Wednesday, October 4, 2023
முகப்புபா.ம.க : விற்பனைக்குத் தயார் ! வாங்க ஆளில்லை !!
Array

பா.ம.க : விற்பனைக்குத் தயார் ! வாங்க ஆளில்லை !!

-

சமீபத்தில் மதுரை செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ்  பா.ம.கவின் தற்போதைய நிலை குறித்து பேசியிருக்கிறார். அதில்,

“1967–ம் ஆண்டு தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு 43 ஆண்டுகளாகியும் காங்கிரஸ் ஆட்சியமைக்க முடியவில்லை. ஒவ்வொரு முறை தேர்தல் வந்தபோதும் தி.மு.க அல்லது அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தே காங்கிரஸ் போட்டியிட்டது. இப்போதைய அரசியல் சூழ்நிலையில் திராவிடக் கட்சிகள் அல்லாத கூட்டணி அமைய வாய்ப்புள்ளது.”

“1991 தேர்தலிலும், 1996 தேர்தலிலும் சமூக நீதிக் கூட்டணியை பா.ம.க அமைத்தது. அதில் 91ஆம் ஆண்டில் பா.ம.க ஒரு இடத்திலும், 96ஆம் ஆண்டில் நான்கு இடங்களிலும் வெற்றிபெற்றது. வரும் தேர்தலில் பா.ம.க தனித்துப் போட்டியிட்டாலும் 20 இடங்களில் வெல்லும் நிலையில் உள்ளது. மீண்டும் அது போன்ற சமூக நீதி கூட்டணி உருவாகவும் வாய்ப்பு உள்ளது.”

“முன்பு அ.தி.மு.க கூட்டணியிலிருந்து பா.ம.க தானாக வெளியேறியது. தி.மு.க கூட்டணியில் இருந்து பா.ம.கவை தி.மு.க வெளியேற்றியது. குரு பேசிய பேச்சின் விளைவாக இது நடந்தது. பின்னர் தி.மு.க பொதுக்குழு கூடி பா.ம.கவை மீண்டும் சேர்த்துக் கொள்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றியது. நாங்களும் பேசினோம். அதன்பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை. கருணாநிதியின் சட்ட மேலவை கனவு நிறைவேறுவதற்கு நாங்கள் வாக்களித்ததே காரணம். பதிலுக்கு ராஜ்ஜிய சபை உறுப்பினர் பதவியை அவர்கள் எங்களுக்கு கொடுக்கவில்லை.”

“ தே.மு.தி.க இடம்பெறும் அரசியல் கூட்டணியில் பா.ம.க இடம்பெறுமா என்றும் தி.மு.க பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் முன்பு எதிரணியிலிருந்து அழைத்தால் பேசுவீர்களா என்றும் கேட்கிறார்கள். அதுபற்றி இப்போது நான் ஒன்றும் கூறமுடியாது. அரசியலில் எதுவும் நடக்கலாம். அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர பகைவர்களும் இல்லை. இப்போதைய அரசியல் சூழ்நிலையில் பா.ம.க எந்தக் கூட்டணியிலும் இல்லை என்பதுதான் உண்மை” என்று கூறியிருக்கிறார் ராமதாஸ்.

காங்கிரசு கட்சி தமிழகத்தில் தனியாக தேர்தலில் நிற்க முடியவில்லை என்றால் அந்தக் கவலை ராமதாஸூக்கு எதற்கு? உண்மையில் பா.ம.கவை இரண்டு கழகங்களும் கழட்டி விட்டால் என்ன செய்வது? அதற்குத்தான் முன்னெச்செரிக்கையாக இப்படி ஒரு பனிக்கட்டியை காங்கிரசு தலையில் வைக்கிறார். ஒரு வேளை அப்படி பலித்து விட்டால் தேர்தல் செலவுக்கு கவலையில்லை. கொஞ்சம் வெற்றி பெற்று தொங்குநிலை சட்டமன்றம் உருவாகும் பட்சத்தில் நல்ல பேரம் பேசலாம். பிறகு பாராளுமன்ற மேலவை தேர்தல் வந்தால் அன்புமணியை அமைச்சராக்கலாம்.

