privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்ஸ்ரேயா கோஷல் பிடிக்குமா?

ஸ்ரேயா கோஷல் பிடிக்குமா?

-

நிலை ஓய்வில் ஒதுங்கிய  மனவேளையில், புலத்தேவைகள் சற்றே பதுங்கிய நேரத்தில், புத்தார்வத்தை நோக்கிய எத்தனத்தில் சலிக்காமல் ஈடுபடும் வாழ்வின் ஓர் மாலையில், ஸ்ரேயா கோஷலின் பாடல்களோடு கைகோர்த்து லயிக்கும் போது, அழகும் வலிமையும் இணைந்து எழுகின்ற உயிர்ப்பான இசையருவியை விரும்பாதவர் யார்?

முதன்மையாக இந்தியிலும், பிறகு அநேக தேசிய மொழிகளிலும் பாடிவரும் ஸ்ரேயா கோஷலை நாம்  அதிகமும் தமிழ் வழியாகத்தான் கேட்டிருப்போம். அநேகமாக கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் திரையிசை அறிமுகமப்படுத்தியிருக்கும் குரல்களில், தனிச்சிறப்பான அழகுகள் என்று கண்டு லயிப்பது சிரமம். ஒரே மாதிரியான குரல்கள், சலித்துப் போன ஃபார்முலா உணர்ச்சிகள், குரலிசையை மிஞ்சும் கருவியிசைகள், பாடல் வரிகளை மென்று தீர்க்கும் சப்தநுட்பங்கள்…

உலகமயமாக்கம் பண்பாட்டுத் துறையில் அனைத்தையும் ஒரே படித்தானவைகளாக  மாற்றுகிறது. தேசிய இனங்களின் தனியழகுச் சிறப்பான பண்பாட்டு அம்சங்கள், சாதனைகள் அனைத்தும் உலகச்சந்தையின் அகோரப் பசியில் இறந்து போகின்றன. தமிழ் சினிமாவும் சில விதிவிலக்குகளைத் தவிர இந்த அனைத்துலக திணிக்கப்பட்ட மேட்டுக்குடி வாழ்வை காட்சிப்படுத்துகிறது, இசையும் படுத்துகிறது.

தமிழ் சினிமாவை மொழிமாற்றி தெலுங்கிலோ, இந்தியிலோ வெளியிட்டால் கூட அது பண்பாட்டு மாறுபாட்டால் தடுமாறுவதில்லை. அங்கனமே மற்ற மொழிப் படங்களும். செல்பேசி, கோக், ஷாப்பிங்  மால்கள், பல்சர் பைக், ஜீன்ஸ் பேண்ட், உதட்டுச்சாயம் இத்தியாதிகளில் விதவிதமான தேசிய இனங்கள் வாழவா முடியும்? இந்த ஒருமைப்பாடு, வேறுபட்ட மக்களின் வாழ்க்கை உணர்ச்சியில், அழகான வேற்றுமைகளை இணைக்கும் ஆன்மாவாக மிளிரவில்லை. மாறாக நுகர்வை மாபெரும் அகோரப் பசிவெறியாக்கி நசுக்கி வருகிறது.

சென்னை சத்யம் திரையரங்கு சென்றால் மேட்டுக்குடி சீமான்களும், சீமாட்டிகளும் ஒரே உடையில், ஒரே மணத்தில், ஒரே உடல் மொழியில், ஒரே நாசுக்கில், கோக்கை இழுப்பது கூட ஒரே அளவில் இருப்பதைப் பார்க்கலாம்.  ஆனால் சென்னை மாநகராட்சியின் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பள்ளி முடிந்து வீடு திரும்பும் காட்சியைக் கண்டால் நூற்றுக்கணக்கான அழகுகளையும், உடல்மொழிகளையும், குதூகலத்தையும் அறியலாம். உழைக்கும் மக்களிடத்தில் இருக்கும் அந்த வேற்றுமையான தனித்தனி அழகு ,வார்க்கப்படும் பார்பி பொம்மை போன்ற கனவான்களிடம் கடுகளவு கூட உணர முடியாது.

ஆகவேதான் தமிழ் பின்னணி பாடகர்களும் அப்படி ஒரு படித்தானவர்களாக பாடுவதால் நமக்கு எல்லாம் ஒரே குரலாய், இசையாய் தெரிகிறது. நட்சத்திரங்களின் இமேஜை வைத்தே வெற்றியடையும் பாடல்கள் அடையாளம் காணப்படுகின்றன. முந்தைய தலைமுறையைச் சேர்ந்த ஏசுதாஸ், பாலசுப்ரமணியம், ஜானகி, சித்ரா, சுவர்ணலதா முதலானவர்களின் தனியழகு நினைவுகளை இப்போது யாரிடம் தேடினாலும் கிடைப்பது கடினம்.

இத்தகைய கடினமான உலகமய மோல்டிங் கலைச் சூழலில்தான் ஸ்ரேயா  கோஷல் மட்டும் ஓரளவுக்குத் தனியாக தெரிகிறார். எனினும் ஊடகப் பெருவெளி உருவாக்கி வரும் அழகுப் பெண்ணின் குரல் மாதிரியோடு ஸ்ரேயா கோஷலின் குரலும் பெருமளவு ஒத்துப்போவது கண்கூடு.  சமகால நாயகிகளுக்கு டப்பிங் குரல்தான் என்றாலும் அது தனித்தனி வேறுபாடுகளைக் கொண்டிருப்பதில்லை.  அது ஒரு வகையான நகரத்து மேட்டுக்குடி நடுத்தரவர்க்க பெண்ணின் ரோல் மாடலான குரல். அந்த வகையில் ஸ்ரேயா கோஷலின் குரலும் சினிமாவில் இன்று தேவைப்படுகிறது. என்றாலும் அவரது தனித்திறமைகள் அந்த மாதிரித் தோற்றத்தை கொஞ்சம் வெற்றி கொண்டிருப்பதும் நிஜம்.

இயக்குநர் பாலுமகேந்திரா, ஹாலிவுட் படமொன்றை ஷாட்டுக்கு ஷாட் சுட்டு எடுத்த ஜூலி கணபதியில்தான் ஸ்ரேயா கோஷலை “ எனக்குப் பிடித்த பாடல்” மூலம் கேட்டதாக நினைவு. பிறகு விருமாண்டி, சில்லுனு ஒரு காதல், நான் கடவுள், செல்வராகவன் படங்கள், படமே தெரியாத பாடல்கள் என்று தொடரும்போது அவரது குரல் எனக்கு தனித்து தெரியத் தொடங்கியது. ஆர்வத்துடன் தேடிப் பிடித்துக் கேட்டேன். கேட்கிறேன்.

வரம்புக்குட்பட்ட கலைத்தூண்டுதலில், திட்டவட்டமான வகைமாதிரிகளையே விதிகளாக கொண்டு இயங்கும் தமிழ் இசையில் இந்த பெண் மட்டும் ஏதோ ஒரு விதத்தில் அதை கொஞ்சம் தனது சாயலோடு பாடுகிறாரோ என்று தோன்றியது. ஆலாபனைகளில் அவர் தோய்ந்து பாடும் போது தெரியும் உணர்ச்சிகளில் இழையோடும் அசாத்தியத் திறமை ஆச்சரியப்படுத்தியது. இசை, பாடல் வரிகள், உப்புமா கதைகள் அத்தனையும் ஸ்ரேயா கோஷலின் குரலிசையில் மண்டியிடுகின்றனவோ என்று கூட தோன்றியது.

1984-இல் வங்கத்தில் பிறந்த கோஷல் அவரது தந்தையின் அணு உலை பொறியாளர் பணி காரணமாக ராஜஸ்தானில் வளர்கிறார். பெற்றோர் இருவரும் படித்தவர்கள் என்பதோடு கூட இசையார்வமும் உள்ளவர்கள். காரணமாக  ஸ்ரேயாகோஷல் அங்கே மகேஷ் சந்திர ஷர்மா என்ற இந்துஸ்தானி கலைஞரிடம் இசை பயில்கிறார். ராஜஸ்தான், இந்துஸ்தானி இரண்டும் மிக வளமான இசைப் பின்னணி கொண்டவை. ராஜஸ்தானின் நாட்டுப்புறப் பாடல்களில் பாலைவனத்தின் சோகமும், கம்பீரமும், உச்சஸ்தாயில் பாடும் பெண்களது வலிமையும் எவரையும் சுண்டி இழுக்கும்.

பாரசீகத்திலிருந்து ராஜஸ்தான் வரையிலும் இசைக்கு ஒரு வரலாற்றுரீதியான இழையும் தொடர்பும் காலந்தோறும் இருந்து வருகிறது. மொகலாயர்களது பங்களிப்பாக வளர்ந்த இந்துஸ்தானி இசை, செவ்வியல் இசையறிவு இல்லாத பாமரர்களையே சுண்டி இழுக்கும். தமிழிசையிலிருந்து திருடப்பட்ட கர்நாடக இசையும் ஒரு செவ்வியல் இசைதான் என்றாலும் இதில் பாடுபவர்கள் இசையை கணிதம் போல பாடுவார்கள். மனோபாவத்துக்கு முக்கியத்துவம் தருவதாக கூறப்படும் கர்நாடக இசையில் உணர்ச்சியை விட தாளத்தின் ஸ்வர வரிசையே மேலோங்கி இருக்கும். இந்துஸ்தானியில் கணிதம் இருந்தாலும் உணர்ச்சிதான் முதன்மையானது.

அதற்கும் ஒரு வரலாற்றுக் காரணம் உண்டு. ஹிந்துஸ்தானி இசை அடிப்படையில் மதச்சார்ற்ற இசை. வாழ்வின் மகிழ்ச்சியை, கேளிக்கையை பாடுவதற்காக உருவான இசை. கர்நாடக இசை பக்தியை மட்டுமே கொண்ட மதச்சார்பு இசை. வாழ்வின் மற்ற உணர்ச்சிகளுக்கு இங்கே இடமில்லை.

அதனால்தானோ என்னமோ இசையறிவு அற்ற பாமரர்களும் ஹிந்துஸ்தானி இசையில் மயங்குவது போல கர்நாடகத்திடம் நெருங்குவதில்லை. இன்னதென்று சொல்லத் தெரியாத இனிமை ஹிந்துஸ்தானி இசையிடம் இருக்கிறது என்று ஒரு இசையமைப்பாளரான நண்பர் சொன்னார்.

ரஹமான் கூட தனது பாடல்கள் பலவற்றுக்கும் ராஜஸ்தான் நாட்டுப்புற இசையையும், சூஃபி இசை, ஹிந்துஸ்தானி இசையையும் பல்வேறு வகைகளில் பயன்படுத்தியிருக்கிறார்.

பிரபலமான இந்திப் பாடல்கள் அன்றும், இன்றும் நம் மனதைக் கொள்ளை கொள்ளும் பின்னணியில் இந்துஸ்தானி இசையே ஆட்டுவிக்கிறது. மெலடி என்று எடுத்துப் பார்த்தால் இந்தி திரையிசையை எந்த இசையும் விஞ்சுவது கடினம். ஆலாபனைகளோடு சேர்ந்து வரும் வரிகள் மொழியைத் தாண்டி இதயத்தில் கரைந்து கசியும். மனதை மயக்கும் கஜல் பாடல்களில், தன்னெழுச்சியாக இசையோடு இணைந்து பிறக்கும் கவிதைகளை வாரே வாஹ் என்று இரசிகர்கள் வரவேற்பதும் செயற்கையானதல்ல. இத்தகைய மண்ணில் கோஷல் வளர்ந்தது தற்செயல் என்றாலும் அதுவே அவரது அவசியமான அடிப்படைகளை உருவாக்கியிருக்கக் கூடும்.

சிறுமியாக இருக்கும் போது ஜீ டி. வியின் ச ரி க ம நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  இறுதிப் போட்டியில் வெல்கிறார். இந்த நிகழ்ச்சியின் நடுவராக இருந்த இந்தித் திரையுலh இசையமைப்பாளர் கல்யாண்ஜி, ஸ்ரேயா கோஷலின் அசாத்தியத் திறமையை கண்டு கொண்டு உவகை அடைகிறார். அவரது பெற்றோர்களிடம் சொல்லி மும்பையில் குடியேறுமாறு கேட்டுக் கொள்கிறார். அதன்படி மும்பைக்கு மாறுதல் வாங்கிக் கொண்டு ஸ்ரேயா கோஷல் குடும்பம் குடியேறுகிறது. கல்யாண்ஜியிடம் பதினெட்டு மாதங்கள் கோஷல் பயிற்சி எடுக்கிறார்.

கல்யாண்ஜி இந்தி திரையுலகில் கொஞ்சம் பிரபலம் என்றாலும் அங்கே ஜாம்பவான்களாக இருந்தவர்கள் வரிசையில் அவரை சேர்க்க முடியாது. எனினும் ஒரு திரையிசை  இசையமைப்பாளரிடம் கற்றுக் கொள்வது கோஷலுக்கு  கிடைத்த இரண்டாவது வரப்பிரசாதம். பலரும் செவ்வியல் கலைஞர்களிடம்தான் பயில்வதை முக்கியமாக கருதுகிறார்கள். அதை நாமும் மறுக்க வேண்டியதில்லை. கோஷலும் கிரமமாக செவ்வியல் இசை பயின்றவர் என்றாலும் திரையிசைப் பயிற்சி என்பது சற்றே மாறுபாடானது. ஏனெனில் ஒரு கதை அல்லது உணர்ச்சிக்கு பாடுவது என்பது கர்நாடக கீர்த்தனைகளில் காணமுடியாது. அங்கே ஆதிக்கம் செய்யும் ஒரே உணர்ச்சி பக்தி மட்டும்தான்.

தியாகய்யரின் கீர்த்தனைகளில் வாழ்ந்து கெட்ட பார்ப்பனரது புலம்பல்கள் ராமனை வைத்து ஏங்குவதைத் தவிர அதில் சமகால வாழ்வின் போராட்டமான தருணங்களோ, உணர்ச்சிகளோ, கொண்டாட்டங்களோ இல்லை. இதையே பல்லாண்டு கற்று பாடுபவர்களும் உணர்ச்சியில் தோய்ந்து பாடும் வித்தையை அல்லது இசைமொழியை அறிவதில்லை. ஒரு கணித சூத்திரம் போல விரியும் கர்நாடக இசை அதனாலேயே என்னமோ மக்களது இசையாய் பரிணமிக்கவில்லை.

சுதா ரகுநாதன், பாம்பே ஜெயஸ்ரீ, நித்யஸ்ரீ முதலான செவ்விசைக் கலைஞர்கள் திரையிசையில் பாடும் போது கூட இந்த கணித சூத்திர முறையில்தான் பாடுகிறார்கள் என்பதையும், மற்ற பின்னணி பாடகிகளைப் போல உணர்ச்சி பாவம் இல்லாமல் இருப்பதையும் மேலோட்டமாக கேட்டாலே அறிய முடியும். அந்த வகையில் திரையிசையின் உணர்ச்சியில் தோய்ந்து பாடுவதற்கு இந்துஸ்தானி இசை பொருத்தமாகவே உள்ளது. இது ஏன் என்பதை கண்டு சொல்லுமளவு எனக்கு இசைஞானமில்லை.

கல்யாண்ஜியின் பயிலகத்தில் பயின்ற ஸ்ரேயா கோஷல் பின்னர் தேவதாஸ் படத்திற்கு ஐஸ்வர்யா ராயின் பாத்திரத்திற்காக பாடுகிறார். பிரபலமடைகிறார். பின்னர் பல மொழிகள், பல பாடல்கள், பல உணர்ச்சிகள். 26 வயதிற்குள் நான்கைந்து தேசிய விருதுகள், ஏராளமான சினிமா விருதுகள். இப்போது தமிழுக்கு வருவோம். அவர் பாடிய சில பாடல்களை  மட்டும் ஒரு இரசிகனது பார்வையில் – கவனிக்க இசையறிஞன் அல்ல – அசை போடுவோம்.

1.     முன்பே வா

பாடியவர்கள்: கோஷல், நரேஷ் ஐயர்
இசை: ஏ.ஆர்.ரஹமான்
பாடல்: வாலி
படம்: சில்லுனு ஒரு காதல்

தற்செயலாய் தொலைக்காட்சியில் இந்தப் பாடலைக் கேட்ட போது முதல் முறையிலேயே ஈர்த்த பாடல். ஆனால் அறியும் முன்பே இது மிகவும் பிரபலமான பாடல் என்பது அறியேன். இப்போது இது பலமுறை கேட்டுத் தேய்ந்ததாகத்தான் இருக்கமென்றாலும் இதை எழுதுவதற்காக மீண்டும் கேட்ட போது கூட அதிலுள்ள ஈர்ப்பை இன்னும் நான் இழக்கவில்லை. முதலில் திருஷ்டிக் கழிப்புக்களை பார்த்துவிடலாம். ரஹ்மானது வியாதி போல பல பாடல்களில் தொடரும் கோரஸ் என்ற சேர்ந்திசை இந்த பாடலுக்கு தேவையே இல்லை. கோஷலின் தனி ஆவர்த்தனத்தை பொருத்தமின்றி அந்த சேர்ந்திசை இடையூறு செய்கிறது. அடுத்தது நரேஷ் ஐயரும் இங்கு அவ்வளவாக தேவையில்லை. படத்தில் இவருக்காக சூர்யா தலையையும், தோளையும் அசைப்பது(எத்தனை படத்தில் பார்த்துவிட்டோம்) ஒன்றே இந்த தேவையின்மைக்கு சான்று பகரும். தாளத்திற்கு உட்காரும் வரிகளை வாலி எழுத முயற்சித்து தோல்வியடைந்திருக்கிறார். மேலும் காதில் வார்த்தைகள் விழுவதில்லை. பாடுவதற்கு சிரமமான முறையிலும் பாடல் வரிகள் இருக்கின்றன.

பாடலை மட்டும் முதலில் கேட்டு இரசித்துவிட்டு காட்சிகளை திரையில் பார்த்தால் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருக்கும். இருப்பினும் கோஷலின் உதவியால் இதையும் கடந்து பாடலை இரசிக்கலாம். இந்த பாடலின் உணர்ச்சி என்னவாக இருக்குமென்று பார்த்தால் இது காதலின் அடக்கமான, பணிவான வலிமையினை பெருந்தாய்மையோடு இசைக்கிறது. அடக்கமான காதலே அழகானது என்றார் காரல் மார்க்ஸ். அந்த அழகின் உணர்ச்சியினை இந்த பாடல் மூலம் கோஷல் கலையாக மனதில் செதுக்கியிருக்கிறார் என்று தோன்றுகிறது. நானும் காதல் வயப்படும் வயதுதான் என்பது கூட ஒரு புறக்காரணமாக இருக்குமென்றாலும் நாளை (இருபது, முப்பது வருடம் கழித்து) அறுபதுகளைக் கடக்கும் நேரத்திலும் கூட இந்த இசையை மீட்டமுடியுமென்றுதான் கருதுகிறேன்.

காதலின் குதூகலத்தை முகப்பிலேயே நரம்பிசை ஒரு கற்றார்ந்த தன்னடக்கத்துடன் கொண்டாட்டமாக  அறிவிக்கிறது. யானை வருமுன்னே மணியோசை வருவது போல அது ஒரு அழகான வழித்தடத்தை குதித்தோடும் தாளம் காட்டிவிட்டு செல்ல கோஷல் காதலின் மேல் கை கோர்த்துக் கொண்டு முன்பே வா, அன்பே வா என்று வருகிறார்.  உணர்வும், உயிரும், பூவாய் மென்மையாக நெஞ்சம் கரைந்து வழிகிறது. ரங்கோலி சேர்ந்திசை முடியும் நேரத்தில் ஒரு ஆலாபனை வரும். இந்தப்பாடலின் மைய உணர்ச்சியாக இதைக் கூறலாம். எந்த வித்தைகளோ, ஆர்ப்பாட்டங்களோ இன்றி வெகு இயல்பாக ஆனால் கண்ணைப் பறிக்கும் அழகுடன் வரும் இந்த தருணத்தின் காதலின் பணிவான அழகு கம்பீரத்துடன் இசைக்கப்படுகிறது.

காதலனது தோழமையை கைப்பற்றும் சரணத்தில் நாம் காதலிக்க வாய்ப்பற்ற பாலைவன பாரதத்தில் இருந்தாலும் காதலிக்காக அவளது கைபிடித்து செல்லும் பரவசத்திற்காக நனவில் இல்லையென்றாலும் கனவில் மிதக்க ஆரம்பிப்போம். அடுத்த சரணத்தில் தான் சாயும் தோளில் வேறெருவர் சாய்ந்தால் தகுமா என்று மெல்லிய ராகத்தில் கோஷல் இசையாய் இறைஞ்சுகிறார். இப்படி ஒரு இவள் இருக்கும் போது நான் ஏன் மற்றவளை நினைப்பேன் என்று எல்லா ஆண்களும் நினைக்கும் கணநேர யோக்கியத்தை நிஜம் போல நம்பவைக்கிறது அந்த அழகு.

எனினும் காதல் உணர்ச்சியில் நாம் நீடிக்க நினைப்பது உண்மையென்றாலும் நடப்பில் அது பொய்யாகத்தானே இருக்கிறது? ஆதலால் இந்த இனிய காதலின் நினைவுகள் முடியும் சோகத்தை பாடலின் இறுதியில் வரும் கோரசைத் தாண்டி கோஷலின் ஆலாபனை நமது செவியை ஊடுறுவி மனதை வருத்தும் வலியுடன் இசைத்து மறைகிறது. வேறுவழியின்றி பாடலை மீண்டும் கேட்டாக வேண்டுமென்ற ஆசையையும் தூண்டுகிறது.

ரஹ்மானது மிகச்சிறப்பான இந்த பாடல் அதன் புத்தாக்க ராகத்தை எல்லையற்ற விரிவாய் இசைத்து ஒரு சாம்ராஜ்ஜியத்தை கட்டுவதற்குப் பதில் ஒரு சில மின்னல்களுடன் சுருங்கிவிடுகிறது. கோஷலின் உணர்ச்சிக்கு தீனி போட்டிருக்கும் இந்தப் பாடலை இன்னும் பரவித் திரும்பும் இசையோடு விரித்திருந்தால் அது காலத்தின் உணர்ச்சியை பொய்யென்றாலும் கூட பற்றியிருக்குமோ என்று தோன்றுகிறது.

2.     நினைத்து நினைத்து…

பாடியவர்: கோஷல்
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடல்: நா. முத்துக்குமார்
படம்: 7ஜி ரெயின்போ காலனி

படத்தைப் பார்த்த போது இந்தப்பாடல் நினைவில் இல்லை. பாடலை கேட்கும் போது படம் நினைவிலில்லை. இந்த உலகமே தன்னை மறுக்கிறது என்று அல்டாப்பு பில்டப்பு கொடுக்கும் நடுத்தர வர்க்க விடலைப் பருவ இளைஞனது வம்படியான காதலில் சிக்கிய பெண்ணின் உணர்வை ஏதோ ஒரு இனம்புரியாத சோகத்தின் உணர்ச்சியை இந்தப் பாடல் மூலம் கோஷல் மீட்டுகிறார் போலும். உச்ச ஸ்தாயில் ஏறி சோகத்தை கேள்விகளாய் கேட்டுவிட்டு அந்த சுவடே இல்லாமல் கீழே இறங்கி காதலனுக்கு காதலை மறுக்காமல் கொடுக்கும் லாவகம். என்னதான் இருந்தாலும் உன்னால்தான் வாழ்கிறேன் என்று விட்டுக் கொடுக்காத காதலின் எளிமையான இசையை யுவன் தனது வழக்கமான மெலொடியில் வழங்க, தபேலாவின் எளிய தாளத்தில் கோஷலின் குரலில் உணர்ச்சியையும், அழகையும் கண்டு கொள்ளும் வண்ணம் நா.முத்துக்குமார் எழுதியிருக்கும் பாடலையும் கொண்ட இந்த இசையைக் கேட்டுப் பாருங்கள்.

3.     சாரல்

பாடியவர்: கோஷல்
இசை: ஜி.வி பிரகாஷ்
பாடல்: கிருத்தியா
படம்: குசேலன்

படம் பார்த்திருக்கவில்லை.  உண்மையில் சாரலுக்கு பொருத்தமான ராகத்தை பின்னியிருக்கும் இசையமைப்பாளர் பின்னணி இசையில் வித்தைகளைக் காட்டவேண்டுமென்ற முனைப்புகளைக் குறைத்திருக்கலாம். ஆனால் கோஷல் பாடும் போது நாம் நேரே குற்றாலத்தின் ஆனி ஆடிச்சாரலில் நனைந்து கொண்டு மழைத்துளியின் உற்சாகத்தை ஆசை தீர பருகுகிறோம். வெள்ளிமழைச் சாரல் நம்மை கிள்ளிவிட்டுப் போகுமென்று விடலைப்பருவ நினைவுகளை கோஷல் அதே வயதோடு பாடுகிறார்.  சரணத்தில் தூரலுக்கு பிறகு வரும் அடைமொழியின் வரிகளை மேலே துள்ளியவாறு பாடுகிறார். அனுபல்லவியில் மழை ஓய்ந்த பின் நீடிக்கும் இனிமையின் மணத்தோடு பல்லவிக்கு குதித்தோடுகிறார். சாரலின் கிள்ளலில் அனுபவித்திராதவர்கள் கோஷலின் உதவியோடு நனையலாம். சாரலுக்கு பொருத்தமான ராகத்தை இசையமைப்பாளர் ஆச்சரியப்படுமளவு செதுக்கியிருப்பதால் கோஷல் மிளிர்கிறார்.

4.     எந்த குதிரையில்

பாடியவர்கள்: கோஷல், ராகுல் நம்பியார்
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடல்: நா.முத்துக்குமார்
படம்: சத்தம் போடாதே

பாடல் சுமார்தான் என்றாலும் துள்ளலான ராகத்தில் கோஷல் சற்றே கிண்டல் போன்ற தொனியில் பாடியிருப்பார். இதற்குத்தானே இத்தனை நாளா ஆசைப்பட்டாய் தானனானே என்ற ஆலாபனையை வேறு வேறு உணர்ச்சியில் பாடியிருப்பார். மற்றபடி படத்தை பார்க்கவில்லை என்பதால் பாடலை மட்டும் கேட்டுப் பிழைக்கலாம்.

5.     கண்ணின் பார்வை..

பாடியவர்: கோஷல்
இசை: இளையராஜா
பாடல்: வாலி
படம்: நான் கடவுள்

பாலாவின் பெருத்துப் புடைக்கும் அக ஆன்மீக மொக்கை என்பதால் படத்தை பார்க்கவில்லை. ஆனால் பாடல்..?

பாடுவதற்கு மிகவும் கடினமான பாடல். பாடலின் கம்பீரமான தாளக்கட்டுக்கு இணையாக கோஷல் வரிகளை உணர்ச்சியில் தோய்ந்து பாடியிருப்பார். பார்வையில்லாத போதும் கண்ணில் ஈரம் ததும்பும் என்று அவர் பாடும் போது வேறு வழியில்லை, நமக்கும் ததும்பித்தான் ஆகவேண்டும். பார்வையற்றோரின் கூர்மையான நோக்குணர்ச்சியை இளையராஜாவின் அற்புதமான ராகத்தின் துணை கொண்டு கோஷல் மீட்டு வருகிறார். ராஜாவின் பாடலில்தான் கோஷல் தனியாக தெரியாமல் பின்னணிக்கு போய்விடுகிறார் எனும் அளவுக்கு இந்தப் பாடலின் கட்டுமானம் சற்றே பிரம்மாண்டமானதுதான், சந்தேகமில்லை. ரஹ்மானது பாடலில் ராகங்கள் சுருங்கி தேங்கி நின்று விடுவதற்கு மாறாக ராஜாவின் ராகம் எவ்வளவு விரிய முடியுமோ அதற்கு மேலும் பறக்கிறது. சரணங்களுக்கு இடையில் வரும் பின்னணி இசையில் இதை அறியலாம். கோஷலை நன்கு வேலை வாங்கிய பாடலாக இது இருந்திருக்குமென்று தோன்றுகிறது.

6.     அய்யைய்யோ

பாடியவர்கள்: மாணிக்க விநாயகம், கிருஷ்ணராஜ், யுவன் சங்கர் ராஜா, கோஷல்
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடல்: சிநேகன்
படம்: பருத்திவீரன்

முழுமையில் நன்கு கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலில் கோஷலை சற்றே தமிழ் நாட்டுப்புறத்தின் சாயலில் பாடுவதை பார்க்கிறோம். கருவாச்சியின் கரடு முரடான பாத்திரத்திற்குப் பொருத்தமான பாடலில் சற்றே கனமான குரலில் கோஷல் பாடுகிறார். சமயத்தில் இது கோஷல்தானா என்று சந்தேகம் கூட வருகிறது. ஒரு பாடலின் உணர்ச்சியைப் புரிந்து கொண்டு அவர் காட்டும் வித்தியாசம் உண்மையில் பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

7.     உருகுதே மருகுதே

பாடியவர்கள்: சங்கர் மகாதேவன், கோஷல்
இசை: ஜி.வி பிரகாஷ்
பாடல்: நா. முத்துக்குமார்
படம்: வெயில்

கரிசல் மண்ணின் வெள்ளேந்தியான காதலர்கள் பாடும் பாடலில் சங்கர் மகாதேவனிடம் மட்டும் அந்த வெள்ளேந்தித்தனத்தை காண முடியவில்லை. ஆனால் கோஷல் பாடும் போது உண்மையிலே உருகுகிறார். உலகம் சுழலுதே என்று பாடும் போது உண்மையில் உலகம் சுழலத்தான் செய்கிறது. தமிழ் தெரியாத ஒரு வங்கத்துப் பெண் இப்படி வார்த்தைகளை பொருள் தெரிந்து, இசையமைப்பாளர் எதிர்பார்க்கும் உணர்ச்சியை அநாயசமாக வெளிப்படுத்தி பாடுவதற்கு இந்தப்பாடல் ஒன்றே போதும்.

8.       எனக்குப் பிடித்த பாடல்

பாடியவர்: கோஷல்
இசை: இளையராஜா
படம்: ஜூலி கணபதி

ஸ்ரேயா கோஷலின் முதல் தமிழ் பாடல் இதுதானாவென்று தெரியவில்லை. ஆனால் மிகவும் இளவயது பாடல் என்பது மட்டும் புரிகிறது. இன்றை கோஷலின் குரலில் இருக்கும் கனமும், முதிர்ச்சியும் இந்த இளங்குரலில் இல்லை என்றாலும் அவரது திறமை இங்கேயே பளிச்சிடுகிறது. ஒரு பாடலில் இருக்கும் ராகத்தின் திருப்பம், ஏற்ற இறக்கம், கமகங்கள் இதெல்லாம் பாடுவதற்கு பொருத்தமான காலநேரத்தை வைத்துக் கொண்டே கட்டமைக்க முடியும். அதாவது அந்தந்த திருப்பத்திற்கு ஒரு தூரம் இருக்க வேண்டும். ஆனால் கோஷல் மட்டும் அந்த தூரத்தை மிகவும் குறைத்துக் கொண்டு பாடுகிறார். உண்மையில் இது சிரமமானது என்றாலும் அவரது இந்துஸ்தானி பயிற்சி இதற்கு கைகொடுக்கும் போலும். இந்தப் பாடலிலும், இந்தப்படத்தில் வரும் இதயமே என்ற பாடலிலும் கோஷல் அப்படி பாடும் ராகத்தை கமகத்தால் ஒரு குரலாட்டத்தோடு லாகவகமாக பாடுவதைக் கேட்டுப் பாருங்கள். இந்தப் பாடலை வேறொரு தேர்ந்த பாடகரை பாடச் சொன்னாலும் இந்த அளவு நகாசு வேலைகளோடு பாடுவது மிகவும் சவாலான ஒன்று.

9.     ஏ பெண்ணே..

பாடியவர்: கோஷல்
இசை: வித்யா சாகர்
படம்: தென்றல்

மேற்கத்திய இசை, செவ்வியல் இசை, கேள்வி பதில் அடுக்கு, சந்தப்பாட்டு, தனிக்குரலிசை என்று பல அம்சங்கள் இந்தப் பாடலில் சேர்ந்து வருவது அழகு. அத்தனைக்கும் ஈடு கொடுத்து பாடும் கோஷலும் அதை செவ்வனே செதுக்கியிருக்கும் வித்யாசாகரும் தனித்து நிற்கிறார்கள்.

10.   ஆவாரம் பூவுக்கும்

பாடியவர்: கோஷல்
இசை: வித்யா சாகர்
பாடல்: கபிலன்
படம்:  அறை எண் 305-இல் கடவுள்

நாட்டுப்புறத்தாளத்தில் ஆரம்பிக்கும் பாடலில் நாயனம் ஒரு சோகமும் இனிமையும் கலந்து இசைக்கிறது. பின்னர் கோஷல் பாடுகிறார். ஐயா என்று பாடும் போது நமக்கு தமிழ் ஐயா நினைவு வருகிறது.  பல்லவியில் சந்தப்பாட்டு போல வார்த்தைகள் தாளத்தோடு துள்ளும் வண்ணம் பாடல் கட்டியமைக்கப்பட்டிருக்கிறது. வரிகள் தெளிவாக கேட்கவில்லை என்றாலும் இனிமையான பாடல்தான்.

11.   பார்த்துப் போ மாமா

பாடியவர்: கோஷல்
இசை: கார்த்திக் ராஜா
படம்: நிறைஞ்ச மனசு

நாட்டுப்புறத்தின் அழகை கோஷல் பாடும் விதத்திற்காகவே இந்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது. பார்த்துப் போ மாமா என்று கோஷல் பாடும் போது அது சுத்தமான அக்மார்க் தமிழ் பெண்ணாகத்தான் இருக்குமென்று தோன்றுகிறது. ஜிலு ஜிலு சலங்கைச் சத்தம் என்று அவர் பாடும் போது அதுவே ஜல்லரி போல ஒலிக்கிறது. கரிசல் காடு, கம்மாய், நாத்து நடும் பெண்கள், என்று கிராமத்தின் சத்தங்கள் எல்லாம் கோஷலின் வழியாக நமது காதில் எங்கோ கேட்டது போல ஒலிக்கிறது.

12.   கண்டேன் கண்மணியே

பாடியவர்: கோஷல்
இசை: கணேஷ் ராகவேந்திரா
பாடல்: நா. முத்துக்குமார்
படம்: ரேணிகுண்டா

இந்தப்பாடலில் கோஷல் காயம்பட்ட மனதிற்கு ஆறுதல் சொல்லும் வண்ணம் இசைக்கிறார். இதில் அழகே தேவையற்ற கமகங்கள், ஆர்ப்பாட்டங்கள், அலங்காரங்கள் எதுவுமின்றி நேரடியாக பாடுவதுதான். மிகவும் கட்டுப்பாட்டோடு பாடப்பட்ட எளிமையான பாடல் என்றும் சொல்லலாம்.

13.   என்னவோ செய்தாய்

பாடியவர்கள்: கோஷல், கைலாஷ் கேர்
இசை: லஷ்மணன் ராமலிங்க
படம்: ஏன் இப்படி மயக்கினாய்

மெல்லிசையும், இந்துஸ்தானி ஆலாபனையும் இனைந்து வரும் அருமையான பாட்டில் ஆண் குரல் பொருத்தமாக கோஷலுடன் இணைகிறது. ஆண்குரல் நாட்டுப்புற சாயலுடன் இசைக்க கோஷல் நகர்ப்புறத்து பெண்குரலாய் சிணுங்கி பாடுகிறார்.

14.   ஒண்ண விட

பாடியவர்கள்: கோஷல், கமல் ஹாசன்
இசை: இளையராஜா
படம்: விருமாண்டி

ஸ்ரேயா கோஷல் பாடிய தமிழ் பாடல்களில் எனக்கு பிடித்த சிறப்பான பாட்டு இதுதான். இந்தப் பாட்டில் ஆச்சரியமாக குறைகளோ திருஷ்டிகளோ எதுவுமில்லை. கமலின் குரல் கூட படத்தின் மையப்பாத்திரத்தை நினைவுபடுத்தும் விதமாகவே வருகிறது. திருமணம் செய்த இளஞ்ஜோடி நிலா வெளிச்சத்தில் ஊரைவிட்டு காதல் கீதத்தோடு பயணிக்கிறது. மதுரை வழக்கோடு, நாட்டுப்புற பாணியில் கோஷல் உசிலம்பட்டி பெண்ணாகவே பாடுகிறார். தனிமையின் நிர்ப்பந்தம் சோகமான முறையில் பின்னணி இசையாக ராஜாவால் நேர்த்தியாக கட்டமைக்கப்பட்டுள்ளது. கோஷலும் அலங்காரங்கள் எதுவுமின்றி எளிமையாக நேரடியாக உணர்ச்சியில் தோய்ந்து இசைத்திருக்கிறார். தாளமும், ஏனைய கருவிகளும் பின்னணி இசையில் கதையின் கருவை அநாயசமாக கொண்டு வருவதால் கோஷலின் குரல் அன்றி இங்கு வேறு யாரும் பாட முடியாது என்று தோன்றுகிறது.

_________________________________________

ஸ்ரேயாவின் ஏனைய மொழிப் பாடல்களைக் கேட்டதில்லை. முக்கியமாக இந்தியில் அவர் நிறைய நல்ல பாடல்களை பாடியிருக்கிறார். இந்தியில்தான் கோஷலின் திறமை முதன்முதலில் வெளிவந்திருக்கிறது. மலையாளத்தில் அவர் எப்படி பாடியிருக்கிறார் என்பது எனக்கு ஆவலான ஒன்று. அந்த மொழியே இசையாக இருக்கும்போது இசையையே குரலாக கொண்டிருக்கும் அவரது பாடல் நிறைய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகிறது.

எனினும் ஸ்ரேயா கோஷலை இன்னும் எத்தனை நாள் இரசிக்க முடியும் என்ற ஐயமும் தோன்றாமலில்லை. அநேகமாக தமிழ் சினிமா ஃபார்முலாவில் நைந்து போயிருக்கும் எல்லா உணர்ச்சிகளையும் அவர் பாடிவிட்டார் என்றே தோன்றுகிறது. இனி அவர் என்னதான் பாடினாலும் அதில் புதிய உணர்ச்சிகள் இருக்கப் போவதில்லை. சராசரித் தமிழனது வாழ்வை விட்டு அன்னியப்பட்டிருக்கும் தமிழ் சினிமாவால் அந்த நல்ல பாடகியின் அத்தனை சாத்தியங்களையும் வெளிக்கொணர்வது கடினம்.

காதலின் ஏக்கம், இனிமை இவற்றைத்தான் கோஷல் அதிகம் பாடியிருக்கிறார். காதலில் கூட சமூக எதார்த்தம் இடம் பெறாத போது உணர்ச்சியில் மட்டும் புதுமையை நாம் கண்டு கொள்ளவோ, கொண்டு வரவோ செய்வது கடினம். கோஷல் பாடிய நல்ல பாடல்களின் திரைக் காட்சிகளைப் பார்க்கும் போது நமக்கு உவப்பாக இருப்பதில்லை. வெறும் பாட்டு தோற்றுவிக்கும்  கலையுணர்ச்சியை அலுப்பூட்டும் பிம்பக்காட்சிகள் எளிதாக கலைத்துவிடுகின்றன. இது கோஷலுக்கு மட்டுமல்ல, இளையராஜா போன்ற திறமையான இசையமைப்பாளர்களுக்கும் நடந்திருக்கிறது.

ஆகவேதான் அந்த அசட்டுக் கனவு ஒரு கணம் தோன்றுகிறது. ம.க.இ.க பாடல்களுக்கு இளையராஜா இசையமைக்க, கோஷல் பாடுவதாக ஒரு கணம் எண்ணிப் பார்த்தேன். எண்ணுவதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அரசியல் பாதையின் கலையுணர்ச்சியை திரையிசை என்ற மாய உலகத்தில் வாழும் கலைஞர்கள் எவ்வளவு உணரமுடியும் என்ற கேள்வி இருக்கிறது. காதலின் சிணுங்கலுக்காக உணர்ச்சி பாவத்தை பிரசிவிக்கும் அந்த பாடகி, புரட்சி தோற்றுவிக்கும் பிரசவ வலியை எங்கனம் உணர முடியும்? ஆனாலும் தனது கலை உணர்ச்சிக்கு உண்மையாக இருக்கும் ஒரு படைப்பாளி இறுதியில் பொதுவுடமைக்கு தானே வருவான் என்று ஒரு தத்துவப் பிரச்சினையை ஒரு தோழரிடம் நீண்டநேரம் விவாதித்தது நினைவுக்கு வருகிறது. ஸ்ரேயாவின் இசை உன்னதத்தை புரட்சியின் சர்வவியாபாக உண்மை இணைக்க முடியாதா என்ன?  ஆகவேதான அது முற்றிலும் அசட்டுக் கனவு என்றும் சொல்ல முடியவில்லை.

ஆனாலும் ஒரு நல்ல இசை கேட்பதற்கு மட்டுமல்ல, நாம் ஈடுபடும் எந்த காரியத்திற்கும் ஒரு ஊக்கத்தை வழங்கவே செய்யும். ஸ்ரேயா கோஷலை அம்மட்டுமிலாவது நாம் பயன்படுத்திக் கொள்ளலாமென்பதைத் தவிர வேறென்ன?

சென்ற மாதம் 17 தேதி முதல் வினவு நான்கம் ஆண்டில் அடியெடுத்து வைத்துவிட்டது. நன்றியும் வாழ்த்துக்களும் !

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

  1. ஸ்ரேயா கோசலை ரசிப்பது மேட்டுக்குடித்தனம் என்று எழுதியிருப்பீர்கள் என்று நினைத்தேன்! நல்லவேளை! 🙂

  2. நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வினவிற்கும், வினவு தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    மேன்மேலும் புதுபுது குழப்பங்களை ஏற்படுத்தும் கட்டுரைகளை வெளியிடவும் வாழ்த்துக்கள்.

    வினவின் அவாவிற்கிணங்க, வங்கத்து பார்ப்பனத்தி ஸ்ரேயா கோஷலின் குரலில் மண்ணிசை தமிழன் ராசாவின் இசையில் ம.க.இ.க வின் கொள்கைகள் எட்டுத்திக்கும் ஒலிக்கட்டும்…


    மாக்ஸிமம்

    • வினவின் அவாவிற்கிணங்க, வங்கத்து பார்ப்பனத்தி ஸ்ரேயா கோஷலின் குரலில் மண்ணிசை தமிழன் ராசாவின் இசையில் ம.க.இ.க வின் கொள்கைகள் எட்டுத்திக்கும் ஒலிக்கட்டும்… ///
      .
      .
      அட சீ என்ன புத்தியா ஒனக்கு?ஒரு பெண்ணை இப்படிதான் பார்ப்பதா?சாதி சான்றிதழ் வான்கிக்கிட்டுதான் பட்டோ படமோ பாக்கணுமா?

      • //அட சீ என்ன புத்தியா ஒனக்கு?ஒரு பெண்ணை இப்படிதான் பார்ப்பதா?சாதி சான்றிதழ் வான்கிக்கிட்டுதான் பட்டோ படமோ பாக்கணுமா?//
        அவங்க இப்படி பாக்காட்டி தான் பிரச்சனையே..

  3. நல்ல வேளை அவரை திட்டீருப்பீர்கள் என நினைத்தே பதிவை படிக்க தொடங்கினேன்…. 🙂 அது தானே வினவு 🙂

    செரி எனக்கு மிகவும் பிடித்த “இளம் காத்து வீசுதே” விட்டுட்டீங்க?

  4. நல்ல ஆய்வு. தனித்தன்மை கொண்ட குரல்வளம் ஸ்ரேயா உடையது. கர்நாடக சங்கீதம் பற்றிய உங்க கருத்துக்கள் நூறு சதம் உண்மை.அதுவும் நித்யஸ்ரீ பாடும்போது காது ஜவ்வு கிழிந்து விடும்.ஸ்ரேயா கோயலின் குரல் தேனில் ஊறிய பலா, அதன் இனிமையே தனி. உங்க பதிவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  5. கண்ணீர்த் துளிகளை கன்னங்களில் உருண்டோடவிட்ட எம்.ஜெவின் குரல்வளமும் இசையமைப்பும், மற்ற தகர டப்பாக் குழுக்களிலிருந்து வித்தியாசப்படுத்திக்காட்டியது. பாடல் வரிகளின் பொருளைப் புரிந்துகொள்ளாத வரையில் முற்போக்குச் சிந்தனையாளனைக்கூட தாளம் போட வைக்கும் மெட்டுக்கள்தான். கண்களில் நீர் கோர்ப்பதைச் தவிர, எம்.ஜெவின் மெட்டுக்களால் வேறேதும் செய்திட முடியவில்லை.

    பருத்திக் காட்டுக்குள்ளே, ஒரு விவசாயியின் மனைவி, இந்த விளைச்சலிலாவது தன் அடமானம் வைத்த தாலியை மீட்டுவிடுவதாக நினைத்து, ஒரு சோகமான மெட்டில் கொல்லங்குடி கருப்பாயியின் குரல் பாடியிருந்தால், அதுவும் இனிமையாகத்தானிருக்கும். இதில் விவாதிக்கப்படவேண்டியது ஏதாவது இருந்தால் சிலபேர் பறவை முனியம்மாவின் குரலை சிபாரிசு செய்வார்கள்.

    ஏதோ இந்த ஸ்ரேயா கோஷல் மீதான காதல் வயப்பட்டு இந்தக் கட்டுரையாளர் கட்டுரை எழுதப்பட்டிருப்பதுபோல் தோன்றுகிறது. அடேயப்பா, எவ்வளவு பெரிய கட்டுரை? அதற்கான எடுத்துக்காட்டு லிங்க்குகள்?

    சரிதான். இந்தச் சொப்பனக் குயில் ஸ்ரேயா, மினரல் வாட்டரில் தொண்டையை நனைத்துக்கொண்டு, கர்னாடிக் இந்துஸ்தானி என்று இழைந்து, சத்தியம் தியேட்டரில் ஒன்றுபோல கோக் உறிஞ்சும் நாசூக்கு மேட்டுக்குடிக்காகவே பாடுவதுபோல் தொனிக்கிறது. இவர் புழு நெளியும் குழாயடித் தண்ணீரைக் குடித்தபின், தொண்டை கரகரப்பில்லாமல் பாடமுடிந்தால், அப்பொழுது யோசிக்கலாம் – இவர் ம.க.இ.கவிற்காகப் பாடுவது பற்றி.

    நல்ல வேளை. ஸ்ரேயாவின் ஒப்பற்ற குரலுக்காக, ‘கவிப்பேரரசு’ வைரமுத்துவை ம.க.இ.கவிற்காக பாடல் எழுதுமாறு கேட்டுக்கொண்டு, கட்டுரையை முடிக்காமலிருந்ததற்காக மிக்க நன்றி!!

    • புதிய பாமரனின் கருத்தை அப்படியே ஆமோதிக்கிறேன்.

      //நானும் காதல் வயப்படும் வயதுதான் என்பது கூட ஒரு புறக்காரணமாக இருக்குமென்றாலும்//- இந்த வயதுக்கே உரிய கோளாறினால்தான் இந்தக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது என நினைக்கிறேன். பாட்டாளி வர்க்க இளைஞன் முதலாளி மகளை பார்த்து காதல் கொள்ளும் தமிழ்சினிமா காட்சிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

      புதிய பாமரனின் கீழ்காணும்வரிகளை கட்டுரையாளர் நினைவில் வைத்தல் நலம்
      //சொப்பனக் குயில் ஸ்ரேயா, மினரல் வாட்டரில் தொண்டையை நனைத்துக்கொண்டு, கர்னாடிக் இந்துஸ்தானி என்று இழைந்து, சத்தியம் தியேட்டரில் ஒன்றுபோல கோக் உறிஞ்சும் நாசூக்கு மேட்டுக்குடிக்காகவே பாடுவதுபோல் தொனிக்கிறது.//

  6. ஷ்ரேயா கோஷலைப் பற்றிய கருத்து மிகச்சரியானது. பாடுகையில் அதில் முழுமையான ஈடுபாடு அழகாகத் தெரிகிறது. இதைப் பெண் பாடகிகளில் பி.சுசீலா போன்ற ஜாம்பவான்களிடம் கண்டிப்பாகக் காணலாம். அந்த அளவில் வைத்துப் பார்க்கச் சரியானவர் என்பதில் ஐயமில்லை. மற்றபடி இன்றைக்குத் தமிழில் பாடுகின்றவர்களைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றுமில்லை.

    மொத்தக் கட்டுரையில் இரண்டே இரண்டு இடங்களில் நான் மாறுபடுகிறேன். இந்துஸ்தானி இசை மட்டுமல்ல செவ்வியத் தமிழிசையிலும் மெலடி உண்டு. நம்மூரில்தான் மெல்லிசை மென்னர் என்றே ஒரு இசையமைப்பாளரை வகைப்படுத்தி வைத்திருந்தோம். மலையாள மொழியே இசைமொழி என்று நீங்கள் சொல்கின்றீர்கள். தமிழும் இசைமொழிதான். இதை மலையாளியாகப் பிறந்த பாடகர் ஜெயச்சந்திரன் (கவிதை அரங்கேறும் நேரம், ராசாத்தி ஒன்னக் காணாத நெஞ்சு புகழ்) தன்னுடைய வலைத்தளத்தில் குறித்து வைத்துள்ளார். தமிழே இசைமொழியாக இருப்பதால் அதில் பாடுவது ஆனந்தமாக இருக்கிறது என்று அவர் கூறுகிறார். அது மலையாளிகளால் கட்டமைக்கப்பட்ட வலைத்தளம் என்பதையும் நாம் மறக்கக்கூடாது.

    ஷ்ரேயா கோஷலின் பாடல் வரிசை அமர்க்களம்.

  7. Eisenstein பட சுருள்களை கொளுத்தி அவரை ஒடுக்கியவர்களுக்கு இசை ரசனை கூட உண்டா என்ன?

    • சரியான கேள்வி சார்!!வினவு இதுக்கு பதில் சொல்லுவார்களா இல்லை வழக்கம் போல அமைதியா!!

  8. hi,
    nice post. shreya’s first song is Chellamai chellam from the movie album. shreya is now more popular in malayalam than tamil. she has got so many awards for the song khalbil ethi from the movie anwar(malayalam). her malayalam songs were too good too. here khajuraho from oru naal oru kanavu.

  9. னீ ஷ்ரேயா கோஷலை ரசித்து கட்டுரை எழுதலாம்…ஆனாநாஙக ரஜினிய ரசிக்கக்கூடாது…சத்யம்ல படம்பாக்கக்கூடாது…

    உனக்குப் பிடிச்சாநீ ஷ்ரேயா கோஷலைப்பத்தி ரிசர்ச்சே பண்ணீ 9 பக்கத்துக்கு ஒரு கட்டுரை எழுதுவ..அதநாஙக படிச்சு..

    …ஷ்ரேயா கோஷலை நினைது மெய்மரந்து எழுதுரப்ப இந்து மத துவேசம் மறந்து போச்சா.

    • ஷ்ரேயா கோஷலை நினைது மெய்மரந்து எழுதுரப்ப இந்து மத துவேசம் மறந்து போச்சா.

      விடுவோமா வினவா கொக்கா………

      பாலாவின் பெருத்துப் புடைக்கும் அக ஆன்மீக மொக்கை என்பதால் படத்தை பார்க்கவில்லை. ஆனால் பாடல்..?

  10. எனக்கும் ஷ்ரேயா கோஷலைப் பிடிக்கும், இந்தி ‘சீனி கம்’ல் அவர் பாடியப் பாடல்கள் அருமை.

  11. //முந்தைய தலைமுறையைச் சேர்ந்த ஏசுதாஸ்,பாலசுப்பிரமணியம்,ஜானகி,சித்ரா,சுவர்ணலதா முதலானவர்களின் தனியழகு நினைவுகளை இப்போது யாரிடம் தேடினாலும் கிடைப்பது கடினம்//ஸ்ரேயா கோஷலைப்பற்றி எழுதுவதாகச் சொல்லி ஒரு ஆய்வுக்கட்டுரைபோல் எழுதியிருக்கும் கட்டுரையில் நீங்கள் ‘பின்னோக்கிப் பார்க்கும் முந்தைய தலைமுறை நினைவுகளை’ வெறும் ஏசுதாஸ், பாலசுப்பிரமணியத்திலிருந்துதான் ஆரம்பிப்பீர்களா? அதற்கும் முந்தைய டிஎம்எஸ்,சீர்காழி,சிதம்பரம் ஜெயராமன்,டி.ஆர்.மகாலிங்கம் என்ற தலைமுறையிடமிருந்தெல்லாம் ஆரம்பிக்கமாட்டீர்களா? இப்படி இந்தவகையினரின் காலகட்டத்திலிருந்து ஆரம்பித்தால்தான் இசை என்று வரும்போது வெறும் இளையராஜாவை மட்டுமே முன்னிறுத்தி அங்கிருந்து சர்ரென்று கீழே வந்து மற்றவர்களெல்லாம் ஒன்றுமேயில்லை என்று சொல்லும் அண்டர்கிரவுண்ட் அரசியல் சாத்தியப்படும் என்பதற்காகவா? ஸ்ரேயா கோஷல் நல்ல பாடகிதான். அதற்காக வேறொரு பெரிய திரையை மற்றவர்கள் மீதெல்லாம் போட்டு மறைத்துவிட்டு உங்களுக்குப் பிடித்தவருக்கு மட்டுமே வெளிச்சம் பாய்ச்சும் வேலை தேவையில்லை.

    சுதா ரகுநாதன்,நித்யஸ்ரீ,பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோரையெல்லாம் அவர்களின் இனம் கருதி நிராகரிக்கிறீர்கள். இவர்களில் பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் கொஞ்சம் பிராமண ஸ்டைல் இருந்தபோதிலும் அதைத்தவிர்த்துவிட்டு கவனியுங்கள்.அந்தக்குரலில் உள்ள மெஸ்மரிசமும்,அழகிய உச்சரிப்பும்,அவர் உதிர்க்கும் பாவங்களும் கூரான கத்தியில் நறுக்கினால் வந்துவிழும் பழத்துண்டுகள்போல் அத்தனைச் சரியான வார்த்தைகளும் ஒரு அழகிய உணர்வை அவரால் மிகச் சுலபமாக கொண்டுவந்துவிட முடிகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் பாம்பே ஜெயஸ்ரீயை வைத்து மிக அருமையான பாடல்களைத் தந்திருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை.

    வினவின் விருப்பம் அல்லது ரசனை குறித்து நமக்கு ஆட்சேபணை கிடையாது.ஆனால் எல்லாக்கட்டுரைகளையுமே வரலாற்றை அடிப்படையாக வைத்து எழுதுவதாக பெயர் பண்ணும்போது ஒரு முப்பது நாற்பது வருட வரலாற்றை மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு எழுதத்தொடங்காதீர்கள்.மற்றபடி ஸ்ரேயா கோஷல் அருமையான பாடகிதான் என்பதில் மறுப்பேதும் இல்லை.

    • பின்னோக்கிப் பார்க்கும் முந்தைய தலைமுறை நினைவுகளை’ வெறும் ஏசுதாஸ், பாலசுப்பிரமணியத்திலிருந்துதான் ஆரம்பிப்பீர்களா? அதற்கும் முந்தைய டிஎம்எஸ்,சீர்காழி,சிதம்பரம் ஜெயராமன்,டி.ஆர்.மகாலிங்கம் என்ற தலைமுறையிடமிருந்தெல்லாம் ஆரம்பிக்கமாட்டீர்களா?

      சார் வினவு யூத் என்பதால் அவருக்கு முந்தைய தலைமுறையை பற்றி சொல்லியிருக்கிறார்.. நீங்கள் உங்களுக்கு முந்தையை தலைமுறையை விட்டுவிட்டீர்களே என்று விமரிசனம் செய்தால் எப்படி?

  12. எனக்கும் ஸரேயாவின் பாடல்கள் பிடிக்கும். முக்கியமாக ஓசைநயமே உணர்ச்சிகளை ஊட்டுகிறதா ? அல்லது அத்தகைய உணர்ச்சிகள் ஏதுமற்றதாக நாம் இருக்கிறோமா ? என்ற ஐயம் இவரது பாடல்களை பல பொழுது கேட்கையில் கேள்வியாக எழுந்த்து. முன்பே வா பாடலில் எனக்கு திரைப்படத்தின் சில பகுதிகளும் இணைந்துதான் பிடித்த்து. இணைந்த பகுதி தொக்கி நின்றாலும் அச்சூழலில் எழும்பும் கையறு நிலைக்குத் தக்கதாக இப்பாடல் இருப்பது போல தோன்றும். துள்ளலிசை என்று சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. எனக்குப் பிடித்த பாடல் என்ற பாடலில் இடையில் ஒரு பீட் வரும். அது இந்துஸ்தானியில் உள்ள புகழ்பெற்ற ஆலாபனை என்று ஒரு நண்பர் சொன்னார். அதன் பிறகுதான் லாகூருக்கு போய் வர வேண்டுமென்று தோன்றியது. விருமாண்டியின் உன்னவிட பாடல் என்னைக் கேட்டால் ஒரு மாஸ்டர் பீஸ்தான். அதில் ஒளி ஊடகமும் அப்படி ஒன்றும் தொக்கி நிற்காதுதான். ஆனால் அதனை நான் ரசித்த முறையில் ஒரு ஆதிக்க சாதியின் மனோநிலை இருந்த்தை அல்லது அச்சாதியின் பெருமையை அங்கீகரிப்பதை புரிந்துகொள்ள முடிந்த்து. அந்தவகையில் அதற்கு பாடியவர் பொறுப்பில்லைதான். ஆனாலும் நெருடுகிறது. கோஷல் பாட்டை கேட்பதற்காக வாய்ப்பு இருப்பதால் ராஜா வுக்கு பிறகு நமக்கு நல்ல திறமைசாலி இருக்கிறார் என்ற நம்பிக்கை உள்ளது. ஸ்ரேயா எனக்கு பிடித்த்த‍ற்கு உள்ள காரணங்களை பிறகு பகிர்ந்து கொள்கிறேன்.

  13. ஆமா ஸ்டாலின் மாவோ இவுங்களுக்கீல்லாம் படம் இசை பிட்க்காதே சீனா அனுமதியோடதான் இந்த பதிவை போட்டிருக்கீங்களா?

    • டுபுக்கு,

      மாவோவின் கவிதைகள் எதையாவது வாசித்தது உண்டா? இல்லை, கலாச்சாரப்புரட்சி பாடல்களைக்கேட்டதுண்டா?

      நுனிப்புல் மேயும் லும்பனுகளுக்காகத்தான் குமுதம், விகடன்னு வலைத்தளங்களை பாப்பாங்க நடத்துறாங்கள்ள?

      • என் பெயர் டுபுக்கு இல்லை .என்னது மாவோவின் கவிதைகளா சரி!!வேற யாராவது எழுதுனா அதை தீக்கிரையாக்குவது புரட்சியை தவிர வேறு படம் பாடல் இருந்தால் அதை தீக்கிரையாக்குவது இதெல்லாம் சொல்லலாமே!!Eisentstein போன்ற இயக்குனர்களை தங்களது பிரசார படமான Battleship potemkin படத்த மட்டும் சுதந்திரமா எடுக்க அனுமதித்து அப்புறம் அவர் எடுத்த பட சுருள்களை எரித்தது என்ன ஞாயமோ?புரட்சியை தவிர வேறு எதையும் படமெடுப்பது தேச துரோகம் போல!!
        குமுதம் விகடன் பத்தி எவன் பெசுனான்?குங்குமம் பார்ப்பனன் நடத்துரானா?இதுல பார்ப்பனன் எங்க வந்தான்?

  14. ரொம்ப நா வெயிட்டிங்கல இருந்த டபுள் டிப்பு ரிசசென் வந்திருச்சிங்கோ… டாபிக்க சீக்கிரம் மாத்துங்கோ….

    போன தடவ அமெரிக்க டவுசர் கியிஞ்சது. இந்த தபா கோவனம் கியிஞ்சது போலருக்கு…

    • இல்லை. இன்னும் டபுள் டிப் என்றெல்லாம் உறுதியாகவில்லை. முதலாளித்துவத்தையும் ஒழுங்கா செயல்படுத்தாமல், அரசு மான்யம், செயற்கையாக அரசு வட்டிகளை, real interest rateகளை விட குறைத்தது, பெரும் பற்றாக்குறை பட்ஜெட்டுகள் என்று பல நிஜ காரணிகள் இந்த மந்தங்களுக்கு உள்ளன. அதை விளக்கினால் புரிந்து கொள்ளும் அளவு இங்கு யாரும் இல்லை. மார்க்ஸ் சொன்ன ‘காரணங்களினால்’ இந்த வீழ்ச்சி இல்லை என்பது மட்டும் சொல்ல முடியும்.

      ஆனா, இது பத்தாது என்பதே என் கோணம். இன்னும் பெரும் மந்தம் உருவானால் தான் எல்லோருக்கும் புத்தி வரும். முக்கியமாக அரசுகளுக்கும், ‘நிபுணர்களுக்கும்’ ; அடிக்கர அடியில், இந்த இலவச இணைய சேவைகளும் திவாலாகி, பல இணைய நிறுவனங்களும் திவாலாகி இருந்தால் நலம். பழைய படி நாம் அச்சடிக்கப்பட்ட பத்திரிக்கைகளில் ‘விவாதிக்கலாம்’ ; outsourcing மூலம் வேலை வாய்ப்பு பெற்று, இங்கு முழங்கும் பசங்க, வேலை போய், தெருத் தெருவாக திரியலாம். குட்டை சுவர்களில், தாடி வளாத்திக்கொண்டு அமர்ந்து, பீடி புகைத்து, ‘புரட்சி’ பற்றி பேசலாம். 70கள் போல !! :))

      • ஆனா, இது பத்தாது என்பதே என் கோணம். இன்னும் பெரும் மந்தம் உருவானால் தான் எல்லோருக்கும் புத்தி வரும். முக்கியமாக அரசுகளுக்கும், ‘நிபுணர்களுக்கும்’ ; அடிக்கர அடியில், இந்த இலவச இணைய சேவைகளும் திவாலாகி, பல இணைய நிறுவனங்களும் திவாலாகி இருந்தால் நலம். பழைய படி நாம் அச்சடிக்கப்பட்ட பத்திரிக்கைகளில் ‘விவாதிக்கலாம்’ ; outsourcing மூலம் வேலை வாய்ப்பு பெற்று, இங்கு முழங்கும் பசங்க, வேலை போய், தெருத் தெருவாக திரியலாம். குட்டை சுவர்களில், தாடி வளாத்திக்கொண்டு அமர்ந்து, பீடி புகைத்து, ‘புரட்சி’ பற்றி பேசலாம். 70கள் போல !! 🙂 )

        Evlo mosamana aaluya nee!!! yaaravadhu naalu per nalla irukaradhu oruthanukku ivlo vayiru eriyume??

        Please confirm if your post was sarcastic to Vinavu or its ur belief!!!

        • Uyire,

          of course it is sarcastic reply to Vinavu and Asuran who heartily wish that US capitalism and global capitalism (even though i disagree with this term ‘capitalism) should collapse like USSR did in 1991. அப்படி ஆனால் அதன் விளைவுகளை பற்றி ‘தெளிவு படுத்தவே’ இதை எழுதினேன். உலகமயமாக்கலில் விளைவினால் இன்று ‘நல்ல’ வேலையில் இருக்க்கும் பல நூறு ‘தோழர்கள்’ அதே உலகமயமாக்கலை ‘எதிர்ப்பதாக’ இங்கு தொடர்ந்து எழுதும் கூத்து !!

          Obviously you are new here and do not know about my past interactions here for years !!

  15. அது ‘ ஒண்ண விட’ இல்லை ‘ஒன்ன விட …..’ நீங்க என்ன யுவன் ஷங்கர் ராஜா வா ?

  16. நல்ல பதிவு. ரசித்துப் படித்தேன். வினவு ஜனரஞ்சக ரசனைக்கு ஆட்பட்டு வருகிறதோ! நல்ல மாற்றம் நிகழ்ந்தால் சரிதான்..! 🙂

  17. ஷ்ரேயா கோசலையும் தெரியாது.அது பாடின பாட்டும் தெரியாது.கட்டுரையாளரும் மேட்டுக்குடி அறிவுத்தனத்தை வெளியிட்டு இருக்கார்.ம்..ம…ம.. நடக்கட்டும்.நடக்க்டடும்

  18. சிரயாகொசல்.சமகாலட்தில் இசை ரசிகர்கலை இந்த அலவக்கு கவர்ந்த ஒரு பென் கலஙர் யாருமில்லை. சிரயாகோசல் நீங்க வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்ட்தம் கர்ப்பிட்துவிட்டிர்கல்.

  19. congrats for the 3rd anniversary. I surprised to see the Shreya ghosal article in VInavu. very good and fantastic. I learned a thing or two today about music from this wonderful article. easy to read and digest and memorize is the positive point of the article. great . keep it up. I think Vinavu is leading the Tamil website most viewed in numbers. we expect more like this . vinavu for all.
    greetings
    G.V

  20. கருணாதியோடு களவாணிகள் தான் கூட்டு சேர்வார்கள் இப்போது வினவு சேர்ந்திருக்கிறது .பலமான ஸ்பெக்ட்ரம் கவனிப்பு நடக்கிறது போல இருக்கிறது.

  21. மிக அற்புதமான கட்டுரை தோழர். ம.க.இ.க என்றால் வறட்டு சித்தாந்தம் மட்டுமே பேசுபவர்கள் அவர்களுக்கு நுட்பமான கலாரசணை சாத்தியமில்லை. எனும் எண்ணத்தை சுக்குநூறாக உடைத்திருக்கிறது இந்த கட்டுரை. மீண்டும் ஒரு முறை என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

  22. சினிமா ஒரு ஊடக நாடக கார்போரேட் “சுரண்டல்” என்று அறியாமல் இசையில் லயிக்கும் பொய் நடிப்பில் மயக்க துடிப்பில் முதலாளிகளின் கூத்தடிப்பில் தன் உழைப்பின் வருவாயை கலைத்துறை எனும் சமூக கொலைத்துறையில் பாட்டாளி நோட்டாளியிடம் ஏமாறுவதை கண்டுகொள்ள இயலவில்லையா?

  23. வினவு தளம் ஹேக் செய்யப்பட்டுவிட்டது

    முதலாளித்துவர், பார்ப்பனர், தலித்து, திராவிடர், ஆரியர், இலங்கைத் தமிழர், இந்தியத்தமிழர், போலிக் கம்மூனிஸ்டு, ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிஜி, சோமாலியா (சுருக்கமாய் வினவுக்கூட்டம் தவிர்ந்த எல்லாரும்) எல்லாரும் சேர்ந்து வினவு தளத்தை Hack செய்துவிட்டார்கள்

  24. All Tamil songs are waste. They have no good music sense. They rely on processors and sequencers. There are no good musicians/music-composers in Tamil Nadu (also in India). People lack originality here. They are shamelessly copying stupid pop-songs. As a student of music, I can say, Shreya Goshal is not worthy to get this much praise and she had done nothing extrodinarily for music.

  25. வினவிற்கு இசையில் கவனம் செலுத்த கூட நேரம் உண்டு நினைக்கையில் நன்றாகத்தான் இருக்கிறது. நன் சமீபத்தில் ஒரு புத்தகம் ஒன்றை படிக்க நேர்ந்தது அதன் பெயர் RICH DAD POOR DAD – WRITTEN BY Robert kiyosaki, தமிழில் பணம் புரிந்தவன் என்ற பெயரில் வெளியாகி உள்ளது , அதனை படித்து அதன் விமர்சனத்தை எழுதும் படி கேட்டு கொள்கிறேன் , அதனை உங்களிடம் கூறுவதற்கும் கரணம் உள்ளது , அதன் விமர்சனம் எழுதும் பொது தயவு செய்து தெரிய படுத்தவும் . அதன் விமர்சனம் எழுதும் போது உங்கள்
    கம்யூனிச பார்வையை ஒதுக்கி வைத்து விட்டு எழுதவும் . நன்றி .

  26. ஷ்ரேயா கோஷல் பாடிய பாடல்களில் சமீபத்தில் மிகவும் பிடித்த பாடல், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘மன்னிப்பாயா’ பாடல். கதாநாயகியின் தவிப்பை நளின இசையின் மூலம் விஸ்தாரமாக சித்தரித்துள்ளார். எத்தனை முறை கேட்டாலும் திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டி நம்மையும் தவிக்க வைக்க கூடிய அற்புதமான பாடல்!

  27. //ஆனாலும் தனது கலை உணர்ச்சிக்கு உண்மையாக இருக்கும் ஒரு படைப்பாளி இறுதியில் பொதுவுடமைக்கு தானே வருவான் என்று ஒரு தத்துவப் பிரச்சினையை ஒரு தோழரிடம் நீண்டநேரம் விவாதித்தது நினைவுக்கு வருகிறது. ஸ்ரேயாவின் இசை உன்னதத்தை புரட்சியின் சர்வவியாபாக உண்மை இணைக்க முடியாதா என்ன? ஆகவேதான அது முற்றிலும் அசட்டுக் கனவு என்றும் சொல்ல முடியவில்லை.///

    இந்த ’விவாததம்’ பற்றி விரிவாக எழுத முடியுமா ? தனது கலை உணர்ச்சிக்கு ’உண்மையாக’ இருக்கும் ஒரு படைப்பாளி இறுதியாக பொதுவுடைமக்கு வராவிட்டால் அந்த கலைஞரை என்ன சொல்வீர் ? புரட்சிக்கு பின் என்ன செய்வீராம் ? இப்படி கலைஞர்களை கருப்பு / வெள்ளையாக பிரிக்க முடியாது. கலையையும் தான்.

  28. //இப்படி கலைஞர்களை கருப்பு / வெள்ளையாக பிரிக்க முடியாது. //
    சம்பந்தப்பட்ட கலைஞர்களோட கோரிக்கையே இதுதானா ?

  29. மகாலஷ்மி ஐயர்,நரேஷ் ஐயர்- இவர்களில் பெயரில் ஐயர் என்று இருப்பதால் அவர்கள் பாடியதை வினவு கேட்கமாட்ட்டார் ?:).பாம்பே ஜயஸ்ரீயின் வசீகரா ஒரு பாடல் போதும் அவர் குரல் வளம் எப்படி திரையிசைக்குப் பொருந்தும் என்பதை.அவர் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பாடியுள்ள பாடலை வினவு கேட்டதில்லை போதும். ஹிந்துஸ்தானி இசையிலும் பக்திக்கும் இடமுண்டு.ஹிந்துஸ்தானி இசைக்கு பங்களிப்பு செய்த பல முஸ்லீம்கள் பக்தியை, இந்திய மரபை வெறுத்து ஒதுக்கிவிடவில்லை. பாராட உனது மானுட பரப்பை எழுதிய பாரதிதாசன் தான் தலைவாரி பூச்சுட்டி உன்னை என்ற பாடலையும் எழுதினார்.முன்னதை பிடித்தால் பின்னதை பிடிக்கக்கூடாது என்றெல்லாம் இல்லை. கர்நாடக இசையின் அடிப்படையில் எத்தனையோ அற்புதமான தமிழ் திரைப்படப் பாடல்கள் உள்ளன.
    ஜி.ராமநாதன்,பாபனாசம் சிவன் போன்றவர்கள் அதில் முன்னோடிகள். இருவரும் ஐயர் என்பதால் வினவு அவற்றை ஒட்டு மொத்த நிராகரிக்கவும் வாய்ப்புள்ளது.இளையராஜா கர்நாடக இசையின் விரோதி அல்ல.அவர் அதை பயன்படுத்திய விதமும் குறிப்பிடத்தக்கது.
    வினவின் கட்டுரை தகவல் பிழைகளுடன்,கருத்தியல் சார்ந்த முட்டாள்தனமான அவதானிப்புகளுடன் எழுதப்பட்ட கட்டுரை.வினவு போன்றவர்களுக்கு தான் பிடித்த முயலுக்கு மூணு கால், உலகத்தில் எல்லா முயலுக்கும் மூணுகால் என்றுதான் வாதிட முடியும் போலிருக்கிறது.

  30. வினவின் ஆகச் சிறந்த குப்பை பதிவு!

    ஒருவேளை இக்குப்பை எழுத்துக்களை மொழிமாற்றம் செய்து ஸ்ரேயா கோஷல் படிக்க நேர்ந்தால், அவர் தற்கொலைக்கு கூட முயற்சி செய்ய வாய்ப்பிருகிறது 🙂 🙂 சொம்பு அடிக்கலாம் :). ஆனா இவ்வ்வ்வ்வ்வ்ளோ கூடாதுப்பா. ப்ப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்………

  31. தேவையில்லாத கட்டுரை. தேவையில்லாத புகழாரம். இவர் ஒரு சிறந்த பாடகி என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. ஆனால் இந்த கட்டுரையை உங்கள் தளத்தில் எதிர்பார்க்கவில்லை. வினவு எங்கே செல்கிறது. என்னவாயிற்று.

    உங்கள் தளத்தை வேறு யாரேனும் உபயோகப் படுத்துகிறார்களா என்ன?

  32. அரசியல் அற்ற,மார்க்சிய பார்வை அற்ற கட்டுரை. நன்றாக,தனித்தன்மையுடன் இருப்பதாலேயே சரி என்றால், பல பாடல்கள்,கதைகள்,நாவல்கள்,திரைப்படங்கள் மற்ற கலை வடிவங்களை எல்லாம் பாராட்ட வேண்டும். இசை பற்றிய மருதையனின் கட்டுரை ஒரு மார்க்சிய பார்வை உடையது. இது ஒரு மொக்கை என்றே சொல்லாம்.

  33. ஜாய் ஆலுக்காஸ் விளம்பரத்தில் கூட அவர் நல்ல உணர்ச்சி வெளிப்பாட்டுடன் நடித்திருக்கிறார். அதைப் பார்த்தபின்னும் வினவில் இப்படி ஒரு கட்டுரையா? ஆச்சரியம்தான்:)))))

  34. வினவு முதல் தடவையாக குறை சொல்லத பதிவு இது தான்…வாழ்த்துக்கள்..

  35. ஸ்ரேயா கோஷல்… இந்த பதிவின் மூலமே… அந்த பாடகரின் பெயரை அறிகிறேன்… கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கும் பாடல்கள் எல்லாம் நல்லாதான் இருக்கு… இதற்கு இவ்வளவு பெரிய கட்டுரை வினவில் இருப்பது வியப்பானது… கொடுமை… இதில் கூட பொருளாதார பேரறிஞர்(?!*$%+-=/><@#^()[]{}`~) அதியமான் குடித்து விட்டு வாந்தி எடுப்பது போல் வாந்தி எடுத்து சென்று இருக்கிறார்… இது போல் கண்ட இடத்தில் வாந்தி எடுப்பவர்களை… சிங்கபூரில் இருப்பது போல்… அவரது வாந்தியை அவரையே சுத்தம் செய்ய வைக்க வேண்டும்…

Leave a Reply to வலிபோக்கன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க