அறுசுவைகளில் இனிப்பை மட்டும் ருசியாக கொண்டாடும் குஷிப் பேர்வழிகளைத் தவிர்த்து அனைவரையும் அங்காடித் தெரு ஏதோ ஒருவிதமாய் பாதித்திருப்பதில் வெற்றியடைந்திருக்கிறது.
தமிழகத்தின் புகழ்பெற்ற ஒரு பேரங்காடியில் குவிக்கப்பட்டிருக்கும் வண்ணமயமான பொருட்களோடு பொருளாக ஆனால் சாயம் போய் வாடிப்போயிருக்கும் உயிருள்ள மனிதர்களை, சிப்பந்திகளை காட்டுவதற்கு ஒரு தமிழ் சினிமா இயக்குநர் துணிந்திருப்பது ஆச்சரியமானது. அதனால் பாராட்டுக்குரியது. ஆனால் பாராட்டியவர்களும், படத்தின் சோகத்தை அருந்தியவர்களும் இந்த நவீன கலை ஊடகத்தின் பிரதியினால் ஒரு பொதுவான மனிதாபிமானம் என்பதைத் தாண்டி ஒரு அழுத்தமான பாதிப்பை அடைந்திருப்பார்களா என்பதில் நிறைய ஐயமிருக்கிறது.
ஏழ்மையை பார்த்து மட்டுமே உணரும் எவரிடமும் ஏற்படும் மனிதாபிமானம் எத்தகையது? குறிப்பாகச் சொன்னால் ஏழ்மையை சுலபமாக புரிந்து கொள்ளமுடியுமா?
விபத்து, தற்கொலை, இரத்தம், எதிர்பாராத அடிகள், துன்பங்கள் என்பதைக் காட்டித்தான் ஏழ்மையைக் காட்ட முடியுமென்று வசந்த பாலன் நினைத்திருப்பது பா வரிசைப் படங்களிலிருந்து தமிழ் சினிமா மரபு கொண்டிருக்கும் உத்திதான். நல்லதங்காள் கதையைக் கேட்டு வளர்ந்த நாடுதானே இது? ஆனால் இன்று நல்லதங்காள் என்ற சோகத்தின் அரசி கதையில் அல்ல, அன்றாடம் நாளிதழில் அடிபடும் ஒரு செய்தித் துணுக்காக மாறிவிட்டாள். நமக்கும் நல்லதங்காள் உத்தி இன்று போதுமானதல்ல.
_________________________________________
கண் முன்னே கொடுரமாக அடிபட்டுத்தான் ஒரு எளியவனின் துன்பத்தை உணர முடியுமென்றால் நாம் எந்தக் காலத்திலும் உழைக்கும் வர்க்கத்தின் அவலத்தை புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் ஏழ்மையின் வாழ்வில் இத்தகைய திடுக்கிடும் திருப்பங்களை விட மெல்லக் கொல்லும் ‘அமைதியான’ வாழ்க்கைதான் கண்முன் காணும் உண்மை. அந்த உண்மையை ஊடுறுவிப் பார்ப்பது எப்படி? ஒரு விபத்தில் செத்துத்தான் ஒரு ஏழை தனது அவலத்தை புரியவைக்க முடியுமென்றால் சாகாத ஏழைகளின் கதி?
கே.கே நகர் விபத்து, லிங்கத்தின் தந்தை விபத்து, இரக்கமற்ற முதலாளி அண்ணாச்சி, கொடுரமான கங்காணி அண்ணாச்சி, இதயத்தை உலுக்கும் அந்த காதல் பெண்ணின் தற்கொலை, அவள் காதலனது மனமுடைந்த அவலம், கனியின் தங்கை நாகம்மையின் சித்தரிப்பு, நின்ற கால் வியாதியால் சாகும் தொழிலாளி, மந்தைகளைப் போல அடைந்து வாழும் சிப்பந்திகள் என்று படம் முழுவதும் வரும் சோகங்கள், அவை கற்பனையல்ல உண்மை என்றாலும் படத்தில் அதிர்ச்சியை மிகையாக ஏற்படுத்த வேண்டுமென்பதாக மாறிவிட்டன. இவை அளவாக பயன்பட்டால் இயக்குநர் தான் காட்டவிரும்பும் கதை உணர்ச்சியை உணர்த்த முடியாது என்று நினைத்திருப்பரானால் அது அவரது பலவீனம். இயல்பாக செய்திருந்தால் அது அவரது அறியாமை.
அழகான, சுத்தமான, நவீனமான வாழ்க்கையில் முங்கித் திளைத்திருக்கும் நடுத்தர வர்க்கத்தை இப்படிக் காட்டித்தான் அழவைக்க முடியுமென்றால் அந்த அழுகையின் காலம் சிலமணித்துளிகள் மட்டும்தான். சாரமாகச் சொன்னால் ஏழைகளின் அவலத்திற்கு காரணமான வாழ்க்கையை வாழக்கூடியவர்களில் நானும் ஒருவன் என்ற எண்ணத்தை ஆழமாக உணர்த்த வைப்பதுதான் கடினமென்றாலும், தேவையானது. அது அங்காடித் தெருவில் இல்லை.
ஒரு மலக்குழிக்குள் இறங்கும் தொழிலாளியின் நிலையைப் புரிந்து கொள்ள காமராவும் கூட இறங்குவது தவறென்று சொல்லவில்லை. ஆனால் சாக்கடைகளின் வாழ்க்கையை அறியாத ‘சுத்தமான’ சாக்கடைகளை அது மட்டுமே சுத்தப்படுத்திவிடாது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஜி – 8 குழும நாடுகளது அதிபர்களின் கூட்டத்திற்கு மேலைநாடுகளின் தன்னவார்வக்குழுக்கள் MAKE POVERTY HISTORY வறுமையை வரலாற்றாக்கு என்ற முழக்கத்துடன் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிகளை நடத்தின. மேற்கத்திய நாடுகளின் பிரபலமான எல்லாப் பாடகர்களும் அதில் பங்கேற்றனர். இவர்களது கோரிக்கை வறுமையில் இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளின் கடன்களை மேலைநாடுகள் இரத்து செய்யவேண்டுமென்பதுதான். ஆப்பிரிக்க நாடுகளின் வறுமையே ஏகாதிபத்தியங்களின் உற்பத்தியென்பதை மறுக்கும் இந்த அபத்தத்தை விட்டுவிட்டு பார்த்தால் ஒரு காட்சி மட்டும் இப்போது நினைவுக்கு வருகிறது.
இசை நிகழ்ச்சிகளின் இடையில் அவ்வப்போது ஆப்பிரிக்க நாடுகளின் வறுமை புள்ளவிவரங்களையும், சில ஆவணப்படங்கள் போன்ற காட்சித் துணுக்குகளையும் காட்டினார்கள். ஒரு ஆப்பிரிக்க குடிசையில் தாயும் சிறு குழந்தைகளும். குழந்தைகள் அம்மாவிடம் பசிக்கிறது என்று அடிக்கடி பலவீனமான குரலில் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அம்மாவும் சமையல் தயாராகிறது என்று அடுப்பையும், பாத்திரத்தையும் காட்டியவாறு இருக்கிறாள். பாத்திரத்திலிருந்து சமையலின் புகை பரவுகிறது. அதைப் பார்த்தவாறே குழந்தைகள் பின்னர் ஏக்கத்தில் தூங்கிப் போகிறார்கள். உண்மையில் அந்தப் பாத்திரத்திலிருந்த நீரில் ஏதோ சில மரக்குச்சிகள் மட்டுமே இருந்தன. ஏதோ ஒன்று சமைப்பதாக குழந்தைகளை போக்குகாட்டி தூங்கவைக்கும் அந்தப்பெண்ணுக்கு இது தினசரி வாடிக்கை. எந்தக்குறுக்கீடோ, தயாரிப்போ, திட்டமோ இன்றி எடுக்கப்பட்ட இது போன்ற பல காட்சிகளைக் காட்டினார்கள்.
ஆப்பிரிக்க குழந்தைகளின் எலும்புக்கூடு தோற்றம், வயிறு வீங்கிய உடம்பு, ஈ மொய்க்கும் உதடுகள், அப்புறம் எத்தனை இலட்சம் பேர் இறந்தார்கள் என்ற காட்சிகளும், செய்திகளும், புள்ளிவிவரங்களும் உணர்த்தத் தவறிய ஒரு வேதனையை அப்போது நான் உணர்ந்தேன். நான் இலக்கியவாதி இல்லையென்பதால் அந்த உணர்ச்சியையும், காட்சியையும் இங்கே அப்படி பதிவு செய்திருப்பேனா என்பது சந்தேகம் என்றாலும் யாரும் அந்த தாயின் வேதனையைப் புரிந்து கொள்ளலாம்.
நேரிட்டு பார்க்கும் யதார்த்தம் மட்டுமே உண்மையல்ல. யதார்த்தம் பற்றி பழக்கடுத்தப்பட்ட பார்வை வழியாகவே நாம் பார்க்கிறோம். அதுவே தன்னளவில் உண்மையை வழங்கிவிடாது. விக்கிபீடியாவிலோ, இல்லை பல புள்ளிவிவரங்களிலோ இருக்கும் செய்திகளையும், கணக்குகளையும் பலர் உண்மைகளாக நம்புகிறார்கள். அந்த செய்தியை அதனோடு தொடர்புள்ள ஏனைய சமூக வாழ்வின் இயக்கத்தை அல்லது வரலாற்றின் உணர்ச்சியில் பொருத்தித்தான் புரிந்து கொள்ள முடியும். அல்லது உண்மையைக் கண்டுபிடிக்கமுடியும்.
___________________________________________________
வசந்த பாலன் அங்காடித் தெருவை எடுப்பதற்காக நிறைய முயற்சிகள் செய்து விவரங்கள் சேகரித்திருக்கிறார். இதையெல்லாம் உள்ளொளியில் கண்டு கொள்ளலாம் என்ற ஜெயமோகன்களது மேதைத்தனம் அவரிடமில்லை என்பது மகிழ்ச்சிக்குரியது. ஆனால் இயக்குநர் சேகரித்த விவரங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து, முரண்பட்டு, வேறு ஒரு உண்மையை, யதார்த்த்த்தை, புதிய கண்டுபிடிப்பை உணரும், கலையும் தத்துவமும் இணைந்து சாத்தியமாக்கும் கதையை அவரால் எழுதமுடியவில்லை. அதுதான் மிகையான சோகக்காட்சிகள் மூலம் காட்டிவிடலாம் என்று போயிருக்குமோ?
முதலாளி அண்ணாச்சியின் சித்தரிப்பு ஒரு எடுத்துக்காட்டு. தீவிர கடவுள் பக்தர், எச்சக்கையை ஆட்டினால் இங்கேயே ஆள் கிடைக்குமென்ற திமிரான எக்காளம், விளம்பரத்திற்காக சினேகாவை முந்தானையை விரித்து ஆடச் சொல்வது, பொய்ப் புகார் மூலம் கடைச் சிப்பந்தியான லிங்கத்தை போலீசு மூலம் அடிக்க வைப்பது, வியாபார நலனுக்காக எப்போதும் இரக்கமின்றி பேசுவது எல்லாம் முதலாளி அண்ணாச்சியைப் பற்றிய உண்மையான சித்தரிப்புகள் என்றாலும், அண்ணாச்சிகள் என்று பார்த்தாலும், நவீன முதலாளிகள் என்று போனாலும் அவையே முழு உண்மையல்ல.
அம்பானியோ, டி.வி.எஸ், ஹூண்டாய் முதலாளிகளெல்லாம் அண்ணாச்சிகள் போல கடுஞ்சொல் பேசி சாட்டையைச் சுழட்டும் நம்பியார் டைப் வில்லன்களல்ல. ஒரு வேளை வசந்த பாலன் அவர்களைப் பற்றி படமெடுக்க விவரங்கள் சேகரித்திருந்தால் அவரால் மணிரத்தினத்தின் குரு போலவோ அல்லது அதற்கு கம்மியாகவோதான் எடுத்திருக்க முடியும். ஆனால் இந்த நாகரீக முதலாளிகள்தான் அநாகரீக அண்ணாச்சி முதலாளிகளை விட தொழிலாளிகளை மட்டுமல்ல முழு சமூகத்தையும் இழிவாகவும், சுரண்டியும் நடத்தி வருகிறார்கள். சோப்பு, சீப்பு, பாத்திரம், துணி விற்பதற்காக சிநேகவை பளிச்சென்று சிவப்பு கலர் சேலையில் குத்தாட்டம் போடச்சொல்லும் அண்ணாச்சியை விட, கிங்ஃபிஷரின் காலண்டருக்காக ஏதோ ஒரு தீவில் பிகினி, முக்கால் நிர்வாணப் பெண்களைக் கூட இருந்து படமெடுக்கும் விஜய் மல்லையாக்கள்தான் ஆபத்தானவர்கள்.
படத்தின் கதையில் நாயகர்களான கடைச் சிப்பந்திகளது வில்லன்களாகத்தான் அண்ணாச்சி வருகிறார். ஆனால் முதலாளிகளான அண்ணாச்சிகளது ஆளுமையை அப்படி வில்லன் பார்வை இல்லாமலே கூட சாரத்தைச் சரியாகச் சித்தத்திருப்பதன் மூலம் அந்த நோக்கத்தை இன்னும் பரந்த அளவில் செய்திருக்க முடியும். ஏனெனில் அண்ணாச்சிகளின் உருவாக்கம் என்பது அவர்களது தனிப்பட்ட பண்புநலன்களால் மட்டும் உருவாகிவிடுவதில்லை. பல்வேறு சமூகக்காரணிகளின் பின்புலத்தில்தான் அவர்கள் ‘அப்படி’ இயங்குகிறார்கள்.
____________________________________________________
ஏதோ ஒரு தீபாவளி நாளில் கடைத்தெருவுக்கு சென்ற போது எல்லா கடைகளும் பூட்டியிருந்தன. திறந்திருந்த ஒரு அண்ணாச்சி கடையில் தீபாவளிக்கு ஊருக்கு போகவில்லையா என்று கேட்டேன். “பொழப்புக்காக மஞ்சப்பையை எடுத்துட்டு என்னைக்கு வந்தமோ அன்னையிலிருந்து தீபாவளியாவது, பொங்கலாவது” சலிப்புடன் சொன்னார்.
அண்ணாச்சியாக நடித்திருக்கும் பழ.கருப்பையாவின் செட்டியார் சாதிதான் தமிழகத்தின் மரபார்ந்த வணிக சாதி. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உழைப்பே இல்லாத சுரண்டல் வட்டிக்கடையின் மூலம் சொத்து சேர்த்து பர்மாத் தேக்கில் அரண்மனை வீடுகள் கட்டி இன்று ப.சிதம்பரமாகவும், எம்.ஏ.எம். சிதம்பரமாகவும், ஸ்பிக் முத்தையாவாகும், அரசுவேலை, தொழில் என்று நடுத்தரவர்க்கமாகவும் இருக்கும் செட்டியார்களுக்கும், புதிய வணிக வர்க்கமாக தலையெடுத்திருக்கும் நாடார்களுக்கும் பாரிய வேறுபாடு உண்டு.
பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பில் கடைநிலையில் இருந்த நாடார் மக்கள் பொதுவான சீர்திருத்தத்தின் மெதுவான முன்னேற்ற வளர்ச்சியில் மாறியவர்கள். சுயசாதி முன்னேற்றம், கூட்டுதவியின் மூலம் சற்று நிறுவன மயமான சாதியும் கூட. எனினும் பெரும்பாலான நாடார் மக்கள் செட்டியார்களைப் போல முழுதாக வாழ்க்கையின் பங்கைப் பெற்றவர்களல்ல. சிலர் முதலாளிகளாகவும், பெரும் வியாபாரிகளாகவும் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் சிறு கடைகளை வைத்து அதற்குமேல் முன்னேற முடியாத நிலைமையில்தான் காலம் தள்ளுகிறார்கள்.
இந்த சிறு கடை அண்ணாச்சிகளின் வாழ்க்கை அங்காடித்தெரு காட்டும் உக்கிரத்தை விட அவலமானது. அதே போல இந்தக்கடைகளில் பயிற்சிக்காகவும், எதிர்கால பிழைப்புக்காகவும் வரும் இளைஞர்களின் நிலையும் அப்படித்தான். சரவணா ஸ்டோர் அண்ணாச்சியைப் போலவோ இல்லை இன்னும் அதிகமாகவோ இந்த சிறு கடை வியாபாரிகள் தனது பணியாட்களை நடத்துவார்கள். “அப்படித்தான் நானும் கஷ்டப்பட்டு இளமையைத் தொலைத்து, தொழிலைக் கற்று கடைவைத்தேன்” என்று அவர்களால் அதை நியாயப்படுத்தவும் முடியும்.
இன்று இந்த சிறு கடை அண்ணாச்சிகளது வாழ்க்கையும் கேள்விக்குறியாக மாறிவிட்டது என்றாலும் எல்லாவகை அண்ணாச்சி முதலாளிகளும், வியாபாரிகளும் இப்படி கடினமாக நடந்து கொள்வதை இப்படித்தான் பேசுகிறார்கள். அது ஜனநாயகமற்ற நிலவுடைமைச் சமூகத்தின் அழிவிலிருந்து பொருளாதார ரீதியாக மாறும் சிரமத்தில் வேர் கொண்டிருக்கிறது. வேறு வகையில் சொன்னால் ஒரு குறைந்தபட்ச வாழ்க்கையை நேர்மையோடு அமைத்துக் கொள்வதற்கே இவ்வளவு சிரமப்படவேண்டியிருக்கிறது என்றால் அவர்களது தனிப்பட்ட நடவடிக்கைகளில், தொழிலில் ஜனநாயக உணர்வுகள் இருப்பதற்கு அடிப்படை இல்லை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
குறிப்பிட்ட காரணங்களினால் பெரும் கைகளாக உருவெடுத்திருக்கும் சரவணா ஸ்டோர், சரவண பவன் போன்ற சென்னையின் பணக்கார நாடார்களோ, அது போல இதயம் நல்லெண்ணெய் போன்ற பணக்கார விருதுநகர் நாடார்களோ, தினத்தந்தி குழும நாடார்களோ ஆரம்பத்தில் இப்படி இருந்தது உண்மையென்றாலும் அவர்களது ஆளுமையில் நிலவுடமை ஆதிக்கத்தின் சாதகங்களை பயன்படுத்திக் கொள்ளும் பொருளாதார நலன் சேர்ந்திருக்கிறது.
அவர்களது உழைப்பு, அதற்கு சமூகம் அளித்த வாய்ப்பு, அதைப் பயன்படுத்தி நிதி ஆதாரம் பெறுதல், ஆளும் வர்க்கங்களுடன் சமரசம் செய்து முன்னேறுதல் மூலம் பணக்காரர்களான இந்த நாடார்கள் தமது நிலையை தங்களது ‘உழைத்து முன்னேறிய’ கதையாக மட்டும் கருதிக் கொள்கிறார்கள். பணம் பெருகப் பெருக இந்தக் கருத்து முன்னிலும் உறுதியாக மாறுகிறது. அதே நேரம் தனது சாம்ராஜ்ஜியத்தைப் பெருக்கிக் கொள்ள இந்த சுய முன்னேற்ற கொசுவத்தி இமேஜ் காரணமாக சுயசாதியின் ஏழைகளை நயவஞ்சகமாக சுரண்டுவதற்கும் பயன்படுகிறது.
________________________________________________
சுயசாதி ஏழைகளை வைத்து தொழில் நடத்தும் முதலாளிகளைப் பற்றி தோழர் கார்க்கி அவரது அங்காடிப் பட விமரிசனத்தில் எழுதியிருக்கிறார். அதைப் படியுங்கள். அங்காடித் தெருவில் வசந்த பாலன் காட்டத் தவறிய முக்கியமான விசயம் இந்த சுயசாதி ஏழைகள் சாதிப்பற்று காரணமாக தமது முதலாளிகளை சுயமரியாதை இன்றி ஏற்கவும் செய்கிறார்கள் என்ற உண்மைதான். அதனால்தான் பொதுவில் சாதிக்காரர்கள் மட்டுமோ அல்லது பெரும்பான்மையாகவோ இருக்கும் தொழில்களில் தொழிற்சங்கம் கட்டுவது கடினம். தொழிலாளி வர்க்க உணர்வை சாதிக்காரணம் சொல்லி அழிப்பது முதலாளிகளுக்கு வசதியென்றால், அதற்கு பலியாகியிருக்கும் தொழிலாளிகளைப் பொறுத்தவரை அது விமரிசக்கப்பட வேண்டியது.
தேவர் சாதி நா.சேதுராமன் நடத்தும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மக்களிடம் கொள்ளையடிப்பதற்கு பெயர் பெற்றது. எல்லா சாதி மக்களும் வந்தாலும் அங்கே வேலை பார்க்கும் பெரும்பாலான சுயசாதி ஊழியர்கள் என்ன பிரச்சினை வந்தாலும் நிர்வாகத்தை காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என்பதை ஒரு சொந்த அனுபவத்தோடு ஒரு நண்பர் சொன்னார். அந்த வகையில் இந்த சுயசாதி பற்று சரவணா ஸ்டோர் ஊழியர்களிடமும் இருக்கிறது என்பதை வசந்த பாலன் காட்டியிருக்க வேண்டும். அவர்களது அவலத்தின் முக்கிய அஸ்திவாரமே இங்கேதான் இருக்கிறது. நெல்லையில் நாடார்களாக பார்த்து அதுவும் குடும்பப் பொறுப்புகள் அதிகமிருக்கின்ற இளைஞர்களை பொறுக்கி வரும் விடயத்தைப் போல இதுவும் முக்கியமான ஒன்று.
சரவணா ஸ்டோரில் நடக்கும் அநீதிகளை எதிர்த்து குரல் கொடுக்காமல் அடிமைகளாக வாழும் துயரத்தின் வலிமை இந்த சுயசாதிப் பற்றில்தான் பொதிந்திருக்கிறது. அதே போல அந்தக் கடை அண்ணாச்சியின் எடுபிடிகளது இரக்கமற்ற நடைமுறைகளும் இந்த சுயசாதி பலத்தை வைத்தே ஆடுகிறது. அங்காடித் தெரு இதை விரிவாக பேசியிருந்தால் படம் இன்னும் கொஞ்சம் ஆழமாக பயணித்திருக்கும். வில்லனைப் போல இடம் பெற்றிருக்கும் அண்ணாச்சியின் சித்திரிப்பு, ஊழியர்களின் சாதிப்பற்றை விமரிசித்திருந்தால் மட்டுமே முழுமையடைந்திருக்கும்.
இது சரவணா ஸ்டோரோடு முடியவில்லை, இந்தியா முழுமைக்கும் உள்ள பிரச்சினை. தங்களது சொத்து மரபுரிமையால் கிடைத்ததாக எண்ணும் நிலவுடைமைப் பண்ணையாரும், உழைப்பினால் பெற்றதாக கருதும் முதலாளிகளும் பல விசயங்களில் வேறுபட்டிருக்கிறார்கள். பண்ணையாரின் ஆதிக்கத்தை பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பும், முதலாளிகளின் ஆதிக்கத்தை முதலாளித்துவத்தின் ‘ஜனநாயக’மும் நியாயப்படுத்துகின்றன. மக்களும் அவற்றை இயற்கையான நீதியாக ஏற்றுக் கொள்கிறார்கள்.
சில அறிவாளிகள் கருதுவது போல மேற்கத்திய கல்விமுறை, மேலாண்மைப் படிப்புகள் மூலம் முதலாளிகள் ஜனநாயக உணர்வு பெறுவதில்லை. அவர்களுக்கு அதை கற்றுக் கொடுப்பது தொழிலாளிகள்தான். அதனால்தான் தொழிலாளிகளின் எழுச்சியைப் பார்த்து பீதியடைந்த முதலாளித்துவ வர்க்கம் தனது வரலாற்றுப்பாத்திரத்தை கழுவிவிட்டு பிற்போக்கான நிலவுடைமை வர்க்கங்களையும் ஆதரிப்பது என்ற நிலையை எடுத்திருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தில் அம்பானியின் சொந்த மாநிலத்தின் வணிக சாதி மக்கள் கணிசமான அளவில் பங்குதாரர்களாக இருப்பது தற்செயலான ஒன்றல்ல.
___________________________________________
அங்காடித் தெருவுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று பலர் நினைக்கலாம். சில மேதைகள் படம் பார்த்த எழுச்சியில் கம்யூனிஸ்டுகள் சரவணா ஸ்டோரில் ஏன் சங்கம் கட்டவில்லை என்று அதிகார தோரணையில் கவலைப்படுகிறார்கள். கஷ்டப்படும் மக்களுக்காக கம்யூனிஸ்டுகள் மட்டும்தான் சங்கம் கட்டவேண்டும் என்பதில்லை. அங்காடித் தெருவுக்காக மனிதாபிமானத்தை சிரமப்பட்டு நினைவு கூறுபவர்களும் அதைச் செய்யலாம்.
சரவணா ஸ்டோரில் தொழிற்சங்கம் கட்ட முடியாது என்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று சாதிப்பற்றும், சொந்த வாழ்க்கைக்கையின் சிரமங்களும் ஏற்படுத்தும் அடிமைத்தனம். இரண்டு இத்தகைய கடுமுழைப்பு வேலை செய்யும் தொழிலாளிகள், பொழுது போக்கு என்பதற்கே வாய்ப்பற்ற நிலையில் தொழிற்சங்கம் என்ற பணிக்கு சமூக நேரம் ஒதுக்க முடியாமல் இருக்கும் யதார்த்தம்.
ஆனால் சரவணா ஸ்டோரில் சங்கம் கட்ட முயன்று தோல்வியடைந்ததாக வைத்துக் கூட இதைவிட ஒரு நல்ல படம் எடுத்திருக்க முடியும். இதனால் நாங்கள் சினிமாவை ‘கட்சிப் பிரச்சாரத்திற்காக’ விமரிசிப்பதாக எண்ணும் நண்பர்கள் இங்கே சங்கம் கட்ட முயன்று தோற்றதைத்தான் படமெடுக்கமுடியும் என்ற வாக்கியத்தையும் நினைத்து விட்டு பேசவும்.
தலித்துக்கள், ஏழைகள் போன்ற ஒடுக்கப்படும் பிரிவினர் அவர்களது அடிமைத்தனத்தை மூடியிருக்கும் உலகத்தில் இருந்து கொண்டு மட்டும் விடுதலையை உணர முடியாது. அது அவர்களது உலகிற்கு வெளியிலிருந்தே வருகிறது. கிராமத்தில் இருக்கும் வரையிலும் தீண்டாமையை காலம் காலமாக இருக்கும் ஒரு பழக்கம் என்று சகித்துக் கொள்ளும் ஒரு தலித் அவனது வாழ்க்கைத் தேவைக்காக கிராமத்தை விட்டு வெளியேறலாம் என்ற ஒரு அரசியல் சூழல் உருவாகி நகரத்துக்கு சென்று அங்கே சமத்துவத்தை கண்டு, அனுபவித்து பின்னர்தான் தனது கிராமத்துக்கு திரும்பும் போது அந்த தீண்டாமையை எதிர்க்க வேண்டுமென்ற உணர்வைப் பெறுகிறான்.
அடுப்படியில் அடைபட்டிருக்கும் பெண்கள் கூட ஆண்கள் நிறைந்திருக்கும் சமூகவெளியில் புழங்கும்போதுதான் தமது சமூக அடிமைத்தனத்தை உதறவேண்டுமென்ற விருப்பத்தை அடையமுடியும். இங்கே வலியுறுத்துவது அடிமைகளின் உலகிலோ, இல்லை அடிமைகளின் மூளைகளிலோ அவர்களது விடுதலைக்கான அவா பிறக்க முடியாது. அது வெளியிலிருந்தே வருகிறது.
அங்காடித் தெரு அந்த ‘வெளிப் பார்வையை’க் கொண்டிருக்கவில்லை. மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளின் மூலம் ஊழியர்களின் சோகத்தை காட்டியிருப்பதற்குப் பதில் இந்த வெளியுலகோடு அவர்களை பிணைக்கும் வகையில் யோசித்திருந்தால் ‘அமைதியான’ முறையிலேயே அந்த அவலத்தை வியப்பூட்டும் வண்ணம் பார்வையாளர்களுக்கு நெஞ்சில் அறைந்து சொல்லியிருக்கலாம்.
