privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்லீனா மணிமேகலை பிடிபட்டார்!

லீனா மணிமேகலை பிடிபட்டார்!

-

காலச்சுவடு ஜூன் – 2012 இதழில் அதன் ஆசிரியர் கண்ணன் பத்தியொன்றில் லீனா மணிமேகலையைப் பற்றி “புரட்சித் தலைவி” எனும் தலைப்பில் எழுதியிருக்கிறார். முதலில் அதை படியுங்கள்,

______________________________________________

புரட்சித் தலைவி

டாடா ஸ்டீல் நிறுவனம் தனது பல்வேறு திட்டங்களுக்கு ஆதிவாசிகளிடமிருந்து பல இடங்களில் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது.

1907இல் சாக்சி – காலிமட் பகுதியில் 24 கிராமங்கள் அழிக்கப்பட்டு ஜாம்ஷெட்பூர் நகரமும் டாடா ஸ்டீல் தொழிற்கூடமும் உருவாயின. தற்போது ஒரிசா மாநிலத்தில் ஜாஜ்பூர் மாவட்டத்தில் கலிங்கா நகரில் ஏற்பட இருக்கும் இரும்புத் தொழிற்கூடத் திட்டமும் ஜார்கண்ட் மாநிலத்தில் சாரைக் கேலா – கார்சாவான் மாவட்டத்தில் டொண்டோபாசியில் ஏற்பட இருக்கும் டாடா ஸ்டீலின் கிரீன்பீல்ட்ஸ் திட்டமும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தர் மாவட்டத்தில் டாடா ஸ்டீல் தொழிற்கூடத் திட்டமும் ஆதிவாசிகளால் வன்மையாக எதிர்க்கப்படுகின்றன.

டாடா போன்ற ஒரு கார்ப்போரேட் நிறுவனம் இவ்வாறு எதிர்ப்புகளைச் சந்திக்கும்போது, எதிர்ப்பின் காரணங்களை, மக்கள் பிரச்சினைகளை, அவர்கள் வாழ்வாதாரங்கள், வசிப்பிடங்கள் அழிக்கப்படுவதைக் கருதுவதில்லை. மாறாகத் தனது பிம்பம் போராட்டங்களால் சிதைக்கப்படுவதைப் பற்றிக் கவலை கொள்கிறது. தேசத்திற்குச் சேவைசெய்யும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட, உயரிய மதிப்பீடுகளைப் பின்பற்றும் நிறுவனம் டாடா என்ற காலங்காலமாக உருவாக்கப்பட்ட கருத்தாக்கம் மாசுபடுவதைத் தவிர்க்க விரும்புகிறது. இதற்குச் சிறந்த வழிமுறை விளம்பரப் படங்களைத் தயாரிப்பது. இதில் இரண்டு நோக்கங்கள் உண்டு. ஒன்று, நடுத்தர வர்க்கத்திடம் டாடா நிறுவனம் பற்றிய உன்னதக் கருத்தாக்கத்தைக் கட்டமைப்பது. இரண்டு, விளம்பரங்கள் வழி ஊடகங்களுக்குப் பெருந்தொகையைக் கொடுத்து போராட்டங்கள் செய்தியாகாமல் தடுப்பது. விளம்பரம் கையூட்டாக மாறும் சாகசம். மேற்படி ஆதிவாசியின் போராட்டங்களுக்கு எதிர்வினையாகப் பல விளம்பரங்களை டாடா நிறுவனம் தயாரிக்க முடிவுசெய்து அப்பணியை ஒகில்வி & மாத்தர் என்ற 120 நாடுகளில் அலுவலகங்களுடைய பன்னாட்டு விளம்பர நிறுவனத்திடம் ஒப்படைத்தது. அவர்கள் தயாரித்த விளம்பரங்களில் ஒன்றின் தலைப்பு ‘தேஜஸ்வினி.’ ஆதிவாசிப் பெண்களின் முன்னேற்றத்திற்காக டாடா ஸ்டீல் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட அமைப்பு ‘தேஜஸ்வினி’. பிரகாசம் அல்லது ஒளிமயம் என்று பொருள்.

