privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்நான் ஒரு பெண் - ஆலங்கட்டி

நான் ஒரு பெண் – ஆலங்கட்டி

-

உழைக்கும் மகளிர்தினச் சிறப்புப் பதிவு  – 10

பெண்ணாக என்னை உணரத் தொடங்கிய அந்நாள் இன்னும் என் ஞாபகத்தில் உள்ளது. பத்து வயது வரை என் வயதையொத்த தம்பியுடனும் அவன் நண்பர்களுடனும் ஊரிலுள்ள கால்வாய், குளங்களிலெல்லாம் மீன் பிடித்தும்,அறுவடை முடிந்த வயற்காட்டில் பந்தயப் புறாக்களைப் பறக்க விட்டும், ஓணத்தையொட்டி ஊர் மைதானத்தில் ஓணப் பந்தாடியும், வீட்டிற்கு ஒரு பொருள் தேவையென்றால் கடைக்கு சளைக்காமல் நூறு முறை ஓடியும் திரிந்த காலத்தில் அவர்களெல்லாம்  ஆண்களென்றும் நான் மட்டும் பெண்ணென்றும் எனக்குத் தெரியாது.

திடீரென்று ஒரு நாள் அம்மா என்னிடம் ‘நீ இன்றைக்கு கடைக்குப் போக வேண்டாம். இனி தம்பி பொருள் வாங்கி வருவான்’ என்று சொன்னார்கள். நான் ஆடிப் போய் விட்டேன். அம்மா பலமுறை அவனைக் கெஞ்சிக் கேட்டால் தான் ஒரு பொருளை வாங்க கடைக்குச் செல்வான். நானென்றால் சொல்வதற்குள் ஒரே ஓட்டமாகப் போய் வாங்கி வருவேன். கடைசியாக முந்தைய நாள் எவ்வளவு வேகமாகப் போய் தீப்பெட்டி வாங்கி வந்தேனென்பதை எல்லாம் சுட்டிக்காட்டினேன். கெஞ்சிப் பார்த்தேன். அம்மா அசைந்து கொடுக்கவேயில்லை. காரணம் நான் இன்னும் குழந்தையில்லையாம். அன்று முதல் நான் ‘பெண்’ ணாம். அப்படி நானன்று பெண்ணானேன். என் ‘பொது வெளி’ (public  sphere) என்பது வெறும் பள்ளிக்கூடமாகச் சுருங்கியது. அம்மா வழி குடும்பத்திலெல்லாம் ஆண் பிள்ளைகளான‌ அவர்களுடனான எனது உறவும் ‘என்ன எப்படி இருக்க. நல்லாப் படிக்கிறியா’ என்பது மாதிரியான கேள்விகளில் ஒதுங்கியது. கிராமமாக  இருந்தாலும் அழிந்து கொண்டிருந்த நிலப்பிரபுத்துவ எச்சங்களும், வளர்ந்து கொண்டிருந்த குட்டி முதலாளித்துவ வாழ்க்கை முறையும் காரணமாக எங்கள் குடும்பம் பொதுவாக கிராமங்களிலிருப்பது போல பக்கத்து வீடுகளில் உட்கார்ந்து அரட்டையடிப்பது, அடுத்த வீட்டுப்பெண்களுடன் கோயில் குளமென்று சுற்றுவது போன்ற எந்தப் பழக்கத்தையும் வைத்துக் கொள்ளவில்லை. இது என்னைப் பள்ளிக்கூடமில்லாத விடுமுறை நாட்களில் நான்கு சுவருக்குள் மட்டும் புழங்க வைத்து, என் எல்லைகளை மேலும் சுருக்கியது. நான் பார்த்திருக்க என்னுடனே வளர்ந்த என் தம்பி எந்தவிதக் கட்டுபாடுகளுமில்லாமல் விளயாடச் சென்றான். அவனது நண்பர்களுடன்  மாலை நேரங்களில் அரட்டையடித்தான். இரவு தாமதமாக‌ வந்தாலும் யாரும் அவனைக் கேள்வி கேட்பதில்லை. எனது பள்ளித் தோழியின் வீடு பள்ளிக்குப் போகும் வழியிலிருந்தது. வரும் வழியில் அவள் கூப்பிட்டால் என்பதால் போய் தண்ணீர் குடித்துவிட்டு வந்தேன். வழக்கத்தை விட வீட்டையடைய ஐந்து நிமிடம் தாமதமானது. அன்று முதல் பள்ளித் தோழிகளின் வீட்டிற்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

நான் படித்தது அரசுப் பள்ளிக்கூடத்தில். அங்கு மாணவர்களெல்லாம் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்துவிட்டு தான் படிக்க வருவார்கள். நான் மட்டும் தான் டீச்சர் பொண்ணு. ஆதிக்க சாதியான  நாயர் வேறு. இயல்பிலேயே அவர்களுக்கு என்னுடன் சகஜ‌மாகப் பழகக்  கூச்சமுண்டு. இந்நிலையில் எனது வீட்டிற்கு அவர்கள் வர முடியாது, அவர்கள் வீட்டிற்கும் நான் செல்ல முடியாதென்பதால் எனது தோழிகள் வட்டமும் மூன்று, நான்கெனச் சுருங்கியது. ஆண் நண்பர்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஐந்தாம் வகுப்பு வரை கூடவேயிருந்து படித்தவனெல்லாம், ஆறாம் வகுப்பானதும் என்னுடைய முகத்தில் விழிக்கவே மாட்டார்கள். இப்படி எனது உலகம் வீடு பள்ளிக்கூடமெனச் சுருங்கிக் கொண்டிருந்த போது, என் தம்பியின் உலகமோ கராத்தே வகுப்பு, தியேட்டர், கால்ப்பந்து, நகைச்சுவை என விரிந்துகொண்டே  போனது. எனக்கிருந்த ஒரேயொரு பொழுதுபோக்கு அப்பா வாங்கித்தரும் புத்தகங்களும், பத்திரிக்கைகளும்  தான்.

போதாக்குறைக்கு  இப்போதெல்லாம் வீட்டு வேலைகளைச் செய்ய வைப்பதில் அம்மா பாரிய வேறுபாடுகளைக் காட்டத் தொடங்கினார். வீட்டைச் சுத்தம் செய்வதும், பாத்திரம் விளக்குவதும் எனது கட்டாயப் பணியாக்கப்பட்டது. ஒரு நாள் உடம்பு முடியாமலிருந்தாலும் என் தட்டு நான் அதைக் கழுவும் வரை மேசை மேல் தீண்டப்படாமல்  கிடக்கும். ஆனால் தம்பியோ ஆண்பிள்ளை. எச்சிலைத் தொடக் கூடாது. துடைப்பத்தை எடுத்தால் அவனுக்கு மீசை முளைக்காதாம். எனவே வந்து சாப்பிடுவான். கீழே விழும் எச்சிலைக் கூட பெறுக்கிப் போட மாட்டான். தட்டை நானோ அம்மாவோ தான் கழுவுவோம். நாள்தோறும் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியவில்லை. எனது எதிர்ப்பும் கோப‌மும் வார்த்தைகளாக வெடித்தது. அந்த நாட்கள் என் வாழ்கையின் மிகவும் மோசமான நாட்கள். வீட்டில் அப்பா மட்டும் எனக்காகப் பேசுவார். ஆனால் அம்மா மட்டும் எனக்கு எதிரியானார். தம்பி பல நேரங்களில் இதனைப் புரிந்து கொண்டு நடந்தாலும் அவனிடம் முளைவிட்டிருந்த  ஆணாதிக்கம் எனக்கெதிராகவே இருந்தது. அவனை ஒரு சின்ன எறும்பு கடித்தாலும் நான் பொறுப்பேற்க வேண்டியதாயிற்று.

ஒரு நாள் இப்படிப்பட்டதொரு நிகழ்விற்கு அம்மா என்னைப்  பொறுப்பாக்கி ஒரு விறகுக்கட்டையை என் மீது வீசி, என்னைத் திட்டிக் கொண்டேயிருந்தார். அடியின் வலியை விட அவர்களின் குற்றச்சாட்டால் நான் மேலும் உடைந்து அழுதேன். பார்த்துக் கொண்டிருந்த அப்பாவால் தாங்க முடியவில்லை. அவர் என்னை அழைத்து கையில் சிக்கிய‌ சில்லறையைக்  கொடுத்து ‘நீ எங்காவது கடலில் விழுந்து செத்திடு. பொண்ணா பொறந்ததால தானே இப்படிப் பண்றா. இனி நீ வீட்டுக்கு வர வேண்டாம்’ என்று அழுதுகொண்டே சொன்னார். நான் தயங்கி நின்றேன். அவர்களுக்கிடையேயான  சண்டை மேலும் வலுத்தது. நான் அங்கு மேலும் நின்ற கொண்டிருந்தால் சண்டை அதிகமாகுமென்று நினைத்து வெளியே சென்றேன். சிறிது நேரத்தில் என் தம்பி பின்னால் ஓடி வந்து “எங்க போற? நானும் உன் கூட வர்றேன்” என்றான்.’அப்பா கொல்லங்கோட்டு கடலில் விழுந்து சாகச் சொன்னார். கொல்லங்கோடு  எங்கிருக்கென்று   தெரியாது’ என்றேன். எங்களுக்குத் தெரிந்த ஒரே வீடு அப்பாவைப் பெற்ற‌ பாட்டி வீடுதான். அவன் அங்கு செல்லலாம்  என்றான். இரண்டு பஸ் ஏறி பாட்டி வீட்டிற்கு முன் கையில் ஒரு ரூபாயுடன் இறங்கும்போது நேரம் இருட்டி விட்டது.

பாட்டி விஷயம் தெரியாமல் எங்களைத் தனியாக அனுப்பிய அப்பாவைத்  திட்டிக் கொண்டேயிருந்தார். வீட்டில் சித்தப்பாவும் இல்லாததால் பாட்டிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இப்பொழுது போல் தகவல் சொல்ல போன் இல்லாத காலம் அது. இரவு அண்ணனும் (பெரியம்மா பையன்) அவன் நண்பனும்  பைக்கில் வந்து எங்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். போகும் வழியில் ஒன்றும் பேசவேயில்லை. வீட்டிற்குப் போகும் முன்னரே சாலையெங்கும்  ஆட்கள். நிறைய வாகனங்கள் இருமருங்கிலும். ஊர் மக்களும் உறவினர்களும் வீட்டில் குழுமியிருந்தனர். உள்ளே அம்மாவும் உறவினர்களும் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தனர். அப்பா வாசலில் நின்றபடி தலையில் கைவைத்துக் கொண்டிருந்தார். எங்களைப் பார்த்ததும் அம்மா ஓடி வந்து கட்டிப்பிடித்து முத்தமிட்டார். ‘அப்போ அம்மாவுக்கு என்னைப் பிடிக்கும். அவர்களுக்கு நான் வேண்டும்’ என்ற உண்மையே என் கண்ணிலிருந்து மலைமலையாகக் கண்ணீரை வரவழைத்தது. பிறகு தான் தெரிந்து கொண்டேன், நாங்கள் போனவுடன் அம்மாவும் அப்பாவும் சமாதானமாகி எங்களை உறவினர்களின் வீடுகளிலெல்லாம் தேடியும் எங்கும் காணாததால் ஊரிலுள்ள  கிணறு குளமெல்லாம் தேடியுள்ளனர்.

இச்சம்பவம்  நடக்கும் போது நான் ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். செய்தி பள்ளிக்கூடத்திற்கும் பரவியது. என் அம்மாவும் அங்கே ஆசிரியராக‌ இருந்ததால் நடந்ததை சக ஆசிரியையிடம் சொல்லிருப்பார்  போலும். எனது வகுப்பாசிரியை  என்னிடம் ‘நீ வீட்டில் சண்டை போடுகிறாயாம். அம்மா பேச்சைக் கேட்காமலிருக்கும் அளவுக்கு  உனக்கு என்ன பிரச்சனை’ என்றார். நான் வரிசையாக அடுக்க ஆரம்பித்தேன். ‘அவனுக்கு சைக்கிள்  வாங்கிக் கொடுத்தாங்க. எனக்கு சைக்கிள் ஓட்டவே கத்து தரல.  எனக்கு நீச்சல் சொல்லித் தரல. குளத்துல குளிக்கவும் விடறதில்ல. ஆனா அவன் மட்டும் தினமும் ஒரு மணி நேரம் குளத்தின் இக்கரையிலிருந்து அக்கரைக்கு நண்பர்களுடன் நீச்சல் போட்டி நடத்துகிறான். அவன் கேட்டான் என்பதாலே நூறு ரூபாய்க்கு கலர் மீனும், தொட்டியும் அதில் வைக்க மோட்டாரும் வாங்கிக் கொடுக்கின்றனர். நான் என்னவெல்லாம் கேட்டுருக்கேன், வாங்கித் தந்தாங்களா?. ஏன் அவன் சும்மா இருக்கும்போது என்னை மட்டும் வீட்டு வேலை செய்ய வைக்கிறார். அவன் தின்ற பாத்திரத்தைக் கூட என்னைக் கழுவச் சொல்றாங்களே!’ என அடுக்கிக்கொண்டே போனேன். டீச்சர் சொன்னார் ‘அவன் ஆண்பிள்ளை. நீ தான் அட்ஜஸ்ட் பண்ணிப் போக‌ணும்ய. வீட்டுக்கு வந்தபோது மீண்டும் ஆரம்பித்தது குற்றச்சாட்டு. இப்போது எனக்கு தம்பி மேல் பொறாமை என்று சித்தரிக்கப்பட்டது. இன்றைய‌ எனது முப்பது வயதிலும் கூட அம்மா அச்சம்பவத்தைச் சுட்டிக்காட்டி குறைபடுவதுண்டு, அதற்குப் பின்னால் இருந்த வலியை உணராமலேயே.

வளர்ந்தேன். பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கும் போதெல்லாம் எனக்கும் அம்மாவுக்குமிடையே கடக்க முடியாத இடைவெளி உருவாகியிருந்தது. தம்பி அம்மா பக்கமும், அப்பா என் பக்கமுமாக வீடே இரண்டு பட்டது. அப்பா அம்மாவையும் என்னையும் சமாளிக்க முடியாமல் திணறினார். பிளஸ் டூ வில்  மதிப்பெண்கள் மிகக் குறைவாகவே  வந்தது. அந்நேரம் அப்பாவைத் தவிர பிற ஆண்களிடம் இனம்புரியாத வெறுப்பு ஏற்பட்டிருந்தது. நான் வீட்டிலிருந்தால் பிரச்சினை மேலும் பெரிதாகும் என்றெண்ணிய  அப்பா என்னை விடுதியுள்ள பெண்கள் கல்லூரியில் சேர்த்தார். எனக்கு ஒரு இடைவேளை  கிடைத்தது. எனக்கு மனம் விட்டுப் பேச தோழிகளிருந்தனர்.நூலகத்திலுள்ள எல்லா நாவல்களையும்  படித்தேன். அப்பா எனக்கு வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கி இருந்தது, நூற்களை  தேர்வு செய்ய வெகுவாகக் கைகொடுத்தது. கராத்தே கற்றுக் கொண்டேன். என் தோழிகளுடன் குடும்பரீதியான நட்பைப் பேண ஆரம்பித்தேன். இங்கு என்னைக் கட்டுப்படுத்த நான் மட்டுமே இருந்தது என் சமூகரீதியான வளர்ச்சியை மேலும் ஊக்குவித்தது.

