கோயமுத்தூரையும் சுந்தரி அக்காவையும் என்னால் மறக்கவே முடிந்ததில்லை. முந்தையது சில கசப்பான அனுபவங்களுக்காக; பிந்தையது அந்தக் கசப்புகளுக்கெல்லாம் மருந்தாக இருந்ததற்காக. வெளுத்த முகங்கள் எப்போதும் எனக்கு கொஞ்சம் அந்நியமாகத்தான் தோன்றுகிறது. அனேகமாக அதற்கு சுந்தரியக்கா கூட காரணமாய் இருக்கலாம். அக்கா நல்ல திராவிட நிறம். சிக்கலான தருணங்களை அவள் அநாயசமாக கையாளுவதைக் கண்டிருக்கிறேன். முடிவுகள் எடுப்பதிலும் அதில் ஊன்றி நிற்பதிலும் அவளது உறுதி என்னை எப்போதும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவ்வகையில் அவளே எனது முன்மாதிரி. அவளே எனக்கு அழகி.
இடையில் நடந்த சில நிகழ்வுகள் என்னை இந்த ஊரை விட்டு தூக்கியெறிந்து விட்டிருந்தது. அது எனக்கு சந்தோஷமாகவும் இருந்தது. சென்ற வருடம் வரையில் இங்கே வரவே கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்நினைப்பை பிடித்து வைத்திருந்த கடைசி இழை போன வருடம் அறுந்து போனவுடன் அக்காவைப் பார்க்கும் நினைவு எழுந்தது. பன்னிரண்டு வருடங்களாக வராத நினைவு!
“சார் வண்டிய எங்கியாவது நிப்பாட்டுங்க.. அவசரமா யூரின் போகனும்” எனக்கு முன் சீட்டில் உட்கார்ந்திருந்தவர் பேருந்து நடத்துனரிடம் கேட்டார்.
“ம்… கொஞ்சம் பிடிச்சி நிப்பாட்டி வையுங்க. இன்னும் பத்து நிமிசத்தில டீ குடிக்க நிறுத்துவோம்” அசட்டையாக பதில் வந்தது.
பேருந்து உச்ச வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. தலைமயிரை பிய்த்துச் செல்லும் உத்வேகத்தோடு வீசும் காற்றுக்கு கண்களில் கண்ணீர் வழிகிறது. கண்களை மூடி நுரையீரல் திணரும் அளவுக்கு மூச்சுக் காற்றை உள்ளிழுத்தேன் – அந்தப் பரிச்சையமான மணம் நாசித் துவாரங்களின் உணர்ச்சி நரம்புகளை மீட்டிக் கொண்டே உள்நுழைகிறது – இது எனக்குப் பரிச்சயமான மணம் தான் – கோவையின் மணம்! வெளியில் ஏதோ நெடுஞ்சாலையோர தேநீர்க் கடையில் வண்டி நின்றது. ஒருவழியாக ‘சின்னத் தளபதி’ பரத்தின் நாராசமான சவடால்களுக்கு ஒரு பத்து நிமிட இடைவெளி. இந்தப் பயல் பேரரசுவை ஏதாவது செவ்வாய் கிரகத்துக்கோ சனி கிரகத்துக்கோ கடத்தி விட்டால் தமிழ்நாட்டில் பாதிப்பேருக்கு தலைவலி தீரும் என்று நினைக்கிறேன்.
தேநீர்க் கடை பலகை பெருமாநல்லூர் என்றது.
“கோயமுத்தூர் இன்னும் எவ்வளவு நேரமாகும் சார்” சிகரெட் பற்ற வைப்பதில் முனைப்பாய் இருந்த ஒரு நடுத்தர வயதுக்காரரிடம் கேட்டேன்.
“இன்னும் ஒரு ஒன்றரை மணி நேரமாகும் தம்பி” நட்பாய் புன்னகைத்தவர், “எங்கிருந்து வர்ரீங்க தம்பி?” பேச்சை வளர்க்க பிரியப்பட்டர் போல.
“பாண்டிச்சேரிங்க”
“என்ன விசயமா?”
“இங்க கொஞ்சம் ஆபீஸ் வேலை இருக்குங்க”
“தங்கறதெல்லாம்?”
“…..” என்ன சொல்வதென்று விளங்கவில்லை.
சுந்தரி அக்காள் மேல் எனக்கு இருந்த ஒட்டுதல் தவிர்த்து பார்த்தால் கோயமுத்தூர் மேல் எனக்கு பெரிய ஒட்டுதல் இருந்ததில்லை. அக்காவை தவிர்த்து எனக்கு அங்கே கிடைத்ததெல்லாம் சில கசப்பான நினைவுகள்தான். எங்கள் பூர்வீகம் கோவை-பொள்ளாச்சி வழியில் இருக்கும் கிணத்துக்கடவு. நான் பிறந்தது, பன்னிரண்டு வயது வரை வளர்ந்தது எல்லாம் அங்கேதான். அங்கிருந்த அரசு உயர் நிலைப்பள்ளியில்தான் எட்டாம் வகுப்பு வரை படித்தேன். எனக்கு பாண்டியைப் போல் அல்லாமல் கோவையில் வெகுசில நண்பர்கள்தான் இருந்தனர். அதில் கோபால் மிக நெருங்கிய நண்பன்.
அது ஆறாம் வகுப்பு ஆண்டிறுதி விடுமுறை நாள். காலையிலிருந்து மைதானத்தில் விளையாடிக் களைத்துப் போயிருந்தோம். சாப்பிட்டு விட்டு திரும்ப வந்து விளையாடலாம் என்று நாங்கள் கிளம்பினோம். கோபாலின் வீடு சற்று தொலைவாக இருந்ததால் நான் அவனை எங்கள் வீட்டுக்குக் கூட்டிச் சென்றேன். அன்று வீட்டில் கவுச்சி எடுத்திருந்தனர். நானும் கோபாலும் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அப்பத்தா வந்தாள்
“ஆரு கண்ணு அது?” கண்களை இடுக்கிக் கொண்டே கேட்டாள் – பார்வை கொஞ்சம் மந்தம்
“ஆத்தா இது கோபாலு.. என்ர ப்ரெண்டு” சத்தமாய்ச் சொன்னேன் – காதும் சரியாகக் கேட்பதில்லை
“அப்புடியா சாமி… உங்கூடு எங்கிருக்குது கண்ணு..” கோபாலைப் பார்த்துக் கேட்டாள். அப்பத்தாவுக்கு குரல் மட்டும் வெண்கலம்.. கிணத்துக்கடவுசந்தையில் நின்று கத்தினால் பொள்ளாச்சியில் உறங்கும் குழந்தைகள் கூட எழுந்துவிடும் என்பார்கள்.
“நம்மூர்ல தானாத்தா” கோபாலு சோற்றைப் பிசைந்து கொண்டே சொன்னான்.
“உங்கைய்யன் பேரென்ன?” நெருங்கி வந்தாள்
“மருதனுங்க” கோபால் சொல்லி வாயை மூடும் முன் அவன் வட்டிலை ஆங்காரத்துடன் எட்டி உதைத்தாள் அப்பத்தா.
“ஏண்டா ஈனப்பயலே… சக்கிளி நாயி… ஈனச்சாதில பொறந்த நாயிக்கு வக்குவக தெரீய வேண்டாமாடா… ஆருட்டுக்கு வந்து திங்கரதுக்கு ஒக்காந்துக்கறேன்னு தெரீமாடா ஒனக்கு.. எந்திச்சு வெளீல போடா..” வெறி வந்தது போல கூப்பாடு போட்டாள்…
“அய்யோ.. என்ர பேரனுக்கு தராதரந்தெரீலயே… ஈனச்சாதி பயலுகளோடயெல்லாம் பளகுறானே..” என்று புலம்பலாக ஆரம்பித்தவள்.. “இந்த நாறப்பொழப்ப பாக்கக் கூடாதுன்னு தாண்டா உங்காயி மண்டயப் போட்டுட்டா ராசி கெட்டவனே.. நீ பொறந்து உங்காயியத் தின்னுட்டே.. வளந்து பரம்பர மானத்தத் திங்கிறியாடா..” என்று கேட்டுக் கொண்டே என் காதைப் பிடித்து திருக ஆரம்பித்தாள்..
கண்களில் வழியும் கண்ணீரின் ஊடே கோபாலு விக்கித்துப் போன முகத்துடன் கையில் பிசைந்து வைத்திருந்த சோற்றுக் கவளத்தை கீழே நழுவ விட்டுக் கொண்டே வெளியேறுவது தெரிந்தது. அதற்குப் பின் என்னோடு கோபாலு பேசியதேயில்லை. இப்போதும் இடது காது மடலின் பின்னே ஒரு தழும்பு இருக்கிறது – எப்போதாவது தலைவாரும் போது அந்தத் தழும்பை வருட நேரிடும்; அப்போதெல்லாம் கோபாலின் நினைவு வரும்.
பின்னாளில் நாங்கள் பாண்டி வந்து சேர்ந்த சில வருடங்களில் அப்பத்தா இழுத்துக் கொண்டிருப்பதாக தகவல் வந்தது; அப்பா எத்தனை வற்புறுத்தியும் நான் வர மறுத்து விட்டேன். பின்னர் செத்துப் போய்விட்டதாகவும் தலைப் பேரன் வந்து முறை செய்ய வேண்டும் என்றும் கோவையில் இருந்து அப்பா அழைத்தார்.. நான் அப்போதும் பிடிவாதமாய் மறுத்து விட்டேன்.
“சார் வண்டி கெளம்புது.. எல்லா டிக்கெட்டும் ஏறியாச்சா” கண்டக்டரின் குரல் கலைத்தது. சிகரெட்டை விட்டெறிந்து விட்டு ஓடிப்போய் தொற்றிக் கொண்டேன். வண்டி கிளம்பியதும் ‘சின்னத் தளபதியின்’ இம்சை மீண்டும் தொடர ஆரம்பித்தது.. கண்களை இறுக மூடிக் கொண்டே பழைய நினைவுகளில் வலுக்கட்டாயமாய் என்னை ஆழ்த்திக் கொண்டேன்.
எங்கள் குடும்பத்தில் அகால மரணங்கள் சாதாரணம். எங்கள் தாத்தா வெள்ளைக்கார இராணுவத்தில் பணிபுரிந்தவர். பர்மாவில் சண்டை நடந்து கொண்டிருக்கும் போது காயம் காரணமாக ஊர் திரும்பியவர் நிறைய தங்கம் கொண்டு வந்திருக்கிறார். அது நேர் வழியில் வந்ததாய் இருக்காது என்று ஊரில் பரவலாக கிசுகிசுத்துக் கொள்வார்கள். பட்டாளத்தில் இருந்து வந்தவுடன் நிறைய நிலங்களை வாங்கிப் போட்டார். மைனராக ஊர் சுற்றிக் கொண்டிருந்தவருக்கு ஊர்ப் பெண்களின் பாதுகாப்புக் கருதி அவசர அவசரமாக கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள். அவருடைய முதல் தாரம் கல்யாணம் ஆகி ஒரே வருடத்தில் தூக்குப் போட்டு செத்துப் போனாள்; அப்போது அவள் ஏழு மாத கர்ப்பிணி. இரண்டே வாரத்தில் அப்பத்தாவை தாத்தா கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார். முதலில் எங்கள் பெரியப்பா, ஐந்து ஆண்டு இடைவெளியில் எங்கள் அப்பா. அப்பா பிறந்த ஆறு மாதத்தில் தாத்தா மாரடைப்பில் மரணமடைய அப்பத்தா தான் இருவரையும் வளர்த்திருக்கிறார்.
அங்கே விவசாயம்தான் பிரதானம். பெரும்பாலும் ஊரில் இருந்தவர்களிடம் சின்னதாகவாவது நிலம் இருந்தது. வாலாங்குளம் நிரம்பி வழியும் நாட்களில் இங்கே விவசாயம் செழிப்பாக நடக்கும். ஏப்ரல் தொடங்கி ஜூலை வரையில் மல்லாக்கொட்டை விளையும். ஊரின் ஒதுக்குப் புறத்தில் தலித் காலனி இருந்தது. தலித் காலனியை எல்லோரும் அங்கே வளவு என்று சொன்னார்கள். அப்பத்தா குமரியாய் இருந்த போது வளவுக்காரர்கள் ஊருக்குள் செருப்பில்லாமல் தான் வருவார்கள் போவார்களாம். காடாத் துணிதான் உடுத்திக் கொள்ள வேண்டுமாம். ஊர்காரர்களின் வயலுக்கு ஆள் கேட்டால் வந்தேதான் ஆகவேண்டுமாம். ‘காலமே கெட்டுப்போச்சு.. ஈனப்பயலுகெல்லாம் டுர்ருன்னு வண்டீல போறானுக’ என்று அப்பத்தா அடிக்கடி குமைந்து கொள்வதைப் பார்த்திருக்கிறேன்.
நான் ஏழாவது எட்டாவது படிக்கும் போது காலனியில் சிலரிடம் டி.வி.எஸ் மொபட் இருந்தது. வயதானவர்கள் மட்டுமே தப்படிக்க, சாவுச்சேதி சொல்ல, செத்த மாட்டை தூக்க, வயலில் கூலி வேலைக்கு என்று வந்தார்கள் – இளைஞர்கள் அந்த வேலைகளைத் தவிர்த்து விட்டுவெளியேறிச் சென்று கொண்டிருந்தார்கள் – ஊருக்கு வளவின் மேலிருந்த பொருளாதாரக் கட்டுப்பாடு தளர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது.
அது சாதிக்காரர்களுக்கு ஒரு பொருமலான காலகட்டமும் கூட. பொருளாதார ரீதியில் அவர்கள் வளவின் மேல் கொண்டிருந்த கட்டுப்பாடு தளர்ந்து போனாலும் வெத்துப் பெருமையும் வீண் இறுமாப்பும் கொண்டிருந்தார்கள் – அது காட்சிக்குப் பொருந்தாத வேடமாய் இருந்தது. கோயில் பூசாரி கனகவேலு கவுண்டரின் மகனும் வளவில் இருந்து பெருமாள் பையனும் டவுனில் ஒரே காண்டிராக்டரிடம் பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். சில வருடங்கள் போன பின்னே பெருமாள் பையன் டவுனில் சில மேஸ்திரிகளிடம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு சொந்தமாக பெயிண்டிங் காண்டிராக்ட் எடுத்து செய்யத் துவங்கியிருந்தார்.
ஒரு கட்டத்தில் பூசாரி மகன் பெருமாள் மகனிடம் வேலைக்கு செல்ல வேண்டிய நிலையும் கூட ஏற்பட்டது. இதை ஊருக்குள் புகைச்சலாயும் பரபரப்பாயும் பேசிக் கொண்டார்கள். அந்த வருடம் ஊர் நோம்பிக்கு பெருமாள் மகன் தப்படிக்க வராவிட்டால் அந்தக் குடும்பத்தோடு எண்ணை தண்ணி புழங்கக் கூடாதென்றும், பெருமாள் குடும்பமும் ரத்த சொந்தங்களும் ஊர் பொது சாலையை பயன்படுத்தக் கூடாது என்றும் ஊர் கூட்டம் போட்டு முடிவு செய்து தங்கள் அரிப்பை தணித்துக் கொண்டார்கள். அப்புறம் கொஞ்ச நாளில் பெருமாளும் அவர் மகனும் இங்கே அவர்கள் வீட்டை அப்படியே போட்டு விட்டு குடும்பத்தோடு டவுனில் சலீவன் வீதிக்கு குடிபெயர்ந்து விட்டார்கள்.
“வேண்டாங்கண்ணு.. அளுகாத கண்ணு.. இந்தா மருந்து வச்சிக்க” நான் சுந்தரி அக்கா மடியில் படுத்துக்கிடந்தேன். கண்ணீர் வற்றி கன்னங்களில் வெள்ளையாய் உப்புக் கோடிட்டிருந்தது. கண்கள் சிவந்து வீங்கியிருந்தது. அப்பத்தா திருகியதால் இரத்தம் வழிந்து கொண்டிருந்த காதிலும் அரக்க மட்டையால் அடித்ததால் வீங்கியிருந்த முதுகிலும் மருந்து போட்டுக் கொண்டிருந்தாள்.
“போக்கா.. நா உங்கூட பேசமாட்டேன். நீ அப்பத்தாள ஒரு வார்த்த கூட கேக்கலையில்ல.. போ.. எங்கூட பேசாத” அப்பத்தா அடிப்பதை அவள் தடுத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன்.
“……” அவளிடம் இருந்து மௌனம் தான் பதிலாக வந்தது.
“இனிமே நா என்ன கூப்புட்டாலும் அவன் நம்மூட்டுக்கு வரவே மாட்டான்” தொண்டையெல்லாம் அடைத்துக் கொண்டு கேவலாய் வார்த்தைகள் வந்து விழுந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. அதற்குப் பின் கோபாலு வீட்டுக்கு வரவும் இல்லை என்னோடு பேசவும் இல்லை. அந்த சம்பவத்துக்குப் பிறகுதான் மேலே சொன்ன வேறுபாடுகளெல்லாம் எனக்குப் புரிய ஆரம்பித்தது. அது எனக்கு கடும் வெறுப்பை உண்டாக்கியது.
ஏன் பேசக்கூடாது? ஏன் பழகக்கூடாது? ஏன் நம்வீட்டுக்கு அவர்கள் வரக்கூடாது? என்ற என் கேள்விகளுக்கு பதில் சொல்ல யாரும் இல்லை. நானே கவனித்துப் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். ஒதுக்கப்படுவதன் வலி எனக்குத் தெரியும். ஊரில் என்னிடம் பேசக்கூடியவன் சந்திரன் மட்டும்தான். பட்டாளத்துக்காரர் குடும்பத்து வாரிசுகள் ராசி கெட்டவர்கள் என்று என்னோடு தங்கள் பிள்ளைகளை பழகவிடமாட்டார்கள். அக்காவோடும் ஊர்கார பெண்கள் பேசிப் பழகி நான் கண்டதில்லை. காலனியில் இருந்து பள்ளிக்கு வந்தவர்கள்தான் என்னோடு பழகினர் – விளையாட உடன் சேர்த்துக் கொண்டனர். எனது மொத்த வெறுப்பிற்கும் தாக்குதல் இலக்காக இருந்தது அப்பத்தாதான். அதற்குப் பின் ஒரு இரண்டு வருடம் தான் கோவையில் இருந்திருந்தேன். அந்த இரண்டு வருடத்தில் ஒரு முறை கூட அப்பத்தாவுக்கு முகம் கொடுக்கவில்லை.
என் பெரியப்பாவின் மகள்தான் சுந்தரி அக்கா. சுந்தரி அக்கா பிறந்து ஒரு வருடத்தில் பெரியப்பா மோட்டார் ரூமில் ஷாக் அடித்து செத்துப் போய்விட, அந்த அதிர்ச்சியில் பெரியம்மாவும் கிணத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாள். அதற்குப் பின் எட்டு வருடங்கள் கழித்து அப்பாவுக்கு கல்யாணம். நான் பிறக்கும் போதே அம்மாவை விழுங்கி விட்டேன். அன்றிலிருந்து சுந்தரியக்காதான் எனக்கு அம்மா.
“அவுனாசி டிக்கெட்டெல்லாம் எறங்கு.. யோவ் சீக்கிரமா எறங்குய்யா” வண்டி கிளம்பி வேகமெடுத்தது. காற்று மீண்டும் தலைமயிரைக் கலைத்துச் செல்கிறது. இடது கையால் கோதி விடும் போது மீண்டும் அந்த தழும்பு நிரடியது.
நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது அக்கா அடிக்கடி தனக்குள் சிரித்துக் கொண்டாள்; எட்டாம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த போது சுந்தரியக்கா மாணிக்கத்தோடு ஓடிப்போய் விட்டாள் என்று சொன்னார்கள். மாணிக்கத்தின் அப்பாதான் பறையடித்து சாவுச் சேதி சொல்லும் ரங்கைய்யன். கோபாலுக்கு மாணிக்கம் அண்ணன் முறை.
ஒரு இரண்டு நாட்களுக்கு வீடே அமளி துமளிப் பட்டது. அப்பாவும் அப்பத்தாவும் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்தார்கள். எனக்கு இந்த விஷயம் முன்பே தெரியுமா என்று கேட்டு அப்பாவும் அப்பத்தாவும் மாறி மாறி அடித்தார்கள். பரம்பரை மானம், குல மானம், பெருமை இத்யாதி இத்யாதி…, ஒரு வாரம் கழித்து அப்பா என்னை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி கிளம்பி விட்டார். அப்பத்தா ‘என்ர கட்டை இந்த மண்ணுல தாண்டா வேகும்’ என்று சொல்லி வர மறுத்து விடவே நாங்கள் மட்டும் கிளம்பினோம். அதுவரையில் வேலைக்கு எதுவும் போகாமல் பண்ணையம் பார்த்துக் கொண்டிருந்த அப்பா, பாண்டியில் ஒரு தொழிற்சாலையில் பிட்டராக வேலைக்கு சேர்ந்தார். ஆரம்பத்தில் அவரிடம் இருந்த சாதி முறுக்கு நாள்பட நாள்பட மங்கி அவர் மறையும் நிலையில் மறைந்தே விட்டது.
பன்னிரண்டு ஆண்டுகள் வழிந்து சென்றதன் இடையில் நிறைய விஷயங்கள் நிகழ்ந்து விட்டது. அப்பத்தா முடியாமல் இருந்த போது கவனித்துக் கொள்ள வந்த சொந்தங்கள் நிலம் நீச்சு என்று எல்லாவற்றையும் தந்திரமாக எழுதி வாங்கிக் கொண்டார்கள். கோர்ட்டு கேசு என்று அலைய அப்பாவுக்கு பொருளாதார பின்புலம் இல்லாமல் போய்விட்டதால் மௌனமாக அதை ஏற்றுக் கொண்டுவிட்டார். இன்னமும் தாத்தா பட்டாளத்திலிருந்து வந்து கட்டிய வீடு இருக்கிறது. அது அப்பத்தா சாவுக்குப் பின் அப்பா பெயருக்கு வந்திருந்தாலும் யாரும் பயன்படுத்தவில்லை.அதிகளவு அநியாய மரணங்கள் நடந்துள்ள வீடு என்பதால் வாங்கவுதற்கு எவரும் வருவதில்லை.
போன வருடம் அவர் செத்துப் போனார். ஒரு வருடம் இழுத்துக் கொண்டு கால், கை, கல்லீரல் என்று ஒவ்வொன்றாய் செயலிழந்து மெல்ல மெல்ல நிதானமாய் மரணம் படிப்படியாய் அவரைப் பற்றிப்படர்ந்தது. எந்த சாதிக்காரனோ சொந்தக்காரனோ எட்டிப்பார்க்கக் கூட வரவில்லை. கடைசி ஒரு வருடம் எனக்கு இன்னமும் வேலை கிடைக்காத நிலையில் அத்தியாவசியச் செலவுகளைக் கூட அவரோடு உடன் வேலை செய்த நண்பர்களே கவனித்துக் கொண்டனர். அவரின் காரியங்களும் கூட நண்பர்கள் உதவியோடு நானே தனியாய் நின்று செய்தேன்.
எந்த ஈனச்சாதிக்காரன் அண்ணன் மகளை கொண்டோடி விட்டான் என்பதால் மானம் போய்விட்டது என்று ஊர்விட்டு ஊர் வந்தாரோ அதே சாதிக்காரர்கள்தான் அவரின் கடைசி காலத்தில் அவருக்கு ஆதரவாய் நின்றார்கள். எந்த சாதியில் பிறந்ததற்காக முறுக்கிக் கொண்டு திரிந்தாரோ அதே சாதிக்காரர்கள்தான் அவரது சொத்துபத்துகளை ஏமாற்றி வாயில் போட்டுக் கொண்டனர். சாவை எதிர் நோக்கி நின்ற நாட்களில் தன்னையறியாமல் அவர் சில முறை புலம்புவதைக் கேட்டிருக்கிறேன். “எல்லாம் ஏமாத்திட்டானுக தேவிடியா பசங்க…” “என்ர ரத்தமே என்ர சொத்த வாயில போட்டுட்டானுக…” “….அய்யோன்னு வந்த காசு அய்யோன்னு போச்சு….” “…..சாதி சனத்தை விட வெளியார நம்பலாம்…” துண்டுத் துண்டான வாசகங்கள்.
வேலை விஷயமாய் கோவை செல்ல வேண்டும் என ஆபீஸில் சொன்னவுடன் இதுவரையில் நான் புரிந்தறியாத உணர்ச்சியொன்று உண்டானது. அது சந்தோஷமா… மறக்க நினைக்கும் மரணங்களின் நினைவுகளா… இன்னதென்று விளங்கவில்லை. ஆனால் சுந்தரி அக்காவை பார்க்க வேண்டும் என்றும் கோபாலைப் பார்த்து பேச வேண்டுமென்றும் தீர்மாணித்துக் கொண்டேன். அப்பாவுக்கு பாண்டி வந்த புதிதில் அக்கா மேல் ஆத்திரம் – அதனால் துவக்கத்தில் அக்காவை தொடர்பு கொள்ளவோ விசாரித்தறிந்து கொள்ளவோ முயலவில்லை. அவரின் இறுதிக்காலத்தில் குற்ற உணர்ச்சியால் புழுங்கிக் கொண்டிருந்தார் – அப்போதும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை; என்னையும் விடவில்லை.
பேருந்து அவனாசி சாலையில் நுழைந்து லட்சுமி மில்ஸை கடந்தது. இந்த சாலையோரம் முன்பு இருந்த மரங்களை இப்போது காணவில்லை.
அண்ணா சிலையில் இறங்கி, உக்கடத்துக்கு ஒரு நகர பேருந்தில் சென்று இறங்கி, அங்கிருந்து பொள்ளாச்சி செல்லும் பேருந்தில் ஏறி கிணத்துக்கடவுக்கு சீட்டு வாங்கி உட்காரும் வரையில் மனமெல்லாம் ஒரு விதமாக பரபரப்பாக இருந்தது. கோவையின் தோற்றத்தில் நிறைய மாறுதல்கள் இருந்தது. நிறைய மரங்கள் வெட்டப்பட்டிருந்தன. பழைய மேம்பாலம் ஏறும் போது வலது பக்கம் இருந்த என்.டி.சி மில் பாழடைந்து நின்றது பார்க்க கஷ்ட்டமாக இருந்தது. பக்கத்து இருக்கையில் இருந்தவரோடு பேச்சுக் கொடுத்து பார்த்த போது கோவை பகுதியெங்கும் இருந்த பழைய மில்கள் மூடப்பட்டு விட்டதாக சொன்னார். பழைய ஓனர்களே புதிய மில்களைத் திறந்திருப்பதாகவும் மதுரை இராமநாதபுரம் பகுதிகளில் இருந்து இருபது வயதுக்கு உட்பட்டவர்களை அழைத்து வந்து காண்ட்ராக்ட் ஒர்க்கர்களாக வைத்து வேலை வாங்குவதாகவும் சொன்னார்.
மலுமிச்சம்பட்டி பிரிவைத் தாண்டி கிணத்துக்கடவை பேருந்து நெருங்க நெருங்க இதயத் துடிப்பு வேகமெடுத்ததை உணர முடிந்தது. கோவையிலிருந்து வரும் போது கிணத்துக்கடவு பேருந்து நிறுத்தம் சற்று சரிவான பகுதியில் இருக்கும். சாலை மேலிருந்து கீழ் நோக்கி இறங்கும். இறங்கியது. நான் படிக்கட்டுக்கு நகர்ந்து நின்றேன். வெளியில் ஒரு மின்னல் வேகத்தில் கடந்து சென்ற ஒரு தேனீர்க்கடை பெயர்ப்பலகை என்னை ஈர்த்தது – அதில் “மருதம் பேக்ஸ்” என்று எழுதியிருந்தது. பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வடக்கே திரும்பி நடந்தேன்.
முதலில் ஒரு டீ குடிக்க வேண்டும். அப்புறம் அந்தப் பெயர்….?
ஊர் பெரியளவில் மாறுதல் இல்லாமல் அப்படியே இருந்தது. ‘செல்லாத்தா.. செல்ல மாரியாத்தா..” கூம்பு ஸ்பீக்கரில் இருந்து எல்.ஆர்.ஈஸ்வரியின் அலறல் ஓங்கி ஒலித்தது. மூன்று நிமிட நடையின் முடிவில் மருதம் பேக்ஸின் முன்னே நின்றேன். கல்லாவில் இருந்த முகம் ஒரு இனிய அதிர்ச்சியாகத் தாக்கியது – கோபால். என்னைப் பார்த்ததும் அவனுக்கும் பேச்சு எழவில்லை.
“டேய் குமரா.. எப்படிரா இருக்கே? எங்கடா போயிட்டே இத்தனை வருசமா? அப்பாவெல்லாம் சவுக்கியமா? என்னடா ஒரு லெட்டரில்லெ போனில்லெ, தகவலில்லெ..? கேள்விகள் கேள்விகள் கேள்விகள்.. இன்னும் கூட சிலவற்றைக் கேட்டான் நினைவில் இல்லை. நான் எதற்கும் பதில் சொல்லவில்லை. பதில் சொல்லும் அவசியமில்லாமல் அவனுக்கே விடை தெரிந்த கேள்விகள்தான் அவை.
“டேய் கோபாலு.. இப்பயாச்சும் எம்மேலெ கோவம் போச்சாடா…”
“உம்மேலெ எனக்கு என்னடா கோவம்.. அதெல்லாம் மறந்துட்டண்டா” என்றவன் உள்ளே திரும்பி “இங்கெ ஒரு ஸ்பெஷல் டீ ஒரு தேங்கா பன்” என்றான் ‘ஸ்பெஷல்’ கொஞ்சம் அழுத்தம் அதிகமாய் வந்தது. அவன் மறக்கவுமில்லை; அது மறக்கக்கூடியதும் இல்லை.
“சொல்லுடா நீ இப்ப என்ன வேலை பாக்கறே? எந்த ஊர்ல இருக்கீங்க?…” மீண்டும் கேள்விகளை ஆரம்பிக்கப் பார்த்தவனை இடைமறித்தேன்.
“இரு இரு.. அதெல்லாம் ஒன்னும் பெரிய விசேஷமில்லெ.. அப்புறமா சொல்றேன். நீ எனக்கு முதல்ல ஒன்னு சொல்லு – உங்க அண்ணி இப்ப எங்க இருக்காங்க?”
“என்னடா மூனாவது மனுசனப் போல விசாரிக்கறே? உனக்கும் அக்கா தானடா? அவங்களைப் பத்தி நீ கேள்வியேபடலியா?”மௌனமாக இருந்தேன்.
“அவங்க இங்க ப்ரீமியர் மில் ஸ்டாப்புல தாண்டா குடியிருக்காங்க. மாணிக்கண்ணன் சிட்கோவுல வேலைக்குப் போறாப்புல. அண்ணி மில்லுக்கு போறாங்க. ஒரு பய்யன் ஒரு புள்ள; ரண்டு பேரும் சுந்தராபுரத்துல படிக்கறாங்க”
“நீ அவுங்க ஊட்டுக்கு போவியா?”
“நா டவுனுக்கு போகையில எல்லாம் அவங்கூட்டுக்கு போயிட்டுதான் வருவேன்”
“ஆமா.. நாங்க ஊர விட்டு போனப்புறம் அவங்களுக்கு எதும் பிரச்சினையாகலையா?”
“ஆகாம என்ன.. கொஞ்ச நா ஊர்காரனுக ஜீப்புல ஆள் போட்டு தேடுனாங்க. அண்ணனுக்கு ஏதோ கச்சீல கொஞ்சம் பளக்கம் இருந்துருக்கு.. கை வச்சா பின்னால பெரிய பிரச்சினையாயிடும்னு பயிந்து போயி உட்டுட்டாங்க.. ஆனா அதுக்கப்புறம் கொஞ்ச வருசம் பள்ளிக்கூடத்துல தனித்தனி வகுப்பு வைக்கனும், பஸ்ஸுல ஏறக்கூடாதுன்னு வெறப்பு காட்டிப் பாத்தாங்க.. இதெல்லாம் கேள்விபட்டு பெரியார் கச்சீல இருந்து ஆளுக வந்து ஒரே கலாட்டாவாயிடிச்சி.. இப்ப வேற வழியில்லாம அதையெல்லாம் விட்டுட்டாங்க. அதுக்கப்புறம் அதே மாதிரி ரெண்டு கேசு ஆயிடிச்சி”
“டேய் நான் எங்க வீடு, தோட்டமெல்லாம் பாக்கனும்டா.. அக்கா வீட்டுக்கும் போகனும். நீ கூட வர்றியா?” என்றேன். டீயும் பன்னும் வந்திருந்தது.
நானே எட்டி ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டேன்.
“தோட்டமா? எந்தக்காலத்துல இருக்க நீ? அதெல்லாம் ரண்டு கை மாறி இப்ப அங்க ஒரு பேக்டரி கட்டீருக்காங்க” என்றவன், “ரண்டு நிமிசம் பொறு கெளம்பிடலாம்”
டீயைக் குடித்துக் கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டு ‘ரண்டு நிமிசத்துக்காக’ காத்திருக்கத் தொடங்கினேன். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களைக் கவனித்தேன். பெரும்பாலும் காலனியில் இருந்தும், நெடுஞ்சாலைப் பயணிகளுமே வாடிக்கையாளர்களாய் வந்தனர். ஊரில் இருந்து வருபவர்களெல்லாம் சாலையைக் கடந்து எதிர்சாரியில் இருந்த ‘கவுண்டர் பேக்கரி & டீ ஸ்டாலுக்கு” சென்றதைக் கவனிக்க முடிந்தது.
இடையிடையே வினோதமான தமிழ் உச்சரிப்போடு சிலர் வந்து செல்வதைக் கவனிக்க முடிந்தது. கேள்விக்குறியோடு கோபாலைப் பார்த்தேன்.
“இவிங்கெல்லாம் ஓரிசாவுலெர்தும் பீகார்லெர்ந்தும் வந்தவிங்கடா. இப்ப இந்தப் பக்கம் நெறய ·பவுண்டரி பேக்டரிகளெல்லாம் வந்துடிச்சி. அங்கெல்லாம் இவிங்காளுகளுக்குத்தான் இப்பல்லாம் வேல போட்டுக் குடுக்குறான். இங்க மின்ன மாதிரி தோட்டம் காடெல்லாம் கிடையாது. பெரும்பாலும் ப்ளாட் போட்டு வித்துட்டாங்க; பின்ன இந்த மாதிரி கம்பெனிகளும் ஒன்னுக்கு பத்து வெல குடுத்து நல்ல தண்ணி வசதி இருக்கற நெலத்த வாங்கறாங்க”
“வெவசாயமெல்லாம்?”
“அதெல்லாம் ஓய்ஞ்சி போயி பல வருசமாச்சு. சில பேரு நெலத்த வித்துட்டு கந்து வட்டிக்கு விட்டுட்டு ஒக்காந்துருக்காங்க. இன்னும் சில பேரு அவிங்களாவே பிளாஸ்டிக் கம்பெனியோ, பவுண்டரி கம்பெனியோ ஆரம்பிச்சிருக்காங்க”
“வெளியூர்லேர்ந்து ஆள் வந்து வேல செய்யறளவுக்கு நம்மூர்ல ஆள்பஞ்சமாய்டிச்சா”
“ஆள் பஞ்சமில்லீடா.. நெலத்த வித்தவிங்களுக்கு அவிங்க நெலத்திலெயே எவனோ ஒருத்தனுக்கு வேல பாக்க மனசில்ல. மின்ன கூலி வேலை பாத்தவங்கெல்லாம் திருப்பூருக்கு போயிட்டாங்க. அதூம்போக நம்மாளுகன்னா நாள் கூலி நூத்தம்பது ரூவா தரணும். வடக்க இருந்து வர்றவிங்க அம்பது ரூவா கூலி பன்னண்டு மணி நேரம் நின்னு வேல பாக்க தயாரா இருக்காங்க.. ம்ஹூம் அவுங்கூர்ல என்ன பஞ்சமோ என்ன எழவோ.. மேல இருவத்தஞ்சி ரூவா குடுத்தா டபுள் சிப்டு பாக்கவும் கூட தயாராத்தான் இருக்காங்க”
இடையில் அவன் மனைவி வந்து விடவே நாங்கள் அவனுடைய டி.வி.எஸ் 50யில் கிளம்பினோம். மாரியம்மன் கோயில் வீதியைக் கடந்து தெற்கு வீதிக்குள் நுழைந்து ஒரு சந்துக்குள் சிமெண்ட் சாலையில் பயணித்து குறுக்காய் ஓடும் தார்ச் சாலையைப் பிடித்து வலது புறம் திரும்பினால் கோட்டைவாசல் வீதி. வலது புறம் பத்தாவதாக இருந்தது எங்கள் பூர்வீக வீடு. கோபால் வண்டியை வீட்டின் முன் நிறுத்தினான். கோவி சுண்ணாம்பு கலவையில் சாயம் போன மஞ்சள் நிறத்தில் வீடு நிமிர்ந்து நின்றது. நெல் காயப்போடும் முற்றத்தில் காரை பல இடங்களில் பெயர்ந்து கிடந்தது. பயன்பாட்டில் இல்லாத வீடுகளின் சிதிலத்தோடு அறுபதாண்டுகால கட்டிடத்துக்கான முதுமையும் சேர்ந்து அலங்கோலமாய் நின்றது கட்டிடம். முகப்பில் கட்டிமுடிக்கப்பட்ட ஆண்டு பொறித்திருந்தது – 1947. என்னவொரு பொருத்தம்! உள்ளே போய் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது மாறி விட்டது.
“சரி போலாம் கோபாலு”
“ஏண்டா உள்ளெ போகலியா”
“போயி?”
அவன் வண்டியைக் கிளப்பினான். பத்து நிமிடத்தில் அந்தக் கம்பெனி வாசலில் நின்றோம். முன்பு இதே இடத்தில் ஒரு நூறு நூற்றம்பது தென்னை மரங்கள் நின்றது. இங்கிருக்கும் கிணற்றில்தான் நாங்கள் குளிப்பதும் குதித்து விளையாடுவதுமாக பொழுது போக்கிக் கொண்டிருப்போம். கேட்டில் சந்திரன் பெயரைச் சொன்னதும் விட்டார்கள் – வாட்சுமேனுக்கு என்னை அடையாளம் தெரிந்தது ‘தம்பி பட்டாளத்துக்காரரு பேரனுங்களா?’ என்றார். புன்னகைத்து விட்டு வரவேற்பறை நோக்கி நடந்தோம்.
சந்திரனுக்கு இருபத்தைந்து வயதிலேயே தலையெல்லாம் நரைத்து, கண்கள் உள்ளே போய், நரம்புகளில் நடுக்கம் தோன்றி ஒரு நாற்பது வயதுக்காரனின் தோற்றத்தைக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டான்..
“டே.. பூனக்கண்ணா..! வாடா வாடா..” உடன் வந்த கோபாலை பார்த்தது சுதி லேசாக இறங்கியது – பூனைக்கண்ணன் பள்ளியில் எனது பட்டப் பெயர். உரையாடல் பெரும்பாலும் வழக்கமான ‘எப்ப கலியாணம், எங்க வேலை, எப்ப வந்தே’.. என்பதை தொட்டுப் போய்க் கொண்டிருந்ததற்கு இடையில் கோபாலை அவ்வப்போது அவஸ்த்தையுடன் பார்த்துக் கொண்டான்.
“சந்த்ரா.. இது மின்ன எங்க தோட்டம் தானே? வடக்கு மூலையில ஒரு மோட்டார் ரூம் இருக்குமேடா?”
“ஓ.. ஒங்க பெரியப்பன் செத்த எடம் தானே.. இப்ப அங்க லேபர்ஸ¤க்கு செட்டு போட்டு குடுத்திருக்காங்க. வா காட்றேன்” என்று திரும்பி நடந்தான் வடக்கு மூலையில் வரிசையாக தகர ஷெட் அமைத்திருந்தார்கள். சைக்கிள் ஷெட் போல நீளமாக இருந்தது. இடையில் ப்ளைவுட் தடுப்பு வைத்து அறைகள் ஆக்கி இருந்தார்கள். கதவு கிடையாது – பதிலாக ஒரு கோணி பையை கிழித்து மேல்கீழாக தொங்க விட்டிருந்தார்கள். சில குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடியாடிக் கொண்டிருந்தன. ஷெட்டுக்கு முன்பாக நீளமாக சாக்கடை ஓடிக்கொண்டிருந்தது. மொத்தத்திற்கும் சேர்த்து ஒரு பொது கழிப்பிடமும் குளியலறையும் கடைக்கோடியில் இருந்தது. அந்த இடத்தில்தான் முன்பு மோட்டார் ரூம் இருந்தது – ஒட்டி நின்ற அத்தி மரத்தைக் கொண்டு அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. ஒரு ‘அறைக்குள்’ தலையை நீட்டி எட்டிப் பார்த்தேன். கீழே காறை கிடையாது – மண் தரை தான். அதுவும் சமீபத்தில் பெய்த மழையால் சொத சொதவென்று இருந்தது. இது மனிதர்கள் வாழ்வதற்குத் தக்க இடமேயில்லை.
“எத்தினி குடும்பம்டா இங்க தங்கியிருக்காங்க?”
“அது ஒரு நாப்பது குடும்பம் இங்க தங்கீருக்கு. ஆம்பள பொம்பள பசங்க புள்ளைகன்னு மொத்தம் நூத்தியிருவது பேரு கம்பெனிக்கு வர்றாங்க”
அப்படியென்றால் எவரும் பிள்ளைகளை படிக்க அனுப்புவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. மேலும் பேச்சுக் கொடுத்துப் பார்த்ததில் இது ஒரு நவீன சேரியென்பதை விளங்கிக் கொள்ள முடிந்தது. பவுன்டரி ஷாப்புக்குள் சென்றோம்; இது ஒரு டி.எம்.டி கம்பி தயாரிக்கும் கம்பெனி, இரும்பை உருக்கி கம்பியாக நீட்டிக் கொண்டிருந்தனர். இரும்பின் கடினத்தன்மைக்காக கார்பன், ·பெர்ரஸ் எனும் ஒரு கெமிக்கல் சுத்தமான உருக்கு போன்றவற்றோடு வேறு சில கெமிக்கல் கலவைகளையும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்த உலோகக் கலவை செந்நிறத்தில் கொதித்துக் கொண்டிருந்தது. எங்கும் கெமிக்கல் நெடி. வேலை செய்து கொண்டு நின்றவர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களையோ, கையுறை, காலுறை, தலைக்கவசம், கண்ணாடி போன்றவற்றையோ பாவிக்கவில்லை. கரணம் தப்பினால் மரணம்தான்.
அங்கே நின்றவர்களெல்லாம் பேயறைந்ததைப் போல இருந்தார்கள். மெலிந்த உருவத்தில் கண்கள் உள்ளே ஒடுங்கி, கைகளில் நடுக்கத்தோடு நின்றவர்களைப் பார்க்க உள்ளே ஏதோ பிசைவதைப் போலிருந்தது. அந்த கெமிக்கல் நெடி எனக்கும் லேசான தலைச்சுற்றலை உண்டாக்கியது.
“சரி போலாம்” என்றவாறே வெளியில் வந்தேன்.
பேசாமல் காம்பௌண்டை தாண்டி வெளியே வந்தோம். சந்திரன் வரவேற்பறையோடு நின்று விட்டான். நான் கோபாலின் முகத்தைப் பார்த்தேன். அவன் புரிந்து கொண்டு பேசத் துவங்கினான்,
“டேய்.. இவனுகளுக்கு எப்பவும் காலை நக்கிட்டு நிக்க ஆளுக இருந்துட்டே இருக்கனும்டா. பழகிட்டானுக. உனக்கு நியாபகம் இருக்காடா…மின்ன எங்காளுக ஊருக்குள்ளெ செருப்பு கூட போட்டுட்டு வர முடியாது. புதுத் துணி உடுத்துக்க முடியாது. இன்னிக்கும் பெருசா எதுவும் மாறலைடா. இப்பவும் நாங்க கோயிலுக்குள்ள போயிற முடியாது, என்ர கடைக்கு ஊர்காரனுக எவனும் வரமாட்டான், என்ர வயசுக்கு சின்னச் சின்ன பொடியனெல்லாம் போடா வாடான்னுதான் கூப்பிடுவான். ஆனா ஒன்னுடா… இன்னிக்கு எங்க சோத்துக்கு இவனுகள நம்பி நிக்கலை. ஆனாலும் அவமானம் போகலைடா. நீயும் நானும் இப்ப வண்டீல வந்தமே.. ஊர்கானுக பார்வைய பாத்தியா? இன்னிக்கு திருப்பூருக்குப் போனா மாசம் மூவாயிரமாவது சம்பாதிக்கலாம். ஆனா ஊருக்குள்ள வந்தா இன்னமும் சக்கிளின்னு தாண்டா பாக்கறானுக. நாங்கெல்லாம் பொறப்புல சக்கிளியா போனோம்.. இவங்க எந்தூர்காரங்களோ என்ன பொறப்போ என்னவோ.. இங்க வந்து சக்கிளியா வாழ்ந்து பொழைக்கறாங்க.. முன்ன நாங்க பண்ணையத்த நம்பி வாயப்பாத்துட்டு நின்னோம்… இன்னிக்கு பண்ணையத்துக்கு பதிலா கம்பெனி.. எங்க எடத்துல ஒரிசாக்காரங்க. ஆனா காசு கூட கெடைக்கும் மரியாதையும் அந்தஸ்த்தும் கெடைக்கவே கெடைக்காது.”
பின்னே நாங்கள் அக்காவைப் போய்ப் பார்த்ததும், அவள் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு ஓவென்று அழுததும், அம்மா ஏன் அழுகிறாள் என்றே புரியாமல் திருதிருவென்று விழித்துக் கொண்டு நின்ற அக்கா பிள்ளைகள் என்னை வினோதமாகப் பார்த்ததும், என்று வழக்கமான செண்டிமெண்ட் சமாச்சாரங்களை விடுத்துப் பார்த்தால் – அவள் ஒரு தேவதை போல வாழ்ந்து கொண்டிருப்பது புரிந்தது. மாணிக்கம் அத்தான் அவளை மிக மரியாதையுடன் நடத்தினார். மனிதர்களை மரியாதையாக நடத்துவது என்பது அதன் உண்மையான அர்த்தத்தில் அத்தானை விட வேறு யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. அக்கா மனைவியெனும் பெயரில் ஒரு அடிமையாகவும் இல்லை, தான் பெரிய குடும்பத்திலிருந்து வந்தவள் எனும் திமிரில் அத்தானை அடக்கவும் இல்லை. இருவரும் மிக மிக அழகாக பொருந்திப் போயிருந்தனர்.
கோவையில் எனது வேலை முடிந்து மீண்டும் பாண்டி கிளம்பும் வரையில் அங்கேதான் தங்கியிருந்தேன்.
இந்த ஊரின் தோற்றத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது – ஆனால் உள்ளடக்கத்தில் அப்படியேதானிருக்கிறது. உள்ளூரில் அடிமைகளாய் இருந்தவர்கள் இப்போது வெளியூருக்கு அடிமைகளாய்ச் சென்றிருக்கிறார்கள். அந்த வெற்றிடத்தை நிறப்ப வெளியூரிலிருந்து புதிதாய் பல அடிமைகளைப் பிடித்து வந்திருக்கிறார்கள். இவ்வூரின் இனிமை உண்மையில் கசப்பின் மேல் தூவப்பட்ட சர்க்கரைதான். மேக்கப்பைக் கீறிப்பார்த்தால் உள்ளே அசிங்கங்கள்தான் புழுத்து நாறுகிறது.
தொடர்புடைய பதிவுகள்
தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் ஜாதிக்கு எதிர்ப்பு மிக அதிகம் , ஆனால் கொங்கு பகுதிகளில் ஜாதிக்கு எதிர்ப்பிலாததால் இன்னும் டீகடைகளில் இரட்டை டம்ளர்கள் உண்டு ,
கிராமங்களில் கோவில்களில் நுழையமுடியாது , உங்கள் பார்வையில் போலிகம்யூனிஸ்டுகளானவர்கள் மட்டுதான் இதற்க்கு எதிப்பு தெரிவிப்பவர்கள் , ட்
அருமையான கதை கார்க்கி, அகப்பை வாயனை பற்றியும் கரண்டி வாயனைப்பற்றி மைல்கணக்கில் பேசும் பழமைவாயன்கள் கோவையோட இந்த சாதிய முகத்தை பற்றி வாயே திறக்கமாட்டார்கள். நல்ல தலைப்புத்தான்
வாதத்தை வாதத்தால் மட்டுமே எதிர்கொள்ள வேண்டுமே தவிர, தனிமனிதத் தாக்குதல் நடத்துவதை வினவு அனுமதிக்கலாமா?
http://maniyinpakkam.blogspot.com/2008/08/blog-post_31.html
பழமைபேசி இந்த லிங்கை எதுக்கு கொடுத்துருக்காருன்னு தெரியல. கவுண்ட சாதி வெறி பத்தி பழமை பேசி எழுதிருப்பாரோன்னு ஒரு நப்பாசைல போனா அப்படி ஒன்னும் இல்ல.
அவரே இந்த லிங்கை கொடுத்த ரகசியத்தை விளக்கிட்டா புன்னியமாப் போகும்
பழமைபேசி, இதை கருத்து ரீதியான விமரிசனமாக எடுத்துக் கொள்ளுமாறு நட்புடன் கோருகிறோம். உங்கள் பதிவுகளில் அஃறிணைப்பொருட்கள் இடம் பெரும் அளவிற்கு கொங்கு மண்டலத்தின் தனிச்சிறப்பான சாதிய அடக்குமுறை பற்றிய நினைவுகள் இல்லையென்பதுதானே மேற்கூறியவரின் விமரிசனம்?
வினவு…. அர டிக்கெட்டுவின் தனிமனித தாக்குதல் பின்னூட்டத்தால் உங்கள் தளம் மிகக் கேவலமாக இருக்கிறது…. இதை மாற்றிக் கொள்ளுங்கள்….. ஏற்கனவே ஈரோடு சங்கமம் குறித்து முட்டாள்தனமாக் எழுதி நீங்கள் மன்னிப்புக் கேட்டது நினைவிருக்கும் என நினைக்கிறேன்…..
ஈரோடு கதிர்,
அரைடிக்கெட்டின் விமரிசனத்தில் தனிமனிதத் தாக்குதல் எதையும் காணமுடியவில்லை. அவர் பங்குசந்தை தொழிலின் மோசடிகளை குறிப்பிடுகிறார். வினவில் இதைப்பற்றி சில இடுகைகளே வந்துள்ளன. நீங்கள் விரும்பினார் பங்கு சந்தையின் மகத்துவத்தை பின்னூட்டத்தில் எழுதலாம். மற்றபடி இந்த இடுகைக்கு இது சம்பந்தமில்லாத்து என்பதுதான் சரி. அரைடிக்கெட் இதை புரிந்து கொள்ளவேண்டும். கோவை வட்டாரத்தின் ஆதிக்க சாதிகள் குறிப்பாக கொங்கு வேளாளக் கவுண்டர்கள் அருந்த்தி மக்களை நாயினும் கீழாக நடத்துவதை பற்றி எழுதினால் எழுதியவர்களை மக்கள் ஒற்றுமையை குலைக்கும் நாய்களாக சித்தரித்து எழுதுவதில் ஆச்சரியமல்ல. நிஜ உலகில் இருக்கும் சாதிவெறி பதிவுலகில் மட்டும் இல்லாமல் போய்விடுமா என்ன? அடுத்து ஈரோடு சந்திப்பை குறித்து முட்டாள்தனமாக எழுதி மன்னிப்பு கேட்டதாக மிரட்டும் தொணியில் எழுதுகிறீர்கள். ஈரோடு சந்திப்பு குறித்து ஆதாரப்பூர்வமாக எழுதவில்லை என்பதால்தான் அந்த மன்னிப்பு. நேரம் கிடைத்தால் அதையும் எழுத எண்ணம இருக்கிறது. நாட்டில் நடக்கும் அநீதிகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தால் எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக இருக்கலாம். அந்த அநீதிகளை தட்டிக்கேட்டால் பலருக்கும் ‘கெட்ட’ பிள்ளையாகத்தான் முதலில் இருக்க முடியும். வினவு ‘நல்ல’ பிள்ளை அல்ல.
எனது மறுமொழி சம்பந்தமுடையதுதான்! எமது அடையாளம் அரசியல், அதை களவானி நாய்கள் என்று அவர் எழுதினார், அவரது அடையாளம் பங்குச்சந்தை சூதாடி, அதை நான் எழுதினேன் அவ்வளவே. மற்றபடி கோவையில் சாதி வெறியில்லை என்றும் மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று எழுதுபவர்கள் ஒன்று பயித்தியமாக இருக்கவேண்டும், இல்லை கடைந்தெடுத்த சாதி வெறியன்களாக இருக்க வேண்டும், பழைமையின் பதிவில் ஜல்லயடிப்பவர்கள் இந்த இரண்டில் எந்த வகையினர் என்பதை வாசகர்களே முடிவுசெய்துகொள்ளட்டும்
வினவு அநீதிகளைத் தட்டிக்கேட்கவும்… வெறுமனே கத்துவதற்கும் வித்தியாசம் இருக்கிறது….
//எழுதியவர்களை மக்கள் ஒற்றுமையை குலைக்கும் நாய்களாக சித்தரித்து எழுதுவதில் ஆச்சரியமல்ல//
யார் எங்கே எழுதினார்கள் வினவு….
//கோவை வட்டாரத்தின் ஆதிக்க சாதிகள் குறிப்பாக கொங்கு வேளாளக் கவுண்டர்கள் //
பழமைபேசி கவுண்டர் சாதின்னு யாரு உங்களுக்குச் சொன்னது.. அட.. கிராமத்த எழுதறவனும், மாப்புன்னு சொல்றவனும்.. ஒரு குறிப்பிட்ட சாதிக்காரன்னு எந்த முட்டாள் சொன்னது.
மீண்டும் சொல்கிறேன்… ஈரோடு சங்கமத்தில் கலந்து கொண்டு அது குறித்து எழுதினால் ஏற்றுக்கொள்வேன்… அதைவிடுத்து… சும்மா கதை விட்டால்… உங்களை விட அநீதியைத் தட்டிக்கேட்க எல்லோருக்கும் தெரியும்…
மிரட்டுவதற்கும் கண்டிப்பதற்கு கூடவா உங்களுக்கு வித்தியாசம் தெரியாது…. இங்கு நடந்த சங்கமம் பற்றி என்ன அய்யா உங்களுக்குத் தெரியும்? ஒரு விசயத்தைப் பற்றிய அறிவு இல்லாமல் எல்லாம் தெரியும் என எழுதுவது முட்டாள்தனம்.
பழமைபேசியின் இடுகையில் நான் என் புரிதல் சார்ந்து பின்னூட்டமிட்டால்… அரடிக்கெட்டுக்கு ஏன் எரிகிறது… அப்போ என் பின்னூட்டத்தில் நான் குறிப்பிட்ட நபர் அவரா?… அவருக்கு அரசியல் அடையாளமாக இருந்தால்…. களவானி நாய் ஆகிவிடுவாரா…
வினவு… நீங்கள் கெட்ட பிள்ளையாய் இருப்பதில் எனக்கேதும் கவலையில்லை…
கதிர் நீர் ஒரு கோழை! பழைமையாரின் பதிவில் நேற்று இடப்பட்ட இடுகை எனது பின்னூட்டத்தின் எதிர்வினை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை! அங்கேயே அது எதிர்வினை என பலரும் குறிப்பிட்டும் உள்ளனர். நீங்களும் அது எதன் எதிர்வினை என்று தெரிந்துதான் எழுதியிருந்தீர்கள். ஆனால் இப்போதோ எதற்காகவோ எழுதியது போல கோழைத்தனமாக உங்கள் எழுத்திற்கே பொருப்பேற்க அஞ்சுகின்றீர்கள். ஒரு கோழையை விமர்சனம் செய்வதை விட வெட்டிவேலை இருக்க முடியாது. எனக்கு வேறு வேலை உள்ளது.. உங்கள் மறுமொழிகளுக்கு நன்றி :-).
அர டிக்கெட்டு….
எனக்கு பெயர் அடையாளம் இருக்கு… கோழைதான் புரபைல் இல்லாம வரும்… தெரியுமா…. வேறு வேலை இருக்கிறது இப்போதாவது தெரிந்ததே.. நல்லது
நீங்கள் சொல்வது தவறு !!!
கோயம்புத்தூர் -ஈரோடு ,நாமக்கல் -போன்ற இடத்தில் சாதி வெறி -அதிகம் !!!
த சேகர் M.E/rousesekar@gmail.com,9094075401
மருதிபட்டி -அஞ்சல்
அரூர் -வட்டம்
தர்மபுரி
ஈரோடு கதிர்
நீங்களும் மொக்கைதான் என்று நீருபித்த்தற்கு நன்றி. பழமைபேசியை கவுண்டர் சாதியென்று எங்கே எழுதினோம்? அவரோ, நீங்களோ, மற்றவர்களோ என்ன சாதியென்பது எங்களுக்கு தேவையில்லாத விசயம். “கோவை வட்டாரத்தின் ஆதிக்க சாதிகள் குறிப்பாக கொங்கு வேளாளக் கவுண்டர்கள் அருந்த்தி மக்களை நாயினும் கீழாக நடத்துவதை பற்றி எழுதினால் எழுதியவர்களை மக்கள் ஒற்றுமையை குலைக்கும் நாய்களாக சித்தரித்து எழுதுவதில் ஆச்சரியமல்ல. நிஜ உலகில் இருக்கும் சாதிவெறி பதிவுலகில் மட்டும் இல்லாமல் போய்விடுமா என்ன?” இதுதான் வினவு எழுதியது. இது கோவையை சுட்டிக்காட்டக்கூடிய யாதார்த்தம். இந்த யாதார்த்த்தை மறுப்பவர்கள் சாதி வெறியர்களாகத்தான் இருப்பார்கள் என்பதே இதன் பொருள். இது கூட புரியாமல் பழமைபேசியை சாதி குறிப்பிட்டு எழுதியதாக நீங்கள் கட்டியமைப்பது அவதூறுப்பிரச்சாரம், அல்லது முட்டாள்தனம். எதையும் நீங்கள் தெரிவு செய்யலாம்.
மற்றபடி இந்த பதிவு சாதிவெறியைப் பற்றியது என்றால் அதைப்பற்றி எந்த கோபமும் உங்களுக்கு வரவில்லை, அது ஏன் வரவில்லை என்பதும் உங்களுக்கே வெளிச்சம். அதை விடுத்து பதிவர் சந்திப்பு குறித்து முடிந்துபோன ஒன்றை எழுப்புவதன்மூலம் விவாதத்தை திசைதிருப்ப எத்தனிக்கிறீர்கள். பழமைபேசியின் இடுகையின் பொருளோ, நீங்கள் போட்ட பின்னூட்டத்தின் பொருளோ புரியாமல் இல்லை. இப்போதுதான் படித்துப்பார்த்தேன். இதன் பொருள் பச்சைப்பிள்ளைக்கு கூடத் தெரியும். சாதிவெறியை கண்டிப்பவர்கள் எல்லாம் மக்கள் ஒற்றுமையைக் குலைக்கும் நாய்கள் என்று பச்சையாக நீங்கள் எழுதியிருக்கீறீர்கள். தலித் மக்கள் மீதான உங்கள் வெறுப்பு, வன்மம் எல்லாம் நாசுக்காக கூட இல்லாமல் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. நல்லதுதான், எப்படியும் அவதார புருஷர்கள் ஏதோ ஒரு நேரத்தில் தங்களது உண்மை சொரூபத்தை கலைப்பார்கள் என்பது பாமர மக்களுக்கும் தெரியும் உண்மை.
வினவு அநீதிகளைத் தட்டிக்கேட்பது உங்களுக்கு கத்துவதாக அபஸ்வரமாக இருப்பதும் புரிகிறது. சாவுக்கு மேளம் கொட்டுகிறவனின் ஓசை, கர்நாடக சங்கீதக்காரனுக்கு இரசிக்காதுதான். அந்தப் பறையொலியின் மூலம்தான் நாங்கள் ஒடுக்கப்படும் மக்களை அநீதிகளுக்கு எதிராக திரட்டி வருகிறோம். வெறுமனே எழுதிவிட்டு, நாலு பேரின் பின்னூட்டத்திற்காக வினவு எழுதவில்லை. எங்களது களப்பணியின் ஒரு அம்சம்தான் பதிவுப்பணி. களத்தில் சாதிவெறியர்களுக்கெதிராக நடத்தும் போராட்டத்தை பதிவுலகிலும் நடத்துவோம்.
விவௌ……..
இன்னும் கூட உங்கள் இடுகையை படிக்கவில்லை… அது எனக்கு அவசியமில்லை…
பின்னூட்டத்தில் முட்டாள்தனமாக என்னை இழுத்ததுக்குத்தான்.. இங்கே வந்தேன்..
சாதிவெறியர்களாக யாரையும் சித்தரிக்க முடியாது, ஏனெனில் இங்கு யாரும சாதி அடையாளத்தோடு… உங்களிடம் பேச வரவில்லை.. சாடி வெறி அடைப்படையில் எந்தக் கருத்தும் என்னிடம்… சக பதிவரை அந்த வாயன் இந்த வாயன் என்று சொல்ல எவனுக்கு எவன் உரிமை கொடுத்தது…. கருத்து இருந்தால்.. அதை வெளிப்படுத்தட்டும்
ஏயா கதிரேசா உனக்கு அறுவே கெடையாதா? சின்ன புள்ளைக்கு சொல்றாப்ல ஆளாளுக்கு புத்திமதி சொல்றாங்க அப்பறமும் புரியலன்ன என்னயா அருத்தம்?
கொங்குனா அது கவண்டமூடு மட்டுமில்ல செட்டியாரு, நாயக்கன, ஒடுக்கபட்ட சாதின்னு நெறய பேருக்கு கொங்குன்ற பேரு சாதியில் ஒட்டி கொண்டு இருக்குதுஆனா வெள்ளாளக் கவுண்டனுங்க மட்டும் கொங்குன்ற பேருக்கு அத்தாரிட்டியானது எப்டி கண்ணு? அவிங்க மட்டும் வண்டியிலருந்து குண்டி வரைக்கும் கொங்கு கொங்குனு ஒட்டிகிட்டு திரியறானுங்களே அது ஏன் ராசா?
கொங்கு மண்டலத்து கவண்டனுங்க ஆதிக்கம் அதிகமா இருக்குது அதுக்கு இவுங்களோட சாதி, பொருளாதார ஆதிக்கமுந்தான் காரணம், கொங்குன்ற பேருல கவண்டமூட தவிர வேற யாராவது கடை வெச்சு நடத்த முடியுமா நடத்துனாதான்உட்ருவாங்களா? கதையோ கற்பனையோ கார்க்கி எழுதுனது உண்மைங்க இத யாரும் மறுக்க முடியாதுங்க.
சென்னைல இருந்து ரயில்ல வரும்போது பாருங்க எத்தன வடக்கத்தான் கூட்டம் கோயமுத்தூர்ல இறங்குதுனு (எல்லாரும் பாக்றதுக்கு நம்மூரு பிச்க்காரன விட கேவலமா வறாங்க, இவங்களால அன்ரிசர்வேசன்ல எனக்கு எடம் கிடைக்கறது பெரும்பாடா இருக்குது) அவிங்கிட்ட பேச்சு குடுத்து பாருங்க அவன் படறபாடு தெரியும், காலைய்ல ஒரு பாக்கட்டு பிஸ்கட் அப்பறம் கருமாந்தரம் புடிச்ச பானபராக் அவ்ளவுதான் சாப்பாடு வாங்ற கூலிக்கு இதுக்கு மேல சாப்ட முடியாது, கோவைல இருக்கற வரைக்கும் இப்டிதான் லைப்ப தாட்றானுங்க, வெளியூர் அடிமைன்றது சரியான வார்த்தைங்க, அப்பறம் அரடிக்கட்டு அட்ரஸ் கேட்டிங்க அட்ரஸ் வாங்கி என்ன பண்ண போறீங்க
//அர டிக்கெட்டு… குறைந்த பட்ச தகுதியாக… பெயர், ஊர், மின்னஞ்சல் முகவரியோடு உள்ள அடையாளத்தோடு பின்னூட்டமிடும் தைரியம் இருந்தால்… நான் மறுமொழிகிறே//
சரி கதுரு உங்க முழு அட்ரசையும் குடுங்க நானும் அரடிக்கட்டு ஈரோடு வர்றோம் சத்தி ரோட்ல கோந்து பீப் வருவல் வாங்கி சாப்டுகிட்டே மிச்சத்த நேர்ல பேசிக்கலாம்.
ஈரோடு கதிர் என்ற ஒரு பங்குச் சந்தை சூதாடி* – அதாங்க ஷேர் புரோக்கர் – எழுதிய பின்னூட்டம்…
///// ஈரோடு கதிர் said…சில நாய்க கூட்டுக் களவானிக்கு போகும் போது… பொது ஜனங்க ஒற்றுமையா இருந்தா புடிக்குமா…
களவாட முடியாத நாய்க.. சிம்மே போடாத திருட்டு அலைபேசியில ஐஎஸ்டி கால் பேசுமாம்…
விடுங்க மாப்பு
February 1, 2010 10:50 PM /////
புரோக்கரய்யா – நீங்க நிசமா வாழ அடுத்தவனோட கனவை தின்னு, சூதாடி நடத்துற பொழப்ப விட நாயா பொழைக்கறது கவுரவம்!!!
ஒரு பின்னூட்டத்துக்கே எதிர் பதிவு போட்டு தன்னையும், வேறு சில முதுகு சொரியும் குச்சிகளையும் அம்பலப்படுத்திய பழமைவாயனுக்கு நன்றியோ நன்றி!!!
* பங்குச்சந்தை சூதாடி = பங்குச் சந்தை வர்த்தகம், பங்கு வர்த்தக ஆலோசனை.
///புரோக்கரய்யா – நீங்க நிசமா வாழ அடுத்தவனோட கனவை தின்னு, சூதாடி நடத்துற பொழப்ப விட நாயா பொழைக்கறது கவுரவம்!!!//
ஹ ஹ ஹ…. சரிங்க அர டிக்கட்டு…
வினவு… இதை வெளியிட்டு மகிழ்வதுதான் உங்கள் தரமா…. வினவு இது…. மிகக் கேவலம்….
கதிரு! கேவலத்த பத்தி பேசவும் ஒரு தகுதிவேணும்
////////////சில நாய்க கூட்டுக் களவானிக்கு போகும் போது… பொது ஜனங்க ஒற்றுமையா இருந்தா புடிக்குமா…களவாட முடியாத நாய்க.. சிம்மே போடாத திருட்டு அலைபேசியில ஐஎஸ்டி கால் பேசுமாம்…////////////////////
இது ரொம்ம்ம்ம்ம்ப கவுரவமான மறுமொழியோ????
அர டிக்கெட்டு… குறைந்த பட்ச தகுதியாக… பெயர், ஊர், மின்னஞ்சல் முகவரியோடு உள்ள அடையாளத்தோடு பின்னூட்டமிடும் தைரியம் இருந்தால்… நான் மறுமொழிகிறேன்… மற்றபடி நான் மறுமொழிகூறும் அளவிறகு உங்களுக்கு அடையாளம் இல்லை….
//அர டிக்கெட்டு… குறைந்த பட்ச தகுதியாக… பெயர், ஊர், மின்னஞ்சல் முகவரியோடு உள்ள அடையாளத்தோடு பின்னூட்டமிடும் தைரியம் இருந்தால்… நான் மறுமொழிகிறேன்…//
கதிரு சொல்வது படி முகவரி கொடுத்தால் கேவலமாக எழுதலாமாம். அ
///// ஈரோடு கதிர் said…சில நாய்க கூட்டுக் களவானிக்கு போகும் போது… பொது ஜனங்க ஒற்றுமையா இருந்தா புடிக்குமா…
களவாட முடியாத நாய்க.. சிம்மே போடாத திருட்டு அலைபேசியில ஐஎஸ்டி கால் பேசுமாம்…
விடுங்க மாப்பு
February 1, 2010 10:50 PM /////
மதி, தமிழக அரசு சமீபத்தில் தகவல் பெரும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட விளக்கமொன்றில், தமிழகத்தில் இரட்டை டம்ளர் முறை ஒழித்துக் கட்டப்பட்டு விட்டதாக சொல்லியிருக்கிறது…… கொங்கு நாட்டில் இரட்டை டம்ளர் முறை உள்ள கிராமத்தையும், கோவில்களுக்குள் நுழையக் கூடாது என்று சொல்லும் கிராமத்தையும் காட்டுங்கள்….
தமிழக அரசு மீது பொய்யான தகவல்கள் தந்ததற்காக ஒரு வழக்கு தொடுக்கலாம். குறைந்த பட்சம், நம் ம க இ க தோழர்களோடு போய் புரச்சி பண்ணி மக்களையாவது காப்பாத்தலாம்……
ஜல்லியடிக்கறதுக்கும் ஒரு வரைமுறை இருக்கு……நமக்கெதுக்கு இந்த வேளையெல்லாம்…..வந்தமா கோவிந்தா போட்டமான்னு இல்லாம எதுக்கு இந்த டயலாக்கெல்லாம்.
//இங்கு இன்னும் வரவில்லை. குறிப்பாக ஆதிக்க சாதியாகவும், ஆதிக்க சக்தியாகவும் இருக்கும் கொங்கு வேளாள்ளக் கவுண்டர்கள் பொருளாதார ரீதியாகவும் தலித்துக்களை அடக்கி ஆள்வதால் இந்தக் கொடுமை தொடர்கிறது. இத்தகைய சாதிவெறையை பெயர் சொல்லி கண்டிக்க கூட வக்கில்லாமல் காப்பாற்ற நினைப்பது புடுங்கியின் சாதி பாசத்தைத்தான் காட்டுகிறது.//
யோவ் புடுங்கி, ஊர் என்னய்யா ஊரு, கடையோட பேரு, அத நடத்துறவுங்க பேரு போட்டு பெரியார் திக பிரச்சாரம் செய்துள்ளது. அதுக்காக மிரட்டப்பட்டுள்ளனர். கவுண்ட சாதி வெறியனுங்க என்னா சொல்லி மிரட்டுனானுங்க தெரியுமா?
‘திக ன்னா கடவுளப் பத்தி பேசு, ஏன் இரட்டை தம்ளர் பத்தில்லாம் பேசுறன்னு’ மிரட்டுனானுங்க பேமானிப் பசங்க.
http://poar-parai.blogspot.com/2007/07/blog-post_17.html
//3) பெரியார் திராவிடர் கழகத்தினர் பழனி ஒன்றியத்தில் கவுண்டர் சாதிவெறியர்கள் நிறைந்த பகுதியில் ‘தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரப் பயணம்’ மேற்கொண்டிருந்தபோது ‘இரட்டைக்குவளைகள் முறை பற்றி’கண்டித்துப் பேசி வந்தனர். ஆத்திரமுற்ற கவுண்ட சாதி வெறியர்கள் பெ.தி.க. தொண்டர்களைத் தாக்க முயன்றனர். அப்போது அவர்கள் சொன்னது “தி.க.ங்கிற..சாமியப் பத்திப் பேசு..இட ஒதுக்கீடு பத்திப் பேசு..ஆனால் ரெட்டக்கிளாஸ் அது இதுன்ன..கொளுத்திப்புடுவோம்..”//
இரட்டைக்குவளை, இரட்டை வாழ்விடங்களை ஒழிக்கக்கோரி குடியரசு தினத்தில் கருப்புக்கொடி!
http://thozharperiyar.blogspot.com/2010/01/blog-post_27.html
//கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் திராவிடர் கழகம் தமிழ்நாடு முழுதும் நிலவும் தீண்டாமைக் கொடுமைகள் பற்றி ஆதாரங்களுடன் முகவரிகளுடன் ஒரு மிக நீண்ட புள்ளிவிபரப்பட்டியலை வெளியிட்டது.//
http://poar-parai.blogspot.com/2007/06/blog-post_05.html
கவுண்ட சாதி வெறியர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?