2006 ஜனவரி 2இல் கலிங்க நகரில் டாடா ஸ்டீல் நிறுவனத்திற்கு எதிராகப் போராடிய ஆதிவாசிகள் 14 பேர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். 31 பேர் படுகாயமடைந்தனர். டாடாவின் கூலிப்படையும் போராடிய ஆதிவாசிகளைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. போஸ்ட் மார்டம் செய்யப்பட்ட நான்கு உடல்களின் கைகள் மணிகட்டிற்கு மேல் வெட்டப்பட்டு இருந்தன. இந்தியாவின் கார்ப்பொரேட் – அதிகார வர்க்க – ஊடக ஊடாடல் பற்றிப் பல புரிதல்களை நமக்குத் தந்த அரிய ஆவணம் நீரா ராடியா ஒலிப்பதிவுகள். இதில் பத்திரிகையாளர் வீர் சிங்வியிடம் டாடாவின் அதிகாரப்பூர்வ ஏஜெண்டாகப் பணிபுரிந்த ராடியா, கலிங்க நகர் ‘மாவோயிஸ்டுக’ளுக்கு எதிரான தனது போராட்டம் பற்றிக் குறிப்பிடுகிறார். ஆதிவாசிகளின் எதிர்ப்பை மாவோயிஸ்டு பிரச்சினையுடன் இணைத்திட ஊடகங்கள் வழி டாடா ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டதற்கு இது சான்றாகிறது. கலிங்க நகரில் போராடும் மக்கள் துணை ராணுவத்தினர் மீது மக்கள் சில கற்களை வீசியதும் அவர்கள் அம்மக்களின் தானியங்களை அழித்து, பாத்திரங்களை உடைத்து, நீரில் மண்ணெண்ணெயைக் கலந்த அராஜகத்தையும் இந்த ஒளிப்பதிவில் பாருங்கள்

ஆதிவாசிகளுக்கு எதிரான தனது வன்செயல்பாடுகள் ஊடகங்கள் வழி வெளிக்குத் தெரியாமல் டாடா தடுத்து நிறுத்தினாலும் மக்கள் தாங்களே எடுத்த பதிவுகளை you-tube இல் பகிரங்கப்படுத்தினார்கள். அப்பதிவுகளை ( http://www.youtube.com/samadrusti ) இங்கே காணலாம்.

ஆதிவாசிகளின் வாழ்விடங்களை அழிக்கும் பல திட்டங்களைச் செயல்படுத்தி வரும் டாடா ஸ்டீல் தன்மீதான கறையை நீக்க உருவாக்கிய ஆதிவாசிப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்தான் ‘தேஜஸ்வினி.’ தேஜஸ்வினி எனும் விளம்பரப் படம் அத்திட்டத்தின் சிறப்பை முன்னிறுத்துவதாக உள்ளது. அன்றாட வேலைகளிலும் நடனமாடியும் ‘சாதாரண’மாக வாழ்ந்த ஆதிவாசிப் பெண் ஒருவர் டாடா ஸ்டீலில் சேர்ந்த பிறகு பேண்ட் சட்டை அணிந்து, ஸ்கூட்டர் ஓட்டி, வாகன ஓட்டுநராகி வாழ்க்கையில் முன்னேறிச் சமூகத்தின் மதிப்பைப் பெறுவதாக விளம்பரக் ‘கதை’ அமைந்துள்ளது. டாடா ஸ்டீல் ஆதிவாசிப் பெண்ணுக்கு உதவுவதாக மட்டும் காட்டுவது இன்று ‘சரியான அரசியல்’ அல்ல. ஆதிவாசிப் பெண்ணும் டாடாவுக்குப் பங்களிப்பதாகக் காட்ட வேண்டும். ஆகவே விளம்பரக் கதையின்படி இந்தப் பெண்ணிடமிருந்து டாடா ஸ்டீலும் கற்றுக்கொள்கிறது. அது ‘துணிச்ச’லைக் கற்கிறது. இது விளம்பரம்.

டாடாவிடம் ஆதிவாசிகளின் வாழ்க்கை முறையை, அவர்களின் சுற்றுச்சூழலை அழிக்கும் பலப்பல திட்டங்கள். அத்திட்டங்களின் ரத்தக் கறையை மூடிமறைக்க ‘தேஜஸ்வினி’ என்று ஒரு நலத்திட்டம். அந்நலத்திட்டத்திற்கு ஒரு விளம்பரம். இந்த விளம்பரத்தைச் ‘சரியான அரசியல்’ கூறுகளுடன் இயக்கப் பொருத்தமான நபராக யார் இருக்க முடியும்? களப் பணியாளர், போராளி, பெண்ணியவாதி போன்ற பிம்பங்களை உடைய ஒருவர்தான் சரியான தேர்வாக இருக்கும். அத்தோடு நாய் விற்ற காசு குரைக்காது என்ற நெஞ்சுறுதி கொண்டவராகவும் இருக்க வேண்டும். டாடா ஸ்டீலும் ஒகில்வியும் சரியான நபரைத் தேர்வுசெய்தன. தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர், இடதுசாரிக் குடும்பத்தைச் சேர்ந்தவர், ஆவணப்பட இயக்குநர், கிட்டத்தட்ட நக்சலைட் லீனா மணிமேகலை. இவ்விளம்பரப் படத்தை இங்கே பார்த்து ரசிக்கலாம். (இத்தகவலை கேம்பெயின் இந்தியாவும் உறுதி செய்திருக்கிறது -வினவு)

‘ஆதிவாசிப் பெண்களை மேம்படுத்தும் நிறுவனம் டாடா’ என்று காட்டிடும் இந்தப் பிரச்சாரப்படத்தை இயக்கிட எத்தனை லட்சம் கிடைத்தது லீனா?

இது வெறும் விளம்பரம்தானே என்று நீங்கள் நினைக்கலாம். விளம்பரத்தின் கடைசி வாசகம் இது: “இது விளம்பரம் அல்ல, வாழ்க்கை.”

– நன்றி காலச்சுவடு
_____________________________________

படித்து விட்டீர்களா?

லீனா-மணிமேகலை
லீனா மணிமேகலை

சீமாட்டி லீனா மணிமேகலை மார்க்சியத்தையும், மார்க்சிய ஆசான்களையும், பொதுவில் அனைத்து வகை அடக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடும் போராளிகளையும், மக்களையும் கொச்சைப்படுத்தி எழுதிய கவிஜைகளை அம்பலப்படுத்தியும், அவரது “செங்கடல்” படப்படிப்பின் போது உதவி இயக்குநர் தீபக்கை, ஷோபா சக்தியை வைத்து அடித்து அவமானப்படுத்தியதை உலகறியச் செய்தும், பின்னர் லீனாவுக்காக அ.மார்க்ஸ் ஏற்பாடு செய்த கூட்டத்தில் எமது தோழர்கள் கேள்வி கேட்டதால் வெளியேற்றப்பட்டது குறித்தும் வினவில் எழுதியிருக்கிறோம்.

எனினும் ஒரு சில ‘அறிவாளிகள்’, ‘நடுநிலையாளர்கள்’ லீனாவுக்காக நீர்த்துப் போன வார்த்தைகளால் வக்காலத்து வாங்கி வந்தனர். அது குறித்தும் வினவில் நீண்ட விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றன. சீமாட்டியின் பெண்ணுரிமை போராளி வேடத்தில் இத்தகைய சிரிப்பு போலீஸ்கள் அடித்துச் செல்லப்பட்டது ஆச்சரியமல்ல. இத்தனைக்கும் அவர் சில ஆவணப்படங்கள் எடுத்தார், சில கவிதைகள் எழுதியிருக்கிறார், ஆபத்தில்லாத முறையில் சில பல குட்டி ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றிருக்கிறார், அந்த பங்கேற்றலில் தனது பங்கை அதிகமாக காட்டி ஏமாற்றியிருக்கிறார் (இது அவரது சக பெண் கவிஞர்களது குற்றச்சாட்டு), ஈழத்தமிழர்களை காசு வாங்கி ஏமாற்றியிருக்கிறார் (இதுவும் ஏமாந்த ஈழத்தமிழர்களின் குற்றச்சாட்டு) தமிழ் சினிமாவில் ஏதாவது ஒரு உயரம் குறைந்த இடமென்றாலும் பரவாயில்லை என்று முயற்சி செய்திருக்கிறார்…. இவைதான் இந்த சீமாட்டியின் ஆளுமை அடையாளங்கள்.

