செய்தி -82
அமெரிக்காவின் பிரபல துரித உணவு நிறுவனமான மெக்டானல்ட்ஸ் தனது சைவக் கடைகளை இந்தியாவில் உள்ள ‘புனித ஸ்தலங்களில்’ திறக்கப் போகிறது.
மெக்டானல்ட்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டு, அசுர வளர்ச்சியைப் பெற்று, உலகெங்கிலும் பரவி, மொத்தம் 119 நாடுகளில் 33,000 துரித உணவு சங்கிலித் தொடர் கடைகளை திறந்திருக்கிறது. இந்த பிராண்ட் பெயரை பயன்படுத்தி கடை நடத்த முன்வருபவர்கள் ரூ 25 லட்சம் பணமும், லாபத்தில் 2 சதவீதமும் மெக்டானல்ட்ஸ்க்கு கொடுக்க வேண்டும்.
சத்துக்கள் எல்லாம் கொல்லப்பட்டு விட்ட பர்கரையும், உடலில் கொழுப்பை சேர்க்கும் இறைச்சி அல்லது உருளைக் கிழங்கு வருவலுடன் கோகோ கோலா சாப்பிட்டு சில நூறு ரூபாய்கள் செலவில் உடலை கெடுத்துக் கொள்ள வழி செய்பவைதான் மெக்டானல்ட்ஸ் கடைகள்.
உலகம் முழுவதும் மெக்டானல்ட்ஸின் புகழ் பெற்ற உணவு மாட்டிறைச்சி பர்கர் தான். இந்தியாவில் 1996-ம் ஆண்டு மெக்டானல்ட்ஸ் கடைகள் தொடங்கப்பட்டபோது இந்தியர்களின் மத உணர்வுகளை மதித்து இந்துக்கள் ‘புனிதமாக’ கொண்டாடும் மாட்டின் இறைச்சியால் செய்யப்படும் பர்கரை தியாகம் செய்தது மெக்டானல்ட்ஸ்.
இந்தியர்களை பார்த்து ஒரு அமெரிக்க நிறுவனம் நடுங்கி பணிந்து விட்ட இந்தப் புரட்சியை எதற்கு சமர்ப்பணம் செய்வது? இந்து தத்துவ ஞான மரபிற்கா அல்லது இந்தியா நடுத்தர வர்க்கத்தின் டாம்பீக கலாச்சாரத்துக்கா?
இந்திய சந்தைக்காக அது உருவாக்கிய மெக் ஆலூ டிக்கி (உருளைக்கிழங்கு வடை) அதன் மொத்த இந்திய வருமானத்தில் 25 சதவீதத்தை தருகிறது என்பது இந்திய ஞான மரபின் வலிமையையும் மெக்டானல்ட்ஸின் சந்தைப்படுத்தும் திறனையும் காட்டுகிறது.
அமெரிக்காவில் சாதாரண கடைகளாக மதிக்கப்படும் மெக்டானல்ட்ஸ் துரித உணவுக் கடைகள் இந்தியாவில் நடுத்தர வர்க்க மற்றும் மேட்டுக்குடி குடும்பங்களின் கௌரவ அடையாளங்களாகியிருக்கின்றன.
நம் தட்பவெட்ப நிலைக்கும், உற்பத்தி முறைக்கும், உடல் அமைப்பிற்கும் சற்றும் பொருந்தாத உணவுகளை நம் மீது திணிப்பதுடன் நம்மை அவற்றிற்கு அடிமையாக்கும் அனைத்து மோடி மஸ்தான் வித்தைகளையும் மெக்டானல்ட்ஸ் செய்கிறது.
இந்தியாவில் தனது சந்தையை மேலும் விரிவாக்க இப்போது இன்னொரு தியாகத்தையும் செய்ய முன்வந்துள்ளது மெக்டானல்ட்ஸ். இந்தியாவின் கோவில் நகரங்களில் கூடும் கூட்டங்களை பார்த்த அந்நிறுவனம் காஷ்மீரில் உள்ள வைஷ்ணவிதேவி கோவில் அருகிலும், பஞ்சாப் பொற்கோவில் அருகிலும் வெஜிடேரியன் கடைகளை திறக்க முன் வந்துள்ளது.
ஏற்கனவே சப்வே, டோமினோஸ் பிட்சா போன்ற போட்டி சங்கிலித் தொடர் துரித உணவுக் கடைகள் சைவக் கடைகளை திறந்துள்ளன. மெக்டானல்ட்ஸ் அவர்களிடமிருந்து வேறுபட்டு வழிபாட்டுத் தலங்களின் புனிதத்தை காசாக்கும் உத்தியை வகுத்து வெஜிடேரியனாக மறு அவதாரம் எடுக்கிறது.
வைஷ்ணவி தேவி கோவிலுக்கு பல முறை புனித யாத்திரை போய் வந்துள்ள மெக்டானல்ட்ஸின் இந்தியக் கூட்டாளி விக்ரம் பக் ஷி, “அங்கு வருகை தரும் 10 லட்சத்துக்கும் அதிகமான யாத்திரிகர்களுக்கு சேவை செய்ய முறைப்படுத்தப்பட்ட உணவகங்கள் எதுவும் இல்லை. ஒவ்வொரு முறை போகும் போதும் அங்கு கடை திறக்க வேண்டும் என்ற எனது விருப்பம் வலுத்துக் கொண்டே போனது” என்கிறார்.
அமெரிக்க நிறுவனங்கள் இந்திய ஞானமரபை சுவீகரிக்கும் இந்த வேகத்தில் நாளையே பழனியில் பஞ்சாமிருதத்திற்கு பதில் பர்கர் பிரசாதமாக கொடுக்கப்படலாம். சாமி அதேதான் என்றாலும் பிரசாதம் மட்டும் அமெரிக்க தயாரிப்பு! ஃபாரின் பொருட்கள் என்றால் வாய்பிளக்கும் மக்கள் பிரசாதமும் ஃபாரின் என்றால் அவர்களது பக்தி உயரும் என்பது இந்து மதத்திற்கு கிடைத்த வெற்றியல்லவா?
இதையும் படிக்கலாம்
- McDonald’s: பிள்ளை பிடிப்பவர்களின் உணவகம்! – கலையரசன்
- McDonald’s ready to open veg-only outlet in Vaishno Devi
- Holy cow: McDonald’s goes spiritual the desi way
____________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
- மானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் !!
- சாப்பாட்டு ராமன்களின் சோத்துக் கட்சி!
- யார் தமிழன்? எவை தமிழர் உணவு?
- பட்டினிச் சாவின் விளிம்பில் இந்தியக் குழந்தைகள்: நாட்டிற்கே அவமானம்!