தோழரொருவரின் மகள் பிளஸ் 2 தேர்வு எழுதியதை விசாரிக்கும் போது இந்த ஆண்டில், அறிவியல் பாடங்களின் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவிகள் கவலைப்படுவதைத் தெரிவித்தார். பத்திரிகைகளிலும் அப்படியே செய்திகள் வந்தன. தேர்வு குறித்த கவலைகள், அடி வயிற்றைப் பற்றிக் கொள்ளும் பதட்டம், விடுமுறையின் இனிய காத்திருப்பு எல்லாம் தாண்டித்தானே வந்திருப்போம். பாழாய்ப் போன நமது கல்வி அமைப்பை சிந்திக்கையில் ஒரிரு வருடங்களுக்கு முன்னர் ஒரு தோழரோடு தேர்வில் காப்பி அடிப்பது குறித்து நடந்த காரசாரமான விவாதம் நினைவுக்கு வந்தது. அப்படியே கொஞ்சம் சைக்கிளை ரிவர்சில் சுற்றி கடந்த காலத்திற்குச் சென்று பார்ப்போம்…..
_____________________________________________________
பத்தாவது வகுப்பில் காப்பி அடித்த கதை!
தந்தை அரசு அதிகாரியாக பணியாற்றியதால் தமிழகத்தின் பல ஊர்களில் வாழ்ந்து படித்த கதையில் இப்போது நேரே பத்தாவது வகுப்பிற்கு போய்விடலாம். ஒன்பதாவது வகுப்பில் எனது விடலைப்பருவ சேட்டைகள் அதிகமடைந்து விடுமுறையில் வீட்டில் பணம் எடுத்துக் கொண்டு பத்து நாட்கள் ஊர்சுற்றி விட்டு பணம் தீர்ந்த பிறகு வீடு திரும்பினேன். இந்தக் குழப்பத்தில் பத்தாவது வகுப்பின் ஒரிரு மாதங்கள் முடிந்து விட்டன.
அது கிராமங்கள் சூழப்பட்ட ஒரு சிறு நகரம் அல்லது பெரிய கிராமம். என் உடன் பிறந்தோர் எல்லாம் அந்த ஊரின் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர். நான் மட்டும் சற்று தாமதமாக பத்தாவதில் சேர்ந்தேன். சுற்றுப்பட்டு கிராமங்களிலிருந்து தினுசு தினுசாக மாணவர்கள். ஒரே ஒரு மாணவி. நான் பின்னாடி பெஞ்சில் ஐக்யமானேன். பையன் இனியாவது ஒழுங்காகப் படிக்க வேண்டுமென்று அப்பாவின் முடிவுப்படி கணக்கு, ஆங்கிலத்துக்கு டியூஷன்.
மற்றபடி பள்ளியில் படித்ததை விட ஊர் சுற்றியதுதான் அதிகம். சுற்று வட்டாரத்தின் எல்லா ஓட்டல்களுக்கும் படையெடுத்துப் போய் உணவு வகைகள் தீரும் வரை சாப்பிடுவது, அருகாமை கானக அருவிக்கு சென்று மீன் பிடித்து சுட்டு சாப்பிடுவது, பம்பு செட்டில் மணிக்கணக்கில் குளிப்பது, மிச்ச நேரம் எல்லா வகை விளையாட்டுக்களையும் விளையாடுவது என்றபடி சிறப்பாக போய்க் கொண்டிருந்த நேரத்தில் வில்லன் போல இறுதித் தேர்வு வந்தது. கொஞ்சம் பயமும் வந்தது.
அக்காவும் தம்பியும் அப்துல் கலாம் டைப் மாணவர்கள். அதாவது ஒழுங்காக படிப்பவர்கள். தங்கை கொஞ்சம் அய்யோ பாவம். நான் வீட்டீல் ஏற்கனவே ரவுடி என்று பேர் வாங்கியிருந்ததால் படிப்பு குறித்து நானோ மற்றவர்களோ பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. முக்கியமாக என்னைப் போல வகுப்பில் பலர் இருந்ததால் தெம்பாகத்தான் இருந்தேன். என்ன, அவர்களுக்கு நடப்பதுதான் எனக்கும் நடக்கும். இருந்தாலும் இறுதித் தேர்வில் ஃபெயிலாகி விட்டால்……?
வேலையில்லாமல் இருந்த முன்னாள் மாணவர்கள் தேர்வில் பாஸாவதற்குரிய எல்லா ‘வழி’களையும் சொல்லிக் கொடுத்து துணிவூட்டினார்கள். எங்கள் கடைசி பெஞ்ச் அணி கூட்டம் கூடி யோசித்ததில் ஒவ்வொருவரது பலவீனமும் தெரிய வந்தது. கணக்கு, ஆங்கிலம் டியூஷனால் ஓகே. மற்ற பாடங்களுக்கு என்ன செய்வது? இருந்த ஒரே வழி பிட்டடிப்பது அதாவது காப்பியடிப்பது. பழைய வினாத்தாள்கள், முக்கிய பாடங்கள், சூத்திரங்கள், எல்லாம் வைத்து எழுத வேண்டியதை முடிவு செய்து விட்டோம்.
அப்போது நாங்கள் அக்ரகாரத் தெருவில் குடியிருந்தோம். அன்றே பார்ப்பனர்கள் சென்னை, டெல்லி என்று சென்றுவிட்டதால் பார்ப்பனரல்லாதாருக்கும் அதுவும் அரசு அதிகாரிகள் என்றால் கண்டிப்பாக வீடு வாடகைக்கு கிடைக்கும். அக்ரகாரத்திற்கேயுரிய இரண்டு தெருக்களை இணைக்கும் நீண்ட வீடு. கடைசி வாரத்தில் தீவிரமாக படிக்கிறேன் பேர்வழியாக புழக்கடை முற்றத்தில் புத்தகங்களுடன் பல மணிநேரம் முடங்கிக் கிடப்பேன். வீட்டிலோ பையன் தீவிரமாக படிக்கிறான் என்று நினைக்க நானோ அங்கு தீவிரமாக எழுதிக் குவித்தேன். சின்ன சின்ன பேப்பரில் இடைவெளியில்லாமல் ஒரு முழுக் கட்டுரையையும் திணிப்பது பேப்பரில் சிலை வடிப்பது போல. அல்லது அரிசியில் குறளையெல்லாம் எழுதி பெயர் வாங்குகிறார்களே அப்படி குறுகிய இடத்தில் பெருகிய வார்த்தைகளை குட்டி குட்டியாய் வடிக்கும் கலை என்றும் சொல்லலாம்.
மற்ற மாணவர்கள் எவ்வளவு படித்தாய் என்று வினவும் போது எங்கள் கடைசி பெஞ்ச் மட்டும் எவ்வளவு எழுதினாய் என்று அக்கறையுடன் விசாரிப்போம். ஆரம்பத்தில் ஆங்கிலம், கணக்கிற்கு பிட்டுக்கள் வேண்டாமென்று முடிவெடுத்திருந்தாலும் பின்னர் கொள்கையை மாற்றிக் கொண்டோம். காப்பி அடிப்பது என்று முடிவான பிறகு சில பாடங்களை மட்டும் ஒதுக்குவது நல்லதல்ல என்பதோடு, உருப்போட்ட ஆங்கிலப் பாடங்களைக் கூட காப்பி அடித்து எழுதுவது தனி சுகமாயிற்றே.
ஆவேசமாக எழுதியதாலோ என்னவோ கிட்டத்தட்ட முழுப் புத்தகத்தையும் கவர் பண்ணியதில் பிட்டுக்கள் மலையாக குவிந்து விட்டன. அவசரக் கூட்டம் கூடியது. அதில் ஆய்வு செய்து தீர்வு கண்டோம். அப்போது பேண்ட் இல்லை ட்ராயர்தான். ட்ராயர், சட்டையின் கீழ் தையல்களை பிரித்து குட்டி குட்டி லாக்கர்களை உருவாக்கினோம். அப்புறம் உடல் பாகங்களில் எங்கே என்னென்ன பிட் இருக்கிறது என்ற மேப் அல்லது மாஸ்டர் பிட் தயாரித்தோம். பிறகு எது எங்கே என்று குழம்பி விடக்கூடாதல்லவா. இனி தேர்வுக்கு செல்லலாம்.
தமிழ் முதல் தேர்வில் பிரச்சினையில்லை. ஆங்கில முதல் தேர்வில் அநேக கேள்விகளுக்கு பதில் தெரிந்தாலும் எழுதிய பிட்டுக்கள் வீணாகக் கூடாது என்று பார்த்தே எழுதினேன். வினாத் தாளையும், விடைத் தாளையும் பிரிக்கும் ஒரு மைக்ரோ செண்டி மீட்டரின் இடைவெளியில் பிட்டுக்களைப் பார்த்து எழுதவேண்டும். எழுதிக் கொண்டிருந்த போது தேர்வறை ஆசிரியர் என் மேசையருகே குனிந்து ஒரு பிட்டுப் பேப்பரை எடுத்து என்னிடம் நீட்டியவாறு நோக்கினார்.
முதலிலேயே சிக்கிவிட்டேன் என்ற அதிர்ச்சியில் உறைந்து அவர் முகம் பார்க்க அவரோ, ” இது உன்னுடையதா” என்று கேட்டவாறு கொடுத்து விட்டு போய்விட்டார். தெய்வமே…………..
ஆனால் என்னுடைய பிட்டை கீழே போடுமளவு நான் ஒன்றும் முட்டாளல்ல. எவ்வளவு ஒத்திகைகள், பிரயத்தனங்கள்? அது யாருடையது என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்த தெய்வம் அதைக்கூட பொறுப்பாக எடுத்து நீட்டியதை இப்போது நினைத்தாலும் பூரிக்கிறது. சரி நமக்கு இவ்வளவு வரவேற்பா என்று அடுத்த அடுத்த தேர்வுகளுக்கு உற்சாகத்துடன் தயாரானோம்.
தமிழ், ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வுகளுக்கு பிட்டுக்கள் பெரிய அளவு பயன்படாது. இலக்கணம், அட்டவணைப் பொருத்துதல், கோடிட்ட இடங்களைப் நிரப்புதல் இப்படி சில்லறைத் தொல்லைகள். அதற்கு முன்னாள் மாணவர்கள் கை கொடுத்தார்கள். தேர்வு தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள் வினாத் தாள் எப்படியோ வெளியே சென்று விடும். காவலுக்கு நிற்கும் காவலர்களை சில அண்ணன்கள் தேநீர்க்கடைக்கு அழைத்துச் செல்ல மற்ற அண்ணன்கள் காம்பவுண்டிற்கு வெளியே நின்று பதிலை கத்துவார்கள். எல்லாம் ஒரு வார்த்தை பதில்தானே. இருப்பினும் நாங்கள் ஒன்ஸ்மோர் கேட்க நினைக்கும்போது அவர்களே அதை இரண்டு முறை ரிப்பீட்டுவார்கள்.
இப்படியாக இலக்கணம் ஒழிந்தது. அடுத்த சனியன் அறிவியல். இதில் என்ன பிரச்சினை என்றால் என்னிடமிருக்கும் பிட்டுக்களுக்கு பொருத்தமான கேள்வி எது என்றே எனக்குத் தெரியாது. முதல் அரை மணிநேரத்தில் திணறிவிட்டேன். அப்புறம் ஆசிரியர் பின்னோக்கி உலவும் நேரத்தில் கேள்வித் தாள்களை மாற்றிக் கொண்டு பதில்களை அறிவாளி மாணவர்களின் உதவியுடன் கண்டு பிடித்தேன். வரலாறு இந்த அளவுக்கு மோசமில்லை. அதில் மட்டும்தான் காப்பியடிக்கவில்லை என்ற அளவுக்கு அந்த பாடத்தில் காதல் இருந்தது. இன்றைய என் நிலமைக்கு இப்படி ஒரு குருத்து அன்றே இருந்திருக்குமோ?
ஒரு வழியாக தேர்வுகள் முடிந்து பிட்டடித்த அனுபவங்களை பரிமாறிக் கொண்டு எப்படியும் பாஸாகிவிடுவோம் என்று முடிவு செய்தோம். விடுமுறையைக் கொண்டாடி வந்த போது அப்பாவுக்கு ஒரு மாவட்டத் தலைநகருக்கு மாற்றல் வந்தது. இந்த ஊரை விட்டு வெளியேறும் போது ஆங்கிலம் எடுத்த ஆசிரியர் என்னைப் பற்றி சொன்ன மதிப்பீடை நினைவு கூரவேண்டும். ” தம்பி இங்க வரும்போது பால் மாதிரி சுத்தமாக வந்த. இப்ப கள் மாதிரி கெட்டுப் போயிட்ட”
அப்புறம் மாலை முரசிலோ, தினத்தந்தியிலோ முடிவுகள் வர எனது எண்ணும் இருந்தது. ஆத்தா நான் பாஸாயிட்டேன் என்று பெரிய த்ரில் இல்லை. கடைசி பெஞ்சு முழுவதும் வெற்றி பெற்றனர். ஆனால் மதிப்பெண்கள் மட்டும் நிறைவாக இல்லை. எனக்கு 338 கிடைத்தது. சரி, பரவாயில்லை ஓசியில் இதுவாவது கிடைத்ததே என்று நார்மலாகி விட்டேன். பெற்றோருக்கு சற்று வருத்தம்தான். அக்கா, தம்பிக்கு ரவுடியை கிண்டலடிப்பதற்கு நல்ல வாய்ப்பு. இருந்தாலும் பயம் காரணமாகவோ, நல்ல எண்ணத்தாலோ அவர்களும் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை.
_____________________________________________
+2வில் படித்து வெற்றி பெற்ற கதை!
நகரின் புகழ் பெற்ற அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2. அறிவியல், கணக்குக்கு பெயர் பெற்ற குரூப் 1, 2இல் சேர்க்கத்தான் தந்தை விரும்பினார். என் அக்கா நான் பிட்டடித்த அதே பள்ளியில் பிளஸ் 2 முதல் குரூப்பில், தமிழ்வழிக் கல்வியில் 945 மதிப்பெண்கள் வாங்கி மெரிட்டிலேயே அரசு பொறியியல் கல்லூரி சென்று விட்டாள். மகளைப் போன்று மகனும் அப்படி செல்ல வேண்டுமென்பது தந்தையின் விருப்பம். அறிவியலின் கேள்வித் தாளையே புரிந்து கொள்ள முடியாத பாவத்தில் இருந்த நான் குரூப் 1 என்ற கொடுமையை எப்படி சமாளிப்பது? நான் மூன்றாவதோ இல்லை நாலாவதோ இல்லை இருப்பதிலேயே இழிவாகவோ கருதப்படும் வணிகவியல் – வரலாறு – பொருளாதாரம் எனும் அவியல் குரூப்பை விரும்பினேன். உண்மையில் வரலாறுதான் எனக்கு பிடித்த பாடம். ஆனால் என் தந்தையோ அப்படியே பி.காம், சி.ஏ செல்லலாம் என்று எண்ணினாரோ என்னமோ எனது விருப்பத்தை ஏற்றுக்கொண்டார். நானும் ஒரு பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்தேன்.
எனது தந்தை எங்கள் குடும்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டு படித்த முதல் பட்டதாரி. அவருக்காக எங்கள் பாட்டி பட்ட கஷ்டங்கள், கதைகள் எல்லாம் மனப்பாடமாகும் அளவுக்கு கேட்டிருந்தோம். “என் தலையை அடகு வைத்தாவது உங்களை படிக்க வைப்பேன்” இதுதான் அப்பா அடிக்கடி சொல்லும் குடும்ப முழக்கம். அதிலும் எனக்காகத்தான் நிறைய மெனக்கெட்டார். சில புகழ் பெற்ற விடுதிப் பள்ளிகளிலெல்லாம் விட்டுப் பார்த்தார். ஆனாலும் எனக்கு சரஸ்வதி கடாட்சம் ஏனோ கிடைக்கவில்லை.
பிளஸ் 2வில் நிறைய அனுபவங்கள் இருக்கின்றன என்றாலும் நேரே இறுதித் தேர்வுக்கு சென்று விடலாம். அரையாண்டு முடிந்து மூன்று ரிவிஷன் டெஸ்ட்டுகள் நடந்தன. மூன்றிலும் எல்லா பாடத்திலும் வேண்டுமென்றே ஃபெயிலானேன். சும்மா இப்படி பயங்காட்டி எழுதவைக்கும் அந்தத் தேர்வுகள் எனது சுயமரியாதையை இழிவுபடுத்துவதாக எண்ணம். மற்றபடி அப்போது நான் கடைசி பெஞ்ச், வகுப்பு லீடர் என்றெல்லாம் ஆதிக்கம் செய்ததோடு கொஞ்சம் நன்றாக படிக்கும் மாணவன் எனுமளவுக்கு முன்னேறியிருந்தேன். அரையாண்டு ரேங்கிலெல்லாம் முதல் பத்துக்குள் வந்த்தாக ஞாபகம். அதுவே பெரிய விசயம்தானே.
தேர்வுக்கு முந்தைய மாதம் தீடிரென்று ஒரு பல்பு மூளையில் பிரகாசிக்க இப்போதாவது கொஞ்சம் தீவிரமாகப் படிப்போமே என்று இறங்கினேன். பத்தாவதுக்கு பிட்டடித்தது போல அமைந்த வீரர் குழாம் இங்கில்லை. பலரும் அப்துல்கலாம் டைப் மாணவர்கள்தான். அந்தப் பள்ளியும் மாவட்டத்தில் பிரபலமானது என்பதால் சிறுநகர சண்டித்தனங்கள் இங்கே எடுபட முடியாது.
எப்படியோ வீட்டு முற்றத்தில் ஒரு மாதத்திற்கான திட்டத்தோடு படித்தேன். படித்தேன். படித்துக் கொண்டே இருந்தேன். அப்போது அப்பாவும் உடன்பிறந்தோரும் வேறு வேறு ஊர்களில். நானும் அம்மாவும்தான். அம்மா எனக்காக இரவு தூங்கிக் கொண்டிருந்த நேரத்திலும் திடீரென்று விழித்து தேநீர் போட்டுக் கொடுப்பாள். அம்மாவைப் பற்றியும் இந்த மகளிர் தினத்திற்காக “கம்யூனிஸ்ட்டுகளும் அம்மாக்களும்” என்ற தலைப்பில் முக்கால்வாசி எழுதி அப்படியே நிற்கிறது. அடுத்த வருடம் வெளியிட வாய்ப்பு வரலாம். அதனால் இங்கே அம்மாவுக்கு பெரிய இடமில்லை.
நானே இப்படி என்றால் அப்துல் கலாம் டைப் மாணவர்கள் எல்லாம் எவ்வளவு தீவிரமாக படித்துக் கொண்டிருப்பார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனது நண்பன் ஒருவன் யாரெல்லாம் எப்படி எவ்வளவு படிக்கிறார்கள் என்பதை பகிர்ந்து கொள்வான். கடைசியில் தேர்வு வந்தது.
எங்கள் பிரிவு தமிழ் வழிக் கல்வியில் வருகிறது. எல்லோரும் பள்ளிப்படிப்பை தமிழில் படித்து வந்தவர்கள்தான். இதனால் எல்லாரும் பயந்த பாடம் ஆங்கிலம். மற்ற பாடங்களையெல்லாம் நம்பிக்கையோடு படித்தவர்கள் கூட ஆங்கிலத்திற்கு வெகுவாக அஞ்சினார்கள். முக்கியமாக இரண்டாம் தாளில் உள்ள இலக்கணப் பிரிவு. என் வரலாற்றில் நல்ல ஆசிரியர்கள் இருந்தார்களோ என்னமோ எனக்கு ஆங்கில இலக்கணம் எப்படியோ உள்ளே சென்று விட்டது. தேர்வுக்கு முந்தைய நாட்களில் சில மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து நம்பிக்கை ஊட்டினேன். இருப்பினும் அன்று மட்டும் எனது விடைத்தாளை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சிலர் கோர நானும் ஏற்றுக் கொண்டேன்.
அன்றைக்கு ஒருவரிக் கேள்விகளை எழுதி முடித்த பிறகு எனது விடைத்தாள் நானிருந்த அறையில் சுற்றுப் பிரயாணம் செய்து கடைசி அரை மணிநேரத்திற்கு முன்னர் என்னிடம் திரும்பியது. அது வந்த ஐந்து நிமிடங்களுக்குள் பறக்கும்படை என்ற வில்லன்கள் வந்து கழுகு போல சுற்றி வந்தார்கள். என்னைப் பார்த்து எழுதிய மாணவன் ஒருவன் அவனுக்குப் பின்னால் உள்ள மாணவனுக்கு தாளைக் கொடுத்திருந்தான். இருவரும் அந்த வில்லன்களிடம் சிக்கிவிட்டார்கள்.
பிறகென்ன. இருவரும் அறையிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அவர்களது பிளஸ் 2 வாழ்க்கை அத்துடன் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு மூன்று ஆண்டுகள் வரை அவர்கள் தேர்வெழுதமுடியாது என்று ஆனதாக நினைவு. அதிர்ச்சியில் எல்லோரும் உறைந்து போனோம். அன்றைக்கு அந்த வில்லன்கள் சற்று முன்னாடி வந்திருந்தால் நான் உள்ளிட்டு பலரும் மாட்டியிருப்போம். பிறகு அந்த மாணவர்கள் எங்கள் நினைவுகளை விட்டு அகன்று போனார்கள். பின்னாடி அதில் ஒருவன் எல்லாப்பாதுகாப்பு படையில் இருப்பதாக கேள்விப்பட்டு ஆறுதலடைந்தோம்.
பரிட்சை முடிவுகள் வந்தன. எனது நண்பன் ஓடி வந்து ” நீதான் வகுப்பில் முதல் மார்க், 947″ என்றதோடு அப்துல்கலாம் டைப் மாணவர்கள் எவரும் 900த்தை தாண்டவில்லை என்பதால் வருத்தத்தில் இருப்பதாகக் கூறினான். சரி அதுதான் ‘இறைவனின்’ திருவிளையாடல் என்றால் யார் என்ன செய்வது? அப்புறம் அந்த நண்பர்களை தேற்றி விட்டு வீடு திரும்பினேன்.
பத்தாவதில் பிட்டடித்துப் பாஸாகி பன்னிரெண்டாவதில் வகுப்பில் முதலிடமென்றால் என்னால் நம்ப முடியவில்லை. அப்பாவிடம் நான் சொன்ன முதல் விசயம் அக்காவை விட இரண்டு மார்க் அதிகம் என்ற பந்தாதான். அதையே என் தந்தை எல்லோரிடத்திலும் சொல்லிச் சொல்லி திருப்தி அடைந்தார். அடுத்து கல்லூரி வாழ்க்கை.
____________________________________________
கல்லூரியில் கடமைக்காக படித்த கதை!
எங்கள் நகரில் இரண்டு கல்லூரிகள் பிரபலம். ஒன்று நன்றாகப் படிப்பவர்களின் கல்லூரி என்றால் மற்றது சுமாராகப் படிக்கும் சாதாரண மாணவர்களின் கல்லூரி. எல்லோரும் இரண்டிலும் விண்ணப்பித்தோம். எனக்கு மட்டும் அப்துல்கலாம் டைப் கல்லூரியில் இடம் கிடைத்தது. மற்ற வகுப்புத் தோழர்கள் சாதா கல்லூரிக்கு சென்றார்கள். அவர்களை பிரிய நேர்ந்தது இன்றைக்கும் எனக்கு வருத்தமே. மற்றபடி புதிய கல்லூரியில் மாணவிகளும் வருகிறார்கள் என்பதுதான் எனக்கு கிடைத்த ஒரே ஆறுதல்.
அந்த ஆறுதலும் நேரில் பார்த்த சில நாட்களில் கரைந்து போனது. மாணவிகள் மட்டுமல்ல, மாணவர்களும் கீ கொடுக்கப்பட்ட பொம்மைகளைப் போல வந்து போனார்கள். பரபரப்போ, கலாட்டாவோ, குதூகலமா எதுவும் இல்லை. கல்லூரிக் காலங்களில் எனது அரசியல் ஆர்வம் முளைவிட்டு எண்ணத்தை ஆக்கிரமித்திருந்த காலம். சமூகப்பணிகளை முடித்து விட்டு கடனே என்று கல்லூரி சென்று வந்தேன். அப்பா எனக்கு வாங்கிக் கொடுத்த சைக்கிள் ஊரைச் சுற்றுவதற்கு கை கொடுத்தது.
தமிழ் வழியில் கற்றிருந்த எனக்கு அதாவது ” உள்வருவன பற்று, வெளிச்செல்வன வரவு ” என்று புரிந்து, கணக்குப் பதிவியலில் – அதாங்க அக்கவுண்டன்சி – கிட்டத்தட்ட சென்டம் வாங்கியிருந்த எனக்கு ஆங்கிலம் புரிபடவில்லை. இதில் ஏதோ சுக்லாவோ, பக்லாவோ அவருடைய தலையணை சைஸ் புத்தகத்தை தினசரி சைக்கிளில் சுமந்து செல்லவேண்டும். உடற்பயிற்சி, அம்மாவின் வக்கனையான சாப்பாடு, நீண்ட சைக்கிள் பயணம் எல்லாம் சேர்ந்து கண்களைச் செருகும். திறந்தபடியே தூங்கும் கலையைக் கற்றுக் கொண்டேன். அந்தப் பேராசிரியரும் அதை தெரிந்தே அனுமதித்திருப்பாரோ?
பொருளாதாரம், வணிகவியல் பேராசிரியர்களெல்லாம் தாங்கள் ஆங்கிலத்தில் பேசுவதே பெருமை என்ற அளவில் மட்டும் கதைத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது பார்த்தால் அது ஆங்கிலத்திலும், பாடத்திலும் தரமில்லாத மொக்கைகள் என்று தெரிகிறது. சரி எப்படியோ மூன்று வருடம் குப்பை கொட்டி இறுதி பருவத் தேர்வுக்கு வந்துவிட்டேன்.
இடையில் சாதாரண மாணவர்கள் படிக்கும் கல்லூரி நண்பர்களை அடிக்கடி சந்தித்து அளவளாவுவேன். அப்போதுதான் அங்கே மட்டுமல்ல தமிழகத்தில் பல அரசுக் கல்லூரி மாணவர்கள் ஆங்கில வழியில் படித்து விட்டு தமிழில் தேர்வு எழுதும் விசயம் அறிந்தோம். இதில் மதிப்பெண்கள் அதிகம் கிடைக்காது என்றாலும் முதலுக்கு மோசமில்லை. ஆகவே எல்லாத் தியரி பேப்பர்களையும் தமிழில்தான் எழுதி சுமாராக மதிப்பெண் பெற்று இறுதி ஆண்டு வந்தடைந்தோம்.
அப்போது நானும், எனது நண்பனும் என்ன செய்வோமென்றால் பரிட்சைக்கு முந்தைய நாட்களில் அநேக தடவை முதல்நாளில் அந்த கோனார் நோட்ஸ் போன்ற புத்தகத்தை வாங்கி இரண்டாக கிழித்து மாற்றி மாற்றி படிப்போம். அப்துல்கலாம் டைப் மாணவர்கள் இதை கேலியுடன் பார்த்தாலும் யாரும் பயம் காரணமாக நேரில் காட்டுவதில்லை.
இறுதியாண்டு தேர்வுகளில் அதையே கடைபிடித்தோம். எனினும் புள்ளியியல், கணக்குப் பதிவியல் இரண்டுக்கும் தமிழ் உதவாது. அதை மட்டும் முன் பக்கம் இருந்த அப்துல் கலாம் டைப் மாணவனைப் பார்த்து எழுதினேன். அவன் இப்போது கண்டிப்பாக சி.ஏ படித்துவிட்டு ஏதோ ஒரு அம்பானி கம்பெனியில் கள்ளக்கணக்கு எழுதிக் கொண்டிருப்பான் என்பது மட்டும் நிச்சயம். கடைசியில் புள்ளியலில் மட்டும் ஃபெயில். அதை மட்டும் அடுத்த ஆண்டு டியூஷன் சென்று முடித்தேன். இப்படியாக பி.காம் முடிந்தது.
அப்பறும் பொழுது போகாமல் அஞ்சல் வழிக் கல்வியல் இரண்டு எம்.ஏ படித்து ஒன்றில் தேர்வானேன். அதுவும் எனக்குப் பிடித்த வரலாறும், அரசியல் விஞ்ஞானமும். வரலாற்று பாடங்களையெல்லாம் முன்னதாகவே நூலகத்தில் படித்து முடித்திருந்த படியால் தேர்வில் சுவாரசியமில்லை. இருந்தும் ரசிய வரலாறோ இல்லை ஐரோப்பிய வரலாறோ ஏதோ ஒரு பாடத்தில் மிக நன்றாக எழுதியும் பெயிலாக்கியிருந்தார்கள். இந்த பாடத்தில் நான் டியூஷன் எடுத்த நண்பன் பாசாகியதுதான் கேலிக்கூத்து. இதுதான் அஞ்சல் வழிக்கல்வியின் இலட்சணம். இரண்டாவது எம்.ஏவிற்காக அரசியல் விஞ்ஞானம் படிக்கும் போது தந்தை ஒரு பட்டயப் படிப்பிற்காக சென்னைக்கு அனுப்பவதாக கூறினார். அது படித்தால் வெளிநாட்டிலெல்லாம் வேலை வாய்ப்பு குவியுமாம்.
அப்பாவின் ஆசைக்கு தலையாட்டிய நானோ அரசியல் தொடர்புகளை புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பாக சென்னைக்கு விரும்பி வந்தேன். வந்து ம.க.இ.கவில் தோழராகி உண்மையான கல்வி, அறிவு, வாழ்க்கையை இன்றும் தொடர்கிறேன். இன்றுவரை எனது டிகிரி சான்றிதழ்களை வாங்கவில்லை. அதற்கான தேவையுமில்லை. மற்றபடி எனக்கே தெரியாமல் நடக்கும் உறவினர் திருமணங்களில் எனது பெயர் பி.காம், எம்.ஏ என்று பின்னிணைப்புகளுடன் வருவதாக தம்பி கூறுவான். அதைத் தவிர எனது வரலாற்றில் இந்த மொக்கை டிகிரிகளுக்கு மதிப்பேதுமில்லை.
மார்க்சியத்தை அறிந்த பின்தான் எது கல்வி என்பதையும், சமகால வாழ்க்கையை புரிந்து கொள்ள உதவும் அதன் வியப்பூட்டும் பலத்தையும், இளமைத் துடிப்பையும் அனுபவித்து கற்றிருக்கிறேன். அப்போது ரசியாவில் போலி சோசலிசம் உடைந்து கம்யூனிசம் என்றாலே தோல்வி மனப்பான்மை என்று மற்றவர்கள் எக்காளமிட்ட காலம். அக்காலத்தில் மார்க்சியத்தை தோழர்களின் உதவியால் படித்ததும், அதையே நடைமுறையில் மாற்று அரசியல் கொண்டோரிடம் விவாதித்து செழுமைப் படுத்தியதும் என்னைப் பொறுத்தவரை முக்கியமான காலகட்டம். அது குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். இது எனக்கு மட்டுமல்ல, பல தோழர்களுக்கும் பொருந்தும்.
____________________________________________
காப்பி அடிப்பதை எப்படி நிறுத்துவது?
சில ஆண்டுகளுக்கு முன்புதான் அந்த தோழர் படித்து முடித்த கையோடு ஒரு கல்லூரியில் மாலைநேர பகுதி ஆசிரியராகச் சேர்ந்திருந்தார். தினசரி கல்லூரி அனுபவங்களை தொலை பேசுவார். வினவிலும் அவ்வப்போது பின்னூட்டமிடுவார். ஒரு முறை பேசும் போது ஆங்கிலப் பாடத்திற்காக காப்பி அடித்த இரு மாணவர்களை நிர்வாகத்திடம் பிடித்துக் கொடுத்தாக கூறினார். எனக்கு கடுமையான கோபம். இருவரும் காரசாரமாக விவாதித்தோம்.
அவரைப் பொறுத்தவரை மாணவர்களுக்கு ஒழுக்கமும், கட்டுப்பாடும் அவசியம், அதை இந்த வயதில்தான் கற்றுக் கொடுக்க வேண்டும், தேவையென்றால் இத்தகைய தண்டனைகள் அவசியம் என்கிறார். என்னைப் பொறுத்தவரை சென்னை நகரில் இருக்கும் அந்தக் கல்லூரியில் ஏழை, நடுத்தர மாணவர்கள் படிக்கிறார்கள். ஆங்கிலத்தை நேர்த்தியுடன் பேசும் பின்புலமற்ற, ஆங்கிலம் என்றாலே தாழ்வு மனப்பான்மைக்குள்ளாகும் அவர்களை அப்படி தண்டிப்பது தவறு. ஆங்கிலம் என்ற வில்லனால் அறிவுக்கூர்மையும், திறமையும் கொண்ட பல மாணவர்கள் தத்தமது துறையில் நீர்த்துப் போயிருப்பதை நேரிலேயே கண்டிருக்கிறேன்.
ஆகவே இந்தப் பின்புலத்தைக் கணக்கில் கொண்டு ஆங்கிலப் பாடத்தை காப்பியடிக்கும் அந்த மாணவர்களை அந்த தோழர் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம் என்பதுதான் எனது வாதம். கடைசிவரை தோழர் அதை ஏற்கவே இல்லை.
சென்னையில் கல்லூரியின் படிக்கட்டுக்களைக் கூட மிதிக்காமல் பல ஆயிரங்களை செலவிட்டால் டிகிரி வாங்க முடியும். அப்படி சிலர் வாங்குவதாக பத்திரிகைகளும் தெரிவிக்கின்றன. ஏழை மாணவர்களோ எப்பாடு பட்டாவது படித்து ஒரு வேலை தேட நினைக்கின்றனர். ஆங்கிலம் போன்ற பிரச்சினைக்குரிய பாடங்களில் காப்பி அடிப்பதும் அப்படித்தான்.
இதனால் காப்பி அடிப்பதை நியாயப்படுத்தவில்லை. அதன் பின்புலத்தை மாற்றுவது குறித்தே என் அக்கறை. காப்பி அடிப்பதால் மாணவர்கள் ஒன்றும் கலகக்காரர்களாகி விடுவதில்லை. அவர்களது சமூக அக்கறையையும் அது தீர்மானிப்பதில்லை. காப்பி அடிப்பதின் தேவையும் வர்க்க பின்புலத்தை வைத்து மாறுகின்றன. பொதுவில் காப்பி அடிக்கும் மாணவர்களுக்கு எச்சரிக்கை, அவர்களது கல்லூரி வாழ்க்கையை பாதிக்காத வண்ணம் சிறு சிறு தண்டனைகள் என்று இருக்கலாம். மற்றபடி மெக்காலே பாணி குமாஸ்தாக்களை பொம்மை போல உருவாக்கும் இந்தப் பாடங்களை படித்தோ, காப்பியடித்தோ பாசானாலும் எந்தப் புண்ணியுமும் இல்லை.
பல தனியார் பள்ளி, கல்லூரிகளில் ரிசல்ட் காட்டவேண்டுமென்பதற்காக பார்த்து எழுதுவதை ஏதோ ஒரு முறையில் அனுமதிக்கிறார்கள். இதையெல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால் மாணவர்கள் காப்பி அடிக்கக் கூடாது என்பதை தீவிரமாக அமுல்படுத்தும் போது காப்பி அடிப்பதை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பணிதொடர்பான பிரச்சினையாக மாற்றவேண்டும்.
அதாவது மாணவர்களின் தவறுகளுக்கு ஆசிரியர்களை பொறுப்பாக்குவது. மாணவன் காப்பி அடித்தால் ஆசிரியரின் ஊக்கத்தொகையை குறைப்பது, அவனுக்கு தனி இலவச டியூஷன் எடுப்பது என்று மாற்றினால் நன்றாக இருக்கும். மாணவர்களைப் பொறுத்தவரை இந்த மொக்கைப் பாடத்திட்டங்களை ஓரிரு மாதங்களுக்கு படித்தாலே நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும் என்பதை உணரவேண்டும். எங்களைக் கேட்டால் மாணவர்களின் வாழ்க்கையில் அரசியல் செயல்பாடுகள் கலந்தால் இந்த காப்பி அடிக்கும் பிரச்சினை மட்டுமல்ல, விடலைப் பருவ பிரச்சினைகள் கூட தீரும் என்று கருதுகிறோம்.
“என்னது மாணவர்களுக்கு அரசியலா” என்பவர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களை சந்தித்து தெளிவடையலாம்.
_________________________________________________
பின் குறிப்பு: இதையே ஒரு தொடராக எழுதுமாறு பதிவுலக நண்பர்களைக் கோருகிறோம். எது கல்வி, எது அறிவு, காப்பியடிப்பது, கல்வி முறை, தேர்வுமுறை, ஆங்கிலம் படிப்பதில் உள்ள பிரச்சினைகள் என்று உங்கள் அனுபவத்தோடு எழுதலாம். வாசகர்கள் இங்கேயே விவாதிக்கலாம்.
_______________________________________
தொடர்புடைய பதிவுகள்:
- அனுபவம்: வைகையில் முன்பதிவில்லாமல் ஒரு பயணம் !
- பொட்டை!
- ரிலையன்ஸ் ஃபிரஷ்ஷில் மனிதக்கறி !
- வட இந்தியாவில் சாதி – எனது பயண அனுபவங்கள்!
- அதோ .. அந்த மனிதர் போல வாழ வேண்டும்
- அழகு – சில குறிப்புக்கள் !
தொடர் பதிவா! இதை தொடர்பதிவாய் எழுதும் பதிவர்கள் இங்கே இணைப்பு கொடுங்கள்.
ஒவ்வொருவரின் அனுபவங்களும் படிப்பவர்களுக்கும், வாழ்க்கையில் முன்னேற முயல்பவர்களுக்கும் ஓர் உற்சாகத்தை கொடுப்பதாய் இருக்கட்டும்.
//அதாவது மாணவர்களின் தவறுகளுக்கு ஆசிரியர்களை பொறுப்பாக்குவது. மாணவன் காப்பி அடித்தால் ஆசிரியரின் ஊக்கத்தொகையை குறைப்பது, அவனுக்கு தனி இலவச டியூஷன் எடுப்பது என்று மாற்றினால் நன்றாக இருக்கும். மாணவர்களைப் பொறுத்தவரை இந்த மொக்கைப் பாடத்திட்டங்களை ஓரிரு மாதங்களுக்கு படித்தாலே நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும் என்பதை உணரவேண்டும். எங்களைக் கேட்டால் மாணவர்களின் வாழ்க்கையில் அரசியல் செயல்பாடுகள் கலந்தால் இந்த காப்பி அடிக்கும் பிரச்சினை மட்டுமல்ல, விடலைப் பருவ பிரச்சினைகள் கூட தீரும் என்று கருதுகிறோம்.//
ஆம் மாணவர்களை அரசியல் படுத்த வேண்டும் ……….நேற்று நான் எழுதிய பத்விர்க்கு
பின்னூட்டம் போட்டவர்கள் …..மாணவர்களுக்கு அரசியல் அதிகப்ரசங்கித்தனம் என்றார் ………ஆனால் நான் அவசியம் என்றே நினைக்கிறேன் ………….பின்புலங்களை மாற்ற வேண்டும் என்றே நினைக்கிறேன்
சூப்பர் போஸ்ட் வினவு! நிச்சயம் எழுதுகிறேன். பரீட்சை பயங்களால் வாழ்க்கையை இழந்த நண்பர்கள் நினைவுக்கு வருகிறார்கள்!