_____________________________________________
எல்லா வகை ‘கருத்துச் சுதந்திரமும்’ உள்ள சென்னை மாநகரில் வாழும் அந்த கடை ஊழியர்கள் தனித்த பாலைவனத்தில் வாழ்வது போல வாழ்கிறார்கள். இது ஒருவகையில் உண்மையென்றாலும் மற்றொரு வகையில் உண்மையல்ல. பெண்களின் மீதான பாலியல் வன்முறைகளை எதிர்த்துக் கேட்கும் வல்லமைக்கு சான்றுகள் பெருகி வரும் காலத்தில் ஒரு சூபர்வைசர் மானாவாரியாக அடிப்பதும், கண்ட இடத்தில் கை வைத்தும் பெண் ஊழியர்களை அவமானப்படுத்துவது எப்படிச் சாத்தியம்? இவை சரவணா ஸ்டோரில் நடந்திருக்கலாம். அதையொத்த பல நிறுவனங்களில் அப்படித்தான் நடக்கிறது. நடக்க வாய்ப்பும் இருக்கிறது. ஆயினும் சமூக யதார்த்தம் என்று வரும்போது இதை நாம் இப்படியே சொல்வது சரியா?
பாலியல் வன்முறைகள் எவ்வளவு நடக்கிறது என்பதை விட அதை எதிர்த்து அவ்வப்போது பெண்கள் காட்டும் எதிர்ப்பும் வளருகிறது என்பதே முக்கியம். சரவணா ஸ்டோரில் எல்லா சூபர்வைசர்களும் அப்படி விகாரத்துடன் நடப்பவர்களாக இருக்க முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் அதை எப்போதும் பொறுமையாக ஏற்குமளவு அந்தப் பெண்கள் அனைவரும் அடிமைகளாக இருக்க முடியாது.
படத்தில் இந்த எதிர்ப்பு பாதிக்கப்பட்ட கனியின் காதலன் என்ற முறையில் லிங்கத்திடம் இருந்தே வருகிறது. காதலித்த குற்றத்திற்காக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்வதாக இருக்கட்டும், இல்லை பெண் ஊழியர்கள் பாலியல் வக்கிரத்துடன் தண்டிக்கப்படும் சமயங்களாக இருக்கட்டும், இதை எல்லோ ஊழியர்களும் அடிமை போல ஒரு முணுமுணுப்புக் கூட இன்றி பேசா மடந்தைகளாக ஏற்றுக் கொள்வதாகவே படத்தில் வருகிறார்கள். சூபர்வைசரின் தலையில் ஒரு மூட்டையைப் போட்டு அவமானப்படுத்தும் காட்சியும், அதன் பிறகு வரும் பாடலும் இந்த பிரச்சினையை ஒரு காமடி போலத்தான் சித்தரிக்கிறது. பாலியல் கொடுமைகளை எதிர்ப்பதற்கு நகைச்சுவையை கையிலெடுத்திருக்கும் இயக்குநரின் உத்தியை ஏற்க்க முடியவில்லை. முதலாளித்துவத்தின் கொடுமைகளை நகைச்சுவையின் மூலம் காட்டிய சார்லிசாப்ளினின் படங்களில் அவை இறுதியில் வெறும் காமடியாக மட்டும் உணரமுடியாத வண்ணம் அழுத்தமான சோகத்தை உணர வைக்கிறது.
அந்தப் பேரங்கடியில் அண்ணாச்சியின் கருங்காலிகளாக வேலை பார்ப்பவர்கள் ரவுடி போல இருப்பது பிரச்சினையல்ல. இதை ஏற்றுக் கொண்டு வேறு வழியின்றி வாழ வேண்டிய நிலையில் இருந்தாலும் ஊழியர்களின் ‘அமைதி’தான் முக்கியமானது. இடித்துரைக்கப்பட வேண்டியது. தன் காதலியின் மீது கைவைத்தான் என்று சூபர்வைசரை பந்தாடும் லிங்கம், கூடவே அமைதியான அடிமைகளாக இருக்கும் தனது சக ஊழியர்களையும், தன்னையும் வார்த்தைகளால் சுட்டிருக்க வேண்டும். தென்மாவட்டங்களின் உழைக்கும் வர்க்கப் பின்னணியிலிருந்து வந்திருக்கும் அந்த பெண்களையும் உள்ளிட்ட இளைஞர்கள் இதையெல்லாம் கண்டும் காணாமல் பாராமுகமாக போய்விடக்கூடியவர்கள் இல்லை. அவர்களுக்கு தேவை ஒரு நெருப்பு. அதை படத்திலாவது இயக்குநர் பற்ற வைத்திருக்கலாம்.
_____________________________________________________
கடை ஊழியர்களை நாயக நாயகியாக்கியிருப்பதற்குப் பதில் ஒரு சூபர்வைசரை மையமாக்கி அங்காடி தெருவின் கதையைக் காட்டியிருந்தால் சரவணா ஸ்டோரின் எல்லாவகைப் பரிமாணங்களையும் ஒரு இழையில் காட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது. பேஜ் 3 படத்தின் இயக்குநர் மது பண்டார்கர் முதலில் அந்தப் படத்தை மேட்டுக்குடியினரது வாகன ஓட்டுநர்களின் பார்வையில் சொல்ல நினைத்து பின்னர் மாற்றிக் கொண்டாராம். அதை ஏன் என்று அவர் விளக்கவில்லை. ஆனால் பேஜ் 3 உலகத்தின் போலித்தனத்தை அந்த உலகில் வாழக்கூடிய ஒரு பெண் பத்திரிகையாளரின் தடுமாற்றங்களிலிருந்து புரிந்து கொள்வதைப் போல ஏழை ஒட்டுநர்களின் பார்வையில் நிச்சயம் வாய்ப்பில்லை.
சூபர்வைசர்கள் சிப்பந்திகளாகவோ இல்லை அண்ணாச்சியின் உறவினர்களாகவோ இருந்து வந்திருக்கலாம். அவர்களுக்கு கீழ்மட்டத்தின் இயக்கமும், முதலாளியின் இயக்கமும், கடையின் வெற்றிக்கான பின்னணியும் தெரியும். நேர்மையானவராகவும், மனிதாபிமானியாகவும் ஆரம்பிக்கும் ஒரு சூபர்வைசர் பின்னர் அமைப்பின் இயங்குதளத்தில் மெல்ல மெல்ல பக்காவான சூபர்வைசராக மாறுகிறார். அதில் நிலை கொள்ள முடியாமல் தோல்வியடையும் ஒருவரது பார்வையில் இந்தப்படம் சொல்லப்பட்டிருந்தால் அது நாமறியாத அந்தப் பேரங்காடியின் முழுமையை உணர்த்தியிருக்கலாம்.
_________________________________________________
ஏழைகளும், நடுத்தர மக்களும் சரவணா ஸ்டோரை ஏன் விரும்புகிறார்கள் என்பதும், அதற்கு அண்ணாச்சி என்ன செய்தார் என்பதையும் அங்காடித் தெரு மருந்துக்கு கூட காட்டவில்லை. மற்ற கடைகளை விட மலிவு என்ற முறையில் மக்களிடம் இருக்கும் அங்கீகாரத்தை கேள்விக்குள்ளாக்காமால் என்ன சோகத்தை ஏற்படுத்த முடியும்? விலை குறைவு, அதிக விற்பனை என்ற சூத்திரத்தை அமல்படுத்தக் கூடிய எல்லா நிறுவனக் கட்டுமானங்களின் மூலம் உலகமெங்கும் ஆதிக்கம் செய்யும் வால்மார்ட்டைப் பற்றி கேள்விப்பட்டிராத ஒரு அண்ணாச்சி தனது கடையில் அதை அனுபவத்தின் மூலம் செய்து காட்டியிருக்கிறார்.
சரவணா ஸ்டோரில் பொருள் வாங்கினால் அதிகம் உழைக்காது என்று பேசும் மேல்தட்டினர் அதிகம் ‘உழைக்கக்’ கூடிய பெரிய நிறுவனங்களின் உடைகளை உயர் விலை கொடுத்து வாங்கினாலும் அவர்கள் அந்த உடைகளை கிழிந்து போகுமளவுக்கு பயன்படுத்தப் போவதில்லை. ஒரு ஆடையை அணிந்த பிறகு பல சுற்று முடிந்த பிறகே அதை மீண்டும் அணிய முடியும் என்ற நிலையில் அவை பழைய துணிகளாக வெளியேறுகிறது. அதுவே பத்து ரூபாய் ரெடிமேடாக தி.நகரின் பாதையோர வியாபாரிகளால் விற்கப்படுகிறது.
சரவணா ஸ்டோரின் விலை மலிவுக்கு என்ன காரணம்? வால்மார்ட்டின் மலிவுக்கான வலியை சீனத் தொழிலாளிகள் சுமப்பது போல ரங்கநாதன் தெருவின் மலிவுக்காக பல சிறு முதலாளிகளும், அவர்களது தொழிலாளிகளும் சுமக்கிறார்கள். எவர்சில்வர் பாத்திரங்களை தயாரிப்பவர்கள், பிளாஸ்டிக் பொருள் சிறு முதலாளிகள், தங்க நகை ஆசாரிகள், பட்டு நெய்யும் நெசவாளிகள் எல்லாரும் சரவணா ஸ்டோருக்காக கொத்தடிமைகளாக வாழ்கிறார்கள். அற்ப கூலிக்காக பீஸ் ரேட்டில் நெஞ்செலும்பை இழைத்து பாத்திரங்களை பளபளவைக்கும் அந்த தொழிலாளிதான் படோபடமான அங்காடித் தெருவின் அடிப்படை. சரவணா ஸ்டோர் போன்று பெரிய ஆர்டர்கள் வரும் போது அதை ஏற்கும் சிறு முதலாளிகளும் தமது மார்ஜினை தக்கவைப்பதற்கு தொழிலாளிகளை மேலும் சுரண்ட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். ஏக ஏழைகளுக்கு கிடைக்கும் மலிவுக்கு இன்னொரு ஏழையே தியாகம் செய்கிறான்.
சரவணா ஸ்டோருக்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்துவதே அங்கிருக்கும் ஊழியர்களின் மையமான வேலையாக இருப்பதை பலமுறை பார்த்திருக்கிறேன். அவர்கள் ‘விற்பனை’ செய்வதற்கான நேரமும், தேவையும் அங்கில்லை. தீபாவளி சமயத்தில் கடை வாசலில் நிற்கும் செல்வரத்தினம் அண்ணாச்சி மக்களை வேறு கடைகளுக்கு போகச்சொல்லி கும்பிட்டவாறே வேண்டுகோள் விடுப்பாராம். பண்டிகைக் காலங்களில் தி.நகரின் மக்கள் கடைகள் அனைத்தும் மக்களை பன்றிக்கூட்டத்தைப் போல நடத்துவார்கள் என்பதை வேலை செய்த தோழர்கள் கூறக் கூட்டிருக்கிறேன். விலை மலிவு என்ற உண்மையில் விற்பவரும், வாங்குபவரும் தங்களது நாகரிகத்தைப் பற்றி கவலைப்படாத யதார்த்தம் சிப்பந்திகளிடம் என்ன உளவியலை ஏற்படுத்தியிருக்கும் என்பது ஒரு சுவராசியமான கேள்வி. கேரள ஓட்டல் தொழிலாளிகளின் நடத்தையில் அலட்சியத்தைக் கண்டுபிடித்த ஜெயமோகன், மனமொப்பி எழுதக்கூடிய வசனங்களுக்கு இந்த சீனில்தான் அதிகம் வாய்ப்பு.
_______________________________________________
கடை சிப்பந்திகளது மின்னல்வேக பணிகள் இடையறாது நடந்து கொண்டிருக்கும் போது அவர்கள் ஒரு வகை மனித ரோபாக்கள் போலத்தான் இருப்பார்கள். சரவணா ஸ்டோரின் இந்த உடல்மொழி படத்தில் இல்லை. இந்த மனித எந்திர அடிமை வாழ்க்கையை சென்னையின் சேரிகளைச் சேர்ந்த ஒரு உதிரிப்பாட்டாளி ஏற்கமாட்டான். வேறுவழியின்றி அவன் ஏற்றாலும் பல்வேறு வகைகளில் முதலாளிகளுக்கு தொந்தரவு கொடுப்பான். எனவேதான் தென்மாவட்டங்ளிலிருந்து வெள்ளேந்தியாக வரும் ஏழைகள் இதற்குத் தேவைப்படுகிறார்கள். அவ்வகையில் சரவணா ஸ்டோர் மலிவாக விற்க வேண்டுமென்றால் இப்படித்தான் மலிவாக தொழிலாளிகளை நடத்த முடியும். இது பற்றிய கேள்வியை படம் எழுப்பவில்லை.
நாயகி கனியின் கல்லூரி மாணவி போன்ற பாவனைகளை எக்காலத்திலும் அந்தக் கடையில் பார்க்க முடியாது. சமீபத்திய ஆண்டுகளாகத்தான் அங்கே அதிகம் பெண் ஊழியர்களைப் பார்க்கிறேன். முன்னர் அவர்களது எண்ணிக்கை வெகு சொற்பம். ஏழை ஆண்களை விட பெண்களை அடக்கி ஒடுக்கி சுரண்டுவது சுலபம் என்பது தமிழகத்தில் சமீப காலமாக நடக்கும் புதிய போக்கு. அந்தக் கோணத்தையும் வசந்த பாலன் உணர்ந்திருக்கவில்லை.
கனியை சற்று அழகாக காட்டவேண்டுமென்பதற்காக மற்ற பெண்களை வேண்டுமென்றே கருப்பைக் கூட்டிக் காண்பித்திருப்பது நல்ல இரசனையல்ல. சொல்லப் போனால் நாயகியே அப்படி கருப்பாக இருந்திருந்தால் பிரச்சினையல்ல. சிப்பந்திகளின் அவலத்தை கருப்பான நாயகியின் மூலம் உணர்த்துவதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றால் நாம் எந்த அவலத்தை பற்றி முதலில் கவலைப்படவேண்டும்?
கடுமுழைப்பில் இருக்கும் இத்தகைய தொழிலாளிகளின் வாழ்வில் சினிமா, கிரிக்கெட் போன்றவைதான் முக்கியமென்றாலும் அது விரும்பிய பொழுதுபோக்கா, இல்லை எளிதில் கிடைக்கும் பொழுதுபோக்கா என்பது பரிசீலனைக்குரியது. விளம்பரத்திற்காக சிநேகா அக்கா வருவதை திருவிழா போல சிப்பந்திகள் கொண்டாடுவது பிரச்சினையல்ல, பொய்யுமல்ல. ஆனால் விளம்பரமே தேவைப்படாத அந்தக் கடைக்கு பல இலட்சம் செலவழித்து விளம்பரம் செய்ய வேண்டிய அவசியமும், அந்த செலவின் சிறிய பங்கு கூட தொழிலாளிகளின் வாழ்வை நன்கு மேம்படுத்தியிருக்கும் என்பது ஒரு வசனமாகவோ, காட்சியாகவோ வந்திருக்கவேண்டும்.
இந்த விமரிசனத்தில் கூறப்பட்டிருக்கும் எல்லா விசயங்களையும் ஒரு சினிமாவாக எடுக்க முடியுமா, எடுத்தால் அது சினிமாவாக இருக்குமா என்று சிலருக்குத் தோன்றலாம். சினிமா நவீன கலை, இலக்கியங்களின் முன்னேறிய வடிவம். இரண்டு மணி நேரத்தில் இரண்டாம் உலகப் போரையே காட்ட முடியுமென்றால் அதோடு ஒப்பிடும்போது சரவணா ஸடோரின் களமும், காலமும் குறுகியதுதான். அதைக் கண்டுபிடிக்கும் கலையை இயக்குநர் அறிந்திருக்கவில்லை என்பதே பிரச்சினை. அவர் வெறும் விவரங்களின் சேர்க்கையில் ஒரு காதல் கதையை எழுதியிருக்கிறார். மற்றபடி படத்தில் எந்தத் தேவையுமின்றி வரும் ஊர்க்காட்சிகளும், பாடல்களும் நிறைய அடிகளைச் சாப்பிட்டிருக்கின்றன.
தமிழக ஓட்டுக்கட்சிகள், அதிகாரவர்க்கத்திற்கு சென்னையின் தி.நகர் என்பது எப்போதும் அள்ளிக்கொடுக்கக் கூடிய ஒரு அமுதசுரபி. அதனால் மட்டும்தான் அந்த குறுகிய தெருவில் எல்லா வகை விதிகளையும் மீறி சரவணா ஸ்டோர் போன்ற கடைகள் பிரம்மாண்டமாக எழுந்திருக்கின்றன. தி.மு.கவின் தில்லை நகர் தளபதி ஜே. அன்பழகனைப் போன்றவர்கள் யாரேனும் படத்தில் ஒரு பாத்திரமாக வந்திருக்க வேண்டும். கடைச் சிப்பந்களின் அடிமைத்தனத்தை காப்ப்பாற்றுவதில் அரசே முக்கிய பங்கு வகிக்கிறது.
______________________________________________
இதற்கு மேல் படத்தில் வசனம் எழுதியிருக்கும் ஜெயமோகனைப் பற்றி குறிப்பிட வேண்டுமென்ற அவசியம் இல்லை என்றாலும் பக்தர்களின் நலனுக்காக சில சாம்பிள்கள். கொத்தனார் வேலை பார்க்கும் தொழிலாளி தனது மகனை பி.இ படிக்க வைக்கப் போவதாக பேசுவது அபத்தத்திலும் அபத்தம். அவரால் தனது மகனுக்கு கலைக் கல்லூரி படிப்பை அதுவும் அரசு கல்லூரியில் மட்டுமே அதிகபட்சம் தரமுடியும். ஆனாலும் நாயகர்களை குறுகிய காலத்தில் வென்று காட்டும் சூப்பர்மேன்களாக கருதும் மனநிலையிலிருந்து ஜெயமோகனும் மாறவில்லை. ஏழைகள் எவரும் நடுத்தர வர்க்கத்தைப் போல கனவுலகில் வாழ்வதில்லை. விருப்பங்கள் இருந்தாலும் அவர்கள் யதார்த்தத்தின் எல்லையை மீறாமல்தான் சிந்திப்பார்கள், பேசுவார்கள்.
மாடிப்படியில் தண்ணீர் குடித்ததைப் போட்டுக் கொடுத்த சக ஊழியனை கோபத்தில் அடிக்கும் லிங்கம், வீட்டில் தான் ஒரு துரும்பு கூட எடுக்காமல் இருக்கும் வண்ணம் தந்தை பாராட்டி வளர்த்திருக்கிறார், இப்போது அவரில்லாத குடும்பத்தின் கஷ்டத்திற்காக இந்த அடிமைத்தனத்தை சகிப்பதாகவும் பேசுவான். இது சூபர்வைசரிடம் அடிபட்ட சோகத்தை அதிகப்படுத்துவதற்காக காட்டப்படும் மிகையான பொய். விவசாயிகள், கிராமப்புறத்தினர் போன்ற உழைக்கும் வர்க்க பின்னணியிலிருந்து வரும் இளைஞர்கள் இயல்பாகவே தமது வீட்டில் பல வேலைகளைச் செய்வார்கள். அதில் கூச்சமெல்லாம் பார்க்க மாட்டார்கள். வீட்டிற்கு வெள்ளையடிப்பதோ, சமயத்தில் சமைப்பதோ, மூட்டைகள் தூக்குவதோ சாதாரணம்.
வறுமையென்றாலும் விசாலமான கிராமப் புறத்தில் வாழும் அவனுக்கு நகர்ப்புறத்து அடைசல் வாழ்க்கையில் ஒன்றுவதுதான் கடினமாக இருக்கும். மற்றபடி பட்டினி, இருப்பதை வைத்து வாழும் பண்பு, அதை நினைத்து எப்போதும் எரிச்சலடையாமல் இருப்பது என்பன போன்ற அவர்களது உளவியலை ஜெயமோகன் அறிந்திருக்கவில்லை. கிராமப்புற ஏழைகள் உழைப்புக்கும், வசதிகள் இல்லாத வாழ்க்கைக்கும் அஞ்சுபவர்களல்ல. ஏதோ அவர்களெல்லாம் வாழ்ந்து கெட்டவர்கள் போல ஜெயமோகன் கருதுகிறார். அல்லது எல்லா ஏழைகளும் விடுதலை பெற ஒரே வழி அவர்களெல்லாம் முதலாளிகளாவாது என்பதே இப்படி சுய புலம்பல் வசனங்களாக வருகிறது.
அதே போல கனி தனது சொந்த வாழ்க்கைத் துயரங்களை அழது கொண்டு கூறுவதும் யதார்த்தமல்ல. உழைக்கும் பெண்கள் யாரும் தமது துயரங்களை வரவிருக்கும் பொற்கால வாழ்க்கையின் கசப்பு நினைவுகளாக கருதுவதில்லை. அது அவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் யதார்த்தம். சரியாகச் சொன்னால் ஒரு சோகமான புன்னகையோடு, கொஞ்சம் கிண்டலாக கனி சொல்லியிருந்தால் கூட போதுமானதாக இருந்திருக்கும். இதிலும் ஜெயமோகனது வாழ்ந்து கெட்டவர்கள் என்ற நடுத்தர வர்க்கத்தின் உளவியலே வேலை செய்கிறது. ஏழைகளைப் பற்றிய பார்வை இயக்குநருக்கே சரியாக இல்லாத போது வசனகர்த்தாவிடம் அதை எதிர்பார்ப்பது அதிகமோ?
“யானை இருக்கிற காட்டில்தான் எறும்பும் இருக்கும்” என்ற பொருளற்ற, காலத்தின் உணர்வற்ற, கவித்துவமான வசனமெல்லாம் நம்மை ஈர்க்கவில்லை. ஆனால் கனியின் தங்கை நாகம்மை பெரிய மனிசியாக மாறிய பின் வரும் காட்சியில் தனது தங்கை லிங்கத்தை யாரென்று அடிக்கடி கேட்டதாக கனி கூறும் போது “நீ என்ன சொன்னாய்” என்று லிங்கம் கேட்பான். ஒரு அழகான மௌனம், புன்னகைக்குப் பிறகு, சிரிச்சேன் என்று கனி கூறுவதுதான் நம்மைக் கவர்ந்த ஒரே இடம். ஆக ஜெயமோகன் எழுதாமல் அமைதியாக அடங்கும் இடம்தான் பிடித்திருக்கிறது என்றாலும் இந்தக் காட்சியின் அழகு அதை சிறப்பாக படமாக்கியிருக்கும் இயக்குநரின் பங்கின்றி மிளிர்ந்திருக்காது என்பதும் உண்மை.
“தன் வீட்டில் சொத்தில்லை, உனது வீட்டில் டவுரி கொடுக்குமளவு வசதியில்லை” என்பதாலேயே இரு குடும்பங்களின் நன்மைக்காக காதல் பற்றி தயக்கம் அடைந்ததாக லிங்கம் பேசுவது யதார்த்தமாக இருந்தாலும் பொருத்தமாக இல்லை. ஏழைகள் ஆண்டைகளைப் பற்றி கேலிதான் பேசுவார்களே தவிர அந்த இடத்தில் தங்களை பொருத்திப் பிரச்சினைகளை பேசமாட்டார்கள். அப்படிப் பேசினாலும் அது விதியை நொந்து கொள்ளும் சுய எள்ளலாகத்தான் இருக்குமென்று தோன்றுகிறது.
ஏழைகள் வாழ்வில் என்னதான் பிரச்சினை இருந்தாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளிச் செல்லும் ஒரு எளிமையான அழகான கனவு அவர்களிடம் உழைப்பு என்ற வர்க்கப் பண்பாய் வெளிப்படுகிறது. அதுதான் அவர்களைத் திரட்டி அந்த ஏழைமையை விரட்ட முடியுமென்ற நடைமுறை நம்பிக்கையை கம்யூனிஸ்ட்டுகளிடம் தோற்றுவித்திருக்கிறது. ஏழ்மையின் அந்த ‘அழகை’ இயக்குநரும், வசனம் எழுதியவரும் புரிந்து கொள்ளவில்லை.
_____________________________________________
இறுதியாக இந்த விமரிசனங்கள் இருந்தாலும் அங்காடித் தெருவை அனைவரும் பார்க்க வேண்டிய படமென்றே கருதுகிறோம். குறைந்த பட்சம் தமிழக வாழ்க்கையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் சரவணா ஸ்டோர் என்ற பேரங்காடியின் பின்னே இருக்கும் உழைப்பாளிகளது வாழ்வை காட்ட முனைந்திருப்பது நிச்சயம் வரவேற்க்கப்படவேண்டும். இந்த விமரிசனம் கூட அத்தகைய முயற்சியில் ஒன்றுதான்.
தொடர்புடைய பதிவுகள்
dai, yaruda nee. un pakkatha padika nichathu kuttama? padatha vimarsanam pannuvenu paartha un suya vimarsam eluthiyiruka. venada விட்டரு. . vaalikuthu
நீங்க ஊருக்கு புதுசா?
எப்பா வினவு நீ அடங்கவே மாட்டிய எல்லாத்தையும் குத்தம் சொல்லுறதுதான் உன் வேலையா … பக்கம் பக்கம் எழுதுறத முதல நிப்பாட்டு
படம் ஒரு மிகைபடு ஊடகம். யதார்த்தம் உன் தேவை எனில் வாழ்கையை பார். உன் பிழைப்பை பார். விமரிசனம் தனிநபர் உரிமை. அதையும் ரசி. அதையும் விமர்சிப்பது வேலையற்றது. அதாவது இப்பொழுது நான் செய்வதை போன்ற சித்திரவதை.
ஆப்பிரிக்க குழந்தைகளின் எலும்புக்கூடு தோற்றம், வயிறு வீங்கிய உடம்பு, ஈ மொய்க்கும் உதடுகள், அப்புறம் எத்தனை இலட்சம் பேர் இறந்தார்கள் என்ற காட்சிகளும், செய்திகளும், புள்ளிவிவரங்களும் உணர்த்தத் தவறிய ஒரு வேதனையை அப்போது நான் உணர்ந்தேன். நான் இலக்கியவாதி இல்லையென்பதால் அந்த உணர்ச்சியையும், காட்சியையும் இங்கே அப்படி பதிவு செய்திருப்பேனா என்பது சந்தேகம் என்றாலும் யாரும் அந்த தாயின் வேதனையைப் புரிந்து கொள்ளலாம்.
நேரிட்டு பார்க்கும் யதார்த்தம் மட்டுமே உண்மையல்ல. யதார்த்தம் பற்றி பழக்கடுத்தப்பட்ட பார்வை வழியாகவே நாம் பார்க்கிறோம். அதுவே தன்னளவில் உண்மையை வழங்கிவிடாது. விக்கிபீடியாவிலோ, இல்லை பல புள்ளிவிவரங்களிலோ இருக்கும் செய்திகளையும், கணக்குகளையும் பலர் உண்மைகளாக நம்புகிறார்கள். அந்த செய்தியை அதனோடு தொடர்புள்ள ஏனைய சமூக வாழ்வின் இயக்கத்தை அல்லது வரலாற்றின் உணர்ச்சியில் பொருத்தித்தான் புரிந்து கொள்ள முடியும். அல்லது உண்மையைக் கண்டுபிடிக்கமுடியும்.
// புரியவில்லை. அல்லது இதற்கும் விமர்சனத்திற்கும் என்ன தொடர்பு எனப் புரியவில்லை. விளக்க முடியுமா
முதல் பத்தி ஏழ்மையின் உக்கிரத்தை காண்பிப்பதற்கு மிகையான சோகங்களோ, பிணங்களோ தேவையில்லை என்பதற்காக. இரண்டாவது பத்தி வாழ்க்கையின் யதார்த்தமான விவரங்களிலிருந்து வாழ்வின் இயக்கத்தை நடத்தும் உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக.
இரண்டாவது பகுதியில் அண்ணாச்சிகளை நல்லவர்களாக காட்டி கூட படமெடுக்க முடியும் என்றும் அதன்பிறகு அப்படி எடுத்தால் குரு படம்தான் கிடைக்கும் என்பதும் விமர்சனம் ஆ அல்லது முன்முடிவா. முன் முடிவு என்றால் அதனை வந்தடைந்த விதம் பற்றி விவரிக்க வேண்டும் அல்லவா. அண்ணாச்சியை விட ஆபத்தான் மல்லையாக்கள் பற்றிய அரசியல் கடைசிவரை விவரிக்கப்படவே இல்லை.
மணி, நீங்களாகவே சில முன்முடிவுகளை எடுத்துவிட்டு எழுதுகிறீர்கள். அண்ணாச்சிகளை நல்லவர்களாக காட்டி படமெடுக்க முடியும் என்று எழுதவில்லை. அவரை மிகையான வில்லனாக காட்டி அடைந்த நோக்கத்தை அவரைப் பற்றிய முழுமையிலேயே காட்ட முடியும் என்பதுதான் விசயம். தரகு முதலாளிகள் எவரும் அண்ணாச்சி போல கடும் வார்த்தை பேசக்கூடியவர்கள் இல்லை என்பதாலும் அவர்களின் சுரண்டல் வெளியே தெரியக்கூடியதாக இல்லை என்பதாலும் அது குரு படமாக வருமென்று எழுதினோம். இது கூட புரியலைனா எப்புடி?
