privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்பாரதமாதவின் தலைசிறந்த சுயம்சேவக் எடியூரப்பா!

பாரதமாதவின் தலைசிறந்த சுயம்சேவக் எடியூரப்பா!

-

பாரதமாதவின் தலைசிறந்த சுயம்சேவக் எடியூரப்பா!
எப்பூடி........

ஆர்.எஸ்.எஸ் – பெயர் சொன்னால் போதும்; தரம் எளிதில் விளங்கும். உங்களுக்கு அதன் தரமோ தராதரமோ போதுமான அளவுக்கு விளங்கவில்லையா? கவலையை விடுங்கள், சுயம்சேவகர்களைப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள். ஆர்.எஸ்.எஸின் கடமை, கட்டுப்பாடு, ஒழுக்கம், நேர்மை மற்றும் இன்னபிற யோக்கியதைகளை மக்களுக்குத் துலக்கமாக விளக்கும் வாழும் உதாரணம் தான் சுயம்சேவகர்கள். அதில் முதன்மையானவர் தான் சுயம்சேவக் எடியூரப்பா.

பல்வேறு சிறப்பான குணாம்சங்களைக் கொண்டவரும், ஆர்.எஸ்.எஸ் காக்கி டவுசர்கள் சொல்லும் சுய சேவையில் கரைகண்டவருமான எடியூரப்பாவுக்கு பல சிறப்புகள் இருக்கின்றன. அதில் சமீபத்திய சிறப்பு அவர் வழங்கிய ராஜினாமாக் கடிதம். உலகிலேயே நல்ல நேரம் பார்த்து ராஜினாமாக் கடிதம் கொடுத்த ஒர்ர்ரே முதலமைச்சர் அனேகமாக இவராகத் தான் இருக்க முடியும். நல்ல விஷயங்கள் நல்ல நேரத்தில் தான் நடக்க வேண்டும் என்று நினைத்துத் தான் இப்படிச் செய்தாரா தெரியவில்லை.  ஆனால், இந்த சாதனையை இனிமேல் ஜெயலலிதாவால் கூட மிஞ்ச முடியாது என்பது மட்டும் திண்ணம்.

மேலும் விஷயத்துக்குள் போகும் முன் விவரங்களுக்குள்ளும் கொஞ்சம் உலாத்தி விட்டு வரலாம் நண்பர்களே!

அதாகப்பட்டது, ‘கம்யூனிஸ்ட்டு’ செஞ்சீனம் மேன்மேலும் உயர்வதைத் தடுத்து பரதவர்ஷத்தின் புகழ்க் கொடி பாரில் பட்டொளி வீசிப்பறக்க ஆர்.எஸ்.எஸ் காக்கி டவுசர்கள் தீவிரமாக சிந்தித்து ஒரு திட்டத்தைத் தயாரித்தார்கள். அதன்படி, கருநாடக மாநிலம் பெல்லாரியில் கிடைக்கும் இரும்புத் தாதுவை சல்லிசான விலைக்கு சீனத்துக்கு அனுப்பி, அதன் மூலம் உண்டாகும் இரும்புக் குவியலாலேயே சீன தேசத்தை அழுத்திக் கீழே தள்ளி விட வேண்டும்  என்பது தான் அந்தத் திட்டம். இதற்காகவே ரெட்டி சகோதரர்கள் என்கிற மூன்று முத்தான சுயம்சேவகர்களிடம் பெல்லாரி மாவட்டத்தையே தூக்கிக் கொடுத்துள்ளார்கள்.

ரெட்டிகளின் நேரடிக் கம்பெனிகளும் பினாமிக் கம்பெனிகளுமாகச் சேர்ந்து  இரும்புத் தாதுக்களால் அழுத்தப்பட்டுக் கிடக்கும் பாரதமாதாவின் சுமையைக் குறைக்க வேண்டுமே என்கிற நல்லெண்ணத்தில் பெல்லாரி மாவட்டத்தையே தோண்டித் துருவியதற்கு பெற்ற அற்ப கூலி மட்டுமே 16,000 கோடிகளுக்கும் மேல் இருக்கும் என்று தனது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் கருநாடக லோக் அயுக்தா தலைவர் சந்தோஷ் ஹெக்டே. சந்தோஷ் ஹெக்டே ஒரு நல்லவர் என்பதை தில்லியில் உள்ள பா.ஜ.க தலைவர்களே சான்றிதழ் அளித்திருப்பதால் நாம் அவரின் கூற்றை சந்தேகிக்க வேறு காரணங்களில்லை.

