privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ஈழம்: பொருளாதாரத் தடையில் ஈழத்து வாழ்க்கை !

ஈழம்: பொருளாதாரத் தடையில் ஈழத்து வாழ்க்கை !

-

ஈழம்: பொருளாதாரத் தடையில் ஈழத்து வாழ்க்கை !

ஈழத்தமிழர்கள் மீது உள்ளூர் முதல் உலக அளவில் விதிக்கப்படாத தடைகளே இல்லையென்று சொன்னால், அது மிகையில்லை. ஈழத்தில் பொருளாதாரத்தடை முதல் உலக அரங்கில் பயங்கரவாதிகள் என்று ஈழத்தமிழர்களை இலங்கை அரசு முத்திரை குத்தி தடை விதித்தது வரை உலகின் எந்த மூலைக்குப் போனாலும் தடைகள் மூலம் முடக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம். ஈழத்தமிழர்களின் பேச்சுரிமை, கருத்துரிமை முதற்கொண்டு வாழ்வுரிமை வரை திட்டமிட்டே பறிக்கப்பட்டது, இன்றுவரை பறிக்கப்படுகிறது. எத்தனையோ தடைகளை நாங்கள் தாண்டி வந்திருந்தாலும், எங்களை மிகவும் வாட்டியதும், வாட்டிக்கொண்டிருப்பதும் பொருளாதாரத்தடை தான்.

ஒரு தனியினமாக எங்கள் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான வழிமுறைகள்அனைத்திற்கும் பொருளாதார தடை மூலம் முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. அரசவர்த்தமானியில் வார்த்தையளவிலேனும் கூட வடபகுதிக்கு நல்ல செய்தி வந்து நான் அறிந்ததில்லை. நான் ஈழத்தில் இருந்த காலங்களில் பொருளாதார தடை, அதன் தாக்கங்களை பற்றி மட்டுமே சிந்தித்ததால், அது எங்கள் மீது ஏவிவிடப்பட்ட காரணங்களோ சிங்கள அரசின் அரசியல் உள்நோக்கங்களோ எனக்கு அவ்வளவாக புரிபடவில்லை. அதாவது, சீனிக்கு பதில் பனங்கட்டி, உருளைகிழங்கிற்கு பதில் மரவள்ளி இதையெல்லாம் மாற்றீடாக எப்படி பாவிப்பது, Wonderlight (சோப்) இல்லாமல் எப்படி துணி துவைப்பது என்ற சிறுபிள்ளைத்தனமான சிந்தனையில் தான் இருந்தேன். இப்போது அதை மீட்டிப்பார்த்தால், அது எங்களின் மீது தொடுக்கப்பட்ட ஓர் உளவியல் மற்றும் பொருளாதார அடக்குமுறை என்றுதான் எனக்கு தோன்றுகிறது.

என் அறிவுக்கு எட்டியவரையில் நாடுகள் (ஈராக், கியுபா, ஹெய்ட்டி மற்றும் பல) மீது தான் பொருளாதார தடை விதித்ததை படித்திருக்கிறேன், கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு நாடு அதன் சொந்தநாட்டு மக்கள் மீதே, அதுவும் அறிவிக்காமலேயே இப்படி ஓர் தடையை விதிப்பது பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. பொருளாதாரத்தடைக்கு பொதுவாகவே மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புகள், மற்றும் சிறுவர் நலம் பேணும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தே வருகின்றன. காரணம், அதன் மூலம் “மனித உரிமைகள்” பாதிக்கப்படுவதுதான்.

எனக்கு எப்பொழுதுமே மனித உரிமைகள் அது தொடர்பான சட்டங்கள் மீதான ஓர் ஆர்வத்தால் இந்த தடை மூலம் பாதிக்கப்படும் எங்களின் உரிமைகள் என்னென்னவென்று தேடித்தெரிந்துகொண்டேன். ஐ. நா. மற்றும் சர்வதேச சட்டங்களின் படி பார்த்தால் அது வெறும் உணவுக்கும் மருந்துக்குமான தடையாக மேலோட்டமாக எனக்கு தோன்றவில்லை. என்னுடைய அனுபவத்தில், என்னைச்சுற்றி நடந்தவைகளைப் பார்த்ததில் ஈழத்தமிழர்களை பொறுத்தவரை பொருளாதார தடை ஓர் கருவியாக, ஆயுதமாக எங்கள் மீதான ஒடுக்குமுறைக்கும், இனவழிப்புக்கும் மட்டுமே பிரயோகிக்கப்பட்டது என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

