privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைபெண்உதைபடும் பெண்வாழ்வு – முத்துலட்சுமி.

உதைபடும் பெண்வாழ்வு – முத்துலட்சுமி.

-

உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 10

vote-012நான் வீடு என்கிற மிகச்சிறிய வட்டத்திற்குள் இருந்து சற்றே இணையத்தின் மூலம் வெளியுலகை கவனிப்பவள். பெண்கள் பற்றிய என் கருத்துக்களைப் பகிர முல்லை என்னை அழைத்திருந்தார்.

பொதுவாக கணவனும் மனைவியும் சில நேரம் குழந்தைகளும் கூட கலந்தாலோசித்து குடும்பம் நடத்துவதென்பது இக்காலக்கட்டத்தில் அதிகரித்தே வருகிறது. கணவனோ மனைவியோ யாராவது ஒருவருடைய கை ஓங்கி இருக்கும் நிலையும் கூட இருக்கலாம். அது அவருடைய தனிப்பட்ட ஆளுமைத்திறன் காரணமாக இருக்கக்கூடும். ஆனால் ஆண் என்பதற்காக ஆதிக்கமோ அல்லது பெண் என்பதற்காக பச்சாதாபமோ அங்கே நுழைகின்ற போது அழகு குலைகிறது.

எப்பொழுதெல்லாம் பெண்கள் குரல் எழுப்புகிறார்களோ அப்பொழுதெல்லாம் அவர்களை தடுக்க என்று முன்பே கட்டமைக்கப்பட்ட ஒரு திட்டம் இருக்கிறது. அது முள்ளை முள்ளால் எடுப்பது என்பது போல பெண்ணைப் பெண்ணால் வீழ்த்துவது என்றும் சொல்லலாம்.
______________________________________________

என் வீட்டில் வேலைக்கு உதவும் பெண்ணை வெளிப்படையாகப் பார்த்தால் அவருக்கு அமைந்திருப்பது நல்ல கணவர்தான். அந்தக் கணவர் அவர்கள் குடியிருப்பில் மற்ற ஆண்களைப் போல குடிக்கவில்லை, சூதாடவில்லை. ஆனால் குழந்தைகள்
சண்டையிட்டுக் கொண்டால், குழந்தைகள் படிக்காவிட்டால் போன்ற குடும்பத்து பிரச்சனைகளுக்கெல்லாம் எட்டி உதைத்து விளையாட மனைவி வேண்டும் அவருக்கு.

கால்கள் வீங்கியோ அடிபட்டோ வேலைக்கு வரும் அந்தப் பெண்ணிடம், ” நல்ல மனநிலையில் மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் கணவரிடம் கேட்பீர்களா ? ஏன் அடிக்கிறீர்கள், பிரச்சினை தீரவா செய்யும்? குழந்தைகள் முன் இப்படி செய்யலாமா என்றெல்லாம் ஏன் கேட்பதில்லை?” என்று கேட்பேன்.

“கேட்கலாம். ஆனால் அந்நேரத்தில் அடித்துவிட்டு இரவில் அவரே கூட அதிக அழுத்தம் காரணமாக உடல்நிலை முடியாமலோ, ஃபிட்ஸ் வந்தோ சிரமப்படுவார். பலநேரங்களில் சிறு சிறு சலசலப்புக்கே மாமியார் வந்து நின்று அவருக்கு சப்போர்ட்டாக பேசும்போது எதும் சொல்ல இயலாது அக்கா” என்பார்.

பொறுக்க முடியாமல் அபூர்வமாக ஒரு நாள் அப்படிக் கேட்டதற்கு, “பெண்தான் சரியான முறையில் பிள்ளைகளை வளர்க்கனும். டீவியில், சினிமாவில் வரலையா..அம்மாவை அடித்தால் பிள்ளை சரியான பாதைக்கு வரும்” என்று பதில் சொல்லி இருக்கிறார், அந்தக் கணவர். ஒரு முறை எட்டி உதைத்ததில் கணவருடைய கால் சுளுக்கி பிரச்சனையாக இருந்தபோது அவர் மாமியார் “அடிவாங்கிவிட்டு சபித்திருப்பாள். அதனால்தான் மகன் கால் இப்படியாகியது” என்று புலம்புவதும் நிகழ்ந்திருக்கிறது.

உதைபட்ட பெண்ணின் வலியைவிட உதைத்தவனது வலிதான் அந்த மாமியாருக்கு பிரச்சினை என்பதோடு அதற்கும் உதைபட்டவளேயே கரித்துக் கொட்ட வேண்டுமென்றால் இத்தகைய ஏழைப் பெண்களுக்கு என்ன விமோச்சனம் இருக்கிறது? இதையும் கூட பெண்ணுக்கு பெண்தான் எதிரி என்று மடக்கிப் பேசுவதற்கு அநேக ஆண்களும் தயாராகத்தான் இருக்கிறார்கள்.

தன் கணவர் 5000 சம்பாதித்தாலும் ஆண் குழந்தை வேணுமென்கிற காரணத்துக்காக இரண்டு பெண்களுக்கு பிறகு பெற்ற பையனுக்குமாக சேர்த்து அவர் சம்பாத்தியம் (குழந்தைகளின் படிப்பு செலவுக்கு) போதாதே என்று வீட்டு வேலைகளைச் செய்து பணம் (ஏறக்குறைய 2500) சம்பாதித்துக் கொடுக்கிறாள் அந்தப் பெண். உழைக்கும் பெண் என்பதால் அவருக்கு இருக்கும் ஒரே கௌரவம், “நான்தானே சோறு போடுகிறேன்” என்ற வார்த்தை மட்டும் அவர் கணவனால் கூறமுடியாது என்பதே. தான் உழைப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்பார் அந்த தங்கை.

மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்து சொந்த வீட்டு வேலைகளையும், வருமானத்திற்காக மற்ற வீட்டு வேலைகளையும் எந்திரம் போல ஓடியாடி செய்து ஓய்ந்து போயிருக்கும் அவருக்கு சந்தோஷத்தை தராவிட்டாலும் துன்பத்தையாவது அளிக்காமல் அவர் கணவன் இருக்கலாமே? தமிழ்நாட்டில் சொந்த தோட்டத்தில் உழைத்து வந்த அந்த பெண்ணுக்கு இங்கே இப்படி வேலை செய்ய நேர்ந்தாலும் தன் குடும்பத்தில் தன் நிலையை கொஞ்சமேனும் தன்மானத்தோடு நிலை நிறுத்த இதுவே வழியாகப்படுகிறது. இதுவும் இல்லையென்றால் அவருக்கான சித்திரவதைகள் இன்னும் பலமடங்கு அதிகரித்திருக்கலாம்.

அவர்களின் பெண்குழந்தைகளை கணினி மற்றும் தையல் போன்ற எதாவது தொழில் கற்றுக் கொள்ளச் சொல்லி இருந்தேன். பெரியவள் தையல் சென்றாள். கணினி படிக்கவும் முயன்று வருகிறாள். இவையெல்லாம் எதுவும் மாற்றம் கொண்டுவருமா என்று எனக்குத் தெரியவில்லை. அவர்களுக்கும் பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் திருமணமாகப் போகிறது. அவர்கள் கணவன்மார்கள் குடிக்காமல், சூதாடாமல், அடிக்கிற கையால் அணைத்துச் செல்பவராயும் வரவேண்டும் என்றுமட்டும்தான் அவர்களின் வேண்டுதல் இருக்குமென்று நினைக்கிறேன். மகிழ்ச்சி நிறைந்த வருங்காலக் கற்பனைகளைவிட துன்பம் தரும் நிகழ்கால எதார்த்தங்கள் இல்லாமல் போகவேண்டுமென்பதையே கனவாக கொண்டிருக்க வேண்டுமென்றால் இந்த உலகம் என்பது பெண்களைப் பொறுத்தவரை நரகம்தானோ?
_____________________________________________

இன்னமும் வரதட்சணை இருக்கிறது. சில மணமகன்கள் அது வேண்டாமென்கிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரியாமல் குடும்பத்தினர் வாங்குகிறார்கள். நடுத்தர வகுப்புகளில் கல்லூரி முடித்தால் திருமணம் ஆகும், என்ற நிலை மாறி வேலைக்குச் சென்றால்தான் திருமணம் என்ற நிலை வந்திருக்கிறது. சில பெண்கள் திருமணம் ஆக வேண்டிய காரணமாகவே  வேலைக்குச் செல்கிறார்கள். வேலை வாங்கிக் கொடுத்து கல்யாணம் கட்டிக்கொண்டவர்களும் உண்டு. ஆக படிப்பும், வேலையும் பெண்ணை விற்பதற்கான தகுதிகளாகத்தான் மாறியிருக்கிறது என்றால் பெண்ணுக்கு என்று எந்த சுதந்திரமான தனித்துவமான வாழ்வும் இல்லை என்றுதானே பொருள்?

ஒரு காலத்தில் நான் விரும்பிய படிப்புகளை பெண் என்ற காரணத்தால் படிக்க இயலாமல் போய்விட்டது. தூர தொலைவுகள், தங்கும் வசதிகள் இன்னபிற காரணங்கள் பெண்களுக்குத்தான் தடைக்கல்லாக இருக்கிறது. அப்போதெல்லாம் பெண்ணாக
பிறந்ததற்காக மிகவும் அழுதிருக்கிறேன்.

நான் வேலைக்கு செல்லவேண்டும் என்று வளர்க்கப்படவில்லை. எங்கள் குடும்பத்தின் முதல் வட்டத்தில் யாரும் முன்மாதிரியாக வேலைக்குச் செல்லவில்லை. ஆனால் என் தாத்தாவுக்கு நான் வேலைக்கு செல்லவேண்டும் என்று ஆசை இருந்தது. விடுமுறைக்குச் சென்ற இடத்தில்  தாத்தவின் வீட்டிலிருந்தபடி 4 மாதங்கள் நான் வேலை செய்திருக்கிறேன். பிறகு திருமணம் ஆகிவிட்டது.

இப்போது இருக்கின்ற ஊரில் எனக்கு மொழிப்பிரச்சனை காரணமாக நான் முயற்சி செய்யவில்லை. குழந்தைகள் காரணமாக பின்னால் வேலைக்குச் செல்ல இயலவில்லை. ஆனால் எனக்கு அடுத்து குடும்பத்தில் பல பெண்கள் முதலில் வேலைக்குச் சென்று விட்டு கல்யாணம் செய்திருக்கிறார்கள். {அழகன் படத்தில் வருவது போல.. கொஞ்ச வருசம்  கழிச்சி பிறந்திருக்கலாம் :)}. காலம் சற்றே மாறி இருப்பதாகவே படுகிறது. அவர்களின் சம்பாத்தியப் பணம் யாரிடம் குடுக்கிறார்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. விசாரிக்கவில்லை. ஆனால் என் வீட்டுவேலை செய்யும் பெண்ணின் கதையைப் பார்க்கும் போது இந்தத் துயரம் ஏழைகளுக்கு மட்டுமல்ல, நடுத்தர வர்க்க பெண்களுக்கும் கூட – என்ன அடிதடி இல்லையென்றாலும் – இருக்கும் என்றே தோன்றுகிறது.

அதேநேரம் என் அத்தை, மாமாவின் இறப்பிற்கு பிறகு அரசாங்க வேலைக்கு பயிற்சி பெற்று தற்போது வேலை செய்து வருகிறார்கள். அவர்களிடம் மிகப்பெரிய மாற்றத்தைக் காண்கிறேன். நிச்சயமாக பெண்களின் நிலையில் வேலையும், வெளியுலகமும், மாற்றத்தையும், தன்னம்பிக்கையும் தரும் என்கிற விசயத்தை அத்தையின் மூலம் ஆணித்தரமாக உணர்ந்திருக்கிறேன்.
______________________________________________

தடாலடியாக வரும் மாற்றம் கலவரப்படுத்தக்கூடியது. இதுவோ மெதுவாக மிக மெதுவாக நிகழ்கிற மாற்றம்.. 100 ஆண்டுகளாக கோரிவருகிற கோரிக்கைகள். அதற்கும் முன்பிருந்து இருக்கின்ற பிரச்சினைகள். உலகம் முழுவதுமே இருக்கின்ற நிலை. தினம் தினம் செய்திகளில் அதுவும் வடநாட்டில் பெண்களை டௌரிக்காகவும் மற்ற காரணங்களுக்காகவும் வீட்டை விட்டு துரத்துவதும், கொலை செய்து கட்டில் பீரோக்களில் ஒளித்து வைத்த கணவர்களையும் குடும்பங்களையும் பற்றி படிக்கிறேன். குடும்பப் பெயருக்கு ‘களங்கமேற்படுத்திய’ பெண்களை ஊரும் , உறவுகளும் பார்க்கும்போதே கொலை செய்கிற நிகழ்வுகள் நடக்கின்றன.

சிறிது நாட்களுக்கு முன், தில்லியில் ஒரு அப்பா தன் மூன்று மகள்களையும் மனைவியையும், வெளிஉலகம் மிகக் கொடுமையானது என்று கூறி வீட்டிற்குள் அடைத்து வைத்துவிட்டு தான் மட்டும் வேலைக்கு சென்று வந்திருக்கிறார். தன் பேச்சைக் கேட்காத மகளை அடித்ததில் அவள் கழுத்து காலத்திற்கும் கோணியே போய்விட்டது. கண்ணாடி  ஜன்னல் கதவுகள் பேப்பர் வைத்து மூடப்பட்ட இருட்டு சிறைகளில் அவர்கள் பல ஆண்டுகள் வசித்திருக்கிறார்கள். ஒளி படாத வெளிறிய பெண்களை ஒரு மகள் தப்பிச்சென்று  என் ஜி ஓ ஒன்றின் மூலமாக வெளியுலகிற்கு கொண்டுவந்தாள்.

ஆனால் அவர்களை மீட்கச் சென்றிருந்த அமைப்பாளர்களில் ஒரு பெண் சொல்கிறார்: ” எத்தனையோ மக்களின் மிக மோசமான குடியிருப்புகளுக்கு உதவச் சென்றிருக்கிறோம். ஆனால் அந்த வீட்டின் நெடி தாக்கி நான் மயக்கமே அடைய இருந்தேன்.”  .. ஒரு நொடி எட்டிப்பார்க்கும் அவருக்கே அந்த நிலை என்றால் அக்குடியிருப்பில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்த அப்பெண்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்.

வாழ்க்கையின் பல நன்மைகளைப் பெற்று நல்ல தகப்பன், நல்ல கணவன், நல்ல சகோதரனைப் பெற்றுவிட்டதால் நாங்கள் சுகமாய் இருக்கலாம். நீங்கள் நல்ல தகப்பனாய், நல்ல கணவனாய், நல்ல சகோதரனாய், நல்ல நண்பனாய் இருப்பதால் மட்டுமே உலகம் சுபிட்சம் அடைந்துவிடவில்லை. “பெண்கள் முன்னேறிவிட்டார்கள் அவர்களிடம் இருந்து ஆண்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தாருங்கள்” என்று தந்திரமாக சொல்கிறவர்களும் இருக்கிறார்களே?

…எண்ணிப்பாருங்கள்.

இப்படிப்பட்ட சைக்கோக்கள் எவ்வாறு உருவாகிறார்கள், யார் உருவாக்குக்கிறார்கள்? பெண்கள் குடும்பத்தின் மானத்தைக் காக்கும் குலதெய்வங்களாக அக்காலத்தில் குழியிலும் உயிரோடு சமாதியிலும் இறக்கிய காலத்திற்கும் இன்றைய காலத்திற்கும் என்ன வித்தியாசம்?
__________________________________________

மாற்றங்களின் முதல் படி நம்மிலிருந்து நம் வீட்டிலிருந்து
தொடங்கவேண்டியது என்ற கருத்தோடு செய்யவெண்டியவை என்று பார்த்தால்- அடுத்த தலைமுறை பெண்ணாக என் மகளுக்கு தன்னம்பிக்கையோடு வாழ்வை மேம்படுத்த உதவவேண்டியதும், பெண் என்பதற்காக சலுகைகளை எதிர்பர்க்காமல்,பெண் என்பதற்காக பழிக்கப்படும் போது, அடக்கப்படும்போது எதிர்க்க தைரியம் உள்ளவளாக வளர்க்கவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஆண் குழந்தையை ஆண் என்பதால் விளக்கமாற்றை தொடக்கூடாது அல்லது அடுக்களையில் உதவக்கூடாது எனப் பிரித்துப் பார்க்காமல், ஆண் என்கிற அகந்தை இல்லாத  பெண்ணிற்கு நிகரான அன்பும் விட்டுக் கொடுத்தலுமான வாழ்க்கைக்கு பழக்கப்படுத்த வேண்டியதும் மற்றொரு கடமை. குடும்பத்தில் மட்டும் வாழும் என்னைப் போன்ற பெண்கள் இதை மட்டுமாவது சரியாகச் செய்யவேண்டுமென்பது எனக்குத் தெரிந்த கடமையாக கருதுகிறேன்.

கஷ்டப்படும் யாருக்காவோ இறங்கிச் செயல்படமுடியாத தளைகள் என்னை வருத்தமுறச் செய்தாலும் எவருக்கும் நேரடியான துன்பம் இழைக்காத வண்ணம் வாழ முயற்சிக்கிறேன்.

பதிவிட அழைத்த முல்லைக்கும் பதிவினை வலையேற்றிய வினவுக்கும் நன்றி.
_______________________________________

–   முத்துலட்சுமி.

–     “இளங்கலை வேதியியல் மற்றும் விளம்பரத் துறையில் டிப்ளமோ பெற்றிருக்கிறேன். பள்ளி செல்லும் இரண்டு குழந்தைகளின் தாய்.  தில்லியில் வசிக்கிறேன். கவிதைகள் , புகைப்படங்கள் ,அனுபவக்கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் ஓவியம் , அனிமேசன் போன்று வாழ்வில் நானெடுக்கும் சிறு சிறு முயற்சிகளை ”சிறுமுயற்சி “ ப்ளாகில் பதிவிட்டு சேமிக்கிறேன்”

–  முத்துலட்சுமியின் வலைப்பூ: http://sirumuyarchi.blogspot.com/

vote-012

தொடர்புடைய பதிவுகள்

சமூகம் > பெண்