privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபோலீசின் பொய்க் கதையை வெளியிட்ட தினத்தந்தி அலுவலகம் முற்றுகை!

போலீசின் பொய்க் கதையை வெளியிட்ட தினத்தந்தி அலுவலகம் முற்றுகை!

-

“மாணவ-மாணவிகளை வேனில் கடத்திச்சென்று சமச்சீர் கல்விக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் 9 பேர் கைது” என்று தினத்தந்தி நாளிதழ் விரிவாக ஒரு பொய்ச் செய்தியை வெளியிட்டிருந்தது. இதையே மற்ற ஊடகங்கள் சிறு செய்தியாக, குழந்தைகளின் புகைப்படங்களோடு வெளியிட்டிருந்தன.

கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் பு.மா.இ.முவினர் மாணவர்களை திரட்டி பாசிச ஜெயா அரசாங்கத்தைக் கண்டித்தும், சமச்சீர் பாடப்புத்தகங்களை உடனே வழங்கக் கோரியும் போராடி வருகின்றனர். இதில் சில இடங்களில் பெற்றோர்களும் கூட கலந்து கொண்டிருக்கின்றனர். இப்படி மாணவர்களும், பெற்றோர்களும் கலந்து கொள்வதனாலேயே போலீசு எந்தப் போராட்டத்தையும் விரும்பியபடி தடை செய்ய முடியவில்லை. மாணவர்களை கைது செய்தால் தமிழகம் முழுவதும் போராட்டம் முன்னிலும் பெரிதாக வெடிக்கும் என்று அவர்களுக்கு தெரியும்.

ஆனாலும் இனி போராட்டங்கள் எங்கும் நடக்கக் கூடாது என்று பாசிச ஜெயா தனது ரவுடி போலீசுக்கு உத்திரவிட்டுள்ளார். அதன்படியே போலீசு உருவாக்கிய இந்த பொய்ச் செய்தியை தினத்தந்தி வெளியிட்டிருக்கின்றது. மேலும் திருச்சி பு.மா.இ.முவினரை கைது செய்வதற்கென்றே உள்ளூர் அ.தி.மு.க பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆய்வாளர் உதவியுடன் பொய் மனு அளித்திருக்கின்றனர். அதற்காகவே ஒரு பெண் தோழரை உள்ளிட்டு எட்டு பு.மா.இ.மு தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எப்படியும் இந்தப் போராட்டத்தை சிதைக்க வேண்டுமென்பது காவல்துறையின் நோக்கமென்பதால் இந்த பொய்ச்செய்தியை உருவாக்குவது ஒன்றும் அவர்களுக்கு புதிதல்ல.

இந்த கடைந்தெடுத்த பொய்யை பெரியதாக வெளியிட்டிருக்கும் தினத்தந்தி, பு.மா.இ.மு மாணவர்கள் சென்னை பள்ளிக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட செய்தியை ஒரு குறுந்துணுக்கு செய்தியாக வெளியிட்டிருக்கிறது. அம்மா புகழ் பாடும் பஜனை கூட்டத்தில் நான்தான் முன்னணி என்று காட்டுவது தினத்தந்தியின் நோக்கம்.

இந்தச் செய்தி வந்த உடனேயே பு.மா.இ.மு தோழர்கள் சென்னை தினத்தந்தி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தினத்தந்தி செய்தி ஆசிரியரை சந்தித்து தங்களது மறுப்பை வெளியிடுமாறும் கோரினர். தினத்தந்தி ஆசிரியர் அவ்வாறே நாளை வெளியிடுவதாக கூறியதும் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பினர்.

இங்கே அனைத்து ஊடகங்களுக்கும் பு.மா.இ.மு சார்பில் அளிக்கப்பட்ட மறுப்பு செய்தியை வெளியிடுகிறோம்.

 

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்


அய்யா,

நேற்று காலை 26.07.2011 காலை 10 மணியளவில் சமச்சீர் பாடப்புத்தகங்களை உடனடியாக மாணவர்களுக்கு  வழங்கக்கோரி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் பள்ளிக் கிளைகள் சார்பாக திருச்சி மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. ஆனால் அங்கு பெற்றோர்களுக்கு தெரியாமல் மாணவர்களை அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபடுத்தினோம் என்ற முகாந்திரத்தில் எங்கள் அமைப்பின் மீது அவதூறு பரப்பும் நோக்கத்தில் மக்கள் மத்தியில் நேர்மையான அமைப்பு என்று அங்கீகரிக்கப்பட்டிருக்கும் எங்கள் மீது தவறான கருத்தை  உருவாக்கும் எண்ணத்தோடு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணதாசன் உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிடும்படி பத்திரிக்கைக்கு தவறான தகவல் கொடுத்துள்ளார்.

இது குறித்து பு.மா.இ.மு திருச்சி மாவட்ட நிர்வாகக்குழுவின் அவசரக்கூட்டம் நேற்று மாலை 4 மணியளாவில் கூட்டப்பட்டு இப்பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

இதில் திருச்சி பீம நகரில் உள்ள ஒரு பள்ளியிலும் வண்ணாரப்பேட்டையில் உள்ள பள்ளியிலும் பெற்றோர்களுக்கு அறிவிக்காமல் மாணவர்களை அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபடுத்தியதால் அது ஏதோ திட்டமிட்ட கடத்தல் நடவடிக்கை எனவும், கதறி அழுத  மாணவர்களை  போலீசார் தனிப்படை அமைத்து விரைந்து மீட்டு சாகசம் புரிந்ததைப் போலவும், அப்பட்டமான ஒரு பொய்யை திருச்சி காந்திமார்க்கெட் காவல் நிலைய ஆய்வாளார் பரப்பி உள்ளார்.

போலீசின் இந்த அவதூறையே சில பத்திரிக்கைகள் வெளியிட்டு உள்ளது எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. சமச்சீர் கல்விக்காக ஆர்ப்பாட்டம், அரங்கக்கூட்டம், கொடும்பாவி எரிப்பு, கைது, சிறையில் உண்ணாவிரதம், பள்ளிக்கல்லூரி மாணவர்களை திரட்டி போராட்டம் என்று தொடர் நடவடிக்கைகளில் நாங்கள் இந்த அரசின் தவறான செயல்பாடுகளுக்கு எதிராக சிறிதும் சமரசமின்றி போராடி வருகின்றோம் என்பதை பத்திரிக்கை  துறையினராகிய நீங்கள்  நன்கு அறிவீர்கள். எனவே எங்கள் மீது அவதூறு பரப்புவதன் மூலம் மக்கள் மத்தியிலிருந்து எங்களை தனிமைப்படுத்தும் நோக்கில்  போலீசு அளித்த பொய்ச்செய்தியை வெளியிடவேண்டாம் எனக்கோருகின்றோம்.

கல்லூரி படிக்கும் மாணவர்களே நிர்வாகத்திற்கும், பெற்றோருக்கும் பயந்துகொண்டு முகத்தில் துணியைக்கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தி வருவது நாம் அறிந்த ஒன்று. மாநிலம் தழுவிய அளாவில் சமச்சீர் கல்விக்காக பள்ளி-கல்லூரி மாணவர்கள் போராடிக்கொண்டு இருக்கும்  இந்த கொந்தளிப்பான சூழலில், ஒரு பள்ளியில் தன்னுடைய மாணவர் அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கும் மாணவர்களை பெற்றோர்களின் அனுமதிபெற்ற பின்னர்தான் ஒரு மாணவர் அமைப்பு போராட்டத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல என்று கருதுகிறோம். இச்சம்பவத்தில் தங்கள் குழந்தைகள் கடத்தப்பட்டதாக போலீசு கொடுத்த தவறான தகவல் காரணமாக அச்சமடைந்த பெற்றோர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உண்மை நிலையினை அறிந்து பின்னர் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணியின் செயல்பாடு குறித்து போலீசு அவதூறாக பேசியது ஏன் என்று வினா எழுப்பியும், பு.மா.இ.மு-வினர் குழந்தைகளை கடத்திச்செல்லவில்லை என்று கூறியுள்ளனர். ஆனால் போலீசின் தூண்டுதலின் பேரில் இந்த அவதூறையே சில பத்திரிக்கைகள் செய்தியாக வெளியிட்டு உள்ளன.

பு.மா.இ.முவின் நியாயமான செயல்பாடுகள் குறித்து நாங்கள் பத்திரிக்கையாளார்கள் முன்பு விளக்கமளிக்கத் தயார் என்று பெற்றோர்களும் கூறியுள்ளனர். எனவேதான் போலீசில் எந்தப்புகாரையும் நாங்கள் அளிக்கவில்லை, பள்ளியின் தலைமை ஆசிரியரை மிரட்டி, காவல்துறையே இப்பொய் புகாரை பெற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். தலைமை ஆசிரியர் புகாரின் பேரில்தான் வழக்கு போட்டுள்ளனர். இதில் பெற்றோர்கள் யாரும் புகார் அளிக்கவில்லை என்பது உறுதி ஆகிறது. ஆக எங்கள் அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திகள் குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பை எங்கள் அமைப்பின் முன்நின்று நடத்த தயாராக உள்ளோம். அந்தசந்திப்பின் போது, சம்பந்தப்பட்ட இரு பள்ளிகளில் உள்ள எங்கள் பிரதிநிதிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டு பதில் அளிக்க உள்ளனர்.

எங்கள் அமைப்பின் மீது அவதூறு பரப்பி பொய்வழக்கு போட்ட காந்திமார்க்கெட் காவல் துறையினர் மீது சட்டரீதியான நடவடிக்கை  எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். மேலும் பொய் வழக்கில் கைது செய்யப்ப்ட்ட தோழர்களை விடுதலை செய்யக்கோரியும், போலீசின் இந்த அவதூறுக்கு எதிராகவும் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆகவே போலீசின் அவதூறுக்கு மறுப்பு செய்தியை வெளியிடுமாறு பு.மா.இ.மு வின் மாநில அமைப்புக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி

இப்படிக்கு
த.கணேசன்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி

________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. வினவு தோழர்களுக்கு நன்றி.

    காலையில் தினத்தந்தியின் அவதூறு செய்தியைப் படித்தது முதல்… மிகுந்த வருத்தம். காரணம் – சிறுவர் சிறுமியர்களை வலுக்கட்டாயமாக வேனில் அடைத்துக் கொண்டு வந்ததாக கூறியிருந்தனர்.

    செய்தியைப் படிக்கும் அனைவரும் கொதித்துப் போகும் வண்ணம் தெளிவாகவே தீட்டியிருந்தார்கள்.

    கண்டிப்பாக இதற்கு வினவு தோழர்களிடம் விளக்கம் பெற வேண்டி என் கேள்விக் கணைகளை தொகுத்துக்கொண்டிருந்தேன்.

    ஆனால், அதற்குள் வாசகரின் மனநிலை அறிந்து, உண்மை நிலையை எடுத்தியம்பிய வினவு தோழர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள்.

    நாங்கள் உம்மை நேசிப்பதற்கு இதைவிட சிறந்த காரணம் தேவையில்லை.

  2. தினத்தந்தி-னு பெற மாத்தி, அம்மா-தந்தி-னு வச்சுக்கலாம்…ஹ்ம்ம்…இதெல்லாம் ஒரு பொழப்பு.

  3. எங்கே…மறியல் பண்ணுறது தப்பு, அம்மா கிளிச்சுருவாங்க, புடுங்கிருவாங்க-னு சொல்லி ஒரு கும்பல் கெலம்பிடுமே …

  4. ஊடக வன்முறையை அம்பலப்படுத்திய வினவுக்கு பாராட்டுகள். எப்போதுமே போலீஸ்காரன் சொல்வதை எந்தவித யோசனையும் இல்லாமல் செய்தியாக வாந்தியெடுக்கும் நாளிதழ்களின் குற்றப்பிரிவுச் செய்தியாளன் களுக்கும் அந்த வாந்தியை அப்படியே நக்கி செய்தியாகப் பதிவுசெய்யும் மனிதப் பிறவிகளுக்கு, புமாஇமுவின் உடனடிப் போராட்டம் சரியான பதிலடி. இது போன்ற ஊடக வன்முறைக்கு எதிரான போராட்டங்கள் தொடர வாழ்த்துகள்.

  5. there are 3 versions to any story. Their version, your version and the correct version. We have seen their version in dhinamani, your version here.. Now we can wait for the correct version from a neutral observer..

  6. பத்திரிக்கைகள் அழுத்தி (PRESS) சொல்லுவதால்தான் பொய்கள் உண்மையாகின்றனவோ

  7. ஜால்ராவில் நம்பர் ஒன் தான் இந்தத் தினத்தந்தி. ஆயினும் இது சாதாரண வெகுஜன மக்களின் ஃபேவரைட்டாக இருப்பதால் வினவு அதனைக் கையாளும் விதம் பாராட்டத்தக்கது. மக்களின் மனதைக் ’கவர்வது’, அப்படியே மொத்தமாய்க் கொண்டு போய் முதலாளிகளிடம் அடகு வைப்பது, இதுதான் உலகெங்கும் முதலாளித்துவ ஊடகங்களின் ‘தர்மமாய்’ உள்ளது. அதிலும் ‘கவர் ஜர்னலிசம்’ கோலோச்சும் தமிழக ஊடகங்களில் ஊடகவியலாளர்களின் ’புத்திஜீவித்தன’த்தைக் கேட்கவும் அவசியமில்லை. ஊடக வியாபாரிகள், கல்வி வியாபாரிகள், அரசியல் வியாபாரிகள் என அத்தனை வியாபாரிகளும் கைகோர்த்துக் கொண்டிருந்தாலும் ஒரே ஒரு கொந்தளிப்பில் இவர்களெல்லாம் அடித்துக் கொண்டு போய்விடுவார்கள். உங்கள் புரட்சிகர முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  8. இது போன்ற பொறுப்பற்ற ஊடகங்களுக்க்காகவே ஒரு போராட்டம் நடத்த வேண்டியது இருக்கும். பு.மா.இ.மு தோழர்களுக்கு வாழ்த்துகள்.

Leave a Reply to feroz பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க