//அவரை மிகையான வில்லனாக காட்டி அடைந்த நோக்கத்தை அவரைப் பற்றிய முழுமையிலேயே காட்ட முடியும் என்பதுதான் விசயம்//
இங்க என்னா அண்ணாச்சிங்களை பத்தி ஆவணப்படமா எடுத்துட்டு இருக்காங்க? அப்படி அண்ணாச்சிங்களை பத்தி ஒழுங்க எழுதினா வினவுல என்ன விமர்சனம் வருமுன்னு எங்களுக்கு தெரியாதா? ஏன் அண்ணாச்சிங்க சின்ன வயசுல பட்ட கஷ்டங்களை அவங்க கிட்ட வேலை செய்தவர்களும் பட வேண்டும் என்று விதி இருக்கா என்ன? இங்கெல்லாம் பார்பீனியம் apply ஆவாதா என்ன? குறை சொல்லி எழுதணுமுன்னு எல்லாத்தையும் குறை சொல்லிட்டே இருந்தா வாழ்க்கை முழுசும் ஒரு மன நோயாளியாக தான் வாழ முடியும்..
//இன்று இந்த சிறு கடை அண்ணாச்சிகளது வாழ்க்கையும் கேள்விக்குறியாக மாறிவிட்டது என்றாலும் எல்லாவகை அண்ணாச்சி முதலாளிகளும், வியாபாரிகளும் இப்படி கடினமாக நடந்து கொள்வதை இப்படித்தான் பேசுகிறார்கள். அது ஜனநாயகமற்ற நிலவுடைமைச் சமூகத்தின் அழிவிலிருந்து பொருளாதார ரீதியாக மாறும் சிரமத்தில் வேர் கொண்டிருக்கிறது. வேறு வகையில் சொன்னால் ஒரு குறைந்தபட்ச வாழ்க்கையை நேர்மையோடு அமைத்துக் கொள்வதற்கே இவ்வளவு சிரமப்படவேண்டியிருக்கிறது என்றால் அவர்களது தனிப்பட்ட நடவடிக்கைகளில், தொழிலில் ஜனநாயக உணர்வுகள் இருப்பதற்கு அடிப்படை இல்லை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.//
சுத்தமாக புரியவில்லை. முடிந்தால் விளக்கவும். அப்புறம் எதற்காக இந்த மூன்றாம் பகுதியில் செட்டியார் பற்றிய விமர்சனம் வந்த்து. கட்டுரையுடன் ஒட்டவில்லையே.
அண்ணாச்சிகள் கடுமையாக நடந்து கொள்வதற்கு காரணம் அவர்கள் நிலவுடமைப் பின்னணியிலிருந்து முன்னேறி வந்தவர்கள் என்பதே. சாதாரண அண்ணாச்சிகள் அதை பிழைப்பதற்கு நிபந்தனையாக கருதும் போது, பெரிய அண்ணாச்சிகள் அதை வைத்து சுயசாதி ஏழைகளை சுரண்டுவதற்கும் காரணமாக அமைகிறது. இது கட்டுரையின் வேறு இடத்தில் வருகிறது. செட்டியார்கள், நடார்களைப் போல சமீபத்தில் முன்னேறியவர்கள் இல்லை எனப்தற்காக ஒப்பீடு.
உணர்வு பூர்வமான் விமர்சனத்தை வைத்த வினவிற்கு வாழ்த்துக்கள். திரைவிலகும்போது பல வருடங்களுக்கு பின்பு இப்போதுதான் வந்துள்ளது. இதனை நாம் அடிக்கடி செய்யவேண்டும். ஒரு தனி தொடராகவே, மக்களுக்கான சினிமா (போதம்கின் போன்று) சிடி கிடைக்கும் இடம் அல்லது தரவிறக்கம் செய்யும் தகவலோடு இடம் பெற வேண்டும். அப்போதுதான் சினிமா ஒரு அபினி போல மக்களை சிந்திக்கத்திராணியற்ற கூட்டங்களாக மாற்றுவதை எதிர்த்து ஒரு ஆக்கப்பூர்வமான போர் தொடுக்க முடியும்.
//இதனால் நாங்கள் சினிமாவை ‘கட்சிப் பிரச்சாரத்திற்காக’ விமரிசிப்பதாக எண்ணும் நண்பர்கள் இங்கே சங்கம் கட்ட முயன்று தோற்றதைத்தான் படமெடுக்கமுடியும் என்ற வாக்கியத்தையும் நினைத்து விட்டு பேசவும்.//அதனால்தான் தொழிலாளிகளின் எழுச்சியைப் பார்த்து பீதியடைந்த முதலாளித்துவ வர்க்கம் தனது வரலாற்றுப்பாத்திரத்தை கழுவிவிட்டு பிற்போக்கான நிலவுடைமை வர்க்கங்களையும் ஆதரிப்பது என்ற நிலையை எடுத்திருக்கிறது//சரிதானா
சரிதானா என்று கேட்பதற்கு முன்னர் இது தவறு என்பதை நீங்கள்தானே விளக்க வேண்டும்?
//தலித்துக்கள், ஏழைகள் போன்ற ஒடுக்கப்படும் பிரிவினர் அவர்களது அடிமைத்தனத்தை மூடியிருக்கும் உலகத்தில் இருந்து கொண்டு மட்டும் விடுதலையை உணர முடியாது. அது அவர்களது உலகிற்கு வெளியிலிருந்தே வருகிறது. கிராமத்தில் இருக்கும் வரையிலும் தீண்டாமையை காலம் காலமாக இருக்கும் ஒரு பழக்கம் என்று சகித்துக் கொள்ளும் ஒரு தலித் அவனது வாழ்க்கைத் தேவைக்காக கிராமத்தை விட்டு வெளியேறலாம் என்ற ஒரு அரசியல் சூழல் உருவாகி நகரத்துக்கு சென்று அங்கே சமத்துவத்தை கண்டு, அனுபவித்து பின்னர்தான் தனது கிராமத்துக்கு திரும்பும் போது அந்த தீண்டாமையை எதிர்க்க வேண்டுமென்ற உணர்வைப் பெறுகிறான்.
அடுப்படியில் அடைபட்டிருக்கும் பெண்கள் கூட ஆண்கள் நிறைந்திருக்கும் சமூகவெளியில் புழங்கும்போதுதான் தமது சமூக அடிமைத்தனத்தை உதறவேண்டுமென்ற விருப்பத்தை அடையமுடியும். இங்கே வலியுறுத்துவது அடிமைகளின் உலகிலோ, இல்லை அடிமைகளின் மூளைகளிலோ அவர்களது விடுதலைக்கான அவா பிறக்க முடியாது. அது வெளியிலிருந்தே வருகிறது.//
சரியான அரசியல் பார்வை எனக்கருதுகிறீர்களா.
//சரியான அரசியல் பார்வை எனக்கருதுகிறீர்களா.//
இதில் எதைத் தவறு என்று கருதுகிறீர்கள்?
ஒடுக்கப்பட்ட பிரிவினர் கிராமத்தை விட்டு வெளியேறி ஒரு தொழிற்சாலையில் வேலை பார்க்கத் துவங்குகிறார்கள். எனும் வாக்கியத்தின் பின்
நிறைய செய்திகள் பொதிந்து இருக்கிறது. முதலில் அவர்கள் தமது பொருளாதாரத்துக்கு கிராமப்புற ஆதிக்க சாதி பண்ணையார்களை சார்ந்திருக்க
வேண்டும் எனும் கட்டிலிருந்து விடுபடுகிறார்கள்
அப்படியானால் நகர்புறத்தில் உள்ளூர் முதலாளிகள் எல்லோரும் ஆதிக்க சாதியில்லையா என்று கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன் –
திருப்பூர் கவுண்டருக்கும் ஆலாந்துரை கவுண்டருக்கும் /ஓசூர் நாயுடுவுக்கும் ராயக்கோட்டை நாயுடுவுக்கும் / சிவகாசி நாடாருக்கும் வள்ளியூர்
நாடாருக்கும் – நோக்கங்கள் வேறு வேறு. இங்கே பொருளாதார ஒடுக்குமுறை பிரதானம் என்றால் அங்கே அதோடு சேர்ந்து பிரதான பாத்திரம்
வகிப்பது சமூக ஒடுக்குமுறை.
அது தான் காண்டிராக்ட் தொழிலாளியாகவே இருந்தாலும் கூட கிராமப்புற கொடூரமான சமூக ஒடுக்குறையை விட நகர்புற பொருளாதார
ஒடுக்குமுறை குறைவானதாக தெரிகிறது.
இது தவறென்பதை நீங்கள் விளக்கவில்லையே மணி?
எல்லா வகை ‘கருத்துச் சுதந்திரமும்’ …. என்ற பத்தியில் எழுதப்பட்ட விசயங்கள் கற்பனையானவை எனத் தோன்றுகிறது. எதார்த்தம் என்னவாக இருக்கிறதோ அது மிகையாக படத்தில் இருக்கிறது. மாறாக தென் மாவட்ட இளைஞர்கள் பற்றிய கட்டுரையாளரின் அகமதிப்பீடு கற்பனையான உலகத்தில் இருந்தே தோன்றுவதாக படுகின்றது. வாழ்நிலைதான் மனிதனின் உணர்வுகளில் ஆதிக்கம் செலுத்தும் என நம்புதவதால் இதனை சொல்கிறேன்.
சார்லி சாப்ளினோடு ஒப்பிடுவது சரியான்ன்னு தெரியல. மற்றபடி மூட்டையை நழுவ விட்டு அவனை வதைப்பது என்பது பழிவாங்குதல்தான் அதனை எப்படி நகைச்சுவையாக ரசிக்க முடிந்த்து என்பதுதான் புரியவில்லை. அதற்கு பாட்டு என்பது சினிமா த்தனம் என்றால் கூட ஒத்துக் கொள்ளலாம். இப்படி பிரச்சினை வராமல் அடிப்பது என்பது தொழிலாளிகள் காலம் காலமாக செய்துவரும் எதிர்ப்பு நடவடிக்கைதானே.
சக ஊழியர்களை லிங்கம் திட்டியிருந்தால் அதில் விஜயகாந்த் படமோ அல்லது அர்ஜூன் படமோதான் ரிசல்டாக கிடைத்திருக்கும் எனக் கருதுகிறேன்.
//மற்றபடி மூட்டையை நழுவ விட்டு அவனை வதைப்பது என்பது பழிவாங்குதல்தான் அதனை எப்படி நகைச்சுவையாக ரசிக்க முடிந்த்து //
நீங்கள் படத்தைப் பார்த்தீர்களா? அந்தக் காட்சி நகைச்சுவை போலத்தான் காட்டப்பட்டது.
//இப்படி பிரச்சினை வராமல் அடிப்பது என்பது தொழிலாளிகள் காலம் காலமாக செய்துவரும் எதிர்ப்பு நடவடிக்கைதானே.//
அது மட்டும் தான் எதிர்ப்பு நடவடிக்கையா? இல்லை அல்லவா… ஆனால் படத்தில் எதிர்ப்பு நடவடிக்கை என்பது இப்படி சில தனி நபர்களின்
கலகத்தோடு சுருங்கி விட்டிருக்கிறது என்பதை கட்டுரையாளர் சுட்டிக்காட்டுகிறார் என்றே நான் நினைக்கிறேன். மொத்தமாக எல்லோரும்
காட்டுத்தனமாக அடக்கி ஒடுக்கப்படும் போது, அவர்களில் ஒருவரின் எதிர்ப்பு ஒரு நெறுப்புப் பொறிபோல பரவுவதைப் போல படத்தில்
காட்டியிருக்க்லாம் அல்லவா?
விஜயகாந்த் படத்திலோ, அர்ஜூன் படத்திலோ அவர்களும் பேசா மடந்தைகளாக இருக்கும் மக்களைப் பற்றி பேசமாட்டார்கள். மாறாக அவர்கள் செய்ய முடியாத வீரத்தை வில்லன்களை விமரிசித்து ஒழிப்பார்கள். அங்காடித் தெருவிலும் கதாநாயகன்தான் அப்படி வீரத்துடன் வெடிக்கிறான். எனில் உங்கள் அளவுகோல்படி இதுவும் விஜயகாந்த் டைப் படம்தானே?
விளம்பரமும் கிரிக்கெட்டும் பற்றிய கருத்துக்கள் கூட பொதுத்தளத்தில் விமர்சிக்கப்பட வேண்டியவை. இந்தப்படம் இதனையும் விமர்சிக்க வேண்டும் என்பதற்கான படத்தின் கதையோட்டத்தில் அவசியமும், பொருத்துவதற்கான பரிந்துரைக்கப்படும் இடமும் தெரியவில்லை.
சரவணா ஸ்டோரையும் இரண்டாம் உலகப்போரையும் ஒப்பிடுவது என்பதன் மூலம் விளிம்புநிலை அரசியலை பேச முன்வரும் மனிதர்கள் வைத்திருந்த கண்ணிக்குள் கட்டுரையாளர் வகையாக சிக்கிக் கொண்டது போல தோன்றுகிறது.
திநகர் மற்றும் அன்பழகன் பற்றி சொன்னதற்கும் கட்டுரையின் மையமான விமர்சனத்திற்கும் என்ன தொடர்பு எனப் புரியவில்லை.
பதட்டமில்லாமல் கொஞ்சம் நிதானமாக பேசினீர்கள் என்றால் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதைப்புரிந்து கொள்ள முடியும். இங்கே உங்களது கேள்விகள் எதற்காக என்று புரியவில்லை.
சும்மா குறை சொல்லிகிட்டே இருக்கியா விளம்பரத்துக்கு விமர்சனம் எழுத்து மொக்கை எழுத்தாளரே தயவு செய்து நீர் ஒரு நல்ல படம் எடுக்க வேண்டியது தானே இந்த படதே தரவவே அந்த இயக்குனர் எப்படி கஷ்டப்பட்டு இருபாரு, தயாரிப்பாளர் இருக்கனும். போய்ய வெட்டி பேச்சு வீராசாமி
இந்த படத்திற்கென்று இல்லை எல்லாப் படங்களுக்காகவும் எல்லா இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இதர தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் ‘கஷடப்படத்தான்’ செய்கிறார்கள். அதுக்கென்ன செய்யுறது வீராச்சாமி? ஆனாலும் இந்த உலகில் கஷ்டப்படும் மக்களில் சினிமாத்துறையினர் மட்டும்தான் உங்களுக்குத் தெரிகிறார்கள். வினவுல மற்ற கஷ்டங்களைப் பத்தி பேசும்போது கொஞ்சம் வந்து பார்த்தால் அதுவும் புரியும்.
இந்த அளவாவது ஒரு தமிழ் படம் வந்தததுக்கு சந்தொசப்பட வேண்டும். அதை விட்டு விட்டு குறை சொல்ல ஒரு விமர்சனம்? ஏன் இதற்கு முன்னாடி இதை பற்றி பிளாக் கில் எழுத வேண்டியது தாணே, ஒரு இயக்குனர் புதிதாக ஒரு கதைகளம் பற்றி யோசித்து படம் எடுத்தால் எங்கிருந்துதான் வருகிறீர்களோ .
‘இந்த அளவுக்காவது’ கருணாநிதி டி.வி கொடுக்கிறார், ஜெயலலிதா வெயிலுக்காக மோர் குடுக்கிறார், சோனியா அரிசி கொடுக்கிறார், மன்மோகன் சிங் மருந்து கொடுக்கிறார் என்பதற்காக விமரிசனம் செய்யாமல் இருப்பீர்களா? உடனே மக்களை பிச்சைக்காரர்கள் என்று இகழ்வீர்களே? படம் வருவதற்கு முன்னால் எப்படி விமரிசனம் எழுதுவது சுரேஷ்? ஒரு வேளை இத்தகைய மக்களின், தொழிலாளிகளைப் பற்றி எழுதச் சொல்கிறீர்களா? அதற்கு தினசரி வினவு வந்து படித்திருந்தால் தெரியும், சினிமாவுக்கு மட்டும் வருவதை கொஞ்சம் மாற்றுங்கள்.
சினிமாவுக்கு மட்டும் நான் வரவில்லை, உங்களுடைய பிளாக்கினை தொடர்ந்து படித்து வருகிரேன், இதுவரை பின்னுட்டம் இட்டதில்லை , உங்களுக்கு இதை பற்றி முன்பே தெரியும் என்றால் பதிவு செய்திருக்கலாம் அல்லவா , குறை சொல்வது எளிது , படம் எடுப்பது கடினம் , உங்களை போன்றவர்கள் விமர்சம்ன் என்ற பெயரில் இஷ்டத்திற்கு எழிதினால் ஒரு படைப்பாளிக்கு எப்படி இருக்கும் , உங்கள் கருத்தினை நான் மறுத்தவுடன் உங்களுக்கு கோபம் வருகிறது அல்லவா , உங்கள் போல் மறுமொழி கூ ற வசந்தபாலன் இங்கு இல்லை என்பதால் எப்படி வேண்டுமானாலும் எழுதுவீர்களா ?
ஏம்பா சுரேசு, முதல்ல இந்த கட்டுரை வசந்தபாலனை எந்த இடத்தில் விமர்சித்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட முடியுமா?
முதல்ல உன் பேரில் கமென்ட் எழுது,
சுரேசு, எம் பேரு கேட்டாசிரியன், அததான் மாடர்னா கேள்விக்குறின்னு போட்டிருக்கேன்!!!. போதுமா இல்ல எங்க அப்பன், பாட்டன் பூட்டன் பேரெல்லாம் எழுதினாதான் நீ பதில் சொல்லுவியா?????
முதல்லையே அத செய்ய வேண்டியது தானே, இந்த படத்தை எடுத்தது வசந்தபாலனா இல்லை உங்க அப்பன் , பாட்டன் , பூட்டனா ?
சுரேஷ், கேள்விக்குறி,
விவாதத்தை கருத்து ரீதியாகவே பேசலாமே?
இல்ல சுரேசு படத்த எடுத்தது உங்க ஆயா! ”’வசந்தபாலனை எந்த இடத்தில் விமர்சித்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட முடியுமான்னு?
”’ ஒரு கேள்விதான கேட்டேன், அதுக்கு பதில் சொல்ல வக்கில்ல ஆனா சம்பந்தமில்லாம உளர மட்டும் முடியுதாக்கும்????
அட கோட்டான் , படமே வசந்தபாலன் எடுத்ததுனா இந்த பிளாக்கிலே நி யார பத்தி சுட்டி காட்டுதுன்னு கேள்வி கேக்குற , நீ நோண்டி நோண்டி கேக்குறத பாத்தா நீதான் வினவுன்னு நினைக்கிறேன் .உனக்கு வக்குஇருந்தா வேற வேலையே பாரு, உளறத பத்தி நீ பேசாத, உன் ஆயாகிட்ட பேசு .
சுரேஷ், நீங்க சொல்வது ரொம்ப சரி., இந்த வினவு இருக்காரே.. அவர் ஒரு ஆளா இல்ல நிறைய பேரன்னு எனக்கு ஒரு சந்தேகம்.. இவர் வினவுன்கர பேர்ல ரொம்ப நல்ல விதமா அறிவாளி மாதிரி பேசுவார்.. அப்புறம் வேற பேர்கள்ல அவருக்கு சப்போர்ட் பண்றதுக்கு சில பேர் இருபங்க.. அவங்க தான் இப்படி மாற்று கருத்து சொல்றவங்கள கேவலமா பேசி திசை திருபுவானுங்க.. வினவு உண்மையிலே ஆரோகியமான விவாதத்துல விருப்பம் இருந்தா இந்த வெட்டி பேச்சு கருக்களை எல்லாம் அழிக்கணும்.. செய்ய maatat
திருந்த முடியாத திருத்தல் வாதி வினவு … மக்களின் வுணர்வை புரிந்து நடக்க கற்றுக்கொள்
வாய்யா கோலிவுட்டுக்கு சொம்பு தூக்கும் ஜால்ரா கம்மீனிஸ்டு.. வசந்தபாலனுக்கு பாராட்டு சொம்பு தூக்கி கால நக்கரதுல காட்டுற முனைப்ப சரவணா ஸ்டோர்சுக்கு மின்னால மறியல் செஞ்சு காட்டலாமே…. அப்ப உன் சினிமாக்காரன் எவன் வருவான்னு பாக்கலாம்…
வாய்யா வினவவுக்கு சொம்பு தூக்கும் ஜால்ரா குறி .. வினாவுக்கு தூக்கி கால நக்கரதுல காட்டுற முனைப்ப சரவணா ஸ்டோர்சுக்கு மின்னால மறியல் செஞ்சு காட்டலாமே….
முட்டாஊ அண்ணே, ஏற்கனவே ரிலையன்சு, கொக்கோ கோலா கம்பெனியெல்லாம் மறியல் செஞ்சு கைதாகி வந்த ஆளுங்க நாங்க.. உங்கள மாதிரி வெட்டிபய இல்லீங்… உங்க — வாய கொஞ்சம் மூடுங்.
இங்க பார்ரா, மறியல் செய்ஞ்சி கைதாயிட பெரிய புரட்சி வாதின்னு
நெனைப்பு வந்துரிசிடா. சிரிப்பா வருதுப்பா….
இந்த கதை புதுசெல்லாம் இல்லம்மா,,, 80களின் படங்களில் எப்போதும் முதலாளி-பண்ணையார்தான் வில்லனாக இருப்பார்கள். தொழிலாளி, விவசாயிகளை அடிமையாக நடத்துவார்கள். இதே அழுகாச்சி, சோகம் பாலியல் தெந்திரவு எல்லாம உண்டு. பேரங்காடி என்ற களம் வேணா புதுசுன்னு செல்ல்லாம்.
ஜெயமோகனை விமர்சிக்க கிளம்பிய கட்டுரையாளர் ஏழைகளின் மனநிலை பற்றிய தமது அகவயமான பார்வையும் வெளிப்படுத்தி உள்ளார். எதார்த்தமாக சமூகத்தில் முன்னேற வேண்டாம் என நினைக்கும் ஏழைகளை மாத்திரமே பார்க்க கிடைத்த அவரது சூழலுக்காக வருந்துகிறேன்.
அப்புறம் கிராம்ப்புற ஏழை நடுத்தர இளைஞர்கள் எல்லோரும் வீட்டுக்கு பொறுப்பானவர்கள் மாதிரி புரிந்து கொள்வது கூட அகவயமான பார்வைதான். கொஞ்சம் படித்து மார்க் வந்தாலே தரையில் நடக்க விரும்பாத அத்தகைய இளைஞர்களை பார்க்க நேராத அவரது நிலைக்கும் வருந்துகிறேன்.
ஏழையான கனி தனது சுயபுலம்பலை காதலனிடம் கூட சொல்ல மாட்டாள் என்பதுதான் கற்பனையாக உள்ளது.
யானை இருக்கிற காட்டில்தான் எறும்பும் இருக்கிறது என்ற கவித்துவமான வசனம் உங்களை ஈர்க்காமல் இருந்திருக்கலாம். ஆனால் நடநுத்தரவர்க்கம் அனைவரும் விரும்பி ரசித்த கதையோடு ஒன்றிய வரி அதுதான். அதுதான் உண்மையில் விமர்சனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
மற்றபடி சிரித்தேன் என்ற ரொமாண்டிக் எல்லாம் உங்களுக்கு எப்படி பிடித்த்து என்றுதான் தெரியவில்லை. லிங்கத்தின் கூற்றை நான் பலமுறை பல இளைஞர்களின் வாயிலிருந்து கேட்டிருக்கிறேன். அது நடைமுறையில் நடக்க கூடியதுதான்.
வயிற்றுக்கில்லாத போது ஏழைகள் கார், பங்களா என்று திட்டமிடுவது எதார்த்தமில்லை என்பது போல தினக்கூலியால் மட்டும் வாழும் ஒரு கொத்தனார், தனது மகனை பி.இ படிக்க வைப்பதாக பேசுவதும் எப்படி எதார்த்தமாகும்? இல்லை பி.இ படிப்பு அவ்வளவு மலிவு என்று உங்களுக்கு தெரிந்த விசயத்தை மக்களுக்கும் விளக்கினீர்கள் என்றால் புண்ணியமாகப் போகும்.
கிராமப்புறத்தில் கொஞ்சம் சொத்துப் பத்து வைத்திருக்கும் வீடுகளில் நீங்கள் சொல்வது இருக்கலாம். அன்றாடம் தந்தை கொண்டு வரும் கூலியில் மட்டும் அரை வயிறு சாப்பிடும் இளைஞர்கள்அப்படி விட்டேத்திகளாக இருப்பதற்கு கையில் காசு வேண்டுமே? கிராமங்களிலும் வர்க்கம் இருக்கிறது.
கனி தனது சொந்த வாழ்க்கை சோகத்தை இப்படி அழுது கொண்டு சொல்லியிருப்பதாகக் காட்டியிருப்பது உழைக்கும் பெண்களைப் பற்றிய நடுத்தவர்க்கம் காட்டும் ஐயோ பாவம் மனநிலை. அவள் எப்படி சொல்லியிருக்க கூடுமென்பதுதான் கட்டுரையில் இருக்கிறது. அப்படி சொல்லக்கூடாது என்று எழுதியிருப்பதாக பொய்யாக குற்றம் சாட்டுகிறீர்கள்.
சிரித்தேன், வசனத்தின் சிறப்பு அளவாக உணர்ச்சிகளை அடக்கமாக காட்டியிருப்பதில். அதில் என்ன ரொமாண்டிக் வெங்காயம்?
//வயிற்றுக்கில்லாத போது ஏழைகள் கார், பங்களா என்று திட்டமிடுவது எதார்த்தமில்லை என்பது போல தினக்கூலியால் மட்டும் வாழும் ஒரு கொத்தனார், தனது மகனை பி.இ படிக்க வைப்பதாக பேசுவதும் எப்படி எதார்த்தமாகும்? இல்லை பி.இ படிப்பு அவ்வளவு மலிவு என்று உங்களுக்கு தெரிந்த விசயத்தை மக்களுக்கும் விளக்கினீர்கள் என்றால் புண்ணியமாகப் போகும்
//
எத்தனை கூலி வேலை செய்யரவங்க தன் பிள்ளைகளை பி.இ படிக்க வச்சிருங்கனு தெரியுமா?எத்தனை பேர் படிக்க வைக்க ஆசை இருக்கங்கனு உங்களுக்கு தெரியுமா?
உங்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.நீங்கள் எப்படி சண்டை போடலாம்னுதானு யோசிப்பிங்க.
“சிரிச்சேன்” என சொல்லும் அந்தக் காட்சி, வெகு இயல்பு. இதை எப்படி மணி உங்களால ரசிக்க முடியவில்லை.
நொந்தகுமரா.. சிரிச்சேன் என்று சொல்லும் போது மணி சார் நொந்து பொய் பார்திருப்பார். அதனால் அவரால் ரசிக்க முறியவில்லை. பாவம் விடுங்கள். நீங்கள் நொந்து போகவேண்டாம்.
நான் விமர்சிக்க வேண்டியதாக கருதுவது அதன் நுண் அரசியலை.
1. மனிதம் என்பது பொதுவான சொல்லாடல் அல்ல, அது சமூகம், உற்பத்தி முறை, காலம், வர்க்கம் சார்ந்த்து என்பதை மையமான விமரசனத்திற்கான பேசு பொருளாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. கே.கே.நகர் விபத்து என்பது லாரி மோதியதால் நிகழ்ந்த சம்பவம் அல்ல• அதற்கு முன்னரே உலகமயம் அவர்களை கிராமத்தில் இருந்து விரட்டியதை அன்றைய புக பதிவுசெய்த்து. அப்படிப்பட்ட விசய்த்தை தனது காதலின் தற்செயலாக நடந்த விபத்தாக சித்தரித்து அதனையே இரண்டாம்பட்சமாக்கி அப்பிரச்சினையில் ஊனம் ஒரு பிரச்சினையல்ல காதலுக்கு என்ற செய்தியை முரசறிவித்த நுண் அரசியல் விமர்சிக்கப்பட வேண்டும்.
3. உலகம் முழுவதும் ஏகாதிபத்தியங்களுக்காக உழைக்கும் தொழிலாளி வர்க்கம் சுரண்டப்படுவது அம்பலப்படுத்தப்பட வேண்டிய தருணத்தில் உள்ளூர் பெரிய அண்ணாச்சியை மாத்திரம் பேசு பொருளாக எடுத்த செலக்கிடிவ் அம்னீசியா விமர்சிக்கப்பட வேண்டும்.
4. காதல் தோன்றுவதும், அதன் பிரச்சினைகளும் பற்றிய ஒரு பிரச்சினையில்லாத உலகத்தை நிறுவ முயன்ற இயக்குநரின் நிலபிரபுத்துவ காதலை விமர்சிக்க வேண்டும்.
5. மனித உரிமைகள், வறுமை, சுயமுன்னேற்றம், நட்பு, ஊனமுற்றோரின் துயரம், காதலை தீர்மானிக்கும் பாலியல் பச்சபாதம், காதலுக்கு எதிரியான அண்ணாச்சிகள், இவை போன்ற துண்டு துண்டான பிரச்சினைகளை ஒரு பட்த்திற்குள் சொல்லி விட முடியும் என நம்பி தோற்றுள்ள ஒரு இயக்குநரின் நம்பிக்கைக்கான சீர்திருத்தவாத அரசியல் விமர்சிக்கப்பட வேண்டியது.
6. பார்வையாளர்களின் எதிர்வினை கட்டாயம் பரிசீலனைக்குரியது. அங்கே எதுவும் வாங்க கூடாது என்பது நடுத்தர வர்க்க முடிவு என்றால் அதற்கு பின்னால் உள்ள பிராண்ட்டு அயிட்ட மயக்கத்தின் பின்னால் உள்ள தொழிலாளி வர்க்க சுரண்டல் பேசப்பட வேண்டும். இன்னும் நிறைய உள்ளது.
ஒருமுறை படம் பார்த்து விட்டு விமர்சனம் சொல்கிறேன்.
நுண் அரசியல் பற்றி அறிந்த்தில்லை என்பதால் இது என்ன என்று விளக்கினால் விவாதிப்பதற்கு உதவியாக இருக்கும். உங்கள் விமரிசனத்தைப் பார்த்தால் அங்காடித் தெரு புரட்சிகரமான படமாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று இருக்கிறது. அப்படி எடுக்கவும் முடியாது, அது தேவையுமில்லை என்பது எங்கள் கருத்து. ஆனால் எடுக்கப்பட்ட களமான ஊழியர்களின் வாழ்க்கை என்பது ஆழமாக, பன்முகப் பரிமாணங்களாக வரவில்லை என்பதே வினவு விமரிசனத்தின் சாரம்.
நன்றி
//கொத்தனார் வேலை பார்க்கும் தொழிலாளி தனது மகனை பி.இ படிக்க வைக்கப் போவதாக பேசுவது அபத்தத்திலும் அபத்தம். //
டைப்படிக்க கீபோர்ட் ( இலவசமாக இன்டர்நெட்?) இருந்தால் எதை வேண்டுமானாலும் எழுதுவதா?
நான் கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவன். எங்கப்பா ஒரு கொத்தனாராக இருந்தவர். நான் பி.ஈ. பி.எஸ்.ஜி காலேஜில் படித்தேன். பிறகு லெக்சுரராக சி.ஐ.டியில் பணிபுரிந்து, எம்.டெக், மற்றும் பி.எச்.டி முடித்துள்ளேன். உலகம் முழுவதும் பேப்பர் ப்ரெசென்ட் செய்ய கான்பெரன்ஸ் அட்டென்ட் செய்ய சென்று வந்துள்ளேன். இருபது வருட அனுபவம்… சொந்த வீடு, கார் இருக்கு… இதற்கு மேல் என்ன முன்னேற்றம் வேண்டும்? நானும் என் பங்கிற்கு ஏழை வர்க்கத்திற்கு ( ஒரே சமூகம் என்றில்லாமல் ) உதவி செய்து பல எஞ்சினியர்களை டாக்டர்களை உருவாக்கி உள்ளேன். காலேஜுக்கு வாருங்கள் – பேசுவோம்.
மேலும் ஜெயமோகன் அவர்களை எனக்கு நன்றாக தெரியும். கோவையில் அவர் சந்திப்பு நடந்த பொது நானும் அங்கு வந்திருந்தேன். வசனம் எழுதும் போது வாழ்க்கை அனுபவங்களை எழுதக்கூடாது என்று யார் சொன்னது? உங்களுக்கு பிடித்த குடிகார இன்டர்நெட் பிச்சைக்காரன் மாதிரி இருக்க வேண்டுமா?
உங்கள் பதிவுகளை விடாமல் படிப்பேன். ஏழை மக்கள் படிப்பது முன்னேறுவது உங்களுக்கு கஷ்டம் போல?
சந்திரசேகர்,
கே.நாராயணன் என்ற தலித் குடியரசுத்தலைவர் ஆகியுள்ளார், அவ்வளவு ஏன் அம்பேத்கர்கூட வெளிநாடு சென்றுதான் கல்வி கற்று ஆளானார், மாயாவதி முதல்வரானார்…….என்பதெல்லாம் இந்தியாவில் தலித்துகள் முன்னேறிவிட்ட நிலையையா காட்டுகிறது?
கொத்தனார் மகன் இவ்வளவு சுலபமாக பி.இ படித்து கார், பங்களா என்று வாழ்வது தெரியாமல் பல அரசுக்கல்லுரிகள் கலைக் கல்லூரிகளாக இருப்பதும் அங்கே பல்லாயிரக்கணக்கில் மாணவர்கள் படிப்பதும் முட்டாள்தனம் போலும்.
ஐயா நீங்கள் 20 ,25 வருடங்களுக்கு முன்னர் படிக்கும்போது உங்கள் தந்தையின் தினக்கூலி எவ்வளவு என்பதையும், அதில் குடும்பச் செலவு போக எப்படி அதை வைத்து கல்லூரிக்கு போனீர்கள் எனப்தையும் சொன்னால் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
ஒருவேளை உங்களைப் போன்றவர்கள் படித்திருப்பதால் அவை விதிவிலக்குதானே அன்றி சமூகத்தின் பொதுப்போக்கு இல்லை. ஒரு கொத்தனாருக்கு தினசரி வேலை கிடைப்பது கடினம். வேலை இருக்கும் நாட்களில் கிடைக்கும் 200 ,300 ரூபாயை வைத்து மொத்த குடும்பத்தையும் பராமரிப்பதற்கே சரியாக இருக்கும். இந்நிலையில் அவர் எப்படி தனது மகனை பல ஆயிரமோ, இல்லை சில இலட்சங்களோ செலவழித்து படிக்க வைக்க முடியும்?
நீங்கள் மட்டுமல்ல, தினமணியில்கூட இப்படி ஏழைகளானா மாணவர்களது கதைகளைப் போட்டு வசூல் செய்து சிலரை படிக்கவைக்கிறார்கள். ஆனால் தினமணிக்கு உதவி கோரி வரும் எல்லாவற்றையும் போடுவதற்கு தினமணியாலும் முடியாது. போட்டாலும் எப்போதும் தர்மம் செய்வதற்கு யாராலும் முடியாது. இத்தகைய மனிதாபிமான அரிப்புகளால் உண்மைகளை மறுக்க முடியாது.
இன்று மாதசம்பளம் வாங்கும் நடுத்தர வரக்கமே பல இலட்சம் செலவழித்து பி.இ படிக்க வைக்க முடியாது எனும் போது அன்றாடக் கூலி வேலை செய்யும் மக்கள் எப்படி சார் படிக்க வைக்க முடியும்?
இல்லை அப்படி முடியுமென்றால் தமிழ்நாட்டில் உள்ள இலட்சக்கணக்கான கூலிதொழிலாளிகளுக்கு உதவி எல்லோரையும் பி.இ படிப்பதற்கு நீங்களோ, ஜெயமோகனோ ஒரு வழி காண்பிங்களேன்!
இந்த சாதாரண சமூக யதார்த்தம் கூட தெரியாமல் நீங்கள் முன்னேறிவிட்டதால் உலகமே விடுதலை அடைந்து விட்டதாக எண்ணும் அறியாமைதான் சகிக்க முடியாமல் இருக்கிறது.
//வேலை இருக்கும் நாட்களில் கிடைக்கும் 200 ,300 ரூபாயை வைத்து மொத்த குடும்பத்தையும் பராமரிப்பதற்கே சரியாக இருக்கும். இந்நிலையில் அவர் எப்படி தனது மகனை பல ஆயிரமோ, இல்லை சில இலட்சங்களோ செலவழித்து படிக்க வைக்க முடியும்?//
சம்பள நிலவரங்கள் தெரியாமல் பேசுகிறீர்கள் வினவு
இரு நூறுக்கு முன்னூறுக்கும் கொத்தனார் கிடைப்பதில்லை மார்கெட்டில்
ஐயா, இங்கே கொத்தனாரின் சம்பளம் பிரச்சினையல்ல. அவரது சம்பளத்தில் மகனை பி.இ படிக்க வைக்க முடியுமா என்பதுதான் கேள்வி?
ஒரு நாளைக்கு நானூறுன்னு வைத்தா போது ஏன் படிக்க வைக்க முடியாது என்கிறீர்கள்
தோழர் மார்க்ஸ் ,
இன்றைய மார்க்கெட்டில் 450 முதல் 500 என்று எகிறிவிட்டது அனால் இந்த வேலை தினமும் கிடைபதில்லை சென்னை நகரில் பல இடங்களில் பார்க்கலாம் முக்கிய சந்தையின் தெருமுனைகளில் கஞ்சி தூக்கை ஒரு கூடையில் வைத்துகொண்டு ஆண்களும் பெண்களும் காத்து கிடப்பார்கள் அன்றைய நிச்சயமற்ற வேளைக்கு ,அவர்களிடம் போய் ஒரு கொத்தனார் சித்தாள் வேளைக்கு அழைத்தால் அனைவரும் முண்டியடித்து கொண்டு வருவார்கள் .இவர்களுக்கு வேலை என்பது ஒரு கனவு தான் .இதில் எங்க BE,ME,எப்படி சாத்தியமாகும் ?
தோழரே
முதலில் உங்கள் தந்தைக்குப் பாராட்டுகள் பல. அது போல் இருமடங்கு உங்களுக்கு. படித்து பட்டம் பெற்ற பின்பு தன் தந்தையின் தொழில் பற்றி விவாதத்தில் எடுத்துக்காட்டிமைக்கு. மேலும் உங்களைப் போல் பலரை உருவாக்கும் உங்களின் பணி சிறக்கட்டும்.
அடுத்து தோழரே
நீங்கள் சமூகத்தில் விதிவிலக்காக இருக்கலாம். உழைக்கும் மக்களின் குடும்பத்தில் முதல் பட்டதாரி அரசு கலைக்கல்லூரியில் மட்டுமே நுழைய முடியும் அந்தப் பட்டதாரியும் வரலாறு, பொருளாதாரம், தமிழ் இலக்கியம் போன்றவற்றைத் தான் படிக்கமுடியும்.அறிவியல் பட்டம் பயில்பவர்கள் இளநிலையோடு நின்று விடுவதுதான் அதிகம். அது தான் இயல்பானது. பெரும்பாண்மை. நீங்கள் கூறுவது போல் எந்த நிலையிலும் புரட்சிகரமான தமிழ் நாயகனாக எல்லோரும் ஆகிவிடமுடியாது. ஒருவேளை நீங்கள் படித்த, பணியாற்றும் சூழ்நிலை உங்களை இது போன்று நினைக்க வைத்துவிட்டது என்று எண்ணுகிறேன். நீங்கள் இது போன்று நினைத்தற்கு வருந்துகிறேன். நீங்கள் கொஞ்சம் கோவை அரசு கலைக்கல்லூரிக்குச் சென்று இதைப்பற்றி விசாரித்துப் பாருங்கள். நீங்கள் விரும்பினால் உங்களைப் போல் முன்னேறிய ஒரு விரிவுரையாளரின் முகவரி தருகிறேன்.
—வாகை—
சரியாக சொன்னீர்கள் .
. ///தென்மாவட்டங்களின் உழைக்கும் வர்க்கப் பின்னணியிலிருந்து வந்திருக்கும் அந்த பெண்களையும் உள்ளிட்ட இளைஞர்கள் இதையெல்லாம் கண்டும் காணாமல் பாராமுகமாக போய்விடக்கூடியவர்கள் இல்லை/// 1991ல் 13ன்று வயதில் மஞ்சபையை துக்கிட்டு தென்மாவட்டங்களில் இருந்து ஜவுளிக்கடைக்கி வேலைக்கி வந்தவன் நான் 2004ம் வருடம் வரை சுமார் 13வருடங்கள் குப்ப கொட்டியிருக்கிறோன்(ஒரே கடையில் அல்ல) ஒரு கடையில் நான் ஒரு வருடம் வேலை பார்த்தால் அது பெரிய சாதனை 13வருடங்களில் 14கடைகளில் வேலை பார்த்திருக்கிறோன் அனால் படத்தில் சொல்லப்பட்டதுபோல் பெண் ஊழியர்களை கதற கதற அடிப்பது கண்ட இடங்களில் சூப்பர்வேஸர் தொடுவது இவைகளை நான் கன்டதும் இல்லை அப்படி நடந்தால் தென் மாவட்ட தொழிலாளிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார்கள் என்பது உண்மை இந்த பதிவாளர் உண்மை மட்டும் சொல்லியிருக்கிறார் ஆனால் அந்த படம் மிகைப்படுத்தப்பட்ட சித்திரம்
அன்பு நண்பர் ஹைதர் சொல்லியிருப்பது முற்றிலும் சரியானது. நன்றி
இவை எல்லாவற்றையும் விட புரட்சி இயக்குநர் வசந்த பாலன் ஸார்.. தன் உதவி இயக்குநர்களை நடத்தும் விதத்தையும், அவர்களுக்காக அவர் வாரி வழங்கிய ஊதியத்தையும் பற்றி எடுத்தால் அது அண்ணாச்சி கடையின் அவலங்களை விட இன்னும் பிரமாதமாக இருக்கும்.. ஒரு உதவி இயக்குநர் அவரை பார்த்து கம்பீரமாக நின்று பேசினால், அவர்களிடம் பெருங்கருணையும் அன்பும் கொண்டுதான் அவர் பேசுவார்.. என்னத்த சொல்ல..
படத்தை ஒரேடியாக மறுக்கவும் மனமில்லாமல் குறை கூறாவிட்டால் தன் புரட்சிகர பிம்பம் சரிந்து விடுமோ என்ற பயத்தில் எழுதப்பட்ட அரைவேக்காட்டு அலசல் இது. ஒருவேளை ஜெயமோகன் வசனம் எழுதாமல் இருந்திருந்தால் வினவு இதை கொண்டாடியிருப்பாரோ.ஒன்று நன்றாக தெரிகிறது- உங்களுக்கெல்லாம் நீங்கள் யாரை திட்ட விரும்புகிறீர்களோ அவர்களையே எல்லோரும் திட்ட வேண்டும். அதுதான் உங்களுடைய அளவுகோல். கொத்தனார் மகன் பொறியாளர் ஆக முடியாது என்று எழுதும் வினவிற்கு உலகம் தெரியவில்லை. இன்றைக்கு பல முதல் தலைமுறை பொறியாளர்கள் வறிய குடும்பங்களிலிருந்து படித்து வந்தவர்கள். சிலர் ஐஏஎஸ் ஆகவும் தேர்வாகியுள்ளனர்.
அண்ணே கொசு. ஜெயமோகன்ங்கிறது யாருண்ணே
ஹைதர் அலி,
ஜெயமோகன் என்பவர் தமிழில் நாவல்கள், சிறுகதைகள் எழுதியிருக்கும் ஒரு எழுத்தாளர். இலக்கிய பத்திரிகை எனப்படும் சிறுபத்திரிகை வட்டாரத்தில் இவர் பிரபலம். அங்காடித்தெரு படத்திற்கு இவர்தான் வசனம் எழுதியிருக்கிறார். மேலும் 3 படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். இவருக்கு கம்யூனிசம் பிடிக்காது என்பதால்தான் அவர் எழுதிய இந்தப்படத்தை வினவு வேண்டுமென்றே விமரிசிக்கிறது என்பது நண்பர் கொசுவின் குற்றச்சாட்டு.
வினவை தினசரி படிக்கும் எளியவரான ஹதர் அலிக்கு ஜெயமோகன்யார் என்று தெரியவில்லை. ஆனால் வினவை எப்போதாவது படிக்கும் கொசுவுக்கு இந்தப்பதிவு ஜெயமோகனை விமரிசனம் செய்வதற்காக எழுதப்பட்டதாக தோன்றுகிறது. எனில் வினவு சரியானவர்களால்தான் அங்கீகாரம் பெற்றிருக்கிறது என்று ஒரு மகிழ்ச்சி. நன்றி ஹதர் அலி.
கொசு அவர்களே, படத்தின் விமர்சனத்தின் முடிவில்தான் ஜெயமோகன் வருகிறார் அதுவும் இயக்குநரின் பார்வையில் பல தவறுகள் இருப்பதால் ஜெயமோகனது வசனத்தை பற்றி தனியாகஎழத தேவையில்லை என்றாலும் சில சாம்பிகள் என்றுதான் எழுதியிருக்கிறோம். ஜெயமோகனுக்காக இந்த விமரிசனத்தை எழுதவில்லை என்பது ஜெயமோகனது பத்தியை நீக்கவிட்டுப்பார்த்தால் கூட புரிந்து கொள்ளலாம். முதல் தலைமுறை வறியவர்கள் படித்து பொறியாளர்களாகியிருக்கலாம். இன்று நடுத்தர வர்க்கமே அப்படி படிக்க வைப்பது சிரமம் எனும் போது வறியவர்கள் எப்படி முடியும்?
ஆனால் ஒன்று தெரிகிறது. இந்தியாவில் ஏழைகள் பெரும்பான்மாயனவர்களாக இருப்பதற்கு காரணம் தங்களது பிள்ளைகளை டாக்டராகவோ, இன்ஜியனராகவோ படிக்க வைக்காமல் வாழ்க்கையை வீண்டித்து விடுகிறார்கள் என்பதுதான் உங்களைப் போன்ற நடுத்தர வர்க்க அப்துல்கலாம் சுயமுன்னேற்ற சங்கத்தின் கண்டுபிடிப்பு. இதைவிட ஏழைகளை யாரும் இழிவுபடுத்த முடியாது.
//அங்கே வேலை பார்க்கும் பெரும்பாலான சுயசாதி ஊழியர்கள் என்ன பிரச்சினை வந்தாலும் நிர்வாகத்தை காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என்பதை ஒரு சொந்த அனுபவத்தோடு ஒரு நண்பர் சொன்னார். //
யார் எதை சொன்னாலும் நம்பும் அப்பாவி நம்ம வினவுதான்…..
//அங்காடித் தெருவுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று பலர் நினைக்கலாம். சில மேதைகள் படம் பார்த்த எழுச்சியில் கம்யூனிஸ்டுகள் சரவணா ஸ்டோரில் ஏன் சங்கம் கட்டவில்லை என்று அதிகார தோரணையில் கவலைப்படுகிறார்கள். கஷ்டப்படும் மக்களுக்காக கம்யூனிஸ்டுகள் மட்டும்தான் சங்கம் கட்டவேண்டும் என்பதில்லை. அங்காடித் தெருவுக்காக மனிதாபிமானத்தை சிரமப்பட்டு நினைவு கூறுபவர்களும் அதைச் செய்யலாம்.//
ஆமாமா! அவரு செய்யலாம்…. இவரு செய்யலாம்… நாங்க பேச மட்டும்தான் செய்வோம். மீறி போன நல்ல குறை சொல்லுவோம். இன்னுமா எங்களைஎல்லாம் நம்புரீக?
//சரவணா ஸ்டோரில் தொழிற்சங்கம் கட்ட முடியாது என்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.//ரெண்டு மட்டும் தானா? மத்த உண்மையெல்லாம் சொல்றது யாரு?//ஒன்று சாதிப்பற்றும், சொந்த வாழ்க்கைக்கையின் சிரமங்களும் ஏற்படுத்தும் அடிமைத்தனம்.//ஏ இங்க பாருங்கப்பு! தமிழ் நாட்டுஅல மத்த எல்லா கம்யூனிஸ்ட் சங்கத்துலயும் ஒருத்தர்கூட சாதிப்பற்று இல்லாம இருக்குற உண்மைய….. வினவு உண்மையில அப்பாவி தாம்லே!// இரண்டு இத்தகைய கடுமுழைப்பு வேலை செய்யும் தொழிலாளிகள், பொழுது போக்கு என்பதற்கே வாய்ப்பற்ற நிலையில் தொழிற்சங்கம் என்ற பணிக்கு சமூக நேரம் ஒதுக்க முடியாமல் இருக்கும் யதார்த்தம்.//தொழிற்சங்கம் விஜய் படத்தைவிட மட்டமா? ஐயோ ஐயோ! எங்க பொய் சொல்றது இந்த கொடுமைய? அப்பாடா. ஏதோ இவங்களையெல்லாம் தொழிலாளிகள் ஒத்துகிட்டிகளே.. பெரிய மனசுதான். ஏன் ஒரு தொழிற்சங்கம் அமைக்கலேன்னு கேட்டதுக்கு பல உண்மைகள சொன்ன வினவு வாழ்க!
எனத்தையா சொல்ல வர்ற .ஒன்னுமே புரியலே குருவி படம் பார்த்த மாதிரி இருந்தது.
I am from a small village in Tirunelveli and from a middle class family. My father was a driver. Still he managed to give me and my two brothers very good education. I did my BE and ME in Anna University and my brothers also did their engineering in very good colleges. Every parents dream to give their children a good education and better life. If you get very good marks (my pcm was 198 and entrance score was 48), definitely you can afford engineering degree with less price.
உங்கள் அலசல் விழைவுகளில் கவனம் செலுத்தி நிற்கின்றது. அதுவே தேவையும் ஆகின்றது. ஆனால் இங்கே ரசிப்புத் தன்மையில் திருப்தி இருக்கின்றது அதனால் நீங்கள் கூற முற்படுவது பிழை என்று கருதப்படுகின்றது. அங்காடித்தெரு பல்வேறு விதமான அவலங்களை பதிவு செய்ய முற்படுகின்றது. பிதாமகன் சுடுகாட்டில் பிணம் எரிப்பவனின் வாழ்வை பதிவு செய்ய முற்பட்டது. நான் கடவுள் பிச்சைக்காரர்களின் வாழ்வை பதிவு செய்தது. இவ்வாறு பல முயற்ச்சிகள் தமிழ்சினிமாவில் உணர்வுபூர்வமாக நடக்கின்றது. அது நல்ல விசயம். ஆனால் இவைகள் ரசிப்பதற்காகவா பதிவு செய்யப்படுகின்றது இல்லை மாற்றங்களை செய்யவேண்டும் என்பதற்காக பதிவுசெய்யப்படுகின்றதா? நான் கடவுளுக்கு பிறகு பிச்சகைகாரர்களின் வாழ்வில் மாற்றம் என்ன? பிதாமகனுக்குப்பிறகு பிணத்தை எரிப்பவனின் வாழ்வில் மாற்றம் என்ன? அங்காடித் தெருவிற்கு பிறகு ஜவுளிக்கடை கொத்தடிமைகளின் வழ்வில் நிகழப்போகும் மாற்றம் என்ன? படத்தை பார்த்து பாதிக்கப்பட்டவர்கள் பிச்சைக் காரனுக்கு சில்லறை போடலாம். பிணத்தை எரிப்பவனுக்கு ஐந்து ருபாய் கொடுக்கலாம். ஜவுளிக்கடை கொத்தடிமைகளுடன் முகம் சுழிக்காமல் தன்மையாக பேசலாம் ஆனால் அவர்கள் வாழ்வின் மாற்றங்கள் என்ன நிகழும்?
மாற்றங்களை அலட்சியப்படுத்தும் காட்சியமைப்பைக்கொண்ட இது போன்ற சினிமாக்கள் கடுமையான விமர்சனத்துக்கு உட்பட்டவையாகவே இருப்பது அவசியம். ஏழைகளின் வாழ்வை வேதனையை காட்சிப்படுத்தி அதை ரசிப்பது காசு சம்பாதிப்பது என்பதில் 90 வீத மூச்சை கொண்டுள்ளது இப்படியான படங்கள். ஆனால் இங்கே உணர்ச்சிவசப்படும் காட்சிகள் ஏதோ மாற்றங்கள் நிகழ்வதற்கான ஆரம்பமாக சித்தரிக்கப்படுகின்றது. வெறும் உணர்ச்சியை வைத்தும் அழும் கண்ணீரை வைத்தும் ஒரு கிலோ அரிசி கூட வாங்க முடியாது அதைக் கடந்த அறிவு பூர்வமான சிந்தனைகளும் செயற்பாடுகளும் போராட்ட குணங்களை வளர்த்தெடுப்பதும் மிக அவசியமாகின்றது. ரசிப்புக்கு தீனியாக மட்டும் வாழ்வின் வேதனைகள் அமைய முடியாது. இந்தப் படத்தை பார்த்து பாதிக்கப்பட்ட எத்தனைபேர் இந்த தொழிலாளர்களுக்கு ஒரு சங்கம் வேண்டும் அதனூடாக தங்குமிட வசதி மற்றும் துஸ்பிரயோகங்கள் ஊதியங்கள் ஓய்வுநேரம் போன்றன கவனிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கத் தயார்? இதே போற்று சுடுகாட்டில் பிணமெரிப்பவனுக்கான கொளரவம் பிச்சைக் காரர்களுக்கான வாழ்வுக்காக போராடத் தயார்? வேண்டாம் அது சம்மந்தமான முயச்சிக்கான முன்னோட்டத்திற்கு தயார்? எதுவும் இல்லை. நீங்கள் பிதாமகனின் விக்கிரமுக்கு பின்னால் செல்லத் தயாராக உள்ளீர்கள் பாலாவுக்கு பின்னால் செல்லத் தயாராக உள்ளீர்கள் ஆரியாவுக்குப் பின்னால் வசந்தபாலனுக்குப் பின்னால் கனிக்குப் பின்னால் மகேசுக்குப் பின்னால். அவர்களை தோழில் தூக்கத் தயார். உங்கள் உழைப்பின் பகுதியை கொடுத்து ரசித்து அவர்களை முதலாளிகள் ஆக்கத் தயார் ஆனால் வாழ்வின் வேதனைகளை துடைக்கவும் அதற்காக முயற்ச்சிக்கவும் தயாராக இல்லை. மாற்றங்களை ஏற்படுத்தத் தயாராக இல்லை. அவல வாழ்வும் அதன் காட்சிப்படுத்தலும் அதன் ரசிப்புத் தன்மையும் மேலும் ஒரு அவலத்தை நோக்கி செல்லும் போது விமர்சனங்கள் அவசியமாகின்றது. வினவின் இந்த விமர்சம் வசந்தபாலனுக்கு எதிரானது அங்காடித்தெருவுக்கு எதிரானதாக இல்லை மாறாக இந்தக் காட்சியினூடாக எட்டப்படவேண்டிய இலக்கை துல்லியமாக சுட்டிக்காட்டுகின்றது. வாழ்த்துக்கள்.
வறுமையை மரணங்களுடனும் மேலதிகமான துயரங்களுடனும் தான் சொல்ல வேண்டிய நிலையில் இயக்குனர் உள்ளார் காரணம் ரசகனின் மனநிலை அவ்வாறு வளர்த்தெடுக்கப்பட்டுவிட்டது? துஸ்பிரயோகங்கள் காதலுடன் தான் சொல்லப்படவேண்டும்? இவைகளை கடந்து செல்வது அவசியமாகின்றது. கனியை மகேஸ் காதலிக்கவில்லையாயின் அவள் துன்புறுத்தப்படும் போது அவனும் ஒரு பார்வையாளனே இல்லை துன்புறுத்தப்பட்டதால் காதலுக்கு ஒரு அடித்தளமே என்பது பரிதாபத்துக்குரியது. கொடுமைகளை கண்டு பார்த்துக்கொண்டு நிற்கவேண்டும் அமைதியாக நிற்கவேண்டும் கீரோ ஒருவனே தட்டிக்கேட்பான் பெரும்பாலும் அந்தத் தட்டிக்கேட்டலுடன் காதல் சம்மந்தப்பட்டிருக்கும். இது எம் ஜி ஆர் காலத்திலிருந்தே இருக்கும் ஒன்றுதான். ஒருவன் விபத்துக்கு உட்பட்டு துடித்துக்கொண்டிருக்கையில் அவனை காப்பாற்றினால் கோர்ட் கேஸ் பொலீஸ் என்று ஆகிவிடும் என்று சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பார்கள். முயற்சி எடுத்தால் காப்பாற்றக் கூடிய உயிராக இருந்தாலும் அமைதியாக நின்று கொன்றுவிடுவார்கள். சமீபத்தில் ஒரு போலீஸார் கூட இவ்வாறு உதவியின்றி இறந்த கொடுமையான காட்சியை பார்க்க நேர்ந்தது. ஜவுளிக்கடைக்குள் இதே நிலமை தொடர்கின்றது. அன்று தொடக்கம் இன்றுவரை மனிதனின் இயல்பான போர்க்குணத்தை முடமாக்கும் செயற்பாடே இந்தப்படத்தின் மிகப்பெரிய பலவீனம். வறுமையை காரணம் காட்டி கடவுளை காரணம்காட்டி அர்த்தமற்று சகித்துக்கொள்வது படத்தில் மட்டுமல்ல ரசிகனிடமும் முழுமையாக உள்ளது. அதனால் தான் உங்களால் நல்ல படம் அருமையான படம் தரமான படம் என்பதோடு நின்றுவிட முடிகின்றது. நல்ல வேதனை அருமையான துஸ்பிரயோகம் தரமான கொடுமைகள். காசுகொடுத்துப் பார்த்ததற்கு பெறுமதியானது. அடுத்து எந்திரனில் கவனம் திரும்புகின்றது. அங்காடித்தெரு அப்படியேதான் இருக்கும். இயக்குனர்கள் வினயோகஸ்தர்கள் நடிகர்கள் அண்ணாச்சிகளாக்கப்படுவார்கள். முதலமைச்சரும் ஆக்கப்படுவார்கள். ஓ.. ரசிகனே !
விமரிசனத்தின் இதயத்தைப் புரிந்து கொண்டு அதை மேலும் விரிவுபடுத்தியமைக்கு நன்றி நண்பரே!
வினவின் இதயத்தில் குடி கொண்ட kvm அவர்களே வாழ்க வாழ்க.
good thought
ஆனானப்பட்ட வினவிலிருந்தே மிகக்குறைந்த எதிர்மரை விமர்சனங்கள் பெற்றதர்காக வாழ்த்துக்கள் வசந்த பாலனுக்கு…
நம் இணையதளத்தில் இருக்கும் “மாற்று சினிமா” என்ற மெனு ஒரு நூலின் இணைப்புக்கு செல்கிறது. அன்நூலில் திரைப்படங்கள் தொடர்பான சரியான விமர்சனங்கள் இருந்தாலும் மாற்று சினிமா எப்படி இருக்க வேண்டும். அதற்கு என்ன முயற்சிகள் எடுக்க வேண்டும். இது போலான கருத்துக்கள் அவ்வலவாக இல்லை. ஆதாலால் அடுத்த பட விமர்சனத்துக்கு முன்னதாக தாங்கள் அதற்கு சரியான கட்டுரையை வெளியிட்டால் நலம் என கருதுகிறேன்.
ஒரு நல்ல படத்துக்கு இப்படி ஒரு கொடுமையான விமர்சனம் ..துக்ளக் பத்திரிகை அதிகமா படிப்பிங்களோ …ரொம்ப குழப்பிட்டீங்க
என்ன கொடுமை சரவணன்.!! எதோ கொஞ்சமாவது ஒரு நல்ல படத்தை பாராட்டி இருக்கலாம். இதுல போய் உங்களின் முற்றிய அறிவை காட்டியது ரொம்ப அதிகம். நீங்க சொல்ற மாதிரி படம் எடுத்தால், அதுக்கு பெயர் டாகுமெண்டரி படம். அதை பற்றி நீங்கள் பேசி எவ்வளவு கிலாகிதாலும், அதை பார்கவோ, உங்களின் விமர்சனத்தை படிக்கவோ ஆளிருக்க மாட்டார்கள். இந்த மட்டில் தமிழ் படம் வந்ததை வரவேற்போம்!!
ஒருவேல் இவங்க உக்கார்ந்து யோசிப்பாங்களோ…
அங்காடித் தெருவின் ஆரம்பக் காட்சிகளைக் கூட பலர் டாகுமெண்டரி போல இருப்பதாக சொன்னார்கள். ஆனால் இந்தப்படம் விவரங்களை ஆவணங்களாக சேகரித்துவிட்டு அதை செயற்கையாக இணைத்து அதில் ஒரு காதல் கதையை எழுதியிருக்கிறது. விவரங்களை இயற்கையாக இணைத்து ஒரு அழுத்தமான கதையை எழுதியிருக்கலாம் என்பதே விமரிசனம்.
சொல்றது ரொம்ப சுலபம் செய்து கட்ட வேண்டியது தானே, டெண்டுல்கர் நல்ல விளையாடல நு சொலுறது விட அத ஆடி பார்க்கணும், அவ்வளவு அக்கறை இருந்தாத் நீர் ஒரு சின்ன குறும் படமாவது எடுக்க வேண்டியது தானே, அவர் காதலை திணித்தார் என்பது சின்ன குழந்தைக்கும் தெரியும், அப்படி இருக்கு தமிழ் சினிமா இல்லேன்னா ப்ரோடுசெர் காலி, தியட்டர் காலி , எப்படி அனைவருக்கும் கொண்டு சரக முடியாது, உன்னை போன்ற மேதவைவி எழுத்துகளை படிக்காத எங்க அம்மா, மாணவி எல்லாம் இந்த படத்தை பார்த்து அலுத்து பல நட்டகல் வேதினை பட்டு எப்படியும இருக்க என்று எப்போது அனைவர்க்கும் குறிப்பாக கோபமாய் பேசும் கடைகர்கள் மெது ஒரு மரியாதையை வந்து இருக்கு, முதல தளி உட்காந்து ஓசி, தன புடிச்ச முயலுக்கு முன்று கால்னு இருகதிங்க
சொந்தமா காசு போட்டு படம் பன்னவனுக்கு தான் தெரியும் அதோட அருமை. இவங்கள மாதிரி ac ரூம்ல ஒக்காந்துகுனு ஒடம்பு நோவாம கட்டுரை எழுதுறவங்களுக்கு எங்க தெரியும்.
நல்ல பதிவு , ஆனால் இந்த முதலாளிகளை தவிர பெரிய முதலாளிகளை விமர்சனம் செய்திருந்தால் முழுமை பெற்றிருக்கும்
மனிதர்களிடம் உள்ள குருரம் அ.தெரு வின் விமர்சனங்களில் தெரிகிறது.இது ஒரு சமுகத்தின் மிக முக்கிய பிரச்சனைய,வெயிலில் வெந்து எடுத்து அ.தெரு மழையில் நனைய வைக்கிறார். 20 ஆண்டுகள் எனக்கு தி.நகர் பரிச்சயம் உண்டு.ஏறக்குறைய 25000 பேர் இப்பகுதியில் பணிபுரிகின்றனர். ச.ச ஊழியர்கள் தினசரி கடையில் வீணாக்கும் பொருட்கள் பல ஆயிரங்களை தாண்டும். மேலும் பாத்ரூம் அதிக நேரம் இருக்கும் பெண்களையும் பார்த்ருக்கிறேன்.No Vacancy போர்டுகள் மாட்டப்பட்ட பழைய படங்களை நாம் பார்த்திருப்போம். இன்று இப்பகுதியில் உள்ள வேலை வாய்ப்புகள் அதிகம். ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் பணிபரியும் ஊழியர் எண்ணிக்கை எவ்வளவு? ஒரு கொடி நட முடியவில்லை அங்கு.மேன்சன்களில் மெய்ந்து நள்ளிரவில் திரும்பும் குடி மன்னர்களாகிய இயக்குனர்களின் மூளையில் உதித்ததுதான் அ.தெரு. சாருவின் விமர்சனம். மற்றும் இந்த விமர்சனம் நன்று.கொஞ்சம் மார்க்சியம், கொஞ்சம் பார்ப்பனிய எதிர்ப்பு,கொஞ்சம் அழகியல்,வலிந்து திணிக்கப்படுதல். போன் மிக்சிங் சினிமா தற்போது அதிக அளவில் வந்து கொண்டுருக்கின்றன. சினிமாவில் வாய்ப்பை தேடி அலையும் வ.கர்த்தாக்களூக்கு இது ஒரு சாட்டையடி.
என்ன சொல்லப்படவில்லை என்பதைப் பார்ர்க்கும் பூதக்கண்ணாடியை கீழே வைத்துவிட்டு, என்ன சொல்லியிருக்கிறார்கள், அதன்வழி என்ன நாம் தெரிந்துகொள்கிறோம், இயக்குனர் எதை வெளிப்படுத்தவிரும்புகிறார் என்று பார்ப்பதே நல்லது.
சமகால தமிழகத்தின் ஏழ்மையும் வறுமையும் பற்றிய செய்தியை எந்த ஒரு இயக்கமும், அமைப்பும், தத்துவமும் வெளியே கொண்டுவந்ததை விட ‘அங்காடித் தெரு’ கொண்டுவந்துவிட்டது. 65 விழுக்காடு மக்களின் ஓரிரண்டு வேளை உணவிற்கான விலை என்பது பாலியல் வன்கொடுமை, அவமானம், அடி உதை, பயம், தவிப்பு, ஏக்கம், ஏமாற்றம். இதனை மிகத் தெளிவாக இந்தப்படம் சொல்கிறது. தமிழ் நாட்டு மக்களின் அரசியல் பொருளாதாரம் எப்படி இருக்கிறது என்பது எந்த ஏடும் வெளிக்கொண்டுவராத, கொண்டுவந்து காட்டமுடியாத ஒன்றை ‘அங்காடித் தெரு’ என்ற ஒளி ஒலிக்காவியம் நம்முன் கொண்டுவந்து காட்டுகிறது. இந்தப்படத்தை தமிழகமெங்கும் கொண்டுபோய் காட்டவேண்டும். விவசாயம் நசிந்து நகரத்தில் கிடைக்கும் பிச்சைக்காசிற்காக நமது மக்கள் படும் கொத்தடிமைக் கொடுமையை மிக மிகத் தெள்ளத்தெளிவாகக் காட்டியிருக்கின்றது. வசந்தபாலனுக்குப் பாராட்டுக்கள். தங்கள் ஊர்மக்கள் என்று அண்ணாச்சி போன்ற முதலாளிகள் சாதி, மண்வாசனை அடிப்படையில் தமிழக மக்களின் வறுமையை ஏழ்மையைப் பயன்படுத்தி கல்லாகட்டும் கொடுமையை சிறப்பாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார். ஒரு பார்ப்பன குடும்பத்தைச் சேர்ந்த பாப்பாத்தி, தன் வீட்டில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை, அவள் பருவம் எய்திய நிலையிலும் படுத்தும் கொடுமையை வெளிக்கொண்டு வந்து, பார்ப்பன சாதித்திமிறையும் தொலுரித்துக் காட்டுகிறார் இயக்குனர். அதற்கே இயக்குனருக்கு 100 மதிப்பெண் போட வேண்டும். ஒரு படைப்பு என்கிற வகையில் மிகச்சிறந்த திரைக்கதை. நுண்கலை என்கிற வகையில் ‘கனி’யின் நடிப்பு சம கால கலைஞர்களுள் மிகச் சிறந்த தெரிவு. நமது கண்முன் நமது மக்களின் வறுமையை ஏழமையைக் காட்டிய வசந்த பாலனுக்கு நன்றி. இது உண்மையில் புரட்சிகரமான விசயம். பூதக்கண்ணாடிகளே உங்கள் கண்களை நம்புங்கள்.
“என்ன சொல்லப்படவில்லை என்பதைப் பார்ர்க்கும் பூதக்கண்ணாடியை கீழே வைத்துவிட்டு, என்ன சொல்லியிருக்கிறார்கள், அதன்வழி என்ன நாம் தெரிந்துகொள்கிறோம், இயக்குனர் எதை வெளிப்படுத்தவிரும்புகிறார் என்று பார்ப்பதே நல்லது.”
நண்பரே அருமையாக சொன்னிங்க…
நண்பரே வினவு…இந்த உலகத்தை அப்படியே புரட்டிப் போட்டுற முடியும்னு நினைக்கிறீங்களா? இந்த முதலாளித்துவமும், தொழிலாளித்துவமும் பெருகிப் போய் ஒரு எல்லையைத் தாண்டி விட்டிருக்கிறது. அதை அப்படியே ஆழம் ஆய்ந்து முழுமையாக நீக்குவதென்பது சாத்தியமற்ற ஒன்று. அங்காடித் தெரு ஏற்படுத்திய பாதிப்பு சில மணித் துளிகள் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இந்தப் படத்தைப் பார்த்து விட்டு பின்னர் ரெங்கநாதன் தெருக் கடைகளில் நுழையும் எவருக்கும் அங்கிருக்கும் தொழிலாளிகள் மீது ஒரு பரிதாபம் ஏற்படும். இது சில மணித்துளி பாதிப்பு அல்ல. நிரந்தரமான் ஒரு பாதிப்ப்பாக இருக்கும். இப்போதைய நிலையில் வறுமையில் நடக்கும் இது போன்ற நிகழ்வுகளைப் படமாக்கி வெளிச்சம் போட்டு காட்டிய வசந்த பாலனுக்கு என் வாழ்த்துக்கள்………..
சரி வெளிச்சம் போட்டுக்காட்டியாச்சு… அப்புறம் ?
சரி…ஒரு சூப்பரா கட்டுரை எழுதியாச்சி, அத ஆஹா ஓஓஹோ ன்னு பாராட்டி பின்னூட்டம் போட்டாச்சு. அப்பரம்?
முதலாளித்துவம் கேள்விப்பட்டிருக்கோம்
அது என்ன தொழிலாளித்துவம் ??
அது தாங்க அடிமைத்தணம்
புலவன் புலிகேசி
உங்கள் வாதப்படி இந்த உலகத்தைப் புரட்டிப் போட முடியாது என்றால் சரவணா ஸ்டோரின் சிப்பந்திகளின் அவலத்தையும் அண்ணாச்சியின் கொட்டத்தையும் மாற்ற முடியாது என்றாகிறது. அப்போது நாம் கொஞ்ச நேரம் சோகப்பட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவோம், சரிதானே?
//இறுதியாக இந்த விமரிசனங்கள் இருந்தாலும் அங்காடித் தெருவை அனைவரும் பார்க்க வேண்டிய படமென்றே கருதுகிறோம். குறைந்த பட்சம் தமிழக வாழ்க்கையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் சரவணா ஸ்டோர் என்ற பேரங்காடியின் பின்னே இருக்கும் உழைப்பாளிகளது வாழ்வை காட்ட முனைந்திருப்பது நிச்சயம் வரவேற்க்கப்படவேண்டும்//
உங்களுடைய கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியது. ஆனால் என்னுடைய கேள்வி என்னவென்றால், திரைப் படத்தின் மூலம் மட்டும் இந்த முதலாளித்துவக் கொடுமைகளை கிள்ளி எறிய முடியுமா? திரைப்படம் அதில் பங்கு வேண்டுமானால் வகிக்கலாம். அந்த வகையில் அங்காடித்தெரு தன் பங்களிப்பைத் தந்திருக்கிறதே…மேலே நீங்கள் சொல்லியுள்ள அளவிளாவது அந்த முயற்சி வெற்றியும் பெற்றிருக்கிறதே…
வினவு அவர்களே. உங்களோட கட்டுரை தலைப்பு ரொம்ப நல்ல இருக்கு. “அங்காடித் தெருவில் சொல்லப்படாதது என்ன?”//
அருமையான தலைப்பு. நீங்க என் ஒரு படம் எடுத்து உங்க மூலையில உத்திகறது எல்லாம் கொட்டகூடாது? இல்லேன்னா ஒரு புது கட்டுரை எழுதி அதுல எல்லா இயக்குனர்களும் உங்களடிம் படத்தை காட்டி உத்திரவு கிடைத்த பின் தான் வெளியிடவேண்டும் என்று சொல்லிவிடுங்கள். இன்னும் சூப்பராக இருக்கும். அப்புறம் மணியும் நீங்களும் பேசிகுறது கலைஞரோட கேளிவியும் நானே பதிலும் நானே போல அருமையாக உள்ளது. continue தி குட் வொர்க்.
mooto
நீங்க நல்லவரா, கெட்டவரா, அறிவாளியா, அப்பாவியா? எப்போவாவது வாரீங்க, என்னமோ சொல்லுறீங்க, என்னதான் உங்க பிரச்சினை? கொஞ்சம் மனந்திறந்து பேசுங்க ஐயா!
இந்தப் படத்தில் சொல்ல முயற்சித்திருக்கும் கருத்தும் தேர்ந்தெடுத்த கதைக் களமும் நன்றாக இருப்பினும், ஒரு முழுமையான திரைப்படமாக “அங்காடித் தெரு” எனக்குத் திருப்தி அளிக்கவில்லை. அதற்கான காரணங்கள் இவ்விமரிசனத்தில் விளக்கப் பட்டுள்ளன. கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு படத்தைக் கண்மூடித்தனமாகப் புகழாமல், சொல்லியிருக்கும் விதத்தில் அக்கருத்தே நீர்த்துப் போயிருப்பதை சுட்டிக் காட்டியுள்ள வினவுக்குப் பாராட்டுகள்.
தோழர் வினைவுக்கு பட விமர்சனத்தையும் அதனுடன் கலந்து பிற நிகழ்வுகளை இனைத்து எழுதி இருப்பது படிக்கும் போது மிகுந்த சலிப்பையும் சோர்வையும், பல இடங்களில் குழப்பமே நிலவுகிறது இதனால் படிக்கும் போது எங்கே சக பதிவர் உண்மைத்தமிழனுக்கு போட்டியாக இந்த பதிவு மிக பெரியதாக எழுதியதாக தோன்றுகிறது.
எனவே வினைவு மக்களின் நலனைவும், காயும் வெய்யிலின் நிலையும் கருத்தில் கொண்டு இனிமேல் பதிவில் தேவையான மாற்றத்தை செய்யுங்கள்.
புதுவை சிவா, ஒரு நல்ல படத்திற்குத்தானே இப்படி நீண்ட விமரிசனம் எழுத முடியும். அசலுக்கோ, வேட்டைக்காரனுக்கோ இது தேவையில்லையே? நீங்க கொஞ்சம் வினவோட மத்த கட்டுரைகளையும் படிச்சு டிரெயினிங் எடுத்துக் கொண்டால் இந்த கட்டுரையெல்லாம் சுலபமாக படிக்கலாம்.
தோழர் வினவு தங்களில் பல பதிவுகளை நான் தொடர்ந்து படித்து வருகிறேன் இதுநாள் வரை எந்த பதிவும் இதுபோல் இருந்தது இல்லை எனவேதான் அப்படி பின்னோட்டம் எழுத நேர்ந்தது தவறு இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி.
புதுவை சிவா,
நீங்கள் கிண்டலாக எழுதியிருப்பதாக நினைத்து அப்படி எழுதியதற்கு வருந்துகிறோம். உங்கள் விமரிசனங்களை விரும்பும் வித்தஃதில் எழுதுங்கள், பிரச்சினையில்லை. இந்தக் கட்டுரை புரியும் வித்தஃதில் இல்லை எனப்தை கணக்கில் கொள்கிறோம்.
“நீங்க கொஞ்சம் வினவோட மத்த கட்டுரைகளையும் படிச்சு டிரெயினிங் எடுத்துக் கொண்டால் இந்த கட்டுரையெல்லாம் சுலபமாக படிக்கலாம்.” —- வினவு அய்யா இப்படி நோகாமல் ac ரூம்ல ஒக்காந்து கட்டுரை என்கிற பேருல புரியாம எழுதுற(கிறுக்குற) உங்களுக்கே இவ்வளவு ஆணவ பேச்சு இருக்கும் (அதாங்க முதலாளி திமுரு) போது காசு போட்டு தொழில் செய்ஞ்சி வாழ்கையில முண்ணுகு வந்துருக்குற முதலளிங்கள் மட்டும் அடங்கி போகனுமா?
அவரு என்ன தப்ப சொளிடறு நல்ல இல்லை nu sonnathu தப்ப, ada kodumaiyae athai ethukukka manathu இல்லை, kobam varuthu udanae பதுலுக்கு என் எழுத்தே சொல்லிட்டிய மத்தது எல்லாம் படிஹு பாருன்னு சொல்றது உங்க பதிலே தெரியுது என்ன பரிசினை, சரி thiruthi கொள்கிரனு வருத்த பரு அட கொடுமையே ட்ரைனிங் எடுத்து குப்பையா இருந்தாலும் படிங்க நு நீங்க சொல்றது, அசல்யும் வேட்டைகரன்யும் பார்த்து ட்ரைனிங் எடுத்தல் அடுத்த பேரரசு படதைபர்கலம் என்பது போல் உள்ளது , அதுக்கு பேரரசு படம் நல்ல படம் என்று அர்த்தம் இல்லை, இதை விட நல்ல உதாரணம் இருக்க முடியாது, உங்க கட்டுரையில் குறை சொன்னாலே நோவுது, ஆனா இவரு மத்த படாத திருதுவரம் அதை அவங்க சந்தோசமா சரிங்க அப்பிசெர் நு எடுத்துக்கணும் என்ன உலக நீதி இது
//இறுதியாக இந்த விமரிசனங்கள் இருந்தாலும் அங்காடித் தெருவை அனைவரும் பார்க்க வேண்டிய படமென்றே கருதுகிறோம்//
இதைத் தான் பார்ப்பவர்களிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.
வினவின் விமர்சனத்தை குறைந்தபட்சம் நிதானமாக இரண்டு முறையாவது படித்தால் தான்… மண்டையில் ஏறுகிறது. படித்துவிட்டு என் கருத்தை இடுகிறேன்.
உங்களை மாதிரி நொந்து போனவர்கள் மட்டும் தான் இரண்டு முறை படிக்க முடியும் என்று நினைக்கிறன்.
நொந்தகுமாரா.. இதை இரண்டு முறை படித்த எனக்கு ஒரு யாருமே மறுக்க முடியாத உண்மை புரிகிறது. இது ஒரு cheap ஆன விளம்பர techinique . எப்படி விளம்பரத்தில் மெகா சூப்பர் offer என்று சொல்லி சின்னதா ஒரு (*) போட்டு எங்கோ ஒரு மூலையில உண்மைய சொல்லுவாங்களே அந்த மாதிரி தான் படு சீப் கட்டுரை.
வெட்டிபையா எனும் மூட்டூ, இந்தக் கட்டுரை எப்படி ‘சீப்’ ன்னு விளக்கலையே?
வினவு (?) மொதல்ல இது அங்காடி தெரு பட விமர்சனமா? இல்ல உங்களோட தொழிலாளர் வர்கத்துகாக நீங்கள் குரல்
கொடுக்கும் கட்டுரையா? கொஞ்சம் சொல்லுங்கள்.
வெட்டி மூட்டண்ணே, இந்தக் கட்டுரை விமரிசனமோ, இல்லை தொழிலாளி வர்க்கத்திற்கு குரலாகவோ இருக்கட்டும். எழுதிய விமரிசனத்தைப் பற்றி முதலில் எழுதுங்கள். அப்புறம் நீங்க யாருன்னு சொல்லவே இல்லையே? நீங்களும் ஏதாவது தொழில் செய்யும் முனைவரா?
வினவு சாரு, நீங்க எழுதுன கட்டுரை உங்களுக்கே
தெரிலய எத பத்தி எழுதுநோமுன்னு. அப்பரம் நான்
என்னத்த எழுதறது. ஓகே உங்களுக்காக உங்க திருப்திக்காக வேணுமுன சொல்லுறேன் ரொம்ப அருமையான கட்டுரை.
அப்பரம் அரண்டவன் கண்ணனுக்கு இருண்டதெல்லாம் பேய். அப்படின்னு ஒரு பழமொழி இருக்கு. அதுக்கு பொருத்தமான ஆளு
நீங்கள்தான் போல. உங்கள பத்தி எதாவது தப்பா சொன்னா
உடனே நீங்க அவங்கள மொதலாளி , ஆளும் வர்க்கம் போன்ற ராஞ்சிக்கு நெனைகுரீங்கள். நானும் ஒரு தொழில் செயுறவன் தான். ஆனா உங்கள மாதிரி அடுத்தவன் உழைப்பை பயன்படுத்தி
ஆதாயம் தேடுறவன் இல்லை.
வினவு உங்களுக்கு இது அழகா??? எருமை அண்ணன் முட்டாஊவிடம் போய் விவாதிக்கலாமா ???
முட்டாஊ ஒரு நாள் முக்கி முக்கி பின்னூடம் இடும் வேளையில் அவரது மூளை மண்டையிலிருந்து நழுவி அவருடைய ஆசனவாய்கருகில் வந்துவிட்டது.. அண்ணன் முட்டாஊ அமர்ந்துகொண்டு கம்பீட்டர் பார்ப்பதால் மூளை நசுங்கி அதன் செயல் திறன் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலை்யிலேயே இங்கே பின்னூட்டம் இடுகிறார். அப்படிப்பட்டவரிடம் போய் விவாதிப்பது முதல்நாள் கருவிடம் விவாதிப்பதற்கு சமம். இனிமேல் அப்படிச்செய்யாதீர்கள்… pick someone of your own size.. okay !
குறி அவர்களே, அடுத்தவன் ஆசன வாய் தான் உங்களுக்கு மிகவும் பிடிக்குமோ? உங்களை பற்றிய உண்மையை உங்கள் வாயாலே சொன்னதற்கு நன்றி.
முட்டாஊ அண்ணே, வாயால பேசுனா பதில் சொல்லலாம்.. பின்வாயால பேசுனா??? — கிழிச்சுற வேண்டீதானே???.. அதான் உங்களுக்கு நடந்துகிட்டிருக்கு.. வலிக்குதுன்னா சொல்லுங்க…
அடேய் வாய் விரும்பி , உன்னோட வேலைய ஒழுங்க பாரு குறி தம்பி, உனக்கு தான் எங்கயோ
வலிக்குதுன்னு நெனைக்குறேன். வினவு சொன்னதுக்கு பின்னூட்டம் போட்டா உனக்கு எங்கப்பா
வலிக்குது? வினவுகிட்டாயே சொல்லு . அவரு பெரிய வைத்தியருன்னு கேள்வி பட்டேன்.
மிகப் பிடித்திருக்கிறது இந்தப் பதிவு. வித்தியாசமான பார்வை. எதார்த்தமான படைப்புகளை இன்னும் செழுமைப்படுத்தும் வழிமுறைகளாக இந்தப் பதிவைப் பார்க்கலாம்.
//. அவரை மிகையான வில்லனாக காட்டி அடைந்த நோக்கத்தை அவரைப் பற்றிய முழுமையிலேயே காட்ட முடியும் என்பதுதான் விசயம். //
சினிமா என்னும் தொழிலுக்காகச் செய்யும் தவிர்க்க முடியாத (தவிர்க்கலாமோ?) காம்ப்ரமைஸ்களோ என்றும் தோன்றுகிறது இந்த மிகைப் படுத்துதல்கள்.
வில்லனாக ஒரு தனிமனிதனை முடிந்த வரையில் வெறுக்கத்தக்க வகையில் சித்தரிக்க வேண்டும் என்ற முயற்சியில் நோக்கமும் முக்கிய பிரச்னைகளும் திசை மாறவோ, அல்லது நீங்கள் சொல்வது போல குறுகிய பார்வையிலோ அமைந்து விட வாய்ப்புகள் அதிகமாகின்றன.
என்ன இருந்தாலும் இந்த அளவு எதார்த்தம் கூடத் தமிழ்த் திரைப்பட உலகில் ஒரு பெரிய மைல் கல் தான்.
தீபா, பொதுவில் சினிமா ஃபார்முலாவுக்குள் நின்று கொண்டுதான் நமது இயக்குநர்கள் யோசிக்கிறார்கள். இந்தப்படத்தில் இது காம்ரமைஸ் மாதிரி தெரியவில்லை. இயக்குநர் தான் சேகரித்த விவரங்களை வைத்து இதற்குமேல் யோசித்திருக்க முடியாது என்றும் தோன்றுகிறது. ஆனால் அப்படி எடுக்கப்பட்டிருந்தால் அது இன்னமும் அழுத்தமான அனுபவத்தை தரும் படமாக இருந்திருக்கும். எனினும் நீங்கள் சொன்னது போல இந்தப் படத்திற்கான களமே பொதுவில் தமிழ் சினிமாவில் வருவதற்கு சாத்தியமில்லாத ஒன்றுதான்.