மேற்படி திட்டம் நல்ல முறையில் இயங்கி வந்ததை அடுத்து, தென்னிந்தியாவின் முதல் இராம இராஜ்ஜியத்தின் மாமா மன்னர் எடியூரப்பா அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட784 அதிகாரிகளுக்கு அப்பாவி இரும்பு யாவாரிகள் பல்வேறு பரிசில்களைக் கொடுத்துள்ளனர். மேலும், மன்னரின் புதல்வர்களுக்கும் சில பத்து கோடிகள் கப்பமாகக் கட்டப்பட்டுள்ளது. இதன் விவரங்களும் சந்தோஷ் ஹெக்டேவின் விசாரணை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

ஏற்கனவே தேசிய அளவில் பாரதமாதாவைக் கூறு போட்டு விற்பதில் சிறப்புப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியே பொறாமை கொள்ளும் அளவிற்கு ஆர்.எஸ்.எஸ் டவுசர்களின் சாதனை அமைந்துள்ளதே அதற்குக் கிடைத்துள்ள பெருமைகளில் தலையாயது. ஓரிரு மாநிலங்களில் ராம ராஜ்ஜியத்தை அமைப்பதில் வெற்றி ஈட்டியுள்ள நிலையிலேயே தமது கீர்த்தி மிக்க செயல்பாடுகளால் பாரத மாதாவின் புகழ்க் கொடியைப் பட்டொளி வீசிப் பறக்க விட்டுள்ள டவுசர்கள், மத்திய அரசின் அதிகாரத்தையே கைப்பற்றி விட்டார்கள் என்றால் பாரத மாதாவின்  கோவணத்தைக் கூற சிறப்பாகப் பறக்க விடுவார்கள் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது.

ஏற்கனவே இவர்கள் மத்தியில் அதிகாரத்தில் இருந்த போது உலகிலேயே யாரும் சிந்தித்திராத வண்ணம், அரசுத் துறைகளை தனியாருக்கும் அந்நியர்களுக்கும் விற்பதற்காக தனி இலாக்காவே வைத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தனது மாமா வேலைக்கு இந்துத்துவக் காவிகள் ஒரு போட்டியாக உருவெடுத்து விடக் கூடாது என்பதில் குறிப்பாக இருக்கும் காங்கிரசு, சந்தோஷ் ஹெக்டேவின் அறிக்கையை வைத்து கடந்த மாதம் பஞ்சாயத்தைக் கூட்டியது. கருநாடக பாரதிய ஜனதாவிலேயே புறங்கையை நக்க வாய்ப்புக் கிடைக்காத பிற கோஷ்டிகளும் எடியூரப்பாவிற்கு எதிராய் போர்க் கொடியை உயர்த்தினர்.

குரங்குக் கூட்டத்தில் மரத்திலிருந்து தவறி விழும் குரங்கு கீழே விழுந்தவுடன் கையில் அகப்பட்ட உடைந்த கம்பை தூக்கி மற்ற குரங்குகளுக்குக் காட்டுமாம். ஏனெனில், கிளை தாவும் போது கீழே விழுவது குரங்குகளிடையே அவமானகரமானதாகக் கருதப்படுகிறது. அப்படிக் கீழே விழுந்த குரங்கை மற்ற குரங்குகள் கூட்டத்தை விட்டு விலக்கி விடுமாம். அதைத் தவிர்க்கத் தான் கீழே விழுந்த குரங்கு ‘நானாக விழவில்லை; இதோ இந்தக் கிளை முறிந்ததால் தான் கீழே விழுந்தேன்’ என்பதை உணர்த்தும் விதமாக அவ்வாறு செய்யுமாம்.

