privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்BCCI : பில்லியனர்கள் கட்டுப்பாட்டில் இந்திய கிரிக்கெட்- பி சாய்நாத்

BCCI : பில்லியனர்கள் கட்டுப்பாட்டில் இந்திய கிரிக்கெட்- பி சாய்நாத்

-

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டிருந்த போது சாய்நாத் எழுதியது இந்தக் கட்டுரை (17.1.2012, தி ஹிந்து). ஐ.பி.எல் இன் 5வது பருவம் பரபரப்பாக சந்தைப்படுத்தப்பட்டு வரும் இன்றைய சூழலில் டெஸ்ட் கிரிக்கெட் மீதும், இந்திய ஆட்டக்காரர்கள் மீதும் ஐ.பி.எல் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளை நினைவுபடுத்திக் கொள்ள உதவியாக அதன் மொழிபெயர்ப்பை வெளியிடுகிறோம். 

ந்தியன் பிரிமீயர் லீகில் (ஐ.பி.எல்) 30 அல்லது 40 ஓட்டங்கள் (20 ஓட்டங்களாவது) அதிரடியாக எடுத்து விட்டால் போதுமானது. ஆஸ்திரேலியாவில் நமது ஆட்டக்காரர்கள் அதைத்தான் இன்னமும் செய்து கொண்டிருக்கிறார்கள். ஐ.பி.எல் இல் மட்டையைக் கண்டபடி சுழற்றி சுமார் 30 ஓட்டங்கள் எடுத்தால், அவ்வப்போது தட்டுத் தடுமாறி ஒரு 50 எடுத்து விட்டால், 20 லட்சம் டாலர்களைச் சம்பாதித்து விடலாம். 90 நாள் சீசனில் ஒரு சில முறை நான்கு ஓவர்கள் பந்து வீச வேண்டும், அவ்வளவுதான் தேவை. மோசமான முயற்சிக்கே இவ்வளவு ஊக்கம் கிடைக்கும் போது சிறப்பாகச் செயல்படுவது தேவையில்லாமல் போய் விடுகின்றது.

இந்திய கிரிக்கெட் வாரியம் என்ற ஒரே நிறுவனம் தனியார் (ஐ.பி.எல்) கிரிக்கெட்டையும், தேசிய கிரிக்கெட்டையும் நிர்வாகம் செய்கின்றது. அவற்றில் ஒன்றின் மூலம் பெருமளவு பணம் சம்பாதிப்பதை சாத்தியமாக்குகின்றது. தங்க முட்டையிடும் வாத்தான இன்னொன்றின் கழுத்தை நெரிக்கின்றது. நம்ம ’பசங்க’ அதிகமாக கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என்பது பிரச்சனை இல்லை. அவர்கள் உண்மையான கிரிக்கெட் விளையாடவில்லை என்பதுதான் சிக்கல். கவனமும், செறிவும், நுட்பமும், ஆற்றலும் சிறிதளவு கூட தேவைப்படாத ஐ.பி.எல் 20/20 இல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அது வெளிப்படையாகத் தெரிகின்றது.

அதிகமாகி வரும் ஐபிஎல் தாக்கம்

நமது அணியில் விளையாடுபவர்கள் மோசமான வீரர்களா என்ன? புண்பட்ட நம்முடைய மனம் அந்த எளிய முடிவுக்கு கொண்டு வந்து விடுகிறது. இப்போது இது பைத்தியக்காரத்தனமாகத் தோன்றினாலும், இதுவரை இல்லாத மிகச்சிறந்த பேட்டிங் வரிசை என்ற அடித்தளத்தின் மீதுதான் இந்திய கிரிக்கெட் வெகு காலமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது உண்மை. ஒரு டெண்டுல்கர், டிராவிட், லட்சுமண் அல்லது சேவாக் போன்ற உன்னதமும், தரமும், சாதனையும் நிறைந்த வீரர்களை நாம் இனி ஒரு போதும் பார்க்கவே முடியாமல் போகலாம். கடைசியில் மிச்சமிருக்கும் டெஸ்ட் போட்டியில் அணி சிறப்பாக விளையாடுவதைக் காணக் கிடைக்கலாம். ஆனால், நான் அதை நம்பிக் கொண்டிருக்கவில்லை.

