முகப்புவிண்ணைத் தாண்டி வருவாயா - காதலை அவமானப்படுத்தவா...?
Array

விண்ணைத் தாண்டி வருவாயா – காதலை அவமானப்படுத்தவா…?

-

vote-012காதலை வைத்து தமிழகத்தில் கல்லா கட்டியவர்கள் ஏராளம். காதலிக்க எளிதாக வாய்ப்பில்லாத நாட்டில் காதல் குறித்த கனவுகளும் அதை நனவு போல சித்தரிக்கும் படங்களும் விலைபோகாமல் இருக்குமா என்ன?

கருப்பு வெள்ளைப்படங்களில் காதலன் பட்டப்படிப்பு படித்துவிட்டு படியவாரிய தலையுடன் நாசுக்காக காதலிக்க, காதலியோ இரட்டைத்தலை சடையோடு தளையக்கட்டிய சேலையோடு வெட்கப்பட ….ஓவர் டு 2010

__________________________________________

பொறியில் படிப்பு, டீ ஷர்ட், பைக், சினிமா உதவி இயக்குநர், மாடர்ன் தங்கச்சி, அழகான அம்மாவுடன் சிம்பு காதலுக்கு 22 வயதில் ரெடியாகிறார். ஜெஸ்ஸி , டிசைனர் காட்டன் சேரி, சல்வார், அலைபாயும் முடி, ஐ.டி துறை வேலையுடன் 23 வயதில் த்ரிஷா வருகிறார்.

“காதல் என்பது தானா வரணும், நாம அதை தேடிப் போகக்கூடாது, நம்மள அடிச்சுப் போடணும்” என்று காதலுக்கு இலக்கணம் பேசும் சிம்புவுக்கு அது வந்துவிட்டது. மலையாளப் பெண், கிறித்தவ மதம், தந்தை மறுப்பு என்று த்ரிஷா அவ்வப்போது சிணுங்குகிறார். அதனால் காதலின் கிக் அல்லது அவஸ்தை ஏறுகிறது.

“காதலிக்காக அவனவன் அமெரிக்கா போறான், நாம ஆலப்பிக்கு போகக்கூடாதா” என்று அமெரிக்கா ஏதோ உசிலம்பட்டி போல பேசும் சிம்பு எதிர்பார்க்கமலேயே த்ரிஷா தேவாலயத்தில் பெற்றோர் நிச்சயித்த மாப்பிள்ளைக்கு ஒப்புதல் கொடுக்காமல் புரட்சி செய்கிறார். அவஸ்தையின் அளவு கூடுகிறது.

இதற்குள் மூன்று பாட்டு முடிகிறது. தாமரை எப்போது ஆங்கிலத்தில் பாடல் எழுத ஆரம்பித்தார்? இடைவெளி முடிந்து அமர்ந்தால் மீண்டும் மீண்டும் த்ரிஷா சிணுங்குகிறார். ” டேய் படத்தை எத்தனை வாட்டி ரிவைண்ட் பண்ணி போடுவ” என்று இரசிகர்கள் (தியேட்டர் கமெண்ட்) தாங்க முடியாத அளவில் அந்த அவஸ்தை சவ்வாக இழுக்கப்படுகிறது. நாங்க படம் பார்த்தது A சென்டரில்ல இல்லை!

ஒரு வேளையாக த்ரிஷா அந்த காதல் உலக்கத்திலிருந்து லூசுத்தனமாக (தியேட்டர் கமெண்ட்) மறைந்து போக சிம்பு சினிமா இயக்குநராக ஆகிறார். தனது ஜெஸ்ஸியின் கதையையே படமாக எடுக்கிறார். நிஜத்தில் த்ரிஷா வேறு ஒருவரை திருமணம் செய்ய…. படம் எப்போது முடியுமென்று பொறுமையிழந்த மக்களின் பொறுமலில் கடைசிக் காட்சிகளின் வசனங்கள் சுத்தமாக கேட்கவில்லை. சிம்புவின் படத்தில் அவர்கள் சேருவதுபோல எடுக்கப்பட்டு படம் முடிகிறது.  விட்டால் போதுமென்று தியேட்டரிலிருந்து எஸ்கேப்!

___________________________________________

நடுத்தர வர்க்கம் பொருளாதரத்தில் தனது மேல் வர்க்கத்தைப் பார்த்து கனவு கண்டு விட்டு நிஜத்தில் சாதாரண வாழ்க்கையை சலித்துக் கொண்டே வாழும். இந்த வர்க்கத்தின் பொதுப் பண்பு என்னவென்றால் எதையும் பட்டு பட்டுனு முடிவெடுக்காமல் ஜவ்வாக இழுக்கும். அவ்வகையில் காதல், வீரம், சோகம் எல்லாம் ஜவ்வுதான்.

நடுத்தர வர்க்கம் துணிந்து காதலித்து, காதலின் பிரச்சினைகளை எதிர் கண்டு போராடி வெல்வது அபூர்வம். இதனால் பிரச்சினைகளை விட்டுவிட்டு காதலைப் பற்றிய மயக்கங்கள், அவஸ்தைகள் அதற்கு தேன்தடவிய பர்கராக தாலாட்டி வருடுகிறது. எங்களோடு படம் பார்த்தவர்கள் இந்த ஜவ்வை எவ்வளவு கேலி செய்ய முடியுமோ அவ்வளவு செய்ததுதான் எங்களுக்கு இருந்த ஒரே ஆறுதல்.

சாதியும், மதமும், வர்க்கமும் சேர்ந்து திருமணத்தின் குற்றவியல் சட்டமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நாட்டில் அந்த அசலான பிரச்சினையைப் பற்றி பேசினால்தான் அது காதல் படம். வி.தா.வ யில் கிறித்தவம், இந்து மதம் எல்லாம் ஒரு பேச்சுக்கு வந்து சென்றாலும் படத்தின் இதயம், காதலின் இனிய அவஸ்தையையே  பழைய முரளி படங்களுக்கு இணையாக அலுப்பூட்டும் விதத்தில் சுவாசிக்கிறது.

ஆனால் அலைகளின் கடற்கரை வாழ்க்கையில் இல்லாத அமெரிக்கா, அமெரிக்கர்கள் காறித்துப்பிய கென்டகி சிக்கன் கடை, ஷாப்பிங் மால்கள், செல்பேசி, எஸ்.எம்.எஸ், பளீர் சாலையில் பைக் பயணம் இவைதான் இது போன்ற காதல் படங்கள் வந்தடைந்திருக்கும் பரிணாமம். பா வரிசைப் படங்களில் நிலப்பிரபுத்துவ மேன்மையிலிருந்த காதல் இன்று முதலாளித்துவ முன்னேற்றங்களில் வந்து நிற்கிறதே அன்றி இந்தியாவின் காதல் வாழ்க்கையை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் உயிராதரமான ஜீவன் இங்கு திட்டமிட்டே மறைக்கப்படுகிறது. மேக்கப் இல்லாமல் போராட்டத்தில் உயிர்வாழும் உண்மையான தமிழகக் காதலர்களை சந்திக்க வேண்டுமா? 27.02.10 நக்கீரனின் 24 ஆம் பக்கத்தில் பாருங்கள்.

விடலைப்பருவத்தின் இறுதியில் வரும் முதல் காதல், உயிரியலின் தூண்டுதலே அன்றி அது சமூக உறவுகளில், வாழ்க்கையில் முதிர்ச்சியடைந்த காதலல்ல. முதல் காதலைப் பற்றி பேசவேண்டுமென்றால் அது அனுதாபத்துடன் கிண்டலடிக்கப்பட்டு புரியவைக்கப்பட்டிருக்க வேண்டும். வீட்டிலும், கல்லூரியிலும் தோன்றும் பொய்யான கலக உணர்ச்சிகளை சரியாக திசை மாற்றி தனது வாழ்க்கையின் ஆளுமையை கண்டு பிடிக்கும் வழியில் அந்த முதல்  காதல் புன்னகையுடனும், சுய எள்ளலுடனும் உலர்ந்து உதிர்ந்துவிடும்.

குழந்தைகள், காதல் இரண்டும் மனித குலத்தை உடல்ரீதியாகவும், அதனால் இனரீதியாகவும் நேசிக்கவைக்கும் அடிப்படைத் தூண்டுகோல்கள். ஆனால் அவை இரண்டும் அதன் வெளியை சுயம், தனிமை, வீடு என்ற தளைகளிலிருந்து பரந்த சமூக வெளிக்கு நகர்த்தும் போக்கில்தான் புடம் போடப்படுகின்றது.

காதல் ஒரு மனிதனை அதீதமான பலத்துடன் வாழ்க்கையை விருப்பமாக அணுகுவதற்கு தயார் செய்கிறது. காதலின் உதவியால் மனிதன் தனது சுற்றத்தை முன்னர் பார்த்திராத வகையில் அன்புடன் அணுகுகிறான். அவனுக்கு இதுகாறும் சலித்துப்போயிருந்த வாழ்க்கைத் தடைகள் இப்போது தாண்டுவதற்கு எளிதான விசயங்களாக மாறுகின்றன. ஆனால் காதலின் இந்த மகத்துவ ஆயுள் மிகவும் குறுகியது என்பதைப் பலரும் புரிந்து கொள்வதில்லை.

ஒரு ஆணும், பெண்ணும் தமது காதல் உண்மையானதா, பொருத்தமானதா என்பதை தத்தமது சமூக நடவடிக்கைகளிலிருந்தே கண்டுபிடிக்க முடியும். அதை அமெரிக்க, கேரளா லோகேஷன்களோ, அலங்கார உடைகளோ, ரஹ்மானின் உணர்ச்சியைக் கிளறும் இசையிலோ கண்டு தெளிய முடியாது. சரியாகச் சொல்லப்போனால் தமிழ் சினிமா தற்போது உருவாக்கியிருக்கும் இந்த புதிய சினிமா மொழி அதற்கு தடையாகவும் இருக்கிறது. எனக்கு ஒரு பெண்ணை பிடித்திருக்கிறது என்பதை மட்டும் ஒரு பரவச உணர்ச்சியாக எண்ணி எண்ணி இன்பமடையலாம்தான். ஆனால் வாழ்க்கை கோரும் சிக்கல் நமக்கு உணர்த்தும் ஒரே ஒரு யதார்த்தம் கூட இந்த இன்பத்தை வேகமாக முடிவுக்கு கொண்டுவந்து விடும்.

____________________________________

தமிழ் படங்கள் காதலிக்க கற்றுக்கொடுப்பதில்லை, போராடி வெற்றபெற வேண்டிய காதலை  அற்ப உணர்ச்சிகளின்  நொறுக்குத்தீனி இரசனையாகத் அவமானப்படுத்தி, திருப்பித் திருப்பிக் காட்டுகிறது. அதனால்தான் காதலர்களது திருமண வாழ்க்கையின் இன்பம் ஒரு சில மாதங்களுக்குள் முடிவுக்கு வருகிறது. இப்படி பத்தாண்டுகளுக்கொரு முறை வரும் தலைமுறைகளிடம் சில காதல் படங்கள் வெற்றியடைகின்றன. ஆனால் சமூகத்தில் இன்னமும் காதல் வெற்றி பெறவில்லை.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் காதல் உணர்ச்சியில் நீங்கள் விழுந்திருப்பது உண்மையானால், மன்னியுங்கள்…….நீங்கள் காதலிப்பதற்கு தகுதியானவரல்ல.

************

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. //விடலைப்பருவத்தின் இறுதியில் வரும் முதல் காதல், உயிரியலின் தூண்டுதலே அன்றி அது சமூக உறவுகளில், வாழ்க்கையில் முதிர்ச்சியடைந்த காதலல்ல. முதல் காதலைப் பற்றி பேசவேண்டுமென்றால் அது அனுதாபத்துடன் கிண்டலடிக்கப்பட்டு புரியவைக்கப்பட்டிருக்க வேண்டும். வீட்டிலும், கல்லூரியிலும் தோன்றும் பொய்யான கலக உணர்ச்சிகளை சரியாக திசை மாற்றி தனது வாழ்க்கையின் ஆளுமையை கண்டு பிடிக்கும் வழியில் அந்த முதல் காதல் புன்னகையுடனும், சுய எள்ளலுடனும் உலர்ந்து உதிர்ந்துவிடும்//

    நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.

  2. நம்ம நாட்ல போன வாரம் ரெண்டு budget தாக்கல் ஆச்சு… அத பத்தி எதாவது எழுதுவீங்கன்னு பார்த்தா நீங்க சினிமா படாத எழுதி comedy பண்றீங்க…. தயவு செய்து வினவு சினிமா படங்களுக்கு குடுக்கும் முக்கியத்துவத்தை கொஞ்சம் குறைக்க வேண்டும்…

  3. பதிவுலக பெருமக்களெல்லாம் உருகுஉருகுன்னு உருகிகிட்டிருக்கும்போதே இதை எழுதுனது நல்லது. திட்டியாவது பின்னூட்டம் ஏதாவது வந்திருக்னுமே??? மக்கள்லாம் உங்க கருத்்த மவுனமா ஒத்துகிட்டாங்களா வினவு?????

    அப்புறம் ஒரு விசயம் .. A சென்டர் சினிமாவ அங்கயே போயி பாருங்க

    • கேள்விக்குறி,
      பதிவுலக உருகுதல்களை கொஞ்சம் பிட்டு பிட்டாய் பின்னூட்டத்தில் முடிந்தால் போட்டு பாருங்களேன், கருத்துப்போர் வருதான்னு பார்க்கலாம்.
      எ சென்டர்ல படம் பார்க்கறது ரொம்ப செலவாகுமே, யாராவது ஸ்பான்சர் செய்தால் போகலாம்!

      • வினவு, நல்ல யோசனை, நாளைக்குள்ளாற முடிக்க டிரைபண்ணுறேன்

      • அட என்ன வினவு சாரு மாதிரி ஆயிட்டார்? ஸ்பான்சர் அப்பிடின்னு மத்தவங்ககிட்ட பிச்சை கேக்கறது சாரு தானே ?

        புதியவன்

  4. காதலிக்க தகுதியை வினவு (காதல் அட்வைஸ் மொத்த குத்தகைதாரர்) அவர்கள் பட்டியலிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் -:)

    • வெற்றிக் கதிவரன் இடுகையின் கீழே உள்ள சுட்டிகளைப் படியுங்கள், அதற்கு மேலும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள், காதலிப்பதற்கு என்ன தகுதி என்ற உங்களது கேள்வியை எதிர்பார்த்தோம், முதலில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்று சொல்லுங்களேன்!

      • காதலிக்க எதுக்கு தகுதி வேணும்? காதலிக்கப்படுவதற்குத்தான் தகுதிகள்
        வேணும் என நான் நினைக்கிறேன்.

    • தமிழ் சினிமா கசுமாலங்கள்லாம் காதலபத்தி லட்சக்கண்க்கான வார்த்தைங்க அட்டுவைசு ப்ண்ணும்போது கம்முனு இருந்து மானஸ்தன்களுக்கு வினவு சொன்னா மட்டும் இன்னா கோவம் வற்துபா?????

  5. வினவுக்காரவுகளுக்கு, காதலப்பத்தி படங்க தினுசு தினுசா வர்ர மாதிரி உங்க விமர்சனங்களும் புதுசு புதுசா வர்ரது நல்லது. கொஞ்ச நாளா கட்டுரைகள்ள ஆங்கில வார்த்தைகள அதிகமா எழுதுரீக, கொஞ்சம் மாத்திக்கிடுங்க,   

  6. //நளினி ஸ்ரீராம்…இந்தப் படத்தைப் பொறுத்தவரை இவரின் பங்கு மிக முக்கியமானது. உடைகள் வடிவமைப்பு இவர்தான். த்ரிஷாவையும் சிம்புவையும் இதைவிடச் சிறப்பாகவும் அதி முக்கியமாக சிம்ப்பிளாகவும் காட்டியதால் தான் இந்தப் படம் சொல்ல வந்த காதல் மனதோடு ஒன்ற வைத்தது.//

    பதிவர் நர்சிம் தனது பதிவில் தெரிவித்த முத்துக்கள் இவை. ஆக காதலிக்கணும்னா ஒரு நல்ல டிசைனரைப் பாத்து டிரெஸ்ஸுகளை செலக்ட் பண்ணிக்கணும், முருகா…………முருகா…………….!!!!!!!!!!!!!!!!!

  7. தயவு செய்து budget பற்றி எதாவது சொல்லுங்க எந்த சினிமா கழிசடை நமக்கு வேணாம் அதா எழுத பேச தான் சன் டிவி கலைஞர் டிவி ன்னு இருக்கே

    • ராமசாமி தமிழன்,

      பட்ஜெட் கட்டுரை ரெடியா இருக்கு. அடுத்த பதிவு அதுதான். நாட்டுப் பிரச்சினையோட காதல் மாதிரி வீட்டுப் பிரச்சினையையும் கவலைப்படணும்ல!!

      • பட்ஜெட் தான… இதோ வினவு கட்டுரை
        மோசம் படுமோசம்
        ஏகாதிபத்திய அடிமை சாசனம்
        அயோக்கியதனம்
        இதையே மாத்தி மாத்தி போட்டு எழுதிரலாம்…

  8. //த்ரிஷா ம்ம் ஓகே. எனக்கு ரொம்பவும் பிடித்த நடிகையில்லை. இந்தப் படத்திலும் பிடிக்குமளவு ஏதும் செய்து விடவில்லை. ஆனால் கொடுத்த வேலையைக் குறைவில்லாமல் செய்திருக்கிறார். ரொம்பவும் மெலிந்து கண்ணுக்கு கீழான கன்ன எலும்புகள் காலர் எலும்புகள் எல்லாம் தெரிய அதற்கு கீழும் ஏது சொல்லிக் கொள்ளும் படி பெரிதாய் இல்லை. இதனால்தானோ என்னவோ கௌதமும் நான் அவள் Front ஐப் பார்த்ததை விட back ஐப் பார்த்ததுதான் அதிகம் என வசனம் வேறு வைத்திருக்கிறார்.//

    பதிவர் ஸ்ரீதர்ஷன் தெரிவித்த முத்துக்கள் இவை. த்ரிஷாவின் கன்ன எலும்பு, காலர் எலும்பு அதுக்கும் கீழே …..எப்படியெல்லாம் ஒரு காதல் படம் ரசனையை உருவாக்குகிறது. முருகா………..முருகா……………

  9. //எழுதி இயக்கியிருப்பது கெளதம் வாசுதேவ் மேனன். சாதாரணமாகவே மனுஷனுக்கு லவ் ட்ராக் என்றாலே இவர் படங்களில் உருகி வழியும், இது காதலை பற்றிய படம் கேட்க வேண்டுமா? புதுசாய் காட்சிகள் ஏதுமில்லாவிட்டாலும், மிக சுவாரஸ்யமான காட்சியமைப்பினாலும், நடிகர்களின் ஒத்துழைப்பினாலும், ஒளிப்பதிவாளரினாலும், எடிட்டரினாலும், ஷார்ட் அண்ட் ஸ்வீட்டான வசனங்களினாலும், இயல்பான கேரக்டர்களினாலும் மனதை கவருகிறார். க்ளைமாக்ஸ் காட்சி தமிழ் சினிமாவுக்கு புதுசுதான். காதலர்களின் பாடி லேங்குவேஜ் ஆகட்டும், டயலாக் டெலிவரியாகட்டும் அவ்வளவு இயல்பு. கண் முன்னே இரண்டு பேரை உலவ விட்டிருப்பது போன்ற உணர்வை கொண்டுவந்திருப்பதில் இயக்குனருக்கு வெற்றியே.//

    பதிவர் கேபிள் சங்கரின் விமர்சன முத்துக்க்கள் இவை.

    டெக்னிக்கலான சமாச்சாரங்கள் நல்லா இருந்தா அது இயல்பான காதலாம்!

    மாரியாத்தா………….மாரியாத்தா……………..!!!!!!!!!!!!

    • ரியலு என்வேலய நீங்க காலி பண்ணிட்டீங்க, ஒ.கே. … இவய்ங்க உருகுறத பாத்த கவுதமேன்னஃ ஆபீசுல ‘ காசே வாங்காம இப்படி கூவுராய்ங்கேள’ ன்னு ஒரே பீலிங்ஸ் ஆஃப் இந்தியா

      • கேள்விக்குறி, இத்தோட நம்ம வேலை முடியுது, மிச்சத்தை நீங்க தொடருங்க, முடிஞ்சா நைட்டு வந்து உதவுறேன்.

  10. //படம் முழுக்க ஒரு தேவதை போலவே வந்து போகிறார்.தேவதை என்ற சொல்லுக்கு த்ரிஷா என்று இன்றைய இளைஞர்கள் அர்த்தம் சொல்லுவார்கள்.வெகு சீக்கிரமே ஒரு கோவில் கட்டினாலும் அது அசாதாரணம் இல்லை.நான் படம் பார்க்க சென்றதே த்ரிஷாவுக்காகதான். அந்த எதிர்பார்ப்பை நிறையவே பூர்த்தி செய்து விட்டார்கள் இந்த படத்தில்.

    அவரின் அந்த கர்லி ஹேரை சொல்லவா இல்லை அந்த மென்மையான பார்வையை சொல்லவா இல்லை கழுத்துக்கு அழகு சேர்க்கும் அந்த டாலரை சொல்லவா இல்லை புடவையை கொஞ்சம் தளர்வாக உடுத்தியிருக்கும் அழகை சொல்லவா இல்லை அந்த ஸ்டைலான நடையை சொல்லவா.எதைச் சொல்லவென்றே தெரியவில்லை.//

    பதிவர் வெற்றியின் முத்துக்கள் இவை.

    காலி ஹேர், டாலர், தளர்வான சேலை, ஸ்டைலான நடை….இதெல்லாம் இல்லாத ஒரு பெண்ணை இவர் கட்டிக்கிட்டா பாவம் அந்தப் பொண்ணு.

    ஏசுவே…………..ஏசுவே…………!!!!!!!!!!!!!!

  11. //அடுத்த ப்ளஸ் சிம்புவின் காஸ்ட்யூம் டிசைனர். அவரின் ஒவ்வொரு ஆடையும் மனதில் நிற்கிறது. நேர்த்தியான தேர்வு, வடிவமைப்பு. குறிப்பாக அவரின் கட்டம் போட்ட ஸ்லாக் ஷர்ட்கள், ஆலப்பே முதல் முறை செல்லும் போது படகில் போட்டிருக்கும் ப்ளூ நிற டி-ஷர்ட், ஓமனப் பெண்ணே பாடலில் வரும் வெள்ளை நிற பேண்ட், கோட், அதனுள்ளே இருக்கும் டி-ஷர்ட் என எல்லாமே அற்புதம்.//

    பதிவர் விக்னேஷ்வரியின் முத்துக்கள் இவை.

    இந்த நுட்பமான பார்வையும், இரசனையும் இருந்தாத்தான் காதலிக்க முடியும் போல!

    அல்லா……………..அல்லா…………..!!!!!!!!!!!!!!!!!!

  12. ///ஒரு ஆணும், பெண்ணும் தமது காதல் உண்மையானதா, பொருத்தமானதா என்பதை தத்தமது சமூக நடவடிக்கைகளிலிருந்தே கண்டுபிடிக்க முடியும்.///

    இது அந்த படம் கிடையாது. அதை வினவு குழுவினர்தான் தயாரித்து இயக்கி வெளியிட வேண்டும்.

    ///எனக்கு ஒரு பெண்ணை பிடித்திருக்கிறது என்பதை மட்டும் ஒரு பரவச உணர்ச்சியாக எண்ணி எண்ணி இன்பமடையலாம்தான். ஆனால் வாழ்க்கை கோரும் சிக்கல் நமக்கு உணர்த்தும் ஒரே ஒரு யதார்த்தம் கூட இந்த இன்பத்தை வேகமாக முடிவுக்கு கொண்டுவந்து விடும்.///

    இதுதான் கவுதம் வாசுதேவ மேனன் எடுத்திருக்கும் ‘வின்ணை தாண்டி வருவாயா’வின் கதை. இதை இதற்க்கு முன் எந்த ‘முரளி’ படத்திலும் இவ்வளவு தெளிவாய் சொன்ன‌தில்லை.

    வினவுக்கு எதை பார்தாலும் அதில் போராட்டம் இருக்க வேண்டும், இல்லையெனில் அது ரசிக்க தகுந்தது அல்ல. காதல் உனர்ச்சிக்கு ஒரு மார்க்சிய விளக்கம் அளித்து, இரண்டு போராளிகளுக்கு இடையே எற்படும் காதல் மட்டுமே உன்மையானது மற்றெல்லாம் கீழ்த்தரமான, சமூக பன்பாட்டு சீரழிவின் விளைவு என எளிமை படுத்தி விட வேண்டும்.

    சமுகத்தின் அடி கட்டுமானத்தில் காதல் இல்லை அது மேல் கட்டுமானத்தில் உள்ளது. இனறைய சமூக உற்பத்தி உறவின் அடிப்படையில் எல்லா தளத்திலும் போலித்தனம் மிதம் மிஞ்சி உள்ளது. முதலாளித்துவமே இன்று காதல் எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிக்கிறது.ப்ளா… ப்ளா… ப்ளா… இனி காமம் கொள்வதும், செய்வதும் எப்படி என்று கூட வினவே கண்கானித்து வழிமுறைகளை அறிவிக்க கூடும். செங்கொடி அடிமைகள் காத்திருக்கலாம், பாட்டாளி எஜமானர்களுக்காக. அனால் இப்படி எளிய சூத்திரங்களுக்குள் சுருக்கி விட முடியுமா என்ன மனித வாழ்வை?

    காதலும் காமமும் மனித உனர்வுகளும் எல்லா தர்க்கங்களுக்கும் அப்பாற்பட்டது. பூனையின் பார்வை கொன்டு ‘வி.தா.வ.வை’ பார்க்காமல், அது எந்த சமூகத்தை பிரதிபலிக்கிறது, அந்த சமூகத்தின் ஊசலாட்டங்களும் போலித்தனங்களும் சரியாக பதிவு செய்ய பட்டு இருக்கிறதா என்பதை ஆய்வுக்கு உட்படுத்தினால் சில பல ஆண்டுகளில் வெளிவந்துள்ள‌ சினிமாக்களை ஒப்பிடுகையில், இது எடுத்து கொண்ட கருவிற்க்கு நேர்மையாக உள்ள சினிமா என்பதை புரிந்து கொள்ள முடியும்.

    • காதல் என்பது போராட்டம்தான். இந்தியாவில் போராடாமலே காதலிக்க வேண்டுமென்றால் நீங்கள் உங்களது அத்தை மகளையோ அல்லது மாமன் மகளையோதான் காதலிக்க வேண்டும்.. அதுவும் பணம், அந்தஸ்து வேலை என ஒத்துவரும் பட்சத்தில்தான்.. காதல் தோன்றுவதற்கு சமூக நடவடிக்கை காரணமாக இருக்க வேண்டும் என்பது பிரச்சாரம் என்றால் அதனை என்ன என்பது.. அறியாமையா அல்லது அதனையும் மீறிய தனிநலமா நீங்கள்தான் சொல்ல வேண்டும்..

      ஆயிரம்தான் புனிதம் என்றாலும் காதல் தனியுடமையைத்தான் கோருகிறது. புரட்சியாளனாக எல்லாம் வேண்டாம். ஒரு பத்து ரூபாய் பிச்சை போட வேண்டும் என்றால் கூட காதலும் அதன் தொடர்ச்சியாக வரும் குடும்பமும் இணைந்து தனது நலத்தை மாத்திரமே முன்னிறுத்தி அது அனுமதிக்கும் பட்சத்தில்தான் பத்து ரூபாயை பிச்சைக்காரனுக்கு தூக்கிப் போடும். காதலுக்கு முன் எளியோர்க்கு இரங்கும் மனதைப் பெற்றிருந்தாலும் கூட காதல் வந்த பிறகு முன்நிபந்தனை இதுதான். இது உயர்ந்த மானிடப் பண்பா என இப்போது சொல்லுங்கள்..

      காதல் இன்றைக்கு முதலாளிகளின் சந்தையால் தீர்மானிக்கப்படுகிறது எனச் சொன்னால் உங்களுக்கு அது ராவாக தெரியலாம். தனக்கு புத்தாடையும், விரும்பிய நகையும், விரும்பிய உணவும் வாங்கித் தர இயலாத காதலை காதலர்கள் வளர்த்துக் கொள்ள முடிகிறதா.. அவர்கள் அப்படி விரும்பிய அனைத்தையும் அவர்கள் டிவியின் உதவி இல்லாமல் ஆய்ந்து அறிந்து தெரிந்து கொண்டார்களா…

      வாழ்க்கை எளிய சூத்திரங்களில்தான் உண்மையைப் போல ஒளிந்திருக்கிறது. வர்க்கம்தான் எல்லாவற்றையும் காதலையும் கூட தீர்மானிக்கின்றது எனச் சொன்னால் காதலிக்காத விதாவ பார்த்தவர்களும், அந்த அனுபவத்தை பெறுவதற்கு தகுதி இல்லாதவர்களும் சண்டைக்கு வரக் கூடும். ஆனால் உண்மை எளிமையானது, போலித்தனம் உள்ளவர்களுக்கு ஏற்றுக் கொள்ள சிரம்மானது. தங்களிடம் மேவும் இப்போலித்தனத்தை வெளி உலகத்தின் மீது பழிசுமத்தி விட்டு அமைதி காப்பவர்கள் அவர்கள் என நினைக்கிறேன்.

      இது எனது கருத்து.. விண்ணைத் தாண்டி வருவாயா என்ற படம் காதலிக்க தகுதியே இல்லாத பசங்களுக்கு காதலை ஒரு கைமைதுனமாக சொல்லித் தருகின்றது. அப்புறம் காதல் எளிய சூத்திரத்தில் அடங்காதா… ஏங்க உங்களுக்கு திரிசா மாதிரி இல்லாத ஒரு பொண்ணு, வசதி குறைவான குடும்பத்தில் பிறந்த பொண்ணு மனைவியா வரணும்கிறது விருப்பமாகி தேடிப் போயி அவங்கள லவ் பண்ணுவீங்களா…

      • http://pulikesi.wordpress.com/2008/11/23/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d/

        புலிகேசி எழுதியுள்ள வான்ரம் ஆயிரம் படம் விமர்சனத்திற்கான சுட்டி. தோழர்கள் பிரதியை கட்டுடைப்பதை அவரது பிரதியையும், வினவின் பிரதியையும் உள்ளாட விட்டு உடைக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

        அவர் எழுதியிதிலிருந்து:

        //தனி ஒரு மனிதனின் அவல புலம்பல் தேவைக்கு அதிகமாய் தினிக்க படுகிறது நம்முள். அப்படி தினிப்பதற்க்கு எந்த காரனமும் தேவை இல்லை என் தந்தையின் சாவு ஒன்று மட்டுமே போதும் என திமிர்த்தனமாய் அறைகூவுகிறார் இயக்குனர் ‘கவுதம் வசுதேவ் மேனன்’.//

        //நன்றாய் வாழ்ந்த ஒருவன் காதலி இறந்த பின் வாழ்வை போதையில் தொலைத்து பின் மீன்டு எழும் ஒரு வரி கதையை சொல்ல மூன்று மணி நேரம்…ஹும்ம் இதில் இடை இடையே ‘டாடி டாடி’ என்று ஒப்பாரி வேறு. உங்கள் வீட்டு ஒப்பாரியை வாசற்படியோடு முடித்து கொள்வதுதான் ஊருக்கு அழகு, அதை சந்தை வரை எடுத்து வந்தால்//

        //‘ நல்ல சினிமா’ எடுக்கிறேன் என்று குப்பையை எடுத்து தள்ளும் இயக்குனர்களை குப்பையாக தள்ளி விடுவார்கள்…உன்மையாய் நான் குப்பை படம் தான் எடுக்கிறேன் என்று ஒப்பு கொள்பவர்களை மன்னித்து விடுவார்கள். //

        • திருவாளர் புலிகேசி வினவிடம் சொன்னது:
          //வினவுக்கு எதை பார்தாலும் அதில் போராட்டம் இருக்க வேண்டும், இல்லையெனில் அது ரசிக்க தகுந்தது அல்ல. காதல் உனர்ச்சிக்கு ஒரு மார்க்சிய விளக்கம் அளித்து, இரண்டு போராளிகளுக்கு இடையே எற்படும் காதல் மட்டுமே உன்மையானது மற்றெல்லாம் கீழ்த்தரமான, சமூக பன்பாட்டு சீரழிவின் விளைவு என எளிமை படுத்தி விட வேண்டும்.//

          அதே திருவாளர் கௌதமிடம் சொல்வதாக எண்ணிக் கொண்டு தன்னிடமே கூறிக் கொண்டது அவரது வாணரம் ஆயிரம் பட விமர்சனத்திலிருந்து:

          //தனி ஒரு மனிதனின் அவல புலம்பல் தேவைக்கு அதிகமாய் தினிக்க படுகிறது நம்முள். அப்படி தினிப்பதற்க்கு எந்த காரனமும் தேவை இல்லை என் தந்தையின் சாவு ஒன்று மட்டுமே போதும் என திமிர்த்தனமாய் அறைகூவுகிறார் இயக்குனர் ‘கவுதம் வசுதேவ் மேனன்’.//

          ஆக, இவருக்கு எதுவாக இருந்தாலும் அதில் தனிமனித அவலப் புலம்பல் தேவைக்கு அதிகமாய் இருக்கக் கூடாது(தேவை எவ்வளவு என்பதை அவரே சொல்லுவார்). இது தவிர்த்து அவருக்கு என்று பல வரையறைகள். இதையெல்லாம் திருப்திப்படுத்தாத திரைப்படத்தை வாண்ரம் ஆயிரம் என்று விமர்சிப்பார். எடுக்காத படத்தை, இல்லாத உணர்வுகளை எதிர்பார்த்து ஏமாந்த அவர் அதனடிப்படையில் விமர்சிப்பார். அதற்கு அவருக்கு உரிமை உண்டு எனில், அதே போல வினவு செய்தால் அவருக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்துவிடும். ஏனேனில், வினவு ஒரு கம்யுனிஸ்டு, திருவாளரோ ஜவ்வு ஜவ்வு என்று எதையும் இழுத்து சாவடிக்கும் ஒரு அல்பை(காதலையும் அப்படியே ஜவ்வு ஜவ்வென்று இழுத்து கடசியில் சாவடிக்கும்).

          திருவாளரே, உமக்கு இருக்கும் விமர்சன உரிமை வினவுக்கும் உண்டு. வினவு எழுதாததை எழுதியதாகச் சொல்லி திரிக்க வேண்டாம். ஒரு ஆக்கம் சித்தரிக்கும் விசயத்தை, அது உணர்த்த விரும்புவதாக, அதி உயர்வானதாக காட்ட விரும்பும் விசயத்தை உண்மையில் அந்த ஆக்கம் சித்தரிக்கும் வகையில் அது இல்லை என்று நம்புகிற ஒருவன் அம்பலப்படுத்த உரிமை உள்ளது. அது இல்லாததை சொல்வது அல்ல. இல்லாததை இருப்பதாகச் சொல்லும் போலித்தனத்தை அம்பலப்படுத்துவதாகும்.

    • //இந்த வர்க்கத்தின் பொதுப் பண்பு என்னவென்றால் எதையும் பட்டு பட்டுனு முடிவெடுக்காமல் ஜவ்வாக இழுக்கும். அவ்வகையில் காதல், வீரம், சோகம் எல்லாம் ஜவ்வுதான்.///

      புலிகேசி கூட இப்படித்தான் போல. அவரது ஜவ்வை குறிப்பிட்டுவிட்டதால் அவருக்கு ஆவேசம் பொங்கிவிட்டது..

    • //காதலும் காமமும் மனித உனர்வுகளும் எல்லா தர்க்கங்களுக்கும் அப்பாற்பட்டது. //

      புலிகேசி பதிவில் குறிப்பிடப்பட்ட நக்கீரன் இதழை வாங்கிப்பார்த்து உண்மையான காதலர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் விமரிசனத்தில் வினவு எழுதாத கருத்துக்களை இப்படித்தான் வினவு எழுதும் என்பது போல கட்டியமைத்திருக்கிறீர்கள்.

      போராட்டம், அடிக்கட்டுமானம், போராளிகள் இப்படித்தான் காதல் இருக்குமென்று நாங்கள் கூறியதாக உங்கள் மனதில் பதிந்திருக்கிறது. நல்லது வினவை விமரிசிப்பதற்கு முன் இந்தப்படம் உங்களிடம் என்ன உணர்வை தோற்றுவித்திருக்கிறது என்று சொன்னால் போதுமே? அப்படி ஒன்றும் படத்தில் இல்லை என்பதால் இந்த எதிர் விமரிசனத்தில் இறங்கி விட்டீர்களா?

      காதலும் காம்மும் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது என்பது முழுமையல்ல. ஒருவனுக்கு திடீரன்று காமம் வரலாம். ஆனால் அதை நிறைவேற்றுவது என்பது தர்க்கத்திற்கு உட்பட்டதுதான். அதாவது நினைத்த பெண்ணை சட்டென்று கலவி கொள்ள முடியாது. அதற்கு சமூகம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க நேரும். காதலும் கூட தர்க்கமின்றி தோன்றினாலும் அது வளர்வதற்கு நிறைவேறுவதற்கு தர்க்கப்பூர்வமாகத்தான் அணுகமுடியும்.

      ஒரு அழகான பெண்ணைப்பார்த்து புலிகேசி திடீரென்று காதலிக்கிறார். ஒரு சந்திப்பில் அந்தப்பெண் வினவின் கருத்துக்களை கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதைத் தெரிந்த பிறகு புலிகேசி யாருக்கும் தெரியாமல் காதலை கைகழுவுகிறார். இது தர்க்கமா, அனிச்சையா?

      அடுத்து காதல் கூட தனது வர்க்கம் பார்த்துதானே வருகிறது. உங்களைப் போன்றவர்கள் மலத்தை தலையில் சுமக்கும் ஒரு நகரசுத்திப் பெண்ணை காதலிக்கும் வாய்ப்பு உண்டா புலிகேசி அவர்களே? மழுப்பாமல் நேரடியாக சொல்லுங்கள்.

  13. @@@@@@ இனி காமம் கொள்வதும், செய்வதும் எப்படி என்று கூட வினவே கண்கானித்து வழிமுறைகளை அறிவிக்க கூடும். @@@@@@@ போர்னோகிராஃபி என்று ஒன்று இருப்பதும், அது இதே வேலையை ஆண்டாண்டு காலமாக செய்துவருவதும் அதைவைத்து டாக்டர் பிரகாஷ் முதல் பெரும் முதலாளிகள் வரை கல்லா கட்டுவதும் ‘பச்சப்புள்ள’ புலிகேசிக்கு சத்தியமா தெரியாது என்றே நம்புவோம். 

    • காதலை பற்றி கூடத்தான் ஆண்டாண்டு காலமாய் மற்றவர்கள் சொல்லி வருகிறார்கள். அதையெல்லாம் தான் மார்க்சிய கண் கொண்டு பார்த்து நிராகரிக்க பரிந்துரை செய்கிறதே ‘வினவு’. எனவேதான் சரியான காதல், சரியான காமம் பற்றி ‘வினவு’ ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.
      முதலாவதாக சரியான காதலுக்கு/காமதுக்கு பத்து கட்டளைகள் அல்லது சரியான காதலின்/காமத்தின் பத்து பொது பன்புகள் என்னும் ஒரு பதிவிட்டால் நாங்கள் எல்லாம் சரியாக காதலிக்கிறோமா சரியாக ‘மேட்டர்’ செய்கிறோமா என்று ‘செக்’ செய்து கொள்கிறோம். சும்மானாச்சுக்கும் சமுகத்தில் அது குறை இது குறை என்று குரைப்பதை விடுத்து ஆக்கபூர்வமான சில கட்டுரைகளும் எழுதலாமே?!!

      • @@சரியாக ‘மேட்டர்’ செய்கிறோமா என்று ‘செக்’ செய்து கொள்கிறோம். @@
        அதை உங்கள் மனைவியிடமோ காதலியிடமோ செக்செய்வது தானே சரி….?????

      • புலிகேசி நீங்கள் காதலை சினிமாவில் மட்டும்தான் பார்த்திருக்கிறீர்கள்போலும். நீங்கள் ஒரு தலித் பெண்ணைக் காதலித்து அதை உங்கள் பெற்றோர் சம்மதத்துடன் உங்கள் ஊரில் நடத்த முயல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போதுதான் கௌதம மேனன் என்ற டுபாக்கூர் கலைஞனெல்லாம் உங்களுக்கு உதவ முடியாது என்பதை புரிந்து கொள்வீர்கள். நடைமுறையில் இறங்கினால்தான் உண்மையில் காதல் என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள முடியும்.

      • ////தனி ஒரு மனிதனின் அவல புலம்பல் தேவைக்கு அதிகமாய் தினிக்க படுகிறது நம்முள். அப்படி தினிப்பதற்க்கு எந்த காரனமும் தேவை இல்லை என் தந்தையின் சாவு ஒன்று மட்டுமே போதும் என திமிர்த்தனமாய் அறைகூவுகிறார் இயக்குனர் ‘கவுதம் வசுதேவ் மேனன்’.////

        வாணரம் ஆயிரம் படத்திற்கு விமர்சனம் எழுதிய புலிகேசி அது தனிமனித புலம்பலை அளவுக்கு மீறி திணிப்பதாக குறைபடுகிறார்.

        அளவுக்கு மீறாமல் புகுத்த மார்க்ஸிய அடிப்படையில் அல்லாமல் பொது அறிவின் அடிப்படையில் பத்து வரையறைகள் அவர் வகுத்துத் தர வேண்டும்.

        • //சரியான காமம் பற்றி ‘வினவு’ ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.//

          சரியான அளவில் தனிமனித புலம்பலை புகுத்துவதற்கும், ஒருவேளை ஓவர் டோஸாக தனிமனித புலம்பலை புகுத்த வேண்டுமெனில் வாண்டம் ஆயிரம் படம் போல தந்தை செத்து போன சொத்தை சாக்குகளை தூக்கியெறிந்து விட்டு நல்ல வலுவான சாக்குகளை புகுத்துவதற்கும் புலிகேசி வரையறைகள் கொடுக்க வேண்டும் என்று வேண்டி நிற்கிறோம்.

  14. /ஒரு ஆணும், பெண்ணும் தமது காதல் உண்மையானதா, பொருத்தமானதா என்பதை தத்தமது சமூக நடவடிக்கைகளிலிருந்தே கண்டுபிடிக்க முடியும். அதை அமெரிக்க, கேரளா லோகேஷன்களோ, அலங்கார உடைகளோ, ரஹ்மானின் உணர்ச்சியைக் கிளறும் இசையிலோ கண்டு தெளிய முடியாது. சரியாகச் சொல்லப்போனால் தமிழ் சினிமா தற்போது உருவாக்கியிருக்கும் இந்த புதிய சினிமா மொழி அதற்கு தடையாகவும் இருக்கிறது./

    நல்லா சொல்லியிருக்கீங்க வினவு! ஆனா, ஏன் எல்லாரும் விதாவ -வுக்கு விழுந்து விழுந்து விமர்சனம் எழுதறாங்கன்னே புரியலை!

  15. @@@சமுகத்தின் அடி கட்டுமானத்தில் காதல் இல்லை அது மேல் கட்டுமானத்தில் உள்ளது. இனறைய சமூக உற்பத்தி உறவின் அடிப்படையில் எல்லா தளத்திலும் போலித்தனம் மிதம் மிஞ்சி உள்ளது. முதலாளித்துவமே இன்று காதல் எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிக்கிறது.ப்ளா… ப்ளா… ப்ளா… @@@@

    இப்படி வினவு எழதாத விமரிசனத்துக்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லியிருப்பதிலிருந்து ஒன்று நீங்கள் அவ்வளவு வெட்டியாக இருக்கவேண்டும் அல்லது கம்மூனுச ஜூரம் பிடித்து ஜன்னிகண்டிருக்க வேண்டும்.. இரண்டில் எது?????
    கவினிக்க – வினவு எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல் எஸ்கேப்பு ஆகும் கோழையாக நீங்கள் இருப்பதை மறைக்கும் முகமாக இதுபோன்ற அவதூறுகளை எழுதுகிறீர்கள் என்று நான் சந்தேகப்படவில்லை புலிகேசி

    • படம் எழுப்பாத பிரச்சனைகளை எல்லாம் வலிந்து தினித்து நீங்கள் மட்டும் ஒரு பதிவு எழுதலாம் அதை இங்கு யாரும் விமர்சிக்க கூடாது.

      கவுதம் எடுத்த சினிமாவை விமர்சிக்க சொன்னா
      ///முதல் காதலைப் பற்றி பேசவேண்டுமென்றால் அது அனுதாபத்துடன் கிண்டலடிக்கப்பட்டு புரியவைக்கப்பட்டிருக்க வேண்டும். வீட்டிலும், கல்லூரியிலும் தோன்றும் பொய்யான கலக உணர்ச்சிகளை சரியாக திசை மாற்றி தனது வாழ்க்கையின் ஆளுமையை கண்டு பிடிக்கும் வழியில் அந்த முதல் காதல் புன்னகையுடனும், சுய எள்ளலுடனும் உலர்ந்து உதிர்ந்துவிடும்.///
      இப்படி நீங்கள் எடுக்க நினைக்கும் ஒரு பிரச்சார சினிமாவை அவர் எடுத்து இருக்க வேண்டும் என பலவந்த படுத்தி விட்டு… வினவின் ஆதங்கத்தின் ஆதார இயங்கியல் கோட்பாட்டை கோடிட்டு கட்டினால், எழுதாத விமரசனதுக்கு நான் பதில் சொல்வதாக ஒரு குற்றசாட்டு! தூ… மானம் கெட்ட பொழப்பு இது.

      வினவு எழுப்பி இருக்கும் கேள்விகளுக்கு வி.தா.வா. என்னும் சினிமாவில் விடை தேட முடியாது. அதை முன் வைத்து ஒரு கருமத்தையும்(எழுப்பபட்ட கேள்விகளுக்கு சம்பந்த்மாக) புரிந்து கொள்ள முடியாது. அத்திரைப்படம் வாழ்வு இரக்கமற்ற வன்முறைகளை, தர்க்கதிற்க்கு உட்படாத விஷயங்களை நம் மீது தினித்து விட்டு, மெல் ஆறு என நகர்ந்து கொண்டே இருக்கிறது எனவும், அந்த உனர்வுகளின் அழுத்ததில் சிக்கி சின்னாபின்னம் ஆகாமல் தொடர்ந்து முன்னேறுங்கள் என்னும் நம்பிக்கையை நம் நெஞ்சில் விதைக்கிறது. படத்தின் அடிநாதமான இந்த‌ செய்தியை மறைத்து விட்டு வினவு தான் காண நினைக்கும் சினிமாவின் அடிப்படையிலும், சமூகத்தில் நிகழும் பிரச்சனைகளை முன்வைத்தும் விமர்சனம் செய்வது, ரசிகர்களை முளையற்ற முன்டங்களாகவும், தாங்கள் ஏதொ அதி மேதாவிகள் எனவும் என்னி கொள்வதாலேயே நடக்கிறது. அதற்க்கு ஆமாஞ்சாமி போட கொஞ்சம் கொசுப்படை, அப்டி இல்லை என்பவர்களை கட்டம் கட்டுவது என‌ முளையை மழுங்கடிக்கும் செயலைத்தான் வினவு நீன்ட நாட்களாக செய்து வருகிறது.

      இதில்தான் வினவுக்கு சந்தோஷம் என்றால்… பதிவு சூப்பரு!

      • //வினவின் ஆதங்கத்தின் ஆதார இயங்கியல் கோட்பாட்டை கோடிட்டு கட்டினால், எழுதாத விமரசனதுக்கு நான் பதில் சொல்வதாக ஒரு குற்றசாட்டு!//
        //அப்டி இல்லை என்பவர்களை கட்டம் கட்டுவது என‌ முளையை மழுங்கடிக்கும் செயலைத்தான் வினவு நீன்ட நாட்களாக செய்து வருகிறது.//

        ரொம்ப சரியா சொன்னீங்கன்னே…..
        கேள்வி கேட்டாலே கெட்டகெட்ட வார்த்தையாலே திட்றாங்க…..

        • அட தம்பி, எதுக்கு இந்த திட்றாங்கப்பா சீனெல்லாம், நீங்கள் மேற்கோள் காட்டியிருக்கும் வாக்கியத்துக்கு உங்களால் விளக்கமளிக்க முடியுமா????

      • //அத்திரைப்படம் வாழ்வு இரக்கமற்ற வன்முறைகளை, தர்க்கதிற்க்கு உட்படாத விஷயங்களை நம் மீது தினித்து விட்டு, மெல் ஆறு என நகர்ந்து கொண்டே இருக்கிறது எனவும், அந்த உனர்வுகளின் அழுத்ததில் சிக்கி சின்னாபின்னம் ஆகாமல் தொடர்ந்து முன்னேறுங்கள் என்னும் நம்பிக்கையை நம் நெஞ்சில் விதைக்கிறது.//

        இந்த வரிகளை கௌதம மேனன் பார்த்தால் மிகவும் வெட்கப்படுவார். என்னடா நாம நினைச்சுக்கூட பார்க்காத்தையெல்லாம் புலிகேசி சூப்பரா எழுதராறே என்று மூக்கில் விரலை வைப்பார்.

      • //படம் எழுப்பாத பிரச்சனைகளை எல்லாம் வலிந்து தினித்து நீங்கள் மட்டும் ஒரு பதிவு எழுதலாம் அதை இங்கு யாரும் விமர்சிக்க கூடாது. ///

        வாணரம் ஆயிரம் படம் எழுப்பாத பிரச்சினைகளை எல்லாம் எழுப்பி அது அளவுக்கு அதிகமான தனிமனித புலம்பல் என்று விமர்சனம் எழுதியுள்ள(புலம்பியுள்ள) திருவாளர்தான் இதைச் சொல்கிறார்.

        //படத்தின் அடிநாதமான இந்த‌ செய்தியை மறைத்து விட்டு வினவு தான் காண நினைக்கும் சினிமாவின் அடிப்படையிலும், சமூகத்தில் நிகழும் பிரச்சனைகளை முன்வைத்தும் விமர்சனம் செய்வது, ரசிகர்களை முளையற்ற முன்டங்களாகவும், தாங்கள் ஏதொ அதி மேதாவிகள் எனவும் என்னி கொள்வதாலேயே நடக்கிறது.//

        இதே போலத்தான் வாணரம் ஆயிரம் படத்தின் அதி உண்ணதமான செய்திகளையெல்லாம் மூடி மறைத்து விட்டு தான் காண நினைக்கும் தனிமனித புலம்பல் அளவாக உள்ள படத்தின் அடிப்படையில் விமர்சனம் செய்த புலிகேசி, இன்று அதற்கு எதிராக தானே எழுதி ஒரு மூளையற்ற முண்டமாகவே மாறிவிட்டார்.

  16. ‘வினவு எழுப்பி இருக்கும் கேள்விகளுக்கு வி.தா.வா. என்னும் சினிமாவில் விடை தேட முடியாது. அதை முன் வைத்து ஒரு கருமத்தையும்(எழுப்பபட்ட கேள்விகளுக்கு சம்பந்த்மாக) புரிந்து கொள்ள முடியாது. அத்திரைப்படம் வாழ்வு இரக்கமற்ற வன்முறைகளை, தர்க்கதிற்க்கு உட்படாத விஷயங்களை நம் மீது தினித்து விட்டு, மெல் ஆறு என நகர்ந்து கொண்டே இருக்கிறது எனவும், அந்த உனர்வுகளின் அழுத்ததில் சிக்கி சின்னாபின்னம் ஆகாமல் தொடர்ந்து முன்னேறுங்கள் என்னும் நம்பிக்கையை நம் நெஞ்சில் விதைக்கிறது’

    யோவ் என்ன படம் ஐயா அது, ஒபாமாவைத் மன்மொஹனை திட்டி ஒரு வார்த்தை உண்டா பார்பனீயம் ஒழிக அப்படின்னு யாரவது சொல்றாங்களா இல்ல ஆலப்புழையில் சிபிம் ஆட்சியை எதிர்த்து சிம்புவும் த்ரிஷாவும் போராடுகிற மாதிரி ஒரு காட்சி உண்டா சினிமாவில் நடக்கும் சுரண்டலை எதிர்த்து ஒரு பாட்டு உண்டா

    • ஆலப்புழா போட் காட்சிகள், கே.எப்.சி, அமெரிக்கா, சினிமா ஷூட்டிங் போன்ற ஜோடனைகளையெல்லாம் எலும்புகள் என்று நினைத்துக் கொண்டு சில ஜந்துகள் வயிற்றுப்பசியாற நினைக்கிறது. பாவம் பிழைத்துப் போகட்டும்.

  17. //விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் காதல் உணர்ச்சியில் நீங்கள் விழுந்திருப்பது உண்மையானால், மன்னியுங்கள்…….நீங்கள் காதலிப்பதற்கு தகுதியானவரல்ல.//

    சொல்லிட்டாங்கப்பா நம்ம அண்ணனுங்க….கேட்டுங்க எல்லாரும்….

  18. //விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் காதல் உணர்ச்சியில் நீங்கள் விழுந்திருப்பது உண்மையானால், மன்னியுங்கள்…….நீங்கள் காதலிப்பதற்கு தகுதியானவரல்ல//

    //நடுத்தர வர்க்கம் பொருளாதரத்தில் தனது மேல் வர்க்கத்தைப் பார்த்து கனவு கண்டு விட்டு நிஜத்தில் சாதாரண வாழ்க்கையை சலித்துக் கொண்டே வாழும். இந்த வர்க்கத்தின் பொதுப் பண்பு என்னவென்றால் எதையும் பட்டு பட்டுனு முடிவெடுக்காமல் ஜவ்வாக இழுக்கும். அவ்வகையில் காதல், வீரம், சோகம் எல்லாம் ஜவ்வுதான். நடுத்தர வர்க்கம் துணிந்து காதலித்து, காதலின் பிரச்சினைகளை எதிர் கண்டு போராடி வெல்வது அபூர்வம்//

    நல்லா சொன்னிங்க. நீங்க சொன்ன எல்லா ஜவ்வும் நம் சமூகத்தில் இருக்கு, ஒரு விடயம் மட்டுமில்லை. நேர்மை.  நம்முடைய சமூகத்தில் இருக்கும் சாதி, மத, பொருளாதார விடயங்களுக்காக காதலை சமரசம் செய்துகொண்டு, அதாவது சூழ்நிலைக்கேற்றவாறு தங்களின் காதலை கைகழுவிவிட்டு, பிறகு உருகி உருகி முதல் காதல், இரண்டாம் காதல் என்று பசப்புவது _____தனம். 

    • @@சமரசம் செய்துகொண்டு, அதாவது சூழ்நிலைக்கேற்றவாறு தங்களின் காதலை கைகழுவிவிட்டு, பிறகு உருகி உருகி முதல் காதல், இரண்டாம் காதல் என்று பசப்புவது _____தனம்.@@@

      மிக மிக சரி, 

  19. ‘நடுத்தர வர்க்கம் பொருளாதரத்தில் தனது மேல் வர்க்கத்தைப் பார்த்து கனவு கண்டு விட்டு நிஜத்தில் சாதாரண வாழ்க்கையை சலித்துக் கொண்டே வாழும். இந்த வர்க்கத்தின் பொதுப் பண்பு என்னவென்றால் எதையும் பட்டு பட்டுனு முடிவெடுக்காமல் ஜவ்வாக இழுக்கும். அவ்வகையில் காதல், வீரம், சோகம் எல்லாம் ஜவ்வுதான்.

    நடுத்தர வர்க்கம் துணிந்து காதலித்து, காதலின் பிரச்சினைகளை எதிர் கண்டு போராடி வெல்வது அபூர்வம்’

    வினவின் கண்டுபிடிப்பு இது வினவுக்கு நோபல் பரிசு யாராச்சும் கொடுங்க

    • வினவு solvathu mutrilum unmai.. ithu சராசரி naduthara varga makkalukku mattume puriyum.. ithu pondra kathal kalai karpanai செய்து கொண்டு, கனவில் irukum makkaluku intha padam oru super duper..\
      யதார்த்தத்தை புரிந்து kondavarkalin nilaiyum வினவின் nilaiyum ondre…

  20. @@@படம் எழுப்பாத பிரச்சனைகளை எல்லாம் வலிந்து தினித்து நீங்கள் மட்டும் ஒரு பதிவு எழுதலாம் அதை இங்கு யாரும் விமர்சிக்க கூடாது@@@ 

    யாரும் விமர்சிக்க்கூடாது என்ற உங்கள் கூற்று அவதூறு…

    @@@………நம்பிக்கையை நம் நெஞ்சில் விதைக்கிறது. @@@

    @@@@…………………இப்படி நீங்கள் எடுக்க நினைக்கும் ஒரு பிரச்சார சினிமாவை அவர் எடுத்து இருக்க வேண்டும் என பலவந்த படுத்தி விட்டு… @@@

    நீங்கள் சொன்னால் கருத்து வினவு சொன்னால் பிரச்சாரம்…நல்ல ஜனநாயகம்

    @@@அதற்க்கு ஆமாஞ்சாமி போட கொஞ்சம் கொசுப்படை, அப்டி இல்லை என்பவர்களை கட்டம் கட்டுவது என‌ முளையை மழுங்கடிக்கும் செயலைத்தான் வினவு நீன்ட நாட்களாக செய்து வருகிறது.@@@

    அட புலிகேசியின் ஜனநாயகம் புல்லா அரிக்க வைக்கிறது.. ஒத்த கருத்து இருந்தால் கொசுப்படையோ, அப்போ நீர் என்ன கவுதமனின் அடிதாங்கியா???  மட்டறகமான கருத்து. வெட்கப்படுங்கள் 
    இதிலே கட்டம் கட்டப்படுகின்றதாம் யப்பா… மீண்டும் அவதூறு

    @@@படம் எழுப்பாத பிரச்சனைகளை @@@ இந்த சினிமா ஒரு ஜவ்வு ஜவ்வு என்பதைத்தான்டி வேறு விமரிசனத்துக்கு இது லாயக்கில்லை என்று வினவு கருதிவிட்டு பொதுவில் நமது சமூகத்தில் காதலின் யதார்தத்தையும் தமிழ் சினிமா அதில் செய்யும் மோசடியையுமே எழுதுகிறது. அதற்கான ஆதார செய்திகளையும் சுட்டியாக கொடுத்துள்ளது.
    அதற்கு எதற்குமே உங்களிடம் பதிலில்லை போலும்.. 

    @@வினவின் ஆதங்கத்தின் ஆதார இயங்கியல் கோட்பாட்டை கோடிட்டு கட்டினால்,@@@ 

    வினவு காதலைப்பற்றி தனது கருத்தை தெளிவாக இதே பதிவில் எழுதியிருக்கிறது.. அதை அநியாயமாக மறைத்து, வினவு எழுதாத ஒன்றை வினவு எழுதியாத நினைத்து விமரிசித்த உங்கள் மோசடிக்கு மாரக்சிய சொல்லாடல்களை வம்புக்கு இழுக்காதீர்…. இதுக்கு ங்கோ%@$%..பா$ ன்னே திட்டலாம் அது எவ்வளவோ நேர்மையானதாக இருக்கும். 

  21. //விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் காதல் உணர்ச்சியில் நீங்கள் விழுந்திருப்பது உண்மையானால், மன்னியுங்கள்…….நீங்கள் காதலிப்பதற்கு தகுதியானவரல்ல.//

    அப்ப எதை குவாலிஃபிக்கேசன்னு சொல்றீங்க?

    ஒரு படம் நன்றாக எடுக்கப் பட்டால், அதற்கு எதிர் விமர்சனம் எழுத ஒரு கும்பல் இருந்து கொண்டுதானிருக்கிறது. படம் எங்கு எடுக்கப் பட்டால் என்ன? அவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் காதல் அழகாகத்தானே இருந்தது….கமர்சியல் விஷயங்கள் சேர்க்காமல் படம் எடுக்க அவங்க என்ன முட்டாளா? எங்க நான் செய்யற வேலைக்கு சம்பளமே வேணாம்னு யாராவது சொல்லுங்க பாப்போம்? படம் என்றால் இப்படித்தான் எடுக்க முடியும். பணம் சம்பாதிக்கும் வழிகள் இவை.

    • கமர்சியல் விசயங்கள் சேர்ப்பது எதற்காக புலிகேசி? அது காதலுக்கு என்ன விதத்தில் பலனளிக்கிறது? கொஞ்சம் விளக்குங்களேன்.

      • காதலை அப்படியே சொன்னால் ஒருத்தனும் தியேட்டர்ல உட்கார மாட்டான். கமர்ஷியல் விஷயங்கள் சேர்த்தால் தான் ரசிகன் ரசிப்பான். ஒரு வேலை நீங்கள் அப்படி எடுத்தால் தான் படம் பிடிக்கும் என்றால் சிலருக்காக படமெடுத்து நஷ்டமடைவதை எவனும் விரும்ப மாட்டான். பலருக்காகத்தான் படம் பண்ண முடியும்.

        • உண்மையான காதலை திரையில் சொல்ல முடியாது. கமர்சியல் விசயத்தைத்தான் ரசிகன் ரசிப்பான். ஆனால் வி.தா.வ நல்ல காதல் படம்! அந்தக் காதலை விமரிசிக்கக் கூடாது. புலிகேசி சேம் சைடு கோல் என்பதில் உங்களை மிஞ்ச முடியாது போலிருக்கிறது.

        • ய்தார்த்தத்தை சொன்னால் சேம் சைடு கோல் என்றால் அப்படியே இருந்து விட்டுப் போகிறேன். நீங்க வேணா எப்பவும் போல எதிர் சைடு கோலே போடுங்க….ம் என்ன கொடுமை இது..? கமர்சியலில் காதலை கலந்தால் அங்கு காதல் இல்லை என்று அர்த்தமா..? படத்தில் காதலை யாரும் கேவலப் படுத்தவில்லை என்பதுதான் உண்மை…

        • //ய்தார்த்தத்தை சொன்னால் சேம் சைடு கோல் என்றால் அப்படியே இருந்து விட்டுப் போகிறேன். //

          புலிகேசி போன்றவர்கள் சொல்லும் யாதார்த்தம் எது? ரசனை எது? தாம் இந்த சமூகத்தின் பிற எளிய பெரும்பான்மை மக்களைவிட நாகரிகமானவர்கள், ரீஜெண்டானவர்கள் என்று நம்புவதிலிருந்துதான் இவர்களது யாதார்த்தம், ரசனை ஆரம்பிக்கிறது. அதுதான் வாணரம் ஆயிரத்தை புலம்பல் என்று விமர்சனம் செய்துவிட்டு அதுவே அனைவருக்குமான யாதார்த்தம், ரசனை என்று நம்புவதையும், மிகப் பெரும்பான்மை மக்களால் ரசிக்கப்படும் சினிமா சாகசங்களை(விஜய், ராமராஜன்) நக்கலடிப்பதை யாதார்த்தமான ரசனையாகவும், மேன்மையான ரசனையாகவும் இவர்கள் நம்புவதையும் சாத்தியமாக்குகிறது.

          இவர்களுக்கும் பகுத்தறிவு உண்டு. எனவே, இவர்களின் வாழ்க்கைச் சூழல் இவர்களிடம் கோரும் இவர்களின் ரசனைக்கு பொருத்தமில்லாத நடைமுறைகளுக்கும் இவர்கள் யாதார்த்தம் என்ற சொல்லையே பயன்படுத்தி சப்பைக் கட்டு கட்டுவார்கள்.

          இதோ காதலுக்கும், காதல் உணர்த்தும் சமூக உணர்ச்சிக்கும், அதற்குப் பொருத்தமில்லா நடைமுறை ஏற்படுத்தும் ஊசலாட்டத்துக்கும், அதனை அவ்வாறே வழங்கினால் கல்லாக் காட்டாது என்பதற்கு செய்யப்படும் ஜிகினா வேலைகளுக்கும், ஊசலாட்டத்தில் காதல் ஜவ்வாக இழுத்துக் கொல்லப்பட்டு இவர்களின் யாதார்த்தம் வெற்றி பெறுவதற்கும் இப்படி இந்த படம் காதலை கொச்சைப்படுத்துவதை நியாயப்படுத்தும் அனைத்து வாதங்களும் இவர்களின் யாதார்த்தில் இருந்துதான் உருவாகிறது. அந்த யாதார்த்தம் நடுத்தர வர்க்க அல்பவாதமே அன்றி வேறல்ல.

          இவர்களின் யாதார்த்தத்திற்கு பொருத்தமான களமெனில் அது அனைவருக்குமான யாதார்த்தம் என்று கருதி நாம் அங்கீகரிக்க வேண்டும் என்று மிக அதிகாரத்துடன், அனைவருக்கும் பிரதிநிதி நானே என்று அறிவித்துக் கொண்டு கோருவார்கள். சந்தையில் காசு கல்லாக் காட்டாது என்றெல்லாம் அந்த யாதார்த்த்திற்கு சப்பைக் கட்டு கட்டுவார்கள். ஆனால், இதே ஆட்கள் ஒரு விஜய் படத்தையோ அல்லது அதைவிட மொக்கையான வேறேதாவதோ இந்தியச் சூழலில் வெற்றி பெறுவது பெரும்பான்மை மக்களின் யாதார்த்தம் என்றோ அல்லது கல்லாக் கட்டுவதற்காக இவ்வாறு பெரும்பான்மை யாதார்த்திற்கு பொருத்தமான கழிசடைப் படங்கள் எடுக்கப்படுகிறது என்று ஏற்றுக் கொள்வதையோ செய்யாமல் விமர்சனம் செய்ய வருவார்கள்.

          இந்த இரட்டை நிலை இவர்களின் ஜவ்வு, ஜவ்வு ஜவ்வு யாதார்த்தம் உருவாக்கும் ஒரு சிந்தனை முறையாகும். உண்மை என்னவெனில், இவர்கள் கற்பனை செய்து கொண்டிருப்பது போல யாதார்த்தம் என்று பொதுவான ஒன்று எதுவும் இல்லை. இது காதலுக்கும் பொருந்தும். வினவு விரும்புகின்ற காதல் மனித குலத்தில் சுரண்டல் விழுமியங்களை மீறி எழுகின்ற மனிதாபிமானத்தின் அதி உன்னதமான வெளிப்பாடாக அமைந்த காதல். புலிகேசிகளுக்கோ காதல் என்பது உயிரியல் தேவை ஏற்படுத்தும் குறுக்குறுப்புக்கும், யாதார்த்த வாழ்க்கை கோரும் நடைமுறைக்கும் காம்பரமைஸ் செய்து சாதிக்கக்கூடிய ஒரு அனுபவம். இதைத்தான் கௌதமன் வெற்றிகரமாக சித்தரித்திருக்கிறார் எனில் அது வினவால் விமர்சிக்கப்படும், அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு.

  22. ஒரு ஆணும், பெண்ணும் தமது காதல் உண்மையானதா, பொருத்தமானதா என்பதை தத்தமது சமூக நடவடிக்கைகளிலிருந்தே கண்டுபிடிக்க முடியும்.

    புரியவில்லை தயவு செய்து விளக்கவும்

    • இயல்பான சுயநலத்தினால் இயல்பாகத்தோன்றும் காதல் பின்னர் நிலைபெற வேண்டுமென்றால் இருவரிடமும் எந்த அளவு பொதுநலன் சார்ந்த கண்ணோட்டம் இருக்கிறது என்பதைப் பொருத்தே அமையும். தான்,தனது,என்பது ஆதிக்கம் செலுத்தினால் அங்கே காதல் தள்ளாடும். இதற்குமாறுபட்டு இருவருமே சுயநலத்தில் மூழ்கயிருந்தால் அந்தக் காதல் தோல்வியுறாது. ஆனால் அங்கே அன்பு என்பது ஒப்பந்தமாக, வணிக நடவடிக்கையாக உணரப்படும் அல்லது புத்தாக்க காதல் உணர்ச்சி அங்கே மரித்துப் போகும்.

      • த்ரிசாவும் சிம்புவும் கம்யூனிஸ்ட் கட்சி அதுவும் மா லெ கட்சி உறுப்பினராக இருந்ததான் அது சாத்தியப் படும் னு வெளிப்படையா சொல்லிடுங்க

  23. பஇட்ஜெட் பத்தி எழுதும் பொது, புதிய தனியார் வங்கிகளுக்கு சலுகை பற்றி விவரங்களை தெரிவிக்கவும் (LEHAMAN ப்ரோதேர்ஸ், போன்ற வங்கிகள் அரசுடமை வங்கிகளா? அல்லது தனியார் வங்கிகளா? )

  24. முந்தைய ‘புதியகலாச்சாரம்’ இதழ்களில் விமர்சிக்கப்பட்ட திரைப்படங்களின் ‘தரம்’ என்பது ஆயிரத்தில் ஒருவன், வி.தா.வ போன்ற குப்பைகளில் இல்லை. அளவு ரீதியாக தாரளமாக இடம் இருக்கிறதென்ற வசதி காரணமாக வினவு விமர்சனத்திற்கு இது போன்ற படங்களை எடுக்க வேண்டாமே! சங்கர் போன்ற சாக்கடைகளில் கூட கால்வைக்கலாம் ,அதன் உள்ளிருக்கும் நாற்றத்தை வெளிக்காண்பிக்க.இந்த கஞ்சா பேர்வழிகள்,மனநோயாளிகளின் அரிப்பை நாம் ஏன் சொரிந்துகொள்ள வேண்டும் என்பதே என் சலிப்பு.

  25. “இயல்பான சுயநலத்தினால் இயல்பாகத்தோன்றும் காதல் பின்னர் நிலைபெற வேண்டுமென்றால் இருவரிடமும் எந்த அளவு பொதுநலன் சார்ந்த கண்ணோட்டம் இருக்கிறது என்பதைப் பொருத்தே அமையும். தான்,தனது,என்பது ஆதிக்கம் செலுத்தினால் அங்கே காதல் தள்ளாடும். இதற்குமாறுபட்டு இருவருமே சுயநலத்தில் மூழ்கயிருந்தால் அந்தக் காதல் தோல்வியுறாது. ஆனால் அங்கே அன்பு என்பது ஒப்பந்தமாக, வணிக நடவடிக்கையாக உணரப்படும் அல்லது புத்தாக்க காதல் உணர்ச்சி அங்கே மரித்துப் போகும்.”

    இதை விட சரியான விளக்கம் சொல்ல இயலாது , நன்றி , ( இப்படிக்கு எட்டு வருடம் காதலித்து திருமணம் செய்தவன்)

  26. நன்றி வினவு
    இதைவிட இந்தபடத்தை பற்றி சொல்ல என்ன இருக்கிறது
    , காதலை சுயநலமாக பார்பவர்கள் இந்த படத்தை ரொம்ப கொண்டடுவார்கள்

  27. யோவ் வினவுக்குத்தான் வேலைவெட்டி இல்லாம சினிமா விமர்சனம் பண்ணிட்டிருக்கான்னா.. உங்களுக்கெல்லாம் வேலைவெட்டி இல்லை.. போய்ய்யா.போய் படம் பாத்தோமா.. புள்ளை குட்டிகளை படிக்க வச்சோமான்னு போவீங்களா. வினவுக்கு ஹிட் குறைச்சி போனதால் சினிமாவை கட்டிட்டு அழுவறாரு..

  28. பதிவு மிக அருமை. வினவு எழுதும் மறுமொழிகள் அதைவிட அருமை.

  29. முட்டையில் மயிர் பிடுங்குவது எப்படி என்பதை இந்தக் கட்டுரை வாசித்தபின்னர் அறிந்துகொண்டேன்

  30. விண்ணைத் தாண்டி வருவாயா என்ற கேள்விக்கு பதில் வரமுடியாது என்பதே படத்தின் கருவாக இருக்கின்றது. அழகிய காட்சிகளாலும் ஆர்பாட்டம் இல்லாத உணர்ச்சிளை வெளிப்படுத்துவதினூடாகவும் வழமையான காதல் நகர்கின்றது. இவ்வாறு நகரும் காதல் மத இறுக்கம் தொழில் சாதி போன்றவற்றின் பற்றுதல்களை கடந்து வரமுடியாது. அதனால் காதலின் அவஸ்தையுடனும் வலியுடன் வாழ்வது கூட பரவாயில்லைத்தான் என்ற நியாயப்படுத்தலுடன் கதை முடிகின்றது.
    காதலியின் தந்தை சொத்தை கூட காதலனுக்கு எழுதிக்கொடுப்பார் ஆனால் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார். சாதி மத இறுக்கத்தை இவ்வாறு சொல்ல முற்படுகின்றனர்.
    காதலனும் காதலியும் சுயமாக முடிவெடுக்க முடியாத குழப்பவாதிகளாகவே இறுதிவரை இருக்கின்றனர். குடும்பத்தின் சாதி மத தொழில் அடிப்படையிலான எதிர்ப்பது முட்டாள்த்தனம் நிறைந்தது என்பது குறித்து சிந்திக்கவோ அல்லது அதை எதிர்க்கவோ திரணியற்றவர்களாக காதலை தியாகம் செய்து வலியுடன் வாழ்ந்துவிடுகின்றனர்.
    குறிப்பிடப்படும் வலியை விட அனேக முட்டாள்தனங்களும் அதன்நிமர்த்தம் கட்டியமைக்கப்பட்ட குடும்பம் அது சார்ந்த இறுக்கம் முக்கியத்துவமானது என்பது சொல்லப்படுகின்றது.
    படத்தின் இசை நல்லா இருக்கு இல்லை என்பதைக் கடந்து ரசனைக்குள் நுழைந்து கூச்சலிடவைக்கின்றது. ஆஸ்காரின் பவர் அதிகம்தான்.
    தரமான படம் அல்லது மலிவான படம் என்பதுக்கு அப்பால் சமூக இறுக்கம் சாதி மத இறுக்கத்தை உடைத்தெறிய முடியாத இக் காலத்தின் காதலன் காதலியின் கையாலாகாத நிலையும் அதை நியாயப்படுத்தும் முறையின் ஊடாகவும் முட்டாள்த்தனம் சார்ந்த சாதி மத சமூக இறுக்கம் வேற்றுமை வாழவைக்கப்படுகின்றது. நியயப்படுத்தப்படுகின்றது.

  31. //ஒரு பெண்ணை பிடித்திருக்கிறது என்பதை மட்டும் ஒரு பரவச உணர்ச்சியாக எண்ணி எண்ணி இன்பமடையலாம்தான். ஆனால் வாழ்க்கை கோரும் சிக்கல் நமக்கு உணர்த்தும் ஒரே ஒரு யதார்த்தம் கூட இந்த இன்பத்தை வேகமாக முடிவுக்கு கொண்டுவந்து விடும்.// //போராடி வெற்றபெற வேண்டிய காதலை அற்ப உணர்ச்சிகளின் நொறுக்குத்தீனி இரசனையாகத் அவமானப்படுத்தி, திருப்பித் திருப்பிக் காட்டுகிறது.// நிச்சயமாக.

    மிக

    நல்ல இடுகை. ஆனால் எதற்கு மேலே அந்தப் படத்தைப் போட்டு இலவச விளம்பரம் கொடுக்கிறீர்கள்?

    • ஆமா இவுரு குடுத்த விளம்பரதுநல தான் படம் பிசிகினு ஓடிச்சி,,,, போங்கடா போக்கத்ஹவனுகளா

  32. மொதல்ல இந்த பூர்ஷ்வா மன நிலையை விட்டு வாரும். சும்மா கட்டுரையில் மேல்தட்டு, கீழ் தட்டு, முதலாளித்துவம் என்று வார்த்தைகளை போட்டு எழுதி விட்டால் உங்களை இங்கே யாரும் ஒரு புரட்சியாளரை போல நினைக்க போவதில்லை. எப்பவும் இரண்டு எல்லைகள் இருந்தே தீரும். சும்மா ஏழை, பணக்காரன் என்று குறிப்பிட்டு மொக்கை போடுவதை தவிர்த்தல் நல்லது.

  33. முதலில் வாழ்கையையும் ,சினிமாவையும் பிரித்துபார்க்க தெரியுமேயானால் ஒரு படத்தை விமர்சியுங்கள்.முதலில் இதிலிருந்து விடுபட்டு வெளியே வருவீர்களேயானால் உங்களால் ஒரு திரைபடத்தை ஓரளவு சரியாக விமர்சனம் செய்ய முடியும் .சினிமா என்பதே ஒரு மிகைபடுத்தப்பட்ட ஊடகம்தான் .ஏன் நீங்கள் கௌதம் மேனன் திரைபடத்தில் வருவதுபோல Hi-Fi காதலர்களை பார்த்தது இல்லையா..?? காதல் என்றால் நான் அங்கே பார்த்த காதலர்கள் போல ..அல்லது இங்கே படித்த காதலர்கள் போல இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்து ஒரு படத்தை பார்க்கும் போதே உங்களின் விமர்சனமும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும் என்பதை நீங்கள் மறக்க வேண்டாம்.தமிழ் படங்கள் உங்களுக்கு எதற்கு காதலை கற்று கொடுக்க வேண்டும்,கருத்தை சொல்ல வேண்டும்.எனக்கு இந்த படம் பிடிக்கவில்லை என்பதற்கு ஆயிரம் காரணம் சொல்லலாம்.ஆனால் நீங்களா சொல்லியிருப்பது இந்த சமூகத்துக்கு இந்த படம் தேவையில்லை.இது எப்படி இருக்கிறது என்பதை அப்படியே காட்டுங்கள் என்பது போல உள்ளது .அவரவர் காதலியிடம் பேசுவது அவரவருக்கு மட்டும்தான் இன்பம்.அடுத்தவர் கேட்டால் “என்ன எழவுட இது ..மணிக்கணக்கா ம்ம்ம்ம்..அப்புறம் இதேதான் பேசுறானுக ” என்று சொல்லுவார்கள்.அவர் காதலிக்க ஆரம்பித்துவிட்டால் அது அவருக்கு பிடித்து போய்விடும்.இந்த திரைப்படமும் ஒரு துடிப்பான வாலிபனும் ,மிகவும் அமைதியான,ஒரு மத சார்புடைய,அதில் அதிக நம்பிக்கையுடைய ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலைத்தான் அழகாய் காட்டியிருக்கிறது .நீ இப்படிதான் வளர வேண்டும் என்று தூபம் போடப்படும் அந்த பெண்ணிற்குள் காதல் ஒருவனால் துளிர் விடும்பொழுது அவளுக்குள் ஏற்படும் குழப்பங்களையும்,அவளின் எண்ண ஓட்டங்களயும்தான் சொல்லி இருக்கிறார்கள்.
    .
    காதலித்து கொண்டிருக்க வேண்டும்

    காதலில் ஜெய்திருக்க வேண்டும்

    காதலில் தோற்றிருக்க வேண்டும்

    மூன்றில் எதுவுமே செய்யாமல் இவ்வளவு நாளும் வெட்டியாக இருந்திருபீர்கலேயானால் இந்த திரைபடத்தை உங்களால் நிச்சயம் ரசிக்க முடியாது ……

  34. வினவ மட்டும் தெரிந்த தருமிகளே, போஸ்டர் ஓட்டுவதில்
    சுவரெழுத்து எழுதுவதில் கேள்வி கேட்பதில் வாய் சவடால் அடிப்பதில் கை தேர்ந்த கம்முநிச்டுகளே இப்போதுதான் தெரிகிறது நீங்கள் காதலிலும் கை தேர்ந்த ஈச்டுகள் என்று. மருதைய்நுகோ (v.r.s) காலியப்பனுகோ கதிரவனுகோ(v.r.s) veeraavuko தங்கராசுகோ உங்கள் தலை மறைவு தளபதிகளுக்கோ அல்லது உங்கள் சிஷ்ய கொடிகளுகோ காதல் அனுபவம் உண்டா? உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் உங்கள் மனைவிகளால் கூட நீங்கள் காதலிக்க படுகிரிர்களா என்று. .. வெளிய ஒன்னும் சொன்னாலும் உங்க மனசுகுதானே உண்மை தெரியும். புரட்சிக்கும் ஒங்களுக்கும் communisathukum ஒங்களுக்கும் எப்படி சம்பந்தம் இல்லயோ அதே போல காதலுக்கும் ஒங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே. ஹிந்துவுக்கு எழிதிடுருந்த கை இப்ப இன்டர்நெட்ல எழுதுறீங்களோ….

  35. இப்பொது எல்லாம் படம் எடுக்கும் பொது இது சமுதாயத்தை பாதிகிரதா சொல்ல வரும் கருத்தை சரியாக் சொல்லி விட்டொம என்று டைரக்டர் எல்லாம் படம் எடுப்பது இல்லை . பாடல், சிரிப்பு என்று மக்களை 2 .30 மணீ னேரம் பொர் அடிகாமால் பார்பதர்க்கு படம் எடுகிறார்கள். பண்ம் பணம் பணம்……. சமுதாயத்துக்கு பாடம் எடுக்கும் பட்ம் எடுத்தால் ஓடாமல் பொய் விடுகிரது….

  36. அவன் அவனுக்கு என்ன தெரியுமோ அத தான் அவன் சொல்ல முடியும்….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க