காங்கிரசு, பா.ஜ.க மற்றும் போலி கம்யூனிஸ்டு கட்சிகளைப் பொருத்தவரையில் சிறப்பான முறையில் ஒரு ஊழலில் இருந்து இன்னொரு ஊழலுக்கு மாட்டிக் கொள்ளாமல் தாவும் வரை பிரச்சினையில்லை. மாட்டிக் கொண்டால் மற்றவர்கள் இன்ஸ்டன்ட் யோக்கியர்களாகி விடுவார்கள். எனவே இப்போது கீழே விழுந்த குரங்கான எடியூரப்பாவைப் பார்த்து கீழே விழாத பா.ஜ.க குரங்குகள் கடந்த மாதத்திலிருந்து எக்காளமிடத் துவங்கின. எடியூரப்பாவும் லேசுப்பட்டவர் இல்லையென்பதால், குப்புற விழுந்து மூஞ்சியே மண்ணில் புதைந்து போன நிலையிலும் ‘ மீசையில் மண் ஒட்டலையே’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

எப்படியாவது இவர் கையில் காலில் விழுந்தாவது பதவியை ராஜினாமா செய்ய வைத்து விட்டால் ஆர்.எஸ்.எஸின் கட்டுக்கோப்பை நிலைநாட்டி விடலாம் என்று கருதிய தில்லி மேலிடம், எடியூரப்பாவிற்குத் தூது மேல் தூது அனுப்பிக் கொண்டிருந்தது. இந்த விஷயமாக நடந்த சமரசக் கூட்டங்களில் எடியூரப்பா வெங்கைய்யா நாயுடுவின் லேப்டாப்பை விசிறி அடித்தார் என்றும், இன்னொரு அமைச்சரை பளார் என்று கன்னத்தில் அறைந்தார் என்றும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.

காங்கிரஸ்காரனுக்கு அரசியலில் அதிக பட்ச பயிற்சியே வேட்டி உருவச் சொல்லிக் கொடுப்பது தான். எனவே அவர்களின் கூட்டங்களில் கலந்து கொள்ளும் செயல் வீரர்கள் பட்டாபட்டியை பேண்டு நீளத்துக்குத் தைத்துப் போட்டுக் கொண்டால் பிரச்சினை தீர்ந்தது. ஆனால், இவர்களோ ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்களில் குஸ்தி பயின்றவர்கள். எனவே மூடிய அறைக்குள் குத்துச் சண்டையே நடந்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஆர்.எஸ்.எஸின் நேர்மை, ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு பற்றியெல்லாம் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள பா.ராகவன், அவர்களின் குத்துச் சண்டைத் திறமையையும் சேர்த்தே குறிப்பிட்டிருக்கலாம்.

இதற்கிடையே தில்லியில் நடந்த பாரதிய ஜனதா உயர் நிலைக் கூட்டத்தில் தனது படை பரிவாரங்களோடு கலந்து கொள்ளச் சென்றிருந்த எடியூரப்பா யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் ராவோடு ராவாக அங்கிருந்து எஸ்கேப்பாகி கருநாடகத்திற்குத் திரும்பி  ஆர்.எஸ்.எஸில் கற்றுக் கொண்ட கட்டுப்பாட்டை சிறப்பாக நிலைநாட்டி விடுகிறார். பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவர்கள் எடியூரப்பா சொந்தமாகக் கிண்டிக் கொடுத்துச் சென்ற அல்வாவைக் கையில் வைத்துக் கொண்டு தேசிய ஊடகங்களின் முன் பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருந்தார்கள்.

அடுத்து எடியூரப்பா இராஜினாமா செய்வாரா மாட்டாரா என்று புரியாமல் பாரதிய ஜனதா தலைமை தலையைச் சொறிந்து கொண்டிருந்த நிலையில் கருநாடகம் வந்த எடியூரப்பா, தனது ஆஸ்தான அரசியல் வழிகாட்டிகளான பில்லி சூனிய மந்திரவாதிகளிடம் விவாதித்தாரா இல்லை அரசியல் குரு குட்டிச்சாத்தானிடம் விவாதித்தாரா தெரியவில்லை. ஆனால், ஒருவழியாக இராஜினாமா செய்வேன் என்று தீர்மானித்து அறிவித்தார். அதிலும் பீடை மாதமான ஆஷாட மாதம் ஜூலை 30ம் தேதி தான் முடிகிறது என்றும் அதன் பின் புனித நாளான ஜூலை 31ம் தேதியன்று தான் பதவி விலக முடியும் என்றும் அறிவித்த எடியூரப்பா, தனக்கு அடுத்து தனது அடிப்பொடியான சதானந்தா தான் முதல்வராக வேண்டும் என்றும் தன்னிச்சையாக அறிவிக்கிறார்.

