privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்தி.மு.கஇராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!!

இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!!

-

உலகின் மிக உயரமான கோபுரங்களைக் கொண்ட, பழமையான பெருங்கோவில்களில் தஞ்சைப் பெரியகோவிலும் ஒன்று. இன்றிருப்பதைப் போன்ற துரிதக் கட்டுமானப் பொறி நுட்பங்கள் ஏதும் வளர்ந்திராத, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கட்டிடப் பொறியியலில் மாபெரும் சாதனையாகக்  கட்டப்பட்டதுதான் இந்தக் கோவில்.   மழைபெய்தால் நீர்க்கசிவு ஏற்படாதிருக்கப் பதிக்கப்பட்டிருக்கும் நுண்குழாய்கள், ஒரே கல்லினால் ஆன மிகப் பெரும் நந்தி எனப் பல்வேறு பிரம்மாண்டமான பொறியியல் சாதனைகளை எல்லாம் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே சாதித்துக் காட்டிய  மாமன்னன் ராஜராஜன் போற்றிக் கொண்டாடப்படுகிறான். கூடவே அவனது ஆட்சியும் ’தமிழகத்தின்  பொற்கால ஆட்சி’ என்று புகழப்படுகிறது.

தஞ்சைப் பெரியகோவிலின் கலைநுட்பமும், பொறியியல் சாதனையும் மனிதகுல வரலாற்றில் மகத்தான படைப்புகள்தான். அதே போல எகிப்தின் பாரோக்கள் கட்டிய பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும்கூட மனித வரலாற்றின் பெரும் சாதனைகள்தான். எனினும் அவை பொற்காலங்களாகக் கொண்டாடப்படுவதில்லை. கலைத்திறனைப் போற்றுவது என்பது வேறு. அரசாட்சியைக் கொண்டாடுவதென்பது வேறு.

பெரியகோவிலை எழுப்பிய ராஜராஜனின் ஆட்சியில்தான் குடவோலை முறை எனும் ஜனநாயகமுறை செழித்திருந்ததாகவும், வேந்தன் முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலங்களை  அளந்து முறைப்படுத்தி ’உலகளந்தான்’ எனும் பெயர் பெற்றதாகவும் கூறி ’தமிழனின் பொற்கால ஆட்சி’ என கலைஞர் முதல் தமிழினவாதிகள் வரை பலராலும் போற்றப்படுகிறது, ராஜராஜனின் ஆட்சி.

அன்றாடங்காச்சிகளாக வாழும் அப்பாவித் தமிழர்கள் கூட இப்பெருமிதக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ’கடாரம் கொண்டான்’ என்றும் ’சோழ சாம்ராச்சியம்’ என்றும் காதில் கேட்டமாத்திரத்தில் ’நம் தமிழனின் பெருமை’ என்று பெருமிதத்துள் வீழ்கின்றனர்.

வரலாறு நெடுகிலும், மன்னர் ஆட்சி, உழைக்கும் மக்களுக்கு கொடுங்கோல் ஆட்சியாகவே இருந்துள்ளது. இருப்பினும் அம்மன்னர்களின் வரலாற்றுப் பாத்திரம் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. அசோகனின் பாத்திரமும் புஷ்யமித்திர சுங்கனின் பாத்திரமும் வேறுவேறுதான். முன்னெப்போதும் இல்லாப் பிரம்மாண்டமாக ராஜராஜன் பெரியகோவிலை எழுப்பியது ஏன்? அக்கற்றளிக் கோவிலின் கம்பீரம் மூலம் அவன் எதைச் சொல்ல நினைத்தான்?

அடிமை உழைப்பிலும் போர்க் கொள்ளையிலும் உருவான பெரிய கோவில்!

ராஜராஜனுக்கு முன்னர் நடுகல் வழிபாடுதான் தமிழ்நாட்டில் பரவி இருந்தது. அக்கம் பக்கமாக குறிஞ்சி (மலை சார்ந்த) , முல்லைப் பகுதிகளில் (காடு சார்ந்த) இருந்த வேளிர் எனும் இனக்குடிகளின் அரசுகளை ஒழித்துக் கட்டி, மருதநிலப் பரப்பில் பேரரசுகள் உருவாக்கம் பெற்ற வரலாற்றுக் காலமே ராஜராஜனின் காலம். தொடர் போர்கள் மூலம் சிற்றரசுகளை நிர்மூலமாக்கி, அவ்வரசுகளின் செல்வங்களை எல்லாம் கவர்ந்து வந்து தன் பேரரசைக் கண்டாலே அனைவரும் அச்சத்தால் உறைந்திடச் செய்யும் மாபெரும் சின்னம் ஒன்றை உருவாக்குவதும், அச்சின்னத்தையே அதிகார மையமாக மாற்றுவதுமே ராஜராஜனின் நோக்கமாக இருந்திருக்கிறது. அவ்வாறு உருவாக்கப்பட்டதுதான் பெரிய கோவில்.

சங்கம் மருவிய காலத்தின் பின் வந்த களப்பிரர் காலத்தில் வைதீகத்தின் கொட்டம் அடக்கப்பட்டு சமணம் தழைத்தோங்கி இருந்தது. களப்பிரர்களை வீழ்த்திய பாண்டியபல்லவர்கள் காலத்தில் ஆற்றுப்பாசனம் வளர்ச்சி பெற்று வேளாண் உற்பத்தி பெருகியது. சிற்றரசுகள் வீழ்த்தப்பட்டு பெருவேந்தர்கள் உருவாகும் வரலாற்றுக் கட்டத்தைச் சேர்ந்தது சோழர் ஆட்சி. கழுவேற்றி சமணத்தைக் கருவறுத்த சைவத்தின் வெற்றி, ராஜராஜனின் பேரரசு உருவாக்கத்தோடு ஒருங்கிணைந்தது. இக்காலத்தில்தான் சைவக்கொழுந்துகளான வேளாளர்களும் பார்ப்பனர்களும் கூட்டணி கட்டிக் கொண்டு அதிகார மையமானார்கள். இவர்களின் ஆட்சிக்கு பெரியகோவில்தான் மைய அச்சாக இருந்தது.

கருங்கற்பாறைகளே இல்லாததும் காவிரியாறு கொண்டு வந்து சேர்த்த வண்டலால் நிரம்பியதுமான தஞ்சைப் பகுதியில், ஒரு லட்சத்து முப்பதாயிரம் டன் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டிடம்தான் பெரிய கோவில். கட்டிடக் கலை சார்ந்த நவீன தொழில்நுட்பங்களோ, சாலைகளோ போக்குவரத்து வசதிகளோ இல்லாத அந்தக் காலத்தில் இத்தனை பெரிய கட்டிடத்தைக் கட்டிமுடிக்க, எவ்வளவு மனித உழைப்பு தேவைப்பட்டிருக்கும்? இந்தக் கட்டுமானப் பணியில் எத்தனை பேர் தங்களது உயிரை இழந்திருப்பார்கள்?

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் இந்தக் கோவிலை  அடிமைகளின் இலவச உழைப்புதான் உருவாக்கியது. தனது ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து போர்கள் நடத்திய ராஜராஜன் போரில் தோற்ற நாட்டு வீரர்களைக் கைதிகளாக்கிக் கொண்டுவந்து அவர்களின் உழைப்பிலேயே இக்கோயிலை எழுப்பினான். போர்க்களங்களில் இருந்து கைதிகளை மட்டுமல்ல, இக்கோவிலுக்குத் தேவையான அனைத்தையும் கொள்ளையடித்துத்தான் கொண்டு வந்தான்.

மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனை வென்றபோது கைப்பற்றப்பட்ட செல்வங்களும், ஈழம், கேரளத்தின் தென் பகுதி, ஆந்திரத்தின் தென் பகுதி ஆகியவற்றை வென்று அந்நாடுகளின் கருவூலங்களைக் கொள்ளை அடித்த செல்வங்களும்தான் 216 அடிக் கற் கோபுரமாகியது. மலைநாடு எனப்படும் சேரநாட்டை வென்றபோது எடுத்து வந்த பொன் நகைகளும், பாண்டிய நாட்டை வென்றபோது கொள்ளையடித்து வந்த முத்து, பவளங்களும்தான் பெருவுடையாருக்குரிய நகைகளாயின.

சாளுக்கிய நாட்டிலிருந்து கொள்ளையிட்டு பெருவுடையாருக்கு சொந்தமாக்கப்பட்ட  87.593 கிலோ தங்க நகைகளும், சேர, பாண்டிய நாட்டுக் கொள்ளையில் கிடைத்த 95.277 கிலோ வெள்ளியும் இதில் அடக்கம். ஈழப் போரின்போது கைப்பற்றப்பட்ட  கிராமங்கள் பெரிய கோவிலுக்கான வருவாய்க் கிராமங்களாக (நிவந்தம்) விடப்பட்டிருந்தன. இவ்வாறு அண்டை நாடெங்கும் போர்தொடுத்து கொள்ளையடித்த பொருட்களால் உருவானதுதான் தஞ்சைப் பெரியகோவில்.

இக்கோவில் உருவாவதற்காக தென்னகத்தில் தொடர்ந்து ரத்த ஆறு ஓடிக் கொண்டே இருந்தது. காந்தளூர்  முதல் ஈழம் வரை இதற்காக ராஜராஜன் படை எடுத்துப் பேரழிவை நடத்தினான். காந்தளூரில் (இன்றைய திருவனந்தபுரத்தின் ஒரு பகுதி) சேரனைத் தோற்கடித்து, உதகை நகர் (கல்குளம் வட்டம்) கோட்டை தகர்க்கப்பட்டு எஞ்சிய நகரெங்கும் தீவைக்கப்பட்டது. இது அவனுடைய மெய்க்கீர்த்தியில் ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி’ என்று சொல்லப்படுகிறது.

அண்மையில் கண்டறியப்பட்ட கல்வெட்டில் இதன் அடுத்த வரி ‘மலையாளிகள் தலை அறுத்து‘ என்றுள்ளதாக முனைவர் தொ.பரமசிவம் குறிப்பிடுகிறார். அடுத்து மேலைச் சாளுக்கிய மன்னன்  சத்தியாசிரயனைத் தோற்கடித்த போரில்  நகரங்களைக் கொளுத்தியும், குழந்தைகள் எனக்கூடப் பாராது அனைவரையும் கொன்று வெறியாட்டம் போட்டது சோழர்படை. கன்னிப்பெண்களைக் கைப்பற்றி மனைவியராக்கிக் கொண்டும் அளவற்ற பொருட்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பினர்.

ஈழத்தின் மீது படை எடுத்து அந்நாட்டு அரசியையும், அவளுடைய மகளையும் கைப்பற்றி வந்தனர். புத்தசமய நினைவுச் சின்னங்களில் இருந்த பொன்னாலான உருவங்களைக் கொள்ளை அடித்தனர். இந்தப் படையெடுப்பின்போது அனுராதபுரம் நகரை தீவைத்து அழித்தனர். புது நகராக பொலனருவாவை உருவாக்கினர். ஜார்ஜ் புஷ், ஈராக்குக்கு ஜனநாயகம் வழங்கியதைப் போல ஜனநாதபுரம் என அதற்குப் பெயருமிட்டனர்.

நாட்டு மக்களைச் சுரண்டிய பெரிய கோவில் பொருளாதாரம்!

ஆகம நெறிப்படி பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட கோவில்களில் தஞ்சைப் பெரிய கோவிலே முதற்கோவில் என்பர். சைவம் பரப்பும் வேலையை மட்டும் அக்கோவில் செய்துகொண்டிருக்கவில்லை. சோழர்காலத்தின் வட்டிக்கடையாகவும், நில உடைமையாளராகவும், பொற்களஞ்சியமாகவும் அரசின் அதிகார பீடமாகவும் விளங்கியது.

சோழநாட்டின் விளை நிலங்களில் பெரும்பகுதி பெருவுடையார் கோவிலுடன் இணைக்கப்பட்டிருந்தது. குடிகளிடம் இருந்து விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு கோவிலுக்கு வசூலிக்கப்பட்டது.  கோவில் நிதிக் குவியலில் (பண்டாரம்) இருந்து விவசாயிகள் தமது தொழிற்தேவைகட்கும், பெண்களுக்கு சீதனம் தரவும் கடன் பெற்றனர். பெருவுடையார் கோவில் கணக்கில் இருந்த பல்லாயிரக் கணக்கான களஞ்சு பொன்களும், காசுகளும் பெரும்பாலும் பல ஊராட்சி மன்றங்களுக்கும், சபைகளுக்கும் கடனாகத் தரப்பட்டு 12 சதவீதம் வட்டியாக  (பணமாகவோ பொருளாகவோ) வசூலிக்கப்பட்டது.

சிறிய அளவில் நிலம் வைத்திருந்த விவசாயிகட்குக் கடன் கொடுத்து விளைச்சல் இன்மையால் அவர்கள் கடன் கட்டத் தவறிய போது, அவர்களது நிலங்கள் பறிக்கப்பட்டு பெரியகோவிலுக்கு சொந்தமாக்கப்பட்டன. கடனாளியான விவசாயிகளை கோவில் அடிமைகளாக்கி, அவர்கள் முதுகில் சூட்டுக் கோலால் சூடுபோட்டு, கோவில் நிலங்களில் வேலை செய்ய வைத்தனர்.

பெரிய கோவில் இறைத் திருமேனிக்கு ராஜராஜன் அளித்தது 2.692 கிலோ தங்கமாகும். பெரியகோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து காணிக் கடனாக ஆண்டொன்றுக்கு வந்த நெல் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் கலம். ஆண்டொன்றுக்கு கோவிலுக்கு வந்த வருவாயில் நெல் தவிர பொன், 300 களஞ்சு, காசுகள் 2 ஆயிரம் என  நாட்டின் ஒட்டுமொத்த செல்வமுமே பெரியகோவிலில் குவிக்கப்பட்டிருந்தது. இவற்றை நிர்வாகம் செய்வதற்கென  4 பண்டாரிகள், 116 பரிசாரகர்கள், 6 கணக்கர், 12 கீழ்க்கணக்கர் பெரியகோவிலில் பணி புரிந்தனர். கோவிலுக்கு நெல்லும், பொன்னும் கட்டாயமாகத் தரவேண்டும் என 57 கிராமங்களுக்கு ராஜராஜன் உத்தரவிட்டிருந்தான்.

அன்றாடம் இந்தக் கோவில் இயங்குவதற்கான இலவச உழைப்பும் மக்களிடம் இருந்து பெறப்பட்டது. இக்கோவிலுக்கு நுந்தா விளக்கெரிப்பதற்காக 400 இடையர்கட்கு ‘ சாவா மூவாப் பேராடுகள்’ எனும் பெயரில் ஆடு, மாடு, எருமைகள் வழங்கப்பட்டன.  ‘வெட்டிக் குடிகள்’ என அழைக்கப்பட்ட இந்த 400 பேரும் கோவிலுக்கு விளக்கெரிக்க நாளொன்றுக்கு உழக்கு நெய் கொடுக்க வேண்டும் என விதிக்கப்பட்டிருந்தது. கோவிலுக்குக் கொடுத்தது போக, இவர்களுக்கு ஆடுமாடுகளிடமிருந்து கிடைத்த உபரியைத் தவிர வேறு சம்பளம் கிடையாது. கால்நடைகளின் எண்ணிக்கை குறையாமல் அவற்றைப் பராமரித்து கோவிலுக்கு நெய் அளக்கும் ‘வெட்டிக் குடி’ (ஊதியம் இல்லா வேலையாட்கள்)களாக அவர்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது. நெய் அளக்கத் தவறிய இடையர்களின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வெட்டிக்குடிகளைப் போன்றே பல பெண்கள், பெரிய கோவில் நெல் குற்று சாலையில் சம்பளம் இன்றி வேலை செய்ய அமர்த்தப்பட்டனர். ஆனால், பார்ப்பனர்களுக்கென்று,  வேதம் கற்க பாடசாலைகள், உணவு உறைவிட  வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டன. இப்பாடசாலை மாணவர்களுக்கு 6 கலம் நெல்லோடு 1 பொன் உபகாரச் சம்பளமாகவும் வழங்கப்பட்டது.

விவசாயிகளுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்தும், நிலப்பறிப்புச் செய்தும், அரசு வல்லமையால் வரி தண்டிச் சுரண்டியும்தான் பெரியகோவில் வானுயர்ந்து நின்றது.

பார்ப்பனிய நிலவுடமை ஆதிக்கத்தின் காலம்!

இவ்வாறு பெரிய கோவில் செழித்திருந்த காலத்தில் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது?

பார்ப்பனரைத் தவிர அனைத்துத் தரப்பினரும் தத்தம் ஊர்களுக்கு அரசு ஏற்பாடு செய்திருந்த காவலுக்கென்று ‘பாடி காவல் வரி’ செலுத்தினர். கைத்தொழில் செய்வோர் ஒவ்வொரு தொழிலுக்கும் வரி (இறை) செலுத்த வேண்டி இருந்தது. நெசவாளர் ’தறி இறை’யும், எண்ணெய் பிழிபவர் ’செக்கு இறை’யும், தட்டார்,  தட்டாரப்பாட்டத்தையும், தச்சர், ‘தச்சு இறை’யும் வரிகளாகச் செலுத்தினர். மக்களிடமிருந்து புரவு, இரவு, குடிமை, திருமணவரி, போர்வரி எனப் பல வரிகளை அரசு வசூலித்த அதே நேரத்தில்,  ஊர், சபை போன்ற அமைப்புகளும் தனியாக வரி விதித்தன. இவ்வாறு விதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட வரிகளில் பெரும்பாலானவை, பார்ப்பன, வெள்ளாள சாதி தவிர்த்த பிற சாதியினரிடமிருந்துதான் வசூலிக்கப்பட்டன.

விவசாயிகள், விளைச்சலில் ஆறில் ஒரு பங்கை வரியாக செலுத்த வேண்டியிருந்தது. அந்த வரிக்குக் ’கடமை’ எனப் பெயரிட்டதன் மூலம்  அரசுக்கு நெல் கொடுப்பது உழவர்கள் வாழ்வின் நிரந்தரமான கடமையாக்கப்பட்டிருந்தது.  இந்த வரியை செலுத்தத் தவறினால், நிலம் பிடுங்கப்பட்டு, அந்த நிலம் ஊர்ப் பொதுவாக்கப்பட்டது.  மக்கள் பலர் பஞ்சத்தாலும் வறுமையாலும் வாடியுள்ளனர். வரிகொடுக்க இயலாதோரின் நிலங்கள் ஈவிரக்கமின்றிப் பறிமுதல் செய்யப்பட்டன. ஊர்களே அதனை விற்று பணத்தை வரியாக (இறை)க் கட்டின. நிலத்தைப் பறித்தல்தான் அன்றைய சமூக அமைப்பில் மிகப் பெரிய தண்டனையாக இருந்தது.

சோழர் ஆட்சிக்காலத்தில் அடிமை முறை இருந்துள்ளதையும் வறுமையினால் மக்கள் தம்மை கோவிலுக்கு அடிமையாக விற்றுக்  கொண்டதையும் கல்வெட்டு ஆதாரங்கள் காட்டுகின்றன. ஆறு பேர் பதின்மூன்று காசுகளுக்குத் தம்மைப் பெரிய கோவிலுக்கு விற்றுக் கொண்டுள்ளனர். நந்திவர்ம மங்கலத்தில் பதிகம் பாடுவதற்காக 3 பெண்கள் பரிசளிக்கப்பட்டனர்.  திருவிடந்தைப் பெருமாள் கோவில் எனும் ஊரிலுள்ள ஸ்ரீவராகதேவர் கோவிலுக்கு 12 மீனவர் குடும்பத்தினர்  தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்டிருக்கின்றனர். இதே போல நெசவாளர்களும் கோவிலுக்கு அடிமைகளாக தம்மை விற்றுக் கொண்டுள்ளனர். இவ்வடிமைகள் தங்களின் தொழில் மூலம் வரும் வருவாயில் களஞ்சுப் பொன், கோவிலுக்குத் தர வேண்டும் என்றும், ஆண்டுக்கு இருமுறை வரும் கோவில் திருநாட்களில் பணிகள் செய்யவேண்டும் என்றும் விதிகள் இருந்தன.

பார்ப்பனர் அல்லாதோரின் பஞ்சாயத்து ஆதிக்கத்திலுள்ள  கிராமங்களை ‘ஊர்கள்’ என்றழைத்தனர். ‘ஊர்களின்’   நில உரிமைகளை மாற்றியும், கோவிலுக்குக் குடிகள் கொடுக்க வேண்டிய காணிக்கடனை அதிகரித்தும் ராஜராஜன் கட்டளைப் பிறப்பித்தான்.

தங்கள் தேவைக்கென சிறு அளவில் வேளாண்மை செய்து வந்தவர்களின் நிலங்கள் அவ்வப்போது ஆட்சியாளர் களால் பறிக்கப்பட்டு, அந்த உழவர்களைக் கூலியாக மாற்றியோ (‘குடி நீக்கியா’), குத்தகையாளராக மாற்றியோ (‘குடி நீக்காமலோ’), அவர்களின் நிலங்கள் கோவிலுக்குச் சொந்தமாக்கப்பட்டன.

அரசனுக்கும், கோவிலுக்குமான பங்கான ‘மேல்வாரமும்’, குத்தகைதாரர்களின் பங்கான ‘கீழ்வாரமும்’ எடுக்கப்பட்டபின், ஊர் அறிவித்துள்ள மானியங்களை உரியவர்களுக்குக் கொடுத்த பின்பு எஞ்சியதே உழவர்களுக்குக் கிடைத்தது. இது விளைச்சலில் பத்தில் ஒருபங்கை விடக் குறைவானது. ‘மேல்வார’மாக செலுத்த வேண்டிய விளைச்சல் ஏற்கெனவே அதிகமாக இருந்ததுடன், அடிக்கடி இந்த அளவு உயர்த்தப்பட்டுக் கொண்டே போனதால் உழுபவர்க்குக் கிடைக்கும் பங்கு குறைந்து கொண்டே போனது.

இதனால் நில உடைமையாளருக்கு (கோவில்தான் உடைமையாளர்) அஞ்சி உழுகுடிகள் ஊரைவிட்டு ஓடியுள்ளனர்.   வரி அதிகமாகப் பிடுங்கியதால் தாங்கள் வெள்ளாமை செய்து குடியிருக்கப் போவதில்லை என மன்னார்குடி மக்கள் எச்சரிக்கையும் விட்டுள்ளனர். சாகுபடி செய்யாது கிடந்த நிலங்களுக்கும் வரி இருந்தது. அதை வசூலிக்கத் தவறிய புன்னைவாயில் எனும் ஊர்ச்சபை தண்டிக்கப்பட்டிருந்தது.

ஊரார் சிலரே வரி நெல்லைக் குறைத்து அளப்பதற்காக, தமது ஊர்நிலத்தில் வரி விலக்குப் பெற்றிருந்த (இறையிலி) நிலங்களின் அளவைக் கூடுதலாகக் கணக்குக் காட்ட முயன்றிருக்கின்றனர். சொந்த நிலமுடையவர்கள் கூட தங்கள் நிலத்தை வரியில்லா நிலங்கள் எனக் கணக்குக் காட்டி அனுபவித்து வந்தனர்.  கோவிலின் சுரண்டலில் இருந்து எவ்வாறெல்லாம் தப்பலாம் எனத் திட்டமிட்ட குடிமக்கள்,  மகிழ்ச்சியுடன் வரி செலுத்தி இருக்கக்கூடுமா?

பார்ப்பனர்கள் நிறைந்துள்ள ஊர்களில் மற்ற சாதியினர் யாரும் நிலவுடைமையாளராக இருப்பின் அவர்கள் நிலங்களை விற்றுவிடச் சொல்லி ராஜராஜன் ஆணை பிறப்பித்தான். அந்நிலங்களை ராஜராஜனின் தமக்கை குந்தவை விலைக்கு வாங்கி கோவிலுக்கு சொந்தமாக்கினாள். இவ்வாறாக பார்ப்பனர் ஊர்களில் பார்ப்பனரல்லாதோரின் நில உரிமை பறிக்கப்பட்டு அவர்கள் உழுகூலிகளாகத் தாழ்த்தப்பட்டனர்.

இவ்வாறு கோவிலைச் சார்ந்து பிறப்பிக்கப்படும் நிலப்பறிப்பு, வரி விதிப்பு போன்ற ஆணைகளை யாரேனும் உழவர்கள் எதிர்த்தால் அவர்கள், ‘சிவத்துரோகி’ எனப் பட்டம் கட்டி அடக்கப்பட்டனர்.

விவசாயத் தொழிலாளர்கட்கு நெல் கூலியாக அளக்கப்பட்டது. நெல் அளப்பவரின் பதவிப் பெயர் ‘கருமி’. இன்றளவும் அச்சொல் மக்கள் மத்தியில் கஞ்சத்தனத்திற்கு மாற்றாகச் சொல்லப்படுவதிலிருந்தே சோழர் காலத்தில் தொழிலாளர்கள் எவ்வாறெல்லாம் வயிற்றில் அடிக்கப்பட்டிருப்பர் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.

சேரிகள், அடிமை விபச்சாரம்: ராஜராஜ சோழனின் சாதனை!

ராஜராஜன், 400க்கும் மேற்பட்ட பெண்களை வலுவில் கொணர்ந்து உடம்பில் சூடு போட்டு ‘தேவரடியார்களாக’ மாற்றினான். இப்பெண்கள் கோவிலின் பணிகளோடு நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டனர். இறைவனின் பெயரால் விபச்சாரத்தைப் புனிதமாக்கி தஞ்சையில் ‘தளிச்சேரி’யை உருவாக்கினான்.  கோவில் அடிமைகளென கட்டாயப்படுத்தி இழுத்து வரப்பட்ட இப்பெண்கள், அரசனின் அந்தப்புரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட கொடுமைகளும் சோழப் பொற்காலத்தில்தான் நிகழ்ந்தன. கோவில் பூசகர்கள், பெருநிலவுடமையாளர்களின் காமவெறிக்குப் பலி கொடுக்கப்பட்ட ‘தேவரடியார்’ குலப் பெண்களின் ஆயிரம் ஆண்டுகாலக் கொடுமையை 1929 இல் சுயமரியாதை இயக்கமும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் போராடி சட்டம் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

‘தமிழ்மறை மீட்டான்’ என சைவக் கொழுந்துகளால் போற்றப்படும் ராஜராஜன், தமிழ்மறைகளை ஒளித்து வைத்துக் கொண்டு சமயக்குரவர் நால்வரும் வந்து கேட்டால்தான் தருவோம் என தில்லை தீட்சிதர்கள் மிரட்டியபோது பம்மிப் பதுங்கி சமயக்குரவர்களின் தங்கச்சிலைகளைச் செய்து அவர்களுக்குத்  தானம் தந்து மீட்டானே ஒழிய, தளிச்சேரிப் பெண்டிர் மீது ‘சூடு’ போட்ட ‘வீரத்தை’ தீட்சிதரிடம் காட்டவில்லை. “சமச்சீர் கல்வியை எதிர்த்து போராடுவோம்” என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மிரட்டியபோது ‘செம்மொழிகொண்டானின்’ அரசு ‘அனைத்துத் தரப்பினரின் நலன்களும் காக்கப்படும்’ எனக் கெஞ்சியதே, ராஜராஜன் காட்டியதும் அதே வீரம்தான்.

தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டுக்களில் தீண்டாமை பற்றிய முதல் குறிப்பே ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் வந்துள்ளது.   வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், இவன் காலத்தில்  ஊருக்கு வெளியே தீண்டாச் சேரியும், பறைச்சேரியும் இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனிச் சுடுகாடுகள் இருந்தன.

தாழ்த்தப்பட்ட சாதி அடிமைகள் சாகுபடி நாட்களில் சகதியில் உழல்வதும் மற்ற நேரங்களில் கல்லுடைப்பதும், பல்லக்கு சுமப்பதும் கட்டாயமானது. ராஜராஜனின் பொற்காலம் பற்றிப் பேசுபவர்கள் அவன் காலத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமையைப் பற்றியோ, சாதிகளால் மக்கள் பிரிந்து கிடந்ததைப் பற்றியோ பேசுவதே இல்லை.

கோவிலை மையமாகக் கொண்ட சோழர் கால அதிகார அமைப்பில் சாதிவாரிக் கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப்பட்டன.  பார்ப்பன, வெள்ளாள நிலவுடைமை ஆதிக்க சாதிகள் ஒருபுறமும் விவசாயத் தொழிலாளிகள், அடித்தட்டு உழைப்பாளர் மற்றும் உடைமை,உரிமை அற்ற சமூக அடிமைகளாக கடைச் சாதி தீண்டப்படாதோர் மறுபுறமுமாக சமூகமே பிரிந்து கிடந்தது.

பொற்காலத்தில் கொழித்த பார்ப்பனர்களும், ஆண்டைகளின் ஜனநாயகமும்!

ராஜராஜனின் ‘பொற்கால ஆட்சி’யை அனுபவித்தவர்கள் யார்? தீட்சிதப் பார்ப்பனர்கள் தனக்கு பட்டம் சூட்ட மறுத்ததால் பீகார் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை சோழநாட்டிற்கு அழைத்து வந்து ராஜராஜன் அவர்களைக் குடியேற்றினான். தமிழக மன்னர்களின் வரலாற்றில் முதன்முதலாக ராஜகுரு என்றொரு பதவியை உருவாக்கி, ஈசான சிவப் பண்டிதர் எனும் காஷ்மீரப் பார்ப்பனரை அப்பதவியில் நியமித்தான்.  பின்னர் பார்ப்பனர்களே இப்பதவிக்கு வருவது மரபாக்கப்பட்டது.  ராணுவப் படையெடுப்பு போன்றவற்றை தான் கவனித்துக் கொண்டு, குடிமக்கள் நிர்வாகத்தை ராஜகுருவின் ஆலோசனைக்கு விட்டிருந்தான்.

பிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன.  அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதிமங்கலங்கள் எனப்படும் தனிக் கிராமங்கள், கோவில்கள், மடங்கள் ஆகியவை அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.  250 ஊர்கள் சோழர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன.  இந்தியச் சட்டங்கள் எவையும் செல்லுபடியாகாத இன்றைய சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போன்றே , குற்றவிசாரணைக்காகக்கூட அரசப்படையினர் இத்தகைய ‘மங்கலங்களின்’ உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.

குடவோலை முறை எனும் ஜனநாயகமுறை சோழர் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுவது ஒரு இமாலயப்பொய். ஊர்ச்சபைகளைத் தேர்ந்தெடுக்க ஓலைகளில் வேட்பாளர்கள் பெயர்கள் எழுதப்பட்டு ஒரு குடத்துக்குள் அவ்வோலைகள் போடப்படும். பின்னர் குடத்துக்குள் கையை விட்டு எடுக்கப்படும் ஓலையில் வரும் பெயருக்குரியவர் சபைக்குத் தேர்வு செய்யப்படுவார். இந்த திருவுளச்சீட்டு ஜனநாயகத்தில் வேட்பாளராக நிற்பதற்கு வேதம் கற்றிருக்க வேண்டும், நில உடைமையாளராக இருக்க வேண்டும் என்ற இரு தகுதிகள் வைக்கப்பட்டிருந்தன.

வேதக் கல்வி பார்ப்பனர்களுக்கு மட்டுமேயான உரிமையாக இருந்ததால், பார்ப்பன  நிலவுடைமையாளர்கள் மட்டுமே ஊர்ச்சபைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இதுதான் குடவோலை முறையின் யோக்கியதை. அதுமட்டுமல்ல, நிலவுடைமையாளர்களான பிராமணர்கள் மட்டுமே பெருவுடையார் கோவிலின் நிதி நிர்வாகிகளாக (பண்டாரி) இருக்க முடியும் என்று ராஜராஜன் ஆணை பிறப்பித்திருந்தான்.

பார்ப்பனர்களுக்கு தன் எடைக்கு எடை (துலாபாரம்) தங்கமும், தானியமும் பலமுறை தானமாகத் தந்தான் ராஜராஜன். அதுமட்டுமல்ல, அவனும் அவனது  தமக்கை குந்தவையும் தமது ‘பிறவி இழிவு நீங்கி’ சொர்க்கம் செல்வதற்காக, தங்கத்தால் பசுமாடு ஒன்றைச் செய்து, அதன் வயிற்றுக்குள் சென்று வந்த பின்னர், அந்த தங்கப் பசுவை பார்ப்பனர்க்கு தானமாகத் தந்துவிடும் ஹிரண்யகர்ப்ப தானம் செய்தனர்.

மண்ணும் பொன்னும் தந்து பார்ப்பனர்களை மகிழ்வித்த ராஜராஜன், தனது அரசாட்சியிலும் பார்ப்பன நீதிமுறைகளையே பின்பற்றினான். தனது அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த பார்ப்பனர்களைக்கூட அவன் தண்டிக்கவில்லை. சோழ எல்லை தாண்டி சேர நாட்டிற்கு நாடுகடத்தினான். “கொலைக்குற்றம் செய்தாலும் பார்ப்பனர்களுக்கு மரணதண்டனை தரக்கூடாது” என்ற மனுதரும விதியைத் தனக்கே பிரயோகித்துக் கொண்ட மன்னன், மக்கள் மீது அவ்விதியை எங்ஙனம் நிலைநாட்டியிருப்பான் என்பதை யாரும் புரிந்துக் கொள்ளலாம்.

சோழநாட்டின் ஊர்களில் நிலம், ஊருக்குப் பொதுவாயினும், அவை கோவிலுக்குச் சொந்தமாக்கப்பட்டு, அதில் வேளாளரின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது. விளைநெல்லில் பெரும்பங்கு, குத்தகை உரிமையாகவும் (காராட்சி) கோவிலுக்காக மேற்பார்வை  ஊதியமாகவும் (மீயாட்சி) வேளாளருக்கு மட்டுமே கிடைத்தது.

வேளாளர் தம் மேற்பார்வையில் இருந்த நிலங்களில்  ‘காராட்சி’, ‘மீயாட்சி’ப் பங்குகளை முன்னிலும் அதிகமாக வசூலித்தபோது பயிரிட்ட குடிமக்கள் கிளர்ச்சி செய்துள்ளனர். இந்த வேளாளர் பங்குகளுக்கு மன்னன் உச்சவரம்பு நிர்ணயிக்காததால், உழுகுடிகளையும் விவசாயக் கூலிகளையும் வேளாளச் சாதியினர் வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்தனர். ராஜராஜனின் காலம் மட்டுமின்றி, சோழர் காலம் முழுவதுமே வேளாளர், பார்ப்பனக் கூட்டணிக்கு பெருவாழ்வைத் தந்த பொற்காலமாக இருந்தது.

களப்பிரர் காலம்: உழைக்கும் மக்களின் பொற்காலம்!

ராஜராஜனது பொற்காலத்தை விதந்தோதும் சதாசிவ பண்டாரத்தாரில் இருந்து கருணாநிதி வரை தமிழக வரலாற்றில் இருண்டகாலமாக ‘களப்பிரர்’ காலமிருந்ததெனக் குறிப்பிடத் தவறுவதே இல்லை. அந்த ‘இருண்டகாலத்தை’ புரிந்து கொண்டால்தான் சோழர் பொற்காலத்தின் மகிமையை விளங்கிக் கொள்ள இயலும்.

களப்பிரர்களின் ஆட்சிக்காலத்துக்கு (கி.பி. 4 முதல் 6 ஆம் நூற்றாண்டுவரை)முந்தைய சங்கக் காலத்தில் (கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை) விவசாய உற்பத்தி வளர்ச்சி பெற்று முற்காலப்பாண்டியர்களின் அரசு உருவாகி வந்தது. நிலவுடைமை என்பது பொதுவில் இருந்த வேளிர்களின் காலம் அது. பாண்டிய ஆட்சியின்போது விவசாயமயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டு விளிம்புகளிலிருந்த இனக்குழு சமூகம் விவசாய விரிவாக்கத்துக்குள் கொண்டுவரப்பட்டு, அவர்களின் உபரி உறிஞ்சப்பட்டது. அவர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. பார்ப்பனர்களுக்குத் தானமாக்கப்பட்டன. அரசனுக்கான வரியாக இனக்குழுக்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது. இதனை எதிர்த்து கிளர்ந்தெழுந்த இனக்குழு சமூகங்களின் எழுச்சி தமிழகமெங்கும் 300 ஆண்டுகள் தொடர்ந்தது.  களப்பிரர் ஆட்சிக்காலமாகக் குறிப்பிடப் படும் காலம் இதுதான்.

இக்காலத்தில் நிலங்கள் மீண்டும் ‘பொது’வாக்கப்பட்டன. பார்ப்பனர்களுக்குத் தானமாகத் தரப்பட்ட நிலங்கள் பறிக்கப்பட்டன. இந்த ‘இருண்ட’ காலத்தில்தான் தமிழிலக்கிய வளர்ச்சி உச்சத்தில் இருந்தது. மணிமேகலை, சீவக சிந்தாமணி, எலி விருத்தம், கிளி விருத்தம், கார் நாற்பது, இனியவை நாற்பது போன்ற இலக்கிய நூல்களும், விருத்தம், தாழிசை போன்ற பாவகைகளும், உரை நூல்களும் உருவாக்கப்பட்டன. தமிழுக்கு வச்சிரநந்தி தலைமையில் சங்கம் ஒன்று அமைக்கப்பட்டு தமிழ் இலக்கியம் வளர்ச்சி பெற்றது. வைதீகத்தை வீறுகொண்டு எதிர்த்து, ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று பிரகடனம் செய்த  திருக்குறளும் களப்பிரர் காலத்தில்தான் இயற்றப்பட்டது. தமிழகமெங்கும் பவுத்தமும் சமணமும் தழைத்தோங்கியிருந்த காலமும் இதுதான்.

இந்த ‘இருண்டகால’த்தைத்தான் பல்லவர்களும் பாண்டியர்களும் வீழ்த்தினர். இனக்குழுக்களின் பொது நிலத்தை மீண்டும் பறித்து, பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கினர். நிலத்தின் மீது நிலவிய பொதுவுடைமையை நீக்கியதனாலேயே ‘பொது நீக்கி’ என்று இம்மன்னர்கள் புகழப்பட்டனர்.

இன்று மண்ணின் மைந்தர்களான இருளர்கள் வீடுகட்ட நிலம் கேட்டால் தடியடியால் பதில் சொல்லும் ‘ஆரூர்ச் சோழனின்’ ஆட்சி, ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசுப் புறம்போக்கு நிலங்களைப் ‘பொது நீக்கி’ ஹூன்டாய், நோக்கியா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரிவழங்கிக் கொண்டிருக்கிறதே, அதே போன்ற ‘பொது நீக்கி’ய அரசைத்தான் பல்லவர்களும் பாண்டியர்களும் நிறுவினார்கள்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக சதுர்வேதி மங்கலங்களாக்கப்பட்ட பொது நிலங்கள், மிகப்பெரும் அளவில் பார்ப்பனர்களுக்கு தானமாகவும் வேளாளர்களுக்கு தனி உடைமையாகவும் ஆக்கப்பட்டது ‘மா’மன்னன் ராஜராஜனின் ஆட்சியில்தான். பழங்குடி மக்களை அடித்து விரட்டிவிட்டு, மலைகளையும் காடுகளையும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கின்றன இன்றைய ‘புரிந்துணர்வு’ ஒப்பந்தங்கள்.

ராஜராஜனின் காலத்திலும் அவன் வாரிசுகளின் காலத்திலும் தேவதானம், பள்ளிச் சந்தம், இறையிலி எனும் பெயரில் செப்பேடுகளில் பதியப்பட்டன. செழிப்பான காவிரிப் பாசன நிலங்களின் மீது, வேளாளர், பார்ப்பனக் கூட்டணியின் பிடி இறுகியது. ஏனைய சாதிகள் உழைக்கும் கூலிகளாக மாற்றப்பட்டனர். வானுயர நிற்கும் பெருவுடையார் கோவிலின் அடித்தளத்தில், பொற்காலப் புரட்டில் புதைந்திருக்கும் உண்மை இதுதான்.

வடக்கே மகதப் பேரரசின்  அசோகனின்  ஆட்சிக் காலத்தில் பார்ப்பன வேள்விகள் ஒட்டுமொத்தமாகத் தடை செய்யப்பட்டன. தெற்கே களப்பிரர் ஆட்சிக்காலத்திலோ பார்ப்பனர்களுக்குத் தரப்பட்டிருந்த தேவதானங்கள் பறிக்கப்பட்டு, நிலங்கள் பொதுவாக்கப்பட்டன.

பவுத்தமன்னர் பிருகதத்தரின் ஆட்சியை வீழ்த்த கிளர்ச்சி செய்து, வட இந்தியாவில் பார்ப்பன மீட்சியை உருவாக்கியவன், பார்ப்பனத் தளபதி புஷியமித்திர சுங்கன். அதேபோல தமிழகத்தில் களப்பிரரை வீழ்த்தி, ‘பொது நீக்கி’, பவுத்தத்தையும் சமணத்தையும் ஒழித்து சைவத்தை நிலைநாட்டி, பார்ப்பனியத்துக்குப் புத்துயிர் கொடுத்தவர்கள்தான் பல்லவ, பாண்டியர்கள். இந்தப் பார்ப்பன மீட்சியின் உச்சத்தையே தொட்டவன் ராஜராஜன்.

தமிழின் மாபெரும் படைப்புகள், புதிதாகப் படைக்கப்பட்ட பாவினங்கள், விருத்தங்கள், அறநூலின் உச்சமான திருக்குறள் என  களப்பிரர் கால இலக்கியங்கள் எண்ணற்றவை. சோழர் காலத்தில் உருவான இலக்கியங்கள் யாவை?

சோழர் காலம் பொற்காலமா, பார்ப்பனிய மீட்சிக் காலமா?

இன்று கருணாநிதிக்கு சூட்டப்படும் சமத்துவப் பெரியார், வாழும் வள்ளுவர் போன்ற எண்ணற்ற அடைமொழிகளைப் போலவே சோழர்களும் அடைமொழி சூடினார்கள். இன்று கருணாநிதியின் துதிபாடுவதற்காகவே நடத்தப்பட்டும் சொறியரங்குகளைப் போலவே, அன்றைய ‘மெய்க்கீர்த்தி’களும், ‘உலா’, பரணிகளும்தான் சோழர்களைச் சொறிந் தன. வருணாசிரமத்தை கடுமையாக எதிர்த்த திருக்குறளின் பொருளைத் திரிப்பதற்கு சோழர்கள் காலத்தில் பல உரையாசிரியர்கள் தோன்றினார்கள். வேதங்களையும், வேள்விகளையும் கண்டித்து, பிறப்பினால் அல்ல, ஒழுக்கத்தினாலேயே மனிதனுக்கு உயர்வு வரும் என்று கற்பித்த வள்ளுவரின் குறளையே திரித்துப் பரிமேலழகர் எனும் பார்ப்பனர் ‘நால் வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட ஒழுக்கங்களில் வழுவாது நிற்க’ என்று சோழர்காலத்தில்தான் உரை எழுதினார்.

சோழர் காலத்துக்கு முந்திய நிலையை ஜெயங்கொண்டார் (சோழர் காலம்) கலிங்கத்துப் பரணியில் ‘மறையவர் வேள்வி குன்றி, மனுநெறிக் குலைந்து, சாதிகள் கலப்புற்றதாக’ப் பாடியுள்ளார். இவற்றை எல்லாம் மீண்டும் தலைகீழாக மாற்றி மனுநெறியை நிலைநாட்டியதுதான் சோழர்களின் ‘சாதனை’.

சோழ மன்னர்கள் சிங்களம், மலைநாடு, கங்கம், மாலத்தீவெல்லாம் படையெடுத்துச் சென்று தலை அறுத்துக் கொண்டிருந்தார்கள். தலையறுத்துக் கொள்ளையடித்த பொன்னையும் பொருளையும் கொண்டு, கோவில்கட்டுவதற்காக மக்களைக் கல்லறுக்கப் பணித்தார்கள். சற்சூத்திரர்களின் ‘ஊர்’களும், பார்ப்பனர்களின் ‘பிரம்மதேயங்களும்’ பார்ப்பன ராஜகுருவின் ஆலோசனைக்கும் ஆணைக்கும் கட்டுப்பட்டே இருந்தன. உழுகுடிகளை ஒட்டச் சுரண்ட பெரியகோவிலும் வட்டாரக் கோவில்களும் இருந்தன.

இதனைப் பொற்காலம் என்று கொண்டாடும் தமிழினவாதிகள் தமது தமிழ்ப் பெருமிதத்தினுள்ளே, வெள்ளாளப் பார்ப்பனக் கூட்டு ஆதிக்கத்தையும் தீண்டாச் சேரியையும் கூச்சமின்றி மறைத்துக் கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் யாரும் சிந்தித்து விடாதிருக்க, ‘கங்கை கொண்டான்’, ‘கடாரம் கொண்டான்’ என்று மாற்றான் தோட்டத்தில் தாலி அறுத்து வந்து தமிழ்நாட்டில் கோபுரம் கட்டியிருப்பதை அண்ணாந்து பார்க்கச் சொல்கிறார்கள். நாம் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே நம் காலடி மண்ணை ‘இறையிலி’ ஆக்கி ஏகாதிபத்தியங்களின் ‘மங்கலங்களாக’ மாற்றிக் கொண்டிருக்கிறது, கருணாநிதி அரசு.

வைதீக மதத்தை எதிர்த்து நின்ற புத்தர் பரிநிர்வாணம் அடைந்ததன் 2550 ஆம் ஆண்டை பத்தோடு பதினொன்றாக அனுசரித்த திமுக அரசு, பார்ப்பனதாசனான ராஜராஜனை மட்டும் கோலாகலமாகக் கொண்டாடக் காரணம், கருணாநிதி தன்னை ராஜராஜனுடன் இனம் காண்கிறார் என்பதுதான்.

சநாதன தர்மம் என்று சொன்னாலே காறித் துப்பிய காலம் ஒன்று இருந்தது. அதுதான் சுயமரியாதை இயக்கக் காலம். அந்தக் காலத்தை ‘களப்பிரர் காலத்தோடு’ ஒப்பிடலாம் என்றால், அதனை முனை மழுங்கவைக்க குல்லுகப்பட்டருடன் கூட்டு சேர்ந்த காஞ்சித்தலைவன் அண்ணா தான், பார்ப்பன மீட்சிக்கு அடிக்கொள்ளி வைத்த  நரசிம்ம பல்லவன்.  மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவிடமும் தினமலரிடமும் நல்ல பெயரெடுக்கத் துடிக்கும் ‘திருவாரூர் சோழன்’தான்,  பார்ப்பனர்களுக்கு பொற்கால ஆட்சி தந்த ராஜராஜன்.

விந்தியம் கடந்து வந்த பார்ப்பனர்களுக்கு உள்ளூரின் விளைநிலங்கள் எல்லாம் ‘வரி நீக்கி’அவன் வழங்கியதைத்தானே, தேசம் கடந்து வரும் கம்பெனிகளுக்கு ‘வரி நீக்கி’ வழங்குகிறார் கருணாநிதி.

கோவிலின் ஆணைகளை எதிர்த்தவர்களுக்கு  ‘சிவத்துரோகி’ப் பட்டம் என்றால் உலகவங்கி ஆணைகளை நிறைவேற்றும் அரசை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு இன்றோ ‘தேசத்துரோக’ வழக்கு.

பீகார் பார்ப்பனர்களை தமிழ்நாட்டுக்கு வரவழைத்து வாழவைத்த ராஜராஜனின் வரலாறும், பார்ப்பனிய பாஜக வைத் தமிழகத்திற்கு இழுத்து வந்து காலூன்ற வைத்த கலைஞரின் வரலாறும் வேறுவேறா என்ன? அன்று ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்ட  தீண்டாச் சேரியை @பால்தானே, இன்று எழில்மிகு சென்னைக்கு வெளியே துரத்தப்படும் உழைக்கும் மக்களுக்காக இக்காலச் சோழன் ஒதுக்கும் செம்மண்சேரி?

இன்று ராஜராஜனை ‘மாமன்னன்’ என்றும் அவனது ஆட்சி ‘தமிழனின் பொற்காலம்’ என்றும் புகழ்பவர்கள் “அக்காலத்தில் ஒரு மன்னன் அப்படித்தான் இருந்திருக்க முடியும்” என்று நியாயப்படுத்துகின்றனர். வரலாற்றில் கீதையும் இருந்தது. அதே காலத்தில் அதனை எதிர்த்து நின்ற பவுத்தமும் இருந்தது. அசோகன் இருந்தான். பவுத்தத்தை வீழ்த்திய புஷ்யமித்திர சுங்கனும் இருந்தான். பார்ப்பனர்க்கு தனிச் சலுகை நீக்கி நிலங்களைப் பொதுவாக்கிய களப்பிரர் இருந்தனர்.  பொதுவை நீக்கி பார்ப்பனதாசனாக வாழ்ந்த ராஜராஜனும் இருந்தான்.

கீதையா, பவுத்தமா? அசோகனா, சுங்கவம்சமா? களப்பிரரா, ராஜராஜனா? நாம் எந்தப் பக்கம் என்பதுதான் கேள்வி.

___________________________________________________

ஆதாரங்கள்:

  1. சதாசிவ பண்டாரத்தார்,
  2. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி,
  3. மயிலை சீனி.வேங்கடசாமி,
  4. குடவாயில் பாலசுப்ரமணியம்,
  5. நா.வானமாமலை, பொ.வேல்சாமி, அ.மார்க்ஸ்,  ஆ.சிவசுப்பிரமணியன், தொ.பரமசிவன் ஆகியோரது நூல்கள் மற்றும் கட்டுரைகள்.

_______________________________________

புதிய கலாச்சாரம் – டிசம்பர் – 2010
_______________________________________

  1. இராஜராஜ சோழன் ஆட்சி ! பார்ப்பனியத்தின் மீட்சி !! | வினவு!…

    பொற்காலம் என்று கொண்டாடும் தமிழினவாதிகள் தமது தமிழ்ப் பெருமிதத்தினுள்ளே, வெள்ளாளப் பார்ப்பனக் கூட்டு ஆதிக்கத்தையும் தீண்டாச் சேரியையும் கூச்சமின்றி மறைத்துக் கொள்கிறார்கள்….

    • Thanks for the link “Evano oruvan”, I would have believed this guy because of his excellent story writing skills. In a different article of your blog “Mr. Vinavu” I supported you for writing on brahmins but in this i could not accept your points, mostly you related many things stupidly I feel. Say like during British period there are very good poets Eg. Bharathi, Bharathidasan and many more scholars lived and contributed to Tamil and its literature but now in MK’s rule i do not see good contributors to Tamil. Right now we have all top Tamil celebrity people contributed less to Tamil literature (but they are very knowledgeable on our old literature, they can speak anything, it is no their finger tips) so which means, Was British period is golden period for Tamil literature rather than MK’s rule now? your arguments is very childish like this. Another thing your relationship of the word “Karumi” and poverty. I do not think this word denotes poverty in Raja Rajan’s period it would have come in to practice just like that, because of Karumi’s job he has to be strict and hard-and-fast to giving so people started using Karumi in the place of “Miser” not poverty, even now we are using many profession for fun, say like “Auto driver” if someone beat around the bush in saying something we simply say “do be like a Auto driver come to the point” and many of the Vadivelu’s language has become our common language in our day to day life without any meaning in it. So after some centuries if some one like you started relating our present language and MK’s rule how madness this should be? I completely lost confident reading your blog. I used have a great respect and interest in it.

  2. நெடுங்காலமாக சோழர்களை பற்றி தேடி தேடி படித்து வருபவன் நான். இந்த கட்டுரையில் விவரிக்கபட்டவை அனைத்தும் உண்மையே. மனுதர்மத்தின் பெயரில் மக்களில் பெரும்பாலோனரை நசுக்கிய ஆட்சி தான் சோழ இராட்சியம். மனித தர்மத்தை மனு தர்மம் மூலம் நசுக்கி மன்னர்களை கைபாவையாக்கி தங்களுக்கு வேண்டியதை சாதித்துகொண்டவர்களே பார்பனர்கள்.

    • மிக்க மகிழ்ச்சி.. அருமையான கட்டுரை… இதுவரை அறியமால் இருந்த பல விடயங்கள் தெரிய வந்துள்ளது எனக்கும் மற்றும் பலருக்கும்…

  3. […] This post was mentioned on Twitter by வினவு. வினவு said: இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!! – சிறப்புக் கட்டுரை https://www.vinavu.com/2011/01/05/raja-raja-cholan/ […]

  4. அன்று விவசாயிகளிடம் அதிக வரி விதித்து ஓட்டாண்டியாக்கி ஊரை விட்டு ஓட வைத்தனர் ராஜராஜனும் பார்பனர்களும் வெள்ளாளர்களும் இன்றும் உலகமயத்தின் மூலம் உரம், பூட்சிகொல்லிக்கு அடிமைபடுத்தி, விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க செய்யாமல் செய்து நகரத்தை நோக்கி ஓடவைதிருக்கிரார்கள் இந்த நவீன சோழர்கள் . இதனை எதிர்த்து போராடி பார்பனியத்தை ஒடுக்கி, விவசாயத்தை செழிக்க செய்த களபிரர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் அமைப்பதை தவிர வேறு தெரிவு இல்லை.
    http://suraavali.blogspot.com/2010/08/iii-3-6.html

  5. நல்லதொரு கட்டுரை முயற்சி…….. களப்பிரர் என்றதும் ஏதோ கலப்பிரர் என்று பல தமிழ் சான்றோர்கள் நினைப்பது வடிக்கட்டின முட்டாள்தனம். களப்பிரரின் தோற்றம் கிபி 2 க்கும் முன்னரே இருந்த ஒன்று. களப்பிரர்கள் தமிழ்நாட்டின் ஆதிக் குடிகள் ஆவார்கள், எப்படி குறும்பர்களை துரத்தி சோழர்கள் தமது ஆதிக்கத்தைக் கொண்டு வந்தார்கள், களப்பிரர்கள் சத்தியபுத்தோ என கிரேக்கர்களால் விளிக்கப்பட்ட தமிழகத்தின் நான்கு பெரும் வேந்தர்களில் ஒருவரே. ஏன் களப்பிரர்களை தமிழின் மூவேந்தாக கொள்ள மறுத்தார்கள். காரணம், அவர்கள் தமிழ்நாட்டின் மண்ணின்மைந்தர்களான இருளர்களின் வம்சமாகவும், சமண/பௌத்த மதத்தை முழுமனதோடு ஏற்ற அதியமான பரம்பரையினரே ஆவார்கள். …… இன்னும் பல வரலாற்று உண்மைகள் வெளிவந்தால் மிக்க நலம்…

    சோழர்களின் அடிமை முறைப் பற்றி பல வால்யூம்களில் புத்தகங்கள் எழுதியும் ஒருவருக்கும் உரைக்காதது இழிவே.. ஆனால் சோழர்களின் ஆதிக்க வெறியால் தான், கன்னடமும், தெலுங்கும், மலையாளமும் தனித்தனி மொழிகளாகின. காரணம் அக்காலத்தில் சோழர்களின் முதுகில் நின்றது தமிழ். அதனால் தமிழ் மொழியை ஒரு ஆதிக்க மொழியாக பிற சாதிகள் பார்த்ததால், எளிதில் சமக்கிருதம் உள்ளே நுழைந்துவிட்டது. இன்னும் நிறைய இருக்குது

    • ஒரு ஆதாரமும் இல்லாமல் புளுகித்தள்ளுங்கள். வரலாறை மாற்றிக்கூறலாம்; ஆனால் மாறுமா?

  6. ராஜராஜ சோழன் படத்தில் கூட சிலைசெதுக்குபவர் எச்சில் துப்புவதற்காக ஒரு சிறுவனை நிறுத்தி இருப்பார்கள். அவன் கையில் உள்ள பாத்திரத்தில்தான் அவர் எச்சில் துப்புவாராம். அந்தப் பையன் அதை கையிலேயே வைத்துக்கொண்டு நிற்பானாம்.

    சிவாஜிகணேசன் திரைப்படம் சொல்லும் செய்தி இது

  7. உண்மையான செய்திகளை ஆதாரங்களோடு எழுது வரும் வினவுக்கு வாழ்த்துக்கள் !

    ராஜ ராஜன் கூட்டிக் கெடுத்தவன் என்பதை அறியாமல் தமிழகத்தில் உள்ள சிலர் சோழப் பரம்பரையினர் என்று வம்பளந்து வருகின்றனர். இவர்களால் தமிழகத்தின் ஜாதிப் பிரச்சனை தீராது வருகின்றது.

    • யாரையெல்லாம் கூட்டிக் கொடுத்தான் இராச ராசன் …

      சீனாவில் முந்திய அரசர்களை தவறாக சித்தரித்து எழுதியிருக்கிறார்களா?

      தமிழினத்தை அழிக்கும் சூழ்ச்சி…

      வெறும் மூன்று சதவீத பார்பான் ஐம்பது ஆண்டுகளில் அதிகாரத்தையும் அரசர்களையும் கைப்பற்ற என்ன செப்படி விதியா காட்டினார்கள்…

    • சோழன் இல்லாத வங்கத்தில் சாதியை ஒழிசிட்டாங்க…
      அங்கு இப்போது சமத்துவம் தான் இருக்கிறது….

  8. ராஜராஜனின் ‘பொற்கால ஆட்சி’யை அனுபவித்தவர்கள் யார்? தீட்சிதப் பார்ப்பனர்கள் தனக்கு பட்டம் சூட்ட மறுத்ததால்///

    இது ஏன்?

  9. இன்றைய தஞ்சையில் வெள்ளாள சாதியினர் மிகக்குறைவாகவே உள்ளனர், ஆண்ட வெள்ளாளர்கள் இடம் பெயர்ந்து விட்டனரா? இல்லை மதம் மாறி விட்டார்களா?

    • 13-ம் நூற்றாண்டில் சோழர் ஆட்சி முடிவுக்கு வந்ததன் விளைவாக ஏற்பட்ட அரசியல் நிலையற்றத் தனத்தால் வெள்ளாளர்கள் பலர் இடம் பெயர்ந்தனர். ஒரு குறிபிட்டக் கூட்டம் தெற்கே ஈழத்தில் அகதிகளாக சென்று யாழ்ப்பாணத்தில் நிலைக் கொண்டனர். 13-ம் நூற்றாண்டில் திடிர் என மலர்ந்த யாழ்ப்பாணத் தமிழ் அரசு. ஒருக் கூட்டம் வடக்கே நெல்லூருக்கு சென்று தெலுங்குச் சோடர்கள் எனவும் தெலுங்கு சோழர்கள் எனவும் அழைத்துக் கொண்டது. சில வெள்ளாளர்கள் கொங்கு நாட்டில் குடியேறி கொங்கு வெள்ளாளர், கவுண்டர்கள் என அழைத்தனர். அக்காலத்தில் வெள்ளாளருக்கு எதிராக ஏற்பட்ட கலவரங்களால் அவர்கள் தமது சாதிப் பெயரை திரித்துக் கூறினர், கம்மாளர், முதலியார், கவுண்டர், என வேறு வேறு பெயர்களால் அழைத்தனர். சிறிதுக் காலம்பின் 13ம் நூற்றாண்டில் வடக்கில் இருந்த வந்த நாயக்கர் வெள்ளாளரின் வெற்றிடத்தை நிரப்பினர். அவர்களே பிற்காலத்தில் தஞ்சை மதுரை எனத் தனித்தனியாக ஆண்டனர். நாயக்கர், நாயர், நாயக்கே என அனைவரும் தெலுங்கர்கள்……….. வரலாறுப் படித்து இருந்தால் இது அனைவருக்கும் தெரிந்திருக்கும் … இடம் பெயர்ந்த வெள்ளாளர்கள் தாம் சென்ற இடத்தில் சாதி வெறியாடியது தனிக்கதை…

      • இக்பால்செல்வன்,
        உங்களின் புளுகள்களுக்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா? குறைந்த பட்சம் சங்க இலக்கிய பாடல் அல்லது ஆயிரமாண்டு கல்வெட்டுச் செய்தி ஏதாவது உண்டா? இப்படி உளறிக்கொட்டியிருக்கிரீர்கள்? இன்று வேளாளர் என்று பெயர் சூட்டிக்கொண்டவர்கள் எவரும் அக்கால உழவர்கள் என்பதற்கு ஒரு சான்றும் இல்லை.மருத நிலத்தில் தானே ஆட்சி தோன்றியது. பின் முல்லை நில மக்களான வேட்டுவர்(கவுண்டர்) எவ்வாறு இன்று வேளாளர் ஆனார்? சின்னமேளம் எனும் கொட்டடிக்கும் சாதிகூட இசை வேளாளர் என்று பெயர் வைத்துக்கொண்டுள்ளது.பிள்ளை, முதலி என்பதெல்லாம் பட்டங்கள் ; சாதிகள் அல்ல. சான்றாக தென் தமிழகத்தில் முக்குளத்தோர் என சொல்லிக்கொள்ளும் அகமுடையார் வடக்கில் அகமுடை முதலி என்பர்.இவ்வாறு முதலி மற்றும் பிள்ளை பட்டங்களின்கீழ் உறவே இல்லாத பல சாதிகள் உள்ளன. மேலும் இவர்கள் அனைவரும் முல்லை மற்றும் குறிஞ்சி நிலத்தின் மக்களும் கலப்பினங்களும் ஆவர். இவர்களுக்கும் அரசகுடிகளுக்கும் எவ்வித உறவும் தொடர்பும் கிடையாது.

        • //தென் தமிழகத்தில் முக்குளத்தோர் என சொல்லிக்கொள்ளும் அகமுடையார் வடக்கில் அகமுடை முதலி என்பர்.இவ்வாறு முதலி மற்றும் பிள்ளை பட்டங்களின்கீழ் உறவே இல்லாத பல சாதிகள் உள்ளன. மேலும் இவர்கள் அனைவரும் முல்லை மற்றும் குறிஞ்சி நிலத்தின் மக்களும் கலப்பினங்களும் ஆவர். இவர்களுக்கும் அரசகுடிகளுக்கும் எவ்வித உறவும் தொடர்பும் கிடையாது.//

          அகமுடைய முதலியாருக்கும் முக்குலத்தோருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. முக்குலம் எனப்படுபவர்கள் கள்ளர், மறவர் மற்றும் அகமுடையர் என்ற மூன்று பிரிவினரும். இராஜராஜனும் கள்ளர் என்றும் அகமுடையர் என்றும் கூறுபவர்கள் உண்டு.

          கள்ளர் – கள்ளத்தனமாக எதிரியின் நாட்டில் நுழைந்து ஒற்றரிபவர்கள் மேலும், எதிரிகள் சேர்த்துவைத்திருக்கும் படைகலன்களை அவர்கள் நாட்டுக்குள்ளேயே அழித்தொழிப்பவர்கள்

          மறவர் – மறப்போர் முறையில் போர்களத்தில் எதிரியுடன் சண்டையிடுபவர்கள்

          அகமுடையர் – இவர்கள் இருவரையும் தாண்டி எதிர் நாட்டிற்குள் புகுந்துவிட்டால் அங்கு எதிரியை எதிர்த்து சண்டையிடுபவர்கள். அதாவது அகம் எனும் வீட்டை காப்பவர்கள்.

          இவர்கள் அனைவருக்குமே தொழில் விவசாயம் தான்..

        • கௌடே, கௌண்டர், கம்மவா போன்ற சாதிகள் அனைத்துமே agrarian societies தான். இங்கு வேளாளரும் agrarian communities என்பதைச் சுட்டவே சொன்னேன்… யாழ்ப்பாணத்தில் வேளாளர் சோழர் காலத்தில் புகுந்தவர்களே, இத்தகைய சாதிகள் தான் சிங்களவர் மத்தியில் கோவிகமர் என இருக்கின்றனர்.

          ஆனால் இலங்கையில் வேளாளரின் புகுமையால் தமிழர் புகுந்தால் என நான் கூறவில்லி, தமிழர்கள் இலங்கையில் பன்னெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். வேளாளரின் வருகையை எதிர்த்தே சிங்களவர்கள் இன்று வரை அனைத்து தமிழர்களையும் விரட்ட நினைப்பது வேதனையானது.

        • //முல்லை நில மக்களான வேட்டுவர்(கவுண்டர்) எவ்வாறு இன்று வேளாளர் ஆனார்? //

          இது சற்றும் கேட்டறியதா செய்திகள். வேட்டுவர் கவுண்டர் இல்லை என்பது எனது கருத்து. கொங்கு மண்டலத்தின் ஆதிக்குடிகளாக வேட்டுவரின் வழித்தோன்றல்களே, இன்றும் அங்கு வாழக்கூடிய இருளர்கள், வேட்டுவர், என்பவர்கள் hunter society , கவுண்டர் என்போர் hunter society – ஆக இருந்ததற்கான ஆதாரம் தந்தால் நலம். கவுண்டர், கெள்டே அனைவரும் aggragrian society என்பது எனது கருத்து. கொங்கு நாட்டில் இருக்கும் குரும்பர், ஆய் போன்றவர்கள் shepardic communties ஆகும்.

      • இக்பால் செல்வன். தமிழன் என்ன பிறக்கும் போதே ஆக்ரரியன் ஆகப் பிறந்தானா? எல்லாரும் ஹண்டர் கேதரர் களாக ஆரம்பித்தவர்கள் தான். சில இனக்குடிகள் அதன் பின்னர் தமது தேவையைப் பொருத்தும் வாழுமிடத்தைப் பொருத்தும் விவசாயம் செய்ய ஆரம்பித்திருக்க வேண்டும். நீங்கள் குறிப்பிடும் வேட்டுவர் என்பவர்களும் தனக்குப் பின்னாலே கவுண்டர் என்ற பட்டத்தை வைத்துள்ளார்கள். வேட்டுவக் கவுண்டர் என்பது எனது நண்பனின் சாதி. ஆதாரமில்லாமல் தவறான தகவல்களை பரப்பாதீர்கள்.

  10. இக்பால்செல்வன்
    13-ம் நூற்றாண்டில் சோழர் ஆட்சி முடிவுக்கு வந்ததன் விளைவாக ஏற்பட்ட அரசியல் நிலையற்றத் தனத்தால் வெள்ளாளர்கள் பலர் இடம் பெயர்ந்தனர். ஒரு குறிபிட்டக் கூட்டம் தெற்கே ஈழத்தில் அகதிகளாக சென்று யாழ்ப்பாணத்தில் நிலைக் கொண்டனர். 13-ம் நூற்றாண்டில் திடிர் என மலர்ந்த யாழ்ப்பாணத் தமிழ் அரசு. ஒருக் கூட்டம் வடக்கே நெல்லூருக்கு சென்று தெலுங்குச் சோடர்கள் எனவும் தெலுங்கு சோழர்கள் எனவும் அழைத்துக் கொண்டது. சில வெள்ளாளர்கள் கொங்கு நாட்டில் குடியேறி கொங்கு வெள்ளாளர், கவுண்டர்கள் என அழைத்தனர். அக்காலத்தில் வெள்ளாளருக்கு எதிராக ஏற்பட்ட கலவரங்களால் அவர்கள் தமது சாதிப் பெயரை திரித்துக் கூறினர், கம்மாளர், முதலியார், கவுண்டர், என வேறு வேறு பெயர்களால் அழைத்தனர். சிறிதுக் காலம்பின் 13ம் நூற்றாண்டில் வடக்கில் இருந்த வந்த நாயக்கர் வெள்ளாளரின் வெற்றிடத்தை நிரப்பினர். அவர்களே பிற்காலத்தில் தஞ்சை மதுரை எனத் தனித்தனியாக ஆண்டனர். நாயக்கர், நாயர், நாயக்கே என அனைவரும் தெலுங்கர்கள்……….. வரலாறுப் படித்து இருந்தால் இது அனைவருக்கும் தெரிந்திருக்கும் … இடம் பெயர்ந்த வெள்ளாளர்கள் தாம் சென்ற இடத்தில் சாதி வெறியாடியது தனிக்கதை…
    //
    யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர்கள் குடியேறியது சோழர்கள் காலம் என்ற ஒரு கருத்தாக்கம் வைத்து மற்ற குடியேற்றங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. அன்று ஆண்ட சாதி (வெள்ளாளர் என்று கட்டுரையில் இருப்பதை நான் நம்பவில்லை)இன்று பல பெயரில் பிரிந்திருக்கலாம் என்றே நான் கருதுகிறேன்.

    • கௌடே, கௌண்டர், கம்மவா போன்ற சாதிகள் அனைத்துமே agrarian societies தான். இங்கு வேளாளரும் agrarian communities என்பதைச் சுட்டவே சொன்னேன்… யாழ்ப்பாணத்தில் வேளாளர் சோழர் காலத்தில் புகுந்தவர்களே, இத்தகைய சாதிகள் தான் சிங்களவர் மத்தியில் கோவிகமர் என இருக்கின்றனர்.

      ஆனால் இலங்கையில் வேளாளரின் புகுமையால் தமிழர் புகுந்தால் என நான் கூறவில்லி, தமிழர்கள் இலங்கையில் பன்னெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். வேளாளரின் வருகையை எதிர்த்தே சிங்களவர்கள் இன்று வரை அனைத்து தமிழர்களையும் விரட்ட நினைப்பது வேதனையானது.

    • இக்பால்செல்வன்
      சிங்களப் பேரினவாதத்தை மிகையாக எளிமைப் படுத்துகிறீர்கள்.
      இதன் முதல் இலக்கு முஸ்லிம்கள். தடுத்த இலக்கு இந்தியர்கள். (மலையாளத் தொழிலாளர்).
      பிறகு மலையகத் தோட்டத் தொழிலாளர்.
      பின்னரே வடக்கு கிழக்கின் தமிழர்.

      இன்னமும் முஸ்லிம்களும் மலையகத் தமிழரும் அதன் இலக்குக்களே.

      .
      அது போக,
      யாழ்ப்பாண அரசுக்கு முதலும் தமிழ் மன்னர்கள் ஆண்டனர்.

      நாம் கற்பனை செய்வது போல “இன வழித் தேச அரசுகள்” இருக்கவில்லை.

  11. எல்லாமே ஏதோ நீங்கள் நேரில் நின்று பார்த்தது போன்று ஒரு விவரிப்பு!! அதுவும், தங்க வெள்ளிகளின் எடை, கிலோவைத் தாண்டி மூன்று டெசிமல் எண்களைக் கொண்டிருக்கிறது!!! நீங்கள் சொல்லியிருப்பதையல்லாம் நான் நம்ப விரும்பவில்லை. அதற்கும் மேலே நம்பகத்தன்மையற்று இருக்கிறது, இக்பால் செல்வனின் கருத்து. நேரமும் விருப்பமும் இருந்தால் நானே படித்து ஆராய்ந்து கொள்கிறேன்.

  12. கொங்கு வெள்ளாளர்கள் சோழர் காலத்துக்குப் பின் கொங்கு நாட்டுக்குச் சென்று குடியேறியவர்கள் அல்ல. சிற்றரசாக இருந்து பின்னர் சேர சோழ பாண்டியப் பேரரசுகளின் கட்டுப்பாட்டில் வந்தவர்கள் எனப் படித்திருக்கிறேன்.

  13. READ THE LINKS BELOW

    பகுதி – 73. தமிழா! ஜடமாகி போனாயா? `ஜாதி’ களை உத்தரவாக்கி, பல கூடாதுகளை பின்பற்றுகிறவன், கடவுள் பெயரைச் சொல்லி உடல் ரீதியாக தன்னைத்தானே வருத்திக் கொள்பவ‌ன் மனிதனே அல்ல ஒன்றுக்கும் உதவாத ஜடம்தான்.. புனித நீராடல், தீர்த்தவாரி என்றும் பெயர் கொடுத்து தண்ணீருக்கே மதச் சாயம் பூசி விட்டார்கள்

    பகுதி – 72. பிராமணர்கள் தமிழகத்திலே வாழக்கூடாதாம்.? பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர வேறு பாஷை எதுவுமே பேசினால் பாவம் . பிராமணர்கள் வாழ வேண்டிய பகுதி ஆப்கானிஸ்தானாக இருக்கிறது. தமிழா, வேதம் உன் தாய்மொழியை கெட்டது , உன் தாயை கெட்டவள் என்கிறது. வேதம் சொன்ன எல்லாவற்றையும் செய்வாயா?

    ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு. பிராமணர்களால் கேவலமான வாழ்க்கை. பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள்

    ……

  14. அட சொல்லவே இல்ல.. வினவு தளத்தில் வரலாற்று கதைகள் வெளியிட போகீறீர்கள் என்று. சஸ்பென்சாக இருக்கிறதே. ஆனா சும்மா சொல்லக்கூடாது. கதை ஆசிரியர் நல்ல கற்பனை திறனுடன் கதையை எடுத்து செல்லும் விதம் படிக்க படிக்க புல்லரிக்க வைக்கிறது. கதை ஆசிரியருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  15. இன்னொன்று சொல்ல மறந்து விட்டேன். கதையாசிரியர் கதையை மிகுந்த நகைச்சுவையோடு எடுத்து சென்ற விதம் மிக அருமை.
    சும்மா சொல்லக்கூடாது, கொடுக்கும் புள்ளிவிவரங்களில் கூட நகைச்சுவை இழையோடு கொடுக்க முடியும் என்பதற்கு ஒரு புதிய இலக்கணமே வகுத்திருக்கிறார். வருங்கால வரலாற்று புதின ஆசிரியர்கள் இதன் மூலம் பெரும் பயன் அடைவார்கள்.

  16. நல்ல கட்டுரை.
    கைலாசபதியினதும் கேசவனதும் விரிவான ஆய்வுகளும் சோழர் காலம் பற்றிய முக்கியமான பக்கங்களைக் காட்டுகின்றன.

  17. //பவுத்தமன்னர் பிருகதத்தரின் ஆட்சியை வீழ்த்த கிளர்ச்சி செய்து, வட இந்தியாவில் பார்ப்பன மீட்சியை உருவாக்கியவன், பார்ப்பனத் தளபதி புஷியமித்திர சுங்கன். அதேபோல தமிழகத்தில் களப்பிரரை வீழ்த்தி, ‘பொது நீக்கி’, பவுத்தத்தையும் சமணத்தையும் ஒழித்து சைவத்தை நிலைநாட்டி, பார்ப்பனியத்துக்குப் புத்துயிர் கொடுத்தவர்கள்தான் பல்லவ, பாண்டியர்கள். இந்தப் பார்ப்பன மீட்சியின் உச்சத்தையே தொட்டவன் ராஜராஜன்//

    நாகைப்பட்டினத்தில் இருந்த புத்த விகாரைக்கு நிலமும் மானியங்களும் (ஆனைமங்கலம்) சோழர்கள் கொடுத்தது எதற்காக?

    கீழே உள்ள சுட்டிகளையும் பார்க்க.

    The Cholas, otherwise hostile to Jainism and Buddhism, granted land for a Buddhist vihara in Nagapattinam, a key coastal town, in 1006. It survived in dilapidated condition till 1867, when Jesuit missionaries levelled it.
    http://www.outlookindia.com/article.aspx?224559

    http://forumhub.com/hub/viewlite.php?t=1910

    http://www.jeyamohan.in/?p=9241

    மொத்தத்தில் அரை வேக்காட்டுத்தனமான “சரித்திர ஆராய்ச்சி” கட்டுரை.

  18. From Jayamaohan’s reply to the question ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?

    http://www.jeyamohan.in/?p=8711

    ராஜராஜசோழனை பொற்காலவேந்தன் என்றும் இன்றுள்ளதை விட மேலான ஆட்சி அவனுடையது என்றும் சொல்லும் புளகாங்கிதங்களும் சரி, எதிரான பார்வைகளும் சரி, அந்த காலகட்டப்பின்னணி இல்லாமல் நோக்கும் வரலாற்றுணர்வற்றவைதான்.நிலஉடைமைக் காலகட்டத்தைச் சேர்ந்த மன்னனை அக்காலகட்டச்சூழலில் வைத்துப் பார்க்கவேண்டும், முதலாளித்துவச் சூழலில் அல்ல என்பதைக்கூட புரிந்துகொள்ளாத மார்க்ஸியர்களை நாம் சாபமாக பெற்றிருக்கிறோம். இந்த முட்டாள்களிடம் விவாதித்து இங்கே அறிவித்துறை மலரவேண்டியிருக்கிறது. துரதிருஷ்டம்தான்.

    • ராம் காமேஷ்வரன்,

      கட்டுரையின் மையமான விசயத்தைப் பற்றி கருத்து கூறாமல் இப்படி லிங்குகளைப் போட்டு சம்பந்தமில்லாதவற்றை இரைத்துத்தான் உங்கள் காழ்ப்புணர்வை காட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது என்றால் உங்களுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்!

      • சும்மா அள்ளி விடுங்க வினவு தோழரே..காசா பணமா..!!
        இதுக்கு எல்லாம் யாரு கேசு போட போறாங்க..!
        உங்களுக்கு இருக்குற கெத்துக்கு இது ரொம்ப கம்மி….
        நிறைய அள்ளி விடுங்க…

    • ஜ‌யமோகனது இக்கட்டுரைகளுக்கு ஏற்கெனவே டிவிட்டரில் பதில் சொல்லியாகி விட்டது எனக் கருதுகிறேன். காலகட்டம் பற்றிய புரிதல் இல்லை என்பதுதான் மையமான விசயம் என்றால் நிலவுடைமை சமூகம் முகிழ்ந்து கொண்டிருந்த காலம் என்ற புரிதல் இருப்பதாகத்தான் கருதுகிறேன். அந்தக் காலத்தின் ஒளியில்தான் ராசராசனை வைத்துப் பரிசீலித்திருக்கிறார்கள். என்ன செய்வது வரலாறு பிடிப்பதை விட தன்னுணர்வுதானே ஜெயமோகனுக்கு பிடிக்கிறது. இப்படிப்பட்ட ஆன்மீக வாத அரைகுறைகளை அறிவாளிகளாக பெற்றதுதான் தமிழ் சமூகத்தின் சாபம் என்றா சொல்ல முடியும்.

  19. கட்டுரையாளர் ஆரியனை வெல்லும் சூழ்ச்சிக்காரர் . தக்க சான்றுகள் எதுவும் இல்லாத தரங்கெட்ட கட்டுரை.
    இவருக்கு ஆமாசாமி போட்டு இங்கு பின்னூட்டம் இட்ட அறிவாளிகளில் பலபேர் குருடர்கள் போல அப்படியே நம்பியதுதான் வேடிக்கை.தக்க சான்றுகள் ஏதும் இல்லாமல் கண்டதையும் உளறிக்கொண்டுள்ளார். களபிரர் காலம் பொற்காலம் என்பதற்கு என்ன ஆதாரம். பறையருக்கு இறையிலி நிலம் வழங்கியவன் எவ்வகையில் சாதியாளன்?. காந்தளூர் சாலையில் நம்பூதிரி ஆரியர்களை வேரறுத்தவன் எவ்வாறு ஆரிய அடிவருடி? களப்பிரர் காலத்தில் ஆரியருக்கு நிலஉரிமை வழங்கப்பட்டது. ஆனால் ராசராசனின் காலத்தில் சுழற்ச்சிமுறையில்தான் தற்காலிகமாக நிலம் வழங்கப்பட்டது. இவை அனைத்தும் கல்வெட்டுச் செய்திகள்.சரி கோவில் பூசாரிக்கு வழங்கப்படும் இறையிலி நிலம் தீண்டாச்சேரி(இவரின் சொல்படி) பறையருக்கு ஏன் வழங்கப்பட்டது?

    • மாமல்லரே
      பூமி சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றுகிறது என்பது எவ்வளவு உண்மையோ அந்த அளவிற்கு பொற்காலமும் உண்மைதான். பறையருக்கு இறையிலி நிலம் வழங்கி கோவில் பணியாளராக்கி வலங்கை இடங்கை பிரச்சினையில் அவர்களை மோத விட்டு வேடிக்கை பார்த்த பார்ப்பன வேளாள சாதியினர் தான் சொல்ல வேண்டும் சாதியாளனா இல்லையா என்று. நான் சொல்வதும் நீங்கள் சொல்ல தவறியதும் புரிகிறதுதானே. களப்பிர்ர் காலத்தில் ஆரியருக்கு நிலம் வழங்கப்பட்டது என அடித்து ஊற்றியுள்ளீர்களே. சான்றுகள் எல்லாம் கேட்கவில்லை. அதற்கான தர்க்கத்தை முன்வைப்பதுதான் நாணயமான செயல் எனக் கருதுகிறேன்.

      • //களப்பிர்ர் காலத்தில் ஆரியருக்கு நிலம் வழங்கப்பட்டது என அடித்து ஊற்றியுள்ளீர்களே. சான்றுகள் எல்லாம் கேட்கவில்லை. அதற்கான தர்க்கத்தை முன்வைப்பதுதான் நாணயமான செயல் எனக் கருதுகிறேன்.//

        திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சியில் உள்ள கி.பி ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டில், கோசேந்தன் எனும் மன்னன் பிரம்மோதய நிலங்களை வழங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளது..

        பிற்கால சோழர்கள் தான் பிரம்மோதய நிலத்தை வழங்கினார்கள் என்று கூறும் கூற்று இது வரை சரியான ஆதரங்கள் கிடைக்கவில்லை, மங்கலங்கள் என அழைக்கப்படும் ஊர்பெயரை மற்றும் எடுத்துக்கொள்ள முடியாது. தஞ்சை பெரிய கோயில் சென்று நந்திமண்டபத்தில் இருக்கும் சிலைகளில் ஒன்றை பாருங்கள், அது புலையர் எனப்படுவர்களின் வடிவமும் வடிக்கப்பட்டிருக்கும். கோயிலுக்குள்ளேயே புலையருக்கு சிலை வைத்தவரை சாதி வெறி பிடித்தவர் என்று கூறுவதை என்ன சொல்லுவது என்று தெரியவில்லை..

        இளந்தமிழர் இயக்கத்தை சார்ந்த செந்தமிழனிடம் சிறிது பேசிப்பாருங்கள் இன்னும் நிறைய ஆதரங்களை கொடுப்பார்..

        • //பிற்கால சோழர்கள் தான் பிரம்மோதய நிலத்தை வழங்கினார்கள் என்று கூறும் கூற்று இது வரை சரியான ஆதரங்கள் கிடைக்கவில்லை//

          கட்டுரையும் பிற்காலச் சோழர்கள்தான் (தான் அழுத்தம் தரப்பட்டுள்ளது) பிரம்மதேயம் தந்தார்கள் எனச் சொல்லவில்லை. கட்டுரையை சரியாக வாசிக்கவும். களப்பிரர் வீழ்த்தப்பட்ட உடனேயே சோழப்பேரரசு உருவாகவில்லை. இடையே பல்லவ, பாண்டிய அரசுகள் இருந்தன. பிரம்மதேயங்களை ஆரம்பித்தது இக்காலகட்டம் என்றும்..இதன் உச்சத்தைத் தொட்டவன் ராஜராஜன் என்றும்தானே கூறப்பட்டுள்ளது!! அண்ணாவை நரசிம்மபல்லவன் என்றால் கருணாநிதியை ராஜராஜன் எனலாம் என்றுதானே சொல்கிறது. கட்டுரை சொல்லாத ஒரு விசயத்தை எடுத்து வைத்துக் கொண்டு அதற்கு பதில் தருகிறேன் எனும் போக்கைத்தான் திரிபுவாதிகள் காலம் காலமாகச் செய்து வருகின்றனர். (இக்கட்டுரைக்கு நேரடி சம்பந்தமில்லா விட்டாலும் 3 ஆண்டுகளுக்கு முன் நடந்த மயிர்பிளக்கும் விவாதம் நினைவுக்கு வருகிறது. எஸ்.வி.ராஜதுரையும் மணியரசனும் அற்பவாதம் பற்றி மொக்கைபோட்டு அதையே புத்தகமாக்கி நம் தலையில் கட்டினார்களே..அதிலும் இதே பாணிதான்..எதிர்தரப்பு சொல்லாத ஒன்றை வைத்துக் கொண்டு மாரடிப்பது…)

        • //தஞ்சை பெரிய கோயில் சென்று நந்திமண்டபத்தில் இருக்கும் சிலைகளில் ஒன்றை பாருங்கள், அது புலையர் எனப்படுவர்களின் வடிவமும் வடிக்கப்பட்டிருக்கும். கோயிலுக்குள்ளேயே புலையருக்கு சிலை வைத்தவரை சாதி வெறி பிடித்தவர் என்று கூறுவதை என்ன சொல்லுவது என்று தெரியவில்லை..//

          பறைச்சாதி நந்தனைக் கூட நாயன்மார்களில் ஒருவராகச் சேர்த்திருக்கும் சைவத்தை சாதி வெறி பிடித்த மதம் என்று சொல்ல முடியாதுதான்.

          கட்டுரையில் ராஜராஜன் சாதிவெறி பிடித்தவர் என்று சொல்லப்பட்டிருக்கிறதா? திரிபுவாதம்..மறுபடியும்.. ராஜராஜனின் பொற்கால ஆட்சியைப் பற்றிப் புளகாங்கிதம் அடைபவர்கள் — அதாவது தமிழ் தேசிய கம்பெனி — ராஜராஜன் காலத்தில் சேரிகளும் ஊர்களுமாகப் பிளவுபட்டிருந்ததைப் பேசுவதில்லை என்றுதான் கட்டுரை சொல்கிறது. தமிழ் தேசிய கம்பெனி மீது வைக்கப்பட்டிருக்கும் இந்த விமர்சனத்தை – தோசையைத் திருப்பிப் போட்டு — ‘புலையருக்கு சிலை வைத்தவரை சாதி வெறி பிடித்தவர் என்று கூறுவதாக’ — திரித்து விட்டால் போதும், தமிழ்த்தேசியம் நாலுகால்ப்பாய்ச்சலில் முன்னேறும் என்றெல்லாம் நம்பாதேயிருமய்யா..

        • //புலையருக்கு சிலை வைத்தவரை சாதி வெறி பிடித்தவர் என்று கூறுவதை என்ன சொல்லுவது என்று தெரியவில்லை..//

          சிதம்பரம் கோயிலில் கூட நந்தனுக்கு சிலை உள்ளது. எனவே, அங்கு சாதியில்லை என்று சொல்லிவிடலாமா என்ன?

        • தமிழ்த் தேசியத்தின் பக்கம் நிற்கும் இன்குலாப், 30 ஆண்டுகளுக்கு முன்னர், ராஜராஜ சோழன் சிலையை கோவிலின் முகப்பில் கருணாநிதி திறந்து வைத்தபோது அவர் பின்வரும் ஒரு கவிதையை எழுதினார்.

          ராஜராஜன் சிலைக்காக வருந்துகிறார்.
          ராஜராஜன் சிலையின் உள்ளே
          நரம்புகள் உண்டா? நாளங்கள் உண்டா?
          சிலையாகும் முன்னர் ஜிவித்திருந்த இம்மன்னன்
          எதை செய்து கிழித்து விட்டானாம்?
          ஈழம் கொண்டானாம்…
          சாவகம் வென்றானம்…

          காலனி ஆதிக்க தொழுநோயின் தேமலை
          பூமியின் முகத்தில் எழுதிய புல்லனுக்கு
          மக்களாட்சியா மகத்துவம் சேர்க்கும்?
          கலைகளை எல்லாம் கட்டி வளர்த்தானாம்.

          பிரகதீஸ்வரர் ஆலயத்துக்காக
          குடும்ப விளக்கின் கொழுந்துகளை எல்லாம்
          மண்ணில் தேய்த்த மா பாதகன் இவன்…

          என்று காட்டமாக எழுதினார் இன்குலாப்.

    • //காந்தளூர் சாலையில் நம்பூதிரி ஆரியர்களை வேரறுத்தவன் எவ்வாறு ஆரிய அடிவருடி? களப்பிரர் காலத்தில் ஆரியருக்கு நிலஉரிமை வழங்கப்பட்டது. ஆனால் ராசராசனின் காலத்தில் சுழற்ச்சிமுறையில்தான் தற்காலிகமாக நிலம் வழங்கப்பட்டது. இவை அனைத்தும் கல்வெட்டுச் செய்திகள்.சரி கோவில் பூசாரிக்கு வழங்கப்படும் இறையிலி நிலம் தீண்டாச்சேரி(இவரின் சொல்படி) பறையருக்கு ஏன் வழங்கப்பட்டது?//

      மேற்படி பதிவில் திரிக்கப்பட்டிருக்கும் செய்திகள் பின்வருமாறு:

      திரிபு 1: “காந்தளூர் சாலையில் நம்பூதிரி ஆரியர்களை வேரறுத்தவன்”
      மெய்கீர்த்தி சொல்லியது “காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளி”… நம்ம தமிழ்த்தேசிய அய்யா சேர்த்த சொந்த சரக்கு ‘நம்பூதிரி ஆரியர்களை வேரறுத்தவன்’. நம்பூதிரிகள் எங்கே மெய்கீர்த்தியில் வந்து உக்காந்தாங்க? 🙂

      திரிபு 2: “ராசராசனின் காலத்தில் சுழற்ச்சிமுறையில்தான் தற்காலிகமாக நிலம் வழங்கப்பட்டது” – நிலம் எவருக்கும் உரிமை ஆக்கப்பட்டத்தில்லை. அது கோவிலுக்குதான் சொந்தமானது. அதில் அனுபோக உரிமை மட்டுமே வரி நீக்கி பார்ப்பனருக்கு சலுகையாக வழங்கப்பட்டது. ஏனைய சாதியினருக்கோ அது ஆறில் ஒரு பங்கு வரியாக நிர்ணயித்து அனுபோக உரிமை தரப்பட்டது.

      பறையருக்கு வரியிலி என்பது சோழப் பேரரசில் இருந்த அனைத்துப் பறையருக்கும், பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டதைப் போன்றே வழங்கப்பட்டதா?

  20. இக்கட்டுரையை வினவு வெளியிட்டதின் நோக்கம் என்ன? இக்கட்டுரையில் எனக்கும் முழு உடன்பாடு இல்லை.

  21. //கீதையா, பவுத்தமா? அசோகனா, சுங்கவம்சமா? களப்பிரரா, ராஜராஜனா? நாம் எந்தப் பக்கம் என்பதுதான் கேள்வி.//
    மதம் மக்களை மயக்கும் அபின் என்ற மார்க்ஸிய கொள்கை உடையவர்களுக்கு கிதையானால் என்ன பௌத்தமானால் என்ன? இரண்டும் ஒன்றாகத்தானே பார்க்க வேண்டும்?
    பௌத்தம் ஏன் அழிந்தது என்பதற்கான காரணத்தை D.D. Kosambi கீழ் வரும் வரிகளில் தந்திருக்கிறார்.
    In a word, Buddhism had become uneconomic. The innumerable monasteries and their pampered inmates were a counterpart of the costly military establishment. Buddhism had, from the very beginning, favored the growth of a universal monarchy, which would stop petty warfare. The Buddha is chakkravartin, spiritual counterpart of the emperor.

