள் ஏராளம். கலப்பு மணம் செய்து ஊரையும் உறவையும் பகைத்துக் கொண்டு கிராமங்களில் தம்பதி சகிதராக போராடும் முகங்களும் வந்து போகின்றன. சிறுவயதிலேயே கலைக்குழுவிற்கு வந்து தமிழகம் முழுவதும் தமது குரல்களால் பயணம் செய்த அந்த தோழர்களின் கடுமுழைப்போடு ஒப்பிடும் போது இந்தக் கட்டுரை எழுதுவது ஒன்றும் பெரிய விசயமல்ல. வரும் சனி, ஞாயிறு தமிழகத்தின் எல்லாப் பேருந்து நிலையங்களிலும், சென்னையின் புறநகர் ரயில்களிலும் எமது தோழர்கள் பத்திரிகை விற்பனை, பிரச்சாரம், நிதி வசூல் என தனியாக, சிறு அணியாக செல்வதற்கு முன் இப்போது தூக்கத்தை விட்டு எழுந்திருப்பார்கள். வன்னியிலோ எதுவுமின்றி நம் மக்கள் இன்னும் எத்தனை காலம் சிறைபடநேரிடுமோ என்பது தோழர் இரங்குவோனுக்கு மட்டுமல்ல பலருக்கும் நெருப்பாய்ச் சுடுகிறது.
தண்டகாரண்யாவிலும், பீகாரிலும் கானகத்தில் கடும் இன்னல்களுக்கிடையே மாவோயிச தீவிரவாதிகள் என்ற பெயரில் பழங்குடி மக்களை விடுவிக்கும் அந்த தோழர்களெல்லாம் நகரங்களிலிருந்து தமது நடுத்தர வாழ்வை உதறிவிட்டு சென்றவர்கள். ஈராக்கிலோ நாளைக்கு வெடிப்பதற்கு இன்றைக்கு ஒரு தற்கொலைப் போராளி விழித்துக் கொண்டிருப்பான்.
பழைய உலகின் அநீதிகளுக்கு எதிராக புதிய உலகம் படைக்கும் முயற்சிகள் இப்படித்தான் உலகெங்கும் போராடுகின்றன. மனித குலத்தை வருங்காலத்தில் முற்றிலும் அடிமைச் சிறையிலிருந்து விடுவிக்க எத்தனிக்கும் இந்தப் போராட்டத்தில் நீங்கள் பார்வையாளரா இல்லை பங்கேற்பாளரா?
வந்தவர்கள் பார்ப்பதும், பார்த்தவர்கள் பங்கேற்பதும், பங்கேற்றவர்கள் களத்தில் இறங்குவதும், இறங்கியவர்கள் தோழர்களாக பரிணமிப்பதற்கும்தான் வினவு. இதன்றி வேறு நோக்கம் எதுவுமில்லை என்பதை பகிரங்கப்படுத்துவதில் தயக்கம் இல்லை. அல்லும் பகலும் நெருக்கித் தள்ளும் வாழ்வில் சுயநலத்தினால் உந்திப்பட்டு வாழ்ந்தால் நமக்கும் மந்தைகளுக்கும் என்ன வேறுபாடு? பின்னொரு நாளில் நான் இப்படிக் கழித்தேன் என்று நினைவு கூர்வதற்கு மந்தைகளிடம் ஏதுமில்லை. நானிலிருந்து விடுபட்டு நாமுக்காக வாழ்வதே வாழ்க்கையின் முழுமையை ஒளியூட்டி உணர்த்துகிறது. இது மதவாதிகள் கூறும் ஆன்ம விடுதலை என்ற சொர்க்கத்தின் இன்பத் திறவுகோலல்ல. சமூகவிடுதலைக்காக தன்னை இழந்து தம்மை மீட்கும் மனிதகுலத்தின் ஆகப்பெரும் கனவு. இந்தக் கனவுக்காக வாழ்ந்தோருக்கு நினைவு கூற எதுவுமில்லை. அவர்கள் விட்டுச்சென்ற நினைவடித்தடங்களைத்தவிர. தங்களை கிடத்தி அவர்கள் சமைத்திருக்கும் அந்த ராஜபாட்டையில் நாம் ஓடிச் சென்று அடுத்த பாதையை செதுக்கவேண்டும். அப்போது நீங்கள் கசடுகளை இழந்து நெருப்பில் நுழைந்து வைரமாய் புடம்போடப்பட்டு ஒளிர்கிறீர்கள். அடுத்த தலைமுறையில் வரும் மனிதர்கள் இந்த இருட்டு குகைகளின் தடையை நம் ஒளியால் கடக்கிறார்கள். பாதையும் முடிவதில்லை. பயணங்களும் சோர்வதில்லை. இருப்பது ஒரே வாழ்வு, தடுப்பதும் தாண்டுவதும் ஒரே முறைதான். வாருங்கள் அந்த நெடிய பயணத்தின் சாகசத்திற்கு உங்களையும் அழைத்துச் செல்கிறோம்.
பின்னொரு நாளில் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.
தமிழகத்தில் இருக்கும் நண்பர்கள் எம்முடன் தொடர்பு கொண்டால் இந்தப் பாதையின் அரசியல் பரிமாணத்தை நேரிலே தெரிந்து கொள்ளலாம். உங்களால் இயன்ற அளவு களப்பணியில் இறங்கலாம்.
இந்த மாபெரும் பணிக்கு உங்களது உதவித் தொகையை தருமவானாக அல்ல, குற்ற உணர்ச்சியுடன் கூடிய கடமை உணர்ச்சியுடன், கிள்ளியல்ல அள்ளி, உங்களால் முடிந்ததை அல்ல உங்களால் முடியாததை, கோவில் உண்டியல் போல அல்ல, குடும்ப பொறுப்பைச் சுமக்கும் இன்பச்சுமையாக நிதி வழங்கலாம். வழங்க வேண்டும். புரட்சிகர அமைப்புகள் தமது அரசியல் பணிக்கு மக்களிடம் வாங்கும் மரபை இங்கே நாங்களும் வைத்திருக்கிறோம். எங்களது அரசியல் பணிக்கு நீங்கள் வழங்கும் ஆதரவில் வினவின் இருப்பும் நலமுடன் வளரும். வினவில் இப்போது நிறைய பார்வையாளர்கள் வந்தாலும் எப்போதும் விளம்பரங்கள் போடுவதாக இல்லை. விளம்பர உலகின் வழி முதலாளிகள் ஊடகங்களை அடக்கியாளும் வழியை நாம் அறிவோம். எமது பத்திரிகைள் கூட இப்படித்தான் பல ஆண்டுகளாய் நடத்தப்படுகின்றன. வினவிலும் கம்யூனிஸ்டுகள் உண்டியலேந்த ஆரம்பித்துவிட்டார்கள் என ‘அவர்கள்’ புரளிபேசலாம். ஆனால் மக்களின் புரட்சிக்கு ஆள்பவர்களிடமும், அரசுகளிடமும் கையேந்த முடியாது. ஏந்தினால் அது எதிர்ப்புரட்சி. மக்களிடம் கேட்பது கம்யூனிஸ்ட்டுகளின் உலக வழிமுறை. ஆதரியுங்கள். அமைப்புத் தோழர்கள், வெளிநாட்டில் இருக்கும் தோழர்கள், பு.க, பு.ஜ வாசகர்கள், ம.க.இ.கவின் அரசியலை அறிந்தவர்கள் அனைவரும் இதை கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து உதவ வேண்டும். வினவிற்கு புதிதாய் வந்தவர்கள் எமது அரசியல் செயல்பாடுகளை சீர்தூக்கி பார்த்து இந்த பணிக்கு கடமையுடன் உதவலாம். உங்களது நிதி உதவி எங்களது பல பிரச்சினைகளைத் தீர்க்கும்.
வினவின் வாசகர்கள் தரும் நன்கொடைக்காகவே தனிச்சிறப்பாக ஒரு வங்கிக் கணக்கு ம.க.இ.க மாநிலப் பொருளாளர் தோழர் சீனிவாசன் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு உலகெங்கிலிருந்தும் அனுப்பலாம். விரைவிலேயே இந்த பணியை இன்னும் எளிமைப்படுத்தி வசதிகள் செய்கிறோம். கணக்கு விவரம்,
SRINIVASAN.R
STATE BANK OF INDIA, CHETPUT BRANCH, CODE NO 1852
A/C NO : 3 0 8 2 6 2 2 5 4 2 4
காசோலை, வரைவோலை அனுப்பவிரும்புவர்கள் SRINIVASAN.R என்ற பெயருக்கு எடுத்து அனுப்பலாம். தபால் முகவரி
SRINIVASAN.R, PUTHIYA KALACHARAM,
NO.16, MULLAI NAGAR SHOPPING COMPLEX,
SECOND AVENUE, ASHOK NAGAR, CHENNAI, 600 083.
PHONE:044- 23718706.
நேரில் தரவிரும்பவர்கள் இந்த முகவரிக்கு வருகை தரலாம். தொலைபேசி மூலம் உறுதி செய்து வினவு தோழர்களையும் இங்கு சந்திக்கலாம்.
நன்கொடை அனுப்பும் நண்பர்கள் அதை தனிமடலிலும் தெரிவிக்குமாறு கோருகிறோம். அனைவருக்கும் ரசீதுகள் மின்னஞ்சலில் அனுப்பப்படும்.
ஏற்கனவே நாங்கள் கோராமலேயே சில நண்பர்கள் மாதந்தோறும் உதவித்தொகை அனுப்பிவருகிறார்கள். அவர்களுக்கு எமது நன்றிகள்.
சரி,
ஒராண்டு அனுபவத்தையும், கோரிக்கையும் எங்கள் தரப்பில் வைத்துவிட்டோம். விடுபட்டதை நீங்கள் எடுத்து தருவீர்கள். ஆனால், வினவு குடும்பத்தின் அங்கத்தினரான உங்களது அனுபவத்தை பின்னூட்டத்தில் தெரிவியிங்கள், அப்படி முடியவில்லை என்றால் அலைபேசியில் சொல்லுங்கள்.
பார்க்கலாம்.
ஓராண்டு முடிந்து விட்டது. அடுத்த ஆண்டு துவக்கத்தை ஒட்டி வரும் திங்களன்று ஒரு சிறப்பு கட்டுரை மைக்கேல் ஜாக்சனைப் பற்றியும் அடுத்த நாட்களில் ஆரம்ப கால வினவில் வாசகர் வரவேற்பு பெற்ற கட்டுரைகளும், ஈழம் குறித்த மூன்று முக்கிய வெளியீடுகளும் வழக்கமான தொடர்களும் வெளியிடப்படும்.
ஒரு வழியாய் வினவின் ஒராண்டு அனுபவத் தொகுப்பை எழுதி முடித்த போது வார்த்தைகள் 2984 காட்டுகிறது.
ஆயினும் காத்துக்கிடக்கும் பணிகளைக் காணும்போது இவை போதாது என்றே தோன்றுகிறது ! சரிதானா?
நட்புடன்
வினவு
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
தொடர்புடைய பதிவு
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் . உங்கள் பணி மேலும் தொடரட்டும்.
சின்ன சந்தேகம். என்பெயருக்குப் பக்கத்தில் அடைப்புக்குள் “நடுநிலையாளர்” என்று போட்டு விட்டீர்களே! என் எண்ணப் போக்கில் ஒரு பக்க சார்பு ஏதேனும் தூக்கலாகத் தெரிகிறதா என்ன?
இல்லை, வித்தகன் ஒரு விசயத்தைப் பார்க்கின்ற கண்ணோட்டத்தில் உள்ள வேறுபாடுகள்தான். உங்கள் நோக்கு எங்களது விசயத்தை விமரிசனம் செய்யும் அளவுக்கு எங்கள் தரப்பில் வலு குறைவாக இருப்பதைத்தான் அப்படி சொல்கிறோம். மற்றபடி தூக்க கலக்கத்தில் எப்படியும் வித்தகன் பெயரை சேர்க்கவேண்டுமென்ற ஆவலில் ஒரு ஃபுளோவில் அந்த அடைப்புக் குறி போடப்பட்டு விட்டது. எங்களை பரிசீலிக்கும் விசயத்தில் உங்களை அப்படி போட்டுவிட்டதற்கு பொறுத்தருள்க !
வினவு
🙂 அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!
வினவு கூட்டுழைப்புக்கு கிடைத்த வெற்றி. மொக்கை பதிவுகள் ஆயிரம் இருக்க கருத்து பதிவுகளையும் தமிழர்கள் விவாதிக்க தயாரகவே உள்ளனர் என்பதை அறியும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தங்களின் சமூகப்பணி தொடர வாழ்த்துக்கள்.
நன்றி தோழர் சுனா பானா,
இந்தத் தோழர் வினவின் ஆறுமாத சாதனைகளை பட்டியலிட்டு அவர் தளத்தில் வாழ்த்தினார். வினவில் ஈழம் குறித்த இடுகைகள் எல்லாவற்றுக்கும் இணைப்பு கொடுத்து ஒரு பதிவிட்டிருந்தார். அது பலருக்கும் பயனுள்ளதாக இருந்தது. மேலும் ஐ.டி துறை நண்பா கட்டுரையை அழககாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எமக்கு அனுப்பியிருந்தார். அவருக்கு எமது வாழ்த்துகள்
வினவு
இங்கே பலருக்கு நன்றி சொல்ல விடுபட்டிருக்கிறது. எல்லா முற்போக்கு வலைத்தளங்களுக்கும் இணைப்பு கொடுத்திருக்கும் தோழர் சூப்பர் லிங்கஸ், தோழ்ரகளின் இடுகைகளைத் தேடிப்பிடித்து தமிழரங்கத்தில் வெளியிடும் தோழர் இரயாகரன், மற்றும் வினவுக்கு தங்களது தளங்களில் இணைப்பு கொடுத்த அத்தனை பேருக்கும் நன்றிகள்.
வினவு
இணையம் மூலம் கருத்துகளை எடுத்துச் செல்வதலில் வினவு, தன் சமூகப் பங்கை விரிவுபடுத்தி வருகின்றது. எமது புரட்சிகர வாழ்த்துகள்.
அன்றாட நிகழ்வுகள் பற்றி உடனுக்குடன் புரட்சிகரமான ஒரு சமூகப் பார்வை எடுத்து செல்வதில், வினவு தளம் மேலும் உயிரோட்டத்துடன் வளர வேண்டும் என்ற ஆதங்கத்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
இலங்கை நெருக்கடியின் போது தமிழனவாதப் போலிகளின் புலி வேஷத்தைத் தகர்த்தது வினவு. மாறாக புரட்சிகர மக்கள் கோசங்களை முன்னிறுத்திய போராட்டங்களை, உலகத்தின் முன் கொண்டு வந்தது வினவு தளம்தான். இந்த வகையில் எம் போராட்டத்துக்கு துணைவனாக, தோழனாக வினவு தளம் எம்முடன் எப்போதும் இருந்ததுஈ இருக்கும். ஈழத் தமிழ் மக்களுக்காக, அவர்களின் உரிமைக்காகவும் வினவு தளம், புலி மற்றும் அரச பாசிசத்தை உறுதியுடன் எதிர்த்து நின்றது.
தமிழக புலி ஈழ ஆதாரவளார்களை எதிர் கொள்வதற்கும், புலிப் பாசிசத்ததை நாம் நேரடியாக எதிர் கொள்வதற்கும் இடையில் உள்ள வேறுபாடு, ஒரே வாசகர் தளத்தில் முரண்பாடாக இருப்பது என்பது எமக்கிடையிலான முரண்பாடல்ல. பாசிசத்ததை எப்படி எந்தத் தளத்தில் வைத்து முறியடிப்பது என்பதில், பாசிட்டுகளையும் அதன் பின் தவறாக நிற்பவர்களையும் வேறுபடுத்தி அனுகும் அனுகுமுறை இங்கு எம் அனைவர் முன்னும் அவசியமானது. உதாரணமாக இந்துவ பார்பானிய பாசிட்டுகளையும், இந்து மக்களை எப்படி வேறுபடுத்துகிறோமோ அப்படி. இங்கு பக்தனாக பக்தியின் பெயரில் இரண்டும் நகமும் சதையுமாக உள்ளது. தமிழனின் பெயரில் மனிதபிமானமாக பாசிசம் உரிமையும் கலந்துள்ளது. இதை வேறுபடுத்தி போராடும் நுட்பத்தை, மேலும் நுட்பமாக நாம் கற்றுக் கொள்ளவேண்டும்.
உலகத்ததை சர்வதேசியத்தின் எல்லைக்குள் ஒரு கிரமமாக்கி, எம்முடன் அதை இணைய வைத்த வினவின் தோழமையும், அதன் புரட்சிகர சிந்தனையும் மேலும் மேலும் தொடர வாழ்த்துகள்.
உங்களின் இந்த ஆக்கபூர்வமான பணி சிறக்க வாழ்த்துக்கள். உங்களிடம் ஒரு வேண்டுகோள், வினவிலே உடனுக்குடன் கட்டுரை எழுதும் நீங்கள் புதிய கலாச்சாரம் இதழையும் மாதந்தோரும் வெளியிட்டால் ந்ன்றாக இருக்கும்.
தோழர் neri ,
நாங்களே பு.க, பு.:ஜவில் உள்ள கட்டுரைகளை பாதி நாட்கள் வெளியிட்டு வருகிறோம். இதில் நாங்களெல்லாம் பு.கவில் எழுதும் அளவிற்கு இன்னும் வளரவில்லையே தோழர். எனினும் வினவின் சில கட்டுரைகள் பு.கவில் வந்துள்ளன. எங்களால் முடிந்த ஆதரவை பு.கவிற்கு அளிப்போம்.
வினவு
நன்றி தோழர் இரயாகரன், உங்கள் தோழமையும், அரவணைப்பும் எங்களை எப்போதும் உற்சாகப்படுத்தும்.
வினவு
வினவு குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
என்னை அண்ணன் என்று சொல்லி என் வயதை குத்தி காட்டுகிறீர்களே! 🙂
அதற்குத்தான் ஆர்.வி நீங்களும் தோழர் என்று ஆகிவிடுங்கள் என்று மல்லுக்கட்டுகிறோம். தோழர் ஆர்.வி என ஆகிவிட்டால் அப்புறம் என்ன, எப்போதும் இளமைதான்!
வினவு
வினவு தளத்துக்கு வாழ்த்துகள் – ஒரு பதிவு.
http://koottanchoru.wordpress.com/2009/07/18/வினவு-தளம்/
ஆர்.வி, உங்க விமர்சனம் படிச்சேன், சில விசயங்களை தப்பா புரிஞ்சுகிட்டு எழுதியிருக்கீங்க, இருந்தாலும் நல்ல விமர்சனம். ஆனாலும் தொடர்ந்து வினவுல நீங்க விவாதம் செய்யனும்
வினவு, ஆர்வியோட கருத்த 2ம் வருட இறுதிக்குள்ளார மாத்திடிங்கன்னா அது ஒரு சாதனை
இருவருக்கும் வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி தோழர்,
நெருப்பில் நடந்துகொண்டே நீரை சுமப்பது போலத்தான் இணையத்தில் புரட்சிகர , நடுநிலை அரசியலை பேசுவது. வெல்வதற்கு இமயம் இருக்கும் போது லோக்கல் கரடுகளெல்லாம் ஒரு பொருட்டாகவே இருக்காது. உண்மையில் இது ஒராண்டு நிறைவுக்கான மகிழ்ச்சி பதிப்பு என்பதை விட அதிகமாகவே தலை குனிய வைக்கிறது எங்களை என்ன செய்தாய் மக்களுக்கு? பதில் சொல்ல முடியவில்லை கண்டிப்பாய் காலம் பதில் சொல்லும். மக்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மாபெரும் தோழர்களுக்கு வீர வணக்கம்.
என்ன பண்றது?
ஒவ்வொரு முறையிலும்
பதில்களுக்காய் என் கேள்விகள்
ஆனால் கேள்விகளே உன்னிலிருந்து
பதில்களாய்……
வறுமையில் உழலும் விவசாயி
வேலையிழ்ந்த தொழிலாளி
பாலின் சுரப்பை நிறுத்திய
மார்பகங்கள் அரைக்க
மறந்த இரைப்பைகள்
அடங்கிப்போன கூக்
குரல்கள் எல்லாவற்றுக்கும்
பதில் சொல்கின்றாய் “என்ன பண்றது?”
போதைதலைக்கேறாது கண்டதையும்
குடித்து புரள்கின்றன
மெத்தைகள்….
தெரியும் இடத்திலெல்லாம்
மாட்டிக்கொண்டு திரிகிறார்கள்
இலவசமாய்
துரோகத்தனத்தையும் சேர்த்து…..
எல்லாவற்றுக்கும் ரெடிமேடாய்
பதில் சொல்கிறாய் “அதுக்கு
என்னபண்றது?”,முதல்ல
நம்ம வாழ்க்கையை பார்க்கணும்…..
சரி பார்க்கலாம் உன்
வாழ்க்கயை காலை முதல்
மாலை வரை ஒவ்வொரு நொடியும்
நீ விலை பேசப்படுகிறாயா இல்லையா?
உலகமயம் ஆணையிட்டப்படி
நுகர் பொருட்களால்
நுகரப்படுகின்றாயா இல்லையா?
நீ உண்ணும் உணவை
உடுத்தும் ஆடையை,
ஆபரணங்களை நெஞ்சில்
கை வைத்துசொல் உனக்காகத்தான்
மேற்கொள்கின்றாயா? இப்போதும்
மவுனமாய் உதிர்க்கின்றாய் “என்னபண்றது?”
நான் மவுனமாய் அல்ல
உரக்கச்சொல்லுவேன்
உன் “என்னபண்றது” என்பது
தான் உன் பதில்
தப்பித்தவறி எதுவுமே
உனக்கு செய்து விடக்கூடாது
என்பதில் பிறந்த
பதில் அது…..
தரகர்களின் சூறையாடலில்
சிக்கி திணறுகின்றது உன்
தேவைகள்
நாளை கூட
நாளையென்ன நாளை
இக்கணமே கூட நீ
எறியப்படலாம் சக்கையாய்……
இப்பொழுதாவது உண்மையாய்
கேள் ” என்ன பண்றது?”
இருக்கின்றது அது தான்
போர்
உனக்கான , நமக்கான
வாழ்வை
தேர்ந்தெடுக்க
நாமே போராளியாவோம்.
இனியும் புலம்பிக்கொண்டிராதே
“என்னபண்றது”என்று அது
அடிமைகளின் ஆசை மொழி.
சுமார் ஆறு மாதத்துக்கு முன்னே கலகத்தில் வெளியிட்ட வினவு கட்டுரையிலிருந்து சில பகுதிகள்
கேள்விக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இங்கு இல்லை என்பது தான் உண்மை.ஆனால் கேள்வி கேட்கவே கூடாத பல புனிதங்கள் வரிசையாய் நிற்கின்றன.அவற்றை வெட்டி வீழ்த்தாது மக்களுக்கு கண்டிப்பாய் விடுதலை இல்லை.புனிதங்களுக்கு கல்லறை கட்டும் வேலையை செய்யும் வினவை கண்டிப்பாய் பாராட்டித்தான் ஆக வேண்டும்,பொழுதுபோக்கென கூறி புரளிகளையும் புரட்டுகளையும் பேசும் இந்த வலைஉலகில் வலைக்கு வெளியே பரந்து பட்ட மக்கள் உலகம் இருகின்றது அது இன்னமும் அடிமையாயிருக்கின்றது,அந்த அடிமை விலங்கை உடைக்க போராடி நம்மையும் அப்போர்க்களத்திற்கு அழைத்து செல்லும் வினவின் பதிவுகள் தொடர வேண்டும்.மீண்டும் சொல்வோம் இது மகிச்சிகரமான விசயமே ஏனெனில் மகிச்சி என்பது போராட்டம் தானே.
மன்னிக்கவும் மறுமொழி சற்று பெரிதாகிவிட்டது
வினவின் ஆரம்ப காலம் முதல் எல்லா இடுகைகளுக்கும் வந்து பின்னூட்டமிடுவது, விவாதிப்பது என்று சுறுசுறுப்பாய் இருக்கும் தோழர் கலகத்தைப் போன்று மற்ற தோழர்களும் இயங்கினால் எப்படி இருக்கும்?
வினவு
உங்கள் தளத்தை பற்றி அல்லது உங்கள் எழுத்துகள் பற்றி சொல்ல இதைவிட சிறந்த வார்த்தைகள் எங்களுக்கு கிடைக்கவில்லை என்பதால் ….
//இந்த ஆசாமிகள் தங்கள் கருத்தியல் எதிரிகளிடமும் தங்களுக்குள்ளேயும் ‘ விவாதிக்க ‘ பயன்படுத்தும் வசைகள் [இதற்கு புதிய கலாச்சாரம் கேடயம் முதல் ஒரு பெரிய மரபு உண்டு] குறித்து யாராவது சமூகவியல் ஆராய்ச்சி செய்தால் இவர்களை மேலும் நுட்பமாக புரிந்துகொள்ள முடியும். பெரும்பாலும் அடக்கப்பட்ட பாலுணர்வின் திரிபுநிலைகள் அவை. தஞ்சைப்பகுதி நிலவுடைமைச் சமூகத்தின் உருவாக்கங்கள். பத்துவருடங்கள் முன்புவரை நொண்டி, அலி, பொட்டை என்ற வசைகளை இவர்கள் ஒவ்வொரு எழுத்திலும் காண முடியும். இதோ விளக்குபிடித்தல், மாமா வேலை. [ஏன் தோழர் , பாலியல்தொழிலாளியும் ஒரு பாதிக்கபப்ட்டவர்தானே? விளக்குபிடிப்பவனும் ஒரு அப்பாவி தொழிலாளிதானே? அவனுக்கு உங்கள் புரட்சி உதவாதா? அந்த ‘பொலிடிகல் கரெக்ட் நெஸுக்கு எப்போது வருவீர்கள்?]
சென்ற முப்பது வருடங்களில் இவர்கள் எழுதித்தள்ளிய வசைக்குவியல்கள் தமிழ் பண்பாட்டுத்தளத்தில் உருவான பெரும் குப்பைமேடு. பலவகையான உளவியல் உள்ளோட்டங்கள் கொண்டவை அவை. ஒரு பெரும் சமூகவியல் பகுப்பாய்வுக்குரிய கச்சாப்பொருட்கள்.//
ஜெமோ உங்களை போன்ற இன்னொருவருக்கு எழுதியது உங்களுக்கும் அப்படியே பொருந்துவதால் காப்பி பேஸ்ட்
மேலும் படித்து இன்புற http://jeyamohan.in/?p=544
மதி-இண்டியா
(படிக்காமல் தாண்டிப்போகும் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவது நேரவிரையம் என்றாலும் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்தால் உங்கள் நோய சரியாகலாம் அல்லது அதிகரிக்கலாம் எனல்தால்)
மதி இண்டியா மறக்காமல் உங்கள் கடவுளுக்கு மணியாட்டி, பின்னூட்ட அபிஷேகம் செய்திருக்கும் பக்தியை பார்க்கும் போது ஜேயேந்திர சரஸ்வதிக்கு பாத பூஜை செய்யும் பாலபெரியவாள் தோற்றார் போங்கள், அபாரம். ஆனாலும் நண்பரே உங்கள் சுய இன்ப மேதை பகவான் ஏதோ ஒரு கதையில் மனுஷ்ய புத்திரனை ஏதோ முடமான விலங்கொன்றின் பெயரில் விளித்தாராமே, இத்தகைய பாரத நாடே வியக்கும் வீரமெல்லாம் எம்மிடம் இல்லையே பண்டிதரே, அந்த வகையில் நாங்களெல்லாம் பச்சைப் பிள்ளைகள். எங்களைப் போய் இப்படி……
வினவு
தகவலுக்காக : ஜெயமோகன் ஆசிரியராக இருந்த பத்திரிகையில் வந்தது அது – ஆனால் ஜெமோ அதை எழுதவில்லை.
ஆமாம் சுந்தர் நீங்கள் எழுதியதும்தான் நினைவுக்கு வருகிறது.
// “ஆனாலும் நண்பரே உங்கள் சுய இன்ப மேதை பகவான் ஏதோ ஒரு கதையில் மனுஷ்ய புத்திரனை ஏதோ முடமான விலங்கொன்றின் பெயரில் ஆள் வைத்து எழுதி விளித்தாராமே” // இப்படி திருத்திவிட்டால் சரிதானே?
இன்று மட்டும் பின்னூட்டமிடும் எல்லோருக்கும் நன்றியும் பதிலும் அளிக்கிறோம். இப்படி வருடத்திற்கு ஒரு தடவைதான் செய்ய முடியும், இருக்கட்டும். இன்னும் எங்கள் தலைவர் தோழர் அசுரனைக் காணோம்? இன்று மட்டும் தலைவர் கம்பீரமாக அந்தப் பெயரிலேயே வருவாரா?
வினவு
வாழ்த்துகள். என் தவறு புரிகிறது, விரைவில் சரிசெய்ய முயல்கிறேன்
நன்றி டாக்டர், உங்கள் தொடருக்காக ஏராளமானோர் காத்திருக்கிறார்கள்.
வினவு
நாட்டில் மொள்ளமாரி, முடிச்சவுக்கி, பொறம்போக்கு, ரவுடி, மக்கள்ப் பணத்தை தின்று தீர்ப்பவன் என எல்லோரும் பிறந்தநாள் கொண்டாடும்பொழுது, மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்தின் ஒளியில் உலக விசயங்களை சமரசமில்லாமல் எழுதும் வினவு-க்கு பிறந்த நாள் தாராளமாய் கொண்டாடலாம்.
பதிவுலகம் பற்றி ஒன்றுமறியாத காலத்தில், ஏதோ ஒன்றைப் பற்றி தேடும் பொழுது, பதிவுலகம் அறிமுகமானது. அதற்கு பிறகு பல பதிவர்கள் எழுதியதை படித்த பொழுது, பெரும்பாலும் மொக்கையாக இருந்தது. பொறுத்து, பொறுத்து ஒரு சமயத்தில் வெறுத்துப்போய் தான் “வலையுலகமும் நொந்தகுமாரனும்” என்ற பெயரில் வலைத்தளமே தொடங்கினேன். பல மொக்கைப் பதிவர்களை, பதிவுகளை கலாய்த்தும் பின்னூட்டங்கள் இட்டுக்கொண்டிருந்தேன். எழுதிப் பழக்கமில்லையென்றாலும், நானே சொந்தமாய் சமூக விசயங்கள் குறித்து எழுத துவங்கினேன்.
இந்த நாட்களில் தான் ‘வினவு’ அறிமுகமானது. துவக்க கட்டுரைகளைப் படித்த பொழுது, வலைத்தளம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன். வேலை நிலைமைகள் என்னதான் வாட்டியெடுத்தாலும், வினவு தளத்தை தவறாமல் வாசித்து வருகிறேன். பின்னூட்டங்களும் இடுகிறேன். என்ன ஒரு வருத்தம்! நேரமின்மையால் விவாதங்களில் பங்கு கொள்ள முடியவில்லை.
என்வாழ்வில் சிந்தனையோட்டத்தையும், நடைமுறை வாழ்வையும் மாற்றியமைத்ததில் வினவின் பங்கு அதிகம். சமூக தளத்தில் வினவின் பங்கு, நீங்கள் நினைப்பதைக்காட்டிலும் அதிகம். தன் பாதையில் சற்றும் தளராமல் பயணிக்க வாழ்த்துக்கள்.
சில ஆலோசனைகள் :
வினவு-ல் துவக்க காலங்களில் பண்பாட்டுத் தளத்தில் நிறைய கட்டுரைகள் வெளிவந்து, நிறைய வரவேற்பு பெற்றது. தொடர வேண்டும்
மருத்துவர் ருத்ரன் துவங்கிய தொடரை வெற்றிகரமாக தொடர வேண்டும். மருத்துவர் ருத்ரன் போன்ற பல துறை சார்ந்த பதிவர்கள் தனித்தனியாக எழுதுகிறார்கள். அவர்களையும் எழுத வைக்க வினவு முயற்சிக்க வேண்டும்.
ஊர் கூடி தேர் இழுப்போம். சமூக மாற்றம் நிச்சயம் வரும்.
வளர்ச்சிப் பணிகளுக்காக, நண்பர்களிடம் நன்கொடை கேட்டு வாங்கித்தர முயல்கிறேன்.
மீண்டும் வாழ்த்துக்களுடன்,
சந்தோச குமரன். (இந்த பதிவுக்கு மட்டும்)
தோழர் நொந்தகுமாரன்,
வினவின் வளர்ச்சியோடு ஒரு தோழர் உருவாகியிருக்கிறார் என்பதை விட இந்த முதலாமாண்டின் நிறைவுக்கு முத்திரை ஏது? உங்கள் ஆலோசனைகளை நிச்சயம் செயல்படுத்துவோம். நன்றி
வினவு
நொந்தகுமாரன்,
/“வலையுலகமும் நொந்தகுமாரனும்” என்ற பெயரில் வலைத்தளமே தொடங்கினேன்.//
முடிந்தால் உங்கள் வலைப்பதிவின் முகவரியை கொடுங்கள். நானும் வந்து கொஞ்சம் கலாய்க்கிறேன்.
ரதி அவர்களுக்கு,
தங்கள் வரவு நல்வரவாகட்டும்!
நொந்தகுமாரன்.
http://nondhakumar.blogspot.com
வினவு….
தட்டுங்கள் திறக்கப்படும் என்பதை மதரீதியாக எடுத்துக்கொள்ளாமல் அந்த வார்த்தையின் நிதர்சனத்தை உணர்ந்தோமானால் இங்கே தட்டாமல் திறக்கப்படுவது எவையுமில்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
அது போலவே “வினவு” என்பதையும் வினவினால் தான் பதில் கிடைக்கும்….வாய்மூடி காத்துக்கிடந்தால் எதுவுமே நடக்கப் போவதில்லை…..! இப்படியாக வினவு வலைப்பூவின் தலைப்பிலிருந்தே ஆரம்பிக்கிறது எனது வாசித்தல் அனுபவம்!!!
வினவு எழுதத் தொடங்கியதிலிருந்தே நல்ல பரிச்சயம் உண்டு………நிறைய விமர்சனங்கள்….நிறைய மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் ஒரு வாசகனாகவே வினவின் பயணத்தில் நானும் இணைந்து வந்திருக்கிறேன்…..நிறைய பதிவுகள் நிறைய கருத்துக்களையும் , வார / மாதப் பத்திரிக்கைகளுக்கே உரித்தான நேர்த்தியுடன் வரும் கருத்துப்படங்களும் வெகுவான கவர்ந்தவை.
ஆயிரம் வேலைகளுக்கு நடுவே பிழைப்பினை பார்த்துக்கொண்டு வீட்டேத்தியாக வாழ்க்கையை நடாத்திக்கொண்டிருக்கும் பலருக்கு நடுவே புதியதொரு பாதையில் நாட்டைச் செலுத்திட நினைக்கும் இளைஞர்கள் வெகுவாகப் பாராட்டத் தக்கவர்கள்….!
அந்தப் பாதையில் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் , அந்தப் பணி பாராட்டத்தக்கது…மாற்றத்திற்காக உழைக்கும் அவர்களது முயற்சி பாராட்டத்தக்கது..அவர்களின் அர்ப்பணிப்பு போற்றத் தக்கது…
அவ்வகையில் அவர்கள் பிரசவித்த இணையக் குழந்தையின் முதலாவது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களையும் , தெரிவான சமூகப்பார்வைகளுக்கான பாராட்டையும் தெரிவிக்கிறோம்!!!
மக்கள் கலை இலக்கியக் கழகமோ , மாவோயிஸ்ட் புரட்சியாளர்களோ மக்களோடு அந்நியப்படாமல் மக்களின் உணர்வுகளை பொதுவில் வைத்து மக்கள் இயக்கமாக முன்னேற வாழ்த்துக்கள்….!!!!!
நன்றி
தோழமையுடன்
மதிபாலா.
நன்றி மதிபாலா, மக்களுடன் இணைந்திருப்பதால்தானே வினவின் பங்களிப்பு? மற்றபடி உங்கள் விமரிசனங்களை முழுதாக அறிய விரும்புகிறோம். இன்று வாழ்த்துதல் மட்டுமல்ல, எங்களைப் பற்றிய விமரிசனங்கள்தான் முக்கியம்.
வினவு
கண்டிப்பாக வைக்கிறேன் நண்பரே…
பணிச் சுமையால் இப்போது இணையம் வருவதே குறைந்து விட்டது….பதிவே போடாமல் இருந்து விட்டால் எப்படி என்பதற்காக மீள்பதிவுகளாகவும் , நாலு பத்தி பதிவுகளாகவும் வாரம் ஒருமுறை / இருமுறை போட்டு சமாளிக்கிறேன்…
இப்போது அந்த விவாதத்தை ஆரம்பிப்போமானால் என்னால் அடிக்கடி நேரம் செலவிட இயலாது. அனேகமாக ஆகஸ்டு முதல் அல்லது இரண்டாவது வாரம் அந்த விவாதக் களத்தில் சந்திப்போம்!
நன்றி…
இது சும்மா…
இது பின்னூட்டாங்களை மின்னஞ்சலில் பெறுவதற்காக…!
வன்னி முகாம் மக்களுக்கு உதவ முன்வருபவர்களுக்கு ஆப்படிக்கும் காரைநகர் நலன்புரிச் சங்கம்!!! : த ஜெயபாலன்
≡ Category: புலம்பெயர் வாழ்வியல், ஜெயபாலன் த, ::சாதியம், லண்டன் குரல் | ≅
‘கண்ட கண்ட ஆட்களையும் எங்களின் வீடுகளில் இருத்தவோ?’
http://thesamnet.co.uk/?p=13955
இணையத்தில் வினவு தோழர்களின் பணி தொடரட்டும்… சினிமாவும், தொலைக்காட்சியும், கொடுப்பதை விட கேடுப்பதையே அதிகம் செய்கின்றன… இணையத்திலும், இதழ்களிலும் நடுநிலை செய்திகளை உலகின் பல்வேறு மூளைகளுக்கு / மூலைகளுக்கு எடுத்து செல்வோம்.. தோழர் இராயகரனின் தளத்தில் மேற்கோளை இங்கு நினவு கூற விரும்புகிறேன்.. “கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அது மாபெரும் சக்தியாக உருவெடுக்கும்”
உழைக்கும் மக்களை கருத்தால், செயலால் வெல்வோம், ஒன்றிணைப்போம்…
நன்றி தோழர் பகத்,
ஆரம்ப மாதங்களில் எல்லா விவாதங்களிலும் இருப்பீர்கள், இடையில் காணோம், வேலைப் பளுவா?
வினவு
பொருளாதார நெருக்கடியில் வேலைப்பளு கூடியிருப்பது உண்மை… மீண்டும் விவாதங்களில் பங்கு பெற முயற்சிக்கிறேன்… நன்றி தோழர்களே.
வினவு தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.. புரட்சிகர இணைய பயனம் மேலும் தொடரட்டும்..
முன்பொரு காலமிருந்தது.. தமிழ் இணையம் / வலைப்பூக்கள் என்பதே மடிசார் மாமிகள் ஊறுகாய் தொக்கு செய்முறையை சிலாகித்துக் கொள்வதற்கும் – குடுமி மாமாக்கள் துக்ளக் பாணியில் அரசியல் ‘விவாதித்துக்’ கொள்ளும் இடமாகவும் இருந்தது.. பின்னர் முற்போக்கு அரசியலை ‘நாகரீகமான’ மொழியில் முனகிக் கொண்டிருந்த கூட்டம் உருவானது. இந்தக் கூட்டம் மிக லேசாக திராவிட அரசியலைப் பேசியதையே பொறுத்துக் கொள்ள இயலாமல் முகம் சுழித்துக் கொண்டனர் குடுமிகள்..
இந்த காலத்தில் தான் அசுரன் வந்தார்… பச்சை மிளகாயை நறுக்கென்று கடித்தது போல சொரணையே இல்லாத கும்பலுக்கும் சுளீர் என்று உறைக்கும் பதிவுகளை இட்டு பலருக்கும் மார்க்சிய லெனினிய அரசியலை இங்கும் எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார்… பின்னர் பல தோழர்கள் அந்தப் பணியில் இனைந்து கொண்டது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
வினவு தளம் அசுரனின் பதிவுகளின் அடுத்த கட்ட பரிமாணமாகவே பார்க்கிறேன்… அவரிடம் இருந்த சுள்ளென்ற கோபமோ, இந்துத்துவவாதிகளிடமும் போலிகளிடம் அவர் காட்டிய கடும் சொற் பிரயோகமோ இப்போது அனேகமாக தேவையில்லாத ஒரு சூழலுக்கும் வலையுலகம் மாறி விட்டிருக்கிறது ( அவரே நேரடியான ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களை சும்மா சுத்தி சுத்தி அடிச்சி வெரட்டியதெல்லாம் இப்போது படிக்க படு சுவாரசியமாக இருக்கும் – மறக்கமுடியுமா அரவிந்தன் நீலகண்டன் / ஜடாயு / ரவிஸ்ரீனிவாஸ் VS அசுரன் சண்டைகளை? ) கருத்துக்களத்தில் அப்போது அனல் பறந்ததை இப்போதும் மறக்க முடியாது… குறிப்பாக அரவிந்தன் நீலகண்டன் ஜடாயு கும்பல் அடிவாங்கிப் புலம்பியதைப் படித்தால் புரியும்…
ஆனால் இப்போதும் அந்த விதமான பாணி சிலருக்குத் தேவைப் படத்தான் செய்கிறது.. சிலரின் எருமைத் தோல் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினாலும் கூட உறைக்காது – நான் நமது போலிகளின் இனைய கோமாளிகளைத் தான் குறிப்பிடுகிறேன்… அசுரன் கொஞ்சம் இவர்களுக்கு கொஞ்சம் சிறப்பு கவனம் கொடுத்தால் நன்றாக இருக்கும்..
அவர் எழுதுவதைக் குறைத்துக் கொண்டது ஏன் என்று தான் தெரியவில்லை..
சின்னதாக உருவான ஆறு, காட்டாறாக மாறிப் பின் நின்று நிதானமாய் எல்லாவற்றையும் உள்வாங்கி அரவனைத்து ஓடும் கட்டம் இது என்று நினைக்கிறேன்… படித்த இணையப்பயன்பாடுகள் அறித்தவர்களிடையே வினவு தளமும் அது தாங்கி வரும் கருத்துக்களும் பெரும் ஆதரவு பெற்றிருக்கிறது – ஒரு உதாரணம், தேர்தல் சமயத்தில் வெளியான கட்டுரைகளை ஒரு நெருங்கிய நன்பனுக்கு பரிந்துரைக்க, படித்து இம்ப்ரெஸ் ஆன அவன் தனது மற்ற நன்பர்களை அழைத்துக் கொண்டு தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு அலுவலகம் சென்று 49-O பார்மை சண்டை போட்டு வாங்கிப் பூர்த்தி செய்து கொடுத்து வந்தான்…
இப்படி வினவு தளத்தின் கட்டுரைகள் கருத்துக்கள் வெறும் கருத்துக்களாகவே தங்கிவிடாமல் ஒரு பௌதிக வடிவம் பெறுவது மிக முக்கியம்.. அந்தப் பணியும் நீங்கள் அறிந்தோ அறியாமலோ நடந்து வருவதாகவே உணர்கிறேன்…
ஜே.பி.ஆர் கல்லூரியில் அநியாயங்களுக்கு எதிராக போராட சங்கம் அமைத்த தோழர்கள் வேலையிழந்த செய்தியை படித்த செந்தழல் ரவியின் பின்னூட்டத்தையும் அதற்கு உங்கள் பதிலையும் நினைவூட்டுகிறேன்..
மேலும் மேலும் இந்தப் பணி ஆக்கப்பூர்வமான அடுத்த கட்டம் நோக்கி நகர வாழ்த்துக்கள்..
நன்றி தோழர் ஆர்.கே,
வினவின் வீச்சுக்களை அறிய தந்தமைக்காகவும், வாழ்த்துக்களுக்கும். அசுரனை எப்படியாவது மீண்டும் செயல்பட வைப்போம். தலைவர் தயாரானால் தொண்டர்கள் வீறு கொண்டு எழுவார்கள்!
வினவு
//அசுரனை எப்படியாவது மீண்டும் செயல்பட வைப்போம். தலைவர் தயாரானால் //
அண்மையில் லால் கர் குறித்து கூட எழுதியிருந்தார் .அவ்வப்போது அசுரன் எழுதிக்கொண்டுதானிருக்கிறார். “செயல்பட” என்பதை விட எப்படியாவது தலைமையேற்க என்றால் நன்றாக இருக்கும்.
இந்திய மீடியாக்களின் கயமைத் தனம், கல்வியை அணைத்து நிலைகளிலும் ஒரே மாதிரியாக நாடு முழுவதும் கொண்டுவருதல், பெண்களுக்கு இட ஒதுக்கீடு, மாயாவதி சிலை பிரச்சனை ! இது போன்ற பல பிரச்சனைகளை தீர விவாதிக்க ஏற்றவாறு கட்டுரைகளை எழுதவும் ! மனம் வருந்துகிறது பல நேரங்களில் ! மைகேல் ஜாக்சன் க்கு கதறும் இந்த உலகம் இலங்கை மக்களுக்காக ஒரு விநாடி கூட சிந்திக்க வில்லை ! சினிமா நட்சத்திரங்களுக்கு (mohan lal)லேபிடினட் கர்னல் அளிக்கும் பொது அணைத்து உயர் அதிகாரிகளும் அங்கு கூடி விரைப்பாக சல்யுட் அடிக்கிறார்கள் ! பாவம் என் மீனவனை அங்கு சிங்கள ராணுவம் சுடுகிறது! என்ன செய்கிறது இந்திய கடற் படை ! இந்திய என்ன பணக்காரர்களுக்கு மட்டுமா ! மனது கொதிக்கிறது !
தன்னை சுற்றி சுய சிந்தனை மிகுந்த இளைஞர்கள் பலர் இருக்க, பொது சிந்தனை மனதில் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்த வேளையில், நான் வினவை படிக்க ஆரம்பித்தேன். வினவு மென்மேலும் வளர வாழ்த்துகள்.
ஆனாலும் தோழி உங்கள் வாழ்த்துக்களைவிட உங்களிடம் இழையோடும் ஒரு சோகம் வருந்த வைக்கிறதே! இந்த உலகில் எந்தப் பிரச்சினையானாலும் இரண்டிலொன்று பார்க்கலாம், கவலையை விடுங்கள்.
வினவு
வாழ்த்துகள் வினவு
வினவு தோழர்களுக்கு, புரட்சிகர இணைய பயனம் மென் மேலும் தொடர வாழ்த்துக்கள்….
உங்களிடமிருந்து என்னை போல வரும் புதிய தோழர்கள் கற்று கொள்ள நிறைய இருக்கிறது. உங்களுடைய எழுத்து நடை, அரசியல் வீச்சு, எதிகருத்தாளர்களை கையாளும் திறமை, மற்றும் பல…..
வினவு, அன்றாட நிகழ்வுகளை மார்க்சிய-லெனினிய அடிப்படையில் பார்க்க கற்றுக்கொடுக்கிறது.
////வினவின் ஆரம்ப காலம் முதல் எல்லா இடுகைகளுக்கும் வந்து பின்னூட்டமிடுவது, விவாதிப்பது என்று சுறுசுறுப்பாய் இருக்கும் தோழர் கலகத்தைப் போன்று மற்ற தோழர்களும் இயங்கினால் எப்படி இருக்கும்?
-வினவு/////
நான் இன்னும் கற்றுக்கொண்டிருப்பதால், இதுவரை விவாதங்களில் பங்கு பெறவில்லை… கூடிய விரைவில் தயக்கங்களையும், தவறுகளையும் களைந்து விவாதத்தில் பங்கு பெற முயற்சிக்கிறேன்.
வினவை இன்னும் பலரிடம் அறிமுகம் செய்ய / கொண்டு போய் சேர்க்கவேண்டியுள்ளது. மற்ற தோழர்கள் இதையும் ஒரு பணியாக செய்ய வேண்டும்.
மீண்டும் புரச்சிகர வாழ்த்துகளுடன்,
பாவெல்.
தோழர் வினவு அவர்களுக்கு வணக்கம்.
பெரியார் அவர்களின் எண்ணமும் தொண்டும் இப்போது ‘வினவு’ வடிவில் தொடர்கிறது. ஈழம் பற்றி மேலும் சில ஆழமான கட்டுரைகளை எழுதுங்கள். உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
செந்தில்.
வினவு தோழர்கள் மற்றும் வாசகர்களுக்கு வாழ்த்துக்களும்! நன்றிகளும்!!
இருந்தாலும் பனிப்பொழிவு கொஞ்சம் ஓவர் 🙂
வித விதமான பிரச்னைகள்…
வித விதமான மனிதர்கள்…
வித விதமான விமர்சனங்கள்…
ஏச்சுக்கள்…
பரிகாசங்கள்…
பாராட்டுக்கள்…
திட்டுகள்…
வினவு ஒரு வித்யாசமான உலகம்.
உங்கள் கட்டுரைகளில் உள்ள விஷயங்களுக்காக நீங்கள் எடுக்கும் சிரத்தை புரிகிறது. ஆனால் சாதி வேறுபாடுகள் சமுதாயத்தில் இருப்பதை விட மிக அதிகமாக பல தமிழ் தளங்களில் நான் காண்கிறேன்.
இது எதிர்காலத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்துமோ என்றும் கவலை கொள்கிறேன்.
எவ்வாறாயினும் உங்கள் சமுதாய கட்டுரைகள் நிச்சயம் நல்ல விளைவுகளை ஏற்ப்படுத்தும் என்பது என் எதிர்பார்ப்பு.
வாழ்க வினவு…
வளர்க உம் பணி…
நன்றி கிரி,
பாவெல் விவாதங்களில் பங்கு பெறுவதே கற்றுக் கொள்வதின் அங்கம்தான், கலந்து கொள்ளுங்கள், நன்றி.
நன்றி செந்தில், தொடர்ந்து ஈழம் குறித்து எழுதுவோம்.
அரடிக்கெட்டு பனிப்பொழிவு டவுணில்தான் விழுகிறது, மேலே ஓவரில் போகவில்லை, நன்றி.
என்வழி தனி வழி, வினவு வித்யாசமான உலகம் மட்டுமல்ல சமூகத்திற்கு தேவையான ஆரோக்கியமான உலகமும் கூட. சாதி ஆதிக்கத்தை இல்லாமல் செய்ய இன்னும் போராடுவோம், நன்றி
வினவு
இந்த ஒரு பதிவே சொல்லிவிடுமே ? வினவு தோழர்களின் அயராத உழைப்பை…!!!
இந்த பதிவை குறித்தான எண்ணங்களை தனி மொக்கையாக எழுதினால் தான் தாகம் அடக்கும்போலிருக்கிறதே ?
தளத்தில் கடந்த ஓராண்டை நினைத்துப் பார்த்தால்… பல நல்ல நினைவுகள், விவாதங்கள் வந்து போகிறது. வினவு தளம் மென்மேலும் சிறப்பாய் செயல்பட வாழ்த்துக்கள்.
வினவுக்கு வாழ்த்துகள்!!!
கடந்த ஒரு வருடமாக எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல், கூரிய அவதானிப்போடு வெகுஜன கலாச்சாரம்/அரசியலை நேர்மையாகவும்/கறாராக விமர்சித்தது பாராட்டுதலுக்குறியது. மேலும் களப்பணியாக தில்லை கோவில் விடயத்தில் தீவிரமாக ஈடுபட்டு, அங்கு ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவந்தது ஒரு உன்னதமான செயல். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தோழ்ர்களுக்கும் என் வாழ்த்துகள்!! உங்களின் சட்டக்கல்லூரி மோதல் கட்டுரையில் பல புதிய கோணங்களை சுட்டிக்காட்டியது சிறப்பானது. மேலும் இன்னும் வீர்யமாக கல்லூரிகள்/தனியார் மருத்துவமனைகள் இதற்கு பின்னால் இருக்கும் பினாமி அரசியல்வாதிகள்/சாமியார்கள் இவர்களை பற்றி ஒரு களப்பணி ஆற்றி ஒரு விழிப்புண்ர்வு கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோளாக வைக்கிறேன்.
வாழ்த்துகள் வினவு
வாருங்கள் ரவி, பிஞ்சு செந்தழலிக்கும் ஒரு வயது முடிந்திருக்குமே, நலமா?
நன்றி விக்ரமாதித்யன்!
உங்கள் ஆலோசனைகளை நிறைவேற்ற முயல்கிறோம், ஓல்டு மாங்க்!
நன்றி, அன்பரசு!
நான் மணி…
வாழ்த்துக்களைச் சொல்ல முடியாத சுயபரிசீலனையால் மனம் விம்முகிறது. ஓராண்டு நிறைவு என்பதை எப்படி பார்ப்பது என்ற எண்ணம் தலைதூக்குகையில் வினவின் விவாதங்களை நான் வேலை செய்யும் நிறுவனத்தின் ஊழியர்களிடம் எந்த அளவு கொண்டு சென்று உள்ளேன் என நினைக்கும்போது குற்ற உணர்வால் மனம் குன்றிப் போகின்றது. அதற்கு சோம்பல், கவனமின்மை .. என பல காரணங்களை சல்லிக் கொள்ளலாம்.
ஆனால் நான் வாங்கும் மாதச் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை கடனாகப் பெற்று அதனை செலுத்த முடியாமல் தற்கொலைக்கு தள்ளப்பட்டு, அந்த தற்கொலைக்கு இன்னார்தான் காரணம் என்பதைக் கூட தெரிந்து கொள்ள முடியாத தகவல் அறியும் உரிமை உடைய இந்த நாட்டின் விதர்பா விவசாயிகளின் நிலைமையில் வைத்து அந்த சோம்பல், கவனமின்மை, மந்தம், வேலைப்பளு, குடும்ப கவலை எனப்ப் பார்த்தால், இன்னும் சரியாக சொல்வதென்றால் அந்த தற்கொலை செய்து கொண்ட நேர்மையான எளிய விவசாயிகளின் வரிப்பணத்திலேயே படித்து விட்டு அவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் அல்லது அவர்களையும், இன்றைய வேலையிழந்து கொண்டிருக்கும் ஐடி தொழிலாளியையும் தற்கொலைக்குத் தற்றிக் கொண்டிருப்பது இந்த உலகமயமாக்கம்தான் என்பதை விளக்குவதற்கு நேரமில்லாத்து போல பம்மாத்து பண்ணத் தெரிந்த நான் முதலாளி கேட்டுக் கொண்டால் அவன் வீட்டு நாயிற்கு கூட வாலை ஆட்டி விடுவதற்கும், மேனேஜரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக எதை வேண்டுமானாலும் இழப்பதற்கு தயாராக இருந்த மனநிலையை ஒப்பிடும்போது மனம் அவமானத்தால் குன்றுகிறது.
ஏன் புரட்சி நடக்கவில்லை? என்று சில உலகமயமாக்கலின் ஆதரவாளர்கள் கேட்டால் நான் அதற்கு சித்தாந்த பூர்வமாகவே பதில் சொல்ல முயற்சித்துதான் இருக்கிறேன். ஆனால் ஒருநாள் கூட எனது போன்றவர்களின் பேடித்தனம்தான் காரணம் என்று சொல்ல முன்வந்த்தில்லை. கணிணி யைத் தெரிந்து கொண்டு அதற்காக ஆசான் போன்ற மென்பொருட்களைப் படித்து அரசியலை பரப்பத் துணிந்த வினவு போன்ற தோழர்களுக்கு முன்னால் அவர்களை விட கணிணி அதிகம் தெரிந்தும் அரசியலை மற்றவர்களிடம் கொண்டு செல்ல வேறு என்ன என்ன வழிமுறைகள் உள்ளது என கண்டறிய மறுக்கிறதே என் மனம், இதே மனம் எனது முதலாளி கேட்டுக் கொண்டால் சாப் என்ற பெயரில், ஆட்டோமேசன் என்ற அறிவியல் முறையை பயன்படுத்தி ஆட்குறைப்பு செய்ய வழிமுறைகளை ஆய்ந்து அறியாமல் இருப்பதில்லை…
தன்னுடைய பிள்ளைகள் இருவரை பிணைக்கைதியாகத் தந்தானாம் திப்பு. தன்னுடைய மூத்த மகனை சாக்க் கொடுத்துக் கொண்டிருக்கும் தருணத்தில் வெள்ளையனுக்கு எதிராக கப்பல் கம்பெனி நடத்த கப்பல் வாங்ங பம்பாய் முழுவதும் சுற்றித் திரிந்தாராம் வ.உ.சி. தன்னுடைய மக்களால் வரி கட்ட முடியாத பஞ்சம் ஏற்பட்டதால் 2800 ரூபாய் கட்ட கால அவகாசம் கேட்டு சாக்சன் பின்னால் 23 நாட்கள் சுற்றித் திரிந்தானாம் கட்டபொம்மன். தனக்கு முன்னால் இருந்த வசதி வாய்ப்புகளை புறம்தள்ளி விட்டுத்தான் 23 வயதில் தூக்குமேடை ஏறினான் பகத்… இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.. இந்த வரலாற்றிலிருந்து என்னத்தை கற்றுக் கொண்டேன்…
உலகமயமாக்கல் மக்களை நெருக்கித் தள்ளுகிறது. தினசரி வெவ்வேறு வகையான ஊழியர்களின் போராட்டத்தால் சென்னை மாநகரம் குலுங்குகிறது.. மெய்யுலகம் போராட அழைக்கிறது… மெய்நிகர் உலகத்தின் சுட்டி டிவி ரசிகர்களுக்கு போராட வைக்க ஏன் குறைந்த பட்சம் ஈழ ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிலாவது கலந்து கொள்ள வைக்க முடியாத கையாலாகத்தனத்தால் அவமானமாக இருக்கிறது.
இதோ பதினைந்தாவது நாடாளுமன்றம் ஆரம்பித்து விட்டார்கள்.. உலகமயமாக்கல் என்ற பூத்த்தால் இந்த நாட்டின் விவசாயத்தை அழித்து, விவசாயிகளை தற்கொலைக்குத் தள்ளி அவர்களில் சாகாமல் மீந்தவர்களுக்கு உலக வங்கியின் வேலைக்கு உணவு திட்டத்தை விரிவுபடுத்தி நூறு நாள் வேலை, நாளொன்றுக்கு 80 ரூபாய் சம்பளம், நாங்கள் வெற்றி பெற்றால் 100 ரூபாய் சம்பளம் மற்றும் பென்சன் தருவோம் என்று கூறி வெற்றி பெற்றுள்ள காங்கிரசு..
அரசு ஊழியர்களுக்கே பென்சன் மற்றும் போனசு இல்லை என வந்த பிறகு இவர்கள் எப்படி மக்களுக்கு தருவார்கள் அப்படியே தந்தாலும் கண்டிசன் போடும் உலக வங்கி விடுவானா என்பதை இந்த நாட்டின் கோடானு கோடி உழைக்கும் விவசாய பெருங்குடி மக்களுக்கு விளக்குவதற்காக ஒரு பத்துநாள் தேர்தல் புறக்க்கணிப்பு பிரச்சாரம் செய்வதற்காக விடுப்பு எடுக்க முடியாத காரியவாத மனநிலை, சுயநலம் … இதெல்லாம் வைத்துக் கொண்டு மத்தவன் இதுல பீ ன்னு கத்துறதுக்கு கஷடமாக இருக்கு.
புதிய ஜனநாயகப் புரட்சி நமக்காக காத்திருக்காதுதான்.. மணவாளனின் வருகைக்காக காத்திருந்த பைபிள் கதைதான் ஞாபகம் வருகிறது. ஆனால் மக்களின் எளிய நம்பிக்கைகளை பல கோமாளிகள் பயன்படுத்தி புரட்சியை திசைதிருப்பும் வேளையில் எண்ணெய் காலியான தீப்பந்தங்களோடு என்ன செய்யப் போகின்றோம் என்ற கேள்வி அரிக்கின்றது..
சொந்தமான புரிதலில் அரசியலை புரிந்துகொண்டு அன்றாட நிகழ்வுகளை ஒரு புரட்சிகர கண்ணோட்டத்தோடு விளக்க முடியாத பலவீன அரசியல் புரிதல்,, அதே நேரத்தில் நயன்தாராவின் புதிய காதல் ஏன் ஏற்பட்டிருக்கும் என்பது பற்றி நக்கீரனை விட தெளிவாக சித்திரம் போல புரிந்து கொள்ள முயற்சிப்பது,,
லேண்டு விலை ஏறியுள்ளதா என்பதை பார்த்து வண்டியில் கே.கே.நகரின் நடைபாதை வாசிகளைக் கடக்கும்போது கூட குற்ற உணர்வு இல்லாமல் கணக்கு போடும் மனம், இன்றைக்கு யாரும் சாதி பார்ப்பதில்லை என்று கூறிக் கொண்டு தன்னுடைய அப்பன் பாட்டன் செய்த கொடுமைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என பார்ப்பன ஆதிக்க சாதி யைச் சேர்ந்த சமூக நண்பர்கள் பேசும்போது அதனை மறுத்துப் பேச எழும்பாத பம்மாத்து நாக்கு,,
போலிகளை வைத்து கம்யூனிசம்னா இதுதான் என தங்களுக்கு தெரிந்த முறையில் எல்லாம் புரிந்து கொண்ட நண்பர்களது கம்யூனிச வெறுப்பு தன்னின் ஒன்றும் இன்மையை அவர்களுக்கு விளக்க முன்வராத தான் தோன்றித்தனம், அறிவியல் அன்றைக்கு பக்கத்து வீட்டுப் பெண் குளிப்பதை பார்க்க உதவுமா இந்த தொலைநோக்கி என்று கேட்ட பிளாரன்சு நகரத்து சீமானின் அறிவுத்தரத்தைப் போல கணிணி என்ற சாதனத்தின் உதவியால் வட்டிக்கடை வேலையும், பதிவுத்துறை வேலையும் செய்து கொண்டு அதன் சம்பள உயர்வாலேயே அது அறிவுப்பூர்வமானது என நினைத்துக் கொள்ளும் அறியாமையிலிருந்து விடுவிக்கப்படாத சக ஊழியர்களை அறிவுமயப்படுத்தாத்து,,
போதும் இந்தச் சாக்கடை என்று மூக்கைப் பொத்த்த் தோன்றுகிறதா… இதுதான் அரசியலை ஓரளவு புரிந்து கொள்ள முயற்சிக்கும் என் போன்றோரின் நிலையே என்றால், இந்த அரசியலின் அரிச்சுவடி கூட தெரிந்து கொள்ள முடியாமல் இருக்கும் பல இலட்சம் இளைஞர்களின் அறியாமையை போக்க வேண்டிய கடமையிலிருந்து தவறிய நான் எப்படி வெளியில் தலைநிமிர்ந்து நடக்க முடியும். இல்லாத சொர்க்கத்தை அல்ல நரகத்தை காட்டித்தான் பயமுறுத்தி ஆள்பிடிக்கிறார்கள் பெந்தோகோஸ்தே கோஷ்டிகள்.. ஆனல் படைக்க இருக்கும் உலக சொர்க்கம் பற்றி சக மனிதர்களிடம் ஒரு கவிஞனின் கற்பனையோடு தாயின் மன உறுதியோடு விளக்கலாமே… அதனை செய்ய முடியாத்தற்கு கூட நேரமில்லை என்றுதான் சொல்வோபா… தனது வாழ்க்கை, தனது சுகம், தனது உறவு, தனது கேரியர் என வரும்போது மாத்திரம் விழித்துக் கொள்கிறதே என் ஆழ்மனது.. ஏன் பொது என வரும்போது மாத்திரம் சுருங்கிக் கொள்கிறது..
இதோ மறுகாலனியாதிக்கம் எல்லோரையும் பிடித்து வீதியில் தள்ளுகிறது..விவசாயிகள், அரசு ஊழியர்கள், மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், நெசவாளர்கள், பொதுத்துறை ஊழியர்கள், கல்வித் தந்தைகளின் ஒரு காலத்திய கொத்தடிமை ஊழியர்கள்… எனப் போராட வரும்போது அதிக சம்பளம் என்ற ஒரே காரணத்தால் நடக்கும் அநியாயங்களை பார்த்தும் பார்க்காமல் இருக்க கற்றுக்கொண்ட இந்த அநியாய வர்க்கமான ஐடி தொழிலாளிகளின் வெள்ளை நிற ஆடை கூட வெளுத்து அதன் உண்மையான அழுக்கு படிந்த நிறத்திற்கு மாறிக் கொண்டிருக்கிறது.. இந்த அடிப்படையற்ற வகைப்பிரிவை வென்றெடுக்க முடியாத நான் ஒரு கம்யூனிஸ்டாக முயற்சிப்பவன் என்ற முறையில் யாரை வென்றெடுப்பேன்? யாருக்கு தலைமை ஏற்கும் தகுதி பெறுவேன் புரட்சியின்போது என நினைக்கும்போது கையாலாகாத்தனத்தால் உடல் நடுங்குகிறது…
போதும் மெய்நிகர் உலகம்… இதில் வேறு ஏதாவது வடிவம் இருந்தால் போகாத மனிதர்களுக்கெல்லாம் செயதி சொல்லுவோம்… மெய்யுலகம் தலைமை ஏற்க ஆள் இல்லாமல் திணறுகிறது.. அந்த இடத்தை முதலாளிகளின் கைக்கூலிகளான என்.ஜி.ஓ க்கள் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்க்ள•. பிறகு ஏன் புரட்சி தள்ளிப் போகாது… அறிவுள்ள பிள்ளைகளெல்லாம் அடிமைத்தனத்தை விரும்பி ஏற்கும் நாட்டில் நாய் கூட முதலாளி ஆகலாம்… தொடர்ந்தும் இருக்கலாம்…
வாழ்த்துச் சொல்ல முடியவில்லை… அடுத்த ஆண்டுக்குள் நமது வேலைகளின் பலனாக ஐடி துறை ஊழியர்கள் குறைந்த்து பல பத்தாயிரம் பேராவது குறைந்த பட்சம் தங்களது கோரிக்கைக்காக வாவது வீதிக்கு வந்து போராடி மற்ற மக்களின் போராட்டங்களில் கலந்து கொண்டு அதனைப்பற்றி இணையத்தில் தாங்கள் கற்றுக் கொண்டதை வலைப்பூவில் பகிர்ந்து கொள்ளும் சூழலை சென்னையில் உருவாக்க முடிந்தால் குறைந்த பட்சம் முன்னேறுகிறது புரட்சி என்றாவது சந்தோசப்பட முடியும்.
-MANI
புரட்சிகர வாழ்த்துக்கள் வினவு ! புதிய ஜனநாயகம் வாசகரான நான்( சந்தா எண் 4313) மாதம் ஒருமுறைதான் அதைப் படிக்க முடியும் என்ற சோகம் இருந்த போது, அதனைச் சரி செய்யும் விதமாகவும், பயிற்சி (ஆயுதப்பயிற்சி இல்லங்க – எழுத்துப் பயிற்சி) எடுக்கும் நிறைய தோழர்களுக்கு வினவு ஒரு அகராதி போன்று உதவுகிறது.செவ்வணக்கங்கள் வினவுக்கு உரித்தாகுக
– அறிவுடைநம்பி
மணி உங்கள் நீண்ட சுயபரிசீலனையை மற்றவர்களும் செய்ய வைக்க வினவு முயலும், நன்றி!
நம்பி எழுத்துப்பயிற்சி என்பதை விட அரசியல்பயிற்சி என்றால் பொருத்தாமாக இருக்குமே, நன்றி!
இந்த பதிவில் நீங்கள் வெளியிட்டுள்ள படம் உங்கள் தோழர்கள் உருவாக்கியதா, மிகவும் அர்த்தம் பொதிந்ததாக இருக்கிறது. தோழர்களுக்கு வாழ்த்துக்கள்
தோழர் உடன்பிற்ப்பு நேற்றுதான் மாங்கு மாங்கென பக்கம் பக்கமாக எழுதும் வினவுக்கே வாக்குகள் குறைவாக எழுதும்போது….. என்று எழுதியதைப் பார்த்தோம். அப்போதே இன்றைய பதிவு சுருக்கமாக எழுத நினைத்து பாருங்கள் மீண்டும் அதே போல பக்கம் பக்கமாகத்தான்……… படம் இணையத்தில் எடுத்ததுதான்… நன்றி ….அப்புறம் லக்கியை இன்னும் காணோம்?
வினவு
நீங்கள் மிகவும் சிரத்தை எடுத்து எழுதுவதை தான் அவ்வாறு குறிப்பிட்டு இருந்தேன். நான் தினப்படி பதிவுலகம் பக்கம் வருவதில்லை அப்படி வரும் நாட்களில் வினவின் கட்டுரைகளும் வந்தால் முதலில் ஒட்டை குத்திவிட்டு தான் கட்டுரையை வாசிப்பது வழக்கம். எல்லாம் வினவின் மீது உள்ள நம்பிக்கை தான். லக்கி மிகவும் பிசி என்பது போல் தெரிகிறது
First read this… This incident has happened for one of our citizen in chennai. Might be it will happen in future for us also.Let us not fear to exercise our rights.
http://thirumbiparkiraen.blogspot.com/2009/07/blog-post.html
உங்கள் பதிவுலக புரட்சி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
ஆரவாரமான அட்டகாசமான ஆர்பாட்டமான அல்லோகல்லோலமான பிறந்தநாள் வாழ்த்து. மிஸ்டர் மணி, நெம்ப ஃபீல் பண்ணாதீங்க.
நன்றி ஹிக்சன்,
மாம்போ நீங்கள்தான் எங்கள் தலைவரென்ற சந்தேகம் உள்ளதால் உங்கள் பூர்வாசிரம பெயர் அதுவும் ஒரிஜினல் பெயர் சொன்னால்தான் வாழ்த்துக்கள் ஏற்கப்படும், மணியும் ஃபீல் பண்ணாமல் இருப்பார்.
வினவு
கொள்கையில் எவ்வளவு பிடிப்பிருக்க வேண்டும் , சற்றே மலைக்க வைக்கிறது. எவ்வளவு திட்டுக்கள் எவ்வளவு ஏச்சுக்கள்.
***
பலர் வந்து விவாதிக்காத காரணம் பல நேரங்களில் தலைப்பை மட்டும் படித்தால் போதும் , உள்ளே யார் நொங்கப்படுகிறார் என்று தெரிந்து விடுகிறது. குழுவாக சேர்ந்து ஒரு அப்பாவி பின்னூட்டமிட்டால் நொங்குவது (கூட்டாக). ஆர்.வி ‘வேல்யூ சிஸ்டம்’ என்று தெரிவித்தாலும் இங்கு அவர் பங்கு குறைந்ததற்கான முக்கிய காரணம் இதுவே.
உரையாடல் குறைந்து பல நேரம், தான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்ற சிக்கிக் கொண்டதால் , விவாதிப்பவர்கள் வேலையைப் பார்க்க சென்று விடுகின்றனர்.
***
சொல்வனத்தில் வெளியான கட்டுரைக்கு எதிர்வினை உண்டா ?
http://solvanam.com/?author=5
முரளி நீண்டநாள் கழித்து வந்திருக்கிறீர்கள். நாங்கள் கருத்தளவில் மட்டும் விவாதிக்கும் நபர்களல்ல, நடைமுறையில் அந்த கருத்தை கொண்டுபோகும் செயலில் இருப்பதால் கருத்தளவில் மட்டும் இருக்கும் பலருடன் கருத்து வேறுபாடு வருவதும், அதை அவர்கள் நடைமுறையில் சோதித்தறியாத படி இருப்பதால்தான் பிரச்சினை.
சொல்வனத்தைப் போல ஆங்கிலத்தில் இலட்சக்கணக்கில் இந்த அவதூறுகள் இருக்கின்றன. எங்கள் தலைவர்களை நடைமுறையின் தேவையோடு கற்றிருப்பதால் இந்த அக்கப்போர்களுக்குள் நாங்கள் சிக்குவதில்லை.
வினவு
இப்போ கொஞ்ச நாளாகத்தான் வினவு பாக்கறேன், அருமையான தளம். தோழர்களுக்கு வாழ்த்துக்கள். பெரிய கட்டுரை மட்டும் இல்லாம, உங்க கில்லி கிட்ட சொல்லி புதுசு புதுசா டெக்னாலஜி பயன்படுத்தி அனிமேஷன் மாதிரி ஏதாவது வித்தியாசமா செய்யுங்களேன்.
செய்துவிட்டால் போச்சு, நன்றி ஜான்.
வினவு
பொதுவில் யாரவது இது எனது நூறாவது பதிவு, வலைப்பதிவு தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துவிட்டது, இருநூறு பேர் என் தளத்தைப் பின்தொடருகிறார்கள், போன்ற விஷயங்களைத் தனிப்பதிவாக வெளியிட்டால் அறுவறுப்பாக இருக்கும். 99 பதிவு எழுதிய பிறகு நூறாவது பதிவுதான் எழுதமுடியும், ஒரு மாறுதலுக்காக நூற்றிப் பத்தாவது பதிவா எழுத முடியும். ஆர்.எஸ்.எஸ் உள்ளீடுகளைக் கொண்டு வினவு தளத்தை அவுட்லுக் எக்ஸ்பிரஸ்சில் படித்து வருகிறேன். என்னைப் போல பலரும் படித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் இதையெல்லாம் விளம்பரத்திற்குறிய விஷயமாக அக்கிக்கொள்ளாமல் இருப்பதே வினவைப் பெரிதும் மதிக்கக் காரணமாயிருக்கிறது. வினவின் இந்தப் பதிவு அப்படியான அறுவறுப்பை ஏற்படுத்தவில்லை. மாறாக இதுவரை வினவு தளத்தைப் படித்தறியாதவர்களுக்கும் இத்தளத்தைக் குறித்த சிறந்த அறிமுகமாக இப்பதிவு இருக்கும் என்றே எண்ணச் செய்கிறது.
தொடர்ந்து வரும் ஆண்டுகளிலும் இதே வீரியம் குறையாமல் எழுதுங்கள். உங்களிடம் எதிர்பார்ப்பதும் இதைத்தான். வாழ்த்துக்கள்.
விஜய்கோபால்சாமி
இந்தப் பதிவே ஒரு அனுபவத் தொகுப்புதான், அதனால்தான் தலைப்பில் கற்றவையும், கடமையும் என வைத்திருக்கிறோம். வீரியத்தை குறைக்காமல் உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவோம். நன்றி விஜய்கோபால் சாமி.
வினவு
இதுதான்டா சைட்டு !…
தமிழ் பிளாக் உலகத்துல இந்த மாதிரி ஆரவாரமான கொண்டாட்டம் இதுவரை இல்லை. ரொம்ப மகிழ்ச்சி. https://www.vinavu.com/2009/07/17/vinavu-year-one/trackback/…
ஓராண்டைப் பூர்த்தி செய்த வினவுக்கு வாழ்த்துக்கள். ஆப்பிரிக்க தொடர் முடிந்து விட்டதை அறிவித்து விட்டீர்களா? விரைவில் தென் அமெரிக்க நாடுகள் கட்டுரைத் தொடரை எழுதவாரம்பிக்கிறேன். இதுவரை பல இணையத்தளங்களும், சிற்றிதழ்களும் என்னிடம் கட்டுரை எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டிருக்கின்றனர். எல்லோருக்கும் எழுதுவதற்கு வாழ்நாள் போதாது. நான் தெரிந்தெடுத்துள்ள குறிப்பிட்ட இணையத்தளங்களில் வினவு முதலிடத்தைப் பெறுகின்றது என்பதை மகிழ்வுடன் அறியத் தருகிறேன்.
மிக்க நன்றி தோழரே, உங்கள் கட்டுரைகள் எங்களை போன்றவர்களுக்கு மிகுந்த பயனளிக்கின்றது. ஆப்ரிக்காவை மார்க்ஸிய கண்ணோட்டத்தில் நீங்கள் வரைந்த தமிழ் சித்திரம் காலத்தால் அழியாத செல்வம். தென்னமெரிக்காவுக்காக காத்திருக்கிறேன்
தோழர் கலையரசன் நீங்கள் வினவு குழுமத்தின் முக்கிய தோழர். என்றாலும் நன்றிகள். ஆப்ரிக்கத் தொடரின் இணைப்புக் கட்டுரை மட்டும் வெளியிடவேண்டும், அத்துடன் தென்னமரிக்காவை அறிவித்துவிடலாம்.தயார் செய்யுங்கள். பலரும் உங்களை கேட்டிருப்பது எங்களுக்கும் மகிழ்ச்சியை தருகிறது. இந்தப் பதிவில் குறிப்பிட்டபடி உங்களது கால்ஷீட்டை ஐந்து வருடத்திற்கு முன்பதிவு செய்துவிட்டோம். மீண்டும் நன்றி.
வினவு
//அசுரனை எப்படியாவது மீண்டும் செயல்பட வைப்போம். தலைவர் தயாரானால் //
அசுரன் அண்ணாச்சியின் பன்னாட்டு கம்பேனியில் பொட்டி தட்டும் வேலைக்கு ஏதும் பிரட்சனையா ?
அப்படியானால் புரச்சி கொண்டு வருவோம் , குண்டுகள் முழங்கட்டும் , தெருவெங்கும் பாலாறு ஓடப்போவதால் அனைவரும் பாத்திர பண்டங்களுடம் தயாராகவும் .
மதி-இண்டியா
வினவு,
வினவுக்கு எனது இனிய முதல் பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க,வளர்க, மேன்மேலும் வெல்க!!
வினவு தொடங்கி ஒரு வருடம் தானா! எனகென்னவோ நீண்டநாள் பழகியது போல் ஒரு பிரமை.
வாழ்த்துகளுடன்,
ரதி.
ரதி,
ஒரு வயது வினவுக் குழந்தையை தாய்ப்பாசத்துடன் வாழ்த்தியமைக்கு நன்றி.
வினவு
//ஜ்யோவ்ராம் சுந்தர்
Posted on July 17, 2009 at 3:24 pm
தகவலுக்காக : ஜெயமோகன் ஆசிரியராக இருந்த பத்திரிகையில் வந்தது அது – ஆனால் ஜெமோ அதை எழுதவில்லை.//
உண்மைக்கு நன்றி சுந்தர் , என்னத்தை சொன்னாலும் உண்மை இவர்களுக்கு கசப்பே,
ஆப்கன் போரின் போது அமரிக்க வீரர்கள் பெண்களை கற்பழித்ததாக செய்தி போட்டு அதற்க்கு ஆதாரமாக மிலிட்டரி செக்ஸ்.காமிலிந்து படம் போட்ட வீரர்கள் அல்லவா இவர்கள் ?
அவதூறுக்கு மட்டுமே எழுதும் மனநோய் கும்பல்
அய்யா,
அவர் மட்டுமல்ல பலர் பன்னாட்டு கம்பேனிக்கு பொட்டிதட்ட போனாலும் உங்களை போன்ற இலக்கிய சுய இன்பங்களுக்கு தலையில் குட்டு வைக்கவும் தவறுவதில்லை. எங்கு வேலை செய்தாலும் மக்களுக்காக சிந்திக்க தெரிந்தவர் தானே என்பதில் எங்களுக்கு பெருமைதான். எங்கு வேலை செய்தாலும் இப்படி சுயமோகனுக்கு சுய இன்பமாகி கழுவிக்குடிக்கும் உனக்கும் ரொம்ப பெருமையாத்தானிருக்கும்.
ஆமா நானும் பாக்குறேன் பொறந்த நாளாச்சே அமைதியா இருந்தா ரொம்ப ஆடுறீயளே. பர்த் டே பேபிய ரொம்ப சீண்டுன தாங்க மாட்ட ,
வினவு உத்திரவிடுங்கள்!!!!!!
உட்டு பிரிச்சு மேஞ்சுடுறோம்
மதி.இந்தியா அவர்களுக்கு, அது ஆஃப்கான் போரில்லை இராக் போர், மேலும் இராக்கில் அமெரிக்க இராணுவம் பெண்களை பாலியல் வல்லுரவு கொண்டதை, அபுகிரைப்பில் ஆண்களை நிர்வானமாக்கி மலம் பூசி மகிழ்ந்ததை புதியகலாச்சாரம் ஒற்றர்படைகொண்டு கண்டுபிடிக்கவில்லை அது இணையம்/ பத்திரிக்கை/ தொலைக்காட்சி என விஷ்னுபுரமளவுக்கு பிரபலமான செய்திதான். அமெரிக்காவின் மலிவுப்பதிப்பாக பிணங்களையும் வன்புணர்வு செய்த இலங்கை இராணுவத்தின் அட்டுழியங்கள் கூட எங்கள் தோழர் இராயாகரனின் தளத்தில் வெளிவந்தது. இப்படி பாலியல் யுத்தம் நடத்தப்படும் போது நீங்களும் உங்கள் ஆசானும் காந்தியவழியில் சுயபரிசோதனை செய்துகொண்டு இருக்கலாம், அதனால் பிழையொன்றுமில்லை, வரலாறு மக்களை கொண்டு மட்டும் செய்யப்படுவதில்லை மேதகு மலங்களையும் கொண்டுதான்.
//விஷ்னுபுரமளவுக்கு பிரபலமான செய்திதான். //
அப்படின்னா! நீங்கள் போகிற போக்கில் விஷ்ணுபுரத்தை பிரபலம் என்கிறீர்கள். பலர் அறிந்திருக்கவேமாட்டார்கள். பின் தொடரும் நிழலின் குரல் படித்து, சகிக்க முடியாமல், கால்வாசியிலேயே நிறுத்திவிட்டேன்.
எனக்கென்னவோ மா.சே விஷ்னுபுரத்தின் அர்ப்பத்தனத்தை அமெரிக்க ஆபாச வழிமுறைகளுக்கு பொருத்தி கின்டல் செய்வதை போலத்தான் புரிந்தது.
தோழர்கள் கலகம், மா.சே
மேதை இந்தியாவின் அடக்கப்பட்ட பாலுணர்வு இப்படி விகாரமாக அலைகிறது. இதை இப்படியே விட்டுவிடலாம். அதுவே ஊளையிட்டுக் கொண்டு அடங்கிவிடும். ஊளைக்கெல்லாம் மெனக்கெட்டு பதில் சொல்லாதீர்கள்.
வினவு
வினவு, வலைப்பதிவு உலகத்திலிருந்து காரணமாக விலகியிருந்த என்னை ஈர்த்த ஒரு விசை, சோர்ந்து போன சமூக உணர்வாளர்கள் மனதில் நம்பிக்கையாய் துளிர்த்த ஒரு வித்து. உழைக்கும் மக்களின் வியர்வையாய் இணையத்தில் கமழும் மணம். தாழ்த்தப்பட்ட ஓடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான குரல், பதிவும் ஒரு ஆயுதம் என உரக்கச் சொன்ன தளம். ரதியாய், அதிரடியாய், ரவியாய், வித்தகனாய் வினாவை தொடர்கிறது வினை.
மா.சே,
உங்களைப் போன்ற தோழர்கள் எப்போதும் சோர்வுறக் கூடாது. செய்யவேண்டியது ஏராளமாய் இருக்கிறது. நன்றி.
வினவு
வாழ்த்துக்கள் வினவு! புதிய ஜனநாயக புரட்சி வெல்லட்டும்!
பிரமிக்க வைக்கும் உழைப்பு ,ஒருங்கிணைப்பு !
மனம் கனிந்த வாழ்த்துகள்.
மாக்சிம்ஸ், ஜோ இருவருக்கும் நன்றிகள். தொடர்ந்து வாருங்கள், நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.
//தோழர்கள் கலகம், மா.சே
மேதை இந்தியாவின் அடக்கப்பட்ட பாலுணர்வு இப்படி விகாரமாக அலைகிறது. இதை இப்படியே விட்டுவிடலாம். அதுவே ஊளையிட்டுக் கொண்டு அடங்கிவிடும். ஊளைக்கெல்லாம் மெனக்கெட்டு பதில் சொல்லாதீர்கள்.
வினவு
//
கமிசார்கள் சொன்னால் அடங்காமல் இருக்க ஏலுமா ? வரலாற்றுணர்வில்லாத மக்கள் மந்தையை வழி நடத்தும் மார்ஸிய மத குருக்களே , இதோ அடங்கிடம்ல..
(புரச்சி கோயமுத்தூரை நெருங்கும் போது ஒரு தகவல் தந்தால் என்றும் உங்கள் பூட்ஸுக்கு பாலீசாக இருப்பேன்)
வயிறு எரியற்து தான் !!! ஆனா அத பாலிசா சொல்லாம சும்மா நொய் நொய்யுன்னு ஏன்யா பொலம்பற.. அந்தான்ட போ,
பாஸ், கோழிக்கரைக்கு எதுக்கு பாஸ் வயிறு எரியனும். அவர்தான் சூவுக்கு பாலிசாவோ, டிஸ்யூவாவோ இருக்க ரெடீயாகீரார்ல
Congratulations Vinavu Team. I have been reading your site for the last 6 months Eventhough I have a 100% opposition to your idealogy and tactics. I admire your commitment to the section of society that is oppressed and your utopian dream society. I hope your end goal succeds but your idealogy and tactics fails.
அட தோ பார்றா, இது ஜென்டில்மேனுக்கு அழகு, கத்துக்கையா மதியில்லா இந்தியா. Well done test
//Well done test//
கிஃகிஃகிஃகி
நன்றி, டெஸ்ட், வழிமுறை சரியாக இருந்தால்தானே இலக்கு வெற்றிபெறும்?
பிரமிக்க வைக்கும் உழைப்பு ,ஒருங்கிணைப்பு !
புரட்சிகர வாழ்த்துகள் தோழர் .
ஓராண்டு நிறைவு பெற்ற வினவுக்கு வாழ்த்துக்கள்!
உண்மையில் உங்கள் அர்ப்பணிப்பு உணர்வு கண்டு நான் பிரமிக்கிறேன். பெருமையாகவும் உள்ளது.
உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசிக்கிறேன். என்ன்னைப் போன்றோருக்கெல்லாம் படிக்கவே நேரம் போதாதிருக்கும் போது (அல்லது பின்னூட்டமிடக்கூட சோம்பலாயிருக்கிற வேளையில்) உங்களுடைய பதிவுகளும், அதற்கான தயார்படுத்தலும் கண்டு எனக்கு பொறாமையாய் இருக்கிறது. இனிமேலாவது என்னை நம் சமூகத்திற்கும் பயன்படுகிற வகையில் வாசிப்பிலும், அரசியல் பயிற்சியிலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆர்வம் கொள்ள தூண்டுகிறது..
நவீன தொழில்நுட்பத்தையும் மக்களுக்கான அமைப்புகள் அதற்குரிய வரைமுறையோடும், தேவையோடும் பயன்படுத்தி கொள்ள முடியும் என்பதற்கு உங்கள் வலைத்தளம் ஒரு உதாரணம்..
ஒரு காலத்தில் அசுரன் தான் வினவு என்ற பெயரில் தொடங்கி இருப்பாரோ என்று சந்தேகித்ததுண்டு.. (இன்னும் தீரவில்லை.. வினவு தொடங்கிய நாட்களில் அசுரன் தளத்தில் சில காலம் பதிவுகளே இல்லை.)
இங்கே சில சுய மோகிகள் தன் வீட்டு நாய் பற்றியெல்லாம் பதிவு போட்டு பெருமை கொள்கிறார்கள். ஆனால் உங்கள் ஓவ்வொரு பதிவுமே நிகழ் கால அவசியம் கருதியும், சமூகத்திற்கான தேவையை ஒட்டியும் இருக்கிறது.
உங்கள் ஓராண்டு அனுபவப் பதிவும் சிறப்பாக உள்ளது..
மென்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்….
தோழமையுடன்,
பால்வெளி..
(ம்ம்.. இந்தப் பின்னூட்டத்திற்கே அரை மணி நேரம் ஆகிறது..அப்ப உங்க பதிவுக்கெல்லாம்??..)
நன்றி நெல்லைமணி,
பால்வெளி
உங்களிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்து பெரிதும் மகிழ்கிறோம். அசுரனை நாங்களே வலைவீசித் தேடுகிறோம். இங்குதான் எதோ ஒரு பெயரில் பின்னூட்டம் போடுகிறார். அரைடிக்கெட் நினைத்தால் பிடித்து விடலாம்.
புரட்சிகர வாழ்த்துகள்..
நேற்று பதிக்க முடியவில்லை. நமக்கு நல்ல நேரம் கெட்ட நேரமே கிடையாதே.
ஒரு வருட விசை பலகையில் வினையாற்றி சமூக ஆர்வமிக்க இளைஞர்கள் மத்தியில் கருத்தியலில் வினையாற்றிய வினவுக்கு புரட்சிகர வாழ்த்துகள்..
ஒவ்வொரு வினைக்கும் எதற்கு சமமான எதிவினை உண்டு எனும் கோட்பாட்டை நெஞ்சில் நிறுத்தியோ நிறுத்தாமலோ வினவுடன் மல்லுகட்டி நிற்கும் எதிர்கருத்து பதிக்கும் தோழர்களுக்கும் நன்றி!!!
வினவு குழுவினருக்கு பாராட்டுக்கள் பல. தொடரட்டும் தங்கள் பணி
எப்போதும் இணையத்தில் ஏதேதோ தேடிக்கொண்டும், படித்துக்கொண்டும் இருந்தவன், கடந்த ஒரு வருடமாக இணையத்தில் தவறாமல் வாசிக்கிறேன். நண்பர்களுக்கும் அறிமுகம் செய்ததில் மகிழ்ச்சி. எவ்வளவோ மாற்றம். வினவுக்கு வாழ்த்தும் நன்றியும்.
ஃபியூசிக், நித்தில், செங்கதிர் மூவருக்கும் நன்றிகள்! செங்கதிர் உங்கள் தளத்தில் தொடர்ந்து எழுதுங்கள்.
சமூக, அரசியல் விசயங்களில் கருத்து சொல்ல ஏதேனும் ஒன்று இருப்பவர்களுக்கு வினவு தளத்தில் அதனை பதிவிடுவது நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புவது போல சுலபமாகவும், இனிய அனுபவமாகவும் இருப்பது வினவின் சிறப்பு. வினவின் கருத்தை ஒட்டியே சிந்திப்பவர்கள், ஒருவித பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் உணர்வில் மாற்றுக் கருத்தாளர்களை வசையுடன் எதிர்கொள்வது நெருடலான விசயம். வினவைப் போலவே சளைக்காமல் பதிவிடும் கலகம் போன்ற தோழர்களும் பாரட்டுக்குரியவர்கள். வாழ்க.
இது சரிதான், ஆனா நம்மள திட்டுறவங்கள திருப்பி திட்டினா என்ன தப்பு? நெட்டுல அது ஒரு பெரிய வசதியாச்சே 🙂
அட்ராசக்கை! அட்ராசக்கை! அப்டி போடு அருவால !
(தோழர் சுகதேவ் கோபப்படதீர்கள் சும்மா காமெடிக்கு)
நன்றி சுகதேவ், வினவின் கருத்தை ஒட்டி சிந்திப்பதோ, அதன் மூலம் மாற்றம் வரும் என நம்புவதோ அந்த நம்பிக்கை அடிப்படையில் விவாதிப்பதிலோ என்ன தவறு? அதையே ஒருவித பாதுகாப்பு வளையம் என்று நீங்கள் வெளியில் நின்று பேசுவதும் கூட ஒருவகை வசைதானே? கேலிதானே? ஆனால் வினவில் இப்படி பூடகமாகவெல்லாம் விவாதம் நடப்பதில்லை, எந்த பின்னூட்டத்தையும் தடுப்பதுமில்லை. அதனால் நீங்கள் உங்கள் கருத்தை தயக்கமின்றி விவாதிக்கலாம். அதை யாரும் வசையுடன் எதிர் கொள்ள கூடாது என மற்ற தோழர்களிடம் வேண்டுமானால் அனுமதி வாங்கித் தருகிறோம். நன்றி.
என்னுடைய கருத்துக்களுக்கு வரும் விமர்சனங்கள் எத்தகையதாக இருந்தாலும் என்னால் எதிர்கொள்ள முடியும் யாருடைய உதவியுமின்றி. பாதுகாப்பு வளையம் என்று நான் சொன்னது வசை என்று நீங்கள் சொல்லித்தான் எனக்கு இப்போது தெரிகிறது. விவாதங்கள் காமன் டெக்கோரத்தை மீறாமல் இருப்பது நல்லது என்ற எண்ணத்திலே சொன்னேன். அது உங்களுக்கு புரியா விட்டால் கவலையில்லை.
வாழ்த்துக்கள்.
பல முக்கிய விசியங்கள் பற்றி, தக்க சமயத்தில்
எழுதும் அபூர்வமான வலைதளம் இது.
மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
தொடரட்டும் தங்களின் பணி …
வாழ்த்துக்கள்.
குழந்தையாக இருக்கும்போதே இப்படீன்னா இன்னும் வளர்ந்த பிறகு ஃ……..
ம்ம்ம்…… கிளப்புங்கள்…..
புரட்சிகர வாழ்த்துக்கள்
அதியமான், டோமி, சுரேஷ் உங்கள் வாழ்த்துக்கள் எங்களது பொறுப்பை கூட்டுகின்றன
அண்ணே..!
இன்னும் பல நூறு கட்டுரைகளை வடிக்க வேண்டி வாழ்த்துகிறேன்..!
கருத்துக்கள் ஏற்புடையதோ இல்லையோ.. சொல்ல வந்த விஷயத்தை சொல்கின்ற பாங்கில் வினவுக்குத் தனி இடம் உண்டு. மிக்காரும் இல்லை.. இணையாரும் இல்லை.. அழகு..!
ஒவ்வொரு விஷயத்திலும் இப்படியும் ஒரு கோணம் உண்டோ என்று யோசிக்க வைக்கிறது வினவில் வருகின்ற கட்டுரைகள்.!
இதுதான் வினவின் சிறப்பு..
வாழ்க வளமுடன்..!
உண்மைத்தமிழன்
வினவின் கட்டுரைகள் பற்றிய உங்கள் மதிப்பீட்டிற்கும் வாழத்துக்களுக்கும் நன்றி
வாழ்த்துக்கள் வினவு தோழர்களுக்கு
நேற்றே வரமுடியாமல் போய்விட்டது
இரண்டாம் ஆண்டில் இருந்து கவிதைகளுக்கும் காரட்டூன்களுக்கும் தனி பக்கம்
ஒதுக்க வேண்டும்,
தினம் தோறும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறையோ கார்டூன்கள்,
கவிதைகள் வெளியிட முயற்சிக்கவும்
முன்னணி தோழர்கள் , கலைக்குழு தோழர்களின் செவ்விகள் வெளியிட முயற்சிக்கவும் (ஆனந்த விகடனுக்கு செவ்வி தரும் தோழர்கள் வினவுக்கும் நேரம் ஒதுக்கினால் நன்றாக இருக்கும் )
வினவின் முதலாமாண்டு நிறைவு இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு கவிதைப்படம் வெளியிட்டுள்ளேன்
தோழர்கள் பார்க்கவும்
தோழர் விடுதலை,
உங்கள் ஆலோசனைகளை நிச்சயம் நிறைவேற்றுகிறோம். உங்கள் கவிதைப் பட வாழ்த்துக்கு நன்றி
vinavukku en manamarntha valthukkal.
சாகீர் விரைவில் கணினித் தமிழ் எழுத கற்றுக் கொண்டு விவாதத்திலும் பங்கு பெறுங்கள், வினவை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்
வினவுக்கு வாழ்த்துக்கள்.
தினமும் வினவை பார்வையிடுவன்.
சிறப்பான கட்டுரைகள். எதிர் கருத்து பின்னுட்டங்களை/விவாதங்களை வெளியிடும் துணிவு.
தொடரட்டும் உமது பணி.
_ மோகன்,
வினவு குழு தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
வாழ்த்துக்களை அள்ளித்தருகிறேன்
அத்துடன் எனக்கு ஒரு விமர்சனமும் உண்டு.
வினவின் துவக்ககால பதிவுகளில் இருந்த இளமை,சொல்முறை
பதிவின் அழகு அனைத்தும் தற்போது கனிசமாக குறைந்துள்ளதாக
கருதுகிறேன்.
மேலும் வினவு சுயமாக முன்பு எழுதியதை விட தற்போது
புஜ புக கட்டுரைகளையே பெரிதும் நம்பியுள்ளதும்,பதிவிடுவது
அதிகமாகியுள்ளது.ஒரு தனி இணையம் என்கிற வகையில்
இது நல்ல வளர்ச்சி போக்கு அல்ல என்று கருதுகிறேன்.
புஜ வினர் தனி ஒரு தளம் துவங்கினால் நீங்கள் புஜ
கட்டுரைகளை போடமுடியாது என்பதையும் கனக்கில் எடுத்து
எமக்கு வினவு துவங்கிய சில மாதங்களில் நீங்கள் எழுதியதை
போன்ற கட்டுரைகளை தொடர்ந்து வழங்க வேண்டும் என்கிற
கோரிக்கையை தோழமையுடன் வைக்கிறேன்.
புரட்சிகரவாழ்த்துக்கள்.
தோழமையுடன்
சூப்பர்லிங்ஸ்
உங்கள் ஆர்வத்திற்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி மோகன்.
தோழர் சூப்பர்லிங்ஸ்
பு.க, பு.ஜ கட்டுரைகள் இதழ் வாங்காத உலகத் தமிழ் மக்களிடம் கொண்டு செல்வதற்காகவே வெளியிடுகிறோம். அதற்கும் நல்ல வரவேற்பு உள்ளது. ஆரம்ப காலத்தில் பண்பாட்டு பிரச்சினைகளை அதிகமும், தற்போது அரசியல் கட்டுரைகள் அதிகமும் வருவதால் உங்களுக்கு அப்படி தோன்றுகிறதா தெரியவில்லை. இருப்பினும் உங்கள் ஆலோசனைகளை நிறைவேற்ற முயல்கிறோம், நன்றி.
I have not seen any articles regarding corruption and other short comings in Judiciary in vinavu. Infact a website ( http://www.judgesplot4plot.com/ ) is boldly showing about the corruption in Karnataka highcourt. You may have accesses through many ways to know about the corruption in judiciary. Plz, try to expose them also. The corrupt judiciary will disrupt the entire nation.
அதிகாலை இணையத் தளத்தில், சில மாதங்களுக்கு முன் நான் எழுதிய ‘அரசியலில் இலக்கியவாதிகள்’ என்ற கட்டுரையில், தங்கள் வினவு வலைப்பதிவைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். படித்துப் பாருங்கள்.
http://adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=11902&Itemid=185
Really a good job.
wishes for the second year.
வணக்கம் தோழர்களே,
கடந்த ஓராண்டில் சமூக அரசியல் தளங்களில் விழிப்புணர்வூட்ட சிறந்த பங்காற்றியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் என்ற ஒற்றைச்சொல்லில் அது அடங்கிடாது. என்னில் ஏற்பட்ட ஐயங்களையெல்லாம் வினவையும், தமிழரங்கத்தையும் கொண்டே தெளிந்திருக்கிறேன். தொடர்ந்து…தொடர்ந்து, இன்னும் வீச்சாக, முன்னிலும் ஆழமாக….
வாழ்த்துக்களுடன்
செங்கொடி
அருமை தோழர்களுக்கு,
வாழ்த்துக்கள்.
பார்வையாளரா? பங்கேற்பாளரா? நீ என்ன செய்யப்போகிறாய்? என்ற
உங்களின் கேள்வி, முன்னர் ஒரு தோழர் என்னிடம் கேட்ட கேள்வியை நினைவுபடுதுகிறது.
பன்னி மாதிரி வாழ்வது வாழ்க்கையா.. பகத்சிங் மாதிரி வாழ்வது வாழ்க்கையா?
என்றார் அந்த தோழர்.
தற்போது நீங்கள் கேட்கிறீர்கள்.
விரைவில் ஒரு முடிவு எடுக்கிறேன்.
உங்களோடு ஒரு தோழராக…
அன்புடன்
ஆதி
தோழமைக்கு வணக்கம்,
வினவின் கருத்துக்கள் சமூகத்தில் வினையாற்றி மேலும் பலரை வென்றெடுக்க புரட்சிகர வாழ்த்துக்கள்.
vrinternationalists.wordpress.com
அதிகாலையில் வினவை அறிமுகம் செய்ததற்கு நன்றி அருளடியான்!
வாழ்த்துக்களுக்கு நன்றி கிருஷ்ணகுமார், விவாதங்களுக்கும் வாருங்கள்!
தோழர் செங்கொடி தொடர்ந்து உங்களது தளத்தில் எழுதுங்கள், நன்றி!
ஆதி எங்களது தோழராக வரும் நாளுக்கு காத்திருக்கிறோம், முதலாமாண்டின் நிறைவில் இதை விட மகிழ்ச்சிக்குரியது ஏது?
சர்வதேசியவாதிகள், நன்றி, உங்கள் புதிய தளம் இளமைத் துடிப்புடன் இயங்குவதற்கு வாழ்த்துக்கள்!
வினவு பணி தொடர……. வினவு குழும தோழர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்…….
தோழர் சூப்பர் லிங்க் சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன்….
ஆரம்பத்தில் இருந்தது போல வினவு மாற வேண்டும் என்பதே எங்களது விருப்பம்…
வேலைப் பளு காரணமாக நிறைய மறு மொழிகள் போடவில்லை என்றாலும்…..
ஒரு அமைதியான வாசகன் போன்றே இருந்துள்ளேன்…..இனி என்னுடைய விமர்சினங்களையும் பார்க்கலாம்…..நன்றி……
புரட்சிகரமாக ஓர் ஆண்டு நிறைவு செய்த வினவு குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
ஓராண்டு நிறைவு செய்துள்ள வினவு தளத்திற்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.