இவற்றினைச் சுருக்கிப் பார்த்தால் காரியவாதமும், பிழைப்புவாதமும், சுயநலவாதமும், விளம்பரவாதமும்தான் சீமாட்டியின் சாரம். இந்தப் பிழைப்பினை வெற்றிகரமாக ஓட்டவே அவர் முற்போக்கு விசயங்கள் கொண்ட, குறிப்பாக பெண்ணுரிமை போராளியாக, அதுவும் கவிதைகள் எனும் சுலபமான வழி மூலம் முன்னிறுத்திக் கொண்டார். எனினும் அந்த முன்னிறுத்தலிலேயே அவரது உட்கிடக்கை அதாவது மேட்டிமைத்தனம் கலந்த மனித குல விரோதம் வெளிப்பட்டிருக்கிறது என்பதுதான் சீமாட்டி எழுதிய கவிதைகள் குறித்த எமது விமரிசனம். இரண்டும் வேறு வேறு அல்ல, ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்தாம்.

அதற்கு வலு சேர்க்கும் விதமாகவே லீனாவின் இந்த தேஜஸ்வினி எனும் கார்ப்பரேட் கைக்கூலித்தனம் வெளிப்பட்டிருக்கிறது. தேஜஸ்வினி என்றால் ஒளிமயமாம். இந்த ஒளிமயத்தின் உதவியால் சீமாட்டியின் இருண்ட பக்கம் தாரை தப்பட்டைகளுடன் தெரிய வந்திருக்கிறது.

லீனா-மணிமேகலை-காலச்சுவடு-
நன்றி காலச்சுவடு

பழங்குடி மக்களை அப்புறப்படுத்தி, சில பல இலட்சங்களை வாங்கிக் கொண்டு டாடாவின் பாகாசுர சுரண்டலுக்கு ஒரு மனித நேய முகமூடியை ஏற்படுத்த வேண்டுமென்றால் அதற்கு ஒரு பாசிச மனம் வேண்டும். அந்த வகையில் சீமாட்டி தான் ஒரு பாசிஸ்ட் என்பதை உலகறியச் செய்திருக்கிறார். தண்டகராண்யாவிலும், ஒரிசாவிலும், ஜார்க்கண்டிலும் கொல்லப்படும் ஒவ்வொரு ஆதிவாதி மக்களின் இரத்தத்தை குடிக்கும் நரவெறிக்கும் சீமாட்டியின் நடத்தைக்கும் வேறுபாடில்லை.

அவரது கவிமனமும், பெண்ணுரிமை போராளி துடிப்பும், ஆவணப்பட அனுபவமும் ஒன்று சேர்ந்து டாடவின் தேஜஸ்வினி விளம்பர படையெடுப்பிற்கு பயன்பட்டிருக்கிறது. தமிழகத்தில் முற்போக்கு வேடதாரியாக அறியப்பட்ட ஒருவர், டாடாவை எதிர்க்கும் முற்போக்கு சக்திகளை வேரறுக்கப் பயன்படுகிறார் என்றால் இந்த இழிவினை என்னவென்று அழைப்பது?

இதில் சீமாட்டி லீனாவின் ஞான குரு அய்யா அ.மார்க்ஸ் சட்டீஸ்கரெல்லாம் போய் வந்தவர், இனி என்ன சொல்லி நியாயப்படுத்துவார்? தொழில் வேறு, கொள்கை வேறு என்று சப்பைக் கட்டு கட்டுவாரா? முடியாது என்றால் லீனாவின் வேடத்தை அம்பலப்படுத்திய எமது தோழர்களை வெளியேற்றினாரே அதற்கு என்ன பதில்? தொழிலும், கலை மனமும் இறுதியில் பழங்குடி மக்களை கொன்று போடுவதற்குத்தானே பயன்படுகிறது? அறிவாளிகளின் அந்தரங்கம் மட்டுமல்ல அவர்களது வெளிப்படையான வாழ்க்கையே இப்படித்தான் ஒரு நாள் நாறியே தீரும். போக, லீனாவுக்காக சப்பைக்கட்டு கட்டிய காணாமல் போன ‘முற்போக்காளர்கள்’, கொட்டை போட்ட ‘பெருச்சாளிகள்’ , போலி கம்யூனிஸ்டு ‘தோழர்கள்’ மற்றும் பெயர் தெரியாத ‘இலக்கியவாதிகள்’ அனைவரும் இப்போது என்ன சொல்வார்கள? ஒன்றும் சொல்லவோ, செய்யவோ முடியவில்லை என்றால் டாடாவின் கைக்கூலி லீனா மணிமேகலையின் அல்லக்கைகள் என்று வரலாற்றில் அழைக்கப்படுவீர்கள். சீமாட்டி நடத்தும் கேளிக்கை விருந்துகளில் கலந்து கொண்டு டாடாவின் காசை குடித்தவர்கள் என்றும் அழைக்கப்படலாம். மொத்தத்தில் அல்லக்கை பட்டம் உறுதி. முடிவு செய்யுங்கள்.

