privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்கையேந்தி பவன் சிலிண்டர்களும், அம்பானி போட்ட 'ஆட்டையும்'

கையேந்தி பவன் சிலிண்டர்களும், அம்பானி போட்ட ‘ஆட்டையும்’

-

ரிலையன்ஸ்துரை பெரியார் பஸ் நிலையம், திடீர் நகர் பகுதிகளில் ரோந்து சுற்றிய போலீசார், ரோட்டோர சிக்கன் கடையில் வீட்டு கேஸ் சிலிண்டரை பய்னபடுத்தியதாக கோடீஸ்வரன் என்பவரை கைது செய்தனர். கோடீஸ்வரன் வீட்டு சிலிண்டரை பயன்படுத்துவதாக தகவல் வந்ததுமே அக்கடைக்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுத்திருக்கிறார் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி.  அதே பகுதியில் மகராஜா, கேசவன் ஆகிய பிளாட்பார்ம் கடைக்காரர்களும் அதே காரணத்துக்காக கைது செய்யப்பட்டிருக்கின்றனர்

அதாவது இந்தியாவின் மாண்புமிகு மத்திய அரசாங்கம் ரூ 800 மதிப்புள்ள கேஸ் சிலிண்டர்களை மானியம் அளித்து ரூ 450க்கு வீடுகளுக்கு விற்கிறது. இப்படி வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு சிலிண்டருக்கும் மக்களின் வரிப்பணம் ரூ 350 செலவாகிறது. பிளாட்பார்மில் சிக்கன் வறுத்து விற்கும் வியாபாரிகள் இந்த சிலிண்டர்களை எடுத்து வந்து சிக்கன் வறுத்து விற்று கொள்ளை லாபம் சம்பாதிப்பதாக நடுத்தர வர்க்கம் நினைக்கலாம்.

பெரிய முதலாளிகள் போல அரசு மானியங்கள், சலுகைகள், கடன்கள் ஏதுமின்றி இத்தகைய கையேந்தி பவன்களால் பல இலட்சம் குடும்பங்கள் பிழைக்கின்றன. போலீசுக்கும், இதர ஆதிக்க சக்திகளுக்கும் மாமூல் கொடுத்து, குறைந்த இலாபத்துடன் நடத்தப்படும் இந்த சிறுகடைகளின் வாடிக்கையாளர்களும் ஏழைகள்தான். எனில் இங்கே வீட்டு சிலிண்டர் பயன்படுத்தப்படுவது ஒன்றும் கொலைக்குற்றமல்ல. ஆனால் இந்த ஏழைகளை பிடித்து துன்புறுத்துவதைத்தான் போலீசு விரும்புகிறது.

கையேந்தி பவன் ஏழைகளை ஏதோ மாபெரும் கொள்ளைக்காரர்கள் போன்று கைது செய்த இந்த போலீசு முகேஷ் அம்பானி மீது கை வைக்குமா? ரோட்டோரக் கடைகள் பயன்படுத்திய சிலிண்டர்களின் நட்டம் சில நூறு ரூபாய்கள்தான். ஆனால் அம்பானி ஆட்டையைப் போட்ட இயற்கை எரிவாயுவின் மதிப்பு சில ஆயிரம் கோடி.

கிருஷ்ணா கோதாவரி படுகையை தோண்டி இயற்கை வாயுவை  கண்டுபிடிப்பதற்கான காண்டிராக்ட் எடுத்த முகேஷ் அம்பானி, அமைச்சர்களையும் ஐஏஎஸ் அதிகாரிகளையும் கையில் போட்டுக் கொண்டு செலவுக் கணக்கை பல மடங்கு ஏற்றிக் காட்டி கொள்ளை  லாபம் அடித்திருக்கிறார். அரசுக்கு போய்ச் சேர வேண்டிய தொகையை சுருட்டிக் கொண்டதோடு மட்டுமில்லாமல் இயற்கை வாயுவை பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்று விலைவாசி உயர்வுக்கும் வழி வகுத்திருக்கிறார் அம்பானி.

கிருஷ்ணா கோதாவரி படுகையில் இயற்கை வாயு கிடைப்பது 1983-ம் ஆண்டு பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசியின் ரஜோல் கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்டது.  பொதுத்துறை நிறுவனங்களிடம் அத்தகைய பணியை செய்யும் நிபுணத்துவம் இருந்தும் 1990களின் இறுதியில் இயற்கை வாயு கண்டுபிடிப்பதற்கான காண்டிராக்ட் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விடப்பட்டது.

2002-ம் ஆண்டு ரிலையன்ஸ் 3.9 லட்சம் மில்லியன் கனமீட்டர் வாயு இருப்பதை கண்டுபிடித்தது.  டிசம்பர் 12, 2006 அன்று ராஜ்ய சபை உறுப்பினர் தபன் சென்னும் அவரது சகா சித்தப்ரதா மஜூம்தாரும் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி மூலம் ஒரு நாளைக்கு 40 மில்லியன் கனமீட்டர் (MMSCMD) இயற்கை வாயு உற்பத்தி செய்ய $2.47 பில்லியன் (சுமார் ரூ 13,000 கோடி) திட்டச் செலவாக ரிலையன்ஸ் கொடுத்திருந்தது தெரிய வந்தது. அதாவது 1 MMSCMD இயற்கை வாயு உற்பத்திக்கு ரூ 3,250 முதலீடு.

சிறிது காலத்துக்கு பிறகு புதுப்பிக்கப்பட்ட திட்டப்பணியில் ஒரு நாளைக்கு 80 மில்லியன் கனமீட்டர் (MMSCMD) உற்பத்திக்கு ரிலையன்ஸ் $8.84 பில்லியன் (சுமார் ரூ 48,000 கோடி) செலவு திட்டம் கொடுத்ததும் வெளியானது. ஒரு MMSCMD இயற்கை வாயு உற்பத்திக்கு ரூ 6,000 முதலீடு என்று செலவை இரட்டிப்பாக்கி காட்டியிருக்கிறது ரிலையன்ஸ்.

பெட்ரோலிய அமைச்சரகம் தமது நிபுணர்களைக் கொண்டு செலவுக் கணக்கை சரி பார்க்காமல் ரிலையன்ஸ் கொடுத்த கணக்கை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கின்றது. செலவுகளை கழித்த பிறகுதான் ரிலையன்ஸ் அரசுக்கு கொடுக்க வேண்டிய உரிமத் தொகையை கொடுக்கும். எனவே செலவை அதிகமாக ஏற்றுக் கொண்டதால் அரசுக்கு வரும் வருமான இழப்பு ஏற்பட்டிருக்கிறது. கூடவே வாயு எடுக்கும் செலவு அதிகமாக காட்டப்படுவதால் விற்கும் விலையும் அதிகமாகியிருக்கிறது.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினரான சிபிஎம் கட்சியைச் சேர்ந்த தபன் சென், ரிலையன்சின் தில்லுமுல்லுகளைப் பற்றி பிரதமர் அலுவலகத்துக்கு தொடர்ந்து கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால் மதுரை இன்ஸ்பெக்டர் பாண்டியை போல கடமை வீரராக இல்லாமல் நாட்டு வளம் கொள்ளை போவதை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார் மன்மோகன் சிங்.

“இந்த துறையில் இருக்கும் நிச்சயமின்மை, இயற்கை வாயு கண்டுபிடிப்பதற்கு வெவ்வேறு இடங்களில் தோண்டி வீணாவது, அதிக ஆழத்துக்கு தோண்டுவது போன்ற காரணிகளை கணக்கில் எடுத்துக் கொண்டாலும், பன்னாட்டு தரவுகளின்படி உற்பத்தியை இரண்டு மடங்கு ஆக்குவதற்கு செலவு நான்கு மடங்காக முடியாது. இப்படி பல மடங்கு அதிக செலவுக் கணக்கு காட்டிய ரிலையன்ஸின் விண்ணப்பம் 33 நாட்களிலேயே ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது” என்பதையும் சென் கண்டறிந்தார்.

அப்போதைய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோராவுக்கு உடனடியாக கடிதம் எழுதினார் சென்.  ஹைட்ரோகார்பன் இயக்குனரகத்தின் தலைவர் வி கே சிபல் ரிலையன்ஸ் கொடுத்த செலவுக் கணக்குகளை நியாயப்படுத்த முயன்ற போது ‘உலகமெங்கும் இயற்கை வாயு தேடுதல் தொடர்பான தகவல்கள் தம்மிடம் இருப்பதாகவும், வீணாகும் முயற்சிகளை கணக்கு எடுத்தால் கூட ரிலையன்ஸ் நாட்டை இப்படி கொள்ளை அடிக்கக அரசு அனுமதித்திருக்கக் கூடாது’ என்றும் சென் தெரிவித்திருக்கிறார்.

அடுத்தாக ரிலையன்ஸ் தோண்டி எடுக்கும் இயற்கை வாயுவை விற்பதற்கான விலையை தீர்மானிக்க மன்மோகன் அரசு ஒரு அமைச்சர்கள் குழுவை நியமித்தது. ‘இயற்கை வாயு தோண்டி எடுக்க என்ன செலவாகும் என்பதை அமைச்சர்கள் தீர்மானிக்க முடியாது. நிபுணர்கள் குழுதான் தீர்மானிக்க முடியும். ஆனால் அமைச்சர்கள் கூடி ரிலையன்ஸ் கேட்ட விலையான 1 mmBtuக்கு $4.3 என்பதை பெயரளவுக்கு $4.2 என்று குறைத்து ஒப்புதல் கொடுத்தார்கள். இந்தியாவில் தோண்டி எடுக்கப்படும் இயற்கை வாயுக்கு பன்னாட்டு எண்ணெய் விலையுடன் ஒப்பிட்டு விலை நிர்ணயித்ததாக பெட்ரோலியம் அமைச்சரவை கூறியது சுத்த அயோக்கியத்தனம்’ என்கிறார் சென்.

அதே ரிலையன்ஸ் $2.34 விலையில் வாயு வழங்குவதாக என்டிபிசி நிறுவனத்துக்கு டெண்டர் கொடுத்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் அண்ணன் தம்பிகள் அடித்துக் கொண்ட போது இயற்கை வாயு தோண்டி எடுப்பதற்கான செலவு ஒரு mmBtuக்கு $2ஐ விடக் குறைவு என்று பதிவு செய்திருக்கிறது.

போட்டியில்லாத ஏகபோக விற்பனையில் அரசின் உதவியோடு அதை விட இரண்டு மடங்கு விலையை ரிலையன்ஸ் பெற்றிருக்கிறது.

‘ரிலையன்ஸ் கேட்கும் விலை கொடுத்து இயற்கை வாயு வாங்கினால் இரண்டு திட்டங்களில் மட்டும் தனக்கு ரூ 24,000 கோடி இழப்பு ஏற்படும்’ என்று பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி அமைச்சர்கள் குழுவுக்கு கடிதம் எழுதியிருக்கிறது. கூடவே அதிக விலைக்கு வாயு வாங்கும் உர நிறுவனங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் முறையே உரங்கள், மின்சார் போன்றவற்றின் விலையை உயர்த்த வேண்டி வந்தது.

‘இயற்கை வாயு எடுப்பதில் ரிஸ்க் இருக்கிறது, தோண்டி பார்த்த பிறகு வாயு கிடைக்காமல் போகலாம் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் அந்த ரிஸ்க்குடன் உலகளவில் நடக்கும் திட்டங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தாலும் ரிலையன்ஸூக்கு அனுமதிக்கப்பட்ட செலவுக் கணக்கு மிக அதிகம்’  என்கிறார் சென்.

2011ம் ஆண்டு வெளியான சிஏஜி அறிக்கையும் ரிலையன்ஸின்  மோசடிகளையும் அரசு அதிகாரிகள் அதற்கு உடந்தையாக இருந்ததையும், மன்மோகன் சிங் அரசு உற்பத்தி ஒப்பந்தத்துக்கு மாறாக ரிலையன்ஸிடம் இந்த இயற்கை வாயு படுகைகளை விட்டு வைத்திருந்ததையும் அம்பலப்படுத்தியிருக்கிறது.

அரசு மானியம் பெறும் வீட்டு சிலிண்டரை கடை சிக்கன் வறுக்க பயன்படுத்தி லாபம் சம்பாதித்த மதுரை கடைக்காரர்கள் கைதானது போல நாட்டுச் சொத்தான இயற்கை வாயு காண்டிராக்டில் கணக்கு குளறுபடி செய்து அரசை ஏமாற்றி, மக்களை சுரண்டி லாபம் சம்பாதித்த முகேஷ் அம்பானி எப்போது கைதாவார்?

படிக்க