இதற்கிடையே, ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக காங்கிரசு குரங்குக் கூட்டத்திலிருந்தும் பல குரங்குகள் கிளை தாவும் போது கீழே விழுந்து கிடக்கின்றன. எனவே அவர்களும் ‘நீ மட்டும் யோக்கியமா’ என்கிற அறிவியல்பூர்வமான அரசியலைக் கையில் எடுக்கிறார்கள். பாராளுமன்றம் வேறு விரைவில் கூடுகிறது; ஆ. ராசா வேறு பிரதமரின் கோவணத்தில் இருக்கும் பொத்தல்களை நீதிமன்றத்தில் வைத்து அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார் – அவர்கள் கவலை அவர்களுக்கு.

எடியூரப்பா முதல்வர் பதவிக்கான தனது வாரிசு யார் என்று அறிவித்து விட்ட நிலையில் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த தன்னலமற்ற சுயம் சேவகர்களுக்குள் குடுமிப்பிடி சண்டை துவங்குகிறது. இந்தச் சண்டைகளெல்லாம் யார் தொடர்ந்து பாரத மாதாவுக்கு செய்யப்பட்டு வரும் சேவையைத் தொடர்ந்து தங்கு தடையில்லாமல் செய்வது என்பதற்காகத் தான் என்பதை நாம் வாசகர்களுக்கு நினைவூட்டத் தேவையில்லை என்று நினைக்கிறோம்.

ஒருவழியாக குருக்ஷேத்திரத்தில் வெற்றியீட்டும் எடியூரப்பா தனது அணியைச் சேர்ந்த சதானந்தாவை ஆகஸ்ட் 3ம் தேதி முதல்வர் பதவியில் அமர்த்துவதில் வெற்றி கண்டுள்ளார். எடியூரப்பாவை இராஜினாமா செய்ய வைத்ததன் மூலம் தனது அமைப்பு ஒரு இராணுவக் கட்டுப்பாடு கொண்ட அமைப்பு என்கிற பெயரை பாரதிய ஜனதா தக்கவைத்துக் கொண்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறது. ‘அவளும் பத்தினியில்லை’ என்று நிறுவ முடிந்ததில் காங்கிரசுக்குப் பேரானந்தம்.

பெல்லாரியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட பாரதமாதாவின் அங்கங்களோ கப்பலில் சீனத்தை நோக்கித் தடையின்றிப் பயணிக்கின்றன. ஆர்.எஸ்.எஸ் காரர்கள் சாகாவில் பாடிக் கொண்டிருக்கிறார்கள் ‘பரம் வைபவன்யே துமே தத்ஸ்வராஷ்ட்ரம்’ – அதாவது, “பரம வைபவமான நிலைக்கு உன்னை உயர்த்துவேன் உன்னதமான ஸ்வராஷ்ட்ரமே” என்று இதற்குப் பொருள். பீகிங்கின் வானுயர்ந்த பாலங்களும் கட்டிடங்களும் தான் அந்த ‘பரம வைபவமான’ நிலை என்று சொல்கிறார்கள் இந்துத்துவ யோக்கியர்கள். இந்தப் பரம வைபவத்தை நோக்கிய பயணம் ஒவ்வொன்றிற்கும் துறைமுக அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படும் லஞ்சம் 50 ஆயிரம் என்று கண்டறிந்து சொல்லியிருக்கிறார் சந்தோஷ் ஹெக்டே.

ஓரிரு மாநிலங்களில் அதிகாரத்தில் இருக்கும் போதே ராம ராஜ்ஜியம் இந்தப் போடு போடுகிறதே, மொத்த நாட்டுக்கும் அதிகாரம் செலுத்தும் நிலைக்கு இவர்கள் வந்தால் என்ன போடு போடும் என்பதை நாங்கள் புதிதாக விளக்க வேண்டுமா என்ன?

__________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்: