privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

ஏழையின் கண்கள் என்ன விலை?

-

கண்கள். முட்டை பொரிந்து தாயின் அரவணைப்பில் பயந்து திறக்கும் குஞ்சுகளின் மெல்லிய கண்கள். உலகின் முடிவில்லா வண்ணக் காட்சிகளை குழம்பிய வியப்புடன் கண்டு வளரும் சிறிய கண்கள். தெரிந்த முகத்தை அடையாளம் கண்டு பழகிக்கொள்ளும் குழந்தைகளின் அழகிய கண்கள். உணர்ச்சிகளின் மாறுபாட்டிக்கேற்ப நிலை கொள்ளும் மனிதர்களின் பொருள் பொதிந்த கண்கள். மனதின் ஓட்டத்தை இனம் காட்டி மௌன மொழி பேசும் வித்தகக் கண்கள். நவீன வாழ்க்கை நுகரப்படுவதற்கு அச்சாணியாக இருக்கும் இமை மூடாத கண்கள்.

கண்களுக்காகப் படைக்கப்பட்டிருக்கிறது இவ்வுலகம். கண்கள் உறைந்து போய் கருத்தைக் கருத்தரிப்பதற்காக நகரில் பிரம்மாண்டமாய் வளரந்து நிற்கும் விளம்பரப் பலகைகள். விழி வழித் தூண்டி உமிழ் நீர் சுரப்பதற்கு வண்ணச் சிதறலாய் இறைந்து கிடக்கும் விதவிதமான உணவு வகைகள். எதிர் பால் விழிகளை மறித்து ஆளுமையை அறிவிப்பதற்கு சரம் சரமாகத் தொங்கும் உடை வகைகள். கண்களின் நீர் வேண்டி விளம்பரங்களுக்கிடையில் கதை சொல்லும் தொலைக்காட்சியின் நிழல் வாழ்க்கை சீரியல்கள். விழிகளின் பிரமிப்பிற்காகப் பெரிய திரையில் அணிவகுக்கும் திரைப்படங்கள். கண்களின் பரபரப்பிற்காகச் செயற்கையாகத் தயாரிக்கப்படும் ஊடகங்களின் செய்திக் கதைகள். காதலின் துவக்கமோ, கவிதையின் இயக்கமோ, கண்களின்றி இல்லை. விழிகளுக்காகவே இவ்வுலகம். விழிகளின்றி இல்லை இவ்வுலகம்.

ஆயினும் ஏழைகளின் கண்களுக்கு இந்த படிமங்கள் எதுவுமில்லை. கழுத்தை நெறிக்கும் வாழ்வை நகர்த்திச் செல்வதற்கு ஒரு உழைப்புக் கருவியாய் மட்டும் கண்கள். எழில்மிகு உலகத்தை இந்தக் கண்கள் அனுபவிப்பதற்கு எப்போதும் வழியில்லை. ஏழ்மையுடன் முதுமையும் சேரும்போது மங்கிப்போகும் கண்கள் மிச்சமிருக்கும் வாழ்வைக் கடனே என்று கழிக்கின்றன. அந்த மங்கிய கண்களையும் இரக்கமின்றி பறித்திருக்கிறார்கள் சில சதிகாரர்கள்.

திருச்சியிலும், பெரம்பலூரிலும் இருக்கும் ஜோசப் கண் மருத்துவமனை ஒரு பிரபலமான தனியார் நிறுவனமாகும். இந்நிறுவனம் மாவட்ட பார்வை இழப்புத் தடுப்புச் சங்கத்துடன் இணைந்து, விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகிலுள்ள கடுவனூரில் 28.7.08 அன்று இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தியது. இந்த இலவச முகாம்கள் மக்களைக் கொள்ளையடிக்கத் தனியார் மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் மனிதாபிமான முகமூடிகள். இந்த முகமூடியிலும் கூட அவர்களுக்கு அபரிதமான பணம் கிடைக்கிறது. கடந்த ஆண்டு அரசின் பார்வை இழப்புத் தடுப்புச் சங்கம், இலவச முகாம்கள் நடத்துவதற்காக இம்மருத்துவமனைக்கு ஒன்றரைக் கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறது. இது போக ஜோசப் நிர்வாகம் இலவச முகாம்களைப் படம் பிடித்து வெளிநாட்டு மிஷினரிகளுக்கு அனுப்பி நன்கொடைகளையும் அளவில்லாமல் திரட்டி வந்தது.

வர்த்தக நோக்கம் மறைந்திருக்கும் இந்த இலவசத்திற்கு இலக்கு வைத்த நிர்வாகம் அவ்வட்டாரத்தில் உள்ள மக்களைக் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு ஆள் பிடிப்பது போல பிடித்திருக்கிறது. குறிப்பிட்ட நாட்களுக்குள் குறிப்பிட்ட இலக்கை அடைந்தே ஆகவேண்டுமென அம்மருத்துவமனை காட்டிய தீவிரம் சந்தேகத்திற்குரியது. முகாமிற்கு வந்த 180 நபர்களில்- பெரும்பாலும் கூலி வேலை செய்யும் முதியவர்கள்- 45 பேர், கண்புரை அறுவை சிகிச்சைக்காக அவசர அவசரமாகத் தெரிவு செய்யப்பட்டனர். இந்த சிகிச்சைக்காக சில ஆயிரங்கள் செலவு தேவைப்படும் வசதி இல்லாத அம்முதியவர்கள் இந்த இலவசமில்லையென்றால் சதை வளர்ந்த கருவிழிகளுடன் மங்கிய பார்வையோடு மிச்சமிருக்கும் வாழ்வைக் கழித்திருப்பார்கள். ஒரு வேளை அப்படி விட்டிருந்தால்கூட இருக்கும் குறைந்த பட்சப் பார்வைத் திறனாவது மிஞ்சியிருக்கும்.

அந்த 45 ஏழைகளுக்கும் பெரம்பலூர் ஜோசப் மருத்துவமனையில் ஆடுமாடுகளுக்கு செய்வது போல அறுவை சிகிச்சை நடந்தது. இலவசம்தானே என்ற அலட்சியத்துடன் போதிய பாதுகாப்பின்றி, பயிற்சியற்ற மருத்துவர்களால், சோதித்த்தறியப்படாத மருந்துகளுடன் ஈவிரக்கமின்றி அந்த சிகிச்சை நடந்து முடிந்தது. ஊர் திரும்பிய மக்கள் சிகிச்சை நடந்த கண்களில் தாளமுடியாத வலியுடன் தெளிவில்லாத பார்வையுடன் அவதிப்பட்டனர். திரும்பிச் சென்று மருத்துவமனையில் கேட்டபோது மீண்டும் ஒரு அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. அப்போதும் பிரச்சினை தீராததால் ஒரு சொட்டு மருந்தைக் கையில் கொடுத்து விட்டு இனி பார்வை கிடைக்காது என்று அலடசியமாக கைவிரித்து விட்டது ஜோசப் மருத்துவமனை. ஏன்ன ஏது என்று அறியாமல் அதிர்ச்சியடைந்த மக்கள் உடனே சாலை மறியல் செய்தபோது விசயம் வெளியே தெரியவந்தது.

இன்று பல அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் அம்மக்களின் பெரும்பான்மையினருக்கு அறுவை சிகிச்சை நடந்த கண்களில் பார்வை முழுவதுமாகப் போய்விட்டது. அதற்காக ஆளுக்கொரு இலட்சம் கொடுத்து சமாதனம் செய்ய முயல்கிறது அரசாங்கம். எத்தனை இலட்சம் கொடுத்தாலும் இழந்த பார்வை கிடைக்காதே என்று கதறுகிறார்கள் அந்த ஏழைகள். இனி ஓட்டை விழுந்த ஒற்றைக் கண்ணுடன் எப்படி வாழமுடியும் என்று நிர்க்கதியாக அழுகிறார்கள் அம்மக்கள். முதுமையோடு குருடும் இணைந்த பயங்கரத்தை அவர்களால் சகிக்க முடியவில்லை.

ஒரு தனியார் மருத்துவமனை நடத்திய இந்த பயங்கரவாதத்தை மருந்துகளின் குறைபாடு, பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறோம், மருத்துவமனையைச் சோதனையிட்டோம் என்று மேலோட்டமாக விசாரணை நடத்துகிறது அரசு. அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், தலைமை நிருவாகிகள் அனைவரும் குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கவேண்டும். இவர்களை வெளியே சுதந்திரமாக விட்டுவைத்தால் ஆதாரங்களை அழித்து விசாரணையையே திசை திருப்புவார்கள். ஜோசப் மருத்துவமனை சீல் செய்யப்பட்டு மூடப்பட்டிருக்கவேண்டும். மருத்துவமனையின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து ஏழைகளுக்கு நிவாரணம் அளித்திருக்கவேண்டும். ஆயினும் இவை எதுவும் நடைபெறவில்லை. காரணம் பார்வை இழந்தவர்கள் அதை இலவசமாக இழந்திருக்கிறார்கள். அதுவும் ஏன் என்று கேள்வி கேட்பதற்கு நாதியற்ற ஏழைகளாய் இருந்திருக்கிறார்கள்.

தனியார் மயத்தின் கோரமுகம் இப்படித்தான் இருக்க முடியும். ஒரு தனியார் மருத்துவமனை செய்த அநீதிக்கு அரசு நட்ட ஈடு கொடுக்கிறது. அந்த அநீதிக்கு எந்த பொறுப்பும் ஏற்காத அந்த மருத்துவமனை இன்றும் தடையில்லாமல் செயல்படுகிறது. அவர்களைத் தண்டிக்கவேண்டிய அரசாங்கம் தொழில் நடத்த பாதுகாப்பு கொடுக்கிறது. மருத்துவமனைகளின் முதலாளிகளைக் குற்றம் சாட்டாத அரசு மருந்துகளை காரணமாக்க முயல்கிறது. மருந்துகள்தான் காரணமென்றால் கட்டணம் வாங்கிக்கொண்டு செய்யப்படும் சிகிச்சைகளுக்கு இந்த பார்வைப் பறிப்பு நடக்கவில்லையே? அப்படியே மருந்துகள்தான் காரணமென்றாலும் மருந்து முதலாளிகளை இந்த அரசு தண்டிக்கவா போகிறது? மாறாக உயிர் காக்கும் மருந்து விலையை பல மடங்கு ஏற்றி கொள்ளையடிக்கவே உதவுகிறது.
திருவள்ளூரில் சரியாகப் பராமரிக்கப் படாத சொட்டு மருந்தினால் நான்கு குழந்தைகள் உயிரிழந்தனர். டெல்லி ஏ.ஐ.ஐ.எம்.எஸ் மருத்துவமனையில் சோதனை என்ற பெயரில் 46 குழந்தைகள் இறந்திருக்கின்றன. பணமிருப்பவனுக்குத்தான் மருத்துவம் என்றாகிவிட்ட நிலையில் வேறுவழியின்றி அரசு மருத்துவமனைகளையும், இலவச முகாம்களையும் நாடும் மக்கள்தான் அரசின் நோய்களுக்கு பலிகடாவாக ஆக்கப்படுகின்றனர். உலகமயத்தின் கொள்கையில் ஏழைகளின் உயிர்கள் மலிவாக விலைபேசப்படுகின்றன.

விழுப்புரம் மாவட்டத்தின் அந்த ஏழைகள் பார்வையிழந்து வாழப்போகிறார்கள். படித்தவர்கள் படிக்காதவர்களின் கண்களைப் பிடுங்கியிருக்கும் இந்தச் சம்பவத்தை ரம்பாவின் தற்கொலைக் கிசுகிசு குறித்து கவலைப்படும் நாட்டில் எத்தனைபேர் கவனிக்கப் போகிறார்கள்?
எது எப்படியோ நாம் பார்த்து நுகரத்தான் இந்த உலகில் அழகானவை ஏராளமிருக்கிறதே!

ஆனால், “கண்ணிற்கு அணிகலன் கண்ணோட்டம் அ்தின்றேல் /புண்ணென்று உணரப் படும்.” என்கிறது குறள்.