நான் ஏன் அடிக்கடி சர்வதேச மற்றும் ஐக்கிய நாடுகள் பற்றி பேசுகிறேன் என்று சிலர் நினைக்கலாம். சிலர் எரிச்சலடையலாம். இலங்கையில் எங்களின் அடிப்படை உரிமைகள் சட்டரீதியாக பாதுகாக்கப்படாததால் தான், சர்வதேச சட்டங்களின் சந்து, பொந்துகளில் எல்லாம் நுழைந்தாவது நாங்கள் எங்கள் உரிமைகள் பற்றிப்பேசவேண்டியுள்ளது. இது ஓர் துர்ப்பாக்கிய நிலைதான். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பிரகடனம் (Universal Declaration of Human Rights-UDHR), பன்னாட்டு பொருளாதார, சமூக, மற்றும் கலாச்சார உரிமைகள் ஒப்பந்தம் ( International Covenant of Economic, Social, and Cultural Rights-ICESCR-1996), பன்னாட்டு குடிமக்கள் மற்றும் அரசியல் உரிமைகள் ஒப்பந்தம் (International Covenant of Civil and Political Rights-ICCPR), சிறுவர் உரிமைகள் (Convention on the Rights of the Child-CRC) போன்ற ஆவணங்களின் படி பொதுவாக அடிப்படை மனித உரிமைகள் பொருளாதார தடை மூலம் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அவ்வாறான அடிப்படை உரிமைகளில் சில முக்கியமானவை: வாழ்வுரிமை (Right to Life), பேச்சு மற்றும் கருத்துரிமை (Right to Freedom and Expression), சுகாதாரம், கல்வி, போதிய உணவு இன்றி பசி பட்டினி, போதிய இருப்பிட வசதிப்பிரச்சனை என பட்டியலிடப்படுகின்றன.

அவர்களுக்கு அவை ஆவணங்கள் மட்டுமே. எங்களுக்கு அவை வாழ்நாளில் மறக்கமுடியாத வலிகள், அனுபவங்கள். நான் இங்கே சட்டங்கள் பற்றிப் பேசப்போவதில்லை. பொருளாதாரத்தடை மூலம் மறுக்கப்பட்ட என் உரிமைகள் பற்றியே பேசப்போகிறேன்.  இது பிழையென்றால் யாராவது என்னை திருத்துங்கள். இதையெல்லாம் படித்தபிறகு நான் நினைத்துக்கொண்டேன், வழக்கம் போல் ஐ. நா. பாதிக்கப்படுபவர்களின் உரிமைகளை பாதுகாக்கிறார்களோ இல்லையோ எல்லாவற்றையும் நன்றாகவே வரையறுத்தும், பட்டியலிட்டும் வைத்திருக்கிறார்கள். பொருளாதார தடை என்றவுடன் ஏதோ அரிசி, பருப்பு, மருந்து மட்டும் தான் பிரச்னை என்று அன்று அந்த சூழலில் அப்பாவித்தனமாக நினைக்கத் தோன்றியது. ஆனால், ஈழத்தில் எனக்கு, (ஒரு தனி மனிதனுக்கு) பொருளாதார தடை மூலம் மறுக்கப்பட்டதும், பறிக்கப்பட்டதும் என் அடிப்படை உரிமைகள் தான் என்று இப்போதுதான் புரிகிறது. இந்த பொரளாதார தடை மூலம் வாழ்வுரிமை பறிக்கப்படுமா என்றெலாம் யாராவது நினைக்கலாம். ஆம், ஈழத்தில் அப்படியும் பறிக்கப்பட்டது.

சிங்களப் படைகள் குண்டுகளை எங்கள் தலைகள் மீது போட்டு எங்களை கொன்றார்கள். அதோடு சேர்த்து, பொருளாதார தடை கூட ஓர் கருவியாக, ஆயுதமாக எங்களின் உயிரை குடித்தது. அரிசி, பருப்பு, முக்கியமாக தடுப்பூசி மருந்துகள், Antibiotics, வலிநிவாரணிகள் இதெல்லாம் ஒரு மனிதனின் உயிரைக்காக்க அத்தியாவசியமான பொருட்கள். இவற்றையெல்லாம் இலங்கை அரசு பொருளாதார தடை என்ற போர்வையில் வடபகுதிக்கு வரவிடாமல் தடுத்தது. உள்ளூர் உற்பத்திகள் போர்ச்சூழலில் பாதிக்கப்பட்ட நிலையில் இதையெல்லாம் எங்கிருந்து பெறுவது. வாழ்வுரிமை என்பது வேறொரு விதமாகக் கூட மறுக்கப்பட்டது.

போர், பொருளாதாரத்தடை இவற்றின் காரணமாக உள்ளககட்டுமானப்பணிகள் என்பது முற்றுமுழுதாக தடைப்பட்டு இருந்தது. இவ்வாறான கட்டுமானப்பணிகள் என்பதற்குள் தொழில்வாய்ப்புகள், போக்குவரத்து (எரிபொருள்) போன்ற முக்கியமான விடயங்களும் அடங்கும். தொழில்வாய்ப்புகள் என்பது வாழ்வாதாரங்கள் என்பதைக் குறிக்கும். வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டால் மனிதன் எப்படி உயிர்வாழ முடியும்?

குறிப்பாக மீன்பிடி, விவசாயம் மற்றும் அன்றாட கூலி வேலை போன்ற தொழில்வாய்ப்புகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது.  என் ஊரில் வசதியாக வாழ்ந்தவர்களும் இருந்தார்கள். அதே நேரம் அன்றாடம் உழைத்துப்பிழைப்பவர்களும் இருந்தார்கள். பொருளாதார தடையின் பாதிப்பு எல்லோருக்கும் பொதுவானது என்றாலும், அது அன்றாடம் உழைத்துப்பிழைப்பவர்களுக்கு ஓர் வலி தானே. அவ்வாறான குடும்பங்களுக்கு பங்கீட்டு முறையில் அவர்களுக்கு கிடைத்த உணவு அவர்கள் பசியை போக்க போதுமானதாக இருந்ததில்லை. அவ்வாறான குடும்பங்களில் உள்ள குழந்தைகள் சிலர் காலை சாப்பாட்டிற்கு அந்த நாட்களில் பனம்பழம் சாப்பிட்டுவிட்டு பள்ளி சென்ற பரிதாபக்கதைகளும் உண்டு. அவர்கள் வீட்டில் பனைமரம் கிடையாது. வேறு இடங்களுக்கு சென்று பொறுக்கி வருவார்கள்.

நான் ஏன் இதையெல்லாம் சொல்கிறேன் என்றால், ஈழத்தில் ஏற்கனவே இடப்பெயர்வு, சாவு, காணாமல் போனவர்கள், வாழ்விடங்களை இழந்தது என்று நிறைய கஷ்டங்களுக்கு பிறகு பொருளாதார தடை என்பதும் சேர்ந்து எங்களை வாட்டியதானால் பல பிரச்சனைகளுக்கு முகம் ொடுக்கவேண்டியிருந்தது. பொருள் வசதி இல்லாத குடும்பங்களில் பிரச்சனைகள் என்பதும் சில சமயங்களில் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது என்றே நினைக்கிறேன். குறிப்பாக வாழ்வாதரங்களை இழந்ததால் வந்த மன உளைச்சலால் தான் குடும்பம்களுக்கிடையே இவ்வாறான பிரச்சனைகள் தோன்றின. இது மன உளைச்சல் என்றோ, அதற்கு ஏதாவது மன ஆறுதல் தரும் விடயங்களில் மனதை செலுத்த வேண்டுமென்பதோ பாதிக்கப்பட்ட யாரும் அறியாத ஓர் விடயம். சரி, ஒருவேளை அதை புரிந்துகொண்டாலும், எந்த வழியில் மனதை ஆற்றுவது? அதனால் அது முடிவில்லாமல் நீண்டுகொண்டே போனது.

சாதாரணமாக இரண்டு பேர் சந்தித்தால் அந்நாட்களில் தங்களுடைய குடும்பங்கள் இலங்கை ராணுவத்தாலும் (Operation Liberation), இந்திய ராணுவத்தாலும் எப்படி பாதிக்கப்பட்டார்கள் என்றே பேசிக்கொண்டார்கள். உங்கள் வீட்டில் எத்தனை பேர் இறந்தார்கள், ராணுவம் உங்கள் வீட்டை நாசப்படுத்தியதா இப்படியான விசாரணைகளும், இந்த துன்பங்களிலிருந்து எப்போது விடுதலை என்ற வேதனையும் வலியும் கலந்த அங்கலாய்ப்புகளும் தான் எங்களின் அன்றாட குசலம் விசாரிப்பாக இருந்தது. குடும்பத்தலைவர்கள் கொல்லப்பட்ட அல்லது காணாமல் போன குடும்பத்தில் அந்த பொறுப்பு குடும்பத்தலைவி மீது, குருவி தலையில் பனம்பழம் போலானது.

அவ்வாறான குடும்பங்களின் கஷ்டங்களை நான் கண்கூடாகவே கண்டிருக்கிறேன்.  மீன்பிடித்தொழில் செய்து அன்றாடம் பிழைத்தவர்கள் வாழ்வும் கஷ்டங்கள் நிறைந்ததுதான். ஆழக்கடலில் சென்று மீன்பிடிக்க முடியாது, “தடை”. அதனால், கரையோரப்பகுதிகளில் மாலைவேளைகளில் போய் ஏதோ கிடைக்கும் சிறிய மீன்களை பிடித்து அன்றாடம் வயிற்றுப்பிழைப்பை பார்த்துக்கொண்டவர்களும் உண்டு. இரவு நேரங்களில் வீதியோரம் மீனை சிறிய கூறுகளாக போட்டு விற்பவர்களை பார்த்திருக்கிறேன். இது தவிர மீன்பிடித்தொழில் தடை, விவசாய நிலங்கள் ராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளானது போன்ற காரணங்களால் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் மக்களை வாட்டியது. ஏற்கனவே இருந்த தொழிலை இழந்தவன் பொருளாதார தடை இருக்கும் இன்னோர் இடத்திற்கு சென்று புதிதாக எந்த தொழிலை செய்யமுடியும்?

இப்படி இடப்பெயர்வும், வயிற்றுப்பிழைப்புமே அன்றாட பிரச்சனைகள் என்றான பின் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்ற ஓர் பிடிப்பு இயல்பாகவே மக்கள் மனதில் இல்லாது போனது என்றுதான் நினைக்கிறேன்.  அந்த நாட்களில் யாருமே வாழ்க்கையில் ஓர் குறிக்கோளோடு இருந்தார்களா என்பது சந்தேகமே? எப்போது பட்டினியால் சாகப்போகிறேன் என்று நினைப்பவனுக்கு எங்கிருந்து குறிக்கோள் வரும்? ஒரு நாடு உண்மையாகவே தன் குடிமக்களின் உயிரை காப்பாற்ற நினைத்தால், பொருளாதார தடை என்ற பெயரில் எங்களை வாட்டியிருக்குமா? எங்களின் உயிரை தடை என்ற பெயரில் குடித்திருக்குமா?  வன்னியிலும் என் மக்களை சிங்கள அரசு இப்படித்தானே பட்டினிபோட்டும் கொன்றார்கள். இப்போது இதையெல்லாம் நான் மீட்டிப்பார்க்கும் போது எம் வாழ்வுரிமை பொருளாதார தடை மூலம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. எங்களை பட்டினி சாவிற்குள் தள்ளி எங்கள் வாழ்வுரிமை பறிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்?

ஏற்கனவே, பொருளாதார தடை என்பதால் பொருட்களுக்கு தட்டுப்பாடு. அதனால் உள்ளூர் உற்பத்திகளுக்கும் விலையேற்றம், பொருட்களுக்கான போட்டி என்று வழக்கமான அக்கப்போரும் இருந்தது. இருந்தாலும் இலங்கை அரசு வீசியெறிந்த அரிசிப்பருக்கைகளை ரேஷன் என்ற முறையில் பொறுக்கி, பொங்கித்தின்றுதான் உயிர் வளர்க்க வேண்டிய சூழ்நிலையிலிருந்தோம்.

விதானையார் (கிராமசேவகர்-அரசாங்கஊழியர்) மூலம் முறையாகப் பதிந்து எங்கள் வீட்டில், ஆடு, மாடு, கோழி, போரில் செத்தவர்கள்-குறிப்பாக குடும்பத்தலைவர்கள், செத்துக்கொண்டிருப்பவர்கள், சாகாதவர்கள், கணக்கெல்லாம் காட்டினால்தான் அந்த ரேஷன் அட்டையும் (ஈழத்தில் அதை கூப்பன் என்று சொல்வார்கள்) கிடைக்கும். சரி, விதானையோடு மல்லுக்கட்டி ரேஷன் அட்டை எடுத்து பங்கீட்டு முறையில் அரிசி, சீனி வாங்க கடையில் போய் கால்கடுக்க, வெயில் குளித்து செத்து, சுண்ணாம்பாகி நிற்கும்போது….. சிங்களப்படைகள் தங்கள் பங்கிற்கு ஹெலிகாப்டர் இல் வந்து சில சமயங்களில் சுட்டுவிட்டும் போவார்கள். என்னே மனித நேயம்?  நான் சாகும் வரையிலும் மறக்கமுடியாத இன்னொரு அனுபவமும் உண்டு.

என் மைத்துனர் (என் தாயாரின் சகோதரரின் மகன்) பத்து வயதில் சிங்களப்படையின் குண்டுவீச்சில் அங்கவீனமாக்கப்படதுதான். அது எப்படி நடந்தது என்று பின்னொரு பதிவில் சொல்கிறேன். ஆனால் அவர் குண்டடிபட்டு Antibiotics கிடைக்காததால் தான் அங்கவீனராக்கப்பட்டார். யாழ்ப்பாணம் வடமராட்சியில் இருந்த உருப்படியான ஒரேயொரு வைத்தியசாலை மந்திகை வைத்தியசாலை. பெரும்பாலான காயமடைந்தவர்கள் அங்கேதான் கொண்டுசெல்லப்பட்டார்கள். அதற்கு முக்கிய காரணம் அங்கே வெளிநாடுகளில் இருந்து தொண்டு நிறுவனங்கள் மூலம் வந்து பணியாற்றிய வைத்தியர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டதுதான். என் மைத்துனருக்கு முழங்காலுக்கு பின்னால் தான் காயம்பட்டது. அதை அப்போது பார்க்க ஏதோ ஓர் சிறுகாயம் போல்தான் எனக்கு தெரிந்தது. ஆனால், உரிய நேரத்தில் உரிய சிகிச்சை கிடைக்காததால் அவர் முழங்காலுக்கு மேல் ஓர் காலை இழக்க நேரிட்டது.

வலியில் முனகும் அந்த குழந்தையை சைக்கிளில் வைத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றால், அங்கே சொன்னார்கள் இப்போது இதற்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர்கள் யாருமில்லை. பிரான்ஸ் இலிருந்து வரும் வைத்தியருக்காக காத்திருக்க வேண்டும் என்று. வைத்தியசாலையில் அனுமதிக்க மறுத்து வலிநிவாரணி மட்டும் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். அந்த வலிநிவாரணி பலனில்லாமல் குழந்தை வலியில் துடித்தது வேறுவிடயம். வைத்தியர்களுக்காக காத்திருந்ததில் என் மைத்துனரின் காயம் சிதழ் பிடித்து, மெல்ல மெல்ல அழுகத்தொடங்கிவிட்டது (Necrotic). சிதழ் ஒருபுறமும், புண்ணின் துர்நாற்றம் ஒருபுறம், அந்த குழந்தையின் வலி ஒருபுறம் என்று பார்க்கவே வேதனையாகவும் கொடுமையாகவும் இருந்தது. ஒருவாறாக பிரான்சிலிருந்து வைத்தியர்கள் வந்து சொன்னார்கள், இது காலம் கடந்துவிட்டது. முன்பே Antibiotics கொடுத்திருக்கவேண்டும் என்றும் அப்படி கொடுக்காததால் தான் infection ஆகிவிட்டது என்றும் சொன்னார்கள். காலை முழங்காலுக்கு மேல் வெட்டவேண்டும் என்றும் சொன்னார்கள்.

இப்பொது நினைத்துப்பார்க்கிறேன், ஒருவேளை அந்த வைத்தியர்கள் வராமலே விட்டிருந்தால் என் மைத்துனர் செப்டிக் ஷாக் வந்து உயிர் விட்டிருப்பார். என் மைத்துனர் இப்போது கனடாவில் தான் இருக்கிறார். அவரை பார்க்கும் போதெல்லாம், அவர் செயற்கை கால் மூலம் தாண்டித்தாண்டி நடக்கமுடியாமல் நடக்கும் போது ஏனோ என்னால் வன்னியில் காயம் பட்ட குழந்தைகளை நினைக்காமல் இருக்கமுடிவதில்லை. நான் வாழும் நாட்டில் ஒரு குழந்தை சிறுவயதில் ஓர் பல்லை இழந்தாலும், அதற்கு ஓர் தேவதை (Tooth Fairy) வந்து மீண்டும் ஓர் புதிய பல் ஒன்றை தரும் என்று எத்தனையோ கதைகள் சொல்கிறார்கள். அந்த குழந்தையை தேற்றுகிறார்கள். ஆனால், ஈழத்தில் ஆயிரக்கணக்கில் அங்கவீனர்களாக்கப்பட்ட எங்கள் குழந்தைகளை எந்த தேவதையும் வந்து தேற்ற வேண்டாம். அவர்களை முட்கம்பி வேலிகளுக்கு வெளியே விடுங்கள் என்றுதானே கேட்கிறோம். இப்படித்தான், ஈழம் பற்றி நான் எழுதத்தொடங்கினால் நினைவுகள் எங்கெங்கோ சுழன்று கடைசியில் வன்னியில் வந்து நிற்கிறது.

நான் மேலே சொன்ன என் மைத்துனரின் சிறிய தாயார் அதாவது என் தாய்மாமனின் மனைவியாரின் சகோதரி கூட அண்மையில் வன்னியில் சிங்களப்படையின் குண்டுவீச்சில் இடுப்பருகே குண்டடிபட்டு ஓர் சிறுநீரகத்தை இழந்து ICRC யினால் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவர். தற்போது சிகிச்சைக்காக, அவரது சகோதரரால் அழைத்துச் செல்லப்பட்டு தமிழ்நாட்டில் தான் இருக்கிறார். ஆனால், அவருடைய கணவரும் பதிமூன்று வயது மகளும் ஒரு முகாமிலும், பதினாறு வயது மகன் ராணுவத்தால் தனியாகப் பிரிக்கப்பட்டு வேறோர் முகாமிலும் இலங்கையில் தான் இருக்கிறார்கள். என்னுடைய இன்னொரு உறவினர் தடுப்பு முகாமில் சில வாரங்களுக்கு முன் பிரசவ நேரத்தில் போதிய மருத்துவ வசதி கிடைக்காமல் அவருடைய குழந்தை பிறக்கும் போதே இறந்துவிட்டது. குழந்தையை பறிகொடுத்தவரின் தாயாரும் இன்னுமோர் சகோதரியும் யாழ்ப்பாணத்தில் தான் இருக்கிறார்கள். இருவரும் இருமுறை முகாமிற்கு சென்று குழந்தையை பறிகொடுத்தவரை தங்களோடு யாழ்பாணம் கூட்டிச்செல்ல அனுமதி கேட்டால் அது மறுக்கப்படுவதாக தொலைபேசியில் அழுகிறார்.

இவர்களின் கதைக்கும் பொருளாதார தடைக்கும் சம்பந்தம் உண்டா எனக்கு தெரியவில்லை. ஆனால், என்னால் சொல்லாமல் இருக்கமுடியவில்லை. இப்படி என்னென்னவோ தடைகள் மூலம் எங்களுக்கு குறைந்தபட்ச உரிமைகள் கூட மறுக்கப்படுகிறது. நாங்கள் உலக சுகாதார நிறுவனத்தின் வரையறைகளின் படியோ அல்லது சர்வதேச தராதரங்களின் அளவிலோ எந்தவொரு சிக்கிச்சையையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அடிப்படையான, குறைந்தபட்ச வைத்தியமும் ஏன் எங்களுக்கு மறுக்கப்பட்டது? அதுவும் போர்ச்சூழலில்? நாங்கள் தமிழர்கள் என்பதாலா?

உணவும் மருத்துவமும் என் உறவுகளின் வாழ்வுரிமையை பறிக்கும் ஆயுதங்களாகவே பொருளாதார தடை மூலம் மாற்றப்பட்டிருந்தன என்பது தான் என் புரிதல். பொருளாதார தடை என்ற பெயரில் வடக்கில் எங்கள் உரிமைகளும் உணர்வுகளும் மறுக்கப்பட்டும், அடக்கப்பட்டும் ஏதோ ஓர் இனம்புரியாத சூனியத்திற்குள் தள்ளப்பட்டோம். வாழ்விடங்கள் சிதைக்கப்பட்டு, வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு, வெளியுலக தொடர்பு இல்லாமல் எங்களைச்சுற்றி என்ன நடக்கிறது என்று புரியாமல் ஓர் கசப்பும் வெறுப்புமே என் மனதில் மிஞ்சியிருந்தது.

வானொலி கேட்க முடியாது, காரணம் மின்சாரமோ அல்லது பாட்டரிகளோ கிடையாது. பாட்டரிகள் வடக்கிற்கு வருவது சுத்தமாக தடைசெய்யப்பட்டிருந்தது. மின்சாரமும் கிடையாது ஆதலால் நிலாவெளிச்சம் இருக்கும் நாட்களில் அதில் தான் இரவுச்சாப்பாடு. அது இல்லாத நாட்களில் கிடைக்கும் மண்ணெண்ணையில் ஓர் சிறிய விளக்கொளியில் தான் சாப்பாடு, மாணவர்களின் படிப்பு எல்லாமே. செய்தித்தாள்கள் கிடையாது. எங்களின் அவலங்கள் வெளியுலகிற்கு தெரியுமா? தெரியாதா? என்றெல்லாம் அறிய எனக்கு எந்த ஊடக வசதியும் தொடர்பும் இருக்கவில்லை. வேலை வெட்டியும் கிடையாது. பங்கீட்டு உணவில் தான் உயிரை தக்கவைக்கவேண்டிய அவலம்.  பொதுப் போக்குவரத்து வடக்கில் ஏற்கனவே செயலிழந்து விட்டிருந்தது.

ஒருசில தனியார் வாகனங்களும் எரிபொருள் தடையினால் ஓடாமலே போனது. காயம் பட்டவர்களை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல வடமராட்சியில் நான் இருக்கும் வரை எந்தவொரு வசதியும் இருக்கவில்லை. போக்குவரத்து வசதியின்றி உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் இறந்தவர்கள் பலர். அங்கு ஆம்புலன்ஸ் இல்லையா என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். நான் வடமராட்சியில் காயம்பட்ட எவரையுமே ஆம்புலன்ஸ் ஏற்றிச்சென்றதை என் கண்களால் பார்த்ததில்லை. பாடசாலைகள் ராணுவமுகாம்கள் ஆனதால் பல மாணவர்கள் நீண்டதூரம் சென்று கல்வி கற்க போதிய போக்குவரத்து வசதி கூட இருக்கவில்லை.

போக்குவரத்துக்கு உரிய ஒரேயொரு ஊடகம் “சைக்கிள்” தான்.  ஈழத்தமிழர் வாழ்வில் சைக்கிளின் பயன் சொல்லிமாளாது. போக்குவரத்திற்கு சைக்கிளை மாற்றீடாக பயன்படுத்தலாம். உணவுக்கும் மருந்துக்கும் எதை மாற்றீடாக பாவிப்பது? இப்படி வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு பொருளாதார தடை என்ற பெயரில் வாழ்வுரிமை மறுக்கப்பட்டால் வாழ்க்கையில் எதில்தான் பிடிப்பு வரும்? வாழ்க்கையே கேள்விக்குறியாய், சூனியமாய் இருந்தது. இதுதான் பலபேரை என் ஊரிலிருந்தும் அருகிலுள்ள ஊர்களிலிருந்தும் தமிழ்நாடு நோக்கி இடம்பெயர வைத்தது.

தொடரும்

ரதி