privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்கருணையினால் அல்ல!

கருணையினால் அல்ல!

-

பேரறிவாளன்,சாந்தன்,முருகன்...கருணையினால் அல்ல ! ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வரின் கருணை மனுவை, தமிழக அமைச்சரவையின் ஆலோசனையைக் கேட்காமலேயே ஆளுநர் நிராகரித்தது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இராஜீவ் கொலையையொட்டிக் ‘குற்றம்’ இழைக்காமலேயே தண்டனை பெற்ற – தமிழகம் முழுவதும் தாக்கப்பட்ட – தி.மு.க. தொண்டர்களின் தலைவர் கருணாநிதி இக்கருணை மனுவின் மீது கருத்துச் சொல்லியாக வேண்டும்.

இந்நால்வரின் தண்டனையும் ரத்து செய்யப்பட வேண்டுமென்று நாம் கோருகிறோம். இராஜீவ் கொலை என்பது அடிப்படையில் ஒர் அரசியல் நடவடிக்கை. இந்திய ஆளும் வர்க்கத்தின் தெற்காசிய விரிவாக்க நோக்கத்திற்கு ஈழத்தமிழ் மக்களின் தன்னுரிமைப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு அதை சீர்குலைத்தது இந்திய அரசு. ‘இந்திய இலங்கை ஒப்பந்தம்’ என்றொரு அரசியல் சதித்திட்டத்தை உருவாக்கி ஈழத்தமிழ் மக்கள் மீது திணித்தது. தன்னுரிமையை மறுக்கும் இந்த ஒப்பந்தத்தைப் புலிகளும் ஈழத்தமிழ் மக்களும் ஏற்க மறுத்தனர். இதையே ஒரு முகாந்திரமாகக் கொண்டு இந்திய இராணுவம் ஈழத்தின் மீது ஒர் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தியது. ஆயிரக்கணக்கான தமிழ் மக்ளும், புலிகளும் கொல்லப்பட்டனர்; பாலியல் வன்முறை உள்ளிட்ட அனைத்து வெறியாட்டங்களையும் இந்திய இராணுவம் நடத்தியது; இறுதியில் தோல்வியுற்று திரும்பியது.

இந்த ஆக்கிரமிப்புப் போரின் எதிர் விளைவுதான் இராஜீவ் கொலை. எனவே அது போர்க்குற்றவாளிக்கெதிரானதொரு நடவடிக்கை. இந்திய இலங்கை ஒப்பந்தத்தால் புனித்ப்படுத்தப்பட்ட தமது ஆக்கிரமிப்பை ஓர் அரசியல் நடவடிக்கையாகச் சித்தரித்துக் கொள்ளும் இந்திய ஆளும் வர்க்கம், இந்த பதில் நடவடிக்கையை மட்டும் அரசியல் வகைப்படாத கிரிமனல் நடவடிக்கையாகச் சித்தரிப்பதும் அதன் அடிப்படையில் தண்டிப்பதும் மோசடியாகும். இராஜீவ் கொலையுண்ட போதும் நாம் இந்தக் கருத்தைத்தான் முன் வைத்தோம். இன்று இந்நால்வரின் தண்டனை ரத்து செய்யப்படவேண்டும் என்பதையும் அதே அடிப்படையில்தான் கோருகிறோம்.

அடுத்து இந்தத் தீர்ப்பும் தண்டனையும் சட்டவிரோதமானது என்கிறோம். ஏற்கனவே 26 பேருக்கு மரண தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பும் தற்போது நான்கு பேருக்கு மரண தண்டனையை உறுதி செய்திருக்கும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் அரசியல் நோக்கத்தின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கொலை பயங்கரவாத நடவடிக்கை அல்ல என்றும், எனவே அச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது; தடா சட்டமும் காலாவதியாகி விட்டது. தற்போது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், தீர்ப்புக்கு ஆதாரமாகக் கொள்ளப்பட்ட சாட்சியங்களும் வாக்கு மூலங்கும் தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்டவைதான்.

மேலும், குற்றம் சாட்டப்பட்டோருக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களுக்கு விடை கூறாமலேயே கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பை அளித்திருக்கிறது உச்சநீதிமன்றம். தீர்ப்பை மீளாய்வு செய்யக் கோரும் மனுவை பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளாமல் மரண தண்டனையை மீண்டும் உறுதி செய்திருக்கிறது. தாங்களே புனிதம் என்று கூறும் சட்ட நடைமுறைகளை உச்சநீதிமன்றம் அலட்சியப்படுத்தியுள்ளது. எனவே சட்டரீதியாகச் செல்லத் தக்கதல்ல என்ற அடிப்படையிலும் இத்தண்டனை ரத்து செய்யப்பட வேண்டுமெனக் கோருகிறோம்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் இந்நடவடிக்கையில் நேரடியாகப் பங்கேற்றவர்களல்ல என்ற போதிலும், சட்ட ரீதியாகவே கூட இது செல்லத்தக்கதல்ல என்ற போதிலும் உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்குவதற்கும், ஆளுநர் பாத்திமா பீவி உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது ஆளுநரின் அதிகாரம் குறித்துத் தானே வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, இப்போது கருணை மனுவை தன்னிச்சையாக நிராகரிப்பதற்கும் காரணம் இருக்கிறது.

“ஈழ விடுதலைக்கு இந்திய அரசு எவ்வளவோ உதவிய போதிலும், அவர்களது நன்மைக்காவே ஒரு ஒப்பந்தத்தை அரும்பாடுபட்டு இராஜீவ் உருவாக்கித் தந்த போதிலும் நன்றி கெட்டத்தனமாகப் புலிகள் அமைதிப்படைச் சிப்பாய்களைக் கொன்றனர்; தேர்தலில் வெற்றி பெற்றிருக்கக் கூடிய ஒப்பற்ற இளம் தலைவர் இராஜீவையும் கொன்றுவிட்டனர்” – என்ற பொய்ப் பிரச்சாரம் அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து இங்கே நடத்தப்படுகிறது. ஈழத்தில் இந்திய அரசு நடத்திய சதிகள், ஒப்பந்தத்தின் மோசடித்தன்மை, ‘அமைதி’ப் படையின் அட்டூழியங்கள் என்பன முதல் அத்தேர்தலில் தோல்வியடையும் நிலையில்தான் இராஜீவ் இருந்தார் என்பது வரையிலான பல உண்மைகள் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. மரணதண்டனையை ஆதரிக்கும் சோ முதல் வாழப்பாடி ராமமூர்த்தி ஈறான அனைவரும் இப்பொய்களையே தம் தரப்பு வாதங்களாக முன்வைக்கின்றனர். எனவே, இப்பொய்ப்பிரச்சாரம் தோற்றுவித்த உணர்ச்சியின் அடிப்படையில்தான் உச்சநீதிமன்றத் தீர்ப்பும், ஆளுநரின் நடவடிக்கையும் அமைந்திருக்கின்றன.

ந்நிலையில் இந்த மரண தண்டனையை ரத்து செய்யக் கோருவோரின் அணுகுமுறை எவ்வாறிருக்க வேண்டும் என்பதைப் பரிசீலிப்பதும் அவசியமாகிறது.

இன்று நால்வரின் மரண தண்டனையை ரத்து செய்வதற்குப் பெரிதும் முனைந்து வருபவர்கள் (அநேகமாக) அனைவருமே, அன்று இராஜீவ் கொலை செய்யப்பட்டபோது ‘கொலையாளி’களை வன்மையாகக் கண்டித்தார்கள்; இராஜீவுக்கு இரங்கல் தெரிவித்தார்கள்; இந்தக் கொலை சி.ஐ.ஏவின் சதி என்றார்கள்; இதற்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை என்றும் நீதிமன்றம் விசாரித்து யாரைக் குற்றவாளி என முடிவு செய்தாலும், அவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கட்டுமென்றும் முன்மொழிந்தார்கள்.

இத்தகைய போக்குகளை விமரிசித்து இராஜீவ் கொலைக்கான நியாயங்களை நாம் எழுதினோம். அதன் விளைவாக நாம் ‘மல்லிகையின்’ (சிறப்புப் புலனாய்வுப் படையின் அலுவலகம்) மணத்தை நுகர நேர்ந்ததுடன், ஏராளமான தோழர்கள் தடா, தே.பா.சட்டம், ராஜத் துரோகம் உள்ளிட்ட வழக்குகளில் சிறை செல்லவும் நேர்ந்தது. எனினும் ‘ஈழத்தமிழன்’ என்று சொன்னாலே வேட்டையாடப்பட்ட ஒரு காலத்தில், ஈழ ஆதரவு எனப் பேசினாலே கைது செய்யப்பட்ட காலத்தில் ‘புத்திசாலித்தனமாக’ மவுனம் சாதிப்பதை விட வெளிப்படையாக பேசுவது நம் அரசியல் கடமை என்ற அடிப்படையில் நாம் அவ்வாறு செய்தோம்.

அன்று அரசியல் பேசாமல் “நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும்” என்று சட்டவாதத்தில் நுழைந்து தப்ப முயன்றவர்களது அணுகுமுறை தவறு என்று மீண்டும் இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசியல் முன்முயற்சியை இழக்காமல் சட்டவாய்ப்புகளைப் பயன்படுத்துவது என்பது வேறு, சட்டவாதத்தையே அரசியலாக்கி கொள்வதென்பது வேறு.

சட்டவாதத்தையே அரசியலாக்கிக் கொள்பவர்கள் இந்திய ஆளும் வர்க்கத்தின் அரசியல், அதன் சட்டம், நிறுவனங்கள் இவற்றின் எல்லைக்குள் நின்று பேச முடியுமேயொழிய இவற்றைக் கேள்விக்குள்ளாக்க முடியாது. எனவேதான் “ஒரு ஆக்கிரமிப்பு போர் குற்றவாளியைக் கொன்றதற்குத் தூக்கு தண்டனையா’ என்ற கேள்வியை இன்றைக்கும் அவர்களால் முதன்மைப்படுத்த இயலவில்லை. நீதிமன்றத்தின் மீது தங்களது விசுவாசத்தைப் பிரகடனம் செய்தவர்கள் தீர்ப்பின் மோசடியை முதன்மைப்படுத்தியும் இயக்கம் எடுக்க முடியவில்லை. அதன்மீது அதிருப்தி தெரிவிக்க மட்டுமே முடிகிறது.

நான்கு பேரைத் தூக்கிலிடுவது அரசியல் ரீதியான அநீதி, சட்டரீதியாகவும் அநீதி என்று போராடுவதற்குப் பதிலாக, “இந்த நால்வருக்காகக் கேட்கவில்லை; மரண தண்டனையே ஒழிக்கப்பட வேண்டும் எனக் கோருகிறோம்” – என்று முதலாளித்துவ மனிதாபிமானத்தின் அடிப்படையில் கோரிக்கை எழுப்பப்படுகிறது. அப்படியானால் “ஆட்டோ சங்கருக்கு ஏன் கேட்கவில்லை?” என்று பார்ப்பனத் திமிருடன் சோ கேட்டால் “அப்போதே கேட்காதது தவறுதான்” என்று பதிலிளிக்கிறார் இரமாதாஸ். இதுமட்டுமல்ல, குறிப்பாக இந்த நால்வருக்காகப் பேசாமல் பொதுவாக மரணதண்டனை ஒழிப்பு பற்றிப் பேசும் கருணாநிதி, வைகோ, போன்றோரை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தி நிர்ப்பந்தம் கொடுப்பதற்குப் பதில் அவர்களது புகழ் பாடப்படுகிறது. மரணதண்டனை விதிக்கப்பட வேண்டிய மதவெறிக் கொலைகாரன் தாக்கரே போன்றோரிடமும் ஆதரவு திரட்டப்படுகிறது.

இறுதியாக சோனியாவே ‘குற்றத்தை’ மன்னித்துவிட்டார். யாரையும் தூக்கிலிட வேண்டுமெனத் தானோ, தன் பிள்ளைகளோ விரும்பவில்லை எனக்கூறிவிட்டார். ‘மிகக் கொடிய கொலையை செய்த குற்றவாளிகளுக்கும்’ இரக்கம் காட்டிய தாயுள்ளத்துக்கு நன்றி தெரிவிக்க வார்த்தையில்லாமல் தடுமாறுவதாகக் கூறியுள்ளார் ராமதாஸ். மரண தண்டனை ரத்தாவதற்கு முன்னால் இராஜீவ் கொலையின் அரசியல் ரீதியான நியாயத்தையும், நால்வரும் நிரபராதிகள் என்ற சட்டபூர்வமான உண்மையையும் ஒரே வாக்கியத்தில் ரத்து செய்து விட்டார் ராமதாஸ்.

ஜெயின் கமிசன் அறிக்கையில் பொய்க்குற்றம் சாட்டப்பட்ட தி.மு.கவை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரி அதற்காக ஐக்கிய முன்னணி ஆட்சியைக் கவிழ்த காங்கிரசு – சோனியாவின் திடீர்க் கருணைக்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

புலிகளின் விரோதம் தேவையில்லை என்பதில் தொடங்கி, இந்த அறிவிப்பு அளிக்கக்கூடிய ‘அனுதாப அரசியல்’ ஆதாயம் வரை, காரணம் எதுவாயுமிருக்கலாம். எனினும் சோனியாவின் மனிதாபிமானம் நால்வரையும் மரண தண்டனையிலிருந்து விடுவிக்கு முன்னால், அவரது கணவரை ஈழ ஆக்கிரமிப்புப் போர்க் குற்றத்திலிருந்து – வெகுசனக் கருத்திலும் – விடுதலை செய்துவிடும். “மரண தண்டனை ஒழிப்பு – மனிதாபிமான” முழக்கத்தின் சாதனை இது.

என்னதானிருந்தாலும் நான்குபேரைத் தூக்கு மேடையில் நிறுத்தி வைத்துக் கொண்டு அரசியல் பேசிக்கொண்டிருக்க முடியுமா என்று சிலர் கேட்கலாம். நான்கு பேரின் உருவத்தில் தூக்குமேடையில் நின்று கொண்டிருப்பது ஒரு அரசியல் நியாயம். மரண தண்டனை ஒழிப்பு எனும் பொதுவான முழக்கம் அவர்களைக் காப்பாற்றக் கூடும். ஆனால் அந்த அரசியல் நியாயத்தை அது தூக்கிலிட்டுவிடும்.