இன்றுதான் தளத்தை பார்த்தேன். தாமதமாகக் கருத்துக்களை பதிவு செய்தமைக்கு வருந்துகிறேன்.
ஓராண்டு என்பது காலக் கணக்கு அல்ல. இந்த காலகட்டத்தில் இணையத்தில் வினவு ஏற்படுத்தியுள்ள மாற்றங்களே கணக்கு. இந்த ஓராண்டை திரும்பி பார்ப்பது என்பது பெருமிதத்திற்காகவோ, அல்லது வெற்று விளம்பரத்திற்காகவோ அல்ல. மாறாக, இந்த காலகட்டத்தில் பெற்ற அனுபவங்களை வினவும், அதன் தோழர்களும், நண்பர்களும், வினவுடன் முரன்பட்ட நண்பர்களும், அமைதியாய் இருந்து அவதனித்தவர்களும் தொகுத்துக் கொள்ளும் நேரம் இது.
அந்த வகையில் வினவு ஜனநாயகமான ஒரு விவாதச் சூழலை உருவாக்குவதில் முன்னேறியுள்ளது. வினவின் வளர்ச்சிக்குக் காரணமே அதுதான். பலதரப்பு ஆட்களையும் தனது நண்பர்களாக, கருத்து வேறுபாடுகளையும் மீறி தனது நண்பர்களாக ஈர்த்துள்ளது வினவு. இது அசுரன் தளத்திற்கும் ஒரு அனுபவமே. இந்த வகைப்பட்ட அனுகுமுறை இன்மையின் தோல்விகளை வினவு உருவாக்கிய பாய்ச்சலின் ஒளியில்தான் அசுரன் தளம் பரிசீலிக்க இயன்றது. வினவுக்கு நன்றிகள். இணைய அனுபவத்தை ஒரு ஆக்கப்பூர்வமான தளத்திற்கு கொண்டு சென்றமைக்கு. அதாவது வினை செய்யத் தூண்டும் ஒரு தளமாக தொடர்கின்றமைக்கு.
வினவு செயல்படத் தொடங்கிய கொஞ்ச காலத்தில் புரட்சிகர ஜனநாயக சக்திகளின் பல கை ஓசையாக ஒலித்த இணையம் ஒரு சில ஜாம்பாவன்களே செயல்படும் நடன அரங்காக மாறியது. இதனை குற்றவுணர்வுடன் தனது ஓராண்டு அனுபவத்தில் பதிவு செய்துள்ளது வினவு. நல்லது, அந்த ஜாம்பாவன்களில் ஒருவராக நடனமாடும் அளவு கைதட்டிக் கொண்டிருந்த நாங்கள் வளராது போனதை நானும் குற்றவுணர்வுடன் பதிவு செய்கிறேன். இதனைக் களைந்து கொண்டு நாங்களும் வினவுடன் இணையாகச் செயல்படுவோம்.
தோழமையுடன்,
அசுரன்
வினவு தொடர்ந்து சமூகத்தில் வினையாற்ற
புரட்சிகர வாழ்த்துக்கள்.
வினவு தோழர்களுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள்!
வாழ்க்கைப் போராட்டமும், கடுமையான வேலை நெருக்கடியும் இணைந்து எனது இணையச் செயல்பாடுகளுக்கு பெருந்தடையாக உள்ளது. இருப்பினும் இடையிடையே கிடைக்கின்ற சொற்ப நேரங்களில் மட்டுமே இணையத்தினுள் வரமுடிகிறது. குறைந்த பட்சமாக வினவின் விவாதங்களிலாவது பங்கெடுத்திருக்கலாம், முடியாது போனதை எண்ணி வருந்துகிறேன்.
வினவின் ஓராண்டு கால அனுபவமும் வளர்ச்சியும் ஒரு தொடக்க நிலைப் பதிவராக இருக்கும் எனக்கு உற்சாகத்தையும் பல்வேறு அனுபவங்களையும் தந்திருக்கிறது.
வினவுக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோழமையுடன்,
ஏகலைவன்
குட்டக்குழப்பி, பிற்போக்கு குட்டையைக் குழப்பி கசடுகளை நீக்குவதற்கு வாருங்கள்!
பென், வாழ்த்துக்களோடு பங்கேற்கவும் வாருங்கள், நன்றி!
ஒருவழியாக தலைவர் அசுரன் வந்தமைக்கு மகிழ்ச்சி, உங்கள் சுயபரிசீலனையின் ஒளியில் மீண்டும் அதிரடியாக செயல்பட வாழ்த்துக்கள்! இணையத்தை புரட்சிகரக் கருத்துக்களின் கோட்டையாக மாற்றுவோம், நன்றி!
நன்றி சமரன், விவாதத்திலும் பங்குபெறுங்கள்!
வாழ்த்துகளுக்கு நன்றி தோழர் ஏகலைவன், வாழ்க்கைப் பிரச்சினைகளை சரிசெய்துவிட்டு இணையத்திற்கு வாருங்கள். நீங்கள் இல்லையென்பதால் போலிகளுக்கு துளிர்விடக்கூடாது!
வினவின் கட்டுரைகள் பெரும்பாலானவற்றை படித்து ஒன்றில் கூட பின்னூட்டம் இடாத எத்தனையோ பேர்களில் நானும் ஒருவன். நேரக்குறைவும், வினவின் தரமான கட்டுரைகளில் பங்கேற்று உரையாடக் கூடிய அளவுக்கு அரசியல் அறிவு எனக்கிருப்பதைப் பற்றிய சந்தேகமுமே அதற்கான காரணம் எனக் கொள்ளலாம்.
இணையத்தில் எழுதுவதை பலரும் வேலையினூடான நேரப்போக்காக பயன்பத்தும் சூழலில் சீரியஸாக எழுதுபவர்கள் கூட இப்படி ஒரு செயல் திட்டத்துடன் இணையத்தைப் பயன்படுத்தியது இல்லை என்றே நினைக்கிறேன். இந்த இடைவெளியை வினவு குறைத்திருக்கிறது. ஜனநாயகப் பூர்வமான ஒரு இணைய உரையாடல் வெளியை கட்டி அமைத்ததில் வினவுக்கு பெரும்பங்கு உண்டு. வாழ்த்துக்கள்.
தோழமையுடன்
ஆழியூரான்.
//தலைவர் அசுரன் //
இது வேண்டாமே…. தோழர் என்றே கூப்பிடுங்கள். தகுதியில்லாத இடத்தில் இந்த பதம் உபயோகிக்கப்படும் போது அது கேலிக்குரியதாகிவிடுகிறது. இந்த இடத்தில் அது கேலிக்குரியதாகவே உள்ளது.
இணையத்தில் அசுரனது பங்களிப்பை சொல்வதற்காக உண்மையிலேயே சொல்லப்பட்டது, கேலிக்காக அல்ல, இருப்பினும் இனி தோழர் அசுரன் என்றே…..
தோழர் ஆழியூரான், விவாதத்தில் பங்கு பெறுவது, நமது கேள்விகள், ஐயங்கள் எழுப்பி விவாதிப்பது இவற்றினூடாகத்தானே அரசியல் அறிவு வளரும்? பொழுது போக்குகளுக்கு மத்தியில் இத்தகைய தீவிர செயல்பாடு வெற்றியடைந்திருப்பது சமூக மாற்றம் குறித்த நம்பிக்கையை நம் மனதில் துளிர்க்கச் செய்கிறது. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்!
///தலைவர் அசுரன் //
இது வேண்டாமே…. தோழர் என்றே கூப்பிடுங்கள். தகுதியில்லாத இடத்தில் இந்த பதம் உபயோகிக்கப்படும் போது அது கேலிக்குரியதாகிவிடுகிறது. இந்த இடத்தில் அது கேலிக்குரியதாகவே உள்ளது.///
தலைவரை, எந்த இடத்தில் பார்த்தாலும் தலைவர் என்றுதான் அழைக்க வேண்டும்..! அதுதான் மரியாதை..
வினவு செய்தது சரிதான்..! இது கேலி அல்ல..
தோழர் அசுரன் என்றழைக்க எனக்கும் ஆசைதான். ஆனால் எனக்கெல்லாம் அதற்குத் துளியும் அருகதையும், உரிமையும், தகுதியும் இல்லாததால் நானும் தலைவா என்றே அழைத்துக் கொள்கிறேன்..!
ஏனெனில் இரண்டு, மூன்று முறை தலைவரிடம் முட்டி மோதி சுண்ணாம்பு தடவிக் கொண்டதுதான் மிச்சம்..! ம்ஹும்.. அதற்குப் பின் தலைவருடன் மோதுவதே இல்லை. நானும் தொண்டனாகி ஆஃப் ஆகிவிட்டேன்..!
தலைவர் அசுரன் வாழ்க..!
அன்பான நண்பர் திரு வினவு அவர்கட்க்கு,
ஓர் ஆண்டு முடிந்தமைக்கு வாழ்த்துக்கள்! உலக மகா பொய் ஆட்சி நம்பர் ஒன்று சுமார் எழுபத்திநான்கு வருடங்கள் நின்றது. உலகமகா பொய் ஆட்சிக்கு இரண்டிற்கு ஐம்பது இப்ப running! இன்னும் ஐந்தாறு தாங்கும், மிஞ்சிப்போனால் இன்னும் பத்து!
சொல்லவருவது என்னவென்றால், ஒரு வருடம் என்பது உங்கள் ரேஞ்சிற்கு ஒரு பெரிய score இல்லை!
நண்பர் வினவுக்கு மட்டும் அல்ல இந்த வாழ்த்து! உங்களின் ஒவ்வொரு – ஒரு மற்றும் இரு பக்க – கற்பனைக்காழ்ப்புனர்ச்சிக்கு ஓடோடி வந்து காவடி தூக்கும் கருத்து கனவான்கள் கூட்டத்திற்கும் சேர்த்துதான்!
புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்!
மிக நன்றாக இருந்தது நீங்கள் இந்த ஒரு வருடம் செய்தது. இப்போது செய்வதும், செய்யப்போவதும் அப்படியே இருக்கும் என்று நம்போவோமாக!
நான்றாக எழுதுகிறீர்கள். நல்ல கற்பனை வளம். சிறந்த உலகறிவு உங்களுக்கு. விழித்துக்கொண்ட உலகில், உளுத்துப்போன கம்யூனிச சித்தாந்தத்திற்கு (மன்னிக்கவும் ஸ்டாலினிச மற்றும் மவோஇச எனப்படும் இரத்தவெறி பிடித்த முட்டாள்தனத்திற்கு) வக்காலத்து வாங்கும், வாங்கத்துடிக்கும், ஒரு சிறு கூட்டத்தின் இந்தியப்ப்ரதிநிதியாக அதிலும் அழிந்துகொண்டிருக்கும் கூடாரத்தில் நான்கு கட்டைகளை காட்டி, நான்கு கைத்தடிகளை வைத்துக்கொண்டு புரட்சி செய்யத்துடிக்கும் பொன்மனச்செம்மலே (அல்லது செம்மனச்செம்மலே), எல்லோரும் முட்டாள்கள் இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ளவும்!
முதலில் உங்கள் எழுத்திற்கு சிங்கி அடிக்கும் கூட்டம் பற்றி முதலில்!
ஒருவர் பரமார்த்த குருவாம், சிலர் அவர்களுக்கு சீடர்களாம்!
நொந்தகுமாரன் என்ற ஒரு மாமேதை, புரச்சி என்ற ஒரு அறிவாளி, கலகம், குருத்து என்ற பெயர்களை கொண்ட சில சிந்தனை சிர்ப்பிகள் இந்த குருவின் காமடியான கசடுகளை காவியங்கள் என்றும், உண்மையின் ஊற்று என்றும் கூவிக்கொண்டு முதல் build up கொடுப்பார்கள்!
அதிலும் இந்த கலகம் என்பவரின் அட்டகாசம், அய்யோ தாங்க முடியலடா சாமி!
மன்னிக்கவும், தாங்க முடியலை ஸ்டாலின்! Ulorometer என்ற ஒன்று இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இருந்திருந்தால், இவரின் உளரலை வைத்துதான் இந்த இயந்திரத்தை calibrate செய்யவேண்டும்!
இந்த கூற்று முடிந்த பின் ஒரு ரசிகர் கூட்டம் ஆகா ஓகோ என்று சுமார் இருபது பின்னூட்டங்கள் இட்டு தாங்களும் முற்போக்கானவர்கள் என்று பதிவு செய்வார்கள்.
பல பின்னூட்டங்களில் பொறி பறக்கும். Trotsky இன் எழுத்துக்கள்கூட இவ்வளவு காரசாரமாக இருந்ததில்லை!
“The Mouse that roared” என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். தமிழில் அதற்க்கு மிக அருகில் வருவது – ” ஆண்டிகள் மடம் கட்டுவது”
இந்த ஆண்டி கூட்டத்தினர் தினமும் ஏதாவது ஒரு Topic எடுத்துக்கொள்வார்கள். பெரிய ஆண்டி அதாவது, அன்பான நண்பர் வினவு, காலியான தனது திருவோட்டினை கும்பலின் மத்தியில் வைப்பார். ஒரு நாள் கலியாண சாப்பாடு, ஒரு நாள் எழவுச்சாப்பாடு, ஒரு நாள் health food , ஒரு நாள் ஐந்து நட்சத்திர ஓட்டல் சாப்பாடு என்று தினந்தோறும் தீபாவளி கொண்டாடுவார்கள், அந்த ஒரு திருவோட்டை வைத்துக்கொண்டு! மேலும் துணைக்கு ஒரு கிழிந்துப்போன ஈரத்துணி உண்டு! இந்த கூத்து ஒரு பக்கம் இருக்க, மடத்தை எப்படி கட்டலாம், என்று ஆழமாக சிந்தனை வேறு! எல்லாம் முடிந்தபின், காலை நேரம் வந்தபின், துண்டை மடித்து, திருவோட்டை எடுத்து கிளம்பி விடுவார்கள், பிச்சை எடுக்க!
இதில் super comedy, RV என்ற ஒருவர் வந்து பக்கம் பக்கமாக தன்னிலை விளக்கம் தந்துவிட்டுப்போவார்! நீங்கள் இப்படி சொல்லக்கூடாது, அப்படிசொல்லக்கூடாது என்று! இவருக்கென்ன போச்சு!
விடயத்திற்கு வருவோம்.
பொழுதுபோக்கிற்காக மான்களை அடிக்கும் வேட்டைக்காரன் மிருகவதையை பற்றி பல பக்கம் Lecture கொடுத்தானாம். கேட்கவந்த கேணயர்கள் எல்லாம் கைதட்டி குதிச்சானாம்!
அய்யா திரு வினவு மற்றும் கோஷ்டி கூத்தடிக்கும் ஒன்றும் தெரியாத புர்ர்ரச்ச்சி நண்பர்களே, 1917 to 1953 வரை இரத்த தாண்டவமாடிய ஸ்டாலின் மற்றும் நீங்கள் காதலிக்கும் செத்துப்போன சோவியத் ரஷ்ய சர்வாதிகாரிகள் செய்த அட்டுழியங்களை அட்டகாசம் என்று எப்பொழுது ஆர்பரித்து, ஆனந்த கூத்தாடி அதுவே எங்கள் பாதை என்று கூவுகின்றீர்களோ, அப்பொழுதே, எதைப்பற்றியும் விமர்சிக்கும் தகுதியை இழந்துவிட்டீர்கள்!
ஜோசப் ஸ்டாலின், லவறேன்ட்டி பெரியா, நிகொலை எஷோவ், மாசேதுங், போல்போட், சொய்பல்சென், கிமில்சுங், என்விர் ஹோட்ச, நிகொலை சொவ்செச்சகூ…..இன்னும் பலர் பலர் பலர்.
இந்த மாமனிதர்கள், அதாவது நீங்கள் நேசிக்கும், போற்றும், துதிக்கும், இவர்கள் world History இல் பெற்றுள்ள இடம் – Infamous list of Mass murderers!
உலகம் முழுவதும் இவர்களின் வண்டவாளங்கள், செய்த கொடும் குற்றங்கள் மிக பிரபலம்! இவர்கள் செய்த கொடுமைகளைப்பற்றி absolute evidence மற்றும் complete documentary proof உள்ளது. பக்கம்பக்கமாக, புத்தகம் புத்தகமாக பல மிக சிறந்த ஆராய்ச்சியாளர்கள் இவர்களின் வாழ்க்கை, செய்த செயல்கள், கொன்ற உயிர்களைப்பற்றி எழுதிவிட்டார்கள், எழுதிக்கொண்டிருக்கிறார்கள், எழுதுவார்கள்!
ஆனால் நம் நண்பரோ (நண்பர்களோ) New century book house மற்றும் இப்பொழுது ஒழிந்துபோன Progress Publication (Moscow) போன்ற காலாவதியான பொய் பிரச்சார பீரங்கிகள் வெளியிட்ட கதைகளை இன்னுமும் படித்துக்கொண்டு, பிடித்துக்கொண்டு இந்த உலகை திருத்தப்போகிரார்களாம்!
Liars first target others but end up believing in them!
நீங்கள் தப்பித்தவறி உண்மை பேசினாலும் (உங்கள் புரட்சிகர கோஸ்டியை தவிர) யாரும் நம்பமாட்டார்கள் எனென்றால் – Liars even when they speak the truth are not believed !
முதலில் 1905 முதல் 1917 வரை பொல்ஷேவிககுகள் செய்தது என்ன, பின்னர் 1917 முதல் 1924 (Lenins Death) வரை நடந்தது என்ன, பின்னர் 1924 முதல் 1937 வரை stalin செய்தது என்ன பின்னர் 1949 முதல் 1971 வரை மாசே செய்தது என்ன என்பவையை நன்றாக படித்து, உணர்ந்து, பிற்ப்பாடு நீங்கள் ஊரை திருத்துகிற காரியத்தை செய்தீர்களானால்………………………………….
The origins of communist rule in Russia, the basics of Bolsheviks world view and Mao Tse Deng’s methods employed to capture power and enforce religion like dogama by brute force and willfull application of voilence on innocent population போன்றவைப்பற்றி தெரியவேண்டுமென்றால் ஒரு நாலு நல்ல புத்தகங்களை படியுங்கள். முடியவில்லையா, என்னிடம் கேளுங்கள், ஸ்டாலினால் சாம்பலான செர்கே கிரோவ் முதல் கன்றிக் யகோட வரை, நாடியா முதல் போலினா மொலோடோவ வரை புகாரின் முதல் டுகசெவேச்கே வரை எல்லோர் பற்றியும் உங்களுக்கு ஸ்பெஷல் class எடுக்கிறேன்! இது போதவில்லை என்றால் great Leap forward பற்றி cultural revolution பற்றியும் மற்றும் Mao induced great famine of China பற்றியும் tutorials எடுக்கிறேன்!
“You cannot cheat all the people all the time” – The crashing down of your fraudulent , dictatorial and facist theology (dressed up as communism) all around the civilized world proves the point!
Dear நண்பரே, உலகமெங்கிலும் உங்கள் சாயம் வெளுத்துவிட்டது. உங்களைப்போல பொய் சொல்லி உணர்ச்சிக்களை தூண்டிவிட்டு வழியப்போகும் குறுதியை நினைத்து உண்டி கிடைத்தது என்று ஓலமிடும் உதவாக்கரை கூட்டங்கள் உலகில் இப்பொழுது எங்கும் இல்லை. எல்லா இடங்களிலிருந்தும் விரட்டி அடிக்கப்பட்டுவிட்டார்கள் (நேபாளத்தத்தவிர, அதுவும் இன்னும் சிறிது நாட்க்களில் அவர்களும் புரிந்துகொள்வார்கள்).
நிற்க.
விரட்டி அடித்தது, நீங்கள் என்றும் நம்பும் முரட்டுத்தனமான கொலைகார கம்யூனிச பாசிச்டுகள் அடங்கிய ராணுவமோ அல்லது KGB போன்ற secret service ஒ அல்ல. பொது மக்கள் ஐயா. பொது மக்கள்.
The point is உங்களைப்போன்ற வேலை இலா சிலர்தான் இன்னும் ஸ்டாலின் மற்றும் மாசேவின் படங்களை சட்டையில் மாட்டிக்கொண்டு, சத்தியம் நாங்களே, சகலமும் நாங்களே என்று கத்திக்கொண்டு அலைகிறீர்கள். அதையும் நம்பிக்கொண்டு முற்போக்குவாதி முத்திரை வாங்குவதற்கு முட்டிக்கொண்டு வரும் ஒரு முப்பது பேர். போதாக்குறைக்கு தினமும் ஸ்டாலின் மற்றும் மாசே தவிர எல்லாவற்றைப்பற்றியும் வசவு! இது எல்லாம் சேர்த்து செய்ததுதான் வினவு என்ற இந்த கொடூர comedy கனவு!
ஒரு வருடம் என்ன ஓராயிரம் வருடம் நடத்துங்கள் ஐயா உங்க கச்சேரியை ஏனென்றால் you can still cheat some people for all the time!
வாழ்க வளமுடன்!
நன்றி
அட நீங்க தான் அந்த NO வா ?
‘ஸ்டாலின் முதல் மாவோ வரை’
அத்தனை பேரைப்பற்றியும்
நீங்க சொல்ற அத்தனையும் உண்மைகள்
உண்மைகளுக்கு
நாங்க எப்படி
NO
சொல்ல முடியும் ?
வினவப்பற்றி கூட நீங்க
ரொம்ப கரெக்ட்டா சொன்னீங்க.
ஆனால்
இப்படி வருசத்துக்கு ஒரு வாட்டி
வந்து போகாம
அடிக்கடி வந்தீங்கன்னா கொஞ்சம்
‘நல்லா’ இருக்கும்.
நோ ?
அடேங்கப்பா… யாருப்பா நீ
அய்யய்ய என்னென்னமோ எழுதிட்டியேப்பா
அறிவு நெறயா இருக்குது பார்த்து ஏதாவது பன்னி அறிவ சுவாகா பண்ணிட போவுது
ஊர திருத்த நீ என்னப்பா கொள்கை வெச்சிருக்க
நீ யாருன்னு எனக்கு தெரிஞ்சிடுச்சு (இதே பதிவுல வேற பேருல நீ வந்துருக்க)
கம்யூனுசம்னாலே உன்ன மாதிரி மூதேவிங்களுக்கு ஏயா பேதியாவுது?\\அன்பான நண்பர் திரு வினவு அவர்கட்க்கு\\
இப்டிலாம் எழுதி திட்டுனா நீ நாகரீகமானவனா?
கண்ணு பாத்து சரியா எழுது, சும்மா கழிஞ்சு வைக்கறதுக்கு வினவு பக்கம்
வறாத,,,
//உங்களுக்கு ஸ்பெஷல் class எடுக்கிறேன்!//
ஏண்டா திமிரெடுத்து திரியரீங்க
(ஏங்க வினவு கருத்து சுதந்திரம்னுட்டு இந்த மாதிரி அர லூசெல்லாம் ஏங்க உள்ர விடுறிங்க)
வினவு குழுவினருக்கு,
வினவு தளம் பற்றி என் பதிவுக்கு வந்த ஒரு மறுமொழியிலிருந்து –
// ஆர்வி…
அதே கட்சிக்காரர்கள் தான் மேற்கு மம்பலம், ஆர்ய கௌடா ரோடில் உள்ள `அயோத்யா மண்டபம்` என்ற மத ஸ்தாபனத்தை தாக்கி, அங்குள்ளவர்களை துன்புறுத்தினர். அதுலிருத்தே தெரியவில்லையா, அவர்கள் வன்முறையான cynical moves. //
இது என்ன விஷயம் என்று ஏதாவது சொல்ல முடியுமா?
http://koottanchoru.wordpress.com/2009/07/18/வினவு-தளம்/#comment-1112
நோ அவர்களுக்கு,
நான் இவ்வளவு பிரபலமனாவனா? எனக்கே தெரியாமல் போய்விட்டதே! 🙂
அப்பாடா, வினவை கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்களும் திட்டுகிறார்கள், கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்களும் திட்டுகிறார்கள்! நான் நடுநிலையாளன் என்பது நிரூபணம் ஆகிவிட்டது! 🙂
ஆர்.வி,
2007 என்று ஞாபகம், ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை சில இந்து மதவெறியர்களால் தாக்கி இடிக்கப்பட்டதை கண்டித்து ம.க.இ.கவினர் அதே இடத்தில் ராமர் படத்தை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பெரியார் திராவிடர் கழகத்தின் அணிகளும் தன்னெழுச்சியாக பல நடவடிக்கைகளை செய்தனர். அதில் மாம்பம் அயோத்தியா மண்டபத்தில் ஆட்டோவில் வந்து ஆளில்லாத மூலையைப்பார்த்து பெட்ரோல் குண்டு வீசிச் சென்றனர். இதில் யாருக்கும் காயம் இல்லை. ஆனால் பெரியார் சிலை இடிக்கப்பட்டதை கண்டுகொள்ளாத ஊடகங்கள் இந்த அயோத்தியா மண்டப தாக்குதலை பூதாகரமாக சித்தரித்தனர். பா.ஜ.க இல.கணேசன், எஸ்.வி.சேகர் முதலானவர்கள் தலைமையில் சாலை மறியல், இந்து, தினமலர் ஏடுகளில் முழுபக்க கவரேஜ் என அமரக்களப்பட்டது. இறுதியில் அப்படி தாக்குதல் நடத்திய பெரியார் தி.கவினர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கருணாநிதி அரசு பார்ப்பனர்களிடம் நல்ல பேர் எடுப்பதற்கும், ஊடகங்களை சமாதானப்படுத்துவதற்கும் பெரியார் தி.கவினர் மீது கடும் நடவடிக்கை எடுத்தார். பெரியார் தி.கவினரும் சூத்திரர் கருணாநிதி அரசை இந்தப் பிரச்சினையை வைத்து பார்ப்பனர்கள் மிரட்டுவதைக் கண்டு கருணாநிதி அரசுக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்பதற்காக தங்களது போராட்டங்களை நிறுத்திக் கொண்டார்கள்.
மைக்கேல ஜாக்சன் கட்டுரையைப் பற்றி ஒன்றுமே இல்லையா?
நோ என்பவர் வினவை இவ்வளவு நுணுக்கமாக ஒரு துளியைக் கூட விடாமல் படித்து மனப்பாடம் செய்வதற்கு வாழ்த்துக்கள்.
வினவு குழுவினருக்கு,
“ஆளில்லா மூலையில்” பெட்ரோல் குண்டு வீசியது தவறில்லை, அதை இல. கணேசனும் எஸ்.வி. சேகரும் கண்டித்ததுதான் தவறு என்று சொல்கிறீர்கள். என்ன சொல்வது என்றே தெரியவில்லை, வாயடைத்து போய் நிற்கிறேன். ஒரு வேளை ஸ்ரீரங்கம் பெரியார் சிலைக்குள் நிறைய ஆள் இருந்தார்களோ? இல்லை ஆளில்லா மூலை சப்பைக்கட்டு எல்லாம் அயோத்தியா மண்டபத்துக்கு மட்டும்தானா? இது போன்ற வாதங்கள்தான் நீங்கள் இரட்டை நிலை எடுக்கிறீர்கள் என்ற சலிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை எப்போதுதான் உணர்வீர்களோ தெரியவில்லை.
ஆர்.வி, சொல்லாத ஒன்றை சொல்லியதாக கற்பனைசெய்து கொண்டு அதற்கு பதில் வேறு அளிக்கிறீர்கள். மேலே வினவு நடந்த சம்பவங்களை தொகுத்து எழுதியிருக்கிறது. இதில் நீங்கள் சொல்லியது போல
‘ஆளில்லா மூலையில்” பெட்ரோல் குண்டு வீசியது தவறில்லை, அதை இல. கணேசனும் எஸ்.வி. சேகரும் கண்டித்ததுதான் தவறு’
இப்படி எங்கே இருக்கிறது. உங்கள் தளத்தில் ஒரு அரைபைத்தியம் பார்ப்பனர்களை தாக்கி துன்புறுத்தியதாக பொய் எழுதியிருப்பது போல நடக்கவில்லை, யாரையும் தாக்கி துன்புறுத்தவில்லை, யாரும் இல்லாத நேரத்தில் ஆளில்லாத மூலையில் அவர்கள் குண்டு வீசினர் என்ற fact ஐ ஏன் உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
உங்களைப்போலவே கேள்வி கேட்கவேண்டுமென்றால்’ ஆர்.வி பெரியார் சிலை உடைத்ததை சரி என்று சொல்லும் நீங்கள் அயோத்தியா மன்டபத்தை தாக்கியதை ஏன் தவறு என சொல்கிறீர்கள்? ஏன் இந்த இரட்டை நிலை?
அரை டிக்கெட்,
நான் மதிக்கும் மாற்று கருத்துள்ளவர்களில் நீங்களும் ஒருவர். அதனால் ஒரு முறை என் புரிதலை உங்களுக்கு புரிய வைக்க ஒரு முயற்சி செய்து பார்க்கிறேன்.
எழுதப்பட்ட வார்த்தைகளில் அயோத்தியா மண்டபத்தில் குண்டு வீசியது சரி என்று இல்லைதான். ஆனால் எழுதப்படும் தொனி என்று ஒன்று இருக்கிறதல்லவா?
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், எஸ்.வி. சேகரும், இல. கணேசனும் அயோத்தியா மண்டபம் குண்டு வீச்சை கண்டித்தது சரி என்றுதான் இந்த மறுமொழியில் சொல்லப்படுகிறதா? நீங்கள் இந்த மறுமொழியை நாலு பேரிடம் காட்டி கேளுங்கள், அயோத்தியா மண்டபத்தில் குண்டு வீசியதற்கு இந்த மறுமொழியில் வக்காலத்து வாங்கப்படுகிறதா இல்லையா என்று. பிறகு பேசுவோம். அட அடுத்தவர்களை விடுங்கள், நீங்கள் இந்த மறுமொழியில் வக்காலத்து வாங்கப்படுகிறது என்று நினைக்கிறீர்களா இல்லையா? அட அதைக் கூட விடுங்கள், இதை படிப்பவர்களுக்கு அப்படி தோன்றக் கூடுமா இல்லையா?
இல்லை அயோத்தியா மண்டபத்தில் குண்டு வீசியது தவறு என்று எங்காவது வார்த்தைகளோ, தொனியோ உங்கள் கண்களில் தென்படுகிறதா? எஸ்.வி. சேகர் பெரியார் சிலையை உடைத்ததை கண்டித்தால்தான் அயோத்தியா மண்டப குண்டு வீச்சை கண்டிக்க முடியும் என்று சொல்லாதீர்கள், அது தவறான வாதம். நீங்கள் எஸ்.வி. சேகர் பெரியார் சிலையை உடைத்ததை கண்டித்தால்தான் அயோத்தியா மண்டப குண்டு வீச்சை கண்டிக்கலாம் என்று வாதிட்டால், வினவு அயோத்தியா மண்டப குண்டு வீச்சை கண்டித்தால்தான் பெரியார் சிலையை பற்றி பேசலாம் என்றும் வாதிடுவீர்களா?
அப்புறம் ஆளில்லா மூலை, யாருக்கும் காயம் படவில்லை என்று விளக்கம் தரப்படுகிறது. பெரியார் சிலைக்குள் என்ன அடுக்கு மாடி குடியிருப்பா இருக்கும்? அங்கே யாருக்காவது காயம் பட்டிருந்தால் அதை வினவு சொல்லாமலா இருப்பார்? இந்த விளக்கங்கள் ஸ்ரீரங்கத்தில் apply ஆகாதா?
பிரச்சினையே இந்த இரட்டை நிலைதான். சீமானின் கார் டயர் எரிக்கப்பட்டால் தவறு என்று சொல்லப்படும். ஆமாம் தவறு என்று நானும் சேர்ந்து சொல்வேன். ஆனால் சாமி மீது முட்டை வீசலாம் என்றும் சொல்லப்படும். எப்படி மாற்று கருத்து சொன்னதற்காக சீமானின் கார் டயர் எரிக்கப்படகூடாதோ, அதே போல் மாற்று கருத்து சொன்னதற்காக சாமி மீது முட்டை வீசப்படக் கூடாது என்பது வினவு குழுவினரால் புரிந்து கொள்ள முடியவில்லை. தவறான கருத்தாயிற்றே என்றுதான் கொதிக்கிறார்கள். பெரியார் சிலை இடிப்பு தவறு என்றுதான் நான் நினைப்பேன் என்பது நான் வெளிப்படையாக சொல்லாமலே நீங்கள் புரிந்து கொள்ளக் கூடியது என்று நினைக்கிறேன். ஆனால் வினவின் மறுமொழியை படிப்பவர்கள் யாரும் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு வினவின் கண்களில் தவறு என்று புரிந்து கொள்ளப் போவதில்லை. தொனி அப்படி. நிச்சயமாக வினவு இதை தவறாக கருதுகிறார் என்று எனக்கு தோன்றவில்லை. உங்களுக்கு அப்படி தோன்றுகிறதா?
வினவின் இந்த மறுமொழி எனக்கு மிகவும் blatant ஆன சப்பைக்கட்டாக தெரிகிறது. படிப்பவர்கள் அப்படித்தான் புரிந்து கொள்வார்கள். இதை நீங்களும் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.
விவாதங்களை திசை திருப்ப வேண்டாம் என்ற என் எண்ணம் இன்னும் முழுதாக வெற்றி பெறவில்லை. 🙂 வாழ்த்து சொல்ல வேண்டிய இந்த பதிவிலும் எங்கெங்கோ போய்க்கொண்டிருக்கிறேன்.
ஆர்.வி,
நீங்கள் அயோத்தியா மன்டபத்தில் யாராவது தாக்கப்பட்டார்களா என கேட்டீர்கள் இல்லை நபர்கள் தாக்கப்படவில்லை என்ற உண்மையை சொன்னால் சப்பை கட்டா?
ஒரு வேளை அயோத்தியா மன்டபத்தில் குண்டு வீசப்பட்டது சரியா என நீங்கள் கேட்டுப்பாருங்கள்…. என்ன பதில் வருகிறது என பார்ப்போம்!
மற்றபடி தொனியெல்லாம் அவரவர் அரசியல் நிலைப்பாட்டை கொண்டுதான் உணர்ச்சியை ஏற்படுத்தும். ஆர்எஸ்எஸ் பத்திரிக்கையின் எடிடோரியலை பார்த்தால் எனக்கு பற்றிக்கொண்டு வரும் ஆனால் விஜயராகவனுக்கு அப்படி இருக்காது. அப்போ தவறு யாரிடம்?
நீங்கள் சொல்வது போல அதுவும் தவறு இதுவும் தவறு என எல்லா விடயங்களிலும் சுலபமாக முடிவுக்கு வந்து, அவைகளை ஒரே மாதிரியாக வைத்து பார்க்க முடியாது. நீங்கள் நம்பும் சட்டம் கூட தவறுகளை இனம் பிரித்து பார்த்து வெவ்வேறு தன்டனை வழங்குகிறது. அப்படித்தான் மனித மனமும் என்னை பாதிக்கும் விடயங்கள் உங்களை பாதிப்பதில்லை, அல்லது என்னை பாதித்த அளவு ஒரு விடயம் உங்களை பாதிப்பதில்லை… சமமான பாதிப்பு என்று ஒன்று எப்படியில்லையோ அதே போல்தான் நூல் பிடித்த நடுநிலை என்று ஒன்று இல்லவே இல்லை.
வினவின் பயணம் சிறக்க வாழ்த்துகள்! அதற்குள் ஓராண்டு ஓடிவிட்டதா?
காலம் ஓடும் வேகத்திற்கேற்ப நல்ல சமூக மாற்றங்கள் ஏற்படுவதில்லை. தோழர்களின் போராட்டம் இன்றே புரட்சியாக வெடித்து நாளையே நானிலம் சிறக்காதா என்று மனம் பரபரக்கிறது…..
வாழ்த்துக்கள் வினவு,
வினவின் புரட்சிகர பயணம் தொடர்ந்து சிறக்கட்டும்.
வினவின் புரட்சிகர பயணம் சிறக்க வாழ்த்துகள்!
இரங்குவோன், காலமாற்றத்திற்கேற்ப சமூக மாற்றம் நடக்கவேண்டுமென்றால் நாமும் வேகமாக இயங்க வேண்டுமே? நன்றி!
பூச்சாண்டி, பூதம் இருவருக்கும் நன்றிகள்!
அன்பான நண்பர் திரு வினவு அவர்கட்க்கு,
சிறிது காலம் உங்கள் தளத்தை குத்தகை எடுத்துக்கொண்டு பின்னர் நீங்கள் Michael Jackson பற்றி புலம்பித்தீர்ததை பதம் பார்க்கிறேன்!
குத்தகைக்கு காரணமாக இருக்கும் அன்பு நண்பர் திரு மரண அடிக்கு முதர்க்கண் நன்றி! மேதை திரு மரண ஆடி அவர்களே, நான் யாரென்பது இருக்கட்டும், வேவரமாக பிறகு அதைப்பார்ப்போம், நீங்கள் யாரென்று எனக்கு ஒரு நொடியில் தெரிந்துவிட்டது!
மரண அடி = மப்பு நெடி!
போயி குற்றாலத்தில் முதலில் குளித்துவிட்டு வரவும்! தெளிந்தால் பேசலாம்!
நான் யாரென்று இந்த அசிங்க அமுதசுரபிக்கு தெரியுமாம். எப்படி அவ்வளவு correct ஆக சொல்லுகிறீர்கள் நண்பரே. ஒரு வேளை உங்களைப்போன்ற மேதாவிகள் அவிழ்த்து விடும் Scientific Socialism போன்று ஏதாவது scientific writing analysis ஆ!!!!
Communism என்றால் பேதியா? யாருக்கு அண்ணே? பாசிசத்திற்கு சிவப்பு சட்டை போட்டு, Karl Marx ஐ கடவுளாக்கி, ஸ்டாலினையும் மற்று ஏனைய சிவப்பு சர்வாதிகாரிகளை புனித Prophet ஆக ஆக்கி, அவர்கள் அமைத்த பொய்யால் ஆன சாம்ராஜ்யங்கள் உடைந்து போய் உங்களின் சாயம் மொத்தமும் வெளுத்துப்போய் ஊரெல்லாம் சிரித்துக்கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டில் who is worried or for that matter who is scared about this discredited dialectic!
இதையெல்லாம் சொன்னால் உங்கள் மதிப்பீட்டில் நான் ஒரு அரை லூசு! அப்போ நீங்க Sir ?
நண்பர் திரு வினவு அவர்களே உங்களைப்பற்றியும் உங்கள் சகாக்களைப்பட்ரியும் எனது மதிப்பீடு கண்டிப்பாக மாறுபடக்கூடாது என்று இந்த மரண அடி என்ற விஷச்செடி முடிவெடுத்திருக்கிறார் போலும்!
If this மரண அடி is not you Mr Vinavu, then as the saying goes, one is known by his friends!
மேலும் திரு Super links என்ற மற்றுமொரு நண்பர் ஏதோ எழுதியிருக்கிறார்! அவர் என்ன சொல்ல வருகிறார் என்றுதான் எனக்கு புரியவில்லை! There seems to be a great disconnect between what his thought flows are and what he puts in a piece of paper! Try to impart some cogency in your writings sir if you indeed expect a retort from my end!
நண்பர் திரு வினவிற்கு – நான் இதற்க்கு முன் உங்கள் தளத்தில் பின்னூட்டம் இட்டது இல்லை!
நன்றி
(மரண அடிக்கு மறுபடியும் – என் கொள்கை என்னவென்பது இருக்கட்டும், கடை விரித்தது நீங்கள், ஊரைதிருத்துவதாக சொல்வது நீங்கள், மற்றும் ஊர்பார்க்க பிறந்த நாள் கொண்டாடுவது நீங்கள்! ஆதலால் கொள்கை விளக்கம் அளிக்கும் இடத்தில் இருப்பது நீங்கள்தான்….நான் அல்ல!)
(மரண அடிக்கு மறுபடியும் – என் கொள்கை என்னவென்பது இருக்கட்டும், கடை விரித்தது நீங்கள், ஊரைதிருத்துவதாக சொல்வது நீங்கள், மற்றும் ஊர்பார்க்க பிறந்த நாள் கொண்டாடுவது நீங்கள்! ஆதலால் கொள்கை விளக்கம் அளிக்கும் இடத்தில் இருப்பது நீங்கள்தான்….நான் அல்ல!)//
கொள்கையாளர்களையும்,கொள்கைகளையும் விமர்சிக்க உங்களை போன்ற எந்த கொள்கையுமற்ற கோமான்களுக்கு தகுதி இல்லை.
/////////////////////
கொள்கையாளர்களையும்,கொள்கைகளையும் விமர்சிக்க உங்களை போன்ற எந்த கொள்கையுமற்ற கோமான்களுக்கு தகுதி இல்லை.
//////////////////////
இது நல்லாத்தான் இருக்கு ஆனா…
அவைங்களுக்கும் ஒரு கொள்கை இருக்கே தோழர் ?
//////////இதில் super comஎட்ய்,
RV என்ற ஒருவர் வந்து
பக்கம் பக்கமாக தன்னிலை
விளக்கம் தந்துவிட்டுப்போவார்!
நீங்கள் இப்படி சொல்லக்கூடாது,
அப்படிசொல்லக்கூடாது என்று!
இவருக்கென்ன போச்சு!/////////////////////////
ஹலோ இங்க வந்து பாரும்
நம்ம RV உங்கள் அறிவுரைக்கு
பதிலாக பக்கம் பக்கமா
மாஞ்சி மாஞ்சி
அப்படி இல்லை
இப்படி இல்லை என்று
மறுப்பு எழுதுகிறார்.அவருக்கென்ன போச்சு!
வந்து கேளுங்களேன்.
அப்படியே நீ கேட்டு
உனக்கெல்லாம் சொல்லிட்டாலும்
புரியவா போகுது.
மாற்றுக்கருத்து இருந்தாலும் RV
அதை விவாதிக்கிற ஜனநாயகவாதி
நீயோ…
நீ யார்,உன் மனது எப்படிப்பட்ட
சாக்கடையில்
ஊறிக்கொண்டிருக்கிறது என்று உனக்கே தெரியும்
அப்புறம் நான் வேறு அதை சொலனுமா.
திருந்தித்தொலைங்கடா !
நான் சொன்னது உங்களுக்கு புரியல இல்ல
உங்களுக்கு புரியாது.
ஆனால் உங்கள் முதலாளித்துவ பகவான் அது
அவதரித்த அமெரிக்காவிலேயே அம்மணமாகி
பாசிச பகவானாக காட்சியளிக்கும் இந்த கொடுரமான
சூழலிலும் அந்த பாசிசத்துக்கு பாத பூஜை செய்யும்
உங்களைப்போன்ற மூளையற்ற முதலாளித்துவ
பண்டங்களின் அனைத்து உளறல்களும் எமக்கு
நன்றாக புரிகிறது.
முதலாளித்துவம் பற்றிய உங்களுடைய
மதிப்பு மிக்க கருத்தையும்
மார்க்சையும் பிறரையும் பற்றிய உங்கள் தவறான,
அவதூறு பரப்பும் கருத்தையும் இப்போது
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும்
போய் சொல்லிப்பாருங்கள்,
முதலாளித்துவம் தான் பெஸ்ட் என்று.
எதனால் அடிப்பார்கள் என்றே தெரியாது
ஆனால் முதலாளித்துவத்தால் சுரண்டலுக்குள்ளாக்கப்பட்ட
மக்களிடமிருந்து அப்படி ஒர் அடியை பெறுவதன் மூலம்
தான் உங்களைப் போன்றவர்களுக்கு
மார்க்ஸின் மேன்மை புரியும்.
மாமேதை மார்க்ஸ் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு
முன்பே முதலாளித்துவத்தின் அழுகி நாறும் தன்மை
பற்றியும் அதனுடைய அழிவின் நிகழ்ச்சி போக்கு பற்றியும்
உலகிற்கு பிரகடணம் செய்தார்.
தற்போது முதலாளித்துவ உலகு எங்கும் அழுகழ் நாற்றம்
துவங்கியுள்ளது.
சுட்டி
https://www.vinavu.com/2008/10/13/recession/
https://www.vinavu.com/2008/10/06/recess2/
https://www.vinavu.com/2009/07/15/tata/
https://www.vinavu.com/2008/11/12/tmstar3/
//தற்போது முதலாளித்துவ உலகு எங்கும் அழுகழ் நாற்றம்
துவங்கியுள்ளது.
/
not so fast comrade, the world had survived the great depression of 1930s
and will certainly survive the current crisis. and the economic indicators
now show that the worst is over and recovery is imminent.
and Marx’s prediction of each recession being worser and deeper than
the previous one was wrong and histroy shows that. and his prediction
of final doom : no chance at all.
and if this recession is really deep, then the days of cheap internet
and free email and blogs and cheap websites (this vinavu website
may cost some Rs.6000 per year) will be over and we will be back
to the good old days of printed matter (in cheap papers) !!
அதியமான் எவ்வளவு நாளைக்கு தான்
நீங்க இதே மாதிரி
சொல்லிட்டு இருப்பீங்க ?
முதலாளித்துவம் நாளும்
பல்லாயிரக்கணக்கான மக்களை
பட்டினி போட்டு கொல்லுது.
இந்த படுகொலைகளுக்கெல்லாம்
எப்ப தான் தீர்வு ?
முதலாளித்துவ பயங்கரவாத்திற்கு,
முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கு
எத்தனை கோடி மக்கள் தான் பிணமாவது ?
Superlinks,
செம்புரட்சிதானே திர்வு.
அடுத்த வருடம், அக்டோபரில் அது
வந்த உடன், மாவோ செய்தது போல,
ஒரு மபெரும் லீப் ஃபார்வோர்ட் மற்றும்
கூட்டு பண்ணை முறைகளை அமல்படுத்தி,
வறுமை மற்றும் பட்டினியை முழுமையாக
ஒழிப்பீர்.
அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
அதியமான்
உங்களுக்கு ஒன்று தெரியுமா ?
நேற்று வரை உங்களைப்போன்ற
முதலாளித்துவ ரசிகர்கள்,பிரியர்களின்
சொர்க்க பூமியான அமெரிக்காவில்
(உங்களுக்கெல்லாம்%
என்று சொல்வது தான் விருப்பமாகயிருந்தது)
முதலாளித்துவ பயங்கரவாத
சுரண்டலின் கொடூரத்தால்
மக்கள் நாளுக்கு நாள் அமெரிக்காவில்
மரணத்தை தழுவுகிறார்கள்
என்பதை விட அந்த முதலாளித்துவ பயங்கரவாத
அரசு கொலை செய்கிறது என்று தான் சொல்ல வேன்டூம்
இதோ பாருங்கள் அதியமான்
அதற்கான சுட்டி.
அவலத்தில் அமெரிக்க மக்கள் !!
https://www.vinavu.com/2008/11/06/usuicide2/
//நோ ?
அடேங்கப்பா… யாருப்பா நீ
அய்யய்ய என்னென்னமோ எழுதிட்டியேப்பா
அறிவு நெறயா இருக்குது பார்த்து ஏதாவது பன்னி அறிவ சுவாகா பண்ணிட போவுது
ஊர திருத்த நீ என்னப்பா கொள்கை வெச்சிருக்க
நீ யாருன்னு எனக்கு தெரிஞ்சிடுச்சு (இதே பதிவுல வேற பேருல நீ வந்துருக்க)
கம்யூனுசம்னாலே உன்ன மாதிரி மூதேவிங்களுக்கு ஏயா பேதியாவுது?\\அன்பான நண்பர் திரு வினவு அவர்கட்க்கு\\
இப்டிலாம் எழுதி திட்டுனா நீ நாகரீகமானவனா?
கண்ணு பாத்து சரியா எழுது, சும்மா கழிஞ்சு வைக்கறதுக்கு வினவு பக்கம்
வறாத,,,
//உங்களுக்கு ஸ்பெஷல் class எடுக்கிறேன்!//
ஏண்டா திமிரெடுத்து திரியரீங்க
(ஏங்க வினவு கருத்து சுதந்திரம்னுட்டு இந்த மாதிரி அர லூசெல்லாம் ஏங்க உள்ர விடுறிங்க)//
கரக்டுனே , என்னத்த ஜனநாயகம் , நம்ம தலை ஸ்டாலின் குளக்குகள சைபீரியாவுக்கு அனுப்பி தீத்த மாதிரியும் ,மாவோ பீரங்கி ஏத்தி கொன்னமாதிரியும் இவனுகள எல்லாம் பேசவிடாம அடிச்சு தொரத்தனும் ,
நம்ம கொளுக என்னா கொளுக , போல்பட்டு எப்படி ஆச்சி பண்ணுனாரு , அவரை அநியாயமா துரத்துனாக , வடகொரியால நம்மாளு எப்படி மக்கள வாரிசு அரசியல் பன்னி (?) காப்பாத்துறாரு ?
சீனாவுல ஒரு நாயாவது பேச முடியுமா ? கூகுல்காரன கூட வாயமூடல ? ஒருத்தன் பிளாக் எழுதமுடியுமா ?
மக்களுக்கு என்ன தெரியும் , ஜனநாயகம் பேசினா மண்டைல போடுங்க,
முடியலன்னா நம்ம அசுரன் அண்ணாச்சிய கூப்பிடுங்க , வந்து இவனுகளை பெட்டைநாய் , மாமாபயல்னு திட்டி விரட்டுவாரு
அன்புடன் ,
புரச்சியை எதிர்நோக்கும்
மதி.இண்டியா
அர டிக்கட்டு , ஐபி திருப்பூருல இருந்து வர்லியே , நம்ம சிபிஐ வேலை தோத்து போச்சேன்னு கவலைபட வேண்டாம் ,
மேல ஏதாவது டெக்குனிகல்லு தகவல் வேணும்னா பன்னாட்டு நிறுவனத்துல பொட்டி தட்டி கைநிறைய சம்பாரிக்கும் அசுரன் அண்ணாச்சியிடம் கேக்கலாம் , (அமரிக்க நெருக்கடி அண்ணனையும் தாக்கிடுச்சோ ? அதுக்குதான் அண்ணன் அப்பலிருந்து அமரிக்கா ஒழிக்கண்ணு சொன்னாரா ?)
கரீட்டுதான், கைப்புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு. திருப்பூர்லேந்து எழுதுனா என்ன தன்டயார்பேட்டயிலிருந்து எழுதுனா என்ன? நீ கின்டல் பண்ணுறத தவுர உருப்படியா எதுவும் விவாதம் செய்யப்போறதில்ல. காமெடி பீசுக்கெல்லாம் 3 பின்னூட்டமே ஜாஸ்தீஈஈஈஈ. நீ எதுவும் உருப்படியா எழதலேன்னா உன்ன எவனும் இங்க சீன்ட மாட்டான் அப்புறம் கொஞ்ச நாள் தனியாவர்தனம் வாசிச்சிட்டு போய் சேந்துருவே…
இந்தா ஒரு லீடு …எவ்வளவு பேற பாத்திட்டோம்… கிக்கிக்கி
ஏய் மதிகெட்டவனே
நீ திருப்பூரோ பருப்பூரோ
ஊரைச்சொல்ல வேண்டியது தானே
அது எதுக்கு முக்காடு ?