முதுகலைக்கு பல்கலைக்கழகத்திற்கு வந்தேன். அங்கும் விடுதி. பல ஆண் நண்பர்களும் இருந்தனர். பள்ளி நாட்களில் என் பின்னே நடந்து வந்து, கிண்டலடித்து, கேலி பேசி ஆதிக்கம் செலுத்திய ஆண்களைப் போல இல்லாமல் இவர்கள் என்ன மரியாதையாக நடத்தினர் என்பதே ஆண்கள் மீதான என் வெறுப்பை மாற்றியது.

இக்காலகட்டங்களில் என் தோழிகள் என் வீட்டுக்கு  வந்து போயினர். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே எங்கள் சாதி தவிர்த்த அனைவருக்கும் எங்கள் உறவினர் வீடுகளிலெல்லாம் வாழையிலையில்  தான் உணவு பரிமாறுவார்கள். என் அம்மாவும் இதற்கு விதிவிலக்கல்ல. இதை அவர் என் தோழிகளிடமும் கடைபிடிப்பார். இதனால் பள்ளி நாட்களிலிருந்தே அம்மா வீட்டிலிருந்தால்  தோழிகளை வீட்டிற்கு அழைத்து வர மாட்டேன். கல்லூரிக் காலத்திலும் வாழையிலைக் கதை தொடர்ந்தபோது நான் அவர்களுக்கு அம்மா முன்னிலையிலேயே  பாத்திரத்தில் பரிமாறினேன். அம்மா பாத்திரங்களை அடுப்பில் போட்டு சுட்டார். மீண்டும் வீட்டுக்கு செல்லும் நாட்களெல்லாம் சண்டை. ஒரு முறை எம்.எஸ்.சி தோழிகள் வீட்டில் இரண்டு நாள் தங்கிச் சென்றனர். இம்முறை அப்பாவின் முயற்சியால் தட்டில் சோறு பரிமாறப்பட்டது. பிரச்சினைகள் தீர்ந்தது எனச் சந்தோஷப்பட்டிருந்த நேரம் ‘அவர்கள் என்ன சாதி’ என்று அம்மா என்னை விசாரித்தார். கோபத்தில் எனக்குக் கண் மண் தெரியவில்லை. ‘நான் ஒரு தலித்தைத் தான் கல்யாணம் செய்வேன். உங்க கையாலேயே அவருக்கு தட்டில் சோறு போட  வைப்பேன் அம்மா’ என்று அப்பாவின் தலையிலடித்து ஆணையிட்டேன். வீட்டில் பயங்கர ரகளை. அது வரைக்கும் எல்லாவற்றுக்கும் எனக்காக வாதாடும் அப்பா கூட ஆடிப் போய் விட்டார். அம்மாவைப் பற்றி சொல்லவே வேண்டாம். இது நடந்தது இரவு. காலை நான்கு மணி வரை தொடர்ந்த சண்டையால் நான் விடியற்காலையிலேயே பல்கலைக்கழகத்துக்குக் கிளம்பினேன். போகும் வழியெல்லாம் அம்மாவின் நிலப்பிரபுத்துவ பின்னணியும், அதனால் தான் அவர்கள் அப்படி நடக்கிறார்கள் என்றும் புரியவைக்க முயற்சி செய்தார் அப்பா. நான் சிறிதும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.

நாட்கள் வேகமாகச் சென்றது. அம்மாவும் அப்பாவும் நடந்ததை மறந்து என்னுடன் சகஜ‌மாயினர். இதற்கிடையே தோழர் ரகுபதியை ஓர் ஆர்ப்பாட்டத்தினூடே சந்தித்தேன். எங்களுக்கிடையே  கொள்கைரீதியான  நட்பு வளர்ந்தது. ஒரு கட்டத்தில் அவர் பேச்சிலிருந்தும் எனக்குப் படிக்கக் கொடுத்த புத்தகங்களிலிருந்தும் அவர் ஒடுக்கப்பட்ட ஏதோ ஒரு சாதியைச் சேர்ந்தவரென்பதைப் புரிந்து கொண்டேன். ஆனால் நான் கேட்கவில்லை, அவரும் சொல்லவில்லை. எம்.எஸ்.சி  முடித்து ஊருக்குப் போகும்போது, திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்தார்.
நான் சரியென்றேன். என்னுடைய வீட்டில் சொல்லிப் போராடி ரப்பர் பாண்ட் மாதிரி இழுக்க எனக்கு விருப்பமில்லையென்றேன். மறுநாளே அவர் அண்ணன் வீட்டில் வைத்து பதிவுத்திருமணம் செய்து கொண்டோம். திருமணத்தன்று காலையில் அவரது அண்ணன் அவரிடம் ‘நாம என்ன சாதின்னு அவளுக்குத் தெரியுமா’ என்றார். அவர் தெரியாதென்றதும், அவரிடமே சொல்லச் சொன்னார் அண்ணன்.’நான் இந்து பறையர் சாதி. உனக்கொன்றும் பிரச்சனையில்லையேய என்றார். ‘இதில் எனக்கென்ன பிரச்சனையிருக்கிறதுய என்றேன். தாலியில்லாமல், மாலையில்லாமல், அய்யர்  இல்லாமல் என‌து திருமணம் நடந்தது.

வீட்டில் அதுவரை நான் இப்படியெல்லாம் இருப்பேனென்று தெரியாததால், முதலில் அப்பாவும் அம்மாவும் அதிர்ச்சியடைந்தனர். முதலில் சுதாரித்தது அம்மாதான் என்று அப்பா பிறிதொரு முறை சொன்னார். தம்பியிடமும் அவர்களே பேசி, அடுத்த வாரத்திலேயே எங்களை நேரில் சந்தித்து வீட்டிற்கு அழைத்தனர். நெஞ்சில் வலியிருந்தாலும் கம்யூனிஸ்ட் என்பதாலேயே அவரை ஏற்றுக்கொண்டனர். திருமணம் முடியும் போது எங்களிருவருக்கும் வேலையில்லை. அவர் SFI ல்  முழுநேரமாக  இருந்தார். இருவருக்கும் வெறும் பிஜி  மட்டுமே இருந்தது. என் பெற்றோர் எனக்காகச் சேர்த்துவைத்த நகையையும் பணத்தையும்  கொடுத்து ‘மேலும் படியுங்கள். நீங்கள் இன்னும் வளர்ந்தால் தான்  உங்களை சமூகம் மதிக்கும்’ என்றனர். என் அப்பா கூடுதலாக  ‘நீ சமூக மாற்றத்திற்கு ஒரு முன்னுதாரணமாக  இருக்க வேண்டும். அதுக்கு உன் கல்வி மட்டும்தான் முதலீடு’ என்றார்.

நாங்களிருவரும் ஆராய்ச்சிக்குச் சேர்ந்தோம். அப்பா அம்மா செலவு செய்தனர். அவரின் குணத்தைப் பார்த்து அம்மாவும், என் உறவினர்களுமே அசந்து விட்டனர். நாங்கள் பார்த்திருந்தால் இப்படியொரு மாப்பிள்ளை கிடைத்திருக்காது என்று அடிக்கடி சொல்வார்கள். அவர் எல்லா வீட்டு வேலைகளையும் தயக்கமின்றி செய்வார். சமைப்பார். வீட்டை சுத்தம் செய்வார். எங்கள் எட்டு ஆண்டு திருமண வாழ்க்கையில் நான் அவரிடம் ஒரு துளியளவு கூட ஆணாதிக்கத்தை உணர்ந்ததில்லை. குழந்தையைக் கூட நான் ஆய்வேட்டை சமர்ப்பித்த பின்னரே பெற்றுக் கொண்டோம். ஊரிலுள்ள பெண்களெல்லாம் தன் கணவரைத் திட்ட அவரை உதாரண‌மாக்கிய போது, ஆண்களெல்லாம் என்னைத் திட்டிக் கொண்டிருந்தனர் – வீட்டு வேலையெல்லாம் ஒரு ஆணைக் கொண்டு செய்விப்பதற்காக. எங்கள் திருமணத்தின் காரணமாக SFI இல் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். எங்கள் பொது வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்பட அது மேலும் உரம் சேர்த்தது. காலப்போக்கில் அவர் சிறந்த சமூக ஆய்வாளரானார். நானும்  இயற்பியலில்  முனைவர் பட்டத்தை முடித்து, முதுமுனைவர் ஆய்வுக்காக ஒரு ஆண்டாக மீண்டும் விடுதியில் தங்கியுள்ளேன். மகள் அம்மாவுடன் ஊரில் இருக்கிறாள். அவருக்கு அரசுக் கல்லூரியில் கடந்த‌ மாதம் வேலை கிடைத்தது. யாரிடமாவது மகிழ்ச்சியைப்  பகிர்ந்து கொள்ளலாமென்றால் உடனே கேள்விகளால் என்னைத் துளைத்தெடுக்கின்றனர். ‘நீ எப்போ அவர் கூட வாழப் போற. பெண்ணைக் கூட்டிட்டு வந்து ஒண்ணா இருக்கறத விட்டுட்டு நீ ஏன் படிக்கறேன்னு  இங்கே இருக்க’ என்பது போன்ற கேள்விகளினூடே  நான் குடும்பம் என்ற அமைப்பையே உடைத்தது போல‌ அங்கலாய்க்கின்றனர். கணவ‌ரோ ‘உனக்கு மூன்று வருட முதுமுனைவர் ஆய்வு மூப்பிருந்தால் தான் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்ய என்கிறார். அம்மாவோ ‘நீ எதுனாலும் படி. நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்கிறார்.

இப்பொழுது எனது போராட்டக்களம் குடும்பத்திலிருந்து பொதுவெளிக்கு வந்துள்ளது. வட மாநிலங்களில் இரயில் பயணங்களின் போதும், இயற்கைச் சுற்றுலாத் தலங்களில் மலையேறப் போகும் போதும், விடுதியில் கடைநிலை ஊழியர்களை ஒடுக்கும் நிர்வாகியிட‌மும், பேருந்துகளில் பின்னாலிருந்து நோண்டும் மனநோயளிகளிடமும் எனப் பொதுவெளியை மற்ற எவரையும் போல் பயன்படுத்த எமக்கிருக்கும் உரிமைக்காகப் போராடுகிறேன். ஒவ்வொரு போராட்டமும் என்னை மீண்டும் மீண்டும் பெண்ணாக உணர வைக்கிறது.

_________________________________________________

ஆலங்கட்டி
__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

 

உழைக்கும் மகளிர் தின சிறப்பு பதிவுகள் 2010

  1. நான் ஒரு பெண்…

    பெண்ணாக என்னை உணரத் தொடங்கிய அந்நாள் இன்னும் நினைவில் உள்ளது. ‘நீ இன்றைக்கு கடைக்குப் போக வேண்டாம்’ என்றார் அம்மா, காரணம் நான் குழந்தையில்லையாம். அன்று முதல் நான் ‘பெண்’ ணாம்….

  2. மகளிர் தின பதிவு நீண்டுக்கொண்டே போது? முப்பத்தி மூணு சதவிகிதம் வாங்காம விடமாட்டிங்க போல?

  3. பழைய பஞ்சாங்கத்தையே மீண்டும் மீண்டும் பதிவாக போட்டு என்ன சொல்ல முயல்கிறீர்கள் என்று தெரியவில்லை.

    இந்த பதிவின் கடைசி பாரா தவிர மற்றதெல்லாம் இப்போதும் நடக்கிறதா என்பது சந்தேகமே. சில தினங்களுக்கு முன்பு என் வீட்டின் பக்கத்து வீட்டுப்பையனின்(பொறியியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன்) அப்பா அவனை கழுத்தை பிடித்து வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டதாக என்னிடம் கூறினான் நான் அவனிடம் காரணம் கேட்டபோது அவன் தனது அக்காவை அடித்ததால் கோபத்தில் அப்பா இப்படி செய்ததாக கூறினான்.

    கடைசி பாராவில் நீங்கள் கூறியது போல் வடமாநிலங்களில் நடக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை அப்படி உண்மை என்றால் நீங்கள் இதுப்போன்ற மகளிர் தின பதிவுகளை இந்தியில் எழுதி வடமாநிலத்தார் படிக்கும்படி விழிப்புணர்வை ஏற்ப்படுத்தலாம். ஏன் என்றால் கடைசி பாராவில் இப்படிப்பட்ட வார்த்தைகளுடன் நீங்கள் பதிவை முடிப்பது அனுதாபத்தை தான் ஏற்ப்படுத்தப்போகிறது. அந்த அனுதாபத்தால் வந்த விளைவை ஏற்க்கனவே நான் மகளிர் தினத்தன்று பதிவிட்டுவிட்டதாக ஞயாபகம்.

    • தொப்பி தொப்பி,

      பதிவில் ஒரு தென் மாவட்ட சூழ்நிலையில் ஊரின் பெயர்களோடேயே எழுதப்பட்டிருக்கிறது. அதை நீங்களே கொஞ்சம் கஷ்டப்பட்டு கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக அந்த மாவட்டத்தை சொல்லவில்லை. பதிவின் கடைசி பாராவில் கூறிய விசயம் வட நாட்டில்தான் நடக்கிறது என்று நீங்கள் புரிந்திருப்பது உங்களின் சிறிய உலகத்தை காட்டுகிறது. கொஞ்சம் வீட்டிலிருந்தும், இணையத்திலிருந்தும் வெளியே வந்து சமூகத்தை பாருங்கள், இல்லை நேரில் வாங்கள் பேசலாம், நீக்கமற விரவியிருக்கும் ஆணாதிக்கத்தை உங்களுக்குபுரியும் வகையில் கதையாக சொல்கிறோம். என்ன இருந்தாலும் கதை கேட்டு வளர்ந்த நாடுதானே இது?

  4. ஒவ்வொரு போராட்டமும் என்னை மீண்டும் மீண்டும் பெண்ணாக உணர வைக்கிறது//

    சத்தியம்.. பிரச்னைகளே போராடும் துணிவை தரும்..சோர்வடையவே வேண்டாம்..

    மற்றபடி ஆண் குழந்தையோடு பிறந்த அனேகர் வீட்டில் இந்த பாகுபாடு உண்டுதான்..

    அதுவும் அறியாமை .. நாம் செய்ய வேண்டிய வேலை பல இருக்குதான் சமூக மாற்றத்தில்…

    முதுமுனைவர் ஆய்வு வெற்றிக்கு வாழ்த்துகள்

  5. Fist women develop selfconfident via education. Every women get out from this situation by a catalist. For you , the catalyst is your father. But reality is poor, many parents not aware of self respect of women.

  6. //<> இரயில் பயணங்களின் போதும், இயற்கைச் சுற்றுலாத் தலங்களில் மலையேறப் போகும் போதும், விடுதியில் கடைநிலை ஊழியர்களை ஒடுக்கும் நிர்வாகியிட‌மும், பேருந்துகளில் பின்னாலிருந்து நோண்டும் மனநோயளிகளிடமும் எனப் பொதுவெளியை மற்ற எவரையும் போல் பயன்படுத்த எமக்கிருக்கும் உரிமைக்காகப் போராடுகிறேன்.//

  7. அருமையான பதிவு,
    பெரும்பாலும் முற்போக்கு கருத்துகளை கொண்டிருபபதாக கூறும் பலர் சொந்த வாழ்க்கை என்று வரும் போது சாதி,அந்தஸ்து போன்றவற்ற விட மாட்டார்கள். தனக்கு தோன்றியவற்றையே எழுதாமல்,தான் கடைபிடித்த வழ்வை பதிவு செய்தது மிகவும் பாராட்டத்தக்கது. இந்த விஷயங்களை மிக இயல்பாக வாழ்வில கடைபிடிப்பதென்பது மிகவும் கடினம்.வாழ்த்துகள் தோழி மற்றும் வினவு.இது போன்ற கட்டுரைகள் பல வரும் பதிவுகளில் இடம் பெற வேண்டும்

  8. இந்த பதிவு முற்றிலும் உண்மை. நானும் 75% இதே வாழ்க்கையை அனுபவித்தவள், என் அம்மா, என் சித்தி மற்றும் நான் பார்த்த 85% பெண்கள் இப்படித்தான், இதில் சில பெண்கள் இந்த பதிவரைப்போல் எதிர்த்து பேசியும், எதிர்த்து வாழ்ந்து காட்டுவார்கள். பலர் இப்படி அடிமைப்பட்டு வாழ்வதையே பெருமையாக மற்றிக்கொள்கிறார்கள்.நானும் ஒரு வெற்றிகரமான காதல் திருமணவாழ்க்கை வாழ்பவள் தான், இது மாதிரி அனுபவித்த அன்றைய பெண்கள் தான் இன்றைய அம்மாக்கள் என்பதால், இது பெருமளவில் மாறி வருகிறது.

  9. நாப்கின் குறித்து சங்கரி எழுதிய பதிவைப் போல இதுவொரு அற்புதமான பதிவு. ஒவ்வொரு கொள்கைகளும் நோக்கங்களும், போராட்டங்களும் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் இருந்து தொடங்க வேண்டும். நாம் தான் முதல் அடியை எடுத்து வைக்க வேண்டும். இந்த பெண் குறித்து மகிழ்ச்சியை விட அந்த கணவரை பாராட்டத் தோன்றுகின்றது. அத்துடன் பெண் குடும்பத்தாரை வாழ்த்த வேண்டும்.

  10. லிபரல் ஜனனாயகமும், உண்மையான சந்தை பொருளாதாரமும், இந்தியாவில் ஆழமாக பரவி வளர்ந்தால், பெண்களின் நிலையும் படிப்படியாக உயரும். துயரங்கள் அழியும். இன்றைய வளர்ந்த நாடுகளில், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் பெண்களின் நிலையையும், இன்றைய நிலையும் ஒப்பிட்டால் புரியும்.

  11. லிபரல் ஜனநாயகமும் சந்தை பொருளாதாரமும் இந்தியாவில் ஆழமாக பரவி வளர்ந்தால் பேருந்துகளில் பின்னாளில் இருந்து நோண்டும் மன நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக மாறும். பெண்களை கவர்ச்சி பொருளாக காட்டி விளம்பரம் செய்பவர்கள் இவர்கள்தானே.

    • ///பேருந்துகளில் பின்னாளில் இருந்து நோண்டும் மன நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக மாறும். ///

      மிகவும் சரி சரவண். இதற்க்கு நீர் தான் மிகச் சரியான உதாரணம். :)))))

  12. ஆதரவளித்து பின்னூட்டமிட்ட​தற்கு நன்றி தோழர்களே.

    @ THOPPITHOPPI ஓரிரு மாதங்களுக்கு முன் இரவில் ரயில் பயணம் செய்த​ இளம்பெண் ஒரு ‘மனநோயாளி’யால் வெளியே வீசப்பட்டு பாலியல் வன்முறைக்குப் பின் கொலை செய்யப்பட்டதும், போன வாரம் ஜெனரல் கம்பாட்மென்றில் பயணம் செய்த​ வெளிநாட்டுப்பெண் பாலியல் சுரண்டலுக்குள்ளானதும் (நன்றி: இந்து நாளேடு) எங்கோ வடமாநிலத்தில் நடந்ததல்ல​​, பக்கத்து கேரளாவில் தான்.

    @Male Chauvinist Pig லிபரல் ஜனனாயகமும், சந்தை பொருளாதாரமும் பெண்ணின் விடுதலைக்கு துணை நிற்குமென்பது நரியைப் பிடித்து கோழிக்கு காவல் வைத்த​ கதைதான். உதாரணமாக​, கடந்த​ ஒரு மாதமாக​ கிரிக்கெட் பார்க்கும் எவருக்கும் இது புரியும். ஒவ்வொரு விளம்பரமும் – அது செல்போனாகட்டும், டூ வீலராகட்டும், பெண்ணை வெறும் போகப்பொருளாக​ சித்தரிப்பதோடு மட்டுமன்றி ஆணுக்கான​ வரைமுறையற்ற​ பாலியல் சுதந்திரத்தையும் அது கோருகிறது. பெண்ணின் பொருளாதார​ விடுதலையோடு ஒட்டுமொத்த​ சமூகத்தில் ஏற்படும் பண்பாட்டு புரட்சியும் சேர்ந்தே அவளுக்கான​ சுதந்திரத்தையும் சமூகவளர்ச்சியையும் உறுதிப்படுத்த​ முடியும்.

    • விளம்பரங்களில் பெண்கள் சித்தரிக்கப்படுவதை மட்டும் வைத்து முடிவு செய்வத தவறான முடிவைதான் அளிக்கும். பெண்களின் ஏழ்மை, வேலை இல்ல்லாத் திண்டாட்டம் குறைந்துள்ளதா அல்லது அதிகரித்துள்ளதா, வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளதா என்ற விசியங்கள் தான் முக்கியம். முக்கியமாக 30 ஆண்டுகளுக்கு முன்பு கிடைக்காத பல சந்தர்பங்கள், வேலை வாய்ப்பிகள், சுதந்திரங்கள் இன்று கிடைக்கிறது என்பதே நிஜம். விதவைகள், விவகாரத்தானவர்கள், ஊனமுற்றவர்கள் நிலை அன்று மிக கொடுமை. இன்ற சற்று பரவாயில்லை.

      பாலியல் சுதந்திரம் வேறு விசியம். அதில் ஒரு சராசரி கம்யூனிஸ்டுக்கு இருக்கும் ‘தூய்மைவாதம்’ தான் உங்களிடமும் இருக்கிறது போல. முன்பு ஆண்கள் மட்டும் சர்வ சுதந்திரம் கொண்டு திரிந்தார்கள். இன்று பெண்களுக்கும் ஓரளவு சுதந்திரம் இதில் கிட்டியுள்ளது. முக்கியமாக நகர்புறங்களில். ஏழைகளிலும் மறுமணம் இன்று அதிகம் நடக்கிறது. ஆதிக்க சாதியன்ர்களில், நான் பிறந்த பகுதிகளில் இன்று பெண்களின் நிலை நல்ல மாற்றத்தை அடைந்துள்ளது. விவகாரத்தான பெண்கள் மறுமணம் செய்வது சர்வ சாதாரணமாக நடக்கிறது. விதவை திருமணம் பெரிய விசியமே அல்ல. 30 ஆண்டுகளுக்கு முன் இது இப்படி இருந்ததில்லை.

      மேலும்..

    • தாரளமயமாக்கல் விளைவாக தலித்களின் நிலை கடந்த 20 ஆண்டுகளில் எப்படி முன்னேறியுள்ளது என்பதை விளக்கும் பதிவுகள் : (தலித்கள் என்றால், தலித் பெண்கள் நிலையும் பற்றிதான் இந்த கட்டுரைகள் )

      Dalits are marching ahead in Uttar Pradesh
      http://swaminomics.org/?p=1894

      The social revolution in Uttar Pradesh
      http://swaminomics.org/?p=1900

  13. தாரளமயமாக்கலின் பின்பு இலங்கையில் சுற்றுலா விபசாரம் மட்டுமல்ல, உள்ளூர் விபசாரமும் சிறுவர்களின் பாலியல் துஷ்பிரயோகமும் பெருமளவில் அதிகரித்துள்ளன.
    சுதந்திர வர்த்தக வலயங்கள் என்பன, பெண்கள் பல வகைகளிலும் மிகவும் கொடுமையாக நடத்தப்படும் இடங்களாக உள்ளன.

    இவை இலங்கைக்கு மட்டும் உரிய அனுபவங்களல்ல.

    • சிவா,

      உலகமயமாக்லினால் ஏற்படும் சில பாதகமான அம்சங்கள் இவை. 100 % நேர்மறையான அம்சங்கள் மட்டுமே எதிலும் இருக்க முடியாது. ஆனால் அவை எத்தனை சதம் என்று ஆராய்ந்து அறிதலேவிவேகம். மூன்றாம் உலக நாடுகளில் ஏற்கெனவே உள்ள கடும் வறுமை, வேலை இல்லா திண்டாட்டம், பெருகி வரும் மக்கட் தொகை மற்றும் இதர லோக்கல் பிரச்சனைகள் : இவைகளையும் சேர்த்தே பார்க்க வேண்டும்.

  14. சந்தை பொருளாதாரம் வந்த பிறகு தான் திருப்பூர் போன்ற ஊர்களில் பெண்கள் மலிவு விலை கொத்தடிமைகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள், அதுவும் சில இடங்களில் அவர்களுக்கு மாத சம்பளம் கூட கிடையாது. ஒரு குறிப்பிட்ட காலம் வேலை செய்த பிறகு அவர்களின் திருமணத்திற்கு வரதட்சணை கொடுப்பதற்கு நிர்வாகம் ஒரு தொகையை வழங்கும். என்னே பெண்களின் முன்னேற்றம். புல்லரிக்கிறது. திரு capitalism .org அவர்களே. நான் பாலியல் சுதந்திரத்தை பற்றி மட்டும் பேச வரவில்லை. ஆனால் இன்று ஒரு பெண் என்றாலே அவளை scent வாசனைக்கு மயங்கி படுக்கை அறைக்கு செல்லுபவர்கலாக சித்தரிப்பது சந்தை பொருளாதாரமில்லையா? டூத் பேஸ்ட் என்பது வாயிலுள்ள கிருமியை அளிப்பதற்கு மட்டும் அல்லாமல் எதிரில் வருபவரோடு முத்தமிட்டு கொள்வதற்காக என்ற கருத்தை சொல்வது சந்தை பொருளாதாரம் இல்லையா? வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டு வேலையையும் செய்து விட்டு அலுவலகத்திற்கும் சென்று நாள் பூராவும் மாடாக உழைக்கிறார்கள். வீட்டு வேலையை பெண்களோடு ஆணும் பகிர்ந்து கொள்ள எந்த சந்தை பொருளாதாரமும் கற்று கொடுக்க வில்லை. குழந்தையை பராமரிக்கும் பொறுப்பை கூட இருவரும் பிரித்து கொள்வது இல்லை. பெரு நகரங்களில் தொடர் வண்டிகளில் வேலைக்கு செல்லும் பெண்களை நன்கு கவனித்தால் உங்களுக்கு உண்மை விளங்கும். அவர்கள் காலையில் எழுந்து அனைத்து வேலைகளையும் முடித்து காலை சாப்பிடுவதற்கு கூட நேரம் இல்லாமல் அனைத்து சக்திகளையும் இழந்து வருவார்கள். ஆதாரங்களை பெறுவதற்கு இணையத்தை தேடாமல் தயவு செய்து வெளி உலகத்தை கண் திறந்து பாருங்கள் உங்களுக்கே உண்மை புரியும்.

    ///பேருந்துகளில் பின்னாளில் இருந்து நோண்டும் மன நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக மாறும்.
    மிகவும் சரி சரவண். இதற்க்கு நீர் தான் மிகச் சரியான உதாரணம்///
    நீரெல்லாம் என்னை அதற்க்கு உதாரணமாக எடுத்து கொண்டதை பற்றி எனக்கு கவலை இல்லை. குறைந்த பட்சம் அப்படி ஒன்று நடக்கிறது என்றாவது ஒப்பு கொண்டீரே. அதற்கு மிக்க மகிழ்ச்சி.

    • விதிவிலக்குகளை மட்டும் வைத்து கொண்டு விதண்டாவாதம் பேசுகிறீர்கள். அன்று 75 கோடி மக்கள் தொகைக்கு இருந்த வறுமை, கல்லாமை, வேலையில்லா திண்டாட்டம், சமூக நிலைகளை இன்று 120 கோடியாகியும் அப்படியே தொடர்ந்திருதால், இத்தனை கோடி மக்கள் புதிய வாழ்க்கை பெற்றிருக்க முடியாது. try to look at the big picture holistically. திருப்பூரில் ஆயிரம் பிரச்சனைகள் உள்ளனதான். நானும் அங்கு வேலை பார்த்திருக்கிறேன். ஆனால் திருப்பூரே உருவாகமல் இருந்திருந்தால், நிலைமை இன்னும் மோசமா இருந்திருக்கும். இந்த வேலைவாய்ப்புகள் கூட சாத்தியமாகியிருக்காது.

  15. வாழ்த்துக்கள் தோழி !

    உங்களைப் போன்ற நிறையப் (கல்விகற்ற) பெண்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய பயம்தான் உங்களைப் போன்று ஒரு முடிவு எடுக்க முடியாமல், மெளனமாக ஆண்டைகளான தமது பெற்றோர்களின் திணிப்பை ஏற்றுக் கொண்டு காலம் கடத்துகின்றனர்.

    ஆனால் அடிமைப்பட்ட ஒவ்வொரு பெண்ணிடமும் விடுதலை உணர்வும், இவ்வாறு விடுதலை அடைந்த நிறையப் பெண்களிடம் தமது வாழ்வில் மற்றப் பெண்களை அடக்கும் ஆதிக்க உணர்வும் இருப்பது, முரண்பாடு !

    ஆதவன்

  16. @ capitalism.org வினவு கூறியது போல் நான் முதலாளித்துவ​ சமூகத்தில் //நீக்கமற விரவியிருக்கும் ஆணாதிக்கத்தை உங்களுக்குபுரியும் வகையில் கதையாக சொல்கிறேன். என்ன இருந்தாலும் கதை கேட்டு வளர்ந்த நாடுதானே இது//. எனது தோழி இந்தியாவின் மிகப் பெரிய​ கல்விநிறுவனமான ஐ.ஐ.டி யில் பிஎச். டி முடித்து, உங்கள் பார்வையில் உலகின் மிகப் பெரிய​ ஜனநாயக​ நாடான​ அமெரிக்காவின் ஒர்லீன்ஸில் நான்கு வருட​ முதுமுனைவர் பட்டம் முடித்து கைநிறைய​ சம்பாதிதித்து, சமீபத்தில் ஊர் திரும்பியுள்ளார். அவர் முதலாளித்துவம் பெற்றெடுத்த​ செல்லப்பிள்ளை. ஆனால் பாவம், தன்னுடைய​ தகுதிகளை வளர்த்துக்கொள்வதில் காட்டிய​ அக்கறை தனக்கான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் காட்டவில்லை. இப்போது தனது 36 ஆவது வயதில், தகுதியான​ வரன் தேடுகிறார். அப்படி பலர் வந்ததில், கடந்த​ மாதம் தங்கள் கனவு தேசமான​ அமேரிக்காவிலிருந்து, ஒரு சாப்ட்வேர் இஞ்சினியரும் (தமிழ்) வந்தார். வந்தவருக்கு இவரை பிடித்துப் போய் விட்டதாம். ஆனாலும் அவர் இனி ஒரு டெஸ்ட் வைத்து அதில் என் தோழி தேர்ச்சியடைந்தால் தான் திருமணம் பற்றிய​ பேச்சை வீட்டில் ஆரம்பிப்பாராம். என்னடா உலகக் கல்விநிறுவனத்​ தர​ வரிசையில் ஏழாவது இடத்தைப்பிடித்த​ ஐ.ஐ.டி யில் பட்டம் பெற்ற​வருக்கு இவன் என்னடா புதுசா டெஸ்ட் வைக்க​ போகிறான் என்று என்னை போலொரு ‘தூய்மைவாதி’யால் கேட்க்காமல் இருக்க​ முடியவில்லை. இந்த​ அம்மா ‘sexually compatible’ ஆ என​ இஞ்சினியர் டெஸ்ட் வைப்பாராம். பாஸ் பண்ணினாஅடுத்த​ மாதமே திருமணம் பற்றிய​ பேச்சு வார்த்தை ஆரம்பிக்கும். பிறகு வழக்கம் போல​ சீர்செனத்தியெல்லாம் ஒத்து வந்தால் கண்டிப்பாக​ திருமணம் தான். (கொசுறு: இந்த​ இஞ்சினியர் ஏற்கனவே ரண்டு ‘living together ‘ ரில் ‘broke up’). இப்பொழுது கூறுங்கள் the capitalist, உங்கள் மொழியில் //இன்று பெண்களுக்கும் ஓரளவு பாலியல் சுதந்திரம் இதில் கிட்டியுள்ளது தானே//. ஆகவே, மாட்ரிமோணியல் வழியாக​ வரும் எத்தனை ஆண்களுடன் படுத்தால் அவருக்கு திருமணம் நடக்கும்? ஒரு தூய்மைவாதியான என்னால் தோழிக்கு பதில் சொல்ல​ முடியவில்லை. தங்களால் முடிந்தால் இந்த​ கதையை விடுவித்து என் தோழிக்கு உதவலாமே, விக்ரமாதித்தன் அவர்களே!

    • ஆலங்கட்டி,

      இவை எல்லா விதிவிலக்குகளா அல்லது மெஜாரிட்டி கேஸ்களா ? எத்தனை சதம் என்று சொல்ல முடியுமா ? நான் சொல்வது ஏழை தொழிலாளர்கள், மற்றும் lower middle class women’s status பற்றி தான். 30 வருடங்களுக்கு முன் இருந்ந்த நிலை பற்றி உங்களுக்கு முழுசா தெரியல போல. அன்று சூடிதார் அணிவது பெரிய விசியம். டி.வி.எஸ் 50 ஓட்டுவது பெரிய விசியம். அப்படி செய்யும் பெண்களை பற்றி ஊரே புறம் பேசும். கல்லானாலுன் கணவன், புல்லானாலும் புருசன் என்ற காலங்கள் இன்று மலையேறிவிட்டன. புருசன் சரியில்லை என்றா போடா என்று வெளியேறுகிறார்கள் இன்றைய பெண்கள். (எம் மனைவி அப்படி எல்லாம் செய்துவிட மாட்டார் என்று நம்புகிறேன் !!!) :))))

      கணவன் சரியில்லாததால், அவனிடமிருந்து விவகாரத்து பெறும் பெண்கள், பப்ளிக்கா கல்யாண மண்டபத்தில் வைத்து மறுமணம் செய்வது இன்று பழைய கொங்கு பிரதேசங்களில் அதிகம். 30 வருடங்களுக்கு முன் இருந்ததை விட இன்று இதை ஏற்க்கும் மனோபாவம் அதிகம். very positive changes in all layers of society.

      உ.பி தலித்களின் நிலை பற்றிய பதிவு சுட்டிகளை படித்து பாருங்க. அதை பற்றியும் பேசலாமே…

  17. இந்த​ அம்மா ‘sexually compatible’ ஆ என​ இஞ்சினியர் டெஸ்ட் வைப்பாராம். இந்த​ இஞ்சினியர் ஏற்கனவே ரண்டு ‘living together ‘ ரில் ‘broke up’. //

    ஐஐடி ல படிச்சா என்ன ,
    அறிவாளியா இருந்தாலென்ன.?
    அசிங்கம்புடிச்ச திருமணத்துக்கு
    அட்ஜஸ்ட்தான் செஞ்சாலென்ன?.

    இதான் பெண் முன்னேற்றம்.. அப்புரம் ஏன் வெளிநாட்டு ஆண்களை நம்மூர் பெண்கள் திருமணம் செய்ய மாட்டார்கள்.?.. பெண்களும் லிவிங்-டுகெதருக்கு தள்ளப்பட மாட்டார்கள்..?

    பெண் கிடைக்காமல் தவிக்கட்டும் ..

  18. ///ஆனால் திருப்பூரே உருவாகமல் இருந்திருந்தால், நிலைமை இன்னும் மோசமா இருந்திருக்கும். இந்த வேலைவாய்ப்புகள் கூட சாத்தியமாகியிருக்காது.///

    திருப்புரே உருவாகாமல் இருந்திருந்தால். இந்தியாவில் பருத்தி விலை உயர்ந்திருக்காது. கோவை இல் எண்ணற்ற நூற்பாலைகள் மூடப்பட்டிருக்காது. சந்தை பொருளாதாரம் இல்லாமல் இருந்தால். இன்று விவசாயம் ஒரு நட்டம் தரும் தொழிலாக மாறி இருக்காது. நான் விதி விளக்குகளை மட்டும் வைத்து விதண்டாவாதம் பேசுவதாக நீங்கள் எண்ணினால் அது உங்கள் அறியாமையே காட்டுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் மட்டும் அத்தியாவசிய பொருளின் விலை ஏற்றத்தை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். இவை எல்லாம் உற்பத்தி ஆகும் பொருளை சொந்த நாட்டின் சந்தைக்கு வழங்காமல் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் விளைந்தவை இல்லையா? உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். இன்று கோடை காலத்தில் மக்கள் அதிகமாக தண்ணீர் பழம் மற்றும் எலுமிச்சை சாறு பருகுவார்கள். அந்த இரண்டும் இன்று விலை பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. இதற்கு காரணம் நாட்டில் ஏற்பட்ட பஞ்சமா அல்லது ஏற்றுமதி செய்வதாலா ?
    அதில் தான் அந்நிய செலாவணி கிடைக்கிறது நம் நாட்டின் பொருளாதாரம் உயர்கிறது என்றால். சொந்த நாட்டின் தேவையை பூர்த்தி செய்யாமல் எதற்கு ஏற்றுமதி, ஏற்றுமதியின் மூலம் பயன் அடைபவர்கள் உண்டு. ஆனால் சாதாரண மக்கள் தனக்கு தேவையானதை வாங்கும் விலையில் ஒரு பொருள் இல்லாமல் போனதற்கு இந்த ஏற்றுமதி தானே காரணம்.
    விசயத்திற்கு வருவோம். விவசாயம் அழியாமல் இருந்திருந்தால் இதே பெண்கள் இன்று விவசாய கூலிகளாக இருந்திருப்பர். திருப்புருக்கு கூலி வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. எனவே சந்தை பொருளாதாரம் பெண்களின் நிலைமையை எந்த விதத்திலும் முன்னேற்றி விட வில்லை.

    • sarvan,

      மிக தவறான புரிதல். இதற்க்கு தக்க பதில் அளிக்க எம்மை விட மிக தகுதியானவர், இங்கு கட்டுரைகள் எழுதும், திருப்பூர் தொழிலதிபர், அண்ணன் ஜோதிஜி அவர்கள் தான். காரைகுடியில் இருந்து புலம் பெயர்ந்து, திருப்பூரில் பெரிய கோடீஸ்வர தொழிலதிபராக திகழ்பவர்.

      Act II, Scene 1 :

      Enter : அண்ணன் ஜோதிஜி

  19. நண்பா நீங்க எந்த பெயரில் இங்கு வந்தாலும் உங்களை எல்லோருக்குமே தெரியுமே?

    நம் நாட்டின் பொருளாதாரம் உயர்கிறது என்றால். சொந்த நாட்டின் தேவையை பூர்த்தி செய்யாமல் எதற்கு ஏற்றுமதி, ஏற்றுமதியின் மூலம் பயன் அடைபவர்கள் உண்டு. ஆனால் சாதாரண மக்கள் தனக்கு தேவையானதை வாங்கும் விலையில் ஒரு பொருள் இல்லாமல் போனதற்கு இந்த ஏற்றுமதி தானே காரணம்.

    சரவண் இதென்ன வினோதமான விளையாட்டு. வலைதளம் என்பதால் மனதில் உள்ளவற்றை அப்படியே எழுதுவதா? முழுமையான ஏற்றுமதி எத்தனை தவறோ அதே போல் ஏற்றுமதி இல்லாமல் ஒரு நாடும் இருப்பதும் தவறு. உங்கள் அத்தனை தேவைகளும் உள்நாட்டு தேவைகள் மூலமே தீர்க்கப்படும் என்பது உண்மை என்றால் நீங்களும் நானும் தபால்பெட்டி டவுரைப் போட்டுக் கொண்டு உள்ளூருக்குளேயே கிட்டி விளையாண்டுக் கொண்டு தான் இருக்க வேண்டும். நான் இப்போது அடித்துக் கொண்டிருக்கும் மடிக்கணினி கூட ஏதோவொரு புண்ணியவான் ஏதோவொரு நாட்டில் உருவாக்கியது. உங்கள் என் வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் 60 சதவிகித பொருட்கள் உள்நாட்டில் மட்டும் தயார் செய்து இருக்கும் பட்சத்தில் நாம் இன்னும் 50 ஆண்டுகள் பின் தங்கித்தான் இருந்து இருப்போம். என்னவொன்று நம் நாட்டு அடிவருடிகள் தங்கள் ஆதாயத்திற்காக துடைப்பக்கட்டை வரைக்கும் ஏற்றுமதி செய்து காசு பார்க்கும் ஆசையைத் தான் நான் எதிர்க்கின்றேன்.

  20. திருப்பூரில் பெரிய கோடீஸ்வர தொழிலதிபராக திகழ்பவர்

    நண்பா இங்கே பெரிய டவுசர் போட்டவனுக்கே கழன்டு போய் அம்மணமா நிற்கும் போது எனக்கு இது வேறயா? அட நீங்க வேற?

    • //திருப்பூரில் பெரிய கோடீஸ்வர தொழிலதிபராக திகழ்பவர்//

      அட நம்ம திருப்பூர் ல நண்பர் வீட்டிற்கெல்லாம் சென்று பார்த்தோமே, இதை நம்மகிட்ட சொல்லலையே என நினைச்சேன். டவுசர் தொங்கிக்கொண்டிருப்பதை தெளிவாக சொல்லிவிட்டீர்கள். ஒரு மாதத்திற்கு சுமார் 10 கோடிக்கு மேல் டர்ன்ஓவர் செய்பவர் மட்டும் தான் திருப்பூரில் சுமாரான முதலாளி மற்றவரெல்லாம், நாய் படாத பாடுதான் என்பதை நண்பரிடம் சொல்லவில்லையா? திருப்பூரில் ஒரு பனியன் தொழில் செய்பவர் 15 மணி நேரம் உழைத்து சம்பாதிப்பதை, ஒரு டாஸ்மாக் கடை முன்பாக மாலை 4-00 மணி தொடங்கி இரவு 11-30 மணி வரை மட்டும் 4 சுண்டல், 2 வடை, 2 முட்டை சமாச்சாரத்துடன் தள்ளு வண்டி உள்ளவர் (முதலீடே இல்லாமல் கடனுக்கு சாமான்கள் வாங்கி மறுநாள் கடனை அடைத்து மீண்டும் மறுநாள் கடன் வாங்கி தொழில் செய்பவா்) சம்பாதிக்கிறார் என்பதுதானே உண்மை ஜோதி?

      • நானும் அவர் வீட்டிற்கு சென்றுள்ளேன் அய்யா. சும்மா கலாய்த்தால், விட மாட்டீங்கறீங்களே ! 90களில் திருப்பூரில் குறைந்த சம்பளத்தில் வேலையும் செய்திருக்கிறேன்.

        அண்ணன் ஜோதிஜி : உங்களுக்கு ‘சித்தாந்த குழப்பம்’ உள்ளது. தோழர்கள் ‘விளக்குவார்கள்’ ; மேலும் export and import controls, free trade, protectionism, globalisation பற்றியும் தெளிவில்லை. ’வகுப்பு’ எடுக்கிறேன். பிறகு பார்க்கலாம்.

      • தல ஜோ,

        மார்க்சியம் பற்றி தோழர்களுக்கு திருப்புரில் வகுப்புகள் எடுப்பார்கள். நீங்களும் கலந்துக்குங்க. முதலீட்டியம் பற்றி நான் உங்களுக்கு ‘வகுப்பு’ எடுக்கிறேன். ரண்டு ஸைடும் போடர போட்டுல, நீங்க தலைமுடிய பிச்சிக்கனும். இருக்கிற முடியும் கொட்டி, கலைஞர் மாதிரி ஆகனும். இதை நாங்க பார்க்கனும். இது தான் திட்டம். எப்படி அய்டியா ? ரெடியா ?

  21. இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்களுக்கான உரிமைகளை பெண்கள் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்..

Leave a Reply to capitalism.org பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க