தோழர் ஏகலைவன் (எ) மகாலிங்கம் அவர்களுக்கு சிவப்பஞ்சலி!

10
தோழர்-ஏகலைவன்-டெய்லர்-மகாலிங்கம்
தோழர் ஏகலைவன்

வேலூர் மாவட்டம். திருப்பத்தூர் பகுதி விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் ஏகலைவன் (எ) ‘டெய்லர்’ மகாலிங்கம்  அவர்கள் 28.05.2012 அன்று காலை நடந்த சாலை விபத்து ஒன்றில் தனது 65 வது வயதில் அகால மரணமடைந்தார்.

திருப்பத்தூர் – கந்திலி ஒன்றிய விவசாயிகள் விடுதலை முன்னணி மற்றும் வேலூர் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள் பங்கேற்புடன் இறுதி அஞ்சலிக் கூட்டம் நடத்தப்பட்ட பிறகு 29.05.2012 அன்று தோழரின் உடல் அவரது சொந்த நிலத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது

1980 களில் தோழர் ‘இருட்டுப் பச்சை’ அவர்களின் காலத்திலிருந்தே நக்சல்பாரி புரட்சிகர அரசியலோடு தொடர்பு கொண்டு பிறகு 1980 களின் மத்தியில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தோடு தன்னை இணைத்துக் கொண்டவர் தோழர் ஏகலைவன். அன்று முதல் திருப்பத்தூர் பகுதியில் ம.க.இ.க வின் முகவரியாகவும் புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயம் ஏடுகளின் முகவராகவும் விளங்கியவர்.

இவர் ஒரு சிறந்த தையற் கலைஞர். அதனால் வங்கி – தொலைத் தொடர்பு – மருத்துவ மனை – நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்  என பலரும் இவரிடம்தான் தங்களது ஆடைகளை தைத்துச் செல்வார்கள். இவர்களிடம் புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயம் ஏடுகளையும் அமைப்பின் பிரசுரங்களையும் தொடர்ந்து விநியோகம் செய்து வந்தார். இதன் மூலமாக திருபத்தூரில் ம.க.இ.க பிரபலமடைவதற்கு ஆதாரமாகத் திகழ்ந்தவர்.

இவர் ஒரு சிறந்த ஓவியக் கலைஞரும் கூட. தொடக்க காலத்தில் புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயம் ஏடுகளின் விளம்பரங்களையும் ம.க.இ.க வின் போராட்டச் செயத்திகளையும் சுவரெழுத்துகளாகவும் சுவரொட்டிகளாகவும் தன்னந்தனியாகவே மக்களிடையே எடுத்துச் சென்றவர். இவரது சுவரெழுத்துக்கள் பிறரை பிரமிக்க வைக்கும் அளவுக்கு மிகவும் எடுப்பாக இருக்கும். கோடுகள் போடாமலேயே மிகப் பெரிய சுவரெழுத்துக்களை எழுதும் வல்லமை பெற்றவர். கந்திலி – திருப்பத்தூர் ஒன்றியங்களில் ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் இவரது கைவண்ணத்தில் மிளிர்ந்தவைகளே.

திருப்பத்தூரில் பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்ததோடு அக்கூட்டங்களில் தலைமைப் பொறுப்பையும் ஏற்று நடத்தி உள்ளார். திருப்பத்தூர் பகுதியில் தொடர்ந்து மக்களிடையே ‘நக்சலைட்’ பீதியூட்டி வந்த அரசாங்கத்தின் பொய்ப் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கு தோழரின் துணிச்சலான செயல்பாடு மிகப் பெரிய பங்காற்றியுள்ளது.

ஒரு துணிச்சலான தோழராக விளங்கிய அதே நேரத்தில் கடின உழைப்பாளியாகவும் விளங்கியவர். மிதிவண்டிதான் அவரது 65 வது வயது வரை இவரது உற்ற நண்பன். சுவரெழுத்து எழுதுவதாக இருந்தாலும், சுவரொட்டி ஒட்டுவதாக இருந்தாலும் அல்லது தனது தையற்கடைக்கு வருவதாக இருந்தாலும் தனது கிராமத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள திருப்பத்தூருக்கு சளைக்காமல் மிதி வண்டியிலேயே பயணித்தவர். மரணத்தின் போதுகூட மிதிவண்டியோடுதான் மரணத்திருக்கிறார்.

சீனக் கதைகளில் வரும் ‘மலையைக் குடைந்த மூடக்கிழவனை’ப் போல தனது வீட்டருகே இருக்கும் ஏரிவாய்க்காலின் குறுக்கே ஒரு சிறு அணை போன்ற தடுப்பை தன்னந்தனியாய் அமைத்தவர். இவரது கடின உமைப்பை பறைசாற்றும் சான்றாய் ஊர் மக்களால் இது பேசப்படுகிறது.

அமைப்பு வேலைகளை முழுநேரமாக எடுத்துச் செயல்படும் தோழர்களைப் பராமரிப்பதிலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் அதிக அக்கறை காட்டியவர் தோழர் ஏகலைவன். அத்தகைய தோழர்களின் உணவு – உடை மற்றும் தோழர்களின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்குத் தேவையான உடை-நோட்டுப் புத்தகங்களை தானே முன் வந்து பூர்த்தி செய்வார். இத்தகைய தேவைகளை பூர்த்தி செய்ய கையில் உள்ள பணம் போதவில்லை என்றால் கடன் வாங்கியாவது ஈடு செய்வார். கழிவிரக்கம் கொண்டு அவர் இவ்வாறு செய்வதில்லை. மாறாக புரட்சியின் மீது கொண்ட பற்றுதலின் காரணமாகவே இவ்வாறு செய்த வந்தார்.

தனது குடும்ப உறுப்பினர்களை புரட்சிகர வேலைகளுக்கு ஆதரவாக மாற்றியமைத்தவர். சிறந்த தெருக்கூத்துக் கலைஞரான அவரது தந்தை நாராயணன் அவர்களையும் தெருக்கூத்துகளில் புரட்சிகரப் பாடல்களை எழுதிப் பாடும் அளவிற்கு மாற்றியமைத்தவர். அவரது வீடு திருப்பத்தூர் வட்டாரத் தோழர்களின் பாசறையாகவே விளங்கியது எனலாம்.

பிறர் என்ன சொல்வார்களோ என்று கவலைப்படாமல் மிகவும் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டவர். அனைத்து தரப்பு மக்களிடமும் வயது வரம்பு பார்க்காமல், சாதி – மதம் பார்க்காமல் மிகவும் இயல்பாகப் பழகியவர். இவரது இறுதி அஞ்சலியில் கலந்து கொண்ட மக்கள் கூட்டமே இதற்கு சாட்சியாய் அமைந்தது.

சாதிய ஏற்றத்தாழ்வுகள் கோலோச்சும் கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் பிற சாதியினரின் வீடுகளுக்குள் இன்றைக்குக்கூட செல்ல முடியாது. ஆனால் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஒடுக்கப்பட்ட சாதியினர் தனது வீட்டிற்கு வருவதும், உறவினர்கள் போல அவர்கள் உறவு முறை சொல்லி பழகுவதையும் நடைமுறைப் படுத்தியதோடு தனது குடும்ப உறுப்பினர் அனைவரிடமும் அதை ஜனநாயகப் படுத்தியவர்.

கடந்த சில ஆண்டுகளாக முன்பு போல நடைமுறை அரசியல் பணிகளில் ஈடுபடவில்லை என்றாலும் அவரது புரட்சிகர உணர்வு சிறிதும் குன்றவில்லை. இறுதி அடக்கத்தின் போது செய்யப்படும் சடங்கு சம்பிரதாயங்களை அவரது பிள்ளைகள் புறக்கணித்ததை பார்த்த போது அவரது புரட்சிகர உணர்வின் மீது பிள்ளைகள் கொண்டிருந்த மதிப்பை உணர முடிந்தது.

தன்னை மட்டும் உயர்த்திக்கொள்ள பலர் முயலும் போது பொருளாதார நிலையில் பின்தங்கியிருந்த போதும் இவர் மட்டும் தனது வாழ்க்கையை புரட்சிகர அரசியலோடு பிணைத்துக் கொண்டதற்குக் காரணம் சமூக விடுதலையின் மீது இவர் கொண்டிருந்த வேட்கையே. அவரது வேட்கையை நாமும் நெஞ்சிலேந்துவோம்! புதிய ஜனநாயகப் புரட்சிப் போராட்டதை முன்னெடுத்துச் செல்வோம்!!

தோழர் ஏகலைவன் அவர்களுக்கு வீரவணக்கம்!

 __________________________________________________________________________

தகவல்: விவசாயிகள் விடுதலை முன்னணி,
திருப்பத்தூர்-கந்திலி ஒன்றியங்கள்.

____________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

 தொடர்புடைய பதிவுகள்