//மேலும், தலித் மக்கள் அமர்வதற்கு சற்றே தாழ்ந்த பெஞ்சோ, சிமெண்ட் திண்ணை அல்லது தரையோதான் ஒதுக்கப்படுகிறது. இக்கொடுமைகளை எதிர்த்து, பெரியார் திராவிடர் கழகத்தினர் 11.4.2007 முதல் பிரச்சாரப் பயணத்தை மேற் கொண்டனர். இதனால் சாதி இந்து கவுண்டர்களால் மிரட்டி விரட்டப்பட்டுள்ளனர்.//
திண்டுக்கல் – பெரம்பலூரில் இரட்டை தம்ளர் முறை உள்ள தேனீர் கடைப் பட்டியல்
http://www.keetru.com/periyarmuzhakkam/oct07/dual_cup_2.php
கிராமப்புறங்களில் நிலவும் சாதி ஆதிக்க வெறியை அம்பலபடுத்தும் எளிமையான , ஆழமான பொருட்செறிவு கொண்ட பதிவு. தொடர்ந்து எழுதவும்.
லீனா மணிமேகலை விமர்சனக் கட்டுரை என்ற பெயரில் வினவில் வெளிவந்த இடுகை குறித்தும் அதில் வினவின் மீது விமர்சனம் வைத்தவர்கள் மீது (வினவின் தீவிர வாசகர்கள் என்பதைச் சொல்லிக்கொண்டு வைத்தவர்கள் மீது உட்பட) வினவு தளம் காட்டிய போக்கு குறித்தும் வினவோடு போட விரும்பிய ஒரு பெரிய சண்டை இருந்தது, ஆனால் வழமைபோலவே நேரம் இல்லாது போனது. அதுவும் தவிர்த்து பர்தா நற்குடியில் வினவோடு ஏற்பட்ட சங்கடத்திற்குப் பிறகு வினவில் கருத்தெழுத (பின்னூட்டமாகக்கூட) ஒருவித ஈடுபாடின்மையே ஏற்பட்டது.
என்றாலும் சில இடுகைகள் படித்துவிட்டு அப்படியே போக விடுவதில்லை சந்திப்பின் மறைவு, இதோ இப்போது இந்த இடுகை.
கொங்கு வெள்ளாளக் கவுண்டர்களும் ஆதிக்க சாதி வெறி உடையவர்களே. கோவை மட்டுமல்ல ஈரோடு மாவட்ட உட்புறங்களிலும் கோவில்களுக்குள் விடாதது, தலித்துகளுக்குத் தனியான தண்ணீர்க்குழாய்கள், வீடுகளுக்குள் விடாமை போன்றவை தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விசயம் ஒரு ஊருக்குள்ளேயே இன்னமும் பல சாதிகளைக் கொண்டு இயங்குகிற பல ஊர்களைப் பார்க்கலாம். அங்கே தண்ணி புழங்கற சாதி, தண்ணி புழங்காத சாதி என்ற பிரிவுகளை வைத்திருப்பார்கள். அப்படிக் கொங்கு வெள்ளளர்களுக்குக் கீழே பல படிநிலைகளும், அந்தப் பலரும் சேர்ந்து துச்சமென வைத்திருக்கும் தலித் பிரிவினர் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாய் இருப்பார்கள். கொங்கு வெள்ளாளர்களின் வாழ்வோ, கலாச்சாரமோ, பண்பாடோ பதியப்பட்டால் அதில் அவர்களால் ஒடுக்கப்பட்டவர்களின் துயரங்களைச் சொல்லாமல் அது நிறைவு பெற்றுவிட முடியாது.
இதைச் சொல்ல வந்திருக்கும் இந்தக்கட்டுரை (எனக்கு இதுவும் கட்டுரை போலத்தான் இருக்கிறது என்பது படைப்பின் வடிவம் சார்ந்த விமர்சனம் என்று கொள்க) வரவேற்கப் படவேண்டியது. கதை என்று சொல்லி எழுத ஆரம்பித்தாலும் கொங்கு வெள்ளளர்களின் சாதி வெறியை இன்னும் துல்லியமாக ஒருகோட்டுப் பார்வையிலேயே எழுத முடியும். அந்த கெமிக்கல் சூழ்ந்த இடத்தில் தொழிலாளர்ட்களாய் இருப்பவர்கள் அடையும் இழிநிலைகள் என்பது சாதியையும் தாண்டிய வர்க்கப் பிரச்சினை என்பதையும், அந்த வர்க்கத்தை உறிஞ்சுபவர்கள் சாதிகளையும் கடந்த முதலாளி வர்க்கத்தினர் எனும் பார்வையில்
அதையும் உள்நுழைத்து நீட்சியை ஏற்படுத்தியிருக்க வேண்டியதில்லை. என் இக்கருத்தை எழுதியிருக்கும் ஆசிரியரோ அல்லது வினவோ எப்படி எடுத்துக்கொள்வீர்கள் எனத் தெரியவில்லை (பர்தா, நற்குடி அனுபவம் அப்படி)
ஆனாலும் பாசாங்காக ஒரு பின்னூட்டம் இட்டோ அல்லது இடாமலோ நகரமுடியாத ஒரு குற்ற உணர்வை என்னையும் சுமக்க வைத்து என் மூதாதையர்கள் வாழ்ந்த வாழ்விலிருந்து விடுபட நினைக்கும் ஒரு சராசரி மனதின் சிறிய துடிப்பாய் இவ்விடுகையைத் தார்மீகமாய் ஆதரிக்கத் தோன்றியது, எனவே பின்னூட்டம் எழுதினேன். நன்றி.
செல்வநாயகி, கருத்து வேறுபாடுகளை தெரிவிப்பதையே சங்கடமாக ஏன் கருதுகிறீர்கள் என்பது தெரியவில்லை. வினவின் மீது நீங்களோ மற்றவரோ விமரிசனம் வைப்பதை வினவு சங்கடமாக கருதவில்லை. விமரிசனங்கள் சரி என்றால் ஏற்பதும், தவறென்றால் அதை விளக்குவதையும் தாண்டி இதை ஆராக்கியமாகவே வினவு எடுத்துக்கொள்கிறது. லீனா மணிமேகலை கட்டுரையில் வந்த விமரிசனங்களுக்கு அப்போது எந்தப் பதிலையும் வினவு எழுதவில்லை. நேரமின்மையால் பிறகு எழுதுவதாக அறிவிப்பு ம்ட்டும் செய்தோம். நிச்சயம் அந்த விமரிசனங்களுக்கு கூடிய விரைவில் பதில் எழுதுவோம். அந்தக் கட்டுரை குறித்த உங்கள் விமரிசனங்களையும் வரவேற்கிறோம்.
இது கட்டுரை போலத்தான் இருக்கிறது என வடிவம் சார்ந்து விமர்சிப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. எழுதிய கார்க்கியே ஏற்றுக் கொண்டு விட்டார், உமக்கென்ன பிரச்சினை என்று கேட்டு விடாதீர்கள். வாய்ப்பிருப்பின், குறிப்பாகவும், விளக்கமாகவும் சொல்லுங்கள். வடிவத்தைப் பொருத்த வரை, சிறுகதை சற்று பெரிய கதையாக இருந்ததைத் தாண்டி, புனைவை விட்டகன்று கட்டுரையாக இருந்ததாகத் தோன்றவில்லை.
கொங்கு என்ற சொல்லை கேட்டாலே தமிழகத்திலேயே, மரியதையும், தனி சிறப்பான உணவு கலாச்சாரமும், சென்டிமென்டும்தான் தெரிந்த விசயம்ஆனால் ஜாதி முதலானவிசயங்களை கார்க்கி சிறப்பாக அம்பலபடுத்தியுள்ளார், ஒரு சின்ன குறைகட்டுரையை இன்னும் நீண்டாதாக்கி இரு பகுதியாக வெளியிட்டிருக்கலாம் அவ்ளவு சிறப்பாக இருக்கிறது.
கொங்கு
கெரகம்! வாயில மட்டும் மருவாதி இருந்து என்னுங்க பிரயோசனம்செயல்ல ஒரு கருமாந்தரமும் காணாமே !மனுசன மாட்டவுட கேவலமா பாக்கற கேப்மாரித்தனம் ஒழியோனும் !மனிதநேயமே இல்ல இதுல சாதி பன்னாட்டு வேற, த்தூ!
மரண அடி அவர்களே
//
////
கொங்கு என்ற சொல்லை கேட்டாலே தமிழகத்திலேயே, மரியதையும், தனி சிறப்பான உணவு கலாச்சாரமும், சென்டிமென்டும்தான் தெரிந்த விசயம்ஆனால் /////
என்பதிலிருந்தே நீங்கள் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பது தெரிகிறது
. பாழாய்போன சினிமா உங்களை மட்டுமல்ல பலரையும் இது போன்ற தப்பான எண்ணத்தில் வைத்துள்ளது, ஆனால் இங்கு இருப்பவர்களுக்கே தெரியும். கொங்கு என்ற சொல்லே கவுண்ட சாதியிக்குச் சொந்த சொல்லாக கருதப்படுவதும் தன்னை பெருமையாக கொங்கன் என்று சொல்லிக்கொள்ளும் கவுண்டசாதியினரும் இருப்பது. இவர்கள் மற்ற சாதிகள் அனைவரும் தங்களுக்கு ஏவல் செய்யவே பிறந்தவர்கள் என்று எண்ணிய காலமும் உண்டு. தற்போது ஏற்பட்ட தொழில் வளர்ச்சியின் காரணமாக தலித் சமூகத்தினர் மீதான ஆதிக்கம் குறைந்து வருவதையும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
— புதியவன்—
செல்வநாயகி அக்கா கரெக்டா புரிஞ்சுகிட்டு, புரியாத மாதிரி மறுமொழி எழுதிட்டு போயிட்டாங்களே??? ஒன்றைப் பற்றி பேசும்போது…என்ற சி.சிவசேரம் கவிதையை வினவுல வெளியிடுங்களேன்.. புண்ணியமா போகும்
இது கதையோ கட்டுரையோ, மிக அருமையான படைப்பு கார்க்கி, வாழ்த்துக்கள். செல்வநாயகி அக்கா விமர்சனமாக சொன்ன வரிகளையே நான் பாராட்டாக எழுதுகிறேன்…. @@@கெமிக்கல் சூழ்ந்த இடத்தில் தொழிலாளர்ட்களாய் இருப்பவர்கள் அடையும் இழிநிலைகள் என்பது சாதியையும் தாண்டிய வர்க்கப் பிரச்சினை என்பதையும், அந்த வர்க்கத்தை உறிஞ்சுபவர்கள் சாதிகளையும் கடந்த முதலாளி வர்க்கத்தினர் @@@ என்ற இன்றைய காலகட்டத்தின் சிக்கலான நிலையை வெளிப்படுத்தியதற்கு நன்றி
இது கோவையை மட்டும் சார்ந்த சிறுகதை-உண்மைகதையல்ல ஓவ்வொரு வட்டாரத்தையும் அதன் சாதிய படிமானங்களை அப்படியே சொல்லும் நிகழ்வுகள். இதையே வேறுமொழியில் nativity மாறவில்லை என்று சொல்கிறார்கள். தன் கிராமத்தில் இருக்கும் வரை சாதியால் ஒடுக்குபவனாகவோ அல்லது அதனால் பாதிக்கப்பட்டவனாக இருக்கிறான். தன் கிராமம் தாண்டும் போது அதன் அடையாளத்தை முழுமையாக அல்லா விட்டாலும் சற்றேனும் இழக்கிறான் அல்லது மாறுபடுகிறான்.
சிறுகதையைப் படித்த போது கோவையை நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது. கூடவே சாதி வெறியர்களையும் தெரிந்து கொள்ள முடிந்தது.
பண்ணைகளை வைத்து இருந்தாலும் சரி, நவீன கம்பெனி போட்டாலும் சரி, சாதித் தீண்டாமையை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள் ஆதிக்கச் சாதி வெறியர்கள்.
A great piece ! The flow is very natural and spantaneous(barring few places!).Good keep publishing such things in future also,..
பாராட்டிய தோழர்களுக்கு நன்றி!
செல்வநாயகி,
இது முதலில் ‘மில் தொழிலாளர்கள் பின்னணியில் ஒரு காதல் கதை’ என்பதை மனதில் கொண்டு எழுத துவங்கி, அது தன் போக்கில் கட்டுரையாகி
கடைசியில் ‘கதை’ எனும் வடிவத்துக்குள் வலிந்து இழுத்து வந்ததால் ஏற்பட்ட வடிவக் குழப்பம். புனைவு என்று எழுத ஆரம்பிக்கும் போது நேரில்
கண்ட அனுபவங்கள் பலவற்றை உள்ளடக்கி விட வேண்டும் எனும் முனைப்பு அதிகமாக இருப்பதால் வடிவத்தைப் பற்றி அதிகம் அலட்டிக்
கொள்வதில்லை. உங்கள் விமர்சனம் நன்றாக இருந்தது. நன்றி
மனிதர்களை மரியாதையாக நடத்துவது என்பது அதன் உண்மையான அர்த்தத்தில் அத்தானை விட வேறு யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை.
சிறப்பான சித்திரம்
பழமைபேசி இந்த லிங்கை எதுக்கு கொடுத்துருக்காருன்னு தெரியல. கவுண்ட சாதி வெறி பத்தி பழமை பேசி எழுதிருப்பாரோன்னு ஒரு நப்பாசைல போனா அப்படி ஒன்னும் இல்ல.
அவரே இந்த லிங்கை கொடுத்த ரகசியத்தை விளக்கிட்டா புன்னியமாப் போகும்
இராசா, உங்க உள்நோக்கம் என்ன இப்பத் தெரியுது இராசா! நடத்துங்க!!
//இராசா, உங்க உள்நோக்கம் என்ன இப்பத் தெரியுது இராசா! நடத்துங்க!!//
யோவ் இதுல என்னையா உள்நோக்கம்?
//அவரே இந்த லிங்கை கொடுத்த ரகசியத்தை விளக்கிட்டா புன்னியமாப் போகும்//
என்னோட மேற்குறிப்பிட்ட கேள்விக்கு பதில் சொல்லாம பழம பேசி திசை திருப்புவதில்தான் அவரது உள்நோக்கம் தெரிகிறது என்று நான் சந்தேகப்பட்டால் அதில் ஒரு அர்த்தம் இருக்கு. கேள்வி கேட்டலே உள்நோக்கம்னு சொன்னா அத எந்தக் கணக்குல சேக்கனு தெரியல
உண்மையைச் சொல்லும் பதிவு. ஸ்டாலின், “அராஜகவாதமா சோஷலிசமா” என்ற புத்தகத்தில், புரட்சியின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிப் பேசும்போது, புரட்சி ‘அளவுரீதியிலான மாற்றங்களை’ அடைவது, பரிணாம வளர்ச்சி என்பார். அதாவது, மாற்றத்தை (சமுக மாற்றத்தை) நோக்கி மக்கள் மென்மேலும் தள்ளப்படும் நிலை. இந்த அளவுரீதியிலான மாற்றததை அதாவது உழைக்கும் மக்கள் திரளின் ஒற்றுமையை , ஒரே (தமிழ்) இனத்திற்குள் சிதைக்கின்ற ஒரு காரணியாக ஜாதியும், பொதுவாக ஒரு வர்க்கமாக இணைவதைச் சிதைப்பதில் மதம், ஜாதி, இனவெறி ஆகியன உள்ளன. தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு ஆதிக்கசாதியினர் இந்த பணியினைச் செவ்வனே செய்கின்றனர். இது திண்டுக்கல் பகுதிகளில் மிகக் கடுமையாக உள்ளது என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். நான் சார்ந்த விழுப்புரம் பகுதியில் முன்பு நாயக்கர்கள், சமணர்கள் (பிராமணர்களின் தாக்கத்தால் சமணர்களும் மற்ற மதங்களைச் சார்ந்தவர்களை இளக்காரமாக நினைக்கிறார்கள். ஜாதியத்தின் படிநிலையைப் பொறுத்து அவர்கள் தரும் மரியாதை மாறும்), ரெட்டியார்கள், செட்டியார்கள் ஆகியோர் ஜாதியத்தை வெளிப்படையாக ஆண்டார்கள். இப்போது, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் முதலானவர்களின் வருகையின் பின்பு, இவர்கள் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாவிட்டாலும் உள்ளுக்குள் ஜாதியத்தோடுதான் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் பாமக, விடுதலைச்சிறுத்தைகள் முதலானோரின் பிழைப்புவாத ஜாதியத்தீயினால் கருகாமல் பெரும்பான்மையான மக்கள் வாழ்கிறார்கள் என்பது நிம்மதி தருகின்ற விடயம். பாமகவின் போராட்டத்தில் குண்டடிப்பட்ட, இறந்த குடும்பங்களைச் சார்ந்தவர்கள் இன்றும் சாதாரணமாகத்தான் வாழ்கிறார்கள். ஜாதிகளைக் கடந்த வர்க்க ஒற்றுமையே நிரந்தரத் தீர்வு என்பதற்கு இவர்களின் வாழ்க்கையே நல்ல உதாரணம்.
அன்புள்ள கார்க்கி கொஞ்ச நாள் முன்னால நான் கிணத்துக்கடவுல தங்கி இருந்தேன் நீங்கள் சொல்வது அவ்வளவும் நிஜம் அருமையான பதிவு
[…] மேலும் 0 கருத்து | பிப்ரவரி 2nd, 2010 at 6:35 am under Blog திரட்டி […]
அப்பனைத் திருத்த யோக்கீத இல்ல, அப்பத்தாள திருத்த முடியல, ஊரவுட்டு ஓடிட்டா பிரச்சனை மூஞ்சுதா???????
உங்க அப்பத்தா செத்ததுக்கு நீ வராமவுட்டு போட்டா சமத்துவம் கெடச்சிருமில்ல……….
அப்பத்தா மோசம், ஆனா, அப்பனைக் கொண்டுபோயி இருந்துக்கலாம்…..
நல்லாயிருக்குய்யா உங்க சமூக நீதி………
ஆமா, எங்கயோ, சிறுகதைன்னு ஆரம்பிச்சு, உண்மையச் சொல்லப் போனதால வந்த குழப்பத்தில புனைவா மாறப்போச்சுங்கறமாதிரி இருந்த ஒரு பின்னூட்ட திடீர்னு காணாம போச்சு….
உள்ளூர் அடிமைகள் வெளியூர் போயிட்டாங்க, புது வெளியூர் அடிமைகள் உள்ளூர் வந்திட்டாங்கன்னு நல்லாச் சொன்னீங்கப்பு……
ஆமா, சாதீயக் கொடுமையும், வர்க்கப்போராட்டத்தையும் என்னாமா இணைச்சு எழுதியிருக்கிங்கய்யா?????/
வால்க புரட்டு……வலர்க….எலக்கியம்…..
சில விஷயங்கள் இப்படித்தான். படித்து முடித்தவுடன் எதிர்த்தோ, ஆதரித்தோ கண்டிப்பாய் ஓர் பின்னூட்டமிட் தோன்றச் செய்யும். கதை வடிவிலான இந்தக் கட்டுரையும் அப்படியே. செல்வநாயகி சொன்னது போல கடைசிப் பகுதிகளில் சாதி, வர்க்கம், முதலாளித்துவ உறிஞ்சல்கள் என்று பல விஷயங்களை ஒரே சம்யத்தில் தொட்டுச் செல்ல முயற்சித்து விட்டாரோ என்று தோன்றியது.
இருப்பினும் இறுதி வரிகளும், ஒட்டு மொத்தமாய் சொல்ல வந்த விஷயங்களும் இநத பதிவின் கனத்தை அதிகரித்திருக்கிறது. மிகச் சிறப்பான பதிவு கார்க்கி. வெகு நிச்சயமாய் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
கொங்கு மண்டலத்தின் கோர முகமே இக்கதை. உள்ளுரிலே வாழ வழி இன்றி அகதியாய் அயலுருக்கு சென்றாலும், தனது ஆதிக்க சாதித்திமிரை நிலைநாட்ட விரும்புகின்ற கேவலமான பண்பாட்டை இன்னும் கட்டிக்காக்கிற மனோபாவம் கொங்கு மண்டலத்திலே உள்ளது. கொங்கு வெள்ளாள கவுண்டர்களில் உள்ள ஆண்களுக்கு சராசரியாக தனது கவுண்டர் ஜாதி யிலே பெண்கள் இல்லை என்பது. பெண் திசுக்கொலை இன் அம்பலம் al
/பழமைபேசி கவுண்டர் சாதின்னு யாரு உங்களுக்குச் சொன்னது..//
அப்படி யாருமே இங்கே சொல்லலையே ராசா… நீயா ஏன் கற்பனை பன்னிக்கிற?
நீ… யாரு ராசா…
வினவுகிட்ட கேட்ட அவரு பதில் சொல்லட்டும்…
உனக்கு என்னாச்சு…
அமைதியா இரு
வினவு, உங்கள் நேரத்தை வீண்டித்ததிற்கு வருந்துகிறேன்
//விவௌ……..//
வினவு
//வினவு
says:
ஈரோடு கதிர்
நீங்களும் மொக்கைதான் என்று நீருபித்த்தற்கு நன்றி.//
நீங்கதான் பதிவர்களுக்கு டிகிரி (பட்டம்) கொடுக்கிற புத்திசாலியா…
வேணாம்மய்யா… உங்க பட்டம்….
உங்க நன்றியும் வேணாம்… உங்க வேலைய சக பதிவரை தாக்காமல் பாருங்கள… எல்லாம் நன்றாக நடக்கும்
ஈரோடு கதிர், முதலில் பழமைபேசியை சாதி குறிப்பிட்டு எழுதியதாக சொன்ன பொய்க்கு மன்னிப்பு கேட்கவும். பின்னூட்டத்தைக் கூட புரிவதற்கு அறிவில்லாத்தால்தான் தங்களை மொக்கை என்று எழுத நேர்ந்த்து. இது பட்டமல்ல, விமரிசனம். எப்போதும் பாராட்டுதலில் மூழ்கியிருக்கும் உங்களுக்கு பட்டம் என்பதற்கும் விமரிசனத்திற்கும் கூட வித்தியாசம் தெரியவில்லை. இந்த நல்ல இடுகையைக்கூட படிக்கவில்லை என்பதை ஆணவமாகக் கூறுவதிலிருந்தே உங்கள் புத்திசாலித்தனம் புரிகிறது. ஆனாலும் ஏதோ மேலோட்டமாக படித்துவிட்டு, சாதிவெறியர்களின் மனதைப் புண்படுத்தியிருப்பதாக புரிந்து கொண்டு அதற்கு சாதிவெறியை எதிர்ப்பவர்களை நாய்கள் என்று தெளிவாக எழுதுவதும் புரிந்து கொள்ளமுடிகிறது. செய்வதை எல்லாம் செய்து விட்டு சக பதிவரை தாக்காமல் இருக்க வேண்டுமென்று அபயம் தேடும் இரகசியமும் புரிகிறது.
வினவு….
உங்கள் இடுகையின் பின்னூட்டத்தில் பெயர் சொல்லி அசிங்கமாக பின்னூட்டத்தில் எழுத அனுமதிப்பதற்கு நீங்கள் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்….
//இந்த நல்ல இடுகையைக்கூட படிக்கவில்லை என்பதை ஆணவமாகக் //
அதெல்லாம் இல்லை…. அதுசரி… உங்க்ளை வாசிக்க வேண்டிய அவசியம் இல்லை….
ஈரோடு கதிர்
இங்கு உங்களை அசிங்கமாக யாரும் எழுதவில்லை. இதைப்பற்றி ஏற்கனவே விளக்கி எழுதிவிட்டோம். பழமைபேசியின் இடுகையில் அசிங்கமாக ஆணவம் தலைக்கேற பின்னூட்டம் இட்டிருப்பது நீங்கள்தான். இது அரடிக்கெட் எழுதிய பின்னரே எங்களுக்கு தெரியவந்த்து. அதைப்பற்றி வாயே திறக்காமல் தப்பித்து ஒடுவது உங்கள் உரிமை. மற்றபடி உங்களைப் போன்றவர்கள் வினவைப் படிக்க வேண்டிய அவசியல் இல்லாமல் இருப்பதை பாராட்டாக எடுத்துக் கொள்கிறோம்.
வினவு……..
இன்னும் கூட உங்கள் இடுகையை படிக்கவில்லை… அது எனக்கு அவசியமில்லை…
பின்னூட்டத்தில் முட்டாள்தனமாக என்னை இழுத்ததுக்குத்தான்.. இங்கே வந்தேன்..
சாதிவெறியர்களாக யாரையும் சித்தரிக்க முடியாது, ஏனெனில் இங்கு யாரும சாதி அடையாளத்தோடு… உங்களிடம் பேச வரவில்லை.. சாதி வெறி அடைப்படையில் எந்தக் கருத்தும் என்னிடம் இல்லை… சக பதிவரை அந்த வாயன் இந்த வாயன் என்று சொல்ல எவனுக்கு எவன் உரிமை கொடுத்தது…. கருத்து இருந்தால்.. அதை நியாமமாக் தன்மையாக வெளிப்படுத்தட்டும்
ஈரோடு கதிர் மீண்டும் உங்கள் அறிவு புல்லரிக்க வைக்கிறது. //சாதிவெறியர்களாக யாரையும் சித்தரிக்க முடியாது, ஏனெனில் இங்கு யாரும சாதி அடையாளத்தோடு… உங்களிடம் பேச வரவில்லை..// சாதி வெறியர்களாக யாரையும் சித்தரிக்க முடியாது என்று எல்லா சாதி வெறியர்களையும் புனிதர்களாக மாற்றிவிட்டீர்கள். அடுத்து ஒருவர் என்ன சாதி என்று தெரிவித்தால் மட்டும்தான் சாதி அடையாளம் வெளிப்படும் என்ற உங்கள் உலக அனுபவம் நீங்கள் கிணறையல்ல, ஒரு குட்டையைக்கூட தாண்டவில்லை என்று தெரிகிறது. சாதி வெறியின் நுட்பமான ஆயிரம் சூட்சுமங்களை நேரில் கண்டிருப்பதனால் நீங்கள் பழமைபேசியின் இடுகைக்கு போட்ட பின்னூட்டத்திலிருந்தே நீங்கள் யார் பக்கம் என்பது தெரியாமல் இல்லை. இதற்கெல்லாம் ஒரு நபரைப்பற்றிய விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. குறிப்பிட்ட கருத்தில் நீங்கள் எடுக்கும் நிலைபாட்டிலிருந்தே உங்களை அணுகமுடியும். இந்த விவாதமும் அப்படித்தான்.
அரடிக்கெட்டு என் பெயரை இழுத்ததற்காகத்தான் இங்கு வரவேண்டியிருந்தது….
உங்களோடு உங்கள் இடுகை குறித்து விவாதித்துத்தான் என் புத்திசாலித்தனத்தை நிரூபித்து சான்றிதழ் வாங்க வேண்டிய நிலைக்கு இன்ன்ன்ன்ன்ன்ன்ன்னும் நான் ஆளாகவில்லை…. இதிலிருந்து முழுக்க விலகுகிறேன்…. நன்றி
ஈரோடு கதிர் = சொந்த செலவில் சூன்யம். வினவு. சீக்கிரமே மொன்னைவெட்டிகளிடமிருந்து ஆர்பாட்டமான எதிர்பதிவை எதிர்பாருங்கள்.
//அதெல்லாம் இல்லை…. அதுசரி… உங்க்ளை வாசிக்க வேண்டிய அவசியம் இல்லை….//
கோமாளித்தனத்தின் உச்சம் இதுதான். வாசிக்கவே அவசியம் இல்லாத அறிவுத் திலகத்திற்கு, அதை வைத்து விவாதிக்க மட்டும் அவசியம் இருக்கிறது. இவர் பேசுவதைக் கேட்டால், ஒரு வடிவேலு காமெடியில், “திரும்பத் திரும்பப் பேசுற நீ, திரும்பத் திரும்பப் பேசுற நீ!” ன்னு கத்திகிட்டே ஒரு ஐயர் சாய்வது தான் நினைவுக்கு வருகிறது. செம காமெடி சார் நீங்க!
நல்லத்தான்யா பேரு வெச்சாங்க உனக்கு வெ.வெ. வினவுன்னு………
கடந்த 5, வருடத்தில் கோவை மாவட்டத்தில எத்தனை கொடுமைகள் தலித்துகளுக்கு எதிரா நடந்துன்னு தெரியுமா? பதிவர்கள் அறியாத கோவையை அறிமுகப்படுத்தியதிலிருந்தே தெரிகிறது உங்கள் லட்சணம்.
குருடன் யானையப் பார்த்த கதைன்னு ஒன்னு எங்க ஊரில சொல்லுவாங்க….அதுமாதிரி
ஏதோ கோவை மாவட்டத்தில் மட்டும்தான் சாதீயக் கொடுமைகள் தலைவிரித்து ஆடுகின்றது போன்ற ஒரு தோற்றத்தை பதிவர்கள் மத்தியில் கொண்டு சொல்ல முயலும் உங்கள் பார்வை சாதீய கொடுமைகளுக்கெதிரானதாக தெரியவில்லை….குறிப்பிட்ட சமுகத்திற்கெதிரானதாகவே காட்டுகிறது.
சரித்திரத்தின் ஒரு பாதியை, அரைகுரையாகவாவது படித்துவிட்டு எழுதத் தொடங்குங்கள். தொழிற்சங்கங்களின் வளர்ச்சியிலும், அதையொட்டிய சமூக மேம்பாட்டிலும் கோவை மாவட்டம் என்ன பங்காற்றியிருக்கிறது என்பதை யாராவது பழைய கம்யூனிஸ்டுகளிடம் கேட்டாவது தெரிந்து கொள்ளுங்கள்….. இந்த இடுகையில் சாதிக் கொடுமைகளுக்கெதிரானதாக ஆரம்பித்து, முதலாளிவர்க்கங்களுக்கு குடைபிடிக்கும் விதமாக கொண்டு சென்று, பின்னால் சமாளித்து, ஏதோ புதிதாக கூறுவது போல் உள்ளூர் அடிமைகள் போய் வெளியூர் அடிமைகள் வந்துவிட்டதாக எழுதியதை என்னவென்று சொல்வது?
சிறு பண்ணை விவசாயங்கள் இருந்த காலத்தில், ஒருவன் யார்? பின்னனி என்ன? என்ற விசயங்கள் எல்லாம் இருந்திருக்கலாம். இன்று வேலைக்கு ஆள் எடுப்பவன் வேறு, மேற்பார்வையிடுபவன் வேறு, சம்பளம் கொடுப்பவன் வேறு, முதலாளி வேறு…..இப்படி முதலாளித்துவ பொருளாதாரத்தின் பெரும்பிடியில் சிக்கியிருக்கும் கோவையின் அடிப்படை பிரச்சனைகளை விடுத்து, இது போன்ற சம்மந்தமில்லாமல் எழுத உங்களைத்தவிர யாரால் முடியும்????
//“ஆள் பஞ்சமில்லீடா.. நெலத்த வித்தவிங்களுக்கு அவிங்க நெலத்திலெயே எவனோ ஒருத்தனுக்கு வேல பாக்க மனசில்ல. மின்ன கூலி வேலை பாத்தவங்கெல்லாம் திருப்பூருக்கு போயிட்டாங்க//
இப்படி ஆட்களே இல்லாத ஊரில் எங்கே போய் இந்த கதையைச் சொல்ல???????? எழுதியவர் தான்
ஆறாம் வகுப்பு படித்த போது இருந்த நிலையின் அடிப்படையில் இதை எழுதிவிட்டார் என நினைக்கின்றேன். ஆளும் வளரனும், அறிவும் வளரனும் அதுதானே வளர்ச்சின்னு பட்டுக் கோட்டை பாடுனது இவருகாகத்தான்னு நினைக்கின்றேன்.
அடிமைகள் மாறிவிட்டார்களாம், புதிதாக அடிமைகள் கிடைத்துவிட்டார்களாம். அடிமைத்தலையைப் பற்றிய இடுகையா? சாதீயக் கொடுமைகள் பற்றிய இடுகையா? முதலாளிதத்துவ எதிர்ப்பு இடுகையா? குறிப்பிட்ட சமூகத்தினர் மீதான எதிர்ப்பு இடுகையா?????????? கொஞ்சம் சொல்லுங்க சாமி???????????
புடுங்கி அவர்களே,
//கடந்த 5, வருடத்தில் கோவை மாவட்டத்தில எத்தனை கொடுமைகள் தலித்துகளுக்கு எதிரா நடந்துன்னு தெரியுமா? பதிவர்கள் அறியாத கோவையை அறிமுகப்படுத்தியதிலிருந்தே தெரிகிறது உங்கள் லட்சணம். குருடன் யானையப் பார்த்த கதைன்னு ஒன்னு எங்க ஊரில சொல்லுவாங்க….அதுமாதிரி
ஏதோ கோவை மாவட்டத்தில் மட்டும்தான் சாதீயக் கொடுமைகள் தலைவிரித்து ஆடுகின்றது போன்ற ஒரு தோற்றத்தை பதிவர்கள் மத்தியில் கொண்டு சொல்ல முயலும் உங்கள் பார்வை சாதீய கொடுமைகளுக்கெதிரானதாக தெரியவில்லை….குறிப்பிட்ட சமுகத்திற்கெதிரானதாகவே காட்டுகிறது.//
தலித்துகள் சாதிவெறியைத்தட்டி கேட்டால்தான் அந்த ஊர் ‘அமைதி’ குலைந்து செய்தியாய் வெளிவரும். இதுதான் கொடியங்குளம் கலவரத்தில் நடந்த்து. மேற்கு தமிழகத்தில் வாழும் அருந்த்தியின மக்கள் இந்தக் கொடுமைகளை இன்னும் எதிர்க்க முடியாமல் வாழ்கிறார்கள். சில இடங்களில் எதிர்ப்பு காட்டியதற்கே சாதி வெறியர்கள் கொதித்து எழுந்ததும் நடந்திருக்கிறது. இதை வைத்தே கோவை அமைதியாக இருக்கிறது என்றால் அதன் பொருள் சாதி ஆதிக்கத்தின் அமைதிதான். தமிழகத்தின் மற்ற பகுதிகளை விட மேற்குப்பகுதியில் இருக்கும் தீண்டாமைக் கொடுமை அதிகமானது. மற்ற பகுதிகளில் இது கேள்விக்குள்ளாக்கப்பட்டது போல இங்கு இன்னும் வரவில்லை. குறிப்பாக ஆதிக்க சாதியாகவும், ஆதிக்க சக்தியாகவும் இருக்கும் கொங்கு வேளாள்ளக் கவுண்டர்கள் பொருளாதார ரீதியாகவும் தலித்துக்களை அடக்கி ஆள்வதால் இந்தக் கொடுமை தொடர்கிறது. இத்தகைய சாதிவெறையை பெயர் சொல்லி கண்டிக்க கூட வக்கில்லாமல் காப்பாற்ற நினைப்பது புடுங்கியின் சாதி பாசத்தைத்தான் காட்டுகிறது.
ஒரு இடம் அமைதியாக இருக்கிறது என்றால் அங்கே ஆதிக்கவெறி இருப்பதாக பேசுவது மிகவும் வேடிக்கை……
சாதிக் கொடுமையை நாங்கள் கண்டிக்கத் தொடங்கி பல ஆண்டுகளாகிவிட்டன………தோழர் ஜீவாவில் தொடங்கி…….பெரிய பட்டியலிடமுடியும்……தொழிற்சங்கங்கள் வெறும் வர்க்கப் போராட்டங்களை மட்டும் முன்னிறுத்தவில்லை……..எல்லாக் கொடுமைகளையும் தான் தட்டிக் கேட்கின்றன.
பதிவர்கள் அறியாத கோவையைப் பற்றியது பிரச்சனை……..இதுதான் கோவை என்று உங்கள் மேதாவிலாசத்தை காட்டிக் கொள்ள முயற்சித்ததன் பின்னனியே இந்த பின்னூட்டங்கள்……பிரச்சனையை திசை திருப்ப வேண்டாம்…….
‘புடுங்கி’ என்று தனக்கு பெயர் சூட்டிக் கொண்ட பெரிய மனிதரின் கவனத்திற்கு, நேற்றைய செய்தி… http://www.ndtv.com/news/india/dalit_tortured_for_daring_to_wear_shoes.php
//ஏதோ கோவை மாவட்டத்தில் மட்டும்தான் சாதீயக் கொடுமைகள் தலைவிரித்து ஆடுகின்றது போன்ற ஒரு தோற்றத்தை பதிவர்கள் மத்தியில் கொண்டு சொல்ல முயலும் உங்கள் பார்வை சாதீய கொடுமைகளுக்கெதிரானதாக தெரியவில்லை….குறிப்பிட்ட சமுகத்திற்கெதிரானதாகவே காட்டுகிறது.சரித்திரத்தின் ஒரு பாதியை, அரைகுரையாகவாவது படித்துவிட்டு எழுத//
இந்த கட்டுரை கொங்கு மண்டலம் சம்பந்தபட்டது, இங்க மதுரைய பத்தி எழுத முடியாது,மதுரை உடபட பிற பகுதிகள நிலவும் சாதி வெறிய பத்தி வெச்சு வினவுகாரங்க எழுதிருக்கறாங்க அதல்லாம் படிக்காமயே பின்னூட்டம் போட வந்துட்டியாக்கும் குறிப்பிட்ட சமூகம் என்று எழுதும் பெரிய புடுங்கி அவர்களே அந்த குறிப்பிட்ட சமூகம் பண்ற அட்டூழியத்த எழுத கூடாதா? அதையும் குறிப்பிட்ட சாதியால் குறிப்பிட்ட சிலர் பாதிக்கபடுகின்றனர் என்று எழதனுமா? அப்படி ஒரு குறை பார்வை வினவுக்கு இல்லாம போன்து நம்ப சந்தோசமா இருக்குது,
அப்றம் இந்த சரித்திரம் தரித்திரம்னு டகால்டி வுடறதெல்லாம் நம்மகிட்ட வெச்சுக்காத
though the walls are same in nature ,the reactions were totally different.thouse who have followed the incidents around the walls that have been broken in uthapurm,and in coimbatore ,will realize this truth.there is something for the west to learn from south.there are equally enough and more atrocities are being done to dalits in this reagin,i dont see any awereness about this among the people living here .there is virthual media ban on this except hindu and dalit murasu.as for as i remember there was atleast 5 incidets which had the potancy to become a big clash.but we hear slogans agnist s.c.act.
sorry for the interuption,what i want to say is that vinavu is correct when he says that calmness always not neccessarily means there are no undercurrent.it is simply that it being done in this way
thats all.i live in erode ,ihavent come across atleast ones about the atrocities among the non dalits.either people belive full heartedly that there is no such thing in this regin…,, or full suppoters for scrapping the s.c.act saying that it is used only to misuse.
i think the BRICKS IN THE WALL will tell about the kongu capital kovai.what a shame to ramasamy .
சொந்த பேரில் எத்தனை கேவலமாக வேண்டுமென்றாலும் பின்னூட்டமிடுவார்கள். அதைக் கேட்டால்…உனக்கு அட்ரஸ் இருக்கா! என்ற கேள்வி வேறு! எங்கு பின்னூட்டமிட்டாலும் எங்கு வேண்டுமென்றாலும் பதில் சொல்லும் அளவிற்கு நேர்மையில்லை.
கடைசி வரைக்கும் அதற்கு பதிலே சொல்லவில்லை. பதிவர்களை சீண்டாதே! என்கிற கோபம் தான் முன்னுக்கு வருகிறது! கருத்து வரவில்லை.
இங்கே புடுங்கி எனும் பெயரில் எழுதிச் செல்லும் நபரின் மனம் தான் கோவையின் ஒரிஜினல் மனம். தன்னைச் சுற்றி நடப்பதை கண்களை மட்டும்
மூடிக் கொண்டு நடக்கவே இல்லை என்று நம்பும்-நம்பச் சொல்லும் மனம். கோவை என்பது மில்கள், பிரிக்கால், எல்.எம்.டபிள்யு, எல்&டி,
சிடிஎஸ் இன்னும் இது போல சில பல கம்பெனிகள் மட்டும் தான் என்றும் நம்பும் மனம். தெற்கே செல்வபுரம், வடவள்ளி, பூசாரிபாளையம் –
கிழக்கே பீளமேடு, சிங்காநல்லூர் – வடக்கே பெரியநாய்க்கன் பாளையம், துடியலூர் – மேற்கே சுந்தராபுரம் குணியமுத்தூர். இது தான் இவர்கள்
காணும் கோவை.
இந்த எல்லைக்கு வெளியே ஒரு கோவை இருக்கிறது. இப்போ சமீபத்தில் தான் பெ.தி.கவினர் ஊர் ஊராக சென்று இரட்டைக் குவளையை
எதிர்த்து போராடிக் கொண்டிருந்தனர். பெ.தி.கவின் போராட்டம் கண்ணாடி தம்ளர்களை ப்ளாஸ்டிக் தம்ளர்களாக மாற்றியதைத் தாண்டி
வேறொன்றும் சாதிக்கவில்லை. சரியாக ஏழு மாதத்திற்கு முன் நாதேகவுண்டனூரில் தலித் காலனிக்கு வெளியே அம்பேத்கர் படம் கொண்ட தட்டி
வைத்ததற்காக சில தலித் இளைஞர்கள் தாக்கப் பட்டிருக்கிறார்கள்.
ஜனநாயக உணர்வு கொண்ட கோவை வாழ் பதிவர்கள் யாராவது இப்பதிவையும் இதன் விவாதங்களையும் கவனித்தால், அவர்களை நகரத்துக்கு
வெளியே சென்று ஏதாவது ஒரு ஊரில் உள்ள டீ கடையை ஒரு இரண்டு மணி நேரம் நின்று கவனித்து இங்கே ஒரு ரிப்போர்ட் தரட்டும். என்னால்
சவால் விட்டுச் சொல்ல முடியும் – கோவையில் இந்த நிமிடம் வரைக்கும் இரட்டைக் குவளை (அ) பிளாஸ்டிக் தம்ளர் கடைபிடிக்கப் படுகிறது.
சில மலையாளிகள் நடத்தும் கடைகள் வேண்டுமானால் விதிவிலக்காக இருக்கலாம்.
அடுத்து, கடந்த பத்தாண்டுகளில் பொள்ளாச்சி ரோடு பாலக்காடு ரோடு பகுதிகளில் சின்னச் சின்னதாக நிறைய ஆக்சிலரி கம்பெனிகள்
முளைத்திருக்கிறது. அதாவது ஏதாவது பெரிய கம்பெனிக்கு சின்னச் சின்ன லேத்து வேலை செய்து தரும் கம்பெனியாகவோ, அல்லது டி.எம்டி
இரும்பு கம்பி கம்பெனியோ, அல்லது பிளாஸ்டிக் கம்பெனியோ – இந்த ரீதியில் நிறைய கம்பெனிகள் முளைத்திருக்கிறது. அங்கெல்லாம்
மிகக் குறிப்பாக ஒரிசாவில் இருந்தும் பீகாரில் இருந்தும் ஆட்களை கூட்டி வந்து வேலை வாங்குகிறார்கள். இது தான் சிட்கோவிலும் நிலைமை.
அவர்கள் வாழும் நிலை என்பது சொல்லில் வடிக்க முடியாத சோகம். இங்கே கோபப் படும் அன்பர்கள் ஒரு தரம் தயவு செய்து நேரில் போய்
பாருங்கள். வர்ண ரீதியிலான ஒடுக்குமுறை என்பது கடந்த ஒரு பத்தாண்டுகளில் வர்க்க ரீதியிலான ஒடுக்குமுறையாக உருமாற்றம் அடைந்து
வருகிறது.
போக, தங்க வேலைக்காக நிறைய பேர் ( தங்க பட்டறை வைத்திருக்கும் எனது நன்பன் ஐம்பதாயிரம் பேருக்கும் மேல் இருக்கும் என்கிறான்)
மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வந்து அறை எடுத்து சலீவன் வீதி, மாரண்ண கவுடர் வீதி, குரும்பர் வீதி மற்றும் காந்தி பார்க் சுக்கிரவார்
பேட்டை பகுதியைச் சுற்றி தங்கியிருக்கிறார்கள். இவர்கள் வாழ் நிலை கற்பனைக்கெட்டாத குரூரம் கொண்டது. இவர்கள் மொத்தம் எத்தனை
பேர் என்ற கணக்கே கிடையாது.
இந்த மாதிரி பட்டரைகளில் 8 மணி நேரம் அல்லது குறிப்பிட்ட நேர அளவிலான வேலை என்று கிடையாது; நிலையான
சம்பளமும் கிடையாது. மாறாக அட்சய திரிதியை, தீபாவளி, முகூர்த்த தினங்கள் போன்று எப்போது பரபரப்பான விற்பனை நடைபெறும் நாள்
வருகிறதோ அப்போது பெரு நகைக்கடைகள் தங்கக் கட்டிகளை இது போன்ற பட்டறைகளுக்குக் கொடுத்து நகையாக வாங்குவார்கள். அந்த
சமயத்தில் மட்டும் ஊழியர்களை கசக்கிப் பிழிவது; அதுவும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தூங்காமலும், இடையில் பட்டறையை விட்டு
வெளியேற தடை விதிப்பதும் ( தங்கத் துணுக்குகளை நக இடுக்குகளில் மறைத்து எடுத்துச் சென்று விடுவார்கள் என்ற சந்தேகத்தில்) கழிவறை
வரையில் கண்கானிப்பதும் என்று குறைந்த பட்ச மனிதாபிமானம் கூட காட்டுவதில்லை. தொழிலாளிகளும் அந்த நாட்களில் சம்பாதித்தால் தான் உண்டு. சீசன் அல்லாத நாட்களில் சம்பளம் கிடையாது.
இப்படிப்பட்ட பட்டறைகள் பொதுவில் காற்றோட்டம் இல்லாமலும் அடைசலாகவும் தான் இருக்கும் (தப்பித்தவறி தங்கம் பட்டறை
முதலாளிகளுக்குத் தெரியாமல் வெளியேறுவதைத் தடுக்க) தொடர்ந்து உட்கார்ந்தே வேலை செய்வதால் மூலவியாதி, முதுகுவலி, தங்கம்
உருவாக்குவதில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்களின் விளைவாய் ஆஸ்துமா போன்ற உபாதைகளோடு தான் பெரும்பாலான நகைத் தொழிலாளிகள்
தமது வாழ்வை கழிக்க வேண்டியுள்ளது.
கோயமுத்தூர் என்றவுடன் இனிமையான சிறுவானி தண்ணீர் மட்டும் நினைவுக்கு வரவேண்டும் என்றும் அதன் உண்மையான இன்னொரு முகத்தை
மேக்கப் போட்டு மறைத்து விடலாம் என்று நினைக்கும் புடுங்கி போன்றவர்கள் ஆபத்தானவர்கள்.
எந்த ஊர்காரர்களுக்குமே தங்கள் ஊர் மேல் அதீத பாசம் இருக்கும். கோயமுத்தூர்காரர்களுக்கு அது கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
கோவையை பற்றி சொன்னாலே கவுண்டர்களைப் பற்றி சொல்லிவிட்டதாக பொறுமும் அளவுக்கு அந்த ஊரும் அந்த சாதியும் பிண்ணிப் பிணைந்தே
இருக்கிறது.
நான் பொதுவில் பயணிக்கும் ஊர்களை அதன் அழகியல் அம்சங்களைக் கொண்டு கவனிப்பதில்லை. எனது பார்வை அந்த ஊரில் பொருளாதாரம்,
அது தோற்றுவிக்கும் உறவுகள், அவற்றுக்கிடையிலான முரண்பாடுகள் என்ற கோணத்திலிருந்தே பார்க்கிறேன்.
இதற்கு மேலும் மனக்கசப்பு கொள்ளும் கோவை அன்பர்களை நான் கேட்டுக் கொள்வதெல்லாம் இது தான் – “தயவு செய்து உங்கள் அறையில் இருந்து வெளியே வந்து இருக்கும் உண்மையான உலகத்தை பாருங்கள் – அப்போது சிறுவானி இனிக்காது; கசக்கும்”
நண்பர்கள் தோழர் கார்க்கி எழுதியிருக்கும் இன்றைய கோவையின் சித்திரத்தை தவறாது படியுங்கள்.
200 % சரி
-tsekar
தான் இந்த சாதி என்று பெருமையாக சொல்லி கொள்ளும் சாதி வெறியர்களுக்கு காய் அடிக்கும் சட்டம் கொண்டு வந்தால் மகிழ்வேன்!, என் கை காசில் கொரடு வாங்கி தர நான் ரெடி!
ஏதோ நம்ம ஊர பத்தி எழுதிருக்காங்கன்னு பாத்து இங்கு வந்தேன்.பார்த்தால் கட்டுரையாளரின் கல்லுளி மங்கத்தனம் தான் தெரிகிறது.சாதியத்தின் அடிப்படையை புரிந்து கொள்ளாமல் எழுதப் பட்டுள்ளது.இந்திய/தமிழ் மனம் என்பது சாதிய மனம் தான்.சாதியத்தின் பண்பே ஒருவனை ஒரு சாதிக்கு மேலாகவும் இன்னொரு சாதிக்கு கீழாகவும் உணர வைப்பது தான்.பல்லாயிரம் ஆண்டுகளாக புரையோடியுருக்கும் மனத்தை அவ்வளவு எளிதில் மாற்றி விட முடியும் என்று தோணவில்லை.மாற்றத்தை மிக மிக மெதுவாக ஏற்றுக் கொள்ளும் சமூக அமைப்பில் தடலாடி விளைவுகளை எதிர் பார்க்க முடியாது தான்.
கால வெள்ளத்தில் எல்லா ஆதிக்கமும் முடிவுக்கு வரும் எந்த ஆதிக்கமும் நிலைத்து நின்றதாக இந்த மண்ணில் வரலாறு இல்லை.
ஆனால் கதை எழுதுவதாக கூறி கொண்டு “கதை” விடும் கார்க்கியின் யோக்கிதையை கொஞ்சம் ஆராய்வோம்.கதையாளர் அதீதமான கற்பனையை கட்டவிழ்த்து விட்டுள்ளார்.மேலும் தன்னை சுற்றி ஒரு “புரட்சிகர” விம்பத்தை உருவாக்க கடுமையாக முயன்றுள்ளார்.
ஆனால் அவரது சொற்களாலேயே அவர் அம்பலப் படுவது தான் இங்கு வாழ்வின் கசப்பான நகைச்சுவை.
தனது நண்பனை திட்டியதற்காக தனது ஆத்தாவை குறை கூறும் நமது நாயகன் பின்பு ஏன் தனது சகோதரி செய்த செயலுக்காக ஊரை காலி செய்து கொண்டு செல்லவேண்டும் என்பது விளங்கவில்லை.அப்படியானால் தனது சகோதரி தவறு செய்து விட்டால் என்ற “ஆதிக்க சாதி மனத்தோடு” அவர் சமரசம் செய்து கொண்டார் என்பது தான் அர்த்தம் ? பின்னர் எதற்கு இந்த “புரட்சிகர” வேடம் ? அவர் அங்கேயே இருந்து எதிர்த்து போராடி இருக்கலாமே ?.எனக்கு தெரிந்து இந்த பகுதியில் இதெற்கெல்லாம் ஊரை காலி செய்து கொண்டு போகிறவர்கள் அறவே இல்லை.
தனது மொத்த வெறுப்பிற்கும் இலக்காக அப்பத்தா தான் இருந்திருக்கிறார். இதில் அப்பத்தாவின் நிலையை சிந்தித்தோமானால் அவர் நிச்சயம் ஒரு கல்வி அறிவற்ற பழமையில் ஊறித் திளைத்த சாதிய இறுக்கம் நிறைந்த ஒருவர்.ஆனால் அதற்க்கு அவரை மட்டுமே குற்றம் சுமத்த முடியாது.அப்பத்தா ஒரு சமூகத்தின் விளை பொருள் அவ்வளவே.
எனக்கு தெரிந்த வரையில் அப்பத்தாக்களுக்கு கல்வி அறிவு இருந்ததாகத் தெரியவில்லை.எனவே தன்னுடைய அறிவைக் கொண்டு சிந்திக்காமல் வெறும் உணர்ச்சி வயப் பட்ட நிலையில் அணுகுகிறார் நாயகன்.இந்த இடத்தில் ஒரு “எமோசனல் இடியட்” ஆக வடிவம் கொள்கிறார்.
//ஒரு கட்டத்தில் பூசாரி மகன் பெருமாள் மகனிடம் வேலைக்கு செல்ல வேண்டிய நிலையும் கூட ஏற்பட்டது //
யார் என்ன சாதி யாரோடு பழக வேண்டும் பேச வேண்டும் என்று விவரம் தெரிந்த நாளில் இருந்தே தெளிவாகவும் நுணுக்கமாகவும் சொல்லி தரப் படுகிற ஒரு இறுகிய அமைப்பில் இது நூறு விழுக்காடு சாத்தியம் இல்லை.
இதுவும் கதையாளரின் “கதையே”.
தனது அப்பத்தாவையே இவரால் புரிந்து கொள்ளவோ நேசிக்கவோ இவரால் முடியவில்லை.இவர் மக்களை நேசிக்கிறாராம்.இது சாத்தான் வேதம் ஓதுவது போலில்லை ?.என்னதான் அப்பத்தா தவறு செய்திருந்தாலும் அவர் கல்வி அறிவோ பகுத்தறிவோ அற்றவர் அதை அறியாதவர் செய்த தவறாக எடுத்திருக்க வேண்டுமே தவிர ஏதோ அவர் தான் இந்த சாதியத்துக்கு,ஏற்பாட்டுக்கு முழுக்காரணம் என்பது போல வெறுப்பை காரி உமிழ்ந்திருக்கிறார்.இதன் மூலம் தனது “போலி புரட்சிகர விம்பத்தை ” உருவாக்க முனைகிறார்.இங்கே தான் உண்மையில் அவரது வேடம் ஒப்பனைக்கு பொருந்தவில்லை.
அப்புறம் வருகிறார் சுந்தரி அக்கா
//சிக்கலான தருணங்களை அவள் அநாயசமாக கையாளுவதைக் கண்டிருக்கிறேன். முடிவுகள் எடுப்பதிலும் அதில் ஊன்றி நிற்பதிலும் அவளது உறுதி என்னை எப்போதும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது//
அவர் என்ன சிக்கலான தருணத்தை அனாயசமாக கையாண்டிருக்கிறார் என்பது தெரிய வில்லை அது சொல்லப் படவும் இல்லை.அவர் எடுத்த ஒரே முடிவு அவரின் திருமண வாழ்கை பற்றியது தான்.உடன் போதல் என்பது தான்,அதில் கூட பகுத்தறிவுக்கு இடமில்லை.கண்டதும் காதல் கொண்டதே கோலம் மாதிரி இருக்கிறது.அவர்களிடத்தில் எந்த அறிவார்ந்த புரிதலின் அடிப்படையில் காதல் இருந்தது என்பதும் சுத்தமாக விளங்கவில்லை.
பிராய்டின் உளப் பகுப்பாய்வின் படி பார்த்தால் ஒரு பெண்ணுக்கு இயல்பாக தந்தையிடம் இருக்கும் ஈர்ப்பு,அன்பு என்பது அவருக்கு கிடைக்கவில்லை ஆதாலால் கிடைத்த ஆணிடம் காதல் வயப் பட்டிருக்கிறார் உடன்
போதல் நிகழ்ந்துள்ளது அவ்வளவே.இந்த விம்பமும் தேவை அற்ற ஒரு பினாத்தாலே.
//மாணிக்கம் அத்தான் அவளை மிக மரியாதையுடன் நடத்தினார்//
இதுவும் ஒரு அப்பட்டாமான திரிபு வாதமே.ஆண் மனத்தைப் பற்றி ஒரு சிறு அடிப்படைப் புரிதல் இருந்தால் கூட இவ்வாறு எழுதி இருக்க மாட்டார்.இதில் தலித் ஆண்,ஆதிக்க சாதி ஆண் என்ற வேறுபாடுகள் இல்லை ஏதோ தலித் ஆண் மட்டும் நல்ல ஆண் மனத்தைக் கொண்டுள்ளதாக வருவது மடத்தனமே.இதில் சாதி வேறுபாடுகள் இல்லை ஒடுக்கப் படும் பெண்ணின் மனம் மூலம் தான் இதை விளக்க முடியும்.தலித் பெண்கள் தலித் ஆண்கள் மூலமுமே கொடூரமான ஒடுக்கு முறைகளை சந்திப்பதை பார்த்திருக்கிறேன்.மாணிக்கம் அத்தான் நன்றாக நடத்தினார் என்பது நம்பும்படி இல்லை பில்ட் அப் தான்.
மேலும் ஒரு தலித் வேலைக்கு செல்வதும் அதே வேலைக்கு ஒரு ஒரிசா காரன் செய்வதால் அவனும் தலித் ஆகவே இருக்கிறான் என்பதும் மிகத் தவறான புரிதல்.மேல் சாதி கீழ் சாதி வேறு தொழிலாளி முதலாளி வேறு.இந்த அடிப்படையே தெரியவில்லை சுத்தம் !! .
எழில் தம்பியின் சாதிய குழப்பங்களை தீர்க்க தோழர் கார்க்கி வருவார் என்ற நம்பிக்கையுடன்……
எழில்,
நீங்கள் இக்கதையின் நிஜ நாயகன் கார்க்கி தான் என்று தீர்மானித்துக் கொண்டும் – எப்படியும் ஒரு எதிர்ப்பு மறுமொழி இட்டுவிட வேண்டும்
எனும் பதற்றத்தின் மேல் நின்று கொண்டும் இதை எழுதியிருப்பீர்கள் போல தெரிகிறது.
போகட்டும்..
//தனது நண்பனை திட்டியதற்காக தனது ஆத்தாவை குறை கூறும் நமது நாயகன் பின்பு ஏன் தனது சகோதரி செய்த செயலுக்காக ஊரை காலி
செய்து கொண்டு செல்லவேண்டும் என்பது விளங்கவில்லை//
நாயகன் எங்கே ஊரை காலி செய்து கொண்டு சென்றான்? அவன் அந்தத் தீர்மானத்தை எடுக்கும் வயது தான் ஆகியிருந்ததா? அந்தப் பொடியன்
அவன் அப்பாவைத் தொடர்ந்து அவரோடு வெளியேறுகிறான். உங்கள் மறுமொழியின் அந்த பத்தி முழுவதும் இந்த வாதத்தின் மேல் கட்டப்பட்டதாய்
இருப்பதால் மேற்கொண்டு வேறு விளக்கம் தேவையில்லை.
//ஆனால் அதற்க்கு அவரை மட்டுமே குற்றம் சுமத்த முடியாது.அப்பத்தா ஒரு சமூகத்தின் விளை பொருள் அவ்வளவே//
இதே அளவு கோளைக் கொண்டு மொத்த சாதியக் கொடுமைகளையும் கூட நியாயப்படுத்தி விட முடியுமே? அவன் ஏன் அப்பத்தா மேல் கோபம்
கொள்ள வேண்டும்? – பொதுவில் பள்ளியில் ஐந்தாம் / ஆறாம் வகுப்பு வரையில் சாதிய உணர்வு அற்று (அல்லது) அந்தப் புரிதலோ உணர்தலோ
இன்றி தான் நாமும் படித்திருப்போம். அதற்கு முன்பு நமக்கு சாதிப் பெருமை பற்றி எவராவது அளந்து விட்டிருந்தால் கூட அது புரிந்திருக்காது.
அப்போது நாம் பழகும் எல்லோருமே நமது விளையாட்டுத் தோழர்களாகத் தானே இருந்திருப்பார்கள்?
முதன் முறையாக ‘புரியும் விதமாக’ சாதி தன்னை நம் முன்னே விளங்கச் செய்யும் போது நமக்குள் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டிருக்குமே.. உங்களுக்கு
ஏற்பட்டதோ இல்லையோ எனக்கும் நான் பழகிய அனைவருக்கும் அவ்வாறு ஏற்பட்டிருக்கிறது. அத்தனை நாட்கள் நம்மோடு விளையாடிய (குறைந்த
பட்சம் ஊர்த் தெருவில் இல்லாவிட்டாலும் பள்ளியிலாவது) நன்பர்களை வேற்று மனிதர்களாக பார்க்க நிர்பந்திக்கப் படும் போது ஒரு முரண்பாடு
எழும் அல்லவா? அந்த முரண்பாட்டை நம்முள்ளே ஏற்படுத்தியவர்கள் மேல் எந்தவித உணர்ச்சி தோன்றும் என்பது நாம் நமது நன்பர்களோடு
எந்தளவுக்கு உணர்வுப்பூர்வமாக நெருங்கியிருந்தோம் என்பதிலிருந்தும் – அப்போது அறிமுகமான சாதியத்தினுள் எந்தளவுக்கு உள்வாங்கப் பட்டோ ம்
என்பதிலிருந்தும் தான் தீர்மானம் ஆகும். கதையின் நாயகன் தனது நன்பனோடு மிக நெருங்கியிருந்தான் – பின்னர் அந்தச் சாதியின் இறுக்கமான
கட்டுமானம் அற்ற ஒரு ஊருக்கு இடம் பெயர்ந்து விட்டான். எனவே கோபம் சரிதானே?
அடுத்து உங்களது மறுமொழியிலேயே உள்ள மிக முக்கியமான உளரல் –
//ஆண் மனத்தைப் பற்றி ஒரு சிறு அடிப்படைப் புரிதல் இருந்தால் கூட இவ்வாறு எழுதி இருக்க மாட்டார்.இதில் தலித் ஆண்,ஆதிக்க சாதி ஆண்
என்ற வேறுபாடுகள் இல்லை ஏதோ தலித் ஆண் மட்டும் நல்ல ஆண் மனத்தைக் கொண்டுள்ளதாக வருவது மடத்தனமே.இதில் சாதி வேறுபாடுகள்
இல்லை ஒடுக்கப் படும் பெண்ணின் மனம் மூலம் தான் இதை விளக்க முடியும்.தலித் பெண்கள் தலித் ஆண்கள் மூலமுமே கொடூரமான ஒடுக்கு
முறைகளை சந்திப்பதை பார்த்திருக்கிறேன்.மாணிக்கம் அத்தான் நன்றாக நடத்தினார் என்பது நம்பும்படி இல்லை பில்ட் அப் தான்.//
ஒரு புனைவில் எதார்த்தத்தை எதார்த்தமாக மட்டுமே சொல்ல வேண்டும் எனும் கட்டாயம் இல்லை. அந்த எதார்த்தத்தை கடந்து நாம் ஏற்றுக்
கொண்ட அரசியலை சொல்வதில் என்ன தவறு? அடக்குமுறைக்கு ஆளான ஒருவரால் தன்னைப் போல் அடக்குமுறைக்கு ஆளான இன்னொரு
மனதை சுலபத்தில் புரிந்து கொள்ள முடியும் – அது எதார்த்தத்தில் அவ்வாறு தான் இருக்கிறதா என்று நீங்கள் கேட்டால் – அப்படியில்லாவிட்டால்
ஒரு புது எதார்த்தத்தை உண்டாக்க வேண்டும் என்கிறேன்.
ஈழத்தமிழனின் சோகத்தை தொப்பூள் கொடி உறவு என்று பீற்றிக் கொள்ளும் தமிழ் நாட்டுத் தமிழனை விட ஒரு காஷ்மீரியாலும், ஒரு
ஆப்கானியராலும், ஒரு ஈராக்கியராலும்.. மிகச் சிறப்பாக – உணர்வுப்பூர்வமாய்- புரிந்து கொள்ள முடியும். முள்ளிவாய்க்காலில் சிதறிய உடலும்
ஈராக்கில் சிதறிய உடலும் பேசும் மொழியால் மட்டுமே வேறு; எதிர் கொண்ட ஈயக் குண்டு ஒன்று தான். அந்தக் குண்டு புறப்பட்ட துப்பாக்கிக்
குழலின் தேவையும் நியாயமும் கூட ஒன்று தான்.
பெண் அடிமைத்தனத்திற்கும், உழைக்கும் மக்களின் மேலான ஒடுக்குமுறைக்கும் மூலம் ஒன்று தான். பிரம்மாவின் இடது கடைவாயில்
உழைக்கும் மக்களான தலித்துகள் அறைபடுகிறார்கள் – வலது கடைவாயில் பெண்கள் அறைபடுகிறார்கள். விஷ்ணுவின் இடது கை சம்பூகனின்
தலையை வெட்டியெறிந்தது – வலது கையோ சீதையை நெருப்புக் குண்டத்துக்குள் தள்ளி விட்டது.
சீதையின் வலியை சம்பூகனை விட மேலாக யாரால் புரிந்து கொள்ளமுடியும்?
எதார்த்தத்தில் இந்தப் புரிதலின் அடித்தளத்தின் மேல் தான் எதிர்ப்பியக்கங்களும் போராட்டங்களும் கட்டமைக்கப்படுகிறதா என்றால் – மிகக்
குறைவு தான். ஆனால் அவ்வாறு தான் இருக்க வேண்டும்.
இந்தப் புரிதலின் குறைபாடு தான் ஒரே பிரதான எதிரியைக் கொண்டிருக்கும் பீகார் கிராமத்து கூலித் தொழிலாளியோடு இணையும் மனதை
தமிழினவாதிகளுக்கு தர மறுக்கிறது.
ஒரு கற்பனையான புனைவு நம்பும்படியிருக்க வேண்டும் என்பது அவசியமில்லை – இது செய்தித்தாளும் அல்ல; எழுதப்பட்டது நடந்த நிகழ்வின்
செய்தியுமல்ல. தலித் பெண்கள் தலித் ஆண்களால் ஒடுக்கப்படுகிறார்கள் தான் – ஆனால் எங்குமே சிலிண்டர்கள் வெடிப்பதில்லை. உறவுகளின்
புனிதம் என்கிற கற்பிதமும் போலித்தனமும் அடித்தட்டு உழைக்கும் மக்களிடம் ஒப்பீட்டளவில் குறைவு. ஒரு தலித் ஆதிக்க சாதி பெண்ணை
காதலித்து மனம் முடித்து தங்களுக்குள் தோழமையோடு தங்கள் இருவரையும் மேலிருந்து அழுத்தும் பார்ப்பனியத்தை எதிர்த்து நிற்கும் எதார்த்தமும்
நடப்பில் இல்லை தான். ஆனால் ஏன் அவ்வாறு இருக்கக் கூடாது?
//மேலும் ஒரு தலித் வேலைக்கு செல்வதும் அதே வேலைக்கு ஒரு ஒரிசா காரன் செய்வதால் அவனும் தலித் ஆகவே இருக்கிறான் என்பதும் மிகத்
தவறான புரிதல்.மேல் சாதி கீழ் சாதி வேறு தொழிலாளி முதலாளி வேறு.இந்த அடிப்படையே தெரியவில்லை சுத்தம் !! .//
“மேல் சாதி கீழ் சாதி வேறு – தொழிலாளி முதலாளி வேறு” – சரி அப்படியென்றால் அருந்ததினரில் இருந்து அம்பானி அளவுக்கு இல்லாவிட்டாலும்
சரவணா ஸ்டோ ர் அண்ணாச்சி அளவுக்காவது முதலாளியாக உயர்ந்த ஒருவரைக் காட்டுங்களேன் – தனது சுய சாதி அடையாளத்தோடு.
எல்லா ஆதிக்க சாதிக்காரனும் முதலாளியாகிவிடவில்லை தான் – ஆனால் எல்லா ஒடுக்கப்பட்ட சாதியினரும் தொழிலாளிகளாகவே இருப்பதன்
இரகசியம் தான் என்ன?
இந்தியாவில் முதலாளித்துவம் ஐரோப்பிய முதலாளித்துவத்திலிருந்து மிக வேறுபட்டது. பார்ப்பனிய ஒடுக்குமுறையை தன்னுள் சுவீகரித்துக்
கொண்டிருப்பது. இந்தியத் தொழிலாளியைப் பொருத்தளவில் உழைப்பு என்பது வெறும் விற்பனைச் சரக்கு மாத்திரமல்ல – உழைப்பைத் தர
வேண்டியது ஒரு கடமையும் கூட – அதுவும் பரம்பரை பரம்பரையாக. வளங்களின் மேல் உரிமை கோரும் நிலையை அவர்கள் அடைந்துவிடாமல்
ஒருபக்கம் முதலாளித்துவமும் இன்னொரு பக்கம் பார்ப்பனியமும் உறுதி செய்து கொள்கிறது.
எதார்த்தத்தில் ஒரு தலித் காலனிக்கும் வட மாநிலத்திலிருந்து இடம் பெயர்ந்து வந்துள்ள தொழிலாளிகள் தங்கியுள்ள இடங்களுக்கும் நீங்கள்
வேறுபாட்டையே காண முடியாது.
அதற்கு ஆதாரம் உள்ளது. இம்முறை வேறு வேலையாக அங்கே சென்றிருந்த போது இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் குடியிருப்பை சில
புகைப்படங்கள் எடுத்து வரும் வாய்ப்பு கிடைத்தது. அதனை வினவு தோழர்கள் விரும்பினால் அனுப்பித் தருகிறேன். இடம் பெயர்ந்த தொழிலாளர்
பற்றிய பதிவு ஏதும் எழுதப் படுமானால் அதை பிரசுரிக்கலாம் என்று நினைக்கிறேன். அந்த குடியிருப்புக்கு “லேபர் கேம்ப்” என்றே பெயர்
வைத்திருக்கிறார்கள் – அதன் சூழலும் அகதிகளுக்கான ஒரு தடுப்பு முகாம் போலத் தான் இருக்கிறது. உள்ளூர்வாசிகளிடம் அவர்கள் கலந்து
பழக முடியாத வன்னம் அந்தக் குடியிருப்பு ஊருக்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கிறது ( ஒன்று தானே என்று கேட்காதீர்கள் – நான் நான்கைந்து
கன்ஸ்ட்ரக்ஷன் சைட்டுகளில் சுற்றிப் பார்த்து விட்டு தான் சொல்கிறேன்)
வங்கத்து இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்தவர்கள் இங்கே தங்க வேலைக்காக வந்து தங்கியிருக்கிறார்கள் – அவர்கள் நிலை கட்டுமான,
பௌண்டரி, சிறு பட்டரைகளுக்கு வேலைக்கு வரும் பீகார் / ஒரிசா / ம.பி / உ.பி காரர்களை விட கொஞ்சமே கொஞ்சம் மேல் என்றாலும்
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அவர்கள் நிலையும் கீழானதாகவே இருக்கிறது.
மற்றபடி பெருமாள் மகனிடம் ஊர்க்காரன் வேலைக்குப் போகும் எதார்த்தம் இல்லை தான் – அது என் கற்பனை – உங்கள் திருப்திக்காக –
ஆம் நான் கதை விட்டிருக்கிறேன்.
பெயிண்டிங், கம்பி கட்டுவது, கான்க்ரீட் போடுவது போன்ற அமைப்புசாரா கூலி வேலைகளுக்கு கிராமத்திலிருந்து நகரத்துக்கு வரும் ஒரு
தலித்துக்கும் கவுண்டனுக்கும் பணியிடத்தில் திறமையிலோ சம்பளத்திலோ என்ன வேறுபாடு? கவுண்டன் பெயிண்டிங் காண்ட்ராக்ட் எடுக்க
முடியுமென்றால் பெருமாள் மகனாலும் தான் எடுக்க முடியுமே? எதார்த்தத்தில் இல்லை என்பதைத் தாண்டி அதில் என்ன தவறு?
பின்னூட்டங்களில் தனி மனித தாக்குதலை தவிர்க்கலாம் அந்த வாயன் இந்த வாயன் போன்ற அநாகரீகமான வார்த்தைகளை தவிர்ப்பது நலம்.மேலும் வினவின் அதிர்வெண்ணிலேயே எல்லாரும் சிந்திக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது புரியவில்லை பழமைபேசி அவர் பாணியில் எழுதுகிறார் அவர் வினவை வம்புக்கு இழுக்கவில்லை.மேலும் பதிவு எழுத வருகிறவர் எல்லாம் எல்லா பிரச்சினைகளைப் பற்றியும் எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை.இந்த நிலை நீடித்தால் பதிவுலகம் ஒரு குழாயடிச் சண்டையாக மாறிவிடும் பின்பு நாறிவிடும்
வினவு
கொங்கு வட்டார அருந்ததியர்களின் வாழ்வியல் மற்றும் பொருளாதார நிலைகளை அறிந்து கொள்ள பாரதியார் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள
அரவக்குறிச்சி வட்டார அருந்ததியர்களின் வாழ்வியலும் பொருளாதாரமும் என்ற முனைவர் பட்ட ஆய்வேட்டை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
–புதியவன்–
its very nice .it displays the reality of covai.and the people living under civilisation