privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபுதிய வடிவமைப்பில் வினவு! தொடரும் பயணம்!!

புதிய வடிவமைப்பில் வினவு! தொடரும் பயணம்!!

-

அன்பார்ந்த வாசகர்களே, பதிவர்களே, தோழர்களே,

ன்று 22.04.2011 ஆசான் லெனினது பிறந்த தினம் மற்றும் இந்தியப் புரட்சியின் விடிவெள்ளியாக தோன்றிய நக்சல்பாரிக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவமுடைய நாளில் வினவின் புதிய வடிவமைப்பை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

2008-ஜூலையில் தற்செயலாக ஆரம்பிக்கப்பட்ட வினவுக்கு இன்றோடு இரண்டு வருடம் ஒன்பது மாதங்கள் வயதாகிறது. இந்தக் காலத்தில் 831 பதிவுகள் வெளியிடப்பட்டு ஏறக்குறைய 40,000 மறுமொழிகள் வந்திருக்கின்றன. இந்தக் காலத்தில் சுமார் முப்பது இலட்சம் வாசகர் பார்வைகள். ஆரம்பத்தில் 500, 1000 என்று இருந்த வாசகர் வருகை தற்போது சராசரியாக 5000-த்தை தொட்டிருக்கிறது.

சினிமா, நடப்பு அரசியல், தேர்தல் போன்ற பதிவுகளுக்கு எப்போதும் வாசகர் வருகை அதிகமாகவே இருக்கிறது. ஆனாலும் சென்சேஷன்னுக்கா பதிவுகள் என்று எதையும் நாங்கள் எழுதுவதில்லை. வினவின் மொத்த இடுகைகளில் பெரும்பாலானவை அரசியல துறையைச் சேர்ந்தவைதான். இதற்கு அடுத்தபடியாக சமூக பண்பாட்டுக் கட்டுரைகளும் வெகு சில சினிமா, இலக்கியம், குறித்த கட்டுரைகளை வெளியிடுகிறோம். எனினும் அதிகம் படிக்கப்படவேண்டும் என்று நாங்கள் விரும்புவதற்கும், வாசகர் அதிகம் விரும்பி படிப்பதற்கும் வேறுபாடு இல்லாமல் இல்லை. இந்த வேறுபாட்டை வெல்ல வேண்டும் என்பதே எமது மையமான குறிக்கோள்.

இணையம் கட்டற்ற செய்திகளை அள்ளிக் கொடுத்தாலும், நவீன ஊடகங்களின் வளர்ச்சி காரணமாக செய்திகள், அடுத்த கணத்தில் உலகம் முழுவதும் வெளியாகின்றன என்றாலும் அந்த அளவுக்கு அரசியல் விழிப்புணர்ச்சி இங்கும், எங்கும் அதிகரித்துவிடவில்லை. எந்த விசயங்களை பார்க்க வேண்டுமென்பதையும், அவற்றை எப்படி பார்க்க வேண்டுமென்பதையும் ‘அவர்கள்’ தீர்மானிக்கிறார்கள். வெளிப்பார்வைக்கு இணையம் கட்டற்ற சுதந்திரத்தை அளிப்பது போல தோன்றினாலும் உண்மையில் அப்படி ஒரு சுதந்திரம் நமக்கு இல்லை.

இதனால் நாம் விரக்தியடையத் தேவையில்லை. உண்மையில் இணையத்தை மக்கள் நலன் சார்ந்த ஊடகமாக மாற்றுவது தொடர்ச்சியான நமது போராட்டத்தில் உறைந்து கிடக்கிறது. சரியாகக் கூற வேண்டுமென்றால் இணையத்திற்கு வெளியே மக்கள் களத்தில் நடக்கும் போராட்டங்கள், முன்னேற்றங்களுக்கு இணையாகவே அல்லது அதன் பிரதிபலிப்பாகவே இணையமும் விளங்க முடியும்.

மக்களிடம் இயல்பாக நல்ல விதமாக இருக்கும் பொதுவான மனிதாபிமான விசயங்களை ஆளும் வர்க்க ஊடகங்கள் தவறாக பயன்படுத்தி தமது கொள்கைகளைத் திணிக்கின்றன. அதாவது பாசிசத்தை நோக்கி நமது மனிதாபிமானம் நமக்குத் தெரியாமல் வேகமாக இழுத்துச் செல்லப்படுகிறது. கோவை என்கவுண்டர் பற்றி தினசரிகளும் பதிவுலகமும் எப்படி ஆரவாரத்துடன் வரவேற்றன என்பதறிவோம். இரண்டு குழந்தைகள் மீதான படுகொலை என்பது போலீசின் கட்டற்ற சர்வாதிகாரத்தை ஆதரிப்பதாக திட்டமிட்டு மாற்றப்பட்டது.

அதே போல அண்ணா ஹசாரேவின் போராட்டத்தை அதுதான் இந்திய மக்களின் முதல் போராட்டம் போல சித்தரித்தார்கள். அதை கேள்வியின்றி ஆதரிப்பதே தேசபக்தியென மாற்றினார்கள். இப்படி நமது அடிப்படையான பிரச்சினைகள் பலவும் மேலோட்டமான பரபரப்பான நிகழ்வுகள் மூலம் சரி செய்யப்படலாம் என்ற மாயையை விதைத்திருக்கின்றன.

இத்தகைய சூழலில்தான் வினவு பரபரப்பான பொதுப்புத்தியின் கிளர்ச்சிக்கு எதிராகவும், மாற்றாகவும் சமூகத்தில் காணப்படும் உண்மைகளை வாசகர் முன் வைக்கிறது. அதனால்தான் எங்களை “எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்பவர்கள்” என்று சிலர் விமரிசிக்கின்றனர். கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி நாம் முன்னேற முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள். கிடைத்திருக்கும் வாய்ப்பு என்பது ஏதோ நம்மாலும் கொஞ்சம் முடியும் என்ற மாயை அன்றி வேறல்ல என்று நாங்கள் சொல்கிறோம். உண்மையில் பிரச்சினையின் அடிவேரை காணமறுக்கும் இத்தகைய சமரச அணுகுமுறை குறித்து நாங்கள் எப்போதும் விமரிசித்தே வந்திருக்கிறோம்.

இத்தகைய சமரசக் கருத்துக்கள்தான் சமூகத்தில் எப்போதும் செல்வாக்கு செலுத்துவபையாக இருக்கின்றன. வைகோவின் சமரசத்தையே தியாகமாக போற்றுவதும், ஈழத்தின் துயருக்கு காங்கிரசு எதிர்ப்பு என்ற பெயரில் ஜெயாவை ஆதரிப்பதும், தேர்தலில் சிக்கி சின்னாபின்னமான போலிக் கம்யூனிஸ்டுகள் அதை நியாயப்படுத்த கூடிய விரைவில் புரட்சி கிடையாது என்று சுயதிருப்தி அடைவதும், எந்திரன் திரைப்படத்தின் கொள்ளையை காணமறுத்து அதனை சிறந்த பொழுது போக்காகக் கொள்வதும், என்று இந்த சமரசங்கள் முடிவின்றி எல்லா துறைகளிலும் விரவிக் கிடக்கின்றன.

சுருங்கக் கூறின் உலகோடு ஒட்ட ஒழுகல் எனும் செல்வாக்கான சித்தாந்தம்தான் அநீதியான இந்த உலகை ஏற்றுக் கொண்டு வாழ காரணமாகிறது. புதிய உலகை படைக்க விரும்பும் எவரும் இப்படி ஒட்டி ஒழுகிக் கொண்டிருக்க முடியாது. அதே நேரம் இதையே வெட்டு ஒன்று, துண்டு இரண்டாக பேசி மட்டும் மாற்றிவிட முடியாது. அதற்கு அளவில்லாத பொறுமையும் இடைவிடாத போராட்டமும் வேண்டும்.

காஷ்மீர் குறித்து ஏராளமான கட்டுரைகள் வினவில் வந்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் ‘தேசபக்தி’யில் நின்று கொண்டு துப்பாக்கிக்கு எதிராக கல்லெறியும் மக்களை ‘பயங்கரவாதிகளாக’ கருதிக் கொண்டு வெறுப்பைக் காட்டும் கேள்விகள் வரத்தான் செய்கின்றது. எது பார்ப்பனியம், இந்து மதவெறியின் பயங்கரவாதங்கள் குறித்து நிறைய கட்டுரைகள் வந்திருந்தாலும் இன்னமும் பார்ப்பனியம் என்பதை பார்ப்பனராக மட்டும் சுருக்கிப் பார்ப்பதும், இந்து மதவெறியை நியாயப்படுத்த கோத்ரா ரயில் பெட்டி எறிப்பு முதலானவற்றை முன் வைப்பதும் இன்றும் குறைந்தபாடில்லை.

வாழ்க்கையிலிருந்து பிரச்சினையை அணுகவேண்டும், பிற்போக்கான மதத்திலிருந்து அல்ல என்று இசுலாமிய மதவாதத்தை கண்டித்தால், உடனே குர்ஆனில் அப்படி சொல்லப்படவில்லை என்று முயலுக்கு மூணுகால் சமாச்சாரங்கள் இன்னும் நின்றபாடில்லை.

எனினும் ஒரு சில விதிவிலக்குகள் தவிர வினவு எழுதும் எல்லாவற்றையும் எப்போதும் எதிர்ப்பவர் யாருமில்லை. தங்களது சொந்த அரசியல் பார்வைக்கேற்ப அவர்கள் ஏதோ ஒன்றில் வினவை ஆதரிக்கவே செய்கிறார்கள். இந்திய தேசியத்தை விமரிசித்தால் தமிழினவாதிகள் விரும்புவதும், தமிழனிவாதிகளை விமரிசித்தால் ‘இந்து’ தேசியவாதிகள் விரும்பவதும், இந்துமதவெறியரை விமரிசித்தால் இசுலாமிய நண்பர்கள் ஆதரிப்பதும், இசுலாமிய அடிப்படைவாதத்தை விமரிசித்தால் ‘இந்து’ மத அமைப்பின் கருத்தியல் ஆதரவாளர்கள் விரும்புவதும், ஆதிக்க சாதியினரை எதிர்த்தால் தலித்துக்கள் ஆதரிப்பதும், அதையே விடுதலைச் சிறுத்தைகளை விமரிசித்தால் தலித்தியவாதிகள் கோபமடைவதும், ரஜினியை எதிர்த்தால் கமல் ரசிகர்கள் மகிழ்வதும், விஜயை விமரிசித்தால் அஜித் ரசிகர்கள் கொண்டாடுவதும் என்று இந்த இரட்டை மனநிலை அணுகுமுறைக்கு முடிவேயில்லை.

ஆனாலும் எமது விமரிசனப்பார்வை அனைத்தும் ஒரிழையில்தான் பின்னப்படுகின்றன. விமரிசிக்கும் பிரச்சினைகள் வேறுவேறாக இருந்தாலும் அந்த விமரிசனத்தின் அடிப்படை என்பது ஒன்றுதான். ஆதலால் இன்று ஒரு பிரச்சினைக்காக எம்மை ஒதுக்குபவர்கள் கூட ஒரு தொடர்ச்சியான அணுகுமுறையில் எங்களை புரிந்து கொள்வார்கள்; புரிந்தும் கொண்டிருக்கிறார்கள். மக்கள் அனைவரும் பல்வேறு மத, இன, சாதி, கட்சி குழுக்களின் சார்போடும்தான் அரசியல் பார்வையினை கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த பிரிவினைகளை விட வர்க்கம் என்ற உண்மையான அடையாளத்தை உணர்வதன் மூலமே உழைக்கும் மக்களின் ஒற்றுமையும், விடுதலையும் சாத்தியம் என்பதே எமது விமரிசன அடிப்படையின் இரகசியம். இதன்றி வேறு எது குறித்தும் நாங்கள் விமரிசனத்தை எழுதுவதில்லை.