காங்கிரசு, பா.ஜ.க இரண்டு ஆட்சிகளிலும் பங்குபெறுவதற்கு ராமதாஸ் கூச்சப்படுவதில்லை. அடுத்து காங்கிரசு தனியாக போட்டியிடவில்லை என்று கவலைப்படும் ராமதாஸ், பா.ம.கவும் இரண்டு கழகங்களோடு மாறி மாறி சேர்ந்து போட்டியிட்டதைப் பற்றியல்லவா முதலில் கவலைப்படவேண்டும்? தனது இலையில் பாயாசம் விழாது என்ற நிலையில் பக்கத்து இலைக்கு மட்டும் எதற்கு பாயாசம் என்பதே அவரது கவலை.

திராவிடக்கட்சிகளின் ஆட்சி என்று சலித்துக் கொள்ளும் ராமதாஸ் தனது கட்சியை என்னவென்று மதிப்பிடுகிறார்? பிற்படுத்தப்பட்ட சாதிகளின் மேல்தட்டு வர்க்கத்தை பிரதிபலித்த திராவிட கட்சிகளின் தொடர்ச்சியில்தான் பா.ம.கவும் வருகிறது. ‘சமூக நீதிக்கட்சி’ என்ற பட்டத்தைக்கூட அவர் இழப்பதற்கு தயார் என்பதே இந்த காங்கிரசு பாசத்தில் வெளிப்படுகிறது. இரண்டு கழகங்களும், காங்கிரசும் கைவிட்டுவிட்டால் அவரது இறுதி அடைக்கலம் சமூக நீதிக் கூட்டணியாம். தமிழகத்தில் இத்தகைய கொள்கை பேசும் லெட்டர் பேடுக் கட்சிகளை வைத்து கூட்டணி அமைக்க பா.ம.க முயன்றாலும் அந்த லெட்டர்பேடுக் கட்சிகள் கூட இப்போது பா.ம.கவுடன் வருவது சிரமம். பா.ம.கவுடன் இணைவதால் கிடைக்கும் ஆதாயத்தை விட தி.மு.கவால் வரும் ஆதாயம் அதிகம் எனும் போது அவைகள் ஏன் ராமதாஸூடன் சேர்ந்து தற்கொலை செய்யவேண்டும்?

இப்போது வன்னியர்கள் கூட ராமதாஸை நம்புவதற்கு தயாராக இல்லை. என்னதான் இட ஒதுக்கீடு,போராட்டம் என்று அறிவித்தாலும் அவரது பிழைப்பு வாதத்தை அவர்கள் நன்றாகவே அறிந்துள்ளார்கள். அதனால்தான் வன்னியர்களும் மற்ற சாதி மக்களைப் போல பல அரசியல் கட்சிகளிலும் பிரிந்துதான் இருக்கிறார்கள். 80களில் இருந்த சாதி ஆதரவில் கால்பங்கு கூட இப்போது பா.ம.கவிற்கு இல்லை.

இத்தனைக்கு மேலும் ராமதாஸ் இரண்டு கழகங்களோடு சேர்வதையே விரும்புகிறார். அதில் அவரது முதல் தெரிவு தி.மு.கதான். சட்டமேலவைக்கு ஆதரவு அளித்ததற்கு பதிலாக ராஜ்ஜிய சபா உறுப்பினர் எதிர்பார்த்தார். கிடைக்கவில்லை என்பதால் தி.மு.கவை விரோதிக்க தயாரில்லை. தி.மு.கவின் பணபலம், அதிகார பலத்தினை அ.தி.மு.கவால் மட்டுமல்ல, தன்னாலும் எதிர்கொள்வது சிரமம் என்பது ராமதாஸூக்கு  நன்கு தெரியும். எனவே தி.மு.கவே வலிய வெளியே தள்ளினால்தான் அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க சேரும்.அ துவும் இப்போது வாக்கு  வங்கி இல்லாத நிலையில் அம்மா போடும் கண்டிஷன்களை நிறைவேற்ற வேண்டும் என்ற அபயாமும் இருக்கிறது.

அதனால்தான் முன்னெச்சரிக்கையாக அரசயிலில் நண்பனும் இல்லை, விரோதியும் இல்லை என்பதை பெருமையாகவும், தனது சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்தியும் அவரால் சொல்ல முடிகிறது. எனினும் இன்றைய ஒட்டுக் கட்சிகளின் சந்தையில் பா.ம.க என்ற தேய்ந்து போன பொருள், நல்ல விலைக்கு போகும் வாய்ப்பு இல்லை. வாங்குவதற்கு ஆளில்லை என்ற நிலையில் ராமதாஸின் சந்தர்ப்பவாதம் இன்னும் பச்சையாக பரிணமிக்கும். இதற்கு மேல் பரிணமிக்க என்ன இருக்கிறது என்கிறீர்களா? சரி, அப்படியென்றால் அதான் இது!

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. பா.ம.க : விற்பனைக்குத் தயார் ! வாங்க ஆளில்லை !! | வினவு!…

    பா.ம.க என்ற தேய்ந்து போன பொருள், நல்ல விலைக்கு போகும் வாய்ப்பு இல்லை. வாங்குவதற்கு ஆளில்லை என்ற நிலையில் ராமதாஸின் சந்தர்ப்பவாதம் இன்னும் பச்சையாக பரிணமிக்கும்…

  2. //இதற்கு மேல் பரிணமிக்க என்ன இருக்கிறது என்கிறீர்களா? சரி, அப்படியென்றால் அதான் இது!//

    நல்ல நையாண்டி:))

    உள்ளே போகும் வரைதான் வாழைப்பழம்…. வெளியே வரும்போது???!! ஹா ஹா … சொன்னது யாரென்று உங்களுக்கே தெரியும்… அதுவும் இன்னொரு வாழைப்பழம்தான்

  3. பாமக மட்டுமல்ல எந்த ஜாதி கட்சிகளும் தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வளர முடியாது. ஆனால், எனக்கு தெரியும். திமுக என்றாலும் அதிமுக என்றாலும் எல்லா அய்யோக்கியப் பயல்களும் ஒவ்வொரு பகுதியிலும் எந்த ஜாதி பெருவாரியாக இருக்கின்றதோ அதற்கே சீட்டுக் கொடுக்கின்றார்கள்.
    ஏன் கட்சியில் நடைபெறும் உட்கட்சி தேர்தலிலும் இதுதான் நடக்கின்றது.
    பெரியார் பிறந்த மண்ணில் ஜாதி இல்லை இடதுசாரி இயக்கங்கள் என்று சொன்னாலும், தமிழகத்திலும் ஜாதிதான் ஆட்சி செய்கிறது என்பது என் கருத்து.

  4. raamadhaasukku edharku katchi??????????

    avaraal avaradhu jaadhiko illai makkalukko ondrum udhava povadhillai…

    katchiyil irundhu sambaadhitha panathai vaithu kondu manaivi sagidham kudumbathodu veli naadugalukku sendru 2012 il kooda thirumbi varalaam..

    avarukkaga yaarum kavalai paduvadhum ….

    adharikkavum yaarum thayaarillai…..

    sendru vaarum ..

    wish you happy journey mr. ramadass………..

  5. I am like your truth writing,congrats your accurate writing.
    கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி

  6. கட்சி,சாமியார் மடம், அதிகாரிகள் – அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்! கூட்டுக் களவாணிகள்! நவீன கார்ப்பரேட் பிரைவேட் கம்பெனிகள்! சர்வாதிகாரமும், சந்தர்ப்பவாதமும், இவர்களின் அடையாள்ங்கள்! மாவோக்களும், நவீன காம்ரேட்களும் விதிவிலக்கல்ல! வழி மாறலாம்! குறிக்கோள் ஒன்றே – செல்வம் சேர்ப்பது! இங்கு திருத்த வருபவனும், திருடனாகிறான்! பிழைக்க வேண்டும் எனில், கூவித் திரிவதைக் கட்டிலும், சேற்றை பூசிக் கொண்டால், செந்தாமரையை அடையலாம்!

  7. கட்டுரையையும், கருத்தையும் பதிவு செய்திருக்கும் உலக மகா அரசியல் ஞானிகளே. இராமதாஸ் என்கிறத தனிமனிதன் மீது இருக்கிற உங்களின் வெறுப்பும், வன்னியர் என்கிறத இனத்தின் மீது உங்களுக்கு இருக்கிற கோபமும் உங்கள் பதிவுகளின் நன்றாகத் தெரிகிறது. ராமதாஸ் கட்சி மாறுகிறார், கட்சி தேய்கிறது என்று புள்ளிவிவரமும், கிளி சோதிடமும் சொல்லும் நீங்கள், தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கு பலம் கூடியிருக்கிறது என்று சொல்லுங்களனேன். பென்னகரத்தில் மிகப்பெரிய கட்சியான அ.தி.மு.க-வை தெபாசிட் இழக்க வைத்தவர்தான் இராமதாஸ். காயடிக்கப்பட்ட உங்கள் அரசியல் அறிவை ஓரங்கட்டிவிட்டு கவனியுங்கள். 11 கட்சி கூட்டணி இல்லாமல் நின்றிருந்தால் கலைஞர் பென்னகரத்தில் காணாமல் போயிருப்பார். ஒரு இனத்தின் மீது தனிப்பட்ட முறையில் காட்டும் உங்களைப் போன்றவர்கள்தான் சாதிவெறி பிடித்தவர்கள். உங்கள் அசிங்கமான புத்தியை மாற்றிக்கொள்ளுங்கள். ஒரு தேர்தலில் சதியால் தோற்கடிக்கப்பட்டவர்கள் மீண்டும் வெற்றிபெற முடியாது என்ற உங்கள் களிமண் அறிவை விற்பனைக்கு விடாதீர்கள்.

  8. I diasgree with your view about PMK.Congress,cmmunists abnd other parties also doing the same thing in the elections. PMK done a vey good job against eradication of smoking and liquor all over India that is the reason they have defeated in all the constituencies in parlimentry elections. This is well known truth.Dr.Anbumani intiated good schemes for improving rural medical system the remarkabale one is 108 ambulance and compulsory internship service of medical students in villages,the other important one his effort to open a National institue of Siddha in chennai. So As I said earlier your views are biased.

  9. //காங்கிரசு, பா.ஜ.க இரண்டு ஆட்சிகளிலும் பங்குபெறுவதற்கு ராமதாஸ் கூச்சப்படுவதில்லை. அடுத்து காங்கிரசு தனியாக போட்டியிடவில்லை என்று கவலைப்படும் ராமதாஸ், பா.ம.கவும் இரண்டு கழகங்களோடு மாறி மாறி சேர்ந்து போட்டியிட்டதைப் பற்றியல்லவா முதலில் கவலைப்படவேண்டும்? தனது இலையில் பாயாசம் விழாது என்ற நிலையில் பக்கத்து இலைக்கு மட்டும் எதற்கு பாயாசம் என்பதே அவரது கவலை.//

    மேற்படி நிலை பா.ம.க வுக்கு மட்டுமில்லை இப்பொழுது தமிழக ஓட்டு கட்சிகள் அனைத்துமே ஒரே மனநிலையில் தான் உள்ளன.

    ப.ஜ.க வை மதவாதக் கட்சி என்று பேசும் தி.மு.க ஒருவேளை தேர்தல் முடிவுக்கு பின் ப.ஜ.க வை ஆதரிக்காது என்று உறுதியாக சொல்ல முடியாது

    காங்கிரஸை ஊழல் கட்சி என்று சொல்லும் அ.தி.மு.க ஒருவேளை தேர்தல் முடிவுக்கு பின் காங்கிரஸை ஆதரிக்காது என்று உறுதியாக சொல்ல முடியாது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க