காலச்சுவடு இந்த அம்பலப்படுத்தலை உலகறியச் செய்ததன் காரணம் என்ன? சீமாட்டி லீனா, அறிஞரய்யா அ.மார்க்ஸ் அணியைச் சேர்ந்தவர். அ.மார்க்ஸ் கும்பலுக்கும், காலச்சுவடுக்கும் ஒத்துக் கொள்ளாது. இதில் பெரிய கொள்கை பிரச்சினை எதுவும் இல்லை என்பதோடு எல்லா அறிஞர்கள், இலக்கியவாதிகளிடம் நீக்கமற நிரம்பியிருக்கும் ஈகோ ஃபேக்டரிதான் மூலம். ஆனால் அதற்கு கொள்கை என்ற பெயரில் ஏதாவது சப்பைக் கட்டு கட்டுவார்கள். எனினும் இதில் அ.மார்க்ஸ் அணி காலச்சுவடு அணியிடம் நிறையவே தோற்றிருக்கிறது. அ.மார்க்ஸின் வலது கை, இடது கை என்று அறியப்பட்ட இரவிக்குமார், பொ.வேல்சாமி போன்றோரே காலச்சுவடு அணியில் சேர்ந்து விட்ட பிறகு அறிஞர் சில சில்லறைகளை வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டுகிறார்.

டாடாவிடம் காசு வாங்கியதை அம்பலப்படுத்தியிருக்கும் காலச்சுவடு கண்ணன் தனது முகத்தையும் கொஞ்சம் கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தின் ஆகப் பிற்போக்கான தினமலரிடம் இருந்து இதுவரை காலச்சவடு பெற்ற உதவித் தொகை மட்டும் போற்றத் தக்கதா? இல்லை  ஸ்ரீராம் சிட் பண்ட்டின் பணம் மட்டும் புனிதமானதா? சீமாட்டி டாடாவிடம் பெரிய தொகை வாங்கினார், நாங்கள் சிறிய தொகை என்றெல்லாம் சமாளிக்க முடியாது. தொகை அல்ல பிரச்சினை, தொகையின் பின்னே உள்ள ‘அறம்’தான் முக்கியம்.

ஆளும் வர்க்கங்களின் ஊழல், முதலாளிகளுக்கிடையே உள்ள போட்டியினால் வரும் என்பதற்கு நீரா ராடியா விவாகாரம் ஒரு சான்று. டாடவைப் போட்டுக் கொடுக்க விரும்பிய போட்டி முதலாளிகளின் கைங்கரியத்தால் அந்த ஊழல் வெளிவந்திருக்கிறது. அது போல இலக்கியவாதிகளின் கைக்கூலித்தனத்தையும் அவர்களுக்கிடையே நிலவும் இத்தகைய போட்டிகள்தான் வெளிக் கொண்டு வருகிறது. ஒருவேளை அ.மார்க்ஸ் அணிக்கும், காலச்சுவடுக்கும் தோழமையான உறவிருந்தால் சீமாட்டியின் இந்த ஊழல் வெளிவந்திருக்காது. அதே நேரம் இலக்கியவாதிகள், அறிஞர் பெருமக்கள் எவரும் எப்போதும் ஓரணியாக இருப்பது ‘இயற்கை’க்கு விரோதமானது. முதலாளிகளுக்கும் அதே விதிதான்.

எது எப்படியோ இனி சீமாட்டியை நாம்  கார்ப்பரேட் கைக்கூலி என்று அழைப்பதோடு கூடுதலாக பெண்ணுரிமைப் போராளி   என்றும் அழைத்துக் கொள்ளலாம்.

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: