பிப்ரவரி 19, 2009 ஆம் நாள் பலருக்கும் மறந்திருந்தாலும் அன்று நடந்த வழக்கறிஞர்கள் போலீசு மோதல் மறந்திருக்காது. ஈழப் பிரச்சினைக்காக சுப்பிரமணிய சுவாமியை எதிர்த்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் முழக்கமிட அன்று முழுநாளும் போலீசு வழக்குறைஞர்களை அடித்து நொறுக்கியது. இந்த காக்கிச் சட்டைப் பயங்கரவாதத்தில் நீதிபதிகளும் தப்பவில்லை. நீதிமன்றத்தையே லத்திக்கம்புகளாலும், கற்களாலும் சூறையாடிய போலீசு பயங்கரவாதத்தைக் கண்டித்தும் இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் வழக்குறைஞர் சங்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன.
இருப்பினும் இன்றுவரை எந்த போலீசு அதிகாரியும் தண்டிக்கப்படவில்லை. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, பானுமதி அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டாலும் அரசு அசைந்து கொடுக்கவில்லை. ஏன்?
அரசாங்கத்தின் முக்கியமான துறையான போலீசை எந்த அரசும் விட்டுக்கொடுக்காது என்பதே காரணம். போலீசு என்ன தவறிழைத்திருந்தாலும் ஆட்சியையும், அதிகாரிகளையும் பாதுகாக்கும் விசுவாசமான நாய்கள் என்பதால் அந்த நாய்கள் நீதிபதியையே கடித்துக் குதறியிருந்தாலும் கருணாநிதி அரசுக்கு கவலையில்லை. எனவேதான் நீதிமன்ற உத்திரவைக்கூட நிறைவேற்றாமல் டிமிக்கி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் 25.4.2010 அன்று அம்பேத்கர் சிலை திறப்பு விழா நடந்தது. இதில் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், துரை.முருகன், மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவின் முத்தாய்ப்பாக கருணாநிதி பேச ஆரம்பித்த போது தோழர்கள் முழக்கமிட்டனர்.
மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் (ம.க.இ.கவின் தோழமை அமைப்பு) வழக்குறைஞர்களான தோழர்கள், பெண்களையும் உள்ளிட்டு சுமார் பத்துபேர் ஏற்கனவே திட்டமிட்ட படி கருப்புக் கொடி ஏந்தி கருணாநிதி பேசும் போது முழக்கமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அதில் வழக்குறைஞர்களைத் தாக்கிய போலீசு அதிகாரிகள் மீது நடவடிக்க எடுக்க துப்பில்லாத கருணாநிதி அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
முதல்வர் கூட்டத்திலேயே எதிர்ப்பா என்று வேடிக்கை பார்ப்பதற்காக அழைத்து வரப்பட்ட தி.மு.கவின் குண்டர்கள் உடனே தோழர்கள் மீது அடிக்கப் பாய்ந்தனர். போலீசு வேடிக்கை பார்த்தவாறு அனுமதி கொடுத்தது. முழக்கமிட்ட தோழர்களை இழுத்து வந்து வெளியே ஆசை தீர அடித்து இரசித்தது அந்த கும்பல். குறிப்பாக தோழர் பார்த்தசாரதி இதில் படுகாயமடைந்தார். எனினும் தோழர்கள் தங்களது முழக்கத்தையும், பிரச்சாரத்தையும் விடவில்லை.
பெரிய பெரிய வழக்குறைஞர் சங்கங்களும், மற்ற முற்போக்கு, தமிழனவாத வழக்குறைஞர்களும் அமைதியாக வேடிக்கை பார்க்கும் போது அவர்களின் நலனுக்காக தோழர்கள் அடிபட்டுக் கொண்டிருந்தனர். இப்படி அடிபடுவோம் எனத் தெரிந்துதான் தோழர்கள் இந்தக் கலகத்தில் ஈடுபட்டனர். அதன்படி அந்த நோக்கமும் நிறைவேறியது.
அடிபட்ட தோழர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தோழர்கள் அடிபடும்போது வேடிக்கை பார்த்த போலீசு பின்னர் ஆறு தோழர்களை பல பிரிவுகளில் வழக்குப்போட்டு சிறையில் அடைத்திருக்கிறது. தலையில் தையல்போட்ட நிலையில் தோழர்கள் இப்போது சிறையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். எனினும் அவர்கள் மூட்டிய நெருப்பு எப்படியும் பரவி உயர்நீதிமன்றத்தில் ஆட்டம்போட்ட போலீசு அதிகாரிகளை நிச்சயம் தண்டிக்கும்.
மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளைத் தோழர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்!!
தொடர்புடைய பதிவுகள்:
- சென்னையில் வழக்குரைஞர் போராட்டத்தை ஆதரித்து ம.க.இ.க பொதுக்கூட்டம்!
- உண்மை உண்மை ஒன்றே உண்மை லத்திக் கம்பு ஒன்றே உண்மை!
- ஈழம்: போலீசு இராச்சியமாகிறது தமிழகம்! கருத்துப்படம், முழக்கங்கள்!
- போலீசு பாசிசத்தைக் கண்டித்து சென்னையில் இன்று கருத்தரங்கம் !
- வழக்குரைஞர்களை வில்லனாக்க தினமணியும் விஜயனும் செய்யும் சதி !
- தமிழக போலீசை காக்க ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் !
- போஸ் கொடுக்கிறான் போலீசு இ.பி.கோவை நம்புறவன் லூசு !
- நீதிமன்றத்தால் தேடப்படும் போலீசு குற்றவாளிகள் ! படங்கள் !!
- போலீசு வக்கீல் மோதலல்ல ! ஈழத்துக்கு எதிரான பார்ப்பன பாசிச பேயாட்டம் !!