மரணதண்டனை என்பது குற்றவியல் சட்டம் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல; வர்க்க, சாதி, இன ஒடுக்குமுறை நிலவும் சமுதாயத்தில், அந்த ஒடுக்குமுறைகளின் விளைவாக எந்த நீதிமன்ற விசாரணையுமின்றி அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் பலவடிவங்களில் பறிக்கப்படுகின்ற சமுதாயத்தில், அவற்றுகெதிராகப் போராடும் மக்கள் ‘ எதிர் வன்முறையைப் பயன்படுத்தும் உரிமை’யுடனும் நேரடியாகச் சம்பந்தப்பட்டது இந்தப் பிரச்சினை. இந்த உரிமையின் அடிப்படையில் நால்வரின் மரண தண்டனையும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோருகிறோம் – கருணையினால் அல்ல.

_______________________________________________________________

புதிய கலாச்சாரம் தலையங்கம், டிசம்பர் – 1999

_______________________________________________________________

பின்குறிப்பு:

11 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையின் அரசியல் நியாயம் காலம் கடந்தும் சரியான பாதையை  காட்டுவதோடு இன்றும் அதன் தேவை இருக்கிறது என்பதை படிப்பவர்கள் உணர முடியும். எனினும் அன்றைய சூழலிலிருந்து இன்றைய சூழல் கொஞ்சம் மாறியிருக்கிறது.

கருணாநிதி அமைச்சரவை கூடி கருணை மனுவை நிராகரித்ததன் பேரில் கவர்னர் அதற்கு ஒப்புதல் அளிக்க, பின்னர் கருணை மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு இத்தனை ஆண்டுகள் கழித்து காங்கிரசு அரசால் நிராகரிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நளினையை மட்டும் மரணதண்டனையிலிருந்து ரத்து செய்திருக்கிறார்கள். ‘தாயுள்ளம்’ கொண்ட சோனியாவின் உண்மை சொரூபத்தை இப்போது வேறு வழியின்றி உணரும் தமிழின ஆர்வலர்கள் அன்றைக்கு ஏன் அறியவில்லை என்பதை இந்தக் கட்டுரை மூலம் அறியலாம்.

முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர் புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்ட நிலையில் தற்போது ராஜபக்ஷேவின் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்படவேண்டுமென்று ஓரளவுக்கு குரல் எழும்பிய நிலையில் காங்கிரசு அரசு இதைச் செய்யக் காரணம்?

முதலில் பா.ஜ.கவின் வாயை அடைக்க வேண்டுமென்பதற்காக அப்பாவி அப்சல் குருவை தூக்கில் போடவேண்டுமென்று நினைத்த காங்கிரசு கும்பல் அதற்கு நிபந்தனையாக முன்வரிசையில் உள்ள நபர்களையும் தூக்கிலேற்ற வேண்டும் என்பதற்காக ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் தூக்கிலேற்ற துணிந்திருக்கிறது. அப்சல் குரு ஏன் அப்பாவி என்பதை அருந்தததி ராய் தொடங்கி பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் ஆதாரத்துடன் நிரூபித்திருக்கின்றனர். கூடிய விரைவில் அந்தக்கட்டுரைகளில் ஒன்றை வெளியிடுவோம்.

ராஜபக்ஷேவின் மீதான போர்க்குற்றங்களை விசாரிக்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கும் இந்திய அரசு அதற்கு உதவும் விதத்தில் கூட இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

வரிசையாக ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கித் திணறும் காங்கிரசு அரசு தேசத்தின் நிகழ்ச்சி நிரலை மாற்றுவதற்காகவும் இதைச் செய்திருக்க முடியும் என்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அண்ணா ஹசாரேவை வைத்து ஆங்கில ஊடகங்கள் எழுப்பும் ஜனநாயகக் கூச்சலின் பின்னேதான் இத்தகைய நிரபராதிகள் மூன்று பேர் தூக்கிலேற காத்திருக்கின்றனர். இதுதான் இந்தியாவின் உண்மையான ‘ஜனநாயகம்’. அரசியல் நோக்கம் கருதியே அப்சல் குருவும், முருகன், சாந்தன், பேரறிவாளன் நால்வரும் தூக்கிலேற்றப்பட இருக்கின்றனர்.

ராஜீவ் கொலையை அரசியல் ரீதியாக எதிர்கொள்வதை புலிகள் தொடங்கி, தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்கள் வரை விரும்பியதில்லை. ராஜீவ் காந்தி ஒரு போர்க்குற்றவாளி என்பதும், அவரது போர்க்குற்றத்தின் எதிர் நடவடிக்கைதான் அவரது கொலை என்பதும் நாம் இன்றும், இனியும் பேச வேண்டிய அரசியல் என்பதை இந்தக் கட்டுரை அரசியல் அறத்துடன் நிறுவுகிறது.

ஆகவே இவர்கள் மீதான தூக்குத் தண்டனை ரத்துச் செய்யப்படவேண்டும் என்று  நாம் கோருவது ஈழத்தின் மீதான இந்திய ஆக்கிரமிப்பு போரின் குற்றத்தை ரத்து செய்யாமல் இருக்க வேண்டும் என்பதோடு இணைந்தது. ஆனால் இதை பேசுவதற்கு தமிழன ஆர்வலர்கள் யாரும் தயாரில்லை. மேலும் இன்று அம்மாவின் பின்னே அணிதிரண்டு ஈழத்திற்காக குரல் கொடுக்கும் சீமான், அரசியல் அநாதை வைகோ முதல் பலரும் பாசிச ஜெயா 2007-ஆம் ஆண்டு கூட இம்மூவரையும் தூக்கிலேற்ற வேண்டும் என்று பேசியதை எப்படி முழுங்குவார்கள் என்பது தெரியவில்லை. அதனால்தான் அவர்கள் இதை காங்கிரசு அரசின் குற்றமாக மட்டும் பேசி சுயதிருப்தி அடைகிறார்கள். காங்கிரசு கும்பல் முதன்மைக் குற்றவாளி என்பதைக் கூட அவர்கள் ராஜீவ் காந்தி ஒரு போர்க் குற்றவாளி என்பதோடு சேர்த்துப் பேசுவதில்லை.

தூக்குமேடையில் நிற்பது மூன்று பேரின் உயிர்கள் மட்டுமல்ல, ஈழப் போராட்டத்தின் நியாயமும்தான். நாம் இரண்டையும் காப்பாற்ற வேண்டும். ஒன்றுக்கெதிராக ஒன்றை நிறுத்துவதன் மூலம் நாம் ஈழத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஏற்றுக் கொள்வதாக மாறிவிடும். அதனால்தான் நமது கோரிக்கை கருணையினால் அல்ல, அரசியல் நீதியால்.

– வினவு

_______________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

  1. இந்தியாவின் ஜன்நாயகம் ஏன் இன்று முதலாளித்துவ ஜன’நாய்’கமே அப்பாவிகளின் பலிகளில் தான் உயிர்ப்புடன் இருக்கிறது. ஆ ஹூ என்றால் அமெரிக்காவில் தூக்கு தண்டனை இல்லை என்று சொல்லுபவர்கள், அது போர் என்று கிளம்பி போய் கொல்லும் மனிதர்களை கண்டுகொள்வதே இல்லை.

    பாஜாகவை அப்சல் குரு தூக்கு மூலம் வையடைக்க வைக்கலாம், இந்தியாவின் முன்னால் பிரதமர் ராஜிவ் காந்தியை கொன்றவர்களுக்கு தூக்கு என்று இந்திய மக்களின் கவனத்தையும் திசை திருப்பலாம். மீடியாக்களூம் ஒரு மூனு வாரத்திற்க்கு ராஜிவ் காந்தி, அவரின் கொலை, சிபி ஐ விசரணை, விவாத்க்கள், பேட்டிகள், என்று மக்களின் கவனத்தை திசை திருப்பிவிடும்.

    இதற்கெதிராக நிச்சயம் போராடியே ஆக வேண்டும் ஆனால் நேரமில்லை, இருக்கும் குறைந்த நேரத்தில் ஒவ்வொருவரும் இந்த அரசியலை பற்றி பேச வேண்டும் எழுத் வேண்டும், பதிவு செய்ய வேண்டும்.

    நான் சில நாட்களாக சந்திக்கும் மக்கள் கூட ராஜிவ் கொலைக்கு இவர்களை தூக்கில் போடாவேண்டும் என்கிறார்கள், ஆனால் அதே நேரம் ஊழலை திசை திருப்ப தான் இந்த நேரத்தில் போடுகிறார்கள் என்பதை அவர்களே சொல்லுகிறார்கள்.

  2. இவர்கள் சொல்லும் வாதம் “இம்மூவரும் அப்பாவிகள் , இதற்கும் அவர்கட்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை ” என்று சொல்வதில் இருந்து ,
    “ராஜீவ் கொலை குற்றமே , ஆனால் இவர்கள் செய்யவில்லை ” என்று சொல்வது போல உள்ளது . சரியான நேரத்தில் சரியான
    கட்டுரை தோழர் .

  3. மனிதம் காக்க மரண தண்டனை ஒழியட்டும்,
    மடியட்டும் மரண தண்டனைகள்
    என பொதுவாக அரசியல் ஏதும் இல்லாதவற்றை பேசி திரியும் சீமான் போன்ற ஓட்டுப்பொறுக்கிகளையும், சுப.வீ போன்ற ஒட்டுண்ணிகளையும் திரை கிழிகிறது கட்டுரை.

    அரசியல் கலக்காமல் தமிழின வெறியை கிளப்பியும், தகவல்களை மட்டும் கூறியும் பிழைப்பு நடத்தும் கூட்டத்தை விரட்ட சரியான கட்டுரை வெளியிட்டு உள்ளீர்கள்.

    • இளமாறன் அண்ணே
      இனப் பற்றுக்கும், இன வெறிக்கும் என்னென்ன வித்தியாசங்கள் உள்ளன?

  4. யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதி காக்கும் படையினரால் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த யுத்தக் குற்றங்கள் கனடாவின் நசனல் போஸ்ட் பத்திரிகையில் நேற்று வெளியாகி உள்ளன.

    பருத்தித் துறை பிரதேசத்தை சொந்த இடமாக கொண்டவரும், கனடாவில் தற்போது வாழ்ந்து வருபவருமான ஆர். சுரேந்திரன் என்பவர் இந்திய படையினரின் அட்டகாசங்களை நேரில் கண்டிருக்கின்றார்.

    நசனல் போஸ்ட் பத்திரிகையின் வாசகர் என்கிற வகையில் பத்தி ஒன்றை எழுதி இருக்கின்றார்.

    இவர் இதில் முக்கியமாக தெரிவித்து உள்ளவை வருமாறு:-

    ”1987 ஆம் ஆண்டு நான் பருத்தித் துறையில் இருந்தேன். யுத்த டாங்கிகள் சகிதம் இந்திய படையினர் எமது நகரத்துக்குள் பிரவேசித்தனர். தமிழர்கள் அவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு வழங்க தயாராக இருந்தனர்.

    ஏனெனில் சிங்கள படையினரிடம் இருந்து எம்மை காப்பாற்ற வந்திருந்த இரட்சகர்கள் என்று நம்பி இருந்தனர். ஆனால் அவர்கள் இரட்சகர்கள் அல்லர். இராட்சதர்கள். புதிய யுத்தம் ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராக தொடங்கினார்கள்.

    அப்பாவித் தமிழ் சிவிலியன்களுக்கு எதிராக துப்பாக்கிகளை பயன்படுத்தினார்கள். கொன்றார்கள். நான் சிங்கள இராணுவத்தினர்தான் உலகில் மிக கொடூரமான படையினர் என்று முன்பு நினைத்திருந்தேன். ஆனால் இந்திய படையினர் மிக மிக பயங்கரமானவர்கள், மோசமானவர்கள்.

    சில காலம்தான் இவர்கள் யாழில் நிலை கொண்டிருந்தனர். ஆனால் சிங்கள இராணுவத்தினர் ஒட்டுமொத்தமாக இது வரை புரிந்திருக்கும் தமிழின படுகொலைகள் மற்றும் கற்பழிப்புக்கள் ஆகியவற்றை காட்டிலும் இந்திய படையினர் மேற்கொண்டிருந்த படுகொலைகளும் கற்பழிப்புக்களும் ஏராளம்.

    இந்திய படையினரால் கொல்லப்பட்டவர்களில், கற்பழிக்கப்பட்டவர்களில் எனது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரும் கணிசமான தொகையில் உள்ளனர். இன்றும் என்னை ஒரு மிக பயங்கரமான கொடூரம் சித்திரவதை செய்து கொண்டே இருக்கின்றது.

    என்னுடன் ஒரே வகுப்பில் படித்திருந்த நண்பி ஒருவர் இந்திய படையினரால் கூட்டாக கற்பழிக்கப்பட்டார். அவரது மார்பகங்களை அறுத்து எடுத்து இருந்தனர். அவருடைய நிர்வாண உடல் வீதியில் வீசி இருந்தனர்.

    அச்சடலத்தின் மேல் கைக்குண்டு வீசி இருந்தனர். 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 ஆம் திகதி ஒரு தீபாவளிப் பெருநாள். ஆனால் அது யாழ்ப்பாண மக்களுக்கு மிகவும் துன்பகரமான நாள்.

    யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய படையினர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி இருந்தனர். கொல்லப்பட்டவர்களின் சடலங்களை மறுநாள் எடுத்து எரித்து விட்டனர்.

    வைத்தியசாலையில் வைத்து படுகொலை செய்யப்பட்டிருந்த அப்பாவித் தமிழர்களின் எண்ணிக்கை 68.” இவ்வாறு இப்பத்தி தொடர்கின்றது.