    • //மதம் மக்களை மயக்கும் அபின் என்ற மார்க்ஸிய கொள்கை உடையவர்களுக்கு கிதையானால் என்ன பௌத்தமானால் என்ன? இரண்டும் ஒன்றாகத்தானே பார்க்க வேண்டும்?//
      அட்ரா சக்கை..அட்ரா சக்கை.. அட்ரா சக்கை..
      ஹய்தர் அலி காலத்துக் கேள்வியைக் கேட்டுப்புட்டு!!!… ம்ம்ம்.. என்னத்த சொல்ல!!

  22. ஈசான சிவ பண்டிதருக்கு மிகவும் அருமையான விளக்கங்களை கொடுத்துள்ளீர்கள்.. சோழ மன்னர்களுக்கு என்றும் எந்த பார்ப்பனரும் முடிசூட்டியதாக வரலாறு உள்ளதா.. அது முற்காலம் ஆனாலும் சரி பிற்காலம் ஆனாலும் சரி விவரிக்க முடியுமா இதை பற்றி..

    வரலாறு என்பதை ஆராயும் ஓவ்வொருவரும் தான் சார்ந்த இனம், மதம் போன்ற கூற்றுகளுடன் சேர்த்து ஆராய்ந்து அவர்கள் கடைபிடித்த தர்மத்திற்கு இழுக்கில்லாமல் கூற வேண்டுமென்று கட்டிய கட்டுகதைகள் தான் நிறைய இருக்கின்றன. அவைகளை கொண்டு இது தான் என்று முடிவெடுப்பது சரியான முடிவாக இருக்காது..

    தேவரடியாருக்கும் தேவதாசிக்கும் நிறையவித்தியாசங்கள் உள்ளது, செட்டிக்கும் ஸெட்டிக்கும் இருப்பது போல், கவுடாவுக்கும் கவுண்டருக்கும் இருப்பது போல்.

    29 ஆண்டுகாலம் ஆண்ட மன்னன் ஒரு சமுதாயத்தையே திருப்பிவிட்டான் என்று கூறுவது சரியான கூற்றா என்பதை சிறிது சிந்தியுங்கள் கட்டுரை ஆசிரியரே..

    இராஜராஜன் கடவுளை வணங்கினான் கோயில் கட்டினான் என்பதற்காக ஒட்டுமொத்தமாக ஆதிக்க வெறியர் என்பது சிறு பிள்ளை தனமாக இருக்கிறது..

    • வணிகர் முடி எடுத்துக் கொடுக்க சோழன் குடியான வேளாண் குடியினர் முடி சூடுவார்கள் இதுதான் சோழர் மரபு…

      • வினவின் இந்த கட்டுரைக்கு எதிர் வினையான கட்டுரையை இன்று மாலைக்குள் பதிகிறேன்.. அது வரை கட்டுரை ஆசிரியர் களப்பிரர் காலத்தில் எழுதப்பட்ட ஆசார கோவையை எடுத்து படியுங்கள்,, பின்னங்கால் பிடரியில் அடித்தால் நாங்கள் பொறுப்பு அல்ல..

        • ஆசாரக்கோவை பற்றிய காலக்கணிப்பு ஆதாரம் வைத்துள்ளீர்களா அய்யா.

        • உங்கள் பொறுமையான விளக்கத்துக்கு நன்றி.
          “தேவரடியார்கள் என்பவர்கள் தானமாக வழங்கப்படும் பொழுதே …” என்றீர்கள்.
          ஒருவரைத் தானமாக வழுங்க அவர் அடிமையாய் இருந்தால் மட்டுமே இயலுமல்லவா?
          தேவரடியார்கட்குத் திருமணம் செய்யும் உரிமை இருந்ததா?
          அக் காலத்தில் நிலத்தை வாங்கி விற்கும் முறையும் இருந்ததா?
          தேவரடியாரின் நிலங்களை அவர்கள் யாரிடம் விற்றிருப்பார்கள்? அவ்வாறு விற்றதற்குச் சான்றுகள் உள்ளனவா?

          “எந்த கல்வெட்டிலும் அவர்கள் உடலுறவிற்கு உட்பட்டதாக இல்லை.. பிறகாலத்தில் இது நடைமுறைக்கு வந்தது” என்றீர்கள்.
          அது பற்றிய கல்வெட்டுக்கள் உள்ளனவா?
          தேவதாசிகள் உடலுறவிற்கு உட்பட்டதற்கும் கல்வெட்டுக்கள் இருந்தனவா?

          கம்ப ராமாயணம் எழுதப்பட்ட காலத்திற் செல்வந்தப் பரத்தையர் இருந்ததாகத் தெரிகிறது. தேவரடியார் பரத்தமைக்குட் தள்ளப்பட்டிருக்கலாமா?

        • சரி ஏன் இவ்வளவு பிரச்சினை, தமிழக்கு, தமிழ் செழுமைக்கும் சோழன் என்ன செய்தான் என்று சொல்லுங்கள் தமிழ் தேசிய்வாதிகளே? களப்பிரர் காலத்தில் புதிய பா உள் வகைகள் உருவாக்கப்பட்டன. பல நூல்கள் வெளிவந்தன. நாளந்தா பல்கலைகழகத்தில் தமிழர் தலைவரானார். சோழன் காலத்தில்?

        • //கம்ப ராமாயணம் எழுதப்பட்ட காலத்திற் செல்வந்தப் பரத்தையர் இருந்ததாகத் தெரிகிறது. தேவரடியார் பரத்தமைக்குட் தள்ளப்பட்டிருக்கலாமா?//

          அட கம்பராமாயணத்துக்கு ஏன் போறீங்க? நம்ம் கருணாநிதிச் சோழன் காலத்துல பரத்தமை – தொழிலீட்டும், பணம் புரளும், அதிகாரம் பலம் புரளும் ஒன்றாக உள்ளதே? எனவே அதனை ஒரு அளவு கோலாகக் கொண்டு கருணாநிதிச் சோழன் காலத்தில் பெண்ணடிமைத்தனத்தை மதிப்பிடலாமா?

    • தேவரடியார் முறை தேவதாசி முறையிலிருந்து அடிப்படையில் வேறுபட்டது என்கிறீர்களா?
      எவ்வாறு என விளக்க இயலுமா?

      இந்தியத் துணைக்கண்டத்தில் பேரரசுகளை நிறுவிய நிலவுடமைக்கால அக்பர், அசோகன் என்போருடன் ஒப்பிடுகையில் ராஜராஜன் மோசமானவனாகவே தெரிகிறான்.
      அக்பரும் அசோகனும் கொடுமைகள் செய்தோரே.
      ஆனால் ராஜராஜனுடைய கொடுமைகள் நாடுபிடிப்புப் போருக்கும் அப்பாற் செல்கின்றன.
      ராஜராஜனை ஜெங்கிஸகானுடன் ஒப்பிட்டு நல்வன் எனலாமா? (அது கூட நிச்சயமற்றது).

      தமிழன் என்பதால் ராஜராஜனின் கொடிய பக்கத்தைக் காணுவது பலருக்கும் கடினமாக இருக்கலாம்.
      ராஜராஜன் பற்றிக் கட்டியெழுப்பப்பட்ட படிமங்களே இன்று எழும் கடும் விமர்சனங்கட்குக் காலானவை போலத் தெரிகிறது.

      ராஜராஜனின் ஆட்சியிலேயே பார்ப்பன ஆதிக்கமும் பார்ப்பனிய-சாதியமும் பேரெழுச்சி கண்டன என்பதை மறுக்கிறீர்களா?

      தனது மேன்மையை உணர்த்தித் தன்னையும் இறைவனாகக் காட்டுகிற நோககில் கட்டிய பெரிய கோவிலின் பின்னால் சூறையாடப்பட்ட பொருளும் உழைப்பும் மட்டுமன்றி வீணான அழிவுகளும் பற்றி நாம் பேசாதிருக்கலாமா?

      நாம் எல்லாருமே வெவ்வேறு அளவுகட்கு நமது காலத்து ஆதிக்கச் சிந்தனையாற் கட்டுண்டுள்ளோம்.
      எனவே கடந்த காலத்தைப் பார்க்கும் போது நமது சம காலஞ் சார்ந்த விழுமியங்களின் தாக்கம் தவிர்க்க இயலாதது.

      தமிழர் பொற்காலம் பற்றிய உரைகள் சமகாலச் சனநாயகத்துடன் ராஜராஜனின் குடவோலை முறையை ஒப்பிடுவதைக் காணுகிறோம்.
      அது போன்ற உயர்வு நவிற்சிகள் விடாது தொடருகிற நிலையில் மறுப்புக்களும் அதே தளத்திற் தொடருவது இயல்பானது.

      • தேவதாசி என்ற சொல் கருநாடகத்தில் உள்ள ஒரு கல்வெட்டில் முதன்முதலாக இருந்தது. அது 1113ம் ஆண்டைசார்ந்த கல்வெட்டு. தேவரடியார்கள் என்பவர்கள் தானமாக வழங்கப்படும் பொழுதே அவர்களுக்கு குடியிருக்க மனையும் நிலமும் வழங்கப்பட்டதாக தமிழகத்தில் பல கல்வெட்டுகள் உள்ளன. அவர்கள் வழங்கப்பட்ட சொத்துகளை விற்கவும் உரிமையுள்ள முழு பாத்திரதாரர்களாக உள்ளனர். இவ்வாறு மனையும் நிலமும் கொடுத்தவர்கள் உயிரையும் உடலையும் வாங்கியதாக சொல்லும் கூற்றின் படி எடுத்தால் எதற்காக மனை நிலம் கொடுக்கவேண்டும்??

        எந்த கல்வெட்டிலும் அவர்கள் உடலுறவிற்கு உட்பட்டதாக இல்லை. ஆனால் பிறகாலத்தில் இது நடைமுறைக்கு வந்தது, இன்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் உள்ளது. இப்போதைய முறையில் உடலுறவு என்பதும் உள்ளது. சோழர்களின் ஆட்சிகாலத்தில் இவ்வாறாக இருந்ததற்கான சாட்சியங்கள் இல்லை. தேவரடியாரையும் தேவதாசியையும் ஒன்றாக கருத முடியாது. தேவதாசிக்கு மனை நிலம் கிடையாது. தாசி ஒரு அடிமை மட்டுமே..

  23. //வைதீகத்தை வீறுகொண்டு எதிர்த்து, ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று பிரகடனம் செய்த திருக்குறளும் களப்பிரர் காலத்தில்தான் இயற்றப்பட்டது//

    கீழ் காணும் குறள்களுக்கு கொஞ்சம் கோனார் நோட்ஸை பார்த்து பொழிப்புரை தந்தீங்கன்னா நல்லா இருக்கும்.

    134. மறப்பினும் ஓத்துக் கொளலாகும்; பார்ப்பான்
    பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.

    259. அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
    உயிர்செகுத்து உண்ணாமை நன்று.

    543. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
    நின்றது மன்னவன் கோல்.

    560. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
    காவலன் காவான் எனின்.

  24. வினவின் கட்டுரை ஆசிரியருக்கு.. உங்கள் கட்டுரைக்கான விரிவான பதிலை என்னுடைய வளைதளத்தில் பதிவிட்டிருக்கிறேன்..

    http://kumarikantam.blogspot.com/2011/01/blog-post_08.html

    மேலும் சில புத்தகங்கள் தேவைப்படுகின்றன அவற்றை படித்துவிட்டு தேவையான ஆதாரங்களுடன் பதிவிடுகிறேன்..

    • ஹரிஹரனது அந்த எதிர்வினை மிக மேலோட்டமாக இருக்கிறது. ஒரு உதாரணம் குடவோலை முறை குறித்த அவரது ஆதரவான கருத்து. குடவோலை முறை மனுநிதி அடிப்படையிலானது என்று வினவு கட்டுரை சொல்கிறது, அந்த விசயத்துக்குள்ளேயே போகாமல் அது மக்களுக்கானது என்று சொல்கிறார் ஹரிஹரன். இது தவிர்த்து அவரது வாதங்களனைத்தும் ஆசாரகோவை என்ற நூலை மட்டுமே நம்பி நிற்கின்றன.

      தேவரடியார்கள், தேவதாசிகள் உடலுறவில் ஈடுபடுத்தியதற்கு ஆதாரமில்லை என்கிறார், மேலும் தேவரடியார்கள், தேவதாசிகள் செல்வாக்குடன் திகழ்ந்தனர் என்கிறார் ஹரிஹரன். இவற்றில் மறுத்து வினவு கட்டுரையில் எதுவுமில்லையே? விசயம் என்னவென்றால் தேவதாசிகள் ஏன் உருவாக்கப்பட்டார்கள்? அவர்களது சமூக உரிமைகள் என்ன? அதில் சோழனின் பங்கு என்ன? அது ஒரு பார்ப்பனிய ஆணாதிக்க செயல்லலாவா? இவைதானே பதில் சொல்ல வேண்டிய கேள்விகள்? அதற்கு அவரிடம் எந்த பதிலும் இல்லை.

      பெருங்கோயிலை கட்ட ஊர் ஊராய் சென்று சோழன் கொள்ளையடித்ததை பற்றி ஹரிஹரன் எதுவும் சொல்லக் காணும். பொதுவாக தமிழகத்தில் அதற்கு முன்பும் கோயில் இருந்தது என்று முடித்துக் கொள்கிறார். வினவு கட்டுரை அதையா பேசுகிறது?

      கோயில்கள் அரசு நிர்வாகத்தின் ஒரு வடிவம், ஆதார உறுப்பு என்பதை பல ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர். இந்த வினவு கட்டுரையிலும் கோயில் என்பது வரி வசூல், வங்கி, வட்டிக் கடை, தானியக் கிடங்கு, ஒடுக்குமுறை போலீசாக இருந்துள்ளதை பேசுகிறது. இவை குறித்து ஹரிஹரனிடமிருந்து பதில் இல்லை.

      அவருக்கு பிரச்சினையென்னவென்றால் கிடப்பது கிடக்கட்டும் கிழவியை தூக்கி தின்னையில் போடு என்பது போல சாதி, பார்ப்பனியம், பகுத்தறிவு என்பதெல்லம் ஒரு பக்கம் இருக்கட்டும் தமிழன், தமிழ் தேசியம் முக்கியம் என்பதே ஆகும்.

      இதில் சாதி அழிந்து கொண்டிருக்கிறது என்ற படு காமெடியான கருத்தைச் சொன்னதன் மூலம் இவரது அன்பு ‘தமிழ’னின் சமூக பொருளாதாரத்தின் தரம் குறித்த அவரது ‘ஆழ்ந்த’ அறிவை விளம்பரப்படுத்தியுள்ளார். சாதி அழிந்து கொண்டிருக்கிறது எனில் பார்ப்பனியமும் அழிந்து கொண்டிருக்கிறது என்பதே அவ்ர கூறும் உப பொருளாக புரிந்து கொள்ள இயலும்.

      • களப்பிரர் காலத்தில் பார்ப்பன மதங்கள் இருந்தன என்பதும் அவை சார்ந்த போக்குகள் இருந்தன என்பதையும் வினவு கட்டுரை மறுக்கவில்லையே? அவற்றை எடுத்துக் கூறுவதன் மூலம் ஹரிஹரன் நிறுவ விரும்புவது என்ன? மாறாக சோழனது காலத்தில் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகளை மறுத்தும், பெரும்பான்மை விவசாய மக்களை சுரண்டிக் கொழுத்த மையப்படுத்தப்பட்ட அரசு சுரண்டலை மறுத்தும் அவர் வாதிட்டிருக்க வேண்டும். மேலும், சோழனது காலத்தில் களப்பிரர் காலத்தைவிட தமிழும், உழைக்கும் தமிழரும் தழைத் தோங்கி இருந்தனர் என்று நிரூபித்திருக்க வேண்டும்.

        அய்யகோ என்ன கொடுமை அந்த வாதங்களுக்குள் போக ஆதாரங்கள் இல்லையே? நாம் விரும்பினாலும் சூரியன் கிழக்கேதானே உதிக்கிறது என்ன செய்ய?

        இவர் சாதி, மனு நிதி, வர்ண கருத்துக்கள் ஆசாரக் கோவையில் இருப்பது ஒன்றே களப்பிரர் காலம் பார்ப்பன ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலம் என்ற முடிவுக்கு ஆதாரமாகத் தருகிறார். இதற்கும் வெகு காலம் முன்பே தமிழின் பண்டைய நூலான தொல்காப்பியத்திலேயே வேத மத தத்துவத்தின் வர்ணாஸ்ரம் தாக்கங்கள் இருக்கின்றன. இது குறித்து பதிவுலகிலேயே மிக விரிவான வாதங்கள் நிகழ்ந்துள்ளன. எனவே இதை வைத்தே மொட்டைக் கட்டையாக தமிழரிடம் சாதி குறித்து ஒரு முடிவுக்கு வந்துவிட முடியுமா?

        ஹரிஹரன் தனது தமிழ் தேசிய அரசியல் அபிலாஷைகளுக்கு வசதியாக வரலாற்றை இப்படித்தான் வெட்டி ஒட்டி பொருத்திப் பார்க்கிறார்.

        • சமூகவியல் என்பது ஒரு விரிவான ஆய்வுப் பொருள், சரியானதொரு அறிவியல் கண்ணோட்டத்துடன்/ஆய்வு முறையுடன் ஆய்வு செய்வது மிக அவசியமாகும். நிரூபிக்கப்பட்ட சமூகவியல் ஆய்வு முறைகள் பல உள்ளன. துரதிருஷ்டவசமாக தமிழில் அத்தகைய ஆய்வு முறைகள் வெகு சொற்பமே. எனவே ஹரிஹரன் பல மொழிகளிலும், நாடுகளிலும் செய்யப்பட்டுள்ள பிரபலமான ஆய்வுகளை படித்து தனது கண்ணோட்டத்தை/ஆய்வு முறையை வளர்த்துக் கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

          குறிப்பாக, இந்தக் கட்டுரை கள்ப்பிரர், சோழன் காலகட்டத்தில் தமிழகத்தின் சமூகப் பொருளாதார பின்புலம் குறித்துப் பேசுகிறது. அந்தக் காலகட்டம் மிக முக்கியமான சமூகப் பொருளாதார மாற்றங்களை உள்ளடக்கிய காலமாகும். அந்த விவாதத்துக்குள் ஹரிஹரன் செல்லவேயில்லை என்ற அடிப்படையிலிருந்துதான் இந்த வேண்டுகோளை வைக்கிறேன்.

    • //திருவுளச்சீட்டு ஜனநாயகத்தில் வேட்பாளராக நிற்பதற்கு வேதம் கற்றிருக்க வேண்டும், நில உடைமையாளராக இருக்க வேண்டும் என்ற இரு தகுதிகள் வைக்கப்பட்டிருந்தன.//

      அதாகப்பட்டது, குடவோலை முறை எனும் ஒப்பற்ற ஜனநாயகத்தில் ஒருவன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமானால் அவன் வேதம் கற்றிருக்க வேண்டும். வேதமோ சூத்திர பஞ்சமர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. பார்ப்பனர்களில் ஒருவரைத் தேர்வு செய்து அதனை ஊர்ச்சபை மேய்க்க வைக்க அமைக்கப்பட்ட ஜனநாயகம் (90 சதவீதம் பேரை ஒதுக்கி விட்ட) ஜனநாயகம்தான் குடவோலை முறை. அதுவும் பெரும்பான்மை அடிப்படையில் தேர்வல்ல. கிளி சோசியத்தில் கிளி சீட்டு எடுப்பது மாதிரி எழுதிப் போட்டிருக்கும் ஓலையில் ஒன்றை எடுப்பது.. இதனை பார்ப்பான் தேர்வாகும் கிளி சோசிய முறை என்றே குறிப்பிடலாம்.

      சென்னைக்கு மேயர் யார் என்பதைத் தேர்வு செய்ய குடவோலை முறை இருந்திருந்தால் (கற்பனைதான்): ஒரு டப்பாவில் சீட்டுகள் போடப்பட்டிருந்தன. அவற்றில் தினமணி வைத்தியநாதன், கிழக்கு பதிப்பகம் பத்ரி, சிம்சன் அய்யர், டிவிஎஸ் அய்யங்கார், சோ ராமசாமி, எஸ் வி சேகர், டில்லி கணேஷ், ஜெயலலிதா, ஒய்.ஜி.மகேந்திரன், பராசரண் பேர் எல்லாம் எழுதிப் போட்டிருந்தாங்க.. மயிலாப்பூர் சமஸ்கிருதக் கல்லூரியில் முதல் மார்க் வாங்கின அம்பி கையால் எடுக்கப்பட்ட சீட்டில் எஸ் வி சேகர் தேர்வானார். அவர்தான் வணக்கத்துக்குரிய மேயர் ஆனார்.. நல்லாருக்குலா சோழர் பாணி ஜனநாயகம்?

      • No Mr. Alexander, Brahmins have stopped learning Vedas ever since the British came to India. They learnt English, occupied high positions in British Government and became Doctors, Engineers, Judges and the like. Now they have learnt computers and fly to America, leaving both the Vedas and the country in peril.

  25. ஆமாண்டா ஒங்க வூட்டு சாக்கட ஓடலைன்னாலும் அது பார்பன சதி.போடாங்கோ.ரெட்ட கோவல முறைய பாப்பான் செய்யல./தின்னியதுல தலித் வாயில மல கரைச்சு ஊதுனது பாப்பன் இல்ல.சும்மா கொலசிகினு இருங்க.திராவிட மசுரு எல்லாம் எப்பையோ போச்சிடா.,

  26. புறநானூற்று பாடல்கள் 287, 299, 301, 345 ஆகியவை மன்னர்களை இழிவாக பார்க்கும் பழங்குடியின பார்வையில் இருந்து வருகிறது. வேள்விக்குடி செப்பேடுதான் பொதுநீக்கிகள் களப்பிர்ர்கள் என்பதற்கு நல்ல சான்று. எட்டாம் நூற்றாண்டின் பிற்பாதியில் நேரியன்கோன் நெடுஞ்சடையான் கூடல் நகரில் பவனி வருகிறான். அப்போது இறையிலி நிலத்தை மீட்டுத் தருமாறு கேட்கிறான் ஒரு அந்தணன். வேள்விக்குடியை பார்ப்பனர்களுக்கு மன்ன்ன் அளித்த கதைதானே செப்பேடு.

    தாங்களே எழுதவைத்த மெய்க்கீர்த்திகளில் மனுநீதி காப்பவர்கள் என்பதுதானே ராராவின் வாரிசுகளது கூற்று. மறையவர் வேள்வி குன்றி மறைநெறி அனைத்தும் மாறி எனத்துவங்கும் கலிங்கத்துப்பரணியின் தாழிசை 258 எதனைப் பாடுகிறது ? திருமூலரை மறைமலை அடிகள் தமிழில் ஆகம்ம் எழுதியவர் என்று சொன்னாலும் பெரிய புராணம் எழுதிய சேக்கிழார் அவரை வடநாட்டுப் பார்ப்பனர் என்றுதான் குறிப்பிடுகிறார். ராசேந்திர சோழனது குரு பீகாரின் சர்வசிவ பண்டிதர் என்ற பார்ப்பனருக்கும், அவரது சீடர்களுக்கும் மன்ன்ன் ஆயிரக்கணக்கான மூட்டை நெல், தங்கம் வழங்கியதை ஜெயங்கொண்ட சோழபுரம் கோவில் கல்வெட்டில் இருக்கிறது. ராரா வின் படைத்தளபதி கூட பிரமாதிராயர் என்ற பார்ப்பனர்தான்.

  27. //ராஜராஜனது பொற்காலத்தை விதந்தோதும் சதாசிவ பண்டாரத்தாரில் இருந்து கருணாநிதி வரை தமிழக வரலாற்றில் இருண்டகாலமாக ‘களப்பிரர்’ காலமிருந்ததெனக் குறிப்பிடத் தவறுவதே இல்லை.//

    களபிரருக்கு கருப்புச் சட்டை மாட்டி, தாடி வைத்து, பெரியாராக்க முயற்சித்ததும், சிவப்பு சட்டை மாட்டி, தாடி வைத்து மார்க்ஸாக முயற்சித்ததும் கடைசியில் சாயம் வெளுத்து கிழிந்து தொங்குவது கண்டு, வினவு கட்டுரையாளருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    அரச மரத்தடி பிள்ளையார் கோவிலில் இருக்கும் டியூப் லைட்டில் :உபயம் – குப்புசாமி என்று எழுதியிருக்கும். அதை வைத்துதான் ஆயிரம் வருஷத்துக்குப் பின் சரித்திர புத்தகம் எழுதினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்குது உங்க “சரித்திரம்”.

  28. ரெட்ட கொவளை தலித் வாய்ல மல கரைச்சி ஊத்துவது குடிசைக்கு தீ வைப்பதீலாம் பார்ப்பனன் செய்ததில்லை.ஆனால் உம்மை போன்றவர்களுக்கு இலக்கு பார்பன எதிர்ப்பு.இப்படிதான் ஊற ஏமாத்தி ஆட்சிய புடிச்சான் அண்ணா.கருணாநிதிக்கு வைத்தியம் பார்ப்பது பார்ப்பன டாக்டர்தான்.போங்கய்யா ஒங்க போலி நாதிகமேல்லாம் இன்று எடுபடாது.

  29. //mani
    ஆசாரக்கோவை பற்றிய காலக்கணிப்பு ஆதாரம் வைத்துள்ளீர்களா அய்யா.//

    பதிணென் கீழ்கணக்கு நூல்களின் காலமே ஆசார கோவையின் காலம்.. அந்த கீழ்கணக்கு நூல்களின் காலம் தான் களப்பிரர் காலம்..

  30. Garammasala
    //உங்கள் பொறுமையான விளக்கத்துக்கு நன்றி.
    “தேவரடியார்கள் என்பவர்கள் தானமாக வழங்கப்படும் பொழுதே …” என்றீர்கள்.
    ஒருவரைத் தானமாக வழுங்க அவர் அடிமையாய் இருந்தால் மட்டுமே இயலுமல்லவா?//
    தானம் என்பது ஒருவர் மற்றவரை கொடுப்பது மட்டுமல்ல தன்னை தானே ஒருவர் தானமாக வழங்கலாம்..

    //தேவரடியார்கட்குத் திருமணம் செய்யும் உரிமை இருந்ததா?//
    திருமணம் ஆன பெண்கள், தங்களின் பிள்ளைகளுடன் கூட தேவரடியாரனதாக கல்வெட்டுகள் உள்ளன. புதுக்கோட்டைக்கு அருகில் கிடைத்த கல்வெட்டில் தனது மகன் மற்றும் மகளுடன் தேவரடியளாராக மாறியதாக கூறுகிறது.

    //அக் காலத்தில் நிலத்தை வாங்கி விற்கும் முறையும் இருந்ததா?
    தேவரடியாரின் நிலங்களை அவர்கள் யாரிடம் விற்றிருப்பார்கள்? அவ்வாறு விற்றதற்குச் சான்றுகள் உள்ளனவா? //
    உலகளந்தான் என்ற பட்டமும் இராஜராஜனுக்கு உண்டு நிலத்தை அளக்கும் முறையை முதன்முதலில் தொடங்கியது இராஜராஜன் காலத்தில் தான். மேலும் ஒரு பழைய ஆய்வில் கி.பி950 க்கு பிறகு நடந்த நிலம் விற்பதில் வாங்குவதில் ஈடுபட்ட பத்திரங்கள் மூலமாக தெரியவருவது 49% நிலம் விற்பது பெண்கள் பெயரிலேயே நடந்துள்ளதாக அறிக்கை சொல்லுகிறது.

    //“எந்த கல்வெட்டிலும் அவர்கள் உடலுறவிற்கு உட்பட்டதாக இல்லை.. பிறகாலத்தில் இது நடைமுறைக்கு வந்தது” என்றீர்கள்.
    அது பற்றிய கல்வெட்டுக்கள் உள்ளனவா?
    தேவதாசிகள் உடலுறவிற்கு உட்பட்டதற்கும் கல்வெட்டுக்கள் இருந்தனவா?
    கம்ப ராமாயணம் எழுதப்பட்ட காலத்திற் செல்வந்தப் பரத்தையர் இருந்ததாகத் தெரிகிறது. தேவரடியார் பரத்தமைக்குட் தள்ளப்பட்டிருக்கலாமா?//

    தேவதாசிகள் உடலுறவிற்கு உட்படுத்தியதாக எந்தவிதமான கல்வெட்டுகள் இல்லை. ஆனால் பெண்களை வாங்கி தாசியாக தானம் செய்ததற்கான கல்வெட்டுகள் உள்ளன. அதுவும் கோயில் மரியாதை கிடைக்கவேண்டும் என்றால், எந்த குடும்பத்தினர் கோயில் மரியாதை பெறவிரும்புகிறார்களோ அவர்கள் வீட்டு பெண்ணை தாசியாக்க வேண்டும் என்று கட்டாயமாக இருந்தது. இதை பெறவிரும்பிய பணம் படைத்தவர்கள் பெண்களை வாங்கி தானம் செய்ததாக கல்வெட்டுகள் உள்ளன.

    இதைபோன்ற தானம் செய்த தேவதாசி என்று கூறும் கல்வெட்டுகள் 50க்கும் மேல் இருக்கின்றன. இவை அனைத்தும் இராஜராஜனின் காலத்திற்கு பின்பு தான். இராஜேந்திர சோழனின் காலத்தில் கூட சில கல்வெட்டுகள் உள்ளன.

  31. //தமிழ்த்தேசியம் நாலுகால்ப்பாய்ச்சலில் முன்னேறும் என்றெல்லாம் நம்பாதேயிருமய்யா..//

    அய்யா அலெக்ஸாண்டர் அவர்களே தமிழ் தேசியம் பேசும் பொழுது தமிழனுடைய பெருமையை உணரவைக்கவேண்டும். ஆனால் தமிழ் மன்னன் கருங்காலி என்று சொன்னால் தமிழன் என்ற உணர்வே இல்லாமல் போய்விடும். ஏற்கனெவே இங்கு தமிழ்நாட்டில் தமிழன் என்ற உணர்வில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

    பெரியாரே எவ்வளவோ பேசியும் அவர் பின் வந்தவர்கள் பேசியும் இன்று வரை கடவுள் நம்பிக்கை என்பது இருந்து கொண்டுதான் உள்ளது. மக்களின் பெரும்பாலோனோர் நம்பிக்கையை தாண்டி யாரும் எந்த சாதனையையும் செய்துவிட முடியாது.

    1929ல் இருந்து பெண்விடுதலையை பற்றி பேசி இன்று வரை கைம்பெண் மறுமணம் என்பது எட்டாகனியாகவே பலருக்கு உள்ளது அது போல் தான் இதுவும். மல்லாக்க படுத்துக் கொண்டு காறி உமிழ்வது என்றும் சொல்லலாம். நம் மன்னர்களை நாமே தாழ்த்துவது. அது மட்டுமல்ல அவன் செய்த நல்லதை கூட காமலை கண்ணுடன் நோக்குவது தவறு.

    உண்மையை சொல்லுங்கள், அல்லது இருபக்க கண்கொண்டு நோக்குங்கள் அதைவிடுத்து ஆடு மாடு கொடுத்தான் சம்பளம் கொடுக்கவில்லை என்று கட்டுரை ஆசிரியர் சொன்னது போல், சம்பளம் இல்லாத வேலைக்காரர்கள் என்று சொல்லி கிழிறக்காமல் இன்னொரு பார்வையும் உள்ளது. ஒரு படி நெய்யை கொடுத்துவிட்டு மீதம் உள்ளதை வைத்து வியபாரம் செய்ய வைத்து சுய தொழில் முனைவோராக மாற்றினான் என்று பொது பார்வை கருத்தையும் எடுத்துக்கொள்ளலாம்…

    • தமிழ் தேசியம் இங்கே உருவாகவே இல்லை என்பதுதான் என் கணிப்பு. ஏன் உருவாகலைன்னு யோசிக்கணும். அதற்கு அடித்தளமாய் இருக்க வேண்டிய தமிழ் முதலாளித்துவம் (முதலீட்டியம்னு சிலர் சொல்றாங்க) இங்கே வளரவில்லை. இங்கே இன்னமும் நிலவும் சமூகம் – அரைக்காலனி, அரை நிலப்பிரபுத்துவம்தான். இந்த நிலையில் இச்சமூகம் அடுத்தகட்டத்துக்கு நகர்த்தப்படாமல் தமிழ்தேசியம் எப்படி உருவாகும். ராஜராஜனையோ, ராஜேந்திர சோழனையோ அவர்களின் ஒருபக்கத்தை மறைத்து விட்டு வீரப்பெருமை பேசிக்கொண்டு உசுப்பேத்தி விடுவதால் தமிழ்தேசியம் உருவாகி விடும் என்பது சிறுபிள்ளைத்தனமானது. அவலை நினைத்துக்கொண்டே உரலை இடிக்கலாம். கை வலிக்கும்..தோள்பட்டை நோவெடுக்கும். அவல் மட்டும் கிடைக்காது. தவசம் வேண்டாமா? நீங்கள் எதிர்பார்க்கும் தேசிய உணர்வு உருவாகணும்னா எதிரி யார் என்பதை சரியாக வரையறுக்கணும். எதிரி பார்ப்பனியமும், ஏகாதிபத்தியமும்தான். அதை எதிர்ப்பதை விட்டுவிட்டு நாங்க உலகாண்ட பரம்பரை என்பது எல்லாம் நயாபைசாவுக்கும் பிரயோசனப்படாது. பார்ப்பனியத்தை எதிர்க்காமல் இருக்கும் தமிழ்த்தேசியர்கள், பார்ப்பனியத்தின் அடையாளச் சின்னமாக இன்று இருக்கும் ராமனைக் கூட ‘அவன் பழங்குடி தமிழனாக இருக்கலாம்’ என ஆதரிக்கிறார்கள். ஆர் எஸ் எஸ் டவ்சர்வாலா பொள்ளாச்சி மகாலிங்கத்தின் முகத்திலும் தமிழ்தேசியத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். பெரியார் ஒரு சொலவடை சொல்லி இருக்கிறார். முப்பாட்டன் தோண்டிவைத்த கேணியாகவே இருந்தாலும் உப்புத்தண்ணியக் குடிக்கமுடியுமா?

      • பார்ப்பனியத்தை வரிந்து கட்டிக்கொண்டு அடிக்கும் நேரத்தில் சிறிது நேரம் தமிழனனின் ஆதிமதம் என்ன? அசீவகம் என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள செலவழியுங்கள். அதை மக்களிடம் கொண்டு சேருங்கள்.

        இல்லை முப்பாட்டன் கிணறு உப்பு தண்ணி தான் கிடைக்கிறது என்று சொல்லிவிட்டு அதை தென்னை மரத்துக்கு எடுத்து பாய்ச்சலாம் என்பதை உணராமல் கிணற்றை இழுத்து மூடிவிடுங்கள்..

        • உப்புத்தண்ணீர் என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி. உப்புத் தண்ணீரை வேறு பல விசயத்திற்கும் பயன்படுத்தலாம். எல்லாம் பார்வையில்தான் இருக்கிறது. பரவாயில்லையே.. சங்கரன் காற்று பட்டுவிட்டதா.. அல்லது ஆசீவகத்தை பிடித்திழுத்து வீட்டுத் தொழுவத்தில் கட்டாமல் விடமாட்டேன் என்ற உண்மை வெளியே துருத்திக் கொண்டு நிற்கிறதா.. ஆதாரங்கள் தீர்ந்து போனதா… செந்தமிழரிடம் கற்றுக் கொண்டு கூட வாருங்கள்.

        • என்ன அய்யா மதங்களை மக்களிடம் சேர்த்துதான் தமிழ் தேசியம் வாழ வேண்டுமா ? என்ன செய்ய இந்த பெருமிதத்தின் இன்னொரு பக்கம்தான் ராசராசன். அந்தோ கொடுமை அதே ஆசீவகத்தை வேரறுத்த காலமும் எது என தெரியாமலா பேசுகிறீர்கள். சித்தர் மரபை நிறுவனமயமாக்கிய திருடன் திருமூலரை பெற்றெடுத்த சோழ சாம்ராஜ்யத்தை எப்படி போற்ற முடியும். வரலாறு எங்களது அப்பன் வெட்டிய கேணியில் இருந்துதான் துவங்குகிறது என மூன்று காலில் வேகமெடுக்க என்னால் முடியவில்லையே

    • //ஆனால் தமிழ் மன்னன் கருங்காலி என்று சொன்னால் தமிழன் என்ற உணர்வே இல்லாமல் போய்விடும். ஏற்கனெவே இங்கு தமிழ்நாட்டில் தமிழன் என்ற உணர்வில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். //

      இது மிக மிகத் தவறான போக்கு ஆகும். இந்த வாக்குமூலம் கோருவது என்ன? விமர்சனமோ சுயவிமர்சனமோ கூடாது என்பதைத்தான். இதன்மூலம் நாம் அடையப்போவது என்ன? கட்டபொம்மனையும் எட்டப்பனையும் வேறுபடுத்திப் பார்க்கும் பார்வையை இழப்போம். தமிழ் சிற்றரசன் என்ற கோதாவில் தொண்டைமானையும் தூக்கி சுமப்போம். புலிகள் செய்த தவறுகளை, அராஜகங்களை எல்லாம் விமர்சித்தபோதும், அவர்கள் செய்துவந்த அரசியல் தவறுகளை சுட்டிக்காட்டியபோதும் தமிழ் உணர்வை மழுங்கடிக்கிறார்கள் என்றும் புலி எதிர்ப்பாளர்கள் என்றும் தமிழ்தேசியர்கள் விமர்சனங்களை முகங்கொடுக்காது தூற்றினர். களமாடும் அவர்களை விமர்சிப்பது தவறு என்றெல்லாம் முட்டுக்கட்டை போட்டனர். விளைவு? சுயவிமர்சனமே இல்லாது அதற்கான கடைசிவாய்ப்பு கூட தரப்படாது வலியும் வேதனையும் நிரம்பிய தோல்விதானே மிஞ்சியது? தோல்விக்குப் பின்பும் ‘விமர்சன-சுயவிமர்சன’ மில்லாத தமிழ்தேசியம் என்ன சொன்னது? பிரபாகரன் தப்பியது எப்படி என்று 20 ரூக்கு புத்தகம் போட்டது. சோழனாக இருந்தாலும் பாண்டியனாக இருந்தாலும் அவன் ஆட்சியை அதன் காலத்தோடு வைத்துப் பார்த்து எடைபோடுவதே சரியானதாகும்.. கங்கை கொண்டான் கடாரம் கொண்டான் என்ற மிகை உணர்ச்சிப் போக்கு சிந்தனை இல்லாத மனிதர்களை மட்டுமே உருவாக்கும்..முள்ளிவாய்க்கால் வரை தொடரும்.. இமயத்தின் கல் சிறிதும் வலுவற்றது அதில் சிலை வடிப்பது சாத்தியமே இல்லை என்ற அறிவியல் உண்மையை மறைத்து தமிழன், கண்ணகிக்கு கோவில் கட்ட இமயத்தில் கல் எடுத்தான் என்று சொல்லி இன உணர்வை ஊட்டலாம்.. நல்லா இருக்குல்லா!!

    • சுயதொழில் முனைவோரை அன்றே ஊக்குவித்த ராசராசன்.. ம். ம். பேஷ்.. பேஷ். உருப்பட்டாப்லதான் தமிழ் தேசியம்

  32. விவாதிக்க வந்திருக்கும் தமிழ்தேசிய அல்லது சோழ தேசிய ஆர்வலர்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். தேசியத்தின் எல்லாக் கோரிக்கையையும் ராசராசன் நிறைவேற்றியதாக நீங்கள் புலம்பித் திரிவதன் இன்னொரு புறம்தான் சுத்த பத்தமாக இன்று நாம் கருதும் பார்ப்பன எதிர்ப்பில் களப்பிர்ர் இருப்பர் என்ற உங்களது புரிதல். இது வினவு வெளியிட்ட புதிய கலாச்சார கட்டுரையில் இல்லாத ஒன்று என நினைக்கிறேன். இயங்கிக் கொண்டிருக்கும் உலகத்தில் வைத்து ஒரு பொருளை அல்லது விசயத்தை அதன் வளர்ச்சி வீழ்ச்சியை வைத்து மதிப்பிடுபவர்கள் மார்க்சியர்கள். தமிழ் தேசியமோ குப்பையில் எதாவது ஒன்றை குறிப்பாக தேசியத்தை தேடுகிறது என்பதுதான் விசயமே. பல்லவர் காலத்தை போற்றவில்லை என்பதையும் அதை துவக்கியவர்கள் அவர்களே என்பதையும் கோடிட்டு காட்டி உள்ளார்கள் கட்டுரையில் என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்

  33. //உலகின் மிக உயரமான கோபுரங்களைக் கொண்ட, பழமையான பெருங்கோவில்களில் தஞ்சைப் பெரியகோவிலும் ஒன்று.//
    கட்டுரையில் களப்பிரர்கள் பற்றிய செய்தி தவறென்றும், தேவதாசி, தேவரடியார் வேறுபாடு கட்டுரையாளருக்கு தெரியவில்லை என்றும் விமர்சனம் செய்யும் தமிழ்த்தேசியருக்கு, மேற்கண்ட செய்தியில் இருக்கும் தவறு ஏன் தெரியவில்லை.

    தஞ்சைப் பெரிய கோவில் கோபுரம் அழகானது என்பதுதான் உண்மையே தவிர அது ‘உலகின் மிக உயரமான கோபுரங்களில்’ ஒன்று அல்ல.

    சரி..போனது போகட்டும்..ராஜராஜனுக்கு இலவசமா இன்னொரு பெருமை வரும்போது அதை எல்லாம் வேணாம்னு சொல்லப்படாது.. ஏற்கெனவே தமிழன் தன் பெருமையை உணராமல் கிடக்கிறான்.. 🙂

    • Banned any more than what is going on in the name of Hinduism and Tamil nationalism?
      This is an open forum. All ideas are open to discussion and debate.
      Even lies are better said in the open than behind the scene.
      Expose any error, falsehood or distortion.
      Do not call for a ban on anything, until it is demonstrated by open debate to be harmful to humanity.
      Thought control is potentially more dangerous than even the worst of thoughts.

  34. //இது மிக மிகத் தவறான போக்கு ஆகும். இந்த வாக்குமூலம் கோருவது என்ன? விமர்சனமோ சுயவிமர்சனமோ கூடாது என்பதைத்தான். //

    இங்கு நான் சுயவிமர்சனம் கூடாது என்று சொல்லவில்லை, வரலாற்றை தங்களின் கூற்றுடன் சேர்த்து பார்க்காமல் அந்த காலத்தின் கோட்பாடுகளுடன் பாருங்கள் என்று தான். கட்டுரையாசிரியர் இராஜராஜன் மேல் வைத்த குற்றங்கள் ஆதிக்கவாதி சாதியைத்தூண்டினான் என்று வரிந்து கட்டிக்கொண்டு அடிக்கிறார். இது முற்றிலும் உண்மையில்லை தவறான கூற்று என்பதையே சொன்னேன், இராஜராஜன் தவறே செய்யவில்லை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவன் என்று கூறவில்லை.

    //சுயதொழில் முனைவோரை அன்றே ஊக்குவித்த ராசராசன்.. ம். ம். பேஷ்.. பேஷ். உருப்பட்டாப்லதான் தமிழ் தேசியம்//

    இந்த வார்த்தைகளை நான் உபயோகித்தது ஒவ்வொருவர் பார்வையிலும் வித்தியாசம் உண்டு, ஆனால் வரலாறு என்பதை வரலாற்று நோக்குடன் பார்க்கவேண்டும். அதைவிடுத்து நான் திராவிடன், மார்க்சியன் என்று பார்த்து இல்லாததையும் பொல்லாததையும் சொல்ல கூடாது. வரலாற்றை அதன் நோக்குடன் பார்த்து சொன்னால் தான் அது வரலாறு. இல்லாவிடில் அது கட்டுகதை..

    • தமிழ் தேசியம் உருப்பட்டால் கூட தமிழ் தேசியர்களின் வரலாற்று நோக்குக்கு இப்படி ஒரு சீக்கு வரும் என்று நான் கூட எதிர்பார்க்கவில்லை

      • இன்று பெரும்பாலனவர்கள் சாதி மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம், சாதி பெயரை தங்கள் பெயருடன் சேர்த்து சொல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அது அப்படியே தொடர்ந்தால் போதுமானது, சாதி பாகுபாடு இல்லாமல் போய்விடும்.

        சாதி சண்டை இல்லை என்று சொல்லவில்லை, சாதி சண்டை இருக்கும் இடங்களில் அதை தவிர்க்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். அதை விடுத்து ஓட்டுமொத்தமாக குற்றங்களை அடுத்தவர் மேல் போடுவது தவறான வாதம்.

        சாதியத்தை எதிர்க்கும் நேரத்தை மக்களின் மனதில் நாம் முதலில் தமிழன் என்ற விதையை விதைத்து வளருங்கள். அது போதுமானது. இப்படி சாதீயத்தை எதிர்க்கிறேன் என்று சொல்லிவிட்டு பின்னால் சாதி சான்றிதழ் வாங்கி பட்டியல் சாதியில் இடஒதுக்கீட்டில் என்ன கிடைக்கும் என்று பார்த்து கொண்டிருப்பது தான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.

        • – //இந்த தூக்குடன் பாஞ்சாலகுறிச்சியின் வீரம் மடிந்துவிடவில்லை, தொடர்ந்தது வீரன் சுந்தரலிங்கம் தன்னுடன் இருந்த சிறு படையுடன் ஆங்கிலபடையின் கட்டுபாட்டில் இருந்த பாஞ்சாலகுறிச்சியை தாக்கி கைப்பற்றி ஊமைதுரையையும் விடுவித்தான்.//
          Source from your BLOG http://kumarikantam.blogspot.com/2011/01/blog-post.html

          மேற்படி கட்டுரையில் உங்க நடுநிலைமையும் வரலாற்றுச் செய்தியில் உங்களது நேர்மையும் புல்லரிக்க வைக்கிறது. சுந்தரலிங்கம் என்ற தாழ்த்தப்பட்ட இன்று கட்டபொம்மனுக்கு எதிராகவாவது உங்களால் தமிழனாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அவரது தளபதி கட்டபொம்மனது தூக்கிற்கு பிறகும் உயிர்வாழ்ந்தார் என்றும், பாளையங்கோட்டை சிறையுடைப்பை தலைமையேற்று நடத்தினார் என்றும் சொல்வது ஆதாரத்தின் அடிப்படையில்தானா ?

      • இன்று பெரும்பாலனவர்கள் சாதி மறந்து வாழ்ந்து கொண்டிருப்பதாக ஹரிஹரனுக்குத் தெரியக் காரணமே (சாதிப் பெயரைப் பெயருடன் சேர்த்துச் சொல்லாமல் வாழ்வது) தமிழகத்தில் அதற்கெதிராக நடந்த ஒரு போராட்டத்தின் விளைவு தான்.
        (இந்தியாவின் பெருவாரியான மாநிலங்களில் சாதியே பெயராக உள்ளது).

        ஆனால் தமிழகத்தில் சாதி ஒழியவில்லை; சாதியமும் ஒழியவில்லை.
        சாதி ஒடுக்குமுறை தொடர்கிறது.
        அகமண முறை தொடருகிறது.
        சாதி உணர்வும் எவ்வெவ்வாறோ தொடருகிறது.
        சாதி அரசியலும் தொடருகிறது.
        அதற்கு ஆதாரமாக உள்ள சமூக-பண்பாட்டுக் கூறுகள் உள்ளபடி உள்ள வரை, எதுவுமே தானாக மாறாது.
        எங்கும் ஏற்றத்தாழ்வான சமுக உறவுகள் ‘தாமாக’ மாறிய வரலாறு இல்லை.

        ஏற்றத்தாழ்வான சமுக உறவுகட்கான பொருளாதார அடித்தளம் தகர்க்கப்பட்ட பின்பும் பண்பாட்டுத் தளத்தில் போராட்டங்கள் இல்லாமல் ஏற்றத் தாழ்வின் அடிப்படையிவான ஒரு சமுக ஒழுங்குமுறை நீங்காது.
        எனவே எதையும் இல்லை என்று நாம் கண்ணை மூடிக்கொண்டால் அது இல்லாமற் போய்விடுமா?
        நாம் விரும்புவதால் மட்டுமே எதுவும் மாறி விடாது.
        “மரம் அமைதியைத் தான் விரும்புகிறது. ஆனாற் காற்று விடுவதாக இல்லை”.

        சாதி சண்டையைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
        அது ஒடுக்குமுறையின் அடிப்படையிலானதென்றால் ஓடுக்குமுறையை நீக்கச் செயற்படவேண்டும்.
        அப்போது ஓடுக்குதலால் நன்மை பெறுவோர் வாளாவிருப்பார்களா?(அதற்கான சான்றுகளை இன்னமும் காணுகிறோமே).
        அதற்கு என்ன செய்வது?
        .
        வெறும் போட்டி அடிப்படையிலான அல்லது பகைமைக்கு நியாயமற்ற முரண்பாடுகளை நட்பாகத் தீர்க்க இயலும். அது அவசியமானதுங் கூட.

        அதே வேளை, தமிழரிடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளைக் களைய முயற்சியே இல்லாமல் தமிழர் என்ற உணர்வை வளர்ப்பது எப்படி?
        வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று கூச்சலிட்டவர்கள் தானே வடக்கின் முதலாளிகளுடன் சேர்ந்து தமிமகத்துக்கே மொட்டை போடுகிறார்கள்.

  35. ஆசாரக் கோவைக்கு காலம் கணிக்க முடியாத காலக் கணக்கியலார்களை விட, பதினெண்கணக்கு நூல்களை முதலில் அல்லது சம காலத்தில் பட்டியலிட்டார்கள் என்பது வரை ஆதாரங்களை கையில் வைத்திருக்கும் தமிழ் தேசியர்கள் விரும்புகிற தமிழ் தேசியத்தை இனி ஈழத்தில் அமைக்க முடியாது எனத் தெரிந்தாலும், புலம்பெயர்வதற்கு முன்னரே அல்லது போராட்டத்திலிருந்து விடுபடும் முன்னரே அவற்றை மற்ற ஒடுக்கப்பட்ட சாதிகளின் தலையிலும் தோளிலும் இறக்கி வைத்து விட்டுதான் போனார்கள். வரலாற்றின் ஒருவேளைக்காக காத்திருந்த கிளிகளுக்கோ இலவம் கிடைத்திருக்கும். துதிபாட சில தமிழ்நாட்டு தமிழ் தேசியர்கள் கிடைத்திருப்பார்கள். ஆனால் மறந்தும் போராட்டத்தின் அரசியலை விட பழம்பெருமை அதுவும் மேல்சாதிகளின் பெருமையை தோளில் துப்பாக்கி ஏந்தியவர்கள் தலையில் சுமந்து திரிந்து அதுவே புரட்சிகரமானது எனக் கருதியதுதான் கொடுமை. அந்தக் கொடுமைக்கு சற்றும் குறையாத ஒன்றுதான் இது.

  36. http://www.sishri.org/velaalar5.html

    நடுகல் மரபு பற்றி மட்டுமல்ல, இக்கட்டுரை பலரது கடிவாளங்களை வேரறுக்க முதற்படி எனக் கருதுகிறேன்.

    solvanam.com/?p=10841

    சில ஆதாரங்களை புரிந்துகொள்ள உதவும் என கருதுகிறேன்.

    http://www.sishri.org/kc032010.html – ithuvum kooda

  37. ஹரிஹரன்,
    உங்களிடம் நான் மேலும் விசாரிக்கவேண்டி நேற்று இட்ட கீழ்க்காணும் பின்னூட்டம் தவறான இடத்தில் விழுந்ததால் நீங்கள் கவனிக்கவில்லைப் போலும். விளக்குவீர்களாயின் நன்றியுடையவனாவேன்:

    உங்கள் பொறுமையான விளக்கத்துக்கு நன்றி.
    “தேவரடியார்கள் என்பவர்கள் தானமாக வழங்கப்படும் பொழுதே …” என்றீர்கள்.
    ஒருவரைத் தானமாக வழுங்க அவர் அடிமையாய் இருந்தால் மட்டுமே இயலுமல்லவா?
    தேவரடியார்கட்குத் திருமணம் செய்யும் உரிமை இருந்ததா?
    அக் காலத்தில் நிலத்தை வாங்கி விற்கும் முறையும் இருந்ததா?
    தேவரடியாரின் நிலங்களை அவர்கள் யாரிடம் விற்றிருப்பார்கள்? அவ்வாறு விற்றதற்குச் சான்றுகள் உள்ளனவா?

    “எந்த கல்வெட்டிலும் அவர்கள் உடலுறவிற்கு உட்பட்டதாக இல்லை.. பிறகாலத்தில் இது நடைமுறைக்கு வந்தது” என்றீர்கள்.
    அது பற்றிய கல்வெட்டுக்கள் உள்ளனவா?
    தேவதாசிகள் உடலுறவிற்கு உட்பட்டதற்கும் கல்வெட்டுக்கள் இருந்தனவா?

    கம்ப ராமாயணம் எழுதப்பட்ட காலத்திற் செல்வந்தப் பரத்தையர் இருந்ததாகத் தெரிகிறது. தேவரடியார் பரத்தமைக்குட் தள்ளப்பட்டிருக்கலாமா?
    Posted on 09-Jan-11 at 9:29 pm | Permalink

    • இதைப்பற்றிய கல்வெட்டுகளின் ஆதாரங்களை தொகுத்துக் கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு இன்று காலை எக்மோர் அருங்காட்சியகம் மற்றும் சென்று வந்தேன். அதில் உள்ள சில ஆதாரங்கள் போதுமானதாக இருக்கும்.

      1048ம் ஆண்டை சேர்ந்த திருவெற்றியூரில் உள்ள ஒரு கல்வெட்டில் “சதுரன் சதுரி எனும் தேவரடியார் நாகன் பெருங்காடான் என்பவரின் மனைவி என்று குறிக்கப்பட்டுள்ளது”

      இதே போன்று மூன்றாம் குலோத்துங்கனின் கல்வெட்டு தஞ்சாவூரில் இருக்கும் ஒன்றில் ஒரு தேவரடியார் திருமணம் ஆனாவர் கணவனுடன் வாழ்ந்ததாக கூறுகிறது.

      ஏன் அரசர்கள் கூட தேவரடியாரை மணந்துகொண்டதாக கூறுகின்றன.. இதனை கூறும் கல்வெட்டுகளை தான் இப்பொழுது தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்தவுடன் தனி கட்டுரையாகவே பதிவிடுகிறேன்.

      தமிழக கல்வெட்டுகளில் பெண்கள் நிலை என்ற ஆய்வு புத்தகம் லெஸ்லி என்ற பிரிட்டானிய பெண் எழுதியிருப்பது

      “கல்வெட்டுகளில் கோயிலுக்குச் சொந்தமானவராக விவரிக்கப்படும் பெண் கோயில் பெண் ஆவார். கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற அர்த்தத்தில் இப்பெண் தேவர டியாள் என்று அடிக்கடிக் குறிப்பிடப் படுகிறார்…..

      இவர்கள் நாட்டியக் காரிகள் என்பதைவிட, கொடைகளை வழங்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்’ (மேலது நூல் /பக் 22)”

      அதாவது, கோயிலுக்கே கொடைகள் வழங்கும் உயர்ந்த நிலையில் இருந்தவர்கள் தேவரடியார் தவிர, பொருளுக்காக விபசாரம் செய்தோர் அல்லர்.

      ஏன் ஒரு தேவரடியார் கடைத்தெருவில் இருந்து கொண்டே வழிபட வேண்டும் என்பதற்காக தனி கோயில் அவர் கண்ணுக்கு தெரியும்படியாக ஒரு குன்றின் மேல் எழுப்பபட்டுள்ளது இன்றும் அந்த கோயில் உள்ளது. இடம் பெண்ணாகடம், விருதாச்சலத்திலிருந்து திருச்சி செல்லும் வழியில் உள்ளது.

      • முதுகில் பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சூடு போட்டுத்தானே தேவரடியார் ஆக்கப்பட்டனர். அரசதிகாரத்துக்கு அஞ்சாமல் தானே முன்வந்த தேவரடியார்களைக் காட்டும். இறை கட்ட இயலாமல்( விளைச்சல் பொய்த்ததாலும், மேல்வாரம் கீழ்வாரம் சுரண்டலாலும்) தங்களை கோவிலுக்கே விற்றுக் கொண்டவர்களை எல்லாம் தானாக முன்வந்து தேவரடியார் ஆனவர் எனச் சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன். உடலில் நிரந்தரச் சின்னம் பொறித்து தேவரடியார் ஆக்குதலை அடிமைத்தனம் இல்லை எனச் சொல்ல முடியுமா? சில தேவரடியார்கள் மன்னனின் மனைவியாக இருந்ததாகச் சொல்கிறீரே..மனைவியாக அல்ல. காமக் கிழத்தியராக என்றுதான் வரலாறு சொல்கிறது. ராஜராஜன் காலத்தைய சான்றாதாரங்கள் அழிந்திருக்கலாம். ஆனால் இன்னமும் தஞ்சையில் கல்யாணவிலாசங்களும், மங்களவிலாசங்களும் மராட்டிய மன்னர்களின் காமக்கிழத்தியருக்கெனக் கட்டப்பட்டிருந்த பழைய கட்டிடங்களாக இருக்கின்றன. முதலாம் ராஜாதிராஜ சோழன் (ராராவின் பேரன்?) வைத்திருந்த காமக்கிழத்தியின் பெயர் பரவை நக்கன். இவள் தேவரடியார்தான். கோவில் பணியாளர் அல்ல. இவள் பெயரில் ஓர் ஊர் சர்வமானியம் தரப்பட்டது. அதுதான் மதுரையை அடுத்த பரவை கிராமம் (ஆதாரம்: மதுரை மாவட்ட ஊர்ப்பெயர் ஆய்வு, முனைவர் மணிமாறன்)

  38. மணி அவர்களே. நீங்கள் அளித்த லிங்க் க்கு நன்றி. கொஞ்சமே படித்திருந்தாலும், கிடைத்த சான்றுகளை வைத்து ஒரு ஆய்வாக அவர்கள் அதை அளித்த விதம் பிடித்திருக்கிறது. மீதியை பிறகு தொடர்கிறேன்.

  39. //மேற்படி கட்டுரையில் உங்க நடுநிலைமையும் வரலாற்றுச் செய்தியில் உங்களது நேர்மையும் புல்லரிக்க வைக்கிறது. சுந்தரலிங்கம் என்ற தாழ்த்தப்பட்ட இன்று கட்டபொம்மனுக்கு எதிராகவாவது உங்களால் தமிழனாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அவரது தளபதி கட்டபொம்மனது தூக்கிற்கு பிறகும் உயிர்வாழ்ந்தார் என்றும், பாளையங்கோட்டை சிறையுடைப்பை தலைமையேற்று நடத்தினார் என்றும் சொல்வது ஆதாரத்தின் அடிப்படையில்தானா ?//

    கட்டபொம்மனை சுந்தரலிங்கம் எதிர்த்ததாக நான் எங்கும் சொல்லவில்லை கட்டுரையில். தூக்கிற்கு பிறகு சுந்தரலிங்கம் போராடினாரா இல்லை முன்பா என்பதற்கு தெளிவான தகவல்கல் இல்லை, ஊமைத்துரை ஒரு மூதாட்டியால் காப்பாற்றபட்டு சிவகங்கை சென்றார் என்று சொல்லப்படுகிறதோ அதே போல் தான் சுந்தரலிங்கத்தின் கதையும் கிராமியபாடல்களாகவும் இருக்கிறது. ஆனால் பாஞ்சால குறிச்சி என்றாலே வீரபாண்டியகட்டபொம்மனின் தூக்குடன் முடித்துவிடுகிறோம். தன் உயிரையும் தன் முறைபெண்ணின் உயிரையும் தியாகம் செய்து ஆயுதகிடங்கை அழித்த சுந்தரலிங்கத்தை மறந்துவிடுகிறோம். சுந்தரலிங்கத்தை வீரபாண்டியன் படையில் சேர்த்த கதைகூட மிக சுவரஸ்மானது இதற்கு கல்வெட்டு ஆதாரங்கள் கிடையாது, தூத்துகுடி பக்கம் சென்று அங்கிருக்கும் அவரின் இனமக்களில் இருக்கும் வயதானவர்களிடம் பேசினீர்கள் என்றால் தெரியும்.

    • வெள்ளையதேவன் பற்றி தாங்கள் எதுவும் சொல்ல வில்லை ? கட்டபொம்மு கூட்டம் மிக வியப்பானது ! கட்டபொம்மு ஒரு கம்பளத்து நாயக்கன், தானதி ஒரு பிள்ளை, சுந்தரலிங்கம் ஒரு குரும்பரக இருக்கலாம், வெள்ளையத்தேவன் ஒரு மறவர் – எப்படி பல சாதி கூட்டணி ஏற்பட்டது என்று தெரிய வில்லை. நான் தூத்துக்குடி மாவட்ட கிராமங்களில் வாழ்ந்தவன். “என்னம்மா தேவி சக்கம்மா” என்று படும் கிராமிய கலைஜர்கள் பாடல்களை நேரில் பார்த்து கேட்டு இருக்கிறேன். பாஞ்சாலகுறிச்சியின் கதையை இது போன்ற பாடல்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

      • உண்மை கணியன் நான் இவர்களை பற்றி அறிந்து கொண்டதும் அதன் பிறகு தேடியதும் ஜக்கம்மா பாடல்கள் தான் காரணம். வெள்ளையதேவன் பற்றியும் எழுத தேவையான தகவல்களை சேகரித்துக்கொண்டுள்ளேன். இப்பொழுது சென்னையில் வசிப்பதால் முடியவில்லை. மேலும் கணியன் என்ற உங்கள் பெயரில் மறைந்து இருப்பவர்களைப் பற்றியும் எழுத வேண்டும் என்பது எனது விருப்பம்.

    • கட்டபொம்மன் எவ்வாறு வெள்ளையதேவனை தனது படையில் சேர்த்தான் என்பதற்கும் ஒரு கதை உண்டு. வெள்ளையதேவன் ஊர் பக்கம் குதிரையில் கட்டபொம்மு செல்லும்போது சிறுவன் வெள்ளையதேவன் அவன் தாயுடன் விறகு எடுக்க செல்லும் வழியில் ஒரு குட்டையில் விழுந்ததாகவும், அதை பார்த்த கட்டபொம்மு தனது குதிரையின் சாட்டையை வீசி சிறுவனை மீட்டதாகவும், அப்பொழுது ‘அடித்தான் பார் பாதர் வெள்ளை’ என்று சொன்னதாகவும், அதன் பிறகு தனது படையில் சேர்த்து கொண்டதாகவும் ஒரு கதை உண்டு. எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. வீரன் சுந்தரலிங்கம் பற்றிய கதையை தெரிந்தால் எழுதவும். நன்றி. கணியன்.

  40. அய்யா மணி அவர்களே, தமிழ் தேசியம் இன்றைய தேவை, அதை அடைய இன்று இந்தியத்தால் பாதிக்கப்பட்டதை மக்கள் உணர்ந்தாலே போதும்.

    ஈழம் என்று ஏன் அடித்துகொள்கிறீர்கள் என்பது தெரியவில்லை ஈழம் யார் யாருக்கு தேவையோ அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அதை பற்றி நீங்களும் நானும் கவலைப்படத்தேவை இல்லை.

    இங்கு பேசுவது தமிழகத்தில் சாதீயம் பற்றி, இன்று சாதீயம் ஒழிக்க என்ன தேவை என்று பாருங்கள். கலப்புதிருமணங்கள், சீர்திருத்த திருமணங்கள் என்பவை நடந்து கொண்டிருக்கின்றன இதை மேலும் சீர்படுத்த தேவையானதை பாருங்கள். ஏன் இந்த தளத்தில் உள்ள தோழர் விஜி அவர்களின் கடிதத்தை திரும்பவும் ஒருமுறை படியுங்கள். அதில் கூறப்பட்டிருக்கும் பிரச்சனைகளை தவிர்க்க என்ன செய்யலாம் என்று பாருங்கள். அது தான் சாதியை ஒழிக்கும் சிறந்த வழிமுறையாக இருக்கும்.. https://www.vinavu.com/2010/11/22/progressive-women/

    • //அய்யா மணி அவர்களே, தமிழ் தேசியம் இன்றைய தேவை, அதை அடைய இன்று இந்தியத்தால் பாதிக்கப்பட்டதை மக்கள் உணர்ந்தாலே போதும். //

      பார்ப்பனியத்தால் பாதிக்கப்பட்டத்ற்கு/பாதிக்கப்படுவதற்கு என்ன பதில் ந்ண்பர் ஹரிஹரன் அவர்களே? தேவர் தமிழனும், அய்யர் தமிழனும் சக தமிழன் என்பதா ல்அனைவரும் அசீவகரகளாகி மறப்போம் மனிப்போமா?

      • //இந்தியத்தால்//

        இந்தியம் என்பது என்ன? இந்து, இந்தி, இந்தியா என்பது ஒரு பார்ப்பனிய கட்டமைவு என்பதை உங்கள் தமிழ் தேசியவாதிகள் சொல்லித்தரவில்லையா என்ன? சரி அது பார்ப்பனியம் எனில் அதன் தமிழ் பார்ப்பனிய வெர்சன்களுக்கு(தேவரிடம், வன்னியரியம் எட்ச்) உங்கள் தமிழ் தேசியத் தீர்வு என்ன?

        அதான் பெயரில் சாதிய நீக்கிட்டோம்ல இனி தானா சாதி அழிஞ்சிடும் அப்புறம் தமிழ் தேசியத்துக்கு ஜொய்ங்க்னு போயிரலாம் என்று கிச்சு கிச்சு மூட்டுகிறீர்கள் ஹரிஹரன். பொதுவில் தமிழ் தேசியவாதிகள் காமெடியாக பேசுவார்கள். ஆனால் நீங்க கொஞ்சம் ஓவர்.

      • பார்ப்பனனை எதிர்த்து கடந்த ஒரு நூற்றாண்டாக செய்த சாதனைகள் தொடருகின்றனவா.. செய்த சாதனைகளில் ஒன்றான கலப்பு திருமணம், சீர்திருத்த திருமணம் இன்று அவர்கள் தங்கள் சந்ததியினருக்கு சாதி சான்றிதழ் வாங்க வரிசையில் நின்று நாதியற்று போய் கொண்டிருக்கிறது. சாதி வேண்டாம் என்று திருமணம் செய்தவன் தனது சந்ததிக்கு சாதிசாயம் பூசுவதை தடுப்பது தான் அடுத்த நடவடிக்கை அதை நோக்கி பார்வையை திருப்புங்கள். இல்லை என்றால் இன்னும் பல தலைமுறைகள் இப்படியே தான் தொடரும்..

        தமிழ் தேசியவாதம் என்பது நான் யார் பேச்சையும் கேட்டு எடுத்த முடிவல்ல. எனக்கே தோன்றியதனால் சொல்லுவது, இதற்காக நான் தமிழ் தேசியவதிகளுடன் சென்று உட்கார்ந்து அவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ளுபவனும் இல்லை.. ஒரே ஒரு முறை களப்பதிவாளர்கள் கூட்டம் நடந்த பொழுது சென்றதுடன் சரி. அதன் பிறகு யாரையும் சந்தித்தது இல்லை இப்பொழுது வினவு பதிவினரை சந்திக்கும் ஆவல் உள்ளது. என்னை பொருத்தவரை அனைவரும் மக்களுக்காக பேசுகிறோம் ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை. இதில் தவறு சரி என்பதில்லை. ஆனால் இதற்கு முன் இத்தளத்தில் எனது கருத்துகளை சொல்லியிருக்கிறேன் வரலாறு சம்பந்தபட்டதிலும் பொது கட்டுரைக்களுக்கும் ஆனால் இந்த கட்டுரையை பொருத்தவரை மொத்தமாக ஒருவர் மீது குற்றம் சொல்லுகிறது அதற்கு என்பார்வையில் உள்ள கருத்துகளையே சொல்லுகிறேன்.

        29 ஆண்டுகளில் பார்பனீயம் முழுமையாக ஆட்சி செய்ய வழிவகை செய்தார் இராஜராஜன் என்பது தவறு. கிருஷ்ணதேவராயர் அவர் கையாலேயே பார்ப்பனர்களுக்கு தண்டணைகள் பற்றி எழுதியதை பார்த்தால் எத்தனை பேர் குடை பிடித்திருக்கிறார்கள் என்பது தெரியும். பார்பனீயம் தமிழ் சமுதாயத்தை அழிக்கவில்லை என்று சொல்வது என் நோக்கம் அல்ல இன்னும் எத்தனை நாட்கள் தான் அதையே பேசி ஆரியம் திராவிடம் என்று அழைந்துகொண்டிருக்க போகிறோம். இதை சொல்லி தான் இன்று தமிழகத்தில் பல்லாண்டுகாலமாக நம்மை சுரண்டிக்கொண்டிருக்கின்றனர்.

        பெரியார், மறைமலை அடிகளார் போன்றவர் சொன்னவற்றின் அடுத்த படிகளுக்கு செல்லும் அடிகளை நாம் எடுத்து வைக்கவேண்டும். இன்னும் அவர்களுடன் அதே படியில் எத்தனை நூற்றாண்டு நிற்கப்போகிறோம்.

  41. அய்யா மணி எனது வலைதளத்தில் எழுதிய கட்டுரைக்கு இங்கு விளக்கம் கேட்டிருக்கிறீர்கள். அந்த கட்டுரை ஜனவரி 3ம் தேதி வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் அன்று எழுதியது. மேலும் அதில் சுந்தரலிங்கம் அவர்களைப்பற்றி பேசவேண்டும் என்றே நான் அந்த கட்டுரையை எழுதினேன். வீரபாண்டியனை பற்றி பேசிவிட்டு கட்டுரையை முடிக்கும் முன்பாக சுந்தரலிங்கனாரைப்பற்றி பேசி முடித்தேன். வீரபாண்டிய கட்டபொம்மன் மட்டுமில்லை பாஞ்சாலகுறிச்சி தானதிகாரி சுப்பிரமணியன், சுந்தரலிங்கம் மற்றும் செளந்திரபாண்டியன் அனைவரும் என்பது தெரியவேண்டுமே என்பதே என் நோக்கம்.

  42. புலிக்கொடி அராஜக வாதிகளுடையது(ஜெயா,சசிக்கலா,பிரபாகரன்,வைகோ,சீமான்,எம்ஜிஆர்).சோழ(திருமாவளவன்)- பல்லவ “சைவ நந்திகொடிதான்”,அன்பு அரசன்,க.அன்பு அழகன்,ஜெயந்தி நடராஜன் ஆகிய உண்மை தமிழருடையது.சிதம்பரத்தில் நந்தனை(திருமா) அனுமதித்தது,தீட்சிதரை எதிர்த்து சைவரே!.இதை மகிந்த ராஜபக்ஷே மதிப்பார் சைவராக(கோவிகமா) மறுவார்!.புலியை போட்டு கொடுத்ததற்காக நன்றிக்கடன் செலுத்துவார்.

  43. ஹரிஹரன்,
    உங்கள் தகவல்களை வைத்துப் பார்க்கிற போது தேவதாசி என்ற சொல் தேவரடியார் என்ற சொல்லுக்குப் பிந்தியது என்பது தெளிவாகிறது.
    ஆனால் இரண்டும் அடிப்படையில் வேறானவை என்பதற்குச் சான்றுகள் தெரியவில்லை.

    அடியாள் என்பது தாசி என்பதின் மிக வேறுபட்ட பொருள் கொண்டதாயுந் தெரியவில்லை.
    ஒன்று காலப் போக்கில் மற்றதாகப் பேர் மாறியருப்பதது மிக இயலுமானதல்லவா.
    .
    தேவரடியார் எல்லாரும் “தம்மைத் தாமே தானஞ் செய்தனர்” என்பது நம்பக் கடினமாக உள்ளது.
    ஒரு சிலர் ஏதாவது சுய நன்மை கருதித் தாமாகச் சென்றிருக்கலாம் என்பதை ஏற்கிறேன்.
    ஆனாற் பெரும்பாலோர் செய்திருப்பர் என்புது நம்பக் கடினமானது.
    .
    “கல்வெட்டுகளில் கோயிலுக்குச் சொந்தமானவராக விவரிக்கப்படும் பெண், கோயில் பெண் ஆவார். கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற அர்த்தத்தில் இப்பெண் தேவரடியாள் என்று அடிக்கடிக் குறிப்பிடப் படுகிறார்…. இவர்கள் நாட்டியக் காரிகள் என்பதைவிட, கொடைகளை வழங்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்” எனத் ‘தமிழக கல்வெட்டுகளில் பெண்கள் நிலை’ என்ற ஆய்வு நூலில் லெஸ்லி என்ற பிரிட்டானிய பெண் எழுதியுள்ளதை எந்த அடிப்படையில் நம்புகிறீர்கள்?
    இதன்படி, பணக்காரிகள் தான் பெரும்பாலும் தேவரடியாள்களாகியிருப்பர் எனத் தோன்றுகிறது
    அவர் பயன்படுத்திய சான்றுகளைக் கூறின் உதவியாயிருக்கும்.
    அவர் வேறெவரதோ கூற்றை விசாரியாமல் மீளக் கூறியிருக்கலாமல்லவா.

    • சிவனடியார் என்பதை ஒத்துக்கொள்கிறோம்.. ஆனால் தேவரடியார் எனபதை ஏற்றுகொள்ளமாட்டேன் என்கிறோம் அதன் காரணம் என்ன. மேலும் மாணிக்கம், கணிகை, ருத்ரகண்ணிகை என்று பல பெயர்கள் அவர்களுக்கு உண்டு அவர்கள் செய்யும் கோயில் திருப்பணிக்கு ஏற்றார்போல் ஆனால் பொதுவான பெயராக தேவரடியார் என்று குறிக்கப்பட்டுள்ளனர். சிவனடியாரை ஏற்றுக்கொள்ளும் பொழுது தேவரடியார் என்ற பெயர் தனித்துவம் வாய்ந்தது என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை காரணம் நாம் தேவர்களை வணங்குபவர்கள் இல்லை. அதே போல் தேவதாசி என்ற பெயர் பிற்காலத்தில் வந்ததால் அந்த முறையில் இருந்த பிரச்சனைகளாலும் நம்மால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. காரைக்கால் அம்மையார், ஒளவையார் போன்றவர்களையும் இதே கணக்கில் ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை நாம் இவர்களுக்கு கொடுப்பதில்லை. கம்மராமயணத்தை சபையில் வாசிக்க ஒரு புலவரின் உதவி தேவைபட்டபொழுது உதவியவர் தேவரடியாராக இருந்த ஒரு பெண்கவியே..

      லெஸ்லி அவர்களும் புத்தகத்தில் முதலில் தாசிமுறை என்றே ஆரம்பித்து இருப்பார் பின்னால் பார்க்கும் பொழுது அனைத்து சான்றுகளையும் எடுத்து எழுதியபின் கடைசியாகவே தேவரடியாரை உயர்ந்த ஒரு நிலையில் குறிப்பிட்டுள்ளார். அவர் ஒரு புத்தகத்தை எழுதி முடிக்கும் முன்பே அவர் வைத்திருந்த ஒரு கருத்தை மாற்றிக்கொள்ள செய்த்து இருந்த ஆதாரங்கள் அனைத்தும் என்பது தெள்ள தெளிவாக தெரியும் புத்தகத்தை படிக்கும்பொழுது.

      பரவை நாச்சியார் நால்வரில் ஒருவரின் மனைவி மற்றும் அவர் ஒரு கணிகையார். அதாவது நடனமங்கையாக இருந்த தேவரடியார். தாசி எனும் முறை தமிழர்களில் கிடையாது.. பெண்களை இழிநிலையில் வைத்து பார்த்ததும் கிடையாது நாம். குந்தவைக்கு இருந்த மரியாதையும், மேலும் அவர்களின் பாட்டி மலவரையாரின் மகளுக்கு இருந்த தான உரிமைகளும் நாம் பெண் குலத்தை போற்றியதற்கு பெரும் சான்றாகும்.

      • நன்றி.
        லெஸ்லி அவர்கள் என்ன அடிப்படையில் எழுதினார் என்று நாம் இருவரும் அறியோம் போலுள்ளது.

        பரத்தையர் பொருளுடையோராயிருந்தால் தம் பொருளுக்கேற்பச் சமூகத்தில் மரியாதை பெற்றிருப்பர். அது சிலப்பதிகாரத்திலும் நாம் கண்டதே.
        ஆனாற் பரத்தமை சங்க காலத்திற்குப் பின் வந்த அற நூல்களில் –மத வேற்பாடின்றிக்– கண்டிக்கப்பட்டுள்ளதல்லவா.
        ஆணாதிக்கம் என்பது தனியே தமிழருக்குரியதுமல்ல, தமிழருக்கு விலக்கானதுமல்ல என்றே தோன்றுகிறது.

        இங்கு பிரச்சனைக்குரியது தேவரடியார் (இப்போ தேவடியாள்?) / தேவதாசி முறை பெண்களைப் பரத்தமைக்குட் தள்ளி விட்டமையாகும்.
        அது எவ்வாறு, எந்த நிலையில் நிகழ்ந்தது என்பதே விவாதத்துக்கு உரியதாகத் தெரிகிறது.
        அது மேலும் விசாரிக்கப் படல் நன்று.

        சிவனடியார் எவரும் தானமாக வழங்கப் பட்டதாகச் செய்தி உண்டா? ஒரு வேளை அதுவே (சமூகத்தின் ஆணதிக்கப் பண்புடன் இணைந்து) நீங்கள் கூறும் வேறுபாட்டுக்குக் காரணமாகி இருக்கலாம்.

  44. நண்பர்களே, வரலாற்றை வரலாறாகவே பார்க்க வேண்டும். நாம் நேராக பார்த்த, பார்த்தவர்களிடம் கேட்ட விசயங்கள் மட்டும் உண்மையாக கொள்ள முடியும். உதாரணமாக, நெல்லை சீமையில் வாழ்ந்த மக்கள் பிள்ளை (வெள்ளாள) மற்றும் பிராமண மக்களின் வாழ்கையை நன்றாக தெரிந்து வைத்து இருப்பார்கள். பிராமண மற்றும் சைவ வெள்ளாள மக்கள் விவசாய நிலங்களை சொந்தமாக வைத்து இருந்தார்கள். அவர்கள் வயலில் இறங்கி வேலை செய்ய மாட்டார்கள். வெள்ளாளர் உழவு செய்ய கூடாதாம். உழும்போது புழு, பூச்சிகள் செத்து விடுமாம் !! இது 20 வருடங்களுக்கு முந்தய நிலை. பல பிராமணர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன. தஞ்சை பகுதி பிள்ளை கூட இன்னும் உழவு செய்ய மாட்டார்கள். படித்த பிராமணர்கள், பிள்ளைமார் சென்னை போன்ற நகரங்களுக்கு குடிபெயர்ந்து பல வருடங்கள் ஆகி விட்டன. படிக்காத பிள்ளை ஊர்ல 3000 ரூபாய் சம்பளத்க்கு வேலை செய்கிறார்கள். தனக்கு எத்தனை ஏக்கர் நிலம் உள்ளது என்று தெரியாமல் மிதப்பில் இருந்த இருந்த மக்கள் எல்லாம் உண்டு. எல்லாம் காலத்தின் மாற்றம் !!!

  45. மன்னராட்சியை விமர்சன நோக்கில், மார்க்சிய நோக்கில், மனித உரிமைகள் மீறல் என்ற நோக்கில் என பல கோணங்களில் அலசி ஆராய்வது நல்லதுதான். அதற்க்காக, சரியான ஆதாரங்கள் இல்லாமல், ஒரு மொழி இனத்தின் கலாச்சார பரிமாணங்களை இவ்வளவு கீழ்த்தரமாக வசை பாடுவது நல்ல அணுகுமுறையன்று. பார்ப்பணீயம் ராஜ ராஜ காலத்தில் இருந்துதான் தொடங்கியது என ஆதாரங்கள் இருந்தால் கூட, ஆட்சியில் வர்ணாஷரமத்தின் எல்லா கொடுமைகளுக்கும் சோழர்களின் ஆட்சி (மட்டும்) வித்திட்டதாக கூறுவதற்க்கு சரியான ஆதாரங்கள் இல்லை.

    தற்காலத்தில் நடைமுறையில் கலைஞர் மற்றும் அதிமுகவின் தலைமையில் நடந்தேறிய (நடந்து கொண்டிருக்கிற) மக்களாட்சியில் இல்லாத கொடுமைகளா, அட்டூழியங்களா? நாட்டு மக்களை சுரண்டுகிற ஜன நாயக தேர்தல், சினிமா, சாராய பொருளாதாரத்தை விட ராஜராஜன் காலத்து அரசு நன்றாக இருந்திருக்கும் என்பது எனது கணிப்பு.

  46. A very lengthy discussion over Rajarajan and Tamil Kings. But Why you are keep mum over the Vijayanagara Rule over Tamil Nadu. Is it due to the affinity of your Telegu Leadership over Telugu, Kannada Rulers of Vijayanagara Dynasty

    • கிழிஞ்சுது, தமிழினவியாதிகளின் புதிய கிசுகிசு, மகஇகவுக்கு தெலுங்கு தலைமை.. அட்றா அட்றா

      • Vinavu and MKIK have consistently endorsed all anti-colonial rulers, especially those who resisted foreign aggression. Tippu Sultan was praised for his role. Kattabomman, the Maruthu brothers and others are heldf in respect.

        What is the relevance of Vijayanagara kingdom in a context of discussing the myths about the supposedly greatest Tamil ruler ever?
        Are you simply nit-picking or do you have a point to make?
        If there is a point to make please elaborate on it.

  47. vaalai poovil vasagar vattam athigama vantha thalithu, thazhthapatta samudhyam innum adimaigalaga irukum kootamunu solli solli kadaisila nammoda varalatru melayum kaiya vaichintingaley da. Nethi en bharathiya vasai padininga indru chozlan-i. Enathan unga pirachana??

  48. பெரியார் காலத்திலும் இப்போது நடப்பவைகையும் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன் நடந்ததுடன் ஒப்பிடுகிறீர்கள். மேலும் இதற்கான ஆதாரங்கள் என்னவென்பதையும் தெளிவாக விளக்கி இருக்கலாம். மன்னர்கள் என்பவர்கள் எதிர் நாட்டின் மீது படை எடுக்கவும் அவர்களின் செல்வங்களை கொள்ளை அடிக்கவும் மட்டும் அல்ல …. எதிரி நாட்டு மன்னன் படை எடுத்து வரும் போது நாட்டை பாதுகாக்கவும் தான். உங்களின் கோவம் இராஜ ராஜன் மீது அல்ல அவன் எழுப்பிய பெரிய கோவிலின் மீது தான். அதை ஒரு கோவிலாக பார்க்காமல் ஒரு வரலாற்று சின்னமாக பாருங்கள். ஒரு இனம் தன் பழமையை மறந்தால் அதற்கு அழிவு எல்லா விதத்திலும் வரும். அதனால் தான் தமிழுக்கு முன் தோன்றிய பல மொழிகள் அழிந்து விட்டன .. சமஸ்கிருதம் உட்பட.

  49. NINGAL GURUM GUTTU MIGAUUM TAVARANATHU VARALATTIL GURA PATTIRUPPATHU EALLAM NOT TRUE ,
    SOLAN PAKTHIMAAN ORU PAKTHIMAAM KOVILAI KATTA NINAIPPAVAN NINGAL GURUM THUYARA CEYALAI KANDIPPAGA SEYTHU ERUKKA MAATTAN

  50. சரியான பினாத்தல் மாமன்னர் ராஜராஜனை ஒரு ஜாதிகாரன் இல்லை தமிழகததில் உள்ள அனைத்து ஜாதிகாரனும் தனது ஜாதிகாரன் நல்ல மாமன்னர் என்னும் வேலை இந்த நபர் இப்படி எழுதியுள்ளாரே தேவாரத்தை கொண்டு வந்தாரே என்ற நல்ல எண்ணம் இல்லை வடை எண்ணச்சொன்னால் பொத்தலை எண்ணும் இவர் போக வேண்டிய இடம் கீழ்பாக்கம் தான்

  51. ராஜா ராஜன் காலத்தில் தான் நடுகள் வழிபாடு சிவ வழிபாடானது என்பதற்கு ஆதாரம் தேவை.

  52. பண்டாரம் =பண்டாரி ???

    பண்டாரம் என்பவர் யார்.. என் சாதியை சேர்ந்தவர்கள் அதை தான் பட்டபெயராக சேர்த்து கொள்கிறார்கள்… கண்டிப்பாக விளக்கம் தேவை.. லிங்க் இருந்தாலும் கொடுக்கவும்..

  53. பாதி பேர் பாசவன்னா வழித்தொன்றால் எனவும் சொல்லி கொள்கிறார்கள்… வீர ஷைவ ஜங்கமர் எனவும் சொல்லி கொள்கிறார்கள்.. ஒன்னும் புரியல.. விளக்கம் தேவை..

    காடுவெட்டி குரு, திருமாவளவனை நீ ஒரு பண்டாரம், உன் குல தொழில் ஜோசியம் சொல்வது என்கிறார். இது உண்மையா ??

  54. அற்புதமான புரிதல் பதிவு. இது போல கோபுரமாகட்டும், பிரமிட்டாகட்டும் அனைத்தின் உச்சியிலும் பார்ப்பானும் யூதனுமே இருப்பார்கள். பாதி உண்மையை ஒத்துகொண்டதட்கு நன்றி. இன்று என்னவென்றே தெரியவில்லை உங்கள் தளம் எனக்கு தோதான பதிவுகளையே ராண்டம் சாய்சாக காட்டுகிறது.

  55. சாதி மதம் என்றா மாமன்னன் அருள்மொழி வர்மன் என்னும் ராஜா ராஜா சோழனை இவ்வாறு தரம் குறைத்து பேசுகிறீர்கள்…??நீங்கள் எல்லாம் தமிழர்களா?? அப்படி ஒரு மன்னன் இல்லையெனில் இன்று உலக நாடுகள் வியக்கும் படியான கலை நுட்பமும் இவ்விதமான மர்ம அதிசயங்களும் எங்கும் காண்பது கடினம்….உலகமே வியந்து ஆச்சரியமூட்டும் பல சிர்ப்ப கலையும் கட்டிட கலையும் இப்பொழுது உள்ள காலகட்டங்களில் கட்ட நேரிடுமா…??? அந்த கோவில் முழுக்க கோவிலை கட்டிய மாமன்னன் ராஜா ராஜனின் பெருமை மட்டும் இல்லாமல் ஆங்கே வேலை செய்த கிழவி வரை அந்த கோவில் கல்வெட்டுளில் இடம் பெற்றுள்ளது….அவ்வாறு உள்ள மாமன்னனையா தரை குறைவாக பேசுகிறீர்கள்….!!! கடல் கடந்து மலை கடந்து புலி கொடியை நட்டு வைத்து போர்களில் கண்ட வெற்றியை இறைவனிடம் சமர்ப்பிக்க கட்டிய கோவில் தான் பெருவுடையார் கோவில்….இது மததிற்கோ ஜாதிக்கோ கட்டிய கோவில் அல்ல..அப்படி ஆனால் அந்த கோவிலுக்கு சைவ மதத்தினரை தவிர வேறு எவரும் வர முடியாத வாரு செய்திருக்க வேண்டும்….சுங்கம் தவிர்த்த சோழன்என்னும் சிறப்பும் சோழ வம்சத்தினரருக்கு உண்டு….நம் தமிழ் மண்ணை பெருமை படுத்தும் விதமாக தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை கொண்டு கோவிலை வடிவமைத்தார் ராஜா ராஜா சோழன்… இவ்வாறு கோவில்களை எழுப்பி இதை உலகே வியக்கும் படி உருவாக்கினர் சோழ வம்சத்தினர்…
    அவரின் காலத்தை யாரும் இங்கு ஆண்டும் கடந்தும் வரவில்லை….அவர் காலத்தில் அவர் நல்லவரா வல்லவரோ இல்லை தீயவரோ….நம் நாட்டின் பெருமை இது போன்ற கோவில்களால் ஆனதே…. அவரை பெருமை படுத்தவில்லை என்றாலும் இப்படி கொச்சையாக பேசி நம் தமிழ் மரபை நாமே கொச்சை படுத்த வேண்டாம்…இதற்கு பின் இப்படி பட்ட ஒரு மாமன்னர்களோ கலை நிபுணர்களோ..நம்மால் காண இயலாது …1003-1010 7 வருட காலத்திலே இப்படி உலகை வியக்க வைக்கும் கோவில் சாத்தியமற்றது….நம்மால் என்ன செய்ய முடியும்??? இப்படி கேளியாகவும் கிண்டலாகவும் மட்டும் தான் பேச முடியும்…அதை விட வதந்திகளை வெகு விரைவாக பரப்ப முடியும்….இதுவே இக்கால கட்டத்தில் உள்ளவர்களுக்கு உள்ள வேலை…. 80டன் கிரானைட் கள்ளை எவ்வித மெஷின்களும் கிரேன்களும் இல்லாத காலகட்டத்தில் மன் சாரம் அமைத்து யானைகளை கொண்டு உச்சியில் வைத்தார்…ஆனால் இப்போது உள்ள விஞ்ஞானம் திணறுகிறது…. கல் தோன்றா… மண் தோன்றா…காலத்திலே ஒருவர் இப்படி பட்ட ஒரு படைப்பை பறைசாற்றி இருக்கிறார் இது நம் தமிழர்களுக்கே பெருமை….ஆனால் நாமோ இங்கே அப்படி பட்ட மன்னரை கொச்சை படுத்துகிறோம்….ஆங்கே சிற்றம்பலத்தில் முதலாம் குலத்துங்கன் எந்த ஒரு விஞ்ஞானம் இல்லா காலத்திலேயே துல்லியமாக யோசித்து உலகத்தின் உள்ள காந்த ஈர்ப்பு விசையின் நடு மையத்தில் நடராஜரின் சிலையை வைத்துள்ளார்….இதுவல்லவா தமிழரின் பெருமை….இதுவல்லவா விஞ்ஞானம்….இதுவல்லவா தமிழரின் சிறப்பு …வெள்ளையர்கள் தேடி தேடி வந்து பார்த்து வியப்பில் வியங்க வைத்த மூத்த குடியான தமிழ் குடி தானே…அக்குடியில் பிறந்தவர்கள் தானே இன்று இப்படி உலகை திரும்பி பார்க்க செய்தவர்கள்…. இது போன்று பெரும் அதிசயத்தை உலகமெங்கும் பரவ செய்து தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று நம் தலையை நிமிர்த்தியது நம் முன்னோர்களை….இன்று இது போன்ற அதிசயங்கள் இல்லை என்றால் இந்த தமிழ்நாடு எப்படி சிறப்பு வாய்ந்திருக்கமுடியும்???உலக நாடுகளை காட்டிலும் தமிழ்நாட்டில் தான் அதிசயங்கள் பல உள்ளது…. அதுவும் நம் முன்னோர்களான மன்னர்களால்…இதை பற்றி எவரும் இங்கு பேசவில்லயே…..

Leave a Reply to mani பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க