privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்கூடங்குளமும், த்ரிஷாவின் கல்யாணக் கவரேஜும்!

கூடங்குளமும், த்ரிஷாவின் கல்யாணக் கவரேஜும்!

-

ஊடகம்லைப்பை படித்துவிட்டு கோபத்துடன் காறி உமிழத் தோன்றுகிறதா? கொஞ்சம் நில்லுங்கள்.

சந்தேகமே வேண்டாம். வரும் வாரம் வெளியாகும் ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் உள்ளிட்ட வார இதழ்களின் அட்டைப்படக் கட்டுரையாக கூடங்குளம் போராட்டமே இடம் பெறப் போகிறது. அந்தந்த செய்தியாளர்களை பொறுத்தும், அதை ரீ ரைட் செய்யும் உதவியாசிரியர்களின் இலக்கிய அறிவை கணக்கில் கொண்டும் அந்தச் செய்திகள் உணர்ச்சிப்பூர்வமாக அமைந்திருக்கும். புகைப்படக்காரர்கள் எடுத்த  படங்களில் எது ‘மனதை தொடுகிறதோ’, அது செய்தியின் பக்கங்களை அலங்கரிக்கும். ஆனால், அனைவருமே சொல்லி வைத்தது போல் மக்களின் பயத்தை அரசு போக்க வேண்டும் என முடித்திருப்பார்கள். மக்கள் போராட்டம் நியாயமற்றது, அணு உலை தேவை என்பதை பத்திக்குப் பத்தி உணர்த்தியிருப்பார்கள் அல்லது அணு உலை ஆபத்தானதுதான் இருந்தாலும்… என இழுத்திருப்பார்கள்.

மொத்தத்தில் செய்திக் கட்டுரை எப்படி இருந்தாலும் ஒருபோதும் கூடங்குள போராட்ட புகைப்படம் இந்த இதழ்களின் அட்டையை அலங்கரிக்காது. ஏதேனும் ஒரு நடிகையின் படத்துக்கு கீழே அல்லது ஓரத்தில் அநேகமாக எழுத்தில் மட்டும் போராட்டம் தொடர்பான தலைப்பை பொறித்திருக்கிறார்கள். விகடன் மட்டும் விதிவிலக்காக கூடங்குளம் போராட்டப் படத்தை அட்டைப்படமாக போட்டு விட்டது.

வெற்றிலையில் மை போட்டுப் பார்க்காமலேயே இதை கணித்துவிடலாம். ஊடகங்களின் லட்சணம் இப்படி. இதழியல் தர்மம் அப்படி. இதற்கு உதாரணமாக சென்ற மாத இறுதியில் வெளியான அனைத்து வார இதழ்களையுமே எடுத்துக் கொள்வோம். போட்டிப் போட்டுக் கொண்டு அனைவருமே நடிகை த்ரிஷாவின் திருமணம் குறித்த செய்தியையே அட்டைப் படக் கட்டுரையாக வெளியிட்டிருந்தார்கள்.

ராமாநாயுடுவின் பேரனும், பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான சுரேஷ் பாபுவின் மகனும், நடிகருமான ராணாவை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார்… மும்பையில் நிச்சயதார்த்தம்… வைர மோதிரத்தை மணமகன் பரிசாக மணமகளுக்கு அளிக்கப் போகிறார்… என்றெல்லாம் செய்திகளை முந்தித் தந்தன. 05.09.12 தேதியிட்ட ‘ஆனந்த விகடன்’, ராணா எனக்கு ரொம்ப ஸ்பெஷல்த்ரிஷா காதல் கதைஎன்ற தலைப்பை வைத்திருந்தது என்றால், த்ரிஷாவுக்கு டும் டும் டும்வைரக்கம்மல் பிளாட்டின மோதிரம் நிச்சயதார்த்த அறிவிப்பு?’ என்ற தலைப்பை 22.08.12 தேதியிட்ட ‘குமுதம்’ வைத்திருந்தது. ஏறக்குறைய தினமுமே சினிமா செய்திகளை ஒரு பக்கத்துக்கு இப்போது வெளியிட ஆரம்பித்திருக்கும் ‘தின மலர்’ தன் பங்குக்கு பெட்டிப் பெட்டியாக இச்செய்தியை தவணை முறையில் பிரசுரித்து துணுக்கு மூட்டையை கடைவிரித்தது.

இதற்கு ஆரம்பம், துபாயில் நடந்த ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது 2012’ (SIIMA) விழாவில் அருகருகே த்ரிஷாவும், ராணாவும் அமர்ந்திருந்தது. சிரிக்கச் சிரிக்க இருவரும் பேசியது. இந்த படங்களை வைத்துத்தான் இந்த ‘திருமண’ செய்திகள் இறக்கைக் கட்டிப் பறந்தன; பறக்கின்றன. இதற்கு முன்பும் இதே இதழ்கள்தான் விஜய், சிம்புவில் ஆரம்பித்து அமெரிக்க மாப்பிள்ளை வரை பலருடனும் த்ரிஷாவுக்கு திருமணம் நடத்தி வைத்திருக்கின்றன. த்ரிஷா ராணாவையோ இல்லை வேறு யாரையோ திருமணம் செய்து கொள்ளட்டும். அது ஏன் தமிழ் மக்களின் கூட்டு மனக்கவலையாக வேண்டும்?

இப்படி வாராவாரம் செய்திகளை தங்கள் வசதிக்கு ஏற்ப உப்பு, புளி மிளகாயுடன் சமைக்கும் ஊடகங்களை சார்ந்துதான் இணைய உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. த்ரிஷாவுக்கு கல்யாணமாம் என பத்து டுவிட்ஸ், மூன்று ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போட்டு கூகுள் ப்ளசில் ஐந்தாறு மறுமொழிகளை போட்டுவிட்டால் அன்றைய கடமை முடிந்தது என்று நினைப்பவர்களே அதிகம்.

அதனால்தான் கூடங்குளம் போன்ற மக்கள் போராட்டங்களும், சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் பலியான தொழிலாளர்களின் நிலை குறித்து கவலைப்படுவர்களை விட த்ரிஷா திருமணம் குறித்து பேசிக்கொள்பவர்களே இணையத்தில் பெரும்பான்மை. கூடங்குளம், சிவகாசி குறித்து அசட்டுத்தனமாகவோ, திமிராகவோ பேசுபவர்கள்தான் த்ரிஷா திருமணம் குறித்து டீடெய்லாக பகிருவார்கள் என்பது உண்மை. அதனால்தான் தினமலர் கூடங்குளம் போராட்ட உணர்வு குறித்த வெறுப்புணர்வையும், த்ரிஷா குறித்த கிசுகிசு ஆர்வத்தையும் ஒருங்கே பரப்பி வருகிறது. “அனுஷ்கா கொடுத்த ஒயின் பார்ட்டி என்று அனுஷ்கா படம் போட்டிருக்கும் அட்டையில் 90 ரூபாய் கூலிக்கு கருகிய உயிர்கள் – சிவகாசி பயங்கரம் “ என்று போட்டிருக்கிறது குமுதம். குமுதத்தின் ஆபாசமான இந்த அழகியல் உணர்ச்சிதான் உண்மையில் பயங்கரம்.

‘உழைச்சு சம்பாதிச்சு நல்ல நிலைல இருக்கோம்… வாழ்க்கையை அனுபவிக்கிறோம்… அது உனக்கு கசக்குதா?’ என்று கேட்பதும், ‘வேறென்ன செய்ய முடியும் சொல்லுங்கள்’ என பரிதாபமாக கழிவிரக்கத்துடன் நினைப்பதும், இன்றைய வார இதழ்களின் அட்டைப்படக் கட்டுரைகளும் வேறு வேறு அல்ல. ஒரே கம்பியின் நுனி திரிசூலமாக பிரிந்திருப்பது போல்தான் இந்த மூன்றும்.

கூடங்குளம், சிவகாசி பிரச்சினைகளெல்லாம் ஊடகங்களைப் பொறுத்த வரை உள்ளூர் செய்திகள் மட்டுமே. த்ரிஷாவின் கல்யாணச் செய்தியோ தேசியச் செய்தியாக தலைப்பில் இடம் பிடிக்கும். ஆக சமூகச் செய்திகள் உள்ளூர் செய்தியாகவும், ஒரு மூலையில் இருக்க வேண்டிய சினிமா செய்தி தலைப்புச் செய்தியாகவும் இடம் பிடிக்கிறது என்றால்? இடம் கொடுப்பவனை எதைக் கொண்டு திருத்துவது?

நாட்டு மக்கள் பிரச்சினைகளை விட நடிகைகளில் கல்யாணச் செய்திகள்தான் ஒரு தேசத்தில் அதிகம் பேசப்படுமென்றால் அது அடிமைகளின் தேசமா, அறிவார்ந்தவர்களின் தேசமா?

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

  1. பதினோறாம் தேதி பகல் ஒரு மணியளவில் இடிந்தகரை மக்கள் கடலுக்குள் இரங்கிப் போரட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.ஜிடிவி,கலைஞர் செய்திகள்,புதிய தலைமுறை போன்றவை போராட்டக் காட்சிகளை நேரலை செஇதுகொண்டிருக்கிறார்கள்.கனத்த நெஞ்சோடு காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.ஜெயா டிவியில் என்ன வருகிறது என்று பார்ப்போம் என்று திருப்பினால் அதில் Fashion Show காட்சி ஓடிக்கொண்டிருக்கிறது.அப்புறம் சிரிரங்கம் அன்னதானக் காட்சிகள்,கதைகள்.அப்போது தான் தெரிந்தது அம்மாவின் தா(பே)யுள்ளம்.ஊடக தர்மம் என்பது ஒருவகை வக்கிரம்.

  2. பத்து ருபாய் கொடுத்தால் புத்தகத்துடன் பலசரக்கு கடையே வர வேண்டும் என்று எதிர் பார்கும் நாட்டில் வேறு என்ன இழவை போட முடியும் அடுத்து திரிசாவின் முதலிரவு சக்சஸ் என்று கூறுகெட்ட குமுதம் ஒரு கட்டுரை போடும் அதையும் இந்த மக்கள் படிக்கதான் செய்வார்கள்

  3. அநேகமாக, அனுஷ்காவை நாய் கடித்தது பற்றித்தான் எல்லாப் பத்திரிகைகளும் எழுதும்.கூடவே கடித்த நாயோட புகைப்படமும் வரலாம்.ஒரு சுத்தமான மக்கள் போராட்டத்தை விரிவான அலசலோடு விவரிக்க தனக்குத் தகுதி இல்லை என்பதை ஊடக வியாபாரிகள் ஒப்புக்கொள்வதாகத்தான் இந்த பாராமுகத்தைக் கருதவேண்டும்.

  4. பத்திரிக்கைகள் என்னிக்கி உருப்படியான செய்திகளை போட்டுரிக்கு இன்னிக்கி மட்டும் போடா… பத்திரிகைகளும் மீடியாக்களும் என்னைக்குமே முதலாளித்துவத்துக்கும் அவனுகளுக்காக ‘சேவை’ செய்யிற அரசாங்கத்துக்கும் ஆதரவாகத்தான இருந்து வருது… ஏதாவது முக்கியமான மக்கள் போராட்டம் நடக்கும் போது இப்படி ஏதாவது கவர்ச்சியா காட்டி மக்களை மறக்கடிக்கிற வேலைய தான காலாகாலத்துக்கு இந்த பத்திரிக்கைகள் பண்ணிக்கிட்டு வருது. வாங்கி படிக்கிறவங்க இருக்கிற வரைக்கும் இவனுக இப்படி தான் போடுவானுக.

    நாளைக்கே தி.மு.க ஆட்சிக்கு வந்தா கலைஞர் தொலைக்காட்சிகள்ல கூடங்குளம் போராட்டம் பத்தி ஒரு செய்தியும் வாராது. மாறாக ஜெயா தொலைக்காட்சிகள்ல கூடங்குளம் போராட்டம் பத்திய செய்திகள் தான் அதிகம் வரும்.

    சுருக்கமா சொன்னா பன்னாட்டு முதலாளிகளுக்கு காவல் காக்கும் ‘சொறி நாய்கள்’ தான் இந்த மத்திய அரசு… அவனுகளுக்கு சொறிஞ்சி விடுற நாய்கள் தான் இந்த மாநில அரசும் பத்திரிக்கைகளும் மீடியாக்களும்…

  5. நாய் நன்றியுள்ள ஜீவன். சொறி பிடித்தாலும் வெறி பிடித்தாலும் இந்திய அரசைப் போல் ஒருபோதும் நடக்காது. தயவு செய்து நாய் வர்க்கத்தை கேவலப்படுத்தாதீர்கள்.

  6. கூடங்குளம், சிவகாசி பிரச்சினைகளெல்லாம் ஊடகங்களைப் பொறுத்த வரை உள்ளூர் செய்திகள் மட்டுமே. த்ரிஷாவின் கல்யாணச் செய்தியோ தேசியச் செய்தியாக தலைப்பில் இடம் பிடிக்கும். ஆக சமூகச் செய்திகள் உள்ளூர் செய்தியாகவும், ஒரு மூலையில் இருக்க வேண்டிய சினிமா செய்தி தலைப்புச் செய்தியாகவும் இடம் பிடிக்கிறது என்றால்? இடம் கொடுப்பவனை எதைக் கொண்டு திருத்துவது?

    நாட்டு மக்கள் பிரச்சினைகளை விட நடிகைகளில் கல்யாணச் செய்திகள்தான் ஒரு தேசத்தில் அதிகம் பேசப்படுமென்றால் அது அடிமைகளின் தேசமா, அறிவார்ந்தவர்களின் தேசமா?

    சாட்டை அடி கொடுத்திங்க….

  7. வினவுவின் ஆதங்கம் ஒரு சிலருக்கு சிலருக்கு சிந்தனையை கிளறிவிடலாம் ஆனால் தமிழக இதழியல் உலகம் அதுபற்றி சிந்திக்கும் நிலைக்கு இப்போதைக்கு வருமா என்பது சந்தேகமே. சூழ்நிலை அப்படி அமைந்திருக்கிறது. நகரம் சார்ந்த 10 சதவீத கற்றறிந்த மக்கள் மட்டுமே இவற்றை புரிந்துகொள்ளும் நிலையில் இருக்கின்றனர் கிராமங்கள் நயந்தாராவுக்கும் அனுஸ்காவுக்கும் கோவில் கட்டும் நிலையிலிருந்து மாறவில்லை, இன்னும் ஒரு சாரார் அரசியலில் தொண்டனாக தீக்குளிக்கும் நிலையிலிருந்து மாறவில்லை. இதை கருத்தில்க்கொண்ட கருணாநிதி போன்றவர்கள் கட்சியைக்கூட குஷ்புவிடம் அடகு வைக்கும் மனநிலையில் கண்கூடாக காண முடிகிறது. ஜெயலலிதாவும் தேர்தல் காலங்களில் சினிமா நட்சத்திரங்களை நம்பியது கண்கூடு, இந்த பலவீனத்துக்கு பத்திரிகைகள் விதிவிலக்கல்லவே! அடிப்படையில் திராவிட அரசியல் அழுக்குக்களுக்கு நீரூற்றி வளர்த்துக்கொண்டிருக்கின்றன.

    இளைய சமூகத்தை கவர்ந்து தொடர்ச்சியாக முன்னணியில் நின்று பத்திரிகைகள் பொருளீட்ட வேண்டும் எவர் எப்படிபோனால் அவர்களுக்கு என்ன. குமுதம் விகடன் சமூக அக்கறை கட்டுரைகளையும் இலக்கியத்தையும் பிரசுரிக்கபோன்னால் குங்குமம் போன்ற அரசியல் பின்னணியுள்ள சந்தற்பவாத இதழ்கள் வியாபாரத்தை பார்த்துவிடுவார்கள் இடத்தை பிடித்துவிடுவார்கள் என்ற குறுகிய பயம் அவர்களுக்கு. என்ன செய்ய எல்லாம் அரசியல் மாயைக்குள் சிக்கித்தவிக்கிறது. அனைத்துக்கும் அடிப்படை காரணம் திராவிட அரசியல் சித்தாந்த நடைமுறையாகவே இருக்கிறது. இந்த பலவீனமே சினிமாக்காரர்களின் பலமாகி விட்டது கருணாநிதிக்குப்பின் ஒருவேளை சினிமா மாயை கொஞ்சம் கட்டுக்குள் வரலாம்.

    ஒரு விரிந்த அறிவார்ந்த சமூகத்துக்கு மட்டுமே வினவுவின் கவலை பொருந்தும் மற்றும்படி எல்லாம் ஒரு குட்டையின் மட்டைகளே.

  8. ஆங்கிலப்பத்திரிகைகளின் லட்சணமும் இதுதான். இந்து போன்ற பத்திரிகைகளுக்கு ஏதாவது காமன்வெல்த் பிரச்சினைகளோ அல்லது சுவீடன் அதிபர் உஸ்பெஸ்கிஸ்தான் போகிறார் என்பதோ பொருளாதாரத்தில் ஏதாவது உப்புப்பெறாத மாறுதல்கள் என்றாலோ அதுதான் பெரிய மற்றும் தலைப்புச்செய்தி. இதாவது பரவாயில்லை டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு எந்தப் பிரதேசத்தில் எந்த மக்கள் எக்கேடு கெட்டு ஆயிரக்கணக்கில் செத்தாலும் கவலையில்லை. யுவராஜ் சிங் எந்த அணியில் சேர்ந்தான் அல்லது டோனியின் விலை என்ன என்பதுதான் அன்றைய பத்திரிகையின் தலைப்புச் செய்தியே. இது இங்கே மட்டும்தானா அல்லது எல்லா இடங்களிலும் இப்படித்தானா என்பது தெரியவில்லை.

  9. இன்றைய தினத்தந்தியில் ”உதயகுமாரின் கூட்டாளிகள் இருவர் கைது” என்று செய்தி வந்திருக்கிறது. என்ன ஒரு கயமைத்தனம் மக்களின் போராட்டத்திற்கு உறுதுணையாக இருப்பவரை கொள்ளையர்களின் கூட்டாளி போல் சித்தரிப்பது எதற்காக? அரசு விளம்பரங்களுக்காக இன்னும் என்னதான் செய்யுமோ இந்த தினத்தந்தி. ஈமு பண்ணைகளுக்கென தனியாக சிறப்பு மலர் என்று வெளியிட்டு கொள்ளைக்குத் துணைப்போன தினத்தந்திக்கு என்ன தண்டனை?

  10. எல்லா பின்னூட்டங்களும் கட்டுரையின் கருத்தை ஆதரித்தே வந்திருப்பது மகிழ்வளிக்கிறது.எதை படிக்கவைக்கணும் என்று ஒரு ஆழமான பின்னணி வேலையோடு தான் பத்திரிக்கைகள் இயங்குகின்றன.நடிகைகள் யாரை காதலித்தால் தமிழ் மக்களுக்கு என்ன?அவற்றை பரபரப்பாக விளம்பரம் செய்து வியாபாரம் செய்து காசு பார்ப்பது ஒரு ஈனத்தனம்ம்மான செயல்.இதே நிருபன் தன் வீட்டு பெண் காதலிப்பதை அடுத்த வீட்டுக்காரன் கிட்டேயாவது சொல்வானா? ஹோட்டல்ல ரெய்டுல மாட்னான்னு எழுதுவான் மருத்துவ பரிசோதனையில் காப்பர் டி ஸ்கான் பண்ணப்ப தெரிஞ்சிடுச்சின்னு எழுதுவான் அப்புறம் அவ காதலிக்கிறான்னு எழுதுவான். அவளுங்க கிட்ட போய் கல்யாணத்துக்கு முன் செக்ஸ் வச்சுக்கலாமான்னு கேட்டு அதை கவர்ஸ்டோரி ஆக்குவான்.இப்படி மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டே இருப்பான்…… இது ஒரு தொழில்.

  11. விட்டா புதிய ஜனநாயகம் மட்டும்தான் படிக்கணும்னு மெஷின் கன் முனையில் மக்களை மிரட்டுவீங்க போலிருக்கே…-இது நக்சல்பாரியில் அனுமதிக்கப்பட்டதுதானே.//ஒரு விரிந்த அறிவார்ந்த சமூகத்துக்கு மட்டுமே வினவுவின் கவலை பொருந்தும் மற்றும்படி எல்லாம் ஒரு குட்டையின் மட்டைகளே./// அடடே…அறிவாளிங்கள்…

  12. முகநூலில் அருள் எழிலன் பக்கத்தில் இட்ட பின்னூட்டம்.
    https://www.facebook.com/arayanmagan

    சி.பி.எம் கும்பல் எவ்வளவு கேடுகெட்ட மக்கள் விரோத பாசிச கும்பல் என்பதை சிங்கூர், நந்திகிராம் போராட்டங்களை ஒடுக்கிய போது இந்த நாடே கண்டது.

    கூடங்குளம் போராட்டத்தை ஆரம்பத்தில் மூர்க்கமாகவும் தற்போது மென்மையாகவும் எதிர்த்து வருகிறது. இதன் மூலம் தமிழகத்திலுள்ள முற்போக்கு சக்திகள் மத்தியில் சி.பி.எம் கும்பல் முன்னெப்போதையும் விட மோசமான முறையில் அம்பலப்பட்டு நாறிக்கொண்டிருக்கிறது.

    சொந்தக்கட்சியாயினும் அதன் மக்கள் விரோத போக்கை விமர்சித்து சரிசெய்யாமல் ஊக்குவித்து நியாயப்படுத்துவதன் மூலம் இவர்கள் எல்லோரும் கட்சிக்கு எத்தகைய நன்மையை செய்கிறார்கள் ? தவறான வழியில் செல்லும் கட்சியை சரியான வழிக்கு வரவிடாமல் மேலும் மோசமான மக்கள் விரோதக் கட்சியாகவும், மேலும் மக்களிடமிருந்து அந்நியப்பட்ட கட்சியாகவும் மாற்றுகின்ற வேலையை தான் ஆதவன், கவின்மலர் போன்றவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

    கூடங்குளம் அணு உலையை மூடச்சொல்லி போராட முடியாது என்பது தான் சி.பி.எம் மின் நிலைப்பாடு. தற்போது மக்கள் போராட்டம் ஒரு எழுச்சியாக நடந்துகொண்டிருக்கின்ற நிலையில், பாசிச ஜெயா அரசு மக்கள் போராட்டங்களை மிருகத்தனமாக ஒடுக்கி வருகின்ற நிலையில் சி.பி.எம் உழைக்கும் மக்களின் பக்கம் நிற்க முடியாமல் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு அம்பலப்பட்டுப்போயிருக்கிறது. இந்நிலையில் தனது பழைய நிலைப்பாட்டை அப்படியே பேசமுடியாது என்பதால் அதை கொஞ்சம் டிங்கரிங் செய்து ஆனால் அதே கருத்தை அழுத்தமாக வலியுறுத்தி சில புதிய வார்த்தைகளை போட்டு பிரகாஷ் காரத் தீக்கதிரில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார்.

    அந்தக் கட்டுரையை வாசித்ததுமே காரத் மூஞ்சியில் காறித்துப்ப வேண்டும் போலிருக்கிறது. ஒரு முட்டாள் கூட சி.பி.எம்மின் இந்த அயோக்கியத்தனத்தை, வார்த்தை ஜாலங்கங்கள் மூலம் மக்களை ஏமாற்றுவதை அறிந்துகொள்ள முடியும். ஆனால் அனைத்தையும் கட்டுடைக்கும் அறிவுஜீவிகள் எல்லாம் அந்தக் கட்டுரையில் மயங்கிவிழுகிறார்கள் !

    தமிழகத்தில் அறிவுஜீவி என்று அறியப்படும் அ.மார்க்ஸ் பிரகாஷ் காரத்தின் அந்த கட்டுரைக்கு ஒரு பொழிப்புரையே எழுதியுள்ளார். அணு உலை : சி.பி.எம் நிலைபாட்டில் மாற்றம் ? இது தான் கட்டுரைக்கு தலைப்பு. இந்த பொழிப்புரையை படிப்பதற்கு பதிலாக காறித்துப்ப வேண்டிய காரத் கட்டுரையையே பத்து தடவை படிச்சிறலாம்.

    சி.பி.எம் முக்கு அப்படி ஒரு ஜிங்குஜா.

    சொம்புன்னா சொம்பு அப்படி ஒரு சொம்பு.

    அ.மார்க்ஸ் கட்டுரை
    https://www.facebook.com/notes/marx-anthonisamy/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/384165161656214

  13. நுகர் பொருள் கலாச்சாரத்தில், சிற்றின்ப சுகத்தில் இருக்கும் தமிழனுக்கு எது தேவையோ அதனை கொடுக்கிறது நமது உடகங்கள்.

  14. பொதுவாக நடிகைகள் துவக்க காலத்தில் அழகு பதுமைகளாக படங்களில் வலம் வருவார்கள். இரண்டு மூன்று வருடங்கள் கழித்து (ஒருவேளை திரையுலகில் நிலைத்திருந்தால்) நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க துவங்குவார்கள்.

    ஆனால், துவக்கத்திலிருந்து இன்றைக்கு வரைக்கும் (சில வருடங்கள் ஆகியும்) கொஞ்சம் கூட நடிக்காமல் அழகு பதுமையாக வலம் வரும் நடிகை திரிஷா. திரிஷாவுக்கு கல்யாண செய்தி எனக்கு சந்தோசமா தான் இருந்தது. 🙂 (கிளம்பு! கிளம்பு காத்துவரட்டும்.)

    ஆனால், திரிஷா இப்போதைக்கு கல்யாணம் இல்லைன்னு அறிவித்து, என் தலைல குண்ட தூக்கி போட்டுருச்சு! 🙁

  15. அரசியல்வாதிகளிடம் ஊடகம் இருக்கும் வரை சமூகச் செய்தி, உள்ளூர் செய்திகள் தான்.

  16. கூடங்குளம் அணு உலையை எதிர்பவர்களூக்கு பணம் தரபடுகிறது என்பதை அங்கிருக்கும் ஒருவர் உருதிபடுத்தி உள்ளார்.இவ்வளவு பிரச்சனைகள் இருந்தும் யாருக்கும் கவலை இல்லை ஏன் யென்றால் அவனவன் சுயனலமே இங்கு முக்கியம்,அங்கே யார் செய்த்தலும் இங்கு மின்சாரம் தேவை.

  17. ‘இவர்களுக்கு தாம் என்ன செய்கிரொம் என்று தெரியாது, கர்த்தரே இவர்களை மன்னியும்!’. யேசு இன்று இருந்தால் இப்படி புலம்பியிருக்கலாம்! பாமர மக்கள் கவர்ச்சிக்கும், பக்திக்கும் தஙகள் புத்தியை விற்று விடுகிறார்கள்! மக்கள் விரும்புகிரார்களே என்று போதை பொருளை சற்று கூட்டியே விற்கிறார்கள் வியாபாரிகள் ! இவர்களை காட்டு மிரான்டிகள் என்று பெரியார் சொன்னதில் என்ன தவறு?

Leave a Reply to GOPAL பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க