ஆதலால் உண்மையை முன்னரே சொல்லிவிட்டோமே என்று சுயதிருப்தியோடு ஓய்ந்திருந்தால் மாற்றத்தை இம்மியளவும் எதிர்பார்க்க முடியாது. அதனால்தான் நாங்கள் உண்மையினை புதிது புதிதாகவும், புத்துயிர்ப்பாகவும், விதவிதமாகவும், புதிய சூழ்நிலைகளுக்கு பொருத்தமாகவும் தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்க முயல்கிறோம். இதில் நாங்கள் எந்த அளவு முன்னேற்றத்தை கொண்டிருக்கிறோம் என்பதை வாசகர் கருத்தின் மூலம் சோதித்துக் கொள்கிறோம். தவறிருந்தால் திருத்திக் கொள்கிறோம்.

அந்த வகையில் வினவு சொல்லும் விமரிசனங்கள் சரியானவை என்பதோடு ஒரு பத்திரிகையின் கட்டுரை என்பதைத் தாண்டி அது நடைமுறைக்கு செல்ல வேண்டிய கடமையையும் ஓரளவுக்கு வாசகரிடம் ஏற்படுத்தியிருக்கிறோம். ஆயினும் இது ஒரு சாதனை என்ற அளவில் இல்லை என்பதையும் புரிந்து வைத்திருக்கிறோம். சமூக விழிப்புணர்வு என்பது ஒரு கல்லூரியில் படித்து பட்டம் வாங்கி விடும் ஒன்றல்ல. அது எப்போதும் இடையறாது கற்றுக் கொள்ளவேண்டிய விசயம். அந்த வகையில் அதை நாங்கள் பயின்று கொண்டும், கற்பித்துக் கொண்டும் இருக்கிறோம்.

ஆளும் வர்க்கங்களின் சமரசப் பார்வை இத்தனை செல்வாக்கோடு இருப்பதற்கு முக்கிய காரணம் அந்த பார்வை அதை ஏற்பவரிடம் எதையும் இழக்குமாறு கோருவதில்லை. பாதுகாப்பான இந்த வாழ்க்கையில் இருந்து எதையும் இழக்க வேண்டாம் என்ற நிலையே நடுத்தரவர்க்கத்தின் அரசியல் பார்வையின் அடிநாதமாக இருக்கிறது. ஆனால் சமூக மாற்றம் என்பது தனிமனிதனிடம் காத்திரமான மாற்றத்தை கோருகிறது. தனி மனிதர்கள் மாறினால்தான் சமூகமும் மாறும். கிடைத்திருக்கும் இந்த வசதியான வாழ்க்கை, வசதியற்ற மனிதர்களிடம் பறிக்கப்பட்டதில் ஒரு பங்கு என்பதை குற்ற உணர்வோடு உணரும்போது மட்டுமே நம்மை ‘இழப்பதற்கு’ நாம் கொள்கை ரீதியில் தயாராவோம்.

அந்த ‘இழப்பை’ வாசகர்களிடம் உருவாக்குவதே வினவின் நோக்கம். அல்லது சமூக மாற்றத்திற்காக நடைமுறையில் இறங்கும் வண்ணம் வாசகரை தோழராக உயர்த்துவதே எங்கள் இலட்சியம். அந்த இலட்சியத்தில் சில படிகளை அடைந்திருக்கிறோம் என்பதில் பெருமையும் அதேநேரம் எதிரிகளோடு பலத்தோடு ஒப்பிடும் போது அது சிறு துளி என்பதையும் அறிவோம்.

அந்த வகையில் வினவின் சிறு வெற்றி ஒரு துவக்கமாக இருக்கிறது. அந்த நிலையை அடைவதற்கு பதிவுலகம் முக்கியமான பங்காற்றியிருக்கிறது. பதிவர்களும், வாசர்களும் தொடர்ச்சியாக வினவை படிப்பதும், விவாதிப்பதும் என்று எங்களை உற்சாகமூட்டியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் தோழர்களாகவும் மாறியிருக்கிறார்கள். பலர் மாறி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி. அதேபோல வினவை பல புதியவர்களிடம் கொண்டு போக தமிழ்மணம், இன்ட்லி போன்ற திரட்டிகளும் காரணமாயிருந்திருக்கின்றன. தீவிரமான எமது அரசியல் நிலை அவர்களுக்கும் சில பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கலாம். இருப்பினும் அதைப் பற்றி கவலைப்படாமல் தமிழில் இத்தகைய முற்போக்கு தளங்கள் வளரவேண்டும் என்ற அக்கறையுடன் ஆதரவளித்த திரட்டிகளுக்கும் குறிப்பாக தமிழ்மணத்திற்கும் எமது நன்றிகள்.

டிவிட்டர், கூகிள் கனெக்ட், பஸ், ஃபேஸ்புக் மூலம் எங்கள் பின்தொடரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இத்தனைக்கும் சமூக வலைத்தளங்களில் வினவு கட்டுரைக்கான இணைப்பை மட்டுமே கொடுக்கிறோம். அந்தந்த ஊடகங்களுக்கென்ற பங்களிப்பை நாங்கள் செய்வதில்லை. வினவுக்கான விளம்பர ஊடகமாக மட்டும் அதை பயன்படுத்துகிறோம். கருத்துக்கள் பலரையும் சென்றடைவதற்கு இந்த சமூக வலைப்பின்னல் உதவுகின்றன. அதனால் இதில் பங்கேற்கும் நண்பர்கள் தமது நட்பு வட்டம் முழுமைக்கும் வினவை கொண்டு சேர்க்குமாறு கோருகிறோம். உங்கள் பங்களிப்போடுதான் வினவு வட்டம் இன்னும் அதிகமாக விரிவடையும்.

ஆரம்பத்தில் நாங்கள் மட்டுமே எழுத வேண்டுமென்ற நிலை இன்று இல்லை. நண்பர்கள், தோழர்கள், பதிவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் என்று பலரும் வினவின் இந்த பயணத்தில் நிறைய உதவி வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள். அதே போல பின்னூட்ட விவாதங்களில் மாற்றுக் கருத்து இருந்தாலும் தொடர்ச்சியாக உரையாடும் நண்பர்களுக்கும் நன்றிகள். எல்லா விவாதங்களிலும் எங்களால் கலந்து கொள்ள இயலாது என்றாலும் அந்தக் குறையை போக்கும் வண்ணம் சில தோழர்கள் தொடர்ந்து விவாதிக்கிறார்கள். அந்த தோழர்களுக்கும் நன்றிகள்.

வினவில் விளம்பரம் போடுமாறு அவ்வப்போது கோரிக்கைகள் வருவதுண்டு. அவர்களில் சிலர் கருத்து ரீதியாகவே வினவை ஆதரிப்பவர்கள் என்றாலும் வினவில் எப்போதும் விளம்பரங்கள் போடுவதாக இல்லை. விளம்பரதாரர்களின் பலத்தில் பத்திரிகை நடத்தக் கூடாது, மக்கள் பங்களிப்பில்தான் பத்திரிகை நடத்த வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளாக புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்கள் கடைபிடிக்கின்றன. நாங்களும் அந்த வழியிலேயே செல்கிறோம். எமது தேவைகட்கு வாசகரிடம் பெறும் நன்கொடைகள் மூலம் ஈடு செய்வோம். அதற்காக விரைவில் பேபால் முறை மூலம் பணம் செலுத்தும் வசதியை ஏற்படுத்துகிறோம். விளம்பரம் அளிக்க முன்வந்த நண்பர்கள் இதை புரிந்து கொள்வார்கள், அவர்களுக்கும் எமது நன்றிகள்!

____________________________________________

புதிய வினவில் தற்போது போல கட்டுரைகள் தினம் ஒன்று வெளிவரும். கூடுதலாக பார்க்க வேண்டிய செய்திகள், தெரிவு செய்யப்பட்டு சுருக்கமான விமரிசனத்துடன் தினம் நான்கைந்து வரலாம். ஏன் இந்த லாம்? எமது வேலைச்சுமைகளின் விருப்பத்திற்கேற்பவே செயல்பட வேண்டியிருப்பதால் அதை தொடர்ச்சியாக நிறைவேற்றுவோம் என்று உறுதி கூற இயலவில்லை. ஆனாலும் எழுதும் தோழர்களை முறைப்படுத்தி திட்டமிட்ட முறையில் அதை எவ்வளவு சீக்கிரம் நிறைவேற்ற முடியுமோ கண்டிப்பாக செய்வோம்.

பழைய வடிவமைப்பில் வினவு வந்த போது நிறைய தொழில்நுட்ப பிரச்சினைகள் இருந்தன.  முக்கியமாக தளம் திறப்பதற்கு நிறைய நேரம் எடுத்தது. அப்போதே புதிய தேவைகளுக்கேற்ப தளம் வடிவமைக்கும் வேலையை துவக்கினோம். கிட்டத்தட்ட ஆறுமாதங்கள் ஆகி தளம் ஒரு நிலையை அடைந்து,  வேறு சில குறுக்கீடுகள் காரணமாக கொஞ்சம் தாமதத்தோடு இப்போது அறிமுகம் செய்கிறோம்.

பத்திரிகைகள் கொண்டுள்ள வசதிகள் மற்றும் வலைப்பூக்கள் தோற்றுவிக்கும் ஒரு நெருக்கமான உணர்வு இரண்டையும் புதிய வினவு கொண்டிருக்கிறது. பத்திரிகை என்றால் அதிகம் செய்திகளே வெளியிடப்படுவதால் தலைப்பு வாரியாக செய்திகளை தெரிந்து கொள்ளும் வசதியே அங்கே முக்கியமானதாக இருக்கும். அங்கே வாசகருக்கும், எழுதுபவருக்கும் உறவு ஏற்பட வழியில்லை. வலைப்பூக்கள் தனிப்பட்ட டயரிக் குறிப்புகளை மனமொத்தவர்களோடு பகிருபவை. முடிந்த அளவு இந்த இரண்டையும் புதிய வினவில் கொண்டுவருவதே நாங்கள் விரும்பியது. பத்திரிகை போல தலைப்பு வாரியாக கட்டுரைகள், செய்திகளை தேடவும், வலைப்பூக்கள் போல நெருக்கமாகவும் இருக்கும்  உணர்வை இந்த புதிய வடிவமைப்பு தரும் என்று நம்புகிறோம்.

புதிய தளத்தின் வசதிகள்:

1) புதிய தளம் விரைவாக திறக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது.

2) முகப்பு பக்கத்தின் இடது மேல்பக்கத்தில் ஹோம், அங்காடி, அறிமுகம், நூல்கள் முதலான பக்கங்கள் இருக்கும். மேலும் எழுத்துக்களை பெரிதாக்கவும், சிறிதாக்கவும், பிளஸ், மைனசை அழுத்தி மாற்றலாம். எழுத்தை சீரான நிலைக்கு திரும்பவதற்கும் அதன் அருகிலேயே வசதி இருக்கிறது.

3) முகப்பு பக்கத்தின் வலது மேல்பக்கத்தில் சமூக வலைத்தளங்களின் இலச்சனைகள் இருக்கும். அதை அழுத்துவதன் மூலம் நீங்கள் அந்தந்த தளங்களை அடைய முடியும். அதன் அருகிலேயே லாகின் செய்யவும் ரிஜிஸ்டர் செய்யும் வசதி இருக்கிறது. உங்களது மின்னஞ்சல் முகவரியுடன் உங்களது பெயரோடு பதிவு செய்து கொள்ளலாம். பதிவு முடிந்ததும் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஆக்டிவேஷன் மின்னஞ்சல் ஒன்று வினவிலிருந்து வரும். அதன் மூலம் நீங்கள் பதிவு செய்த உறுப்பினர் தகுதியை அடையலாம்.

விரைவில் உறுப்பினராக இணைந்தவருக்கு மட்டும் மட்டறுத்தலில்லாத மறுமொழி அளிக்கும் சேவையை வழங்க இருக்கிறோம் , இது அனானிகள் பின்னூட்டங்களை குறைத்து விவாதம் மேலும் சிறப்பாக நடைபெறும் என்று நம்புகிறோம்.உங்கள் புகைப்படத்தையோ அல்லது நீங்கள் விரும்பும் படத்தையோ கிரவதார் தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம். இதனால் நீங்கள் எங்கு சென்று பின்னூட்டம் இட்டாலும் உங்கள் பெயர்  படத்தோடு சேர்ந்து வரும். கிரவதார் பதிவு செய்யாதவர்களுக்கு தானியங்கி முறையில் கார்ட்டூன் படம் இங்கு அளிக்கப்படும். இது ஒவ்வொரு முறையும் நீங்கள் பின்னூட்டமிடும் போது வெளிவரும். படத்தின் மூலம் பின்னூட்டமிடுபவரை வாசகர் எளிதில் அடையாளம் காணலாம்.

4) முகப்பு பக்கத்தின் வினவு டைட்டிலுக்கு கீழே அறிவிப்புப்  படங்கள் தேவையை ஒட்டி வெளியடப்படும். தளத்தை திறப்பவர்களுக்கு சுற்று முறையில் படங்கள் ரேண்டமாக வரும்.

5) படத்திற்கு கீழே நடப்பு நிகழ்வுகள் என்ற ஒரு வரி பிளாஷ் மூலம் கடைசியாக வந்த கட்டுரைகளை காணலாம். அதில் தோன்றி மறையும் கட்டுரைகளை அழுத்தினால் அந்த கட்டுரையின் பக்கத்திற்கு செல்ல்லாம். இந்த ஒரு வரி ப்ளாஷ் லைனுக்கு அருகிலேயே தளத்தில் தேட கூகிள் தேடல் பெட்டியும் உள்ளது.

6) இதற்கு கீழே இடது பக்கம் உள்ள சிறு பத்தியில் பக்கங்களும், கேட்டகிரி எனப்படும் உட்தலைப்பு வகைகளும் இடம் பெறும்.  கட்சிகள், அதிகார வர்க்கம், நாடாளுமன்றம், உலகமயம், அமெரிக்கா,  அனுபவம், படைப்பு என வினவில் வரும் எல்லா கட்டுரைகளும் இந்த வகைகளில் இடம்பெறும் என்பதால் குறிப்பிட்ட தலைப்பில் நீங்கள் தேடுவதற்கு இந்த தலைப்புகளை அழுத்தினால் போதும். அது தொடர்பான அனைத்து கட்டுரைகளையும் காணலாம்.

7) நடுமத்தியில் நான்கு தலைப்பில் பெட்டிகள் நீலநிறத்தில் இடம்பெறுகின்றன. “புதிய பதிவுகள்” என்ற தலைப்பில் புதியதாக வெளிவரும் கட்டுரைகள் இடம்பெறும். ஒவ்வொன்றிலும் கட்டுரை வெளியான தேதி, நேரம், தலைப்பு, ஒருவரிச் சுருக்கம், பின்னூட்டங்கள் எண்ணிக்கை, மேலும் வாசிக்க என்பவை இடம்பெற்றிருக்கும். இந்த பக்கதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் போக மீதியை கீழே உள்ள பக்க எண்ணை அழுத்துவதன் மூலம் அறியலாம்.

8.  இதற்கு அடுத்தபடியாக “இப்போது விவாதத்தில்” என்ற பெட்டி இருக்கும். இதை அழுத்தினால் கடைசியாக மறுமொழி வந்துள்ள  கட்டுரைகளின் பின்னூட்டங்களை பார்க்கலாம். ஒவ்வொரு பின்னூட்டமும் கட்டுரையின் தலைப்பு, மற்றும் கடைசியாக அந்தக் கட்டுரைக்கு வந்துள்ள ஐந்து பின்னூட்டங்களின் ஒருவரிச் சுருக்கத்தோடு இருக்கும். இதில் தேவையானவற்றை அழுத்தினால் அந்தெந்த பின்னூட்டதத்திற்கு செல்லலாம். தொடர்ச்சியாக விவாதிப்பவர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

9) அடுத்து சிறப்பு பதிவுகள் என்ற பெட்டி இருக்கும். இதில் வினவில் கடைசியாக வந்துள்ள சிறப்பு கட்டுரைகளின் தலைப்புகள் விவரங்களோடு இருக்கும். இக்கட்டுரைகள் வினவு ஆசிரியர் குழுவால் பரிந்துரை செய்யப்பட்டவை.

10 முகப்பு பத்தியின் வலது பக்கத்தில் உள்ள பகுதியில் சமூக வளைத்தளங்களில் இணையும் வசதியும், அறிவிப்புகளும் இடம்பெறும்

11) அடுத்து முகப்பு பக்கத்திலிருந்து ஒரு கட்டுரையின் தலைப்பை அழுத்தினால் அதன் பக்கம் திறக்கும். இதில் கட்டுரை தலைப்பு, ஆசிரியர் பெயர், நேரம், தேதி மற்றும் கட்டுரையின் ஒரு வரிச்சுருக்கம் இருக்கும். இதன் கீழ் பின்னூட்டங்களின் எண்ணிக்கை, சமூக வலைத்தளங்கள் பகிர மற்றும் புக்மார்க் செய்வதற்கான வசதி இருக்கிறது. கூடவே பிடிஎப், அச்சிடுதல் ஆகியவற்றுக்கும் வசதிகள் இருக்கும்.

12) இதன் கீழே பதிவு, மறுமொழிகள் என்று இரண்டுபெட்டிகள் இருக்கும். பதிவை அழுத்தினால் முழுக்கட்டுரையும் வரும். கட்டுரையின் முடிவில் தொடர்புடைய பதிவுகள் பட்டியலும் அதன் கீழ் இந்த பக்கத்தின் மேலே உள்ள சமூக வலைத்தளங்களில் பகிரும் வசதி, பிடிஎப், அச்சிடுக அனைத்தும் இங்கேயும் இருக்கும்.

13) இந்த பதிவு பக்கத்தின் வலது பத்தியில் இந்த கட்டுரையை யார் எழுதினார்களோ அவர்களது  கடைசி ஐந்து கட்டுரைகளின் இணைப்புகளும், இந்த கட்டுரை எந்த உட்தலைப்பு, குறிச்சொற்களில் இடம் பெற்றிருக்கிறதோ அவற்றில் இருந்து ஒரிரு தலைப்புகளில் வெளிவந்துள்ள கட்டுரைகளின் இணைப்பும் இருக்கும். ஒரு கட்டுரையை வைத்து இன்னும் விரிந்த அளவில் பல கட்டுரைகளை தேடும் ஆர்வத்தை இந்த வசதிகள் ஊக்குவிக்கும் என நம்புகிறோம்.

14) அடுத்து பதிவு பக்கத்தின் மறுமொழிகள் வசதியைப் பார்க்கலாம். கட்டுரையின் பக்கத்துக்கு வந்ததும் பதிவு, மறுமொழிகள் என்ற இரண்டு பெட்டிகளை பார்க்கலாம். அதில் மறுமொழி பெட்டியை அழுத்தினால் அந்தக் கட்டுரையின் மறுமொழிகள் பக்கத்துக்கு நேரடியாக செல்லலாம். ஒவ்வொரு மறுமொழியிலும் விவாதிப்பவரது பெயர், பின்னூட்டமிட்ட நேரம், தேதி, மற்றும் அதன் யூஆர்எல்லை சுட்டும் இரட்டைச் சங்கிலியையும் பார்க்கலாம். இந்த சங்கிலியில் மவுசை வைத்தால் திரையின் கீழே அதன் யூஆர்எல் முகவரி வரும். இதன் மூலம் விவாதத்தில் நீங்கள் எவருடைய பின்னூட்டத்தின் இணைப்பையும் சுலபமாக அளிக்க முடியும்.

பின்னூட்டங்களை கடைசியில் உள்ள பின்னூட்டப்பெட்டியின் மூலமும் அளிக்கலாம். இல்லையேல் யாருக்காவது பதிலளிக்க விரும்பினால் அவரது பின்னூட்டத்தின் கீழே உள்ள ரிப்ளையை அழுத்தினால் போதும். இப்போது பின்னூட்ட பெட்டி அவரது பின்னூட்டத்திற்கு கீழேயே தோன்றும். இதனால் அவரது பின்னூட்டத்தை திரையில் பார்த்தவாறே உங்கள் பதிலை எழுதலாம். முன்பு ரிப்ளையை அழுத்தினால் பின்னூட்ட பெட்டி கடைசியில் எல்லா பின்னூட்டங்களுக்கும் இறுதியில்தான் தோன்றும். தற்போது அந்த இடர் இல்லை.பின்னூட்டங்கள் அனைத்தும் எண்ணால் வலது பக்கத்தில் குறிக்கப்பட்டிருக்கும். விவதாங்கள் நடந்தால் அது அந்த எண்ணின் உட்பிரிவு எண்ணாக தோன்றும். இதனால் எண்ணை வைத்தும் மனதில் கொண்டு சுலபமாக விவாதிக்கலாம்.

15) மறுமொழி, பதிவு என்ற இரண்டு பெட்டிகளும் ஒரே பக்கத்தில் இருப்பதால் இவற்றை அதிவேகமாக திறக்கலாம். ஒவ்வொன்றும் லோடாகி திறக்க வேண்டிய அவசியமில்லை. இரண்டையும் இப்படி அதிவேகத்தில் திறக்கும் வசதி இருப்பதால் மறுமொழிகளின் தேவையைப் பொறுத்து நீங்கள் கட்டுரையை படிக்க வேண்டியிருந்தால் அதற்கு இந்த வசதி உதவியாக இருக்கும்.

16) இடது பக்கத்தில் உள்ள கேட்டகிரி எனும் உட்தலைப்புகள் அழுத்தினால் சம்பந்தப்பட்ட தலைப்புகள் உள்ள பக்கங்களுக்கு செல்வதோடு கீழே பக்க எண்ணை வைத்து அதில் எத்தனை கட்டுரைகள் உள்ளன என்பதையும் அறியலாம். இதுவரை வந்த கட்டுரைகளை அனைத்தையும் இந்த தலைப்புகளின் இணைக்கும் பணியில் இருக்கிறோம். முடிந்தவுடன் அறிவிக்கிறோம்

ந்த அறிமுகம் உங்களுக்கு போதுமானதாக இல்லை என்றால் விரைவில் படக்குறிப்புகளுடன் விளக்குகிறோம். தொடர்ந்த பழக்கத்தில் இந்த வசதிகளை பயன்படுத்தும் முறையை எளிதாக அறியலாம். மேலும் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள், விளக்குகிறோம்.

இவையெல்லாம் பல ஆங்கிலத் தளங்களில் இடம்பெறும் வசதிகள் என்றாலும் தமிழ்ப்பதிவுலகின் பெரும்பான்மையினர் பயன்படுத்தும் இலவச சேவை வழங்கிகளால் தரப்படுவதில்லை. முடிந்த வரையில் அந்த வசதிகளை இங்கே அளித்திருக்கிறோம்.

எனினும் இவையெல்லாம் வினவும், வாசகர்களும் வளர்வதினூடாகத்தான் சிறப்பாக பயன்படுத்த முடியும். ஒருவேளை ஓரிரு ஆண்டுகளுக்கு பின்னர் நமது வளர்ச்சி புதிய சிகரங்களை அடைந்தால் இப்போதைய வசதிகள் போதாததாக இருக்கலாம். அப்போது அடுத்த வெர்ஷனை ஆலோசிப்போம்.

அது வரை இந்த புதிய வினவை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவோம். நன்றி.

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

வினவு ஓராண்டு நிறைவு: கற்றவையும் கடமையும்!!

  1. //2007-ஜூலையில் தற்செயலாக ஆரம்பிக்கப்பட்ட வினவுக்கு இன்றோடு இரண்டு வருடம் ஒன்பது மாதங்கள் வயதாகிறது. //

    வயது தவறாக குறிப்பிடப்பட்டு இருக்கிறதோ?

    • நன்றி தோழரே 2008 ஜூலை என்று இருக்க வேண்டும் – மாற்றி விட்டோம்

        • தமிழ்மணம் கருவிப்பட்டையின் காரணமாக தளத்தின் வேகம் குறைகிறது, கருவிப்பட்டை இல்லாவிடில் தமிழ்மணத்தின் சேவையான மறுமொழி திரட்டி, வாசகர் பரிந்துரை, சூடான இடுகைகள் முதலியவையை பயன்படுத்த இயலாது, எனினும் ஒட்டுமொத்த தளத்தின் செயல்பாட்டை கணக்கில் கொண்டு அதை தற்காலிகமாக நீக்கியிருக்கிறோம்.

          • தோழர் வினவு தமிழ்மணம் சூடான பதிவில் வந்திருக்கு பாருங்க.

          • தோழர் நன்றாக தேடிப்பார்த்து விட்டேன், லெப்ட் சைடில் இருக்கும் கேடகிரியிலும், சிறப்பு பதிவுகளும் அரைகுறையாக உள்ளது. பழைய இடுகைகள் எதுவும் காணவில்லை. என்னாச்சு?

            • தோழர் கேள்விக்குறி, பதிவில் குறிப்பிட்டுள்ளபடி, அனைத்து பதிவுகளையும் பகுப்பாக்கும் பணி நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் முடிவடையும்

  2. வணக்கம் வினவு தோழர்கள்,

    மகிழ்ச்சியாக இருக்கிறது. புதிய லே அவுட் நன்றாக இருக்கிறது அதே நேரத்தில் வெளியிலிருந்து பார்ப்பவன் என்கிற முறை சில விசயங்களை கூறுகிறேன். புதிய வடிவமைப்பில் சில விசயங்கள் குறையாகவும் துருத்திக்கொண்டும் இருக்கின்றன அவற்றை சரி செய்ய முடியுமா என்று பாருங்கள்.

    முதலாவதாக, முகப்பில் ‘வினவு’ என்பதற்கு கீழே வரிசை கிரமமாக வரும் படங்கள் அனைத்தும் மிகப்பெரியதாக இருக்கின்றன. அவை நிறைய இடத்தை அடைத்துக்கொண்டிருக்கின்றன. அப்படி படா படா சைசில் இருப்பது அழகாக இல்லை. அதாவது ’கல்யாண கதை கேளு’ என்கிற உரையில் தோழர் செல்வராசு ஒன்றை சொல்வார் அது தான் நினைவுக்கு வந்தது கல்யான வீட்ல மொக்க மொக்க காத்தாடியா நிப்பாடியிருந்தாங்கன்னு அது மாதிரி படங்கள் அனைத்தும் மொக்கை மொக்கை சைசில் இருக்கின்றன. அவை அளவாக இருந்தால் அழகாக இருக்கும்.

    இரண்டாவதாக, முன்பு வினவிற்குள் வந்ததுமே ’இப்போது விவாதத்தில்’ என்கிற சரத்தை வலது பக்கத்தில் நுழைந்ததுமே காண முடியும், அதை தற்போது உள்ளே கொண்டு போயிருப்பது நன்றாக இல்லை. புதிதாக வரும் எத்தனை பேர் மேலே படித்துவிட்டு பிறகு ’இப்போது விவாதத்தில்’ பகுதிக்குள் வருவார்கள் ? உள்ளே வரும் அனைவருமே விவாத இழைக்குள் வருவார்கள் என்று கூற முடியாது. அதுவே அது பார்க்கும்படி வெளியே இருந்தால் நுழைந்ததுமே வாசிக்க முடியும் பிறகு தேவையான விவாத இணைப்பிற்குள் செல்லவும் முடியும். அதற்கான இடமும் அதே பழைய இடத்தில் வெளியே காலியாக இருக்கிறது. எனவே,அனைவரும் பார்க்கும்படி வெளியிலேயே வலது பக்கத்தில் வைப்பது தான் புதிய பார்வையாளர்களை கவரக்கூடியதாக இருக்கும்.

    மூன்றாவதாக, பின்னூட்ட சரமே மிகச்சிறியதாக இருக்கிறது

    நான்காவதாக, மேலே முகப்பு வெறுமனே வெள்ளையாக இருப்பதற்கு பதிலாக சில வண்ணங்களில் இருந்திருக்கலாம். கூடவே, சில படங்களையும் சேர்த்திருக்கலாம்.

    தற்போது பார்த்தவரை இவை தான் புதிய வினவு பற்றிய எனது கருத்துக்கள். ஒரு சில நாட்கள் பார்த்த பிறகு மேலும் சில ஆலோசனைகளை கூற முடியும். அவற்றை பிறகு கூறுகிறேன்.

    மேலும், பதிவை படித்த போது நிறை எழுத்துப்பிழைகளும் வாக்கியக்குழப்பங்களும் இருந்ததை கண்டேன் அவற்றை உடனே குறித்து வைக்காததால் தற்போது அனைத்தையும் இங்கே சுட்டிக்காட இயலவில்லை. கண்ணில் பட்டதை மட்டும் கீழே கொடுத்துள்ளேன். தோழர்கள் மீண்டும் ஒரு முறை முழு பதிவையும் வாசித்து பிழைகளை திருத்தினால் நல்லது.

    ///இக்கட்டுரைகள் வினவு ’ஆசிரியல்’ குழுவால்///

    /// கோவை என்கவுண்டர் பற்றி தினசரிகளும் பதிவுலகமும் எப்படி ஆரவாரத்துடன் வரவேற்றன ’என்பதறிவோம்’///

    ///இத்தகைய சமரசக் கருத்துக்கள்தான் சமூகத்தில் எப்போதும் செல்வாக்கு ’செலுத்துவபையாக’ இருக்கின்றன.///

    • தோழர் உண்மை, விவாதங்கள் பகுதி முகப்பில்தான் இருக்கின்றன, முன்பை விட சுலபமாக அதை அடையலாம்..
      உங்களால் முகப்பில் உள்ள ”இப்போது விவாத்தில்’‘ டாப் பகுதியை காண முடிகிறதா?

    • தோழர்களே,

      வினவின் முகப்பு பக்கத்தில் மட்டுமே அந்த 4 பெரிய படங்கள் கட்டுரைகளின் இணைப்போடு வரும். இது சமீபத்திய சிறப்பு கட்டுரைகளை முக்கியத்துவம் கருதி தளத்திற்கு வரும் வாசகரிடம் வலிமையாக அறிமுகப்படுத்துவதற்கான வசதியாகும். எதிர்காலத்தில் இதில் பொருத்தமான கார்ட்டூன்களையும் போடுவதாக இருக்கிறோம்.

      இரண்டாவது இங்கு சிலர் சுட்டிக்காட்டியிருக்கும் பின்னூட்டங்களை முந்தைய வடிவமைப்பு போல முகப்பின் வலது பக்கத்தில் நீண்ட பெட்டியாக போடுவது குறித்து:
      முதலில் இதை முகப்பில் போடுவதாக இருந்தால் வலது பத்தியில் வேறு எதனையும் போட முடியாது. மேலும் அப்படி போடுவதாக இருந்தால் தளத்தின் முகப்பு நீளம் மிகவும் நீண்டுவிடும்.

      அடுத்து இப்போது இருக்கும் பின்னூட்ட வசதி வாசகர் நோக்கில் முந்தைய வடிவமைப்பை விட மிகவும் மேம்பட்டதாகும். ஒரே நேரத்தில் பதிவு, மறுமொழிகள் இரண்டும் திறக்கப்படும். தேவைக்கேற்ப மாறி மாறி பார்த்துக் கொள்ளலாம். முன்னர் பதிவை படித்து மவுசை உருட்டி கடைசியில் பின்னூட்டம் போடவேண்டிய நிலை. இப்போது ஒரு அழுத்தில் பின்னூட்டமிடும் பகுதியை அடைந்துவிடலாம். ஒரே நேரத்தில் பதிவை படித்து விட்டு பின்பு எந்த வரிசையில் பின்னூட்டமிடவேண்டுமோ அங்கு உடனேயே போட்டு விடலாம். இவையெல்லாம் தொடர்ந்த பழக்கத்தில் சுலபமாக கையாளலாம்.

      மேலும் பின்னூட்ட விவாதம் சிறப்பாக நடக்க வேண்டுமென்பதற்காகவே இந்த வடிவமைப்பு. இது பல உலக இணைய தளங்களின் சேவைகளை பார்த்து பரிசீலித்து நமது தேவைக்காக உருவாக்கப்பட்டது. இதற்காக நிறைய தயாரிப்பு செய்து சோதனை முறைகளை அமல்படுத்தி இறுதியில் இதை தீர்மானித்தோம். எனவே நண்பர்கள், தோழர்கள் போகப்போக இதை சிறப்பாக பயன்படுத்த முடியும். நன்றி

  3. தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் … எனது நண்பர்களிடம் பகிரும் தளங்களில் ஒன்றாக வினவு எப்போதுமிருக்கும் .. வெற்றிப் பயணம் தொடரட்டும் தோழர்களே!

    • நன்றி முத்து பிரகாஷ், உங்களைப் போன்ற நண்பர்களின் வெளியே தெரியாத முயற்சியின் மூலம்தான் வினவு வட்டம் மெல்ல மெல்ல விரிவடைகிறது. தொடர்ந்து தொடர்பில் இருங்கள்.

  4. என்னால் காண முடிகிறது தோழர், அது மேலே இருந்தாலும் சிறியதாக இருக்கிறது அத்துடன் தளத்திற்கு வரும் அனைவரும் அதை கவனிப்பார்கள் என்றும் சொல்ல முடியாது அப்படியே கவனித்தாலும் உள்நுழைந்து பார்ப்பார்களா என்று கேட்டால் சந்தேகம் தான். முக்கியமாக நான் கூறுவது என்ன என்றால் பழைய வினவில் அது சைடில் இருக்கும் உள்ளே வருபவர் தளத்தை மேம்போக்காக பார்த்தால் கூட நிச்சயமாக அது கவனிக்கும்படி இருந்தது. அவ்வாறு இருந்தது தான் அவர்களை ஈர்த்து என்ன தான் விவாதம் என்று பார்க்கலாமே என்று உள்ளே நுழைய வைக்கும். ஆனால் தற்போது இருப்பது வாசகர்களை ஈர்க்கும் விதமாக இல்லை.

      • நன்றி தோழரே. முக்கியமாக முகப்பு படம் விசயத்தை பரிசீலிக்கவும், அது நன்றாகவே இல்லை. மற்ற தோழர்களிடமும் கேட்டுப்பாருங்கள்.

  5. வினவின் புதிய வடிவமைப்பு சிறப்பாக இருக்கிறது. தோழர்களுக்கு வாழ்த்துகள்!!
    ’சிறப்பு பகுதி’க்காக நன்றி! சில செய்திகளை வாசிக்கும்போது, வினவின் கட்டுரைகள் நினைவுக்கு வரும். அக்கட்டுரைகளை தேடி அவ்வப்போது திரும்ப வாசிப்பேன். அந்த தேடுதலை, சிறப்பு பகுதி எளிமையாக்கும் என நம்புகிறேன். நன்றி! பயணம் தொடரட்டும்!

    • நன்றி முல்லை! வினவின் பயணம் உங்களைப் போன்றவர்களுடன் இணைந்து செல்வது குறித்து மகிழ்ச்சி!

  6. Congrats Vinavu.

    அனைவருக்கும் ஆசான் லெனினது பிறந்த தின வாழ்த்துக்கள்…

    • நன்றி ஜீவா, பின்னூட்ட விவாதங்களிலும் தொடர்ந்து பங்கு பெறுங்கள்!

  7. வாழ்த்துக்கள் வினவு!

    வடிவமைப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஏற்கனவே இருந்த வடிவமைப்பிற்குக் கண்கள் பழகி விட்டதால் இந்த வடிவம் பழக சில காலம் ஆகலாம்.

    ஆனாலும் அது ஒன்றும் பிரச்சினையில்லை. வினவு வாசகர்கள் வடிவமைப்பை விட உள்ளடக்கத்திற்காகவே பெரும்பாலும் வருகிறார்கள் என்று நினைக்கிறேன்.

    ஒரு சின்ன அலோசனை –

    பதிவை க்ளிக் செய்தால், தொடர்ந்து பின்னூட்டங்களும் தெரியும் விதமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். பதிவை வாசித்து விட்டு பின்னூட்டம் எழுத வேண்டும் என நினைப்பவர்கள், பதிவில் இருந்து சில வரிகளை “கோட்” செய்ய வேண்டும் என்றால் மீண்டும் பதிவை இன்னொரு டேப்பில் திறக்க்க வெண்டியிருக்கிறது.

    பாதி பின்னூட்டத்தில் மேலே இருக்கும் பதிவு டேப்பை கிளிக் செய்து விட்டு மீண்டும் பின்னூட்டம் டேபுக்கு திரும்பினால் ஏற்கனவே எழுதிய பின்னூட்டங்கள் மறையவில்லை என்பது ஒரு வசதி தான். இருந்தாலும், பெரும்பாலான தளங்களில் ஸ்க்ரோல்பேக் செய்து பதிவை ரெபர் செய்து விட்டு பின்னூட்டம் எழுதும் வசதி தான் வைத்திருக்கிறார்கள்.

    • மன்னார்சாமி,பதிவின் இறுதியில் வரும் பின்னூட்ட எண் கொண்ட ‘பபிளை’ அழுத்தினால் அது நேராக பின்னூட்ட பெட்டியை சென்றடையும்

    • தோழரே, உங்கள் ஆலோசனை குறித்து மேலே தோழர் “உண்மை”க்கு அளித்த விளக்கமே போதுமானது என்று கருதுகிறோம். இதை சில நாட்கள் நடைமுறைக்கு பிறகு எப்படி இருக்கிறது என்பதை அறியத்தாருங்கள்.நன்றி

  8. புரட்சிகர வாழ்த்துகள் வினவு!

    பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை முன்னெடுத்த ஆசான் தோழர் லெனினின் பிறந்தநாளிலும், இந்தியாவில் மார்க்சிய – லெனினிய கட்சி உதயமான நாளிலும் பூத்திருக்கும் வினவின் புதிய வடிவமைப்பு, சிறப்பாக இருக்கிறது.

    தொடருங்கள். தொடர்கிறோம். தொடர்வோம்.

    அனைத்து தோழர்களுக்கும் புரட்சிகர நல்வாழ்த்துகள்.

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    • நன்றி தோழர் பைத்தியக்காரன்! பதிவுலகம் மூலம் உங்களைப் போன்ற நண்பர்களை வினவு அடைந்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி!

    • ஜெரி ஈசானந்தன்,

      உங்கள் ஆதரவிற்கு நன்றி! விவாதங்களிலும் அடிக்கடி கலந்து கொண்டால் மகிழ்ச்சி அடைவோம்.

  9. வாழ்த்துகள்..

    எனக்கு வினவின் , மற்றும் வாசகர்களின் கருத்துகளும்தான் இப்போது முக்கியம் ..ஆக எப்படியிருந்தாலும் சரியே..

    இருப்பினும் எதிலும் முன்னேற்றம் வேண்டும் என்பதால் மகிழ்ச்சியே..

    பாராட்டுகளும்..

    • நன்றி சாந்தி, விவாதங்களில் விடாமல் கலந்து கொள்வதனூடாகவும் நீங்கள் பல விசயங்களை கற்றுக் கொள்ள முடியும்!

  10. புதிய தளம் நன்றாக இருக்கிறது, புரட்சிப்பயணம் தொடர வாழ்த்துக்கள்.
    அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

    • நன்றி தமிழ், தொடர்ந்து விவாத்திலும் தமிழை எதிர்பார்க்கிறோம்.

  11. புதிய வடிவத்தை கண்கள் ஏற்கின்றன. மூளை ஏற்கிறதா என்பதை பயன்படுத்திய பிறகுதான் சொல்ல முடியும். எனினும் இது முன்னேறிய வடிவம்தான். மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    “ஆனால் சமூக மாற்றம் என்பது தனிமனிதனிடம் காத்திரமான மாற்றத்தை கோருகிறது. தனி மனிதர்கள் மாறினால்தான் சமூகமும் மாறும்”.

    இதை சற்றே விளக்கியிருக்கலாம். தனிமனிதர்கள் மாறிவிட்டால் சமூகம் தானாக மாறிவிடும் என்கிற தொனியில் இது அமைந்துள்ளதாகக் கருதுகிறேன்.

    வினவை நான் தொடர்ந்து படித்தாலும் பின்னூட்டமிடுதற்குத் தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்த போது ஒரு தோழரின் உதவியுடன் சந்தன முல்லை அவர்களின் “உலகின் அழகிய மணமக்கள்” பதிவுக்கு பின்னூட்டமிடத் தொடங்கினேன். மிகவும் நீண்ட பின்னூட்டமாக அது அமைந்து விட்டது. அதன் பிறகு பதிவெழுத முனைந்தேன். சிலவற்றை வினவுக்கு அனுப்பி வைத்தேன். அவற்றில் இரண்டு பதிவுகள் வினவில் வெளியிடப்பட்டன. இது எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது.

    வாசகர்களும் வலைப்பூ தொடங்கலாம் என வினவின் ஒரு பதிவில் படித்தேன். அக்டோபர் 2010 ல் நானும் தற்செயலாக எனது வலைப்பூவைத் தொடங்கினேன். எனது எண்ணங்களை வாசகர்களோடு இன்று பகிர்ந்து கொள்ள முடிகிறது என்றால் அதற்கு வினவுதான் முதற்காரணம். என்னை எழுதத்தூண்டி,தொடர்ந்து வளர்த்துக் கொள்ள ஊக்கப்படுத்தும் வினவுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

    • தோழர் ஊரான் உங்கள் ஆதரவுக்கு நன்றி! வினவின் விவாதங்களில் நீங்கள் தொடர்ந்து ஈடுபடுவது குறித்து மகிழ்ச்சியும், வாழ்த்துக்களும்! அதை தொடருங்கள்!!

  12. தோழர்களுக்கு :

    கழனி வரப்பில் மோழைகள் இருக்கும்.மோழையின் முகவாயில் சேற்றைக் குழைத்து அடைத்தால்தான், முழுதுமாக நீர்க்கசிவு அடைக்கப்படும்.

    பேரணையின் கரையில் ஓட்டைகள் நீருக்குள் மூழ்கித்தான் அடைக்கப்பட வேண்டும்.
    இந்த மோழையின் முகவாய்களைக் கண்டுபிடிப்பது என்பதுதான் சிரமமான செயல். நேரம் அதிகம் எடுத்தாலும் இதுதான் சிறந்த முறை.

    இன்னொரு உதாரணமென்றால், விஷ விருட்சத்தின் கிளைகளை வெட்டாமல், ஆணி வேருக்காகத் தேடுவது. கிளைகளை வெட்டுவது என்பது வசதியாகத்தானிருக்கும். ஆனால் திரும்பத் திரும்ப துளிர்க்கும் கிளைகளை இம் மானுடம் முழுதும் வெட்டிக்கொண்டேதான் இருக்க வேண்டும். ஆணிவேரைத் தேடுவதென்பது முட்டாள்தனமென்று அனேகருக்குப் படலாம். விஷ மரம் அழிக்கப்பட ஆணிவேரைத்தான் வெட்ட வேண்டும் என்பது அறிவியல்.

    தேடலில் ஆணிவேர் கிடைக்காது என்று திரும்பிவிடுவதுதான் அறியாமை. ஆணிவேரில்லாமல் மரமில்லை. இந்த ஆணிவேர் பறிக்கும் வேலையில், வினவை ஒரு கருவியாய்ப் பயன்படுத்துவோம்!

    ***

    வினவுக்கு :

    புதிய வீடு.
    புழங்குவதில் சிரமம்.
    பழகிவிடலாம்.
    எனக்கென்னவோ
    பழய திண்ணையிலேயே
    காற்றோற்றமிருந்தது.
    அது கிராமத்து
    களிமண் திண்ணை போல.
    இது நகரத்து
    சோபா செட்டு போல.

    வாழ்த்துக்கள்.

    மிக முக்கியத் தேவை :

    1. ‘தமிழில் எழுத’ என்றொரு கட்டம்.
    முகப்பிலேயே இருக்க வேண்டும்.
    தமிழில் எழுத / தட்டச்சு செய்ய
    குறிப்புகள் வேண்டும். இதனால்
    வாசகர்களின் கருத்துப் பகிர்வுகள்
    அதிகமாகலாம்.
    (அழகி மென்பொருள் சுளுவாக இருக்கிறது).

    2. அறிவியல், பொருளாதாரம், தத்துவம், பொதுவுடைமை :
    இவை குறித்த கேள்வி – பதில் பகுதி உடனே துவக்கப்பட வேண்டும்.
    உங்களின் பதில் என்பது மிக, மிக, மிகச் சுளுவாக புரிந்து கொள்ளும் விதத்தில்,
    கடினமான வார்த்தகளின்றி, சாதாரண, அன்றாட நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு,
    விளக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு கூலித் தொழிலாளியோ,
    ஒரு உழவனோ, ஒரு ரஜினி ரசிகனோ, ஒரு எஞ்சினீயரோ, ஒரு கணினித் துறை வல்லுனரோ,
    ஒரு வழக்க்கறிஞரோ, ஒரு நீதிபதியோ, ஒரு அரசியல்வாதியோ; யாராயிருப்பினும், அளிக்கப்படும் பதிலில்
    இவர்களுக்கு பொதுவுடைமையின் அடிப்படைக் கல்வியைப் புகட்ட வேண்டும். இதன் மூலம்தான், தான் இந்த சமுதாயத்தில்,எந்த இடத்தில்
    நிற்க வைக்கப்பட்டிருக்கிறோம் அல்லது நிற்கிறோம் என்று அவர்களுக்கு புரிந்துவிடும்.

    3. ஒருவர் வினவுக்கு தனது படைப்புகளை அனுப்ப என்ன செய்யவேண்டும்; எப்படி எந்தெந்த முறையில் அனுப்பப்பட வேண்டும் என்ற விவரங்களும் முகப்பில் இருக்க வேண்டும்.

    4. பொது நோக்கம் கருதி, நடக்கும் மிக மோசமான அவலங்களை புகைப்படமெடுத்தோ, கட்டுரையாகவோ, உடனுக்குடன் அனுப்பலாமா என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

    • தோழர் புதிய பாமரன், உங்கள் கவிதை வாழ்த்திற்கு நன்றி! சமீப காலமாக உங்கள் கவிதைகள் உள்ளடக்கத்திலும், வடிவத்திலும் கூர்மையையும், நயத்தையும் இயல்பாக கொண்டு வருகிறது. வாழ்த்துக்கள்! இது குறித்து தனியாக உங்களுக்கு எழுத நினைத்து செய்யவில்லை. மன்னிக்கவும்.

      இப்போது வினவு சோபா செட் போன்ற அலங்காரத்துடன் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் மாநகரத்தின் சேரி குடிசைக்குள் இருந்து கொண்டு தொழில்நுட்ப வசதியோடு, கூர்மையான கொள்கை பிடிப்போடு முழு உலகையும் பார்ப்பதற்கு பகிர்வதற்கு என்று சொல்லலாமா?

      பின்னூட்டப் பெட்டியில் மற்ற தளங்கள் உதவியின்றி தமிழில் எழுதும் வசதியை விரைவில் ஏற்படுத்துகிறோம்.

      கேள்வி பதில் பகுதியை விரைவில் ஆரம்பிப்பதாக இருக்கிறோம். அப்போது அது குறித்து விரிவாக விளக்கம் அளிக்கிறோம். உங்களை ஆலோசனைகளை நிச்சயம் கணக்கில் கொள்கிறோம்.

      வினவுக்கு படைப்பு அனுப்புவது குறித்த உங்கள் ஆலோசனைகளை பரிசீலிக்கிறோம். மற்றபடி வினவின் கருத்துக்களோடு உடன்படுகின்ற யாரும் தங்களைப்பற்றிய விவரங்களோடு படைப்புகளை அனுப்பலாம். அது குறித்த எங்கள் பதிலை விமரிசனத்தை அனுப்புவோம். மற்றபடி பொது நோக்கம் கருதி அவலங்களை புகைப்படமாகவோ, கட்டுரையாகவோ யாரும் அனுப்பலாம்.

      வெளியிலிருந்து வரும் படைப்புகள் நாங்கள் எதிர்பார்க்கும் குறைந்த பட்ச தரத்தில் இருந்தால் நிச்சயம் வெளியிடுவோம். அப்படி இல்லை என்றால் அதன் காரணத்தை தெரிவிப்போம். எனினும் இது குறித்த கடுமையான சட்டதிட்டம் எதுவும் எங்களுக்கில்லை. கூடிய மட்டும் பல புதியவர்களை வினவில் எழுத வைப்பதே எங்கள் நோக்கம். அப்படித்தான் பலர் இங்கே எழுதியிருக்கிறார்கள்.

      பின்னூட்ட விவாதங்களில் நீங்கள் இன்னும் ஊக்கமாக பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கையுடன்…..நன்றி.

    • தோழர் புதிய பாமரன், இப்பிரச்சனை சரி செய்யப்பட்டது. நன்றி

    • \\ 1. ‘தமிழில் எழுத’ என்றொரு கட்டம்.
      முகப்பிலேயே இருக்க வேண்டும்.
      தமிழில் எழுத / தட்டச்சு செய்ய
      குறிப்புகள் வேண்டும். இதனால்
      வாசகர்களின் கருத்துப் பகிர்வுகள்
      அதிகமாகலாம்.
      (அழகி மென்பொருள் சுளுவாக இருக்கிறது).2. அறிவியல், பொருளாதாரம், தத்துவம், பொதுவுடைமை :
      இவை குறித்த கேள்வி – பதில் பகுதி உடனே துவக்கப்பட வேண்டும்.
      உங்களின் பதில் என்பது மிக, மிக, மிகச் சுளுவாக புரிந்து கொள்ளும் விதத்தில்,
      கடினமான வார்த்தகளின்றி, சாதாரண, அன்றாட நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு,
      விளக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு கூலித் தொழிலாளியோ,
      ஒரு உழவனோ, ஒரு ரஜினி ரசிகனோ, ஒரு எஞ்சினீயரோ, ஒரு கணினித் துறை வல்லுனரோ,
      ஒரு வழக்க்கறிஞரோ, ஒரு நீதிபதியோ, ஒரு அரசியல்வாதியோ; யாராயிருப்பினும், அளிக்கப்படும் பதிலில்
      இவர்களுக்கு பொதுவுடைமையின் அடிப்படைக் கல்வியைப் புகட்ட வேண்டும். இதன் மூலம்தான், தான் இந்த சமுதாயத்தில்,எந்த இடத்தில்
      நிற்க வைக்கப்பட்டிருக்கிறோம் அல்லது நிற்கிறோம் என்று அவர்களுக்கு புரிந்துவிடும்.

      3. ஒருவர் வினவுக்கு தனது படைப்புகளை அனுப்ப என்ன செய்யவேண்டும்; எப்படி எந்தெந்த முறையில் அனுப்பப்பட வேண்டும் என்ற விவரங்களும் முகப்பில் இருக்க வேண்டும்.

      4. பொது நோக்கம் கருதி, நடக்கும் மிக மோசமான அவலங்களை புகைப்படமெடுத்தோ, கட்டுரையாகவோ, உடனுக்குடன் அனுப்பலாமா என்பதையும் தெரிவிக்க வேண்டும்.//

      இந்த கருத்தை வழிமொழிகிறேன்…
      ஒ இன்று லெனின் பிறந்த நாளா…நினைவூட்டலுக்கு நன்றி…
      வலது பக்கத்தில் ஒரு நாள் காட்டி இணைத்தால் நன்றாக இருக்கும். நமக்கான நாட்களை அறிந்து கொள்ளலாம். மார்க்ஸ் பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள். உலக அரசியல் நிகழ்வு நாட்கள், போன்றவற்றை நாம் இதன் மூலம் நினைவு கூறலாம்… நம் பிள்ளைகளுக்கு தெரிவிக்கலாம்…
      புதிது, புதிது, புதிது…….சலிப்பூட்டும் வாழ்க்கையில்..
      புத்தாடை அணிவது போன்ற மகிழ்ச்சி ….
      தொடரட்டும் புதிய வினவு..

      • நன்றி வேலன், நாள்காட்டி, நாள் முக்கியத்துவம் குறித்த உங்களை ஆலோசனையை தொழில் நுட்ப வரம்பிற்குள் செய்ய இயலுமென்றால் முயற்சி செய்கிறோம்.

  13. லெனின் பிறந்த நாளில், புரட்சிகர வாழ்த்துக்கள்.

    புதிய வடிவமைப்புக்கு வாழ்த்துக்கள். பயன்படுத்திய பிறகு, என் கருத்துக்களை பகிர்கிறேன்.

    தற்பொழுது ஒரு பிரச்சனை. ஒவ்வொரு ஐகானிலும், மேலே மெளசை வைத்தால், கட்டம் கட்டமாக தெரிகிறது. தமிழில் இருக்கிறதா என்ன? எல்லாவற்றையும் கிளிக் செய்து பார்க்கவேண்டியிருக்கிறது.

    • தோழர் குருத்து நீங்கள் சொல்லும் பிரச்சனையை புரிந்து கொள்ளவியலவில்லை, சற்று விளக்கி மடல் எழுத முடியுமா?

  14. புதிய வடிவமைப்பு சிறப்பாக இருக்கின்றது தோழர்,
    வாழ்த்துக்கள்,

    உண்மையில் மிக்க மகிழ்ச்சியான நாள் இது. வினவு உருவானதிலிருந்து ஆரம்பத்தில் எத்தனை வாதங்கள் விவாதங்கள் எத்தனை தெளிவுகள் எத்தனை விளக்கங்கள் ஆனாலும் இது போதவில்லை. எதிரியின் மையை உடைக்க புரட்சிகர சிந்தனை என்னும் உளி கொண்டு களத்திலிறங்கிய வினவிற்கு வாழ்த்துக்கள். வினவினை ஆரம்பத்தில் மிகவும் தொடர்ச்சியாக கவனித்து வந்தவன் என்ற முறாஇயில் எனக்கு மிக்க மகிழ்ச்சி

    கலகம்

    இது நெடுந்தொலைவுப் பயணம்

    பாதைகளின் முட்கள் என்றும்
    மலர்களாய் மாறாது

    அநீதிகள் தானாய்
    நீதிகளுக்கு வழிவிடுவதில்லை

    சனநாயகங்கள் கசக்க
    ஆரம்பித்துவிட்டன

    இது நெடுந்தொலைவுப் பயணம்

    ஆம் தொலைவு அதிகமெனினும்
    உலகை மாற்ற உன்னால்தான் முடியும்
    உன்னால் முடிந்ததை உன்னைப்போல்
    வேறு யாரும் செய்ய முடியாது
    கடமை இதோ கருத்திலும் களத்திலும்

    • தோழர் கலகம், வினவு ஆரம்ப நாட்களிலிருந்து விவாதிக்கும் தோழர் நீங்கள். இப்போது வேலைப்பளு காரணமாக நீங்கள் அதிகம் வருவதில்லை என்று நினைக்கிறோம். அது தீர்க்கப்பட்டு மீண்டும் வருவதை எதிர்பார்க்கிறோம். நன்றி

  15. தோழர் லெனின் பிறந்த நாளில் வினவின் புதிய தளம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.
    மிக்க மகிழ்ச்சியுடன் புரட்சிகர வாழ்த்துகள் தெரிவித்து கொள்கிறேன்.

    • தோழர் இளமாறன், நன்றி, வாய்ப்பிருக்கும் பட்சத்தில் விவாதங்களில் இன்னும் அதிகம் ஈடுபடுவதை விரும்புகிறோம்.

  16. புது வடிவமைப்பு ரொம்ப நல்லா இருக்கு. இடது பக்கம் பிரிவுகளின் பட்டியல் தேடுவதற்கு எளிமையா இருக்கு. குட் குட். வாழ்த்துகள். அனானியா வந்து அசிங்கமா திட்றதுக்கு மட்டும் ஒரு முடிவு கட்டினிங்கன்னா ரொம்ப புண்ணியமாப் போவும் :). அதனாலேயே பல பேர் ( என்னையும் சேர்த்து ) கமெண்ட் போடறதில்லை என்பது உங்களுக்கே தெரியும்.

    லோகோவின் மீது கர்சர் வைத்தால் logo எனக் காட்டுகிறது. alt டெக்ஸ்டில் வினவு என்று மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும். மீண்டும் வாழ்த்துகள்.

    • அனானியிடம் திட்டு வாங்கும் வினவே அதைப்பற்றி கவலப்படல 🙂 🙂 🙂 நீங்க ஏன் இவ்வளவு பீல் பண்ணுறீங்க மாப்பி

    • சஞ்சய் காந்தி, உங்கள் வாழ்த்திற்கு நன்றி! அனானியாக வந்த திட்டுபவர்களில் பெரும்பாலோனோர் எங்களைத்தான் அதிகம் திட்டுகிறார்கள்! மற்றவர்களை அப்படி திட்டுவதை கூடுமான வரை நிறுத்தவே முயல்கிறோம். கருத்து சார்ந்து எவ்வளவு கோபமாக விவாதித்தாலும் அது பிரச்சினை இல்லை. ஆனால் கருத்தின்றி வெறுமனே நபர்களை வசைபாடுவதில் எங்களுக்கும் உடன்பாடு இல்லை. ஆரம்பத்தில் ஓரிரு தோழர்கள் அப்படி விவாதித்திருப்பதை விமரிசித்திருக்கிறோம். சிலரது பின்னூட்டங்களை நீக்கவும் செய்தோம்.

      ஆனால் எங்கள் தோழர்களின் மீது நாங்கள் உரிமை எடுத்துக் கொண்டு செய்யும் இந்த நடவடிக்கையை மற்றவர்கள் மீது பெரும்பாலும் செய்வதில்லை. எல்லை மீறும்போது மட்டுமே தலையிடுகிறோம். அதே நேரம் வினவில் பின்னூட்ட்டமிடாததற்கு நீங்கள் இதுதான் காரணம் என்பதை யதார்த்தமாகவே எற்க இயலவில்லை. அரசியல் ரீதியில் விமரிசனம் மேலும் மேலும் கடுமையாக கடுமையாக அதனால் மாற்றுக்கருத்து உள்ளவர்கள் அதை எதிர் கொள்வதை அவ்வளவாக விரும்புவதில்லை. இதற்கு மேலும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் சஞ்சய் காந்தி இடும் பின்னூட்டங்களுக்கு விசேசமான பாதுகாப்பு கவசத்தை ஏற்படுத்தலாம்.

      போகட்டும். கூடிய விரைவில் வினவில் அனானி பின்னூட்டங்களை நிறுத்தி விட்டு மின்னஞ்சல் பதிவுடன் வருபவர்களே மறுமொழி இடமுடியும், அதுவும் மட்டறுத்தல் இல்லாமல் வெளிவரும் என்பதை அமல்படுத்த இருக்கிறோம். அதுவரை உங்கள் பங்களிப்பு இல்லாமல் போகுமென்றால் அது இழப்புதான். பொறுத்தருள்க!

      நீங்கள் சுட்டிக்காட்டிய தொழில்நுட்ப பிரச்சினை சரிசெய்யப்பட்டது, நன்றி

      • //போகட்டும். கூடிய விரைவில் வினவில் அனானி பின்னூட்டங்களை நிறுத்தி விட்டு மின்னஞ்சல் பதிவுடன் வருபவர்களே மறுமொழி இடமுடியும், அதுவும் மட்டறுத்தல் இல்லாமல் வெளிவரும் என்பதை அமல்படுத்த இருக்கிறோம். அதுவரை உங்கள் பங்களிப்பு இல்லாமல் போகுமென்றால் அது இழப்புதான். பொறுத்தருள்க!//

        வாழ்த்துக்கள் வினவு. புதிய வடிவமைப்பு நன்றாக இருக்கிறது. சில தொழில்நுட்ப பிரச்சினைகள் இருப்பதாக தெரிகிறது, அவை போகப் போக சரியாகிவிடும். கட்டுரைகளில் அது எழுதப்பட்ட தேதி கொடுக்கப்பட்டால் நன்றாக இருக்கும் (சுட்டியில் அது இருந்தாலும் கூட).

        அனானி பின்னூட்டங்கள் நிறுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அனானி பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படுவதே சரியென்று நினைக்கிறேன். இதில் பிரச்சினைகள் இருப்பினும் அடையாளமற்றோரின்/காட்ட விரும்பாதோரின் குரலை வெளிப்படுத்துவதே இணையத்தின், வலைப்பூக்களின் பலம் என்ற அடிப்படையில் அனானி பின்னூட்டங்கள் அனுமதிப்பதே நல்லது என்று நினைக்கிறேன். இது பற்றி சில வருடங்கள் முன்பு பெரியளவில் விவாதங்கள் வலைப்பூவில் நடந்துள்ளன. விவாத முடிவு என்பது பெரும்பான்மை பதிவர்கள் அனானி பின்னூட்டங்கள் அனுமதிப்பதே வலைப்பூ ஜனநாயகத்திற்கு சரியானது என்பதாக இருந்தது.

        • நன்றி அசுரன், பின்னூட்டங்கள் தற்போது மட்டறுத்தலுக்கு பின்னரே வெளியிடப்படுகிறது. இதை மாற்றினால்தான் விவாதம் ஊக்கமாக நடைபெறுவது நடக்கும். அதனால் பதிவு செய்தவர்களது பின்னூட்டங்கள் மட்டறுத்தலின்றி வெளியாகும். அடுத்து இங்கே ஏதோ ஒரு பெயர், ஒரு மெயில் முகவரி தருவதினாலேயே அவர்கள் அடையாளமுள்ளவர்கள் என்று கொள்ள முடியுமா? இதுவும் கூட பதிவு செய்யப்பட்ட அனானியாகவும் இருக்கலாமே? மேலும் பதிவு செய்பவர்கள் கொஞ்சம் பொறுப்பாகவும் செயல்படுவார்கள் என்று நம்புகிறோம். எனினும் உங்கள் கருத்தினை கருத்தில் கொள்கிறோம்.

      • //போகட்டும். கூடிய விரைவில் வினவில் அனானி பின்னூட்டங்களை நிறுத்தி விட்டு மின்னஞ்சல் பதிவுடன் வருபவர்களே மறுமொழி இடமுடியும், அதுவும் மட்டறுத்தல் இல்லாமல் வெளிவரும் என்பதை அமல்படுத்த இருக்கிறோம்//

        வரவேற்கிறேன்.

  17. வாழ்த்துக்கள் தோழர். முக்கியமான மைல்கல்தான்.ஒரு புறம் புகழ்பெற்ற ஆங்கில பதிவுத் தளங்கள் எல்லாம் மூடுவிழா நடத்திக் கொண்டிருக்கையில், 140 வார்த்தைகளுக்குள் கருத்துக்கள் சுருங்கிக் கொண்டிருக்கையில், இரண்டாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டும், விவாதங்களைக் கட்டியமைத்திருப்பதும், வாசகர் கவனத்தில் நீடித்திருப்பதும் ஒரு சாதனைதான்!

    @புதிய வடிவமைப்பு
    வேகத்தை அதிகரிக்கவும், வாசகர்களை ஈர்க்கவும் பயன்படும் என நம்புகிறேன். Header Image-ன் அளவை குறைப்பது நல்லது. மேலும், தற்பொழுது விவாதத்தில் பகுதியை வலது பக்கத்திலேயே வைக்கலாம் எனத் தோன்றுகிறது.

    • தோழர் போராட்டம் உங்கள் வாழ்த்திற்கும்,ஆலோசனைகளுக்கும் நன்றி! இது குறித்து ஏற்கனவே சில விளக்கங்கள் அளிக்கப்பட்டிருக்கிறது.

  18. தேவியர் இல்லத்தின் இதயங்கனிந்த வாழ்த்துகள்.

    புதிய வடிவமைப்பு குறித்து இன்னும் சில வாரங்கள் கழித்து தான் சொல்ல முடியும். ஒரு வருடத்திற்கு முன்பே எதிர்பார்த்த விசயம் தான். உங்கள் தலைப்புகளில் அதிக பார்வையாளர்களால் வாசிக்கப்பட்ட தலைப்புகளை பக்க வாட்டில் தெரியும்படி செய்யலாம். சந்தன முல்லையும் இதையே தான் வேறுவிதமாக சொல்லியுள்ளார்.

    திட்டினாலும், விமர்சித்தாலும், எரிச்சல்பட்டாலும் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை கலைஞர் முக. அதைப் போலவே வலையுலகில் வினவு தளம்.

    உங்கள் கட்டுரைகளால் வரக்கூடிய விமர்சனங்களும் சில சமயம் ஆச்சரியம். பல சமயம் எரிச்சல். காரணம் பலரும் தங்களை வெளிக்காட்டிக் காட்டிக் கொள்ளாமல் பல பெயர்களில் புகுந்து விளையாடுகிறார்கள். காய் அடிப்பது போல கதறடிப்பதை பல முறை பார்த்துள்ளேன்.

    விமர்சனம் கொடுக்காமல் பலரும் உங்கள் தளத்தை தொடர் வாசிப்பாளராகத்தான் இருக்கிறார்கள். ஆனால் விமர்சன தளத்திற்குள் இவர்களைப் போன்றவர்கள் வருவதே இல்லை. ஏன்? நான் தனிப்பட்ட முறையில் பேசிய போது ஆரோக்கியமற்ற விவாதங்களை சற்று எரிச்சலுடன் சொல்கிறார்கள். ஆனால் ஏதோவொரு வகையில் இந்த வலையுலகில் நீங்கள் உருவாக்கிய தாக்கம் எவராலும் மறுக்க முடியாது.

    அலெக்ஸ்ஸா ரேங்க, தமிழ்மண ரேங்க, பின்தொடர்பவர்கள், என்று பெருமை படக்கூடிய பல அம்சங்கள் உங்கள் தளத்தில் இருந்தாலும் எதையும் கூவிக்கூவி தங்கள் முதுகை சொறிந்து கொள்ளாமல் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று நகர்ந்து கொண்டிருப்பதை தான் நான் பல முறை ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். என்னுடைய தளம் தேடுபொறிகளின் மூலம் 70 சதவிகித மக்கள் வருவதாக நண்பர் சுட்டிக் காட்டிய போது ஆச்சரியப்பட்டேன். ஆனால் உங்கள் தளமோ தேடுபொறிகள் துணை கொண்டு உள்ளே வருபவர்களின் எண்ணிக்கை 99 சதவிகிதம். நீங்களும் ஏன் தமிழ்மண கட்டண சேவையை பயன்படுத்துவதன் அவஸ்ய்ம் தான் என்ன? ஏன்?

    உண்மையான ஜனநாயகம், போலி அரசியல்வாதிகள், பன்னாட்டு கொள்ளையர்கள். போலி ஜனநாயகம், அப்பாவி பொதுமக்கள், நீங்கள் உடனடியாக விரும்பும் மக்கள் போராட்டம் என்று பேச பகிரிந்து கொள்ள, உரிமையுடன் சண்டை போட ஏராளமான விசயங்கள் இருந்தாலும் இந்த வலைதளத்தை வலையுகில் கொஞ்சமாவது சமூகம் சார்ந்த அக்கறையுடன் படைப்புகளை தந்து கொண்டிருக்கும் உங்கள் குழுவினருக்கு என்னுடைய வணக்கமும் வாழ்த்துகளும்.

    ஜோதி கணேசன்
    திருப்பூர்

    • ////திட்டினாலும், விமர்சித்தாலும், எரிச்சல்பட்டாலும் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை கலைஞர் முக. அதைப் போலவே வலையுலகில் வினவு தளம்./////

      என்ன ஒரு மோசமான ஒப்பீடு ! ஒப்பிட வேறு விசயமே கிடைக்கவில்லையா ஜோதிஜி அவர்களே ?

    • கணேசன், உங்களது ஆதரவுக்கு நன்றி! பின்னூட்டங்கள் குறித்து உங்களது கருத்துக்களுக்கு சஞ்சய் காந்திக்கு அளிக்கப்ப்ட்ட பதில் போதுமானதா? மேலும் கருத்து சார்ந்து தீவிரமான விவாதம்தான் இங்கே அதிகம் நடக்கிறது. அதில் கருத்து சார்ந்த தோல்வியையே சிலர் தனிப்பட்ட தாக்குதலாக கருதுகிறார்களா என்றொரு ஐயம் உண்டு. இது குறித்து குறிப்பாக என்ன குற்றச்சாட்டு என்று புரியவில்லை. முடிந்தால் இது குறித்து தனிபதிவு எழுதித்தான் விளக்க முடியுமென்றால் அப்படியே செய்கிறோம்.

      தமிழ்மணம் கட்டண சேவை சில நண்பர்களின் நன்கொடை மூலம் பெறுகிறோம். தமிழ்மணத்திற்கு வரும் புதியவர்கள் ஒரு சிலராவது இதை பார்த்து வரத்தான் செய்கதிறார்கள். இன்னும் பலர் தமிழ்மணம் சுட்டியை பார்த்து வினவுக்கு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதன்றி வேறு காரணம் ஏதுமில்லை. நன்றி!

  19. வாழ்த்துக்கள் தோழர். ”இப்போது விவாதத்தில்” பகுதியை வலது பக்கத்திலேயே வைப்பதுதான் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.

    • தோழர் கலை உங்கள் ஆலோசனை குறித்து மேலே விளக்கியிருக்கிறோம். சில நாட்கள் பயன்பாட்டிற்கு பிறகு உங்கள் ஆலோசனைகளை குறிப்பாக முன்வைக்கலாம். நன்றி.

  20. தமிழில் வெளியாகும் அரசியல் இணையங்களுள் வினவு அதிகப்படியான வாசகர்களைக் கொண்டிருக்கிறது என்பது பெருமைப்படத்தக்க விடயம், அதிலும் எம்.எல் அரசியலை அடிப்படையாக முன்வைக்கும் ஒரு இணையத்தளம் உலகளாவிய ஆங்கில இணையங்களையும் விஞ்சிய வாசகர் தொகையைக் கொண்டிருப்பது நம்பிக்கை தருகிறது. மறுமொழிகின்ற வாசகர்களின் பங்களிப்பு தரமுள்ளதாகவும் கட்டுரைகளைச் செழுமைப்படுத்துவதாகவும் அமைகிறது. வாழ்த்துக்கள்.

    • இனியொரு தோழர்களுக்கு நன்றி! நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விவரங்கள் உண்மை என்றால் அது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைவதை விட இன்னும் பொறுப்பாக செயல்படவேண்டும் என்ற கடமையை நினைவூட்டுகிறது.

  21. தோழர்களுக்கு செவ்வணக்கம்.தோழர் லெனின் பிறந்த நாளும்,கட்சி நிறுவனநாளும் ஒன்றாக
    தோன்றிய இந்நன்நாளில் புதிய வடிவமைப்பு வெளியிட்டது மிக சிறப்பானது.புதிய விபரங்களோ
    புள்ளி விபரங்களோ சான்றுகளோ ,அரசியல் நிலைப்பாடுகளோ,தெரியவேண்டுமென்றால் வினவு
    தளத்தை பாருங்கள் என்றுதான் சொல்லுவேன்.அதற்கு வசதியாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.நன்றி! வாழ்த்துக்கள்

    • தோழர் வலிபோக்கன், நன்றி. தொடர்ந்து விவாத்தில் மையம் கொள்ளுங்கள்!

  22. புதிய வடிவமைப்பிற்கும், வினவின் வளர்ச்சிக்கும் தோழமையுடன் வாழ்த்துக்கள்.

    • தோழர் சித்ரகுப்தன் வினவின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பவர் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி! தேவைக்கேற்ப மொழிபெயர்ப்பு கட்டுரைகளை எழுதுவதையும், அரசியல் செய்திகளை உடனுக்குடன் எழுதவேண்டும் என்று ஆலோசனை சொல்வதையும் உற்சாகத்துடன் செய்யும் உங்களைப் போன்ற தோழர்களே எங்கள் பலம். நன்றி

    • இளையோன் நன்றி, உங்கள் பெயரை விவாத்தில் அடிக்கடி காணவேண்டும் என்பது எங்கள் அவா!

  23. எனக்கு உண்மையான மகிழ்ச்சியை, அரசியலை, சிந்தனை முறையை, பகுத்தறியும் திறனை, படிக்க வேண்டிய முறையை, ஒருவரை அணுகும் முறையை, என சொல்லிக்கொண்டே போகலாம் எனக்கு வினவு அறிமுகபடுத்திய, பயிற்றுவித்தவைகளை…… தினமும் உண்டு, உறங்கி, குடித்து, வெட்டி கதைகள் பேசி, வாழ்ந்து மடியும் ஒரு விலங்கினமாக இருந்த என்னை மனிதனாக, மனிதனை மதிக்கவும், பிறர் துன்பத்தை தன் துன்பமாக உணரசெய்ததில் வினவுக்கு பெரும் பங்கு உண்டு.அது மேலும் வளர்ந்து பலரையும் மகிழ்ச்சியின் உண்மையின் பொருளறிய செய்ய வாழ்த்துகள்.

  24. பாஸ்கர், உங்கள் உணர்ச்சிபூர்வமான விளக்கம் உண்மையில் எங்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுக்கிறது. ஆனாலும் இதற்கு இடையராது போராடவேண்டும் என்ற கடமையை உங்களின் மூலம் மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொள்வோம். நன்றி

  25. வினவு தளம் புதிய பொலிவுடன் வண்ணமயமாக கண்ணை கவரும் அழகு மிளிர காட்சியளிக்கிறது.வாழ்த்துக்கள்.

    முகப்பில் கட்டுரை தலைப்புடன் இடம் பெறும் படம் தொடர்ந்து சீரான இடைவெளியில் மாறிக்கொண்டே இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.[நடப்பு நிகழ்வுகள்.வரிக்கு நேராக கட்டுரை தலைப்புக்கள் மாறிக்கொண்டே இருப்பது போல்].

    ஏற்கனவே ஒரு நண்பர் கேட்டுக்கொண்டது போல பதிவும் பின்னூட்டங்களும் ஒரு சேர காட்சியளித்தால் படிப்பவர்களுக்கு வசதியாக இருக்கும்.

  26. புதிய உறையிலும் பழைய வாளாகவே இருக்க வாழ்த்துக்கள். முதல் ஆண்டு நிறைவின் போது வந்த பதிவு போலவே இதுவும் நன்றாக இருக்கிறது. வினவு குறித்து எந்த அறிமுகமும் இல்லாதவர்கள் கூட இந்தப் பதிவைப் படிக்கையில் வினவின் நோக்கம் என்ன? பயணம் எதை நோக்கியது என்பதை எல்லாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

    //அலெக்ஸ்ஸா ரேங்க, தமிழ்மண ரேங்க, பின்தொடர்பவர்கள், என்று பெருமை படக்கூடிய பல அம்சங்கள் உங்கள் தளத்தில் இருந்தாலும் எதையும் கூவிக்கூவி தங்கள் முதுகை சொறிந்து கொள்ளாமல் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று நகர்ந்து கொண்டிருப்பதை தான் நான் பல முறை ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். என்னுடைய தளம் தேடுபொறிகளின் மூலம் 70 சதவிகித மக்கள் வருவதாக நண்பர் சுட்டிக் காட்டிய போது ஆச்சரியப்பட்டேன். ஆனால் உங்கள் தளமோ தேடுபொறிகள் துணை கொண்டு உள்ளே வருபவர்களின் எண்ணிக்கை 99 சதவிகிதம். நீங்களும் ஏன் தமிழ்மண கட்டண சேவையை பயன்படுத்துவதன் அவஸ்ய்ம் தான் என்ன? ஏன்?

    உண்மையான ஜனநாயகம், போலி அரசியல்வாதிகள், பன்னாட்டு கொள்ளையர்கள். போலி ஜனநாயகம், அப்பாவி பொதுமக்கள், நீங்கள் உடனடியாக விரும்பும் மக்கள் போராட்டம் என்று பேச பகிரிந்து கொள்ள, உரிமையுடன் சண்டை போட ஏராளமான விசயங்கள் இருந்தாலும் இந்த வலைதளத்தை வலையுகில் கொஞ்சமாவது சமூகம் சார்ந்த அக்கறையுடன் படைப்புகளை தந்து கொண்டிருக்கும் உங்கள் குழுவினருக்கு என்னுடைய வணக்கமும் வாழ்த்துகளும்.//

    மேற் சொன்ன பதிவில் சொல்லியதையே இங்கே ஜோதிஜியின் வார்த்தைகள் வழியாக மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி. நன்றி.

    விஜய்கோபால்சாமி

    • நன்றி விஜய்கோபால்சாமி, புதிய உறை பழைய வாளின் கூர்மையை அதிகப்படுத்தும்.

    • நன்றி செல்வராஜ், விவாதஙத்களில் அடிக்கடி பார்க்க முடியவில்லை?

  27. மகிழ்ச்சி நிறைந்த மாற்றம்! வாழ்த்துக்கள்!! ஒரு ஆலோசனை – வினவியோர் பெட்டியில மொத்த பார்வையோடு ஒரு நாளைக்கு எத்தனை பார்வைங்கிறதை சேர்த்து வெளியிடலாமே? அது இருந்தா வினவின் வீச்சு குறித்து எங்களுக்கு உற்சாகமாக இருப்பதோடு புதியவர்களுக்கு அரசியலோடு நூறு நாள் வெற்றிப்படம் போல அறிமுகம் செஞ்சு பேசுறதுக்கும் வசதியா இருக்கும். நம்ம மக்களுக்கு இப்படியும் அறிமுகம் செய்ய வேண்டியிருக்கு.

    • நன்றி ரியல் என்கவுண்டர், உங்கள் ஆலோசனையை பரிசீலிக்கிறோம். தற்போது மொத்த பார்வைகளின் எண்ணிக்கை முகப்பிலேயே உள்ளது. அது போதாதா?

    • ரியல் என்கவுண்டர், தற்போதே மொத்த பார்வைகளின் எண்ணிக்கை முகப்பு புத்தகத்தில் உள்ளது. எனினும் உங்கள் ஆலோசனையை பரிசீலிக்கிறோம். நன்றி

  28. .சுருங்கக் கூறின் உலகோடு ஒட்ட ஒழுகல் எனும் செல்வாக்கான சித்தாந்தம்தான் அநீதியான இந்த உலகை ஏற்றுக் கொண்டு வாழ காரணமாகிறது. புதிய உலகை படைக்க விரும்பும் எவரும் இப்படி ஒட்டி ஒழுகிக் கொண்டிருக்க முடியாது. அதே நேரம் இதையே வெட்டு ஒன்று, துண்டு இரண்டாக பேசி மட்டும் மாற்றிவிட முடியாது. அதற்கு அளவில்லாத பொறுமையும் இடைவிடாத போராட்டமும் வேண்டும்.
    புதிய வடிவமைப்பு அருமை.மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    • நன்றி அஷ்ரஃப், நண்பர்களுக்கும் வினவை அறிமுகப்படுத்துங்கள்!

  29. 30 லட்சம் ஹிட்ஸ்கள். நாளும் வினவோடு பயணிப்பதில் மகிழ்கிறேன். முன்பெல்லாம், எப்பொழுது கட்டுரைகள் வரும் என்ற காத்துக்கொண்டிருப்பேன். இப்பொழுது, வினவின் பதிவிடும் வேகத்தில் நான் தோற்று போய்விட்டேன். மகிழ்ச்சியாக இருக்கிறது.

    விவாதத்தில் கலந்து கொள்ள ஆசை தான். சொந்த வேலைகள் அதிகரித்து விட்டன. படிப்பது கூட பிரிண்ட் எடுத்து வீட்டில் போய் இரவு தான் படிக்கிறேன். ஆகையால், விவாதிப்பதில் பங்கெடுப்பது சாத்தியமில்லாது போய்விடுகிறது.

    இருப்பினும் வாய்ப்பிருக்கும் சமயத்தில், பின்னூட்டங்களில் கவனம் கொள்கிறேன். தளத்தைப் பற்றி வரும் காலங்களில் தெரியப்படுத்துகிறேன். நான் கொஞ்சம் டியூப்லைட்.

    வாழ்த்துக்களுடன்,

    நொந்தகுமாரன்.

  30. அதாவது புதிய மொந்தையில் பழைய கள்ளு ! புதிய பாட்டிலில் பழைய விஸ்கி ! குட்!

  31. முகப்பு இமேஜ் சைசை குறைக்கலாம். அதே போல புதிதாக முகப்பில் சேர்க்கப்பட்டுள்ள சுத்தியல் அரிவாள் சாய்ந்தபடி இருக்கிறது மேலும் அதற்கு பதிலாக வேறு எதையாவது கூட போடலாம்.

  32. கவனித்தீர்களா?
    கொட்டைப்பாக்குப் பின்னூட்ட மன்னர் அதியமான் முன்பு போல் இப்போது எழுதுவதில்லை.
    இந்த வடிவமைப்பில் விடயத் தொடர்பான கருத்துக்களே கூடுதலாக வருகின்றன.
    வாழ்த்துக்கள்.

  33. வினவு,
    பின்னூட்டத்திற்கான மொழி மாற்றப்பெட்டியில் ஒவ்வொரு ஆங்கில எழுத்தும் எழுதியவுடன் தமிழ் எழுத்தாக மாறி விடுகிறது.அதனால் எழுத்துப்பிழை நேரிடுகிறது.பிழையை தவிர்க்க Google transliteration க்கு போய் எழுதி நகல் எடுத்து வந்து ஒட்ட வேண்டியிருக்கிறது.Google transliteration இயங்குவது போல் மொழிமாற்ற வசதி அமைந்தால் நன்றாக இருக்கும்.

  34. வினவு,
    பின்னூட்டத்திற்கான மொழி மாற்றப்பெட்டியில் ஒவ்வொரு ஆங்கில எழுத்தும் எழுதியவுடன் தமிழ் எழுத்தாக மாறி விடுகிறது.அதனால் எழுத்துப்பிழை நேரிடுகிறது.பிழையை தவிர்க்க Gஓக்லெ ட்ரன்ச்லிடெரடிஒன் க்கு போய் எழுதி நகல் எடுத்து வந்து ஒட்ட வேண்டியிருக்கிறது.Gஓக்லெ ட்ரன்ச்லிடெரடிஒன் இயங்குவது போல் மொழிமாற்ற வசதி அமைந்தால் நன்றாக இருக்கும்.

Leave a Reply to P.SELVARAJ பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க