மக்களுக்கு உன்னுடைய முகத்தை
மறைத்துக்கொண்டு பேசுகிறாயே
உனக்கெல்லாம் வெட்கமாக இல்லை
இப்படி மறுமொழி எழுத.
குறிப்பு: இதுபோன்ற வலதுசாரி பிற்போக்கு
கம்யூனிச எதிர்ப்பு முதலாளித்து ஆதரவு
அமெரிக்க அடிவருடி கும்பலுக்கு
தமது உண்மை முகத்தை காட்ட எப்போதுமே
துணிவில்லை.இதுபோன்ற கோழைகளை நாம் தொடர்ச்சியாக
அம்பலப்படுத்திவருகிறோம்.பிளாகில் இவர்களுக்கு முன் இருந்த இவர்களுடைய
தாத்தன், பாட்டன்களின் கம்யூனிச அவதூறுகளை
அம்பலமாக்கி நமது தோழர்கள் எழுதிய சில பதிவுகளின்
சுட்டி கீழே உள்ளது.
1) தோழர் ஸ்டாலினும், துரோகிகளும்!
(http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_24.html)
2) அந்த அமைச்சரும் மயங்கிச் சரிந்தார் – 8 நாட்களாக சாப்பிடவில்லை!
(http://poar-parai.blogspot.com/2007/06/8.html)
3) சோல்சனிட்சின் : “அவலத்தில்” பிறந்த இலக்கிய அத்வானி (http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4246:1&catid=67:2008)
4) துரோகியின் மரணம் (http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2507:2008-08-04-19-09-24&catid=74:2008)
இதுபோன்ற
முதலாளித்துவ கைக்கூலிகளின் கம்யூனிச அவதூறுகளை அம்பலமாக்கும்
மேலும் விரிவான பல பதிவுகளையும் வாசிக்க அசுரன் தளத்தை
பார்க்க.
http://poar-parai.blogspot.com
நமது மதி அய்யா அவர்களும்
இல்லை அய்யா அவர்களும் ஒன்றா ?
ஏன் கேட்கிறேன் என்றால் அனைவரையும்
வரச்சொல்லி மரியாதை செய்யச்சொல்லலாம்
அதான் ரெண்டு பேரும் ஒன்னா இல்லை
தனித்தனியான்னு கேட்டேன்.
மரியாதை என்றால் என்ன என்று புரியவில்லையா
மதி மற்றும் இல்லை அவர்களே
அது நாளை மதியத்திற்கு பிறகு உங்களுக்கு
வழங்க்கப்படும்.
எதிர்பார்த்திருங்கள்.
அன்பான நண்பர் வினவு அவர்களுக்கு,
Equation இதுதான் போலிருக்கிறது. அதாவது, மரண அடி = சூப்பர் Links = வினவு??
எப்படி இருந்தாலும் எனக்கு OK!
இப்பொழுது என்னதான் ஐயா சொல்லவறீர்கள்?
முதலாளித்துவ பாசிச, எகாதிபத்தியா, அமெரிக்க எடுபிடி………..etc etc……
Dear Sir, your meaningless barkings with the above few words put in doesnt mean a thing!!!!
எனக்கு தெரிந்த ஒருவர் சொன்னார், சிறுவயதில், ஒன்பதாம் கிளாஸ் வரை நான் கணக்கில் ஒரு முறைகுட fail ஆகியதே இல்லை, சுத்தமாக ஒன்றுமே படிக்காவிட்டாலும் கூட என்றார்! Technique is quite simple to get a pass mark என்றார்! விடைத்தாளில் கேள்வியை ஒரு முறை எழுதுவார், பின்பு தனக்கு தெரிந்த சில Basic mathematical equations ஐ கொஞ்சம் சின்ன எழுத்தில் கிறுக்குவார், கொஞ்சம் அடித்தல் திருத்தல் செய்வார், அப்படி இப்படி ஒரு அரைப்பக்கம் பேப்பரை நிரப்பி, கடைசியில், “based on the above the final answer is arrived at …………………” என்று பக்கத்தில் இருக்கும் பையனின் தாளிலிருந்து விடையை மட்டும் எழுதிவிடுவர்! இதைப்பார்த்து ஆசிரியரும் கொஞ்சம் கடுப்பாகி, கொஞ்சம் தலையில் அடித்து கொண்டு, பின்னர் atleast இந்த அரை பக்கத்திற்காக pass mark போட்டுவிடுவார்!
இதைச்சைததால், தன் வகுப்பில் இருந்த ஒரு சில இரண்டான் கெட்டான் பயலுகளுக்கும் இவர்தான் hero வாக சில நாள் இருந்தாராம்!
அனால் பத்தாம் வகுப்பு தேர்வில் இந்த technique வொர்க் அவுட் ஆகவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டார்……..10th கிளாஸ் papper evaluation is quite strict என்பதால் போலும்!
சொல்லவருவது என்னவென்றால், திரு Super Links ஐயா அவர்கள் அந்த விடையையும் செரியாக காப்பி அடிக்கவில்லை என்பதுதான்! Technique என்னவோ ஒன்றுதான். அங்கே – தெரிந்த சில basic equations, இங்கே – பாசிசம், அமெரிக்க அடிவருடி, ஏகதிபத்தியம் போன்றவை! என்ன final answer இங்கே தப்பு. எனென்றால், இவர்களின் final solution and answer for anything and everything has been proven to be incorrect!
இதைப்படிக்கும் உலகம் அறியா சிலருக்கு ஆகா என்னமாக நண்பர் எழுதிகிறார் என்று தோன்றும். ஆனால் உள்ளே இருப்பது highly putrified and decomposed 19th century offerings, just packed in a new bottle with RED Label என்பது மட்டுமே! பலருக்கு இன்னுமும் புரியவில்லை. கொஞ்சம் இறங்கி படித்தால் புரியும் that how you guys and your expiry date expired unwanted goods are no longer usefull for anything என்று!
மேலும் திரு Super Links அண்ணன் குதிக்கிறார்! உனக்கு மாமேதை Marx பற்றி தெரியுமா Marxism பற்றி தெரியுமா, அது தெரியுமா இது தெரியுமா என்று!
தெரியுமையா தெரியும்……மிக நன்றாக தெரியும்!
அதற்கு முன் நீங்கள் சிலவற்றை புரிந்து கொள்வது நன்று!
1. Zeitgeist
இது ஒரு என்ற ஆங்கில / ஜெர்மனிய வார்த்தை.
The definition for this is – “Spirit of the times”
அதாவது, குறிப்பிடப்பட்ட காலத்தில், காலகட்டத்தில், soceity மற்றும் அதனின் நம்பிக்கைகள், செயல்பாடுகள், அமைப்புகள், சூழல்கள் இப்படித்தான் இருந்தது என்பதாகும்!
2. The difference between constructing conclusive theories in the field of natural science and political science. அதாவது, அறிவியலில் (pure science) நிலைநிருத்தப்படுகின்ற கோட்பாடுகளுக்கும், சமுதாய அறிவியலில் நிலைநிருத்தப்படுகின்ற கோட்பாடுகளுக்கும், உள்ள வித்தியாசங்கள்!
3. Metamorphosis of conventional prduction methods and producer labor from primitive and semi primitive conditions and status into a protected, on par and automated environment
4. Creation of a working “class” that in every way fits into the class of either burgeoise, kulak and or as a supervisory proleteriot mode which was in fact non existent before 150 years.
இன்னமும் சுமார் ஒரு எட்டு fundamental விடயங்கள் உள்ளது. நேரம் கெடைக்கும்போது அவைகளை எடுதுசொல்கிறேன்.
ஆனால் மேலே சொன்ன நான்கிற்கும் நான் சொல்லவந்த விடயத்திற்கும் என்ன connection என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன் – உங்களுக்கு கேட்கும் மனம் இருந்தால்!
மேலும், Marx பற்றி உங்களுக்கு தெரியாத (maybe தெரிந்து இருக்கலாம்) ஒன்று. Karl Marx அவர்கள் தன்னுடையா Capital (second edition) புத்தகத்தை ஒரு மிக பெரிய அறிவாளியிடம் கொடுத்து தங்கள் பெயருக்கு இதை dedicate செய்யட்டுமா என்று கடுதாசி மூலம் கேட்டார். ஆனால் அவரோ கண்டிப்பாக வேண்டம், எனென்றால் என்னால் உங்களின் பல கருத்துக்களை ஏற்க்க முடியாது, மேலும் economics பற்றி எந்தன் புரிதல் அந்த அளவுக்கு இல்லை என்பதை கூறி முடித்துவிட்டார்.
Dear Great Marxist — Do you know who this man was??? (try to tell without seeing in the net)
நன்றி
ஏண்டா மதி, நோ அறிவுக்கொழுந்துகளா?
நீங்க பண்றது விவாதம் இல்லடா , அவதூறு
இதுக்கெல்லாம் ஒரு கம்யூனிஸ்டு அன்பா பதில் சொல்லிட்டு இருக்கமுடியுமா?
பெரிய அறிவாளின்னு நெனப்பு ஆராய்ச்ச்ச்சசீ பண்றேன்ட்டு ஏண்டா கடி போடுறீங்க,
டேய் ஆகாவளி அவதூறு மதி! உன்ன யாரு கூப்புட்டா நீயெல்லாம் ஒரு ஆளா?
//புரச்சியை எதிர்நோக்கும் மதி.இண்டியா//
ஏண்டா வவுத்துக்கு என்னடா திங்கற
நோ//இன்னமும் சுமார் ஒரு எட்டு fundamental விடயங்கள் உள்ளது. நேரம் கெடைக்கும்போது அவைகளை எடுதுசொல்கிறேன்.//
போதுண்டா சாமி இப்பயே நாத்தம் தாங்க முடில
ஊர்ல உள்ள பன்னிகளுக்கு அறிவிப்பு
நல்ல தரமான பலமான வேட்டை காத்திருக்கிறது
மதிஇண்டியா, நோ ஆகியோரின் மூளையை* ஸ்வாகா பண்ணவும்
*பன்னிகளுக்கால் பன்னிகளால் அருளப்பட்ட பிரத்யேக போஜனம்
/////////////////////////
அதற்கு முன் நீங்கள் சிலவற்றை புரிந்து கொள்வது நன்று!
1. Zeitgeist
இது ஒரு என்ற ஆங்கில / ஜெர்மனிய வார்த்தை.
The definition for this is – “Spirit of the times”
அதாவது, குறிப்பிடப்பட்ட காலத்தில், காலகட்டத்தில், soceity மற்றும் அதனின் நம்பிக்கைகள், செயல்பாடுகள், அமைப்புகள், சூழல்கள் இப்படித்தான் இருந்தது என்பதாகும்!
2. The difference between constructing conclusive theories in the field of natural science and political science. அதாவது, அறிவியலில் (pure science) நிலைநிருத்தப்படுகின்ற கோட்பாடுகளுக்கும், சமுதாய அறிவியலில் நிலைநிருத்தப்படுகின்ற கோட்பாடுகளுக்கும், உள்ள வித்தியாசங்கள்!
3. Metamorphosis of conventional prduction methods and producer labor from primitive and semi primitive conditions and status into a protected, on par and automated environment
4. Creation of a working “class” that in every way fits into the class of either burgeoise, kulak and or as a supervisory proleteriot mode which was in fact non existent before 150 years.
இன்னமும் சுமார் ஒரு எட்டு fundamental விடயங்கள் உள்ளது. நேரம் கெடைக்கும்போது அவைகளை எடுதுசொல்கிறேன்.
///////////////////////////////
/////////////////////////////
மேலும், Marx பற்றி உங்களுக்கு தெரியாத (maybe தெரிந்து இருக்கலாம்) ஒன்று. Karl Marx அவர்கள் தன்னுடையா Capital (second edition) புத்தகத்தை ஒரு மிக பெரிய அறிவாளியிடம் கொடுத்து தங்கள் பெயருக்கு இதை dedicate செய்யட்டுமா என்று கடுதாசி மூலம் கேட்டார். ஆனால் அவரோ கண்டிப்பாக வேண்டம், எனென்றால் என்னால் உங்களின் பல கருத்துக்களை ஏற்க்க முடியாது, மேலும் economics பற்றி எந்தன் புரிதல் அந்த அளவுக்கு இல்லை என்பதை கூறி முடித்துவிட்டார்.
Dear Great Marxist — Do you know who this man was??? (try to tell without seeing in the net)
///////////////////////////
/////////////////////////////
ஐயா இரங்குவோன் என்ற மார்க்சிச மகாகுருவே, Hegel’s dialectic மற்றும் Marx இன் dialectical materialism இடையே உள்ள முக்கியமான வேறுபாடு என்ன என்று சொல்லமுடியுமா???
முதலில் Hegel யார் என்று தெரியுமா? அல்லது Hegel இன் Kantian philosphy basis பற்றி தெரியுமா, மற்றும் இந்த expansion of Kantian thought process by Hegel தான் Karl Marx இன் dailectic கிற்கே வித்திட்டது என்று தெரியுமா????
//////////////////////////////
திருவாளர் ‘இல்லை’ அவர்களே நீங்கள் பெரிய ‘அறிவாளி’ என்பதை
ஊர் உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுவதற்கே அல்லாமல்
மேலே உள்ள பத்திகள் வேறு எந்த நோக்கத்திற்காகவும் எழுதப்படவில்லை
என்பது எமது தாழ்மையான கருத்து.
இருக்கட்டும்…
மரணத்தின் விளிம்பில் கிடக்கும் முதலாளித்துவத்திற்கு பெந்தகொஸ்தே சபை விசுவாச ஊழியர்களை போல ஆவியெழுப்புதல் பஜனைக்கூட்டத்தையும் கம்யூனிசத்தை சைத்தான் என்றும் பைத்திய நிலைக்குள் இருப்பவனை போல
மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லும் ஆயிரம் பொய்ப்பிரச்சாரகர்களை கம்யூனிசம் ஐரோப்பாவில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக சந்தித்து சந்தித்து சலித்து போய் தற்போது முதலாளித்துவ பாசிசத்தின் கொடும் ஒடுக்குமுறையை நேரடியாக கான்கிறது.
மாமேதை மார்க்ஸ் என்ன சொன்னாரோ அது தான்
தற்போது முதலாளித்துவ உலகு எங்கும் நடக்கிறது.
நீங்கள் வேண்டுமானால்
புதிய ஜனநாயகம்
புதிய கலாச்சாரம் இதழ்களை
எல்லாம் படித்து பாருங்கள்.
நீங்கள் இதுவரை அறியாமல் இருக்கலாம்
அது ஒன்றும் தவறு இல்லை
நானும் கூட உங்களைப்போல தான் இருந்தேன்
அதன் பிறகு தான் ஒரு நாள் ஒரு தோழர் மூலம்
இந்த இதழ்கள் வந்து என்து கண்களை திறந்தது
நீங்கள் இப்போது கூட அறிந்துகொள்ளலாம்.
உங்கள் கண்களையும் திறப்பதற்கு
இதோ உங்களுக்கான சுட்டி.
(1)பற்றிப் பரவுகிறது வர்க்கப் போராட்டம்! அஞ்சி நடுங்குகிறது ஆளும் வர்க்கம்!!
http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5850:2009-06-09-19-22-44&catid=278:2009&Itemid=27
(2)கந்தலானது அமெரிக்க மாயை!
http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4970:2009-02-09-20-25-32&catid=278:2009&Itemid=27
my comments (unpublished) at Rayajaran’s tamilcircle :
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2507:2008-08-04-19-09-24&catid=74:2008
தோழர் ராயகரன்,
சோவியத் ரஸ்ஸியாவில் நடந்த பஞ்சம், படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் சரியாக தெரியவில்லை தான். மேற்கத்திய ஆசிரியர்கள் மற்றும் ஊடகங்கள் அதை மிகை படுத்தியிருப்பது உண்மைதான். ஆனால் முக்கிய காரணம், சோவியத் ரஸ்ஸிய ஒரு இரும்புத்திரையில் பின் மறைந்திருந்து. நேர்மையான, சரியான தகவல்கள் வெளியே வராமல் அமுக்கப்பட்டன். பிற நாட்டு ஊடகவியலாளர்கள்
அங்கு சுதந்திரமாக சுற்றி, தகவல் தேட அனுமதிக்க மறுக்கப்பட்டன். லோக்கல் ஊடகங்கள் முழுவதும் அரசின் கைப்பாவைகள். (ராஜ பக்ஷெ அரசு, வன்னி பகுதியில் நடந்த விதம் இதை போலத்தான். மேலும் இறுதி போரில் சுமார் 15000 முதல் 30000 தமிழர்கள் கொல்லப்படிருக்கலாம் என்று தமிழர்களாகிய நாமும் பல இதர பார்வையாளார்களும் கருதுகிறார்கள். ஆனால் சிங்கள் அரசு சில நூறு மக்கள் தாம் கொல்பாட்டதாக “ஆதாரங்களை” உருவாக்கி, உண்மையான ஆதரங்களை அழித்துவிட்டது. உண்மைதான் என்ன ? பதில் இல்லை. இதே பாணிதான் சோவியத் ரஸ்ஸிய மற்றும் இதர சர்வாதிகார நாடுகளில் நடந்தது / நடக்கும்)
மிகைபடுத்தப்பட்ட எண்ணிக்கை என்பதாலே, சோவியத் ரஸ்ஸியாவில் நடந்த கொடுமைகளை, மனித உரிமை மீறல்களை முற்றாக மறுக்குகிறீர்களா ? அந்த அமைப்பே அப்படிப்பட்ட விளைவுகளை தான் விளைவிக்கும் என்பதே வரலாறு காட்டும் உண்மை.
சோல்சென்ஸினை துரோகி என்று விளிக்கிறீர்கள். என்ன துரோகம் செய்தார் அவர் ? அவர் பட்ட துன்பங்கள் பொய்யா என்ன ? உலகில் யாரும் இப்போது மறுக்க வில்லை. and Solezenshen was jailed not for advocating compromise with NAzis, but for critising Stalin in letter to a freind. HE was a honest patriot who faught in the WW 2 with honour. his jailing happened much later. ok. not as you try to portary. many many innocents like him too were jailed. (i wish you too were with him in the gulag. you are cozy in France and talk like pseudo-moralist). and try to read Gutav HErlings “A World apart”
மார்கிஸம் பேசும் நீங்க, ஃபிரான்ஸ் நாட்டில் தஞ்சம் அடைதுள்ளீர்கள். கூபா அல்லது வட கொரியாவில்
அகதியாக தஞ்சம் புகுந்து, அங்கு ஒரு கூட்டு பண்ணையில் ஒரு 10 ஆண்டுகள் வேலை செய்திருக்க வேண்டும் நீங்க. உலகம் வேற மாதுரி தெரியும். வந்தாரை வாழ வைக்கும் பிரான்ஸ் தேசம், போதிய மான்யம் மற்றும் உதவிகளை அளித்து, அதைவிட முக்கியமாக கட்டற்ற கருத்து சுதந்திரத்தை அளித்துள்ளது.
அதன் அருமை புரியாதவர் நீங்க. வட கொரியா செல்ல வேண்டும் நீங்க. அப்ப தெரிய்ம், சோல்சென்சின் துரோகியா இல்லை யார் துரோகி என்று.
I know you are too narrow minded and insular and undmeocratic to publish my comment. but this for your kind information. that is all.
My only wish is France should expel you to N.Korea now. It is a great shame on France and it shows the magnanimity of France which is a capitalitic democracy.
NO. கருத்து மோதல் ஒரு பக்கம் இருக்கட்டும். அது என்ன நடுநடுல வேற மொழில எழுதறது? படிக்கறவங்களோட தமிழறிவப்பத்தி சந்தேகமா? இல்ல சரியா வெளிப்படுத்த முடியாதளவுக்கு தமிழ்ல வாக்கியப்பஞ்சமா? இல்ல இந்த மாதிரி ஊடால ஆங்கிலத்துல அடிச்சிவிட்டா மேதமையின் வெளிப்பாடுன்னு ஒரு வழக்கம் இருக்கே அதுவா? இல்ல “சும்மா ஸ்ஷ்டைலும்மா…”வா?
அய்யய்யோ காப்பாத்துங்க ,
பயமாயிருக்கே ,
நோ கேட்ட கேள்விகளுக்கோ , என் அவதூறுகளுக்கோ (ஹிஹி ,)உங்களிடம் எந்த பதிலும் இல்லை ,
கம்யூனிஸ்டுகளின் குல வழக்கப்படி அவதூறு பிரச்சாரம் ஆரம்பித்தாயிற்று ,
அசுரன் வந்து மலம் பூசிய வார்த்தைகளில் திட்டினால் முழுமை பெறும்
அன்பான நண்பர் திரு வினவுக்கு,
நண்பர் மரண அடி என்ற உங்கள் alter ஈகோ அல்லது உங்களின் faltering Zero நண்பர் ஒரு கோர்வையான உண்மையான நேர்மையான நிஜமான நல்லவை ஒன்றையும் இது வரை படித்தோ, உணர்ந்தோ இல்லை என்பதை அவரின் கிழ்த்தரமான, தரந்தாழ்ந்த சொற்றொடர்களின் மூலம் மீண்டும் மீண்டும் நிரூபித்திக்கொண்டிருக்கிறார். கூடவே, அவரின் மற்றும் உங்களின் தரத்தினை voluntary exposure செய்து கொண்டிருக்கிறார். இந்த அசட்டு எழுத்த்களினால் யாருக்கும் ஒன்றும் பிரயோஜனம் இல்லை. என்ன, வாய் ஓரத்தில் வழியும் உமிழ்நீரை யாராவது அப்பப்ப துடைத்துவிட வேண்டியிருக்கும்!
முட்டாள்கள் வாய்திறந்தால் அவர்களுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி தேவைஇல்லை! A fools words are his reflection!
திரு இரங்குவோன் என்ற நண்பர் தன்னால் முடிந்ததை கொட்டிவிட்டு போயிருக்கிறார். அவரும் நீங்கள்தானா திரு வினவு அவர்களே? என்னைத்தாக்க தசாவதாரம் பூண்டு வந்திருக்கின்றீரா? If its so, this மரண அடி seems to be the George Bush. உளறுவதில் அவ்வளவு ஒற்றுமை!
ஐயா இரங்குவோன் அவர்களே, அது என்னங்க அது “கருத்துமோதல் ஒரு பக்கம் இருக்கட்டும்”??????? இங்க கருத்து மோதலே இல்லையே சாமி (sorry ஸ்டாலின்). ஒரு மாமனிதர் (George Bush III) துப்புகின்றார், ஒரு Super Links கக்குகின்றார், இப்போ நீங்க வேற ஒரு கருத்து கண்ணாயிரம் புதுசா ப்ரெசென்ட் சார் போட்டுஇருகீங்க!
இந்த அழகில George Bush III என்னைப்பார்த்து சொல்வது //போதுண்டா சாமி இப்பயே நாத்தம் தாங்க முடில//………..
ஐயா இரங்குவோன் என்ற மார்க்சிச மகாகுருவே, Hegel’s dialectic மற்றும் Marx இன் dialectical materialism இடையே உள்ள முக்கியமான வேறுபாடு என்ன என்று சொல்லமுடியுமா???
முதலில் Hegel யார் என்று தெரியுமா? அல்லது Hegel இன் Kantian philosphy basis பற்றி தெரியுமா, மற்றும் இந்த expansion of Kantian thought process by Hegel தான் Karl Marx இன் dailectic கிற்கே வித்திட்டது என்று தெரியுமா????
முதலில் historical Philosophy and westen liberal thought process from Kant to Hume பற்றி படித்துவிட்டு வந்து பேசத்தொடங்குங்கள்! பிறகு நான் எழுத்தில் ஏன் ஆங்கிலம் கலக்கிறேன், வாக்கியப்பஞ்சமா என்பதைப்பற்றியெல்லாம் வேலவாரியாக விவாதிக்கலாம்!
நான் ரெடி நீங்க?
நன்றி
பற்றிப் பரவுகிறது வர்க்கப் போராட்டம்! அஞ்சி நடுங்குகிறது ஆளும் வர்க்கம்!!
hahahah ; good joke comrade. and no one has answered to my comments about MArx’s prediction about cycles of recession being worser than the previous one : it is false and disproved now.
அதியமான், மார்க்ஸ்சியம் என்பது ஒரு ஆய்வு முறை, முதலாளித்துவம் போலல்லாமல் மாற்றமடையும் சூழல்களுக்கு ஏற்ப தன்னை புதுப்பித்து கொள்ளும் சூத்திரம், அவர் எந்த PREDICTION னும் செய்யவில்லை, அவர்காலத்தின் முதலாளித்துவ வளர்ச்சி/வீழ்ச்சியின் நேரடி ரிப்போர்டர் அவரும் ஏங்கல்சும், அவர்களுக்கு பிறகு வளர்ச்சயடைந்த முதலாளித்துவத்திற்கான மார்க்சயத்தை வளர்த்வர் லெனின், ஸ்டாலின். வளர்ச்சியடையாத மூன்றாம் உலக நாடுகளுக்காக மாவோ, என காலம்/சூழல் கருதி மார்க்சியத்தை சிற்ப்பாக பயன்படுத்தியவர்கள் உள்ளனர்.
உன்மையில் நீங்கள்தான் ஏன் recession வர வேண்டும் என்பதற்கான பதிலை சொல்ல வேண்டும். அது ஒரு நல்ல விவாதத்தை உருவாக்கலாம்
அன்பான நண்பர் திரு K R அதியமான்,
Your retort above on Marx’s prediction on recession was on the mark!
இதை விட மேலும் ஒரு காமெடியை நம் சிவப்பு நண்பர்கள் பலர் internet இல ஓட விட்டிருந்தார்கள். எல்லோரும் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதான், Karl Marx தன்னுடைய தாஸ் காபிடலில் இந்த recession பற்றி தெளிவாக predict செய்திருக்கிறார் என்று! இந்த மாதிரி அவர் எதையும் எழுதவில்லை என்று பின்னர் தெளிவாகியது! ஆனால் அந்த சில இடைப்பட்ட நாட்களில், comrades எல்லோரும் ஆகா ஓகோ பார்த்தீர்களா என்று சாமி ஆட்டம் ஆடி விட்டார்கள்! விடயம் தெரிந்த பின் complete silence……….
The problem with domatists is that they just insist, not out of evidence but only out of sheer faith!
The difference between such dogma and a religion is just 100 years! Maybe communism (Leninist / Stalininst / Maoist variety) self destructed before this period, else we would be having Red cathedrals & Temples with Das capital on the Altar and Joseph Stalin and Mao as St. John and St. Peter!
நன்றி
தோழர்களே!
தோழர் அசுரன் அவர்களை தலைவர் என்று வினவு குறிப்பிட்டது சற்று மிகையாக இருக்கிறது என்று சங்கடத்துடன் மறுத்தார் அசுரன். வினவு குறிப்பிட்டது மிகையில்லை அதுதான் உண்மை. என்னைப்போன்றவர்கள் இணைய பக்கங்களில் இடம்பெறுவதற்கு அசுரனது இணைய செயல்பாடு முக்கிய காரணமாக இருந்தது. தனது கருத்தை நேர்மையாகவும் கூர்மையாகவும் இயல்பாகவும் வெளிப்படுத்துவதில் தான் தோழர் அசுரனது சிறப்பு இருக்கிறது. குறிப்பாக அவரது பதிவுகளைக் காட்டிலும் அப்பதிவுகளினூடாக நடைபெறும் விவாதங்களில் அவரது அனுகுமுறை (கொஞ்சம் கடுமையானதாகத் தெரிந்தாலும்) நன்றாக இருக்கும். இது அசுரனை மிகைப்படுத்தி புகழ்வதற்காக எழுதப்படும் பின்னூட்டம் அல்ல, நண்பர்களே!
ஒருவரை கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் போனால், அந்த தோல்வி ஏற்படுத்தும் அரிப்பு, (குறிப்பாக நமது பார்ப்பன / வலதுசாரிய அம்பிகளுக்கு) அக்கருத்தாளரை வசைபாடுவதிலும் அவதூறு செய்வதிலும் முத்திரை குத்துவதிலும் தனித்துக் கொள்கிறது. அசுரனின் கருத்துக்களுக்கு பதில் சொல்ல முடியாத கயமைத்தனம் அவரது மொழிநடையை தூக்கிப்பிடித்துக்கொண்டு முத்திரை குத்தி வருகிறது. உண்மையில் இதுபோன்ற தடித்த மொழிநடையை அதனினும் தடித்த தோலுடைய அம்பிகளின் மேல் பிரயோகிப்பதில் எந்தத் தவறும் கிடையாது, என்பது என்னுடைய கருத்து.
குஜராத் மோடியின் பார்ப்பன-இந்துவெறிக் கொலையாட்டங்களைப் பற்றிக் கேள்வி கேட்டால் பதில் சொல்லமுடியாமல் அல்லது பதில் சொல்ல விரும்பாமல் அக்கேள்வியை அடியோடு புறக்கனித்து வேறேதாவது அவதூறுகளை அள்ளிக்கட்டிக் கொண்டு, பிறருக்கு புரியாத மொழியில், அல்லது பிறர் அறிந்திராத விடயங்களைக் கொண்டு படபடக்கும் அம்பிகள் வினவு தளத்திற்கு புதியவர்களாக இருக்கலாம்; ஆனால் வலைதளங்களில் கடந்த ஆண்டுகளில் அது அழுகி நாறிப் போன விசயம். இங்கு ஆங்கிலம் கலந்து தனது மேதாவிலாசத்தைக் காட்டிக்கொள்ளும் அம்பிகளின் பிறப்பிடமும் முகவரியும் நமக்குத் தெரியும். ஆனால், இங்கே விவாதிக்க வேண்டிய விசயம் அதுவல்ல என்பதால் தவிர்க்கிறோம்.
இந்துத்துவ பயங்கரவாதத்தின் பிரச்சாரகர் அரவிந்தன் நீலகண்டனும், தனது பெயருக்கு முன்னாலேயே அமெரிக்க விசுவாசத்தைத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கும் டாலர்.செல்வனும், இங்கே எதிர்கருத்துக்களுடன் ஜனநாயகப் பூர்வமாகவும் நேர்மையாகவும் வாதிடும் நண்பர் ஆர்.வி.யைப் போன்றவர்கள் அல்லர். மேற்கண்ட நபர்கள் நமது தோழர்களால் (குறிப்பாக அசுரனால்) இணைய விவாதங்களில் நைய புடைக்கப்பட்டு அம்பலமாகிவிட்ட பிறகு, தனது சொந்த பெயர்களில் தலைகாட்ட முடியாத நிலையில் ‘தமிழ்மணி’ என்கிற போலிப்பெயரில் பார்ப்பன மணியாக பரினமித்து வந்த காலம் உண்டு. தோழர் சம்பூகன் தமிழ்மணியின் வண்டவாளங்களை தண்டவாளத்திலேற்றியதும் இங்கு நடந்திருக்கிறது.
இதுபோன்று அடுக்கிக்கொண்டே போகலாம். அவர்கள் யார் என்பதை ஆராயவேண்டிய அவசியம் நமக்கில்லை. இதுபோன்று போகிற போக்கில் அவதூறுகளைப் பதிப்பித்துவிட்டு விவாதங்களில் பங்கெடுப்பதைத் தவிர்த்துக்கொண்டு ஓடி ஒளியும் இந்த அம்பிகளை தடித்த மொழியில் அனுகாமல் வேறெப்படி அனுகமுடியும்?
கம்யூனிச ஆசான் தோழர் ஸ்டாலின் அவர்களின் மீதான முதலாளித்துவ அவதூறுகள் முதல் ‘அவலத்தில் பிறந்த இலக்கிய அத்துவானி’ சோல்செனிஸ்டின் பரப்பிய அவதூறுகள் வரை அனைத்தும் நம்மால் ஆதாரப்பூர்வமாக அவதூறுகள் என்று நிறுவப்பட்டு, இந்த அவதூறுகளின் பின்னால் ஒளிந்துள்ள முதலாளித்துவ அடிவருடிகளின் மோசடிகள் குறித்து அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. அப்பதிவுகள் பதிவிடப்பட்டு விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது இந்த அம்பிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
நாவல் பழம் விற்கவந்து வினவிடம் மாட்டிக்கொண்டு அம்பலமான ஜெயமோகன் போல இந்த அம்பிகளும் இனி தொடர்ந்து அம்பலமாவார்கள் என்பது நிச்சயம்.
அம்பி நீ ‘நோ’வோ ‘எஸ்’ஸோ எதுவா வேணாலும் இருந்துக்கோ. இனி வரும் பதிவுகளினூடாக தொடர்ந்து நின்று ஆதாரப்பூர்வமாக விவாதத்தில் பங்கெடுக்கக் கற்றுக்கொள். உனக்கு நேர்மையாக விவாதிப்பது அல்லது உன்னுடைய கருத்தின் மீது உண்மையிலேயே உனக்கு நம்பிக்கை இருந்தால், அதில் ஊன்றி நின்று விவாதிப்பது எப்படி என்று தெரியவில்லையென்றால் அண்ணன் அதியமான், ஆர்.வி. போன்றவர்களிடம் கற்றுக்கொண்டு வந்து இங்கே தொடர்ந்து கருத்துக்களைப் பதிப்பித்துக் கொள்ளலாம்.
தோழமையுடன்,
ஏகலைவன்.
குறிப்பு: தோழர் அசுரனது இணைய செயல்பாட்டின் வீச்சு என்பது, முன்னாட்களில் இந்த கம்யூனிச விரோத அம்பிகளிடம் மாட்டிக் கொண்டு விழிபிதுங்கிக் கிடந்த சி.பி.எம்.மில் கூலிக்கு எழுதும் சந்திப்பு என்கிற செல்வப்பெருமாளுக்கு ஆகப்பெரிய நிம்மதியைத் தந்தது; என்பது ஒரு கொசுறுத்தகவல்.
ஐயா நோ மற்றும் மதி.இண்டியா..
நான் மணி..
உங்களது விமர்சனப்பூர்வமான கேள்விகளை நேரடியாக வரிசைப்படுத்துவீர்களை என்றால் பதிலளிக்க ஆவலாக உள்ளேன்.
விவாதிக்க முன்வருவீர்கள் என நம்புகிறேன்.
அய்யய்யோ மணி என்ன காரியம் பன்ன இருந்தீங்க
அப்பாவி பிள்ளை போல கோரிக்கை வைக்கிறீர்களே.
இவர்களுடன் விவாதமா ?
சற்று யோசித்து முடிவு எடுங்கள் மணி
அவர்கள் படா படா பார்ட்டிகள் !!~
அன்பான நண்பர் திரு வினவுக்கு,
இங்க யார்தான் சார் chairman of politbureau???
புதுசு புதுசாக வருகிறார்கள். கால் மற்றும் அரைப்பக்க வசவுகளை அள்ளிவீசுகிறார்கள், கேள்வி கேட்டால் வேறு பெயரில் மறுபடியும் வந்து கால் அரை ……………..etc etc……
திரு ஏகலைவன் என்ற ஒரு புது நண்பர் திடீர் moon landing செய்து ஒரு அரைப்பக்க demarche ஒன்றை கொடுத்திருக்கிறார்! உங்கள்ளின் official representative போல வந்து இதை தந்ததால் இவரை உங்களின் நாட்டாமையாக பாவிக்கிறேன். ஆனால் அதற்க்கு முன்னே, அண்ணன் திரு ஃபியூசிக் பற்றி ஒன்றும் சொல்ல மறந்துவிட்டேன். கொள்கை மற்றும் கோமான் பற்றியெல்லாம் பேசியதால் அவரை தள்ளிவைக்கக்கூடாது! தகுந்த கவனத்தை கொடுக்கவேண்டும்!
ஐயா திரு ஃபியூசிக் அவர்களே, கொள்கையெல்லாம் இருக்கட்டும், அது என்ன சார் பேரு ஃபியூசிக்? இது எந்த மொழியின் அடிப்படையை கொண்டது. அண்ணன் திரு இருங்குவோன் அவர்களே, என்னை கேட்டீர்களே, ஏன் ஆங்கிலக்கலவை, வார்த்தைப்பஞ்சமா என்றெல்லாம்? இங்கே உங்கள் comrade ஒருவர் ஏதோ பெயர் ஒன்று வைத்து யாரும் அவரின் பெயரை செரியாக உச்சரிக்க கூட முடியாதபடி செய்துகொண்டிருக்கிராறே. இதெயெல்லாம் ஆவேசமாக கேட்கமாடீர்களா??
என்னதான் இருந்தாலும் இந்த அச்க்புச்க் sorry உசிசிச்க் sorry ஃபியூசிக் என்றால் என்னவென்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. Please சொல்லுங்களேன் இதன் அர்த்தம் என்னவென்று. வினவு தளத்திற்கு வந்து எதையாவது ஒன்றினை புதிதாக தெரிந்து கொண்டேன் என்று மகிழ்ச்சி அடைந்துவிட்டுப்போகிறேன்!
மேலும் கொள்கையை பற்றி கேட்டீர்கள் அல்லவா, இதோ சொல்கிறேன் கேளுங்கள்!
எனக்கு மட்டும் அல்ல, எந்த ஒரு மனிதனுக்கும் இந்த கொள்கை இருந்தால் போதும், நாடும் வீடும் உருப்புடும்! இதை விட்டுவிட்டு உங்களைப்போல imported ideology எல்லாம் கண்டிப்பாக தேவையே இல்லை!
” உண்மை மட்டுமே பேசி மற்ற உயிர்களை துன்பப்படுத்தாமல் வாழு ”
அவ்வளவுதான் Sir!
உண்மை என்றால் என்ன என்று கேட்பவருக்கு, இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னரே ஒரு தமிழன் மிக சிம்பிளாக சொல்லிவிட்டார்! “யாதொன்றும் தீங்கு இலாது சொலல்” இதை விட ஒரு அற்ப்புதமான definition உண்மைக்கு எந்த philosopher உம் கொடுத்ததாக எனக்கு தெரியவில்லை! Karl Marx ஐயும் சேர்த்துதான்!
துன்பப்படுத்தாமை பற்றி ஒருவர் நம்மிடையே வாழ்ந்து காட்டியும் விட்டார்! அவர் அதற்க்கு கொடுத்த பெயர் அஹிம்சை!
Comming generations will not believe that such a man in flesh and blood walked on this earth என்று இதைப்புரிந்து கொண்ட மாமேதை Albert Einstein நும் வாழ்த்தினார்!
இப்படிப்பட்ட கொள்கைகளை நம்மிடையே வைத்துக்கொண்டு, நீங்கள் நாடுவதோ, யாருக்காகவோ, யாரோ எழுதிய, 100 வயதை தாண்டிய தேவையில்லா ஒரு சித்தாந்த்தம்!
ஏதோ பார்த்து செய்யுங்க ஐயா! Maybe you have got nothing to loose except your brains!
நண்பர் திரு ஏகலைவன் அவர்களுக்கு கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டுதான் பதில் அளிக்க வேண்டும்! வினவிலிருந்து கட கட என கொட்டும் வசை மழை அப்படி! It takes more than a bucket to store a deluge!
கடைசியாக, திரு மணி என்பவர் கோதாவில் குதித்திருக்கிறார். அடப்போங்க Sir. இந்த பாழாப்போன comedy wrestling எனப்படும் American wrestling இல தான் இந்த மாதிரி திடீர் திடீரென்று ஆட்கள் குதித்து நான் நீ என்று அடி வாங்குவார்கள்! ஆனால் எல்லாம் already scripted! சும்மா தமாஷ்காகத்தான்!
அதில வேற அண்ணன் திரு மணி அவர்கள் வரிசை படுத்து, விரிசை படுத்து என்று போட்டு வதைக்கிறார்!
மகா ஜனங்களே, நான் இன்னும் வினவின் ஒரு பதிவைக்கூட விமர்சிக்கவில்லை, இந்த Birthday party pamphlet ஐ தவிர! அதற்குள் என்னை வசைப்பாட தொடங்கியதால், நானும் ஏதோ என்னால் முடிந்த வரையில் திருப்பியடித்ததால் விவாதம், விளக்கம் போன்ற ஏரியா உள்ளேயே நம்ம போகவில்லை!
நான் கேட்டது எல்லாம் மர்க்ஸ்யம் பற்றி சில basic கேள்விகள் மட்டுமே. எனென்றால் உங்களுக்கு இதைப்பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாததினால்தான் ஏதேதோ எழுதுகிறீர்கள் என்பது எந்தன் திண்ணமான எண்ணம் ! நீங்களும் அதுதான் உண்மை என்பதையும் நிருபித்துக்கொண்டிருக்கிறீர்கள்! Iam clear now!
Final Final ஆக, நண்பர் திரு ஏகலைவனுக்கு – நண்பரே, திரு அதியமான் அவர்களும், திரு R V அவர்களும் எப்படி ஜனநாயக முறையாக விவாதிக்கிறார்கள் என்று சொன்னீர்கள். ஆனால் ஒன்றை மறந்து விட்டீர்கள், அதான் உங்கள் கோஷ்டி ஆட்கள் எப்படி இவர்களிடம் திருப்பி பேசுகிறார்கள் என்று! கொஞ்சம் போயி இதற்க்கு முன் பதிவைப்பாருங்க Sir, உங்கள் comrade கள் எப்படி திரு அதியமானை தூற்றுகிறார்கள் என்று! இப்பதான் படித்தேன்! தலையில் அடித்துக்கொண்டேன், இதற்க்கு மேலும் இந்த தளத்தில் நம் நேரத்தை செலவிடவேண்டுமா என்று!
நன்றி
காந்தியின் பெருமையை எங்களுக்கு உணர்த்தியதர்க்காக எல்லாம் தெரிந்த அண்ணன் ஏகாம்பரம் அவர்களுக்கு அன்புத்தம்பி மாம்போவின் அன்பு காணிக்கை, http://en.wikipedia.org/wiki/Julius_Fu%C4%8D%C3%ADk
அய்யா ‘நோ’ நீங்க தான் பெரிய அறிவு மூட்டையாயிற்றே
ஃயூசிக் தெரியாதா ?
விக்ஷால் குக்ஷால்ன்னு உங்க பார்ப்பன கம்பேனி
வைக்கிற பேரையெல்லாம் நாங்க பிடிச்சு தொங்கிக்கிட்டா
இருக்கோம்.
பேர விட்டுட்டு விசயத்துக்கு வர வேண்டியது தானே.
///////
” உண்மை மட்டுமே பேசி மற்ற உயிர்களை துன்பப்படுத்தாமல் வாழு ”
அவ்வளவுதான் Sir!
//////////
உங்க கொள்கை உண்மையிலேயே ரொம்ப ரொம்ப.. ரொம்ப ரொம்ப நல்ல
கொள்கை சார்.
இப்பேர்பட்ட நல்ல கொள்கையை, உலகத்தில் யாரிடமுமே இல்லாத
கொள்கையை வைத்துக்கொண்டிருக்கிற நம்ம கொள்கை மணி…
சாரி சாரி கொள்கை குன்று திருவாளர் ‘நோ’ அய்யா அவர்கள் ஏன்
இதுவரை முதலாளித்துவ பயங்கரவாதத்தை பற்றி வாயே திறக்கவில்லை
இந்த பயங்கரவாத முதலாளித்துவத்தின் கொடும் சுரன்டலை
எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்பது பற்றி ஏன் பேசவில்லை.
உலகில் முதலாளிகளின் பயங்கரவாதம் தான் மிகப்பெரிய பயங்கரவாதமாக உருவெடுத்து ஆட்டம்போடுகிறது இதுபற்றிய உண்மைகளை ஏன் நமது ‘நோ’ அவர்கள் பேசுவதில்லை ஒருவேளை அவையெல்லாம் உண்மை ‘இல்லை’
என்று கருதுகிறாரா ?
இந்த ‘நோ’ என்பவர் நம்மிடம் அடிபட்டு அரைகுறை உயிருடன் நடமாடும் தமிழ்மணி என்கிற பெயரில் எழுதும் பார்ப்பனமணி தான் என்றால்
அந்த கோமாளியை ஏற்கெனவே நமது தோழர் சம்புகன் கசாப்பு போட்டு தொங்கவிட்டுள்ளார்,தோழர் சீராளன் அந்த ‘வீரத்தமிழ்’ மகனுக்கு பகிரங்கமாக சவால் விட்டு விவாதத்திற்கு அழைத்திருக்கிறார்.ஆனால் அந்த கோழை வரவே இல்லை.
தோழர்களின் தளங்கள்.
http://sampoogan.blogspot.com/
http://dharmapuricmrd.blogspot.com/2008/07/blog-post_8363.html
உங்க ஐன்ஸ்டினா அடிங்கொய்யால..
அவரு மட்டும் உயிரோட இருந்து இதை கேட்டிருந்தா
இப்படி சொன்னவன அதாலையே அடிச்சிருபாரு.
ஏன்னா இது எப்பிடி இருக்குன்னா,
இந்த ஜார்ஜ் புக்ஷ், ஷீ எல்லாம் ஐன்ஸ்டினோட
நண்பர்கள்னு சொல்ற மாதிரி இல்ல ?
சோசலிச சமூகம் ஏன்? – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
http://poar-parai.blogspot.com/2007/03/blog-post_04.html
நோ, முன்ன மாதிரி இல்ல சார், இப்போ நெட்டுல நிறையபேரு கம்மூனிசம் பேசுறாங்க அதுவும் புரச்சிகரமா! கூட்டத்த பாத்து பயந்து போற ஆளு நீங்க இல்லன்னு தெரியும், அதனால எத்தன பேரு வந்தா என்ன நீங்க சும்மா சுத்தி சுத்தி அடிங்க நாங்க எவ்வளவு வேணுமின்னாலும் தாங்குவோம், நெம்ப நல்லவங்க 🙂 Jokes Apart, அதியமான் விசயத்துல நடந்தது தப்புதான் ரொம்ப நாளா நடந்த கருத்து மோதல் தீடீருனு evolve ஆகி மோதல் ஆகி போச்சு, இப்படி ஏதாவது நடக்கும் போது ஒரு சைடாவது டென்சனாகம இருக்கனும்.. ஒரு விவாதம் எப்படி நடக்ககூடாதுங்கறத்துக்கு அது ஒரு sample. போகட்டும், நீங்க இங்க வந்தது வீணா போக வேண்டாம் நம்ம மணி அண்ணன் சொன்ன மாதிரி ஏதாவது ஒரு பாயிண்டுல ஆர்கியூமென்ட start பண்ணுங்களேன்…
////////////////ஐயா திரு ஃபியூசிக் அவர்களே, கொள்கையெல்லாம் இருக்கட்டும், அது என்ன சார் பேரு ஃபியூசிக்? இது எந்த மொழியின் அடிப்படையை கொண்டது. அண்ணன் திரு இருங்குவோன் அவர்களே, என்னை கேட்டீர்களே, ஏன் ஆங்கிலக்கலவை, வார்த்தைப்பஞ்சமா என்றெல்லாம்? இங்கே உங்கள் comrade ஒருவர் ஏதோ பெயர் ஒன்று வைத்து யாரும் அவரின் பெயரை செரியாக உச்சரிக்க கூட முடியாதபடி செய்துகொண்டிருக்கிராறே. இதெயெல்லாம் ஆவேசமாக கேட்கமாடீர்களா??////////////
இதுபோன்று தேவையற்ற அரட்டைகளுக்குள் ஆதாயம் தேடாமல் மையமான விவாதத்துக்குள் வரவேண்டும், தமிழ்மணி.
அதியமானுக்கும் எங்களுக்கும் கருத்து முரன்பாடுகள் பல உண்டு. ஆனால் விவாதங்களில் கடைசிவரை விடாக்கண்டன் கொடாக்கண்டனாக தனது கருத்தில் ஊன்றி நின்று விவாதிக்கும் தன்மையை அவரிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியிருந்தேன். இந்த பதிவினூடாக நீங்கள் பதிவிட்டிருக்கும் பின்னூட்டங்களை வரிசைப்படுத்தி நிதானமாக ஒரு முறை பாருங்கள், அவற்றிலேயே உங்களின் வருகைக்கான அற்ப காரணத்தை விட்டுச் சென்றிருக்கிறீர்கள். ஒன்றுக்கொண்று தொடர்பில்லாத பின்னூட்டங்கள், உங்கள் கருத்தில் நின்று பேசாமை. போதாக்குறைக்கு ஃப்யூசிக் அவர்களின் பெயரைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு மொழி நியாயம் பேசுவது, என்று ஏராளமாக அடுக்கிக் கொண்டே போகலாம்.
இங்கே சூப்பர் லிங்க்ஸ் என்கிற ஒரு தோழர் உங்களது அவதூறுகளை தவிடுபொடியாக்கும் எமது தோழர்களின் பதிவுகளுக்கான சுட்டிகளைப் பதிந்துள்ளார். அவற்றை நேர்மையோடு பரிசீலித்துவிட்டு விவாதிக்க வாருங்கள் தொடர்ந்து விவாதிக்கலாம்.
அன்பார்ந்த தோழர்களே!
உங்களில் பலர் புதிய தோழர்களாகவும் வீச்சாக இணைய விவாதங்களில் பங்கெடுப்பவர்களாகவும் இருக்கும் காரணத்தாலும், இங்கே ‘நோ’ என்ற பெயரில் எழுதிக் கொண்டிருப்பது ‘தமிழ்மணி’ என்கிற பார்ப்பன – பயங்கரவாத கும்பல்தான் என்பது உறுதியடைவதாலும் கூடுதல் தகவல்களுக்காக இங்கே தோழர் சம்பூகனின் தளத்திலிருந்து சில சுட்டிகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். பொதுவாக இதுபோன்ற பார்ப்பன/இந்துவெறிக் கும்பல்கள் மையமான விவாததிலிருந்து நம்மை திசைதிருப்பி விட்டு அதில் ‘’அப்படி சொல்லிவிட்டார்கள்’’, ’’இப்படி சொல்லிவிட்டார்கள்’’ என்றெல்லாம் கூப்பாடு போட்டு ஆதாயம் தேட முயற்சிக்கும். எனவே அவர்களின் வெட்டிப் பேச்சுக்களை கறாராக புறந்தள்ளிவிட்டு மையமான விவாதம் நோக்கி அவர்களது குடுமியைப் பிடித்து இழுத்துவாந்தாலொழிய அவர்களது உண்மை முகத்தை நாம் அடையாளம் காட்ட முடியாது. எனது கருத்தில் தோழர்களுக்கு ஏதேனும் முரன்பாடுகளிருப்பின் தயவு செய்து தெரியப்படுத்துங்கள்.
சம்பூகனின் பதிவுகளின் தலைப்புகளும் அவற்றின் சுட்டிகளும் இதோ……
1. கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் தொடரும் பார்ப்பன சதி பற்றி…
http://sampoogan.blogspot.com/2008/02/blog-post.html
2. முற்போக்காளர்களை மோதவிட வாய்ப்பு தேடும் தமிழ்மணி கும்பல்!
http://sampoogan.blogspot.com/2008/02/blog-post_3025.html
3. ’தமிழ்மணி’ கும்பலில் ஆர்.எஸ்.எஸ். இந்துமத வெறி பாசிசவாதிகள் – கிணறு தோண்டப்போய் பூதம் கிளம்பிய கதை…
http://sampoogan.blogspot.com/2008/01/rss.html
4. தமிழ்மணி என்கிற ‘இரட்டை நாக்கு அம்பி’யின் பொய்கள் புரட்டுக்கள்…
http://sampoogan.blogspot.com/2008/01/blog-post_634.html
5. கிழிந்து தொங்கும் தமிழ்மணி (எ) பார்ப்பன மணியின் முகமூடி!
http://sampoogan.blogspot.com/2008/01/blog-post_30.html
6.’ஜனநாயகம்’, ‘விவாதம்’ பற்றி பேசும் யோக்கியதை தமிழ்மணிக்கு உண்டா?
http://sampoogan.blogspot.com/2008/02/blog-post_10.html
தோழமையுடன்,
ஏகலைவன்.
அப்படிபோடு அப்படிபோடு..
அப்படின்னா இந்த ‘இல்லை’ ங்கொய்யா
நம்ம பழைய பார்ப்பன குஞ்சு தமிழ்மணியா
அவனுக்கு எத்தினிவாட்டி தான் கோவணத்தை அவுத்து
ஒடவிடுறது..
முடியல..
தமிழ்மணி என்னும் பார்ப்பனமணி
பார்ப்பனியம் என்பது அறிவால் நிலைநாட்டப்பட்டதல்ல. சூழ்ச்சியால், சதியால், வன்முறை கொண்ட அதிகாரத்தால் தான், சமூகத்தை அடிமைப்படுத்தினர். இப்படிப்பட்ட பார்ப்பனியம் தான், தமிழ்மணத்தில் பல வேடங்களில், பல பார்ப்பனிய இடுகைகளைப் போட்டனர்.
ஏகாதிபத்தியத்திடம் நக்கியதை, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான போராட்டங்கள் மீது காறி உமிழ்ந்தனர். பிரித்தாளும் சதியை தமிழ் மணத்தில், பார்ப்பனிய நரிப்புத்தியுடன் புகுத்தினர். இந்த நிலையில் சம்பூகன் அந்த நரிகளையும், அதன் சதிகளையும் தோலுரிக்க புறப்பட்டார். அதற்கு ஆதரவாக நாம் தோள்கொடுக்க முனைந்தோம். …………..
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=787:2008-04-20-17-16-30&catid=74:2008
அன்பான நண்பர் திரு ஏகலைவன் அவர்களுக்கு,
நீங்க நாட்டாமை மட்டும்தான் என்று நினைத்தேன், இப்போதுதான், நீங்கள் Felix Dzerzhinsky இன் அடுத்த அவதாரம் என்று தெரிந்தது!
Dzerzhinsky யார் என்று தெரியவில்லை என்றால் போய் நெட்டில் படிக்கவும்! லெனின், ஸ்டாலின் மற்றும் Trotsky முழுவதும் நம்பியே Checka organization ஐ நிருவித்தவர் இவர்தான். Cheka என்பது என்னவென்று சொல்லவேண்டிய அவசியமில்லை!
Czar மன்னர்களின் okraanaa இயக்கம், இவரின் கையில், Cheka ஆக மாறி, பின்னர் ஸ்டாலினின் கையில் NKVD ஆக மேரி கடைசியில் KGB ஆக நின்றது!
Czar செய்த எதையெல்லாம் நாங்கள் செய்ய மாட்டோம் என்று பொய் சொல்லி ஆட்சியப்பிடித்தார்களோ, அதெயெல்லாம் மிக தீவிரமாக உங்கள் தலைவர்கள் செய்தார்கள். அதில் முக்கியமான பங்கு, இப்பொழுது நான் சொல்லிய CHEKAவினுடையது! The protectors of your bloody revolution that spied on anything and everything and doctored and coerced out fraudulent self indictments from millions innocent peoples, before sending them to be shot in Lubayanka!
ஆனால் பாவம், இப்போ இவர்களுக்கு இந்த அமைப்பு இல்லை! இருந்தாலும் இருப்பது போல் ஒரு மாயையை ஒருவாக்கி, நீதான் தமிழ்மணி, அறிவுமணி, மாமணி, மணி, நீ……என்று கதை விட்டு கொண்டிருக்கிறார்!
ஐயா லாவேறேண்டி பெரியாவின் (I can dedicated volumes about this chief of NKVD, who was almost bumped off by Stalin during his final years) சித்தப்பா மகன் அவர்களே, நான் எந்த மணியும் இல்லை! உங்கள் கடையை expose செய்ய வந்த அபாய மணி மட்டுமே!
Final ஆக அது என்ன சார் தோழமையுடன்?
கொலைவெறியுடன் என்று முடித்துக்கொண்டிருக்கலாம்!
நன்றி
மீண்டும் சொல்ல்கிறேன், இந்த NO எந்த மணியும் இல்ல, உங்களுக்கு தெரிஞ்ச ஒருவனும் இல்ல, இன்னும் சொல்லப்போனால் ப்லோக் எழுதும் ஒருவருக்கும் தெரிந்தவனும் இல்லை! நம்புவதும் நம்பாததும் உங்க இஷ்டம்! Its doesn’t matter either way!
//மீண்டும் சொல்ல்கிறேன், இந்த NO எந்த மணியும் இல்ல, உங்களுக்கு தெரிஞ்ச ஒருவனும் இல்ல, இன்னும் சொல்லப்போனால் ப்லோக் எழுதும் ஒருவருக்கும் தெரிந்தவனும் இல்லை! நம்புவதும் நம்பாததும் உங்க இஷ்டம்! Its doesn’t matter either way!//
My father is not in the Hay… ஹே.. ஹே….
//Comming generations will not believe that such a man in flesh and blood walked on this earth என்று இதைப்புரிந்து கொண்ட மாமேதை Albert Einstein நும் வாழ்த்தினார்!//
மீஸ்டர் நோ,
உங்களது மாமேதை ஐன்ஸ்டீன்(எங்களுக்கும்தான்) நீங்கள் குறிப்பிடும் அரதப்பழசான அந்த உபயோகமற்ற சோசலிசத்தை ஆதரிப்பவர். அதனையே மனித குலத்திற்கு ஏற்றது என்று கொண்டாடுபவர்.
நாங்களும் மாமேதை ஐன்ஸ்டீனும் சரியாத்தான் இருக்கோம். அப்ப நீங்க…. ??
எல்லாவற்றையும் படித்த நீங்கள் அய்யோ பாவம் நேரமின்மையால் ஐன்ஸ்டீனை படிக்கவில்லை போலும். உச்… உச்ச்…. உச்ச்..
அன்பான நண்பர் திரு ஏகலைவன் அவர்களே,
என்ன Sir, பதிலைக்காணும்! Time ஐ waste பண்ணாதீங்க Sir, நீங்க நினைக்கிற யாரும் நான் இல்லை! இந்த NO, ஒரு தனி ஆள், absolutely Free lance with no affiliations and totally unknown to anyone!
உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்று கேக்குறீங்களா? வேற ஒண்னும் இல்லை! இந்த நேரத்த இதுல வீணடிக்காம ஒரு நாலு பேர திட்டுநீங்கனா உங்க கொலைவெறி கொஞ்சம் அடுங்குமே என்றுதான்!
அப்புறம் அது என்ன Sir, நீங்கள்ளும் உங்க தோழர்களும், எது எழுதினாலும் கிழ ஒரு நாலு links கொடுக்கிறீங்க??? Links கொடுத்தா நீங்க சொன்னது சரியாயிடுமா!
அதாவது நான் ஒருவரிடம் விவாதிக்கின்றேன் – என் கூற்று, சிங்க நடை ஒருவன் போட்டால் சிகரத்துக்கு ஏறி விடலாம், அதாவது everest மற்றும் Kanchenjunga போன்ற மலை உச்சிகளுக்கு! இதுதான் point! எதிராளி கூறுகிறார், என்ன Sir இது இதில் சுத்தமாக Logic இல்லையே என்று! நானும் உடனே, ஒரு லிங்க் போட்டு, பாருங்க Sir, இதப்பத்தி எவ்வளவு இருக்கு என்று! அந்த Link போகும் இடம், youtube, அதில் ஒரு சினமாவில் ரஜினிகாந்த் பாடிய பட்டு ….சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு………….!!!! இதுதாங்க நாங்க கொடுக்கும் Proof வகை ஒன்று!
இரண்டாவது லிங்க் ஸ்டைல் எப்படி தெரியுமா? அதே எதிர் வாதிக்கு இன்னும் ஒரு Link கொடுத்து படிக்க சொல்கிறேன்! அதில் எழுதியிருக்கு …..”சிங்கம் நடை போடும், நடை போடாது என்றால் அது சிங்கமே இல்லை. அசிங்கம்! சிங்கம் சிகரம் இரண்டும் ஒரேமாதிரியான சொல் அமைப்பபை கொண்டது! இதை ஈஸ்கப பூவ மற்றும் மக்க மசவ போன்றவர் நிரூபித்துவிட்டார்கள்! அப்படியென்றால் நடைபோட்டுத்தான் ஆகவேண்டும்! சிகரம் என்பது அகரம் பக்கம் உள்ளது! அங்கே நகரம் இருக்காது. அதனால்தான் சிகரம் தொடமுடியும், சிங்க நடை போட்டால்!”
மேல ஒரு நாலு line தான்! ஆனால் இதே அர்த்தமில்லாஒன்றை ஒரு நாலு பக்கம் இழுத்து ஒரு லிங்க் கொடுக்கப்படிருந்தது! அதை அந்த எதிர்வாதியிடம் காண்பித்து பார்த்தீர்களா அவ்வளவு தெளிவா இதயெல்லாம் பற்றி இருக்கு..இதுதான் சார் உண்மை என்று…………..
இதில் Heights of comedy இந்த நாலு பக்கம் Proof எழுதிவைத்தது, நானே. Arguement வரும்பொழுது அதையே மேற்க்கோள் காட்டி பார்த்தாயா எல்லாம் கிழித்துவிட்டோம் என்று கத்த வேண்டியதுதான்!
இதற்க்கு பெயர்த்தான் உங்கள்ளின் அறிவிப்பூர்வமான விவாதமா?
இதை நான் சொன்னால் அவதூறு அப்போ நீங்க சொன்னா வரலாறா?
நன்றி
உங்கள் வாதத்தை என்ன சார் சொல்றது
மார்க்ஸ் ஒரு மாமேதை என்கிறோம்
முதலாளித்துவம் மற்றும் அதனுடைய
பயங்கரவாதம் பற்றி மார்க்ஸ் சொன்னது
தான் நடந்து வருகிறது உங்க காந்தி தாத்தா
சொன்னது நடக்கவில்லை என்கிறோம்.
அதை நடைமுறையில் நிரூபித்து காட்டியவர் லெனின்
என்றும் அதை மேலும் வளர்த்தெடுத்தவர் தோழர் ஸ்டாலின்
என்று அதையே சீன நிலைமைகளுக்கு பிரயோகித்தவர்
மாசேதுங் என்று நாங்கள் சொல்கிறோம்.
அவர்கள் மாபெரும் மக்கள் தலைவர்கள்
கோடிக்கணக்கான மக்களின் துயர வாழ்வை
ஒழித்துக்கட்டி அந்த நாட்டில் ஒரு சொர்க்கத்தை
உண்டாக்கியவர்கள் என்று நாங்களும்
உலகம் முழுவதிலுமுள்ள கோடிக்கணக்கான
மக்களும் சொல்கிரோம் ஆனால் நீங்களோ
அய்ரோப்பா,அமெரிக்கா இறக்குமதி கம்யூனிச
அவதூறு சரக்குகளை எங்களைப் போன்ற
எதிர்வாதியிடம் காண்பித்து பார்த்தீர்களா
எவ்வளவு தெளிவா இதயெல்லாம் பற்றி இருக்கு..
இதுதான் சார் உண்மை அவர்கள் எல்லாம்
சர்வாதிகாரிகள் என்கிறீர்கள்.
rguement வரும்பொழுது அந்த அவதூறுகளையே
மேற்க்கோள் காட்டி பார்த்தாயா
எல்லாம் கிழித்துவிட்டோம் என்று கத்த வேண்டியது!
இதற்க்கு பெயர்த்தான் உங்களின் அறிவிப்பூர்வமான விவாதமா?
இதற்கு பதில்களை நாங்கள் கொடுத்தால் லிங்க்கு அதையே நீங்கள் சொன்னால் வரலாறா?
சோசலிச சமூகம் ஏன்? – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
பொருளாதார, சமூகப்பிரச்சனைகளில் நிபுனத்துவம் இல்லாத ஒருவர் சோசலிசத்தைப் பற்றிக் கருத்துக் கூறுவது சரியானதா? பல காரணங்களை முன்னிட்டு அது சரியே என்று நான் கருதுகிறேன்.
உலகத்திலுள்ள மிக முக்கியமான நாடுகள் மற்ற நாடுகளை அடிமைபடுத்தி வாழ்கின்றன. தோல்வி அடைந்த நாடுகளின் செல்வங்களைச் சுரண்டுவதோடு அங்கே தங்களுக்குச் சாதகமான ஒரு கல்வி அமைப்பையும் ஏற்படுத்தி அடிமைத்தனத்தை நிரந்தரமாக்கிவிடுகிறார்கள்.
இதை சமூக வளர்ச்சியில் ‘காட்டுமிராண்டிக்கட்டம்” எனலாம். நாம் இந்தக் கட்டத்தைக் கடந்து விடவில்லை சோசலிசத்தின் நோக்கம் இந்த கட்டத்தைக் கடந்து சென்று உண்மையான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாகும். சோசலிசம் என்பது ஒருசமூக-அறவியல் இலட்சியத்தை நோக்கி முன்னேறுகின்ற இயக்கமாகும்.
மனிதசமூகம் ஒரு மாபெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது: அதன் கட்டுக்கோப்பு குலைந்துவிட்டது என்று எல்லோரும் கூறுகிறார்கள் இத்தகைய சூழ்நிலையில் தனிநபர்கள் நாங்கள் சார்ந்திருக்கும் சமூகத்தின் மீது அக்கறையில்லாதிருப்பதும், சமூக நலங்களுக்கு எதிராக நடந்து கொள்வதும் இயல்பே.
மேலே கூறியதை விளக்கும் வகையில் என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து ஒருஉதாரணத்தை தருகிறேன் இன்னொரு உலகப்போர் ஏற்படக்கூடிய அபாயத்தை பற்றியும் அத்தகைய போரில் மனித குலம் பூண்டற்றுப் போய்விடும் என்பதையும் அறிவும் பண்பும் அமையப் பெற்ற ஒருவரிடம் விளக்கி கூறினேன. “மனிதகுலம்அழிந்துவிடக்கூடாது என்று நீங்கள் கவலைப்படுவது ஏன்?” என்று அவர் என்னிடம் கேட்டார்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இந்த மாதிரி அலட்சியமாக யாரும் பேசியிருக்க மாட்டர்கள். தன்னுடைய வாழ்க்கையில் சமநிலையை ஏற்படுத்த முயற்சித்து, அந்த முயற்ச்சியில் தோல்வி கண்ட ஒருவரின் அழுகுரல் என்று இதை கூற வேண்டும். நிராசையும், அவநம்பிக்கையும், சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திக் கொள்ளும் போக்கும் இன்று ஏராளமானவர்களிடம் காணப்படுகிறது. இதற்கு காரணம் என்ன? இதை மாற்றும் வழி என்ன? என்னாலியன்ற வரை இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்ச்சிக்கிறேன்.
மனிதன் ஒரே சமயத்தில் தனிநபராகவும் சமூகப் பிராணியகவும் இருக்கிறான். தனிநபர் என்ற முறையில் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் காத்துக்கொள்ளவும், தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டு தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளவும் பாடுப்படுகிறான். சமூகப்பிராணி என்றமுறையில் மற்ற மனிதர்களின் அங்கீகாரத்தையும் பாரட்டையும் பெறுவதற்கும், அவர்களுடைய சுக துக்கங்களில் பங்குகொள்ளவும் சமூக முன்னேற்றத்துக்கும் பாடுபடுகிறான். இந்த இருவகை தன்மைகளும் அடிக்கடி மோதிக்கொள்ள நேர்ந்தாலும், இவையே மனிதனின் சிறப்பியல்புகளாகும். இவை இரண்டும் எந்தஅளவில் இணைகின்றன் என்பதை பொறுத்தே மனிதனின் அக வாழ்க்கை அமைகிறது.
ஒரு தனிமனிதனுக்கும் மற்றவர்களுக்கும் ஏற்படுக்கின்ற நேரடியான, மறைமுகமான உறவுகளின் மொத்ததையே “சமூக ம்” என்றகருத்து குறிப்பதாக அவனுக்குத் தோன்றுகிறது. ஒரு தனி நபரால் சிந்திக்கவும் தானாக வேபாடுபடவும் முடியும். ஆனால் அவனுடைய உடல், உணர்ச்சி, அறிவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சமூகத்தினால் மட்டுமே முடியும். ஊடை, உணவு, வீடு, மொழி உழைப்பதற்கான கருவிகள் ஆகியவற்றை அவனுக்கு தருவது சமூகமே. அவனுடைய சிந்தனை வடிவங்களையும் உள்ளடக்கத்தையும் நிர்ணயிப்பது சமூகமே. “சமூகம்” என்ற சிறுவார்த்தையில் மறைந்திருக்கும் பல் கோடிக்கணக்கான மக்களின் உழைப்பும் சாதனைகளுமே அவன் வாழ்க்கையை சாத்தியமாக்குகின்றது. இந்த கோடிக்கணக்கான மக்களில் அவனுக்கு முந்திய காலத்தில் வாழ்ந்தவர்களின் பங்கும் உண்டு.
நம் காலத்திய நெருக்கடியின் தன்மையை சுருக்கமாகக் கூற விரும்புகிறேன். அது சமூகத்துக்கும் தனிநபருக்கும் உள்ள உறவு பற்றியதாகும். தனிநபர் அதிகமான அளவுக்கு சமூகத்தை சார்ந்திருக்க வேண்டியிருப்பதை அவன் உணர்கிறான். ஆனால் இது ஒரு இயல்பான பினைப்பு என்றோ, ஆக்கப்பூர்வமான வளர்ச்சி என்றோ, அவன் கருதுவதில்லை. தன்னுடைய நியாயமான உரிமைகளை கட்டுப்படுத்தும் சக்தியாகவே சமூகத்தை கருதுகிறான். மேலும் இன்றைய சமூகத்தில் தனிநபர் போக்குகள் தீவிரம்டைகின்றன: சமூகப் பிணைப்புகள் மேன்மேலும் பலவீனமடைகின்றன. மனிதர்கள் அனைவரும் இத்தகைய படிப்படியான சீர்குலைவுக்கு ஆளாகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் தனிமை சூழ்ந்து, கவலை அதிகரிக்கிறது எளிமையான வாழ்க்கையில் நிறைந்திருக்கும் பரிசுத்தமான் மகிழ்ச்சியை அவர்கள் பெறமுடிவதில்லை. வாழ்க்கை என்பது குறுகியதாகவும் ஆபத்துகள் நிறைந்ததாகவும் இருக்கலாம். ஆனால் மனிதன் தன்னைச் சமுதாயத்துக்கு அர்பணித்துக் கொள்வதன் மூலம்தான், வாழ்க்கையின் நிறைவை பெற முடியும்.
முதலாளித்துவ சமூகத்தின் பொருளாதார அராஜகம்தான் இந்த நெருக்கடிக்கு உண்மையான காரணம். உற்பத்திச் சாதனங்கள் தனிவுடைமையாக இருக்கின்ற சமுதயத்தில் நாம் வாழ்கிறோம். இவர்கள் சட்டபூர்வமாகவே மற்றவர்கள் தங்களுடைய பயனைப் பெறமுடியாதவாறு செய்கிறார்கள். உழைப்புச் சாதனங்களை உடைமையாக வைத்திருக்கின்ற காரணத்தால், இவர்கள் தொழிலாளர்களுடைய உழைக்கும் சக்தியை விலைக்கு வாங்குகிறார்கள். தொழிலாளர்கள் உற்பத்தி செய்யும்பொருள் முதலாளிக்குச் சொந்தமாகிறது. அந்தப் பொருளின் மதிப்பு அதிகம், ஆனால் அவனுக்குத் தரப்படுகின்ற ஊதியம் குறைவு. இந்த வேறுபாட்டை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். முதலாளிகளிடையே போட்டியினாலும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் மூலதனம் சிலரிடத்தில் குவிகிறது. இவர்களே அரசாங்கத்தை நடத்துகிறார்கள். சட்டமன்றத்தின் பிரதிநிதிகளை அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக்கின்றன. ஆனால் அரசியல் கட்சிகளை ஆட்டிப் படைப்பவர்கள் இவர்கள். எனவே மக்கள் பிரதிநிதிகள் பெரும்பாண்மையான ஏழைகளின் பிரதிநிதிகள் அல்ல. மேலும் பத்திரிக்கைகள். வானொலி, கல்வி அமைப்பு ஆகியவற்றை இவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நிர்வகிப்பதால். மக்களாலும் தங்கள் அரசியல் உரிமைகளைச் சரியான வழியில் பயன்படுத்த முடியவில்லை. மக்களுக்கு தேவையானவற்றை இவர்கள் உற்பத்தி செய்வதில்லை. அதிகமான லாபமே இவர்களது குறிக்கோள். எல்லோருக்கும் வேலை கிடைப்பத்தில்லை. வேலையில் இருப்பவர்களுக்கும் வேலை போய்விடுமோ என்ற பயம் நிரந்தரமாக இருக்கிறது. லாப நோக்கம், தங்கு தடையில்லாத போட்டி ஆகியவையால் உழைப்பு அதிகமான அளவுக்கு வீணாவதையும், தனி நபர்களின் சமூகஉணர்வு சிதைக்கப்படுவதையும் பார்க்கிறோம். இது முதலாளித்துவ சமூகத்தின் படு மோசமான நோய்.
சோசலிச அமைப்பு மூலம்தான் இவற்றை ஒழிக்கமுடியும் என்பதில் எனக்குசிறிதும் சந்தேகமில்லை. சோசலிசப் பொருளாதாரத்தில் சமூக உடைமையாக இருக்கின்ற உற்பத்தி சாதனங்கள் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்படுகின்றன. சமூகத்தால் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தி நடைபெறுவதால் வேலை பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஆண்-பெண், குழந்தை-வயோதிகர் அனைவருக்கும் வாழ்க்கைக்கு உத்தரவாதமளிக்கப்படுகிறது. ஒவ்வொரு தனிநபரின் திறமையும் ஊக்குவிக்கப்படுகிறது. இன்றைய சமூகத்தில் பதவிக்கும் பணத்துக்கும் நடைபெறும் போட்டிக்கு பதிலாக, “மற்றவர்களுக்காக நான்” என்ற உணர்வு வளர்க்கப்படும். எனினும் திட்டமிட்ட பொருளாதரத்தில் தனிநபர் பரிபூரணமாக அடிமைப்டுத்தப்படும் அபாயம் இருக்கிறது. அரசியல் பொருளதார சக்தி அளவுக்குமீறி மையப்படுத்தப்படும் பொழுது, அதிகார வர்க்கம் சர்வ வல்லமை படைத்ததாக மாறுவதை எப்படித் தடுப்பது? அதிகாரவர்க்கத்துக்கு எதிராக தனிநபர் உரிமைகளை எப்படிக் காப்பது? சோசலிச அமைப்பு ஏற்படும்பொழுது இது போன்றசமூக-அரசியல் பிரச்சணைகள் தீர்க்கப்பட வேண்டும்.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
(Monthly Review, May 1949)
http://poar-parai.blogspot.com/2007/03/blog-post_04.html
யாரப்பா இந்த பெல்லுக்கு பெல்லு???????
ஐயா soooosalisam பேசும் சந்திரவதனமே…….Some write because they have something to say, fools write because they have to say something! நீங்கள் எந்த வகை என்று சொல்லித்தெரியவேண்டியது இல்லை!
sooosalisam உங்களுக்கு எல்லாம் பிடிக்கும்முனுதான் உங்கள் தலைவர் Lenin அத்தனை Left SR களையும் கூண்டோடு அனுப்பினாரா! நாம் இப்பொழுது socialism பற்றி பேசவே இல்லை நண்பரே! If you have two cows விளக்கம் தெரியுமா?
I give one cow to my poor neibhour is socialism! The state takes away my cows and sells me the milk and butchers one cow to have a Biriyaani for the politbureau is communism (to be more precise Stalinist / Maoist communism)! And we are now talking only about the latter!
இதுக்குமேல வேண்டம் சார், போயிடுங்க!
நன்றி
ஆஹா வந்துட்டான்யா வந்துட்டான்.
http://sampoogan.blogspot.com/
http://dharmapuricmrd.blogspot.com/2008/07/blog-post_8363.html
நண்பர்களே
இந்த ‘நோ’ வேற யாருமில்லை
கம்யூனிச அவதூறு செய்யும் தமிழ்மணியே தான்
அவனை பிடிக்க வேண்டிய இடத்தில்
பெல்லுக்கு பெல்லுக்கட்டுறவன் சரியாக பிடித்ததும்
பயபுள்ள நெளியிறதை பார்த்தாலே நல்லாத்தான்டா
தெரியுது.
நீ யாரா வேன்னா இருந்துக்கோ
நாம இங்கே பேசுறது socialism இல்லை நண்பரே
முதலாளித்துவம் பற்றி.
அதைப்பற்றி பேசுங்க அதுக்கெல்லாம்
அப்பால தானே கம்முனிசம்.
அது தான் வராதே அப்புறம் ஏன்யா பயப்படுறே ?
பார்ப்பனமணியான தமிழ்மணியை அம்பலமாக்கும்
சிறப்புத் தளங்கள்.
http://sampoogan.blogspot.com/
http://dharmapuricmrd.blogspot.com/2008/07/blog-post_8363.html
அன்பான திரு Super Links அவர்களே,
நான் பார்த்ததிலேயே மிக தீவிரமான மதவாதி நீங்கதான்! Even if there is no Satan lets invent one for the sake of my doctrine என்பது போலத்தான் நீங்களும் உங்கள் எண்ணங்களும்!
Mr Super Links – A half blind man, sitting in a pitch dark room and searching for a black cat which actually does not exist – But he ends up finding one every time!!!
Whoever it is, அந்த தமிழ்மணி மேல் அப்படி என்னதான் சார் உங்கள்ளுக்கு ஒரு fixation!
ஏன் உங்கள விமர்சனம் செய்கிற யாரைப்பார்த்தாலும் அவராக தெரிகிறது? இந்த திரு ஏகலைவன் அவர்கள் இத்த வேற ஏதோ பெரிய கண்டுபிடிப்பைபோல அட்டகாசமாக ஓர் mini வெளியிட்டு விழாவெல்லாம் நடத்துகிறார்? (உடனே அதிலையும் ஒரு நாலு links வேற)
கடைசியாக உங்கள் இருவருக்கும்……….
“Most people who read “The Communist Manifesto” probably have no idea that it was written by a couple of men who had never worked a day in their lives, and who nevertheless spoke boldly in the name of “the workers”.” – Thomas Sowell
நன்றி
தமிழ்மணி அண்ணே உங்களுக்கு வர்ற
கோபத்துக்கு எங்களையெல்லாம் என்ன
பன்றதுன்னே தெரியல இல்ல ?
அதனால் தான் இப்படி குண்டக்க மண்டக்க
எழுதுறீங்களோ ?
சரி அடுத்ததா ஏதோ ஒரு ஐரோப்பா
லிங்க்கிலிருந்து மேற்கோளை
பிடிச்சிகிட்டு வந்துட்டீங்களே
வெரிகுட்.
மார்க்ஸ் ஏங்கல்ஸ் இல்லை என்றால்
மற்றொரு மாமேதைகள் அதை
எழுதியிருப்பார்கள்.
அடிமை அல்லாத ஸ்பார்ட்டகஸ் ஏன்
அடிமைகளுக்காக போராடினானோ
ஒடுக்கும் வகுப்பைச் சேர்ந்த ஒருவரே
ஏன் ஒடுக்குமுறையாளர்களை எதிர்க்கிறாரோ
தொழிலாளிகள் அல்லாத நாங்கள்
ஏன் கம்யூனிசத்தை நேசிக்கிறோமோ
அந்த காரணத்திற்காகவும்
டாட்டா,பிர்லா,திருட்டு பாய் அம்பானி
அல்லாத நீங்கள்
அதியமான் போன்றவர்கள் ஏன்
முதலாளிகளுக்காக வரிந்துகட்டிக்கொண்டு
பேசுகிறீர்களோ
அதே போன்ற காரணத்திற்காக தான்
மார்க்சும் ஏங்கெல்சும்
‘கம்யூனிஸ்ட் அறிக்கை’யை
எழுதினார்கள்.
தெரியாவிட்டால் தெரிந்துகொள்ளவும், தெரிந்து இருந்தால் தெரியப்படுத்தவும் ஆர்வம் இல்லாத, எல்லோரையும் விமர்சனம் மட்டுமே செய்ய தெரிந்த திருவாளர் “NO”, உலகிலேயே இலவசமாகவும் சுலபமாகும் கிடைக்கும் ஒரே பொருள் அறிவுரை எனவே, உங்களுக்கு என் அறிவுரை உருப்படியாய் விவாதி அல்லது நடையை கட்டு…
//Comming generations will not believe that such a man in flesh and blood walked on this earth என்று இதைப்புரிந்து கொண்ட மாமேதை Albert Einstein நும் வாழ்த்தினார்!//
மீஸ்டர் நோ,
உங்களது மாமேதை ஐன்ஸ்டீன்(எங்களுக்கும்தான்) நீங்கள் குறிப்பிடும் அரதப்பழசான அந்த உபயோகமற்ற சோசலிசத்தை ஆதரிப்பவர். அதனையே மனித குலத்திற்கு ஏற்றது என்று கொண்டாடுபவர்.
நாங்களும் மாமேதை ஐன்ஸ்டீனும் சரியாத்தான் இருக்கோம். அப்ப நீங்க…. ??///////
NO
Posted on July 24, 2009 at 3:00 pm
யாரப்பா இந்த பெல்லுக்கு பெல்லு???????
ஐயா soooosalisam பேசும் சந்திரவதனமே…….Some write because they have something to say, fools write because they have to say something! நீங்கள் எந்த வகை என்று சொல்லித்தெரியவேண்டியது இல்லை!////////////
நாங்கள் எந்த வகை என்பது இருக்கட்டும், ஐன்ஸ்டீன் எந்த வகை???
////Some write because they have something to say, fools write because they have to say something!////
NO,
ஐன்ஸ்டீன் ஏதோ எழுதவேண்டும் என்பதற்காக எழுதினாரா?
ஐன்ஸ்டீன் ஒரு முட்டாள்-ன்னு சொல்றீங்களா சார்?
ஐன்ஸ்டீன் காந்திய பத்தி எழுதினதை மேற்க்கோள் காட்டவேண்டியது அவரை மாமேதைன்னு சொல்லவேண்டியது, பதிலுக்கு அவர் சோசலிசம் பத்தி எழுதினதை மேற்க்கோள் காட்டினா, அவர் சும்மா டைம் பாசுக்கு எழுதின மாதிரியும், அவரை ஒரு முட்டாள் என்கிற மாதிரியும் பதிவிட வேண்டியது!
விவாதம் செய்ய திரானியில்லாமல் கண்டதையும் உளறிக்கொட்டாதேள்!!!!
சார் உங்களுக்கு திராணி இருந்தால் ஒரே ஒரு தோழருடன், எதாவது ஒரு தலைப்பின் கீழ் விவாதிக்க வாங்க சார்!
பி.கு: அதை பேசினா இதை பேசுவது, இதை எடுத்தாலோ வெறு எதையோ பேசுவது, இந்த கு-ரங்கன் அக்கப்போரை நீங்க விடவே மாட்டீங்களா???
“அதை எப்படி விடமுடியும், அது தான் ராமாயணத்துல இருந்துல்ல நீங்க கத்துண்டேள்”
@No
//ஐயா திரு ஃபியூசிக் அவர்களே, கொள்கையெல்லாம் இருக்கட்டும், அது என்ன சார் பேரு ஃபியூசிக்? இது எந்த மொழியின் அடிப்படையை கொண்டது. அண்ணன் திரு இருங்குவோன் அவர்களே, என்னை கேட்டீர்களே, ஏன் ஆங்கிலக்கலவை, வார்த்தைப்பஞ்சமா என்றெல்லாம்? இங்கே உங்கள் comrade ஒருவர் ஏதோ பெயர் ஒன்று வைத்து யாரும் அவரின் பெயரை செரியாக உச்சரிக்க கூட முடியாதபடி செய்துகொண்டிருக்கிராறே. இதெயெல்லாம் ஆவேசமாக கேட்கமாடீர்களா??
என்னதான் இருந்தாலும் இந்த அச்க்புச்க் sorry உசிசிச்க் sorry ஃபியூசிக் என்றால் என்னவென்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. Please சொல்லுங்களேன் இதன் அர்த்தம் என்னவென்று. வினவு தளத்திற்கு வந்து எதையாவது ஒன்றினை புதிதாக தெரிந்து கொண்டேன் என்று மகிழ்ச்சி அடைந்துவிட்டுப்போகிறேன்!//
பெயரை சுட்டி காட்டி சதாய்த்து பேசுவது சுள்ளான் தனமாக உள்ளது.திருவள்ளுவருக்கு சிலை வைத்த உங்கள் வாழும் வள்ளுவம்தான் “ஸ்டாலின்” என்று தன் மகனுக்கு பெயர்வைத்தார்.
//மேலும் கொள்கையை பற்றி கேட்டீர்கள் அல்லவா, இதோ சொல்கிறேன் கேளுங்கள்!
எனக்கு மட்டும் அல்ல, எந்த ஒரு மனிதனுக்கும் இந்த கொள்கை இருந்தால் போதும், நாடும் வீடும் உருப்புடும்! ” உண்மை மட்டுமே பேசி மற்ற உயிர்களை துன்பப்படுத்தாமல் வாழு ”
அவ்வளவுதான் Sir!
உண்மை என்றால் என்ன என்று கேட்பவருக்கு, இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னரே ஒரு தமிழன் மிக சிம்பிளாக சொல்லிவிட்டார்! “யாதொன்றும் தீங்கு இலாது சொலல்” இதை விட ஒரு அற்ப்புதமான definition உண்மைக்கு எந்த philosopher உம் கொடுத்ததாக எனக்கு தெரியவில்லை! Karl Marx ஐயும் சேர்த்துதான்! //
வள்ளுவத்தின் மீது பெரு மதிப்பும்,மரியாதையும் எங்களுக்கு உண்டு.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே ஒரு தமிழன் தனி மனித ஒழுக்கத்தை பற்றி,அறம்,பொருள்,இன்பம் என்று கருத்துக்களை சொல்லி விட்டார்.ஆனால் அதற்காக வரட்டுத்தனமாக வள்ளுவத்தை அப்படியே ஏற்று ஞானஸ்நானம் எடுத்து அதை புனிதமாக்கும் முயற்சி எங்களுடையதல்ல.ஏனெனில் வள்ளுவம் மன்னர் குல சமூகத்தின் அன்றைய தேவையானது. மன்னன் எவ்வாறு ஆளவேண்டும் என்று மன்னர்குல சமூகத்திற்கு வழிகாட்டி,மன்னனுக்கு தேவையான அறிய கருத்துக்கள் உரியது.ஆனால் தனிமனித ஒழுக்கத்தை தவிர சமூகத்தின் இன்றைய பிரச்சினைகளின் தீர்வை நீங்கள் சித்தாந்தம் என்று கூறும் வள்ளுவத்தில் பூத கண்ணாடி வைத்து தேடினாலும் கிடைக்காது. இன்றைய சமூகத்தின் முனேற்றத்திற்கு வழிகாட்டும் ஒரு தத்துவம் என்பது அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், மற்றும் மக்களின் அனைத்து சமூக பிரச்சனைகளுக்கும் தீர்வு அளிக்க வேண்டும். வள்ளுவத்தின் முப்பாலை வைத்து கொண்டு பாலில்லாமல் அவதிப்படும் பல குழந்தைகளின் பால் பிரச்சினையை கூட தீர்க்கமுடியாது.தனிநபர் ஒழுக்கம் இருந்தால் மட்டும் சமூகமே சரியாகிவிடும் என்று மனப்பால் குடிக்காதீர்கள்.உங்களைவிட முப்பாலிலே மூழ்கிஎழுந்த முத்தமிழறிஞரின் ஆட்சி தான் நடக்கிறது.எந்த லட்சணத்தில் இருக்கிறதென்று எல்லோருக்கும் தெரியும்.ஆட்சியை நடத்துவது தனிநபரோ, தனிநபர் கொள்கையோ அல்ல! ஆளும் வர்க்கமும் அதன் நலனும். ஆளும் வர்க்கம் நடத்தும் ஆட்சியின் பிரச்சனைகளுக்கு தனி நபர் ஒழுக்கத்தை மட்டும் வைத்துகொண்டு தீர்வு சொல்ல முடியாது.
அஸ்ஸாம், காஷ்மீர் மக்களின் பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு சொல்ல போகிறீர்கள்?
ஈழ மக்களின் பிரச்சனைக்கு என்ன தீர்வு சொல்ல போகிறீர்?ராஜபக்சேவை உட்காரவைத்து அறநெறியில் ஆட்சி செலுத்த வள்ளுவம் சொல்லிகொடுக்க போகிறீரா?
//துன்பப்படுத்தாமை பற்றி ஒருவர் நம்மிடையே வாழ்ந்து காட்டியும் விட்டார்! அவர் அதற்க்கு கொடுத்த பெயர் அஹிம்சை!//
வட்டமேசை மாநாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளை கோரி, அவர்களின் உரிமைகளை அம்பேத்கர் பெற்று தந்தபோது அஹிம்சை அதற்க்கெதிராக அம்மணமாக இருந்ததை நாடே பார்த்தது.
ஹிட்லர், ராஜபக்சே,மோடி போன்ற மனித விலங்குகளின் வெறியை இனிமேலும் அஹிம்சை எனும் காகிதத்தில் துடைக்க போகிறீரா?
//இதை விட்டுவிட்டு உங்களைப்போல imported ideology எல்லாம் கண்டிப்பாக தேவையே இல்லை!//
மார்க்சியம் என்பது மனிதனின் சமூகப் பிரச்சனைகளை களைந்து சமத்துவம் கட்டமைக்க சொல்லித்தரும் விஞ்ஞான தத்துவம். அது “imported” என்று நீங்கள் கருதினால்,நீங்கள் உபயோகிக்கும் கணினியின் செயல்பாடே charles babage தொடர்ந்து பல விஞ்ஞானிகள் “imported” செய்த அறிவுசாதனம்தான் அது.அதை “imported” என்று ஒதிக்கிவிட்டு உங்கள் பதிலை ஓலைசுவடியில் எழுதி புறாவின் காலில் கட்டி வினவுக்கு அனுப்ப வேண்டியதுதானே(முகவரி தளத்திலேயே உள்ளது).அறிவியல் விடயம் எந்த மொழியில் இருந்தாலும் அதை மொழியின்,மண்ணின் பெயரை காரணம் காட்டி பயன்படுத்த மறுப்பது வெறும் வரட்டுத்தனம்.
//இப்படிப்பட்ட கொள்கைகளை நம்மிடையே வைத்துக்கொண்டு, நீங்கள் நாடுவதோ, யாருக்காகவோ, யாரோ எழுதிய, 100 வயதை தாண்டிய தேவையில்லா ஒரு சித்தாந்த்தம்!//
நீங்கள் வைத்துள்ள தமிழனின் கொள்கையோடுதான் வாழவேண்டுமானால், நாம் மன்னர் கால வாழ்க்கையின், ஆதிக்கசாதியினரை போல் ஆண்டான் என்றும், ஒடுக்கப்பட்டமக்களை போல் சுரண்டப்பட்டு அடிமைகளாகவோ, வர்க்கவேறுபாடுள்ள வாழ்க்கையை தான் வாழமுடியும். இந்த சித்தாந்தம் சரியானதா?
அன்பான நண்பர் திரு பகத் மற்றும் திருவாளர்கள் சர்வதேசியவாதிகளுக்கு,
அது என்ன Sir சர்வ …தேசிய….வாதிகள்…..அண்ணன் விஜயகாந்த் மாதிரி தேசிய…திராவிட….முற்போக்கு….பிற்போக்கு… போலவா? இல்லாட்டி உங்களுக்கு பிடித்த multi national கம்யூனிச கூட்டு முயற்சியா? அதான் Comintern, warsaw pact, அது, இது எல்லாம் செய்து பாத்தீங்களே…..எல்லாம் புட்டுக்குச்சே!
சரி விடயத்திற்கு வருவோம்,
முதல் பயம் கலந்த அலறல் from my side!!!!!
“அயயய்யோ எல்லா புர்ரச்சியாளர்களும் ஒண்ணா வாராங்கப்பா, எனக்கு ஒரே நடுக்கமா இருக்கு” !!!!!!
எல்லாத்தையும் விட்டுப்புட்டு Einstein ஐ பிடித்துக்கொண்டுவிடீர்கள் போலிருக்கிறது!
ஐயா இங்கதான் உங்களுக்கு மத்தவங்களுக்கும் வேறுபாடு!
ஐன்ஸ்டீன் மட்டும் இல்லை, Romain Roland, Bernard Shaw, Mahathma Gandhi, Bertrand Russel மற்றும் பல Humanists தொடக்க காலத்தில் communisa தை வரவேற்றார்கள்!
இது நடந்தது 1917 முதல் 1956 வரை!
அதாவது 1956 இல Nikitha Krushev ஸ்டாலினின் வண்டவாளங்களை அம்பலப்படுத்தாத வரை! இது நடந்ததும், ஒருவர் ஒருவராக உங்களின் பாசிச நாடகத்தை புரிந்துகொண்டு தூர விலகி ஓடிவிட்டார்கள்! Einstein இறந்தது 1955 இல்!
Thats the missing link!
இதற்க்கு முன்னரே, communist ஆளும் வர்க்கம் மேற்க்கத்திய நாடுகளில் தங்களின் செல்களை அமைக்க, ராணுவ ரகசியங்களை அறிய யுக்தி ஒன்றை வைத்திருந்தார்கள்! அதாவது Intelectuals ஐ தங்கள் பக்கம் எப்படி இழுப்பது என்ற வழிமுறை!
It had three steps. 1. பணம் 2. பெண் இவை இரண்டும் தோற்றால் கடைசியாக 3. Marx
Marx ஏற்ப்படுத்திய தாக்கம் அப்படி! Such people were looking for the utopia and Marxism was there that was ready to cut of the feudal and tribal affinities and establish a king less utopian state!
ஆனால் நடந்தது என்னவோ ஸ்டாலினிசம் மற்றும் மாவிசம் என்ற பயங்கரங்கள்தான்! There was this great weakness in Marxism that did not predict the rise of a new class called the neo-burgeoise that systematically flowed into the seats of power! This புதிய burgeoise, proliteriat பெயரை வைத்துக்கொண்டு, மன்னர்கள் என்ன செய்தார்களோ அதயே செய்தன!
But this was inevitable. மார்க்ஸ்யத்தின் logical extension தான் லெனினிசம்!லெனினிசத்தின் logical extension தான் ஸ்டாலினிசம்!
உங்களுக்கு தெரியாவிட்டால் சொல்லுகிறேன் கேளுங்கள், Stalin ஒருமுறை தேசத்தைவிட்டு ஓடிப்போன (அதாவது திரும்பியும் வர மறுத்த) ஒரு intelectual இடம் சொன்னார் – Stalin’s come and go, but this socialist state is what that is important!
சொல்லவருவது என்னவென்றால், தங்களின் Power structures ஐ தக்க வைத்துக்கொள்ள Marx மற்றும் கம்யூனிசம் பெயர்களை முடிந்த வரையில் உபயோகித்து மற்ற எல்லாவறையும் ஒழித்துக்கட்டினார்கள் !
மேலும் இரண்டாவது முக்கியமான பாயிண்ட், ஐன்ஸ்டீன் இடம் பல பொலிடிகல் அபிப்பராயங்கள் இருந்தாலும் அவரை காடுவுளாக ஏற்று அவர் சொன்னதையெல்லாம் correct என்று ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை!
அங்கதான் உங்களுக்கும் எனக்கும் (dogmatic beliefs இல்லாத பலருக்கும்) உள்ள முக்கியமான வித்தியாசம்!
நான் முன்னே சொன்னதுபோல், you guys have just replaced your faith based religious God (be it a Hindu, Muslim, Christian or any other) with the god head of someone called Marx with a few prophets like Stalin and Mao thrown in!
Final ஆக, மறுபடியும் சொல்கிறேன், socialism என்பது வேறு, நீங்கள் கொண்டாடும் ஸ்டாலினிச communism என்பது வேறு!
மற்றபடி, நீங்கள் எழுதிய பல வரிகளுக்கு (உங்களுக்கு விவாத திராணி இல்லை etc etc) ஒரு அர்த்தமும் இல்லை! Just meaningless diatribe மட்டுமே!
நன்றி
பூனை கொஞ்சம் கொஞ்சமாக
வெளியில் எட்டிப்பார்க்கிறது.
விரைவில் பூனையின் வால்
வரை முழுமையாகத் தெரியும்.
தமிழ்மணி அண்ணே அது ஏன்ணே
தமிழ்+மணி ன்னு பேர் வச்சிருக்கீங்க?
தமிழுக்கும் மணிக்கும் எதுனா சம்பந்தம் இருக்கா?
உங்களுக்கு வர்ற வயித்தெரிச்சல் தான் இங்க எங்களுக்கு
நல்லா தெரியுதே.
எதுக்கு மூஞ்ச மூடிக்கிட்டு வர்றீங்க
நேராவே வர வேண்டியது தானே.
இப்ப பிரச்சனை கம்யூனிசம்
அல்ல அதைப்பற்றி நாம் இங்கு பேசவில்லை
முதலாளித்துவ பயங்கரவாதம் தான் பிரச்சனை
அதுக்கு ஒரு தீர்வு சொல்லுங்கண்ணே..
எதிர்பார்ப்புடன்
அண்ணன் தமிழ்மணியின் ‘தமிழ் நாட்டு’ ரசிகர்கள்
(அண்ணன் வசிப்பது இங்கு இல்லை என்பது கொசுறு தகவல்.)
//Final ஆக, மறுபடியும் சொல்கிறேன், socialism என்பது வேறு, நீங்கள் கொண்டாடும் ஸ்டாலினிச communism என்பது வேறு!//
இங்கு யாரும் “ஸ்டாலினிச கம்யூனிசம்” என்று பேசவில்லையே. ஒரு வேளை, கம்யூனிசத்தையும், கம்யூனிச மூலவர்களையும், கம்யூனிஸ்ட்களையும் எப்படியெல்லாம் திட்டுவது என்று மூளையை கசக்கி பிழிந்து வீட்டில் காயப்போட்டுவிட்டு வந்து “Final,Semi Final”னு உலறுகிறீர்களா?
அது சரி “Socialism” என்பது வேறுன்னு சொல்றீங்க.
நீங்கள் கூறும் “Socialism” என்பது என்ன?
காந்தி முன்மொழிந்த “இந்துமத சர்வாதிகார ராம ஜென்ம சோசலிசமா”?
அட அட நம்ம நோ அண்ணன்…அது என்னய்யா நோ … நோவு, நோவுல்லவன்னு அர்த்தமோ…
உங்க முதலாளித்துவத்தில் கடந்த சனவரி 2008 இல் வெறும் 32 பில்லியன் டாலர் பணம் போனசாக வால் தெரு முதலாளிகளுக்கு கொடுக்கப்பட்டது.. ஆனால் அதே சமயம் அமேரிக்காவில் 2 மில்லியன் மக்கள் வேலை இழந்து தவித்து கொண்டு இருந்தனர்…
இதுதான் உங்கள் முதலாளித்துவத்தின் லட்சணம்..
அது சரி “Confessions of an Economic Hitman” படித்து உண்டா… உங்கள் முதலாளித்துவ அரசுகளின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றிய புத்தகத்தை மறுத்து எதாவது ஆதாரத்துடன் எழுதப்பட்டு உள்ளதா..?
உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன் கேட்டுக் கொள்ளுங்கள் முதலாளித்துவம் தனது காரியத்தை சாதிக்க மூன்று வழிகளை கையாள்கிறது..
௧. பணம்
௨. போர்
௩. ஒரே பொய்யை திரும்ப திரும்ப பலராலும் சொல்ல வைப்பது.. அதாவது பார்ப்பான் சொன்னானே “கடவுளை நம்பாதவனை கோயிலுக்கு அருகில் கொலை செய்து சாமி கோபம் என சொல்” என்று அந்த மாதிரி..
ஸ்டாலின் , காலத்து படுகொலைகள் ஒரு கட்டுக்கதை என ஆதாரப்பூரமாக பலராலும் நிரூபிக்கப்பட்டு உள்ளது… சமீபத்தில் கூட புடினால் முன்னாள் சோவியத் ஆவணங்கள் திறக்கப் பட்டன.. ஆனால் உங்களைப் போன்ற பலருக்கு ஏமாற்றம் தான் மிச்சம்… பலரும் தேடிப்பார்த்தும் ஒன்றும் மசாலா கதைகள் கிடைக்காததால் எல்லோரும் மீண்டும் உக்ரைன் , ஸ்டாலின் என குதிக்க தொடங்கிவிட்டனர்…
இப்பொழுது அமேரிக்கா ஈராக் , பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நடத்தும் போர் என்ன உங்களின் ஆயுத , எண்ணை நிறுவனங்களின் நலனுக்காக நடத்தப் படவில்லைதானே.. அங்குள்ள மக்களுக்கு “சுதந்திரத்தை” தேவையான அளவு வழங்கத்தானே அந்த போர்…? “நோ”..நீர் க.க.க போ !
Capitalists know the truth of Hitler’s statement in his autobiography, ” that a lie — but especially an outrageous lie — will be believed by many and partly believed by most if repeated loudly and often enough”
Even if they don’t swallow the whole 14.5 million claimed by Conquest, many people will think: “Where there’s smoke, there’s fire; even if the truth is only half or a quarter as much, communism is unthinkable.” So, the bigger the lie, the better for the liar! Finally, the Ukrainian famine story is a weapon in the Cold War against the USSR bosses today. Time and again film and book repeat that today’s Soviet leaders have never “acknowledged,” much less apologized for, the famine. None of these purposes would be served by an attempt to discover the truth about the collectivization movement.
///இதற்க்கு முன்னரே, communist ஆளும் வர்க்கம் மேற்க்கத்திய நாடுகளில் தங்களின் செல்களை அமைக்க, ராணுவ ரகசியங்களை அறிய யுக்தி ஒன்றை வைத்திருந்தார்கள்! அதாவது Intelectuals ஐ தங்கள் பக்கம் எப்படி இழுப்பது என்ற வழிமுறை!///
அண்ணே ஒரு சின்ன சந்தேகம்.. அந்த Intelectuals இல் நீங்களும் ஒருத்தரா… இல்லை ஏன் கேட்கிறேன் என்றால் பொதுவாக அறிவாளிகள் என்றால் அவர்களுக்கு கொஞ்சமாவது சுய புத்தியும், மூளையும் இருக்கும்… பணம், பொருளுக்கு ஆசைப்படுபவன் அறிவாளியாய் வெகு நாட்கள் நீடிக்க முடியாது.. அதுவும் நீங்கள் சொன்னீர்களே மூன்றாவது காரணம் அதுதான் இருக்கறதிலேயே காமெடி பீஸ்.. பணம், பொருளை விட மார்க்சிசம் உயர்ந்தது என பொதுவாக எல்லா Intelectuals கும் தெரியும்… உங்களை தவிர.. 🙂
//ஐயா இரங்குவோன் என்ற மார்க்சிச மகாகுருவே, Hegel’s dialectic மற்றும் Marx இன் dialectical materialism இடையே உள்ள முக்கியமான வேறுபாடு என்ன என்று சொல்லமுடியுமா???
முதலில் Hegel யார் என்று தெரியுமா? அல்லது Hegel இன் Kantian philosphy basis பற்றி தெரியுமா, மற்றும் இந்த expansion of Kantian thought process by Hegel தான் Karl Marx இன் dailectic கிற்கே வித்திட்டது என்று தெரியுமா????
முதலில் historical Philosophy and westen liberal thought process from Kant to Hume பற்றி படித்துவிட்டு வந்து பேசத்தொடங்குங்கள்! பிறகு நான் எழுத்தில் ஏன் ஆங்கிலம் கலக்கிறேன், வாக்கியப்பஞ்சமா என்பதைப்பற்றியெல்லாம் வேலவாரியாக விவாதிக்கலாம்!
நான் ரெடி நீங்க?//-No
அன்புள்ள “நோ”,தாங்கள் கேட்ட அந்த 4 அடிபபடைக் கேள்விகள் மற்றும் அந்த எட்டு அடிப்படைகளையும் குறித்து எனது தளத்தில்
http://www.srisagajan.blogspot.com விவாதமொன்றைச் செய்ய நான் விரும்புகிறேன்.அங்கே,விவாதிக்க வருகிறதென்றால் நான் தயாராகவே இருக்கிறேன்.நீங்கள் எழுதும் பதிலிலிருந்து தொடங்கலாம்.
கூடவே,நீங்கள் கேட்ட கேகெல் மற்றும் மார்க்சினது பொருள் முதல்வாதத்துக்கு வித்திட்ட கேகலின் அந்நியமாதல் மற்றும் பொருள்முதல்வாத அடிப்படைகளை நாம் விவாதிக்கலாம்.இமானுவேல் கன்ட் மற்றும் கூம் இனதும் ஆரம்பத் தத்துவார்த்தக்கூறுகளை நாம் சிறப்பான ஜேர்மனிய த்துவார்த்த முலத்தையும் விவாதிப்போம்.உங்கள் பதில்கண்டு தொடர்கிறேன்.
தங்கள் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கும்,
ஸ்ரீரங்கன்.
P/S:கீழே பொருளாதாரத் தேக்கங்குறித்த மார்க்சினது புரிதல்கள் குறித்து ஆங்கில மற்றும் ஜேர்மனியச் சூழலில் வாசகர் விவாதிக்கும் தளத்தின் இணைப்புகள் உண்டு.இதையும் வாசித்து வாருங்கள் நாம் விவாதிப்போம்.
Did Karl Marx Predict The Recession?
“Owners of capital will stimulate the working class to buy more and more of expensive goods, houses and technology, pushing them to take more and more expensive credits, until their debt becomes unbearable.
The unpaid debt will lead to bankruptcy of banks, which will have to be nationalised, and the State will have to take the road which will eventually lead to communism”
Karl Marx, Das Kapital, 1867
http://www.theopensourcerer.com/2009/01/26/ot-did-karl-marx-predict-the-recession/
The point is that Marx did predict the general logic behind crises of this sort, and has been proved right again and again. Keynesian economics and counter-cyclical economic policies are really just a prescription for auto-adjusting the rate of profit by changing the concentration of capital via public works programs and tax cuts which progressively shift the concentration of capital downward.
More…
http://meganmcardle.theatlantic.com/archives/2009/01/faux_marx.php
http://answers.yahoo.com/question/index?qid=20090318025053AAcmDcI
http://www.wikijob.co.uk/blog/recession-marx-was-right
http://www.workers.org/2008/us/recession_0313/
http://notesonthefront.typepad.com/politicaleconomy/2009/05/jim-stewart-has-come-up-with-a-provocative-idea-to-stimulate-one-small-part-of-the-economy—–some-possible-measures-to.html
Auf Deutsch(In German)Links:
http://www.berlinerliteraturkritik.de/detailseite/artikel/europas-gespenster-in-ketten.html
http://www.marxists.org/deutsch/archiv/mattick/1934/xx/hook.htm
http://blog.4st.ch/?tag=rezession
http://www.mlwerke.de/me/me16/me16_084.htm
http://www.das-kapital-lesen.de/?cat=31
Books:
http://www.amazon.co.uk/Socialists-Capitalist-Recession-Basic-Ideas/dp/0902869841
http://www.infibeam.com/Books/info/ernest-mandel/socialists-capitalist-recession-basic-ideas-karl-marx/9780902869844.html
சுத்தமான தமிழ்ல எழுதுமய்யா என்று சொன்னால் எனக்கு ஹெகல் தெரியுமா உடோபியா தெரியுமா என்று கேட்பது என்ன வாதம்? நான் மார்க்ஸியம் பேசவேயில்லையே? மேலும் அடுத்தவர்க்கு தெரியாது என நீங்களே எப்படி முடிவு செய்வீர்கள்? எப்படியும் நீங்கள் கொடுத்த தொடுப்புகளுக்கு நன்றி!
Mr. No,
இவ்வளவு நேரம் உட்கார்ந்து யோசித்து வந்தீர்களோ??
/////அது என்ன Sir சர்வ …தேசிய….வாதிகள்…..அண்ணன் விஜயகாந்த் மாதிரி தேசிய…திராவிட….முற்போக்கு….பிற்போக்கு… போலவா?////
“அதென்ன “NO”??? மண்டையில் மூளை இல்லை என்பதை தான் இப்படி சூசகமாக சொல்கிறீர்களோ????
மூளைக்கு பதிலாக மலத்தை வைத்திருப்பதால் தான் நகைமுரனாக விவாதிக்கிறீர்களோ????” இப்படி எம்மாலும் பதிவிட முடியும்!
பெயரை வைத்துக்கொண்டு நையாண்டி செய்யாமல் நேரடியாக விவாதத்திற்க்கு வரவும்!
மொக்கை தனமாக பதிலலிக்க இது இடமல்ல!
////////Stalin’s come and go, but this socialist state is what that is important!
சொல்லவருவது என்னவென்றால், தங்களின் Power structures ஐ தக்க வைத்துக்கொள்ள Marx மற்றும் கம்யூனிசம் பெயர்களை முடிந்த வரையில் உபயோகித்து மற்ற எல்லாவறையும் ஒழித்துக்கட்டினார்கள் !/////////
அய்யா மொழி வித்தகரே, மேதாவி உங்களின் ஆங்கில புலமை தான் என்னே என்னே? “Stalin’s come and go, but this socialist state is what that is important!” இந்த வரிக்கு இதுவரை யாருமே இப்படி தத்து – பித்துவம் சொல்லி கேட்டதில்லை! பித்தம் தலைக்கேறினால் இதுதான்!
/////மறுபடியும் சொல்கிறேன், socialism என்பது வேறு, நீங்கள் கொண்டாடும் ஸ்டாலினிச communism என்பது வேறு! //////
நீங்கள் socialism என்றால் என்ன என்று விளக்குங்களேன்!
/////எனக்கும் (dogmatic beliefs இல்லாத பலருக்கும்)/////
முதாளித்துவம் தனது கோரமுகத்தை காட்டிக்கொண்டு இருக்கும் போதும், அதன் காரணமாக பல விவசாயிகள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டிருக்கும் போது பங்குசந்தை உயர்வை புளாங்கிதமடைந்த உங்களுக்கு dogmatic beliefs மட்டுமா இல்லை?
இன்று சில பன்னாட்டு நிறுவனங்களின் நிதி நெறுக்கடியால், பல தொழிலாளர்கள் வேலை இழந்தும், சிலர் தற்கொலை செய்யும் போதும், பலரின் எதிர்காலமே கேள்விக்குள்ளான போதும், நீங்கள் பெரு-முதலாளியாக இல்லாவிடாலும் முதலாளிகளுக்காக வரிந்துகட்டிக்கொண்டு பேசுகிறீர்களே உங்களுக்கும், உங்கள் அந்த பலருக்கும் dogmatic beliefs மட்டுமா இல்லை? மனசாட்சியே இல்லை என சிலர் கூறக்கூடும். மனமே மூளையில் உள்ள கருத்து தானே, மூளையே இல்லாமல் மலமாக இருந்தால்???
////It had three steps. 1. பணம் 2. பெண் இவை இரண்டும்/////
அப்படியே, பார்பான் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட என்ன என்ன சதியெல்லாம் செய்தான் எனவும், முதலாளிகள் தனது அதிகாரத்தை தனது கைக்குள் வைக்கவும், தங்களது உள் போட்டிகளுக்கு/பூசல்களுக்கு என்ன என்ன செய்தார்கள் என்பதையும் விளக்குங்களேன்!!!
மூளை இல்லாமல், வேறும் மலமாக அல்ல பார்பன மலமாக அல்லவா இருக்கிறது!!!!
////Nikitha Krushev/////
தோழர்.ஸ்டாலின் தவறே செய்யவில்லை என எந்த தோழரும் சொல்லமாட்டார்கள்.
அவரின் சாதனைகளுக்கு பின்னால் அவை மறைந்துபோகும்.
நீங்கள் மெத்த அறிவாளிதான்!!! அத்துடன் Nikitha Krushev வின் திரிபுவாதங்களையும் சேர்த்து பேச வேண்டியது தானே! பேசியிருந்தாலாவது அறிவிருப்பதாக ஒத்துக்கொண்டிருக்கலாம்.
/////you guys have just replaced your faith based religious God (be it a Hindu, Muslim, Christian or any other) with the god head of someone called Marx with a few prophets like Stalin and Mao thrown in!/////
நாங்கள் எங்கும் எப்பொதும் யாரையும் கடவுளாக கூறுவதுமில்லை, புனிதப்படுத்துவதுமில்லை.
மாறாக அவர்களை தோழர்களென கொண்டாடுகிறோம்! பாட்டாளிவர்க்க படை வீரர்களாக கொண்டாடுகிறோம்!
கவலையே படாதீர்கள், உங்கள் ராமனுக்கோ கிருஷ்னனுக்கோ இவர்கள் யாரும் போட்டியாக வந்துவிட மாட்டார்கள்!
நாங்கள் வரும் வரை தான் உங்கள் ராமனுக்கும் கிருஷ்னனுக்கும் இந்த பம்மாத்து எல்லாம்! அதற்குபிறகு அவர்களே நேரில் வந்தாலும் வேலை செய்தால் தான் சோறு/படையல் அது எதுவாகினும்.!
முதலாளியாக இல்லாவிடாலும் முதலாளிகளுக்காக வரிந்துகட்டிக்கொண்டு பேசுவது, இதுநாள்வரை வேலையே செய்யாமல் சாப்பிட்டு வந்தது போய், வேலை செய்ய வேண்டும் என்கிற பயத்தினால் தானோ? என்னவோ.
“அதெப்படி உங்களுக்கு உகந்தவைகளுக்கு மட்டும் தேர்ந்தெடுத்து பதிலளிக்கிறீர்கள்???
மற்றவற்றில் அவதூறு எழுத அறிவு பத்தவில்லையொ?
அறிவும் இல்லை! விவாத நேர்மையும் இல்லை! வெறும் Copy & Paste தான்.”
/////மார்க்ஸ்யத்தின் logical extension தான் லெனினிசம்!லெனினிசத்தின் logical extension தான் ஸ்டாலினிசம்!//////
யப்பா! எவ்வளோ…….. பெரிய்ய்ய்ய்ய்..ய கண்டுபிடிப்பு! எப்புடி சார் உங்களுக்கு இவ்வளவு அறிவு?
அப்படியே பார்பனீயம்-நிலபிரபுத்துவம்-முதலாளியம்-காலனியாதிக்கம்-ஏகாதிபத்தியம்-மறுகாலனியம் இவற்றின் பரினாமத்தையும் விளக்குங்களேன். குறைந்த பட்சம் பார்பனீயம் பற்றியாவது???
மூதேவி, சும்மா அவதூறு பரப்பாமல் விவாதிச்சா விவாதி, இல்லையின்னா, கிளம்பு காத்துவரட்டும்….
இடையீடு:
திண்ணையில் கட்டுரைகள் எழுதும் அரவிந்தன் நீலகண்டன் பின்னாளில் வலைப்பதிவும் செய்தார்கள்.
அவர் குறித்த விவாதத்தையும் செய்வதற்குத் தொடங்கியபோது,அவர் தலைமறைவாகினார்.
இப்போது “நோ”வென்ற இல்லாமையில் இருப்புணர்த்தும் அன்பர்,
பிரமிக்கத்தக்க தரிபுகளை கொஞ்சம் வித்தியாசமான மொழியில் முன்வைக்கின்றார்.
இவரது எழுத்துக்கள் அரவிந்தன் நீலகண்டன் வழி புரியத் தக்கதே.
எனவே,”நோ”வோடு விவாதிப்பதற்கு நான் விரும்புக்கொண்டு
அவரை வரவேற்கக் காத்திருக்கிறேன்.
இங்கே அல்ல.எனது தளத்தில்.
உஸ் அப்பாடா எல்லாம் நவுருங்க நவுருங்க,
அன்ணே டொமிலு மண்ணி நல்லாயிருக்கீங்களா? இத்தன பேரையும் ஒத்த ஆளானின்னு சமாளிக்கும் போதே தெரியல வந்திருக்குறது சாதா ஆத்மா இல்லை, நொம்ம மக்காத்மாவோட நேரடி வாரிசு. இவரு பேரு பிரம்மம் இல்ல இல்ல பார்ர்ப்பனபிரம்மம். வேசுற பார்ப்பன கவிச்சையில யப்பா நம்ம கூவம் கீதே இது கூட சும்மா சோக்கா கீயும்.
சும்மா அசுரன கூப்பிட்டு டொமில விரட்டி வுட்டுடாதீங்க நாங்கெல்லாம் கொஞ்ச காலம் தான் ஆவுது வலைக்கு வந்து. அண்ணாத்தவோட கும்மியபாக்குலன்னா எங்க விமோசனமே கிடையாது.
அது என்ன ஸ்டாலின் கம்யூனிசம் அட மண்பாண்டதலயா கம்யூனிஸ்டுங்களுக்கே தெரியாம புதுசுபுதுசா கம்யூனிசத்த உருவாக்குறியே. அதவுடு டொமிலு நம்ம சங்கராச்சாரிக்கு நீதான் வாழை இலையா கீறியாமே, அப்புறம் எதுக்கு இந்த வேசமெல்லாம் . அதிகம் பேசி பேசி நீ லூசுன்னு தெரிஞ்சு போச்சுன்னா !!!!! இப்பவே பாவம் உனோட பிளாக்குக்கு ஒருத்தனு வரமாட்டேங்குறான். சில மென்டல் அப்பப்ப இங்க வரும்விளம்பரத்துக்காக, அது மாரி ஏதாதாவது கேப்புமாரிதனம் பன்னிட்டு வாரியா?
கடைசியா சுப்ரபாதம் பாடுனாத்தான சாமி மலையேறும்………. யாரங்கே எஙே ரம்பை ஊர்வசி மேனக(எல்லாம் கிழவியா இருந்தாலும் கூட்டிட்டு வந்து ஆட வுடுங்க) பரத நாட்டியம் ஆடி மணிய சாந்தப்படுத்துங்க
அப்புறம் தோழர் சிறீ நீங்க பன்ணுறது ரொம்பத்தப்பு எல்லாரும் ஒண்ணா சேர்ந்து அடிக்கும் போது நீங்க தனியா கூட்டிட்டுபோய்த்தான் அடிப்பேங்குறது நியாயம் இல்லை
கலகம்
//இப்போது “நோ”வென்ற இல்லாமையில் இருப்புணர்த்தும் அன்பர்,
பிரமிக்கத்தக்க தரிபுகளை கொஞ்சம் வித்தியாசமான மொழியில் முன்வைக்கின்றார்.
இவரது எழுத்துக்கள் அரவிந்தன் நீலகண்டன் வழி புரியத் தக்கதே.
எனவே,”நோ”வோடு விவாதிப்பதற்கு நான் விரும்புக்கொண்டு
அவரை வரவேற்கக் காத்திருக்கிறேன்.
இங்கே அல்ல.எனது தளத்தில்.//
தோழர், நீங்க கூட்டிட்டு போய் முடிச்சுட்டு அனாமத்தா முட்டு சந்துல விட்றாதீங்க. அனுப்பும் போது ஆட்டோவோ,இல்லைனா மீன்பாடி வண்டியாவது பிடிச்சி இங்க அனுப்புங்க. இன்னும் ரெண்டு மூனு பேருக்கு மெயில் அனுப்பியிருக்கேன்.
Ha ha ha ha …………………….
புரச்சி கொழுந்தெல்லாம் பொங்குது பார்!
அன்பர் திரு பகத் என்பவர் ஆரவாரமாக, அதே பொய்களை திருப்பி திருப்பி சொல்லி, பாத்தியா, கேட்டியா…அப்புறம் க க க போ என்றெல்லாம் ஆரம்பித்துவிட்டார்!
யோவ், atleast ஒரு 10 million உயிர்களை, தங்கள் பதவியாசைக்காக ஸ்டாலினும் அவரின் சகாக்களும் போட்டுத்தள்ளிருக்கிறார்கள், இதை உலகம் முழவதும் அறிந்து ஆராய்ந்து உண்மை என்று document செய்து மிக பழைய செய்தியும் ஆகிவிட்டபிறகு கூட ஒன்றுமே நடக்கவில்லை, ஏதோ கொஞ்சம் பேரு தான் செத்தாங்க என்று உளறும் ஒரு கூட்டம் கண்டிப்பாக என்ன சொன்னாலும் தெளிவடைய போவதில்லை!
அப்புறம் திரு பகத் என்ற பக்கா ஞானசூனியம் அவர்களே, நான் marx மூன்றாவது என்று சொன்னது, to define the hierarchy of instruments to influence a potential turncoat என்பதற்காகத்தான்! இந்த concept ஐ கொஞ்சமும் புரியாமல் ஏதோ as usual அறைதிருக்கிறீர்கள்!
இதுக்கு நடுவுல அண்ணன் திரு Super Links நடுவில் வந்து அப்பப்போ comedy break வேற தந்துவிட்டு போகிறார்! ஏதோ நல்லா தெரியுது பல்லா தெரியுது, கால் தெரியுது காக்கா தெரியுது என்று! இந்த நூற்றாண்டின் Nostradamus அவர்களே, அப்படியே அடுத்த October புரட்சி எங்கேயாவது தெரியுதா என்று பார்த்து சொல்லுங்களேன்?
அப்புறம் திரு பாவெல் என்ற ஒருவரின் திடீர் விஜயம்! As usual, உங்களின் விவாத நாகரீகத்தின்படி மூளை, மலம் என்று ஆவர்த்தனத்தை தொடங்கிவிட்டார்! ஐயா பாவலு, இப்படியெல்லாம் திட்டி சும்மா முக்கா பக்கத்துக்கு பதிவுபோட்டா, நீங்க பேசுறதெல்லாம் உண்மையயிடுமா??? ஒண்ணு பண்ணுங்களேன், Stalin Stalin Stalin மற்றும் அவரு நல்லவரு நல்லவரு நல்லவரு, நாயே, பேயே, அடிவருடி அடிவருடி மற்றும் பல வசவுகள் எழுதி மொத்தமா கொடுத்திருங்க! நேரம் இருந்தா நானே ராண்டமாக வார்த்தைகளை போட்டு படித்துவிட்டு போகிறேன்! என்ன, your meaningless sentences are as good as unconnected individual words picked randomly and written in a piece of paper! விடயம் இப்படி இருக்க இந்த Soviet ரசிகர் மன்ற உளராளர் என்னைப்பார்த்து சொல்கிறார், நான் தத்துபித்துவம் எழுதுறேன் என்று!
இதையெல்லாம் விட Comedy இவிங்க சொல்லுற பாய்ன்டுகெல்லாம் நான் பதில் சொல்லவில்லையாம்! அது எப்படங்கண்ணா? நீங்க வேற வேற பேருல வந்து ஆளாளுக்கு ரெண்டு பக்கத்ததில்லா கொட்டிவிட்டு போவிங்க. நாங்க அதெல்லாம் வாசிச்சு, உங்களுக்கு point point ஆ பதில் சொல்லணுமா?
இதச்செயரத்துக்கு அண்ணன்கள் ஒரு technic கை வைத்துகொண்டிருகிறார்கள்! அதான் நேத்து திரு அதியமானை திட்டும்போது (இப்போ இங்கேயும்) பார்த்தேனே! வினவின் கருத்து combat strategy யே இதானே!
First comes the propaganda unit, which is the low ranked and uncouth mannered and an illeterate mob!
திரு மரண அடி, திரு இறங்குவான் போன்றவர்களெல்லாம் இதில் அடக்கம்! கண்டபடி முதலில் ஏசுவார்கள்… நாயே, பேயே, அடிவருடி……etc
இந்த கோஷ்டி அடித்தும் ஆளு அடங்கலையா, கூப்புடு அடுத்த கும்பல!
Next team is the semi literate, medicore mass that will start singing glorious songs about Marx, Lenin, Stalin, do the usual அடா புடா அர்ச்சனை and finally end with saying…..and hence Marxism is great……மற்றும் புரட்ச்சி ஓங்குக…………
திரு Super Links, திரு இக்ஸ்ச்ப்க்ஸ்(சாரி சார், சத்யமாக type செய்ய முடியவில்லை)
மற்றும் சிலர் இதில் உள்ளார்கள்!
இன்னுமும் அடங்கலையா….குப்பிடு நம்ம அறிவுரை கோஷ்டியை
This team will have some semi intelectuals that will try to paint a rosy picture about ttheir beleifs and the necessity to do a meaninful விவதாம் (inspite of the gang one and two firing their obscene shots without any respite) அண்ணன் திரு அரை ticket, போன்ற வெகுசிலரே, இந்த category இல, எனென்றால் வசை படாத ஆளு வினாவில் பஞ்சம் பாருங்க!
இதுவும் work out ஆகவில்லையா……ஆளு அடங்குர மாதிரி தெரியலையா, கூப்பிடு நம்ம நாட்டாமை கோஷ்டியை…
This team will come out with demarches and superbly worded ultimatums and also inventions and discoveries about the person that his writingback……………எப்படி தெரியுமா?…டாய் நீ அவந்தான, நீ இவந்தான….அப்போவே ஒன்ன செருப்பால, பருப்பால அடித்தோமே, ஞாபகம் இல்ல ……etc etc……..திரு ஏகலைவன், திரு பாவெல் எல்லாம் இந்த gang!
அப்படியும் அவன் போலியா…அப்புறம் என்ன…எனக்கு தெரியாது, எனென்றால் நான் இன்னுமும் போகவில்லை! உங்களின் comedy ஐ மிகவும் ரசித்துக்கொண்டிருக்கின்றேன்!
The point is, இப்படி ஒரு தளத்தை நடத்தி, மாற்று கருத்து சொல்லவந்தவர்களை , அட போடா மடையா, நான்தாண்டா correct, நான்தாண்டா correct என்பதையே திரும்ப திரும்ப சொல்லி, சலித்து போயி அவர்கள் போய்விட்டபின்பு, பாத்தியா, புரட்சி ஜெயிக்கும், அதான் இந்த பய நம்மக்கூட விவாதம் பண்ண முடியாத ஓடுறான் பாரு என்று உங்களுக்குள்ளேயே கும்மியடித்துக்கொண்டு இருப்பது என்ன பொழுதுபோக்கோ பொழப்போ!
உலகம் உருண்டை அல்ல, தட்டைதான், என்ன சொன்னாலும் கேட்கமாட்டேன், என்ன proof குடுத்தாலும், ஏன் satelite புகைப்படம் கொடுத்தாலும் நம்பமாட்டேன்! அவ்வளவுதான்…முடிந்தால் விவாதம் பண்ணு, விவாதம் தான் பண்ணனும், ஆதாரத்தூடு பேசணும் (!), இல்லாட்டி நீ விவாதமே பண்ண தெரியாத அரை லூசு என்று திட்டுவேன் என்றால், உங்களை என்னவென்று சொல்ல்வது??????
இத்தோடு முடித்திக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்……..அனால் ஒரு request திரு வினவு அவர்களே…………நீங்கள் செய்வது போல, நான் வேறு வேறு பெயர்களில் வந்து ஒரு முறை கொம்பு சுத்தட்டுமா?? உங்களுக்கும் நீங்க என்னசெயிறீங்க என்று புரிந்தா மாதிரி இருக்கும்………….
நன்றி
கடைசியாக, அன்பான நண்பர் திரு ஸ்ரீ ரங்க ன் அவர்களுக்கு,
நீங்கள் யாரென்று எனக்கு தெரியாது சார்! நான் இங்கே வந்தது, வினவு என்னும் self proclaimed geniusகள் இருக்கும் இடத்தை பார்பதர்க்காகத்தான்! மேலும் இவர்களுக்கும், உண்மைகளுக்கும் தொடர்பே இல்லை என்பதை ஏதோ இதை படிக்கும் (புரட்சி கூட்டம் அல்லாத) வெகு சிலருக்கு உணர்த்ததான்!
I feel the purpose has been met! As for you, I certainly will try to find some time and debate with you, if in case it would not be like this blog where people are interested only in things other than debating!
நன்றி
திரு கலகம் மற்றும் திரு இக்சிபுக்ஸ்ஸ் என்ற மேதைகளே, என்னப்பா திரிப்பி திருப்பி தமிழ் மணி, மாங்கனி, கிழிஞ்ச கோனி என்று முக்குறீங்க! சொல்லித்தொலைங்கடா, யார் இந்த ஆளுன்னு. வேற ஒன்னும் இல்ல அவருகிட்ட போயி உங்கள எப்போவோ இவுக ஆப்படிச்சாங்கலாம், இப்போ நான் அடித்துக்கொண்டிருக்கிறேன், தனி ஆளா, கொஞ்சம் வந்து பாத்துட்டாவது போங்கன்னு சொல்லத்தான்! சொன்னா வச்சிக்கோங்களேன், அவரு மாலையும் கையுமா வந்து நிக்கப்போராறு! அந்த அளவுக்கில்ல கிழிஞ்சியிருக்கு!
அட நம்ம கலகம் ஐயா வந்துட்டாரு…இத்தோட முடிச்சிக்கலாம் என்று பார்த்தேன், இவரப்பார்த்ததும் கொஞ்சம் குஜால் ஆயிட்டேன்! என்ன திரு வயிறு கலக்கம்..ஆரம்பிக்கலாமா…….என்ன… மனசு அடி அடிங்குது, நேரந்தான் இல்ல!
பார்க்கலாம், மச்சானுக்கு நேரம் வரும்போது அடிச்சி மாட்டுவண்டியல்ல அனுப்பிவைக்கிறேன்! ஐயா இக்சிபுக்ஸ்ஸ், உங்களையும் சேத்துதான்!!!!
நன்றி
//இத்தோட முடிச்சிக்கலாம் என்று பார்த்தேன், இவரப்பார்த்ததும் கொஞ்சம் குஜால் ஆயிட்டேன்! என்ன திரு வயிறு கலக்கம்..ஆரம்பிக்கலாமா…….என்ன… மனசு அடி அடிங்குது, நேரந்தான் இல்ல!
பார்க்கலாம், மச்சானுக்கு நேரம் வரும்போது அடிச்சி மாட்டுவண்டியல்ல அனுப்பிவைக்கிறேன்! ஐயா இக்சிபுக்ஸ்ஸ், உங்களையும் சேத்துதான்!!!! // supper comedy i like it!!!!!!!!!!!
Sorry No! You’ve mistaken… Your purpose -as you claim- is as dubious as your accusation, People will forget you and your so called “expose” and like many in your shades you too will sink without a trace… I expected you to start your discussion and prevail. You failed me. I’ll miss you 🙁
திரு மரண அடி, திரு இறங்குவான் போன்றவர்களெல்லாம் இதில் அடக்கம்! கண்டபடி முதலில் ஏசுவார்கள்… நாயே, பேயே, அடிவருடி……etc
இந்த கோஷ்டி அடித்தும் ஆளு அடங்கலையா, கூப்புடு அடுத்த கும்பல!//
எப்படீங்க, இன்னும் உங்க வசனத்த மறக்கவே இல்லை.தினமும் நடக்கிறதுதானே.
எப்படி மறப்பீங்க.
Mr.NO இன்னொரு வசனத்த மரந்துட்டீங்களே.
”NO NO… மம்மி பாவம்… NO NO டாடி பாவம்.அய்யோ Total Family Damage..
I NO “Mani”. IM NO. Came for 2 Pieces”
சான்சே இல்ல. பொல்லாத போக்கிரி சார் நீங்கள்.
எவ்ளோ அடிச்சாலும் தாங்குரீங்க. நீங்க ரொம்ப நல்லவருங்க.
”அஸ்கு புஸ்கு அப்பள வடன்ன” பேசி சூப்பரா சதாய்கிறீங்க. காமெடியெல்லாம் பண்ரீங்க.
//நீங்கள் யாரென்று எனக்கு தெரியாது சார்! நான் இங்கே வந்தது, வினவு என்னும் self proclaimed geniusகள் இருக்கும் இடத்தை பார்பதர்க்காகத்தான்! மேலும் இவர்களுக்கும், உண்மைகளுக்கும் தொடர்பே இல்லை என்பதை ஏதோ இதை படிக்கும் (புரட்சி கூட்டம் அல்லாத) வெகு சிலருக்கு உணர்த்ததான்!//
ஆமா அவரு யாருன்னு தெரிஞ்சா இவுரு சும்மா கீசுடுவாரு.
நாராயணா இந்த கொசு தொல்ல முடியலடா…
காமெடி பீசு. சும்மா காமெடி மட்டுந்தான் பண்ணனும், ரேஞ்சுக்கு மீறி கதாநாயகன் வசனெல்லாம் பேசகூடாது புரியுதா.
கிளம்பனும்னு கிலி வந்துச்சு.அப்பறம் என்ன உங்க வழக்கமான வசனத்த
(ம்ம்.. இன்னும் என்ன வேடிக்க. Start Pannunga) சொல்லுங்க.நாங்க ஆரம்பிக்கிறோம்.
ஜில் உன்னால முடியும் ஜில்..
குடிகாரன் ரோட்டில் நின்று சத்தம் போட்டுக் கொண்டிருப்பான் , யாராவது எதிர்த்து பேச தொடங்கினால் ங்கொம்மா … என தொடங்கி விடுவான் , அப்புறம் யார் அவனுடன் பேசுவார்கள் ?
இத பாத்தியா என்ன கண்டு பயந்து ஓடிட்டான் என சொல்லிக்கொள்வான் ,
அப்படியே பேசுகிறது இந்த மனநலம் பாதிக்கப்பட கும்பல் . காமடி பதிவுக்ளுக்கெல்லாம் எதிவினை இருக்கும்போது முக்கி முக்கி 3 நாள் பதிவிட்டும் யாரும் எதிவினை புரியாததற்க்கு காரணம் என்ன என்று என்றாவது வினவியது உண்டா ?
ஒரு ஜனநாயக நாட்டில் பிளாக்கிலேயே பேச விடாத அடிப்பொடிகளே இப்படி என்றால் ஸ்டாலினும் மாவோவும் என்ன கம்மியாகவா செய்திருப்பார்கள் ?
நீ சொல்றது ஒன்னும் புரியலையே மதி கண்ணு ?
பதிவுக்கு பின்னூட்டம் வரலையா
குடிகாரன் மாதிரி அலம்பல் பன்னிட்டு
ஓடாம விவாதத்துக்குள்ள
குதி உங்க அண்ணனுக்கு ஆதரவாவது இருக்கும்.
இப்படி தனியா நின்னு பொலம்ப உட்டுடானே, ஏய் புலவா !
—–கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்
ஒரு வழியா கிளம்பிட்டாய்ங்க போல..
காலையிலிருந்து நல்லா வருதே காத்து !
அய்யா NO
நாம் இங்கே விவாதிப்பது கம்யூனிசம் பற்றி இல்லை,இல்லை
இல்லவே இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
கம்யூனிசம் கொடுமையானது,சர்வாதிகாரம்,பயங்கரவாதம் என்கிற
உங்களுடைய ஆடுகளுக்காக அழும் மனிதாபிமானம் எல்லாம்
தற்போது எங்களுக்கு தேவை இல்லை.உங்களுடைய கூற்றுப்படி
கம்யூனிசம் அப்படியான சர்வாதிகாரமாகவே இருக்கட்டும் தோழர்
ஸ்டாலின் சர்வாதிகாரியாகவே இருக்கட்டும் ஆனால் இப்போது
நடப்பது ஒன்றும் கம்யூனிச ஆட்சி அல்லவே அதுவுமல்லாமல் உங்கள் கணிப்பின் படி கம்யூனிசம் என்பது கவைக்குதவாத ஒன்று அது
நடக்க முடியாத கற்பனை என்றெல்லாம் இருக்கும் போது
நீங்கள் அதைப் பற்றி ஏன் கவலை படுகிறீர்கள் ?
எனவே நாம் இப்போது இங்கே விவாதிக்க வேண்டியது கம்யூனிசத்தை
பற்றி அல்ல முதலாளித்துவத்தின் பயங்கரவாதத்தை பற்றி தான் நாம்
பேச வேண்டும்.
இதை நான் உங்களுக்கு தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டிருக்கிறேன்
ஆனாலும் நீங்கள் மீண்டும்,மீண்டும் பழைய கதையையே பேசுவதன் மூலம்
இதிலிருந்து தப்பலாம் என்று கனவு காணாதீர்கள்.
இதற்கு பதில் சொல்லுங்கள்
பிறகு கம்யூனிச சர்வாதிகாரம் பற்றி
பேசலாம்.
தோழர்களுக்கு மணியோசை கேட்கிறதா ?
அய்யா
நாம் இங்கே விவாதிப்பது கம்யூனிசம் பற்றி இல்லை,இல்லை
இல்லவே இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
கம்யூனிசம் கொடுமையானது,சர்வாதிகாரம்,பயங்கரவாதம் என்கிற
உங்களுடைய ஆடுகளுக்காக அழும் மனிதாபிமானம் எல்லாம்
தற்போது எங்களுக்கு தேவை இல்லை.உங்களுடைய கூற்றுப்படி
கம்யூனிசம் அப்படியான சர்வாதிகாரமாகவே இருக்கட்டும் தோழர்
ஸ்டாலின் சர்வாதிகாரியாகவே இருக்கட்டும் ஆனால் இப்போது
நடப்பது ஒன்றும் கம்யூனிச ஆட்சி அல்லவே அதுவுமல்லாமௌங்கள் கணிப்பின் படி கம்யூனிசம் என்பது கவைக்குதவாத ஒன்று அது
நடக்க முடியாத கற்பனை என்றெல்லாம் இருக்கும் போது
நீங்கள் அதைப் பற்றி ஏன் கவலை படுகிறீர்கள் ?
எனவே நாம் இப்போது இங்கே விவாதிக்க வேண்டியது கம்யூனிசத்தை
பற்றி அல்ல முதலாளித்துவத்தின் பயங்கரவாதத்தை பற்றி தான் நாம்
பேச வேண்டும்.
இதை நான் உங்களுக்கு தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டிருக்கிறேன்
ஆனாலும் நீங்கள் மீண்டும் மீண்டும் பழைய கதையையே பேந்சுவதன் மூலம்
இதிலிருந்து தப்பலாம் என்று கனவு காணாதீர்கள்.
இதற்கு பதில் சொல்லுங்கள்
பிறகு கம்யூனிச சர்வாதிகாரம் பற்றி
பேசலாம்.
தோழர்களுக்கு மணியோசை கேட்கிறதா ?
நோ அவர்களே,
விவாதத்தில் பங்கு பெறும் நண்பர்கள். தோழர்கள் அனைவரையும் வினவின் அவதாரங்கள் என்று ஒவ்வொரு முறையும் சந்தேகப்படுவது எதனால்? இத்தளத்தில் ஏற்கனவே சிலமுறை சொல்லியிருப்பது போல வினவு தனது கருத்துக்களை வினவின் பெயரில் மட்டும்தான் வெளியிடும், வேறு பெயர்களில் வெளியிடாது என்பதை மீண்டும் நினைவு படுத்துகிறோம்.
இருப்பினும் கம்யூனிசத்திற்கு ஆதவராக இத்தனை நபர்கள் வரவாய்ப்பில்ல எனநீங்கள் நினைப்பது போலத் தெரிகிறது. ஆனாலும் அப்படி வருகிறார்கள் என்ற உண்மையையும், முதலாளித்துவத்திற்கு ஆதரவாக அப்படி ஒரு படை கிளம்பவில்லை என்பதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? வேண்டுமென்றால் உங்கள் தரப்பில் இருந்து கொண்டு நீங்கள் கேட்க விரும்பும் ஆனால் தெரியாத கேள்விகளை நாங்கள் வேண்டுமானால் இன்னும் கூர்மையாக கேட்கட்டுமா? இதைத் தவிர உங்களுக்கு உதவுதற்கு வேறு வழி தெரியவில்லை.
நீங்கள் தமிழ்மணி இல்லையென்றும் பதிவுலகில் உங்களைப் பற்றி யாருக்கும் தெரியாது என ஒத்துக்கொண்டதிலிருந்து இப்படி முக்காடு போட்டுக்கொண்டு வருவதை விட நான் இன்னார் எனத் தெரிவித்தால் எல்லோருக்கும் உதவியாக இருக்கும். இதனால் உங்களுக்கு ஒன்றும் ஆகிவிடாது. அதியமானையே எடுத்துக் கொள்ளுங்கள் அவர் கம்யூனிசத்தை கட்டோடு வெறுப்பவர், முதலாளித்துவத்தை ஒரு மதத்தை போல நேசிப்பவர், அவர் கூட ஒரிஜனல் பெயரில்தான் வந்து விவாதிக்கிறார். இதை ஒரு முன்னுதாராணமாக எடுத்துக் கொண்டு முக்காட்டை திற்க்கவும்.
மற்றபடி கம்யூனிசம் குறித்த அரதப்பழசான விசயங்களையே சஷ்டி கவசம் போல பாடிக்கொண்டிருப்தை விட முதலாளித்துவம் நேர்மறையில் நல்லது என்ற கோணத்தில் நிருபீப்பதற்கு தாங்கள் முயல்லாமே? கம்யூனசத்தை கேள்வி கேட்பதை விட முதலாளித்துவத்தை நிலைநாட்டுவதற்கு மெனக்கெடலாமே? அதை விடுத்து ஹெகல், பெரியா என உங்களால் ஜீரணிக்க முடியாத விசயங்களை எல்லாம் பேசி வயிற்றை கெடுத்துக் கொள்வானேன்? உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்வதற்கு ஜெயமோகன், தமிழ் மணி அன் கோ, ரவி ஸ்ரீனிவாஸ் முதலான அறிவாளிகளெல்லாம் இருக்கும் போது இப்படி தனிமை உணர்ச்சிக்கு ஆட்பட்டால் எப்படி? தைரியமாக இன்னார் என அறிவித்து விட்டு இன்னதுதான் என பேசுங்கள், நன்றி
இருநாட்கள் இணையப்பக்கம் வரவியலாத காரணத்தால் இந்த மறுமொழியை தாமதமாக வெளியிடுகிறோம், மன்னிக்கவும்.
மதி இண்டியா, நோ(வு), தமிழ் மணி போன்ற முதலாளித்துவ பைத்தியங்களுக்கு,,,,
superlinks,,,கேட்டதுக்கு நேரா பதில் சொல்லாம ஏண்டா பம்பறீங்க
கம்யூனிசத்த விடுங்கடா அதுக்கு மாற்று என்ன சொல்லுங்கடானா
வெங்காயம், வெள்ள பூண்டுணு உளர்ரீங்களேடா?
தோழர்களே இந்த மதி இண்டியா, நோ(வு), தமிழ் மணி போன்ற
லூசுப்பசங்களுக்கு பதில் சொல்லி டைம் வேஸ்ட் பண்ணாதிங்க,
குடிகார நாய்ங்களுக்கெல்லாம் பதில் சொல்லிட்டுருந்தா எப்டி?
நோ, மதி அவர்களே,
க்ம்யூனிசம் ஒட்டு மொத்த மக்களுக்கானது (உங்களையும் சேர்த்துதான்). உங்கள் முதலளித்துவம் உங்கள் 10 பேருக்கு மட்டுமானது.க்ண்முன்னே தெரியும் ஓர் உதாரணம்: அமெரிக்கா திவாலாகி மக்கள் நடுத்தெருவில் நிற்கும்போது அமெரிக்க அரசு தனியார் நிறுவனங்களுக்கே நிதி அளித்தது.
திரு நோ:
செயட்கீஸ்ட், கான்ட், ஹெகல், டையலக்டிஸ், தத்துவம், முலதனம், இன்ன பிற விடயங்களை பற்றியெல்லாம் உலகின் இளங்களை முதுகலை சமூகவியல் மாணவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும், நீங்கள் இதை எதர்காக தெரிந்து கொன்டீர்கள் என்பது எனக்கு தெரியாது., ஆனால் காலம்காலமாக வறுமையில் உழன்று, அடிமைத்தனத்தை அனுபவிக்கும் படிப்பரிவில்லாத கோடிக்கணக்கான பேர்கள் வாழும் இந்த நாட்டில் நாங்கள் கம்யூனிஸ்டுகளாக மாற பல காரணங்கள் உண்டு அவை உங்கள் பட்டியலில் எங்கும் இல்லை
நீங்கள் நல்லவர் இந்த உலகின் பிரச்சனையெல்லாம் தீர்க்க விரும்பும் ஒரு புனித ஆத்மா என்று நான் நம்புகிறேன், நான் கூட அப்படித்தான்…. ஒன்று செய்யுங்களேன் பசி, பஞ்சம், ஆட்குறைப்பு, வறுமை, சாதி ஒடுக்குமுறை, பெண்னடிமைத்தனம், முடப்பழக்கங்கள், மதக்கலவரங்கள், அழிந்து போகும் விவசாயம், அரசியல்வாதிகளின் பொய்மை, ஜனநாயகம் எனும் பெயரில் லாட்டரி, கொத்தடிமை வேலை முறை….. இவைகளைப் பற்றியும் இன்னமும் இன்றைய சமூக அவலங்களுக்கு தீர்வாக கான்ட், ஹெகல், டையலக்டிஸ், தத்துவம், முலதனம், இன்ன பிற விடயங்களை ஆராய்ந்து நீங்களே தீர்வாக ஒரு வழியை காட்டுங்கள், அல்லது சத்திய, காந்திய, வள்ளுவர் வழியில் இன்றைய சமூக அவலங்களை எப்படி தீர்க்கப்போகிறீர்கள் என்றாவது சொல்லுங்கள். அதைவிடுத்து நபர்களை பற்றிய விமர்சனங்களுக்குள் நீங்களும் போக வேண்டாம், மற்றவர்களும் உங்கள் நதிமூலத்தை ஆராய வேண்டாம்.
விவாதத்தை துவங்குவோமா
மேலும் கொள்கையை பற்றி கேட்டீர்கள் அல்லவா, இதோ சொல்கிறேன் கேளுங்கள்!
எனக்கு மட்டும் அல்ல, எந்த ஒரு மனிதனுக்கும் இந்த கொள்கை இருந்தால் போதும், நாடும் வீடும் உருப்புடும்! இதை விட்டுவிட்டு உங்களைப்போல imported ideology எல்லாம் கண்டிப்பாக தேவையே இல்லை!
” உண்மை மட்டுமே பேசி மற்ற உயிர்களை துன்பப்படுத்தாமல் வாழு ”
அவ்வளவுதான் Sir!
—–உண்மையான தத்துவ மேதை திருவாளர் ‘நோ’
ஆனால் மாமா மன்மோகன் மற்றும் சின்ன மாமா பி.முகர்ஜி
போன்ற மாமாக்கள் இந்த நாட்டு மக்களுக்கே தெரியாமல்
திருட்டுத்தனமாக அமெரிக்க அத்தானுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு
அந்த அடிமைச்சாசனத்தால் நம் நாட்டுக்கு நல்லது என்று மூட்டை மூட்டையாக பொய் பேசுவார்கள். ஆனாலும் நம்முடைய தத்துவ குருஜி
‘நோ’ அவர்களின் உண்மையை மட்டுமே பேசி உயிர்வாழும் கொள்கைப்படி
அதையெல்லாம் நாம் உண்மைகளாகவே கான வேண்டும்.
என்னங் மணின்னா நாஞ்சொல்றது சரிங்ளா
அன்பான நண்பர் அரை டிக்கெட்டு மற்றும் திரு வித்தகன் அவர்களே,
திரு அரை, இங்கே வந்தது, நீங்கள் கடைசியாக சொன்னதை விளக்குவதற்காகத்தான் மற்றும் திரு வித்தகன் எழுதிக்கொண்டிருக்கும் இந்த கதையில் ஒன்று விடப்பட்டுவிடும் என்று நம்புவதால்!
திரு அரை, தெளிவா கேட்டுகங்க, my intentions are neither dubious nor meaningless. There is one blogger that knows that I will be doing this to Vinavu for a week (today being the last) which means that my intention was not out of the blue! நீங்கள் எல்லோரும் ஒன்றும் இல்லாத ஒன்றை பிடித்துக்கொண்டு, என்ன சொன்னாலும் எதுவும் கேட்க மனமில்லாமல், reality கே துளியும் தொடர்பில்லாமல், கொழப்பத்திற்கு அடிமையாய் போய், மத தீவிரவாதிகளை விட, dogmatism முத்திப்போய், கையில் கிடைத்த, உங்களுக்கு கொஞ்சமாக புரிந்த ஸ்டாலினிச கதைகளை மட்டுமே படித்து இதுதான், உலகம், நாங்கள்தான் திருத்தப்பிறந்தவர்கள், என்று self delude ஆன, Marxist automatons என்பது என் கருத்து மட்டும் அல்ல! எல்லோரும் புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள், உங்கள் புரட்சி கோஷ்டியை தவிர! என்ன, சொல்வதற்கு பயம், அதான் கண்டபடி திட்டுவீர்களே என்று! Thats why I took a lead and showed them what you are….just a big lie, right in the lines of Mao and Stalin!!! Added, happend to hear that my demolition job was more than adequate! Hence the remark, the purpose has been met!
Comming to your point about விவாதம், எத்தனை முறை சொல்வது சார் – Debating with you people is like tryiing to reason with somebody who is convinced that the world is flat! Added to that you guys are not programmed to debate but just to debase any one that doesnt agree with your plainly wrong dogma! இந்த தளத்தில் ஒருவர் மனிதன் 6000 வருடமாகத்தான் இந்த பூமியில் வாழ்கிறான் என்று நான் நம்பிகிறேன் என்பதைப்போல! That gentleman is someone akin to a creationist who will not beleive in anything than the literal words of their holy book! அவர்களை மாற்றுவது ரொம்ப கடினம்! உங்களைப்போல!
அப்புறம் உங்கள் கூட்டம் நினைப்போது போல communist சித்தாந்தங்களை தாக்குபவர்களேல்லாம், மதவாதிகளோ அல்லது நீங்கள் சொல்லும் ஆதிக்கவாதிகளோ அல்ல! ஒங்க ஆளு ஒருத்தர் உளறுகிறார் (திரு வினவையும் சேர்த்து), Kant, Hegel எல்லாம் நீங்க ஏன் படிச்சீங்க, கிழிச்சீங்க என்றெலாம்! ஒன்று புரிந்துகொள்ளுங்கள், Freedom from tyranny, creating benovent social systems, knowledege, understanding, enlightenment போன்றவைஎல்லாம் communists கள் மட்டும் குத்தகை எடுத்துக்கொண்டது அல்ல! எல்லா மதவாதிகளும் சொல்லவதுபோல, இதுதான் வழி இல்லையேல் உங்கள் தலையில் என் இரும்புக்கழி என்று நீங்களும் இருப்பதால், மற்ற நல்லவைகள்ளேல்லாம் உங்கள் கண்களில் தெரியவில்லை! தெரியாது!
சொல்ல்வது என்னவென்றால், நானும், என்னைப்போல பலரும் எல்லாவிதமான
Philosophy யும் படித்திருக்கிறோம் கம்யுநிசம் உட்பட!
For example, ஸ்டாலின்னைப்பற்றி எனக்கு தெரிந்தது சத்தியமாக உங்களுக்கோ அல்லது உங்கள் நண்பர்களுக்கோ தெரியாது! நான் சுமார் இருபது வருடமாக அதைப்பற்றி படித்திருக்கிறேன்! His life, his background, his rise to power, his family, his men, his power structure, his follies……………. ஒன்று சொல்கிறேன், ஸ்டாலின் எழுதிய புத்தகங்களை, உலகில் எல்லா நாடுகளும் (சோவியத் ரஷ்ய உட்பட) தங்கள் நூலகங்களிலிரிந்து வீசி எரிந்த பின்னும், சென்னை கன்னிமாரா நூலகத்தில் மட்டும் ஒரு 1944 ed ition இருந்தது (இது 1988 இல்) ! நாலு அல்லது ஐந்து பகுதிகள் என்று நினைக்கிறேன் – இப்போ அங்க இருக்கிறதா என்று தெரியாது !
நான் ஸ்டாலினைப்பற்றி, அதி தீவிர ஸ்டாலின் பக்த்தர்கள் எழுதியதையும் நெறையா படித்திருக்கிறேன்! அது மட்டும் அல்ல, Rosa Luxemberg முதல், Charu Mazumdar வரை உங்களோடு debate செய்ய முடியும் – without any preparation! நான் மட்டும் அல்ல, என்னைவிட பல மடங்கு அதிகம் படித்த, புரிந்த, உணர்ந்த மிக பலர் இருக்கிறார்கள்! என்ன, அவர்கள் எல்லாம், தங்கள் நேரத்தை
இந்த மாதிரி போகாத ஊருக்கு வழிதேடுபவர்களிடும் வீணாக்க விரும்புவது இல்லை! அதான் நண்பரே, உங்கள் தளத்திற்கு, உங்களின் தீவிர ஆதரவாளர்களை தவிர யாரும் வருவது இல்லை, உங்களை கண்டனம் செய்ய முயற்சிப்பதும் இல்லை! Hence that gives you an illusion of you guys getting some sort of an acceptance in the society which plainly is so naive! எல்லாவற்றியும் எடை போட்டுத்தான் சொல்ல்கிறேன் நண்பரே, you guys are living in a fools paradise without understanding anything!
நண்பர் திரு வித்தகன் அவர்களே – மதத்தை பற்றி எழுதுவது OK. அதுவும் ஆப்ரகாமிய மதம் பற்றியெல்லாம் வேற எழுதப்போறிங்க போல இருக்க! சிலை வழிப்பாடுன்னு வேற சுட்டிகட்டிடீங்க, so almost எல்லா மதத்தையும் கவர் செய்கிறீர்கள் போன்ற தோற்றத்தை கொடுத்துள்ளீர்கள்! ஆனால் ஒன்று மட்டும் missing Sir – ஏன் சார் உங்க கம்யூனிச மதத்தைப்பற்றி ஒண்னும் எழுத மாட்டேன் என்கிறீர்கள்?? அதான் கடைசியாக மனிதன் படைத்த மதம் சார்! அது இல்லேன்னா இந்த மதங்கள் உருவான கதை கண்டிப்பாக முழுமை பெறாது!
இதில நீங்க வேற Richard Dawkins பெயர போட்டிருக்கீங்க! அவர் எழுதிய God delusion பற்றி மட்டும் எழுதுவீங்களா இல்லாட்டி அவர் எழுதிய The selfish gene, Unweaving the rainbow, The blind watch maker, Rivers out of Eden போன்ற மற்ற புத்தகங்களைப்பற்றயும் reference உண்டா???? மதத்தைப்பற்றி இவ்வளவு எழுதப்போற நீங்க சமகாலத்தில் Religious நம்பிக்கைகளை கடுமையாக விமர்சித்த ஒரு முக்கியமான மூன்று நபர்களை பற்றி reference கொடுக்கவில்லையே?
அந்த மூவர் – Professor Daniel C Dennett, Christopher Hitchens and Sam Harris! இவர்களளுடன் Dr. Dawkins ஐ சேர்த்து the four Horesemen என்று சொல்லுகிறார்கள்!
சரி இதையெல்லாம் ஏன் நான் உங்களுக்கு சொல்லுகிறேன் என்றால், உங்கள்ளின் மற்றும் வினவில் உள்ள மற்றவரின் Logic படி கம்யுநிசத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம் இவர்களையும் எதிர்ப்பார்கள், எனென்றால், அவர்களெல்லாம் மதவாதிகள்! In black and white – Either you love communists else you are a religious fanatic & பிற்போக்குவாதி!!
புரிந்துகொள்ளுங்கள், கம்யுநிசத்தை எதிர்ற்பவநெல்லாம் மதத்தை ஆதரிப்பவன் கிடையாது! நீங்கள் நம்புவதுபோல் பிர்போக்குவாதியும் கிடையாது!
For your information there are thousands of anti communists and anti Stalinists like me that are also great admirers of people like Dawkins and Dan Dennett who themselves are outspoken and articulate atheists!
நேரம் கிடைத்தால் Dennett இன், Breaking the Spell – Religion as a Natural Phenomenon படியுங்கள். பின்னர் நீங்கள் எழுதப்போகும் கப்சாவை தொடருங்கள்! ஏன் கப்சா என்று
சொல்லுகிறேன் என்றால், எப்பொழுது நீங்கள் ஸ்டாலினையும் Marx ஐயும் தலையில் தூகிவைத்து கடவுள் போல ஆடுகிரீர்களோ, அப்பொழுதே, மதத்தை விமர்சிக்கும் தகுதியை இழந்து விட்டீர்கள்!
இதுதான் கடைசி, இத்தோடு முடிந்தது கொண்டு விடைபெறுகிறேன்!
நன்றி
நீங்கள் பிரின்ஸ்டன் யுனிவர்சிடியிலுள்ள 6 மில்லியன் புத்தகத்தையும் படித்து கரைத்து குடித்தவராகவே இருங்கள், அதனால் என்ன? உங்கள் குன்றின் மேலிட்ட விளக்கான அறிவைக்கொண்டு மக்களின் துன்பங்களிலிருந்து விடுதலை வாங்கித் தாருங்களேன். அந்தோ! ஏட்டுச் சுரைக்காயை கொண்டு குழம்பாக்க முடியாதே நோ!
ஆனால் கம்யூனிஸ்டுகள் உங்களைப் போன்ற மேதாவிகளல்ல, மக்கள் மத்தியில் சாதாரணமாக வாழ்ந்து , மக்களுக்காக போராடி, மக்களுடனே மடிபவர்கள், உங்கள் ஆர்பாட்டம்மான அலங்காரங்களுடைய வார்த்தையை விட ஒன்றுமே தெரியாத எங்கள் விவசாய தோழரின் வார்த்தைக்கு ஊருக்குள் மதிப்பு அதிகம். அதுதான் உண்மை.
நீங்கள் பாடிவரும் கம்யூனிச அவதூறுகளை தயவு செய்து மாற்றிப்போடுங்கள், ரெக்கார்டு கிழிந்து விட்டது. இன்னமும் நீங்கள் தொட்டிருப்பது 0.00001% அளவு கூட இல்லை. இன்றைய அவதூறு நாளைய அடக்குமுறையாக மாறும் பொழுது உங்கள் முதலாளித்துவ ஜனநாயகம் உங்களை ‘மட்டும் ‘விட்டு வைக்கமா?
உங்களிடமிருந்து அளவுக்கு அதிகமான இலவச அறிவுரைகள் பெற்றுக் கொண்டு விட்டதால் எனக்குள் குற்ற உணர்ச்சி அதிகமாகி விட்டது. என் சார்பில் உங்களுக்கு பதில் அறிவுரைகள் இரண்டே இரண்டு.
//புரிந்துகொள்ளுங்கள், கம்யுநிசத்தை எதிர்ற்பவநெல்லாம் மதத்தை ஆதரிப்பவன் கிடையாது! நீங்கள் நம்புவதுபோல் பிர்போக்குவாதியும் கிடையாது!//
1. மதத்தை எதிர்ப்பவன் எல்லாம் கம்யூனிஸ்ட் கிடையாது. கம்யூனிஸ்டாக இருந்தாலும் தப்புக் கிடையாது. இதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
2. மூச்சு விடாமல் பேசினால் மற்றவர்களுக்கு எரிச்சல்தான் வரும். மொத்தமாக மனப்பாடம் செய்து ஒப்பிக்காமல், பதில் என்ன வருகிறது என்று காது கொடுத்துக் கேட்டு விட்டு அதன் பிறகு பேசுவதுதான் நாகரீகம்.
//இதுதான் கடைசி, இத்தோடு முடிந்தது கொண்டு விடைபெறுகிறேன்!//
எனக்கென்னமோ நம்பிக்கையில்லை. திரும்ப ஏதாவது சொல்லியே தீருவீர்கள் என்று பட்சி சொல்லுகிறது.
நோ,
ஒரு வழியாக நீங்களே பிரகடனப்படுத்தியிருக்கும் இறுதி முழக்கத்தில் ஸ்டாலினை இருபது வருடம் படித்தேன், ஆய்வாளன், பல ஆங்கில நூல்கள் என வாசகரை அச்சுறுத்தும் நோக்குடன் அதாவது இவ்வளவு படித்த பீதாம்பரம் என கர்வம் தலையை விட்டு எகிறும் அளவுக்கு படு ஆபாசமாக மண்டைக் கனத்தை வீசிவிட்டு போயிருக்கீறீர்கள். இந்த ஆபாசம் வேதம், உபநிடதங்களை எத்தனையோ ஆண்டுகள் மன்னம் செய்து தன்னை மாபெரும் அறிவாளி போல சுய இன்பம் காணும் பஞ்சாங்கப் பாரப்பானுக்கு உள்ள திமிரேயன்றி வேறல்ல.
இவ்வளவு படித்து புழுத்த பீதாம்பரம் ஸ்டாலின் சரியில்லை, கம்யூனிசம் மதம் என்றெல்லாம் கூவுகிறதே அன்றி இதற்கு மாற்று என்ன என்பதை தந்திரமாக அக்குளிக்குள் ஒளித்து வைத்திருக்கிறது. அய்யா ஸ்டாலின் காலத்திற்கு போவது இருக்கட்டும், ஈராக்கில் ப்த்து இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களைக் கொன்ற கிளிண்டன், புஷ் இவர்களெல்லாம் மனித குலம் போற்றத்தக்க மகான்களா? குஜராத்தில் 2000 முசுலீம்களை இனப்படுகொலை செய்த மோடி, அந்த கட்சியின் அத்வானி இவாளெல்லாம் யாருங்க? அதென்ன படுகொலை என்றால் ஸ்டாலின்தான் உங்கள் நினைவுக்கு வருகிறார் என்றால் நீங்கள் நிச்சயம் ஒரு மனவிகாரம் கொண்ட நபராகத்தான் இருக்க முடியும்.
கண்டதை தின்று எல்லாம் கழித்து பாதுகாப்பாக மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் நோ போன்ற மேதைகள் பொழுதுபோக்காக கம்யூனிசம் படித்தார் என்றால் நடிகை ரம்பாவுக்கும் கம்யூனிசம் தெரியும் என்று நினைத்து கொள்ளவேண்டியதுதான்.
மனிதகுலத்தை முதலாளித்துவத்தின் ஒடுக்குமுறையிலிருந்து மீட்கவேண்டும் என்ற கடமையை வாழ்க்கையாக கொண்டு வாழும் கம்யூனிஸ்ட்டுகள்தான் உண்மையில் மார்க்கசியத்தை கற்றுத் தேற முடியும்.
ஆங்கிலம், பெயர்கள், நூல்கள் மூலம் சுய இன்பம் காணும் நோவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதற்கு நாமும் அதே வழிமுறையைத்தான் செய்ய வேண்டியிருக்கிறது. இவை நோவுக்கான அறிவு சீவிஇஇஇஇஇஇஇஇஇஇஇ கேள்விகள்.
1. சிந்தனைக்கு வழியில்லாத போது வார்த்தைகள் நேசிக்கத்தக்கதாக இருக்கிறது என்ற பிரெஞ்சு பழமொழியை காரல் மார்க்கஸ் மூலதனத்தில் குறிப்பிடுவது எதற்காக?
2.கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்சும், ஏங்கெல்சும் முதலாளித்து சமூதாயத்திற்கு முந்தைய சமூகங்களில் படிநிலை அமைப்பு இருக்கும் என்று குறிப்பிடுவதன் விளக்கம் என்ன? அதை இந்திய நிலைக்கு பொருத்த முடியுமா?
3. ஒரு நாட்டின் மக்கள் தொகை, இயற்கைவளம், மொத்த வருமானம், தனிநபர் வருமானம், மொத்த உற்பத்தி முதலான புள்ளி விவரங்களைக் கொண்டே ஒரு நாட்டின் பொருளாதார நிலையை இன்றைய முதலாளித்துவ அறிஞர்கள் விளக்குகின்றனர். ஆனால் மார்க்ஸ் இதை அடியோடு மறுத்து வேறு ஒரு ஆய்வை தருகிறார். எது, ஏன்?
4.சரக்கு உருவாக்கும் பொய்யுணர்ச்சி என மார்க்ஸ் மூலதனத்தில் குறிப்பிடுவது எதை?
5. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ஆலன்கீரீன் ஸ்பேன் முதலாளித்துவத்தின் அமலாக்கங்கள் அனைத்தும் எல்லா அழிவுகளையும் கொண்டு வந்திருக்கிறது எனக் கூறியிருப்பது எதற்காக?
6.முதலாளித்துவ சமூகத்தை உள்ளிருந்து அரிக்கும் 2 முரண்பாடுகள் என மார்க்ஸ் குறிப்பிடுவது எவற்றை? இவற்றை தவிர இன்றைய முதலாளித்துவ வீழ்ச்சிகளை விளக்குவதற்கு வேறு ஏதும் உள்ளதா?
7.லூயி போனபர்ட்டின் பதினெட்டாம் பூரூமர் நூலில் காரல் மார்க்ஸ் வரலாற்றின் சூழ்நிலையில் ஒரு லும்பன் அரசைக் கைப்பற்றுவதை விளக்குவது என்ன வகையான ஆய்வு?
8.வரலாற்றில் தனிநபரின் பாத்திரம் என பிளக்கானோவ் எவற்றைக் குறிப்பிடுகிறார்?
9.ஒரு மனிதனின் தனிநபர் ஒழுக்கம்,அவனது சமூக ஒழுக்கம் இரண்டில் அவனைப் பற்றி மதிப்பிடுவதற்கு எதை அளவுகோலாக பயன்படுத்த வேண்டுமென பிளக்கானோவ் கூறுகிறார், ஏன்?
10. கலை, அறிவியல், மொழி, மதம் அனைத்தின் தோற்றத்தை மார்க்கிசிய நோக்கில் முரண்படாமல் விளக்கிய இங்கிலாந்து மார்க்சிய அறிஞர் ஜார்ஜ் தாம்சனை மறுக்கும் ஆய்வு ஏதாவது உண்டா?
11. ஸ்டாலினின் ஆட்சிகாலத்தில் கம்யூனிச விரோதிகளை நீக்குவதற்கு நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை மாவோ விமரிசித்து விட்டு அதற்கு மாற்றாக சீனாவில் எதை அறிமுகப்படுத்துகிறார்?
12 மறுமலர்ச்சி கால மனிதர்களை மனிதகுலத்தின் மாபெரும் மனிதர்கள் என ஏங்கெல்ஸ் வருணிப்பது ஏன்?
13. ஆரம்பத்தில் ரோமாபுரி சாம்ராஜ்ஜியத்தின் அடிமைகளை விடுவிக்க வந்த கிறித்தவம் பின்னர் ஆளும் வர்க்கத்தின் மதமாக மாறியதற்கு காரணமென மார்க்ஸ் குறிப்பிடுவது எதை?
14. புருதோன் எழுதிய வறுமையின் தத்துவம் என்ற நூலுக்கு மாற்றாக தத்துவத்தின் வறுமை எழுதிய மார்க்ஸ் தனது நூலில் என்ன விளக்கமளிக்கிறார்?
15 கோத்தா வேலைத்திட்டத்திற்கு மறுப்பு என்ற நூலில் தொழிலாளி வர்க்கத்தின் அறிவியல் பூர்வமான கண்ணோட்டமென மார்க்ஸ் குறிப்பிடுவது எவற்றை?
16 மார்க்சின் மூலதனம் நூலை பதிப்பதற்காக ஏங்கெல்ஸ் கைவிட்ட ஆய்வு நூல் எது?
17. பொதுவுடமை காலத்தில் சமூகத்தில் நிலவும் பாலியல் ஒழுக்கம் என ஏங்கெல்ஸ் எதைக் குறிப்பிடுகிறார்?
18.முதலாளித்துவ அரசுக்கும் பாட்டாளி வர்க்க அரசுக்கும் உள்ள வேறுபாடுகளென லெனின் குறிப்பிடுவது என்ன?
19 முதலாளித்துவத்தின் உச்சமென ஏகாதிபத்தியத்தை குறிப்பிடும் லெனின் அதற்கு அளித்திருக்கும் வரையறை என்னென்ன?
20. லியோ டால்ஸ்டாயின் இலக்கியம் ரசியாவை பிரதிபலிக்கும் கண்ணாடி என லெனின் கூறியிருப்பது டால்ஸ்டாய் மீதான பாராட்டா, விமரிசனமா, ஏன்?
21சோசலிச இலக்கியத்திற்கும் முதலாளித்துவ இலக்கிய்த்திற்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளென கார்க்கி பட்டியல் இடுவது தெரியுமா?
22. புரட்சிக்கு அடிப்படையாக விளங்கும் போர் தந்திரம், செயல் தந்திரம் இரண்டிற்கும் உள்ள இயங்கியல் உறவை ஸ்டாலின் விளக்கியிருப்பது எதனால் கம்யூனிஸ்டுகளுக்கு முக்கியம்?
23, ரஸ்ஸல், ஜார்ஜ் ஆர்வெல் முதலான எழுத்தாளர்கள் கம்யூனிசத்திற்கு எதிராக உளவு வேலையில் ஈடுபட்டு பிரிட்டீஷ் உளவுத்துறையிடம் ஊதியம் பெற்றுக் கொண்டது அம்பலமானது எந்த ஆண்டு?
24. ரசியாவின் பல வருட இயற்கை மரணங்களை ஸ்டாலின் படுகொலை என போர்ஜரி செய்த அமெரிக்க பேப்பர்முதலாளியின் பெயர் என்ன? இந்த சதியை அம்பலப்படுத்தியது யார்?
25 மெக்கார்த்தியிச காலத்தில் கம்யூனிச ஆதரவாளர்கள் என அமெரிக்கவால் அடக்குமுறைக்கு உள்ளானவர்கள் யார்?
26. ஹிட்லரை வைத்து சோவியத் யூனியனை அழிப்பதற்கு மேற்கத்திய நாடுகள் முயன்றதற்கு காரணம் என்ன?
27. ஸ்டாலினைப் பற்றிய அவதூறுகளை இலட்சக்கணக்கான பக்கங்களில் அள்ளி வீசப்படுவதற்கு முக்கிய காரணம் என்ன?
28. தொழிலாளி வர்க்கம் அதிகமில்லாத விவசாயிகள் அதிகம் வாழம் நாட்டில் புரட்சியை எப்படி செய்ய முடியும் என மாவோ நிரூபித்தார்?
29. முரண்பாட்டில் பகை முரண்பாடு, நட்பு முரண்பாடு குறித்து மாவோவின் விளக்கம் என்ன?
30 கம்யூனிச கட்சி உறுப்பினர்களிடம் நிலவும் தாராளவாதங்கள் என மாவோ பட்டியிலிடுவது பற்றி கூற முடியுமா?
31. தற்போதைய காலகட்டத்தில் மா.லெ கட்சிகள் கூறும் மேல்நிலை வல்லரசு என்பதன் விளக்கம் என்ன?
32. ஸ்டாலினுக்குப் பிந்தைய ரசியா ஒரு சமூக ஏகாதிபத்தியமாக சீரழிந்த்து என மா.லெ கட்சிகள் வரையறுத்த்து ஏன்? சமூக ஏகாதிபத்தியம் என்றால் என்ன?
இந்த கேள்விகளில் ஒரு ஐந்து கேள்விகளுக்காகவது நோ பதிலளித்தால் யெஸ், அவர் சுமாராகவாவது மார்க்சியம் அறிந்திருக்கிறார் என சான்றிதழ் அளிக்கலாம். இல்லையேல் சுய இன்ப சுய மோக சுய கயவ மேதை என்ற பட்டத்தை வினவு சார்பில் வழங்குவோம்.
எனக்கு இதில் ஒரு கேள்விக்கு கூட பதில் தெரியாது. மார்க்ஸிஸத்தில் ஆரம்பப் பாடம் எங்கு ஆரம்பிக்கலாம் என்று எனக்கு மின்னஞ்சல் செய்ய முடியுமா, வினவு? நான் அரசியலில் பங்கெடுக்காவிட்டாலும் அறிவு வளர்ச்சிக்கு உபயோகப் படும்.
வினவின் வாசகர் வித்தகன் இன்னமும் தன்னை ஒரு கம்யூனிஸ்டாக அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை, உங்கள் அதிமேதாவித்தனத்தை பயன் படுத்தி அவசர முடிவுகள் எடுத்து அவரை கம்யூனிஸ்டாக ஆக்கிவிட்டீர்கள். மகிழ்ச்சிதான் .
ஆனால் பெரிய அறிவாளியாக நீங்கள் உங்களை சித்தரித்து கொள்ள எடுத்து வரும் முயற்சிகள் ரொம்ப அற்பத்தனமாக உள்ளது. stop displaying your wares like a cheap whore (மன்னிக்கவும்) போவதாக இருந்தால் போங்களேன் ஏன் இப்படி பக்கம்பக்கமாக தம்பட்டம் அடித்து செவிடாக்குகிறீர்கள்.
உண்மையைச் சொன்னால் உங்களுக்கு தாழ்வு மன்ப்பான்மை. எங்கே நேரடியாக வாதிட்டு பின்னங்கால் முன்னாடி ஓடுபவனின் பிடறியில் இடிக்க (நன்றி செந்தழல் ரவி) ஓடி அவமானப்பட வேண்டிவருமோ என்ற பயத்தில்தான் நீங்கள் ‘கௌரவமாக’ கிளம்ப பார்க்கிறீர்கள். உண்மையில் இதற்கெல்லாம் ஒரிஜினல் அறிவு ஜீவி ரவி சீனிவாஸ் முறைதான் சரிவரும்… அதான் சார் கம்பியை நீட்டுவது. இல்ல சரக்கிருக்குன்னா Prove it. I’m waiting
I’ve been a silent observer of this website for the past twelve months. Though I strongly disagree with many of your viewpoints, I firmly believe that your website is doing a great job of shedding light on some of the most important problems in the society today. Some of your articles have been real eye openers for many people. Keep up the good work.
PS: I like the way you encourage even people with completely different viewpoints to come and argue with you guys.
நோ,
வினவு கேட்டது 32 கேள்விகள்..நான் கேட்கபோவது 7 கேள்விகள் மார்க்ஸ்க்கு பிறகு….
(1) மார்க்ஸியத்திலிருந்து கிளையாக வந்த frankfurt school of thought சொல்வது என்ன?
(2) மார்க்ஸியத்திலிருந்து பல கருத்துக்கிளைகள் உருவானது? அவை எவை? ஏன் உருவானது?
(3) louis althusser சொல்லும் sociology of knowledge என்பது என்ன?
(4) இன்றளவிலும் மார்க்ஸியத்திலிருந்து மட்டுமே பல தத்துவங்களும்/தத்துவாதிகளும் உருவாகுகிறார்கள் ஏன்? ஏன் காந்தியத்திலிருந்து தத்துவம் நீட்சி பெறவில்லை?
(5)அப்படியே காந்தியம் “சர்வ ரோக நிவாரணி” என்றால், ஏன் ஈராக்கிலும்,ஆப்கானிஸ்தானிலும் மற்றும் பல மூன்றாம் உலக நாடுகள் அமுல் படுத்தவில்லை?
(6)காந்தி தம்முடைய பாலுணர்வைக் குறித்து மேற்கொண்ட பரிசோதனைகள் பற்றி உங்கள் கருத்து என்ன?
(7)காந்தி தன்னுடைய பேத்தியான மனுகாந்தியுடன் நிர்வாணமாக படுத்து தன்னை சோதித்து கொண்டது, மனுகாந்திக்கு அகிம்சையா அல்லது வன்முறையா?
உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்…
நானாவது உங்களுடன் கிண்டலாக பேசினேன் , நோ அவர்கள் உருப்படியாக விவாதம் செய்யதானே வந்தார் , அவரை என்னவெல்லாம் ஏசியுள்ளீர்கள் என ஒரு முறை படித்துபாருங்கள் ,
எந்த கம்யூனிஸ்டு தலைவனும் தன்னை எதிர்த்து பேசியவர்களை உயிரோடு விட்டதில்லையே , நீங்க மட்டும் எப்படி விளங்குவீர்கள்?
அண்ணே மதி அண்ணே.. உங்களின் நண்பர் நோ , மெத்த படித்த அறிவாளியாய் இருக்கலாம் ஆனால் தான் படித்ததை, தான் சிறந்தது என நினைப்பதை அடுத்தவர்க்கு அகந்தையுடன் விளக்க முற்படுவது விவாதமா?
நண்பர் வித்தகன், தான் கற்றதை மற்றவர்களுக்கு கற்பிக்க எழதும் தொடரின் முதல் பகுதிதான் வெளி வந்து உள்ளது… அதற்குள் நோவின் விமர்சனங்கள் அவரை “கம்யுநிசவாதி” என முத்திரை குத்தி நீங்கள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என தனது அதி மேதாவித்தனத்தை காட்டுகிறார்…
இங்கு விவாதிக்கும் நண்பர்களோ, தோழர்களோ , உனக்கு என்ன தெரியும்,, நான் படித்த நூல்களை படித்து இருக்கிறாயா… நான் பல வருடங்களாக மார்க்சையும், ஸ்டாலினையும் படிக்கிறேன் என இறுமாப்புடன் கூறியது இல்லை… உங்களின் நோவுதான் கூறினார்… அவரின் இந்த அகந்தை உண்மை என்றால் எங்களின் தோழர்களின் கேள்விக்கு பதில் சொல்ல சொல்லுங்கள்…
நீங்களும் கூட பதில் சொல்ல முயற்சிக்கலாமே..
மிதி இந்தியா
நீ ஏற்கெனவே திட்டும் போதே தெரியும்
இப்ப ஓட்டம் பிடிக்கப்போறேன்னு
அதே மாதிரி கண்ணை மூடிட்டு நாலு
வார்த்தை மட்டும் திட்டிட்டு ஓடிப்போன
ஓடுகாலி தானே நீ
நீயெல்லாம் திட்டுவதைப்பற்றி பேசக்கூடாது.
//நீங்க மட்டும் எப்படி விளங்குவீர்கள்?//
முதலில் கிண்டல், பிறகு திட்டல், பிறகு புலம்பல் இறுதியில் சாபம், பரினாம வளர்ச்சி முற்றியது. ஆமென்
வினவு உள்ளிட்ட அனைத்து தோழர்களுக்கும்,
கம்யூனிச அவதூறுவாதிகளில் இவர்கள் நம்ம ஜெயமோகன், சாரு முதல் அரவிந்தன்நீலகண்டன், ரவிசீனிவாஸ் போன்ற அம்பிகள் வரையிலான வகையறாக்களின் எச்சங்களே இந்த தமிழ்மணி கும்பல். எந்த ஒரு கருத்திலும் ஊன்றி நின்று விவாதித்து அவர்களுக்கு பழக்கமில்லை. எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக, 18நாட்கள் உளறித்தீர்க்கும் ராமாயண பிரசங்கிபோல எந்த எதிர்வினையையும் மாற்றுக்கருத்துக்களையும் பரிசீலித்து வாதிடும் பழக்கமறியாத ‘மண்டை வீங்கிகளே’ இந்த தமிழ்மணி கும்பல்.
இவர்களுடனான நமது அனுபவம் என்பது சற்று கடுமையானதுதான். இவர்களது நோக்கம் தங்களது கருத்தில் நிலைத்து நின்று விவாதிப்பது அல்ல. ஏனெனில் தாம் எடுத்துவைக்கும் கருத்து நடைமுறையில் எடுபடாதது என்பதில் நம்மைவிட அவர்களுக்கு அலாதி நம்பிக்கை உண்டு. அதனால்தான் தோழர்கள் அசுரன், சம்பூகன் தொடங்கி இங்கே ஒரு பின்னூட்டத்தின் மூலம் விவாதிக்க அழைத்த ப.வி.சிறீரங்கன் வரை யாருடனும் நேர்மையாக விவாதிப்பதை இந்த பார்பன கயவாளிக்கும்பல் தவிர்த்துவருகிறது.
இவர்களுக்கு மார்க்சியமும் தெரியாது ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது. அவாளுக்கு தெரிந்ததெல்லாம் இந்துத்துவமும், சந்துத்துவமும்தான். இவர்களுக்கு மார்க்சிய முறையிலான கேள்விகளும் விளக்கங்களும் தேவையில்லை. இருப்பினும் நமது முறையான விளக்கங்கள் இந்த பார்ப்பன டும்மிகளுக்குப் போய்ச் சேரவில்லையென்றாலும் பிறருக்கு உண்மையை உணர்த்தும் என்கிற ஒரேயொரு நம்பிக்கையைத் தவிர வேறேதுமில்லை.
இவர்களை தனிப்பட்ட முறையில் ஸ்டாலின், மாவோ போன்ற மாபெரும் தலைவர்கள் குறித்து விவாதிக்க அழைத்த தோழர் ப.வி.சிறீரங்கன் போன்றோருடன் விவாதிக்க அவனது குடுமியைப் பிடித்து இழுத்துவந்து சேர்ப்பது மட்டும் நமது உடனடி கடமையாக இருக்கிறது. அன்றி, நாம் முன்வைக்கு எந்த ஒரு விளக்கங்களையும் கேள்விகளையும் முறையாக பரிசீலித்து பேச அந்த அம்பிகள் முன்வரமாட்டார்கள், என்பது எனது தாழ்மையான கருத்து தோழர்களே.
மாற்றுக்கருத்தை தெரியப்படுத்தவும்.
தோழர்கள் ஸ்டாலின், மாவோ வின் மீது அவதூறு பரப்பும் பார்ப்பன, பண்டித கூட்டத்துக்கு ஆப்பறைவோம்.
நன்றி!
தோழமையுடன்,
ஏகலைவன்.
சூப்பர்லின்க்ஸ், ஏகலைவன் இருவரும் நான் மாற்று கருத்துகளை விவாதிக்க விரும்புபவன் என்று பாராட்டி இருப்பது நான் எதிர்பார்க்காத விஷயம். நன்றி! வினவு தளத்தில் வசவுகளையும் வெட்டி பேச்சுகளையும் கண்டு சலித்து போயிருக்கும் எனக்கு மாற்று கருத்துகளை நேர்மையாக சொல்பவன் என்று இன்னும் இரண்டு பேர் சொல்வது ஒரு feel-good moment ஆக இருக்கிறது.
அதுவும் ஏகலைவன் மறுமொழி முழுதும் அம்பி, குடுமி என்று எழுதி இருக்கிறார். அவருக்கு நான் பார்ப்பன ஜாதியில் பிறந்தவன் என்று தெரியுமோ தெரியாதோ? 🙂 இல்லை நீங்களும் பார்ப்பனர் என்ற வார்த்தையை புதிதாக வரையறுப்பவரா? 🙂
அரை டிக்கெட், நம்முடைய innate prejudice எல்லாம் கிடக்கட்டும். உங்களுக்கும் எனக்கும் பல விஷயங்களில் 180 டிகிரி கருத்து வேறுபாடுகள் irunthaalum நீங்கள் வினவின் மறுமொழியில் அவர் அயோத்தியா மண்டப குண்டு வீச்சு தவறு என்று கருதுவதை நீங்கள் காண முடியாது என்றும் அவர் சப்பைக்கட்டு கட்டுகிறார் என்பது மிக தெளிவாக தெரிகிறது என்பது உங்களுக்கும் தெளிவாக தெரியும் என்று நினைக்கிறேன். நீங்கள் அயோத்யா மண்டப குண்டு வீச்சு பற்றி வினவின் மறுமொழியை மட்டுமே வைத்து அவர் என்ன சொல்ல வருகிறார் என்று நினைக்கிறீர்கள்? அது தவறு என்று சொல்ல வருகிறாரா? இதை கொஞ்சம் வெளிப்படையாக சொல்லுங்களேன்!
வினவு குழுவினருக்கு – அயோத்யா மண்டபத்தில் குண்டு வீச்சு உங்கள் கண்களில் தவறா இல்லையா?
அப்புறம் இந்த பு.ஜ., பு.க., ம.க.இ.க. நீங்கள் எல்லாருக்கும் என்ன தொடர்பு என்ன உறவு என்று கொஞ்சம் விளக்க முடியுமா? நான் என்னவோ எல்லாரும் ம.க.இ.க.வினர் என்ற அமைப்பின் உள் அமைப்புகள் என்று நினைத்தேன், இப்போது குழப்பமாக இருக்கிறது.
அப்புறம் வித்தகன் சொல்வதை நானும் வழி மொழிகிறேன். அவராவது 32 கேள்வியையும் முழுதாக படித்தார் போலிருக்கிறது. நான் மூன்றாவது கேள்வியிலேயே நிறுத்திக்கொண்டேன். நீங்கள்தான் விளக்குங்களேன்!
யாரோ சொன்ன மாத்ரி வினவு தளம் மிக ஸ்லோவாக லோட் ஆகிறது. படிப்பதற்குள் பொறுமை போய்விடுகிறது. கொஞ்சம் கவனியுங்களேன்!
ஓரிரு முறை நான் யதார்த்தமாக மணியோ யாரோ வினவுதானா என்று கேட்டதற்கு வினவு ஓரளவு upset ஆனார். ஆனால் இங்கே இன்னும் பல யூகங்கள் – நோதான் தமிழ் மணி (யாருங்க இந்த தமிழ் மணி? அவர் மேல் என்ன அவ்வளவு ஆத்திரம்?) – ஆயிரம் அர்ச்சனை. ஏங்க இப்படி?
முன்பு தினமும் ஒரு முறை இரு முறை இங்கே வந்த நான் இப்போதெலாம் வாரம் ஒரு முறை இரு முறைதான் இங்கே வருகிறேன். வினவு தளத்துக்கு விவாதங்கள் பலம் சேர்க்கின்றன என்பது என் உறுதியான கருத்து. நான் பத்து மறுமொழி படித்தால் அதில் மூன்று வெறும் வசவாகவும் காட்டு கூச்சலாகவும் இருக்கிறது. முன்பெல்லாம் அவ்வப்போது படித்து விடுவதால் இது பெரிதாக தெரியவில்லை. இப்போது skim செய்து மாளவில்லை.
இங்கே வரும், வர விரும்பும், ம.க.இ.க. சார்பில்லாதவர்களுக்கு இது ஆர்வத்தை ஊட்டுமா இல்லை சலிப்பையா? அட தீவிர ம.க.இ.க.வினருக்குத்தான் இந்த வசவுகளால் என்ன லாபம்? வினவு குழுவினர் தங்கள் கருத்துகளை சாதாரண மக்களிடம் கொண்டு சேர்க்க இது எப்படி உதவுகிறது? ஏகலைவன், சூபர்லின்க்ஸ், அரை டிக்கெட், கலகம் எல்லாரும் கொஞ்சம் அடக்கி வாசித்தால் நலம். அட சூப்பர் பதிவு என்று மட்டுமே சொல்லி கொள்ள வேண்டுமானால் வினவு பேசாமல் ஒரு பத்து பேருக்கு இமெயில் அனுப்பிவிட்டு பதிவு போடாமல் இருக்கலாமே? நோ போன்றவர்கள் எரிச்சல் ஊட்டுகிறார்கள்தான். ஆனால் உங்கள் நோக்கத்திலிருந்து இப்படி ஒவ்வொரு அற்ப விஷயத்துக்கும் distract ஆனால் எப்படி?
ஆர்.வி, நீஃக ஸ்கிப் செய்யும் போது எனது பின்னூட்டத்தையும் ஸ்கிப் செய்துவிட்டீர்களா, நான் திட்டிக்கொள்வதை பலமுறை கண்டித்து எழுதியிருந்தேன், அதியிமான்தான் இப்படி திட்டி எழுத துவங்கினாலும் எமது தோழர்கள் அவரை திருப்பி திட்டியதில் எனக்கு உடன்பாடில்லை ஏனென்றால், மக்களிடம் மக்களுக்காக வேலை செய்யும் யாரும் அவமானம் பார்க்கக்கூடாது என்ற பெரியாரின் கருத்தை எல்லோரும் முழுமையாக ஏற்க வேண்டும் என நினைக்கிறேன். தவிர வெளியுலகில் இது போல ஒரு விவாதத்தில் நடந்தால் இது போல எமது தோழர்கள் நடந்து கொள்ளவே மாட்டார்கள் என்பதையும் நான் அறிவேன், முகம் பார்க்க்கஃகூடாத இந்த இணைய உறவுகளில்தான் இது போன்ற வசவுகளும் ஏச்சுக்களும் அதிகம் வருகின்றன. பொறுமை இழப்பது எல்லோருக்கும நடப்பதுதான் ஆனால் உடனடியாக மீண்டு சகஜ நிலைக்கு வர வேண்டும்.
அயோத்தியா மண்டப விவகாரத்தில் வினவின் மறுமொழி ஒரு FACT அவ்வளவே, அது சரியா தவறா என அவர்கள்தான் சொல்ல வேண்டும். நான் யூகிக்க விரும்பவில்லை.
தமிழ்மணி கதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அளவுக்கு முக்கியமானதல்ல அது கடந்த வினவு தளம் துவங்கும் முன்பாக சில ஆண்டுகளாக நடந்துவரும் பிரச்சனை. நோ தமிழ்மணியோ இல்லையோ என்க்கு தெரியாது இது போன்ற 4 பக்கம் சுய விளம்பரம் எழுதுபவர்களிடம் என்ன விவாதிக்க முடியும்?
நீங்கள் நேர்மையாக விவாதிப்பீர்கள் என்பதை முதலில் உலகுக்கு அறிவித்தவன் என்ற முறையில் உங்களை தொடர்ந்து இங்கே விவாதிக்க வருமாரு அழைக்கிறேன்.
புதியவர்களிடம் நம் கருத்துக்களை எப்படிக் கொண்டு செல்வது என்பதற்கு நண்பர் ஆர்.வி கொடுத்திருக்கும் விசயங்ளை தோழர்கள் பாரதூரமாக பரிசீலிக்க வேண்டும். இல்லையேல் விவாதம் அவர் சொல்வது போல நமக்குநாமே பேசுவதாக மாறிவிடும்.
ஆர்.வி அயோத்தியா மண்டபத்தில் குண்டு வீசப்ப்பட்ட சம்பவம் இப்போது விசாரித்த வரை அதை செய்தது பெரியார் தி.க என நீரூபிக்கபடவில்லை என்பதோடு இதை பார்ப்பன இந்து மதவெறி அமைப்புகள் திட்டமிட்டு செய்த சதியாகவும் இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. மேலும் இந்த வழக்கில் கைதான பெரியார் தி.கவினவர் எவரும் அந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இல்லை என்பதும், கருணாநிதி அரசுக்கு தர்மசங்கடம் வரக்கூடாது என்பதற்காக அவர்களே சிலர் கைதாகினர் என்றும் தெரியவருகிறது.
அடுத்து இது போன்ற சம்பவங்கள், ரோட்டில் நடக்கும் பார்ப்பனரின் பூணூலை அறுப்பது போன்ற போராட்ட முறைகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில் இது இந்துமதவெறி பாசிசத்தை எதிர்த்து போராடும் போராட்டத்தை திசை திருப்புவதாகவே அமையும். மேலும் பார்ப்பனியத்தை வெறும் பார்ப்பனர்கள் என்று சுருக்கி பார்ப்பது அதன் பலத்தை குறைத்து மதிப்பிடுவதாகவே அமையும்.
அதே சமயம் இந்த நீதியை எப்போதும் கடைபிடிப்போம் என்றும் எடுத்துக் கொள்ளக்கூடாது. சிதம்பரத்தில் சிவனடியார் ஆறுமுகச்சாமியை தீட்சிதர்கள் தாக்கிய சமயத்தில் நாங்கள் இருந்திருந்தால் தீட்சிதர்களின் குடுமியையும், கொழுப்பையும் அறுக்கத்தான் செய்வோம்.
பு.ஜ, பு.க, மற்ற இளைஞர், தொழிலாளர் அமைப்புக்கள் எல்லாம் ம.க.இ.கசார்பு அமைப்புக்கள்தான். அரசியல் அரங்கில் இவை ம.க.இ.க அமைப்புக்கள் என்று அறியப்படுகின்றன.
வித்தகன், ஆர்.வி, மற்றும் நண்பர்களுக்கு,
நோவிடம் கேட்ட கேள்விகள் அவரது அறிவுத் திமிரை எடுத்துக்காட்டுவதற்காக கேட்கப்பட்டது. மற்றபடி அந்தக் கேள்விகளையும், மார்க்சியத்தையும் ஒரு கல்வியாக அறிமுகம் செய்வதற்கு வினவில் ஒரு தொடரை ஆரம்பிக்கலாமென்று உள்ளோம். அது சமயம் படிக்கவேண்டிய நூல்கள், கட்டுரைகள் முதலியினவற்றை திரட்டித் தருகிறோம். மற்றபடி ஒரு வகுப்பில் நேரிட்டு கற்றுக்கொடுப்பதை விட எழுத்தில் இணைய்த்தில் அறிமுகம் செய்வது மிகவும் கடினமான பணி என்றாலும் இதை விருப்பத்துடனே செய்கிறோம். அதே சமயம் இணையத்தின் பொதுஅறிவு, வாசகர் மட்டம் அனைத்தையும் கணக்கில் கொண்டு அந்த தொடரை எழுதவேண்டும். இதற்கு சற்று கால அவகாசம் கொடுங்கள்.
வினவு மெதுவாக திறப்பத்தை தோழர் கில்லியும், நண்பர் ரவியும் ஏதாவது செய்து சரி செய்யவேண்டும். இந்தப் புகாரை பலரும் தெரிவித்திருக்கிறார்கள். விரைவில் சரி செய்கிறோம்.
ஆர்.விக்கு ஒரு வேண்டுகோள்! இருதரப்பும் சற்று சூடாக விவாதிக்கும் சமயத்தில் வந்து இருதரப்பையும் நிதானமாக விவாதிக்க செய்யும் பணியை நீங்கள் இது போன்று தொடர்ந்து செய்தால் நல்லது. நாங்கள் சொல்வதை விட ஒரு பொது வாசகர் சொன்னால் அதன் மதிப்பே தனிதானே?
//நோ போன்றவர்கள் எரிச்சல் ஊட்டுகிறார்கள்தான். ஆனால் உங்கள் நோக்கத்திலிருந்து இப்படி ஒவ்வொரு அற்ப விஷயத்துக்கும் distract ஆனால் எப்படி?//
அதுதானே நோ போன்றவர்களின் நோக்கமும். அதற்கு பலியாவது பலஹீனமே. ஆர்வி சொன்னதை ஆதரிக்கிறேன்.
//அதியிமான்தான் இப்படி திட்டி எழுத துவங்கினாலும் ///
ara ticket,
wrong and i object i did not start this. pls read all comments fully. anyway i agree to your excellent advice and will stick to points only here after.
கீழ் உள்ள கெட்ட வார்த்தைகளை முதலில் போட்டது
பெருமதிப்பிற்குரியவரான அதியமான் தான்.
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
Posted on July 23, 2009 at 12:00 pm
//நேரு ஒரு கடைந்தெடுத்த கிரிமினல் பேர்விழி. பொம்பளைப்பொறுக்கி — அவனைப் பற்றி போலிகள் சர்டிபிகேட் கொடுத்ததர்கெல்லாம் நாங்கள் பொறுப்பெல்ல ! நேரு ‘மாமா’ முதலாளிகளுக்கு சேவைச் செய்ய கண்டுபிடித்த ஒரு முதலாளித்துவ வ்ழிமுறை அவ்வளவுதான்////
இப்படி எல்லாம் எழுத வெக்கமாயில்லை. தூ..
மாமா வேலை பார்த்தார் என்றால், நீவீர் அப்ப விளக்கு பிடித்தீரோ ?
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
Posted on July 23, 2009 at 4:30 pm
// தூ தூ என்று முதலாளிகள் படுக்கைக்கு விளக்கு பிடிக்கும் உங்களை ஓராயிரம் முறை திட்டலாம். ///
டேய் தாயோளி,
தைரியம் இருந்தா நேரில் சந்திக்கும் போது, என் முகத்த பார்த்து இதே வார்த்தைகளை சொல்லு
பார்க்கலாம். உன்னை மாதுரி கோழை கபோதிங்க, இணைய இருட்டில் மறைந்துகிட்டு தான்
இப்படி எழுத துணிவீர்க
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
//நேரு ‘மாமா’ // ?
what about this ? this was the starting point. and a pirayoham of adipodihal about my friend Dondu Sir.
I am reading this blog for quite some time and I am convinced that this team is trying to do something for the people spiritedly. Also, based on the several writeups I am convinced that vinavu team does have people who are quite knowledgeable Marxists!
I have so far not attempted to place my `replies in vinavu as I am very slow in Tamil typing and am not used to do that at all. And for obvious reasons I am unable to use my full name. So please forgive me on this issue.
I was quite surprised to see some one writing pages and pages refuting Marxism as though this person has done majors in philosophy and is trying to show that he (or she?) knows about everything.
Now that I have seen it, I want to call this person and have a decent debate on Marxism! (I request vinavu friends (Mr. Vinavu?) to please forgive me for using this blog to do a debate)
Mr NO – Or whatever you are, I promise you that I am not going to have the kind of rough language that you saw here. I think that’s just out of a very strong conviction on Marxism by these people in vinavu.
Based on whatever you have also written I can see that you have also studied some thing and I think I can guess from where your reflections are coming from.
I also promise that this will be a debate, not on basic Marxist points (that you have seen in the above questions) but on detailed fundamentals of Marxists dialectic functionality and proto neo cultural objectivism! Having said these difficult terms, I can guess this is known to you – just like post materialistic objectivism of Prof. John Gotti – NYU, the majors for many (maybe you)!
So its time your “Marxism” or its denial is tested! (I wanted to do it but was not sure if it was you)! Assure you again that this will not be something to offend you as you will know by now, I am not affiliated to Vinavu or to any Marxist organizations, but let me assert to you I am indeed someone who thinks Marx is the single most important social scientist as on date in world history!
I am also praying that friends in vinavu (I am avoiding the comrade stuff deliberately) to interfere only for adding a few points but not for abusing!
Mr.No – Are you interested? Are you ready ?. If not I assume you are just some one without a theoretical basis! Just take some time and get yourself treated to some classic Marxist dialectic that you claim to know well!
I have only a few days! I shall try to find one of my friends that can translate some of it in Tamil if possible for the other readers also to understand!
Come out Mr No – Assure you I am alone like you and will have a clean debate devoid of abuse!
Friendly salutes from a non-comrade
M.S.J
Mr. No I am waiting!
If a “debate” is bothering you, I will give you 5 questions (as you have asked some persons here). Please take your time and give me the replies.
(1) What is the most salient structuralist narrative of Marx and Marxism in the light of collapse and post textual reality!
(2) Difference between Marx’s subcultural objectivism and capitalist Nationalism
(3) Why are the themes of Semantic Marxism and classical Marxism seen in the light of radicallity?
(4) Why Marx divided Freedom of Subcapitalist libertarianism and class inspite of being contextually theoretical and thematically central to the discourse?
(5) What is the origin of Lenins immutable profit and Labor critique and on what theoretical foundational did Lenin and Stalin subtextualise Profit and labor thesis into a Marxian framework!
As you can see, its quite easy, for especially someone like you!
Your Friend,
MSJ
dear Mr.No,
me also waiting with some more questions in the context of post modernist marxism and to be clarrified with you…Kindly answer my seven fundamental post-marx questions and also eager to learn from your answers for what Mr.MSJ asked some brilliant questions..As Mr.MSJ pointed out that its going to be friendly discourse only.( Please do not mistake post modern focaultean meaning of “discourse”)
அன்பான நண்பர் திரு MSJ அவர்களுக்கு,
யார் சாறு நீங்க இப்போ திடீருன்னு. என்ன ஒரு ஆளு வினவிலிருந்து திட்டாம இருந்தாறேன்னு பார்த்து ஆசிரியப்பட்டுதான் வந்தேன்!
கூடவே திரு Old Monk என்ற ஜால்ராவையும் வேற கூட்டிட்டு வந்து இருக்கீங்க. Brilliant questions அப்படின்னு நீங்க எடுத்துவச்ச இந்த ஐந்து காஞ்சிப்போன வாழபழத்த பார்த்து அண்ணனும் துள்றாரு!
அது எப்படி சார் செட்டுசெட்டாக வந்து கேள்விகளை போட்டு தாக்கறீங்க! அது சரி நீங்க வினவு இல்லைன்னு எனக்கு எப்படி தெரியும்! என்ன திரு Old monk தவிர வேறு யாரும் கூட கும்பலா வரலைய்யே! usuall அ, திரு அறைடிக்கேட்டும், திரு வினவும் மற்றும் அன்பு அண்ணன்கள் Super Links மற்றும் திரு ஏகலைவன் போன்றவர்களும் இந்த கேள்விகளை வழிமொழிலையே! நீங்க வேற என்ன தெரியும் NYU இப்படி அப்படியெல்லாம் சொல்லுறீங்க! ரொம்ப உட்டான்ச இருக்கே, உங்க கேள்விகள மாதிரி!
உங்க combat strategy அ மாத்திட்டீங்களா? அன்பான கேள்விகளால அடிக்க திட்டமா!
இருந்தாலும் கேள்வியெல்லாம் ஏனோ தானோ என்று வாய்க்குவந்தபடிதான இருக்கு, உங்க வசவு போல! meaningfull questions ஆக ஒண்ணுமே இல்லையே!
The same idiotic set of questions by the same set of people. இந்த மொக்கையை போட எதுக்கு சார் பேரெல்லாம் மாத்தறீங்க?
போய் வேற வேலை இருந்த பாருங்க திரு MSJ என்ற திரு வினவு அல்லது திருஅரை டிக்கெட் அல்லது உங்களில் யாரோ ஒருவரே!!!
இன்னும் ஒரே பாயிண்ட் : திரு வினவு, திரு அரை, திரு ஏகலைவன் மற்றும் பலருக்கும் – முதலில் இந்த கேள்விகள் உங்களுக்கு புரிந்ததா இல்லாட்டி எங்கேயாவது காப்பி அடிச்சீங்களா? இதை செரியாக சொன்னால் debate ஐ ஆரம்பிப்போம்!
நன்றி
OK ஜென்டில்மென், அண்ணன் டவுசர் கீஞ்சு போச்சு, தன்கிட்ட சரக்கில்லன்னு பாலிசா சொல்லிட்டாரு, போதும் விட்டுடுங்க பொழச்சு போவட்டும்….ரோசக்கார பயபுள்ளசாரு
அன்பான நண்பர் திரு அரை,
இப்படி ஓடினா எப்படி? நான் கேட்ட கேள்விக்கு பதிலே இல்லையே!
இந்த திரு MSJ கேட்ட ஐந்து கேள்விகளையும் அட்லீஸ்ட் உங்களில் ஒருவர் ஒரு நாலு லைன் explain பண்ணீங்கன்னா, நீங்க சும்மா எதயோ கேட்கவில்லை என்று ஒப்புக்கொள்கிறேன் (அதான் இந்த JJJ சொன்னாரே உங்களில பல விழியம் தெரிஞ்ச marxists இருக்கீங்கன்னு)!
முடியில்லைய, atleast வினாவை சொல்லச்சொல்லுங்க, இந்த MSJ அவரோ அல்லது உங்க group ஆலோ கிடையாது அப்புறம் இந்த கேள்வியெல்லாம் சும்மா மொக்கை
கிடையாதுன்னு!
அப்புறம் கண்டிப்பாக ஆரம்பிக்கலாம்!
நன்றி
.
அட கைபுள்ள கைபுள்ள..
ஒனக்கு இன்னும் வெளங்களயா
பதில.. நீ தான் சொல்லனும்
நாங்க இல்ல.
அய்யா நோவு… மச்சான் குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலையாம் , அந்த கதையால இருக்கு… நீர் கேட்ட ஆயிரத்து எட்டு கேள்விகள் எல்லாம் நீர் படித்து புரிந்து அதில் மேதாவித்துவம் பெற்ற பின்பு கேட்ட கேள்விகளா?
உன்னுடைய இந்த அகந்தையை முதலில் கலட்டி வை.. உனக்கு விஷயம் தெரியும் என்றால் முதலில் விவாதி.. எமது தோழர்கள் , நண்பர்கள் படித்த மேதைகளாக இருந்தாலும், படிக்காத மேதைகளாக இருந்தாலும் உங்களுக்கு என்ன வந்தது…
உங்களிடம் கேள்வி கேட்ட அன்பர்களின் மேதாவித்தனம் பற்றி நிச்சயமாக எனக்கு தெரியாது.. ஆனால் உங்களின் மேதாவித்தனம் இந்த இணையம் அளவிற்கு எங்கும் எதிலும் பரவி இருப்பதை நான் அறிவேன்… அப்படி இருக்கையில் உங்களை போன்ற மேதாவிகள், அறிவில் சிறிய மக்களிடம் விவாதிப்பர்க்கே இப்படி தயங்கினால் அவர்களுக்கு / எங்களுக்கு யார்தான் அறிவூட்டுவார்கள்…
அண்ணாத்தே , எங்களை கைவுற்றாதே…
MSJ, நோ-விடம் பதில் இல்லை போல இருக்கிறது. வினவின் மார்க்சிய தொடரில் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என நினைக்கிறேன்.
Mr NO – I am dissapointed ! Why are you not coming out? Or do you think that my 5 questions are not upto your mark ?Its not so difficult as even Old Monk (I promise that I do not know him) correctly related my questions to post modernistic dialectic on Marxist’s views! Don’t make me tell that even old Monk is more intelligent than you on Marxist matters! Suna Pana – Don’t worry, I will give the answers if No does not!
Mr. NO – Waiting for you!
Your Friend (who’s getting a bit tired)
MSJ
Mr NO – Scared !! OK – I will revise the challenge, only four questions and you pick and choose! Lets see if you can!
MSJ
No – I am waiting for the past one hour and I know you are watching this – Psychology is not something that only you can claim to understand! You cannot control your urge any further NO. Its time you jump out anytime! (See Mr. No has now become NO & whats next, is something I cant say)
MSJ
அன்பான நண்பர் திரு MSJ (என்ற வினவின் நண்பரோ அல்லது வினவோ),
அதே கேள்வியயை நான் திரும்பவும் கேட்கிறேன்! நீங்கள் இந்த கேள்விகளை என்னவென்று தெரிந்துகொண்டுதான் கேட்குறீர்களா இல்லை சும்மா உடான்ஸா?
You are also throwing challenges at me at a drop of hat, just like your meaningless questions! The final challenge seems to be 4 questions instead of 5. OK will take the challenge, provided you answer one question properly as early as possible. Let me see your worth first before giving any answer. So you pick and choose which one you want to answer!
திரு சுன பான என்ற நண்பரே, பாருங்க உங்க MSJ பதில் என்னன்னு! ஒண்ணும் வெளிய வரப்போவது இல்லை!
நன்றி
Mr. MSJ – I am waiting. Please dont dissapoint.
நன்றி
Mr. No
Appreciate for your appearance, just as I have predicted and appreciate your patience for 10 minutes! I will choose as you have wanted. To help you I will answer what I think as the most difficult question (I cannot do this is Tamil as my friend was unable to translate or type it)
Question :
Why Marx divided Freedom of Subcapitalist libertarianism and class inspite of being contextually theoretical and thematically central to the discourse?
Answer:
“Society is part of the genre of Labor,” says Marx. In Kapital Marx deconstructs class; dissects liberantism seen in the light of focused sub capitalism and kulakian elitism. Although, he denies neocultural theory an abundance of narratives concerning materialist pretextual theory may be revealed. Thematically class needs to be separted to perpetuate theoretical consciousness as oppssed to rigid class structure which as per Marx will ultimately reveal the centrality of this discourse!
In the works of Mary Jane, a predominant concept is the distinction between restricted and masculine subcapitalist class struggle themes. Peter Parker citing Marx and Stalin uses the term ‘Marxist class’ to denote the bridge between sexual identity and society. In a sense, Norman Osborn suggests the use of rigid Marxism to read and modify class.
The main theme of Otto Octavious critique of Marxist class is not desublimation per se, but postdesublimation. The primary theme of the works of William Baker was a treatise on Marxists Liberantism structuring in rigid terms the difference between class and society. It could be said that neocultural theory suggests that class, somewhat paradoxically, has intrinsic meaning as opposed sub capitalist liberantism!
If Marxist dictum holds, we have to choose between neocultural theory and semantic materialism. However, the subject is contextualised into a Marxist class that includes Liberantism as a whole. Hence class as a derivative needs to be divided inspite of being central to the theme!
Finally `Eddie Borck promotes the use of neocultural theory to deconstruct class divisions. In a sense, the main theme of Marx’s model of Liberantism is not, in fact, theory, but pretheory set in subcultural laboring class models!
That’s all Mr. NO!
To help you I will also give some references so that you will know where to look!
1. Mary Jane, V. B. P. (1999) Semantic Marxism and textual discourse – Udanse Free press – Yale (2) . Peter P. (1984) The Narrative of Dialectic: Subcapitalist libertarianism and class Verunka Dhai& Associates (Left view Org) – Cambridge (3). Norman Osborne. S (1976) Semantic Marxism, the poststructuralist paradigm of discourse and Marxism. A Verumdu Bagurdhan publications of Zvata College, Warsaw (4.) Octavious O. (1988) Reinventing Class: A Discourse ontheoritical and thematic class structures. Pilare El Publication, NYU,
Also, I think you might need a dictionary, if you want. Any clarification or doubt, I am there for another three days, please feel free in this blog spot!
Having given the answer, now I will give you 8 hours for you to answer my remaing 4 questions. Take your time. If you don’t I will consider you as an Idiot!
That’s all Mr. No.
The show begins now
MSJ
hei hei. stop this nonsense. all these peter parker, mary jane, otto oct, norman osborne, etc. are all characters of Marvel comics (spider man). this man/lady is trying to make mockery of us all. and he thinks that we are all the idiots that he is. beware.
Please read the other comments, especially the one by vinavu at comment no:153. You will enjoy the twist.
அன்பான நண்பர் திரு MSJ அவர்களே,
என்ன சார் பதில கேட்டா ஏதோ அரபக்கத்துக்கு கதை விட்டுரிக்கீங்க! பயங்கர refernce எல்லாம் வேற கொடுக்கிறீங்க! இதெல்லாம் ஒரு பதிலா?
நன்னும்தான் பார்கிறேன் ஒரு வினவு நண்பர்கள் கொஷ்டிகூட இன்னும் வந்து ஆஹா அட்டகாசம், இப்போ நீ பதில் சொல்லு என்று சிங்கி அடிக்கக்கானும்? ஒரு வேல அவிங்களும் நீங்க எழுதினத புரியாம அலையிராங்களா?
திரு அரை டிக்கெட்டு, திரு பவெல், திரு சூப்பர் லினக்ஸ், திரு அச்க்புசிக், திரு வினவு, திரு சுன பான, மற்று திரு ஓல்ட் monk எல்லாம் வாங்க சார்! வந்து கொஞ்சம் இந்த பிதற்றலுக்கு ஜால்ரா அடிச்சுட்டு போங்க! அத கொஞ்சம் கேட்டுட்டு நான் மற்ற திரு MSJ இன் கேள்விகள் என்ற குப்பை குவியல்லுக்கு பதில் சொல்லவதா வேண்டாமா என்று முடிவெடுக்கிறேன்!
I am waiting! Please come fast and start!
நன்றி
Mr.NO For your information, i am noway connected with any political organization…just a person who wants to learn and enrich my knowledge…thats all…
நோவு, உன்னயப் பாத்தா வின்னர் வடிவேலு கணக்கா இருக்குய்யா..
ஒரு படத்துல கவுண்டமணி வீட்டுக்குள்ள நல்லா அடிவாங்கிட்டே அலப்பறையா சவுண்டு குடுப்பாரே.. அதே மாதிரித்தான் இப்ப நீ பன்றதும் இருக்கு..
பத்து நிமிசமா உன்ன பாத்து சிரிச்சி சிரிச்சி வயிறே வலிக்குதுபா..
நல்ல ரிலீஃப்
BREAKING NEWS!! திருவாளர் நோ ( NO ) பிடிபட்டார் ! ! !
வினவின் முதலாமாண்டு நிறைவு கட்டுரைக்காக பலரும் வாழ்த்தும், சமூக மாற்றத்தில் தங்களுடைய பங்கையும் தெரிவித்துக் கொண்டிருந்த வேளையில் திருவாளர் நோ என்பவர் வந்தார். கம்யூனிசத்தையம் கம்யூனிஸ்ட்டுகளையும் மெத்தப்படித்த மேதாவி என்ற தோற்றத்தில் வைது களித்தார்.
பல தோழர்கள் இதற்கு பாவமாக பின்னூட்டமிட்டு விவாதித்துக் கொண்டிருந்தார்கள். இறுதியில் தான் 20 வருடமாக பல பயங்கரமாக ஆய்வு செய்து ஸ்டாலினையும், மார்க்சியத்தையும் கிழித்திருப்பதாக புரியாத பெயர்களில் பெருமையான ஆங்கிலத்தில் பீற்றினார். இந்த மேதையை தோழர்கள் எதிர்கொள்வதற்கு உதவும் முகமாக 32 கேள்விகள் கேட்டு 5 கேள்விக்காவது பதில் சொல்லுமையா என சவால் விடுத்தோம். அப்பறும் நோ சைலன்ஸ்.
அப்புறம் திருவாளர் MSJ என்பவர் வினவை பயங்கரமாக பாராட்டி நோவுக்கு சவால் விடுத்தார். அதில் பின்நவீனத்துவ பீட்டர் இங்கிலீஷில் பேசியிருந்தார். அப்போதே சந்தேகம். பின்பு இவரது அடுத்த பதில்களைப்பார்த்த போது இதில் ஏதோ சதி இருக்கும் என்பது தெரிய வந்த்து. காரணம் MSJ மார்க்சியத்திற்கு ஆதரவாகவும், வினவுக்கு வக்காலத்து வாங்குவது போலவும் பேசிய ஆங்கில வாக்கியங்கள் பொருளற்ற பின் நவீனத்துவ உதார்கள். உண்மையில் மார்க்சியத்திற்கு எதிரானது, கொச்சைப்படுத்துவது.
பிறகுதான் NO, MSJ இருவரும் ஒரே ஆள் என்பதை அவர்களது ஐ.பி எண்ணை வைத்து கண்டுபிடித்தோம். அப்போதும் உடனே இந்த ரகசிய்த்தை வெளியிடவில்லை. கொஞ்சம் ஆடவிட்டு வேடிக்கை பார்க்க நினைத்தோம். அதே போல அந்த எம்.எஸ்.ஜே, வலிந்து தோழர்களை ஆதரவாளர்களாக சேர்ப்பதும். நோவும் அதையே வெளிப்படுத்தியதும் நல்ல தமாஷ். இப்போது இந்த பச்சைப்பிள்ளை ஏதாவது மனநோய் முற்றி மண்டையைப் போட்டுவிடக்கூடாது என்பதற்காகவே அவசரமாக இதை அறிவிக்கிறோம். இனிமேலும் இந்த பூச்சியை தோழர்கள் வதைக்காமல் பிழைத்துப் போக அனுமதிக்க வேண்டும்.
மேலைநாடுகளில் முதலாளித்துவம் ஒழிக என மக்கள் தமது சொந்த அனுபவத்தில் உணர்ந்துவரும் வேளையில் முதலாளித்துவத்தின் ஆன்மா இந்த பச்சைப்பிள்ளைகளை நம்பி இருப்பது வரலாற்றின் நகைமுரண். மற்றபடி வாசகர்கள் ரதியின் ஈழ அனுபவத் தொடரில் பின்னூட்டமிடுங்கள். நோவை ஒரு ஜாலியான மறதியாக மறந்து விடுங்கள். பாவம் அதியமான் முல்லைக்கு தேர் கொடுக்க வந்த ஒரு உற்ற மேதையே இழந்து இனி தனியே புலம்ப வேண்டியிருக்கும். அவருக்கு நமது அனுதாபங்கள்! விரைவில் சென்னையில் இருக்கும் இந்த நோ என்ற பின்நவீனத்துவ பிரமுகரை யார் என அடையாளம் காட்டுவோம். நன்றி!
இவன் லூசா தெரியாம ரொம்ப பீல் பண்ணியாச்சே, ஏனுங்க வினவு ராடார் கருவி மாதிரி இந்த மாரி லூசுங்க வந்தாலே அலாரம் அடிக்குற மெசின் இருந்தா வாங்கி வையுங்க. சரி நம்ம மூடு மன்னன் மதிக்குட்டியபத்தியும் அப்படியே போட்டா நல்லாயிருக்கும்……….
வினவு
ஆரம்பித்திலிருந்து எனக்கு சந்தேகம் இருந்தது..நல்ல தமாசு..என்னுடைய கடைசி பல மறு மொழிகளில் வேண்டுமென்றே நோ வை msj உடன் விவாத தூண்டினேன். இப்போது சாயம் வெளுத்துவிட்டது…இம்மாதிரியான கேடுகெட்டவர்கள் சகட்டு மேனிக்கு marxism பற்றி வாய்க்கு வந்தபடி பேசுவது என்பது வாடிக்கையாகிவிட்டது..தோலுரித்தற்கு நன்றி..நோ என்பவர் மனநோயாளியா? உண்மையை சொல்லப்போனால் இவர் யார் என்பது எனக்கு தெரியவில்லை..சுத்த அரைக்கிறுக்கு கேணயன் என்பது என் கணிப்பு….
தோழர், என்ன இப்படி சொல்லீட்டீங்க… நம்ம “நோ” அண்ணன் கண்டிப்பாக மறுப்பு கூறுவார்.. அதுவும் சில ஆங்கில நூல்களின் மேற்கோள்களுடன்… கேள்வியும் அவரே, பதிலும் அவரே…
குரைக்கிற நாய் கடிக்காது…
நோ,
நீங்க குரைக்கிற நாயா?
இல்லை…
கடிக்கிற நாயா?
இன்றைய பல்தேசியக் கம்பனிகளது அமெரிக்க யுத்த வியூகங்கள் குறித்து முதலாளித்துவ அறிஞர்கள் செய்யும் ஆய்வுகளுடாக முதலாளித்துவத்தின் பொருளாதார நெருக்கடியைப் “பயங்கரவாதத்திலும் மோசமான பயங்கரவாதமாக இனம் காணுகிறார்கள்,(ஜேர்மனிய நகரமான காசலில் உள்ள பல்கலைக்களகத்து இணையத்தில் சேகரிக்கப்பட்ட அவர்களது ஆய்வுகள்) இவ் ஆய்வுகளைக் கொஞ்சம் வாசிக்கலாம்.குறிப்பாக “நோ”ப் போன்றவர்களும்தாம்.
இதன் பிறகு மேலும் விவாதங்களைத் தொடங்கலாம்.
கீழே அதன் சுட்டியும்(http://www.uni-kassel.de/fb5/frieden/themen/Weltordnung/strutynski3.html )ஆங்கில வடிவமும் தரப்படுகிறது:
The economic crash and the further militarization of world politics
By Peter Strutynski *
The issue in my unit is, of course, purely rhetorical art goes without saying that the current global economic crisis more dangerous than terrorism. And this for three reasons:
1. Much of what has been the 11th September 2001 as “terrorism” or perceived political and media communication, is for mankind, and to yes, it should go no specific threat; This applies in any case if we have the damage and effects of terrorist crimes relate to other impairments and impairments of people around a result of underdevelopment, hunger, pandemic disease, mass unemployment, poverty and environmental degradation. This just one example: 100,000 people die every day from hunger or its immediate consequences – usually in the 122 countries of the developing world where 4.8 billion people live. According to Jean Ziegler, the former UN Special Rapporteur on the right to food, hunger has become a “weapon of mass destruction” has become (see Ziegler 2005). Since the Millennium Summit in 2000, where the United Nations solemnly to halve poverty by 2015 proclaimed, we do not step forward. Although there were, as a November 2007 report submitted by Development Welthungerhilfe and terre des hommes showed at the global level, by “positive trends”, such as reducing the number of people who live in extreme poverty. They fell from 1.247 billion in 1990 to 986 million the 2004th “This (was), however, especially the positive economic development in China, while in Africa the number of poor even after the most optimistic forecasts by the World Bank of 298 million (2004) to 326 million by 2015 will increase. Overall, almost half the world population of less than two dollars per day and live. “(Terre des hommes / Welthungerhilfe 2007.)
2. Ziegler also spoke of the “positive economic development in China.” That was two years ago. The current crisis is also the most populous and dynamic country in the world do not bow because its economy in many ways integrated into the global economy, particularly its strong dependence on the markets of the leading industrial regions such as North America and Western Europe. In even more dramatic impact of global recession on the less developed countries and their populations in the Third World, a process that develops in the coming months will accelerate. Already suffering from over a billion people are chronically hungry, and the number of hungry continues to grow incessantly. It said the Special Representative of the United Nations for the right to food, Olivier De Schutter, ie the successor of Jean Ziegler, on 6 April on the occasion of the presentation of a study by the UN Development Program (UNDP) in the UN General Assembly (Olivier de Schutter, 2009). Every six seconds a child dying of malnutrition, said De Schutter. Blame for the disaster was, inter alia, the unfair international trade “, the necessary investment in agriculture for three decades have prevented many. The President of the General Assembly, Miguel d’Escoto Brockmann (2009), warned earlier in the same session that the army of hungry people in the global economic and financial crisis and the impacts of climate change still had to suffer more than any other. Ad Melkert UN Development Program (UNDP) said in the wake of the G-20 summit in London like this, “that the financial and economic crisis, especially in a humanitarian crisis turns, especially in the poorest countries”. (Quoted from n. Beutler 2009th) Admittedly, the G20 developing countries and emerging countries to help alleviate the crisis promised. About the International Monetary Fund (IMF), the World Bank and development banks wanted countries to help an economy does not collapse under its own power to prevent it. 1.1 trillion U.S. dollars will be used to provide the world with financial support should be in the amount of 250 billion U.S. dollars will be stimulated. Remains completely open, however, how much money actually in hand will be taken where this money hinfließt and how much of it disappeared en route.
3.Analysis on the impact of past economic crises demonstrate the effects of declining economic performance: A decline in the gross domestic product by three per cent is the poverty of families explode. The infant mortality rate is growing “almost mechanically” around 47 to 120 per 1000 live births to. Recent economic data confirm those concerns. One could assume that the growth rates of developing countries in 2009 will be halved, says Peter Wolff of the German Institute for Development Policy (Beutler 2009). This was also confirmed by a World Bank study (World Bank 2009): in 94 of 116 countries studied had an acute downturn observed. The first result is mass unemployment. So Cambodia 2008 already lost 30,000 jobs in the textile industry. In the fields of jewelry, cars and clothing fell in India in the last quarter of 2008 half a million jobs gone. According to the World Bank are in Asia, 140 million people from extreme poverty. From Africa – although only relatively weakly integrated into the world – not to mention! The black continent suffers from downturns in oil exports, coffee, diamonds and commodities. The speculation of the rich North with food led to a massive rise led – in Rwanda had the prices of food and energy increased fourfold. Benin, Burundi, Liberia, Mozambique and Niger are children, according to the emergency before the state bankrupt.
The “war on terror” than the destruction of the “Terorismus”
Without the magnitude and consequences of terrorist attacks to try to trivialize – the blood trail from New York via London and Madrid to Mumbai is bad enough – it must be noted that the “normal” crime world much more human lives and health costs than the international terrorism. But with the normal crime, with murder and manslaughter, then, human trafficking, rape and pedophilia are not horror scenarios and policies to guide. On the contrary, U.S. political consultant evaluate a high crime rate even as an indicator of a particularly high degree of development, as the organic component of wealth or consumer societies, so to speak. Another comparison would be to be: How big are the destructive effects of terrorist acts, compared with those perpetrated planned military actions in the framework of the so-called “war on terror”? How many civilians were e.g. in Afghanistan since October 2001 or in Iraq since March 2003 killed? Since these are official figures do not exist, we rely on estimates by independent sources. And the talk of up to one million people in both countries. (See, for example for Iraq: Gilbert Burnham, inter alia, the 2009th)
“The interdependence of deep recession, financial meltdown, ongoing environmental degradation and social polarization signals a crisis in the entire neoliberal development type, in the last 30 years has evolved and now come to dominate.” As it says in the new memorandum of the Working Group Alternative Economic (2009). My economically trained intellect tells me that the super-meltdown of financial markets in the long term, still less the problem will be. The German bank, for example, last year a billion profit retracted Bank Chief Ackermann and screwed the desired profit margin for the next fiscal period is much higher. At the Annual General Meeting of the Deutsche Bank defended his previously announced and the public criticism of return target of 25 per cent (star-online, 26.05.2009).
The real problem is that the real economy in the wake of the biggest financial crisis since 80 years is advised. The hectic Konjunkturstimulanzien made for each ecological thought missing, and the temporary relief of social mitigating mass unemployment will not be able to prevent that the economies of many EU countries in the coming months in a deep depression will be forfeited. And the states, to combat the financial crisis very deep into foreign pockets plucked, will even the smallest economic recovery with an iron austerity stifle. Thus, the depression last longer than in previous cycles. In addition, the global nature of the crisis, the little niches, detours or abbreviation strategies permits. Export champion Germany will suffer particularly badly, as the traditionally neglected the internal market dips on export markets is also not nearly offset. Michael Krätke (2009) has recently in a lecture at the Rosa Luxemburg Foundation, the peculiarity of the current global economic crisis, explained that it omits no area. It is a six-crisis, its individual components on feedback effects of a dramatic downward spiral in motion:
a crisis of world trade,
a crisis in the international banking and credit system,
a crisis in the export industries (there would be only the German arms industry excluded),
a crisis of transport and communication industries,
a crisis of the new export-oriented industries and services
a crisis in the international division of labor.
These crises are also associated with a worsening world hunger crisis – and I have already pointed out – a global ecological crisis, a crisis of policy (in ongoing policy of abstinence and politicians expressed apathy), as well as in a “faith crisis” of capitalism.
Now everywhere makes the vocabulary of “Postneoliberalismus” the round. Above all, social scientists, who have not learned, over longer historical periods, to think, but in every fashion trend like an epochal change, but no less than a paradigm shift to recognize feel confused the meaning and legitimacy crisis in which neo-liberalism seems to be there, with his real crisis. Here are the many screens, the state – where he is now the market hardened radicals was called – has aufgespannt, mostly there to the status quo ante restored – perhaps with a few cosmetic concessions to social democratic and workers Seelchen wing of the CDU / CSU .
The nature of global capitalism, remains unchanged
Fasting is considered the nature of global capitalism, beyond all euphemistically reproachful or attributes, in his care for the foreseeable future, do not change – at least if you have a social and political revolution exclude. The main indicator of current economic, political, social and regional development of world capitalism and its regulations, I see in the following (see below for Strutynski 2003a):
1: The World Trade Organization and the International Monetary Fund-supported implementation of neoliberal policies in the economic and financial policies of almost all countries in the world has temporarily some emerging countries, but at the expense of increased social polarization, and the rest of the Third World, however, mostly negatively affected. The extent of the IMF, which in recent years had harsh criticism for its lending policy will fundamentally change remains to be seen.
2: Many states and societies, the “globalization” only negatively affected or from ressourcialen and geostrategic reasons, the object of desire of the United States and other leading capitalist states are threatened by state collapse and be completely marginalized. This results in their Entsouveränisierung in the international concert and its radicalization in the interior.
3: This is related a relatively unchecked spread and regional Barbarisierung, mostly domestic wars and armed conflicts, especially in the Third World and former Second World. ” (See Strutynski 2001.) Because they are the General suspected of terrorist cells of Al Qaeda to house, advised them to target the United States, the European Union, NATO, Russia and other countries.
4: In recent years we have a progressive transformation of the United Nations in an auxiliary organ of the leading powers, especially the United States, finds. The UN is basically only two functions to be reduced: the legitimacy of military interventions and humanitarian military post in “pacified” and in the states of each decoupled development and disaster-hungry areas of the earth. In this context, is a joint statement by the Secretaries-General of UN and NATO is important. In the rather general statement of 23 September 2008 is “extended consultation” and “operational cooperation”, such as the “peacekeeping” in the Balkans or in Afghanistan. Both secretaries-general, Ban Ki-moon and Jaap de Hoop Scheffer, commit themselves to threats and challenges together approach. (See Sponeck the 2009th) Such a statement is unusual for several reasons and with the central principles of the UN hardly compatible. So the main difference between the two organizations: a world organization of mutual collective security, there is a military alliance only safe, or simply ignored. NATO and the UN not only meet on an equal footing, but as a brother organizations which pursue the same policy objectives and also to “operational level” want to enforce. The monopoly of the United Nations is implicitly abandoned by recognizing the potential violence of NATO. It also seems to accept that NATO is – contrary to its own behalf and under the UN Charter only legal task, namely a defense alliance in the context of Article 51 of the UN Charter to be – the world of “peacekeeping” operations a role similar the UN should play. Finally, does the UN-NATO declaration incompatible with the integrity of the UN Secretary-General, which all 192 UN Member States, ie also the possible opponents of NATO. Regardless of the speculative question of who is here instrumentalised by whom: the NATO by the UN or the UN, through NATO, is expressed in the agreement a significant profit of NATO and a corresponding loss of importance of the United Nations. The Summit Declaration of Strasbourg recorded the NATO-UN deal as a great success. In Paragraph 19 states: “The joint UN-NATO declaration of last year, represents an important step in the evolution of cooperation and will make a significant contribution to addressing the threats and challenges with which the international community is facing.” (NATO 2009th)
5: Another feature of the current era is the postbipolaren in recent years more and more clearly reflected the desire of the U.S. “unilateralism” of the situation of a comfortable uneinholbaren military strength is accompanied. This unilateralism is closely linked to the eight-year term of George W. Bush. The new president maintains a different style. In all his visits abroad, which he in the first 100 days passed, it was usually one word from him that he wanted to “hear” what his partner would have to say before he even makes suggestions. In the case of course is also Obama’s foreign policy guideline of his predecessor and all its pre-predecessor true: The United States understand their role in the world as “leadership”. Former Presidential Advisor Zbigniew K. Brzezinski has 2007 a book of his successor known work “The only world power” (1997) written. His new Bestsellers called “Second Chance” (Brzezinski 2007). It Brzezinski draws a balance sheet of U.S. foreign policy in the last three presidents, especially the Bush era. The result of his analysis: the strong unilateralism and the brute-war policy of the U.S. administration the past eight years, the United States from achieving its geopolitical goals – which, obviously Brzezinski states – far away. The rationality of the hegemonic United States, Bush and cohorts anything wrong, what was the wrong thing. You have a wedge driven through Europe and are (almost) the whole Arab or Muslim world for the opponent made. “15 years after its coronation as global leader America has been a fearful and lonely democracy in a politically antagonistic world.” Only in the military sector, the U.S. today more than at the end of the Soviet Union. But the country’s capacity to mobilize, inspire a certain direction to be taken and thus to shape global realities, “this ability is” significantly decreased “. America needs to return to positions of real size, credibility and legitimacy to win back. And the next President must all its political and diplomatic skills to restore a truly postbipolare “globalist” foreign policy to shape.
6: In addition, we are witnessing today a growing differentiation of economic and geostrategic interests among the leading states of the “triad” US-Europe-East Asia, including the increasing competition between global transnational corporations (see Altvater / Mahnkopf 2007). It seems that currently plays in the world automotive industry is, what various forecasting institutions and experts have long predicted: the global structure of overcapacity of around 20 major automobile manufacturers through bankruptcies, mergers and subsequent closure of redundant works trademarks or dismantled.
On the threshold of a new Cold War
Where does the world today and what controls them? What strategic military options and now play in world politics play a role?
With the end of the “classic” East-West conflict in Europe almost 20 years, the coordinates of the world undoubtedly changed policy. We are now in a transition period in which three different constellations of co-exist. I would like a three theses worse (see below for Strutynski 2003b): First, the Cold War has not really stopped (1), secondly, we stand at the threshold of a new Cold War (2) and, thirdly, we are on the return the time before the Cold War (3).
(1) The first thesis: The Cold War, in the 40 years after the Second World War the world had its imprint on, only from a Eurocentric perspective has been terminated. In East Asia and the Pacific, the Cold War in fact never ceased to exist. This has to do with the fact that in Asia the great antipodes of the United States, the People’s Republic of China, from the dissolution of the Soviet Union and the Warsaw Pact was not affected and not in the maelstrom of the disintegration of the Real Socialism fell. Regardless of how the economic and social conditions in China will develop, the land for the superpower United States a major challenge – even if Beijing tries, not as a superpower to appear. China is divided into a number of conflicts involved, which beyond the region and to the Pacific to the U.S. hegemonic plan call: the dispute over islands in the China Sea, for instance, or – especially – Beijing’s claim to Taiwan include them just as the clash between the two powers in Africa. This is the USA like the hare in the story of the hare and the hedgehog: Wherever the U.S. foothold try, it turns out that China is already here. Even the Korean peninsula plays a prominent role in the continuity of the “Cold War”. In the years of poker to the civilian and military nuclear programs of North Korea have all the adversaries of the current tab mutual threat ritual withdrawn. Cold War so as usual!
And even if we look to Europe who seem to be the old model of the Cold War, especially in the relationship between NATO and Russia, aufzuleben again. The short Georgian-Russian war in South Ossetia last August was almost like a “proxy war”: NATO knows now, when Russia for the reasonable limit is reached. And Russia should know what the intentions of NATO and its U.S. leadership in the Caucasian region in the lead shields.
(2) My second thesis is: Are there one or outmoded structures of the Cold War continued with the tendency to solidify again, so take while developing new structures of a “Cold War” on the horizon. These are dual in nature. One is the highly against certain ideological confrontation between the “civilized” and “non-civilized,” Christian-occidental modern world and the medieval Islamic world. The inevitable clash of cultures, Samuel Huntington (1996) at the beginning of the 90s of last century saw coming, it seems the attacks on the Twin Towers to have been begun. As for the situation today from the old Cold War is different and so dangerous is the fact that the United States because of their military strength after the Cold War and hot taste, and may result in Iraq and Afghanistan and now in Pakistan too.
(3) My third thesis is: The Western industrialized countries (including Japan), the Cold War in relative transatlantic unity, who has spent gaining foreign policy move to enforce what they themselves define as their national interests. The cracks, the scheduled time and again between the U.S. and the EU states, but also within the EU are visible, indicate long-term strategic contradictions out through the process of political compromise, not endless kitten will be.
Main adversaries: the U.S. and Germany
The interesting thing is that the main actors are the same again, already a hundred years ago, the struggle for supremacy in the world are out. After the well-known social scientist and philosopher Immanuel Wallerstein (2002) had this since 1873, Germany and the United States. They represented to 1913 the most successful economies and are delivered from 1914 to 1945 a thirty-year war “, which – in the inter-war period – only a cease-fire was broken. Germany now has the framework of the EU to join us – the U.S. is still on its own and in this moment, despite global political commitment in the isolation around him. The British poodle Blair has abdicated, and the French poodle Sarkozy replacement will probably be home all hands full to do. Wallerstein gives the U.S. a few years for the inevitable decline as a decisive force in world politics. Even today it is so that the U.S. military only to represent a world power, economically, they are no longer. For Wallerstein is therefore no longer the question “whether the U.S. hegemony fades, but whether the United States to find a way abzudanken in dignity, with a minimum of damage to the world and to themselves” (Wallerstein 2002.)
The relatively simple and well-transparent world of bipolarity and the rivalry between a system and attractive appearing tamed capitalism on the one hand and an economically inefficient and democratically deficient appearing socialism on the other hand, is today a highly explosive mixture of three overlapping conflict constellations since been replaced.
You can find a single war in its concentrated expression, namely in Afghanistan. (See below for Strutynski 2008.) The country in the Hindu Kush is not much more to offer than one for the west of interesting geo-strategic location. This is not just about the control of a territory in which or by through a major oil pipeline project to be realized: the link between the oil-and gas-rich Caspian region and the Indian Ocean – so a bypass to Russian territory to circumvent. It is also about the strategic position of Afghanistan: The Land of the Hindu Kush to the south bordering Pakistan (it follows in the southeast India) and in the west of Iran. Russia in the north is only through the Central Asian former Soviet republics of Turkmenistan, Uzbekistan and Kazakhstan separately. And in the eastern reaches a narrow land corridor to the border of China, the great antipodes of the U.S. and the European Union in the struggle for scarce energy resources of the earth. Afghanistan lies in the middle of a region where nearly half of humanity lives and over two thirds of global oil and gas. Afghanistan is one of the most strategic regions of the earth, ideal as a kind of terrestrial aircraft carrier state and for radar systems and missile launch ramps. Who would not have the shots?
The battle for the “Eurasian chessboard”
The consistency with which the United States in the period of Soviet occupation of Afghanistan all the insurgents with weapons and logistical support and the inexorability with which the current occupiers to take control of the country are fighting, point out that the West is the recommendation of the great strategists Zbigniew K. Brzezinski from the 90s to heart: For the “global supremacy, and the historical legacy in America” will be “crucial”, we may, in his book “The only world power” (1997) read, “how the power on the Eurasian continent will be distributed. ” The “Eurasian continent – including Brzezinski understood especially the region from the Black Sea, the Caucasus and the Caspian Sea to Central Asia – is the” checkerboard, which is also in the future, the battle for global domination will play. ” Hence the interest of Russia, Afghanistan, at least indirectly, one foot in the door to keep. Even after the Zerwürfnis with NATO because of the Georgia crisis, the General Staff in Moscow with the Afghanistan-cooperation with Brussels “is not up for discussion.” And the Russian ambassador to NATO, Dmitri Rogozin, the “Izvestia” quoted as saying: “We would be a defeat for NATO in Afghanistan is not located.” (Quoted from n. Strutynski 2009a.)
Not just a foot in the door, but wants free access to the West (USA, NATO, EU) itself in the Caucasus and the Black Sea region. The inclusion of Ukraine and Georgia into NATO were on the Bucharest summit identified case and are in the Summit Declaration of Strasbourg has been renovated (NATO 2009). The failed attempt by the West undertook the Georgian leadership, the entire country, including Abkhazia and South Ossetia through a war of aggression under control and reduce annoying to push Russians out, is grandiose failure. The more U.S. and NATO are trying to host Georgia and Ukraine into NATO and to enable the ring to Russia from the south to draw even closer. It started in May 2009 NATO maneuvers in Georgia provocatively stresses in this strategy.
It is since the August war in the press on various opinion editorials in fashion again come from a new “Cold War” to speak. The recent events on the Eurasian “checkerboard” call, in fact, memories of the care for old Cold War kept awake. The time of his George F. Kennan invented containment policy (containment) against the Soviet Union is only a potentially harsher variant which, for the names like Constriction (necking) or even strangulations likely to be accurate. Should this succeed, the West could be on the full concentrate counterparty China.
The claim of the United States and NATO, together with the EU for world peace and security it would inevitably calls opposing forces on the plan who are not members of NATO and also by the UN not feel sufficiently represented.
At the moment there are two major organizations that are challenged by the NATO feel the OVKS and the SOZ (see below and Strutynski 2009b). The OVKS (Organization of the Collective Security Treaty) is in 1992 by a number of states, which formerly belonged to the Soviet Union, was founded. Your include Russia and Belarus, the Caucasus Republic of Armenia and the Central Asian states of Kazakhstan, Kyrgyzstan, Tajikistan and Uzbekistan (since 2006). It is a purely defensive alliance, which after the dissolution of the Soviet Union resulting security gap wanted. It was during this entire period, no security role. In October 2008 the Alliance made himself, when it decided that a common reaction to launch. The aim of the force it was, in the case of a military conflict “any aggression against the Alliance off. The remaining tasks are to against international terrorism, drug trafficking and transnational crime, and (natural) disasters to combat.
The SOZ (Shanghai Cooperation Organization, Shanghai Cooperation Organization, SCO) was founded in 2001, but enjoys much greater attention than the nearly ten years older OVKS. This contributes to the fact that China is the most important emerging global player, a member of the organization. Otherwise you belong – with the exception of Armenia and Belarus – all OVKS States. India, Iran, Mongolia and Pakistan have observer status. Although the Shanghai organization repeatedly emphasized, not as a counterweight to NATO and to understand their main tasks in the economic cooperation presently, its only really visible “successes” military nature, such as a large-scale joint maneuvers in August 2007, the ” anti-terrorist struggle “practiced. The other objectives resemble very much those of OVKS: You have committed in the region together drug and arms trafficking and political extremism and to fight separatism. Unresolved conflicts among themselves (such as disputes in cross-border water resources and reserves) should be settled peacefully.
Obama-Government: Continuity in foreign and security policy
Finally, I would point to an issue that is now another, is: What has the world by the new U.S. president Obama to be expected. What signs of change in relation to NATO and the general foreign policy orientation of the United States?
In general, it can be said that all policies of the United States foreign and security policy, the greatest continuity. This was already visible in the nomination of Hillary Clinton for Secretary Robert Gates and the Defense Department, which he has under George W. Bush headed. In addition, substantive continuity lines. In particular, the energy issue has become hot topic in the U.S. and NATO in recent years has become. The National Security Strategy of the United States in September 2002 was the direction indicated: it is about “developing new sources and types of global energy, particularly in the Western world, Africa, Central Asia and the Caspian region, it says. And the Munich Security Conference in 2006 dealt primarily with this issue.
This new orientation embodies like no other, the new National Security Advisor to the Obama Administration, James Jones (see Rozoff 2009). U.S. General Jones was from 2003 to 2006 Chief of NATO in Europe (SACEUR) and was at this time especially effective on two levels: firstly, he was the “transformation” of NATO from a defensive alliance (Article 5 of the Washington Treaty) in an intervention Alliance. Under his aegis, in particular the NATO-intervention approach. On the other hand, he carried the realignment of NATO to the (global) security of energy resources. So he saw it as his duty to the findings of the so-called Cheney Report, May 2001 ( “Reliable, Affordable, and Environmentally Sound. Energy for America’s Future”) in military planning to implement. That meant in particular the U.S. and NATO in a position to make political control over the view from its three main regions of energy to win: the Persian Gulf, the area between the Black Sea and Caspian Sea and the West African Gulf of Guinea. Jones is also because as an architect of AFRICOM, the new U.S. command for Africa, which was decided in 2007 and in October 2008 in Stuttgart officially started its operational work (see eg reputation 2008).
American commentators and editorialists, the new security adviser Obama today in one breath with such greats like Henry Kissinger (of this post under President Richard Nixon began) and Zbigniew Brzezinski (security adviser under Jimmy Carter). This will also be expressed that Jones believed, for the most powerful and influential man in the Obama administration positions – with an agenda, which he already as a NATO commander successfully through declined. So had some of the NATO Summit in Riga in November 2006 in relation to “energy security” means a work order issued, “to define the areas in which NATO is to safeguard the security interests of its members added value and at their request, national and international efforts can support. “Furthermore, almost all current NATO missions, a more or less directly related to energy security: the two NATO assistance missions in Sudan and in Iraq, ISAF, in Afghanistan, Operation Active Endeavor in the Mediterranean Sea, the Operation Enduring Freedom in the Horn of Africa and the Kosovo Force (KFOR) in Kosovo. (See Roithner the 2009th)
Shortly before U.S. Secretary of Hillary Clinton on her Europatrip aufbrach to NATO in Brussels to visit, she announced in a press conference that the new administration the term “War on Terror” from their vocabulary had deleted (Wall Street Journal, 31.03. 2009). Basically, they follow a recommendation from the RAND Corporation, in a study from July last year had demonstrated that the “war on terror” as a counter-productive’ve highlighted (Jones / Libicki 2008). The main result of the study, the 268 terrorist groups in the period 1968 to 2006 under the microscope had: In most cases, the terrorist groups to stop by police and intelligence activities or the fact that the groups with the respective governments have made arrangements regarding the enforcement of their political goals. The U.S. Foreign Minister and the President have nothing to comply with under Bush launched the war against terror in real terms to an end. In Afghanistan and Pakistan, the war even expanded. This is no longer a war against terrorism, but – as in Afghanistan, the specific statement of the Strasbourg NATO summit is to say – about “security for the Afghan people create to protect our citizens and the values, namely freedom, democracy and human rights, to defend. ”
The coming war for energy, raw materials and spheres of influence will be so in the name of freedom and democracy are. So again: Not much new under the sun. But this is certainly no consolation.
Literature
AG alternative economic policy (200): Memorandum of the 2009th From the crisis in the crash, Cologne
Elmar Altvater and Birgit Mahnkopf (2007): competition for the Empire – The Future of the European Union in the globalized world, Munster
Benjamin Beutler (2009): The poor suffer most. In: Neues Deutschland, 8 April
Zbigniew K. Brzezinski (1997): The only world power. America’s strategy of domination, Frankfurt / M.
Zbigniew K. Brzezinski (2007): Second Chance: Three Presidents and the Crisis of American Superpower, Basic Books 2007
Gilbert Burnham, Riyadh Lafta, Shannon Doocy, Les Roberts (2006): Mortality after the 2003 invasion of Iraq: a cross-sectional cluster sample survey. In: http://www.thelancet.com; 11 October
Miguel d’Escoto Brockmann (2009): Statement. To the General Assembly Informal Interactive Thematic Dialogue on the Global Food Crisis and the Right to Food, New York, 6 April,
http://www.un.org/ga/president/63/statements/foodcrisis60409.shtml
Samuel Huntington (1996): The clash of cultures. The Clas hof Civilizations. The reshaping of world politics in the 21st Century, Munich-Vienna
Seth G. Jones, Margtin C. Libicki (2008): How Terrorist Groups End. Lessons for Countering Al Qa’ida. Ed. By the RAND Corporation; http://www.rand.org/pubs/monographs/2008/RAND_MG741-1.pdf
Michael Krätke (2009): Not only a financial crisis …; http://www.rosaluxemburgstiftung.de/fileadmin/rls_uploads/pdfs/Themen/Krise/NichtnureineFinanzmarktkrise.pdf
NATO (2009): Summit Declaration Strasbourg / Kehl; http://www.uni-kassel.de/fb5/frieden/themen/NATO/2009-gipfelerklaerung.html
Rick Rozoff: Global Energy War: Washington’s New African Kissinger’s plan, Chicago, Illinois (unveröff. manuscript, January 2009)
Thomas Roithner (2009): From Poker to the energy resources of war? The end of NATO at the end of the fossil fuel era? Into. Science & Peace, Issue 1
Werner Ruf (2008): AFRICOM – The handle of the United States to Africa. In: creative utopie No. 216, October, pp 883-892
Olivier de Schutter (2009): Statement. Interactive Thematic Dialogue of the U.N. General Assembly on The Global Food Crisis and the Right to Food, Trusteeship Council Chamber, New York, 6 April;
http://www.srfood.org/images/stories/pdf/otherdocuments/15-srrtfstatementpanelrtf-06-04-09.pdf
Hans von Sponeck (2009): UN and NATO: What security and for whom? In: Ralph-M. Lüdtke, Strutynski Peter (ed.): The world according to Bush, Kassel (forthcoming)
Peter Strutynski (2001): Nothing new under the sun? The wars of the 21st Century. In: Forum on Science, No. 4, October, p. 59-63
Peter Strutynski (2003a): The United States is not omnipotent. In: Violence peace according to the will of the only world power? Ways out of danger. Contributions to the 11th Dresdner Peace Symposium, DSS-Arbeitspapiere, No. 65, p. 6-18
Peter Strutynski (2003b): The old and new wars: continuity and discontinuity in the global political conflict constellations. In: ÖSFK (Ed.), Peace Power Europe, Münster, p. 85-99
Peter Strutynski (2008): The only alternative to the Afghanistan war is no war. In: Erhard Crome (ed.), International Politics in the 21st Century. Lines of conflict and geostrategic changes, Berlin, pp 140-150
Peter Strutynski (2009a): From Afghanistan to Georgia: Position battles for the new world order. In Our Time, 29 August
Peter Strutynski (2009b): The globalization of NATO – or the militarization of the globe. In: Federal Committee Peace counsel and AG Peace Research (Ed.), NATO’s 60 years: Enough! Peace EXTRA Memorandum 2009, Kassel, p. 7-24
Terre des hommes / Welthungerhilfe (2007): The reality of development. A critical inventory of German development policy, Fifteenth Report 2006/2007, oO, November
Immanuel Wallerstein (2002): The Eagle Has Crash Landed. In: Foreign Policy, July / August; http://www.foreignpolicy.com
The World Bank 2009: World Development Report 2009: Reshaping Economic Geography, Washington
Jean Ziegler (2005): The Empire of Shame. The fight against poverty and oppression, Bertelsmann: Munich
* Unit on the 17th isw-forum, “The capitalist crisis and the new global distribution of power, 9 May 2009 in Munich
This article appeared in:
The capitalist crisis and the new global power distribution
17. isw-forum; isw REPORT NO. 77, Munich 2009, p. 20-26.
Further contributions to the book:
Conrad Schuhl: The West is losing its dominance – Cooperation and Conflict in the new world
Richard D. Wolff: The Obama Strategy: America’s new role in the global economy
Walter Baier: The European Left and the crisis
http://www.uni-kassel.de/fb5/frieden/themen/Weltordnung/strutynski3.html
அன்னியன் சாருக்கு (நோ/MSJ). அவருக்கு ட்ரெயினிங் பத்தல. அவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
நமக்கு நாமே விவாதம் செய்து கொள்ளுவதை விட எதிர் கருத்துடையவர்களிடம் விவாதம் செய்யும் போதுதான் நிறைய விடயங்களை தெரிந்துகொள்ளலாம். விவாதத்திற்கும் ஒரு அர்த்தம் இருக்கும். திரு.அதியமான் அவ்ர்கள் நமக்கு நிறைய லின்க் கள் கொடுக்கிறார், இதன் மூலம் கம்யூனிசத்திற்கு எதிராக முதலாளித்துவம் எப்படியெல்லாம் வேலை செய்கிறது,அவதூறுகளை பரப்புகிறது என அறிய வைக்கிறார். மேலும் இவற்றை எவ்வித விமர்சனமும் இன்றி ஏற்றுக்கொண்ட இவர்களைப் போன்றவர்களை மாற்றவும் வாய்ப்பிருக்கிறது. கிராமங்களிலும் நகரங்களிலும் பொதுமக்களுடன் பேசுவதற்கும் இணையத்திலே இவர்களுடன் விவாதிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஆகையால் இவர்களை போகவிடாதீர்கள். வசவு பேச்சுக்களை தவித்து இவர்களுடன் சளைக்காமல் விவாதிப்போம்.
தோழர் வினவு,
என்ன தோழர் அதுக்குள்ள் உண்மைய வெளிய சொல்லிட்டீங்க,
எப்படியும் கொஞ்ச நேரத்துல/நாள்ல அவங்களாகவே வந்து “பிம்பிளிக்கா பிளாப்பி, மாமா பிஸ்கொத்து” ன்னு சொல்லி இருப்பாங்க இல்ல… ஒரு காமெடி சீனை நிறுத்திடீங்களே!!!!
—
வாங்கப்பா NO, MSJ, மற்ற எல்லாரும் வந்து “பிம்பிளிக்கா பிளாப்பி” போட்டுட்டு போங்க…..
Mr. NO,
என்ன பாஸ், போறீங்க?அட வாங்க பாஸ் இவங்க எப்பவுமே இப்படி தான் அடிச்சுகிட்டே இருப்பாங்க! நாம இதெல்லாம் பாத்தா தொழில் பண்ண முடியுமா??
அடிவாங்கிட்டு ஒன்னுமே நடக்காத மாதிரி பில்டப்பு கொடுக்குறது நமக்கு என்ன புதுசா பாஸ்???? அட வாங்க பாஸ்!
அது அன்னைக்கு..
இன்னைக்கு எங்க பாஸ் வருவாரு
பாருங்க.
லாலேலா லாலே லாலேலா…..
கண்ணீர் அனுதாபம்……
”No” விற்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறோம்.
எப்பவும் ஸ்டாலினை,மாவோவை பற்றி கற்பனையாக கதை சொல்லும்
”No No மம்மி பாவம், No No டாடி பாவம்” புகழ் திரு ”No” அவர்களுக்கு,
இச்சிறுகதையை காணிக்கையாக்குகிறோம்.
வினவு தளத்தில் நுழைய ஒரு குள்ள நரி ஆசைபட்டுச்சாம்.
அந்த குள்ள நரி தன் பேருக்கு ”No” என்றும் ”MSJ” ன்னு சாயம் பூசிச்சாம்.
அப்ப ஜோன்னு மழை வந்ததாம் (வினவு மற்றும் தோழர்கள்).
மழை வந்து “No” ”MSJ” எனும் நரியின் சாயம் வெளுத்து போச்சாம்.
மழை வந்து நரியின் சாயம் வெளுத்து போச்சு டும் டும் டும்…டும் டும் டும்…
முதலாளித்துவ மூதெவிகளின் மூஞ்சி கிழிஞ்சி போச்சு டும் டும் டும்…
பின் நவீனத்துவ பன்னிகளின் பல்லெல்லாம் உடைஞ்சி போச்சு டும் டும் டும்…
வினவுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!!!
யாழ் இணையத்தில் இணைக்கப்பட்டிருந்த பதிவுகளை வாசிக்கத் தொடங்கிய போதே ஏதோ புதிதாக சொல்ல வருகிறார்கள் என்றுதான் தோன்றியது. தொடாந்து வந்த பதிவுகள் சொல்ல வந்த விடயத்தை அக்கு வேறு ஆணி வேறாக அலச, ஓ!! இது சாதரண வலைத்தளம் அல்ல, என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது.
இன்று உங்கள் வலைத்தளத்தை மின்னஞ்சலில் பெறுமளவிற்கு ஆதர்ச வாசகியாகியாகி விட்டேன்.
சினிமா விடயங்களை அனேகமான வலைத்தளங்கள் தத்தெடுத்த குறையாகப் பிரசுரித்து தம்மை விற்றுக் கொண்டிருக்க, பிடிவாதமாக மக்களை புத்திசாலியாக்கியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் வினவு, வித்தியாசமான பாதையை தேர்ந்தெடுத்த வினவு, ஓராண்டல்ல இன்னும் இன்னும் எண்ணிடலங்கா வருடங்களைக் காண வாழ்த்துகிறேன்
நன்றி கீர்த்தனா, மக்களை புத்திசாலியாக்கயே தீருவது என்ற எமது கங்கணத்தை புரிந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி, அந்தப் பணியில் நீங்களும் தோள் கொடுங்கள்.நாம் எதிர்பார்க்கும் முன்னேறிய சமூகம் என்றாவது ஒரு நாள் உருவாகியே தீரும்!!
அண்ணே!
உங்க ரவிஷங்கர் கிட்ட சொல்லி இந்த முகப்பு பக்கத்தில பட்டியலா கிடக்கும் பின்னூட்டத்த கிளிக் பண்ணா அங்க போய் நிக்க மாட்டேங்குதுனு சொல்லிப்பாருங்க…ஆயிரக்கணக்குல கமண்ட் எழுதறாங்க இந்த வசதி வேல பண்ணா நல்லா இருக்குமுனு தோணுது. உதாரணம்; https://www.vinavu.com/2009/07/17/vinavu-year-one/#comment-7728
Congratulations vinavu & team….My best wishes for a excellent future…