privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்கருத்துரிமைக் காவலர்களின் சை....லேன்ஸ்..!

கருத்துரிமைக் காவலர்களின் சை….லேன்ஸ்..!

-

லீனா-மணிமேகலை-கருத்துரிமைக்-காவலர்களின்-சைலேன்ஸ்

லீனா பேசிவிட்டார்.

“With Tejaswini, I did what I felt and I am proud of it.”

இத்தோடு மேட்டர் முடிந்தது என்று யாரேனும் எண்ணியிருந்தால் அவர்கள் மேடத்தை புரிந்து கொள்ளவில்லை என்றே அர்த்தம்.

“இதுதாண்டா லீனா” என்று உலகத்துக்கு அவர் உரைக்க விரும்புகிறார். அதே நேரத்தில், “என் காரெக்டரையே புரிஞ்சுக்க மாட்றீங்களே” என்று உருகவும் செய்கிறார்.

“அப்படித்தான் செய்வேன்” என்று அடித்துப் பேச விரும்புகிறார். “இப்படி செய்வதைத் தவிர எனக்கு வேறு வழி என்ன இருக்கிறது?” என்று முறையிடவும் விரும்புகிறார்.

“ஆம். நான் சந்தர்ப்பவாதிதான்” என்று துணிவுடன் பிரகடனம் செய்கிறார். “தான் தவறேதும் செய்யவில்லை” என்பதைப் பணிவுடன் விளக்கவும் விரும்புகிறார்.

இதைக் கேளுங்கள்:

“தேஜஸ்வினி பெண்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பாடு பெற்ற ஆதிவாசிப் பெண்கள், கணவனை இழந்தப் பெண்கள் , கைவிடப்பட்டப் பெண்கள் குறித்த ஆவணப்படத்தை பம்ப்கின் பிக்சர்ஸ்(மும்பை) என்ற தயாரிப்பு நிறுவனத்திற்கும் எடுத்துக் கொடுத்தேன். அதற்கு நிதியுதவி செய்வது டாடா நிறுவனம் தான் என்று தெரிந்து தான் அந்தப் பணியை செய்தேன்..அந்த ஆவணப்படத்தின் பத்து நிமிட, ஐந்து நிமிட, ஒரு நிமிட பிரதிகளை நிறுவனமே எடிட் செய்து விளம்பர படங்களாக பயன்படுத்திக் கொண்டது. இதில் எந்த உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் நான் படத்தில் சொல்லவில்லை. நேர்மையாகவே, அந்தப் பெண்களின் வாழ்க்கையை விஷுவல் செய்திருந்தேன்.”

என்று கூறியிருக்கிறார் லீனா.

கஞ்சா வியாபாரத்தில் தொடங்கி சிங்குர் வரையில் டாடா குழுமம், நடந்து வந்த பாதையை நாம் இங்கே விளக்கப் போவதில்லை. “டாடா என்றால் உண்மை, நேர்மை” என்று நம்பிக்கொண்டிருந்த பாமர நடுத்தர வர்க்கத்தினர் கூட சிங்குர், கலிங்க நகர், சல்வா ஜுடும் கதைகளையும் ராடியா டேப்பையும் கேட்டபின் தம் கருத்தை மாற்றிக் கொண்டு விட்டார்கள். டாடா நிறுவனம் தேஜஸ்வினி போன்ற பித்தலாட்டங்களைக் களம் இறக்குவதற்கான அவசியமும் இந்தப் படத்தின் அவதார ரகசியமும் இதுதான்.

அறிவாளியும் படைப்பாளியுமான போராளியுமான லீனாவுக்கு இது தெரிந்திருக்காதா என்ன, என்று நீங்கள் எண்ணினால், அம்மையார் இப்படி பதில் சொல்கிறார்:

“Yes, I did creatives for Thejaswini Project funded by Tata, Because, I honestly felt, the women’s lives whom I met , need to be shared”

பூ ன்னும் சொல்லலாம், புய்பம்னும் சொல்லலாம், ஐயிரு சொல்றா மாதிரியும் சொல்லலாம். ஐயிரு சொல்றா மாதிரி சொல்றார் லீனா.

அதாவது படைப்பாளியாகிய லீனா, டாடா என்கிற முதலாளி போடுகிற பிச்சைக்காசினால் உந்தப்பட்டு அந்தப் படத்தை எடுக்கவில்லையாம், அந்த புல்டோசரு, இஞ்சினெல்லாம் ஒட்ற பெண்களுடைய வாழ்க்கையைப் பார்த்தவுடனே, உண்மையிலேயே ரொம்ப ஃபீல் ஆயிட்டாராம்.

இதை எப்டியாவது உலகத்தாரோடு பகிர்ந்து கொள்ளணுமேன்னு ஒரு படைப்பு அவஸ்தையில அம்மா தவிச்சுகிட்டு இருக்கும்போது, தற்செயலா குறுக்கே வந்த டாடா, புடிங்க பணத்த-ன்னு கொடுத்திட்டு போயிருக்கிறார். அதாவது இன்ஸ்பிரேசன் வந்த பொறவுதான் அட்வான்ஸ் வாங்கினேனே கண்டி, அட்வான்ஸ் வாங்கினதால இன்ஸ்பிரேசன் வர்ல. இது ஒண்ணும் புய்பம் இல்ல, புஷ்பம் என்கிறார் லீனா.

ரொம்ம்ப முக்கியம்!

மத்தப்படி கொள்கையில அவரு ஸ்டெடியாத்தான் இருக்கிறாராம். “never did I do content against my political will” என்கிறார் லீனா.

“நம்மூர்ல கூடத்தான் பெண்கள் டிரை சைக்கிள் ஒட்றாங்க, தட்டு வண்டி ஓட்றாங்க, மூட்டை தூக்குறாங்க, பொணவண்டி கூட தள்றாங்க, அவுங்களயெல்லாம் பாத்து அம்மா ஃபீல் ஆகலியா” ன்னு நீங்க கேக்கலாம். ஆயிருப்பாங்க. ஆனா அந்த நேரம் யாரும் குறுக்க வல்லியே.

இந்த ஊத்தை நாயத்துக்கு ஒரு “அறிவார்ந்த” வியாக்கியானம் வேற!

“தாடகையிடம் முலைப்பால் குடித்தே அவளைக் கொல்வது மாதிரி. ஒரு பக்கத்தில் உனக்காக வேலை செய்வதன் மூலம் என்னைத் தக்க வைத்துக் கொண்டு வேறுபக்கத்தில் உன்னை எதிர்ப்பதற்காக நேரமும், சக்தியும் செலவிடுவேன் என்பதே இது.  லீனாவின் அதிகார எதிர்ப்பிற்கான பங்களிப்பு அவரது பிரதிகளேயன்றி அவரது வாழ்க்கையாக இருக்க முடியாது”என்று பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் என்னும் பெருமகனார் அம்மாவின் integrity க்கு ஃபேஸ் புக்கில் பொழிப்புரை போடுகிறார்.

“மூலதனம் அனைத்திலும் யார் யார் எப்படி பங்கு பெறுகிறார்கள், அவ்வாறு பங்கு பெறும் போது குறிப்பட்ட நபர் அதை எப்படி பயன்படுத்துகிறார் என்கிற அறிவார்ந்த பார்வையைக் கைவிட்டுவிட்டு, வெறும் முதலாளித்துவ குற்றத்தினை சுமத்துவத்தின் மூலம், அவரை வர்க்கத்திற்கு காட்டிக் குடுப்பதாக “ஒழுக்க சீலர்கள்” நினைத்துக் கொண்டிருக்கலாம்” என்று பொறிந்து தள்ளுகிறார் லீனா.

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் இந்த ரெண்டு பீஸையும் படித்தவுடனே வெலவலத்துவிட்டது. நமக்கோ சினிமா மொழியும் தெரியாது, இந்தி மொழியும் தெரியாது. தேஜஸ்வினி படத்தின் இந்தி வசனத்தில் உள்ள அதிகார எதிர்ப்பை புரிந்து கொள்ளுகின்ற அறிவார்ந்த பார்வை இல்லாமல் உளறிக் கொண்டிருக்கிறோமோ என்று பீதியாகிவிட்டது. உடனே தோழர்களை மொழிபெயர்க்கச் சொன்னோம்.

“இந்த சீருடை அணிந்ததை நீங்கள் பார்க்கிறீர்களே, அது ஒரு வெளித்தோற்றம்,  நான் உள்ளேயும் மாறியிருக்கிறேன்”

“எல்லோரும் சொல்கிறார்கள், பெண்ணாக பிறக்கக் கூடாது என்று. இன்று நான் பெண்ணாகவே பிறக்க வேண்டும் என்று சொல்கிறேன். ஒவ்வொருவரும் தேஜஸ்வனி ஆக வேண்டும்.”

“நான் தேஜஸ்வனி புரோக்ராமில் வந்த பிறகு என்னில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. முன்னேறுவதற்கான ஸ்கோப் கிடைத்திருக்கிறது”

-இப்படித்தான் பேசுகிறார்கள் அந்தப்படத்தில் வரும் தேஜஸ்வினிகள்.

டெலி ஷாப்பிங் பிட்னெஸ் எக்விப்மென்ட் விளம்பரத்தில் வரும் டப்பிங் வசனம் மாதிரி இருக்கு. இதுக்கா இவ்வளவு பில்டப்பு என்று தோன்றியது. இருந்தாலும், “பிரதி”க்குள்ளே “சப் டெக்ஸ்டாக” ஏதேனும் அதிகார எதிர்ப்பு ஒளிந்திருந்து, நமக்குத்தான் கண்டுபிடிக்கத் தெரியவில்லையோ என்று உள்ளூர ஒரு பயம்.

ஏற்கெனவே லீனாவின் கவிதையை, “கவுஜை” என்று வாசித்து, அதன் விளைவாக கருத்துரிமை ஜென்டார்மேர்களின் (Gendarmerie ) கோபத்துக்கு ஆளான அனுபவம் இருந்ததால், தொழில்முறை கட்டுடைப்பு நிபுணர்கள் சிலரை வைத்து உடைத்தும், முன் பின்னாகப் போட்டு மறுவாசிப்பு செய்தும் பார்த்து விட்டோம்.

எனினும் எத்தனை முறை ரீவைண்டு செய்து போட்டாலும், “தேஜஸ்வினிக்கு மாறினப்புறம்தான் எனக்கு தன்னம்பிக்கை வந்தது  …. அப்போ நீங்க?” என்றுதான் கேட்கிறது லீனாவின் படம்.

“What they did with my material, was out of my control and I am also still not that powerful to stop that “ என்று ஃபேஸ் புக்கில் லீனா குமுறியிருப்பதாக ஒரு நண்பர் சொன்னார். “அடடே படத்திலிருந்த புரட்சிகளையெல்லாம் ஒக்லிவி நிறுவனம் எடிட் செய்திருக்கும் போலும். அவற்றை அம்மாவின் எழுத்திலிருந்தாவது பொறுக்கிவிடலாம் என்று எண்ணி அதைப் படிப்பதற்கு உள்ளே நுழைந்தால், “புரட்சி” நம் மூஞ்சியிலேயே வெடிக்கிறது.

“About CSR, yes, I know Companies do it to save their exploitation. But I also see it as the only way left to make them give back something to the community”

என்று பொளந்து கட்டுகிறார் லீனா. கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிடி என்பது தமது சுரண்டலைப் பாதுகாத்துக் கொள்ள முதலாளிகள் செய்யும் சதி என்று அவருக்கு தெரியுமாம். ஆனால் அவர்கள் சுரண்டிச் சேர்த்த செல்வத்தில் ஒரு பகுதியை சமூகத்திற்கு திருப்பிக் கொடுக்க வைப்பதற்கு இதைத் தவிர வேறு வழியில்லையாம். அதாவது தமிழில் சொல்வதென்றால், “ஒன்றே பாதை ஒன்றே பாதை, சி.எஸ்.ஆர் தான் புரட்சிப் பாதை” என்று முழங்குகிறார் லீனா.

ஆனால், உலகப் பெரும் பணக்காரர் வாரன் பஃப்பே வேறுவிதமாகச் சொல்கிறார். “முதலாளிகள் தங்கள் செல்வத்தில் ஒரு சிறு பகுதியையாவது சமூகத்துக்குத் திருப்பிக் கொடுப்பதன் மூலம்தான் புரட்சி போன்ற விபரீதங்களைத் தடுக்க முடியும்” என்று லண்டன் கலகத்தை ஒட்டி அவர் சக அமெரிக்க முதலாளிகளை எச்சரித்தார். உடனே இந்த தத்துவத்தை  Buffett Rule என்று கொண்டாடினார் ஒபாமா. லீனாவின் புரட்சி முழக்கத்தை, இந்தியத் தரகு முதலாளிகளுக்குப் புரியவைப்பதற்குத்தான் புரட்சியாளர் மன்மோகன் சிங்கும் ரெம்ப நாளாக கஷ்டப்பட்டு வருகிறார்.

என்ன செய்வது, முதலாளிகளுக்கு ஆதரவானதும், அதே நேரத்தில் முதலாளிகளுக்கு எதிரானது என்று முட்டாள் ஜனங்களை ஏமாற்றுவதற்கு உகந்ததும், முதலாளிகள் தம் சொந்தக் கையாலேயே செய்து முடிக்கத்தக்கதுமான ஒரு புரட்சியை முட்டாள் முதலாளிகள் புரிந்து கொள்ள மறுக்கிறார்களே!

லீனா சொல்லும் சி.எஸ்.ஆர் புரட்சியின் தத்துவம், முதலில் உங்களுக்குப் புரிகிறதா பாருங்கள். அதாவது, “புரட்சி ஆஃப் த முதலாளி வர்க்கம், பை த முதலாளி வர்க்கம், ஃபார் த முதலாளி வர்க்கம்”.

இந்த புரட்சி முழக்கம் முன்னரே தெரிந்திருந்தால், டாடாவும் ஒடிசாவில் சுமுகமாக தொழில் தொடங்கியிருப்பார். கலிங்க நகரின் முட்டாள் பழங்குடிகளும் லீனாவின் காமெராவில் தேஜஸ்வினிகளாக மின்னியிருப்பார்கள், பிணங்களாக செத்து விழுந்திருக்க மாட்டார்கள்.

அது அந்த பழங்குடி மக்களின் தலையெழுத்து! நாம் அம்மாவின் திரைக்கதைக்கு வருவோம்.

“சி.எஸ்.ஆர் புரட்சியின் கொள்கைப்படி, நீங்கள் சுரண்டிச் சேர்த்த செல்வத்தில் ஒரு பங்கை மரியாதையாக சமூகத்துக்குத் திருப்பிக் கொடுத்து விடுங்கள்” என்று டாடாவுக்கு உத்தரவிடுகிறார் லீனா. அந்த அறச்சீற்றத்தை நிமிர்ந்து பார்க்கக் கூடத் துணிவில்லாமல், “காசோலையை யாரிடம் கொடுக்கட்டும் அம்மா?” என்று தலை குனிந்தபடியே நடுங்கும் குரலில் லீனாவிடம் கேட்கிறார் ரத்தன் டாடா.

“பணத்தை என்னிடம் கொடு, ரசீதை சமூகத்திடம் வாங்கிக்கொள்!” என்று உருமிவிட்டு, சி.எஸ்.ஆர் புரட்சியை நிறைவேற்ற வேண்டியிருக்கும் ஒரே நோக்கத்தின் பொருட்டு, வேண்டா வெறுப்பாக டாடாவிடம் கை நீட்டுகிறார் லீனா.

எப்படி இருக்கிறது இந்த சீன்? ஆனால் இதையெல்லாம் மெயின் பிக்சரில் நீங்கள் பார்க்க முடியாது. “தி மேக்கிங் ஆஃப் தேஜஸ்வினி” என்பது தனியொரு குறும்படம் – அது காமெராவுக்குப் பின்னால் இருட்டில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

எந்தப் புரட்சிகர அம்சமும் அதன் உள்நாட்டு பயன்மதிப்பைப் பயன்படுத்தித்தான் வளர முடியுமாம். அதற்கான உழைப்பையும், அதற்கான கூலியையும் பெற மார்க்சிய வாரிசுகளுக்கு (அதாவது தனக்கு) உரிமை உண்டாம் – சொல்கிறார் லீனா.

“பயன்மதிப்பு, உபரிமதிப்பு” போன்ற சொற்களை லீனா பயன்படுத்தும்போது பழைய கவுஜை நினைவுகள் நம்மை அச்சுறுத்துகின்றன. வாய்க்குள் எதையாவது பிடுங்கிப் போட்டுவிடப் போகிறாரே என்று வாயை மூடிக் கொள்கிறோம். இருப்பினும் பேசாமலும் இருக்க முடியவில்லை!

வாரிசுரிமையாமே!

டாடாவிடம் லீனா வசூலித்திருப்பது கலிங்க நகர் பழங்குடி மக்களின் தியாகத்துக்கான கூலியா? அல்லது கம்யூனிஸ்டுகளின் கடந்த காலத் தியாகங்களை டாடாவிடம் விலைபேசுவதற்கு “தோழர் தா.பா” ஏதேனும் பவர் பத்திரம் எழுதிக் கொடுத்திருக்கிறாரா?

♦ ♦

“ச்சீ .. நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு” – என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால் அது போன நூற்றாண்டின் நைந்து போன வசனமாயிற்றே! இது இருபத்தோராம் நூற்றாண்டல்லவா?

“Political correctness காக தன் வாழ்க்கையை பணயம் வைப்பது காந்தியோடும், முதல் தலைமுறை கம்யூனிஸ்களோடும், நக்சல்களோடும் முடிந்துவிட்டது”  என்று கூறுகிறார் பொன்ராஜ்.

“தங்களால் நேர்மையாக இருக்க முடியவில்லை” என்று அவர் கூறவில்லை. “நேர்மையாக இருப்பவன் பழமைவாதி அல்லது முட்டாள்” என்கிறார். பாலஸ்தீனத்திலும், இராக்கிலும், ஈழத்திலும், காஷ்மீரிலும் தங்கள் வாழ்க்கையைப் பணயம் வைத்தவர்களும், வைப்பவர்களும் கடந்த காலத்தின் ஆவிகளாம், பழமை வாதிகளாம்!

நத்திப் பிழைக்கும் இந்த தொண்டைமான் கூட்டம்தான் எதிர்காலத்தின் பிரதிநிதியாம். டாடாவிடமும் அம்பானியிடமும் முலைப்பால் குடிப்பதைத் தவிர்க்க முடியாதாம். மேலும் தீவிரமாக உறிஞ்சிக் குடிப்பதுதான் இந்த நூற்றாண்டின் முதலாளித்துவ எதிர்ப்பு போராட்டமாம்!.

எறக்கத்துல பிரேக் அடிச்சா மாதிரி என்னா தத்துவம்டா!

அம்மையாரின் apologist கள் இதற்கு மேலும் போகிறார்கள்.  “நான் அயோக்கியனில்லை” என்று கொஞ்சம் தயக்கத்துடன் தங்கள் வாதத்தைத் தொடங்கும் இவர்கள், “இன்றைய சூழ்நிலையில் அயோக்கியனாக இருப்பதை தவிர்க்க முடியவில்லையே” என்று அங்கலாய்க்கிறார்கள்.

பிறகு, “அயோக்கியத்தனம்தான் இந்த காலத்துக்கு உகந்த புரட்சிகர வழி” என்று நமக்கு புரிய வைக்கிறார்கள். இதற்குப் பின்னரும் நீங்கள் புரிந்து கொள்ள’ மறுத்தால், “எந்தக்காலத்திலும் எவனும் யோக்கியனில்லை தெரியுமா?” என்று நக்கல் பண்ணுகிறார்கள்.

“அந்த காலத்து கவிஞர்கள் கொடுங்கோல் மன்னர்களிடம் பணம் வாங்கவில்லையா, தமிழகத்தின் பல கலைஞர்கள் போர்டு பவுண்டேஷனில் பணம் வாங்கவில்லையா, நானும் கார்ப்பரேட்டுகளிடம் பணம் வாங்கித்தான் கூடங்குளம் அணுசக்தி எதிர்ப்பு இயக்கத்துக்கு படம் எடுத்திருக்கிறேன்” என்று கூறி “ஹஹ்ஹஹா” எனச் சிரிக்கிறார் அமுதன் ராமலிங்கம் புஷ்பம்.

அமுதனைப் போல நிர்வாண நிலையை எய்தாத மற்றவர்கள்  “நீ மட்டும் யோக்கியனா?” என்று நம்மைக் கேட்பதன் மூலம், “இது கோவணம் கட்டாத தேசம்தான், எல்லோரும் கோவணம் கட்டாதவர்களே” என்று தமக்குத் தாமே சொல்லி ஆசுவாசம் கொள்கிறார்கள்.

மா.லெ குழுக்கள் பன்னாட்டு ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் நிதி பெறுவதில்லையா என்கிறார் கீதா நாராயணன். உலகத்தை சுரண்டும் ஏகாதிபத்திய முதலாளிகளின் எச்சில் எலும்புகள் நிரம்பிய குப்பைத் தொட்டியை வலம் வரும் நாய்களும், அந்த நிறுவனத்தால் சுரண்டப்படும் ஊழியனிடம் நன்கொடை பெறும் மா.லெ குழுக்களும் ஒன்றெனச் சித்தரிக்கும் இந்த “அறியாமையை” எந்த ஆசிட் ஊற்றினாலும் கழுவ முடியுமா?

“இந்த புரட்சியாளர்கள் பயன்படுத்தும் பேஸ் புக்கும் இணையதளங்களும் பாட்டாளி வர்க்கத்தால் வடிவமைக்கப்பட்டவையா?” என்று கேட்கிறார் நிர்மலா கொற்றவை. எனில், பில் கேட்ஸ், நாராயணமூர்த்தி, ஆசிம் பிரேம்ஜி போன்றோர்தான் இவற்றையெல்லாம் வடிவமைத்தவர்களோ? ரத்தன் டாடாவுடைய வியர்வையின் உலர்ந்த வடிவம்தான் டாடா உப்போ? டாடா மேஜிக் ஷேர் ஆட்டோவில் போகும் தோழர்களே கவனம். நிர்மலா கொற்றவையின் கண்ணில் பட்டுவிடாதீர்கள்!

“நான் கட்டிய கல்லூரியில் என்னுடைய மொழியான ஆங்கிலத்தைப் படித்து நான் விட்ட ரயிலில் ஊர் ஊராகப் போய் என்னையே வெளியேறச் சொல்லிப் போராடுகிறாயா?” என்று பிரிட்டிஷ் வைஸ்ராய்கள் கூட காந்தியைக் கேட்டதாகத் தெரியவில்லை. நிர்மலா கொற்றவை நம்மைக் கேட்கிறார்.

உலகத்தில் யோக்கியர்கள் என்று யாரும் இல்லை என்பது மட்டுமல்ல, இருக்கவும் முடியாது” என்பதே இவர்களது கருத்து. “மனிதன் எனப்படுபவன் அடிப்படையிலேயே சுயநலவாதி. இது நாய் நாயைத் தின்னும் உலகம்” என்கின்ற சமூக டார்வினியமே இவர்களது கொள்கை.

ஒரு மனிதனுக்கு அறிவு, திறமை ஆகியவற்றுடன் சொத்தும் இருந்தால் அவன் டாடாவாக இருந்து மக்களைச் சுரண்ட வேண்டும்.

அறிவும் திறமையும் மட்டும் இருந்து சொத்து இல்லையென்றால் லீனாக்களைப் போல டாடாவை நத்திப் பிழைக்க வேண்டும்.

இவையே அறிவும் திறமையும் கொண்ட தம்மைப் போன்ற சான்றோர்களின் சிறப்பியல்புகள் என்பது இவர்கள் கொண்டிருக்கும் கருத்து.

மற்றப்படி “நேர்மை, ஒழுக்கம்” என்பதெல்லாம் அறிவு, திறமை, சொத்து என்பன போன்ற சௌபாக்கியங்கள் எதுவும் வாய்க்கப் பெறாத, (அதாவது நத்திப் பிழைப்பதற்கு அவசியமான “தகுதிகள்” இல்லாத) முட்டாள்களுக்குரிய attributes என்பதே இவர்களது மதிப்பீடு. எனவே இவர்களைப் பொருத்தவரை, தரும நியாயத்துக்கு கட்டுப்பட்டு உழைத்து வாழும் ஆகப் பெரும்பான்மையான மக்கள், “வாய்ப்புக் கிடைக்காததால் யோக்கியர்கள்” – அவ்வளவுதான்.

“வழுக்கி விழுவதற்கு” வாய்ப்பிருந்தும், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள மறுத்து, நீங்களோ, நானோ “அறம்” பேசினால், “நீ மட்டும் டாடா உப்பைத் தின்னவில்லையா? டாடா டீ குடிக்கவில்லையா” என்ற லெவலுக்கு இறங்கி விடுவார்கள். தற்போது நடந்து கொண்டிருக்கும் வாதப் பிரதிவாதங்களில் பல இந்த ரகத்திலானவையே.

“காலச்சுவடு கண்ணன் மட்டும் பெரிய யோக்கியரா?” என்பதுதான் லீனாவுக்கு ஆதரவாகப் பேசுவோரின் மிக முக்கியமான கேள்வி. எடியூரப்பா, குமாரசாமியைப் பார்த்து இதே கேள்வியைக் கேட்டால் “கெக்கெக்கே” என்று சிரித்து, ” எல்லாரும் திருட்டுப்பசங்க” எனக் காறித்துப்பும் இந்த அறிவாளிகள், அதே மொக்கை கேள்வியை தாங்கள் எழுப்பும்போது, தங்களை சாக்ரடீசாக கருதிக் கொள்கிறார்கள்.

எறிவதற்கு எடுத்த கல்லைக் கீழே போட்டுவிடுவதாக ஒரு “அவுட் ஆப் கோர்ட் செட்டில்மென்டுக்கு” கண்ணன் ஒப்புக்கொண்டால், இவர்கள் கண்ணனின் எல்லா பாவங்களையும் பெருந்தன்மையாக மன்னித்துவிடுவார்கள். அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

லீனாவுக்கு ஆதரவாக வாதாடும் வக்கீல்கள், ஃபீஸ் வாங்காமலேயே எட்டு கட்டையில் கூவுவது ஏனென்றால், குற்றவாளிக் கூண்டில் நிற்பது தாங்களும்தான் என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கிறது. “எம்.பி யெல்லாம் திருட்டுப்பயல்கள்” என்று யாராவது சொல்லிவிட்டால், உடனே கட்சி வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகளை மறந்து, “எம்.பி இனத்தின் கவுரவத்தைக் காப்பாற்ற” சர்வகட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் களத்தில் குதிப்பதைப் போன்ற சமாச்சாரம் இது.

அம்மா கேசை தங்கள் சொந்தக் கேசாக எடுத்துக் கொண்டு இவர்கள் சூடாக வாதம் நடத்திக் கொண்டிருக்கும் போதே, “என்னால் கூண்டில் நிற்க முடியவில்லை. கால் வலிக்கிறது. Yes, I am a bitch, Yes I am a prostitute, Yes I am an opportunist, Yes I am a criminal ” என்று கூறுகிறார் லீனா. இது ஒப்புதல் வாக்குமூலமோ, சுயவிமரிசனமோ அல்ல. “Yes, நான் பாப்பாத்திதான்” என்று விதி எண் 110இன் கீழ் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு.

“I will apologise in public, if you finally say, my docu ..has helped them save their entire empire ” என்று நமக்கு சவால் விட்டிருக்கிறார் லீனா.

கவிதாயினி அம்மையார் வார்த்தை சாமர்த்தியத்தில் அருண் ஜெட்லியை விஞ்சுவதை கவனியுங்கள். அவர் இயக்கிய படம் டாடாவின் “மொத்த” சாம்ராச்சியத்தையும் காப்பாற்ற உதவியது என்று உங்களால் சொல்ல முடிந்தால், அம்மையார் பப்ளிக்காக மன்னிப்பு கேட்பாராம். பாதி சாம்ராச்சியத்தை காப்பாற்ற உதவியது என்று நிரூபித்தால்?

16 ஆண்டுகளுக்கு முன் போயஸ் தோட்டத்திலிருந்து நல்லமநாயுடு கைப்பற்றிக் கொண்டு வந்த ஒட்டியாணத்தையே புரட்சித்தலைவியுடையது என்று இன்று வரை நிரூபிக்க முடியவில்லை. இதையெல்லாம் நாம் நிரூபிக்க முடியுமா?

♦ ♦

ற்போது விவாதத்தில் இருக்கும் பிரச்சினையின் தொடக்கம் ஒரு எளிமையான கேள்விதான்.

“பழங்குடி மக்கள் மீது புல்டோசரை ஏற்றும் கொலைகார டாடா நிறுவனம், தன் குற்றத்தை மறைப்பதற்காக, அதே பழங்குடிப் பெண்களை புல்டோசர் ஓட்ட வைக்கிறது. இதைக் கலையழகு மிளிரும் படமாக மாற்றிக் கொடுத்து அதற்காக கூலி வாங்கிக் கொள்வது குற்றமில்லையா?” என்பதுதான் அந்தக் கேள்வி.

ஒரு படைப்பாளி என்ற முறையில் அந்தப் பெண்களைப் பார்த்து ரொம்ப “ஃபீல்” ஆகித்தான் நான் படமெடுத்தேன். காசு இரண்டாம் பட்சம்தான் என்பதுதான் லீனா தரும் விளக்கம்.

தேஜஸ்வினியை எடுப்பதற்கு லீனாவை அமர்த்திக் கொண்டதைப் போலவே, சட்டிஸ்காரில் தம் “படைப்பு” நடவடிக்கைகளைத் தொடங்குவதற்காக, சில போராளிகளை அமர்த்திக் கொண்டது டாடா நிறுவனம். அவர்கள் “சல்வா ஜுடும்” என்று அழைக்கப்பட்டார்கள்.

அவர்கள் லீனாவைப் போன்ற படைப்பாளிகள் அல்லர். அவர்களுக்கு காசுதான் முதல் பட்சம். சோத்துக்கு வழியில்லாத அந்த ஊரில், மாதம் 1500 சம்பளம் கொடுத்து சோறு போட்டு யூனிபார்ம் மாட்டி விட்டு ஒரு ஏ.கே 47 துப்பாக்கியையும் கொடுத்தார் டாடா.

தங்கள் வயிற்றுப் பசியைத் தவிர வேறு எந்த ஃபீலிங்கின் அடிப்படையிலும்  அந்தப் “போராளிகள்” இந்த புராஜக்டை ஒப்புக் கொள்ளவில்லை. நட்சத்திர விடுதிகளையோ, ஏ.சி பார்களையோ, சர்வதேச விருதுகளையோ, நுனி நாக்கு ஆங்கிலத்தையோ, மார்க்சியத்தையோ அவர்கள் அறிந்ததுமில்லை. மூணு வேளை சோறு, 1500 ரூபாய் என்பதற்கு மேல் வேறு எத்தகைய மேன்மையான படைப்புணர்வாலும் அவர்கள் தூண்டப்படவில்லை.

இருந்த போதிலும், “தான் செய்வது இன்னதென்று அறிந்திராத இந்தப் பாவிகள்”, மனித உரிமை ஆர்வலர்களால் “கூலிப்படை” என்றே குற்றம் சாட்டப்பட்டார்கள். சட்டப்படி அமையாத கூலிப்படை எதையும் அரசியல் சட்டம் அனுமதிப்பதில்லை என்பதால், அந்தக் சல்வா ஜுடுமைக் கலைக்கும்படி உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்து விட்டது.

வயல்வெளிகளை கைப்பற்றித் தருவதற்கு சல்வா ஜுடும். மக்களின் மனவெளியைக் கைப்பற்றித் தருவதற்கு படைப்பாளி – என்றும் நாம் இதை விளங்கிக் கொள்ளலாம். முதல் குற்றத்தை நிரூபிப்பது எளிது. மனித உரிமை ஆர்வலர்கள் நிரூபித்துமிருக்கிறார்கள். இரண்டாவது குற்றத்தை நிரூபிக்க முடியாது. நிரூபித்தாலும், கருத்துரிமை ஜென்டார்மேர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

நாம் புரிந்து கொள்வோம். டாடாவுக்கு ஒரு தேஜஸ்வினி என்றால் மோடிக்கு ஒரு சத்பவன யாத்ரா.

பழங்குடிப் பெண்களை டாடா கைதூக்கி விட்டதைப் போல, இஸ்திரிப் பெட்டியும் தையல் மிசினும் கொடுத்து குஜராத் முஸ்லிம் பெண்களை நரேந்திர மோடி கைதூக்கி விடவில்லையா? முஸ்லீம் மதகுருமார்கள் சிலரே மோடியைப் பாராட்டவில்லையா? அந்த “குஜராத் தேஜஸ்வினி”களைப் பற்றியும் லீனா படமெடுப்பாரா?

இப்படிக் கேட்பது விதண்டாவாதம் என்று பலர் இரகசியமாக குமுறலாம். தன்னால் பதிலிருக்க முடியாத வாதங்களை, முத்திரை குத்தி ஒதுக்கத்தான் விதண்டாவாதம் என்ற சொல்லைப் பயன்படுத்தினான் ஆதிசங்கரன் என்பார் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா.

சங்கரனையே சைடு வாங்கி முந்துகிறார் ஷோபாசக்தி. தேஜஸ்வினி விவகாரம் பற்றி கேட்டதற்கு, “கார்ப்பரேட் நிறுவனங்களை நியாயப்படுத்தும் எந்தச் செயலும் எனக்கு ஏற்புடையதல்ல” என்று தனது கருத்தை தெளிவாகச் சொல்லியிருக்கிறாராம்.

இராக்கின் மீது அமெரிக்க இராணுவம் குண்டுமாரி பொழிந்து கொண்டிருந்தபோது, “அந்நியத் தலையீடு எந்த வடிவத்தில் எங்கே நடந்தாலும் அதை இந்தியா ஏற்றுக் கொள்ளாது” என்று வாஜ்பாயி சொன்னதைப் போலல்லவா இருக்கிறது!

இந்தப் பச்சோந்திகளுக்குப் பெயர் படைப்பாளிகளாம்! கருத்துரிமைப் போராளிகளாம்! இவர்கள்தான் அதிகாரத்துக்கு எதிராக உண்மையைப் பேசுபவர்களாம்!

♦ ♦

“நான் உண்மைக்குப் புறம்பான எந்த செய்தியையும் அந்தப்படத்தில் சொல்லவில்லை” என்கிறார் லீனா.

நாங்கள் லீனாவின் கூற்றை நம்புகிறோம்.

கலிங்க நகரில் பழங்குடிகளை டாடா கொன்றதும் உண்மை, தேஜஸ்வினிகளுக்கு வாழ்வளித்ததும் உண்மை. இரண்டாவது உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார் லீனா. உலகமே கலிங்கநகர் பற்றிப் பேசினால் என்ன? “மற்றதுபற்றிப் பேசுவதல்லவோ பின் நவீனத்துவம்! அதைத்தானே பேசுகிறார் லீனா- இல்லையா?

“டாடா கொலைகாரனா, கருணாமூர்த்தியா?” என்று கேட்கிறார்கள்.

அதுவா இதுவா என்ற கேள்விக்கு அதுவும் இதுவும்தான் என்பதல்லவோ பின் நவீனத்துவத்தின் பதில். இருமை எதிர்வுகளுக்குள் (binaries) உண்மைகளை அடைக்கும் இந்த மடமை, நிறப்பிரிகையின் ஒளி பரவிய தமிழ் மண்ணில் இன்னுமா மிச்சமிருக்கிறது?

உண்மையின் பன்மைத் தன்மையை நிராகரிக்கும் சாராம்சவாதத்துக்கும், பகுத்தறிவின் பயங்கரவாதத்துக்கும் சவக்குழி தோண்டிய நிறப்பிரிகை குருகுலத்தின் கடப்பாரைகள் எங்கே? அவை அனைத்தின் மீதுமா புல் முளைத்துவிட்டது?

நேர்மை, அறம் என்ற துருப்பிடித்த பெருங்கதையாடல் வாட்களால் குத்திக் கிழிக்கப்படும் இந்தப் போராளியைக் காப்பாற்ற அசடுகளும், அரை வேக்காடுகளும் தவிர ஒரு அறிஞன் கூடவா தமிழகத்தில் மிச்சமில்லை?

சட்டமன்றங்கள், என்.ஜி.ஓக்கள், கார்ப்பரேட்டுகள் போன்ற கலர் கலரான அதிகாரத் தாடகைகளின் மார்பில் முலைப்பால் பருகிக் கொண்டிருக்கும் பின் நவீனத்துவக் கலகக்காரர்கள், “பிழைப்புவாதமே இந்த நூற்றாண்டின் புரட்சி” என்று ஒரே ஒருமுறை முழங்குவதற்காகவாவது, வாய்திறக்க மாட்டார்களா?

தான் எடுத்தது ஒரு ஆவணப்படமென்றும், அந்த வகையில் தானும் ஒரு படைப்பாளிதான் என்றும் ஊருக்கே அறிவித்து விட்டு லீனா ஜீப்பில் ஏறிய பின்னரும், “எலேய் நீ என்ன படைப்பாளியா விளம்பரப் படம்னு சொல்லிட்டுப் போ ” என்று அவரை காப்பாற்றி விடுவதும், அவரது படைப்புக்கு அவரிடமே பொருள் விளக்கம் கோருவதும் அடாவடித்தனமில்லையா? பிரதிக்கு ஆசிரியனைப் பொறுப்பாக்குவது அநீதியில்லையா? 

கொலைகாரன் டாடாவை எப்படி கருணாமூர்த்தியாக சித்தரிக்கலாம் என்று ஒரு படைப்பாளியைக் கேட்பதும், என் கவிதையை நீ ஏன் எழுதவில்லை என்று ஒரு கவுஜாயினியை கேட்பதும் கிட்டத்தட்ட ஒன்றுதானே! இது பாசிசமில்லையா?

மெய்நிகர் உலகில் வினவு நடத்திக் கொண்டிருக்கும் இந்தப் பாசிச வெறியாட்டத்திலிருந்தும், “கரசேவை”யிலிருந்தும் கவுஜாயினியின் படைப்புரிமையையும் அதன் வழி கார்ப்பரேட்டுகளின் கருத்துரிமையையும் காப்பாற்றுவதற்கு கருத்துரிமைக்  காவலர் வருவாரா?

லீனா மணிமேகலை பேசிவிட்டார். அவரது நண்பர்கள் எதிரிகள் அனைவரும் அவரவர் கருத்தைப் பேசுகிறார்கள்.

கருத்துரிமையின் காவலர்தான் மவுனம் சாதிக்கிறார். கருத்து சொல்லாமலிருப்பதற்கான உரிமை கூட ஒரு வகையில் கருத்துரிமைதான். நாம் மறுக்கவில்லை.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 20(3) பிரிவு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு மவுனம் சாதிக்கும் உரிமையை வழங்குகிறது. Right to Silence!

சை..லேன்ஸ்..!

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. பம்ப்கின் பிக்சர்ஸ், மும்பை என்ற நிறுவனம் புரட்சியாளர் லீனாவுக்கு எப்படி அறிமுகமானது என்று தெரிந்தால் உதவியாக இருக்கும். புரட்சிக திட்டங்களுக்கு பண உதவி செய்யும் அவர்களை தொடர்பு கொண்டு நானும் கொஞ்சம் பண உதவி பெறலாம் என்று இணையத்தில் தேடினால் அவர்களுக்கு இணைய தளம் இல்லை.

    தொடர்பு விபரங்களுடன் ஒரு பிளாக்கர் பக்கமும், ஒரு பேஸ்புக் பக்கமும் மட்டும் கிடைக்கிறது. ஏதோ பூசணிக்காய் கம்பேனி போலிருக்கிறது? புரட்சியாளர்கள் லெட்டர் பேட் கம்பெனியுடன் எல்லாம் டீலிங் செய்ய வேண்டியிருக்கிறது!

    தேஜஸ்வனி விளம்பரப் படத்தைப் பார்த்ததும், இப்படி டாடாவின் தேஜஸ்வனி திட்டத்தில் சேராமல் இந்த பழங்குடி மக்கள் ஏன்தான் மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்களோ என்று சலிப்பாக இருந்தது. இந்த வீடியோ படத்தை பரவலாக திரையிடுவதன் மூலம் பசுமை வேட்டை என்பதெல்லாம் தேவைப்படாமலேயே மாவோயிஸ்ட் ‘தொல்லை’யை ஒழித்து விடலாம் என்று இந்திய அரசுக்கு பரிந்துரைக்கிறேன்.

    அவரது படைப்புகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கட்டுப்படுத்தும் அளவுக்கான அதிகாரம் லீனாவுக்கு இன்னும் இல்லை (I am still not powerful) என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்போது டாடாவுக்கு ஆவணப்படம் எடுத்ததைத் தொடர்ந்து, அடுத்து ஆன்டிலா மாளிகை பற்றிய தவறான கருத்துக்களை மாற்ற முகேஷ் அம்பானிக்கு ஆவணப் படம் எடுத்து, குஜராத் படுகொலைகள் பற்றிய விஷம பிரச்சாரங்களை முறியடிக்க நரேந்திர மோடிக்கு ஆவணப் படம் எடுத்து, ஈராக் படையெடுப்பு தொடர்பாக ஜார்ஜ் புஷ், டோனி பிளேருக்கு ஆவணப் படம் எடுத்து, கடைசியாக இரண்டாம் உலகப் போர் தொடர்பாக ஹிட்லரின் பெயரை சுத்தப்படுத்த உதவி செய்து லீனா அவர்கள் படிப்படியாக ஏறி, ஒரு நாள் ஐநா சபையில் உலகத் தலைவராக சக்தி வாய்ந்தவராக உருவான பிறகு பாருங்கள். அவருடைய படங்களை யாரும் வெட்டி பயன்படுத்த முடியாதபடி சட்டம் போட்டு விடுவார்.

    இப்படி டாடாவுக்கே தெரியாமல் கைப்பற்றிய டாடாவின் பணத்தை வைத்து புரட்சி நடத்தி மார்க்சிய கல்வி மீது தனக்கு இருக்கும் நேர்மையை லீனா மணிமேகலை நிரூபிப்பார். அப்போது இன்று இணையத்தில் பாசிச அடக்குமுறை செய்து கொண்டிருப்பவர்கள் தமது முகங்களை எங்கு கொண்டு வைத்துக் கொள்கிறார்கள் என்று பார்க்கத்தானே போகிறோம்.

    இணையத்தில் பதிவுகள் எழுதுவதற்கு பிளாக்கரும் வேர்ட்பிரஸ்சும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தது. அதைப் பயன்படுத்திக் கொண்டு பதிவுகள் எழுதி, நடிகைகளின் புகைப்படங்கள் போட்டு, ஹிட் குவித்து, பத்திரிகையில் வேலைக்கு சேர்ந்து இன்று புதிய தலைமுறையை உருவாக்க சேவை செய்து கொண்டிருக்கும் பதிவர்களும் இருக்கிறார்கள், அதே வாய்ப்பு கிடைத்தும் சும்மா தொழிலாளர்கள், சுரண்டல், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் என்று எழுதி எழுதி முட்டாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது வினவு.

    வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள திறமையில்லாமல் முன்னேறியவர்களை பழிக்கிறார்கள். இன்றைய தமிழ்ச்சூழல் திறமைக்கு கொடுக்கும் மரியாதை இவ்வளவுதான்!

    • //அதே வாய்ப்பு கிடைத்தும் சும்மா தொழிலாளர்கள், சுரண்டல், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் என்று எழுதி எழுதி முட்டாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது வினவு. ///

      அது என்னவெனில் மே.வங்காளம் கேரளா என்றால் போலி கம்யுனிசம் என்று சொல்லுறிங்க
      சரி ரஷ்யா சீனா கியுபா என்றாலும் போலி கம்யுனிசம் என்று சொல்லுறிங்க.. அப்ப உண்மையான கம்யுனிசம் எங்கண்ணே இருக்கு

      குறிப்பு. இதற்கு முந்தைய பதிப்பை படித்த பிறகு ஓரே குழப்பமாக இருக்கிறது..

      • ///அப்ப உண்மையான கம்யுனிசம் எங்கண்ணே இருக்கு///

        பாட்டாளி வர்க்கத்தின் ஆன்மாவுடன் உலவுவதால்தான் பப்பட் முதல் லீனா வரை குட்டிக்கரனம் அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

        • வசீகரன்.. கம்யுனிசம் வெற்றி பெற்ற ஓர் நாட்டைக் காட்டுங்கள்…அதாவது கம்யுனிச சித்தந்த படி குறிப்பாக கருத்துக்களை சுகந்திரமாக வெளியிட தடையில்லா ஏதேனும் ஓர் நாட்டை காட்டுங்கள்

          புரட்சி ஓன்றும் சாதித்தது இல்லை.சாதிக்கப் போவதும் இல்லை..அப்படியே சாதித்தாலும் அது தற்காலிகமானதே…

          தயவுசெய்யது அண்டார்டிகாவை சுட்ட வேண்டாம்.. அது ஓன்றுதான் கம்யுனிச நாடு..

          • தத்துவத்தை ஆய்ந்து அது எவ்வாறு விஞ்ஞான ரீதியாக செயல்படுத்த இயலாதது என்று சொன்னால் நீங்கள் பேசுவதில் ஒரு பொருள் இருக்கும். நீங்க கேட்பது பழைய மொக்கையான கேள்வி. மன்னிக்கவும்…

            இரண்டாயிரம் வருண்டங்களுக்கு முன்னாள் ஸ்பார்டகஸ்-இன் அடிமைப் படை தோற்று கொலைசெய்யப்பட்ட பிறகு, ஒருத்தர் சொன்னார், உலகத்துல அடிமைகள் எங்கேயாவது போராடி ஜெயிச்சதுண்டா…. அதனால ஆண்டான்-அடிமை சமூகம் தான் நிலைக்கும் என்று.

            • என்றும் காந்தியம்-non violence மட்டுமே ஜெய்த்தாக உலகத்தில் வரலாறு உண்டு.ஆய்தம் எந்தி பெற்ற வெற்றி தற்காலிகமானதே… உங்கள் மொக்கை பதிலுக்கு நன்றி..

              • நண்பரே,

                இரண்டு அணிகள் மோதும் போட்டியில் இரு அணிகளும் உணர்வு பூர்வமாக விளையாடி ஒன்றை மற்றொன்று வீழ்த்தி கோப்பையை கைப்பற்றுவதுதான் வெற்றி என்பது அல்லவா. இதில் தங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்காது என்பதாக நான் நம்புகிறேன். அதை விடுத்து ஒரு அணியுடன் பேரத்தின் அடிப்படையில் மற்றொரு அணி கோப்பை பெறுவதை வெற்றி எனக் கொண்டாடமுடியுமா! இதில் கம்யூனிசப் புரட்சி முதல் ரகம். காந்தீயம் இரண்டாவது ரகம்.

                • சரி தோழரே
                  கம்யுனிச கியுபாவில் பிடல் காஸ்ரோ தனக்கு பிறகு ஏன் தனது செந்தங்களை பதவியில் அமர்த்துகிறார்..

                  வட கொரியாவில் கிம் மகனைதே தவிர வேற ஆட்சியாளர்கள் கிடையாதா..

                  கம்யுனிச சீனாவில் ஓட்டுரிமைக்காக மாணவர்களை கொன்றது ஏன் (tinnaman tank man story..)

                  இந்த நாடுகளில் கம்யுனிசம் சிறப்பாய் இருக்கிறது என்று கூறினால்..அங்குள்ள மக்களுக்கு கருத்துரிமை மறுப்பது ஏன்..

                  • //சரி ரஷ்யா சீனா கியுபா என்றாலும் போலி கம்யுனிசம் என்று சொல்லுறிங்க.. அப்ப உண்மையான கம்யுனிசம் எங்கண்ணே இருக்கு///

                    நண்பரே! ரஷ்யா, சீனா, கியூபா வரிசையில் வடகொரியாவையும் சேர்த்துக் கொள்ளுங்களேன்.

                    நண்பரே! கம்யூனிசம் என்ற பொதுவுடைமை என்பது உற்பத்தி முறையினில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் உருவாகும் சமுதாயத்தைப் பற்றியது. அதாவது முதலாளித்துவத்தில் பலருடைய உழைப்பின் பலன் வெகுசிலர் பைகளுக்குள் செல்வதற்கு மாற்றமாக உழைப்பின் பலன் பலருக்கும் கிடைக்கும் வண்ணம் உற்பத்தி முறையையே மாற்றி அமைப்பது பற்றியதாகும். ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு சுரண்டினாலும், கார்ப்பொரேட் முதலாளிகளாக இருந்துகொண்டு சுரண்டினாலும் அளவில் ஒன்றும் பெரிய மாறுதல் இல்லை. இதன்படியான முறை இப்பொழுது எங்கு இருக்கிறது என்று ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள், பிறகு போலி என்று ஏன் சொல்கிறார்கள் என்பது விளங்கும்.

                    • நீங்கள் சொல்வதை வைத்து.. கம்யுனிசம் ஓர் கட்டுக்கதையே என பொருள்கொள்ளலாமா…

              • காந்தியம் ஜெய்த்தாக ஒரு நாடு காட்ட முடியுமா கல்நெஞ்சம், இந்தியான்னு காமெடி மட்டும் பண்ண வேண்டாம்…

                • காந்தியம் என்பது வன்முறையற்ற புரட்சி… அதாவது கத்தியின்றி இரத்தமின்றி மகத்தான நிலையான வெற்றியைப் பெறுவது..

                  அமெரிக்க ஆப்பிரிக்கர்களுக்கு நிலையான உரிமையை காந்தியத்தின் மூலம் லூத்தர் பெற்றது

                  தென்ஆப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா…

                  பாலஸ்ஸீனத்தின் யாசர் அராபத்

                  ஈரானின் தற்போதைய முதல்வர்

                  பர்மாவின் ஆங் சா சூகி

                  எகிப்தின் தற்போதை புரட்சி…

                  இவர்கள் அனைவரும் காந்தியம் அதாவது non violence மூலம் மகத்தான நிலையான வெற்றியே இதற்கு சான்று..

                  • நண்பர் கல்நெஞ்சம்,

                    //நீங்கள் சொல்வதை வைத்து.. கம்யுனிசம் ஓர் கட்டுக்கதையே என பொருள்கொள்ளலாமா…///

                    என்னைக் கேட்டால் அப்படி பொருள் கொள்ளக் கூடாது என்றுதானே நான் சொல்வேன். நீங்கள் ஏன் அப்படி பொருள் கொள்ளலாமா என கேட்கிறீர்கள்?

                    • கம்யுனிசம்..முலதனம்..எல்லாம் பேன்டசி கதைகள் தான்..மீட்டிங் போட்டு மக்களை ஏமாற்றுவதும்.. புரட்டு புரட்சிகள் செய்து பிழைப்பு தான் என்பது இயக்கத்தலைவர்களின் மனதிற்கு தெரியும்.

                    • //கம்யுனிசம்..முலதனம்..எல்லாம் பேன்டசி கதைகள் தான்..மீட்டிங் போட்டு மக்களை ஏமாற்றுவதும்.. புரட்டு புரட்சிகள் செய்து பிழைப்பு தான் என்பது இயக்கத்தலைவர்களின் மனதிற்கு தெரியும்.//

                      நான் கேட்ட கேள்விக்கான பதில்தானோ இது? ஒருவேளை புர்ர்ரட்சிசார் பெயர்களைக் கொண்டவர்களை மனதிற்கொண்டு இப்படி கூறுகிறீர்களோ என்னவோ.

                      இப்படித்தான் கம்யூனிசத்தை, புரட்சியை வெளங்காது என்று கூறும் பலரும் அகநிலையில் ஆசையாக அதைப்பற்றியான ஒரு தீர்ப்பெழுதி வைத்துக்கொள்கிறார்கள். புறநிலையில் அந்த ஆசைகள் நொறுங்கிவிடும்படியான சூழ்நிலைகளை காணும்போது எதையுமே மறுக்க முடியாமல் இறுதியாக கட்டுக்கதை, வெளங்காது என புலம்பித் தவிக்கிறார்கள். கட்டுக்கதையை நிஜக்கதை என கன்னத்தில் போட்டுக்கொள்பவர்கள் வேறு என்னத்த சொல்வார்கள்.

    • இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பதிவில் குறிப்பிட்டுள்ள லீனாவின் பத்திகள் பேஸ்புக்கிலிருந்து ஒரேயடியாக நீக்கப்ப்பட்டுவிட்டது. அதிலிருந்தே இவர்கள் யோக்கியதையை அறியலாம். குறைந்தபட்சம் தான் எழுதியதைக்கூட துணிச்சலாக ஏற்கமுடியாத இந்த கோழைகள் அடுத்த முறை கலக வேசம் கட்டி ஆட வந்தால் வாயால் சிரிக்கக்கூடாது.

      பின்குறிப்பு; மேற்படி நோட்ஸ்கள் அனைத்தும் சுடச்சுட காப்பி எடுத்து வைக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை நான் அப்படி எழுதவேயில்லை என்று மறுத்தால் அவைகளை அனுப்பி வைக்கிறேன்

  2. // லீனா மணிமேகலை பேசிவிட்டார். அவரது நண்பர்கள் எதிரிகள் அனைவரும் அவரவர் கருத்தைப் பேசுகிறார்கள்.

    கருத்துரிமையின் காவலர்தான் மவுனம் சாதிக்கிறார். கருத்து சொல்லாமலிருப்பதற்கான உரிமை கூட ஒரு வகையில் கருத்துரிமைதான். நாம் மறுக்கவில்லை.

    இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 20(3) பிரிவு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு மவுனம் சாதிக்கும் உரிமையை வழங்குகிறது. Right to Silence!

    சை..லேன்ஸ்..! //

    அநீதிக்கு ஆதரவா அதே நேரத்துல தீங்கில்லேங்குற மாறி பம்முற அமைதி வன்முறையை இதுக்கு மேல அம்பலப்படுத்த முடியாது. அதுக்கு மேல இதுல இருக்குற தத்துவக் கேலி அந்தக் காவலரை லைஃப்புல கெட்ட ஆவி மாரி ஃபாலோ பண்ணும். அ.மா இப்படியொரு கவித்துவ நீதிய எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்.

  3. // வாய்க்குள் எதையாவது பிடுங்கிப் போட்டுவிடப் போகிறாரே என்று வாயை மூடிக் கொள்கிறோம். இருப்பினும் பேசாமலும் இருக்க முடியவில்லை! //

    இதே பயத்தில்தான் நீங்கள் கேள்வி கேட்பவர்களும் வாயைத் திறக்கவில்லையோ என்னமோ..?! ஏனெனில்,

    எல்லா ஆ.கு.களுக்கும் எதிரான லீனாப் பொண்ணின் ’யோனிகள் முன்னேற்றப்’ போராட்டத்திற்கு, அவர் இப்போது செய்திருக்கும் ’பழங்குடிப் பெண்கள் முன்னேற்ற’ விளம்பரப்படம் முரண்பட எந்த அடிப்படையும் (ஆ.கு.கள் கூறும் நேர்மை, அறம் உட்பட) இல்லை என்பதில் லீனா தெளிவாக இருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது..!!! லீனா மாட்டிக்கொண்டார் என்றெல்லாம் நீங்கள் கூறுவது அவருக்கு சிரிப்பைத்தான் கொடுக்கும்,
    உங்கள் மார்க்சீய விமர்சனங்கள் எத்தனை தரக்கப் பூர்வமாக இருந்தாலும்..!!!

    ‘பார்ப்பான் முயலுக்கு 4 கால் என்று சொன்னால், நான் 3 கால் என்றுதான் சாதிப்பேன்’ – பெரியார்.
    (பகுத்தறிவாவது.. வெங்காயமாவது.. பார்ப்பானை எப்படியாவது ஒழிப்பதுதானே முக்கியம். பெருசையும் இழுத்துவிட்டாச்சு.. நாராயண, நாராயண..)

  4. //கொலைகாரன் டாடாவை எப்படி கருணாமூர்த்தியாக சித்தரிக்கலாம் என்று ஒரு படைப்பாளியைக் கேட்பதும், என் கவிதையை நீ ஏன் எழுதவில்லை என்று ஒரு கவுஜாயினியை கேட்பதும் கிட்டத்தட்ட ஒன்றுதானே! இது பாசிசமில்லையா?//

    போஸ்ட் மாடனிசத்தை போஸ்ட் மாடனிசத்த வச்சே அடிச்ச அடி இது. குத்துன்னா இதுதான் குத்து!

  5. விவசாய கூலிகள் பண்ணையார்களை எதிர்க்க கூடாது… காரணம் அவர்கள் வேலை செய்வது பண்ணையார்களின் நிலத்தில்…

    நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாலர்கள் முதலாளிகள் எதிர்க்க கூடாது… காரணம் இவர்களுக்கு ஊதியம் தருவது முதலாளிகளே…

    இனிமேல் பண்ணையார்களை எதிர்க்கும் கூலிகளுக்கும், முதலாளிகளை எதிர்க்கும் தொழிலாளர்களும்… தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை… இப்படியும் சொல்வார்கள்…

  6. டாடாவுக்கு ஆதரவாக மக்களின் சேவகர், கருத்துரிமை பேசும் தலைவர் ஒருவர் படம் எடுத்துள்ளார்… அதில் என்ன குற்றம் என பேசும் கருத்துரிமை காவலர்களை பார்க்கும் போது எனக்கு நினைவுக்கு வருவது… போலி கம்னிஸ்டு கட்சியின் பொறுக்கி தலைவராக இருக்கும் தாவண்ணா பாண்டி 2005இல் எழுதிய ராஜிவ் காந்தியின் கடைசி மணித் துளிகள்… என்ற புத்தகத்தில் 1988இல் இருந்து சிபிஐ கட்சியில் இருந்து பிரிந்து 1989 டிசம்பர் முதல் 1991 மே வரை… இந்த பாண்டி பயல் எப்படி கை சின்னத்தில் எம்.பி. ஆகி ராஜிவ் மூத்திரத்தையும், ஜெ. மலத்தை தின்று பிழைத்தது பற்றி எழுதி விட்டு இறுதி எழுதிய சில வரிகளை கீழே பதிகிறேன்…

    காங்கிரஸ் கட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட போது அதன் தலைவராக இருந்த ராஜிவ் காந்தி ஆற்றியுள்ள உரை காங்கிரஸ்காரர்களால் மீண்டும் மீண்டும் படிக்கபட வேண்டும். மேலே குறிபிடப்படும் அந்த நூற்றாண்டு விழா சொற்பொழிவில் காங்கிரஸ் கட்சியின் பலவீனங்கள் அனைத்தை சுட்டிகாட்டி இருந்தார். அரசாங்க திட்டங்கள் மக்களுக்கு போய் சேருவது இல்லை என்பதையும் ஒப்புக் கொண்டிருந்தார்.

    அதன் பிறகுதான் எதிர்கட்சி தலைவராக இருந்த காலத்தில் இந்திய மக்களை பற்றியும் இடதுசாரி கட்சிகளை பற்றியும் அதிகமாக சிந்திக்க தொடங்கியிருந்தார். துரதிஷ்டவசமாக வளர்ச்சி பெறுவதற்கு முன்பு மேலும் மேலும் மக்களை பற்றி சிந்திக்கிற, கவலைபடுகிற தலைவராக வளர்ந்து கொண்டிருக்கும் காலத்தில் கொல்லபட்டு விட்டாரோ என்பதுதான் வேதனைக்குரிதாகும்.

    அவரது கொலைபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி சதித் திட்டம் போட்ட கும்பலையும், அந்த கொடிய செயலை செய்து முடித்த மனித மிருகங்களையும் கண்டுபிடித்தே ஆக வேண்டும்.

    தாவண்ணா பாண்டி கை சின்னத்தில் எம்.பி.யாக இருந்து பொறுக்கி தின்னதற்காக ராஜிவ் செய்த சீக்கிய படுகொலை, ஈழ தமிழர் படுகொலை, போபால் கொடுமை, பிரங்கி பேர ஊழல், பாசிச சர்வாதிகாரம் போன்றவற்றை மறைத்து எழுதி இருக்கும் அயோக்கியதனம் எப்படி சரியோ அது போல்… டாடாவிற்காக கலை சேவை செய்து இருக்கும் லீனாவை சரி என தமிழ் உலகத்தில் இருக்கதான் செய்வார்கள்… எந்த கும்பலை கொல்ல வேண்டும் என தாவண்ணா பாண்டி சொல்லி இருக்கிறாரோ அதே கும்பலுக்கு ஆதரவாக வேலை செய்த வைகோ, பழ.நெடுமாறன், சீமான் போன்றவர்கள் தாவண்ணா பாண்டியுடன் சேர்ந்து அரசியல் செய்ய முடிகிறதோ, என்ன அறம் இருக்கிறது… அதே போன்ற தமிழ் எழுத்துலகத்தில் தண்டேவாடா, ஒரிசா, ஜார்கண்ட், காஷ்மீர், கூடங்குளம் மக்களுக்கு மனித உரிமை பேசி கொண்டு லீனாவிற்கு ஆதரவாக அறம் பேசுகிறார்கள்…

    நான் தெரிந்து கொண்டது என்னவென்றால்… இனிமேல் அனைவரும் அறைத்து உடைத்து எறிந்து விட்டு… தாவண்ணா பாண்டி போல் எச்சில் பொறுக்கி போல் பிழைக்க வேண்டும், கலையுலகில், எழுத்துலகில் டாடாவிற்கு லீனா செய்த சேவைக்கு எந்த அறமும் தேவையில்லை…

  7. // “பிழைப்புவாதமே இந்த நூற்றாண்டின் புரட்சி” ///

    புரட்சியில்தான் எத்தனை வகைகள்!

  8. லீனாவும், லீனாவைத் தாங்கிப் பிடுக்கும் கயவர்களும் “விதண்டாவாதம்” என்ற ஒற்றைச் சொல்லுக்குப் பின்னே ஒழிந்துகொண்டாலும், தோழர்களுக்குத்தான் இப்பதிவு மிக்க பயனுள்ளதாக உள்ளது.
    இந்தியா முழுவதும் கார்ப்பொரேட் மயமான பிறகு, இந்தியாவுக்குள் உனக்கென்ன வேலை! என்று அங்கலாய்க்கும், தங்களைச் சுற்றிலுமுள்ள லீனாவாதிகளை சமாதிக்கு அனுப்ப இப்பதிவு மிக்க உதவும்.
    நன்றி வினவு.

  9. அறிவுக் கொழுப்பெடுத்த சில அறிவுஐீவிகளை இதுவரை பின் நவீனத்துவவாதிகள் என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இனி இவர்களை லீனாவாதிகள் என்று அழைப்பது சாலப் பொருந்தும் எனக் கருதுகிறேன்.

  10. கட்டுரையை எத்தனை முறை ரீவைண்டு பண்ணி படிச்சாலும் விசிலடிக்காம இருக்க முடியல• (விசிலடிச்சான் குஞ்சு ன்னு என்னை அழைத்தாலும் இப்படி ஒரு கட்டுடைப்புக்கு கட்டாயம் விசிலடிக்க தயக்கமே இல்லை)

  11. vinavu-leena
    முதலாளிகளுக்காக வேலை செய்யாதவர்கள் யாரேனும் இருக்கமுடியுமா

    அதுவும் முதலாளித்துவ சமூகத்தில் உக்கார்ந்து கொண்டு இது இந்த முதலாளியின் வேலை என்று தெரியாமலேயே நாம் எதோ ஒரு முதலாளியின் பாக்கெட்டுக்குத்தான் வேலை செய்கிறோம் –

    பழங்குடி இன மக்களை பாதுகாத்து கொண்டு அவர்களின் உற்பத்தி முறையை அப்படியே தக்கவைத்து கொண்டு இருப்பதும் ஒரு சுயநலமல்லவா ?

    முதலாளித்துவம் என்பது அதைவிட முற்போக்கானது இல்லையா ? அல்லது பிற்போக்கானதா

    இங்கேதான் நக்சல்பாரி அரசியலின் அடிமுதல் நுணிவரை சாய்ந்து போகிறது

    ஒரு சமூகம் கத்தி இன்றி ரத்தமின்றி உற்பத்தி உறவுகளை மாற்றி கொள்ளும் என நம்ப சொல்கிறார்கள் அதெப்படி முடியும் அதற்காக டாடாவின் ஆதிக்கத்தையும் கொலைகளையும் ஏற்றுகொள்ள சொல்லவில்லை ஆனால் அதை எதிர்த்து
    செயல்படுவதில் எந்தமாதிரி செயல்படுகிறோம் என்பதே கேள்வி

    (டாடாவின் கம்பெனி ஆரம்பித்தால் அங்கிருக்கும் மக்களுக்கு வேலை வாய்ப்பு அங்கு பாலி டெக்னிக் நிருவுதல் சுகாதாரம் மருத்துவம் அமைத்து தருதல் கல்வி சாலைகளை அதிகபடுத்தல் இவற்றுடன் சேர்ந்த முறையில் தொழில்பெருக்கம்
    வரவேண்டும் என்பதுதான் சரியான எதிர்ப்பு)

    மக்களுக்கு சாலை போடுவதில் ஆரம்பித்து அவர்களுக்கு பள்ளி கட்டுவது பஸ்வசதி செய்வது தொழிற்சாலை அமைப்பது வரை அனைத்தையும் ஏன் இவர்கள் எதிர்க்கிறார்கள் ஏனெனில் அவ்வாறு அமைத்தால் போலீஸ் வந்துடும்
    பிறகு ராணுவம் வந்துவுடும் என்பதே

    அடுத்து கனிம வளங்கள் அந்த மக்களுக்கே சொந்தம் என்கிற பசப்புரை அதுவும் தவறே கனிம வளங்கள் உலகம் அனைத்துக்கும் சொந்தம் அதை இப்போது இருக்கும் முதலாளித்துவ நடைமுறையில் தானே வழங்க முடியும்

    //கஞ்சா வியாபாரத்தில் தொடங்கி சிங்குர் வரையில் டாடா குழுமம், நடந்து வந்த பாதையை நாம் இங்கே விளக்கப் போவதில்லை. “டாடா என்றால் உண்மை, நேர்மை” என்று நம்பிக்கொண்டிருந்த பாமர நடுத்தர வர்க்கத்தினர் கூட சிங்குர், கலிங்க நகர், சல்வா ஜுடும் கதைகளையும் ராடியா டேப்பையும் கேட்டபின் தம் கருத்தை மாற்றிக் கொண்டு விட்டார்கள். டாடா நிறுவனம் தேஜஸ்வினி போன்ற பித்தலாட்டங்களைக் களம் இறக்குவதற்கான அவசியமும் இந்தப் படத்தின் அவதார ரகசியமும் இதுதான்.//

    எல்லா நிறுவனங்களும் பிராடுதானே எந்த கம்பெனி சேல்ஸ் டாக்ஸ்சுக்கும். வருமான வரிக்கும் , ஈ எஸ் ஐக்கும் ஒரே கணக்கை காட்டுகிறது .(இன்குடிங் அதியமான் கம்பெனி)

    இந்தியாவை ஆளும் முதலாளித்துவ அரசு முதலாளிகளின் நலனுக்கானது மட்டுமே அது நாடு காடு இரண்டிலும்

    ஆனால் காட்டில் ஆரம்பிக்கப்படும் தொழிற்சாலைகள் அந்த மக்களின் வாழ்க்கையை முற்போக்காக மாற்றி அமைக்க விடுவதில்ல நம்ம நக்சல்பாரிகள் அதில் இருந்து வெளியே வந்து நக்சல் பாரி அரசியலை முழுமையாக புரிந்து கொண்டு வெளியே வந்தவர்தான் நியோகி

    மக்களின் கனிமவளங்கள் மக்களுக்கு சொந்தம் -அதை உற்பத்தி செய்யாமல் மலைகளுக்குள்ளும் காடுகளுக்குள்ளும் வைத்திருக்க சொல்வது பிற்போக்குத்தனம்

    லீணா சொல்கிறார் //தேஜஸ்வினி பெண்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் பயன்பாடு பெற்ற ஆதிவாசிப் பெண்கள், கணவனை இழந்தப் பெண்கள் , கைவிடப்பட்டப் பெண்கள் குறித்த ஆவணப்படத்தை பம்ப்கின் பிக்சர்ஸ்(மும்பை) என்ற தயாரிப்பு நிறுவனத்திற்கும் எடுத்துக் கொடுத்தேன். அதற்கு நிதியுதவி செய்வது டாடா நிறுவனம் தான் என்று தெரிந்து தான் அந்தப் பணியை செய்தேன்..அந்த ஆவணப்படத்தின் பத்து நிமிட, ஐந்து நிமிட, ஒரு நிமிட பிரதிகளை நிறுவனமே எடிட் செய்து விளம்பர படங்களாக பயன்படுத்திக் கொண்டது. இதில் எந்த உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் நான் படத்தில் சொல்லவில்லை. நேர்மையாகவே, அந்தப் பெண்களின் வாழ்க்கையை விஷுவல் செய்திருந்தேன்.”//

    அந்த பெண்கள் வாழ்க்கை உயர்ந்திருக்கிறதா இல்லையா என்பது இங்கு விவாதபொருள் இல்லாமல்

    அந்த ஆவணப்படுத்தை எடுத்தது சரியா தப்பா என பேசுவது அந்த ஆவணபடத்துக்குள் மட்டுமல்லாமல் அந்த மக்களின் வாழ்க்கைக்குள் போகவிடாமல் தடுக்கும் நோக்கமே
    ஆர்பரித்து நிற்கிறது

    //மா.லெ குழுக்கள் பன்னாட்டு ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் நிதி பெறுவதில்லையா“ என்கிறார் கீதா நாராயணன். உலகத்தை சுரண்டும் ஏகாதிபத்திய முதலாளிகளின் எச்சில் எலும்புகள் நிரம்பிய குப்பைத் தொட்டியை வலம் வரும் நாய்களும், அந்த நிறுவனத்தால் சுரண்டப்படும் ஊழியனிடம் நன்கொடை பெறும் மா.லெ குழுக்களும் ஒன்றெனச் சித்தரிக்கும் இந்த “அறியாமையை” எந்த ஆசிட் ஊற்றினாலும் கழுவ முடியுமா//

    தனியார்மயம் தாராளமயம் உலகமயம் ஓம் நமச்சிவாய என்கிற தாரகமந்திரத்தின் படி தப்பு தப்பு தப்பு

    ஆனால் முதலாளித்தும் ஏகாதிபத்தியம் என்கிற வரிசையின் படி சரி

    லீணா எடுத்த தேஜஸ்வினி படமோ அல்லது வேறு ஒரு கோணா எடுக்க போகும் பூஜஸ் வினி படமோ நமக்கு சொல்வதென்ன

    அந்த மக்களின் வாழ்க்கை அவர்களின் முன்னேற்றம் என்பது அவர்களின் உற்பத்தி முறையை மாற்றி அமைப்பதன் மூலம் மட்டுமே நடக்கும்

    அதற்கு முதலாளித்துவம் தான் தற்போது இருக்கிறதென்றாலும் பிரச்சனை இல்லை நமக்கு தொழிலாளிகள் கிடைப்பார்கள் நியோகி கட்டியதை போன்று தொழிற்சங்கங்களை கட்டலாம்

    அதை விடுத்து வில்லும் அம்பும் ஏந்திய கோமாணாதாரிகளாக அவர்களை வைத்திருப்பதால் என்னாக போகிறது

    அவர்கள் பேசும் மொழியே சிறந்தது எனவியந்தோதி அவர்களது வழிபாடுகளை ஆதரித்து
    என்ன சாதிக்க போகிறீர்கள்

    மறைந்து வாழும் இடங்களை உங்களுக்கு அவர்கள் வழங்கலாம் ஆனால் வாழ்க்கை சக்கரத்தில் அவர்கள் மறைந்து வாழவே முடியாது

    • இவருக்கு தோழர்கள் யாராவது நேரில் வகுப்பு எடுத்தால் தேவலாம். அறைகுறை புரிதலோடு வியாக்கியானம் செய்து தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப முயற்சிக்கும் தியாகுவைப் பார்த்தால் பரிதாபம்தான் ஏற்படுகிறது.

    • மிஸ்டர் மணி மற்றும் மிஸ்டர் குயாதி,

      உங்களுக்கு என் கடுமையான கண்டனங்கள் 🙁 எங்கள் தியாகுருவை இப்படி சொரிநாயைக் காறித்துப்புவதைப் போல் இகழ்ச்சியாகப் பேசுவது வருத்தத்திற்குரியது.

      பழங்குடிகளை முதலாளித்துவ சமூகத்தவர்களாக முன்னேற்றி அதன் தொடர்ச்சியாக சோசலிசத்துக்காக நடந்து கொண்டிருக்கும் முயற்சியை நீங்கள் கேவலப்படுத்துகிறீர்கள். இதன் மூலம் நீங்கள் கம்யூனிஸ்டுகள் இல்லை என்பதையும் நீங்களே அம்பலப்படுத்தி விட்டீர்கள். முதலில் முதலாளித்துவம் வந்தால் தானே சோசலிசம் வந்து பின் கம்யூனிசன் வரும்? முதலாளித்துவத்தை டாடாவும் ஜிண்டாலும் சீக்கிரமாகக் கொண்டு வந்து எங்கள் வேலையை சுளுவாக்குவதை நீங்கள் ஏன் எதிர்க்க வேண்டும்? இதன் ரகசியம் என்ன?

      இந்தியாவில் சோசலிசம் அமைய போராடிக் கொண்டிருக்கும் காமரேடுகளான தியாகு, சங்கர்சிங், ஜிண்டால், அம்பானி, டாடா மற்றும் மிட்டல் போன்ற தோழர்களிடம் இருந்து நீங்கள் என்றைக்கு பாடம் படிக்கப் போகிறீர்களோ தெரியவில்லை.

      பழங்குடிகளை விரட்டியடித்து விட்டு அங்கே தொழிற்சாலை கட்டி, தொழிற்சங்கம் கட்டி, கம்யூனிஸ்டு கட்சி கட்டி, புரட்சி நடத்தி, சோசலிசம் அமைத்து, கம்யூனிசம் அடைந்து….. இதற்கெல்லாம் அடிப்படை எது? சல்வாஜூடும் தானே?ஆக, சல்வாஜூடுமை ஆதரிக்காமல் இருப்பதன் மூலம் வினவு சோசலிசத்துக்கு துரோகமிழைக்கிறது என்கிறார் எங்கள் தியாகுரு.

      • Mannaru… இங்குள்ள கம்யினிச தலைவர்கள் தங்கள் விவசாய நிலங்களில் வேலைசெய்வோருக்கு எந்த அடிப்படையில் ஊதியம் தருகிறார்கள் என்று சொல்லமுடியுமா..

        உங்கள் சிவப்பு குறுதியை தொட்டு சொல்லுங்கள்…கம்யுனிச ஆட்டோ ஓட்டுநர் சங்கம் வைத்து..நியமாய் பைசா கேட்கும் ஓர் சென்னை ஆட்டோ ஓட்டுநரை காட்டுங்கள்..

        முதலில் உங்களை சுத்தம் செய்து பின்னர் வக்காலத்து வாங்கவும்..

    • ஆணின் மனக்குகை வார்த்தைகளை எள்ளி நகையாடுகிறதா கவிதை. தத்தி உங்களுக்கு கவிதய பொருள் பிரித்து படிக்கத் தெரியுமான்னு சந்தேகம் இதுனாலதான் வருது. அது சரி இந்த விளக்கத்த சீமாட்டி ஒத்துக்கிட்டாங்களா? கொஞ்சம் கன்பர்ம் பண்ண சொல்லுங்க• மண்டபத்துல எழுதிக் கொடுத்த சிவபெருமான நார்நாரா கிழிச்சுறலாம்.
      ப‌டத்த எடுத்த்து சரியா தப்பாங்குறது முக்கியமான பிரச்சினையில்ல•. அந்த பழங்குடியின பெண்கள் முன்னேறி இருக்காங்களா ங்குறதுதான் முக்கியம் னு சொல்ல வர்றீங்க• ஆனா கவித மாரி சுருக்கமா வர்ல• சரி அதுக்காக நின்னு நிதானமா வாதாடுங்க பாக்கலாம். அப்ஜக்ஷன் ஓவர் ரூல்டு.

    • தோழர்களே, தான் கேலி செய்யப்படுவது கூட தெரியாமல் அந்தக் கேலியையே வாழ்த்து, அங்கீகாரம் என்று பெருமைப்படும் அளவுக்கு அற்பத்தனம் மேலோங்கியுள்ள இந்த தியாகுவை கிண்டலடிப்பது என்ற பெயரில் இந்த கட்டுரையின் தீவிரத்தை குறைத்து வருகிறீர்கள். கட்டுரை பொதுவில் செல்வாக்கு செலுத்தும் பிழைப்புவாதம் குறித்தும், அதற்கு அது போட்டு வரும் முற்போக்கு, தத்துவ முகமூடிகள் குறித்தும் மறுக்க முடியாத வாதத்துடன் பேசுகிறது. அத்தகைய ‘கருத்துரிமை காவலர்களை’ பேச வைக்கும் வண்ணம் விவாதத்தை தீவிரமாக முன்னெடுத்துச் செல்லுங்கள். தியாகுவோடு நேரத்தை வெட்டியாக செலவு செய்து பொழுது போக்காதீர்கள்!

    • தியாகு சார்,

      உங்களை சமூக சிந்தனைகளில் பிஎச்டி ரேஞ்சில என்று நினைச்சிருந்தோம், இப்போ பார்த்தா எல்கேஜி மேட்டரில சொதப்புறீங்களே!

      //முதலாளிகளுக்காக வேலை செய்யாதவர்கள் யாரேனும் இருக்கமுடியுமா அதுவும் முதலாளித்துவ சமூகத்தில் உக்கார்ந்து கொண்டு இது இந்த முதலாளியின் வேலை என்று தெரியாமலேயே நாம் எதோ ஒரு முதலாளியின் பாக்கெட்டுக்குத்தான் வேலை செய்கிறோம் -//

      முதலாளித்துவ நிறுவனங்கள் செய்த பொருட்களை பயன்படுத்துவது
      முதலாளிகளுக்கு உழைப்பை விற்று (சுரண்டலுக்குட்பட்டு) பணம் பெறுவது
      முதலாளிகளின் சுரண்டலில் பங்கேற்று அதை தாங்கிப் பிடிப்பது

      என்று முதலாளிகளுடன் உறவாடலாம்.

      முதலாளிகள் செய்த பொருள் என்று எதுவும் இல்லை. அவை சமூக உழைப்பின் விளைவுகள்தான். ஒரு பொருளின் தேவையைப் பொறுத்து அவரவர் முடிவு செய்து கொள்கிறார்கள்.

      முதலாளித்துவ அமைப்பால் சுரண்டப்படும் யாரும் குற்றவுணர்வு கொள்ளத் தேவையில்லை, அந்த சுரண்டலுக்கு எதிராக போராடாமல் இருந்தால் குற்றவுணர்வு இருக்க வேண்டும். (திருப்பூர் தியாகு போன்றவர்கள்)

      சுரண்டலில் பங்கு பெற்று அதில் ஒரு சிறு பகுதியை தனக்கு ஒதுக்கிக் கொள்ளும் பிரிவினரைத்தான் இந்த கட்டுரை விமர்சிக்கிறது. தமது அந்த பங்களிப்பை அவர்கள் நியாயப்படுத்திக் கொள்ளவும் செய்கிறார்கள், சமூகப் போராளிகளாக காட்டிக் கொள்ளவும் செய்கிறார்கள்.

      //பழங்குடி இன மக்களை பாதுகாத்து கொண்டு அவர்களின் உற்பத்தி முறையை அப்படியே தக்கவைத்து கொண்டு இருப்பதும் ஒரு சுயநலமல்லவா ? முதலாளித்துவம் என்பது அதைவிட முற்போக்கானது இல்லையா ? அல்லது பிற்போக்கானதா இங்கேதான் நக்சல்பாரி அரசியலின் அடிமுதல் நுணிவரை சாய்ந்து போகிறது//

      1+3=4 என்று ஏதோ வாய்ப்பாடு மாதிரி ‘முதலாளித்துவம் முற்போக்கு’ என்று பாட்டு படிக்காதீங்க.

      நிலப்பிரபுத்துவத்தை உடைக்கிறது என்ற அளவில் முதலாளித்துவம் முற்போக்கானது என்று உங்களுக்கு சொல்லிக் கொடுத்திருப்பாங்க. ஆனா, அந்த கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் அந்த முற்போக்கையும் மீறி முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்துடன் கள்ள உறவு வைத்துக் கொள்வது, மக்களின் ஒரு பகுதியினரை கூட்டுச் சேர்த்துக் கொண்டு அவர்களை ஊழல் படுத்துவது என்று ஜனநாயக புரட்சி செய்வதற்கான தகுதியை முதலாளித்துவம் இழந்து விட்டது (உங்க பாட பொஸ்தகங்களை புரட்டிப் பாருங்க, எங்காவது இது இருக்கும்). அதனால் பழங்குடி இன மக்களின் உற்பத்தி முறையை முன்னேற்றி ஜனநாய புரட்சி செய்யும் பொறுப்பு பாட்டாளி வர்க்கத்துக்குத்தான் இருக்கிறது.

      //ஒரு சமூகம் கத்தி இன்றி ரத்தமின்றி உற்பத்தி உறவுகளை மாற்றி கொள்ளும் என நம்ப சொல்கிறார்கள் அதெப்படி முடியும் அதற்காக டாடாவின் ஆதிக்கத்தையும் கொலைகளையும் ஏற்றுகொள்ள சொல்லவில்லை ஆனால் அதை எதிர்த்து செயல்படுவதில் எந்தமாதிரி செயல்படுகிறோம் என்பதே கேள்வி. (டாடாவின் கம்பெனி ஆரம்பித்தால் அங்கிருக்கும் மக்களுக்கு வேலை வாய்ப்பு அங்கு பாலி டெக்னிக் நிருவுதல் சுகாதாரம் மருத்துவம் அமைத்து தருதல் கல்வி சாலைகளை அதிகபடுத்தல் இவற்றுடன் சேர்ந்த முறையில் தொழில்பெருக்கம் வரவேண்டும் என்பதுதான் சரியான எதிர்ப்பு)//

      இதெல்லாம் ராபர்ட் ஓவன் காலத்திலேயே காலாவதி ஆகி விட்டது. முதலாளித்துவ அமைப்பே சமூகத்தையும், இயற்களை வளங்களையும் சுரண்டும் பெரும் எந்திரமாக உருவெடுத்து விட்டது. அது மக்களுக்கு கொடுப்பதாக காட்டும் ஒவ்வொரு சிறு சலுகைக்கும் பின்னால் மாபெரும் சுரண்டலை செய்து கொண்டிருக்கிறது.

      //எல்லா நிறுவனங்களும் பிராடுதானே எந்த கம்பெனி சேல்ஸ் டாக்ஸ்சுக்கும். வருமான வரிக்கும் , ஈ எஸ் ஐக்கும் ஒரே கணக்கை காட்டுகிறது .(இன்குடிங் அதியமான் கம்பெனி) இந்தியாவை ஆளும் முதலாளித்துவ அரசு முதலாளிகளின் நலனுக்கானது மட்டுமே அது நாடு காடு இரண்டிலும் ஆனால் காட்டில் ஆரம்பிக்கப்படும் தொழிற்சாலைகள் அந்த மக்களின் வாழ்க்கையை முற்போக்காக மாற்றி அமைக்க விடுவதில்ல நம்ம நக்சல்பாரிகள் அதில் இருந்து வெளியே வந்து நக்சல் பாரி அரசியலை முழுமையாக புரிந்து கொண்டு வெளியே வந்தவர்தான் நியோகி மக்களின் கனிமவளங்கள் மக்களுக்கு சொந்தம் -அதை உற்பத்தி செய்யாமல் மலைகளுக்குள்ளும் காடுகளுக்குள்ளும் வைத்திருக்க சொல்வது பிற்போக்குத்தனம்//

      எல்லா நிறுவனங்களும் பிராடுதான், தியாகுவின் திருப்பூர் நிறுவனம் உட்பட. அதனால் எந்த நிறுவனமும் மக்களை சுரண்டி அவர்களுக்கு நல்லது செய்வதாக படம் காட்ட முடியாது. எந்த தனியார் சுரண்டல் நிறுவனத்தையும் நாட்டின் வளங்களை கையாள மக்கள் அனுமதிக்கக் கூடாது.

      //அந்த பெண்கள் வாழ்க்கை உயர்ந்திருக்கிறதா இல்லையா என்பது இங்கு விவாதபொருள் இல்லாமல் அந்த ஆவணப்படுத்தை எடுத்தது சரியா தப்பா என பேசுவது அந்த ஆவணபடத்துக்குள் மட்டுமல்லாமல் அந்த மக்களின் வாழ்க்கைக்குள் போகவிடாமல் தடுக்கும் நோக்கமே ஆர்பரித்து நிற்கிறது//

      13 பெண்கள் தேஜஸ்வனி திட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கிறார்கள். தேஜஸ்வனி திட்டத்தை செயல்படுத்தும் டாடா நிறுவனத்தினர் அழித்த ஆயிரக் கணக்கான பெண்களின் வாழ்க்கையை பற்றி ஆவணப் படம் பேசவில்லை என்பதுதான் பிரச்சனை.

      தியாகு சார், நீங்க கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை 10 தடவை எழுதி எழுதி படித்து விட்டு வந்தால் நல்லதுன்னு தோணுது.

  12. நிர்மலா கொற்றவை லீனாவை ஆதரிக்க ரோசா லக்சப்மப்ர்க்கையும் கூட மேற்கோள் காட்டுவார்.நானே உண்மையான மார்க்சிய பெண்ணியவாதி என்று ஆவேசமாக பிலிம் காட்டுவார்.மாசெஸஸ் என்ற அமைப்பை துவக்கினார்.சிகப்பழகு க்ரீம்களுக்கு எதிராக
    ஆவேச அறப்போராட்டம் நடத்தினார்.அதன்பின் என்ன ஆயிற்று?- யாருக்கும் தெரியாது.
    நாளையே லீனா சிகப்பழகு க்ரீம்களால் பெண்கள்,ஆண்களின் தன்னம்பிக்கை வளர்கிறது
    என்பதை விளக்கி குறும்படம் எடுக்கலாம். அதுவும் பெண்ணியமே என்று சிலர் ஒத்து
    ஊதலாம். லீனாவின் பேஸ்புக் பக்கத்திலிருந்து லீனா இன்னொரு அவதாரம் எடுத்து மதுரையை கலக்கப் போவதாகத் தெரிகிறது.அதை வைத்தே சில வாரங்களுக்கு புரட்சிகர பாலியல் பெண்ணியவாதியாக காட்டிக்கொள்வார்.இப்படி லீனாவை தொடர்ந்து திட்டிக்கொண்டிருந்தல் இது போன்ற வேடிக்கைகள் தொடரும்.அதுவெல்லாம் தேவையா, இவர்கள் மாறப் போகிறார்களா என்பதை யோசியுங்கள்.

    • ஆமா இவங்க எல்லாம் அப்படியே மாறிட்டாலும்.. இவர்கள் எல்லாம் மாறுவதற்காகவா வினவு இதை எழுதியுள்ளது ? இல்லை. தெரியாமல் தவறு செய்பவர்கள் மாறலாம் ஆனால் தவறையே தத்துவமாக வரித்துக்கொண்டிருப்பவர்களை நாம் பதிவெழுதி மாற்றிவிட முடியுமா என்ன ? முற்போக்காளர்கள், கலகக்காரர்கள் என்று சீன் காட்டிக்கொண்டிருக்கும் இவர்கள் எல்லாம் எத்தகைய சந்தர்ப்பவாதிகள் பிழைப்புவாதிகள் என்பதை தோலை உரித்துக்காட்டுவது தான் பதிவின் நோக்கம் என்று கருதுகிறேன். அவ்வாறாயின் இவர்களை நார்நாராக கிழித்துத்தொங்கவிட்டிருக்கிறது பதிவு.

      லீனா புரோக்கர் வேலை செய்தது சரியா தவறா என்று நிர்மலா கொற்றவைக்கு தெரியவில்லையாம் ! புரோக்கர் வேலை செய்றது சரியா தப்பாங்கிற நாளாங்கிளாஸ் கேள்விக்கே பதில் தெரியலைன்னா நீங்கல்லாம் என்னத்துக்கு தத்துவத்துக்கு பக்கத்துல போய் நிக்கிறீங்க ? இந்த சின்ன கேள்விக்கே பதில் தெரியலைன்னா தத்துவச்சிக்கல்களை எல்லாம் எப்படி தீர்ப்பீங்க அறிவாளிகளே ?

      இந்த லட்சணத்தில் மார்க்சுக்கும் மாவோவுக்கும் திருத்தம் வேறு சொல்கிறார்கள் என்றால் இவர்களை எல்லாம் எதைக்கொண்டு அடிப்பது தோழர்களே ?

      பிழைப்புவாதிகளும் காரியவாதிகளுமான இவர்கள் டாடாவிடம் மட்டுமல்ல அவனைவிட கேவலமான, சுரண்டல் ஜந்து ஏதாவது இருந்தால் அதன் காலடியை சரணடைந்து கூட நத்திப்பிழைக்கக்கூடியவர்கள்.

      இந்த லீனாவதிகளைப் போன்ற ஜீவன்கள் ரசியப்புரட்சிக்கு முன்பு, அதாவது நிலப்பிரபுத்துவ ரசியா சிதைந்து ஒரு புரட்சிக்கர ரசியாவின் உருவாகத்துக்கான மாற்றங்கள் ரசிய சமூகத்திற்குள் நிகழ்ந்துகொண்டிருந்த மிக மிக ஆரம்ப கட்டத்தில் ரசியாவிலும் தோன்றியது.

      பொய், பித்தலாட்டம், கோஷ்டி வாதம், அற்பத்தனம்,அடிவருடித்தனம் இவற்றுடன் கொஞ்சூன்டு ’அறிவையும்’ வைத்துக்கொண்டிருந்த இந்த வர்க்கத்தை பற்றி புகழ்பெற்ற ரசிய எழுத்தாளர் அந்தோன் சேகவ் நிறைய கதைகளை எழுதியுள்ளார். அதில் மிக மிக முக்கியமான கதை ’முகமூடி அக்கதையில் அறிவாளிகளின் உணமை முகத்தை பளிச் என்று வாசகர்களுக்கு விலக்கிக் காட்டுகிறார் செக்காவ்.

      வினவு பொருத்தமான இத்தருணத்தில் அக்கதையை வெளியிடுவது புதிய வாசகர்கள் இந்த அறிவாளிகளின் உண்மை முகத்தை இலக்கியத்தின் வழியாக அறிந்துகொள்ளவதற்கு உதவும்.

  13. ஐயா தியாகு, நீங்கள் வினவுடன் வீணாக விவாதிக்காதீர்கள்.லீனா,நிர்மலா கொற்றவையை தொடர்பு கொண்டு ஏதாவது குறும்பட வாய்ப்பு கிடைக்குமா என்று பாருங்கள்.அப்புறம் ஒரு வேண்டுகொள்- சங்கர் குஹா நியோகியைக் கொச்சைப்படுத்த வேண்டாம்.அவர் ஒரு போராளி, எந்த அதிகார அமைப்பிடமும் கையேந்தாமால் தொழிலாளர்களுடன் சேர்ந்து போராடி வாழ்ந்து அதற்காக கொல்லப்பட்டவர்.அவர் அரசையும்,முதலாளிகளையும் ஒரு சேர எதிர்த்தவர்.ஒரு ஆதிவாசிப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு தொழிலாளர்களை ஒன்று திரட்டி களத்தில் நின்று போராடியது மட்டுமின்றி ஒரு வலுவான தொழிற்சங்க இயக்கத்தைக் கட்டியவர்.அந்த இயக்கம் தொழிலாளர்களுகாக மருத்துவமனை நடத்துகிறது.லீனாக்கள் அதையெல்லாம் குறும்படம் எடுக்க மாட்டார்கள்.பிழைப்புவாதம்தான் கொள்கை என்றால் லீனாவுடன் கூட்டணி அமையுங்கள்,யார் உங்களை தடுத்தது. அப்புறம் இன்னொன்று இன்றைக்கு லீனாக்களுக்கு குஹா நியோகி என்று சொன்னால் கோபம் வரலாம்.எனவே அவர் பெயரை உச்சரிக்காமல் ரத்தன் டாடா மார்க்ஸ் காண விரும்பிய சமூகத்தை கட்டமைக்கிறார் என்று சொல்லி சரணாகதி அடையுங்கள்.லீனாவெல்லாம் வேண்டாம் நேரடியாக முதலாளிகளிடமே சரணடைகிறேன் என்றாலும் சரிதான்.ஆனாலும் பாருங்கள், பல நேரங்களில் இடைத்தரகர்ள் மூலம் தொடர்பு கொள்வது நல்லது, நம்பகத்தன்மை முக்கியமல்லவா.

  14. //ஐயா தியாகு, நீங்கள் வினவுடன் வீணாக விவாதிக்காதீர்கள்.லீனா,நிர்மலா கொற்றவையை தொடர்பு கொண்டு ஏதாவது குறும்பட வாய்ப்பு கிடைக்குமா என்று பாருங்கள்.அ//

    லீணா டாடாவுக்கு குறும்படம் எடுத்தால் தப்பென்கிற நீங்கள் லீணா செங்கடல் படம் எடுத்த போது என்ன சொன்னீர்கள் அல்லது என்ன சொல்வீர்கள் என தெரியவில்லை

    மேலும் அந்த படத்தை இந்த ஆளும் வர்க்கம் தடுத்து நிறுத்தி எங்கும் திரையிட க்கூடாது என சொன்னபோது ஏனய்யா இவ்ளோ கோபாவேசமாய் அதை எதிர்க்கவில்லை

    உங்களுக்கு தேவை லீணாவை எதிர்க்க கிடைக்கும் சாக்கு அவ்வளவுதான்

    தனியார்கள் அல்ல இந்த அமைப்பே எதிர்த்து உடைக்கப்படவேண்டியது என்றால் சரியானது அதை விடுத்து லீணா சரியல்ல டாடா சரியல்ல என்று பிரச்சனையை தனிநபர் சார்ந்ததாக ஆக்க கூடாது

    அப்புறம் இன்னொன்று நியோகியை லீணா உடன் ஒப்பிடமாட்டேன் அவர் குறும்படம் எடுத்து கொண்டு உக்கார்ந்து கொண்டிருந்தவரும் அல்ல வில்லும் அம்பும் சரிதான் என சொல்லி தொழிற்சங்கம் கட்டாமல் காட்டுக்குள் வாழ்ந்தவருமல்ல

    நியோகிதான் ரெலவண்டு நக்சல்பாரி அல்ல என்பதை சொல்லவே நியோகியை சொன்னேன்

    • //அதை விடுத்து லீணா சரியல்ல டாடா சரியல்ல என்று பிரச்சனையை தனிநபர் சார்ந்ததாக ஆக்க கூடாது ///

      குருவே, உங்கள் கொள்கையே கொள்கை, விளக்கமே விளக்கம்!

      அதே போல, லீணா, நிர்மலா கொற்றவை, அ.மார்க்ஸ் என்று தனித்தனியாக தனி நபர்களாக பார்க்கக்கூடாது. மொத்தமாக லீணாவாதிகள் என்று பார்க்கவேண்டும்.
      தியாகு, இங்கிலீஸ் தியாகு என்றெல்லாம் தனித்தனியாக தனி நபர்களாக பார்க்கக்கூடாது. மொத்தமாக தியாகுயிஸ்டுக்கள் என்று பார்க்கவேண்டும்.

      என்ன நான் சரியா புரிஞ்சுகிட்டேனா குருவே?
      குருவின் கருணையோ கருணை, ஒரு கமெண்டில் எனக்கு உள்ளொளியை காட்டிவிட்டீர்கள்..

  15. ஓ நக்சல் பாரியே எனது தோழனே

    அந்த மக்களுக்கு தேவை
    உனது உயிரல்ல தோழனே

    உனது தியாகம் எங்கே
    செல்லாமல் போகிறது

    எங்கே அவர்களின் அறிவுக்கண்
    மூடிக்கிடக்கிறதோ அங்கே

    அவர்களை ஆயுததாரிகளாக
    மாற்றினாய் என்னானது

    பெரிய பீரங்கிகள் அங்கமெலாம்
    ஆயுதம் தரித்த அரசபடைகள்
    அவர்களை கொன்றது

    நீயோ காட்டுக்குள் இருக்கிறாய்
    நாட்டுக்குள் உனது அரசியல்

    தீவிரவாதமானது

    இங்கே நாள் தோறும்
    சீரியல் பார்த்து உறங்கும் மக்கள்

    அங்கே கால்களில் செருப்பில்லாமல்
    உன் அடிபற்றி மக்கள்

    எங்கோ பிழை இருக்கிறது

    சிந்திக்கவும் சீர்திருத்தவும்
    முடியும் உன்னால்

    நீ கம்யூனிஸ்ட் என்றால்

    -தியாகு

  16. க‌டசில வக்கீல பேச வச்சுட்டீங்க நான் லீணா – நான் லீனியர்.ஆத்தா கஷ்டப்படுறப்போ நீ வந்தியா. இல்ல நீ வந்தியா.. (கருணாஸ் வசனம் இல்லீங்க) ன்னு தத்தி அ பேச வச்சுட்டீங்க• நீங்க ஒன்ன புரிஞ்சுக்கணும். அம்பானிக்கு வரிச்சலுக தர்றாங்க னு சொல்றீங்க, இல்ல நிலக்கரி ஊழல் ல பிரதமர் அலுவலகத்துக்கு தொடர்பு னு அம்பலப்படுத்துறீங்கனு வச்சுக்குவோம். நம்மாளு என்ன சொல்வாருன்னா அமைப்பையே மாத்தனும் அம்பானிய இழிச்ச வாயன் ன உடன கைய காட்றீங்களாம்பாரு. மன்மோகன் விரும்புற மக்காலே தத்தி இது தாங்க•

    (பிகு – இந்த வக்கீல் செசன்சு கோர்ட்டோட நின்னுருவாரு. வக்கீல்கள் இன்னும் வாய் திறக்காம இருக்காங்க• ஜூனியர ரொம்ப அடிக்காதீங்க• அழுதுருவேன்)

    • 100 சதவீத அக்மார்க் கம்யுனிச மணி அவர்களே.. நல்ல தோழராக நீங்கள் சாதித்தவற்றை கொஞ்சம் சொல்லுங்கள்..

      தங்கள் விவசாய நிலங்களில் அல்லது உங்களிள் கீழ் வேலைசெய்வோருக்கு எந்த அடிப்படையில் ஊதியம் தருகிறார்கள் என்று சொல்லமுடியுமா…நீங்கள் உங்கள் நிறுவனத்தை கம்யுனிச முறையில் நடத்த வக்கற்ற நீங்கள்….கம்யுனிச போர்வை போர்த்தி நாடகம் நடத்தவேண்டம்.. எனெனில் கம்னிசம் ஓர் கட்டுக்கதை என்பது உங்கள் மனதுக்கு தெரியும்…

  17. ///தனியார்கள் அல்ல இந்த அமைப்பே எதிர்த்து உடைக்கப்படவேண்டியது என்றால் சரியானது அதை விடுத்து லீணா சரியல்ல டாடா சரியல்ல என்று பிரச்சனையை தனிநபர் சார்ந்ததாக ஆக்க கூடாது ////

    கம்னீச குன்றுவே,

    தனிநபர்கள் எல்லாம் சேர்ந்து தானே இந்த அமைப்பு? இவர்கள் எல்லாம் சேர்ந்து தானே இந்த அமைப்பை முட்டு கொடுத்து நிறுத்துகிறார்கள்?

    தனிநபர்களை எதிர்க்கவே எதிர்க்காமல் அமைப்பை எதிர்த்து, உடைக்கவேண்டுமா?
    அதை எப்படி செய்வது?

  18. யுவகிருஷ்ணாவின் தளத்தில், லீணா டாட்டாவுக்கு அடியாள் வேலை செய்த பிழைப்புவாதத்தையும், யுவகிருஷ்ணா பிழைப்புவாதத்தை நியாயப்படுத்துவதையும் பற்றி வாய் திறக்காத ஞானி, அங்கு ஏதோ சுவிசேச ஆராதனை நடப்பது போல பைபிளின் வசனங்களுக்கு பொழிப்புரை வழங்கிவிட்டு சென்றிருக்கிறார். இதற்கு பெயர் தான் நடுநிலை வாதமாம்!
    இந்த ஞானி கருணாநிதியை விமர்சிக்க மட்டும் வரிந்து கட்டிக்கொண்டு வந்துவிடுவார். பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம், நடுநிலைவாதம் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பிரிக்கமுடியாதவைகள் தானே….

    அங்கு ஞானிக்கு இட்ட பின்னூட்டம் :
    ஞானி சார்,

    //நம்மில் தவறு செய்யாதவர் யாரோ அவர் முதல் கல்லை எறியட்டும் என்று சொன்ன ஏசு, தானும் கல்லை எறியாமலே போய்விட்டது ஏன் என்பதன் பொருளை சேர்த்துப் புரிந்து கொள்ளவேண்டும். தன்னையே அவர் தவறு செய்யாதவராகக் கருதவில்லை என்றே அதற்குப் பொருள்.//

    ஏசு தன்னையே தவறு செய்யாதவராகக் கருதவில்லை என்று பொருள் விளக்கம், தத்துவ விளக்கம் அளிப்பது இருக்கட்டும்.
    (ஏசுவே தன்னை தவறு செய்யாதவராகக் கருதாத போது), அரசியல் விமர்சகராக கருதிக்கொள்ளும் நீங்களே, நீங்கள் மட்டுமே தவறு செய்யாதவர், யோக்கியவான் என்று கருதிக்கொண்டு தான் கருணாநிதியையும் மற்ற பிறரையும் விமர்சித்தீர்களா?

    டாடா போன்ற கார்பரேட்களுக்கு அடியாள் வேலை செய்வதையோ, உலமய சூழலில் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தான் பிழைப்புவாதியாக இருப்பதுடன் அதை நியாயப்படுத்தி மற்றவர்களையும் அதில் சங்கமிக்க அழைப்பதையோ, இந்த சூழலில் பிழைப்புவாதியாக தான் வாழமுடியும் அதனால் அனைவரும் பிழைப்புவாதிகளே என்று மற்றவர்களை இழிவு செய்வதையோ, இப்படி எதைப்பற்றியும் வாய் திறக்காத நீங்கள் (ஒருவேளை நீங்களும் அப்படிப்பட்ட வாய்ப்புக்காக காத்திருக்கிறீர்களோ?) எந்த அடிப்படையில், எந்த யோக்கியதையில் கருணாநிதியை விமர்சனம் செய்தீர்கள் ஞானி சார்?

    1) உங்களுக்கு அப்படி என்ன Special யோக்கியதை இருக்கிறது?
    2) பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம் பற்றி உங்கள் கருத்து என்ன? வெளிப்படையாக சொல்லலாமே?

    • கூட்ட‌த்தின‌ரை பார்த்து “உங்களுள் பாவமில்லாதவன் முதலில் அவள்மேல் கல் எறியட்டும்” என்று முத‌ல் வ‌ரியில் சொல்லிவிட்டு, இர‌ண்டாவ‌து வ‌ரியில் “இனிமேல் பாவ‌ம் செய்யாதே போ” என்று சொல்லி இயேசு அந்த‌ பெண்ணை ந‌ல்வ‌ழி ப‌டுத்துகிறார்.

      ஆனால் த‌த்துவ‌ முடிச்சுக‌ளை அவிழ்க்க‌ ந‌ம‌து நீதிமான்க‌ளுக்கு முத‌ல் வ‌ரி ம‌ட்டும் போதுமான‌தால் இயேசு சொன்ன‌ இர‌ண்டாவ‌து வ‌ரி தேவையில்லாம‌ல் போயிற்று…

      http://nadodiyinparvaiyil.blogspot.com/2012/06/blog-post.html

      • ஏதாவ‌து ஒரு புத்த‌க‌த்தில் இருந்து காப்பி ப‌ண்ணி இது போல் ஒட்டு போடும் வேலையை செய்வ‌த‌ற்கு முன்பு ஒன்றுக்கு நாலு முறை ப‌டியுங்க‌ள்…. அப்புற‌ம் த‌த்துவ‌ முடிச்சுக‌ளை அவிழுங்க‌ள்…

  19. //தனிநபர்கள் எல்லாம் சேர்ந்து தானே இந்த அமைப்பு? இவர்கள் எல்லாம் சேர்ந்து தானே இந்த அமைப்பை முட்டு கொடுத்து நிறுத்துகிறார்கள்?//

    தனிநபர்ன்னா வால்மார்ட் ஒரு பெரிய தனிநபர் – வெள்ளையன் ஒரு சிறிய பணமுள்ள தனிநபர் என இயந்திர கதியாக பார்ப்பது தவறல்லவா

    பெரிய பணமுதலையும் – சிறிய பணமுதலையும் நீந்தும் தொட்டில் ஒன்றே அல்லவா

    இதில் எப்படி சின்ன முதலையை நண்பனாக்குவீர்கள் என்ற எனது பழைய கேள்விக்கு இன்னும் விடை இல்லை நிற்க

    இந்த அமைப்பை உடைக்க தொழிலாளர் ஒற்றுமை தொழிற்சங்கம், வர்க்க போராட்டம்

    என்ற செயல்பாடுகளை விடுத்து குட்டி முதலாளிகளை இணைத்து கொண்டு சாதிரீதியான தனிநபர் எதிர்ப்பு போராட்டத்தால் என்ன சாதிக்க முடிடும்

    விழலுக்கு இரைத்த நீர்

  20. //அறிவுக் கொழுப்பெடுத்த சில அறிவுஐீவிகளை இதுவரை பின் நவீனத்துவவாதிகள் என்றுதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இனி இவர்களை லீனாவாதிகள் என்று அழைப்பது சாலப் பொருந்தும் எனக் கருதுகிறேன்.//
    SUPERRRR BOSS…

  21. என்ன அவதானி அவரைப் போய் இப்படிச் சொல்லிட்டீங்க ? நீங்க செருப்பைக் கழட்டி அடித்தாலும், தொடப்பக்கட்டையில் வெளுத்தாளும் எம் தலைவன் அசர மாட்டான். வேண்டுமானால் அடித்துப்பாருங்கள்.

    குருஜி எதுக்கு இப்படி பிட்டு பிட்டா ஒடிக்கிட்டு.

    லீனா அக்காவோட முழு கவிதைக்கும் இந்த மாதிரி ஒரு விளக்க உரையை எழுதிட்டீங்கன்னா புத்தகமாவே போட்றலாம்ல. அதுல எனக்கெல்லாம் புரியாத ஒரு வரி இருக்கு குருஜி, கவிதையில் அவன கம்யுனிஸ்டு கம்யூனிஸ்ட்னு சொல்றியே அவன் யாருக்கான்னு இக்சாவ்ல கேக்கப்போய் தான் அக்கா சாமியாடிருச்சு. இந்த கவிதைக்கு அது ரொம்ப முக்கியம் குருவே. அதாவது அவன் தான் ரொம்ப முக்கியமான ஆளு. அதனால மறக்காம அதை கேட்டு எழுதிருங்க சாமியோவ்.

  22. அண்ணி ரொம்ப நல்லவங்க அவதானி. அவங்களுக்கு இந்த விசயம் எல்லாம் தெரியாது. ஆனா இவரு ரொம்ப உயர்ந்த நோக்கத்துக்காக தான் கண்முழுச்சி உட்கார்ந்திருக்கார்னு மட்டும் தெரியும்.

    அவங்ககிட்ட எங்க குரு என்ன சொல்லிருக்குன்னா மார்க்ஸ் பத்தியும் அவர் எழுதின மூலதனம் புத்தகத்தை பத்தியும் சொல்லி அவரு அதை முழுமையா முடிக்கிறதுக்கு முன்னடியே இறந்துட்டாரு அதனால நான் தான் முடிச்சு வைக்கனும் சொல்லிருக்காரு. அதனால தான் கொஞ்ச நாள் காரல் மார்க்ஸ் என்கிற பெயரை கூட வச்சிக்கிட்டிருந்தார். இதையெல்லாம் அந்த அப்பாவி அண்ணியும் நம்பிக்கிட்டு இருக்காங்க. ஆனா எங்க குரு பலான கவிதைக்கு பள பளன்னு உரை எழுதிக்கிட்ருக்கார்னு தெரிஞ்சா அண்ணியோட அண்ணங்காரங்க எல்லாம் மதுரையிலிருந்து ஜீப்பை புடுச்சி விடியறதுக்குள்ள வீட்டுக்கதவ தட்டிறுவாங்க. அப்புறம் நீங்க எங்க தியாகுவை பார்க்கவே முடியாது. அதுனால தயவு செஞ்சு காட்டிக்குடுத்துறாதீங்க.

  23. தோழர்கள் தியாகு மாதிரி அப்புராணி லாயரப் போட்டு அடிக்காதீங்க• இனிமேத்தான் சீனியர் லாயர்லாம் வருவாங்க• சுப்ரீம் கோர்ட்டுக்கு கொறைஞ்ச எந்த கோர்ட்டுக்கும் போகாத அவங்க இனிமேத்தான் வருவாங்க• அவங்க திருவாய் மலரும் வரை பொறுத்திருப்போம். சை..லேண்ஸ்

  24. ///ஒரு அறிஞன் கூடவா தமிழகத்தில் மிச்சமில்லை?////

    இப்படி டக்குன்னு கேட்ட வினவை வன்மையாக கண்டிக்கிறேன்!

    எங்கள் கம்யூனிச குன்று தியாகுரு உங்களுக்கு அறிஞராக தெரியவில்லையா? அந்த கோவத்துல தான் இன்னிக்கு எங்க குரு பழைய கவுஜைக்கும், இடையில உட்ட பிட்டு படத்துக்கும், புதுசா போட்ட டாடா படத்துக்கும் அத்தனைக்கும் சேத்து இன்னிக்கு ஒரே நாள்ல வெளக்கம் குடுத்தே தீருவோம்ன்னு தூங்காம கண்முழிச்சு உட்காந்திருக்கு!

    உங்களுக்கு வெளக்கம் குடுத்து குடுத்தே எங்க குருவோட அறிவு வெளங்கிரும் போலருக்கே 🙁

  25. ஆக கூடி எங்கள் குருவாகிய CWP ஐ சேர்ந்த தியாகு, சுசி என்கிற தேசிய முதலாளித்துவ கட்சியிலிருந்து மாற்றுக்கருத்தை முன்வைத்ததாலோ முன் வைப்பதற்கு முன்னாலோ வெளியேற்றப்பட்ட அல்லது முறையே வெளியேறிய ’மாற்றுக்கருத்து’ என்கிற தூய தேசிய முதலாளித்துவ குழுவைச் சேர்ந்த தியாகு, அதாவது தியாகு என்பதை தத்தி (தமிழ்த் தியாகு) என்று தற்போது அழைத்து வருகிறனர். தற்போது இங்கிலீஷ் தியாகு தெலுங்கு தியாகு என்றெல்லாம் பல குருஜிக்கள் பிறந்திருப்பதால் அனைவருக்கும் மூலமும் முன்னோடியுமான நமது தமிழ்த் தியாகு பலராலும் சுருக்கமாக தத்தி என்றைழைக்கப்பட்டு வருகிறார். எனவே இந்த சுருக்கமான பெயரை முதலில் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

    இத்தகைய பெருமைக்குரிய எங்கள் குருஜி தத்தி அவர்கள் இறுதியாக உங்களுக்கெல்லாம் கூறிக்கொள்வது என்னவென்றால். டாடா கஞ்சா கடத்தட்டும் கக்கூச கடத்தட்டு, 10 லட்சம் கோடி கொள்ளையடிக்கட்டும், பத்தாயிரம் லட்சம் கோடி கொள்ளையடிக்கட்டும் அதெல்லாம் பிரச்சினை இல்ல, ஏன்னா அவர் ஒரே ஒரு முதலாளி தான், அதாவது தனி ஒரு ஆளு. அதனால நாம டாடாவ மட்டும் கார்னர் பன்னாம இந்த முதலாளித்துவ சமூகத்தையே எதிர்க்கனும். அதனால லீனா மேம் டாடா கால நக்கித் தின்னதுல கொஞ்சமும் தப்பே இல்ல. டாடாவிடம் மட்டுமல்ல அம்பானியிடமும் மிட்டலிடமும் கூட போய் நில்லுங்கள் அவர்களும் தனித்தனி முதலாளிகள் தான். ஆனால் அதைப்பற்றி எல்லாம் பலர் பலவிதமாக பேசுவாங்க அதுக்கெல்லாம் நீங்க கவலைப்பட வேண்டாம்.

    லீனா மேம்க்கும் அவங்க இப்படி ஒவ்வொரு முதலாளிகிட்டயும் நத்திப்பிழைக்கிறதுக்கும் சப்போர்ட்டா, உறுதுணையா நின்னு அதற்கெதிராக வரும் நச்சுக்கருத்துக்களை எல்லாம் எதிர்த்து சளைக்காமல் வாள் சுழற்றும் லீனாவாதிகளையும் நான் ஆசீர்வதிக்கிறேன். என்னுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு என்றும் உண்டு. முதலாளிகளிடம் கையூட்டு பெற்று அதைக்கொண்டு முற்போக்கு கருத்துக்களை பரப்புரை செய்ய லீனாவுக்கும், அனைத்துவகை லீனாவதிகளுக்கும் அதாவது ஆர்ப்பாட்டம் செய்யும் மற்றும் அமைதியாக மவுனம் சாதிக்கும் அனைத்துவகை லீனாவாதிகளுக்கும் எனது வாழ்த்துக்கள். நன்றி ! என்று கூறியுள்ளார்.

    குருஜியின் இந்த கருத்துக்கள் உங்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்றால் உடனடியாக மறுக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

  26. நக்சல்பாரி எழுச்சியை பரப்ப முயன்ற இவர்கள் ஏன் இப்படி வசவுவாதிகளாக மாறினார்கள்
    என்பதை சமூக பொருளாதார அரசியல் பின்னனியை வைத்தும் இவர்களது போலி முகமூடிகள் போலி ஐடிகள் விவாதிக்க வருபவர்களை நாக்கூசாமல் திட்டுவது என்கிற வக்கிர மனநிலை ஏன் என்பது குறித்தும் இணையத்தின் ஜெயமோகன் முதல் நேற்று வந்த சுகதேவ் வரை அனைவரும் எடுத்து சொல்லியும் புரியலை என்றால் இந்த தியாகு சொல்லியா புரியபோகிறது எனவே நீங்க கலக்குங்க வினவு

    நான் சொல்வேன்

    தனியார்மயம் தாராளமயம் உலகமயம் ஓம்நமச்சிவாய என்ற மந்திரம்தான் நல்லது வல்லது 🙂

    • தோழர்களே, தான் கேலி செய்யப்படுவது கூட தெரியாமல் அந்தக் கேலியையே வாழ்த்து, அங்கீகாரம் என்று பெருமைப்படும் அளவுக்கு அற்பத்தனம் மேலோங்கியுள்ள இந்த தியாகுவை கிண்டலடிப்பது என்ற பெயரில் இந்த கட்டுரையின் தீவிரத்தை குறைத்து வருகிறீர்கள். கட்டுரை பொதுவில் செல்வாக்கு செலுத்தும் பிழைப்புவாதம் குறித்தும், அதற்கு அது போட்டு வரும் முற்போக்கு, தத்துவ முகமூடிகள் குறித்தும் மறுக்க முடியாத வாதத்துடன் பேசுகிறது. அத்தகைய ‘கருத்துரிமை காவலர்களை’ பேச வைக்கும் வண்ணம் விவாதத்தை தீவிரமாக முன்னெடுத்துச் செல்லுங்கள். தியாகுவோடு நேரத்தை வெட்டியாக செலவு செய்து பொழுது போக்காதீர்கள்!

      • தியாகு என்ற இந்த நபர் வினவு எதை எழுதினாலும் எதிர்க்க வேண்டும் என்ற கொள்கை உடையவர். இந்தக் கொள்கையில் மட்டும்தான் அவர் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறார். அதனால் வினவை எதிர்க்க வேண்டுமென்பதற்காக மார்க்ஸ், லெனினெல்லாம் முட்டாள்கள் என்று கூட சொல்லுவார். அவரது இந்த உளவியல் நிலை அல்லது நோயை புரிந்து கொள்ள வேண்டும். அதனால் அவர் வினவில் எந்தக் கட்டுரையையும் புரிந்து கொள்ள மாட்டார். அறிவார்ந்த விசயத்தை புரியாதவர் புரிந்தது போல பேசுவது ஒரு அவலச்சுவை நிரம்பிய காமடி நாடகம். இதில் நகைச்சுவை இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அவரோடு சில தோழர்கள் விவாதிக்கின்றனர். இந்த விவாதித்தலே நாளடைவில் ஒரு இடை இன்ப பொழுதுபோக்காக மாறிவிடுகிறது. இறுதியில் கணிசமான நேரத்தை அந்த தோழர்கள் இழக்கிறார்கள். அந்த நேரத்தை வினவின் பொது வாசகர்களோடு விவாதிப்பதற்கும், உரையாடுவதற்கும் தோழர்கள் செலவிட வேண்டும். இந்தக் கட்டுரையில் பேசுவதற்கும், புரிந்து கொள்வதற்கும், விவாதிப்பதற்கும் நிறைய கனமான விசயங்கள் உள்ளன. தியாகுவுடன் விவாதிக்கும் தோழர்கள அதை புரிந்து கொண்டார்களா, தெரியவில்லை. தியாகுவோடு சேர்ந்தால் மட்டுமல்ல விவாதித்தாலும் கூட தியாகு போலத்தான் மாற முடியும். புரிந்து கொண்டால் சரி.

        அடுத்து சில தோழர்கள் விவாதிக்கும் போது ஒரே பெயரில் விவாதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். வினவில் கட்டுரைகளில் தொடர்ச்சியாக ஒருவரின் கருத்து, விவாதிக்கும் முறை, விவாதத்தை வளர்க்கும் முறை போன்றவற்றை மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் பின்னூட்டம் இடுபவர்கள் ஒரே பெயரில் வருவதுதான் சரியாக இருக்கும். யாரும் எந்தப் பெயரிலும் வரலாம் என்றாலும் ஒரே பெயரில் விவாதிப்பது மற்ற வாசகர்களுக்கு உதவியாக இருக்கும். இப்படி ஒரு விதிமுறையை யாருக்கும் விதிக்க முயலவில்லை என்றாலும் சம்பந்தப்பட்ட தோழர்கள், வாசகர்கள் அதை பரிசீலிக்குமாறு கோருகிறோம்.

        • //தியாகுவோடு சேர்ந்தால் மட்டுமல்ல விவாதித்தாலும் கூட தியாகு போலத்தான் மாற முடியும். புரிந்து கொண்டால் சரி //

          சரியான நேரத்தில் சுட்டிக் காட்டியதற்கு நன்றி வினவு.

          தியாகுவாக மாறிய அந்த ‘நிலையை’ நினைத்துப் பார்த்தாலே அடிவயிறு கலங்குகிறது 🙁

        • ///வாதத்தை வளர்க்கும் முறை போன்றவற்றை மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் பின்னூட்டம் இடுபவர்கள் ஒரே பெயரில் வருவதுதான் சரியாக இருக்கும். யாரும் எந்தப் பெயரிலும் வரலாம் என்றாலும் ஒரே பெயரில் விவாதிப்பது மற்ற வாசகர்களுக்கு உதவியாக இருக்கும். இப்படி ஒரு விதிமுறையை யாருக்கும் விதிக்க முயலவில்லை என்றாலும் சம்பந்தப்பட்ட தோழர்கள், வாசகர்கள் அதை பரிசீலிக்குமாறு கோருகிறோம்.////

          வினவு.. கருத்துக்களைப் பதிவு செய்ய உதவும் wordpressன் gravatar பிளக்கின் கடினமாக உள்ளது.. எனவே disqus plugin னை பயன்படுத்தவும்..இது கருத்துக்களை பதிய எளிதாகவும்..facebook,twitter,googleplus என பல்வேறு தளங்களில் இருந்து கருத்துக்களை பதிய எளிதாக இருக்கும்..இது மிகவும் புகழ்பெற்ற plugin

          மேலும் உதவிக்கு disqus.com
          disqus plugin செயல்படும் முறையை engadget.com omgubuntu.co.uk தளத்தில் காணலாம்..

          • நண்பர் கல்நெஞ்சம்,
            உங்கள் ஆலோசனைக்கு நன்றி, டிஸ்கஸ் பிளக்கின் பற்றி அறிவோம்.
            இரண்டாண்டுகளுக்கு முன்னர் அது வினவில் ஓரிரு நாள் செயல்பாட்டில் இருந்தது.
            வாசகர்கள் அதை பயன்படுத்துவதற்கு கடினமானதாக உணர்ந்ததால் நீக்கினோம்.
            மறுமொழி பகுதியை செம்மைபடுத்தும் கோட்களை எழுதி சோதித்து செய்து வருகிறோம்
            விரைவில் அது அமலுக்கு வரும்

            நட்புடன்
            வினவு

        • ஆமாம்,என் போன்றவர்களுக்கு அப்போதுதான் கருத்துக்களை சரிவரவும்,மேலும் ஒருவரைப் பற்றியும் புரிந்துகொள்ள ஏதுவாகும்.

  27. பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டம். இருப்பினும் கேள்வி ஒன்று கேட்கத் தோன்றுகிறது.

    //நியமாய் பைசா கேட்கும் ஓர் சென்னை ஆட்டோ ஓட்டுநரை காட்டுங்கள்..//

    நியாயமான பைசா என்றால் அதற்கு என்ன அளவீட்டினைக் காட்டுவீர்கள்?

    • ரிஷி எனது கேள்வி கம்யுனிச ஆட்டோ ஓட்டுநர் சங்கம் வைத்து..நியமாய் பைசா கேட்கும் ஓர் சென்னை ஆட்டோ ஓட்டுநரை காட்டுங்கள் என்பதே..

  28. தேஜஸ்வினியைப் போலவே எஸ்ஸார் குழுமம் தண்டேவாடாவில் நடத்திய எஸ்ஸார் கஹானி உத்சவ் நிகழ்ச்சி பற்றி ஓப்பன் மேகஸின் எடுத்த ஒரு நேரடி ரிப்போர்ட் இந்த சுட்டியில் இருக்கிறது –

    http://www.openthemagazine.com/article/arts-letters/how-my-conscience-was-abducted-in-dantewada#.T7k_3_5a3sE.facebook

    இது ஆதிவாசி பள்ளிக் குழந்தைகள் முன்னேற்றம் என்கிற தலைப்பில் நடத்தப்பட்டுள்ளது. இதை ஒழுங்கமைத்தது டீம் வொர்க் ப்ரொடக்ஷன்ஸ் – ஜெய்பூர் இலக்கியத் திருவிழாவை ஒழுங்கமைத்த அதே நிறுவனம்!

    ஈழத்தமிழர்கள் ராஜபக்சேவின் ஆட்சியின் கீழ் சுகபோகமாக வாழ்கிறார்கள் எனும் தலைப்பில் இலங்கை அரசு எடுக்கப்போகும் விளம்பரப்படத்துக்கு நல்ல திறமையான திரைக்கதை மற்றும் வசனகர்த்தாக்களைத் தேடிக் கொண்டிருப்பதாக கேள்வி. லக்கிலூக் மற்றும் அதிஷா போன்றோர் இலங்கைத் தூதரகத்தை அணுகலாம். கைநிறைய துட்டும் பிரகாசமான எதிர்காலமும் உத்திரவாதம்.

  29. @கல்நெஞ்சம்,
    //ரிஷி எனது கேள்வி கம்யுனிச ஆட்டோ ஓட்டுநர் சங்கம் வைத்து..நியமாய் பைசா கேட்கும் ஓர் சென்னை ஆட்டோ ஓட்டுநரை காட்டுங்கள் என்பதே..//

    நண்பரே, கம்யூனிச ஆட்டோ ஓட்டுநர் சங்கம் வைத்திருக்கிறார்களா எனத் தெரியாது. ஆட்டோ ஓட்டுபவனும், நட்டு போல்ட்டை திருகுபவனும் மட்டும்தான் கம்யூனிஸ்ட் என்று நீங்களும் எண்ண மாட்டீர்கள் எனக் கருதுகிறேன்.

    https://www.vinavu.com/2012/01/03/auto-driver/

    இதில் சவாரி என்பவரது பின்னூட்டம் பொருள் பொதிந்ததாய் உள்ளது. உங்கள் கேள்விக்கு விடையளிப்பதாயும் உள்ளது.

    முறைப்படுத்தபட்ட உற்பத்தி முறையும், விநியோக முறையும் இல்லாததால் இன்று அனைத்துக் காய்கறி விலைகளும் கிலோ ஒன்றுக்கு 40 – 50 லிருந்து 100 ரூபாய் வரை விலையுயர்ந்துள்ளன. இது போலவே பிற அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களும்.

    முறைப்படுத்தபட்ட உற்பத்தி முறையும், விநியோக முறையும் முதலாளித்துவத்தில் சாத்தியம் இல்லை எனக் கருதுகிறேன். கட்டவிழ்த்துவிடப்பட்ட சந்தைப் பொருளாதாரத்தில் ‘நியாயம்’ என்று எதையும் நீங்கள் ஃபிக்ஸ் செய்ய முடியாது. முதலாளித்துவத்தின் மோசமான எதிரொலிப்பை ஆட்டோக்காரன் தனித்து கம்யூனிசச் சங்கம் கட்டி சமாளிக்க முடியாது. மூன்று ரூபாய் மதிப்புள்ள தோசையை முப்பத்தைந்து ரூபாய்க்கு சரவணபவன் ஓட்டல்காரன் விற்றால் அது பற்றிப் பேச மாட்டோம். ஆனால் ஆட்டோக்காரன் பத்து ரூபாய் கூடக் கேட்டால் அவனைக் குதறி விடுவோம். இல்லையா!

    சோஷலிச சமுதாயம் அமைந்து, எல்லாம் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டபின், அப்போதும் ஆட்டோக்காரன் வரைமுறையின்றி கட்டணத்தை ஏத்தினால் அது பற்றிப் பேசலாம்.

    • தலைவா… மும்பை, ஜெய்பூர், சூரத் நகரங்களில் மீட்டருக்கு மட்டும்தான் காசு..

      நான் ஓண்ணும் பெரியதாக சொல்லவில்லை.. புரட்சி கம்யுனிசம் பொருளாதரம் என வாய் கிழிய பேசும் நீங்கள்.. உங்கள் கம்யுனிச பெயரில் உள்ள சங்கங்கள ஏன் பெட்ரோல் விலைவாசி கிலோ மீட்டருக்கு தகுந்த விலை நிர்ணயம் செய்து காலத்திற்கு ஏற்ப விலைமாற்றம் சங்க கூட்டத்தில் ஓர் கம்யுனிச பொருளாரத்தை எற்படுத்த வக்கற்ற நீங்கள் எவ்வாறு உதாரணமாய் இருக்க முடியும்..

      உங்கள் கம்யுனிச தலைவர்களின் நிலங்களில் வேலை செய்யும் விவசாய கூலிகளுக்கு காரல் மார்க்ஸ் கொள்கை படி வேலையோ கூலியோ தர முடியாதவர்கள் எப்படி நீங்கள் எவ்வாறு உதாரணமாய் இருக்க முடியும்.

        • அன்புள்ள மணி,
          செம பதில். என்னால உங்க பதிலுக்கு சிரிச்சு மாளல :-))
          தியாகுவ எல்லாரும் கலாய்க்கறதை கவனிச்சுக்கிட்டுதான் இருக்கேன்.
          இப்படி கல்நெஞ்சத்த கோர்த்து விடுறதுக்கு வாய்ப்பிருக்கறத எதிர்பார்க்கல 🙂

        • மணி… கல்நெஞ்சத்திற்கு சிந்தித்து புதிய பெயரை வைக்கவும்.. அப்போதாவது உங்கள் மூளை வேலை செய்யத்தால் அது ஏட்டுச்சுரைக்கா கம்யுனிசத்தின் வெற்றியே..

      • இந்தியாவில் ஒரு கம்யூனிச இணைப் பொருளாதாரம் ஒன்றினை ஏற்படுத்த வினவு குழுவிற்குப் பரிந்துரை செய்கிறேன். போதுமா :-))))
        மணி சொன்ன பதிலைப் பார்த்தீங்களா… 🙂

        • “ஏட்டு சுரைக்காய் கம்யுனிசம்” வக்காலத்து மட்டும் வாங்கும் என்பதை புரிந்து கொண்டேன்..

          • ஐயா,
            எள்ளலுக்காக சொல்லியிருப்பது அது! கட்டுரையின் பேசுபொருளுக்கு சம்பந்தமில்லாதவற்றை விடுத்து இதை பொருளாதார கட்டுரைகளில் பேசலாம்.

            • ஓகே ரிஷி..
              அப்ப லீனா மேடத்தை… செங்கொடியைப் போல டீ குடிக்க மன்னிக்கவும் தீக்குளிக்க சொல்லி இன்னோரு கண்ணீர் அஞ்சலி blog post ரெடி பண்ணி அடுத்த புரட்டு புரட்சி பண்ணி அடுத்த டிராமாவை ரெடி பண்ணுவதை discuss பண்ணுவோமா.. கேரள கம்யுனிசக் கட்சிப் போல

              கம்யுனிச கட்டுக்கதைகள் ஏட்டில் மட்டும் தான். செயலில் சாத்தியம் அல்ல..புரிந்தால் சரி

  30. வினவுக் கூடத்தில் நடந்த பின்னூட்ட ஆராய்ச்சி

    தமிழ்நாட்டின் தற்போதைய ”மிகமுக்கியமான”’ அரசியல் நேர்மை மற்றும் ”முதலாளித்துவ எதிர்ப்பரசியல்” சிக்கலான – அறக்காவல் பத்திரிகை காலச்சுவடு எழுப்பிய கேள்விக்கு லீனா அளித்த Facebook பதிலுக்கு பின்னூட்டம் இட்டவர்களில் நானும் ஒருவன்.

    இந்தப் பின்னூட்டங்களை ஆய்ந்தறிந்து வினவு ஒரு ஆய்வறிக்கையும் தீர்ப்பும் வழங்கியிருக்கிறது.
    அந்தத் தீர்ப்பின்படி லீனாவுக்கு அங்கே ஆதரவாக பின்னூட்டம் இட்ட அனைவரும் “அசடுகளும், அரைவேக்காடுகளும்” ஆவோம். அதிலும் சிறப்பான மரியாதை எனக்குக் கிடைத்திருக்கிறது. நன்றி வினவு.

    தமிழ்நாட்டில் 100% அப்பழுக்கற்ற மார்க்சீய புரட்சிக்குத் தங்கள் வாழ்வை தத்தம் செய்த போராளிகளான வினவுக்காரர்களுக்கு பின்னூட்டங்களைப் படித்து, தத்துவ அகராதிகளில் வார்த்தைக்கு வார்த்தை பொருள்தேடி ஒரு ஆய்வுக்கட்டுரை தயாரிக்க நேரமிருப்பின் ஒரு வேளை புரட்சி நடந்தே முடிந்திருக்கலாம் அல்லது அடுத்த நூற்றாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கலாம்.

    மெத்தப் படித்தவர்களும், அறிஞர்களுமான வினவுக்காரர்கள் நான் எழுதிய வாக்கியங்களை அதன் முழு அர்த்ததிலிருந்து விலக்கி தனிப்பொருள் கண்டுபிடித்து ஆராய்ந்திருப்பதை நினைத்தால் “வினவு” போன்ற மதிப்பும் புகழும் மிக்க மார்க்சீய ஆய்வுக்கூடத்தில் ஒரு “Subject” (பாடம் என்கிற அர்த்தத்தில் அல்ல)ஆக எடுத்து விவாதிக்கிற அளவுக்கு இருக்கிறோம் என்பதை நினைத்து புளகாங்கிதம் அடைகிறேன்.
    என்னுடைய மொத்த பின்னூட்டங்களும் இந்த விவாதத்தை ஒட்டி மெய்நிகர் உலகில் நிகழும் எதிர்ப்பரசியலின் சமகால முகத்தைக் குறித்து கொஞ்சம் சிந்திப்பதேயன்றி லீனாவுக்கு ஆதரவானதல்ல என்பதை வினவின் பேரறிஞர்கள் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.

    மேலும் தங்கள் அரசியலுக்காக உயிர் இழக்கும் களப்போராளிகள் என நக்ஸல்களைச் சொன்னது போன தலைமுறையினரை மட்டுமல்ல சமகாலத்தவரையும் சேர்த்துதான். அரசியல் நேர்மை போன்றவற்றை பேசுவதே பழமைவாதம் என்பதாகச் சொல்லவில்லை. அதுவும் வினவு அறிஞர்களின் கண்டுபிடிப்பே. கஷ்மீரிலும், ஈழத்திலும், பாலஸ்தீனத்திலும் போராடுபவர்களுக்கு இணையாக நான் லீனாவை அதில் சொல்லவில்லை. அங்கே போராடிவருபவர்களை பிழைக்கத் தெரியாதவர்கள் என்றும் சொல்லவில்லை.

    ஆகவே பிழைப்புவாதிகளும், அரைவேக்காடுகளும், தங்கள் நேர்மையற்ற வாழ்க்கைக்கு தத்துவ முலாம் பூசுபவர்களான அங்கே பின்னூட்டமிட்டவர்களை ஆராய்ந்து தீர்ப்பளிப்பதில் நேரம் செலவிடுவதை விடுத்து, லீனா பிடிபட்டார் (118 கமெண்டுகள்), சினேகா, பிரசன்னா திருமணம் ரெட்டைத்தாலி புரட்சிடே (80 கமெண்டுகள்), ராமஜெயம் கொலை, காரணம் பின்னணி என்ன (92 கமெண்டுகள்) போன்ற ”சீரியஸான” கட்டுரைகளுக்கு பின்னூட்டமிட்டவர்களின் அறிவை வளர்ப்பதில் அவர்கள் தங்கள் நேரத்தையும், சிந்தனையையும் செலவிட வேண்டும் என ஓரிரு வருடங்கள் தொடர்ந்து புதிய ஜனநாயகமும், புதிய கலாச்சாரமும் வாங்கி வாசித்த பழைய வாசகன் என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன். வினவுத் தளத்தில் வந்த மற்ற ”முக்கியத்துவம் குறைந்த” கட்டுரைகளுக்கு வந்த பின்னூட்டங்களின் எண்ணிக்கை: நேபாளப் புரட்சி: பின்னடைவு அளிக்கும் படிப்பினை (3 கமெண்டுகள்), சிதம்பரம் கல்வி உரிமை மாநாடு (7 ) கூடங்குளம் போராட்டம்: அனுபவங்களும், படிப்பினைகளும் (11).

    வினவு தனது கட்டுரைகளுக்கு பின்னூட்டமிடும் அறிஞர்களின் எண்ணிக்கையையும் அவர்களின் தேர்வுகளையும் தொடர்ந்து ஆய்ந்து வளர்வதாக. வாழ்த்துக்கள்.

    • பாலசுப்ரமணியன் பொன்ராஜ் சார்,

      ஓரிரு வருடங்கள் மட்டும் புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் படித்த பழைய வாசகருங்கிற முறையில வினவுல வந்த சீரியசான கட்டுரைங்களுக்கு குறைவான கமெண்ட்சும், சீரியஸ்னெஸ் குறைந்த கட்டுரைங்களுக்கு அதிக கமெண்ட்சும் வந்திருக்கிறத எவ்ளோ ஷார்ப்பா கண்டுபிடிச்சிருக்கீங்க! வாவ், கங்கிராட்ஸ்!

      ஆனா பாருங்க நீங்க கூட அந்த சீரியஸான கட்டுரைக்கு வராம இந்த ‘மொக்கை’ கட்டுரைக்குத்தான் ஆஜராயிருக்கிறீங்க! ஏன் சார்? உலகத்துக்கு ஒரு நாயம் சொல்லணும்ணா நாமளும் அதுல ஒரு எக்சாம்பிளாக இருக்கோணுமில்ல. இதைத்தான சார் கட்டுரை உங்க கமெண்ட்சை வச்சு பேசுது. அதுக்கு நேரடியா பதில் சொல்லாம ஏன் இப்புடி?

      நீங்க மட்டும் புக, புஜவை ஓரிரு வருடம் மட்டும் படிச்சுட்டு இப்ப அதையெல்லாம் படிக்க வேண்டியதில்லேங்கிற முக்தி நிலைக்கு போயிட்டீங்க! அப்படி இருக்கச்சே மத்தவுங்களும் அந்த முக்தி நிலையை அடைய வழிய சொல்லாம வினவுல வர சீரியஸ் கட்டுரையை அதுவும் நீங்க படிக்காம வுடுற கட்டுரைங்கள படிக்க சொன்னா என்ன நாயம் சார்?
      சார், வினவுல எதிர்கருத்து உள்ளவங்க பேசுற கட்டுரைங்களுக்குத்தான் அதிக பின்னூட்டம் வரும். ஒத்த கருத்துன்னா யாரும் வந்து பேசமாட்டாங்க. என்னோட அனுபவத்துல இதை இங்க பாத்திருக்கேன். எதிர் கருத்து உள்ளவங்க வந்தாத்தான் என்ன மாரி உள்ளவுங்க கூட வருவாங்க.

      வுடுங்க சார், ஆனாலும் கட்டுரையில உங்க பொன்மொழிங்களோட விமரிசனங்களுக்கு இப்புடி ஒரு சேம் சைடு கோல் போட்டு பொழிப்புரை சொல்லி மாட்டிக்கிறத பாத்தா கொஞ்சம் பாவமாத்தான் இருக்கு! இது நெசம்தாங்குறதுக்கு கட்டுரைய கொஞ்சம் ரிவைண்ட் பண்ணி பாருங்க!

      //“தாடகையிடம் முலைப்பால் குடித்தே அவளைக் கொல்வது மாதிரி. ஒரு பக்கத்தில் உனக்காக வேலை செய்வதன் மூலம் என்னைத் தக்க வைத்துக் கொண்டு வேறுபக்கத்தில் உன்னை எதிர்ப்பதற்காக நேரமும், சக்தியும் செலவிடுவேன் என்பதே இது. லீனாவின் அதிகார எதிர்ப்பிற்கான பங்களிப்பு அவரது பிரதிகளேயன்றி அவரது வாழ்க்கையாக இருக்க முடியாது”என்று பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் என்னும் பெருமகனார் அம்மாவின் integrity க்கு ஃபேஸ் புக்கில் பொழிப்புரை போடுகிறார்.//

      • முதலாளித்துவ அமைப்பில் இருக்கும் அநீதிகளை சுட்டிக் காட்டி காட்டமாக முன்வைக்கும் கட்டுரைகளை, முதலாளித்துவ அமைப்புமுறையை ஆதரிப்போர்களுக்கு அது ஒப்புதலாக இருப்பினும் ‘ஆமா. இப்படித்தான் இருக்கு.’ என்று யாரும் வந்து பின்னூட்டம் போடுவதில்லை. மாற்றுக்கருத்து இருந்தால் மட்டுமே சொல்வார்கள். இந்த எளிய உண்மை புரியவில்லை என்றால் அதை என்னவென்றுரைப்பது!!

      • //வினவுல எதிர்கருத்து உள்ளவங்க பேசுற கட்டுரைங்களுக்குத்தான் அதிக பின்னூட்டம் வரும். ஒத்த கருத்துன்னா யாரும் வந்து பேசமாட்டாங்க//மிகவும் சரி.
        நேபாளப் புரட்சி: பின்னடைவு அளிக்கும் படிப்பினை , சிதம்பரம் கல்வி உரிமை மாநாடு , கூடங்குளம் போராட்டம்: அனுபவங்களும், படிப்பினைகளும் – இன்னும் பல பதிவுகளில் எனக்கு கருத்தொற்றுமை ஆகையால் பின்னூட்டமிடவில்லை.

  31. அய்யா வினவு:
    நொறுங்கிப்போன மணிமேகலையை இப்படியா நொறுக்குவது:
    மணிமேகலையின் பூர்வோத்த்தரம் எவ்வளவு உண்மை எவ்வளவு கட்டுக்கதை என்பதை உங்களால் கண்டு சொல்ல முடியுமா? தமிழ் வாசகர்களுக்கு இப்படியொரு கதை/ கட்டுரை வெளிவந்தது தெரியுமா?
    கீழ்க் கண்ட கட்டுரையைப் படித்தபோது எனக்கு புல்லரித்துப் போனது. என்ன ஒரு தலைப்பு பின் நவீனத்துவமா? அல்லது டுபாக்குரிசமா? ஏதோ ஒன்று!! ஆனாலும் அருமையான கதை. வத்றாப்புப் பக்கம் போகும் நபர்கள் யாரவது இருந்தால் கொஞ்சம் மகாராசபுரம் சென்று இதை விசாரிக்கலாமே. கொஞ்சம் சரி பார்த்தால் நல்லது.

    http://www.dnaindia.com/lifestyle/report_leena-manimekalai-broke-but-not-broken_1608142

  32. காரியவாதம், பிழைப்புவாதம், பச்சோந்திதனம் என எல்லா அற்பத்தனங்களையும் அம்பலப்படுத்துகிறது. கருத்துரிமை காவலரின் கள்ள மெளனத்தையும் கண்டிக்கிறது இந்த நீண்ட பதிவு.

    ஒருமுறை யுவகிருஷ்ணா சைபர் கிரைம் என தொடர் எழுதிய பொழுது, வினவு விமர்சனம் செய்த பொழுது, (நான் அழுதிருவேன்) “நான் அந்த அளவுக்கு ஒர்த் இல்ல தோழர்!’ என்றார்.

    (இப்பொழுதும் லீனாவிற்காக இங்கு எவர் தான் யோக்கியர் என பதிவிட்டிருக்கிறார். இப்பொழுதும், தோழர்களுடைய விமர்சனங்களை எதிர்கொள்ளும் பொழுது, மீண்டும் “நான் ஒர்த் இல்ல தோழர்” என்கிறார். ரஜினி குடித்தாலும், வேறு ஏதும் செய்தாலும் வெளிப்படையாக சொல்லக்கூடிய நல்ல மனுசன் என்பது போல, யுவா பேர் வாங்க போராடுகிறார்.)

    லீனாவோ டாடா பட விவகாரத்தில் வெளிப்படையாய் அம்பலப்பட்டபோதும், “I will apologise in public, if you finally say, my docu ..has helped them save their entire empire ” எகிறுகிறார். யுவாவிற்கு ‘மார்க்சியம்’ தெரியாததால், உடனே சரணடைகிறார். லீனாவிற்கு ‘மார்க்சிய’ பரிச்சயம் இருப்பதால், என்னன்னோமோ சொல்லி தன்னை தற்காத்து கொள்ள முனைகிறார்.

    உங்களுக்குள் குரோனியே இல்லையா! என்பது போல இங்கு உலவும் பல அறிவுஜீவிகளில் ‘லீனா’ கொஞ்சம் கொஞ்சம் பரவியிருக்கிறார். பரவிக்கொண்டிருக்கிறார். இந்த கட்டுரை படித்தவுடன் பல அறிவுஜீவிகள் மனக்கண்ணில் வந்துபோகிறார்கள்.

    முன்பு மா.லெ. அமைப்பில் வேலை செய்து, விலகி NGO அமைப்பில் வேலை செய்கிறவர்கள். சிபிஎம் கட்சியில் முழு நேர வேலை செய்துகொண்டே, NGO அமைப்புக்கு மொழிபெயர்ப்பு வேலை செய்துகொண்டிருப்பவர்கள் – இப்படி பலரும் நினைவில் வந்து போகிறார்கள்.இது கொஞ்சம் சிக்கலான காலகட்டம் தான்.

    புரட்சிகர அமைப்பில் வேலை செய்யும் தோழர்களுக்கு தாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் விழுமியங்களுக்கு நேர்மையாய் வாழ்வது அடிக்கடி நடக்கும் போராட்டம். அதில் அமைப்பின், தோழர்களின் உதவியுடன் கொள்கையின் பக்கம் நின்று, வென்று தொடர்ந்து பயணம் செய்கிறார்கள்.

    அமைப்பில் இல்லாமல், விமர்சனமோ, சுயவிமர்சனமோ இல்லாமல் தனித்தனி அறிவுஜீவிகளாய் வாழும் அறிவுஜீவிகளுக்கோ நேர்மையாய் வாழ்வது என்பது ‘ஆக’ சிரமமான காரியம் தான்.

  33. //“நான் அயோக்கியனில்லை” என்று கொஞ்சம் தயக்கத்துடன் தங்கள் வாதத்தைத் தொடங்கும் இவர்கள், “இன்றைய சூழ்நிலையில் அயோக்கியனாக இருப்பதை தவிர்க்க முடியவில்லையே” என்று அங்கலாய்க்கிறார்கள்.//

  34. இந்தக் கட்டுரையின் ( மற்றும் ஹன்சி க்ரோனியே கட்டுரையின் ) வெற்றிகளில் ஒன்று – இவை இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமின்றி ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதாக பம்மாத்து காட்டிக் கொண்டிருப்பவர்களின் மனசாட்சியின் ஏதோவொரு பக்கத்தைத் தொட்டிருப்பது தான். இதன் தர்க்கங்கள் வாசிக்கும் எவரையும் எதாகிலும் ஒரு நிலைப்பாட்டை எடுக்கத் தூண்டுகிறது..

    ஆம் நான் பிழைப்பு வாதி தான் எனச் சொல்லத் தூண்டுகிறது.. என்ன தப்பு என்று கேட்க வைக்கிறது…. ஆம், எமது முகங்களையும் இதன் வரிகளினூடாய் பார்க்க முடிகிறதே என்று அச்சம் கொள்ள வைக்கிறது – அதன்வழி சுயவிமரிசனம் ஏற்றுக் கொள்ளத் தூண்டுகிறது.. இன்னும் சிலர் இருக்கிறார்கள், இல்லையில்லை நான் கொஞ்சம் நல்லவன் கொஞ்சம் கெட்டவன் என்று அறிவிக்கிறார்கள் – தங்களையே ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள். அப்படித்தான், “கடவுள் பாதி மனிதன் பாதி கலந்து செய்த கலவை நான்” என்று உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார் ஜெயமோகன். கீழே அவர் இணைத்திருக்கும் இணைப்பில் இருக்கும் இன்றைய கட்டுரையைப் படித்துப் பாருங்கள் தோழர்களே.

    லீனா செய்தது தவறு என்று சொல்லும் ஜெமோ, அதில் தவறாகப் பார்க்க வேண்டியது அவர் போட்டுக் கொண்ட போலி வேடத்தைத் தானென்கிறார். ஒளிவுமறைவற்று லீனா இதைச் செய்திருந்தால் ஓருவேளை ஜெமோ பாராட்டியிருப்பாரோ என்னவோ.

    இதைச் சொன்னவுடன் ஜெமோவுக்கு தனது ஆளுமையே தன் முன் வந்து அச்சுறுத்தியிருக்கும் போல. அதனால் தான் “நான் பான்பராக் மென்றதில்லை; பீடி வலித்ததில்லை; நல்லவனாக்கும் கேட்டியளா” என்று அவசர அவசரமாக அறிவித்துக் கொள்கிறார். காந்தி கூடத் தான் நல்லவர் – ஹிட்லர் கூடத்தான் சொந்த வாழ்க்கையில் அற்பத் ‘தவறுகள்’ ஏதும் செய்திராத ஒரு டீடோட்லர். அதற்காக?

    ஒரு மனிதனின் யோக்கியதாம்சங்களை அவனது சொந்த வாழ்க்கையின் ( ஜெமோவின் கூற்றுப்படி ஒருவனின் அந்தரங்கத்தில்) தனிப்பட்ட அறங்களா தீர்மானிக்கிறது? இல்லை. ஒருவன் தனது சமூக உறவில் கொண்டிருக்கும் மதிப்பீடுகளும் விழுமியங்களும் தானே அவனை நல்லவனென்றோ கெட்டவனென்றோ தீர்மானிக்க வைக்கிறது? எனில், ஜெயமோகனின் சமூகப் பாத்திரம் என்ன? சமூக மாற்றத்தின் ஒட்டுமொத்த விரோதியான இந்துத்துவ கோமாளிகளின் பாலிஷ்டு இலக்கிய முகமல்லவா இவர்? அந்த வகையில், லீனா காசு வாங்கிக் கொண்டு கூவுவதை இவர் காசு வாங்காமலே கூவுகிறார்.

    பாருங்களேன்,

    தன்னை ஒரு புரட்சியாளனாகவோ போராளியாகவோ யோக்கியனாகவோ தானே கருதிக் கொள்வதில்லை என்று அறிவிக்கும் ஜெமோ, தான் குழப்பமானவனென்றும் ‘இது தான் எனது தரப்பு, இதையும் கொஞ்சம் பரிசீலியுங்களேன்’ என்று முன்வைப்பவராக ஒரு பக்கம் சொல்லிக் கொள்கிறார். ஆனால், அதே கட்டுரையின் இறுதியிலேயே,

    //நான் இடதுசாரி அல்ல. கார்ப்பரேட் நிறுவனங்களை நான் அழிவுசக்திகளாக எண்ணவுமில்லை. இந்தப்பொருளியல் கட்டமைப்புக்குள் செயல்படும் அமைப்புகள் இதன் பொருளியல்விதிகளின்படியே செயல்பட முடியும். ஆகவே ஒரு பொதுச்செயல்பாட்டுக்காக கார்ப்பரேட் அமைப்புகளின் உதவியைப் பெறுவது தவிர்க்கக்கூடியதும் அல்ல. ஆனால் நம் நோக்கத்துக்காக பெருவணிக நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்படுவதற்கும், நாம் அவற்றின் கருவிகளாகச் செயல்படுவதற்கும் இடையே மிகப்பெரியவேறுபாடுள்ளது //

    என்று அறிவிக்கிறார். இதன் பொருளென்ன? அந்தரங்க உள்ளொளியின் வழிகாட்டுதல் படி வெளிப்படையாக அறிவித்துக் கொண்டு லீனா துட்டு வாங்கியிருந்தால் பரவாயில்லாமல் இருந்திருக்கும் என்பது தான். லீனாவும் கூட ‘அவரது நோக்கத்திற்காகத் தானே பெருவணிக நிறுவனங்களுடன் சேர்ந்து’ செயல்பட்டுள்ளார்? என்ன ஒரு வித்தியாசம் அங்கே அவர் தனது உள்ளொளியைக் கலந்து ஆலோசிக்காமல் அவசரப்பட்டு விட்டார் என்கிறார் ஜெமோ.

    ஒரே கட்டுரையில் தான் எத்தனை முரண்பாடுகள்?

    காரியவாதம், பிழைப்புவாதம், சந்தர்ப்ப வாதம், அற்பத்தனம், போலி அறிவுஜீவித்தனம், துரோகத்தனம் போன்ற தியாகுத்தனங்கள் பச்சையாகவும் அறைவேக்காட்டுத்தனத்தோடும் வெளிப்படும் போது அது திருப்பூரின் ‘தமிழ்த் தியாகு’வாகிறது. அதுவே கொஞ்சம் நாசூக்கான ஆங்கில வார்த்தைகளில் வெளிப்படும் போது சென்னையின் ‘இங்கிலீஷ் தியாகு’வாகிறது. அதுவே கொஞ்சம் இலக்கிய நயத்தோடும் உள்ளொளி தரிசனத்தோடும் வெளிப்படும் போது நாகர்கோயிலின் ‘இலக்கியத் தியாகு’வாகிறது – எள்ளி நகையாடத் தக்க இயக்கிய நயத்துடன் வெளியாகிறது.

    நத்திப்பிழைக்கும் நாய்களின் உலகில், எங்கெங்கு காணினும் தியாகுவடா…

    இலக்கியத் தியாகு ஜெயமோகன் சொல்கிறார் – “ ஆம், என் நீதியுணர்வைச் சீண்டாமல் வெளியுலகை கவனமாக விலக்கிக் கொண்டு எழுதியும் வாசித்தும் இதுவரை வந்திருக்கிறேன்”

    இது தான் அவரது அறம். தனது நீதியுணர்வை கவனமாக ஒதுக்கி வைத்து விட்டு உள்ளொளியின் வழிகாட்டுதல்களோடு மணிரத்னத்திடம் இருந்தோ ஃபோர்டு பவுண்டேஷனிடமிருந்தோ கைநீட்டுவதை விஷ்ணுபுரம் வாசகர்வட்டம் பார்க்க நேர்ந்து விட்டால் அங்கே கைநீட்டிய செய்கையை விடுத்து உள்ளொளியின் வெளிச்சத்தில் மட்டும் தோய்ந்து விட்டுச் செல்லலாம். மீறிக் ஏதேனும் கேட்கப்படுமானால், பின்னூட்டப்பெட்டி மூடப்பட்டு விடும் – அதை நாம் உள்ளொளியின் ஜனநாயகம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

    மேலே தோழர் அம்பேதன் அவர்கள் கேட்டுக் கொண்டபடி ஆண்டன் செகாவின் சிறுகதையை வினவு வெளியிட வேண்டும் என்று கோருகிறேன். அது உள்ளொளியின் சுவிட்சை அணைத்து விட்டு புறவொளியின் நிதர்சனத்தில் நனைய பலருக்கும் உதவுவதாய் இருக்கும். எமக்கும் ஒரு பயிற்சியாய் இருக்கும்.

    • மன்னாரு,

      // இலக்கியத் தியாகு ஜெயமோகன் சொல்கிறார் – “ ஆம், என் நீதியுணர்வைச் சீண்டாமல் வெளியுலகை கவனமாக விலக்கிக் கொண்டு எழுதியும் வாசித்தும் இதுவரை வந்திருக்கிறேன்”

      இது தான் அவரது அறம். தனது நீதியுணர்வை கவனமாக ஒதுக்கி வைத்து விட்டு உள்ளொளியின் வழிகாட்டுதல்களோடு மணிரத்னத்திடம் இருந்தோ ஃபோர்டு பவுண்டேஷனிடமிருந்தோ கைநீட்டுவதை விஷ்ணுபுரம் வாசகர்வட்டம் பார்க்க நேர்ந்து விட்டால் அங்கே கைநீட்டிய செய்கையை விடுத்து உள்ளொளியின் வெளிச்சத்தில் மட்டும் தோய்ந்து விட்டுச் செல்லலாம். மீறிக் ஏதேனும் கேட்கப்படுமானால், பின்னூட்டப்பெட்டி மூடப்பட்டு விடும் – அதை நாம் உள்ளொளியின் ஜனநாயகம் என்று புரிந்து கொள்ள வேண்டும். //

      நீதியுணர்வை சீண்டும் சூழல்களை எதிர்க்க முடியாவிட்டால் தவிர்த்து விலகியிரு, சமரசமாகாதே என்ற நிலைப்பாடு, நீதியுணர்வையே ஒதுக்கி வைப்பது என்று பொருளாகுமா..?

      நீ போராடவில்லை என்றால் துரோகி அல்லது எப்போது வேண்டுமானாலும் துரோகியாவாய் என்று கூறமுடியுமா..?

      இரண்டுக்கும் பதில் ஆமென்றால் எதிரிகளைவிட ’துரோகிகளைத்தானே’ நீங்கள் அதிகம் காணவேண்டியிருக்கும்..?!

      • அம்பி,

        ஜெயமோகன் //ஆம், என் நீதியுணர்வைச் சீண்டாமல் வெளியுலகை கவனமாக விலக்கிக் கொண்டு எழுதியும் வாசித்தும் இதுவரை வந்திருக்கிறேன்// இப்படி மட்டும் சொல்லியிருந்தால் அவரது உள்ளொளியின் வழிகாட்டுதலை மெச்சியிருக்கலாம் ( பொதுவாக மக்கள் அதைக் கையாலாகாத்தனம் என்று தூற்றுவார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும்)

        ஆனால், நீங்கள் ஜெயமோகன் சொன்ன இதையும், மேலே உள்ளதோடு இணைத்துப் பார்த்தால் தான் சரியான பொருள் விளங்கும் –

        //நான் இடதுசாரி அல்ல. கார்ப்பரேட் நிறுவனங்களை நான் அழிவுசக்திகளாக எண்ணவுமில்லை. இந்தப்பொருளியல் கட்டமைப்புக்குள் செயல்படும் அமைப்புகள் இதன் பொருளியல்விதிகளின்படியே செயல்பட முடியும். ஆகவே ஒரு பொதுச்செயல்பாட்டுக்காக கார்ப்பரேட் அமைப்புகளின் உதவியைப் பெறுவது தவிர்க்கக்கூடியதும் அல்ல //

        சரி தானே? நீங்கள் ஜெமோவின் கேரக்டரையே இன்னும் சரியா புரிஞ்சுக்கலை நண்பா 🙂

        சரி, ஜெமோ கிடக்கட்டும். “எதிர்க்க முடியாவில்லை எனவே ஒதுங்கியிருப்பது” என்பது சாமானிய மக்களிடம் இருந்து எதிர்பார்க்கக் கூடியதே. அதிகாரத்தின் வலிமையின் முன்னே சாமானியர்களின் இந்த இயலாமையும் கையறுநிலையும் புரிந்து கொள்ளத் தக்கதே. இந்த அடிப்படையிலிருந்து வரும் செயலின்மை காரியவாத அடிப்படையிலிருந்து வருவதல்ல – சரியான மாற்றை அவர்கள் இன்னமும் அறிந்து கொள்ளாததும், எதிர்த்துப் போராடுவது என்கிற செயல் ஒரு அமைப்பாக்கப் பட்ட நடவடிக்கை என்பதைப் புரிந்து கொள்ளாததும் தான்.

        உண்மையில் இதற்காக வருத்தம் கொள்ள வேண்டியதும் சுயவிமர்சனம் ஏற்றுக் கொள்ள வேண்டியதும் இந்தப் பிரிவு மக்களை உடனடியாக இணைத்துக் கொண்டு முன்னேற வேண்டியதும் அநீதிகளை எதிர்த்து அமைப்பு ரீதியில் போராட முன்வந்துள்ள புரட்சிகர ஜனநாயக சக்திகள் தான்.

        ஆனால், காரியவாதத்தின் அடிப்படையில் இருந்து எழும் “என்னால முடிலை.. அதனால நானும் கொஞ்சம் பொறுக்கித் தின்று கொள்கிறேனே” என்பதையோ, “என்னால முடியலை… அதனால என் மச்சான் திங்கறதைப் பத்தி என்னால என்ன செய்யமுடியும்” என்பதையோ ஏற்றுக் கொள்வதற்கில்லை.

        ஜெயமோகனின் “என்ன முடியல… ” என்பது இப்படிப்பட வகையினது தான். அது தான் பல்வேறு வார்த்தை ஜாலங்களோடும், பகட்டான மொழிக்கட்டமைப்போடும் தலைகாட்டி நீலிக்கண்ணீர் வடிக்கிறது. “நான் பீடி வலிச்சதில்லை தெரியுமாடே…” என்று ஜீப்பில் ஏறப்பார்க்கிறது. அதை அனுமதிப்பதற்கில்லை.

        • //நான் இடதுசாரி அல்ல. கார்ப்பரேட் நிறுவனங்களை நான் அழிவுசக்திகளாக எண்ணவுமில்லை. இந்தப்பொருளியல் கட்டமைப்புக்குள் செயல்படும் அமைப்புகள் இதன் பொருளியல்விதிகளின்படியே செயல்பட முடியும். ஆகவே ஒரு பொதுச்செயல்பாட்டுக்காக கார்ப்பரேட் அமைப்புகளின் உதவியைப் பெறுவது தவிர்க்கக்கூடியதும் அல்ல //

          என்று கூறும் ஜெயமோகன் தனிப்பட்ட முறையில் ஃபோர்டு ஃபவுண்டேசனின் உதவிகளை ஏன் தவிர்க்கவேண்டும்.?! அவரைத் தடுத்தது அவரது தனிப்பட்ட கொள்கை அடிப்படையிலான நீதியுணர்வுதானே..?! இந்த தனிமனித நீதியுணர்வுக்கு அடிப்படையாக அவரின் சொந்த மதிப்பீடுகள்,விழுமியங்கள், அறம், தன்னளவிலான நேர்மை போன்ற பல கூறுகள் இருக்கும்போது, அவருக்கு நீங்கள் எதிர்பார்க்கும் மார்க்சீய நீதியுணர்வு இல்லையென்பதாலேயே அவரை காரியவாதிகள் கூட்டத்தில் சேர்த்து கடுமையாக விமர்சிப்பது ஏன் என்று புரியவில்லை..!

          • அம்பி, நான் சரியாகப் புரியும் விதமாக விளக்கவில்லை என்று கருதுகிறேன்.

            தான் தனிப்பட்ட முறையில் ஃபோர்டு பவுண்டேசனிடம் காசு வாங்கவில்லை என்று கூறும் ஜெயமோகன், ஏன் அப்படி வாங்குவது ‘தவிர்க்கவியலாதது’ என்று சொல்ல வேண்டும்?

            அவர் உண்மையிலேயே ஃபோர்டிடம் காசு வாங்காதவராகவே இருக்கட்டும். இப்போது பிரச்சினை ஃபோர்டு “மட்டும்” அல்ல. ஒரு சமூக அமைப்பில் ஒருவர் தான் பின்பற்றுவதாகப் பீற்றிக் கொள்ளும் அற மதிப்பீடுகளுக்கு நேர்மாறான போக்குகளோடு சமரசம் செய்து கொள்வது – அதன்வழி, தான் முன்வைக்கும் மதிப்பீடுகளுக்கும் விழுமியங்களுக்கும் துரோகமிழைப்பது. அந்த வகையில் தான், மனித உரிமை பெண்ணுரிமை என்றெல்லாம் பீற்றிக் கொண்ட லீனா அதைக் காலில் போட்டு நசுக்கும் கார்ப்பரேட்டிடம் காசு வாங்கிக் கொண்டது.

            இதை நிறுவனங்களுக்கு உழைப்பை விற்பதோடு போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது – மூளையையும் உணர்ச்சியையும் விற்பது சம்பந்தப்பட்டது.

            இப்போது ஜெயமோகனுக்கு வாருங்கள்.

            ஜெயமோகன் அவரது விஷ்ணுபுர வட்டாரத்தில் ஒரு பீடாதிபதி. அறம், உள்ளொளி தரிசனம், பாரத தரிசனம், இந்தியப் பண்பாடு பாரம்பரியம், சனாதன மரபுகள், சித்தர் மரபுகள், ஆண்மீக ஒளி என்றெல்லாம் பேசுபவருக்கு கோடம்பாக்கத்தில் என்ன வேலை என்று விஷ்ணுபுரத்தின் மூலை முடுக்கில் உச்சா போகும் லுச்சா பயல் கூடக் கேட்டு விடலாம் அல்லவா?

            ஜெயமோகன் செய்வது வெறும் உடல் உழைப்பை விற்பதல்ல – அது மூளை விற்பனை. உணர்ச்சி வியாபாரம். உள்ளொளி வர்த்தகம்.

            இந்தப் புள்ளியில் தான் லீனாவும் ஜெயமோகனும் சந்தித்துக் கை குலுக்கிக் கொள்கிறார்கள். ஆனாலும் தானும் ஒரு ரவுடி எனும் பழைய பிரகடனங்களைக் கைவிட்டு விடத் தயாரில்லாததாலேயே லீனாவை கண்டிப்பது போல தனது காரியவாதத்திற்கு நியாயம் கற்பிக்கிறார்.

            • மன்னார்,

              உங்கள் விளக்கம் நன்றாகவே புரிகிறது. நன்றி.

              // தான் தனிப்பட்ட முறையில் ஃபோர்டு பவுண்டேசனிடம் காசு வாங்கவில்லை என்று கூறும் ஜெயமோகன், ஏன் அப்படி வாங்குவது ‘தவிர்க்கவியலாதது’ என்று சொல்ல வேண்டும்? //

              ஒரு ”பொதுச்செயல்பாட்டுக்காக” கார்ப்பரேட் அமைப்புகளின் உதவியைப் பெறுவது தவிர்க்கக்கூடியதும் அல்ல என்று கூறி கூடவே கார்ப்பரேட்டுகளின் கருவியாகச் செயல்படுவது வேறு, தவறு என்றும் பின்னால் கூறிவிட்டார்.

              // ஜெயமோகன் அவரது விஷ்ணுபுர வட்டாரத்தில் ஒரு பீடாதிபதி. அறம், உள்ளொளி தரிசனம், பாரத தரிசனம், இந்தியப் பண்பாடு பாரம்பரியம், சனாதன மரபுகள், சித்தர் மரபுகள், ஆண்மீக ஒளி என்றெல்லாம் பேசுபவருக்கு கோடம்பாக்கத்தில் என்ன வேலை என்று விஷ்ணுபுரத்தின் மூலை முடுக்கில் உச்சா போகும் லுச்சா பயல் கூடக் கேட்டு விடலாம் அல்லவா?

              ஜெயமோகன் செய்வது வெறும் உடல் உழைப்பை விற்பதல்ல – அது மூளை விற்பனை. உணர்ச்சி வியாபாரம். உள்ளொளி வர்த்தகம். //

              ஒரு எழுத்தாளனுக்கு, விஷ்ணுபுர வட்டத்தைவிட, பெரிய வட்டத்தைக் கொடுக்கும் ஆற்றல் திரைப்பட ஊடகத்துக்கு உண்டு, கூடவே அதிக வருவாயையும்..! இதைக் குற்றமாகப் பார்க்கவேண்டுமெனில் அவர் ஏதெனும் ஒரு கழிசடைப் படத்துக்கு கதை,வசனம் எழுத முற்பட வேண்டும்..

              மற்றபடி, உள்ளொளி வர்த்தகம் என்றெல்லாம் அவர் முனைந்திருந்தால், ஜெயமோகன் எப்போதோ ஜெயமோகனானந்தாவாகியிருக்கமாட்டாரா..?!

              // இந்தப் புள்ளியில் தான் லீனாவும் ஜெயமோகனும் சந்தித்துக் கை குலுக்கிக் கொள்கிறார்கள். ஆனாலும் தானும் ஒரு ரவுடி எனும் பழைய பிரகடனங்களைக் கைவிட்டு விடத் தயாரில்லாததாலேயே லீனாவை கண்டிப்பது போல தனது காரியவாதத்திற்கு நியாயம் கற்பிக்கிறார். //

              ஒரு வகையில் லீனாவை வினவைப் போல் வேறு யாரும் தர்க்க ரீதியாகவோ, தார்மீக ரீதியாகவோ கண்டிக்க முடியாது, முடிந்திருக்காது. லீனா எடுத்திருக்கும் ஆயுதம் அப்படி..

  35. //காந்தியம் என்பது வன்முறையற்ற புரட்சி… அதாவது கத்தியின்றி இரத்தமின்றி மகத்தான நிலையான வெற்றியைப் பெறுவது..

    அமெரிக்க ஆப்பிரிக்கர்களுக்கு நிலையான உரிமையை காந்தியத்தின் மூலம் லூத்தர் பெற்றது

    தென்ஆப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா…

    பாலஸ்ஸீனத்தின் யாசர் அராபத்

    ஈரானின் தற்போதைய முதல்வர்

    பர்மாவின் ஆங் சா சூகி

    எகிப்தின் தற்போதை புரட்சி…

    இவர்கள் அனைவரும் காந்தியம் அதாவது non violence மூலம் மகத்தான நிலையான வெற்றியே இதற்கு சான்று..
    //

    அன்புள்ள கல்நெஞ்ச நண்பருக்கு,
    மீண்டும் கட்டுரைக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டம். இருப்பினும் கேள்வி எழுப்பாமல் இருக்க முடியவில்லை. மன்னிக்க.

    The so called “காந்தியம் என்னும் வன்முறையற்ற புரட்சி” செய்து அதன் மூலம் எந்த மாதிரியான மாற்றத்தை/சமூக அமைப்பது உருவாக்க விரும்புகிறீர்கள்? லீனா செய்து கொண்டிருப்பது காந்தியம் சார்ந்த புரட்சி என்கிறீர்களா?

    • ரிஷி,
      லீனாவின் டாக்குமென்டரிகளைப் பார்க்காமலே கமண்ட் செய்ய எப்படி மனது வருகிறது என்பதை சொல்லுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன். லீனா எடுத்த டாக்குமென்டரிகள் எத்தனை என்பதை தங்கள் அறிவீர்களா. அப்படங்களைப் பார்த்து பின்னர் பதில் அளிக்கவும்…

      ///
      oru tamilanJune 19, 2012 at 6:13 pm Permalink
      1.1.1.1.1.1.2

      காந்தியம் ஜெய்த்தாக ஒரு நாடு காட்ட முடியுமா கல்நெஞ்சம், இந்தியான்னு காமெடி மட்டும் பண்ண வேண்டாம்…
      /////

      என்று கேட்டவரின் கேள்விக்கு அடியேன் தந்த பதிலே..

      • நண்பரே, லீனாவின் டாகுமெண்ட்ரிகளை நான் பார்த்ததில்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது செங்கடல் தொடர்பான அனைத்து செய்திகளையும் படித்திருக்கிறேன். லீனா உள்ளிட்ட பெண்ணியம் பேசுவோர் அனைவரும் மார்க்சியத்தின் மீது மதிப்பு வைத்திருப்பதையும் அறிவேன். இப்போது பேசுபொருள் மார்க்சிய அறிவின் மீது மதிப்பும், கேப்பிடலிசம் மீதான எதிர்ப்பும் கொண்டிருந்த (கொண்டிருக்கும்?) பெண்மணி, கேப்பிடலிஸ்ட் டாடாவின் மக்கள் விரோத செயல்களை மறைக்கும்வண்ணம் அவர்களுக்காக ஆவணப்படம் எடுத்திருப்பதை விமர்சிப்பதே ஆகும். இவ்வாறுதான் நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.

        //என்று கேட்டவரின் கேள்விக்கு அடியேன் தந்த பதிலே..//

        வாக்கியம் முற்றுப் பெறவில்லை?

        • ஆகமொத்தம் ஆவணப்படங்களை பார்க்காமல் ஓரு குத்துமதிப்பதான் கருத்துக்களை செல்லுவதற்கு ஓர் தைரியம் வேண்டும் நீங்கள் மட்டுமள்ள இங்கேயுள்ள அனைவருமே.
          பாராட்டுக்கள்.. தயவுசெய்து நான்கு குருடர் யானை கதை படிக்கவும். அல்லது ஆவணப்படங்களை பார்க்கவும்…பின்னர் வக்காலத்து வாங்கவும்.. எள்ளல் செய்யவும்….

          //என்று கேட்டவரின் கேள்விக்கு அடியேன் தந்த பதிலே..//

          காந்தியம் என்பது வன்முறையற்ற புரட்சி… அதாவது கத்தியின்றி இரத்தமின்றி மகத்தான நிலையான வெற்றியைப் பெறுவது..

          அமெரிக்க ஆப்பிரிக்கர்களுக்கு நிலையான உரிமையை காந்தியத்தின் மூலம் லூத்தர் பெற்றது

          தென்ஆப்பிரிக்காவில் நெல்சன் மண்டேலா…

          பாலஸ்ஸீனத்தின் யாசர் அராபத்

          ஈரானின் தற்போதைய முதல்வர்

          பர்மாவின் ஆங் சா சூகி

          எகிப்தின் தற்போதை புரட்சி…

          இவர்கள் அனைவரும் காந்தியம் அதாவது non violence மூலம் மகத்தான நிலையான வெற்றியே இதற்கு சான்று..

    • முதலில் அவர் காந்தியம் என்றால் என்ன என்று சொல்லட்டும்? காந்தியவாதிகள் கல்நெஞ்சம் கொண்டவர்கள்

  36. முகநூலில் பாரதி தம்பி என்பவர் லீனாவை அம்பலப்படுத்தி எழுதிய செய்தியை லீனாவுக்கு நண்பர்களாக இருக்கும் பலரும் ஏற்று ஆதரித்ததால் ஆத்திரமுற்ற சீமாட்டி லீனா தனது நண்பர்களை எல்லாம் ’நேர்மை’யற்றவர்கள் என்று கூறியுள்ளார். நேர்மையை பற்றி புரோக்கர்கள் எல்லாம் பேசுவதை சகிக்க முடியவில்லை.

    அங்கு நடந்த விவாத பின்னூட்டத்தை இங்கு பகிர்கிறேன். லீனாவின் காரியவாதமும், கைக்கூலித்தனமும் அந்த பின்னூட்டங்களில் பளிச் என்று பல்லிளிப்பதை அனைவரும் காணுங்கள்.

    பாரதி தம்பி எழுதியது:

    ”எல்லாவற்றையும் அறிவால் சமன் செய்துவிடலாம் என்று நினைக்கிறார் லீனா. செயலில் எத்தனை நேர்மையற்ற தந்திரங்களைக் கையாண்டாலும் தர்க்க ரீதியாக வாதங்களே சகலத்தையும் முறியடிக்கப் போதுமானது என்பது அவர் எண்ணம். ஆனால், பாவம், இப்போது அவரது வார்த்தைகளே அவரைக் கைவிட்டுவிட்டன. அப்பட்டமாக அம்பலப்பட்டப் பின்னர், பிழைப்புவாதத்தை புதிய அறம் போல முன் வைக்கிறார். ஒப்புக்கொள்வதாலேயே ஒரு குற்றம் மேன்மையாகிவிடுவதில்லை. உரக்கப் பேசுவதாலேயே அயோக்கியத்தனம் புனிதமாகிவிடுவதில்லை. எல்லாவற்றையும் விட கொடுமையானது, டாடாவுக்கான விளம்பரப்படத்தை சோற்றுக்கு வழியில்லாமல்தான் எடுத்ததாக லீனா சொல்வதுதான். உங்களையெல்லாம் ‘விக்டிம்’ ஆக க்ளைம் செய்துகொண்டால், நாட்டில் இருக்கும் எண்ணற்ற ஏழைகளும், பட்டிணியில் கிடக்கும் பல கோடி பேரும் தங்களை எந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்வது ?”

  37. Leena Manimekalai
    என் நட்பு சமூகத்திற்கு, என் அரசியல் எதிரிகளான காலச்சுவட்டிற்கும், வினவிற்கும் இருக்கும் நேர்மை கூட இல்லாமலிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. சந்திரா, கவின்மலர், பாரதி தம்பி, விஷ்ணுபுரம் சரவணன் என்று நீள்கிறது பட்டியல். Barathi Thambi நீங்கள் வேலை செய்யும் நிறுவனங்களின் எல்லா நடவடிக்கைகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்ள முடியுமா? அருந்ததிராய் அவுட்லுக்கில் எழுதுகிறார். அவுட்லுக் ரஹேஜா க்ரூப்பின் நில மாஃபியா கொலைகளுக்கு அவரை சம்பந்தப்ப்டுத்துவீர்களா? அருந்ததிராய் பெயரை அவர்கள் விற்பனைக்கு பயன்படுத்துவதில்லையா? இல்லை கட்டுரைக்கான சன்மானத்தை அவர் பெற்றுக் கொண்டதால், அவர் ரஹேஜா க்ரூப்பின் கொலைகளை மறைக்கிறர்ர் என்று சொல்வீர்களா? சத்யமேவ ஜயதேயில் அமீர்கான் பெண்சிசுக் கொலையைப் பற்றி பேசுகிறார். அதன் மெயின் ஸ்பான்சர் ரிலையன்ஸ. இந்த நாட்டின் எந்த எதிக்ஸும் இல்லாத முதலாளி என்றால் அதி ரிலையன்ஸ் தான். ரிலையன்ஸ் பெண்சிசுக்கொலையை பேசி தன்னை விற்றுக் கொள்கிறது. ஆனால் அங்கு பெண்சிசுக் கொலையைப் பற்றி பேசினால் லட்சக்கணக்கான மக்களைப் போய சேர முடிகிறது. டாட்டா நிறுவனத்தின் மனித உரிமை மீற்ல்களை நான் என் சொந்த படத்தில் பேசுவேன்..என் சொந்தப் புத்தகத்தில் எழுதுவேன். கூலிக்கான வேலையில், டாட்டா தன் பெண் தொழிலாள்ர்களுக்கான மேம்பாட்டுத்திட்டத்தை படமாக்கினேன். ஆமாம், அதையும் முதலாளி தன்னை விற்றுக் கொள்வதற்கான விசயமாகத்தான் பயன்படுத்திக்கொள்வான். அதற்கு மத்தியில் தான் நான் வேலை பார்க்க வேண்டியுள்ளது நண்ப்ர்களே! தொடர்ந்து அரசியல் படங்களை எடுப்பதற்கு, வரலாறு முழுக்க சுயாதீன திரைப்பட கலைஞர்கள் இப்படித்தான் இயங்கியிருக்கிறார்கள், இன்னும் இயங்கவும் முடிகிறது. நான் இப்பொது செய்துக் கொண்டிருக்கும் படம் அரசாங்க உதவித்தொகையில் செய்கிறேன். இந்த அரசாங்கம் செய்யும் எல்லா மகாபாதகங்களையும் இதனால் மறைத்துவிட முடியும் என்று நீங்கள் சொல்லவும் கூடும்….

    Ambedh Sitharth
    ‎///என் நட்பு சமூகத்திற்கு, என் அரசியல் எதிரிகளான காலச்சுவட்டிற்கும், வினவிற்கும் இருக்கும் நேர்மை கூட இல்லாமலிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. சந்திரா, கவின்மலர், பாரதி தம்பி, விஷ்ணுபுரம் சரவணன் என்று நீள்கிறது பட்டியல்///

    இவங்க எல்லாம் உங்களுக்கு லைக் போடலையேன்னு ஆத்திரமா மேம் ?

    உங்களை ஆதரித்தால் நேர்மை இல்லைனா நேர்மை இல்லையா ? அரசியல் ரீதியில் இதற்கு பெயர் சந்தர்ப்பவாதம் மேம். எனக்கு ஆதரவா பேசு என்று மற்றவர்களை நிர்பந்திப்பதும், தனக்கு ஆதரவாக பேசுபவர் தவறே செய்திருந்தாலும் அவரை ஆதரிப்பது என்பதற்கு பெயர் தான் சந்தர்ப்பவாதம். நீங்கள் இப்போது நேர்மையற்றவர்கள் என்று குறிப்பிடுபவர்களையெல்லாம் சந்தர்ப்பவாதிகளாகச் சொல்கிறீர்கள் என்கிறேன் நான்.

  38. Leena Manimekalai

    ‎Barathi Thambi, மற்றொரு திரியில் சொன்னதை இங்கும் மறுபதிவு செய்கிறேன். இந்த நிலைத்தகவலை லைக் செய்தவர்கள் பலர் நண்பர்களாகவுல் இருப்பதால்… “அரசு ஊழியர்கள். அரசாங்க சம்பளம் வாங்குகிற எழுத்தாளர்கள், ஆக்டிவிஸ்ட் எல்லாம். அரசாங்கத்தை எதிர்த்துப் பேசுவதில்லையா, எழுதுவதில்லையா? நான் டாட்டாவிற்கு வேலை செய்தேன். அவர்களின் தொழிற்சாலைகளில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நலத்திட்டம் பற்றிய படத்தை ஆவண்ப்படுத்தினேன்,கூலியும் வாங்கினேன். ஆனால் டாட்டாவை எதிர்த்தும் பேசுவேன், எழுதுவேன், படமும்(சுயாதீன்) எடுப்பேன். முதலாளிகளிடம் வேலை செய்து, கூலியும் பெற்றுக் கொண்டு, முதலாளிகளையும் எதிர்க்கவும் செய்வதே, எனக்கு தொடர்ந்து இயங்குவதற்கான ஒரே வழி” இதற்குப் பிற்கும் உங்கள் நீதிமன்ற்ங்களுக்கு நான் நடக்கப் போவதில்லை. நன்றி வணக்கம்.

    Ambedh Sitharth
    ‎////Barathi Thambi நீங்கள் வேலை செய்யும் நிறுவனங்களின் எல்லா நடவடிக்கைகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்ள முடியுமா?///

    ஒரு நிறுவனத்தில் வேலை செய்வது என்பது வேறு அந்த நிறுவனத்திற்கு கைக்கூலி வேலை செய்வது என்பது வேறு. முன்னதுக்கு கிடைப்பது கூலி பின்னதுக்கு கிடைப்பது கைக்கூலி.

    இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் ஒருவர் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்து கொள்ளட்டும் அதுவல்ல பிரச்சினை. அவர் என்ன வேலை செய்கிறார் அதற்கு என்ன மாதிரி பெறுகிறார் என்பது தான் பிரச்சினை. அதாவது முதலாளிக்காக தமது உழைப்புச் சக்தியை விற்கிறார்களா அல்லது லீனாவை போல உழைப்புச் சக்தியை திருடும் முதலாளிக்காக வேலை செய்கிறார்களா என்பது தான் பிரச்சினை. இரண்டும் கூலி தான். தொழிலாளர்கள் பெறுவது கூலி லீனா பெறுவது கைக்கூலி.

    எனவே பாரதி தம்பியை நீங்கள் கேள்வி கேட்க முடியாது மேம். ஏனெனில் அவர் கூலிக்கு தான் வேலை செய்கிறார். ஆனால் நீங்கள் அவ்வாறு இல்லை என்பதால் தான் எல்லா இடத்திலும் வலிந்து வலிந்து நான் கூலிக்கு மாறடிக்கிறேன் கூலிக்கு மாறடிக்கிறேன் என்று எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு தானே இருக்கிறோம்.

  39. http://ceylonboomi.blogspot.com/2012/06/blog-post.html
    அறிவுஜீவிகளிடம் காணப்படும் சில தன்மைகள்

    இன்றைய உலகில் ஆய்வாளர்கள் அறிஞர்கள் கவிஞர்கள் என்று பற்பல துறையினர் எழுத்துலகில் இருக்கின்றார்கள். அவர்களின் கருத்துக்கள் சமூகத்தில் பலவேறு ஊடகங்கள் ஊடாக சமூகத்திற்கு செல்கின்றது. இதில் குறிப்பாக மார்க்சீயம் பேசுபவர்கள் மார்க்சீயம் பேசா எழுத்தாளர்கள் என்று இருக்கின்றார்கள். இவர்களில் மார்க்சீயம் பேசாதவர்களை இட்டு நாம் சந்தோசமடையும் நிலையில் இருக்கலாம். அவர்கள் தமக்கு அந்த சித்தாந்தம் தெரியாது அல்லது தேவையில்லை அல்லது அது பற்றி அறிமுகம் அற்றவர்களாகவும் இருக்கலாம். இவர்கள் ஏதோவகையில் நேர்மையானவர்கள்.
    ஆனால் மார்க்சீயம் பேசுபவர்கள் இன்றைய உலகில் நிறையப்பேர்கள் உள்ளார்கள். இவர்களின் பல தளங்களில் செயற்பட்டுக் கொண்டு இருப்பவர்கள். அறிஞர்களாக விமர்சகர்களாக மற்றவர்களை தம் புலமையின் காரணமாக மற்றையவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருக்கின்றனர்.
    இன்றைய கல்விசார் உலகில் மானிடவியல், சமூகவியல், உளவியல் வரலாறு என்ற பாடநெறிகளுக்குள் அந்த பாடநெறிகளை கற்றுக் கொள்ளுகின்ற போது அணுமுறைகள் பற்றி பார்வை முக்கியமாக இருக்கின்றது. இந்த அணுமுறையூடாக பாடநெறியை கற்றுக் கொள்கின்றனர். (இந்த அணுகுமுறைகள் வர்க்கம் சார்ந்து இருக்கின்றது ஒரு புறமிருக்க) இவர்கள் Sturcturalism, functionalism (Emil Durkheim), sturctural functionlism (Levi Struss) , conflict perspective, marxism. பின்நவீனத்துவம், நவமார்க்சீசம் (அகநிலைவாத) என்று புதிய புதிய அணுமுறைகளை புகுத்துவது இன்றைய கலாசாலை வட்டத்தில் கற்பிற்கப்படுவதுதாம்.
    இந்த அணுகுமுறைகளை எழுத்தாளர்கள் என்ற சிறிய வட்டத்தினுள்ள புகுத்தப்படுகின்றது. கல்விசார் நிறுவனங்கள் இந்த பொருளாதார அமைப்பை நிலைநிறுத்தும் பொருட்டான கல்வித்திட்டங்களை உருவாக்கிக் கொள்கின்றது. இந்த பொருளாதார அமைப்பை நிலைநிறுத்தும் பொருட்டான ஊழியர்களை உருவாக்க வேண்டியது தேவையாகும். அறிவுசார் ஊழியர்களை மறுவுற்பத்தி செய்கின்ற போது உருவாக்கப்படும் அறிவுசார் பிரிவினர்கள் சமூகதளத்தில் தமது புலமைகளை வெளிப்டுத்த நுழைகின்றனர். இவர்களின் கல்வித் தகமை எல்லோரிடமும் இருப்பதில்லை (அறிவு வேறு) இவர்கள் கொண்டுள்ள பல்வேறு இசங்களை (ism) வைத்துக் கொண்டு தம்மை மற்றையவர்களை விட மேலான்மை கொண்டவர்களாக இருத்திக் கொள்கின்றார்கள்.
    இவ்வாறான இசங்களின் (ism) அணுமுறையில் இருந்து வெளியாகும் எழுத்துக்களினால் ஏற்படும் மயக்க நிலை இந்தச் சமூகத்தில் உள்ள அறிவுசார் பிரிவினர்களில் உண்மையான மக்கள் நலம் கொண்டவர்களிடயே ஆழுமையையும் மயக்கத்தையும் உண்டு பண்ணுகின்றார்கள்………………

    • இந்த அம்மா சிலவிடயங்களில் சிலநபர்களை இட்டு கருத்துக் கூறுகின்றார்.
      பிரபல்யங்கள் மார்க்சீயம் பேசியவர்களாக தெரியவில்லை.
      அடுத்து தனது நண்பர்கள்
      தனது நண்பர்களிடத்தில் “நீங்கள் வேலை செய்யும் நிறுவனங்களின் எல்லா நடவடிக்கைகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்ள முடியுமா? என கேள்வி கேட்கின்றார்.” இங்கு அனைத்து நாடுகளிலும் முதலாளித்துவக் நிறுவனங்களில் தான் வேலை செய்கின்றார்கள்.
      உற்பத்தி சக்திகளினதும் உற்பத்தி உறவின் மீதுதான் பொருளாதார அடித்தளம் கட்டமைக்கப்படுகின்றது. இதன்மீதுதான் மேற்கட்டுமானங்களான சமயம் (மதங்கள்) குடும்பம்> அரசு> சட்டம்> அரசியல இதிலிருந்து எவரும் மாறுபாடாக இருக்க முடியாது. ஆனால் நாம் பெறும் ஊதியம் செய்யும் வேலைக்கு எற்ப ஏற்றத் தாழ்வுடன் கொடுக்கப்படுகின்றது. இந்த நிலையில் ஒரு உடலுழைப்பை செலுத்துபவர்களும் மூலை உழைப்பை செலுத்துபவர்களின் ஊதியத்தையும் சமப்படுத்த முடியாது.
      தொழிலாளி தன்னுடைய சக்தியினை விற்கின்றான். அவை அரச நிறுவனங்களானால் என்ற பெரும் நிறுவங்களிலோ தொழிலாளி குறிப்பிட்ட மணித்தியால உழைப்பை ஊதியமாக முத மீதி நேரத்தை கூலியில்லாமல் தொழிலாளிகள் உற்பத்தியில் ஈடுபடுகின்றார்கள். முதலாளியிடம் இருந்து பெறுகின்றார்கள். பல மணிநேரம் உழைப்பிற்காக ஊதியத்தை பெறாமலே வேலை செய்கின்றார்கள். இவ்வாறு தொழிலாளியினால் மேலதிக உழைப்புப் பெறப்பட்டதே உபரியாகும்.
      இவர்களிடத்தே தன்னுடைய நிர்வாகத்தை நடத்துவதற்கு ஊழியர்களையும் தெரிந்தெடுத்து அந்த சக ஊழியரை கொண்டே பெரும்பான்மையான தொழிலாளிகளை வழிநடத்துகின்றார்கள். நிர்வகிக்கும் ஊழியர்கள் இன்றைய கல்வித் திட்டத்தின் மீது உருவாக்கப்படுபவர்கள். (சம்பள பாகுபாட்டை கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் பார்க்கலாம் இதனை லேனா பார்த்தாரோ தெரியவில்லை)
      உபரியின் (மிகைவருமானம்) வளர்ச்சியினால் அதாவது தொழிலாளி இனாமாகக் கொடுக்கும் உழைப்பினால் தனது சொத்தை பெருக்கிக் கொள்கின்றார்கள். அவ்வாறே இடைநிலை வர்க்கத்தையும் சில சலுகைகளைக் கொடுத்து புதிய வர்க்கத்தை (அதிகார) உருவாக்கிக் கொள்கின்றது. இவர்களே உழைக்கும் மக்களை ஆள்பவர்கள். இந்த அதிகார வர்க்கம் பாராளுமன்றத்தில் இருந்து தொழிற்சாலை நிர்வாகம் வரை எங்கும் உழைக்கும் மக்களை அடக்குகின்றது.
      இதில் லேனா என்னசொல்லவருகின்றார் என்றால் வர்க்கமில்லா சமூதாயம் ஒன்று இருப்பதாகவும் முதலாளிகளின் நலனைப் பேறும் அதிகார வர்க்கத்திற்கு மேலதிக வரும்படிகளை கொடுக்கவில்லை என்று தான் இந்த அம்மா கூறுகின்றார்.
      முதலாளி கொடுக்கும் மேலதிக ஊதியத்தினால் உண்டாவதே வர்க்க பேதங்களாகும். இதுதான் இந்த அம்மாவின் மார்க்சீயம்.
      தொழிலாளர்கள் தமக்கான ஊதியத்தை கூட்டித் தாருங்கள் என்று கேட்டால் கொடுக்காத முதலாளி விளம்பரப் படத்தை தயாரிப்பதற்கு கொடுக்கும் சன்மானம் என்பதே. முதலாளிய நிர்வாகக் கட்டமைப்பை பாதுகாக்கும் அதிகார வர்க்கத்திற்கு கொடுக்கும் சன்மானமாகும். விளம்பரப்படத்திற்கு என்ன சில்லறையாகவாக ஊதியம் கொடுக்கப்படுகின்றது???
      உமது படத்தில் அலவலத்தை காட்டுவதன் மூலம் உமக்குத்தான் இன்னும் வரும்படி சேரும் அதேவேளை செய்த பாவத்திற்கு கடவுளிடம் வேண்டி கோவில் உண்டியலில் போடும் முறைக்கு மேல் ஒன்றும் இல்லை.

  40. Ambedh Sitharth ‎///டாட்டா நிறுவனத்தின் மனித உரிமை மீற்ல்களை நான் என் சொந்த படத்தில் பேசுவேன்..என் சொந்தப் புத்தகத்தில் எழுதுவேன்///

    அப்படினா இது சொந்த குரல் (படம்) இல்லை டாடாவின் குரல், அதாவது டாடாவுக்காக நீங்கள் டப்பிங் பேசியதை ஒத்துக்கொள்கிறீர்கள் இல்லையா ? அதை தான் மேம் நாங்களும் சொல்கிறோம்.

  41. Leena Manimekalai
    பாரதி தம்பி விகடனில் , சன் டிவியில் என்ன செய்ய முடியும், சிறுபத்திரிகைகளில், அவரது வலைத்தளத்தில் என்ன செய்ய முடியும் என்பதில் உள்ள வித்தியாசம் தான் கூலிப்படம் செய்வதற்கும், சொந்தப்படம் செய்வதற்கும்…. விகடனில் எழுதினாலும், பெரிய சமரசங்கள் செய்யாமல் அவர் எழுதுவது போலத் தான் நான் தேஜஸ்வினி டாக்குமென்ட் செய்ததும். அவர் எழுதுவதையும், நான் படமாக்கியதையும் நிறுவனங்கள் என்ன செய்யும் என்பது தொழிலாளர்களின் அதிகாரத்தில் இல்லை. இதற்கு மேலும் விளக்கமளிக்க இயலாது. விடைபெறுகிறேன்.

  42. Ambedh Sitharth
    ‎///கூலிக்கான வேலையில், டாட்டா தன் பெண் தொழிலாள்ர்களுக்கான மேம்பாட்டுத்திட்டத்தை படமாக்கினேன். ஆமாம், அதையும் முதலாளி தன்னை விற்றுக் கொள்வதற்கான விசயமாகத்தான் பயன்படுத்திக்கொள்வான்///

    நீங்கள் செய்துள்ள மேம்பாடு ஏகாதிபத்தியங்கள் ஏழை நாடுகளில் கைக்கூலி என்.ஜி.ஓக்களை இறக்கிவிட்டு மக்களை வர்க்க ரீதியாக ஒன்றுதிரண்டுவிடாமல் சிதறடிப்பதற்கு செய்யும் மேம்பாடாகும். வேறுபாடு அது வெளிநாட்டிலிருந்து உள்ளே வருகிறது நீங்கள் உள்நாட்டிலிருந்தே அதைச் செய்கிறீர்கள். முதலாளியத்திற்கெதிராக போராடுபவர்களுக்கு மத்தியில் இத்தகைய என்.ஜி.ஓ கறுப்பு ஆடுகளை இறக்கிவிட்டு போராட்டத்தை காயடிப்பது தான் இந்த மேம்பாட்டின் நோக்கம். அதை நீங்களே அடுத்த வரியில் ’முதலாளி தன்னை விற்றுக் கொள்வதற்கான விசயமாகத்தான் பயன்படுத்திக்கொள்வான்’ என்று ஒத்துக்கொண்டிருக்கிறீர்கள்.

    தெரிந்தே செய்கிறீர்கள் என்றால் இந்த வேலைக்கு என்ன பெயர் என்று தான் மேம் கேட்கிறோம்.

  43. Leena Manimekalai சரி முதலாளிகள் இல்லாத உலகத்தை காட்டுங்கள், சீரியஸ் சினிமாவிற்கு ‘முதல்’ தேவையில்லாத உலகத்தைக் காட்டுங்கள், சாப்பாட்டிற்கு பணம் தேவைப்படாத உலகத்தைக் காட்டுங்கள், சுதந்திரமாக கலைஞ்ர்கள் இயங்குவதற்கும் இருப்பதற்கும் உதவும் அரசாங்கங்களை காட்டுங்கள்..எனக்கும் அப்படியான உலகத்தில் இருக்கத்தான் ஆசை. இழவு நிம்மதியாக இருக்கலாம்.

    Ambedh Sitharth
    ‎///முதலாளிகள் இல்லாத உலகத்தை காட்டுங்கள்///

    முதலாளிகள் இல்லாத சமூகத்தை நாம் தான் உருவாக்கத்தான் வேண்டும். முதலாளிகள் இருந்தால் அதற்காக அவர்களிடம் நத்திப்பிழைக்கத்தான் வேண்டும் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. கோடிக்கணக்கான தொழிலாளர்கள் முதலாளிகளின் ஆலைகளில் தான் கூலிக்கு ’வேலை’ செய்கிறார்கள்.

    முதலாளிகள் உள்ள இந்த சமூகத்தில் தான் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இருக்கின்றன. அவர்கள் என்ன முதலாளிகளிடம் காசு வாங்கியா கட்சி நடத்துகிறார்கள். த.ப கட்சி இதற்கு விதிவிலக்கு. எனவே அதை வைத்துக்கொண்டு நீங்கள் சொல்லக்கூடாது.

    • மகாகனம் பொருந்திய அம்பேத் அவர்களே..
      மாவோயிஸ்கள் நக்சல்பாரிகள் எவரிடம் இருந்து ஆயுதம் வாங்குகிறார்கள் என்பதை சொல்லமுடியுமா…

      • மாவோயிஸ்கள் நக்சல்பாரிகள் எவரிடம் இருந்து ஆயுதம் வாங்குகிறார்கள்///

        என்னது ஆயுதம் வாங்குறாங்களா? ஏங்க தண்டகாரண்யாவுல கெவர்மெண்டு கடையா போட்டிருக்கு 🙂 எல்லாம் ராணுவம் போலீசு கிட்ட பரிமுதல் செய்யுற ஆயுதம்தான்

        • ஊசி…அப்படினா ஆயுத வியாபாரிகள் என்பவர்கள் யார். அவர்கள் எந்த நாட்டின் கம்யுனிச புரட்சியாளர்கள் பற்றி விக்கிபிடியாவில் தகவல் சேகரித்து செல்லவும்..

          • ஏம்ணே நான் சொல்லுறத படிச்சீங்களான்னே தெரியலயே???

            ”எல்லாம் ராணுவம் போலீசு கிட்ட பரிமுதல் செய்யுற ஆயுதம்தான்”

            வாங்கல் இல்ல, பரிமுதல் !

  44. Ambedh Sitharth
    ///தொடர்ந்து அரசியல் படங்களை எடுப்பதற்கு, வரலாறு முழுக்க சுயாதீன திரைப்பட கலைஞர்கள் இப்படித்தான் இயங்கியிருக்கிறார்கள்///

    உலகமகா பொய் ! இயற்கை எழில் கொஞ்சும் கலிங்க நகரில் நுழைந்து அதை சுடுகாடாக்கத்துடிக்கும் கொலைகார டாட அம்மக்களை எதிர்கொள்ள கையிலெடுத்திருக்கும் இன்னொரு ஆயுதம் நீங்கள். உங்களைப் போல கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கொலைக்கருவியாக பயன்பட்ட இன்னொரு அரசியல் இயக்குனரை காட்டுங்கள் பார்ப்போம்.

  45. Ambedh Sitharth
    ‎////இதனாலெல்லாம், யாரையும் குற்ற்ப்படுத்திவிட நான் முனையவில்லை. முதலாளித்துவத்தில் பங்கெடுத்துக் கொண்டே தான் அதை விமர்சிக்கவும் முடியும் என்ற சூழலை விளக்க முயற்சிக்கிறேன்.////

    முதலாளித்துவத்துடன் பங்கெடுத்துக்கொள்வது என்பது முதலாளிய நிறுவனங்களில் பனிபுரிவதோ, ஆலைகளில் வேலை செய்வதோ அல்ல. அத்தகையவர்கள் எல்லாம் முதலாளிகளால் சுரண்டப்படுபவர்கள். முதலாளியம் மக்களை சுரண்டுவதற்கு துணை நிற்பது அல்லது அதை நியாயப்படுத்துவது தான் அதனுடன் பங்கெடுத்துக்கொள்வதாகும். அதாவது உங்களைப் போல படமெடுத்து நியாயப்படுத்தும் வேலை தான் முதலாளித்துவத்துடன் பங்கெடுத்துக்கொள்வதாகும்.

  46. Ambedh Sitharth ‎///டாட்டாவை எதிர்த்தும் பேசுவேன், எழுதுவேன், படமும்(சுயாதீன்) எடுப்பேன். முதலாளிகளிடம் வேலை செய்து, கூலியும் பெற்றுக் கொண்டு, முதலாளிகளையும் எதிர்க்கவும் செய்வதே, எனக்கு தொடர்ந்து இயங்குவதற்கான ஒரே வழி///

    டாடாவுக்கு சொம்பும் அடிப்பேன் சங்கும் ஊதுவேன் என்கிறீர்கள். இதைக் கேட்கும் போது எப்படி இருக்கிறது தெரியுமா ? ஹன்சி குரோனியே பற்றி புதிய கலாச்சாரம் இதழில் வந்த வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

    “நான் மனைவியை நேசிக்கிறேன், காதலியையும் நேசிக்கிறேன்.”, “நேர்மையை நேசிக்கிறேன், லஞ்சத்தையும் நேசிக்கிறேன்.”, “புரட்சியை நேசிக்கிறேன், சொத்தையும் நேசிக்கிறேன்.”, “சேவையை நேசிக்கிறேன், சன்மானத்தையும் நேசிக்கிறேன்” என்று பலவாறாக நம் காதில் ஒலிக்கிறது இந்தக் கவிதை.https://www.vinavu.com/2012/06/16/do-you-know-them/

    முதலாளிகளிடம் சோரம் போனவர்கள் முதலாளித்துவத்தை என்றைக்கும் எதிர்க்க முடியாது மேம்

  47. Leena Manimekalai ‎@ambedh, நீ அவனா? வினவு மாஃபியாவுக்கு pay pal il கப்பம் கட்டியாச்சா? உங்க புரச்சிக்கும், சனத்துக்கு என்ன சம்மந்தம்? ஐ டி முதலாளிகள் எல்லாம் உங்கள நல்லா வச்சு காப்பாத்தாராய்ங்க போலிருக்கு…என்ன ஃபேக் ஐ.டியா? விலாசமெல்லாம் இருக்கா? வூட்டில புரச்சிக்குப் போறேன்னு சொல்லிட்டுத் தான் வந்தீங்களா? விவசாயிங்க கிட்ட உண்டியல் குலுக்கித்தான் இம்மாம்பெரிய புரச்சித்தளம் நடத்தறீங்களா? ஒரு தனிநபரை வசைபாடி, போலீஸ்தனம் பண்ணி பத்து கட்டுரைப் போடற்துக்கு ம.க.இ.க வுக்கு வெட்கம் இல்ல? தூ!

    • வினவோட ஆணாதிக்க மொழி, அதுல எனக்கு உடன்பாடு இல்லன்னு பிதற்றுகிறவர்கள், லீனாவின் இந்த மொழிக்கு என்ன பேருன்னு சொல்லுவாங்களா? நத்திப்பிழைக்கிற ஜென்மத்துக்கு ரோஷம் வேற ஒரு கேடு! தூ!

  48. Ambedh Sitharth ‎///டாட்டா ஆதிவாசிகளின் மீது ஏவும் மனித உரிமை மீறல்களை என் சொந்த வெளியில், என் சொந்த படத்தில் பேசுவேன். எதிர்ப்பேன்.///

    நான் ரொம்ப நல்லவன்னு ஒரு படம் எடுத்து தாங்கம்மான்னு நித்தி கேட்டா டாடாவுக்கு எடுத்த மாதிரி இவனுக்கும் ஒரு படத்த எடுத்து கொடுத்துட்டு அப்புறமா பிடதிக்கு வெளியில வந்து அவன் ஒரு பொறுக்கின்னு சொல்லுவீங்கன்னு எடுத்துக்கலாமா? அதே மாதிரி மோடிக்கும் ராஜபக்சேவுக்கும் கூட எடுத்துத் தருவீங்களான்னு சொல்லிருங்க மேம்.

    • லீனா மேடத்தின் வெளியிட்ட அத்தனை ஆவணப்படங்களைப் பார்த்துவீட்டீர்களா…
      பார்த்தப்பின் வக்காலத்து வாங்கவும்..லீனா எடுத்தப் படங்கள் எத்தனை என்பது உங்களுக்கு தெரியுமா..

      கலைஞனின் படைப்புகளை பார்த்தப்பின் விமர்சனம் செய்யவும் அதுவே சாலச்சிறந்து. பார்க்காமலே விமர்சனம் செய்வது குருடர் யானை கதை போல நண்பா

      • கல்நெஞ்சம், நீங்க ஏன் அம்பேத் இதுவரை வினவில் (மற்ற பதிவுகள் உள்ளிட்டு) எழுதிய எல்லா பின்னூட்டத்தையும் படித்து பின்னர் அவருடைய அனைத்து பின்னூட்டங்களுக்கும் ஒவ்வொண்ணாய் பதில் சொல்லக்கூடாது?

        ஏன் வினவு எழுதிய 1500 பதிவுகளையும் படித்து அனைத்து பதிவுகளிலும் பின்னூட்டம் போடக்கூடாது

        தமிழில் உள்ள அனைத்து சொற்களையும் ஒரு முறை எழுதிப்பார்த்துவிட்டு அப்புறம் தமிழில் எழுதக்கூடாது

        • “Political correctness காக தன் வாழ்க்கையை பணயம் வைப்பது காந்தியோடும், முதல் தலைமுறை கம்யூனிஸ்களோடும், நக்சல்களோடும் முடிந்துவிட்டது” என்று கூறுகிறார் பொன்ராஜ்.

          நான் கட்டிய கல்லூரியில் என்னுடைய மொழியான ஆங்கிலத்தைப் படித்து நான் விட்ட ரயிலில் ஊர் ஊராகப் போய் என்னையே வெளியேறச் சொல்லிப் போராடுகிறாயா?” என்று பிரிட்டிஷ் வைஸ்ராய்கள் கூட காந்தியைக் கேட்டதாகத் தெரியவில்லை.

          இது எங்குள்ள வரிகள் தெரியுமா…

          • கோச்சுக்காதீங்க பாஸ்,

            இதெல்லாம் எப்படி தேவையில்லயோ அது போலத்தான் போலவே லீனாவின் எல்லா படைப்பையும் பார்த்துவிட்டுதான் கருத்து சொல்லனும் என்ற கருத்துதம் .

            இந்தேரம் அதுவே உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்

            இங்கே விமர்சனத்துக்கு உள்ளாகியிருப்பது படைப்பு மட்டுமல்ல, தன்னுடைய முற்போக்கு கொள்கைகளுக்கு பச்சைத்துரோகம் இழைத்த படைப்பாளியும்தான். இன்று ஏன் துரோகம் செய்தாய் என்பதறக்கு நான் நேற்றுவரை துரோகம் செய்யவில்லை என்பது பதிலாகாது. அநை ஏற்றுக்கொள்ளவும் முடியாது.

            அவர் இதுவரை செய்யதெல்லாம் உருப்படியாகவே இருப்பதாக ஒரு வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும், இந்த டாடாவின் இந்த அநீதிக்கு துணைபோயிறுப்பதை அது இரத்து செய்யுவிடாது.

            அதை எடுத்துச்சொன்னபிறகும், குறைந்தபட்சம் சுயவிமர்சனமில்லாமல் தான் செய்வதை நியாயப்படுத்துவதோடும் இல்லாமால், இங்க எவன் யோக்கியன் என்று கேள்வி எழுப்புவதின் மூலமாக தான் தான் இதுவரை செய்த அனைத்தையுமே ஒரேயடியாக பிழைப்புவாதம் என்ற கொள்கையின் அடிப்படையில் மட்டுமே என்று பிகரகடனப்படுத்தியிருக்கிறார்.

            இதெல்லாம் உங்களுக்கு புரியாதது அல்ல. புரிந்திருக்கும், ஆனாலும் ஏனோ ஏற்க மனமில்லை!

            • ///கோச்சுக்காதீங்க பாஸ்,
              இதெல்லாம் எப்படி தேவையில்லயோ அது போலத்தான் போலவே லீனாவின் எல்லா படைப்பையும் பார்த்துவிட்டுதான் கருத்து சொல்லனும் என்ற கருத்துதம் .
              இந்தேரம் அதுவே உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்///

              தலைவா நான் மேற்கோள் காட்டியவை வினவு லீனாவைப் பற்றி எழுதிய இந்த கட்டுரையின் இரு பத்திகள் .. படம்தான் பார்க்கவில்லை என்று நினைத்தேன்.. இப்பதான் தெரியுது இந்த கட்டுரையாக் கூடப் படிக்கவில்லை என்று

              உங்களைக் காப்பாற்ற அசடுகளும், அரை வேக்காடுகளும் தவிர ஒரு நக்கல்பாரிகளும் மொக்கையிஸ்டுகளும் இல்லை..

              • கிழிஞ்சுது போ, அவரா நீரு?

                உங்க தகரடப்பா தத்துவமான கருத்து சொல்லனும்னா லீனாவோட எல்லா படத்தையும் பாக்கனும்கறத நீரே மறுத்து பேசும்போதே தெரிஞ்சிருக்கனும் நீர் ஒரு மொக்கை பீசுன்னு.. உங்களையெல்லாம் மதிச்சு பதில் வேற சொன்னேன் பாருங்க..

                தலையெழுத்து..

                தியாகுவை பத்திவிட்டதுலேருந்து இங்க உளர ஆளில்ல்லாம போச்சேன்னு நினைச்சேன்…. அண்ணே நீங்க வந்திட்ட்டீங்க..போய் தனியாவர்த்தனம் வாசிங்க

                எழவு கட்டுரையும் புரியல, மறுமொழியும் புரியல ஆனா கருத்து சொம்போட கிளம்பி வந்திட்டாங்க..

                சரியான காமெடி பீசுகளப்பா!!!

              • கல்நெஞ்சம்ணே..
                கலாய்ச்சிட்டீங்களாகும் 🙂
                மொதல்ல ஊசி சொன்னா மாதிரி வினவோட ஆயிரம் கட்டுரைகளையும் படிச்சுட்டு வாங்க. கம்யூனிசம், சீனா ,ரஷியா ,கம்யூனிசம் தோத்தது ஏன், முதலாலித்துவம் நொண்டியடிக்கறது ஏன், எட்சட்ரா எட்சட்ரா எல்லாத்துக்கும் திரும்பத் திரும்ப பதில் சொல்ல முடியாது.

                இந்தியாவுக்கு ரத்தம் சிந்தாம சுதந்திரம் கிடைச்சதுன்னு சொன்னீங்க. ரத்தம் சிந்தி, சித்திரவதை அனுபவிச்சு, பெண்டு பிள்ளைகளை வெள்ளை நாய்களுக்கு இரையாக்கின கொடுமைகளைக் கண்டு பரிதவிச்சு, அடிவாங்கி, வெகுண்டெழுந்து அடிகொடுத்து உயிர்த்தியாகம் பண்ண போராளிகளோட ஆவியெல்லாம் இன்னேரம் கண்ணீர் சிந்திக்கிட்டிருக்கும்.

                நான் தற்கொலை போராட்டங்களை ஏத்துக்க மாட்டேன். அதை இமாலயத்தவறுன்னும் சொல்வேன். ஆனா அப்படி உயிர்நீத்தவங்கள வயித்துப்பொழப்புக்காகவும் காதல் தோல்விக்காகவும் செத்தாங்கன்னு சொல்லி தியாகத்தை கேவலப்படுத்தறது ஒரு ஈனத்தனம்.

                ஒரு விஷயம் சொன்னா விருப்பு வெறுப்பு இல்லாம அதை முழுமையான பார்வையில பார்க்கத் துணிவிருக்கணும். அவுட் ஆஃப் ஃபோகஸ்ல பார்க்கக் கூடாது. அப்புறம் மஞ்சப் பெயிண்டு அடிச்ச லாரியைப் பார்த்தா, ஆவூன்னா.. கூட்டங்க்கூட்டமா கெளம்பிர்ராய்ங்கன்னு சொல்லத்தோணும்.

  49. Leena Manimekalai கொஞ்சம் மேல போட்டுக் குடுத்தீங்கன்னா, வினவின் வொலகப்புரச்சி என்ற படத்தை எடுக்கத்தயார். :P.

    Leena Manimekalai உங்க பேரு, விலாசம் குடுத்தீங்கன்னா, டீல் பேச உங்க வூட்டுக்கு வரேங்க! புரச்சி லேட்டாயிடுச்சுன்னா! இந்த வுலகம் தாங்காது தம்பி

  50. Ambedh Sitharth என்ன மேம் இது நீ மட்டும் டாடா உப்பு திங்கலையா என்கிற ரேஞ்சுக்கு
    இறங்கிட்டீங்க ? பதில் சொல்ல முடியலைன்னா எல்லோரும் இதைத்தான் செய்கிறார்கள். மூட்டை மூட்டையாக தவறுகளை வைத்துக்கொண்டிருக்கும் நீங்கள் மட்டும் வேறு மாதிரியா இருக்க முடியும் ?எனது அரசியல் ரீதியான கேள்விகளுக்கு நீங்கள் எப்படியெல்லாம் பதில் கூறியிருக்கிறீர்கள் என்பதை பலரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    அப்புறம் உங்களை சக்கையா உரிச்சு வினவுல ஒரு பதிவு வந்திருக்குல்ல அங்க செம கூட்டமாம். ஆயிரக்கணக்கான நம்ம சொந்தங்கள் எல்லாம் இதை படிக்காம விட்றக்கூடாதுல்ல அதனால இதையெல்லாம் அப்படியே காப்பி பண்ணி அங்க போட்டுடுறேன் அங்க வாங்க மேம் நம்ம கச்சேரியை அங்க வச்சிக்குவோம்.

    அப்புறம் ’கூலி’ வேலை செய்து வாழ்க வளமுடன்.

  51. லீனா அவர்களின் விளக்கத்தின் படி , ஈழ தமிழர்களை நேரடியாக கொன்ற ராஜ பக்சே , இப்பொழுது செயல்படுத்தும் தமிழர் நல வாழ்வு திட்டங்கள் , உண்மையிலுமே கொஞ்சம் தமிழர்களுக்கு கல்வி, வேலை, அடிப்படை வசதி செய்து தந்தால், தமிழர்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றம் பற்றி ஒரு குறும் படம் எடுக்க தயாரா?
    இத்தகைய நல வாழ்வு திட்டங்களினால் தான் ராஜ பக்சே கொஞ்சமாவது தான் செய்த தவறுகளுக்கு கைமாறு செய்ய இயலும் என்று விளக்கம் அளிப்பாரா?

    • Chilly லீனாவின் செங்கடல் என்னும் ஆவணப்படம் தினமும் செத்துப்பிழைக்கும் ஈழத்தமிழனைப் பற்றியது…

      2003 Mathamma
      2004 Parai
      2004 Break the Shackles
      2004 Love Lost’
      2005 Connecting Lines
      2005 Altar
      2006 Waves After Waves
      2007 A Hole in the Bucket
      2008 Goddesses
      2011 Sengadal

      கலைஞனின் படைப்புகளை பார்த்தப்பின் விமர்சனம் செய்யவும் அதுவே சாலச்சிறந்து.

      • விக்கீபீடீயாவுலேருந்து எடுத்து போட்டாச்சா 🙂

        இதுதானா ஒங்க டக்கு :))))

        • ஊசி,
          இதுக்குப் பேருதான் ஆவணப்படம் பார்க்கறதா..!!
          இது தெரியாம வெலவெலத்துப் போயிட்டேன். கல்நெஞ்சக்கார அண்ணன் எல்லாப் படத்தையும் பார்த்து பாசிட்டிவ் விமர்சனங்கள அடுக்கிவச்சிருக்காரோன்னு நம்பிட்டேன். 🙂

          • ஊசி..ரிஷி..
            டைப்படிக்க கொஞ்சம் சோம்பறித்தனம்..
            லீனாவின் கடைசி நான்கு படங்களைப் நான் பார்த்தேன்..
            படைப்புகளைப் பார்க்காமலே கருத்து செல்லுவர்களுக்கு வேறு என்னத்தை சொல்லமுடியும்.

            • ஊஹூம் அதெல்லாம் ஒத்துக்க முடியாது, நீங்க எல்லா படத்தையும் பாத்து நோட்ஸ் எடுத்துகிட்டுதான் கருத்து சொல்லனும். 🙂

              • நீங்க என்ன காரல் மார்க்ஸ் மூலதனம் புக்கு படிச்சா கருத்து சொல்லுறிங்க..

                • ஏன் பாஸ் சேம் சைடு கோல் போடுறீங்க? எல்லா படத்தையும் பார்த்திட்டுதான் கருத்து சொல்லனும்கறது நீங்க இங்க பல முறை சொன்னது.

                  எப்படி இந்த பதிவுக்கு மூலதனம் படிச்சிட்டு கருத்து சொல்ல வேண்டீய அவசியம் இல்லயோ, அது போலவே லீனாவின் எல்லா படைப்பையும் பார்த்துவிட்டுதான் கருத்து சொல்லனும் என்ற கருத்துதம் தேவையற்றது.

                  இது உங்களுக்கு புரியறதுக்காக உங்க மொழியிலேயே உங்களை கலாய்த்தேன்

                  கோச்சுக்காதீங்க 🙂

  52. தியாகு “ஆனால் காட்டில் ஆரம்பிக்கப்படும் தொழிற்சாலைகள் அந்த மக்களின் வாழ்க்கையை முற்போக்காக மாற்றி அமைக்க விடுவதில்ல நம்ம நக்சல்பாரிகள் அதில் இருந்து வெளியே வந்து நக்சல் பாரி அரசியலை முழுமையாக புரிந்து கொண்டு வெளியே வந்தவர்தான் நியோகி

    மக்களின் கனிமவளங்கள் மக்களுக்கு சொந்தம் -அதை உற்பத்தி செய்யாமல் மலைகளுக்குள்ளும் காடுகளுக்குள்ளும் வைத்திருக்க சொல்வது பிற்போக்குத்தனம் ” இவைகள் அந்த மக்களின் நிபந்தனையின் கீழ் நிகழ்த்தப்பட வேண்டும். ஒரு இனக்குழு தன்னுடைய வளத்தைப் பாதுகாப்பதிலும் பயன்படுத்துவதிலும் அவர்களுக்கான சுயநிர்ணய உரிமை கொண்டவர்கள். அவர்கள் கோமணத்துடன் இருந்துவிட்டுப் போகட்டும்.
    உலகமயமாதலில் நிதிநிறுவனங்கள் எவ்வாறு தனது அங்கியை போடு என்று நிர்பந்திப்பது போலநீங்கள் அவர்களின் வளத்தின் மீதும் அவர்களின உலகக் கண்ணோட்டத்தின் மீது உங்கள் மேலாண்மை (கலாச்சார பண்பாட்டு ) திணிக்காதீர்.
    இதோ பாருங்கள் உழைக்கும் மக்களிடையே எவ்வாறு வர்க்க பேதம் உருவாகின்றது. இதில் இந்த சமூதாய அமைப்பை பாதுகாத்துக் கொள்ளும் சேவர்களை உருவாக்கிக் கொள்கின்றது என்று விளக்கிய ஏழுதிதற்கு “டுநநயெ ஆயniஅநமயடயi ‎ஊநலடழn ஐடடயமையiஇ நான் சொல்லாத்தையெல்லாம இட்டுக்கட்டி ஏதேதோ சொல்லும் உங்கள் கருத்தியல் வாந்திக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. உஸ்ஸ்ஸ்ஸ் சப்பா! மார்க்ஸ் இருந்தா தூக்குப் போட்டு தொங்குவாரு…”” என பொறுப்பற்ற விதமாக அலட்சியப்பதில்.

Leave a Reply to கல்நெஞ்சம் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க