மைக்கேல் மூரின் Capitalism: A Love Story (2009) – ஆவணப்படம் – அறிமுகம் !

29



அமெரிக்காவின் மிக முக்கிய வீதி, உலகின் மிகப் பெரியவங்கியின் பிரதான கிளையின் வெளியே நின்றபடி தன் கையில் இருக்கும் ஒலிப்பெருக்கியில் பேசத் துவங்குகிறார் ஒருவர்:

“நான் இந்த வங்கியின் அதிகாரிகளை மக்கள் சார்பில் கைது செய்ய வந்திருக்கிறேன். நீங்களாகவே வந்து சரணடைந்துவிடுங்கள். உங்களுடைய உயிருக்கு எந்த பாதிப்பும் வராது”

பின்னர் அந்த பெரிய கட்டடங்களை சுற்றி “CRIME SCENE DO NOT PASS” (குற்றம் நடந்த இடம் யாரும் வராதீர்கள்) என்ற வாக்கியம் தாங்கிய டேப்பை ஒட்டுகிறார் அவர். அந்த மனிதர் மைக்கல் மூர் என்ற அமெரிக்க ஆவணப்பட இயக்குனர்.

ஒரு நிமிடம் நம்மை திகைக்க வைக்கும் இந்த காட்சி மைக்கல் மூர் இயக்கிய திரைப்படமான  Capitalism A Love Story” யின் இறுதிக்காட்சி. உலக மக்களின் ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டிருக்கும் முதலாளித்துவ பொருளாதாரத்தை அம்பலப்படுத்திய மிக முக்கிய திரைப்படம் இது.

சமூகத்தில் ஒரு படைப்பாளியின் கடமை என்ன?

சுரண்டப்படுபவர்களை ஒன்று திரட்ட தன் படைப்பை கருவியாக்குவதா? அல்லது சுரண்டித் திரியும் பொறுக்கிகளை மகிழ்விப்பதா?

மேலும் தானும் ஒரு சுரண்டல்வாதியாகி விட்டபின்,  மக்களின் பணத்தில் கொழுத்து திரியும் ஒரு படைப்பாளியின் உன்னத படைப்பே, மக்களை போதையில் ஆழ்த்தி அவர்களை மேலும் சுரண்டுவதாக இருக்கிறது. இது தான் இன்றைய உன்னத உலக படைப்பாளிகளின் சாதனை!

மக்களை ஒன்று திரட்டவும், சமூகத்தின் மிகப் பெரிய ஆவணமாகவும், சமூக முன்னேற்றத்திற்கு இன்றியமையா தூண்டுகோலாகவும் இருக்க வேண்டியது கலை இலக்கிய படைப்புகள் தான்.  ஆனால் அதை இன்றைய படைப்புகள் செய்கின்றனவா?

புனைவு சினிமாக்களின் நடுவே ஆவணப்படத்திற்கென ஒரு முக்கியத்துவத்தை ஏற்படுத்தி அதை வெகுமக்களின் முன் வெற்றிகரமாக, தான் கொண்ட கருத்தின் பிரச்சாரத்திற்க்கு பயன்படுத்தி காட்டியதில் குறிப்பிடத்தக்கவர் அமெரிக்க ஆவணப்பட இயக்குனர் மைக்கேல் மூர்.

இவரது கருத்துகள் விமர்சனத்திற்கு உட்பட்டவைதான், ஆனால் புறக்கணிக்கக் கூடியவையல்ல. வியாபாரத்திற்கும், பொழுதுபோக்கிற்கும் அதிகளவு பணத்தை குறுகிய கால முதலீட்டில் சம்பாதிப்பதுதான் சினிமாத் துறை என்ற நிலையில், அதே துறையில் மக்கள் பிரச்சனைகளைப்  பற்றி பேசும் ஆவணப்படத்திற்க்கென ஒரு மதிப்பையும், முக்கியத்துவத்தையும் பெற்று தந்தன மைக்கேல் மூரின் திரைப்படங்கள்.

அமெரிக்க மக்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படும் அதே நேரம் அமெரிக்க மக்களை விழிப்படையச் செய்யும் அவரின் ஆவணப் படங்களுள் மிக முக்கிய திரைப்படம்தான் Capitalism, a love story. மக்களைக் கொல்லும் முதலாளித்துவத்தை அதன் அழுகிய பக்கங்களை, கெட்டழுகிக் கொண்டிருக்கும் அதன் தனமையையும், அதன் போலி பிரச்சாரங்கள், பொய் வாக்குறுதிகளை அடித்து துவைத்து காயப்போட்டது தான் இந்தப் படத்தின் முதல் சாதனை.

உடலின் வீக்கத்தை வளர்ச்சி என்று பார்க்க வைத்த முதலாளித்துவ மேதைகளை அம்பலபடுத்தி அந்த வீக்கம் சீழ் பிடித்து துர்நாற்றம் வீசுவதை அமெரிக்க மக்களின் வலியிலிருந்து  நமக்கு உணரவைத்த சிறந்த படைப்பு இது.

அமெரிக்கா பூலோக சொர்க்கம்- உண்மையா?

மைக்கேல் மூரின் Capitalism : A Love Story (2009) – அறிமுகம்! இரண்டாம் உலகப் போர் முடிந்த நேரம் உலகில் அமெரிக்காவிற்கு பெரிய அள‌வு தொழிற் போட்டியே இல்லை, நாட்டில் பியர்ல் ஹார்பர் தவிர வேறு எந்த சேதத்தையும் பார்க்காத அமெரிக்கா, நிதி மூலதன வளர்ச்சியில் பொங்கிச் சிறந்தது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின், சோசலிச நாடுகள் கொண்டு வந்த விஞ்ஞான வளர்ச்சியும், உலக நாடுகளில் இருந்து பிழைக்க அகதிகளாக வந்து குவிந்த மக்களும் அமெரிக்காவின் வளர்ச்சியை சீராக உயர வழிவகுத்தனர். அமெரிக்கா பூலோக சொர்க்கம் என்ற மாயை உருவாகத் தொடங்கியது (அந்த சொர்க்கத்திலும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் விளைவான தேக்க நிலை 10 வருடத்திற்கு ஒரு முறை வந்து போய்க்கொண்டு தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது). அப்பொழுதும் சரி பின்னர் எப்பொழுதும் சரி முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படை விதியின்படி அமெரிக்காவின் ஒரு சிலரிடம் பெரும்பான்மையான பணம் சேருவதும் பெரும்பான்மையினர் உழைக்கும் மக்களாக, ஒரு நாள் பணக்காரர் ஆகிவிடுவோம் என்ற கனவில் வாழ்வதும் வாடிக்கையாகி விட்டது.

இன்றைய அமெரிக்க மக்கள் வீதிக்கு வந்து போராடுவதற்கான(Occupy wall street) இன்னொரு விதை முதலாளித்துவ பொருளாதாரத்தைக் காப்பாற்றும் முயற்சியின் விளைவாக வந்த்து. 1917 முன் வரை முதலாளிகள் கசக்கிப் பிழிவதிலும் உழைக்கும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சுவதிலும் மொத்த உழைப்பையும் சுரண்டிக் கொழுப்பதிலும் கவலையில்லாமல் கணஜோராக ஈடுபட்டு வந்தனர். ஆனால் மார்க்சிசத்தின் வரவும் அதைத் தொடர்ந்த ரஷியப் புரட்சியும், உலகம் முழுவதும் இருந்த உழைக்கும் மக்களின் சோஷலிச கனவும் முதலாளிகளை ஆட்டம் காணச் செய்தது, ‘தங்கள் நாட்டில் புரட்சி வந்து விடக் கூடாது ஆனால் சுரண்டவும் வேண்டும்’ இதற்கு ஒரே வழி வேலை செய்பவர்களுக்கு சில சலுகைகளை கொடுப்பது.

மக்கள் நலத் திட்டங்களை அரசு வகுக்கும், அதனை செயற்படுத்தும், சுரண்டும் பணத்திலிருந்து முதலாளிகள் போனால் போகுது என்று கொஞ்சம் தருவார்கள் அதையே சோசலிசம் என்று திரித்து பிரச்சாரம் செய்ய வேண்டியது தான். அமெரிக்கா முதல் ஐரோப்பா வரை இப்படி அரசே கல்வி, மருத்துவத் துறையை நடத்துவதை அவர்கள் சோசலிசம் என்று சொல்லிக் கொண்டார்கள்

இந்தியாவில் நேரு மேல்மட்டத்தில் அரசே நிறுவனங்களை நடத்துவதை, அதில் கிஞ்சித்தும் மக்களின் நேரடி பங்களிப்பில்லாத முறையை சோசலிசம் என்று ஜல்லியடித்தார். உண்மையான சோசலிசத்தில்  அரசு அனைத்துத் துறைகளையும் வைத்திருக்கும் என்பது உணமை தான் ஆனால் அரசை உழைக்கும் மக்கள் நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏகாதிபத்தியத்தின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியும்,கட்டமைப்பு நெருக்கடியும் அமெரிக்காவின் வளர்ச்சியில் கையை வைத்தது. எப்பொழுதும் பல பில்லியன் டாலர்களில் கொழுத்த முதலாளிகள் அதை உலகின் இன்னொரு முதலாளியிடம் இழந்தார்கள். பெரும்பான்மையான பணம் உலக முதலாளிகளின் பாக்கட்டுகளில் கைமாறத் தொடங்கியது,

சுழற்சி முறையில் அது பல புது பணக்காரர்களை உருவாக்கியது, ஏற்கனவே தொழிலில் கொழுத்து திரிந்தவர்களை தூக்கியெறிந்தது. கடந்த பல ஆண்டுகளாகவே உலக பணக்காரர்கள் மியுசிக்கல் சேரில், இடம் கிடைத்தவர் உட்கருவதும் இன்னொரு ரவுண்டில் அவரே தூர ஓடுவதுமாக மாறிக்கொண்டிருக்கிறது. இதில் அமெரிக்க பொருளாதாரம் எனும் குமிழ் உடைவதும் இன்னொரு குமிழியை அமெரிக்க அரசு உருவாக்குவது எனத் தொடர இந்த சூதாட்டத்தை நடத்த ஒரு நல்ல இடமாகவே வால்ஸ்ட்ரீட் மாறியது. (உலகம் முழுவதிலும் இந்த சூதாட்டத்தை அரசு அனுமதியுடன் நடத்தும் இடங்களாக பங்குச் சந்தைகள் உருவாக்கப்பட்டன. அது தான் நாட்டின் கொள்கைகளையும் வளர்ச்சியையும் தீர்மானிக்கும் களமாக மாறியது).

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் முதலாளியை வாழவைக்க, முதலாளித்துவத்தை வாழவைக்க கையில் வாளேந்தி மக்களின் சலுகையில் கை வைத்தனர். இனியும் இழக்க ஒன்றுமில்லை எனும் போது– அமெரிக்கா என்றாலும் என்ன, உழைக்கும் மக்கள் உழைக்கும் மக்கள் தானே– போராடத் துவங்கிவிட்டனர்.

மைக்கல் மூர் தன் படத்தில் முதல் சில நிமிடங்கள் ரோம் சாம்ராஜ்ஜியம் எப்படி அழிந்தது எனும் வரலாற்று நிகழ்வை விளக்கும் குரலுக்குப் பின்னால் அமெரிக்க நிகழ்வுகள் சிலவற்றை ஒளிப்படங்களாக தருகிறார்.

சோஷலிஸ நாட்டில் ஒரே ஆட்சி! ஒரே ஆட்சி! என்று உழைக்கும் மக்களின் பிரதிநிதிகளை தூற்றும் அதே நேரம் அமெரிக்காவிலோ இரண்டு கட்சி, ஆனால் எது வந்தால் என்ன,  ஆளுபவர்கள் அந்த நாட்டின் முதலாளிகள் தான், அவர்கள் சுரண்டுபவர்கள், நிச்சயம் மக்களின் பிரதிநிதிகள் அல்ல, சூதாடிகள் என்று படத்தை ஆரம்பிக்கிறார்.

அதாவது அமெரிக்காவில் இரண்டு கட்சி, ஒரே ஆட்சி, முதலாளியின் ஆட்சி. அமெரிக்கா மட்டுமல்ல இந்தியா முதல் பல நாடுகளில் இதே நிலைமை தான். யார் முதன்மை அமைச்சராக இருந்தாலும் சரி, எந்த அரசு வந்தாலும் ஆளுபவர்கள் முதலாளிகளாகத்தான் இருக்கிறார்கள்.

2007க்கு பின் பல ஆண்டுகள் வாழ்ந்த தன் வீட்டை காலி செய்யும்படியும் அதை மீறினால் போலிசே வீட்டைக் காலி செய்யும் நிலையும் அமெரிக்க மக்களுக்கு குறிப்பாக சாதாரண மக்களின் வாழ்க்கையில் தொடர் நிகழ்வாகிவிட்டது. ஒரு காட்சியில் காலி செய்ய மறுக்கும் வீட்டை உடைத்து அங்கிருப்பவர்களை வெளியே தள்ளி காலி செய்கிறது காவல் துறை. இன்னொரு பக்கம் தங்கள் சொந்த வீட்டில் பல ஆண்டுகள் வசித்த வயதான ஏழை தமபதியினரை மாதத் தவணை கட்டவில்லை என்று காலி செய்யும்படி சொல்லுகிறார்கள் காவலர்கள். அதைத் தொடர்ந்து அந்த வயதான பெண் காமிர முன்னால் அழத் தொடங்குகிறார். பின்பு முனங்கலாக “நாங்கள் சாதரண மக்கள், நன்றாக உழைப்பவர்கள், ஒழுங்காக தவணையை செலுத்தினோம்,  ஆனால்  வேலை இல்லை, வருமானம் இல்லை அதனால் தவணை செலுத்தவில்லை” என்று அழுகிறார்.

பல முதலாளித்துவ மேதைகள் அமெரிக்காவின் இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு, “தகுதியில்லாதோருக்கு கடன் கொடுத்ததுதான் காரணம் அவர்கள் திரும்பக் கட்டவில்லை” என பக்கம் பக்கமாக ஆய்வுகளையும், கட்டுரைகளையும் எழுதுபவர்கள். ‘அவர்களுக்கு வேலை இல்லை அவர்களின் வேலை பிடுங்கப்பட்டுவிட்டது, அது இன்னொரு நட்டிற்க்கு சென்றுவிட்டது அது தான் காரணம்’ என்பதை மட்டும் மூச்சுவிடுவது இல்லை. ஒரு வேளை முதலாளித்துவ அறிஞர்கள் சொல்லுவதுதான் சரி போலும், உலகம் முழுவதிலும், அது முதலாளித்துவ நாடாக  இருந்தாலும் சரி, உழைக்கும் மக்கள் அடிப்படை வசதிகளை கோரத் தகுதியற்றவர்கள்தான்.

இதைவிடவும் கொடுமை மைக்கல் மூர் காட்டும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் முதல் பாடம் தான். அமெரிக்காவில் பல சிறுவர் சீர்த்திருத்த பள்ளிகளை தனியார்கள் தான் நடத்துகிறார்கள். ஒரு சிறுவன்/சிறுமிக்கு மாதம் இவ்வளவு என்று அரசு தனியாருக்கு கொடுக்கும் (செலவுகள் போக லாபம் சேர்த்து தான்). நன்றாகத் தான் இருக்கிறது.  ஆனால் முதலாளிக்கு லாபம் வேண்டும், லாபம் வந்தவுடன் அதைவிட அதிக லாபம் வேண்டும், அப்புறம் அதைவிட அதிகமாக.. அப்புறம் அதையெல்லாம் விட அதிகமாக. இந்த லாப வெறிக்கு  பலி, பல சிறுவர்கள்.

ஒரு சீர்த்திருத்த பள்ளியை நடத்தும் முதலாளிக்கு அதிக லாபம் வேண்டும், நேராக அங்கே உள்ளூரில் இருக்கும் போலிஸையும் ஜட்ஜையும் பிடித்தார். பல சிறுவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டு, சாதாரண பிரச்சனைக்கெல்லாம் கோர்ட் கேஸ், ஜட்ஜ் குற்றவாளியின் முகத்தைக் கூடப் பார்க்காமல் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினார். குற்றம் விசாரிக்கப்படாமல் நேராக குறிப்பிட்ட சீர்திருத்த பள்ளியில் இத்த்னை மாதம் இருக்க வேண்டும் என்று தீர்ப்பு சொல்ல வேண்டும். மேலும் இன்னும் சில மாதங்களுக்கு நீட்டிப்பு தரவேண்டும். அவ்வளவுதான்.  ஜட்சுக்கு டீலிங் ரொம்பப் பிடித்துவிட்டது, அதன் விளைவு பல பதின்ம வயது இளஞர்கள் காரணமே இல்லாமல் தங்கள் இளமையை தொலைத்தனர். லாப வெறியின் முதல் பாடமே நம்மை உறைய வைக்க இரண்டாம் பாடமோ அதிர்ச்சியை தந்தது.

நமக்கு விமானத்தில் பறக்க ஆசையாக இருக்கும், ஆனால் விமானிகள் எந்நேரமும் விமானத்தில்தான். எவ்வளவு மிடுக்கான தோற்றம், எப்பொழுதும் சிரிப்பு, உலகில் கஷ்டமே இல்லாத மக்கள் இவர்களாகத் தான் இருப்பார்கள் என்று நாம் நினைத்திருக்க, முதலாளிகளின் லாப வெறிக்கு இவர்கள் மாத்திரம் விதிவிலக்கல்ல என்று மூர் புரியவைக்கிறார்.

அமெரிக்க தனியார் விமான நிறுவனங்கள் விமானிகளுக்கு சம்பளத்தை பலமடங்கு குறைத்தே கொடுக்கின்றன, விமானியால் அந்த வேலையை விட்டுவிட்டு இன்னொரு வேலைக்குச் செல்வது என்பது சாத்தியமில்லை அல்லது மிகவும் சிரமமம். இந்தக் கையறு நிலைதான் முதலாளிகளுக்கு முத‌லீடு. குறைந்த சம்பள‌ம் கொடுத்தாலும் அந்த விமானியால் வேலையை விட முடியாது, இன்னொரு நிறுவனம் போனாலும் விமானிக்கு அதே நிலைமை தான்.

ஒரு வேளை நம் முதலாளித்துவ ஆதரவாளர்கள் 2001 இரட்டை கோபுரத் தாக்குதல் என பாட ஆரம்பிக்கும் முன் இன்னொரு செய்தி. இந்த நிலைமை 2001க்கு பல பத்தாண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. ஒரு விமானி சொல்லும் விடயம் அதிர்ச்சியானது. அவருக்கு தெரிந்த பல விமானிகள் ரத்த அணுக்களை(Plasma) விற்கிறார்களாம், அதாவது ரத்தத்தை எடுத்து ப்ளாஸ்மாவை பிரித்துவிட்டு மீண்டும் ரத்தத்தை உடலிலேயே ஏற்றிவிடுவார்கள். முதலாளிகள் ரத்த உறிஞ்சி என்பது இங்கு நிஜமே ஆகிவிட்டது.

இப்படியாக அமெரிக்க மக்கள் வேலை இழப்பதும் லாப வெறிக்கு பலியாவதும் தொடர, மக்களை எப்படி ஏமாற்றி இன்னும் லாபத்தை ஈட்ட வேண்டும் என்பதற்கு  திட்டமிட்டு பள்ளிகளில் பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டு, மாணவர்களை தேர்ந்த சூதாடிகளாக உருவாக்குவதுதான் அமெரிக்க பல்கலைக் கழகங்களின் வேலை. அமெரிக்காவின் ஹார்வாட் முதல் இந்தியாவின் ஐஐஎம் வரை ஒரே கொள்கை தான், சூதாடிகள் வேண்டும். தாங்கள் இப்படி ஒரு இழிவான வேலை செய்கிறோம் என்று கூட அவர்களுக்கே ஆரம்பக்கட்டத்தில் தெரியாமல் இருக்கவே குழப்புகின்ற பாடங்கள்.

இந்த படத்தில் குறிப்பாக அமெரிக்க வால் ஸ்ட்ரிட்டில் பலர் பெருமையாக சொல்லிகொள்ளும் டெரிவேட்டிவிஸ் என்கிற வார்த்தைக்கான அர்த்தத்தை கேட்க ஒரு பெரிய பல்கலைக்கழகத்தின் ’வாத்தியாரே கன்ப்யூஸ் ஆகிவிட்டார், விளக்க முடியாமல் திணறுகிறார். என்ன வேலை செய்கிறோமோ அதை விளக்க வாத்தியாருக்கே தெரியாத உன்னத கல்வியமைப்பு முதலாளித்துவ பொருளாதாரத்தின் கொடை.

ஆனால் இன்னொரு பக்கம் மூர் அமெரிக்கவில் உள்ள  ஒரு தொழிற்சாலையை காட்டுகிறார். அந்தத் தொழிற்சாலையில் அங்கு வேலை செய்பவர்களே முதலாளிகளாக இருக்கிறார்கள் (பார்த்தவுடன் நானும் ஜெர்காகிவிட்டேன்), உழைக்கிறார்கள்.  தங்களுக்கு யார் தலைவாராக வேண்டும் என்று அவர்களே தீர்மானிக்கிறார்கள். மொத்தம் வெளிப்படையாக இருக்கிறது. நிறுவனத்தின் லாபமும் நஷ்டம் இரண்டுமே பங்கிடப்படுகிறது. அவர்கள் சந்தோஷமாக வேலை செய்கிறார்கள், நிறைவாக வாழ்கிறார்கள். அங்கு சாதாரண வேலையும் செய்யும் தொழிலாளியின் மாத வருமானம் மிகப் பெரிய விமான நிறுவனத்தில் அனுபவமிக்க விமானியின் மாத சம்பளத்தைவிட பன்மடங்கு அதிகமாக இருக்கிறது. இங்கு நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியது உழைப்பவர்கள் நடத்தும் நிறுவனம் இதுவரை சோடைபோகவில்லை என்றாலும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் நடுவே இது தாக்குபிடிப்பது கடினம்தான்.

ஒபாமா – மீட்பாரா?  

இனியும் அரசால் மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவு செய்ய முடியாது. முதலாளித்துவ பொருளாதாரத்தின் பகாசுர பசிக்கு உலகம் முழுவததையும் இரையாக்க போர் புரிய வேண்டும், அமெரிக்கா அதற்க்கு தயாராகிவிட்டது. புஷ் அரசு அமெரிக்க மக்களை நசுக்கி முதலாளித்துவ பொருளாதாரத்தை அம்மணமாக்கினார். அடுத்து வரும் ஒபாமா, அதை மீட்பாரா? என்ற கேள்வியை எழுப்புகிறார் மூர். இந்த படம் வெளிவரும் போது தான் ஒபாமா “மாற்றம் வேண்டும்” என்று பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார். அவரின் போட்டியாளர் மெக்கயினின் ஆட்கள் ஒபாமா ஒரு சோஷலிஸ்ட் என்று பிரச்சாரம் செய்தார்கள் (இது வேற சோஷலிஸ்ட், மேலே பார்க்கவும்). ஆனால் ஒபாமா மீட்பரா என்ற மூரின் கேள்விக்கு பின்னாட்களில் விடை கிடைத்தது.  ஒபாமா கறுப்பு புஷ் என்று.

கடைசியாக மூர் வெறுத்துப் போய் சர்ச்சை நாடுகிறார், நிச்சயம் யேசு ஒரு முதலாளி இல்லை என்று நிரூபிக்கிறார். யேசு ஏழைகளைத் தான் முன்னிறுத்தினார், அவர்களுக்காகத்தான் வாழ்ந்தார் என பல பாதிரியார்கள் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்கள். முதலாளித்துவ பொருளாதாரம் ஒரு சாத்தான் என்கிறார்கள். சரிதான் ஒரு வேளை வரலாற்றின் படி அந்த ஏழை ஆச்சாரி ஏசு ஏழைகளுக்காகவே வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவரை தொடர்ந்து வந்த மதம்? மூருக்கும் சரி முதலாளித்துவ பொருளாதாரத்தில் தங்களை தொலைத்துவிட்டு ராசி கல், சனி கோயில், ஜோதிடம் ஒரு விஞ்ஞானம் என்று கணிப்பொறியில் ஜோதிடம் பார்பவர்களுக்கும் சரி இது தீர்வல்ல.

எதிரி கண் முன் நன்றாக தெரியும் போது கண்ணை மூடிக்கொண்டு இருட்டாக இருக்கிறது என்று சொல்வது மதநம்பிக்கையாளரின் வேலை. அதற்குத் தான் திரும்பத் திரும்ப சொல்வது.  ஒரு கம்யுனிஸ்ட் கட்சி தான் முறையே ஆய்ந்து திட்டம் தீட்டி முதலாளிக்கு சாவு மணியடிக்க முடியும் என்று. இல்லையென்றால் இப்படி தான் திரிந்து போய்விடுவார்கள்.

நல்ல வேளையாக எங்கே மூர் சுவிசேஷ கூட்டம் நடத்தப் போய்விடுவாரோ என்று  நினைக்கும் போது சர்ச்சில் இருந்து திரும்ப வந்துவிடுகிறார், அமெரிக்க நாட்டின் ஆரம்ப கால தலைவர்களின் (Founding Fathers) அரசியல் ஏட்டை பார்க்கிறார். மக்களுக்காக , ஒன்றாக இணைந்து, சமதர்ம சமூகமாக வாழ வேண்டும் என்று இருக்கிறது. கடைசியில் மூர் இந்த காபிடலிஸத்திற்க்கு மாற்று என்ன என்று கேட்கிறார். பதிலாக ஜனநாயகத்தை முன்வைக்கிறார்.

அமெரிக்காவில் மக்களின் ஜனநாயகம் வந்தால் போதும் என்கிறார். காலம் காலமாக கம்யுனிஸ்டுகளும் அதைத் தான் சொல்லுகிறார்கள். முதலாளித்துவம் இருக்கும் இடத்தில் ஜனநாயகம் என்ற சொல்லே வெறும் முகப் பூச்சை போலவும் பிணத்தின் மீதான ஒப்பனை போலத்தான் இருக்கும். உண்மையான ஜனநாயகம் என்பதே இந்த முதலாளித்துவத்தை தூக்கியெறியும் புரட்சியில் தான் வரும்.

ஒருவேளை அது புரிந்ததனால் தான் என்னவோ, இந்த காப்பிடலிஸத்திற்க்கு மாற்று ஜனநாயகம், உண்மையான ஜனநாயகம்தான் என்று சொல்லிமுடித்தவுடன், ‘உலக தொழிலாளர்களே ஒன்று படுங்கள்’ என்ற சர்வதேசிய கீதத்துடன் படத்தை முடிக்கிறார்.

ஆம், உலகத் தொழிலாளர்கள்  ஒன்றுபடும் அந்த காலத்தில் அமெரிக்காவின் கொலைகார முதலாளித்துவம் சவக்குழிக்கு அனுப்பப்படும்.

____________________________________________________

– ஆதவன்

______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

29 மறுமொழிகள்

  1. நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குதுன்னு முதலாளித்துவ குடு குடுப்பையை அடித்துக் கொண்டு ஒருத்தர் வருவாரே….

  2. ##அமெரிக்காவில் மக்களின் ஜனநாயகம் வந்தால் போதும் என்கிறார். காலம் காலமாக கம்யுனிஸ்டுகளும் அதைத் தான் சொல்லுகிறார்கள். முதலாளித்துவம் இருக்கும் இடத்தில் ஜனநாயகம் என்ற சொல்லே வெறும் முகப் பூச்சை போலவும் பிணத்தின் மீதான ஒப்பனை போலத்தான் இருக்கும். உண்மையான ஜனநாயகம் என்பதே இந்த முதலாளித்துவத்தை தூக்கியெறியும் புரட்சியில் தான் வரும்.##

    ஆம், உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபடும் அந்த காலத்தில் அமெரிக்காவின் கொலைகார முதலாளித்துவம் சவக்குழிக்கு அனுப்பப்படும்.

  3. //பல முதலாளித்துவ மேதைகள் அமெரிக்காவின் இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு, “தகுதியில்லாதோருக்கு கடன் கொடுத்ததுதான் காரணம் அவர்கள் திரும்பக் கட்டவில்லை” என பக்கம் பக்கமாக ஆய்வுகளையும், கட்டுரைகளையும் எழுதுபவர்கள். ‘அவர்களுக்கு வேலை இல்லை அவர்களின் வேலை பிடுங்கப்பட்டுவிட்டது, அது இன்னொரு நட்டிற்க்கு சென்றுவிட்டது அது தான் காரணம்’ என்பதை மட்டும் மூச்சுவிடுவது இல்லை.///

    இல்லை. இவை இரண்டும் காரணம் அல்ல. சரியான காரணிகள் பற்றி பல முறை எழுதியாச்சு :

    Four points or pre – conditions which had distorted the really ‘free
    markets’ so far :

    1. Monetary policy of US Fed which artificially kept the interest
    rates below real rates for many years, esp since 2004. Negative
    interest rates created the mother of all liquidity.

    2. Fiscal policy of US and many other nations which produced huge
    deficit budgets.

    3. US govt policy in subsidizing home mortage loans by creation and
    funding twin giants : Fennie Mae and Freddie Mac.

    4. Currency manipulation by China and many other exporting nations
    which kept the dollar artificially high than it otherwise would be in
    a really ‘floating’ and free market. This enabled the US consumers and
    govt to borrow and spend more than otherwise it would have been. (this
    phrase, ‘otherwise it would have been’ is very very important). and
    USD dollar being the reserve currency of the world adds to the
    complication.

    All the four above issues DISTORTED the ‘free markets’ ;

    • அமெரிக்க வங்கிகள் மிக மிக அதிகம் கடன் அளித்த பிரச்சனைக்கு வங்கிகளை மட்டும் காரணம் சொல்லக்கூடாது. இளம் சிறுவர்களிடம் துப்பாக்கிகள் ‘தாராளமாக’ கிடைத்தால் என்ன விபரீத விளைவுகள் ஏற்படுமோ அதற்க்கு இணையாக பார்க்கலாம். பணம் மிக மிக மிக குறைந்த வட்டி விகிதத்தில் (இந்த மிக குறைந்த வட்டி விகிதம் அமெரிக்க ரிஸர்வ வங்கியால் தான் உருவானது) கணக்கில்லாமல் பணம் கிடைத்தது ; யாருக்கு வேண்டுமானாலும் வீட்டு கடன் அளித்து, பின் அக்கடன்களை அரசு சார் இரு பெரும் நிதி நிறுவனங்கள் தலையில் கட்ட முடிந்ததால், பொறுப்பில்லாமல் வங்கிகள் செயல்பட சந்தர்ப்பம் கிடைத்தது.

      சீனாவும் மற்ற ஏற்றுமதி நாடுகளிம், தம் கரண்சிகளை (அமெரிக்கா செய்வது போல்) ஃப்ரீயாக மிதக்க விட்டிருந்தால், அவர்களின் கரண்சிக்கள் மதிப்பு படிப்படியாக அதிகரித்து, டாலர் மதிப்பு குறைந்திருக்கும். அமெரிக்கா இத்தனை ட்ரில்லியன் கடன் மற்றும் இறக்குமதி செய்திருக்க முடியாது. ஏற்றுமதி செய்யும் நாடுகளும் இத்தனை விரைவாக வளர்ந்திருக்க முடியாது. இயற்க்கையான வளர்ச்சிக்கு மாறாக செயற்கையாக அரசுகள் முயன்றதன் விளைவுகள் இன்று.

      எல்லாவற்றையும் விட தொடர்ந்து பற்றாக்குறை பட்ஜெட்டுகளை உலகின் பல நாடுகள் உருவாக்கியதன் நிகர விளைவுகள் தொடர்கின்றன. அய்ரோப்பாவில் யூரோ உருவாக்கியதும் பெரும் தவறு. அரசியல் ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் ஒன்றுபடுவதற்க்கு முன்பே கரன்ஸியில் மட்டும் ஒன்றுபட்டது பெரிய தவறு. அதன் விளைவுகளும் சேர்ந்துவிட்டன. cumulative effects of all the above..

      • அண்ணே, ஒன்ன மறந்துட்டீங்க. முரண்பாடுகளில் உயிர்வாழ்வதுதான் முதலாளித்துவம். ஒருத்தன ஒருத்தன் குழிபறிக்கிற வேலைய செய்றதுதான் முதலாளியோட வேலையே. அவிங்க எப்புடிண்ணே அரசியல் ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் ஒன்றுபடுவாய்ங்க. நீங்க சொல்றது நடக்கவே போறதில்லே இது என்னோட ஜோசியம். ரெண்டு பேருக்கும் ஆயுசு இருந்தா இது பலிக்குதா இல்லையான்னு பாத்துருவோம்.

      • // அய்ரோப்பாவில் யூரோ உருவாக்கியதும் பெரும் தவறு. அரசியல் ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் ஒன்றுபடுவதற்க்கு முன்பே கரன்ஸியில் மட்டும் ஒன்றுபட்டது பெரிய தவறு. அதன் விளைவுகளும் சேர்ந்துவிட்டன. //

        யூரோ உருவானபின் ஐரோப்பிய நாடுகளிடையே வர்த்தகமும், முதலீடுகளும் கணிசமாக அதிகரித்ததாக சமீபத்தில் படித்த நினைவு. முழு பொருளாதர ஒருங்கிணைப்புக்கு அரசியல் காரணங்களும் தடையாக இருக்கலாமல்லவா?

    • குறைந்த வட்டி விகிதம் போவதற்கு யார் காரணம் ? அரசு சார் நிதி நிறுவனங்களின் தலையில் கட்டியதால் வங்கி தப்பித்ததா அல்லது அடுத்து கடன் தர முதலீடாக அதனை மாற்றியதா ? தங்களது நாட்டு கரன்சிகளை ப்ரீயாக மிதக்க விடுவது சீனாவைப் பொறுத்து சரியாக இருந்திருந்தால் கடன்சுமை அமெரிக்காவுக்கு ஏறியிருக்காது என்றால் சீன மக்களது உழைப்பை சூதாடி அமெரிக்கர்கள் வெல்வார்கள் என்பதுதானே வெள்ளிடைமலை. அது நேர்மையான செயலா ? இயற்கையாக முயன்றது சீனாவா அல்லது அமெரிக்காவா ? அரசியல்ரீதியாக ஒன்றிணைந்த பிறகுதான் கரன்சியை யூரோவுக்கு மாற்ற வேண்டும் என்பது பூர்ஷ்வா லிபரல் கோரிக்கையா அல்லது அதியமானது கனவா ? ஒரு பற்றாக்குறை பட்ஜெட்டை ஒரு நாடு போடுகிறது என்றால் அதன் பாதிப்பு எப்படி அமெரிக்க பொருளாதாரத்தை தாக்கும் என விளக்க இயலுமா ?

      • //அரசியல்ரீதியாக ஒன்றிணைந்த பிறகுதான் கரன்சியை யூரோவுக்கு மாற்ற வேண்டும் என்பது பூர்ஷ்வா லிபரல் கோரிக்கையா அல்லது அதியமானது கனவா ?//

        மணி,

        விசியங்களை அறிந்து கொள்ள ஒரு திறந்த மனம் வேண்டும். ” பூர்ஷ்வா லிபரல் கோரிக்கையா அல்லது அதியமானது கனவா”// என்றெல்லாம் எழுதுவது எரிச்சலை கிளப்பி, பதில் சொல்லும் ஆர்வத்தை முடக்கும். இருந்தாலும் எளிமையாக சொல்ல முயல்கிறேன். first the connections between inflation rates, interest rates and exchange rates (between currencies) பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். மிகவும் சிக்கலான விசியம் இது. மேலும் பண சப்பளைக்கும் பண வீக்க விகிதத்திற்க்கும் உள்ளா நேர் முக உறவை பற்றியும் அறியவேண்டும். (இவை எல்லாம் அடிப்படை பொருளாதார அம்சங்கள். முதலாளித்துவம், சோசியலிசம் அல்லது கம்யூனிச சித்தாந்த அடிப்படைகளை தாண்டிய விதிமுறைகள். யாரும் மீறவே முடியாது. இயற்பியல் விதிமுறைகள் போன்றவை).

        inflation rate is directly proportional to rate of increase / decrease in money suppy (M-3) ; and real (and not reserve bank’s artificial rates) interest rates are again directly proportional to the effective inflation rate within a system / nation. and the exchange rate of that particular nation / system will be directly affected by the interest rates plus other factors which may be intangible. யூரோ உருவானது இந்த ’தொடர்புகளை’ செயற்கையாக சமாளிக்க / மழுப்ப முயன்றது. ஆனால் இயற்கையை வெல்ல முடியாததால் தோற்று, பெரும் சிக்கலை உருவாக்கியது. தனி தனி நாடுகளுக்கு தனி தனி கரண்சிகள் இருந்திருந்தால், அதன் மதிப்புகள், அதன் பொருளாதார பலம் / வட்டி விகிதங்களுக்கு ஏற்ப்ப தொடர்ந்து மாறுவதன் மூலம் இயற்க்கையான சமனிலை உருவாகியிருக்கும். மோசமான பொருளாதார அடிப்படைகளை கொண்ட நாடுகளின் கரண்சிகள் அதே விகிதத்தில் தேய்ந்து, adjust ஆகியிருக்கும்.

        http://www.stevemaughan.com/europe-the-euro/ten-reasons-why-the-euro-is-bad/

        //ஒரு பற்றாக்குறை பட்ஜெட்டை ஒரு நாடு போடுகிறது என்றால் அதன் பாதிப்பு எப்படி அமெரிக்க பொருளாதாரத்தை தாக்கும் என விளக்க இயலுமா ?
        //

        பற்றாக்குறை பட்ஜெட்டுகளை சமாளிக்க ஒவ்வொறு நாடும் தம் மக்களிடமிருந்தும். இதர தரப்பினிரடிருந்தும் ‘கடன்’ வாங்கும். அதாவது டி-பில்ஸ் என்பப்படும் அரசு கடன் பத்திரங்களை வெளி மார்க்கெட்டில் விற்றும் அல்லது தம் ரிஸர்வ் வங்கியிடம் விற்றும் பணம் புரட்டும். ரிஸர்வ வங்கி புது நோட்டடித்து அரசுக்கு வழங்கும். இதன் நிகர விளைவு : too much money chasing two few goods / services. இந்தியாவில் இது மிக கடுமையாகவே தொடர்கிறது. இன்று உருவான 9 சத விலைவாசி உயர்வு, இரு ஆண்டுகளுக்கு முன்பு அரசு செயற்கையாக உருவாக்கிய fiscal stimulusஇன் விளைவு தான். பொதுவாக இவ்விளைவுகள் உருவாக கால தாமதம் ஆகும். ஆனால் மூலக்காராணம் இவை தான்.

        உலகெங்கிலும் இதே போல் மிக மிக அதிக பண வெள்ளம் உருவாகும் போது, உலக பொருளாதாரமே பாதிப்புள்ளாகிறது. அமெரிக்க பொருளாதாரம் தான் உலகின் மிக பெரிய பொருளாதாரம் என்பதால், அங்கு பாதிப்பு மிக அதிகம். மேலும் டாலரின் மதிப்பு மற்றும் உலக ரிஸர்வ கரண்சி என்ற statusஉம் மேலும் distortions and imbalancesகளை அதிகரிக்கின்றது.

        • இயற்பியல் உட்பட அறிவியல் அனைத்தையும் மக்கள் மொழியில் அறிவியல் மேதைகளே எழுதி உள்ளார்கள். அவர்களில் சிலர் நோபல் போன்ற பரிசுகளைப் பெற்றவர்களும் கூட•
          http://en.wikipedia.org/wiki/Inflation_rate இந்த இணைப்பில் உள்ள சுட்டியையும் பிறவற்றையும் படித்துப் பார்க்கையில் மக்களது தலைமீது விடிவதுதான் இன்பிளேசன் என்ற முடிவுக்கு சாமானியர்களே வர முடியும் எனக் கருதுகிறேன். பண சப்ளைக்கும் பண வீக்க விகிதத்திற்கும் உள்ள தொடர்பை புரிய வேண்டுமானால் சப்ளையானது ரியல் எக்கனாமியை சார்ந்து இயங்க வேண்டும்தானே. மார்க்சிய, லிபரல் எதிலும் அடங்காத உண்மை அது ஐயா. மணி சப்ளை என்பது அமெரிக்காவுக்கும் சிவகாசி கள்ள நோட்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லாதபோது அது இன்பிளேசன் ரேட்டுக்கு நேர் அல்லது எதிர் விகிதமாக இருப்பது அயோக்கியத்தனம் இல்லையா ? இதனால் உருவாகும் வட்டி விகித மாற்றம் என்பது தேச துரோகமா இல்லையா ? இதனை ஒரு அரசே செய்வதால் அது ஒரு நாட்டை மட்டுமா பாதிக்கும். உண்மைப் பொருளாதாரத்தை நீங்கள் ஊகநிலை பொருளாதாரத்துடன் குழப்பிக் கொள்கிறீர்கள். நாடுகளின் ரிசர்வ் வங்கிகளிலேயே பிராடு யார் எனக் கேட்டால் பெடரல் வங்கிதான். http://en.wikipedia.org/wiki/Intangible இந்த சுட்டிதான் என்றால் கீசினிய பொருளாதாரம் பற்றிய உங்களது மேலான அபிப்ராயத்தை அறிய ஆவல். நாடுகள் தமக்குள் ஒன்றிணைவதை ஏன் தடுக்க விரும்புகிறீர்கள். அமெரிக்காவே கூட அப்படி உருவான ஒன்றுதானே ! பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கு அவர்கள் மேற்கொண்ட ஆயுத பேரங்கள், போர்கள், பெட்ரோ டாலர்கள் என விரிகிறதே உலகம்

  4. // ‘free
    markets’ // ப்ரி மார்க்கெட் ஒரு மாயை அது சாத்தியமில்லை என்று இவரே போன பதிவு ஒன்றில் சொல்லியிருக்கிறார். இவர் சொல்வதை மொத்தமா பாக்கும் போது காக்கா சித்தர் ஞாபகம்தான் வருகிறது ‘மவுண்ட் ரோடுல பசு மாடு மல்லாக்க படுத்த சுடுகாடு’ அப்படீங்கற மாதிரி எதையாவது எழுதுவதே இவருடைய வேலையாகப் போய்விட்டது.

    • பெரிய வெண்ணையாட்ட பேசும் அகமது (உன் நிஜப் பெயரில் எழுது பார்க்கலாம்),

      100 % Free marketsஅய் அடைய முடியாத விசியம் தான். ஆனால் அதை நோக்கி முயல தடை இல்லை. ஒரு 75 சதவீதம் அடைந்தாலே போதும். தூய அல்லது உண்மையான கம்யூனிசம் கூட தான் கம்யூனிஸ்டுகளின் இறுதி லட்சியம். இது வரை அடையவே முடியவில்லை. பாதி கூட அடைய முடியவில்லை. அதற்க்குள்ளேயே அனைத்து (repeat, ’அனைத்து’) பாட்டாளி வர்க சர்வாதிகார நாடுகளும் சீரழிந்து, திவாலான வரலாறு கண் முண் நிற்கிறது. அதானல் நம்பிக்கையை இழக்காமல் இன்றும் தொடர்ந்து முயற்சிகளை வினவு போன்ற குழுக்கள் தொடர்வதை பற்றி என்ன கருதலாம் ?

      இத்தனை நடந்த பின்னும் 100 சதவீத தூய கம்யூனிசம் சாத்தியம் என்று உம்மை போன்றவர்கள் நம்பும் போது, நாங்கள் 100 சத லிபரல் ஜனனாயக, சந்தை பொருளாதாரம் என்ற லட்சியத்தை அடைய முடியும் என்று நம்பக்கூடாதா என்ன ? வேறு எங்காவது போய் உம் உளரலை தொடரவும். சொந்த பெயரில் கூட எம்மை ஏச தைரியம் இல்லாத கோழை பய், செம்புரட்சி செய்யப்போவதாக சும்மா பில்டப். அதற்கெல்லாம் முதல்ல அடிப்படை நேர்மை மற்றும் தைரியம் வேண்டும். சும்மா இணையத்தில், பொய் பெயர்களில் ஏசும் கோழை பசங்களிடம் அதை வினவு எதிர்பார்பது வீண்…

  5. //நாங்கள் 100 சத லிபரல் ஜனனாயக, சந்தை பொருளாதாரம் என்ற லட்சியத்தை அடைய முடியும் என்று நம்பக்கூடாதா என்ன //

    கம்யூனிச சமூகம் உருவாவது தவிர்க்க இயலாதது என்பதை இயங்கியல் ரீதியாக நிரூபித்து இருக்கிறார்கள் மர்க்சும் எங்கெல்சும். அதற்கான வழியும் பரிசோதிக்கப்பட்டு வெற்றியடைந்திருக்கிறது. உங்கள் லிபரலுக்கு என்ன செய்ய வேண்டும்? எப்படி அடைய முயலவேண்டும் என்பதை பற்ரியெல்லாம் ஒரு பதிவு போடுங்களேன். முயன்று பார்க்கலாம்.

    • //கம்யூனிச சமூகம் உருவாவது தவிர்க்க இயலாதது என்பதை இயங்கியல் ரீதியாக நிரூபித்து இருக்கிறார்கள் மர்க்சும் எங்கெல்சும். அதற்கான வழியும் பரிசோதிக்கப்பட்டு வெற்றியடைந்திருக்கிறது. //

      எங்கு ‘வெற்றி’ அடைந்திருக்கிறது என்று சொல்லுங்களேன் ? மேலும் கம்யூனிசத்தின் இறுதி நிலை பற்றியும் உங்களின் அறியாமை அதிகம். எனவே தான் பதில் சொல்ல முயலவில்லை.

      • கம்யூனிசத்தின் இறுதி நிலை பற்றி அறியாமையில் இருக்கும் என்னால் உங்களைப் போன்ற மேதாவிகளுக்கு வகுப்பெடுக்க முடியுமா என்பது என்னால் இயலாவிட்டாலும் உங்களுடைய முதல் கேள்விக்கு பதில் சொல்லலாம் என நினைக்கிறேன்.

        //எங்கு ‘வெற்றி’ அடைந்திருக்கிறது என்று சொல்லுங்களேன் ? //

        எங்கா! எங்கு என்பது நீங்கள் அறியாததா!

        • அய்யா,

          உலகில் கம்யூனிசம் இன்னும் எங்கும் உருவாகவே இல்லை. சோவியத் ரஸ்சியா போன்ற நாடுகளில் முதலில் உருவானது ஒரு ‘பாட்டாளி வர்க சர்வாதிகாரம்’ ; அதை கொண்டு சோசியலிசத்தை கட்டமைக்கும் முயற்சி தொடங்கியது. அதன் இறுதி இலக்கு ‘தூய கம்யூனிசம்’ ; ஆனால் பாதி வழிக்கும் முன்பே இந்த பாழப்பான ‘திரிபுவாதிகளால்’ அமைப்பே சீரழிந்து, ‘சமூக ஏகாதிபத்தியமாக’ மாறி இறுதியில் அழிந்தது. இது தான் ஸ்டாண்டர் வெர்சன் ஆஃப் வினவு அண்ட் கோ. இதை பற்றி தான் குறிப்பிட்டேன்.

          ///அதற்கான வழியும் பரிசோதிக்கப்பட்டு வெற்றியடைந்திருக்கிறது. //

          அந்த ’வழி’ வெற்றி அடையவில்லை என்பதால் தான் பதில் சொல்லவில்லை.

          அதெப்படி சொல்லிவைத்தது போல், செம்புரட்சி உருவானா எல்லா நாடுகளிலும், நடுவில் ‘திரிபுவாதிகள்’ உருவாகி, சமூக ஏகாதிபத்தியமாக அந்நாட்டை சீரழிக்கிறார்கள். விதிவிலக்கே இல்லாமல். அமெரிக்காவை எதிர்த்து கடும் போர் நடத்திய வியட்நாம் உள்பட…

          • அய்யா!

            முதலாளித்துவம் கூட பல புரட்சிகளை நடத்திய பின்தானே தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது! இன்னொன்னு உங்களுக்கு சொல்லட்டுமா. அந்த சோசலிசம் காலகட்டம் என்பது முதலாளித்துவ கூறுகளையும் கொண்டதுதான். அதில் தற்பெருமை பேசும் சிலபல முதலாளித்துவ கோமன்களும் பதுங்கிய புலிகளாக வலம் வருவார்கள். அவர்களுடன் கம்யூனிசம் பேசிய சிலர் திரிந்து திரிபுவாதிகளாக மாற வாய்ப்புகள் உண்டு. திரிபவர்களின் சதவீதத்தைப் பொறுத்து சோசலிசம் பின்னடைவுக்குள்ளாகலாம். நீரை ஆவியாக்கும் சோதனையில் எரிபொருள் தீர்ந்துவிட்டால் என்ன ஆகுமோ அதுதான் அவ்விரு நாடுகளிலும் நடந்துள்ளது.

            ஆனால் சுரண்டிலில்லாமல் உற்பத்தி செய்வதை சாதித்து குறுகிய காலத்தில் வெற்றியடைந்து காட்டியதை மறுக்க முடியாது. இதைத்தான் கம்யூனிசத்தை நோக்கிய பரிசோதனை வெற்றி என்றேன்.

        • மேலும் கம்யூனிச சமூகம் பற்றி அல்லது சமூக மாறுதல் பற்றி உங்களது ஆழ்ந்த அறிவில் எவ்வாறு பதியப்பட்டுள்ளது என்பதை நான் அறியேன்.

          தற்போது உற்பத்தி செய்ய பயன்படும் கருவிகளை தனியுடைமையாக வைத்திருக்கும் முதலாளிகளை அகற்றிவிட்டு அவற்றை மொத்த சமூகத்தின் பொதுவுடைமையாக வைப்பது என்ற கம்யூனிச பொருளுற்பத்தி முறை வழிநின்று பொருளுற்பத்தி செய்து கம்யூனிசம் சாத்தியம் எனபதை உலகுக்கு வெற்றியுடன் எடுத்துக்காட்டிய நாடுகள்தான் சோவியத் யூனியனும், மக்கள் சீனமும்.

          • அதியமான் அண்ணே உங்கள் லிபரல் சமுகம் எப்படி அமையபோகிறது அதற்கு நீங்கள் என்ன்வெல்லாம் செய்கிறீர்கள் உங்கள் திட்டமென்ன அது எப்படி வெற்றியடையபோகிறது இதை பற்றியெல்லாம் சொல்லாலாமே.. திட்டமே இல்லாமல் பிதற்றி திரிகிரீர்களோ என்று சந்தேகம்.. திட்டம் இருந்தால் சொல்லுங்கள் விவாதிக்கலாம்

            • ’திட்டமிடாமல்’ ஃபிரீயா எல்லாரையும் ‘சுரண்ட’ அனுமதிப்பதே எங்கள் திட்டம். திட்டமிடல் என்ற பெயரில் இந்தியாவில் முன்பு செய்த குளருபடிகளே போதும்.

              Liberal democracy constitutes the following :

              1. Non-violation of human rights enshrined in the 1948 Universal Declaration of Human Rights at UN.
              2. Free markets with prudent regulation
              3. Welfare state with a balanced budget

              இரண்டு விசியங்கள் முக்கியம் :

              1.சொத்துரிமை
              2.Volountary Free Contract System : அதாவது வேலை கொடுப்பவருக்கு, வேலை செய்பவருக்கு இடையே உருவாகும் ஒப்பந்தம். மேலோட்டமாக பார்த்தால், இந்த ஒப்பந்த தொழிலாளர் முறை, முதலாளிகளுக்கு சாதகமாக இருப்பது போல் தெரியும். ஆனால் இதை உருப்படியாக நடை முறை படுத்திய நாடுகளில் தான் வேலை வாய்ப்பு பெருகி, வாழ்க்கை தரம் படிப்படியா உயர்ந்தது. முக்கியமாக கருப்பின மற்றும் சிறுபான்மை மக்களின் நிலையும்.

              இவை பற்றி எனது பதிவுகள் :

              முதலீட்டியத்தின் அடிப்படைகள்-1
              http://nellikkani.blogspot.com/2010/04/1.html

              முதலீட்டியத்தின் அடிப்படைகள்-2
              http://nellikkani.blogspot.com/2010/04/2.html

              முதலீட்டியத்தின் அடிப்படைகள்-3
              http://nellikkani.blogspot.com/2011/03/3.html

              • ’எல்லாரும்’ என்பது எப்படி என்று தான் புரியப்வில்லை. எளிமையாக எல்லாரும் பணக்காரன ஆகிவிட முடியாது? எல்லாரும் சுரண்டுபவன் என்றால் யாரை சுரண்டுவார்கள்? எல்லரும் விற்கிறார்கள் என்றால் யார் வாங்குவார்கள்? பண்ட மாற்று முறை தான் வரும் கடைசியில் இருக்கும்.உற்பத்தியில் யார் ஈடுபடுவார்கள் அவர்கள் யாரை சுரண்டுவார்கள்? ஏதோ சின்ன பையன் கேட்கிறன் கொஞ்சம் விளக்க்மா சொல்லுங்க..

                • //மேலோட்டமாக பார்த்தால், இந்த ஒப்பந்த தொழிலாளர் முறை, முதலாளிகளுக்கு சாதகமாக இருப்பது போல் தெரியும். ஆனால் இதை உருப்படியாக நடை முறை படுத்திய நாடுகளில் தான் வேலை வாய்ப்பு பெருகி, வாழ்க்கை தரம் படிப்படியா உயர்ந்தது. முக்கியமாக கருப்பின மற்றும் சிறுபான்மை மக்களின் நிலையும்.//

                  அக்னிபார்வை, என்ன பார்வையோ உங்களுக்கு. மேலே அவர் எழுதியிருக்கறதை படிச்சா ஒரு ……எழுதியிருக்குற மாதிரி இருக்குன்றது உங்களுக்கு இன்னுமா புரியல.

  6. உலகின் எல்லா நாடுகளிலும் பெரும்பான்மையினர் வாழ் நிலையில் பின்தங்கியும் மிக சிறுபான்மையினர் மிக முன்னேறியும் உள்ளனர்.திறமையுள்ளவர்கள் சுகமாகவும் அது இல்லாதவர்கள் அசுகமாகவும் வாழ்கிறார்கள் என்ற பொதுவான கருத்து ஒன்று உள்ளது.அதே கருத்தில்தான் திரு.கே.ஆர்.ஏ.அவர்களும் இருப்பார்கள் என்று கருதுகிறேன்.அவர் சிறுபான்மையினரில் ஒருவராக இருக்கலாம்,அல்லது அதை ஆதரிக்கலாம்.அவருக்கு அவரது வாதம்சரிதானே?

    • //உலகின் எல்லா நாடுகளிலும் பெரும்பான்மையினர் வாழ் நிலையில் பின்தங்கியும் மிக சிறுபான்மையினர் மிக முன்னேறியும் உள்ளனர்.//

      இல்லை. பொதுப்படுத்துதல். பெரும்பான்மையினரில் வாழ்க்கை தரம் படிப்படியாக உயர்ந்த நிலைக்கு வந்த நாடுகள் பல உள்ளன. முக்கியமாக 1945க்கு பின், கடும் அழிவு, வறுமையில் இருந்து வளர்ந்த நாடுகளாக வளர்ந்த ஜப்பான், தென் கொரியா, தைவான் போன்ற நாடுகளை சொல்லலாம். ஏன், மலேசியா கூட இந்தியாவை விஞ்சியது. இரண்டாம் உலகப்போருக்கு பிந்திய ஜெர்மனி, இத்தாலியையும் சொல்லாம். கடந்த 40 ஆண்டுகளில் உருமாறிய சீலே வை சொல்ல முடியும். வறுமையை முற்றாக அழித்து, எல்லோரும் நல்ல வாழ்க்கை அடைய வேண்டும் என்பதே எங்களை போன்றவர்களின் லட்ச்சியம். உங்களுக்கும் அதே லட்சியம் தான். ஆனால் அதை அடையும் பாதைகள் தான் வேறு. inequality எனப்படும் ஏற்ற தாழ்வே இருக்க கூடாது என்பது நடை முறை சாத்தியமில்லை. தேவையும் இல்லை. ஆனால் சரசாரியான வாழ்க்கை தரம், குறைந்த பட்ச அளவில் சாத்தியமானாலே பெரிய விசியம். கூடவே சர்வாதிகாரம் இல்லாத லிபரல் ஜனனாயகத்துடன்.

  7. கடைசியா கம்யூனிஸ்ட் கட்சிதான் நல்லது பண்ணும்னு பம்புரீங்களே.. உண்மையா?. கட்சியோட கொள்கை நல்லா இருந்தா போதுமா? அதை செயல்படுத்த நல்லவங்க வேணாமா? நீங்க எல்லோருமே ஆர்டர் குடுத்து செஞ்ச நல்லவங்களா? அதிகாரம் கைக்கு வந்தா எல்லாரும் ஒண்ணுதான்.

  8. நேற்றுதான் உக்கிரேனில் நடைபாதையில் இருந்த லெனின் சிலையை இழுத்து வீழ்த்தப்பட்டிருக்கிறது. விழுந்த சிலையை முடிந்தவரை ஆத்திரம் தீரமட்டும் அடித்துடைக்கிறார்கள்.

    இதில் விசேஷசமான காட்சி என்னவென்றால் ஒரு பழைமைப் பாதிரி சுத்தியலோடு தேவாலயகோலத்துடன் விழுந்த சிலையை முழுமையாக அடித்து நெருக்குவதற்கு சுத்தியலுடன் காட்சி கொடுப்பது தான்.

    இதில் உண்மை என்னவென்றால் மாக்ஸியம் என்றுமே தமக்கு சிலைவைக்கும் படி மனுப்போட்டதோ அல்லது தமது வேலைத் திட்டமாக கொண்டதோ இல்லை.

    அப்படியானால் இது எப்படி நடந்தேறியது?.

    இந்த மாம்பழத்தில் வண்டு வந்த காரணத்தை இந்திய தொழிலாள வர்க்கம் முதலில் கண்டறிய வேண்டும்!.

Leave a Reply to K.R.Athiyaman பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க