Friday, June 2, 2023
முகப்புபோலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா? கண்டனக் கூட்டம் !!
Array

போலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா? கண்டனக் கூட்டம் !!

-

vote-012 25 ஏப்ரல், 2010 அன்று உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவின் கூட்டத்தில் அமர்ந்திருந்த வக்கீல்கள் எத்தனை பேர்? வக்கீல்கள் உடுப்பில் வந்திருந்த திமுக தொண்டர்கள் மற்றும் குண்டர்கள் எத்தனை பேர்?

கருப்புக் கொடி காட்டி அடிபட்ட HRPC வழக்குரைஞர்கள் மீது வழக்கு. வீடியோ, புகைப்பட ஆதாரங்கள் இருந்தும் வக்கீல்களைத் தாக்கிய ரவுடிகள் மீது வழக்கு இல்லை.

______________________________________________

“வக்கீல் சங்கத் தலைவர் பால் கனகராஜ் தலைமையில் 200 வக்கீல்கள் முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டுவார்கள்”- இது ஏப்ரல் 22, 2010 தினத்தந்தி செய்தி. ஏப்ரல் 23 அன்று தினத்தந்தியில் பால் கனகராஜின் மறுப்பு செய்தி. — இடையில் நடந்தது என்ன?

நீதி மன்றத் தடை ஆணை காரணமாகத்தான் 4 போலீசு அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க இயலவில்லை என்று முதல்வர் கூறியிருப்பது உண்மையா? அல்லது உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கச் சொன்ன பிறகும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உண்மையா?

_____________________________________________________

மறக்க முடியுமா?

பிப்ரவரி 19, 2009.

உயர்நீதிமன்ற வளாகத்தில் போலீசு வெறியாட்டம்

அன்று குற்றமிழைத்த போலீசுக்கு அரணாக இருக்கும் முதல்வருக்கு இன்று கருப்புக் கொடி காட்டிய HRPC  வழக்குரைஞர்கள் மீது வக்கீல் வேடமணிந்த திமுக ரவுடிகள் தாக்குதல்!

__________________________________________________________

போலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா?  கண்டனக்கூட்டம்!

நேரம்: 29.05.2010, வியாழன், மாலை 5 மணி

இடம்: ஒய்.எம்.சி.ஏ அரங்கம், என்.எஸ்.சி போஸ் சாலை, உயர்நீதி மன்றம் எதிரில், ஹாட் சிப்ஸ் அருகில்

நிகழ்ச்சி நிரல்:

தலைமை: தோழர் சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், HRPC, தமிழ்நாடு

கண்டன உரை:

தோழர். வாஞ்சிநாதன், வழக்குரைஞர், HRPC – மதுரை.

திரு. சங்கரசுப்பு, வழக்குறைஞர், சென்னை.

திரு. இராதகிருஷ்ணன், வழக்குறைஞர், சென்னை.

திரு. திருமலைராஜன், வழக்குறைஞர், ஈரோடு, முன்னாள் தலைவர், தமிழக கீழமை நீதிமன்ற வழக்குறைஞர் கூட்டமைப்பு.

ஏப்.25 அன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட வழக்குறைஞர்களின் நேருரைகள்!

அனைவரும் வருக! நீதிக்கான போரில் தோள் தருக!

_____________________________________________

கறுப்புக் கொடியும் பெருச்சாளிகளும்!

கறுப்புக் கொடிக்கெல்லாம்
அஞ்சாதவராம் கலைஞர்.
ஒத்துக் கொள்ளலாம் உண்மைதான்,
இந்தியக் கொலைக்கரத்தால்
துண்டு துண்டாக்கப்படட்ட
ஈழத்தமிழரின் தொப்புள்கொடிக்கே
அஞ்சாதவர்தான்…!

“யாரோ! தூண்டிவிடப்பட்டவர்களாம்”
உண்மைதான்,
ஈழத்தமிழர்களுக்காக போராடிய வழக்குரைஞர்களை
போலீசை ஏவித் தாக்கிய கருணாநிதி அரசுதான்
புறநிலையாக அவர்களைத் தூண்டிவிட்டது.
மற்றபடி,
காக்கிச் சட்டைகள், குண்டாந்தடிகள்
கரைவேட்டியில் ரியல் எஸ்டேட்டும்
கந்துவட்டியுமாக கழகப் பணியாற்றும் குண்டர்கள்
இத்தனையும் சூழ்ந்திருக்க
எழுந்து நின்று முழங்கிய தோழர்களைத் தூண்டியது
மார்க்சிய-லெனினிய அரசியல் சக்தி.

“கறுப்புக்கொடி காட்டியவர்கள்
எண்ணிக்கை குறைவாம்!”
உண்மைதான் ஆனால்
அந்த ஆறு தோழர்களின்
அரசியல் உறுதி கண்டு
சாயம்போன உங்கள் முகத்திற்கு
அது ஒன்றும் குறைவில்லை.

ஆள், அம்பு, சேனை, அதிகாரம்
அத்தனைக்கும் மத்தியில்
அவர்களால் உண்மை பேச முடிந்தது.
அத்தனையும் வைத்துக்கொண்டு
உங்களால் தைரியமாக
ஒரு உண்மை பேச முடிந்ததா?

தெளிவாகக் “கருணாநிதிக்கு கறுப்புக் கொடி”
எனக் கண்டனம் முழங்கியும்
“அம்பேத்கார் சிலை திறப்புக்கோ!?”
என நீங்கள் ஆர்.எஸ்.எஸ்ஸை விஞ்சியதைப் பார்த்து
அதிர்ச்சியில்,
கோல்வால்கர் கோயபல்சு பிணங்கள்
குப்புறத் திரும்பிப் படுத்துக் கொள்கிறது.

தமிழினத் தலைவரின் நாக்கிலேயே
தூக்குமரம் பார்த்து
உயிரெழுத்து தவிக்குது!
மெய்யெழுத்து நடுங்குது!
பொய்யுரைகள் தீண்டியதால்
செம்மொழி உயிருக்குப்போராடி  துடிக்கிறது!

உற்சவமூர்த்திக்கே உக்கிரம் குறைந்தாலும்
அடிப்பொடி, ஆழ்வார்களுக்கோ
வக்கிரம் குறையவில்லை.

“ஊடகக் கவனத்தை ஈர்ப்பதற்காக
கறுப்புக் கொடி காட்டினார்கள்” என்று
கோபாலபுரத்து பூனை இரவிக்குமார்
கலைஞர் மடியிலிருந்து குதிக்கிறார்.

பீச்சாங்கரையில் படுத்துக்கொண்டு
மூச்சுக்காற்று இரத்தத்தில் கலப்பதற்குள்
இலங்கை யுத்தத்தை நிறுத்தியதாக
உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட
கருணாநிதியின் ஊடகக்கவனத்தைப் பற்றி
மூச்சு கூட விடாத இந்த சூரப்புலி
முந்திக் கொண்டு பாய்வது எதற்காக?

இரவிக்குமார் சாதாரண ஆள் இல்லை!
என்றாவது கலைஞர் ஒரு
எம்.பி. துண்டை வீசியெறிந்தால்
சிறுத்தை வேடத்தை கலைத்துவிட்டு
கரைவேட்டியில் உலாவர காத்திருக்கும்
புளுகுப் பூனை இது!

எங்கே பிணம் விழுந்தாலும்
இடப்பக்கம் எனக்கு, வலப்பக்கம் உனக்கு
என போயசு நரியுடன் சேர்ந்து
புரட்சிகர ஊளையிடும்
புல்லறிவாளர்களுக்கும் பொத்துக் கொண்டு வருகிறது.

சட்டவரம்பை மீறி கருப்புக் கொடி காட்டியதை
எங்கள் திட்டப்படி ஏற்க முடியாது என
போற வழிக்கு புண்ணியம் தேடுகிறார்
வலது கம்யூனிஸ்டு சிவபுண்ணியம்.

சட்டமன்றத்தில் சமர்த்தாக
“என்ன இருந்தாலும் கொஞ்சம்
இடம் பார்த்து அடித்திருக்கலாம்” என்று
இதமாக நலங்கு வைக்கிறார்
நாத்தனார் பாலபாரதி!

மனிதகுல விரோதி
ஞானசேகரனுக்கோ
மாவோயிஸ்டு பேதி!

மொத்தத்தில் நாறியது ஜனநாயகம்!

ஒரு கறுப்புக்கொடியை உதறப்போக
சட்டமன்றப் பொந்திலிருந்து
எத்தனை பெருச்சாளிகள்
எடுக்குது ஓட்டம்!

கறுப்புக்கொடிக்கே உருட்டுக்கட்டை அடி என்றால்
இது பேசி தீர்க்க கூடிய ஜனநாயகமா?
இல்லை… தீர்த்துவிட்டு
பேசக்கூடிய ஜனநாயகமா?

தெரிந்துகொள்ளுங்கள்
உழைக்கும் மக்களே!

–          துரை. சண்முகம்

__________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்:

  1. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேணும்

  2. இன்றைய ஆனந்த விகடன் பார்த்தீர்களா ? அதில் வக்கீல்கள் சங்கத்தலைவர் 
    பால் கனகராஜ் ஆறேழு வழக்கறிஞர்கள் கருப்பு கொடி காட்டினார்கள் அதனை இன்னொரு தரப்பு வழக்கறிஞர்கள் அப்புறப்படுத்தினார்கள் என சொல்லியிருக்கிறார் …
    ஏன் பால் இப்போது பால் மாறிப் பேசவேண்டும்? 

  3.  செய்தியை, நிகழ்ச்சியை நானும் மறந்து விடுகிறேன், நீங்களும் மறந்து விடுங்கள். வழக்கறிஞர்களும் மறந்து விட்டு நல்ல வழியை மக்களுக்கு காட்டுங்கள்
    கருணாநிதி.
    http://www.sivajitv.com/news/karunanidhs-explanation-for-high-court-incidents.htm

  4. ///////////கறுப்புக்கொடிக்கே உருட்டுக்கட்டை அடி என்றால்
    இது பேசி தீர்க்க கூடிய ஜனநாயகமா?
    இல்லை… தீர்த்துவிட்டு
    பேசக்கூடிய ஜனநாயகமா?///////…………..

    — அதிலென்ன சந்தேகம்…..

    • ஜனநாயகம் இத இன்னுமா இந்த உலகம் நம்பிக்கிட்டு இருக்கு . ஜனநாயகம் ந 5 வருடத்தில் வரும் ஒரு தேர்தல் தான்

  5. கூட்டத்திற்கு பத்திரிக்கையாளர்களின் சார்பாக தாக்கப்பட்ட பத்திரிகையாளர்களின் சார்பாக பேச்சாளர்கள் யாரும் இல்லையா

  6. நானும் கண்டன கூட்டத்தில் கலந்துகொண்டேன்.அனைவரும் தங்கள் கருத்தை சரியாக பதிவு செய்தார்கள்.இந்த போராட்டம் பல உண்மைகளை மக்களுக்கு எடுத்து சொல்லும் ,அனைத்து போராளிகளுக்கும எனது பாராட்டுகள் & வாழ்த்துக்கள்.

  7. //அதிர்ச்சியில்,கோல்வால்கர் கோயபல்சு பிணங்கள்குப்புறத் திரும்பிப் படுத்துக் கொள்கிறது.//

    பட்டாசு…!

  8. \\\ஆள், அம்பு, சேனை, அதிகாரம்அத்தனைக்கும் மத்தியில்அவர்களால் உண்மை பேச முடிந்தது.அத்தனையும் வைத்துக்கொண்டுஉங்களால் தைரியமாகஒரு உண்மை பேச முடிந்ததா//

  9. /////////////ஒரு கறுப்புக்கொடியை உதறப்போக
    சட்டமன்றப் பொந்திலிருந்து
    எத்தனை பெருச்சாளிகள்
    எடுக்குது ஓட்டம்!/////////////////////

    சூப்பர்!!!!!!!!!!!!

    இந்த லட்சனத்துல தமிழகத்துக்கு இன்னோரு பொந்து வரப்போகுதாம்…. அதாங்க சட்ட மேலவை!
    மக்கள் தேர்ந்தெடுத்த வெட்டிகள் எல்லாம் செய்த சேவை போதாது என்று இது வேற?

    ////கறுப்புக்கொடிக்கே உருட்டுக்கட்டை அடி என்றால்
    இது பேசி தீர்க்க கூடிய ஜனநாயகமா?
    இல்லை… தீர்த்துவிட்டு
    பேசக்கூடிய ஜனநாயகமா?//////

    ம் இருக்கட்டும் இருக்கட்டும்! ஆக இது தான் கதை….
    தீர்த்துவிட்டே பேசுவோம்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க