privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅணுவுலையை காப்பாற்றவே தடியடி! பாசிச ஜெயாவின் ஊளைக் 'கனிவு'!

அணுவுலையை காப்பாற்றவே தடியடி! பாசிச ஜெயாவின் ஊளைக் ‘கனிவு’!

-

செய்தி -108

கூடங்குளம்-தடியடி

கூடங்குளம் போலீஸ் தடியடியை நியாயப்படுத்தி ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையை அனைத்து ஊடகங்களும் பக்திப் பரவசத்தோடு வெளியிட்டிருக்கின்றன. அந்த அறிக்கையில் அணு உலை பாதுகாப்பானது, அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய, மாநில அரசுகள் நியமித்த வல்லுனர் குழுக்கள் அளித்த அறிக்கைகளை அடுத்து அப்பகுதி மக்களின் வளர்ச்சிப் பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதை சொல்கிறார், ஜெயா.

இந்த 500 கோடி எதற்கு? கூடங்குளம் அணுமின் நிலையம் வந்தால் அப்பகுதியில் வேலை வாய்ப்பு, வளர்ச்சி எல்லாம் ஏற்படும் என்று அளந்து விட்டு இந்த ‘லஞ்சப்’ பணம் எதற்கு? போராடும் மக்களை திசைதிருப்பி, உள்ளூர் பஞ்சாயத்து மற்றும் அரசியல் பிரமுகர்களை சரிக்கட்டவே இந்த 500 கோடி பம்பர் பரிசு என்பது பாமரனுக்கும் தெரியும்.

பிறகு சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து வழக்குகளையும் ஆராய்ந்து அணுமின்நிலையம் செயல்படலாம் என்று தீர்ப்பினை அளித்த பிறகு அணுமின்நிலையத்தை முடக்குவது பொருத்தமாகாது என்றும் ‘சட்டத்தின்’ ஆட்சியை நினைவு படுத்துகிறார் ஜெயா. சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டுமென்று இதே உயர்நீதிமன்றம் சொன்ன பிறகும் நடுராத்திரியில் உச்சநீதிமன்ற நீதிபதியை எழுப்பி தடை வாங்க முயன்றவர்தான் இந்த ஜெயலலிதா. பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தையே வாய்தா மன்றமாக ஆக்கி வாய்தா ராணி என்று பட்டமும் பெற்றவர் நீதிமன்றத்தை எதிர்க்கக் கூடாது என்று சொல்வதற்கும் சாத்தான் வேதம் ஓதுவதற்கும் என்ன வேறுபாடு?

போபால் விபத்து தொடர்பாக கூட இந்திய, அமெரிக்க நீதிமன்றங்கள் கைவிரித்து விட்டன. கொலைகார ஆண்டர்சனை கைது செய்ய முடியாது என்றும் கூறிவிட்டன. இதை ஏற்றுக் கொண்டு போபால் மக்கள் அமைதியாக வாழ வேண்டுமென்று ஒருவர் சொன்னால் அது எத்தனை அயோக்கியத்தனமானது? அணுமின்நிலைய விபத்தும், அதனால் கொல்லப்பட்ட, நடைபிணங்களாக வாழும்  மக்களும் பல்வேறு இரத்த சாட்சியங்களாக உலகம் முழுவதும் இருக்கும் போது கூடங்குளம் பகுதி மக்கள் மட்டும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்று தங்களையே பலி கொடுப்பதற்கு ஒப்புதல் கொடுக்க வேண்டுமா? நீதிமன்றம் தீர்ப்பு கூறிவிட்டால் யாரும் போராடக்கூடாது என்பது எந்த ஊர் நியாயம்?

“தங்களையும், அணுமின்நிலையத்தையும் காப்பாற்ற வேறு வழியின்றி போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, கூட்டத்தைக் கலைத்தனர்” என்கிறார் ஜெயலலிதா.  இடிந்தகரையிலிருந்து புறப்பட்ட மக்கள் வெள்ளைக் கொடிகளுடன் அமைதி வழியில் முற்றுகை நடத்துவதாகத்தான் அறிவித்தார்கள், செய்தார்கள். அவர்கள் அமைதி வழியில் போராடுகிறார்கள் என்பதை இப்போது அல்ல கடந்த ஓராண்டுகளாகவே பார்க்கிறோம். அப்படி இருக்கும் போது வன்முறையை யார் கட்டவிழ்த்தார்கள்?

அணிதிரண்டு வந்த மக்களிடம் பேசிய போலீசு அதிகாரிகள் அனைவரும் 144 தடையுத்தரவு போடப்பட்டிருக்கிறது, கலைந்து செல்லுங்கள் என்றுதான் மிரட்டியிருக்கிறார்கள். இது தொலைக்காட்சிகளிலும் வந்திருக்கிறது. போராடவே கூடாது என்று தடை போட்டு விட்டு பிறகு வன்முறை என்று திரிக்க வேண்டிய அவசியம் என்ன?

அணுமின்நிலையம் வந்தால் அப்பகுதி மக்கள் அனைவரின் வாழ்க்கையும் மரண அபாயத்தில் தள்ளப்படும். அந்த அபாயத்தை எதிர்த்து போராடுவதை ஒடுக்கி அணுமின்நிலையத்தை காப்பாற்றுகிறோம் என்றால் என்ன பொருள்? அணுமின்நிலையம் வந்தாலும் மரணம், அதை எதிர்த்து போராடினாலும் மரணம் என்று மிரட்டுவது யார்?

இத்தனை ஆயிரம் மக்களது போராட்டத்தை ஒடுக்குவதற்காக போலீசு நடத்திய திட்டமிட்ட தாக்குதல்தான் அந்த தடியடி. இதைத்தான் நாசுக்கான நயவஞ்சக மொழியில் பாசிச ஜெயலலிதா நியாயப்படுத்துகிறார். இதற்கு அந்தப் பகுதி மக்கள் அனைவரையும் கூண்டோடு கைலாயம் அனுப்பிவிட்டு அணுமின்நிலையத்தை சேமமாக நடத்தலாமே?

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: