Wednesday, October 4, 2023
முகப்புபி.டி கத்திரிக்காயும் - பி.ஜே.பி வெங்காயமும் !!
Array

பி.டி கத்திரிக்காயும் – பி.ஜே.பி வெங்காயமும் !!

-

vote-012அண்மை காலமாக ஒரு வித்தியாசமான காட்சியை நாம் காண்கிறோம். மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் பல தரப்பினரால் பரவலாக நடத்தப்படுகின்றன. அறிவுத்தள செயற்பாட்டாளர்கள், தன்னார்வக் குழுக்கள், இயற்கை வேளாண் விசுவாசிகள், ஊடகங்கள், அரசியல் கட்சிகள், பத்தி எழுத்தாளர்கள், நடிகர்கள் என யூகிக்கவே முடியாத பல தரப்பினரும் மரபணு மாற்ற விதைகளுக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர்.

போராட்டம், எதிர்ப்பு என்பதை எல்லாம் வாழ்வில் அறிந்தே இராத உயர் மேல்தட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் கூட இதற்காக பேசுகின்றனர். இப்போராட்டங்கள் தொடர்பாக நாள்தோறும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைப் பார்த்தால் ‘திருந்திட்டாய்ங்களோ’ என்றே எண்ணத் தோன்றுகிறது.

நம்மாழ்வார் உள்ளிட்ட இயற்கை விவசாயத்தை வலியுறுத்துபவர்கள் இதற்காகப் பேசுவதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் பா.ஜ.க.வின் இல.கணேசன், மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக மாய்ந்து, மாய்ந்து குரல் கொடுக்கிறார். ஆர்.எஸ்.எஸ். கூட இதை கண்டிக்கிறது. இது தொடர்பான செய்திகளை ஊடகங்கள் கூடுதல் முக்கியத்துவம் தந்து பிரசுரிக்கின்றன. குறிப்பாக இந்துத்துவ, பார்ப்பன ஊடகங்கள் என்றுமில்லாதக் கூத்தாக மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக பிரசாரமே செய்கின்றன.

பொதுவாக இத்தகைய தனது ஏகாதிபத்திய தரகு வேலைகளுக்கு எதிர்ப்புகள் வரும்போது அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் கடந்து செல்வது அல்லது போலீஸ் லத்தி மூலம் பதில் சொல்லி அடக்கி ஒடுக்குவது என்பதுதான் ஆளும்வர்க்கத்தின் காலம் காலமான வழிமுறை. ஆனால் அந்த அரசு கூட மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு அஞ்சுவது போல நடிக்கிறது. ‘பி.டி. கத்தரிக்காயை சந்தையில் விற்பனை செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்’ என பெயரளவுக்கேனும் மத்திய அரசு சொல்ல வேண்டியிருக்கிறது. புறத்தோற்றத்தில் இப்போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்திருப்பதைப் போன்று ஒரு சித்திரத்தை உருவாக்க இவ்வரசு முனைகிறது. உள்ளடக்கத்தில் அது தீவிர முனைப்போடு இருக்கிறது என்பது வேறு விசயம்.

சரி, என்னவாயிற்று இவர்களுக்கு எல்லாம்? பா.ஜ.க.வும், அதிகார வர்க்கமும் திடீரென உலகமயமாக்கல் கொள்கைகளுக்கு எதிராக மாறிவிட்டார்களா? இந்தியாவின் உணவு இறையாண்மையை காலில் போட்டு நசுக்கும் மரபணு மாற்ற விதைகளின் பின்னுள்ள முதலாளித்துவ நச்சு அரசியலை புரிந்துகொண்டுவிட்டார்களா? ‘மாண்சாண்டோவில்தான் கொஞ்சம் கவனப்பிசகாக இருந்துவிட்டோம். இப்போதேனும் விழித்துக்கொள்வோம் அல்லது பி.டி.காட்டன் என்ற கொலைகார விதையின் மூலம் நூற்றுக்கணக்கான விவசாயிகளை சாகக் கொடுத்தது போதும். இன்னொரு பி.டி. கத்தரிக்காயைக் கொண்டு வந்து பல ஆயிரம் விவசாயிகளை காவு கொடுக்க வேண்டாம்’ என்பது அவர்களின் எண்ணமா?

ஒரு வெங்காயமும் கிடையாது. மரபணு மாற்ற விதைகளுக்கு கிளர்ந்து வரும் எதிர்ப்பின் பேர்பாதி எங்கிருந்து வருகிறது என்ற திசையைப் பார்த்தால் தெரியும், அவர்கள் அத்தனை பேரும் எப்போதும், எதன் பொருட்டும் மரபுகளை மாற்ற விரும்பாதவர்கள். கோயிலாக இருந்தாலும், கத்தரிக்காயாக இருந்தாலும் அவர்களுக்கு இந்தியாவின் பாரம்பரிய மரபு காக்கப்பட வேண்டும். ராமன் என்றொருவன் வரலாற்றில் இருந்தானா, இல்லையா என்பதே தெரியாது. ஆனால் கடலின் மணல் திட்டை ராமர் பாலம் என்பார்கள். கேட்டால் இந்து மரபு என்பார்கள். கருவறைக்குள் என்னைத் தவிர வேறு எவனும் நுழையக்கூடாது என்பது இந்திய மரபு. அதை மாற்றினால் இவர்களுக்குப் பிடிப்பதில்லை. தமிழ் பெண்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற தமிழ் மரபின் குணங்களுடன் வாழ வேண்டும். மீறினால் ‘தமிழனுக்கு சொரணையே இல்லைங்க’ என்று தங்கர்பச்சான் ரப்பர் ஸ்டாம்புடன் கிளம்பிவிடுவார் ‘யார் தமிழன்?’ என சீல் குத்த.

ஆண்களின் உடலுக்கு வெளியே இருக்கும் உபரி உறுப்பாகவே பெண்கள் நடத்தப்படுவதும், ஆதிக்கச்சாதிக்காரன் தலித் மக்களை அடிமைச் சேவகம் செய்ய வலியுறுத்துவதும், ஆண்டைகளுக்கு பணிந்து நடக்க ஏழைகள் பணிக்கப்படுவதும், மத, மொழி, இன மற்றும் பாலியல் சிறுபான்மையினரை விளிம்பில் தள்ளி அவர்களின் தினவாழ்வை அச்சத்துக்கு உள்ளாக்குவதும் இந்திய மண்ணின் மரபுகள்தான். அவை மீறப்படும்போதும் பதற்றமான குரல்கள் மேலெழும்பும். தற்போதைய மரபணு மாற்ற விதைகளுக்கு எதிரான குரல்களின் சரிபாதி அத்தகையவே.

“உங்களுக்கு இதே பொழப்புடா. எவனையும் ஒண்ணு சேர விட மாட்டீங்களே. அவன் மத்த விசயத்துல எப்படியாவது இருந்துட்டுப் போறான். பி.டி. கத்தரிக்காயை எதிர்க்கிறது நல்ல விசயம்தானே… அதுக்குள்ளேயும் எதுக்குப் பூணூலை தேடுறீங்க?” என்பது உங்களில் சிலரது உடனடி எண்ணமாகவும், எதிர்வினையாகவும் இருக்கக்கூடும். சரி, ஒரு வாதத்துக்காக பி.டி.கத்தரிக்காயை எதிர்க்கும் எல்லோரும் போராளிகள், சமூக நலனின் அக்கறைக் கொண்டவர்கள் என வைத்துக்கொள்வோம். இவர்களுக்கு இந்த நாட்டின் கத்தரிக்காய் வளம் பறிக்கப்படுவது பற்றி மட்டும்தான் கவலையா? அதற்கு முன்னும், பின்னும் இம்மண்ணின் வளங்கள் சூறையாடப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன.

இதோ… சமகாலத்தில் சட்டீஸ்கர், ஜார்கண்ட் காடுகளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையிட துடிக்கின்றன. மரபுரிமை அடிப்படையில் தண்டகாரன்யா காட்டின் ஆதிவாசிகளுக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் இருந்து அவர்கள் துரத்தி அடிக்கப்படுகிறார்கள். இதை பன்னாட்டு நிறுவனங்களின் புரோக்கர்களாக இருந்து பிரதமரும், உள்துறை அமைச்சருமேதான் செய்கின்றனர்.

திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றின் நீர்வளம் முழுவதையும் ரத்தம் உறிஞ்சுவதைப் போல கோக்கோகோலா நிறுவனம் இன்னமும் உறிஞ்சிகொண்டேதான் இருக்கிறது. அருகாமை மாநிலங்கள் சொந்தம் கொண்டாட முடியாத, தமிழ்நாட்டில் உற்பத்தியாகி, இங்கேயே கடலில் கலக்கும் ஒரே நதியான தாமிரபரணியின் வளம் மரபு ரீதியாக கோககோலாவுக்கு சொந்தமா, தமிழ் மக்களுக்கு சொந்தமா? தண்டகாரண்யாவிலும், தாமிரபரணியிலும் நமது பூர்வீக மரபுரிமை பறிக்கப்படுவதற்கு எதிராக இந்த மரபின் மைந்தர்கள் என்ன செய்து கிழித்தார்கள்? ஒரு கண்டனம், ஒரு அறிக்கை, ஒரு போராட்டம்… எதுவுமில்லை.

1987-ல் அமெரிக்காவில் முதன் முதலில் மரபணு மாற்ற உயிரினம் உருவாக்கப்பட்டது. நாம் கண்ணாடித் தொட்டிகளில் பார்க்கிற வண்ண மீன்கள்தான் இந்த உலகின் முதல் மரபணு மாற்ற உயிரினம். அவை வெறுமனே அழகுக்கானவை என்பதால் உடனடியாக ஆபத்துத் தெரியவில்லை. கொத்த வரும் சர்ப்பம் கூட அழகுதான். இந்த மரபணு மாற்றம் என்ற சர்ப்பம் முதலாளிகளின் கண்களுக்கு மிகப்பெரிய கர்ப்பகத்தருவாக தெரிந்தது. அதன் பிறகு அவர்கள் உருவாக்கியதுதான் பிராய்லர் கோழிகள். கோழியின் சதைப்பகுதி மட்டும் அதிகமாக வரும்படி அதன் மரபணுவை மாற்றியமைத்து பிராய்லர் கோழிகளை உருவாக்கினார்கள். எது விற்பனையாகிறதோ அதன் உற்பத்தியை பெருக்குவது இயல்பான உற்பத்தியாளர் உத்தி. ஒரு வருடம் உளுந்து அதிகம் விலைபோனால் அடுத்த வருடம் பெரும்பாலான விவசாயிகள் உளுந்து பயிரிடுவது வழக்கம்தான். ஆனால் ஒரு உயிரினத்தின் உடல் அமைப்பையே விற்பனைக்கேற்ப மாற்றுவதன் பின்னால் இருக்கும் லாபவெறியின் கொடூர முகத்தைப் பாருங்கள்.

இன்றைய நுகர்வு கலாசாரத்தில் மனித உடம்புக்கும், பிராய்லர் கோழிக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட கிடையாது. பிராய்லர் கோழிக்கு சதை அதிகமாக வரும்படி மரபணு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது என்றால் கண்டதையும் வாங்கிக்கொண்டே இருக்கும்படி மனிதனின் மூளை மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. நிறுவனங்கள் தங்களின் பொருட்களுக்கு ஏற்றதுபோல வாழ்வதற்கு மக்களை பழக்கியிருக்கிறார்கள்.

கிராமங்களில் மாடு மேய்ப்பதில் இரண்டு வகை உண்டு. மாட்டை புல் உள்ள இடத்தில் மேயவிட்டு ஓட்டி வருவது ஒரு வகை. வெள்ளாமை வயல்களின் வரப்புகளுக்கு நடுவே பசும்புல்லை மாட்டை கையில் பிடித்தபடி மேயவிடுவது இன்னொரு வகை. ‘பிடி மாடு மேய்ப்பது’ என்றிதைச் சொல்வார்கள். இன்றைய சந்தை உலகில் நிறுவனங்கள் மேய்க்கும் பிடிமாடுகளாகத்தான் இருக்கின்றனர் மனிதர்கள். ஆகவே பிராய்லர் கோழியை தின்பதால் நீங்கள் அதை விட பெரிய ஆள் என்ற எண்ணம் எல்லாம் வேண்டாம். நீங்களும் ஒரு பிராய்லர் கோழியே.

சரி, இப்படி கோழியின் மரபணுவை மாற்றினார்களே… அப்போது இந்த so called எதிர்ப்பாளர்கள் எங்கேப் போனார்கள்? ‘கோழிக்கறியை மாத்தினா எங்களுக்கு என்ன? அதெல்லாம் அவா ஃபுட். கத்தரிக்காய்தான் எங்க ஃபுட்’ என்பதாக இதைப் புரிந்துகொள்ளலாமா? உண்மையில் பி.டி. கத்தரிக்காய் என்ற மரபணு மாற்றப்பட்ட விதைகளை நாம் முழு வீச்சோடு எதிர்க்க வேண்டும். இன்று பரவலாக பி.டி.கத்தரிக்காய் என்ற வார்த்தையே அறியப்படுகிறது.

Bacillus Thuringiensis  என்ற பாக்டீரியாவின் சுருக்கம்தான் பி.டி. இந்த வைரஸை கத்தரிக்காயின் மரபணுவில் செலுத்தி அதன் தன்மையை மாற்றுகின்றனர். ஏன்? இந்திய கத்தரிக்காயில் தண்டு துளைப்பான் புழு அதிகமாக இருக்கிறதாம். ’ஆகவே அந்தப் புழுவை எதிர்க்கும் விதமாக கத்தரிக்காயின் மரபணுவை மாற்றி அமைத்திருக்கிறோம்’ என இதற்கு விளக்கம் சொல்லப்படுகிறது. ஆனால் நடைமுறை யதார்த்தம் வேறாக இருக்கிறது. இதே போன்றதொரு ’பூச்சி தாக்காது’ காரணத்தை சொல்லிதான் முன்பு பி.டி.பருத்தியை அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் அந்த பருத்தி முன்னெப்போதும் இல்லாததைவிட மிகப்பெரிய நஷ்டத்தை பரிசளிக்கவே ஆந்திராவிலும், மஹாராஷ்டிராவிலும் பல ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டுபோனார்கள்.

விசயம் என்னவெனில் எந்தவொரு பூச்சியினமும் மருந்தின் தன்மைக்கு மிக விரைவில் பழகிவிடும். பின் அதைவிட வீரியமான மருந்தைதான் தெளிக்க வேண்டும். இவர்கள் மரபணுவை மாற்றி உருவாக்கிய விதைக்கும் இது பொருந்தும் என்பதால் அவ்விதைகள் மிகக் குறைவான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருந்தன. எளிதாக நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகின. பி.டி.பருத்திக்கு நேற்று இதுதான் நடந்தது. நாளை பி.டி.கத்தரிக்காய்க்கும் இதுதான் நடக்கும்.

மரபணு மாற்ற விதைகளை ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி தன் நிலத்தில் பயிரிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அருகாமை வயல்களில் வேறு எந்த தாவரம் பயிரிட்டிருந்தாலும் அதன் மரபணுவிலும் தானாகவே மாற்றம் நிகழும். தொற்றுநோய் மாதிரி. ஆக, ஒரு ஊரில் ஒரே ஒரு விவசாயி இதைப் பயிரிட்டாலும் மெல்ல, மெல்ல அப்பிராந்தியத்தின் தாவர மரபணு சூழல் மாறுதலுக்குள்ளாகும். வேறு வழியே இல்லாமல் மரபணு மாற்ற விதைகளை விற்கும் நிறுவனங்களிடம் போய் நிற்க வேண்டும். அவன் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும். ஒட்டுமொத்த இந்திய விவசாய நிலங்களையும் மோனோபோலியாக ஆட்சி செலுத்துவார்கள். மரபணு மாற்ற தாவரங்களுக்கான விதைகளுக்கும் அந்த நிறுவனங்களையே சார்ந்திருக்க வேண்டும்.

விளைந்ததை விதையாகப் பயன்படுத்த முடியாது. ’பயன்படுத்தவும் கூடாது’ என்கிறது இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான India-US knowledge initiative on Agriculture என்ற ஒப்பந்தம். 1,2,3 அணு ஒப்பந்தம் சமயத்தில் அமெரிக்காவுடன் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவின் பாரம்பரிய விவசாயத்தைக் காப்பாற்ற அமெரிக்கா தொழில்நுட்ப உதவி செய்யுமாம். இந்தியா இதற்கான நிதி ஆதாரத்தை உருவாக்கித் தருமாம். வருடத்துக்கு 350 கோடி ரூபாய். இந்திய மரபை காப்பாற்ற அமெரிக்காவுக்குக் காசு தரும் இந்த அறிவாளிகளை என்ன செய்வது? இந்த ஒப்பந்தம் இம்மியளவும் மாற்றமில்லாமல் அப்படியேதான் இன்னமும் அமுலில் இருக்கிறது. மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சும்மாவேனும் எதிர்ப்புகளை மட்டுப்படுத்தும் தந்திரமாக ‘தற்காலிகத் தடை’ என்கிறார். மரபா, லாபமா என்றால் அவர்கள் லாபத்தின் பக்கமே சாய்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேற்சொன்ன இந்திய-அமெரிக்க ஒப்பந்தத்தில் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் எதிரான மிக மோசமான அம்சங்களும் அடக்கம். பொதுவில் அனைத்துலக சட்டங்களின்படி தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட எந்த ஒரு உயிரினத்துக்கும் தனி சொத்துரிமை கோர முடியாது. இவர்கள் மரபணு மாற்றத்தின் மூலம் சிற்சில மாற்றங்களை விதைகளில் ஏற்படுத்தி அவற்றை தங்களின் அறிவுசார் சொத்துரிமையாக மாற்ற முனைகின்றனர். இதன்மூலம் உயிரினங்களுக்கும் காப்புரிமை பெறத் துடிக்கின்றனர்.

ஒட்டுமொத்த உயிர்ச்சூழலையும் லாபத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முயலும் இந்த லாபவெறிக்கு எதிராக நாம் அனைவரும் எதிர்குரல் எழுப்ப வேண்டும். நமது எதிர்ப்புகளை உழைக்கும் விவசாயிகளுடன் பொருத்திக்கொள்ள வேண்டுமே தவிர, மரபின் மைந்தர்களுடன் அல்ல!

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. ஆழியூரான் நல்ல கட்டுரை. பாரம்பரீமாக நமது விவசாயிகள் உண்டாக்கிய பல ரகங்களுக்கும் என்ன அந்த விவ்சாயிகள் உரிமை கோரினார்களா? கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் இந்த உலகமயமாக்கலின் கொடூரத்தை நமது மக்கள் அனுபவிக்கிறார்கள். உங்களைப் போன்ற ஓரிருவர் மட்டுமே மக்களுக்காக எழுதுகிறீர்கள்.

  2. ஆழியூரான் ஐயா எனக்கு ஒரு சிறு சந்தேகம்,அவர்கள்தான் அன்றைக்கு அதை எதிர்க்கவில்லை,இதை எதிர்க்கவில்லை, நீங்களும் பிராய்லர் கோழிதான் என்கிறீர்களே. கொஞ்சம் பயந்து போய்விட்டேன், நல்லவேளை எனக்கு இன்னும் மனித உடல்தான் இருக்கிறது, உங்கள் போராட்டத்தால் :). இல்லையேல் என்றைக்கோ என்னையும் கோழியாக மாற்றியிருக்குமே இந்த முதலாளியம் :).முக்காலமும் அறிந்த மாபெரும் புரட்சியாளர்கள் பிராய்லர் கோழி அறிமுகமான போது எதிர்த்தார்களா இன்று பிராய்லர் கோழித் தொழிலை எதிர்க்கிறார்களா நீங்கள் எதிர்க்கிறீர்களா. பிராய்லர் கோழியில் மரபணு மாற்றம் இருக்கிறது(’பிராய்லர் கோழிக்கு சதை அதிகமாக வரும்படி மரபணு மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது) என்கிறீர்கள்.ஆனால் விக்கிபிடியோவில் அப்படி ஏதும் குறிப்பிடப்படவில்லையே? எது உண்மை?. http://en.wikipedia.org/wiki/Broiler
    ம.க.இ.க பிராய்லர் கோழிக்கு எதிராக இயக்க நடத்தியுள்ளதா என்பதை வினவுதான் விளக்க வேண்டும்.சிறிய அளவில் கோழிப் பண்ணை வைத்திருப்பவர்களும் பிராய்லர் கோழிகளை வளர்க்கிறார்களே. அவர்களும் நீங்கள் குறிப்பிடும் ‘அவர்களோ’?

    • சிக்கன்65 பிராய்லர் கோழி மட்டுமல்ல பல காய்கறிகளும் ஹபிரிட் என்று எப்போதோ வந்து விட்டன. இவையால் என்னென்ன பாதிப்பு வருகிறது என்பது கூட இன்னமும் முறையாக யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. ம.க.இ.க இந்திய விவசாயத்தை கூண்டோடு அழிக்கும் மறுகாலனிய கொள்கைக்கு எதிராக பல ஆண்டுகளாக போராடுகிறது. அதில் மான்சான்ட்டோ எதிர்ப்பு, இறால் பண்ணை அழிப்பு, தேக்குமர பண்ணை எதிர்ப்பு என்று பல போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. விவசாயத்தில் நமக்கு தெரிந்த சதிகள் கொஞ்சம்தான். அரசும், விவசாயத்துறையும், விவசாயப் பல்கலைக்கழகங்களும் பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜண்டாகத்தான் செயல்படுகின்றன. வெளியே தெரியாமல் இவர்கள் மான்சாண்ட்டோவின் விதையைக் கொடுத்து பல இடங்களில் பயிரிடவைத்திருக்கிறார்கள். ஏதுமறியாத விவசாயி அரசு கொடுத்தால் சரியாகத்தான் இருக்கும் என்று பிழைப்பைப் பாக்க போய்விடுவார். தப்பித்தவறி ஊடகங்களில் வந்தால்தான் இத்தகைய செய்திகள் வெளியே வரும்.

      • ரியலு, சிக்கன் 65ய்ய தனியா தின்னுபோட்டீங்களே??? கொய்யா கோழி65, கோழி மாக்க்கான் ரவிசீனீவாசு மாதிரி பேசப்பிடாது, கொஞ்சம் மின்னேறி வாய்யா…

  3. ஆழியூரான், பாரதப் பண்பாடு என்ற பெயரில் பார்ப்பனியப் பண்பாட்டை தூக்கிப்பிடிக்கும் சனாதனிகள் சந்தடி சாக்கில் கத்திரிக்காயின் மரபணு மாற்றத்தையும் எதிர்ப்பதாக செய்யும் பம்மாத்தை சரியாகவே அடையாளம் காட்டியிருக்கிறீர்கள்.

  4. நான் அமெரிக்காரனிடம் காசு வாங்கிக் கொண்டு ஏகாதிப்பத்தியத்திற்கு அடியாளாக இருக்கிறேன்.அதற்காக பிடி கத்திரிக்காயை எதிர்ப்பவர்களை திட்ட வேண்டியிருக்கிறது.மற்றப்படி நான் அதை சாப்பிடுவதில்லை என்று சத்தியம் செய்கிறேன்.கொஞ்சப் பேர் அதை எதிர்க்கிறமாதிரி நடிப்போம், கொஞ்சப்பேர் அதை ஆதரிப்போம்,அப்படித்தான் உங்களை குழப்புவோம்.அது இந்த ம.க.இ.க
    காரன்களுக்கு தெரிஞ்சு போச்சே 🙁

  5. கட்டுரையாளருக்கு,
    இல.கணேசன், ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவவாதிகளின் மரபணு மாற்ற எதிர்ப்பு என்பது….
    மக்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பு ஏற்படுவதை தடுக்கும் முகமாக – ஆளும் வர்க்கததால் நடத்தப்படும் மக்களின் எதிர்ப்பை மழுங்கடிக்கும் பிரச்சாரமாகவே பார்க்க முடியும். மற்றபடி, “‍கோயிலாக இருந்தாலும் இந்தியாவின் பாரம்பரிய மரபு காக்கப்பட வேண்டும்” என்பது நோக்கமல்ல. உதாரணமாக, மாண்சாண்டோ பருத்தியை எப்போதும் அவர்கள் எதிர்த்ததில்லை. தற்போது அரசு நடத்தி வரும் காட்டுவேட்டை படு‍கொலை நடவடிக்கையை, பழங்குடி மக்களின் மரபை சிதைக்கிறது, அழிக்கிறது என்று எதிர்க்கவுமில்லை. இவர்களும் ஆளும் வர்க்கமே. மற்றபடி கட்டுரை சிறப்பாக உள்ளது.

  6. மான்சான்டோவின் முன்னாள் தெற்காசிய நிர்வாக தலைவரின் நேர்காணல்….

    பி.டி.கத்திரியை எதிர்த்த எல்லா குரல்களில் மிகவும் முக்கியமான குரல் இவருடையது. இவரின் பெயர். டி.வி.ஜெகதீசன்.வயது எண்பத்து நான்கு. இருபத்தெட்டு வருட காலங்களாக மான்சாண்டோ நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார், அதிலும் கடைசி எட்டு வருடங்கள் மான்சாண்டோவின் தெற்காசிய பிராந்தியத்திற்கான நிர்வாக தலைமை இயக்குனராக பணிபுரிந்தார்.இவர் பணியிலிருந்து ஓய்வு பெற்று இருபது வருடங்கள் ஆகின்றன.தற்பொழுது பெங்களூரில் தங்கி வரும் டி.வி.ஜெகதீசனுடன் ஒரு நேர்காணல்.

    சுற்றுச்சூழியல் அமைச்சர் ஜெயராம் ரமேஷின் பி.டி.கத்திரிகாயின் மீதான பொது மக்கள் கருத்துக்கேட்க்கும் நிகழ்வில் நீங்கள் இந்திய அரசின் நிர்வாகங்களையும் அத‌ன் ஒப்புத‌ல் வ‌ழ‌ங்கும் முறைக‌ளைப் ப‌ற்றியும் க‌ருத்து கூறியுள்ளீர்க‌ள், அதை நீங்க‌ள் இங்கே ச‌ற்று விள‌க்க‌மாக‌ கூற‌ முடியுமா? நீங்க‌ள் மான்சான்டோ இந்தியாவின் த‌லைவ‌ராக‌ இருந்த‌ பொழுது எந்த‌ பொருட்க‌ளுக்கு இந்தியாவில் ஒப்புத‌ல் அளிக்க‌ப்ப‌ட்ட‌து?

    நான் ப‌ணிபுரியும் போது ப‌ல‌ க‌ளை எதிர்ப்பு விதைக‌ளை இந்தியாவில் கொண்டுவ‌ந்தோம். இத‌ற்கெல்லாம் நாங்க‌ள் அந்த‌ விதைப் ப‌ற்றிய‌ வேதியிய‌ல் த‌ர‌வுக‌ளை மைய‌ பூச்சிக்கொல்லிக‌ள் அமைப்பிற்க்கு த‌ர‌வேண்டும், அதை வைத்து தான் அவ‌ர்க‌ள் ஒப்புத‌ல் அளிப்பார்க‌ள். இந்தியாவில் உள்ள‌ இது போன்ற‌ எந்த‌வொரு அர‌சு அமைப்பிட‌மோ இது போன்ற‌ சோத‌னைக‌ளை மேற்கொள்வ‌த‌ற்கான‌ க‌ருவிக‌ளோ, நேர‌மோ இல்லை என்ப‌தால் அவ‌ர்க‌ள் நாங்க‌ள்(அந்த‌ந்த‌ நிர்வாக‌ம்) கொடுக்கும் த‌ர‌வுக‌ளை ம‌ட்டும் வைத்துக் கொண்டே அந்த‌ விதைக்கோ அல்ல‌து பூச்சிக்கொல்லிக்கோ ஒப்புத‌ல் அளிக்கின்ற‌ன‌ர். இந்த‌ கார‌ண‌த்தினால் எங்க‌ளைப் போன்ற‌ நிறுவ‌ன‌ங்க‌ள் தங்க‌ள‌து தாய‌ரிப்புக‌ள் ப‌ற்றிய‌ ந‌ல்ல‌தொரு சோத‌னை அறிக்கையையே கொடுக்கின்ற‌ன‌ர்.
    பி.டி.க‌த்திரிகாய் போன்ற‌ பொருட்க‌ளை ஒரு நீண்ட‌ சோத‌னைக்கு உட்ப‌டுத்திய‌ பின்ன‌ரே அதை நாம் அனும‌திக்க‌ வேண்டும். இப்பொழுது பி.டி.க‌த்திரிகாயை கொண்டு வ‌ருவ‌த‌ற்கு எந்த‌வொரு அவ‌ச‌ர‌மும் இல்லை என்ப‌தே என் க‌ருத்து.

    மான்சான்டோவின் நிர்வாக பண்பாடு எவ்வாறு இருக்கும்? நீங்க‌ள் உங்க‌ள் பொருட்க‌ளை சோத‌னை செய்வீர்க‌ளா?

    ஆம், பூச்சிக்கொல்லிக‌ளைப் பொருத்த‌வ‌ரையில் நாங்க‌ள் சில‌ சோத‌னைக‌ளை எங்க‌ள் ஆய்வ‌க‌ங்க‌ளில் செய்தோம். ஆனால் சில‌ முறை நாங்க‌ள் எங்க‌ள் நிறுவ‌ன‌த்தின் மற்ற‌ நாட்டு ஆய்வ‌றிக்கைக‌ளை அப்படியே ஏற்றுக் கொண்டு அதை அர‌சிற்க்கு கொடுத்து ஒப்புத‌ல்க‌ளையும் பெற்றோம் ஏனென்றால் எங்க‌ள் ஆய்வ‌றிக்கைக‌ளை அவ‌ர்க‌ளால் முழுமையான‌ ப‌ரிசீலினைக்கு உட்ப‌டுத்த‌ முடியாது என‌த் தெரியும்.


    அப்ப‌டியானால் நீங்க‌ள் த‌லைமை பொறுப்பு வ‌கித்த‌ நேரங்க‌ளில் சில ஆய்வ‌றிக்கைக‌ளில் ச‌ரியான‌வ‌ற்றை கொடுக்க‌வில்லை என்ப‌தை ஒப்புக்கொள்கின்றீர்க‌ளா?

    என‌து பிராந்திய‌த்திற்க்குள் அவ்வாறு ந‌ட‌க்க‌வில்லை. ஆனால் எந்த‌ ஒரு நிர்வாக‌மும் தான் த‌யாரித்த‌ பொருளைப் ப‌ற்றிய த‌வ‌றான‌ அறிக்கையை கொடுக்காடு என்ப‌தை ம‌ட்டும் கூறுகிறேன்.

    பி.டி.பருத்தி நீங்க‌ள் பொறுப்பு வ‌கித்த‌ நேர‌த்தில் உருவான‌து தானே? அந்த‌ பொருளில் ஏதாவ‌து உங்க‌ளுக்கு மாற்று க‌ருத்து உண்டா?

    நான் அமெரிக்காவின் செயின்ட்.லூயிசில் ப‌ணியாற்றும் போது அங்கு உருவாக்க‌ப்ப‌ட்டது தான்‌ பி.டி.ப‌ருத்தி. ஆனால் இந்தியாவில் அது அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ போது நான் ப‌ணியில் இல்லை. அதனால் என‌க்கு அதைப்ப‌ற்றி முழுமையாக‌ தெரியாது.
    சில‌ விவாசாயிக‌ள் இர‌ண்டு ம‌ட‌ங்கு அறுவ‌டை செய்தார்க‌ள், ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் அறுவ‌டை மிக‌வும் குறைந்துபோன‌தால் த‌ற்கொலை செய்து கொண்டார்க‌ள். அத‌ன் வ‌ர்த்த‌க‌ அறிமுக‌த்திற்க்கு பின்ன‌ர் அது தோல்வியை த‌ழுவிய‌து. குறிப்பாக‌ 2002 அறுவ‌டை மிக‌வும் குறைந்த‌து. அவ‌ர்க‌ள் கூறினார்க‌ள் நாங்க‌ள் த‌வ‌றான‌ பருத்தி விதையை தேர்வு எய்து விட்டோம் என‌.

    பி.டி.ப‌ருத்தி விதைக‌ளை ஒவ்வொரு விதைப்பிற்க்கும் புதிய‌தாக‌ வாங்க‌ வேண்டும் என்று ஒரு க‌ருத்துள்ள‌தே?

    ஆம். அவை ம‌ல‌ட்டு த‌ன்மையுள்ள ஈன்களை கொண்ட விதைக‌ள். இந்த‌ வகை விதைகளை ஒரு விதைப்பிற்க்கு ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌டுத்த‌முடியும். பி.டி.ப‌ருத்தி விதைக‌ளை ஒவ்வொரு விதைப்பிற்கும் விவசாயிக‌ள் மான்சாண்டோவிட‌ம் வாங்கித்தான் ஆக‌ வேண்டும். அதுவும் முன்பைவிட‌ ச‌ற்று அதிக‌ விலையில்.

    நீங்க‌ள் இதுபோன்ற‌ கேள்விக‌ளை உங்க‌ள் நிர்வாக‌த்திட‌ம் பேசிய‌து இல்லையா?

    நான் ச‌க‌ ப‌ணியாள‌ர்க‌ள்ட‌ம் பேசும் போது அவ‌ர்க‌ள் என்னிட‌ம் ம‌ல‌ட்டுத் த‌ன்மை வாய்ந்த‌ ஈன் ப‌ற்றி கூறினார்க‌ள்.மான்சான்டோவின் பி.டி.பருத்தி விதைக‌ளை இப்பொழுது 63 நிறுவ‌ன‌ங்க‌ள் உற்ப‌த்தி செய்கின்ற‌ன‌. அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து மான்சாண்டோ காப்பு தொகையை பெற்றுக்கொள்கின்றது.

    மான்சாண்டோ பூச்சிக்கொல்லிக‌ளையும். பூச்சிக்கொல்லிக‌ளை த‌டுக்கும் ம‌ர‌ப‌ணு மாற்ற‌ப்பட்ட‌ விதைகளையும் உற்ப‌த்தி செய்கின்ற‌து, இது முர‌ண்பாடாக‌ உள்ள‌தே?

    மான்சாண்டோ முத‌லில் பூச்சிக்கொல்லிக‌ளை அறிமுக‌ம் செய்த‌து ஆனால் அவை பூச்சிக‌ளுட‌ன் சேர்த்து சோயா பீனின் விதையையும் அழித்துவிட்ட‌து. அதனால் பூச்சிக்கொல்லிக‌ளுக்கு தாக்குபிடிக்கும் ம‌ர‌ப‌ணு மாற்ற‌ப்ப‌ட்ட‌ சோயா பீனின் விதையையும் உற்பத்தி செய்த‌து. முத‌லில் பூச்சிக்கொல்லி மூல‌ம் விதை அழித்து, பின்ன‌ர் பூச்சிக்கொல்லிக்கு தாக்குபிடிக்கும் விதைக‌ளை உருவாக்குவ‌தால் இர‌ட்டை வ‌சூல் கிடைக்கின்ற‌து.

    அர‌சின் இது போன்ற‌ த‌வ‌றான‌ அனும‌தி அளிக்கும் முறையை த‌விர்த்து உங்க‌ளுக்கு பி.டி.க‌த்திரிகாயில் என்ன‌ முர‌ண்பாடு?

    நிறைய‌ முர‌ண்கள் உள்ள‌ன‌. முத‌லாவ‌தாக‌ ந‌ம்மிட‌ம் உள்ள‌ ப‌ல‌வித‌மான‌ விதைகள் அழிந்துவிடும். இந்தியாவில் ஏற்க‌ன‌வே 2400 வ‌கை க‌த்திரி விதைக‌ள் உள்ள‌ன‌. க‌த்திரி ஒரு ம‌க‌ர‌ந்த‌வ‌கை விவ‌சாய‌ முரையைச் சார்ந்த‌து. நீங்க‌ள் பி.டி.க‌த்திரியை உங்க‌ள‌து நில‌த்தில் ப‌யிரிடும் போது அத‌ன் ம‌க‌ர‌ந்த‌ துக‌ள்க‌ள் காற்றின் மூல‌மாக்வோ. அல்ல‌து ப‌ற‌வையின‌, பூச்சியின‌ங்க‌ளின் மூல‌மாக‌வோ ம‌ற்றொரு நில‌த்தில் விதைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ விதைக‌ளையும் பாதித்து மாற்றும் த‌ன்மைகொண்ட‌து. இத‌ற்கு உதார‌ண‌மாக‌ க‌ன‌டாவில் ஒரு விவாசியிய்ன் மேல் மான்சாண்டோ வ‌ழக்கே போதுமான‌து. த‌ங்க‌ளின் அனும‌தி இல்லாம‌ல் க‌ன‌டாவில் ப‌ல‌ர் பி.டி.விதைக‌ளை ப‌ய‌ன்ப‌டுத்துகின்ற‌ன‌ர் என்பதே அந்த‌ வ‌ழ‌க்கு. இத‌ற்காக‌ நாம் காற்றையும் , பூச்சிய‌ன‌ங்க‌ளை குற்ற‌ம் சும‌த்த‌ முடியாது. அதே போல‌ இங்கும் ந‌ட‌க்க‌லாம்.

    அப்ப‌டியானால் அர‌சிட‌ம் ச‌ரியான‌ சோத‌னை முறைக‌ளும், ஒப்புத‌ல் வ‌ழ‌ங்கும் முன் செய்ய‌ப்பட‌ வேண்டிய‌வ‌ற்றை ப‌ற்றிய‌ ச‌ரியான‌ முறை இல்லை என்கிறீர்க‌ளா?

    ஆம், இது போன்ற‌ விதைக‌ளை ஒரு நீண்ட‌ கால‌ சோத‌ன‌க்குட்ப‌டுத்தி அத‌ன் முடிவுக‌ள் ச‌ரியாக‌ கிடைத்த‌ பின்ன‌ரே அனும‌தி வ‌ழ‌ங்க‌வேண்டும். ஏனெனில் இவையெல்லாம் ம‌ல‌ட்ட்த் த‌ன்மையுள்ள‌ ஈனைக் கொண்ட‌ விதைகள். அதே ம‌ல‌ட்டு த‌ன்மை அதை உண்ணும் ம‌னித‌னுக்கும் ஏற்ப‌டாது என்ப‌த‌ற்கு எந்த‌ உத்திர‌வாத‌மும் இல்லை.

    உங்க‌ளைப் பொருத்த‌வ‌ரையில் பி.டி.க‌த்திரிக்கு ஏதேனும் தேவை உள்ள‌தா?

    என‌க்கு பி.டி.க‌த்திரியின் அறிமுக‌மே ஐய‌த்தை எழுப்புகின்ற‌து. பிர‌த‌ம‌ருக்கு ஆலோச‌னை வ‌ழ‌ங்க‌க் கூடிய‌ அறிவு சார் குழுவில் மூன்று நிர‌ந்த‌ர நிறுவ‌ன‌ங்க‌ள் உள்ள‌ன‌. அவைக‌ளில் மான்சான்டோவும், ட‌வ் வேதியிய‌ல் பொருட்க‌ளை தயாரிக்கும் நிறுவ‌ன‌மும்(போபாலில் விப‌த்துக்கு கார‌ண‌மான‌ யூனிய‌ன் கார்பைடு நிறுவ‌ன‌த்தை வாங்கியுள்ளது ட‌வ்) உள்ள‌ன‌. இய‌ல்பாக‌வே அவ‌ர்க‌ள் தங்கள‌து பொருட்க‌ளை வெளியிடுவ‌த‌ற்கு அழுத்த‌தை கொடுப்பார்க‌ள். பி.டி.க‌த்திரி என்ப‌து வெறும் அறிமுக‌ம் ம‌ட்டுமே. இன்னும் பி.டி.அரிசி, கோதுமை, உருளைகிழ‌ங்கு போன்ற‌ எல்லாமே உள்ள‌ன‌. த‌ற்போதைய‌ கிலாரி கிளிண்ட‌னின் வ‌ருகை கூட‌ இந்தியாவின் விவ‌சாய‌த்தை அமெரிக்காவின் விருப்ப‌த் தெரிவாக‌ மாற்றுவ‌து என்ற‌ முக்கிய‌ கொள்கையை கொண்டதே( கிலாரிக்கு ம‌ர‌ப‌ணு மாற்ற‌ப்ப‌ட்ட‌ விதைக‌ள் ஏற்ப‌டுத்தும் பாதிப்பை ப‌ற்றி ஒன்றும் தெரியாது ,ஏனென்றால் அவ‌ருக்கு இதைப் ப‌ற்றி சொல்வ‌து கூட‌ மாண்சான்டோவில் வேலை பார்க்கும் அறிவிய‌லால‌ர்க‌ளே).

    ம‌ர‌ப‌ணு மாற்ற‌ப்பட்ட‌ விதைகளின் மூல‌மாக‌வே த‌ற்போதைய‌ உண‌வுத் தேவையை ஈடுக‌ட்ட‌ முடியும் என‌க் கூறுகின்றார்க‌ளே?

    இர‌ண்டு த‌லைமுறைக்கு முன் ப‌சுமைப்புர‌ட்சி கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட‌ போது கூட‌ அவ‌ர்க‌ள் இதைத் தான் சொன்னார்கள். அப்பொழுது ப‌சுமை புர‌ட்சியை பார‌ட்டிய‌வ‌ர்கள் கூட‌ இன்று அத‌ன் தோல்வியை ஒப்புக்கொள்கின்ற‌ன‌ர்.

    ஏன் நீங்க‌ள் த‌ற்பொழுது ம‌ட்டும் பேசுகின்றீர்க‌ள்?, முன்ன‌ரே பேசியிருக்க‌லாமே?

    என‌க்கு இதுவ‌ரை அவ்வாறான‌ ஒரு வாய்ப்பு கிடைக்க‌வில்லை. இப்பொழுது அர‌சு பொதும‌க்க‌ளின் க‌ருத்தைக் கேட்ப‌தால் நானும் என‌து க‌ருத்தை வெளியிடுகின்றேன் .

    ந‌ன்றி. தெக‌ல்கா வார‌ இத‌ழ்.

  7. சிறப்பான விமர்சன சாட்டையடி விகடக் கட்டுரை விளங்க வேண்டும் இன்னமும் விளங்காத வெங்காயங்களுக்கு. இக்கட்டுரையை – அப்படியே அல்லது பிரதி எடுத்து – நண்பர்களுக்கு அனுப்ப வழியுண்டா சொல்லுங்கள் நன்றி வாழ்க வளமுடன்
    முருகு

  8. சுதேசி விழிப்புணர்வு இயக்கம் என்று வைத்துக் கொண்டு கண்காட்சி கண்ணாம்பூச்சி காட்டும் இந்த பிஜெபி, ஆர் எஸ் எஸ் கும்பல் தான் ஒரு காலத்தில் மறுகாலனியாதிக்கத்தைப் பற்றி பேசினால் ”தடா” வைக் காட்டி மிரட்டியது.

    ………………………….. ஆமா.. இந்த ”அதியமான்” பயபுள்ள எங்க போச்சு???!!!!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க