நன்றி முல்லை. நீங்கள் தொடரை ஆரம்பித்தால் அது முழு பதிவுலகமே ஆரம்பித்தாற் போல…………!
சூப்பர் 🙂
உமா, நீங்கள் எழுதுவதைப் பற்றி சொல்லவே இல்லை?
நான் என் பள்ளி, கல்லூரி வாழ்வில் காப்பி அடித்ததில்லை என்றாலும், காப்பி அடிப்பதை குற்றமாகப் பார்த்ததில்லை. ஏனெனில் நமது மெக்காலே கல்வி முறையில் நீங்கள் குறிப்பிட்டது போல் “மெக்காலே பாணி குமாஸ்தாக்களை பொம்மை போல உருவாக்கும் இந்தப் பாடங்களை படித்தோ, காப்பியடித்தோ பாசானாலும் எந்தப் புண்ணியுமும் இல்லை”
நான் பள்ளியில் படிக்கும்போது எனக்கு எல்லா பாடங்களிலும் (ஆங்கிலம் தவிர) ஆர்வம் இருந்தது. எல்லாம் நன்றாகப் புரியவும் செய்தது. இருப்பினும் என் பள்ளி வாழ்க்கை எனக்கு நரகமாகவே இருந்தது. காரணம் நமது தேர்வு முறை. என் சிறு வயதிலேயே நமது கல்விமுறையின்மீது எனக்கு வெறுப்பு வந்துவிட்டது. இதில் நன்றாக மனப்பாடம் செய்யும் மாணவனே அதிகம் மதிப்பெண் பெறுகிறான் மேலும் அவனே புத்திசாலியாகவும் கருதப்படுகிறான். இங்கு அறிவியலுக்குத் தேவைப்படும் நல்ல கற்பனைத் திறனும் ஆய்ந்து முடிவெடுக்கும் திறனும் உள்ளவன், ஆனால் மனப்பாடம் செய்யும் திறனில்லாதவன் முட்டாளாக கணிக்கப்படுகிறான். பலதலைமுறைகளை நாட்டின் முன்னேற்றத்தில் பங்கில்லாதவர்களாக்கின இந்த கல்வி முறையை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் இருந்தாலும் அதை அரசுக்கு புரியவைத்து கல்வி முறையில் மாற்றம் கொண்டுவருவது இயலாத காரியமாகவே இருந்தது. இப்போது தொடக்கக் கல்வியில் மாற்றம் வந்துளதாகத் தெரிகிறது. கற்றலில் இனிமை பள்ளி என்றும், செயல்வழிக்கல்வி என்றும் புதிதாக அரசு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. மேலும் தொடக்கக் கல்வியில் தேர்வெழுதி வெற்றி பெற்று அடுத்த வகுப்பிற்குப் போகும் முறையும் ஒழிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. எப்படியோ அடுத்த தலைமுறையினராவது இந்த மாணவர்களின் கற்பனைத்திறனை அழித்தொழிக்கும் கல்விமுறையிலிருந்து விடுதலை ஆவார்கள் என்று நம்புவோம்.
வினவு நான் கலந்து கொள்ளலாமா
கண்டிப்பாக நீங்களும் கலந்து கொள்ள வேண்டும்.
என் குடும்பம் தொழிலாளர் குடும்பம். அப்பா, அம்மா, சகோதரிகள் எல்லோரும் வேலை பார்த்தும், வறுமையினால், நான் அடிப்படை வகுப்பு வரை தான் படிக்க முடிந்தது? நான் எப்படி பிட் அடித்ததைப் பற்றி எழுதுவது?
நான் காப்பி அடிக்கவேயில்லையே!
படிச்சதே ஒன்பதாவது வரைக்கும் தான் அதனால் அவசியம் இல்லாம போயிருச்சு அதான் உண்மை!
அப்போ வால்பையன் நம்மள மாதிரி கடைசி பெஞ்ச் இல்லையா?
கடைசி பெஞ்சு தான், ஆனா முதல் மாணவன்!
தோழர்,
வால்பையனுக்கான பதிலிலிருந்து நாங்களும் ஆட்டைக்கு உண்டா என தெரியவில்லை. கல்லூரி சென்றவர்களுக்கு மட்டும் தானா? நாங்களும் முயற்சிக்கிறோமே
செங்கொடி
ஹலோ.. ஆட்டைக்கு நானும் வர்றேன்.. நாங்களும் ரவுடி தான் நாங்களும் ரவுடி தான்
படிக்க நன்றாக இருந்தது. பின்னோக்கிப் பார்க்கவும் தூண்டியது.தொடர்களுக்குக் காத்திருக்கிறேன்.
தேர்வில் காப்பி அடிப்பதன் மூலம் ஒரு மனிதனின் ஆளுமை பாதிக்கப்படத்தான் செய்யும். இதற்கு புறச்சூழல் ஏதுவாக இருக்கிறது என சூழலின் மீது பழி போடுவது கம்யூனிஸ்டுகளுக்கு அழகல்ல
சூழலைப் புரிந்து கொண்டால்தான் ஒரு ஆளுமையைப் புரிந்து கொள்வதோ, மாற்றுவதோ, அதற்காகப் போராடுவதோ முடியும். எல்லாம் ஆளுமைகளே தீர்மானிக்கும் என்றால் அதுவும் கம்யூனிசமில்லை.
ஆளூமை மற்றவற்றை தீர்மானிக்கும் என நான் சொல்லவில்லை. அதுதான் இங்கே விக்டிம் என்பதுதான் கருத்து. ஆளுமையை பாதிக்கும் விசயங்களாக மதிப்பீடுகள் மற்றும் விழுமியங்களில் ஏற்படும் சரிவுகளை குறிப்பிடலாம். காப்பி அடிப்பதை விட தனக்கு தெரிந்த தவறான விசயங்களை கூட தைரியமாக எழுதி பூச்சியம் மதிப்பெண் வாங்கும் மாணவர்கள் மீதுதான் எனக்கு அதீத பிரியம். பூச்சியம் எடுத்த பின்னர் தங்களை விட அதிகமாக மதிப்பெண்ணான ஒன்று அல்லது இரண்டு மதிப்பெண் பெற்றவர்களை பார்த்து எழுத பழகி பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தங்களது மதிப்பெண்களை அதிகரித்துக் கொள்ளும் மாணவர்களைப் பற்றித்தான் நான் எப்போதும் கவனமுறுகிறேன். இந்த நடைமுறைதான் பின்னரும் வந்த அரசியல் நடைமுறையை கற்றுக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் கூட உதவுகிறது. இது வேறு அது வேறு என பிரித்து வாழும் அளவுக்கு எனது ஆளுமையை இன்னமும் நான் இரட்டைத் தன்மையுடன் வாழப் பழக்கவில்லை.
ஒரு ஆளுமை தன்னைத்தானே இரட்டைத்தன்மையுடன் வாழவில்லை என்று கூறலாம் என்றாலும் அது இறுதியில் மற்ற ஆளுமைகள் சொல்வதை வைத்தே முடிவு செய்யப்படவேண்டும். காப்பி அடிப்பதை வினவு ஆதரிக்கவில்லை, அதன் பின்புலத்தை புரிந்து கொள்ளவேண்டும் என்பதே நோக்கம். ஆனால் நீங்கள் சொல்லும் ‘போராட்ட’ வழிமுறைகளைத்தான் அப்துல்கலாம் வகையறாக்களும் சுய முன்னேற்றமாக ஓதுகிறார்கள். மணியும் அதில் சேர்ந்துவிட்டது வருத்தமளிக்கிறது.
முதலில் நான் எழுதிய பின்னூட்டத்தை புரிந்துகொள்ள முயயற்சிக்கவும்
அதுவும் புரிந்தது, இதுவும் புரிகிறது.
தோழர் ‘நான்’ மணியின் இம்சை துவங்கிவிட்டதா ?
கடவுளே கடவுளே. ச்சே “நான் கடவுளே”
எத்தனை பட்டங்களை பெற்றிருந்தாலும் கலை இலக்கியம் அரசியல் என்று விசாலமான பார்வையை தந்தது அமைப்பு வாழ்க்கை முறை மட்டுமே
நானும் வரேன் இல்லைன்னா ஆட்டத்தை கலைப்பேன். ரெடி ஜூட்ட்..
ரவி நீங்களெல்லாம் சமர்த்தான பர்ஸ்ட் பெஞ்ச் பிள்ளைகள் என்று நினைக்கிறேன். ஆமான்னாலும், இல்லையினாலும் நீங்களும் ஆடலாமே!!
காப்பி அடிக்க ஒத்துழைப்பு நல்காத மாணவனிடம், மற்ற மாணவன் சண்டையிட்டதை கண்டதுண்டு….
சூப்பர் நல்ல ஒரு பதிவு
நான் காப்பி அடித்ததை விட … என்னை பார்த்து காப்பி அடித்தவர்களே அதிகம்… அப்போ என்னை ஆட்டத்துல கிடையாதா…
யாழினி காப்பி அடிப்பதும், அதற்கு உதவதும் ‘சட்டப்படி’ குற்றம் எனும் போது நீங்களும் ஆட்டத்தில் உண்டு என்பது டிபால்ட்டாகவே இருக்கிறதே?
உண்மையிலே அரசியல் பள்ளிமாணவர்களுக்கு அவசியம் தேவை
துண்டுசீட்டில் பிட் அடிக்கமாட்டோம் வாத்தியார் காத்துவாங்க வராண்டாவிற்கு செல்லும்போது பக்கத்து மாணவனுடைய விடைத்தாளை புடுங்கி அதை அப்படியே காப்பி அடிப்போம் .
நிச்சயமாக இது ஒரு வித்தியாசமான பார்வை. ஆனால் அவசியமானது.
அட! கொஞ்சம் இங்கேயும் பாருங்க.
http://jeeno.blogspot.com/2008/04/blog-post_22.html
சூப்பரோ சூப்பர்
திறந்தபடியே தூங்கும் கலையைக் கற்றுக் கொண்டேன். அந்தப் பேராசிரியரும் அதை தெரிந்தே அனுமதித்திருப்பாரோ? ….சூப்பர் தோழரே!
பயன் இல்லா படிப்பாலே
மனம் தான் கோழையாய்
மாறும் பார்வதி .. என்று தேவதாஸ் பட பாடல் தான் நினைவு வருகிறது.
கொப்பி அடிப்பததை பற்றி தமிழ் சினிமாகாரங்களிடம் கேட்டு படிக்கலாம்.
கொப்பி அடிப்பவனுக்கு ஒஸ்கார் கொடுத்துள்ளார்கள்.கொப்பி அடிப்பதும் ,அததற்கு அங்கீகாரம் கிடைப்பதும் இறைவனின் “திருவிளையாடல் “அன்றோ .
அதனால் தான் “எல்லா புகழும் இறைவனுக்கே” என்று அமெரிக்க திரு தலத்தில் ஓதப்பட்டது
நான் காப்பி அடித்துள்ளேன். அதுவும் சமைய பாடத்தை. என்னை சுற்றி கல்வி மற்றும் வாழ்க்கை பற்றி ஒரு அனுபவத்தை, தனிப் பதிவாக எழுதலாம் என்று நினைக்கின்றேன். வினவு அதை வெளியிட முன்வந்;தால், விரைவில் அதை வினவுக்கே எழுதமுடியும்.
பி.இரயா
தோழர் இராயகரன் கண்டிப்பாக எழுதி உங்கள் தளத்தில் வெளியிடுங்கள். வினவில் இது தொடர்பாக எழுதும் எல்லாப் பதிவர்களின் கட்டுரைகளுக்கு முகப்பு பக்க்த்தில் இணைப்பு கொடுப்பதாக இருக்கிறோம்.
விவாதம் எங்கேயோ போயகொண்டிருகிறது. பிரச்சினையை மேலோட்டமாகவோ அல்லது பால்ய காலத்து நினைவாக பார்த்தால் எல்லாம் சரி போலத்தான் தோன்றுகிறது. ஆனால், காப்பி அடிப்பதை கொஞ்சம் நீட்டி நான் ஏழை பின்னணி கொண்ட வியாபாரி. அதனால் சட்டத்தை சற்றே வளைத்து வியாபாரம் செய்வேன் என்று ஆரம்பித்தால்?
சுருக்கமாக சொன்னால் “இது என்ன சின்ன பிள்ளத்தனமா இருக்கு?”
தல வெயிட் பண்ணு, உங்கள மாதிரி ஆளுக்கு தானே ஆரம்பிசிருகோம்.
நன்றாக இருந்தது.
சமய பாடத்தில் என்ன இருக்கிறது இருக்கிறது கொப்பி அடிக்க ? 40 கேள்வி என்றால் 39 சிவபெருமான் ,மீதி உமா தேவியார் என்பான் என் நண்பன் .சரியா இல்லையா ?
naanum ezhudhuren…
http://kaargipages.wordpress.com/2010/05/06/education-kaargi/ எனது பதிவு
மிக அருமை தோழர் கார்க்கி! வினவு கட்டுரையை விட பல மடங்கு சிறப்பாக இருக்கிறது. ஆங்கிலம் மற்றும் தமிழ் வழிக் கல்வியை கோட்பாடு ரீதியாக மட்டுமே புரிந்திருந்த எனக்கு நடைமுறையில் தமிழ்வழி கல்வியின் முக்கியத்துவத்தை விளக்குவதில் பிரச்சினை இருந்தது. உங்களது விளக்கத்தின் மூலம் புதிய விசயங்கள் நிறையக் கற்றுக் கொண்டேன். அடுத்து நடைமுறையிலும், நவீனத்துவத்திலும் தொடர்பே இல்லாத நமது கல்வி முறையின் அபத்தத்தை உங்களது அனுபவம் சிறப்பாக வெளிக் கொண்டு வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்!
கொசுறு: உங்கள் தமிழில் ன, ண பிரச்சினை இருக்கிறது. மாணவர்கள், எண்ணங்கள் எல்லாம் மூன்று சுழி ண வில் வரும். இதை பேசுவதை வைத்து உணரலாம். ன எனும் இரண்டு சுழி எழுத்தை நாம் நாக்கின் முன்பகுதி முன்பல் வரிசையை ஒட்டி தொட்டு பேசுவோம். அதுவே ண எனப்படும் மூன்று சுழி எழுத்தை நடுநாக்கின் மேலபகுதியை முன்நாக்கால் மடித்து தொட்டு பேசுவோம். இதை புரியும் விதத்தில் நான் எழுதியிருக்கிறேனா என்று சந்தேகம். எனவே நீங்கள் ன, ண இரண்டையும் உச்சரித்து அதற்காக நாக்கு பயன்படும் வித்தியாசத்தை உணரலாம்.
அடுத்து கல்வி முறை பற்றிய பதிவர்களின் தொடர் சிறப்பாக வரும் பட்சத்தில் அதை ஒரு புத்தகமாக போடலாம் என்று தோன்றுகிறது.
ஆங்கிலம், தமிழ் பிரச்சினையை நீங்கள் தனிச்சிறப்பான ஒரு இடுகையாக எழுத வேண்டுமென்பது கோரிக்கை.
நன்றி தோழர்,
ன / ண பிரச்சினை தவிர்த்து வேறு இலக்கண பிழைகளும் சரளமாக வந்துவிடுகிறது. இதை தவிர்க்க இப்போது முயற்சி எடுத்து வருகிறேன்.
விரைவில் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன்.
மொழி பற்றி எழுதும் உத்தேசம் இருக்கிறது. குறிப்பாக ஆங்கில வழிக் கல்வி பற்றி அபத்தமான கருத்து நிலவுகிறது. மெட்ரிகுலேசனில் படித்து
விட்டலே ஒரு மாணவன் ஆங்கில துரையாகிவிடுவான் என்பது போல பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது அப்படியில்லை என்பது
எனது அனுபவம் – மற்றும் நான் பார்த்த பலரின் அனுபவமும் அதுவே தான்.
மொழியை கற்றுத்தரும் விதமும் தொழில்நுட்பங்களை நாம் அறிமுகம் செய்து கொள்ளும் விதமும் கூட காலத்துக்கு ஒவ்வாத ஒன்றாகவே நான்
கருதுகிறேன். விவாதத்தில் மற்ற தோழர்கள் / வாசகர்கள் இது பற்றி சொல்லப் போகும் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
தொடர் பதிவுக்கான உங்கள் முன்முயற்சி பாராட்டத்தக்கது..!
உங்கள் அனுபவப் பதிவைப்படித்தேன் கார்க்கி. இயல்பாய், அழகாய் இருந்தது. மாணவன், குடும்பம், சமூகம், தொழில்வாய்ப்பு என்பதெல்லாம் எங்கள் வாழ்வில் எப்படி படிப்போடு பிணைக்கப்பட்டு ஓர் அழுத்தமாய் மாணவர்களை பாதிக்கிறது என்பதை அழகாய் உங்கள் அனுபவம் மூலம் சொல்லியிருக்கிறீர்கள்.
நல்ல கட்டுரை. காபி அடிக்கும் பழக்கம் வந்ததற்கு பார்பனர்கள் தான் காரணம் என்று எங்கேயாவது சொல்லியிருப்பீர்களோ என்று தேடினேன் எங்கும் இல்லை. குட் வொர்க். கீப் இட் up .
பார்ப்பனீயம், காப்பி அடிக்கிறது மட்டுமில்ல; ஒரிஜினல ஒளிச்சு வச்சுடும் அல்லது கிழிச்சுப் போட்டுருமில்ல… !
மூட்டு அண்ணே பார்ப்பன மாணவர்கள் பயங்கரமாக உருப்போடுவதில் வல்லமை கொண்டவர்கள் என்பதால் காப்பி அடிக்கும் தேவையே இருப்பதில்லையே? இதை என் அனுபவத்தில் மட்டுமல்ல உங்கள் அனுபவத்திலிருந்தும் சொல்கிறேன்.
அது என்ன அவர்களுக்கும் மட்டும் உருபோடுவது நன்றாக வருகிறது என்று சிந்தித்ததுண்டா?
நீங்கள் சொல்லுவதை பார்த்தால் காபி அடிப்பது சரியான செயல் என்று சொல்லுகின்றீர்களா?
மூட்டு அண்ணே, அவாள்கள் அந்தக்காலத்துல இருந்து வேத மந்திரத்தை அர்த்தம் கூடத் தெரியாமல் மன்னம் செய்வதிலிருந்து கூட அந்த்தப் பழக்கம் வந்திருக்கலாம். இதனால் மற்றவர்கள் காப்பி அடிப்பது சரி என்று சொல்லவில்லை. நமது கல்வி அமைப்பு, தேர்வு முறை பற்றி சுய பரிசீலனை செய்யலாம் என்று தான் இது.
வினவு கவலை வேண்டாகிறேன் நாங்க இருகோம் மூட்டூவுக்கு பதில் சொல்ல.
காப்பி அடிப்பது மட்டுமல்ல..திருடிய பொருளை என்னுதுன்னும் சொல்லும்..அதுதான் பார்ப்பனீயம் அப்பூ..தமிழிசையைக் காப்பி அடித்தது மட்டுமில்லாமல்..அதை அப்படியே தன்னுதுன்னு சொல்லி கருநாடக ஸங்கீதம்னு சொன்னதுக்கு பேருதான் பார்ப்பனியம்..ஆனால் அதை வேறொரு இடத்தில் வைத்து விவாதிக்கலாம்..
மூட்டு அண்ணே வெயிட் அவாளுக்கும் ஆப்பு ரெடியா இருக்கு
கட்டுரையை பல முறை படித்தேன்.
நான் பல காலமாக புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் படித்து வருகிறேன்.
என்னை புதிய தளத்தில் யோசிக்க வைத்ததில் இரண்டு இதழ்களுக்குமே பெரும் பங்கு உண்டு.
சிற்சில சமயங்களில் நான் யோசித்ததையே இவை இரண்டும் எழுதியது உண்டு.
இந்த இதழ்களின் பின்னூட்டம் என்பதாகவே நான் தோழர் வினவு அவர்களை நினைக்கிறேன்.
ஆனால், இந்த மூன்று தோழர்களையும், கோபக்கார ஆசிரியர் என்றே நினைத்து வந்தேன்…. ஏழு கழுதை வயதாகியும்.
ஆனால் காப்பி பற்றிய கட்டுரை, என் தோளில் கைபோட்டு, என்னிடம பேசியது… நண்பரைப் போல.
இக் கட்டுரையை எழுதிய நட்புத் தோழர் (இந்த வார்த்தைக்காக வையாதீர்கள்) அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளும், மரியாதைகளும்.. (பின்னூட்டம தேவையில்லை என்பதே என் கருத்து . ஆகவே எனது கருத்தை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. முடிவு உங்களது.)
இந்த கட்டுரை தொடர்பான எனது இன்னொரு பதிவு.
நாட்டை ஆளும் அரசியல்வாதிகள், பிட் அடித்து வெற்றி பெரும் சமூகத்தில், (ஓட்டுக்கு காசு, பணம், சாதி, மதம்) மாணவர்களை குறை சொல்வது கொடூரம்.
எது எதற்கோ தொடர் பதிவு எழுத அழைக்கிற இந்த நேரத்தில், இது போன்ற தலைப்பில் எழுத அழைப்பு விடுத்தது பாராட்டுதலுக்குரியது…
நானும் காப்பி அடிச்சதே இல்லையே… கடைசி பென்ச் அல்ல.. முதல் பென்ச் ஆக்கும் நானு..!!
—
நல்லதொரு பதிவு.. காப்பி அடிச்சதுக்கு இப்ப யாரும் உங்களுக்கு தண்டனை கொடுக்கப் போறாங்க.. எச்சரிக்கை..!! 🙂
மிக உண்மையான சரியான கட்டுரைl
பின்னூட்டம் பிடிக்காவிட்டாலும் எழுதித் தொலைக்கிறேன்.
என் ஒன்றாம் வகுப்பு டீச்சருக்கு அடையாளம்… லூர்து மேரி என்ற பெயர.
செத்துப் போய்விட்டாலும் மறக்க முடியாது டீதச்ரை.
நினைவுபடுத்திய நண்பரை திட்டுவதா, போற்றுவதா?
வினவு தோழரே, நீங்க பிட் அடிச்ச கதையே ஒரு பெரிய புராணமாக இருக்கிறதே. புரிஞ்சுக்கவே முடியிலயே.. வினவில் இப்படி ஒரு கட்டுரையை.
ஏண்டா ஒரு கேள்வியைக் காப்பியடிச்சு இங்கிலீசுல பாஸ் பண்ணுனோம், இல்லாட்டி பியூசி யோட மூட்டைக் கட்டிட்டு ஐடிஐ அது..இதுனு போயிருக்கலாமில்லன்னு நெனச்சதுண்டு.. அதனால, சத்தியமா…
காட்டிக்கொடுத்த தோழரைப் போல ஒழுக்கவாதத்தில் இருந்து சொல்லவில்லை. வாந்தியெடுக்குறதுக்கு பிட்டடிக்கிறதே மேல்.
ஆனால், இது, உங்களோட நிக்காம இத முன்மாதிரியா வச்சு- அப்படி சொல்லாட்டியும்- மத்தவங்களையும் எழுதச் சொல்லியிருக்கீங்களே.. இது ஒரு பொழுதுபோக்கு பாணியில் இருக்குறமாதிரி தெரியுதே.. அதனாலதான் புரிஞ்சுக்கவே முடியில .. வினவில் இப்படி ஒரு கட்டுரையா என்று.
எனக்கும் வலைத்தளங்களுக்கும் பெரிதாய் ஒரு தொடர்பில்லை. எனவே எனது புரிதல் தவறாய் இருக்கலாம், விளக்கவும்.
மற்றபடி, //அதாவது மாணவர்களின் தவறுகளுக்கு ஆசிரியர்களை பொறுப்பாக்குவது. மாணவன் காப்பி அடித்தால் ஆசிரியரின் ஊக்கத்தொகையை குறைப்பது, அவனுக்கு தனி இலவச டியூஷன் எடுப்பது என்று மாற்றினால் நன்றாக இருக்கும்// போன்ற ஆலோசனைகள் சமூக எதார்த்தத்தை சார்ந்து நில்லாமல் பொத்தாம்பொதுவாக உரைக்கப்பட்ட கற்பனாவாதக் கருத்துகள் போலத் தோன்றுகிறது.
தோழரே, இதன் மூலம் நமது கல்வி அமைப்பை பற்றி ஒரு விவாதம் அவரவர் அனுபவத்தில் எழுதலாம் என்பதே நோக்கம். மேலே உள்ள பின்னூட்ட லிங்கில் தோழர் கார்க்கி எழுதிய அனுபவக் கட்டுரையை வாசிக்கவும்.
அடுத்து காப்பி அடிக்கும் மாணவர்களை தண்டிப்பதை விட அவர்களுக்கு கற்று கொடுக்கும் ஆசிரியர்களை பொறுப்பாக்குவது நல்லதாயிற்றே என்று எழுதுவது இன்றைக்கு சாத்தியமில்லாமல் போகலாம். ஆனால் அது தவறில்லையே என்பது கேள்வி?
கார்க்கி எழுதிய அனுபவக் கட்டுரையை படித்தேன். நன்றாக இருந்தது நன்றி.
காப்பி அடித்தல் என்பதை நியாயப்படுத்த முயலாதீர்கள்.சிலருக்கு அது கை கொடுத்திருக்கும், பலர் அதனால் மாட்டிக் கொண்டு அவமானப்பட்டதுண்டு.சாலை விதிகளை சிலர் மீறினால் நாமும் மீறலாம் என்று எல்லோரும் நினைத்து மீறினால் என்ன ஆகும்.சில சமயங்களில் மாணவர் நலன் கருதி அவர்களை பிடித்துக் கொடுதது தண்டிக்க வேண்டாம் என்று சில ஆசிரியர்கள் முடிவெடுத்தால் அதற்காக அதையே விதியாக மாற்ற முடியாது.
கல்வித்துறையில் எத்தனையோ கோளாறுகள் அதை இன்னும் சில கோளாறுகள்,மீறல்களால் சமன் செய்ய முடியாது. நான் காப்பி அடித்தது இல்லை.புத்திசாலி ஆனால் மிக அதிக மதிப்பெண் பெறாத ஒருவன்.ஏன் – கையெழுத்து மோசம்,மனனம் செய்து எழுதாமல் சொந்தமாக சிந்தித்து எழுதுவது, கவனக்குறைவினால் செய்யும் பிழைகள்.