விளம்பரத்தால் இயக்கப்பட்டு, ஊடகங்களால் வழி நடத்தப்பட்டு, பரபரப்பை இலக்காக வைத்து விளையாடுவது ஐ.பி.எல் இல் அளவுக்கு அதிகமாக இருக்கின்றது. குறுக்கப்பட்ட மைதான எல்லைகளைத் தாண்டி சிக்சர்கள் விளாசுவது அல்லது களத்தில் இறங்கி சுமார் 30 பந்துகள் விளையாடி விட்டுப் போவது, இவற்றுக்காக பெரிய அளவில் புகழப்பட்டு, பணத்தை மூட்டையாகக் குவித்துக் கொள்ளலாம். ஐ.பி.எல் சீசனில்  விளையாடிய சில வீரர்கள் முக்கியமான ஆட்டப் பயணங்களுக்கு முன்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்கிந்தியத் தீவுப் பயணத்தைத் தவிர்த்தார்கள். மற்றவர்கள் ’களைப்பாக’ உணர்ந்த போது, நாட்டுக்காக விளையாடுவதிலிருந்து ’இடைவேளை’ எடுத்துக் கொண்டார்கள். ஆனால் காயத்தோடும், கட்டுகளோடும் ஐ.பி.எல் இல் விளையாடினார்கள். இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் நடந்தவை காத்துக் கொண்டிருந்த பேரழிவுகள். நம்மிடம் மகத்தான ஆட்டக்காரர்கள் இருந்ததால் அவை கொஞ்சம் தள்ளிப் போடப்பட்டன, அவ்வளவுதான்.

எவ்வளவு திறமையிருந்தாலும், யாருக்காக விளையாடுகிறீர்கள் என்பது முக்கியம். ’உங்கள் நாட்டுக்காக விளையாடுகிறீர்களா? கிரிக்கெட்டை இந்தியாவில் உயர் நிலைக்குக் கொண்டு வந்த தேசிய அணியின் வெற்றி தோல்விகளைப் பின்தொடரும் கோடிக்கணக்கான மக்களுக்காக விளையாடுகிறீர்களா? அல்லது நீங்கள் விஜய் மல்லையா, முகேஷ் அம்பானி போன்றவர்களுக்காக விளையாடுகிறீர்களா?’ சுயநலத்திற்காக ஐ.பி.எல் மீது காதலாகிப் போயிருக்கும் ஊடகங்கள் எழுப்ப முடியாத முக்கியக் கேள்வி இது. இந்தியாவின் மிகச்சிறந்த திறமையாளர்களை நாம் தனியார் அணி உரிமையாளர்களுக்கு உரிமையாக்கினோம். அதற்கான விலையை இந்திய கிரிக்கெட் கொடுக்கிறது.

இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் நம்மைத் துவைத்துக் காயப் போட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஐ.பி.எல்லில் விளையாடவில்லை. சிலர் வேண்டுமென்றே அதைத் தவிர்க்கும் சரியான முடிவை எடுத்தார்கள். சூழலைப் புரிந்து கொள்வது என்பது கால நிலையையும், ஆடுகளத்தையும் மட்டும் பொறுத்தது அல்ல. உண்மையான விளையாட்டுக்கு ஏதுவாக மனதளவில் தயாராகிக் கொள்வதையும் பொறுத்தது. ஊக்கத்துக்கான அடிப்படையைப் பற்றித் தெளிவாக இருப்பதையும் பொறுத்தது.

ஐபிஎல்

’நாட்டுக்கு முன்னதாக கிளப்’

இந்திய அணியின் திறமையைப் பார்த்து அதிர்ச்சி அடைய நமக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. ஆனால், ஆச்சரியப்படுவதற்கு எந்த உரிமையும் இல்லை. ஒவ்வொரு அடியும், ஒவ்வொரு பாதையும் இதற்குத்தான் வழி வகுத்தது. வீரர்கள் தேசிய அணியின் போட்டிகளைத் தவிர்த்து விட்டு ஐ.பி.எல்லில் விளையாடிய போது நடந்த ’நாட்டுக்கு முன்னதாக கிளப்’ விவாதம் நினைவில் இருக்கிறதா?

’கிளப்புகள்’ என்ற விஷயமே இங்கு இல்லை என்ற உண்மையை அந்த விவாதம் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. குறைந்தபட்சம் கிளப்புகள் என்று பன்மையில் இல்லை. ஐ.பி.எல் ’கிளப்புகள்’ மற்ற விளையாட்டுக்களில் இருக்கும் கிளப்புகளைப் போல வெகுஜனங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. விவாதம் ’நாட்டுக்கு முன்னதாக கிளப்’ என்பதைப் பற்றியது அல்ல. அதற்கு அப்படி ஒரு உருவம் தருவது, இந்த சீரழிவுக்கு ’நமது கிளப்பை ஆதரிக்கும் மக்களுக்காக விளையாடுகிறோமா அல்லது தேசிய அணியை ஆதரிக்கும் கோடிக்கணக்கானவர்களுக்காக விளையாடுகிறோமா?’ என்ற இல்லாத தார்மீக மேற்பூச்சைக் கொடுக்கிறது.

உண்மையில் இங்கே இருக்கும் ஒரே ’கிளப்’ அரசு மானியம் பெறும் கோடீஸ்வரர்களின் கிளப் மட்டும்தான்.

கிரிக்கெட் ஸ்தாபனத்தின் வழியாக ஆட்டக்காரர்களின் (மற்றும் பெரும்பாலான ஊடகங்களின்) விசுவாசம் இந்த கிளப்பிற்குத்தான் உள்ளது. பிசிசிஐ என்பது இப்போது பில்லியனர்கள் (கோடீஸ்வரர்கள்) கட்டுப்படுத்தும் இந்திய கிரிக்கெட் என்பதைத்தான் குறிக்கிறது. நமது முன்னணி கிரிக்கெட் திறமையாளர்கள் கார்ப்பரேட் நிதி நிலை அறிக்கை (பேலன்ஸ் ஷீட்) யின் சொத்துக்களாகச் சுருக்கப்பட்டு விட்டனர்.

ஆஸ்திரேலியப் பயணத்தின் பின்னடைவுகளுக்கு இந்திய கிரிக்கெட்டின் மூத்த நால்வரையும் அவமானப்படுத்தி பலி கொடுப்பது, ஐ.பி.எல் இந்திய கிரிக்கெட்டை எப்படிச் சீரழிக்கின்றது என்ற விவாதத்தை திசை திருப்பி விடுவதாகவே முடியும். விமர்சனங்கள் அனைத்தும் ஆட்டக்காரர்களைப் பற்றியும், அவர்களின் மோசமான விளையாட்டை பற்றியுமே இருக்கின்றன. தேர்வாளர்கள் மீது கூட சில பாய்ச்சல்கள் நடக்கலாம். ஆனால் ஐ.பி.எல் எப்படி இந்திய கிரிக்கெட்டைக் குதறி சின்னாபின்னப்படுத்தியிருக்கிறது என்பதும், உலகம் முழுவதிலும் கிரிக்கெட்டுக்கு எப்படி தீங்கிழைத்திருக்கிறது என்பதும் பேசப்படப் போவதில்லை.

விளையாட்டுத் திறன் இல்லை என்று இப்போது கிழித்துக் குதறப்படும் லட்சுமணன் ஆஸ்திரேலியாவில் பெருமைப்படும்படியான சராசரி வைத்திருப்பவர். சந்தேகத்துக்கிடமில்லாமல் எல்லாக் காலங்களிலும் சிறந்த மட்டையாளர்களில் ஒருவர். இன்னும் ஓரிருவர்களும் அவரைப் போன்றவர்கள்தான். இதற்கு முன்பு அவர்கள் ஆஸ்திரேலியாவில் விளையாடியதில்லை என்றோ, நன்கு செயல்படவில்லை என்றோ சொல்ல முடியாது. இந்த முறையின் வீழ்ச்சி வயதாகி விட்டதால் மட்டும்தானா? சில வாரங்களுக்கு முன்பு,  இந்தப் பயணம் ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவை வெற்றி கொள்ள மிகச்சிறந்த ஒரு வாய்ப்பு என்று நிபுணர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால் நமது மிகச் சிறந்த அணி விளையாடச் செல்கின்றது. மிகச் சிறந்த அணி எங்காவது ஒரு சில வாரங்களில் கிழடு தட்டி விடுமா? என்ன நடந்தது?

ஐ.பி.எல் நடந்தது. இந்தப் பேரழிவுப் பயணங்களுக்கு வெகுநாள் முன்பே அது நடந்தது. 90 நாட்களுக்கு கிளப் மட்டத்திலான தரக்குறைவான கிரிக்கெட் விளையாடி காயங்களைச் சுமந்து கொண்டிருந்த வீரர்களால் நிரம்பியிருந்த அணி இருந்தது. ஆண்டுதோறும் மேலும் மேலும் தரக்குறைவான ஆட்டத்துக்குத்தான் ஐ.பி.எல் அவர்களைத் தயாரிக்கிறது, உயர் தரத்திலான கிரிக்கெட்டுக்காகத் தயாரிப்பதில்லை. காயங்களோடு அவர்கள் ஐ.பி.எல்லில் தொடர்ந்து விளையாடினார்கள். ஏனென்றால் பிசிசிஐ – ஐ.பி.எல் தனியார் கிரிக்கெட்டுக்குத்தான் பெருமளவு பணத்தைத் திரட்டியது, உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு இல்லை.

உள்நாட்டு விளையாட்டுதான் இந்திய கிரிக்கெட்டுக்கு திறமையானவர்களை உருவாக்கி அளித்து வருகிறது. ரஞ்சிப் போட்டிகளின் மூலம்தான் நமது மகத்தானவர்கள் உருவானார்கள். சிலர் 19 வயதுக்குக் குறைவானவர்களின் ஆட்டங்களின் மூலமாக வளர்ந்தார்கள். ஐ.பி.எல் மூலமாக ஒருவர் கூட உருவெடுக்கவில்லை. உண்மையில் ஐ.பி.எல் மிக நளினமான டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டக்காரர்களாக உருவெடுத்திருக்கக் கூடிய இளைஞர்கள் மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் இன்று ஊட்டச்சத்து பாய்வது ஐ.பி.எல் ஐ நோக்கித்தான்.

ஆஸ்திரேலியாவில் ஒரு வலுவான உள்நாட்டுப் போட்டியும். ஆரோக்கியமான ஆட்ட மரபும் இருக்கிறது. நாம் கவனக்குறைவால் நம்முடையவற்றை அழித்துக் கொண்டிருக்கிறோம். நினைத்துப் பாருங்கள் ; பிசிசிஐ உள்நாட்டு விளையாட்டின் நிலைமையை உயர்த்தியிருக்க முடியும். அதைச் செய்வதற்கான பணம் அதனிடம் இருக்கின்றது. ஆனால் விருப்பம் இல்லை. ஐ.பி.எல் மூலம் வரும் பணம் தனியார் பைகளுக்குள் போகின்றது. உள்நாட்டு கிரிக்கெட் மூலம் அதைச் சாதிப்பது மிகவும் கடினம். கிரிக்கெட்டின் அதி-வணிகமயமாக்கலின் விளைவாக அது இன்று பணம், முகவர்கள், அதிகார மட்டத்தில் ஆதரவு தேடுபவர்கள், பெரு நிறுவனங்கள், அங்கீகாரம் தருபவர்கள், விளம்பரதாரர்கள் இவர்களின் குழப்படியாக இருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டு ஒரு பக்க விளைவாகச் சுருங்கி விட்டிருக்கின்றது. (சில ஆட்டக்காரர்களை அணியில் சேர்க்காமல் இருப்பது இந்த அமைப்பில் நிலவும் ’பிராண்ட் மதிப்பை’ கருத்தில் கொண்டால் தேர்வாளர்களுக்கு முடியாத ஒன்றாக இருக்கின்றது).

ஐபிஎல்-மங்காத்தா

வெகு தூரம் வரை பாதிப்பு

தாக்கம் இந்தியாவுக்கும் அப்பால் இருக்கிறது. எல்லா இடங்களிலும் கிரிக்கெட்டின் தரமும், கால அட்டவணைகளும், முன்னுரிமைகளும் ஐ.பி.எல் ஆல் பாதிக்கப்படுகின்றன. இலங்கையின் இதுவரை மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஏ. மலிங்கா, ஐ.பி.எல் இல் கவனம் செலுத்துவதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். சில நாடுகளுக்கு, இது காலப்போக்கில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியது. ஐ.பி.எல் இல் விளையாடும் பல ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து வீரர்கள் ஓய்வு பெற்றவர்கள். ஆஸ்திரேலியாவில் இன்னமும் விளையாடும் மூத்த ஆட்டக்காரர்கள் தேசியக் கடமையில் கவனம் செலுத்துவதற்காக ஐ.பி.எல் ஐத் தவிர்த்து விட்டார்கள்.

இந்தியாவில் நமது மிகச் சிறந்த ஆட்டக்காரர்கள் ஐ.பி.எல் இல் ஆழமாகப் புதைந்திருக்கின்றனர். இப்போது, வெளியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அது தெரிகின்றது. ஐ.பி.எல் – டி20 இல் சிரமப்படும் தேவையே இல்லாமல் எளிதாக விளையாடும்படி இருக்கிறது என்று இந்தியாவில் ரசிகர்களால் மிகவும் நேசிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் தனது நண்பர்களிடம் தனிப்பட்ட முறையில் சொன்னாராம். பீல்டிங்? ஒரு போட்டியில் அதிகபட்சம் ஐந்து தடவைகள் பந்து உங்கள் பக்கமாக வரக்கூடும். அதிகபட்சம் நீங்கள் நான்கு ஓவர்கள் பந்து வீச வேண்டியிருக்கும். எல்லாம் நான்கு மணி நேரத்தில் முடிந்து போகும். ஒரு நாள் சர்வதேச போட்டிகள் திறமையை இன்னும் பல மடங்கு சோதிப்பவை, ஐந்து நாள் டெஸ்ட் போட்டிகள் சந்தேகத்துக்கிடமில்லாமல் உச்சபட்ச சவாலாக இருப்பவை.

ஒரு சில முன்னாள் தலைசிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் – இந்திய கிரிக்கெட்டுக்கு எதிரிகளாக அவர்கள் இல்லை – ஐ.பி.எல் இன் தாக்கத்தைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள். இயான் போத்தம் மற்றும் அர்ஜூன ரணதுங்காவும் அவர்களில் அடங்குவார்கள். இந்தியாவில், நமது தலைசிறந்த சாதனையாளர்கள் ஐ.பி.எல் ஐ விமர்சிப்பதைத் தவிர்ப்பது மட்டுமில்லாமல், எண்ணற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதற்கு வக்காலத்தும் வாங்குகிறார்கள். பிசிசிஐ-ஐ.பி.எல் பண இயந்திரத்தின் உள்வாங்கும் ஆற்றல் வியப்புக்குரியது. பிசிசிஐ மூலம் வர்ணனையாளர்களுக்கு இருக்கும் விசுவாசங்களுக்கிடையிலான (தொழில் மற்றும் வாங்கிய காசு) சிறிதளவு முரண்பாடு அவ்வப்போது தற்காலிகமாகப் பேசப்படுகிறது. பிசிசிஐ மூலம் கோடிக் கணக்கில் வருமானம் ஈட்டும் அவர்கள் அதன் செல்லக் குழந்தையை விமர்சிக்கப் போவதில்லை.

கோடிக்கணக்கான விளம்பர வருவாய் ஊட்டப்பட்ட ஊடகங்களும் தமது குரலை உயர்த்தும் என்று எதிர்பார்க்க முடியாது. பிசிசிஐ-ஐ.பி.எல் இல் நடக்கும் ஊழல்களிலும், விசுவாச முரண்பாடுகளிலும் ஒரு பகுதி இருந்தால் கூட வேறு எந்த நிறுவனமும் நீண்ட காலம் முன்னரே கூர்மையான ஊடக மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும். ஐ.பி.எல் மீது வருமான வரித்துறை அல்லது அமலாக்கத் துறை நடவடிக்கைகள் எடுக்கும் போதுதான் விபரங்கள் சிறிதளவு வெளியில் வருகின்றன. ஊடகங்களினால் அல்ல. ஐ.பி.எல் வலைப்பின்னலில் இடம் பெற்றுள்ள பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அதனால் அவர்கள் அதை விமர்சன நோக்கில் ஆய்வு செய்ய முடியாமல் போகின்றது.

இப்போது விளையாடும் ஆட்டக்காரர்கள் அதை விமர்சிப்பதற்கு வாய்ப்பே இல்லை. (தங்கள் விளையாட்டு வாழ்க்கையை மதித்தால் பிசிசிஐ செய்யும் எதையும் விமரிசிக்க முடியாது) இது கிரிக்கெட்டின் காமதேனுவாக முன் வைக்கப்படும் போது எப்படி அதை விமர்சனம் செய்ய முடியும்?

பிசிசிஐ தெரிந்தே தேர்ந்தெடுத்த/தேர்ந்தெடுக்கும் நிலை அது. அது நாட்டில் கிரிக்கெட்டைக் கட்டுப்படுத்துகிறது. பண பலத்தைக் கொண்டு உலக அளவிலும் அது ஆதிக்கம் செலுத்துகின்றது. மற்ற நாடுகளின் வருத்தத்தையும் அது நமக்குச் சம்பாதித்துத் தருகின்றது. பிசிசிஐ கிரிக்கெட்டின் ஒரு வடிவத்தை விட இன்னொரு வடிவத்துக்கு சிறப்புரிமை கொடுக்க முடிவு செய்ததை பொறுத்தது இல்லை அது. சிலர் வாதிடுவது போல கிரிக்கெட்டில் மூன்று வடிவங்களுக்குமே இடம் இருக்க முடியும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் பொது மக்களின் நலன்களை ஒதுக்கி விட்டு தனியார் நலனுக்கு சிறப்புரிமை கொடுக்கின்றது. நாம் அதற்கான விலையைக் கொடுக்கிறோம். இதுதான் பிரச்சனை.

கூக்குரல்கள் அடங்கி, சில ஆட்டக்காரர்கள் பலி கொடுக்கப்பட்ட பிறகும் நிலைமை சீரடையப் போவதில்லை. இந்திய கிரிக்கெட்டின் அமைப்பும், ஆட்ட மரபும் பெருமளவு மோசமான திசையில் செலுத்தப்பட்டிருக்கின்றன. உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு புத்துயிர் கொடுப்பதைப் பற்றியும், கோடீஸ்வரர்கள் கிளப்பிலிருந்து கிரிக்கெட்டை மீட்டெடுத்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதைப் பற்றியும் நாம் யோசிக்க வேண்டும்.

_______________________________________________

நன்றி: தி இந்து – தமிழாக்கம்: செழியன்

கார்டூன் – ஆச்சார்யா

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்