இதில் சொல்லாமல் விடப்பட்டது “இன்னொரு படமாகும் ” என சிம்பிளா சொல்லிடலாம்
வறுமையை மிகைப்பட சொன்னார்கள் என்பது விமர்சனத்துக்கு வகையாக உதவலாம்
ஆனால் எத்தனை படங்கள் அப்படி வருகின்றன
வறுமையில் உழல்பவர்களை பார்த்து அழவைக்க வேண்டும் என்ற நோக்கோடு எடுத்து இருப்பார்
என கூசாமல் சொல்ல முடிகிறது . அழுகை சோகம் இதெல்லாம்
வர்க்க உணர்வை எழுப்பாத வெறும் பச்சதாப உணர்வை ஏற்படுத்தும்
என சொல்கிறீர்கள்
ஒரு கதையை நிகழ்வுகளை பதிவு செய்யும் அவ்ளோதான்
புற நிகழ்வில் அந்த கதாபாத்திரத்தின் எதிர்வினையை சொல்லும்
நீங்கள் நினைப்பது போல ஒரு கதை
ஒடுக்கப்படும் ஊழியர்கள் சங்கமாக சேர்ந்து போராடுவது
என ஆரம்பித்து எடுத்தாலும் யாரும் பார்க்க மாட்டார்கள் என்பதோடு
அதுவும் இன்னொரு மிகைபடுத்தலாக அமையும்
ஆகவே ஆயிரம் விமர்சனம் எழுதுவதற்கு பதில் ஒரு படமல்ல
ஒரு கதையாவது எழுதுங்கள் வினவு தோழர்களே
உண்மையை முகத்தில் அறைவது போல
தமிழ் சினிமாவில் அழவைப்பதற்கா பஞ்சம்? அந்தக்காலத்து கருப்பு வெள்ளைப் படங்கள் முதல் இப்போதைய டி.டி.எஸ் வரை அழுகை நிறையவே இருக்கிறது. மக்கள் எல்லாவற்றுக்கும் ஒரே போலத்தான் அழுகிறார்கள். ஏன், டி.வி சீரியல்களைப் பார்த்துக்கூட அழுகிறார்கள். முதல்ல இந்த அழுகைகளை ஆராய்ச்சி செய்து விட்டு அங்காடித் தெருவுக்கு வாருங்கள்.
தவிர படம் நான் பார்க்கவில்லை என்பதால் மேலும் படம் பார்த்துவிட்டு
உங்கள் பதிவு பற்றி விமர்சனம் இருந்தால் போடுகிறேன்
ஆகா ஓகோ வென புகழ்ந்தால் பிடிக்கும் போல
பதிலில் தெரியும் கடுமை வினவு விமர்சனங்களை எதிர் கொள்ளும் விதத்துல் தெரிகிறது .
இந்த படத்தில் எது இல்லை என நினைக்கிறாரோ அது ஏன் இல்லை
என்பது அந்த இயக்குனருக்கு அந்த பார்வை இல்லை என்பதால் இருக்கலாம்
ஆனால் சமூகத்தில் இல்லாததை படம் சொல்லவில்லை அல்லது மிகை படுத்தி சொல்லவில்லை என கருதுகிறேன்
ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் போல. தனக்கு பாயாசம் வேண்டுமென்று நேரடியாகக் கேட்காமல் பக்க்த்து இலைக்கு பாயாசம் கேட்பது ரொம்ப பழைய உத்தி.
வாங்க கார்ல்மார்க்ஸ் .///ஆனால் சமூகத்தில் இல்லாததை படம் சொல்லவில்லை அல்லது மிகை படுத்தி சொல்லவில்லை என கருதுகிறேன்///.படம் மிகைப்படுத்தி சொல்லப்பட்டிருக்கிறது என்பது தான் உண்மை இத உங்கள மாதிரி பாடம் பார்த்து சொல்லவில்லை 13வருடம் ஜவுளிக்கடையில் வேலை பார்த்த அனுபவத்தில் சொல்லுகிறேன்
//ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் போல. தனக்கு பாயாசம் வேண்டுமென்று நேரடியாகக் கேட்காமல் பக்க்த்து இலைக்கு பாயாசம் கேட்பது ரொம்ப பழைய உத்தி.//
ஆகா
இங்கே வந்து உங்களிடம் தெரிந்து கொள்ள புதிதாக ஒன்றுமில்லை நண்பரே அதிகமா தலைகணம் வேண்டாம்
//13வருடம் ஜவுளிக்கடையில் வேலை பார்த்த அனுபவத்தில் சொல்லுகிறேன்//
13 வருடம் என்னங்க 50 வருட கூலி அனுபவம் எனக்கு இருக்கு
படத்தில் காட்டப்பட்டது மிக குறைவு மார்க்ஸ் பேரால் உழைப்பாளி ஆதரவு கட்சி நபர்கள் இதை அதிகம் என்பதுதான் எனக்கு உறுத்தல்
காரல்மாக்ஸ். பன்னிபயபுள்ள வந்து கூலியை வாங்கிட்டு போ என்று எவானவது கூப்புட்டிருக்கான அந்த படத்த பாருங்க ஒரு தப்பும் செய்யாம ஜவுளிக்கடைக்குள் அப்பாவியாக நூழையும் கிராமத்து இளைஞர்களை பன்னிபயபுள்ளைகளா என்று அதட்டுவது ஒவார தெரியல
வணக்கம்,
‘சம கால இலக்கிய படைப்புகளில்’ அங்காடித்தொரு-வின் திரைக்கதை மிகவும் அற்புதமானது. நகரத்திற்கும் கிராமத்திற்கும் இருக்கின்ற பொருளாதர உறவு மிகவும் தெள்ளென வெளிப்படும் வண்ணம் அமைந்திருக்கின்றது. ஒவ்வொரு முறையும் கொடுமையையும், அவமானத்தையும் எதிர்க்க நினைக்கும்போது கிராமத்தில் வீட்டில் நம்மை நம்பி வாழும் தாய், தந்தை, சகோதர சகோதரிகளின் பரிதவிக்கும் ஏழ்மையை வறுமையை நினைத்து அடங்கிப்போகும் ஒவ்வொரு இடமும் நகரம்-கிராமம் இவற்றிற்கிடையான பொருளாதார இயங்கியல் உறவு மிளிர்கிறது. இத்தகு கதையாக்கத்திற்கே வசந்தபாலனுக்கு 100 மதிப்பெண்கள். எத்தனை படைப்புகள் இப்படி வெளிவருகின்றன? சிங்காரம் சொன்னது போல சமகால தமிழக மக்கள் 65 விழுக்காட்டினரின் பொருளாதார வாழ்க்கையை யாரும் சொல்லாத வண்ணம் மனதில் பசுமரத்து ஆணிபோல பதிய வைக்கிறது திரைக்கதை. இதன் அரசியல் மட்டும் தான் அங்காடித் தெருவில் விடுபட்டிருக்கிறது. ஆனால் மற்றபடி இது சமகால தமிழ்சமூகத்தின் பொருள்முதல் இயக்கிவியலின் வரலாற்று ஆவணம். நன்றி வசந்தபாலன். பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் பணி
முரசு அண்ணே./// ஒவ்வொரு முறையும் கொடுமையையும், அவமானத்தையும் எதிர்க்க நினைக்கும்போது கிராமத்தில் வீட்டில் நம்மை நம்பி வாழும் தாய், தந்தை, சகோதர சகோதரிகளின் பரிதவிக்கும் ஏழ்மையை வறுமையை நினைத்து அடங்கிப்போகும் ஒவ்வொரு இடமும்/// அதுக்காக சூப்பர்வேஸர் கால பிடிச்சு அழுகிற அளவுக்கு மானங்கேட்டவய்ங்க கேடயாது அரிவள எடுத்து மிதிக்கிற கால வேட்டம விடமாட்டய்ங்க தென்மாவட்டகாரய்ங்க வறுமைக்கி கராணமே அவிங்களுடைய தன்மானம்தான் வசந்தபாலன் மாதிரி தென்மாவட்ட தொழிலாளிகளை கேவலப்படுத்த வேறு யாரலும் முடியாது என்பதற்காக 100மதிப்பெண் குடுங்க பொருத்தம இருக்கும்
இயல்பில், எதார்த்தத்தில் அப்படி எல்லாரும் அரிவாளை எடுத்துக்கொண்டு ஓடமாட்டார்கள். இப்படித்தான் அவமானப்பட்டு கேவலப்பட்டு அசிங்கப்பட்டு, பாலியல் கொடுமைக்கு ஆட்பட்டு கிடக்கிறார்கள். இந்த அவமானத்தைப் பொருத்துக்கொள்வது கூட தனது குடும்பத்தின் ஏழ்மை காரணமாகத்தான். எத்தனை பேர் காதலுக்காகக் கூட இந்த அவமானங்களை உதறித்தள்ளிவிட்டு வெளியே வந்து எதிர்த்து சண்டை போடுகிறார்கள். ‘யானை வாழ்கிற காட்டில் எறும்புகளும் வாழ முடியாமல் போய்வொடுமா என்ன’ என்ற ஏக்கத்தோடு தான் வாழ்க்கையோடு போராடுகிறார்கள். எனவே இந்த கிராம-நகர பொருளாதார உறவு உண்மையிலேயே சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளது. அதர்கு 100 மதிப்பெண்கள் கொடுக்கவேண்டியது தான். எத்தனை இயக்கங்களின் பரப்புரைகளும், எழுத்துக்களும் இதனை மனதில் ஆணியடித்ததைப் போல் சொல்லியிருக்கின்றன? அல்லது அவைகள் சொன்னவை மக்களுக்கு எட்டியிருக்கின்றன? தமிழ்நாட்டின் பொருளாதாரச் சூழல் எப்படியிருக்கிறது என்று ஊர் ஊராக அலைந்து திரிந்து போய் பார்க்கவேண்டியது இல்லை. இந்தப் படைப்பே தமிழ வரலாறுப் பொருள்முதல் ஆவணம்.
இது சமகால தமிழகத்தின் வரலாற்றுப் பொருள் முதல் ஆவணம். ஏனென்றால், கிராம-நகர பொருளாதார உறவின் முக்கிய பரிமாணத்தை நகரத்தில் வேலைக்குச் செல்லும் இத்தகு மக்கள் கிராமத்தில் இருக்கும் தமது குடும்பத்திற்காக படும் அவமானம், பாலியல் வன்கொடுமை பிரதிபளிக்கின்றது. தோழர், எத்தனை பேர் அரிவாளித் தூக்கிக் கொண்டு சண்டை போடுகிறார்கள். அவை விதிவிலக்குகள். ‘யானை வாழும் காட்டில் எறும்பும் வாழமுடியாமல் போய்விடுமா’ என்று நகரத்திலேயே இருந்து வாழ்க்கையில் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இது தான் இயல்பு, எதார்த்தம். அதனை அழகாக வெளிப்படுத்தியிருக்கும் ‘அங்காடித்தெருவி’ற்கு நன்றி, பாராட்டுக்கள். எத்தனை இயக்கங்கள் தாங்கள் செய்த பரப்புரை மீதும், எழுத்துக்களின் மீதும் இப்படி விவாவதம் நடந்து இருக்கின்றது. திரைப்படம் ஒரு வலிமையான மக்கள் ஊடகம் என்பதை நிருபித்திருக்கின்ற இடம் இது. அது இன்று வணிகத்தளம் என்பது உண்மையே. ஆனாலும் அதன் ஊடக வீச்சின் நிரூபணம் இங்கே மெய்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. வசந்தபாலனுக்கு 100௦௦ மதிப்பெண்கள்.
இது தென்மாவட்டக்காரர்களை மட்டும் சொல்லும் படம் என்று நினைக்க வேண்டாம். இது ஒட்டுமொத்த தமிழ்சமுதாயத்தின் இன்றைய பொருளாதார, சாதியக் கொடுமைகளின் ஒரு பிம்பம். இப்படிப்பட்ட விசயங்களை ஒரு கதையாக திரைப்படமாக வெளியிடுவதே ஒரு அரசியல். மக்களின் நிலையை மக்களே உணர்ந்துகொள்ளச் செய்யும் ஒரு பரப்புரை. இது தனியாக ஒரு அரசியலைச் சொல்லத் தேவையில்லை. இருக்கும் கொடுமைகளை வெளியே காட்டுவதே, மக்கள் உணர வெளிப்படுத்துவதே அரசியல் தான்.
///தமது குடும்பத்திற்காக படும் அவமானம், பாலியல் வன்கொடுமை பிரதிபளிக்கின்றது. தோழர், எத்தனை பேர் அரிவாளித் தூக்கிக் கொண்டு சண்டை போடுகிறார்கள்///சக தொழிலாளி சப்பாட்டு தட்ட பறிச்சதுக்கு அந்த தட்டலயே அடிக்கிற வேகம் பெருமாள் என்கிற தொழிலாளியை மழையில் புரட்டி எடுக்கிற வீரம் சூப்பர்வைஸர் என்கிற அதிகார வர்க்கத்திடம் மட்டும் கால பிடிப்பதாக எப்படி சித்தரிக்க முடிந்தது சூப்பர் வேஸர கேலி பன்னி கேனத்தனம ஒரு பாட்டு வேற உங்க பாஷையில சொன்ன அரிவாள எடுத்து வேட்டுற விதிவிலக்கு பர்ஷன் ஒருவனை வசந்தபாலன் கதையில் உருவாக்கியிருக்கலாம் அல்லவா அப்படியே மக்கள் இசைப்பாடலில் வர பாட்டு மாரி ஒரு பாடலும் வச்சிருக்கலாம் … வெட்டஅரிவாள எடட ரத்தம் கொதிக்துதட அந்த சட்டமும் சக்கரும் தடுத்த வெட்டி எறிஞ்சுடட அப்புடின்னு ஒரு பாட்டு வச்சிருந்த எவ்வளவு மக்களுட்ட போய் செர்ந்திருக்கும்
//பாலியல் வன்முறைகள் எவ்வளவு நடக்கிறது என்பதை விட அதை எதிர்த்து அவ்வப்போது பெண்கள் காட்டும் எதிர்ப்பும் வளருகிறது என்பதே முக்கியம். சரவணா ஸ்டோரில் எல்லா சூபர்வைசர்களும் அப்படி விகாரத்துடன் நடப்பவர்களாக இருக்க முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில் அதை எப்போதும் பொறுமையாக ஏற்குமளவு அந்தப் பெண்கள் அனைவரும் அடிமைகளாக இருக்க முடியாது.
படத்தில் இந்த எதிர்ப்பு பாதிக்கப்பட்ட கனியின் காதலன் என்ற முறையில் லிங்கத்திடம் இருந்தே வருகிறது. காதலித்த குற்றத்திற்காக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்வதாக இருக்கட்டும், இல்லை பெண் ஊழியர்கள் பாலியல் வக்கிரத்துடன் தண்டிக்கப்படும் சமயங்களாக இருக்கட்டும், இதை எல்லோ ஊழியர்களும் அடிமை போல ஒரு முணுமுணுப்புக் கூட இன்றி பேசா மடந்தைகளாக ஏற்றுக் கொள்வதாகவே படத்தில் வருகிறார்கள். சூபர்வைசரின் தலையில் ஒரு மூட்டையைப் போட்டு அவமானப்படுத்தும் காட்சியும், அதன் பிறகு வரும் பாடலும் இந்த பிரச்சினையை ஒரு காமடி போலத்தான் சித்தரிக்கிறது//
பணத்துக்காக பெண்கள் எதையும் தாங்கி கொள்வார்கள் என்று சொல்வதுபோல் உள்ளது . அப்படி இருக்கும் பட்சத்தில் அப்பெண் அக்கடையில் வேலை பார்த்துதான் அப்பணம் சம்பாதிக்க வேண்டும் என்று இல்லை . அவள் அதை தான் சொந்த ஊரிலேயே சம்பாதித்துக்கொள்ள முடியும் . எல்லோரையும் பணத்துக்காக கையாலகத்தனம் போன்று காட்டி ஒரு இரக்க சிந்தனையை உருவாக்கியுள்ளனர் .
//கொத்தனார் வேலை பார்க்கும் தொழிலாளி தனது மகனை பி.இ படிக்க வைக்கப் போவதாக பேசுவது அபத்தத்திலும் அபத்தம். அவரால் தனது மகனுக்கு கலைக் கல்லூரி படிப்பை அதுவும் அரசு கல்லூரியில் மட்டுமே அதிகபட்சம் தரமுடியும்//
இதை ஏற்றுக் கொள்ள முடியாது . அரசு பொறியியற் கல்லூரி என்று ஒன்று உண்டு அதில் மதிப்பெண் மட்டுமே முக்கியம் பணம் அல்ல .
என்னுடன் படித்த மாணவர்கள் பலர் இதைவிடவும் குறைந்த வருமானம் உள்ள குடும்பத்தில் இருந்து வந்து படித்தார்கள் .
அரசு பொறியியற் கல்லூரியில் சேருவதற்கான கட்ஆஃப் மதிப்பெண் 196 -199 வாங்குவதற்கு யாரால் முடியும்? இலட்சத்தில் ஒரு மாணவர் அப்படி வறிய பின்னணியிலிருந்து பெறலாம். மற்றபடி கொத்தனார் பி.இ படிக்கலாம் என்று பலரும் இங்கே எழுதியிருப்பது குறித்து தனியாகத்தான் எழுத வேண்டும்.
இல்லை வினவு. மதார் சொல்வது முற்றிலும் உண்மை. இரண்டே சேலைகளை வைத்துக் கொண்டு மிகவும் வரிய பின்னணியில் இருந்து எங்கள் (அரசு) கல்லூரியில் படித்த பெண்கள் பலரை நான் நன்கறிவேன். கொத்தானார் வரை ஏன் போகிறீர்கள்? சாலையோரம் இளநீர் கடை வைத்திருந்தவரின் தம்பி, பி.ஈ மட்டுமல்ல எம். ஈ வும் படித்து முடித்தார். என் வகுப்பில் முதல் இரண்டு மாணவர்கள் இருவரும் இத்ஹகைய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தாம். படிப்பில் மிகுந்த ஆர்வமும் உழைப்பும் இருந்த அவர்கள் எங்கள் கண் முன் முன்னேறியதைப் பார்த்து அளவில்லாப் பெருமை அடைந்து இருக்கிறோம். நீங்கள் சொன்ன அளவு மதிப்பெண் உயர் சாதியை சேர்ந்தவர்களுக்குத் தான். பிற்படுத்ஹப் பட்டவர்களுக்காந வரம்பு அதை விடச் சற்றுக் குறைவு தான். ஆனாலும் அதை விடவும் அதிகமான மதிப்பெண்கள் எடுத்தா இவர்கள் எல்லாம், நீங்கள் சொல்வது போல்
லட்சத்தில் சிலர் தானோ? அரசு கல்லூரியில் மதிப்பெண்களையும் பிற்படுத்தப்பட்டவருக்கான இட ஒதுக்கீட்டையும் தவிர வேறெதுவும் முக்கியமில்லை. கட்டணமும் குறைவு தான். அரசு நிறைய கல்லூரிகளை எடுத்து நடத்ஹா வேண்டும். அங்கு இருக்கும் வெற்றிடங்களை நிரப்ப ஆவன செய்ய வேண்டும்.
அங்காடி தெரு, பதிவாளர் தெருவுலதான் ரெம்ப ஓடுது.
சாரு வசனகர்த்தாவாள் விசனம் கொள்கிறார்.
கம்யு . தோழர்கள் முதலாளி வர்க்கத்தை வருத்துகிரார்கள்.
இன்னும் சிலரோ அண்ணாச்சி சாதியை குறித்து, குறி பார்த்தது கத்தி எறிகிறார்கள், இது பற்றி அவர்களுக்காய் :
நாலு சாதியில நாலு முதலாளிகளை பற்றி பேசிட்டா, நீங்க ஒரு
பொதுமகனா நின்னு சாதிகளை கடந்து நாட்டு நலனுக்கு மட்டும்
ஜென்மம் எடுத்தவனாகி விடுவீர்களா?
உங்கள் தைரிய கோபம் `அதிகாரமற்ற` பணக்காரர்களிடம் மட்டுமே!
இது போன்ற (படம்/செய்தி)உந்துதல் கிடைத்தால், `கொட்டு` கண்ட பேய்கள் தான். வால் மார்ட்,கோக், பேப்சி பேரை சொல்லிவிட்டால், இன்னும் கொஞ்சம் உலகப்பார்வை பாரட்டப்படும்.
நீங்கள் படத்தில் சொல்லாமல்,சொல்லப்படுவதாய் சொல்லும் நபர்
எண்பதுகளில், நிலத்தை விற்று கடை தொடங்கியது பற்றி தொண்னூறின்
இறுதியில் இப்போதைய முண்ணணி வாராந்திரி `முன்னேறிய உழைப்பாளிகள்`
என்ற தலைப்பில் வியாபாரத்துக்கு இங்கே வரும் பொது,(காபி பில்டர் வித்தா, காபி எங்கடா, வெறும் பில்டர் மட்டும்தானடா இருக்குன்னு` கேட்டு ஏமாற்றும் மெட்ராஸா போறன்னு)`எங்கள் ஊரில் பயப்பட்டார்கள் என்றார் .
அப்படிப்பட்ட ஊரில் வந்து அடிபட்டு, உழைத்து(இரவு கடை முடும் போது, பெருக்கிய எல்லா கழிவு பேப்பரும், சைஸ் வாரியாக பிரிக்கப்பட்டு பழைய பேப்பர்காரருக்கு விற்கப்படும்) சம்பாதித்தார்கள் . இன்று, தெருவில் பாதியை வாங்கி விட்டார்கள் என்பதால்வயிறு எரியத்தன் செய்யும்.
இந்த படம் முதலாளிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் தான்.
ஆனால், இதுவரை எத்தனை `நிழல்கள்` நிஜங்கலாயிருக்கிறது ?
`இந்தியன்`, பாத்திட்டு எத்தனை பேர் லஞ்சத்தை ஒழிச்சி, கிழிச்சி ஏறிந்தார்கள் ?
`முதல்வன்` பார்த்த பிறகு நல்ல ஆட்சி செய்பவர்கள் தான் ஜெயிக்கிரார்களா ?
பதிவர்கள் நடு நிலையில், நிழல் போர் தாண்டி நிஜத்தை பார்க்கட்டும்:
பெட்ரோல் பங்க் அம்பானி, எப்படி இப்படி?
ஆண்ட தலைமை குறுகிய யுக்தியில் `அவர்களுக்கான மட்டும்` திட்டத்தால் திருவானவர்கள்?
விமான உரிமையாளர்களின் ரிமோட் எந்த நாட்டில்?
பார்டிசிபொட்டரி நோட் மூலம் கோடிகளை (கணக்கில் வராத வெளி நாட்டுப்பணம்) ஷேரில் 2007ல் சொருகியதால் யுஎஸ் டாலர் 20% (டாலருக்கு 47 ரூபாய் 37 ஆக சரிந்து 50% திருப்பூர் அழிந்தது யாரால்?
தமிழ் நாட்டில் பெரிய தொகைக்கு (வரி கட்டிய பணம்) இடம் வாங்க/விற்க முடியுமா, எந்த குறுக்கிடும் இன்றி ?
நீதி அரசர்கள், நில பிரபுக்களாக, அரசுசார் பத்திரிக்கை படங்கள் காட்டி
வக்காளத்து வாங்கியது ?
பாக்ஸய்ட், தாதுக்காக மாவோஸிட்டுக்கும், எம் ஒயூஸ்ட்டுக்கும்
தகராறாம், அருந்ததிராய் (நம்மளமாதிரி ஏசில இல்லாம) காட்டுக்குள்ள போயிட்டு வந்து சொல்ராங்க!
நம்ம ஊர் காவலர், தொகுதில வாக்கு பெறாமல் வேற மாதிரி வெற்றி ?
இடை தேர்தல் எல்லாம் சட்டப்புத்தக வரிகளின் `மாதிரியே` நடக்கிரது ?
நான்கு வருடத்தில் சுரங்கம் தோண்டிட்டு 4000 கோடியாம், கோடா கிட்ட? கர்நாடக அரசே கைகளை கட்டுதாம் ரெட்டிகளிட்ட?
73 ஆயிரம் கோடி சுவிஸ் பேங்க்ல சும்மா சுவிங்கம்சுவைச்சிக்கிட்டு,
பலப்பல வருசங்களாய் அங்கே, போட்டவனுங்க திரியுராங்க
பள பளப்பா இங்கே?
விஷம் கொண்ட அணகோண்டாக்கள் நாட்டையே பின்னி நசுக்கிக் கொண்டிடருக்கிறது, முச்சு திணறுகிறது .
நாம் இங்கே நாக்கலாம் பூச்சியை பூதக்கண்ணாடி வழியாய் திரையிலும், வலையிலும் காண்பித்துக் கொண்டு.
பித்தர்களாய் மாறிய புத்தர்களாய்.
வாருங்கள், நிகழ் காலத்திற்கு, உண்மையின் வலிமை சொல்வோம்
பணத்தின் பலகீனத்தையும் மறககாமல், யாரிடமும் மால் வாங்காமல்.
முதல்வன், இந்தியன் போன்ற மசாலா குப்பைகளில் சிக்குண்டிருக்கும் மெசேஜ்ஜுகளுக்காக அவற்றையும் அங்காடித் தெருவையையும் ஒப்பிடுவது சரியாகப் படவில்லை.
நல்ல விமர்சனம் . பல செய்திகளில் ஒன்றை மட்டும் இழுத்து பார்பது சரியல்ல.இது தமிழகம் மூழுவதும் உள்ள பிரச்சனைய. புரட்சி இயக்குன்ர்களின் தேவை என்ன? ச ஸ். வியாபாரம் ஒரு முன் மாதிரி.மாம்பலம் அனைவரையும் ஏற்றுக்கொள்கிறது.மேன்சன்கள் பல ஆட்களை உருவாக்குகிறது.கதைக்கான களம் சரியா.சரியான நபர் மீது கல் எறிந்துள்ளோம.
அங்காடித் தெருவில் சொல்லப்படாதது என்ன ; நிறைய ;வறுமையில் உள்ளவர்கள் கடைசி வரை கைஷ்டபடுவது, முடிவு எனக்கு பிடிக்கவில்லை ,
இப்படி உழைக்கும் மக்கள் மிகபெரிய அவல நிலையில் இருக்கின்ற நம் நாட்டை நமது அமைச்சர்கள் ,பிரதம மந்திரி ,நிதி அமைச்சர் இன்ன பிற அதிகாரம் கொண்டவர்களெல்லாம்
அயல் நாடு சென்று நாங்கள் பெரிய வல்லரசு என்று மார் தட்டிக்கொண்டு இருக்கிறார்கள்
ஆனால் பங்களாதேஷ் போன்ற நாடுகள் நாங்கள் ஏழை நாடுகள் என்று சொல்லி எல்லா சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்
தமிழ் நாட்டின் ஜவுளி தொழில் இன்றைக்கு பங்களாதேஷ் ஜவுளி தொழிலுடன் ஏற்றுமதி வர்த்தகத்தில் போட்டி போடமுடியவில்லை
People need clothes, people wear clothes –
this is a basic need of civilisation. And clothing
must be bought in a responsible way.
We all know the pictures of Asian factories
and the miserable conditions, in which the workers,
overwhelmingly women and also children,
manufacture trousers, jackets and dresses for the
global market. Much of this clothing ends up in
discount stores such as Aldi, where, week after
week, cheap socks, t-shirts or pyjamas are advertised
in newspapers in large colourful pull-outs.
http://www.suedwind-institut.de/downloads/2010-03_SW_Women-Working-in-the-Shadows.pdf
http://www.suedwind-institut.de/0eng_sw-start-fs.htm
http://www.suedwind-institut.de/downloads/eng_sw_china_aldi-2_extract.pdf
http://www.suedwind-institut.de/downloads/2008-08-27_SW-EED_Making-Development-More-Effective_en.pdf
http://www.suedwind-institut.de/downloads/ALDI-publ_engl_2007-08.pdf
Deutsch:
http://www.suedwind-institut.de/downloads/2009-02_SW_ALDI-Studie-2.pdf
ப வி ஸ்ரீரங்கன் தன்னை ஒரு கம்யுனிஸ்ட் என்று உள்ர்ரிக்கொண்டிருக்கும் லூசு
ஆம்! வெறுமனே புலியை வசைபாடுவதையும்,
மார்க்ஸியம் என்கிற பெயரில் வறட்டுதனத்தையே
உளறிக்கொட்டி வரும் இந்த ஆள் உண்மையிலேயே
லூஸாக தானிருப்பார்.
தனது அனைத்து வகை சில்லரைத்தனங்களையும்
கலகமாக சித்தரித்து வரும் ’தரகன்’ சோபாசக்தி
‘குறி’ யின் மீதான கம்யூனிஸ்டுக்ளின் தர்க்கத்திற்கு
– அல்லது காக்டெயில் தேவதைகளுக்கு கூறப்பட்ட
விளக்கத்திற்கு,’எசப்பாட்டு’க்கு பதில் கூற வக்கற்று
தனது கலக மனதின் பாலியல் கிளர்ச்சியூட்டும் வக்கிர
கற்பனைகளை மார்க்சின் மீது ஏற்றி சேறடிப்பதன் மூலம்
’தேவதை’யை காப்பாற்றிய கதையை நாம் அறிவோம்.
ஆனால், நாயகியை காப்பாற்றிய நாயகன் தோரனையில்
சுற்றி வந்த இந்த கலகக்காரனை தேசம் நெற்றில் பாலன்
என்கிற தோழர் முழு கோவணத்தையும் உருவி
வில்லனாக்கி கீழே தள்ளியதை எத்தனை பேர்
அறிவார்கள் என்று தெரியவில்லை. அறியாதவர்கள் கீழ்
உள்ள சுட்டியின்/பின்னூட்ட பகுதிக்கு சென்று
சோபாசக்தியின் கதியை கானுங்கள்.
http://thesamnet.co.uk/?p=19365
தோழர் பாலனுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல
முடியாமல் விழிபிதுங்கி நின்ற சோபாசக்தியை
காப்பாற்றியது யார் என்று தெரியுமா ?
இந்தக் குடிகாரனின் கலகக்கார கூட்டாளி
‘அமார்க்ஸ்’ ( AMARX) என்றா நினைக்கிறீர்கள் ?
அது தான் இல்லை !!
..
இந்த லூசு சிரீரங்கன் தான் அந்த காரியத்தை செய்தது.
ஜெர்மனியில் ஏதோ நாலு பேர் ஆதாரமில்லாமல்
அவதூறு செய்து எழுதியதை, ஏதோ கிடைக்காத
அற்புதம் கிடைத்துவிட்டதைப் போல இந்த சிரீரங்கன்
இணைய வீதிகளில் தூக்கிக்கொண்டு அலைய,
அதுவே இந்த சோபாசக்திக்கு அடிப்படை
ஆதாரமாகிவிட்டது. இதோ பார் ஆதாரம், இதோ பார்
ஆதாரம் என்று கூவிக் கூவி நிரூபிக்கிறாராம்.
அதை இந்த யோக்கியர் படித்தாரா ?
அதை படிக்க இவருக்கு ஜெர்மன் மொழி தான் தெரியுமா ?
உனெக்கெல்லாம் அறிவு நாணயம் என்று
ஏதாவது உண்டா ?
சோபாசக்தியை விட்டுத்தள்ளுவோம். அது
மதிக்கத்தக்க…… இல்லை !
மார்க்ஸ், மார்க்சியம் என்று பேசிவரும் இந்த
சிரீரங்கனாவது படித்திருப்பாரா??
படித்து என்னத்தைச் செய்வது ??
வறட்டுத்தனம் தான் மூட்டைமூட்டையாக இருக்கிறது !!
அதை ஆங்காங்கே கொட்டிக்கொண்டிருக்கிறார்கள்,
கலகக்காரர்கள் வறட்டுவாதிகளிடமிருந்து ’’வரலாற்று’’ ஆதாரங்களை
எடுத்து தமது அம்மனத்தை மறைத்துக்கொள்கிறார்கள்.
சரியாச் சொன்னீங்க.
நாலு வார்த்தைனாலும் நறுக்,
உரைக்க வேண்டியவர்களுக்கு சுருக் என்று
உரைக்குமா ?
///தனது அனைத்து வகை சில்லரைத்தனங்களையும்
கலகமாக சித்தரித்து வரும் ’தரகன்’ சோபாசக்தி///
///காப்பாற்றியது யார் என்று தெரியுமா ?
இந்தக் குடிகாரனின் கலகக்கார கூட்டாளி
‘அமார்க்ஸ்’ ( AMARX) என்றா நினைக்கிறீர்கள் ?///
சரியாக சரியான நேரத்தில் சொன்னீர்கள்….
தேவதைக்கு ஆதரவாக, ஜனநாயகத்தை(!?!) காப்பாற்ற இக்கும்பல் கூட்டம் கூட்டப்போகிறார்களாமே?
அதே அமார்க்ஸ் கூட்டத்தை ஒருங்கினைக்கிறாராமே???
ஏன் சாதியை பற்றி பேசுகின்றோம்? எல்ல சாதி பணக்காரர்களும் சம்பாதிப்பது அடுத்தவரின் உழைப்பில் தான். நீங்கள் கூட உங்கள் வீட்டில் வேலைக்காரியை வேலைக்கு வைத்தால் அதிக சம்பளம் கொடுப்பீர்களா என்றால் இல்லை. இதே வசந்த பலன் இருக்கும் திரையுலகில் என்ன வாழுதாம்? இதுதான் உலகம். படிப்பறிவு தான் எல்லாரையும் முன்னேற்றும். முதலில் கல்விசாலைகளை காசக்காமல், இலவச கல்வி கொடுக்க எதாவது படம் எடுங்கப்பா. தானாக சரியாகிடும்.
நல்ல இடுகை
பதிவு ரொம்பச் சின்னதா இருக்கே..? இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்..!
ஆனாலும், கொத்தனார்களுக்கும், சித்தாள்களுக்கும் புரிவது மாதிரி இன்னும் அதிகமான, எளிமையான தமிழில் எழுதினால் நல்லது..! அவங்களும் படிச்சுக்கட்டுமே..?
நாங்க மட்டும் படிச்சு என்ன புண்ணியம்..?
உண்மையண்ணே, பதிவு சின்னதா, பெருசான்னு நீங்களுமா கேட்கணும்? கொத்தனாரும், சித்தாளும் எந்தக்காலத்துல நெட்டு பாக்குறாங்க? அவங்க பாக்கும் போது எப்படி எழுதவதுன்னு பாக்கலாம். இங்க ஜவுளிக்கடையில வேலை பாத்த ஹைதர்அலின்னு ஒரு பாமரர் விமரிசனத்தை படிச்சுட்டு புரிஞ்சுட்டு பின்னூட்டம் போடுகிறார். ஆனா பி.இ, எம்.இ படிச்ச மேதைகள் படிச்சாங்களாண்ணே தெரியல.
உங்களுக்கு புரிஞ்சது சந்தோஷம். ஆனா அதைப்பத்தி சரியா, தப்பான்னு ஒரு வார்த்தை கூட எழுதலயே, ஏண்ணே?
வினவு மற்றும் தோழர்களே
நீங்கள் டாக்டர் ருத்திரனிடம் சிகிச்சை ஆரம்பிப்பது மிகவும் நல்லது
அன்பு செல்வன், மனநிலை சரியில்லாதவங்களுக்கு அது தீவிரமாகும் போது உலகமே பைத்தியமென்று தோன்றுமாம். எதுக்கும் உங்க பிரச்சினை என்னண்ணு பின்னூட்டத்துல சொன்னா இங்கேயே இலசமாக தீத்து வைக்கலாம். ஏதோ நம்மளால முடிந்த உதவி
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஒரு பைதியத்திடமே வைத்தியமா?
ஹலோ,
இதைபோல் திருப்பூர் மற்றும் அணைத்து தொழில் நகரங்களிலும் நடக்கிறது, தாங்கும் இடமும் உணவு விடுதி வேண்டுமானால் மிகை படுத்த பட்டவையாக இருக்கலாம், இந்த இடங்களில் மேலாளர் மலையாளிகளாக இருப்பார், தொழிலாளிகள் தென் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருப்பவர்கள், நீ என்ன நாடாரா?
கோவை ராஜா, இந்தியா முழுதும் இப்படித்தான் நடக்கிறது. அதை மறுக்கவில்லையே? இதை முழுதாகக் காட்டாவில்லை என்று சொன்னால் அது தப்பா? அண்ணாச்சிகளான முதலாளிகளை விமரிசித்து எழுதியவை படிக்கவில்லையா? என்னதான் கேக்க வாரீங்க?
வினவு முதலில் இதே அங்காடி தெருவை வைத்து ஒரு திரைக்கதை எழுதுங்கள். அதில் எதையெல்லாம் சொல்ல முடிகிறது என்று பாருங்கள். அதை வினவு தளத்தில் வெளியிடுங்கள்.அதில் என்ன இல்லை என்ன இருக்கிறது என்பதை நாங்கள் சொல்கிறோம்.
‘கடை சிப்பந்திகளது மின்னல்வேக பணிகள் இடையறாது நடந்து கொண்டிருக்கும் போது அவர்கள் ஒரு வகை மனித ரோபாக்கள் போலத்தான் இருப்பார்கள். சரவணா ஸ்டோரின் இந்த உடல்மொழி படத்தில் இல்லை. இந்த மனித எந்திர அடிமை வாழ்க்கையை சென்னையின் சேரிகளைச் சேர்ந்த ஒரு உதிரிப்பாட்டாளி ஏற்கமாட்டான். வேறுவழியின்றி அவன் ஏற்றாலும் பல்வேறு வகைகளில் முதலாளிகளுக்கு தொந்தரவு கொடுப்பான். எனவேதான் தென்மாவட்டங்ளிலிருந்து வெள்ளேந்தியாக வரும் ஏழைகள் இதற்குத் தேவைப்படுகிறார்கள். அவ்வகையில் சரவணா ஸ்டோர் மலிவாக விற்க வேண்டுமென்றால் இப்படித்தான் மலிவாக தொழிலாளிகளை நடத்த முடியும். இது பற்றிய கேள்வியை படம் எழுப்பவில்லை’. இப்படிஎல்லாம் எழுதும் வினவு சென்னையில் கடைகளில் வேலை பார்பவர்களில் பலர் சென்னையின் புற நகர பகுதிகளில் இருந்-து வருபவர்கள் என்பதை அறியாதவரா?. அண்ணாச்சி கடைகள் மட்டும்தான் சென்னையில் உள்ளனவா. மால்களில் உள்ள கடைகளில், உணவகங்களில் யார் உழைக்கிறார்கள் எங்கிருன்-து வருகிறார்கள் என்பதை சர்வே செய்து எழுதுங்கள்.
வினவின்பால் நான் ஈர்கபட்டதன் காரணம் அதன் அரசியலை எளிமையான நடையில் கூறுவதுதான். இந்த படத்தில் விட்டுப்போன விசயங்களை பேசும் வீச்சில் எங்களை போன்ற அரைகுறைகளை மனதில் வைத்து எழுதும் தாங்கள் இம்முறை மறந்து விட்டீர்கள் என்றே தோன்றுகிறது.இருமுறை படித்து புரிந்து கொண்டாலும் அவற்றை மீண்டும் தொடர்புபடுத்தி தொகுத்து பார்க்க இயலவில்லை.தொடர்ந்த வினவு வாசிப்பின் ஊடாக அரசியல் பயிற்சி வேண்டும் என்று நினைத்திருந்தேன்.ஆனால் இன்னும் கடின பயிற்சியும் முயற்சியும் வேண்டுமோ ?
இந்தப்படம் மட்டுமல்ல. தமிழில் நல்ல படம் என்று விமர்சிக்கப்பட்ட எத்தனையோ படங்கள் தாம் கையாளும் விசயத்தைப்பற்றிய ஆழமான பார்வையும் சினிமா பற்றிய அழகியல் நுட்பமும் இல்லாமல் எடுக்கப்பட்டுள்ளன. அறிதான விமர்சனம்.
நீங்கள் எடுக்கப்பட்ட படத்தின் உதவி இயக்குனர் அல்லாமல் போனது நல்லது. இல்லையென்றால் படம் இந்த விமர்சனம் போல் வந்து இருக்கும்
/சில அறிவாளிகள் கருதுவது போல மேற்கத்திய கல்விமுறை, மேலாண்மைப் படிப்புகள் மூலம் முதலாளிகள் ஜனநாயக உணர்வு பெறுவதில்லை. அவர்களுக்கு அதை கற்றுக் கொடுப்பது தொழிலாளிகள்தான். அதனால்தான் தொழிலாளிகளின் எழுச்சியைப் பார்த்து பீதியடைந்த முதலாளித்துவ வர்க்கம் தனது வரலாற்றுப்பாத்திரத்தை கழுவிவிட்டு பிற்போக்கான நிலவுடைமை வர்க்கங்களையும் ஆதரிப்பது என்ற நிலையை எடுத்திருக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனத்தில் அம்பானியின் சொந்த மாநிலத்தின் வணிக சாதி மக்கள் கணிசமான அளவில் பங்குதாரர்களாக இருப்பது தற்செயலான ஒன்றல்ல.//
சரியான பார்வை
அபாரமான விமர்சன்ம் .பல நுனியா பார்வைகளை உள்ளடிக்கிய விரிவைந்த கட்டுரை. nanri
தோழரின் கருத்துகள் மிகவும் சரியானவை. இது ஒரு முக்கியமான விமர்சனம் என்றாலும், அண்ணாச்சியை விட பெரிய முதலாளிகளிடம் பட்டம் படித்த கொத்தடிமைகளும் வேலை செய்து கொண்டிருகிறார்கள். அவர்களை பற்றியும் ஒரு படம் வந்தால் நன்றாக இருக்கும். மேலு இந்த படத்தின் முடிவு சரியில்லை என்ற உங்களின் மறைமுக கருத்து வரவேற்க தக்கது, இதற்க்கு பிறகும் இது போன்ற கொத்தடிமைகளின் மனதில் ஒரு நெருப்பு பொறி ஏற்படாவிட்டால் அவர்கள் மட்டும் அல்ல அவர்களின் சந்ததிகளும் இப்படியே தான் இருக்க வேண்டியிருக்கும். ஆக ஏழை எழையாகவேதான் இருப்பான், உழைக்கும் மக்களின் உரிமையை போராடினால்தான் பெறமுடியும், சொற்ப சம்பளத்திற்கு தங்கள் வாழ்கையில் பல போராட்டங்களை எதிகொள்ளும் இவர்கள் தங்களை தாங்களே முடமாக்கி கொள்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, இந்த படத்தில் குறை என்ன என்று பார்த்தால் மற்ற தொழிலாளிகளின் முடிவு தெரியாமல் போனதுதான். உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து போரடவிட்டால் ஒரு காலத்தில் நாடே முதலாளிகளுக்கு அடிமை ஆகிவிடும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.
நன்றி தோழரே.
கவுதம் நாவல்கா ஒரு கட்டுரை புதியதாக எழுதியிருக்கிறார்.அவர் மாவோயிஸ்ட் தலைவர் கணபதியை சந்திக்க சென்ற போது தண்டகாரனிய பகுதியின் சமுக,அரசியல் நிலைமைகளை பற்றி எழுதியிருக்கிறார்.
India: Days & Nights in Heartland of Rebellion
http://southasiarev.wordpress.com/2010/04/08/india-days-nights-in-heartland-of-rebellion/
கொத்தனார் மகன் எப்படி BE படிக்க முடியும் என்ற உங்கள் விவாதம் ஏற்றுக்கொள்ள முடியாது . அப்படி பார்த்தால் பணக்காரர்கள் மட்டுமே தான் BE படிக்க முடியும் என்று நீங்கள் சொல்வது போல் உள்ளது . நான் படித்ததும் அரசு பொறியியற் கல்லூரி (2003 -2007 .) அப்படி ஒன்றும் பெரிய காலம் ஆகிவிடவில்லை . என் வகுப்பு மாணவன் ஒருவனுக்கு பீஸ் சரியான நேரத்தில் கட்டமுடியவில்லை என்று நான் எங்கள் விடுதியில் இருந்து பணம் collect பண்ணி குடுத்தேன் . அவனும் கொஞ்ச நாள் பிறகு திருப்பி குடுத்தான் அதில் சிலர் அந்த பணத்தை திருப்பி கூட வாங்கவில்லை . computer science மாணவி ஒருத்திக்கு பலமுறை அவர்கள் வகுப்பு மாணவர்களே பணம் கட்டிருக்காங்க . என் துறை என் batchmate விடுதில் தங்கி கூட படிக்க முடியாமல் கஷ்டப்பட்டு படிச்சான் . இப்போ ESSAR GROUP ல வேலை மாசம் 45000 சம்பளம் . இடையில் ஒருவருடம் சவூதி . நிறைய பேர் campus interview ல வேலை கிடைச்சு நல்ல நிலையில் இருக்காங்க . என் துறையில் எஸ்சர் இல் 2 பேர் மட்டுமே தேர்வானங்க . ஒன்னு என் batchmate , இன்னொரு பையன் படிக்கும்போதே பகுதி நேர வேலை பார்த்தவன் . அப்பா , அம்மா இல்லாமல் அண்ணா துணையுடன் படித்தவன் . இவர்களுக்கு வேலை கிடைத்ததும் நாங்கள் அடைந்த சந்தோசம் . நீங்க சொல்வது மாதிரி பணம் இருக்குறவன் மட்டுமே உயர் படிப்பு படிக்க முடியும் என்றால் பணம் இல்லாதவர்களின் நிலை மாறவே மாறாது அவர்கள் அப்படியே இருப்பதற்கு ஆளானவர்கள் என்று சொல்வது போல் உள்ளது .
எல்லாரும் அரிவாள் எடுத்துக்கொண்டு ஒடுவதில்லைதான் , அதற்காக எல்லாரும் காலை பிடித்து கெஞ்சுவதும் இல்லை . ஒரேயடியாய் தென்மாவட்ட மனிதர்கள் சுய மரியாதை இல்லாதவர்கள்னு சொல்றீங்களா ? கஞ்சிக்கு வழி இல்லனாலும் தன்மானத்த விடாதவங்கதான் . அக்கடைகளில் வேலை பார்பொரோடு எனக்கு நேரிடை தொடர்பும் உண்டு . படத்தில் காட்டப்பட்டது 100 % உண்மை என்று சொல்ல வேண்டாம் .
மதார் அவர்களுக்கு நன்றி. சரியான கோணத்தில் அனுகிய பார்வை.முன்—பின் பார்வையில் பார்தால் இதை சரியாக புரிந்து கொள்ளலாம்.தங்கர்,சேரன்,பாலாஜி சக்திவேல்,போன்ற இயக்குனர் மாற்று சினிமா பாதை அடைபட்டுவிடக் கூடாது.எனவேதான் இத்தனை கூப்பாடு
எதார்த்த சினிமா வரவேண்டும் என்பதே என்னுடைய விருப்பமும் , அதற்காக ஒரேயடியாய் அடிமாடு போல் மனிதனின் வாழ்வை காட்டிவிட்டு இதுதான் எதார்த்தம் என்றால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ? எல்லாருமே சாப்பாடுல உப்பு போட்டு தான் சாப்பிடுறோம் கொஞ்சம் கூட மான ரோசம் இருக்காதுன்னு சொன்னா எப்படி ? முதல்ல நான் உப்பை குறைக்கணும்னு நினைக்குறேன் .
மாதர் அவர்களே ………….அந்த கடையில் ஓரளவு அப்படி இருப்பது உண்மைதான் ………………..!!!! மக்கள் எல்லாரும் உங்களை போல ரோசம் இருக்கிறது என்றால் நாம் முதலில் 1000 ருபாய் வாங்கி வாக்கு செலுத்த மாட்டோம் …………!!!!! நாம் ஓரளவு அடிமை சிந்தனை இருப்பதால் தான் சமுதாயம் இப்படி விலங்காமல் இருக்கிறது
மதர், தீபா
உங்களுக்குத் தெரிந்த சிலர் அப்படி பொறியியல் கல்வி படித்திருக்கிறார்கள். அதனால் ஏழைகள் அனைவரும் அப்படி படிக்க முடியும் என்று சொல்கிறீர்களா? ஆமெனில் அதை விளக்க இயலுமா?
ஏழைகள் அனைவரும் படித்து விட்டால் பிறகு இது சோசலிச நாடு
அனைவருக்கு அனைத்து இங்கே கிடைக்காது இதுதான் போலி சனநாயகம் என வினவுக்கு தெரியாதா ?
அதான் வேதனையான உண்மை
வினவு! நான் நிச்சயம் அப்படி சொல்ல வில்லை. கொத்தனார் தன மகன் பி.ஈ படிக்க வேண்டும் என்று ஆசைப்படுவது போல் அந்தப் படத்தில் காட்டி இருப்பது ஒன்றும் மிகை அல்ல. யதார்த்தம் தான் என்பது தான் நான் சொல்ல வந்தது.
அவர் உயிரோடு இருந்திருந்தால் அவன் எடுத்த மதிப்பெண்ணுக்கு நிச்சயம் அவன் பொறியியல் படித்திருக்க முடியும். ஆனால் விபத்துக்களும் ஏழைகள் வாழ்வில் தான் வாழ்வில் அதிகம் விளையாடுவதால் அவர இறந்து போக அவனால் படிக்க முடியாமல் போவது தான் சோகமே. அது தான் படத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.
பதிவின் சாரத்தோடு நான் பெரிதும் ஒத்துப் போகிறேன் என்பதை முதல் பின்நூட்டதிலேயே வெளிப்படுத்தி இருக்கிறேன். அதனால் தவறான புரிதல்களுக்கு இடம் கொடுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
தீபா,
குறிப்பிட்ட கருத்து பற்றிய விவாதம்தானே இது. இதற்காக நீங்கள் பதிவின் சாரத்தை ஒத்துப்போவதை நினைவுபடுத்துமளவு வினவு நடந்து கொண்டதாக இருந்தால் அதற்கு மன்னிக்கவும். மற்றபடி நீங்கள் உங்கள் கருத்துக்களை விமரிசனங்களை மனந்திறந்து பேசுவதையே விரும்புகிறோம். இந்தக்கட்டுரையை பலரும் ஏற்காத நிலையில் இதை நீங்கள் ஆதரித்திருப்பதன் பின்னணியில்தான் இந்த விவாதம். அப்படி ஒரு தொனி வினவின் அணுகுமுறையில் இல்லையென்றால் மாற்றிக் கொள்கிறோம். நன்றி
நாங்கள் சொல்வது ஏழையோ பணக்காரனோ நல்ல மதிப்பெண் இருந்தால் அரசு கல்லூரியில் இடம் கிடைத்தால் எப்பாடு பட்டாவது பெற்றோர் படிக்க வைப்பர். நானும் விவசாயக் குடும்பத்தை சார்ந்தவளே, என்னை படிக்க வைக்க என் பெற்றோர் பட்ட கஷ்டமும் எனக்குத் தெரியும் . எனக்கு அவங்க சொன்னது இது மட்டும்தான் “உன்னால எங்களைபோல் வயலில் இறங்கி வேலை செய்ய முடியாது அதுக்கு உனக்கு தெம்பும் இல்லை நீயே புரிஞ்சி படி படிப்பு மட்டும்தான் உனக்கு வாழ்க்கை ” இந்த வார்த்தைகள்தான் என்னை படிக்க வச்சது . +2 வரை நான் ஸ்பெஷல் கிளாஸ் , டியூஷன் கூட போனது இல்ல . என்னுடைய மதிப்பெண் எனக்கு அரசு பொறியியர்க் கல்லூரியில் இடம் கிடைச்சது .
மதர் அவர்களுக்கு,தங்களால் அரசு நிர்ணயித்துள்ள பொறியியற்கல்விக்கட்டணம் எவ்வளவு என்று சொல்ல முடியுமா? அத்தனை ஆயிரங்களை சாதாரண ஏழையால் செலவு செய்ய முடியும் என்று நம்புகிறீர்களா? சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு தனியார் பாலிடெக்னிக்கில் மொத்த படிப்பையும் 30000 க்குள் முடித்து விட முடிந்தது. இப்போது ஒரு வருடத்திற்கு கூட அது பத்த வில்லையே. நீங்கள் கூறும் அரசினர் பொறியியற் கல்லூரிகள் தமிழகத்தில் மொத்தம் எத்தனை உள்ளன?
10 அரசு பொறியியற்கல்லூரிகளும், எய்டட் கல்லூரிகள் 4 இதில் எப்படி ஆட்கள் தேவு நடத்தப்படுகிறது? ஏழை குழந்தைகளுக்கு முன்னுரிமையாக இருக்கிறதா? நல்ல மதிப்பெண் என்று சொல்லுகிறீர்கள். பத்தாவது பனிரெண்டாவது பரீட்சைக்குக்கூட பணம் கட்டமுடியாமல் போன பல நண்பர்களை வாழ்வில் சந்தித்து இருக்கிறேன்.
எனது நண்பன் ஒருவன் அரசுப்பள்ளியில் +2படித்து வந்தான். அவனுக்கு வேதியியல் டியூசன் போக காசில்லை. வாத்தியார் இன்டெர்னல் மார்க் போட மாடேன் என அவனை மிரட்டியதால் அவன் படிப்பையே நிறுத்திவிட்டான். அவன் வாழு தற்போது சீரழித்து கிடக்கிறது. முக்கிய விசயம் அவர்கள் கிராமத்திலேயே இருந்த அப்பள்ளியில் 8 வது தேர்வில் அவன் தான் முதல் மதிப்பெண் வாங்கினான். பத்தாவதிலும் கணிசமான மதிப்பெண் வாங்கியிருந்தான்.
உங்களைப்போல என்னுடன் படித்தவர்கள் பலரை பார்க்கிறேன் மதர், ஏன் நான் படிக்கலை, முன்னேறலை? என்பதுதான் பதிலாக இருக்கிறதே தவிர, ஏன் அவனால் சீட் வாங்க முடியவில்லை என்று யோசிக்க முடிந்ததா? பலரும் தன்னுடைய லென்ஸ்களை கழட்டிவிட்டு சமுதாயக்கண்ணாடியை போட்டுக்கொள்ள வேண்டும் அதற்கு.
பாதிக்கப்படும் ஆயிரம் பேரில் ஒருவருக்கு மட்டும் இடம் கிடைத்தால் அது திறமைதான் அதைத்தாண்டி 999 பேரை முன்னேற்றவிடாத கல்வி என்று கூட சொல்லலாம் அல்லவா? லட்சக்கணக்கான படிப்பை முடித்து வரும் மாணவ மாணவிகளுக்கு 10 அரசு கல்லூரிகள் போதுமா என்ன?
எனக்குத்தெரிந்து சாதாரண பொறியியற் கல்லூரிகளில் கூட 65000 ரூ வருடத்திற்கு டியூசன் கட்டணம் வாங்குகிறார்கள். அதை ஒரு ஏழையால் கட்ட முடியுமா? சொல்லுங்கள் மதர்
கலகம்
சாதாரண உழைக்கும் குடும்பத்தில் பிறந்து தங்களின் தன்முயற்சியில் படித்து முன்னேறி இன்று நல்ல நிலையில் இருந்து இந்த விவாதத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துகள். நண்பர்களே நீங்கள் அனைவரும் ஒரு நிமிடம் உங்களைச் சுற்றியுள்ளவர்களைப் பாருங்கள். பாதரசம் நீர்ம நிலையில் இருக்கும் ஒரு உலோகம் என்பதால் உலோகங்கள் அனைத்தும் நீர்ம நிலையில் இருக்கும் என்று நான் சொன்னால் நீங்கள் எல்லோரும் என்னைப் பார்த்து நகைப்பீர்கள். அது போல் தான் உங்களின் நல்ல மார்க் வாங்குபவர்களுக்கு அரசு பொறியிற் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்பதுமாகும். பொதுவாக அரசு கல்லூரியிகளில் பட்டியல் இனத்தவர்களுக்கு 18 விழுக்காடு, பிற்பட்ட வகுப்பினர்க்கு 30 விழுக்காடு மிகவும் பிற்பட்ட வகுப்பினர்க்கு 20 விழுக்காடு, பழங்குடியினருக்கு 1 விழுக்காடு என்று மொத்தம் 69 விழுக்காடு இடஒதுக்கீடு அளவில் நிரப்பபடுகின்றன, இந்த இடஒதுக்கீட்டில் பயன்படுத்திக் கொள்பவர்கள் பெரும் பாலும் இரண்டாம் தலைமுறை பட்டதாரிகள் ஓரிரு இடங்கள் மட்டுமே உங்களைப் போன்றவர்கள் வருகிறார்கள். பெரும்பாலும் அரசுபணியிலோ அல்லது தனியார் பணியிலோ நல்ல அல்லது ஓரளவு நிரந்தர வருமானம் பெறுபவர்களின் குழந்தைகள் மட்டுமே இந்த இடஒதுக்கீட்டில் வருகிறார்கள். கிராமங்களில் பயின்ற உங்களைப் போன்றவர் பாதரசம் போன்ற சொற்ப அளவில் உயர்கல்விக்கு வருகிறார்கள். தமிழகத்தில் எத்தனை அரசுக் கல்லூரிகள் இருக்கின்றன என்பது உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. 7 கோடி மக்கள் இருக்கும் ஒரு மாநிலத்தில் 10 அரசுக்கல்லூரிகளும் 4 அரசு உதவி பெறும் கல்லூரியும் போதுமா என்ன. இந்த கல்லூரிகளில் ஆண்டு ஒன்றுக்கு எத்தனை பேர் வறிய நிலையில் இருந்து படிக்க வருகிறார்கள் என்பதை சொல்ல முடியுமா? இந்த தொகை போதுமா என்ன? கிராமங்களில் தகுந்த வழிகாட்டல் இல்லாத நிலையில் பலர் பொறியிற் கல்லூரியினை விடுத்து கலைக்கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்கள். எனக்கு தெரிந்த ஒருவர் பத்தாம் வகுப்பு கணிதத்தில் 91 மதிப்பெண்கள் பெற்றார் இப்போதல்ல 1987 இல் அவர் மேற்கொண்டு படித்து பொறியியற் கல்லூரியில் சேர்ந்து படிக்கவில்லை. அவர் படித்ததோ ஐடிஐ பிட்டர். ஏனெனில் அவர் தந்தை ஒரு மெக்கானிக். அவர்களுக்கு வழிகாட்டிவர்கள் அப்பாவின் தொழிலோடு தொடர்புடைய படிப்பிற்கு வழிகாட்டினார்கள். காரணம் விடுமுறை நாட்களில் அவர் தனது தந்தைக்கு உதவியாக இருந்து தொழில் கற்றவர். இவர் போன்று இன்றும் நல்ல மதிப்பெண் பெற்றும் அரசு கல்லூரியில் இடம் கிடைக்காமல் கலைக்கல்லூரிக்குச் சென்றவர்கள் நான் அறிவேன். இந்த நிலைதான் இன்றும் உழைக்கும் மக்களிடையே இருக்கிறது. இது பற்றிய விவரமாக எழுதினால் அது தனி இடுகையாக இருக்கும். தயவு செய்து உங்களின் நிலையினைக் கொண்டு மற்றவர்களை அளக்காதீர்கள். —வாகை—
சலாம் பம்பேயின் …
இந்த அங்காடித்தெருச் சினிமாக்குறித்த விமர்சனம் உள்ளடக்கஞ்சார்ந்த பார்வையில் சரியானவொரு பார்வையை வைக்கிறது.வடிவம் அனைத்துச் சினிமாத்தனத்துடனும் பரந்தபட்ட தொழிலாளர்களது வாழ்வைச் சொல்லி அல்லது கையிலெடுத்தபடி இன்னொரு தேவையை நோக்காக்கொள்வது உண்மை.அது,புரட்சிப்படைப்புகளை-நூல்களை விற்றபடி இன்று கோடீஸ்வர்களாக மாறியுள்ள “நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேர்ட் லிமிடெட்”போல மாறுகிற தொழில்தாம்.
அங்காடித்தெரு படத்தைத் தயாரித்த ஐங்கரன் இன்டர்நஷனல் கருணாமூர்த்தி இலண்டன் வந்தபோது வெறும் மனிதர்.இவரிடம் இவ்வளவு கோடிக்கணக்கான சொத்து எங்ஙனம் வந்தது?
கடும் உழைப்பு?
இல்லை!
இவருக்குப் பின்னால் “தமீழக்கோசம்”செய்தவர்கள்-போராடி மக்களைப் பலியிட்டவர்கள் நின்றார்கள்.புலம்பெயர்ந்த தமிழரிடம் சேர்த்த பலகோடி டலர்கள் இன்று கருணாமூர்த்திக்குச் சொந்தம்.இங்கிருக்கும் ஏழைத் தொழிலாளத் தமிழரைச் சுரண்டியவர்கள்-ஆயுதம்காட்டிப் பணம் பறித்தவர்கள் தமிழ்நாட்டுத் தொழிலாளிகளது கொத்தடிமை வாழ்வைச் சொல்லிக் கோடிகளைப் புரட்ட அதைச் சந்தைப்படுத்துகிறார்கள்.இதில் பலியாகியது வசந்தபாலன்மட்டுமல்ல தமிழகத் தொழிலாளிகளுந்தாம்.
இத்தகைய பிழைப்புவாதிகளைக்கடந்து சலாம் பம்பேயின் நோக்கம் எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?மீரா நாயர் தெருவோரக் குழந்தைகளது வாழ்வைவிற்றுப் பிழைக்கவில்லை.
அங்காடித்தெரு எனும் வடிவம் அதன் உள்ளடகத்தை வைத்துப் பிழைக்க முனையும் மக்கள்விரோத முதலாளிகளது சொத்துச் சேர்க்கும் கனவுக்கு இசைவாகத் தொழிலாளர்களது பிரச்சனைகளை அணுகுகிறது.அதன் குறி தொழிலாளர்களது சோகமயமான வாழ்நிலை அல்ல.அதை வைத்துக் காசாக்கும் வர்த்தகமே.இத்தகைய நிலையில் வசந்தபாலன் தமிழக்த் தொழிலாள வர்க்கத்தையே விற்றுப்பிழைப்பதில் சினிமாவின் அதி உச்ச ஆளுமைகளை நிறுவனப்படுத்திப் பெரும் முதலாளிகளிடம் கையளிக்கின்றார்.
இந்த ஐங்கரன் கருணாமூர்த்தி தனக்குச் சொந்தமில்லாத புலம்பெயர் மக்களது பல கோடி டாலர்களைச் சொந்த மாக்கியது தற்செயல் நிகழ்வல்ல.அதற்குப் புலிகளுக்கு விடை தெரியும்.அவர்கள் மக்கள் பணத்தை மீளக் கையளிக்கவுமில்லை-அதைப் பொதுச் சொத்தாக்கவும் இல்லை!இப்போது, தமிழகத் தொழிலாளர்களது அவல வாழ்வைச் சந்தைப்படுத்தி மக்களைச் சுரண்டும் பணத்தை என்ன செய்வார்கள்?
இப்படம் தயாரித்தவர்கள்,உண்மையில் இவ் அவலத்தை சமூக நலக்கண்ணோட்டத்தோடு சினிமாவாக்கியிருந்தால் இச் சினிமாவால் வரும் ஆதாயத்தைத் தமிழகத் தொழிலாளர்களது நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும்.அல்லது வறிய தொழிலாளர்களது வாழ்வியற்றேவைக்கு உதவ வேண்டும்.
செய்வார்களா?
கனவிலும் இல்லை!
பிறகு?
அவலத்தைச் சொல்லிப்பிழைத்தலெனக் கொள்க!
அட போங்க பாஸ்.. நீங்க எப்பவுமே இப்படித்தான்… நீங்களும் ஒன்னும் செய்யமாட்டீங்க…. எவனாவது ஓரளவுக்கு நல்ல படத்தை எடுத்தாலும் அதையும் குத்தம் குறை சொல்லிக்கிட்டு திரிவீங்க…..
ஏம்பா தம்பி, இந்த விமரிசனத்துல படம் நல்ல படம் அவசியம் பாக்கனும்னுதான் சொல்லியிருக்காங்க.. சினிமாவுல விடப்பட்ட சில விசயத்த்தானேப்பா எழுதியிருக்காங்க.. பதிவையே படிக்காம குத்தம் சொல்றதா எழுதுனா எப்படி???
மறுபடியும் ஒரு சினிமா விமர்சனமா
சரி இந்த விமர்சனம் குறித்த எனது கருத்தை சொல்லிடுறேன்
1 . பிழிந்து வழியும் சோகம் மட்டுமே வறுமையை காட்டாது அப்படி மிகைப்படுத்தப்படும் சோகம் எளிதாக இரக்க உணர்ச்சியை தட்டும் மாறாக வர்க்க உணர்சியை எழுப்பாது . இதற்காக இந்த உணர்ச்சியை எழுப்பி அனுதாபம் பெறுவது நோக்கமாக இருந்தால் அது தவறு
௨. ஒரு சாதி ஆட்களே அங்கு இருப்பது அதனால் பெரும்பாலும் அடக்குமுறைக்கு அடங்கி போக செய்யும் தன்மை ஆகியவை
நிலபிரபுத்துவத்தின் எச்சமே இது எங்கும் சுட்டபடவில்லை (படத்தில் )
அந்த சாதிய மனோபாவத்தை உதறி தள்ளுவதோ கிளர்ச்சி செய்வதோ
படத்தில் காட்டப்படவில்லை
இந்த படம் வேறு விதமாக ஒரு சூப்பர்வைசரின் பார்வையில் சொல்லபட்டு இருக்கலாம் என்பது ஆலோசனை
ஒரு படத்தை வைத்து சமூகத்தில் அனைத்து விசயங்களையும் வர்க்க பண்மையும் சொன்னமைக்கு நன்றிகள் தோழர்
//இறுதியாக இந்த விமரிசனங்கள் இருந்தாலும் அங்காடித் தெருவை அனைவரும் பார்க்க வேண்டிய படமென்றே கருதுகிறோம். குறைந்த பட்சம் தமிழக வாழ்க்கையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் சரவணா ஸ்டோர் என்ற பேரங்காடியின் பின்னே இருக்கும் உழைப்பாளிகளது வாழ்வை காட்ட முனைந்திருப்பது நிச்சயம் வரவேற்க்கப்படவேண்டும். இந்த விமரிசனம் கூட அத்தகைய முயற்சியில் ஒன்றுதான்.//
இந்த கடைசி வரியில் நீங்கள் சொன்ன எல்லாமே மறைந்து விட்டது
எல்லாரும் பார்க்க வேண்டிய படம் அதன் கண்ணோட்டம் மட்டுமே
மாறி உள்ளது என சொல்ல வருகிறீர்கள் .
எனது கருத்து
. ஒரு இயக்குனருக்கு வினவை போன்றோ அல்லது தோழர்களை போன்றோ வர்க்க ரீதியாக சிந்திக்க தெரியுமா தனிநபரின் வாழ்க்கையாக மட்டுமே அனைத்து சினிமாக்களும் காட்டப்படுகிறது
@@@மறுபடியும் ஒரு சினிமா விமர்சனமா @@@
அட நம்ம தோழர் தியாகு .. எதுக்கு தோழர் காரல் மார்க்ஸ் பேருல வந்து இப்படி….? மறுபடியும் அதே கேள்விதானா.. மாசத்துக்கு ஒருக்கா கூட சினிமா விமரிசனம் உங்களுக்கு ஆகாதுன்னா எதுக்காக இந்தப்பதிவுல வந்து இவ்வளவு பின்னூட்டம் போட்டீங்க,??? அது போகட்டும்
@@@. ஒரு இயக்குனருக்கு வினவை போன்றோ அல்லது தோழர்களை போன்றோ வர்க்க ரீதியாக சிந்திக்க தெரியுமா தனிநபரின் வாழ்க்கையாக மட்டுமே அனைத்து சினிமாக்களும் காட்டப்படுகிறது@@@
ஒரு பார்பானால கூடத்தான் தலித்து மாதிரி சிந்திக்க முடியாது…. ஒரு முதலாளியால தொழிலாளி மாதிரி சிந்திக்க முடியாது.. ஒரு ஆணாதிக்கவாதியால பெண்னை போல சிந்திக்க முடியாது இதுக்கெல்லாம் என்ன பண்ணலாம் தோழர்????
குறி நண்பா, ஒண்ணுமே பண்ண முடியாது. உங்கள மாதிரி கட்டுரை பின்னூட்டம் எழுதுபவர்களால் கார்ல்மார்க்ஸ் என்னை மாதிரி சிந்திக்க முடியாது.
தியாகுவா யாரந்த தியாகு
/ஒரு பார்பானால கூடத்தான் தலித்து மாதிரி சிந்திக்க முடியாது…. ஒரு முதலாளியால தொழிலாளி மாதிரி சிந்திக்க முடியாது.. ஒரு ஆணாதிக்கவாதியால பெண்னை போல சிந்திக்க முடியாது இதுக்கெல்லாம் என்ன பண்ணலாம் தோழர்????//
ஆமாம் அதுக்கெல்லாம் நாம ஒன்னும் செய்யமுடியாது
@@@தியாகுவா யாரந்த தியாகு@@
தோழர் தியாகு.. மேலே உள்ள காரல்மார்க்ஸ் பதிவின் படத்துக்கும் கீழே உள்ள காரல்மார்க்ஸ் படத்துக்கும் இங்கே https://www.vinavu.com/2010/02/05/goa-tamil-padam/#comment-16817 தியாகு பெயரில் வெளியான பின்னூட்டங்களில் உள்ள படத்துக்கும் உள்ள ஒற்றுமே வேற்றுமையை அறியமுடியுமானால் யார் தியாகு என்பது உங்களுக்கு தெரியும்..
என்னை பொறுத்தவரை தியாகு என்ற பெயரில் நீங்கள் பல ஆண்டுகளாக நீங்கள் ஏற்கனவே பிரபலமானதால் இங்கே வினவை திட்டுவதற்காகவே காரல் மார்க்ஸ் வேடத்தை பூண்டிருக்கிறீர்கள். இந்த மலிவான வக்ரா பஞ்சர் உத்தியை கடாசிவிட்டு நேர்மறையாகவே விமர்சனம் செய்திருக்கலாம்.
🙁
என்ன ஆச்சு தோழர்? நீங்களுமா?
@@ஆமாம் அதுக்கெல்லாம் நாம ஒன்னும் செய்யமுடியாது@@
என்னது ஒன்னும் செய்ய முடியாதா??? அப்ப எதுக்கு கார்ல்மார்க்ஸ் நாமம், உபரிமதிப்பு ஜபம்??? பேசாமா சித்தம் போக்கு சிவன் போக்குன்னு மோட்டுவளை பாத்துகிட்டு உக்கார வேண்டீதானே???
//என்னது ஒன்னும் செய்ய முடியாதா??? அப்ப எதுக்கு கார்ல்மார்க்ஸ் நாமம், உபரிமதிப்பு ஜபம்??? பேசாமா சித்தம் போக்கு சிவன் போக்குன்னு மோட்டுவளை பாத்துகிட்டு உக்கார வேண்டீதானே?//
நொண்டியை நடக்க சொன்னால் நடப்பானா
அவன் இப்படி நடக்கணும் அப்படி நடக்கணும் என்பது
விமர்சனமா ?
அந்த பார்வை இல்லாதவனை ராஜ பார்வை பார்க்க சொல்லும் விசயத்தில்
இல்லாத லாஜிக்கை குற்றம் சொன்னேன்
அட கொண்டையை மறைக்க முடியாம போயிடுச்சே
சினிமா விமர்சனம் தேவை …….சினிமாவை உதாரணமாய் எடுத்து கொள்ளும் இளைஞன் இருக்கும் பொழுது ஏன் சினிமா விமர்சனம் கூடாது என்கிறீர்கள் ……………..கட்டாயம் தேவை ………………….மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் படங்கள் மீது விமர்சனம் தேவை என்றே நினைக்கறேன் மார்க்ஸ் அவர்களே
மக்கள் எதிர் கொள்ளும் சமூக பிரச்சனை ஆயிரம் இருக்கையில் சினிமா
விமர்சனம் ஏன் என்பதுதான் கேள்வியை தியாகு எழுப்பினா
சினிமா விமர்சனம் தனிநபர் விமர்சனமாக போகாத பட்சத்தில் சரியே
அதிக சினிமா விமர்சனமும் – வினவை சினி மினி பத்திரிக்கை மாதிரி ஆக்கிடும் என்றும் நானும் கருதுகிறேன்
இதை பாருங்கள் இந்த சுட்டியில் நான் வினவு தளத்தையே வலைதளம் என சுட்டி இருக்கேன்
அதற்காக வினவுதான் காரல்மார்க்ஸா ?
அங்காடித் தெருவுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று பலர் நினைக்கலாம். சில மேதைகள் படம் பார்த்த எழுச்சியில் கம்யூனிஸ்டுகள் சரவணா ஸ்டோரில் ஏன் சங்கம் கட்டவில்லை என்று அதிகார தோரணையில் கவலைப்படுகிறார்கள். கஷ்டப்படும் மக்களுக்காக கம்யூனிஸ்டுகள் மட்டும்தான் சங்கம் கட்டவேண்டும் என்பதில்லை. அங்காடித் தெருவுக்காக மனிதாபிமானத்தை சிரமப்பட்டு நினைவு கூறுபவர்களும் அதைச் செய்யலாம்.
சரவணா ஸ்டோரில் தொழிற்சங்கம் கட்ட முடியாது என்பதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று சாதிப்பற்றும், சொந்த வாழ்க்கைக்கையின் சிரமங்களும் ஏற்படுத்தும் அடிமைத்தனம். இரண்டு இத்தகைய கடுமுழைப்பு வேலை செய்யும் தொழிலாளிகள், பொழுது போக்கு என்பதற்கே வாய்ப்பற்ற நிலையில் தொழிற்சங்கம் என்ற பணிக்கு சமூக நேரம் ஒதுக்க முடியாமல் இருக்கும் யதார்த்தம்.
ஏம்பா, ஏதோ படம் நல்லாகீது அப்பிடின்னு நெர்யபேரு சொன்னாங்கோ, அதுனால நானும் நல்லாகீதுன்னு சொல்றேன் அப்பிடீன்னு சொல்றீங்கோ. அதே நேர்த்துல இந்தப் பட்துல அது இல்ல, புளி இல்ல, மொள்கா இல்லன்னு சொல்லிகினே கீரிங்கோ. நீங்களா பாத்து ஏதாவது நல்ல படமா காட்டுங்கோ நாங்க பாக்குறோம்.
அதே மாறி சங்கம் கட்ட முடியாதுன்னு சொல்ல வந்து அந்தப் புள்ளைங்க மேலயே பழிய போட்டு நீங்க ஒதுங்கிலான்னு பாக்குறீங்க. அவுங்குளுக்கு ஜாதி பாசம்னு சொல்றீங்கோ. இன்னொன்னு நேரம் இல்லன்னு சொல்றீங்கோ. ரெண்டாவது சொன்னது வேண்ணா ஏத்துக்கலாம். ஆனா பாவம் மூனு வேளை சோறு வூட்ல கீறவுங்கோ துன்றதுக்காக இதுங்க இங்க மல்லாடிகின்னு இர்க்கும்போது ஜாதியாவது…….எதாவது.. அதெல்லாம் கெடியாதுப்பா. ஒய்க்கற புள்ளைங்களுக்கு ஜாதியிவுட கெவுரவமா சம்பார்ச்சமோன்னுதான் நென்குங்க. கம்மீனிஸ்டுங்கோதானப்பா தொய்லாளிங்ளுக்கா போராடிகீனுர்க்கோமுன்னு சொல்றாங்கோ. அவுங்கதான சங்க கட்ட முட்யும். நீங்க ஏம்பா போயும் கம்மீனிஸ்டுங்ளுக்கு வக்காலத்து வாங்றீங்கோ.
ஆக்க பூர்வமான விமர்சனத்தை பத்தி எல்லாம் நீங்க பேசாதீங்க
கேள்விக்குறி
வினவில் எல்லா இடங்களிலும் காணப்படும் தர்க்க பூர்வமற்ற தனிநபர் தாக்குதல் உங்களாலேயே பிறர் மீது தொடுக்கப்படுகிறது
அதை கண்டும் காணாமல் இருக்கும் வினவின் மீது அதே பாணியில்
பேர் மாற்றி திட்ட அதிக நேரம் ஆகாது அதற்காகவே காரல் மார்க்ஸ் வந்தார்
நீங்கள் உங்கள் போக்கை நிறுத்தி கொண்டு சுய விமர்சனம் ஏற்க மாட்டீர்களாம் ஆனால் அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ணுவீங்களாம்
அப்புறம் வினவு
இவர் பேசும் முறைகளை எங்குமே கணித்ததில்லை
ஒரு வேளை கேள்விகுறிதான் வினவோ என எல்லாருக்கும் சந்தேகம் வந்துடுச்சு
பல தோழர்கள் பிளாக் நடத்துகிறார்கள்
அசுரன் கூட பிளாக் நடத்தினார் அங்கே மாற்று கருத்து விவாதிக்கப்பட்டது
தாக்குதல் குறைவாகவும் விவாதம் அதிகமும் இருக்கும்
இங்கே அது இல்லையே
இதெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்
பிறகு காரல் மார்க்ஸ் , எங்கெல்ஸ் , கம்யூனிச பூச்சாண்டி எல்லாம் வரமாட்டார்கள்
அசிங்கமாக பெறுவதில் கேள்விகுறி ஒரு கில்லாடிகுறி என்பது உங்களுக்கு தெரியாதா? அவருக்கு இன்னொரு பெயரும் உண்டு , “அசிங்ககுறி” . இவர் அசிங்கமாக பேசி தாக்குதல் பண்ணுவதை கண்டுகொள்ளதீர்கள். கருத்தை சொன்னோமா சென்றோமா என்று இருக்க வேண்டும். வீணாக இந்த அசிங்கமானவர்களுக்கு எல்லாம் நேரத்தை வீண் செய்து பதில் சொல்லிக்கொண்டு இருக்க வேண்டாம் கார்ல்மார்க்ஸ் அவர்களே.
காடு வழியாக செல்லும்போது மான்களும் முயல்களும் நம்மை கடந்து செல்லும். கூடவே பன்றிகளும் ஓநாய்களும் செல்லும். இதெற்கெல்லாம் அசராமல் நீங்கள் பாட்டுக்கு போகவேண்டும்.
முட்டாஊ ரொம்ம்ம்ப முக்காதீங்கண்ணா.. மூளை வழுக்கி கிளாசட்டுகுள்ளார உய்ந்துரபோது 🙂
//முட்டாஊ ரொம்ம்ம்ப//
இந்த கெட்ட வார்த்தையை காபிரைட் வாங்கி இருக்கார் போல
Thozar Thiyagu, Dont support this guy “mootoo”. He is our class enemy. If you have any reservations with the political views of our vinavu comrades, send them personal mail and sort it out. If you are not convinced then bring it to open forum with correct identity. What you are doing cannot be accepted and unethical. This is not the right approach to debate with comrades. Please understand. – Comradely “Your Friend”
அன்பு Friend of you , I dont want anybody to support me or follow me. Im just passing message to carlmarx not to worry about that guy kelvikuri who always write with bad words. Carlmarx also would know me very well. Hello Mr. Carlmarx, please dont belive this “Friend of you”
டியர் Dear friend
i am not supporting anybody and then i am not thiyagu
he wrongly identifying me as thiagu
படமும் பதிவும் நன்றாக உள்ளது…
அங்காடி தெருவை இந்த பதிவை படித்த பிறகுதான் பார்த்தேன்… பதிவில் சொன்னது போல படத்தில் உண்மையை பிரதிபலிக்கவில்லை … அனால், தமிழில் இதுவரை சொல்லாததும் இருக்கிறது என்று இயக்குநர் சொல்லுவது போல எனக்கு தோன்றவில்லை… காதல், பருத்திவீரன், போன்று சாயல் உடைய… கீழ் தட்டு மக்களின் வாழ்கையில் உள்ள கஷ்டங்களை எடுத்துக்கொண்டு, ஒரு நல்ல கம்மேர்சியல் படமாக தான் தெரிகிறது…
செறிவு மிக்க உங்கள் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். அருமையான் விமர்சனம். தொடர்க.
அண்ணாச்சியாக நடித்திருக்கும் பழ.கருப்பையாவின் செட்டியார் சாதிதான் தமிழகத்தின் மரபார்ந்த வணிக சாதி. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உழைப்பே இல்லாத சுரண்டல் வட்டிக்கடையின் மூலம் சொத்து சேர்த்து பர்மாத் தேக்கில் அரண்மனை வீடுகள் கட்டி இன்று ப.சிதம்பரமாகவும், எம்.ஏ.எம். சிதம்பரமாகவும், ஸ்பிக் முத்தையாவாகும், அரசுவேலை, தொழில் என்று நடுத்தரவர்க்கமாகவும் இருக்கும் செட்டியார்களுக்கும், புதிய வணிக வர்க்கமாக தலையெடுத்திருக்கும் நாடார்களுக்கும் பாரிய வேறுபாடு உண்டு.எப்படி?
வசந்தபாலின் கதை களத்தை மட்டும் பாரட்ட முடியும். உண்மைகள் நிறைய தெரியாமலே, கற்பனை கதை சொல்ல முயற்சி செய்திருக்கிறீர்கள். அந்த ஏரியாவில் சில மாதங்கள் நான் வாழ்ந்திருக்கேன், அவர்களோடும் நான் பழகியிருக்கிறேன். நான் எப்படி என்று சொல்லாமல் போவதுபோலே நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள்….
உங்கள் விமர்சனத்தில் குறிப்பிட்டவற்றில் எல்லாவற்றையும் இல்லாவிட்டாலும் பெரும்பாலானவற்றை சொல்லியிருக்கமுடியும் தேவையில்லாத காட்சிகளையும் சலிப்பூட்டும் (சில) பாடல்களையும் நீக்கியிருந்தால் …ஆனால் முக்கிய சந்தையான உழைக்கும் மக்கள் சீரிய படங்களுக்கு வருவார்களா? மேல்தட்டு மக்களே விண்ணைத்தாண்டி வருவாயா மாதிரியான மெக்டொனால்ட் காதலைத்தான் பார்க்கிறார்கள்…
அப்புறம்….வசந்தபாலனிடம் மார்ட்டின் ஸ்கார்ஸீஸியை எதிர்பார்க்கமுடியாது வினவு! மேலும் ஸ்கார்ஸீஸியே படமெடுத்தாலும் நம் பார்வையாளர்களுக்கு அது பிடிக்காமல் போகும் என்பது என் அபிப்பிராயம். அப்படிபட்ட இயக்குனர்களும், படங்களும் வராமலிருப்பதற்கு சமூகமும் காரணம்தானே? நம் சந்தையில் இவற்றுக்கான சாத்தியங்கள் தற்காலத்தில் இருக்கிறதா?
நண்பரே வணக்கம்
நீங்கள் எதிர் பார்ப்பதைப்போல் யாரும் ஒரு படைப்பை வெளியிட முடியாது. வசந்தபாலன் ஒரு கிடைத்த கருத்தை கதையாக்கி இருக்கிறார். இதில் தலித்தாக இருந்து வந்த நாடார்கலாக இருந்தாலும் சரி அல்லது ‘பனியா’ குடும்பத்திலிருந்து வந்த ஒரு கருப்பயா நடித்திருந்தாலும் சரி அது ஒரு பெரிய விஷயமே இல்லை.
சார் நீங்க என்ன நாடார் ஆஹா?
கடைசியில் நீ என்ன சொல்ல வருகிறாய்.?
however the story, its real fact that there is no trade unions there.. even the human rights people done nothing in such issues.these people never bothered abt the govt directions(in inappropriate building).then how could they
அண்ணாச்சியாக நடித்திருக்கும் பழ.கருப்பையாவின் செட்டியார் சாதிதான் தமிழகத்தின் மரபார்ந்த வணிக சாதி. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உழைப்பே இல்லாத சுரண்டல் வட்டிக்கடையின் மூலம் சொத்து சேர்த்து பர்மாத் தேக்கில் அரண்மனை வீடுகள் கட்டி இன்று ப.சிதம்பரமாகவும், எம்.ஏ.எம். சிதம்பரமாகவும், ஸ்பிக் முத்தையாவாகும், அரசுவேலை, தொழில் என்று நடுத்தரவர்க்கமாகவும் இருக்கும் செட்டியார்களுக்கும், இதே செட்டியார்கள்தான் அண்ணாமலை பல்கலைகலகங்களிலும் ஸ்பிக் கம்பெனிகளிலும் எண்ணற்ற தொழிலாளர்களுக்கும் அலுவலர்களுக்கும் வேலை வாய்ப்புகளை கொடுத்ல்லகல் என்பதை மறக்கவோ மறைக்கவோ கூடாது, அதுபோல அம்பானியாக இருந்தாலும் அண்ணாச்சியாக இருந்தாலும் வாழ்கையின் முதல் முயற்சியலேயோ அல்லது வாழ்கையின் தொடக்கம் முதலோ வெற்றி பெறவில்லை அங்காடிதெருவின் நாயகனை போலவும் அங்குள்ள தொழிலார்களை போலவும் இருந்து படிபடியாகதான் முன்னேறி இருக்கிறார்கள் இங்கு நான் எந்த அண்ணாச்சியையும் செட்டியாரையும் நியாயபடுத்தவோ அவர்களுக்கு வக்காலத்து வாங்கவோ இங்கு பதிவு செய்யவில்லை அங்காடிதெருவில் வருகிற அண்ணாச்சி ஏன் கருங்காலி போன்ற கைத்தடிகளை வைத்துகொள்கிறார் படத்தின் ஆரம்பகட்ட (கனி என்கிற கதாபாத்திரம் அறிமுகமாகிற காட்சியில்) காட்சியில் கனியும் தனது பணியில் இருந்து கள்ளத்தனம் செய்துதானே மாட்டி கொள்கிறார்
தாழ்த்த பட்டோரின் அடையாளமான நாடார் சமூகம் பஞ்சமருக்கு ( பச்சை தமிழருக்கு ) சமூக பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அவர்களை நாடார் உறவின் முறையாக அறிவிக்க வேண்டும். இதுவே பெருவாரியான நாடார் மக்களின் விருப்பம்.
//அம்பானியோ, டி.வி.எஸ், ஹூண்டாய் முதலாளிகளெல்லாம் அண்ணாச்சிகள் போல கடுஞ்சொல் பேசி சாட்டையைச் சுழட்டும் நம்பியார் டைப் வில்லன்களல்ல. ஒரு வேளை வசந்த பாலன் அவர்களைப் பற்றி படமெடுக்க விவரங்கள் சேகரித்திருந்தால் அவரால் மணிரத்தினத்தின் குரு போலவோ அல்லது அதற்கு கம்மியாகவோதான் எடுத்திருக்க முடியும்.// Indha Karuthu Vasantha Balan Meethu Setrai Vaari Iraipathai Pol Ulladhu…Pls Dont Compare with Mani Rathnam….