    நன்றி : கனடாவின் நசனல் போஸ்ட்

  5. //மரணதண்டனை என்பது குற்றவியல் சட்டம் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல; வர்க்க, சாதி, இன ஒடுக்குமுறை நிலவும் சமுதாயத்தில், அந்த ஒடுக்குமுறைகளின் விளைவாக எந்த நீதிமன்ற விசாரணையுமின்றி அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் பலவடிவங்களில் பறிக்கப்படுகின்ற சமுதாயத்தில், அவற்றுகெதிராகப் போராடும் மக்கள் ‘ எதிர் வன்முறையைப் பயன்படுத்தும் உரிமை’யுடனும் நேரடியாகச் சம்பந்தப்பட்டது இந்தப் பிரச்சினை. இந்த உரிமையின் அடிப்படையில் நால்வரின் மரண தண்டனையும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோருகிறோம் – ///

    என்ன பெரிய ‘எதிர் வன்முறை’ ? குற்றவாளிகள் எல்லோருமே இந்த ‘எதிர் வன்முறையாளர்களா’ என்ன ? சரி, உங்க கையில் அதிகாரம் கிடைத்தால், எதிர்த்து பிரச்சாரம் செய்பவர்களை எல்லாம் மரண தண்டனை அளித்து தண்டிக்கவே மாட்டீகளா என்ன ? கேக்கறவன் கேனையன்னா என்ன வேணுமானாலும் பேசுவீகளே. நீங்க ‘தீர்வா’ சொல்லும் அமைப்பில், என்னவிதமான ‘சட்டவாதம்’ கொண்டுவருடீர்கள் என்று தான் தெரியுமே. ஆனா அதை பற்றி எல்லாம் சர்வஜாக்கிரதையாக பேசவே மாட்டீகளே.

    • உங்க கையில் அதிகாரம் கிடைத்தால், எதிர்த்து பிரச்சாரம் செய்பவர்களை எல்லாம் மரண தண்டனை அளித்து தண்டிக்கவே மாட்டீகளா என்ன ?//// இந்த கேள்விக்கு பதில் என்ன தோழர்களே….

  6. //என்ன பெரிய ‘எதிர் வன்முறை’ ? குற்றவாளிகள் எல்லோருமே இந்த ‘எதிர் வன்முறையாளர்களா’ என்ன ? சரி, உங்க கையில் அதிகாரம் கிடைத்தால், எதிர்த்து பிரச்சாரம் செய்பவர்களை எல்லாம் மரண தண்டனை அளித்து தண்டிக்கவே மாட்டீகளா என்ன ? கேக்கறவன் கேனையன்னா என்ன வேணுமானாலும் பேசுவீகளே. நீங்க ‘தீர்வா’ சொல்லும் அமைப்பில், என்னவிதமான ‘சட்டவாதம்’ கொண்டுவருடீர்கள் என்று தான் தெரியுமே. ஆனா அதை பற்றி எல்லாம் சர்வஜாக்கிரதையாக பேசவே மாட்டீகளே.//

    இதுக்கு பதில் சொன்ன ஒவ்வொரு முறையும் ஓடிப் போனவர் நீங்க. இங்க வந்து உதாரா?

    • அசுரன் அவர்களே அதியமான் டவுசரை கழட்டிவிடுவது சரியல்ல, அவரது கம்பெனி திவாலாகி அவர் இப்போது தொழிலாளி ஆகிவிட்டார்…

    • //இதுக்கு பதில் சொன்ன ஒவ்வொரு முறையும் ஓடிப் போனவர் நீங்க. இங்க வந்து உதாரா?
      // சும்மா புளுகாதீங்க அசுரன். நீர் தான் ஒவ்வொரு முறையும் மைய்ய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடிப்பொனவர் என்கிறேன் நான். வாசகர்கள் சொல்லட்டும், யார் ஓடிபோனவர் என்று.

      பல மூத்த மார்க்சியர்களிடம் பேசும் வாய்ப்பு சில ஆண்டுகளாக கிடைத்தது. பல தரப்பட்ட குழுக்கள், சார்புகள் உடையவர்கள். யாரும் சோவியத் ரஸ்ஸியாவில், செஞ்சீனாவில் நடந்த மீறல்களை மறுக்கவில்லை. அதை நியாயப்படுத்திதான் பேசினர். அல்லது தவறுகளெ என்றும் பேசினர். வினவு குழுவும், நீரும் மட்டும் தான் இன்னும் நெருப்பு கோழி மண்ணுக்குள் தலையை மறைத்து கொண்ட கதையா தொடர்கிறீக.

      பாட்டாளிவர்க அரசில், ‘பூஸ்வா ஆதரவாளர்கள், அனுதாபிகள்’ என்று முத்திரை குத்தப்பட்டவர்களுக்கு தண்டனை அளித்தே ஆகவேண்டிய கட்டாயம் இருக்கும். வேறு வழியே இல்லை. கருத்து சுதந்திரம் எல்லாம் சாத்தியமே இல்லை.

  7. நேரத்திற்கேற்ற நேர்மையான கட்டுரையை எழுதிய வினவுக்கு நன்றி. மரணதண்டனைக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை தமிழக அரசு நடத்த முதலமைச்சர் உத்தரவிட வேண்டும். அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து இதற்காகப் போராட வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. தோழர்கள் கழக உடன்பிறப்புகள் என ஒட்டு மொத்த தமிழர்களும் கடுமையாகப் போராடியே உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்க வேண்டும்,ஒன்றுபடுங்கள் தோழர்களே,நண்பர்களே….

  8. தோழர்களே,

    கருணை என்ற அடிப்படை மனித உணர்ச்சி இல்லாமல் ஒரு அரசியல் இயக்கம் அல்லது அரசியல் கோரிக்கை எப்படி விரிந்த மக்கள் திரளின் ஆதரவை பெற முடியும். தனது இளமையை சிறையில் தொலைத்த பேரறிவாளனையும் வெளியே அவரின் விடுதலைக்காக பில்லர் டூ போஸ்ட் ஓடிக் கொண்டிருக்கும் அறுபதை கடந்த அவர் அம்மா அற்புதம் அம்மாளையும் நமது மனக் கண்ணில் நிறுத்தும் போது வரும் கருணை என்ன இழிவான உணர்ச்சியா? ராஜீவ் கொலை நியாயத்தை ஈழத் தமிழர்களிடம் சொல்வதைப் போன்ற எளிமையான ஒன்றல்ல, தமிழகத் தமிழர்களுக்கு புரிய வைப்பது. பிராபாகரன் பெயரை இங்கு சூட்டுவது போன்றே ராஜீவ் பெயரும் பரவலாக குழந்தைகளுக்கு சூட்டப்படுகிறது. ராஜீவ் காந்தி நகர் என்ற பெயரில் தெருக்களை பல இடங்களில் காணலாம். ராஜீவ் கொலை நியாயத்தை இங்கு பேசுவது குஜராத் மக்களுக்கு இந்து மதவெறியின் அபாயம் குறித்து வகுப்பு எடுப்பது போன்ற சிக்கலான ஒன்று. பேரறிவாளன் மற்றும் நளினி, முருகன் ஆகியோர் விடுதலைக்கு ஆதரவாக கொடுக்கப்படும் குரல்களுடன் நாம் இணைய முடிகின்ற ஒரு புள்ளியை அடையாளம் காண்பதே அந்த முழக்கங்களுடன் முற்றிலுமாக வேறுபாடு பாராட்டுவதை விட காலப் பொருத்தமான ஒன்றாக நான் கருதுகிறேன்.

    • அறவியல், அறிவியல் சார்ந்த பதில், நல்லது சுகதேவ். நன்றி முரசு.

  9. நான்கு பேரைத் தூக்கிலிடுவது அரசியல் ரீதியான அநீதி, சட்டரீதியாகவும் அநீதி என்று போராடுவதற்குப் பதிலாக, “இந்த நால்வருக்காகக் கேட்கவில்லை; மரண தண்டனையே ஒழிக்கப்பட வேண்டும் எனக் கோருகிறோம்” ### சிறந்த கட்டுரை நன்றி….அநீதிக்கு எதிராக போராடுவதை விட்டு விட்டு பொதுவாக மரண தண்டனையை எதிர்ப்பது ஏன் என தெரியவில்லை….

  10. கருணையினால் அல்ல! ஆம்,கருனையால் அவர்களுக்கு உயிர் பிச்சை தேவையில்லை.
    அவர்கள் சொல்லக்கூடிய ஏற்ப்படுத்திய சட்டதிட்டபடியே நடந்தாலும் துாக்கு தண்டனை
    இல்லையே!

  11. இன்று ராஜபக்சேவை போர் குற்றவாளி என சொல்லி சர்வ தேச நீதி மன்றத்தில் ஏற்ற வேண்டும் சொல்லும் வைகோ, சீமான், பழ.நெடுமாறன், ஜெயலலிதா போன்றவர்கள் நேர்மையாக 1987 ஆகஸ்டு மாதம் முதல் 1990 மே மாதம் ராஜிவின் கொலை-கற்பழிப்பு படை தமிழீழத்தில் நடத்திய போர் குற்றங்களுக்காக ராஜிவ், கே.பந்த், நட்வர் சிங், ஜே.என்.தீட்சித், டி.ஆர்.கார்த்திகேயன், எம்.கே.நாரயணன், ஜெனரல் சுந்தர் சிங் போன்ற போர் குற்றவாளிகளை… சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்தி நீதி கேட்பார்களா?

    போர் குற்றம் செய்ததில் ராஜிவும்… ராஜபக்சேவும் ஒரே நிலையில் வைக்க வேண்டியவர்களே… ஆனால் ஒருவர் புனித தன்மையோடு… இன்னொருவர் போர் குற்றவாளியாகவும் பார்ப்பவர்களின் பார்வை குற்றமானது…

    நியாயமாக அரசியல் ரீதியில் செயல்படாமல் இருந்த தமிழ் தேசிய அமைப்புகள்… இப்போதும் ஹிந்திய தேசிய பாதுபாப்பு ஆலோசகர்கள் போலவே பேசி கொண்டு இருக்கின்றனர்…

    ராஜிவின் மரணத்தை சரி என சொல்பவர்களை எல்லாம் தூக்கில் போட வேண்டும் சொல்பவர்களான காங்கிரஸ், ஜெ. கட்சியினர்… 1991 ஜூன் மாதம் நடந்த தேர்தலில் திமுகவும், கருணாநிதியும் ராஜிவை கொலை செய்து விட்டார்கள் என பெரிய அளவில் பிரச்சாரம் செய்த போதும்… தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஓட்டு போட்ட 30% தமிழக மக்களையும் குற்றவாளிகள் என சொல்வார்களா?

    இப்போது தண்டனை வழங்கபட்டிருப்பது எல்லாம் சட்டத்தின் படி அல்ல… இங்குள்ள நீதி அமைப்புகள் ராஜிவ் குடும்பத்தின் மீது காட்டும் ராஜ விசுவாசத்தின் படியே தீர்ப்பு கொடுத்துள்ளார்கள்… 1996இல் தீர்ப்பு வழங்கிய நவநீதம் எனும் தடா கோர்ட் நீதிபதி எதன் அடிப்படையில் 26 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கினார் என யாரும் கேள்வி கேட்க வில்லையே? அந்த விசுவாசத்தின் மூலம் அந்த நீதிபதி உயர் நீதி மன்ற நீதிபதியாகி பலன் பெற… 26 பேரை கொலை செய்ய தீர்ப்பு எழுதினார்… 1995இல் ஆட்டோ சங்கர் குழுவிற்கு தூக்கு தண்டனை வழங்கிய ராமன் எனும் பார்ப்பன நீதிபதி… பணி மூப்பை மீறி உயர் நீதி மன்ற நீதிபதி ஆன கொடுமையும் நடந்தது… அப்போது நியாயமாக பணி மூப்பின் அடிப்படையில் உயர் நீதி மன்ற நீதிபதி ஆக வேண்டிய கோபால்சாமி எனும் சென்னை பெரு நகர முதன்மை நீதிபதி… பதவியை ராஜினாமா செய்து சென்றார்…

    நீதி துறை தேவை என்றால் லஞ்சம் வாங்கி கொண்டு ஜெயலலிதா போன்ற வசதி படைத்தவர்களை மன்னித்து விடுவிப்பதும்… ராஜ விசுவாசத்தோடு தண்டனை வழங்குவதும்… நியாயமான தீர்ப்பாக இருப்பதில்லை… உண்மையில் ராஜிவ் மரண வழக்கை.. ராஜிவின் போர் குற்றங்களோடு சேர்த்து… சர்வதேச நீதி மன்றத்திற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும்… ராஜிவ் ஈழத்தில் மட்டுமல்ல… டெல்லியிலும்… பஞ்சாபிலும்… சீக்கியர்களை படுகொலை செய்த கொலைகார கூட்ட தலைவன்… பாதிக்கப்பட்ட சீக்கியர்களும், தமிழர்களும் ராஜிவை சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்தி இருந்தால்… இன்று அவர் சந்ததியான ராகுல், சோனியா, பிரியங்கா போன்றவர்களை போர் குற்றவாளி வர்க்கம் என தண்டித்திருக்க முடியும்…

  12. என்ன பெரிய ‘எதிர் வன்முறை’ ? குற்றவாளிகள் எல்லோருமே இந்த ‘எதிர் வன்முறையாளர்களா’ என்ன ? சரி, உங்க கையில் அதிகாரம் கிடைத்தால், எதிர்த்து பிரச்சாரம் செய்பவர்களை எல்லாம் மரண தண்டனை அளித்து தண்டிக்கவே மாட்டீகளா என்ன ? கேக்கறவன் கேனையன்னா என்ன வேணுமானாலும் பேசுவீகளே. நீங்க ‘தீர்வா’ சொல்லும் அமைப்பில், என்னவிதமான ‘சட்டவாதம்’ கொண்டுவருடீர்கள் என்று தான் தெரியுமே. ஆனா அதை பற்றி எல்லாம் சர்வஜாக்கிரதையாக பேசவே மாட்டீகளே.

    அதியமான் இவர்கள் குற்றவாளி என்றாலும் கூட அதற்கு அதிகப்படியான தண்டனையை அனுபவித்து விட்டார்கள் தானே? இன்னும் ஏன் இந்த கொடூரம்? ஒருவனின் வாழ்க்கையில் 20 வருடங்கள் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகின்றதா? ராஜீவ் காந்தி படுகொலை நடந்த இடத்திற்கு அருகே பேரூந்தில் நாலைந்து கீமீட்டருக்குள் நானும் அப்போது இருந்தேன். அடுத்த 20 வருட வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஒவ்வொன்றையும் பார்க்கும் போது பேரறிவாளன் வாழ்க்கையில் எத்தனை விசயங்களை இழந்து இருப்பார் என்று என்னால் யோசிக்க முடிகின்றது. ரகோத்தமன் சொன்னமாதிரி ஒரு புரிந்து கொள்ள முடியாத அல்லது கண்டு பிடிக்க முடியாத அந்த குற்றச்சாட்டு அடிப்படையில் என்கிற போது இந்திய இறையாண்மை குறித்து சற்று சந்தேகமாகத்தான் இருக்கு நண்பா?

    • Jothiji,

      I was refering to the ‘legal system’ and capital punishments that will be and was meted out by a ‘dictatorship of the prolatariat’ ; nothing to do with Rajiv assasinations. Perarivalan seems to be framed unjustly and needs to be released.
      the following is my arguments at FB :

      பேரரிவாளனின் குற்றம் தான் சந்தேகம். மற்ற இருவர் மீது குற்றம் பற்றி சந்தேகம் உள்ளதா என்ன ? ராஜிவ் மட்டும் கொல்லப்படவில்லை. கூட 24 நான்கு அப்பாவிகளும் தான். அதில் ஒரு சிறுமியும் தான். மரண தண்டனை வேண்டுமா என்பது வேறு விசியம். ஆனால் அப்பாவிகள் என்று சொல்வது..

      @அருள் : 1991 மே அன்று சொல்லப்பட்ட மற்ற 24 அப்பாவிகள் ‘யாரோ’ தானே ? உங்க குடும்பத்தினர் அல்லவே. அதனால் அப்படி தான் பேசுவீக. ஆனால் மரண தண்டனை வேண்டுமா இல்லையா என்று என்னால் சொல்ல முடியவில்லை.

      அவர்களுக்கு மரண தண்டனை கூடாது என்று வாதாடுங்க. பொது மன்னிப்பு வழங்கி இலங்கைக்கு திருப்பி அனுப்ப சொல்லி கேளுங்க. மரண தண்டனையே கூடாது என்று சொல்லுங்க. சரி. ஆனால் ‘அப்பாவிகள்’ என்று சொல்வதை ஏற்க்கமுடியாது. ராஜிவ் கொலைக்கு இவர்களும் உடந்தைதான். மற்ற 24 அப்பாவிகள் கொல்லப்பட்டதற்க்கும் இவர்கள் காரண்ம் தானே ?

      ‎//ராஜீவ் ஒன்றும் உலக மாகா யோக்கியன் கிடையாது.// ஒத்துக்கிறேன். ஈழத்தில் இந்திய அமைதி படை செய்த அக்கிரமங்களும் மிக கொடுமையானவை தான். ஆனால் இதெல்லாம் காரணமாக காட்டி இங்கு மனித குண்டை கொண்டு 25 பேர்களை கொன்றால், அதற்க்கு தண்டனை கிடைக்கவே செய்யும்.

      ‎//அது ஒரு அரசியல் படுகொலை// அப்படி தான் நானும் முதலில் நம்பினேன். 1991 தேர்தலில் ராஜிவ் மீண்டும் வென்று பிரதமாரானால், அய்.பி.கே.எஃப் அய் அனுப்பி புலிகளை முற்றாக அழித்துவிடுவார் என்ற ‘அச்சம்’ தான் காரணம் என்றும் முதலில் கருதினேன். ஆனால்

      ‎1991க்கு பின் புலிகள் திடிரென் பெரும் ‘பலம்’ பெற்றனர். பெரும் ஆயுதங்கள், பணம் பெற்றனர். சி.அய்.ஏ வின் கூலிப்படையாக செயல்பட்டிருக்கலாம் என்று ஒரு கோணம் உள்ளது. 1990 முதல் ஈராக் போரின் போது அமெரிக்க விமானங்கள் இந்தியாவில் எரிபொருள் நிரப்ப ராஜிவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அன்று பனிபோரும் இருந்த காலம். சோவிய ரஸ்ஸியாவும் இருந்தது…

      • தோழர், அப்பாவி மக்கள் 24 பேர் இறந்துவிட்டார்கள் என்பதை யாரும் மறைக்கவோ மறுக்கவோ வேண்டியதில்லை. போர்த்தந்திரப்பிழை. தவறு தான். இதை யாரும் மறுக்கவேண்டியதில்லை. அதற்கான சட்டம், தண்டனை இருக்கத்தான் செய்கின்றது. என்ன செய்வது.
        ஆனால் பேரறிவாளன், சாந்தன், முருகன் போன்றோரை 1999-யிலேயே தண்டித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் மேலும் 11 ஆண்டுகள் சிறையில் தனிமை அறையில் உள்ளம், உடல் பாதிக்கப்பட்டிருக்க வேண்டாமே. இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் சரத்து 21-ன் படி வாழும் போது நாகரிகமாக வாழும் உரிமை எல்லோருக்கும் இருக்கின்றாது. மரண தண்டனைக் கைதிக்கும் இருக்கின்றது. அது இப்பொழுது இம்மூவருக்கும் மறுக்கப்பட்டுள்ளது.இத்தனை ஆண்டுகள் அவர்கள் பல்வேறுவிதமாக தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அது அவர்களின் வாழ்வுரிமையை மீறிய அநீதி செயல்.
        உச்சநீதிமன்றம் தனது பல்வேறு தீர்ப்புகளில் மரணதண்டனை உறுதிசெய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்றால் தூக்கு தண்டனை ரத்து செய்து இருக்கின்றது.
        அவ்வகையில் இமூவருக்கும் நியாயம் வழங்க வேண்டும். புரட்சி பெரியார் முழக்கத்தில் விடுதலை இராஜேந்திரன் இது தொடர்பாக சிறப்பான கட்டுரை எழுதி உள்ளார். படியுங்கள்.
        தவறு, குற்றம், அரசியல், கருணை இது போன்ற பெரிய வார்த்தைகளையெல்லாம் விடுங்கள். சட்டப்படியே, அவர்களுக்கான நீதி மறுக்கப்பட்ட சூழலில், உரிமை மீறப்பட்டிருக்கின்ற சூழலில், அவர்களுக்கு மரண தண்டனை வழங்க முடியாது, கூடாது. நன்றியுடன் முரசு.

  13. பச்சாதாபத்துக்கு இங்கே இடமில்லை. அரசியல் ரீதியாக பார்க்கும் போது கட்டுரையில் சொல்லப்பட்ட கருத்து மிகச் சரியானது. அரசிலுக்காக தூக்குமேடை ஏறுவதை வரலாறு மறக்காது. பச்சாதாபத்தில் உயிர் பிச்சை பெறுவதை வரலாறு மன்னிக்காது.

  14. //ராஜீவ் கொலையை அரசியல் ரீதியாக எதிர்கொள்வதை புலிகள் தொடங்கி, தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்கள் வரை விரும்பியதில்லை. ராஜீவ் காந்தி ஒரு போர்க்குற்றவாளி என்பதும், அவரது போர்க்குற்றத்தின் எதிர் நடவடிக்கைதான் அவரது கொலை என்பதும் நாம் இன்றும், இனியும் பேச வேண்டிய அரசியல் என்பதை இந்தக் கட்டுரை அரசியல் அறத்துடன் நிறுவுகிறது.//

    இது வரை எனக்கு புரியாத ஒன்றாக இருந்த ராஜீவ் காந்தியின் கொலையை எப்படி அணுகுவது என்பது இப்போதுதான் புரிந்தது

  15. ராஜீவ்காந்தி செத்ததில் நியாயம் இருக்கிறது. சரி. அந்த மூவருக்கும் மரண தண்டனை தவறு. சரி. ஆனால் தாக்கரே, மோடி, ஏன் ராஜபக்ஷேவுக்கே மரண தண்டனை கோருதல் சரியா.

    இன்னும் எனக்கு விளங்கவில்லை.

    • Thyagi Binladen, Maoists, Prabhakaran ivargalukkellam Prime minister, president padhavi tharalam illa???
      Indha 4 perukkum foreign ministry, IT, Finance, Home ministry padhavi tharalam pola irukke…. adhukku romba thaguthiyaanavaragal pola theriyudhu paarthal

  16. \\நான்கு பேரின் உருவத்தில் தூக்குமேடையில் நின்று கொண்டிருப்பது ஒரு அரசியல் நியாயம். மரண தண்டனை ஒழிப்பு எனும் பொதுவான முழக்கம் அவர்களைக் காப்பாற்றக் கூடும். ஆனால் அந்த அரசியல் நியாயத்தை அது தூக்கிலிட்டுவிடும்.\\

    வினவுக்கு எப்போதுமே ராஜதந்திரம் போதாது. நான்கு பேரின் உயிரை முதலில் காப்பாற்றி விட்டு பிறகு அரசியல் ஞாயம் பேசலாம். அவர்கள் 20 ஆண்டுகளாக உயிருடன் மரண தண்டனை எதிர்கொண்டு வாழ்ந்த பொது பேசி இருக்க வேண்டிய ஞாயம் இது. இப்போது கொல்லப்பட்டால் போவது அவர்களின் உயிர் மட்டுமல்ல தமிழ் தேசிய இனத்தின் மிச்சமிருக்கும் மான மரியாதையும் தான்,

  17. தோழர்களே இது நல்லதொரு விவாதப்பொருள். நமக்குத் தெரிகிறது இந்த சமூகத்தில் நிறைய விசக்கிருமிகளை அழிக்கவேண்டுமென்று. தூக்கு மேடையில் 3 அப்பாவிகளின் உயிர். ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக தூக்கிலிடவேண்டுமென்று தமிழக தமிழ் உள்ளங்கள் குமுறும்போது மய்ய அரசு இப்படிப்பட்டதொரு காயை நகர்த்தியிருக்கின்றது. இது காய் நகர்த்தல் வேலை தான். இப்போது இத்தனை நாள் எதிர்த்துக்கொண்டிருந்த சோனியா அன்னையாகிவிட்டார். இந்தத் தூக்கு தண்டனையை இரத்து செய்ய மய்ய அரசிடன் கெஞ்ச வேண்டியிருக்கும். அப்பொழுது ராஜபக்சே விவகாரத்தை ஆஃப் பண்ண மய்ய அரசு பணிக்கும். என்ன செய்வது? கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. எதை விட்டுக்கொடுப்பது? மரண தண்டனையையே ஒழிக்க வேண்டுமென்று புதிதாக சில முயற்சிகள். தமிழா சோரம் போய்விடாதே. ராஜ்பக்சே போர்க்குற்றவாளியாவது எல்லாம் இந்தியா சீனா ரசியா இருக்கும் வரை நடக்காது. அந்த வேலையை ஈழத்தமிழர்களும் எஞ்சியிருக்கும் ஈழவிடுதலைப் போராளிகளும் செய்வார்கள். நாம் ஒன்றும் பெரியதாய் கிழிக்கவில்லை, கிழிக்கவும் போகப்போவதில்லை. மூவரின் தூக்குக்குக் கயிறை அறுத்தெடுக்க செய்ய வேண்டிய நாடகத்தை அரங்கேற்று. இதுவும் ஒரு வகையான காய் நகர்த்தல் தான். பிறகு ஏதாவது யோசிக்கும் வேளையில் ஏதாவது உதித்தால் சொல்கிறேன். நன்றி.

  18. என் அருமை தம்பிகளே அண்ணன்களே போர் குற்றம் என்றால் அது அமைதிப்படையும் உள்ளடங்கியதாக இருக்க வேண்டும்

  19. உப்பை தின்னவன் தண்ணி குடிக்கணும் தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிக்கனும்
    இது ராஜுவுக்கும் இவர்களுக்கும் பொருந்தும்

  20. மனிதம் காக்க ,அப்பாவிகள் நிம்மதியாக வாழ மரண தண்டனை நீடிக்கட்டும் .நீங்கள் வேண்டுமானால் உங்களது உறவினரை கொன்றவர்களிடம் மனித நேயம் காட்டுங்கள்.உங்களைக் கொன்றவர்களை மரணதண்டனையிலிருந்து காப்பாற்ற உங்களது குழந்தைகள் போராடட்டும்.,.அதுவரை மனிதநேய பக்தியை கொஞ்சம் ஒதுக்கி வையுங்கள் .வருமான வரி ஏய்ப்பு செய்யும் சினிமாக்காரர்கள் முதல் பலர் அண்ணா ஹசாறேவுக்கு ஆதரவு கொடுத்தது போல் உங்களது மனிதநேய வேஷத்தை காட்ட வேண்டாம்..உங்களது கொலை கார நேயத்தை கொஞ்சம் ஒத்தி வையுங்கள்.

  21. http://www.tehelka.com/story_main50.asp?filename=Ne100911sacred.asp

    சங்கரராமன் கொலை வழக்குல இருந்து தப்பிக்க, சாட்சிகளை கலைக்க, ஆறு ஆண்டுகளுக்கு முன்னர், காவல் துறை அதிகாரியிடம், சுமார் நான்கு கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டது. பார்ப்பன அம்பிகளே, கொலை குற்றவாளி ஜெயந்திரனை தூக்கில் போட்டிங்களா ?

    இப்போ, நீதிபதியிடம் விலை பேசுறான். பார்ப்பன அம்பிகளே, கொலை குற்றவாளி ஜெயந்திரனை தூக்கில் போட்டிங்களா ?

    இந்தியாவில் பணக்காரனுக்கு (சங்கர மடத்துக்கு) ஒரு நீதி, ஏழை பேரறிவாளனுக்கு ஒரு நீதி. என்ன கொடுமை ?

Leave a Reply to அசுரன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க