முகப்புபெர்டோல்ட் பிரெக்ட் (Bertolt Brecht): ஜெர்மனியிலிருந்து ஒரு மக்கள் கலைஞன்!
Array

பெர்டோல்ட் பிரெக்ட் (Bertolt Brecht): ஜெர்மனியிலிருந்து ஒரு மக்கள் கலைஞன்!

-

இலக்கிய அறிமுகம் – 4 பெர்டோல்ட் பிரெக்ட் (Bertolt Brecht)

நவீன ஐரோப்பிய நாடக உலகில் ஹென்றிக் இப்ஸன், ஆகஸ்ற் ஸ்ற்றிட்போர்க் என்போருக்கு அடுத்தபடியாக முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தியவர் பிரெக்ட். முற்போக்கான சிந்தனையுடையவரான பிரெக்ட்டின் உலக நோக்கு 1920களின் நடுப்பகுதியில் மார்க்ஸியத்தின் வழிப்படலாயிற்று. அக்காலப்பகுதியில் வெளியான சாளி சாப்ளினின் “கோல்ட் ரஷ்” ஸெர்கெய் ஐஸென்ஸ்ற்றைனின் “போடெம்கின் போர்க்கப்பல்” எனும் திரைப்படங்கள் நாடகம் பற்றியும் சமூகம் பற்றியும் பிரெக்ட்டின் பார்வை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின என்று கூறப்படுகிறது.

பிரெக்ட்டின் நாடகங்கள் எந்த அளவுக்கு மக்களை கவர்ந்தனவோ அந்த அளவுக்கு அவை ஜெர்மன் ஃபாசிசவாதிகளான நாஜிகளின் வெறுப்பை சம்பாதித்தன. எனவே ஃபாசிசம் அதிகாரத்திற்கு வந்த பின்பு பிரெக்ட்டால் ஜெர்மனியில் வாழ முடியவில்லை. ஐரோப்பியாவினுள் புலம் பெயர்ந்து சுவீடனில் வாழ்ந்த பிரெக்ட் அதன் இறுதியில் ஜெர்மனி வட ஐரோப்பாவை கைப்பற்றிய கையோடு அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தார்.

ஐம்பத்து மூன்று நாடகத்தை எழுதிய பிரெக்ட்டின் மிகச்சிறந்த நாடகங்கள் உலகப்போர் காலத்திலேயே எழுதப்பட்டன. கலிலியோவின் வாழ்க்கை, தைரியத்தாய் (Mother Courage),  ஷெச்சுவானின் நல்ல பெண்மணி, காக்கேசிய சுண்ண வட்டம், என்பன இன்றும் பேசப்படுவன.

உலகப்போரின் முடிவையொட்டி தொடங்கிய கெடுபிடிப் போரின் (cold War) போது, அமெரிக்காவில் கம்யூனிஸ்டுகளை வேட்டையாடும் அரசாங்க நடவடிக்கைகள் முனைப்பு பெற்றன. பிரெக்ட் ஒதுக்கப்பட வேண்டியோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டார். அமெரிக்க மக்களனைவரின் அமெரிக்கருக்குத் தகாத செயற்பாடுகள் குழு (Un-American Activities Committee) அவரை விசாரித்த்து. முதலில் தனது அரசியல் பற்றி எதுவுமே சொல்லமாட்டென் என்று அறிவித்த பிரெக்ட், அமெரிக்காவில் தொடர்ந்தும் தங்கியிருக்க விரும்பாமல் தான் கம்யூனிஸ்ட கட்சி உறுப்பினரல்ல என்று சாட்சியமளித்து, விடுவிக்கப்பட்டு, 1947 ல் ஐரோப்பாவிற்கு சென்று சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்தார்.

மேற்கு வல்லரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்த மேற்கு ஜெர்மனியில், பழைய ஃபாசிசவாதிகள் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டதையிட்டு வெறுப்படைந்த பிரெக்ட் பவேரியாவில் தன் ஊருக்கு திரும்பவில்லை. சோஷலிச கிழக்கு ஜெர்மனி அவருக்கு அழைப்பு விடுத்த்தையொட்டி 1949 முதல் இறக்கும் வரை ஜெர்மன் ஜனநாயக குடியரசின் குடிமகனாகவே வாழ்ந்தார். அவரது இறுதி ஆண்டுகளில் அடர் நாடகங்கள் எழுதாத போதும், நாடக இயக்கத்தை முன்னெடுப்பதிலும், புதிய தலைமுறையொன்றை உருவாக்குவதிலும் தனது நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டார். கற்பித்தலுக்கான நாடகங்கள் என்ற வகையில் மார்க்ஸிய சிந்தனையை முன்னெடுக்கும் குறு நாடகங்களையும் அவர் தயாரித்தார்.

பிரெக்ட் பற்றிய அவதூறுகள் சிலரால் இன்னமும் மேற்கில் பரப்பப்பட்டாலும், நவீன நாடகத்துறையில் அவருக்குரிய இடத்தை யாராலும் மறுக்க இயலாதுள்ளது. இன்றைய மக்கள் நாடக அரங்குகட்க்கும், பல்வேறு வெகுஜன புரட்சிகர அரங்குகட்க்கும் பிரெக்ட் ஒரு முன்னோடி என்று உறுதியுடன் கூறலாம். வழமையான நாடகத்துறையிலிருந்து அவர் ஏற்படுத்திய விலகல் முக்கியமானது. வழமையான நாடகங்கள் மேடை நிகழ்வுடன் அவையோர் ஒன்றிப் போவதையே நோக்கமாக்க் கொண்டிருந்த சூழலில், அவையோரை மேடை நிகழ்வினின்று தொலைவுபடுத்தி விலகி நிற்கச் செய்வதை பிரெக்ட்டின் “காவிய அரங்கு” முறை முதன்மைப்படுத்தியது. நாடகத்தின் நடுவே பாத்திரங்கள் அவையோரை விழித்து பேசுதல், பிரகாசமான மேடை ஒளி அமைப்பு, நாடகப் போக்கை இடைமறிக்கும் முறையில் புகுத்தப்படும் பாடல்கள் என்பன அந்த நோக்கஞ் சார்ந்த மேடை உத்திகள். விளக்கங்கூறும் விதமான சுலோக அட்டைகளைக் கூட பிரெக்ட் பயன்படுத்தினார் என்று கூறப்படுகிறது. பிரெக்ட் தனது நாடகச் சுவடிகளை தொடர்ந்து திருத்தங்கட்கு உட்படுத்தி வந்தார் என்பது நாடகம் பற்றிய அவரது அணுகுமுறைக்குரிய பண்பாகும்.

நன்மை வெல்லும் என்கிற விதமான நாடக முடிவுகளை பிரெக்ட்டிடம் காண்பது அரிது. தீமையும் அநீதியும் தான் வெல்லுகின்றன என்பதை காட்டுவதன் மூலம், நல்லதும் நீதியும் வேண்டுமாயின் உலகின் ஏற்கப்பட்ட நியதிகளை மாற்றவும் மறுக்கவும் வேண்டும் என்பதை பிரெக்ட் நேரடியாகவும் மறைமுகமாகவும் உணர்த்துவார்.

50க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு குறிப்புகளை எழுதிய பிரெக்ட் அமெரிக்காவில் வாழ்ந்த ஏழாண்டுகளில் ஹாலிவுட் திரைப்படத் துறையால் முற்றாக ஓரங்கட்டப்பட்டார் என்பதும் கவனிக்கத்தக்க விடயமாகும். கலைஞன் அரசியலை விட்டு விலகி நின்றாலும், அரசியல் கலைஞனை விட்டு வைப்பதில்லை என்பதற்கு பிரெக்ட்டின் அமெரிக்க அனுபவம் ஒரு பயனுள்ள உதாரணம்.

பிரெக்ட் நாடகப்பிரதிகளை எழுதி, நாடகங்களை தயாரித்து Berliner Ensemble என்ற நாடகக் கம்பனியை அவரது இரண்டாவது மனைவியும் புகழ்பெற்ற நடிகையுமான ஹெலெனெ வைகெல் அவர்களுடன் சேர்ந்து நடத்தியவராவர். அதை விட நாடகம் பற்றிய கொள்கையை விருத்தி செய்ததிலும் அவருடைய பங்கு முக்கியமானது. நாடகவியல் பற்றி அவர் ஒன்பது நூல்களை வெளியிட்டுள்ளார்.

பிரெக்ட்டின் நன்கறியப்பட்ட இன்னெரு முகம் கவிதை சார்ந்தது. அவருடைய நாடகங்களில் வரும் பாடலகள் பலவும் கவித்துவம் மிக்கவை. அவற்றுக்கும் அப்பால் அவர் நூற்றுக்கணக்கான கவிதைகளையும் எழுதியுள்ளார். இட்துசாரி இலக்கியப் பரப்பில் பிரெக்ட்டின் கவிதைக்கட்கு முக்கியமானதொரு இடமுண்டு. கிழக்கு ஜெர்மன் அரசாங்கம் மக்கள் கிளர்ச்சி ஒன்றை தவறாக கையாண்ட போது, பிரெக்ட் அதை விமர்சிக்க தவறவில்லை. அவ்வாறு எழுதப்பட்ட ஒரு கவிதையைக் வைத்து பிரெக்ட்டுக்கும் ஸ்டாலினுக்கும் கடும் முரண்பாடு கற்பிக்கும் முயற்சிகள் இன்னமும் உள்ளன. பிரெக்ட் இறுதி வரை ஸ்டாலினினதும், சோவியத் ஒன்றியத்தினதும் நண்பனாகவே இருந்தார்.

கலை கலைக்காகவே என்ற கோஷத்தை நிராகரித்துக் கலைப் பண்பு குன்றாமல் அரசியல் தன்மை மிக்க ஆக்கங்களை உலகுக்கு வழங்கியவர் பிரெக்ட். சிங்கள நாடக இயக்கத்தின் எழுச்சி காலமான 1950 களின் பிற்கூற்றிற்கும், 1970 கட்குமிடையில், காக்கேசிய சுண்ண வட்டம், ஹுணு வட்டே கதாவ (சுண்ண வட்ட கதை) என்ற பேரில் தயாராகி வெற்றி பெற்றது. அக்கதை ஒரு குழந்தையின் மீதான உரிமை, பெற்றவளுக்கா, பேணி வளர்த்தவளுக்கா என்ற கேள்வியை எழுப்பி உழுபவனுக்கே நிலம் உடைமை என்ற நீதியை உணர்த்தி நின்றது.

கற்பித்தலுக்கான நாடகங்களில் ஒன்றான “விலக்கும் விதியும்” 1970 களில் ஈழத்தில் தமிழில் “யுகதர்மம்” என்ற பேரில் வர்க்க சமூகத்ஹ்டில் நீதியின் வர்க்க சார்பை உணர்த்தும் நாடகமாக வெற்றி பெற்றது. எனினும் தென்னாசியச் சூழலில் பிரெக்ட் பற்றிய அறிவும் அக்கறையும் மேலும் தேவை என்றே நினைக்கிறேன்.

கீழே காக்கேசிய சுண்ண வட்ட்த்தின் இறுதிக்காட்சியில் ஒரு பகுதியைத் தருகிறேன். தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தன் குழைந்தையை கைவிட்டு சென்றவளான ஒரு ஆளுநரின் மனைவிக்கும் குழந்தையைக் காப்பாற்றி தன் வறுமையின் நடுவே வளர்த்தெடுத்த மாளிகை பணிப் பெண் க்ருஷாவுக்குமிடையிலான வழக்கு, சந்தர்ப்ப சூழ்நிலையால் நீதிவானாக்கப்பட்ட அஸ்டாக்கின் முன்பு விசாரிக்கப்படுகிறது. அவ்வழக்கை எடுப்பதற்கு முன், இரு முதியவர்களின் மணமுறிவு வழக்கொன்றைப் பற்றிய தீர்ப்பை பின்னர் வழங்குவதாகக் கூறி விசாரணையை தொடர்கிறான். இப்போது க்ருஷாவை நோக்கிப் பேசுகிறான்.

அஸ்டாக் : (க்ருஷாவைத் தன்னிடம் அழைத்து, அவளை நோக்கி சற்று பரிவாக சரிந்தவாறு) உனக்கு நீதியைப் பற்றி கொஞ்சம் பரிவு இருப்பதை கவனித்தேன். இவன் உன் குழந்தையென்று நான் நம்பவில்லை. அப்படி அவன் உன் குழந்தையாக இருந்தால், பெண்ணே, நீ அவன் பணக்காரன் ஆவதை விரும்பமாட்டாயா? நீ மட்டும் அவன் உன் குழந்தை இல்லை என்று சொன்னால் அவனுக்கு ஒரு மாளிகையும் லாயங்களில் பல குதிரைகளும் அவன் வாசற்படிகளில் பல பிச்சைக்காரர்களும் அவனுக்கு பணியாற்ற படை வீர்ர்களும், அவனுடைய வீட்டு முற்றத்தில் பல மனுதாரர்களும் இருப்பர். இல்லையா? என்ன சொல்கிறாய்- இவன் பணக்காரனாவதை விரும்பவில்லையா?

பாடகர் :
சினந்த பெண்ணும் மனதில் நினைத்து
சொல்லா மொழி கேண்மின்
பொன்னாலான பாதனி இருந்தால்
கரடி போல் பொல்லானாய்
அவனது வாழ்வைத் தீயது தாழ்த்தும்
என்னை அவன் இகழ்வான்

வன்கல் இதயம் ஒன்று சுமந்தல்
தொல்லை மிகும் எல்லை
வல்லமை மிக்க தீயவனாதல்
பிள்ளைக் கது கொடுமை

பசித்தவரன்றிப் பசியே அவனின்
பகையாய் ஆகட்டும்
பகலின் ஒளியை அன்றிக் காரிருள்
இரவினை அஞ்சட்டும்!

அஸ்டாக் : பெண்ணே, உன்னை எனக்கு விளங்குகிறதென நினைக்கிறேன்.

க்ருஷா : (திடீரென உரத்து) அவனை நான் கைவிட மட்டேன், நான் அவனை வளர்த்தேன். அவன் என்னை அறிவான்.

(ஷௌவா என்ற பொலிஸ்காரன் குழந்தையுடன் வருகிறான்)
ஆளுநரின் மனைவி : அவன் கந்தல் உடுத்தியிருக்கிறான்.

க்ருஷா : அது உண்மையல்ல. அவனுடைய நல்ல சட்டையை அணிவிக்க எனக்கு நேரம் தரப்படவில்லை.

ஆளுநரின் மனைவி : அவன் ஒரு பன்றி தொழுவத்தில் இருந்திருக்க வேண்டும்.

க்ருஷா : (கடுஞ்சீற்றத்துடன்) நான் பன்றியல்ல. இங்கே பன்றிகள் சில உள்ளன! உன் கைக்குழந்தையை எங்கே விட்டுச் சென்றாய்?

ஆளுநரின் மனைவி : உனக்கு காட்டுகிறேன், இழிந்த ஜன்மமே! (க்ருஷா மீது பாய முனைந்தவளை அவளது வழக்கறிஞர்கள் மறிக்கிறார்கள்) இவள் ஒரு குற்றவாளி, இவளை சவுக்கால் அடிக்கவேண்டும் உடனேயே!

இரண்டாவது வழக்கறிஞர் : (வாய்க்கு மேலாக்க் கையை பிடித்தவாறு ஆளுநரின் மனைவியிடம்) நத்தெல்யா அபாஷ்விலி, நீங்கள் வாக்குறுதி தந்தீர்கள்….. (நீதிவானிடம்) மேன்மை தாங்கியவரே வாதியின் உணர்ச்சி….

அஸ்டாக் : வாதி, பிரதிவாதி! நீதிமன்றம் உங்கள் வழக்குகளை கேட்ட்து. ஆனால் உண்மையான தாய் யாரென்ற முடிவுக்கு வரவில்லை. எனவே நீதிவான் என்ற வகையில் குழந்தைக்கு ஒரு தாயை தெரிவதற்கு நான் கடப்பாடுடையவனாகிறேன். நான் ஒரு பரீட்சை வைக்கிறேன். ஷௌவா ஒரு சுண்ணக்கட்டி கொண்டுவந்து தரையில் ஒரு வட்டம் வரை. (ஷௌவா அவ்வாறே செய்கிறான்) குழந்தையை நடுவில் வை. (ஷௌவா குழந்தை மைக்கலை வட்ட்த்தின் நடுவே வைக்கிறான். குழந்தை க்ருஷாவை நோக்கி முறுவலிக்கிறது.) நீங்கள் இருவரும் வட்ட்த்திற்கு அருகே நில்லுங்கள். (பெண்கள் இருவரும் வட்ட்த்தை நெருங்குகின்றனர்) ஒவ்வெருவரும் குழந்தையின் ஒரு கையைப் பற்றுங்கள். (செய்கிறார்கள்) வட்ட்த்திற்கு வெளியே இழுப்பவளே உண்மையான தாய்.

இரண்டாவது வழக்கறிஞர் : (துரிதமாக) உயர் நீதிமன்றமே, இதை நான் எதிர்க்கிறேன்! பெருமைக்குரிய அபாஷ்விலியின் சொத்துக்கள் அவருடைய வாரிசு என்ற வகையில் இக்குழந்தையுடன் தொடர்புடையனவாக இருப்பதால் அவை இவ்வளவு ஐயத்துக்குரிய ஒரு போட்டியின் மீது தங்கியிருக்கக்கூடாது. அதைவிட என் கட்சிக்காரர் கடும் உழைப்பிற்குப் பழக்கப்பட்ட இவளின் உடல்வலிமையை கொண்டவரல்ல.

அஸ்டாக் : எனக்கு அவர் நன்கு தின்று கொழுத்தவராகவே தெரிகிறார்… இழுங்கள்!….
_____________________________________________

பிரெக்ட்டின் சில கவிதைகள்:

பிரிதல்

நாம் தழுவுகிறோம்
உயர் வகையான துணி என் விரல்களிடையே
மட்டரகமான துணி என் விரல்களிடையே
துரிதமான ஒரு தழுவுதல்
உன்னை இராப் போசனத்துக்கு அழைத்துள்ளனர்
என்னை சட்டத்தின் ஏவலர்கள் பின் தொடர்கின்றனர்.
பருவ நிலையைப் பற்றியும் நம் நிலையான நட்பைப் பற்றியும்
பேசுவோம். மற்ற எதுவுமே கசப்பானதாகவே இருக்கும்.
___________________________________________
விமர்சனக் கண்ணோட்டம் பற்றி

விமர்சனக் கண்ணோட்டம்
சிலருக்கு பயனற்றதாக தெரிகிறது
ஏனென்றால்
அவர்களுடைய விமர்சனத்தை
அரசு அலட்சியப்படுத்துகிறது.
இங்கே பயனற்ற கண்ணோட்டம்
பலவீனமான கண்ணோட்டமே
விமர்சனத்தை ஆயுதபாணியாக்கினால்
அது அரசுகளை அழித்தொழிக்கும்.

ஆற்றிற்கு அணை கட்டல்
கனிமரத்திற்கு ஒட்டு வைத்தல்
எவருக்கும் கற்பித்தல்
அரசை மாற்றியமைத்தல்
இவையெல்லாம்
ஆக்கமான விமர்சனத்திற்கு எடுத்துக்காட்டுக்கள்
அதே வேளை
கலைக்குரிய எடுத்துக்காட்டுகளுமாம்.
___________________________________
எனக்கு இடங்கொடுத்தவன்

எனக்கு இடங்கொடுத்தவன்
தனது வீட்டை இழந்தான்
எனக்காக இசை மீட்டியவன்
தனது இசைக்கருவியை இழந்தான்

சாவைக் கொணர்பவன் என அவன்
என்னைச் சொல்வானா?
அல்லது
தனது உடைமைகள் அனைத்தையும்
பறித்தவனைச் சொல்வானா?
________________________________________________

–    சி.சிவசேகரம்.

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. பெர்டோல்ட் பிரெக்ட் (Bertolt Brecht): ஜெர்மனியிலிருந்து ஒரு மக்கள் கலைஞன்! | வினவு!…

    நவீன நாடகத்துறையில் பிரெக்ட்டினுடைய இடத்தை யாராலும் மறுக்க இயலாது. இன்றைய மக்கள் நாடக அரங்குகட்க்கும், பல்வேறு வெகுஜன புரட்சிகர அரங்குகட்க்கும் பிரெக்ட் ஒரு முன்னோடி…

  2. //நாம் தழுவுகிறோம்
    உயர் வகையான துணி என் விரல்களிடையே
    மட்டரகமான துணி என் விரல்களிடையே//
    is it correct?
    or is this right?
    உயர் வகையான துணி உன் விரல்களிடையே
    மட்டரகமான துணி என் விரல்களிடையே
    நாம் தழுவுகிறோம்

    //ஆற்றிற்கு அணை கட்டல்
    கனிமரத்திற்கு ஒட்டு வைத்தல்
    எவருக்கும் கற்பித்தல்
    அரசை மாற்றியமைத்தல்
    இவையெல்லாம்
    ஆக்கமான விமர்சனத்திற்கு எடுத்துக்காட்டுக்கள்
    அதே வேளை
    கலைக்குரிய எடுத்துக்காட்டுகளுமாம்.//
    அருமை i satlute him.

    • Thanks.
      It should have been
      உயர் வகையான துணி என் விரல்களிடையே
      மட்டரகமான துணி உன் விரல்களிடையே
      I do not know where the error occurred. I am sorry about it, all the same

  3. […] This post was mentioned on Twitter by வினவு, அதிஷா. அதிஷா said: ரொம்ப நாளைக்குப்பிறகு வினவு குரூப்ஸிடமிருந்து மிக மிக நல்ல உருப்படியான பதிவு. https://www.vinavu.com/2010/08/07/bertolt-brecht/ […]

  4. […] கொண்டார் சாப்லின். அப்டன் சிங்ளேர், பிரெக்ட், பெர்னார்டு ஷா,தாமஸ் மான், என்று […]

Leave a Reply to Tweets that mention பெர்டோல்ட் பிரெக்ட் (Bertolt Brecht): ஜெர்மனியிலிருந்து ஒரு மக்கள் கலைஞன்! | வினவு! -- Topsy.com பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க