அனைவரும் சமம் என்னும் பட்சத்தில் நமது கல்விமுறையை தொழிற்கல்வியாக நடைமுரைபடுதவேண்டும் .75% ப்ராக்டிகல் வகுப்பாகவும் 25% தியரியாகவும் கற்கவேண்டும் .ரூபாய் நோடிளுள்ள பதினைந்து மொழியையும் பேச்சு மொளியாககர்க்கவேண்டும் .வாசிக்க ,எழத தமிழ் ஆங்கிலத்தை பயன்படுத்த வேண்டும் .
ஒரு டீ போடணும்னாலும் engineering படித்திருக்கவேண்டும் .நமது சாலையை சுத்தம் செய்பவராக இருந்தாலும் engineering படித்திருக்கவேண்டும்.மீன் பிடிபவராக இருந்தாலும் engineering படித்திருக்கவேண்டும்.வயலில் நாத்து நடுபவராக இருந்தாலும் engineering படித்திருக்கவேண்டும்.கட்டுமானவேலையில் பணிபுரியும் சித்தாளாக இருந்தாலும் engineering படித்திருக்கவேண்டும்.அணைத்து வேலையையும் பொறியியல் மயமாகவேண்டும் . கற்பனைத்திரன் மிகுந்த பொறியியல் கல்வியை நடைமுறை படுத்தவேண்டும் .யாரும் யாரையும் வேலை வாங்க கூடாது .அனைவரும் சேர்ந்து திட்டம் வகுத்து அனைவரும் வேலை செய்யவேண்டும் .
Why this kolaiveri????
தங்களது அனைத்து தவறுகளுக்கும் அல்லது தங்களது வாழ்க்கையில் நல்ல வேலை கிடைக்காத ஒன்றுக்கும் தற்போதைய கல்விமுறையின் மீது பழியைப் போட்டு தப்பித்துக் கொள்ளும் பலரும் வைத்திருக்கும் வாதம் இதற்கு எதிராக கலகம் செய்வது. மாற்று எது என சொல்ல முடியாத அளவுக்கு கோட்பாட்டு ரீதியான பிரச்சினை அல்ல இது என தெரிந்த பிறகும் இதற்கு மாற்று எது என சொல்ல மெனக்கெட முடியாத சோம்பேறித்தனம்தான் அவர்களது இந்த நிலைமைக்கும் காரணம்.
ஆனால் படித்த படிப்புக்கும் வேலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என சொல்லி அதற்காக படிப்பு முறைதான் தவறு என்று இழித்துப் பேசுபவர்கள் இவர்கள். அடிப்படை கல்வியில் எல்லா நவீன கருவிகள் விஞ்ஞானம் கலை எல்லாம் இருக்காதுதான். ஆனால் அடிப்படை சரியாக இல்லாத பட்சத்தில் சொல்லித் தரப்படும் நவீனமான விசயங்களுக்கு என்ன மதிப்பு இருக்க முடியும். ஏதாவது அடிப்படையான பிரச்சினைகளை வேலையில் எதிர்கொள்ளும்போது அந்த அடிப்படை கல்விதானே அவர்களுக்கு கை கொடுக்க முடியும்.
எல்லாவற்றுக்கும் மேலாக வேலை கிடைப்பதற்கும் படிப்பிற்கும் சம்பந்தமில்லாமல் போவது அறிவின் போதாமையால் அல்ல, வர்க்க சார்பின் பொருளாதார போதாமையால்தான் என்பது அனைவராலும் மறுக்க முடியாத ஒன்று.
ஏதாவது நடைமுறை டெக்னிக்கல் பிரச்சினை ஒன்றை சொல்லி அந்த டெக்னாலஜி படித்து விட்டு வரும் நபரால் அதற்கு தீர்வு சொல்ல முடியுமா என்று கேட்பது அதற்கு அவர் தயங்கி பதறுகையில் பார்த்தீர்களா கல்விமுறையின் போதாமையை என்று பேசுவது.. இதெல்லாம் அரசியல் கல்விக்கும் பொருத்திப் பார்க்க வேண்டும் என்பதை பலரும் மறந்து விடுகின்றனர்.
முதுகலை படிப்புகளில் தமிழகத்தின் சில பல்கலை கழகங்களில் செமினார், அசைண்மென்ட், வைவா வாஸ் என பல பன்முக திறமையை வளர்ப்பதற்கான பயிற்சிகள் உள்ளன• இதில் மாணவனது பங்களிப்பை வைத்தே பெரும்பாலான ஆசிரியர்கள் அம்மாணவர்களை ஆய்வுபடிப்பிற்கு தேர்வு செய்கின்றனர். மாறாக மதிப்பெண் மாத்திரம் அதிகம் பெற்று தங்கப்பதக்கமே பெற்றாலும் அம்மாணவர்களை அவ்வாசிரியர்கள் சீண்டுவது கூட இல்லை.
மணி எனக்குத் தெரிந்து டாக்டரேட் ஆய்வுகள் கூட பழைய ஆய்வுகளை காப்பி பேஸ்ட் செய்து வாங்குவது இருக்கிறது. அசைண்மெண்ன், வைவா, எல்லாம் உள்ளடக்கத்தை மாற்றிவிடுவதில்லை. நல்ல ஆசிரியர்களும், நல்ல மாணவர்களும் விதிவிலக்காக இருக்கலாம். அறிவியல் கல்வியின் யதார்த்தத்தை கார்க்கி விளக்கியுள்ளார்.
மணி அவர்களுக்கு//படித்த படிப்புக்கும் வேலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என சொல்லி அதற்காக படிப்பு முறைதான் தவறு என்று இழித்துப் பேசுபவர்கள் இவர்கள். அடிப்படை கல்வியில் எல்லா நவீன கருவிகள் விஞ்ஞானம் கலை எல்லாம் இருக்காதுதான். ஆனால் அடிப்படை சரியாக இல்லாத பட்சத்தில் சொல்லித் தரப்படும் நவீனமான விசயங்களுக்கு என்ன மதிப்பு இருக்க முடியும்// நமது கல்வி அமைப்பில் ஆரம்ப கல்வியில் அடிப்படை கோட்பாடுகளையும் உயர் கல்வியில் அது எவ்வாறு உருவானது என்று தான் சொல்லிதருகிரர்களே தவிர அது எவ்வாறு பயன்படுகிறது என்று கூறுவதில்லை வேலைக்கு செல்லும் போது அது பயன்பாட்டில் பல படி நிலைகளை கடந்து வேறு அவதாரத்தில் இருக்கும்.குறைந்த பட்சம் பயன்பாட்டில் அதன் பல பரிமாணங்களில் இந்த அடிப்படை எவ்வாறு இயங்குகிறது என்று கூட கூறுவதில்லை.வேலைக்கு செல்லும் போது இந்த அடிப்படை கோட்பாட்டால் உருவான இயந்திரத்தை இயக்க பயிற்று வித்து வேலை செய்ய விட்டு விடுகிரார்கள் பிரச்சனை என்று வரும் போது அதை தீர்க்க பழுது நீகுபவர்தான் வருவார். செய்முறையிலும் அனைத்தும் எழுதி கொடுக்க பட்டிருக்கும் மூளையை கசக்க வேண்டியதில்லை பெரும்பாலும். பன்னாட்டு எஜமானர்களுக்கு சேவை செய்ய இந்த முறை போதுமானது அவ்வளவுதான்.//பல்கலை கழகங்களில் செமினார், அசைண்மென்ட், வைவா வாஸ் என பல பன்முக திறமையை வளர்ப்பதற்கான பயிற்சிகள் உள்ளன// இதற்க்கு மதிப்பெண் உள்ளதால் மாணவர்களை அடங்கி போக செய்யவும் அடிமை பட்டு வாழவும் நிர்பந்திக்கிறது.//இதில் மாணவனது பங்களிப்பை வைத்தே பெரும்பாலான ஆசிரியர்கள் அம்மாணவர்களை ஆய்வுபடிப்பிற்கு தேர்வு செய்கின்றனர்.// சிறந்த அடிமையை தேர்வும் செய்கின்றனர் பலர் தெரிந்தே விழுவதில்லை வேறு இடம் செல்லும் பொது csir அல்லது gate பார்க்கின்றனர் இல்லையெனில் மதிப்பெண்ணே முக்கிய இடம் பிடிக்கிறது தேர்வில்.ஆய்வில் புதிய கண்டுபிடிப்புகளை செய்ய இந்த வெறும் கோட்பாடுகள் பயன்படுவதில்லை நாம் தேர்ந்தெடுக்கும் பிரிவில் இது வரை கண்டறிந்தவைகளை சில மாதங்கள் படித்து இன்றைய நிலையை அறிந்த பின்னரே அடுத்த நிலையை நோக்கி சிந்திக்க முடியும் இதில் ஆசிரியர் வடிவமைத்த ஒன்றை செயல்படுத்தவே மாணவர்கள் பணிக்கபடுகிறனர் சுயமாக சிந்திக்க பல இடங்களில் அனுமதி இல்லை.படித்தவை நடைமுறையை புரிந்து கொள்ளவே உதவும் கொசுறு இந்தியாவில் ஆராய்ச்சி பட்டம் பெரும் பொது அரை கிழம்.
அதனுடைய பயன்பாட்டு முறை வரைக்கும் கல்வி கூடங்களில் சொல்லிக் கொடுத்தால் கம்பெனிகளுக்கு பயிற்சி செலவு மிச்சத்தில் ஒரு அடிமை கிடைப்பானே தவிர சுதந்திரமாக அந்த பயன்பாட்டை தனது கற்பனையில் புரிந்து கொள்வதற்கான வெளி அடைக்கப்படுவதுதான் நடக்கும் என கருதுகிறேன். பழுதுநீக்கும் ஒரு அவ்வளவு அகடமிக் படிப்பு இல்லாத ஒருவரின் அனுபவத்திற்கு முன் அகடமிக் கல்வி வேஸ்ட் என்பதுதானே உங்களது வாதம். இப்படி தனித்து ஒன்றை அணுகுவது அனுபவ்வாத சேற்றில் நம்மை மூழ்கடித்து புதியனவற்றை கற்றுக் கொள்வதில் உள்ள தேவையை மறுக்கின்ற வரையில் செல்லும் ஆபத்து உள்ளது.
முது அறிவியல் படிப்புகளில் செய்முறை ஏற்கெனவே எழுதி தரப்பட்ட ஒன்றாக இருப்பதற்கு பதில் சிட்டிவேசன் சொல்லப்பட்டு அந்த சூழலுக்கு தேவையான உபகரணங்களை மற்றும் தேவைப்படும் பொருட்களை சூத்திரங்களின் வழியே கணித்து ஆய்வு செய்வதும், ஆய்வு செய்த முடிவுகள் சரி என்பதை மறுதலையாக நிரூபிப்பதும் அல்லது தனக்குத் தானே சரிபார்த்துக் கொள்ளவும் கற்றுத் தரப்படத்தான் செய்கிறது.
செமினார், வைவா வாஸ், அசைண்மென்ட போன்றவற்றிற்கு மதிப்பெண் இருப்பதால் அடிமைகளாகி விடுவார்கள் என்ற வாதம் சிரிப்பாக இருந்த்து. படிப்பில் தரப்படும் மதிப்பெண்கள் மாணவர்களை அடிமைகளாக்கி விடும் என்பது சரியா என யோசியுங்கள். அப்படி தரப்படும் மதிப்பெண்களில் கூட செமினார் போன்றவற்றில் பல திறமைகளை அதிகரிக்க வாய்ப்பும், ரெஸ்பான்சிபிலிட்டியும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மற்றபடி இவற்றின் நேரடி பயன்பாட்டை விடவும் ஒரு தைரியமான ஆளுமையையும், கேள்விகளை எதிர்கொள்வதற்கான தைரியத்தையும் இதுதான் வழங்குகிறது.
புரிந்து படிப்பவர்கள் அறிவாளிகளாக இருப்பதால் தேர்வு செய்கின்றனர். அப்படி திறமையானவர்களை அடிமைகள் என வரையறுப்பது அபத்தமாகத்தான் படுகிறது. பழைய ஆய்வுகள் என்ன என்ன என தெரியவருவதன் மூலம்தான் புதிய ஆய்வுகளை செய்ய முடியும். இயக்கவியலின் விதிகளுக்கு இது புறம்பானதா.. ஆசிரியர் மாணவர் உறவில் உள்ள பிற்போக்கை ஒழிப்பது சமூகத்தில் நிலவுகின்ற பிற்போக்கின் எச்சமோ அல்லது தொடர்ச்சியோ என்றுதான் எனக்கு படுகிறது. மற்றபடி ஆய்வில் சுயசிந்தனை இருந்தால்தான் சிறப்பான முறையில் முடிக்க முடியும் என்பதையும் அறிவீர்கள் என நினைக்கிறேன்.
படித்தவை நடைமுறையில் உதவ்வில்லை என்ற ஒற்றைவாதம் ஒரு சிறுமுதலாளியின் பார்வை போல படுகின்றது. அதன் பல்பரிமாணம் மற்றும் நீண்ட கால , த்த்துவ புரிதல்களைப் பற்றிய அக்கறையற்ற எளிய பாமரவிவசாயின் மூளையை போல சிந்திப்பது அபத்தம் எனப் படுகிறது எனக்கு.
இன்றைய அரசியல்வாதிகளில் பெரும்பான்மையினர் பிழைப்புவாதம் மற்றும் சந்தர்ப்பவாத்த்தில் மூழ்கி இருப்பதால் அரசியலே ஒரு சாக்டைதான் என முடிவு எடுப்பீர்களா
இங்கு பயன்பாடு என நான் கூறியது நாம் கற்ற அடிப்படை எவ்வாறு கருவிகளாக ஆய்வுமுரைகளாக பயன்படுத்தபடுகிறது என்பதை.அதை அறிந்தால் தானே அதை மேலும் செம்மை படுத்தமுடியும்.மேலும் அது பல பரிமாணங்களை தாண்டி சென்று கொண்டிருக்கும் போது இன்னும் ஆரம்பத்திலேயே நாம்.//செமினார், வைவா வாஸ், அசைண்மென்ட போன்றவற்றிற்கு மதிப்பெண் இருப்பதால் அடிமைகளாகி விடுவார்கள் என்ற வாதம் சிரிப்பாக இருந்த்து// இது மாணவர்களின் ஆளுமையை வளர்பதற்கு பதிலாக அடிபணிய வைக்க பயன்படும் ஆயுதமாக நடைமுறையில் உள்ளதையே குறிப்பிட்டேன்.//அப்படி திறமையானவர்களை அடிமைகள் என வரையறுப்பது அபத்தமாகத்தான் படுகிறது. // நான் வரையறுக்க வில்லை அவர்கள் அப்படி வழ்துகொண்டிருக்கிரர்கள் என்பதையும் எதிர்ப்புகளை தெரிவிப்பதில்லை மேலும் இந்த அமைப்பு அந்த உரிமையை தருவதில்லை என்பதே என் கருத்து தவறான புரிதலை ஏற்படுத்தி இருப்பின் மன்னிக்கவும்.மேலும் ஆராய்ச்சி மாணவர்கள் ஆசிரியர்களின் எடுபிடிகளாக ஏன் வீட்டு வேலை வரை செய்து கொண்டு வாழும் அவல நிலையை அடிமை என்று கூறாமல் வேறு எப்படி அழைக்க? சில விதி விளக்குகள் உண்டு.//மற்றபடி ஆய்வில் சுயசிந்தனை இருந்தால்தான் சிறப்பான முறையில் முடிக்க முடியும் என்பதையும் அறிவீர்கள் என நினைக்கிறேன்.// இந்த கல்வி முறை சுய சிந்தனையை ஊக்குவிக்கவோ அல்லது செய்து பார்கவோ அனுமதிப்பதில்லை என்றே கருதுகிறேன்.//படித்தவை நடைமுறையில் உதவ்வில்லை என்ற ஒற்றைவாதம் ஒரு சிறுமுதலாளியின் பார்வை போல படுகின்றது. அதன் பல்பரிமாணம் மற்றும் நீண்ட கால , த்த்துவ புரிதல்களைப் பற்றிய அக்கறையற்ற எளிய பாமரவிவசாயின் மூளையை போல சிந்திப்பது அபத்தம் எனப் படுகிறது எனக்கு\\ நாம் படிப்பவை நடைமுறையோடு ஒன்றி போகவில்லை தனித்து நிற்கிறது என்பதே என் வாதம்.பாமர விவசாயி விவசாயி பூச்சி கொள்ளியை அது எப்படி கொள்ளும் என்பதை தெரியாமல் தெளித்து கொண்டு இருக்கிறானே அது போல.//புரிந்து படிப்பவர்கள் அறிவாளிகளாக இருப்பதால் தேர்வு செய்கின்றனர். // மனபாடம் செய்யும் திறமை உள்ளவனும் அறிவாளி ஆகிறான் அது பற்றி அறியாமலேயே.//இன்றைய அரசியல்வாதிகளில் பெரும்பான்மையினர் பிழைப்புவாதம் மற்றும் சந்தர்ப்பவாத்த்தில் மூழ்கி இருப்பதால் அரசியலே ஒரு சாக்டைதான் என முடிவு எடுப்பீர்களா// அது அவ்வாறு ஏன் உள்ளது அதற்கான காரணத்தையும் மாற்றுவையும் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும் என்றே முடிவு செய்வேன்.
//படித்தவை நடைமுறையில் உதவ்வில்லை என்ற ஒற்றைவாதம் ஒரு சிறுமுதலாளியின் பார்வை // இது பற்றி நான் ஏதும் கூறுவதிற்கில்லை நான் இங்கு புதியவன் வினவு மாக்ஸ்யய கல்வியில் சில கட்டுரைகளை இடும் போது புரிந்து பதில் எழுதுகிறேன்
கல்விக் கூடத்திலேயே பயன்பாடும் கற்றுத் தர வேண்டும் என்பது எப்படி சரியானது என்பதுதான் எனது அடிப்படையான கேள்வி. அறிவியல் படிப்புகளில் பயன்பாட்டு அறிவியலும், பொறியியலும், மருத்துவமும், மற்றும் வரலாறும், சட்டமும் தனித்தனியாகத்தானே இருக்கிறது. ஒருவேளை பயன்பாட்டு தளத்தில் சொல்ல வேண்டுமென்றால் வரலாற்று பாடத்திற்கும், அரசியல் விஞ்ஞானத்திற்கும், பொருளாதாரத்திற்கும் கூட அறிவியல் பொறியியல் அளவுக்கு பயன்பாட்டை கல்வி கற்கையிலேயே சொல்லித் தருவது சாத்தியமில்லை. சாத்தியமானதைக் கூட செய்வது இல்லை என்பது தனிக்கதை. அதற்காக அப்படிப்புகளை எடுத்து விடலாம் என்றால் அது சரியா.. இன்று அப்பரிந்துரையை யார் முன்வைக்கிறார்க்ள் என்பதுமு கவனிக்க தக்கது என நினைக்கிறேன்.
செமினார், வைவா வாஸ் போன்றவை சரியான முறையில் பயன்படுத்த வேண்டிய ஒன்று என்பது அதனை வடிவமைத்த முறையிலேயே உள்ளது. ஆனால் அதனை மிஸ் யூஸ் பண்ணுவது என்ற தவறு அந்த முறைகளில் உள்ளதா அல்லது அதனை முறைப்படுத்துவோரின் வையில் உள்ளதா…
அப்படிப்பட்ட மாணவர்கள் யாரும் அடிமைகளாக எனக்கு தெரிந்த அளவில் இல்லை. சுயசிந்தனை உள்ள இவர்கள் மனப்பாடம் செய்வது அல்லது அதிக மதிப்பெண்ணுக்காக மல்லுக்கட்டாத இயல்பும் கொண்டு தெளிவான பார்வையுடன் இருப்பதால் அடிமைகளாக இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவே இவர்களிடம் இருக்கிறது. மேலும் தனது சொந்த கருத்துக்களை தைரியமாக சொல்லும் இவர்கள் இதற்காக ஒரு ஆசிரியர் சில ஆண்டுகள் நீட்டிப்பார் என்றால் கூட தயங்குவதில்லை. இது போன்ற மாணவர்களை சில ஆசிரியர்கள் பழிவாங்கினாலும் இதுதான் காரணம் என எதனையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. பல ஆசிரியர்கள் இதுபோன்ற மாணவர்களைப் பார்த்து அஞ்சுவதும் அவர்களது உண்மையான ஆய்வு நடைமுறையை மெச்சுவதும், பலர் அதில் உடன் பணிபுரிய முன்வருவதையும் கண்கூடாக பார்த்து இருக்கிறேன். மற்றபடி ஆய்வில் விருப்பமின்றி கேரியருக்காக வோ அல்லது மன்னம் செய்ய வாய்ப்பிருப்பதாலோ ஆய்வுக்கு வருபவர்கள் இப்படி அடிமையாக இருப்பதில் ஆச்சரியம் இல்லைதானே
அய்யா விண்வெளி பற்றி படிக்கிறீர்கள், வான் மண்டலங்கள் பற்றியும் படிக்கிறீர்கள், பிரபஞ்சம் உருவானது பற்றி படிக்கிறீர்கள், பூமிக்கடியில் உள்ள பொருட்களை பற்றி படிக்கிறீர்கள்.. இவற்றில் உங்களுக்கான பயன்பாடு என்ன• அவற்றை ஒருங்கிணைந்த முறையில் சொல்லித் தர வேண்டும் என்று சொன்னால் கூட ஓரளவு நியாயம் உள்ளது. அதற்காக மெத்தில் ஆல்கஹால் தயாரிக்க தேவையான விசயங்களை ரசாயன பாடத்தில் படித்து விட்டு வீட்டில் தினமும் பரிசோதித்து பார்த்தால் வீட்டுக்கு மதுவிலக்கு போலீசுதானே வரும்.
சரி.. கொஞ்சம் ஓவராகத்தான் சொல்லி விட்டேன்.
ஒரு விவசாயிக்கு அந்த மருந்து எப்படி மருந்துகளை கொல்லும் என்பது பற்றி தெரிந்து என்ன செய்ய போகிறார் என்பதை பார்க்க வேண்டும். தனக்கு அளிக்கப்படும் எல்லா மருந்துகளையும் பற்றி தெரிந்த பிறகுதான் ஒரு சாப்ட்வேர் ஊழியர் கூட ஊசி போட மருத்துவரை அனுமதிக்கிறாரா என்ன•. அம்மருந்தின் பக்க விளைவிகளை பற்றி தெரிவது கட்டாயம். அறிவின் பால் நாட்டமுள்ள விவசாயிகள் அதன் உட்பொருள் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார். சொல்வார்தான் இல்லை.
மற்றபடி சிறுமுதலாளிய பார்வை என்ற சொல் உங்களை கலவரப்படுத்தி இருக்குமானால் அதுபற்றி பிறகு பேசுவோம். மன்னிக்கவும்.
இக்கட்டுரையை நேற்று பார்த்தேன். மிக அழகாக எழுதப்பட்ட கட்டுரையில் நானும் இடம் பெற்றிருப்பதை பார்த்து ஆர்வத்துடன் படித்தேன். இன்றைய தேர்வு முறை மாணவர்களின் அறிவையோ, திறனையோ சோதிக்கும் முழுமையான ஒன்று அல்ல என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
நடைமுறையில் இருக்கும் தேர்வு அடிப்படையில், situation oriented. படித்தது அனைத்தையும் ஒரு மாணவன் குறிப்பிட்ட நேரத்தில் வெளிக்கொணர நிர்ப்பந்திக்கிறது. இது பல நேரங்களில் வாய்க்கும் ஒன்றல்ல. தேர்வறையில் மாணவர்கள் சிலர் கடைசி பத்து நிமிடத்தில், அவசரப்படுத்தப்படும் போது, கைகள் நடுங்க எழுதுவதை பார்த்துள்ளேன். அது உழைப்பின் வலி. பிட் பேப்பரை நம்பி வரும் மாணவர்கள் அப்படி அல்ல. ஷோக்கு பேர்வழிகள். மிக மிதர்ப்பாக இருந்து கொண்டு –இப்போதெலாம் எழுதிக் கொண்டு வருவது கூட இல்லை; மைக்ரோ xerox எடுத்து வருகிறார்கள்.100 கி.மீ. ஓட்டப்பந்தையத்தில், மைதானத்தை 5 முறை சுற்றி வருவதற்கு பதிலாக 4 முறை மட்டுமே சுற்றி வந்து ஏமாற்றி பரிசு வாங்குவது எப்படி தகாத செயலோ, அத்தகையது பிட் அடித்து வெற்றி பெறுவது.
இந்த குறுக்கு வழி குயுக்திக்கு புராணத்திலும் நியாயம் தேடலாம். உலகை சுற்றி வந்து ஞானப் பாசம் பெற முயற்சித்தான், முருகன். விநாயகனோ அம்மைஅப்பனை சுற்றி வந்து தந்திரமாக அதனை பறித்தான். தேர்வில் காப்பியடித்தலில் இரு வகைகள் உள்ளன. ஒன்று இடது புறமோ, வலது புறமோ அல்லது முன்போ, பின்போ அமர்ந்திருக்கும் சக மாணவனின் விடைத்தாளை எட்டிப் பார்த்து எழுதுதல், மற்றொன்று, பிட் கொண்டு வந்து எழுதுதல். இதில், பிநதையது மிகவும் திட்டமிட்ட ரீதியில் செய்யப்படுவது. தேர்வுக்கு முந்தின இரவே தனது ‘தயாரிப்பை’ ஒருவர் செய்து முடித்திருக்க வேண்டும். மனித வெடிகுண்டு உடலில் ‘பாம்’-ஐ மறைத்து வைத்திருப்பது போல, உடலில் ‘பிட்’-ஐ யாரும் பார்க்க முடியாத இடங்களில் வைக்க வேண்டும். காப்பி அடித்து முடியும் வரையிலும் இயல்பாக முகத்தை வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிரிமினல் மூளையே இதனை திறம்பட செய்ய முடியும்.
நன்றாக படித்து மதிப்பெண் எடுப்பவர்கள் பெரும்பாலும் உயர் பதவிகளுக்கு ஆசைபடுகிறார்கள், சமூக உணர்வற்று இருக்கிறார்கள் என்பதாலேயே பிட் அடிப்பஹை ஊக்குவிக்கவோ, பரிந்துரைக்கவோ எப்படி முடியும்? பிட் அடித்து எழுதும் ஒரு மாணவன் நாளைக்கு ஆசிரியராக வரும் போது அவனிடம் பயிலும் மாணவர்களின் கதி என்ன? அவன் போலீசாக வரும் போது அவன் பேசும் வசனம் தான் ‘சாமி’ பட வசனம்: ‘நான் போலீஸ் அல்ல பொருக்கி.’ கல்வித் துறை சீரழிந்து கிடக்கிறது; மாணவர்கள் காப்பியடிப்பது போன்ற செயல்களால் இன்னும் சீரழியும்; முதலாளித்துவ கல்விமுறை அழிந்து போக இப்படி யோசிப்பது நேர்மையல்ல. டி.சர்ட் அணியக்கூடாது, மொபைல் வைத்திருக்கக் கூடாது, மாணவியருடன் பேசக்கூடாது என்று மிலிட்டரி டிசிப்ளின் சுயநிதி கல்லூரிகளில் நிலவுகிறது. இதற்கு மத்தியில் மாணவர்கள் ஓரளவு ஜனநாயகத்தை சுவாசிப்பது அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெரும் கல்லூரிகளில் மட்டும் தான்.
பிட் அடிப்பது கல்லூரி வாழ்க்கையின் கொண்டாட்டமல்ல. அது கல்லூரி வாழ்க்கையின் முதன்மை நோக்கத்தையே பசடித்து விடுகிறது. ஒரு மாணவன் தன விடைத்தாளில் ‘படித்து பார்த்தேன் ஏறவில்லை; குடித்து பார்த்தேன் ஏறிடிச்சு’ என்று ஒரு குத்துப்பாடலின் வரியினை ஆங்கிலத்தில் transliterate செய்து எழுதியிருந்தான். இது வினவு இதழோரமாக புன்னகைத்து விடத்தக்க செயலா? அல்லது அவன் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஸ்டேட்மேண்டா? என் அருகிலிருந்த விடை திருத்துனர் 500 ரூ. நோட் ஒன்றை ஒரு விடைத்தாளின் கடைசி பக்கத்தில் இருந்து எடுத்தார். மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் நடக்கும் ‘புகழ்பெற்ற’ விடைத்தாள் சேசிங் ஊரறிந்த உண்மை.மேலும் தன்னுடன் முரண்படும் மாணவனை வெளிநபர்கள் துணையுடன் அடித்து, துவைப்பது, ஒரு பிரிவு மாணவர்கள் மீது ராகிங் மற்றும் ஈவ்டீசிங் ஆகிய சீர்கேடுகளை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ம.பி.யில் ஒரு கல்லூரியின் பேராசிரியர் RSS இன் மாணவர் பிரிவான ABVP யால் அடித்தே கொல்லப்பட்டார்.
வினவு, மாணவர்களை அவர்கள் வயது. துடிப்பு என்ற அம்சத்திலிருந்து ஒருவித பரவச நிலையிலிருந்து பார்க்கிறது, என்று நினைக்கிறேன். யூ.ஆர். அனந்தமூர்த்தியின் ‘பாரதி புரா’ நாவலில் வரும் முக்கிய கதை மாந்தர், ஏழை பாழைகள் மீது பரிவு கொண்டவன். அந்த பரிவும், அன்பும் யதார்த்தத்தில் சோதித்து அறியாத கற்பனை மட்டத்தில் அவனிடம் இருக்கும். பின்பு அந்த மக்களிடம் நெருங்கி பசக்கும் போது அவர்களிடம் இருக்கும் பல குணக்கேடுகளை பார்த்து அதிர்ந்து போவான். இக்கட்டுரை வினவின் ஆட்டோகிராப் ஞாபகங்களாகவே பெரும் பகுதி விரிகிறது. ஆட்டோகிராப் பதிவுகளின் பதிவுகளின் பலகீனம் எந்த குறையையும் பெரிதாக கொள்ள வைக்காது. காலம், சோசல், அறிவு மட்டம், கருத்து நிலை என அனைத்திலும் வேறுபட்ட வாழ்க்கையில், ஏன், தன்னை காயப்படுத்தியவர் கூட சுவாரஸ்ய மனிதர் ஆகி விடுவார்.
வினவுடன் நான் பேசியது எனக்கு நினைவுள்ளது. ஒரு விஷயத்தை நான் ஏற்றுக்கொண்டேன். பிட் அடிக்கும் மாணவர்களை நிர்வாகத்திடம் பிடித்து கொடுப்பது இரக்கமற்ற செயல் என்பதை உணர்ந்தேன். அதன் பிறகு விடைத்தாளை வாங்கி விட்டு அடுத்த தேர்வுக்கு ஒழுங்காக படித்து வர சொல்லி அனுப்பியுள்ளேன். ஒரு ஆசிரியன் மாணவனுக்கு உதவும் இடம் வகுப்பறையே அன்றி தேர்வு அறை அல்ல.
.
விளக்கத்திற்கு நன்றி தோழர். ஆசிரியரின் பார்வை என்ற முறையிலும், கல்வி அமைப்பின் போதாமையை உணர்ந்தவர் என்ற வகையிலும் உங்கள் கருத்துக்களை முன்வைத்திருக்கிறீர்கள். காப்பி அடிப்பதை ஆதரிக்கவில்லை என்பதையும் மாணவர் பருவத்தின் இயக்கம் அரசியல், சமூக போராட்ட நடைமுறைகளிலேயே பண்படுத்தப்படும் என்பது எனது கருத்து. அதை பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுகிறோம்.
மூட்டு அண்ணே, அவாள்கள் அந்தக்காலத்துல இருந்து வேத மந்திரத்தை அர்த்தம் கூடத் தெரியாமல் மன்னம் செய்வதிலிருந்து கூட அந்த்தப் பழக்கம் வந்திருக்கலாம்.
————————————————————————–
குரான் உட்பட பலவற்றை மனனம் செய்வது இன்றும் தொடர்கிற ஒன்று. மனனம் செய்வது கேவலம் அல்ல. அது ஒரு சாதிக்கு மட்டும் உரிய ஒன்றும் அல்ல. குறள் பெரியபுராணம் தேவாரம் திருவாசகம் போன்றவையும் மனனம் செய்யப்படுவதுண்டு. செய்கிறார்கள் இன்றும். ஓதுவார்கள் மனனம் செய்யாமல் கையில் புத்தகத்தை வைத்து படிக்க முடியுமா. இல்லை அர்ச்சகர்தான் மனனம் செய்யாமல் அர்ச்சனை செய்ய முடியுமா. சமன்பாடுகள், வரையறைகள், விதிகள் என்று பலவற்றை மனனம் செய்யாமல் பரிட்சையில் எழுத முடியாது. இதை எல்லோரும் செய்கிறார்கள். வாய்பாடு மனனம் செய்தால் மனக்கணக்கு போடுவது எளிது. இது புரியாமல் அவாள் என்று எழுதும் வினவு எப்போது வெறுப்பினை விட்டு வெளியே வருவார்.
ஏதோ நானும் எழுதிருக்கேன். பாத்து கருத்து சொல்லுங்க வினவு அண்ணே. http://vijaygopalswamihyd.blogspot.com/2010/05/blog-post.html
தனித் தேர்வு எழுதுபவர்களின் பிரச்சினையையும், பண்ணை அடிமைகளாக மாணவர்கள் நடத்தப்படுவதின் வலியையும் உங்கள் பதிவு சிறப்பாக பதிவு செய்திருக்கிறது. முக்கியமாக அந்த தலைமை ஆசிரியர் இறுதி நேரத்தில் காப்பி அடிக்கச் சொன்னதை பலர் ஏற்கமாட்டார்கள் என்றாலும் அவரது அக்கறையை உணரமுடிகிறது. விஜயும் நம்மள மாதிரி காமர்ஸ் கூருப்தான் என்று மகிழ்ச்சியடைய முடியாதபடி பல சிந்தனைகளை கிளறுகிறது. வாழ்த்துக்கள் விஜய் கோபால்சாமி!
வினவு, எனது இடுகை இங்கே
http://sandanamullai.blogspot.com/2010/05/blog-post_10.html
நல்ல பதிவு – சுவாரசியமான எழுத்து நடையும் சொல்லவந்ததை நன்றாக விவரிக்கும் திறனும் உங்களுக்கு இருக்கிறது.
//வெளிலே வந்தப்புறம் தெரிஞ்ச விஷயம் – பிசிக்ஸ் பேப்பர் டஃப்ன்னு பார்த்ததும், குணா டென்ஷன் ஆகிட்டா. கை காலெல்லாம் உதறுது. அவளாலே எழுத முடியலை.மயக்கம். தண்ணியெல்லாம் கொடுத்து ஆசுவாசப்படுத்தின அப்புறமும், அவளாலே எழுத முடியலை.//
கண் முன்னே பழைய நினைவுகள். ஒரு பேப்பர் கஷ்ட்டமா வந்திருச்சின்ன உடனே ஒரு பரபரப்பு அப்படியே பரவும் பாருங்க.. அதுவும் நாம்
எழுதியிருந்த ஒரு மார்க் கேள்விகளுக்கு வெளியே வந்து வேற பதில் தான் சரியானது என்று தெரிந்தவுடன் தொண்டையில் அப்படியே
அடச்சிக்கும்.
//சரி,அவங்களுக்கு தெரிஞ்சதை அவங்க கேட்டு இருக்காங்க,நமக்கு தெரிஞ்சதை நாம எழுதி வைப்போம்னு எழுதிக்கிட்டிருந்தோம். //
அடடா.. சேம் ப்ளட்.. முதல் வரியும் கடைசி வரியும் கேள்வியோடு சம்பந்தப்பட்டிருக்கும். மத்தபடி நடுவில வர்றது எல்லாம் “அசோகர் ஏன்
மரம் நட்டார் என்றால், அவர் மரம் நட்டார். மரம் நடவேண்டும் எனும் விருப்பத்திற்கு மரம் நட்டார். மரம் நட்டு வளர்க்க வேண்டும் என்று
மரம் நட்டார். மரம் பெரிதாகும் என்பதால் மரம் நட்டார். சாலையோரம் இடம் இருந்ததால் மரம் நட்டார்….” இப்புடியே ஒரு ரெண்டு பக்கத்துக்கு
எழுதுவதில் நாங்களெல்லாம் கில்லாடிகளாக்கும்.
//கல்வின்றது நாம படிக்கிற பாடப்புத்தகத்திலேர்ந்து மட்டும் வர்றதா என்ன?!//
சரியான கேள்வி. இதுக்கு யாருனாச்சும் பிட் அடிக்காம பதில் சொல்லுங்கப்பா..
நன்றி முல்லை! பல இடுகைகளுக்கான விசயங்கள் உங்கள் கட்டுரையில் இருக்கின்றன.பயம், தீக்குளிப்பு, காதல் எல்லாம் சேர்ந்து இறுதியில் கேட்ட கேள்வியின் நியாயத்தை வலுவாக்குகின்றன.ஆங்கில வார்த்தைகள் அதிகமாக இருக்கின்றன.அதை குறைக்கலாமென்று தோன்றுகிறது. வாழ்த்துக்கள்!
எனது கடந்த கால ஞாபகங்கள் – நன்றி
பலநாள் கழித்து வினவில் வாசிக்க வந்தேன். நல்ல தலைப்பும் விவாதங்களும். நன்றி.
அய்யா, அருமையான தலைப்பு. இந்திய கல்வி முறையின் நிறை குறைகளை பற்றி அனைவரும் விவாதிக்க நல்ல வாய்ப்பு. என்னை போன்றவர்களும் கலந்து கொள்ளலாமா என்று தெரியவில்லை. இருப்பினும் நல்ல தலைப்பை கொடுத்து விவாதிக்க வாய்ப்பும் கொடுத்ததற்கு நன்றி.
முகுந்தம்மா நீங்களும் உங்கள் தளத்தில் இதைப்பற்றி எழுதி தொடரில் கலந்து கொள்ளுங்கள். படிக்க காத்திருக்கிறோம்.
அய்யா
என்னுடைய பங்களிப்பாக
http://mukundamma.blogspot.com/2010/05/blog-post_5101.html
நன்றி
மனப்பாடக் கல்வி முறையின் அபத்தத்தையும், துறையில் உயிர்ப்புள்ள ஆசிரியர்கள் இருந்தால் அந்த ஈர்ப்பு மாணவர்களிடமும் வளரும் என்பதை அழகாக பதிவு செய்திருக்கிறீர்கள். நன்றி!
வணக்கம் தோழர்,
என்னுடைய பதிவுக்கான சுட்டி இதோ,
http://senkodi.wordpress.com/2010/05/12/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/
செங்கொடி
தோழர் செங்கொடி,
தாய்மொழியில் படிக்க முடியாதபடி தனது பள்ளி வாழ்க்கையைத் தொலைக்க நேரிட்ட அனுபவம் மிகவும் பயங்கரமானது. அந்த வலியை படிப்பவர் மனதிலும் ஏற்படுத்தியிருக்கிறீர்கள். நன்றி
[…] வினவு – தேர்வு: ‘காப்பி’ அடித்தால் த… […]
படிச்சதும் எளிமையா புரியுது காப்பி அடிக்கிறது தப்பு என்று நினைத்தேன் எந்த கட்டுரையால என் கருத்த மாத்திகிட்டேன் கார்க்கிக்கு வாழ்த்துகள்.
நண்பர் மணிக்கு இந்த செய்தியை காலம் கடந்து இன்றைய ஆராய்ச்சியின் அவலம் அறிய
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=190812
[…] முதல் பதிவு: வினவு […]
[…] […]