privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்ஹிக்ஸ் போசான் துகள்! ஒரு வரலாற்று விளக்கம்!!

ஹிக்ஸ் போசான் துகள்! ஒரு வரலாற்று விளக்கம்!!

-

கடவுள்-துகள்-வரலாறுடந்த மாதத்தில் உள்ளூர் பத்திரிகைகள் முதல் உலகப் பத்திரிகைகள் வரை தலைப்புச் செய்தியாக இருந்தது – ‘கடவுள் துகள்’. ஐரோப்பாவின் செர்ன் ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ‘கடவுள் துகளை’க் கண்டுபிடித்து விட்டனர் என்பதே இச்செய்திகளின் சாராம்சம். விஞ்ஞான மொழியில் சொல்வதானால் தற்போது ‘பிடிபட்டிருக்கும்’ துகளை ஹிக்ஸ் போசான் துகள் என்று சொல்லலாம். இதற்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு என்பதைப் பற்றிப் பார்க்கும் முன் இந்த ஆராய்ச்சியைப் பற்றியும் அந்தத் துகளைப் பற்றியும் விஞ்ஞானம் சொல்லும் விளக்கங்களைச் சுருக்கமாகப் பார்த்து விடுவோம்.

இந்தப் பிரபஞ்சம் தோன்றியது எப்படி என்பது ஒரு சுவாரசியமான கேள்வி – சொல்லப் போனால் இந்தக் கேள்விக்கான பதிலில் தான் அந்தக் கடவுளின் உயிரே ஊசலாடிக் கொண்டிருக்கிறது. ஆதியிலே ஒன்றுமில்லாத வெளி இருந்ததாகவும், நேரம் போகாமல் போரடித்துக் கொண்டிருந்த தேவன் எதையாவது படைத்துத் தொலைப்போமே என்கிற படைப்பு அவஸ்தையில் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்பதும் மதவாதிகள் சொல்லும் விளக்கம். அதாவது, ‘நாம் காணும் சகலமும் அந்த ஆண்டவனின் படைப்புகள்’ என்கிற இந்த ஆறுவார்த்தைகளைத் தாண்டி மதவாதிகளின் மூளைகள் செல்லவில்லை.

ஆனால், வரலாறு நெடுக விஞ்ஞானிகள் இந்த அம்புலிமாமா கதையை எள்ளி நகையாடியிருக்கிறார்கள். அவர்கள் இதற்கு மாற்றாக பெரு வெடிப்புக் கொள்கையை முன்னிறுத்தினர். அதன்படி, இன்று நாம் காணும் மொத்த பிரபஞ்சமும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு சுருங்கிய வடிவில் அபரிமிதமான வெப்பத்துடனும் கற்பனைக்கெட்டாத அடர்த்தியுடனும் ஒடுங்கியிருந்ததாகவும், அதனுள்ளே ஏற்பட்ட முரண்பாடுகளின் விளைவாக அது வெடித்துச் சிதறி விரிவடைந்து வருவதாகவும் சொன்னார்கள். அப்படிச் சிதறிய துகள்கள் பொருண்மையைப் பெற்றதன் விளைவாகவே பல அண்டங்களும் பேரண்டங்களும், அவற்றினுள் சூரியன்களும் கோள்களும் தோன்றின என்றும் விளக்கினர்.

வெடித்துச் சிதறிய அதீத வெப்பம் கொண்ட துகள்கள் ஒரு குறிப்பிட்ட விசைப்புலத்தைக் கடக்கும் போது அதன் ஆற்றல் நிறையாக மாறும் என்பதை ஹிக்ஸ் எனும் விஞ்ஞானி சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் விளக்கினார். அந்த விளக்கம் தான் தற்போதைய சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

‘கடவுளை’ லாரியில் அடிபட்ட நாயைப் போல் விசிறியடித்துள்ள இந்த விளக்கத்தை மதவாதிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் பொருள் வேறு ஆற்றல் வேறு என்றனர். ஆற்றலைக் கடவுளாக விளக்கியவர்கள், அந்தக் ‘கடவுள்’ ஏதுமற்ற சூனியத்திலிருந்து இந்த பிரபஞ்சம் மொத்தத்தையும் விரல் சொடுக்கும் நேரத்தில் உண்டாக்கி விட்டாரென்று சொன்னார்கள். அதாவது கருத்து தான் அனைத்துக்கும் மூலம் என்கிற கருத்துமுதல்வாதம் தான் இது.

ஆனால், பொருளில் இருந்து தான் சகலமும் துவங்கியது என்று சொன்ன பொருள்முதல்வாதிகளான விஞ்ஞானிகளோ, பொருளிலிருந்து துவங்கும் ஆற்றல் மீண்டும் பொருளாக மாறும் என்றும், அந்த ஆற்றலின் விளைவாய் நிறையைப் பெறும் என்றும் விளக்கினர். இந்த விளக்கத்தை நிரூபிக்க அவர்கள் ஆற்றலில் இருந்து பொருள் எப்படி பொருண்மையைப் பெறுகிறது என்பதை சோதனைப் பூர்வமாக நிறுவ வேண்டியிருந்தது.

ஹிக்ஸ் முன்வைத்த கோட்பாட்டு ரீதியிலான விளக்கத்தை ஆய்வுகளின் மூலம் நிரூபிக்க 50 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த காலதாமதத்திற்கு காரணங்கள் இல்லாமலில்லை. சுமார் 20 ஐரோப்பிய நாடுகள் இணைந்து, 6000 விஞ்ஞானிகளோடு, பல பில்லியன் டாலர் செலவில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதிகளோடு தான் இச்சோதனை மோற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சோதனைக்கு முன்னோட்டமாக இன்னும் சில துகள்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டியிருந்தது. தோன்றியதிலிருந்து லட்சத்து கோடிக்கோடியில் ஒரு பங்கு விநாடியில் ஹிக்ஸ் போசான் வேறு துகள்களாக மாறிவிடும். அதற்குள் அதைப் படம் பிடித்தாக வேண்டும்.

அணுவிற்குள் இருக்கும் புரோட்டான் என்ற நேர்மின்சுமையுடைய துகள்களை ஆயிரம் கோடி தடவை எதிரெதிராக மோத விட்டால்தான் ஒரு போசானை பார்க்க முடியும். இதற்காக பூமிக்கடியில் 175 மீட்டர் ஆழத்தில் வட்ட வடிவ பாதையில் 1200 பெரிய காந்தங்களை அடுக்கி அதற்கு நடுவில் இரண்டு இஞ்ச் அகலமுள்ள குழாய் வழியாக புரோட்டானை விநாடிக்கு 3 லட்சம் கிமீ வேகத்தில் (ஒளியின் வேகம்) எதிரெதிர் திசையில் மோத விட்டுதான் இது சாத்தியமானது.

இந்த ஆய்வுக்காக அமைக்கப்பட்டுள்ள குழாயின் (Large Hadron Collider)  சுற்றளவு 27 கிமி. இதை 100 நாடுகளைச் சேர்ந்த 10,000 விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் சேர்ந்து 9 பில்லியன் டாலர்கள் செலவில் உருவாக்கியுள்ளனர். பல அணுகுண்டுகள் சேர்ந்து வெடித்தாற்போல நடக்கும் இந்நிகழ்வில் வெளிப்படும் வெப்பத்தை தணிக்க மிகவும் குளிர்ச்சியூட்ட வேண்டி இருக்கும். அதற்காக மிகுந்த பொருட் செலவில் குளிர் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

பிரபஞ்சத்தின் ரகசியங்களைக் கண்டறிய ஒவ்வொரு முறை விஞ்ஞானம் முயற்சி செய்யும் போதும் மதவாதிகள் அதன் கால்களை உடைப்பதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்கள். இந்த சோதனைகள் துவங்குவதற்கு முன்பும் கூட, இதனால் உலகமே அழியப் போகிறதாக்கும் என்றெல்லாம் பூச்சி காட்டிய மதவாதிகள், சோதனையின் முடிவுகள் வந்ததும் அதை எந்தக் கூச்சமும் இன்றி செரித்துக் கொள்ள முடியுமா என்று பார்க்கிறார்கள். எப்படி இருந்தாலும், கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் துகளுக்குப்பெயர் ‘கடவுள்’ துகள் தானே என்று கூறி அற்பத்தனமாக மகிழ்ந்து போகிறார்கள்.

உண்மையில், 1993-ம் ஆண்டு ஹிக்ஸ் துகள் பற்றிய தனது நூல் ஒன்றுக்கு விஞ்ஞானி லியோன் லேடர்மேன் ‘விளங்காத துகள்’ என்று பொருள் வரும் வகையில் Goddamn Particle எனப் பெயரிடுகிறார். வியாபார பரபரப்பிற்காக அந்நூலின் தலைப்பை அதன் பதிப்பாளர் GOD particle (கடவுள் துகள்) என்று சுருக்கி வைத்துள்ளார் – இதைத் தவிற ஹிக்ஸ் போசான் துகளுக்கும் ஆண்டவனுக்கும் மயிர் நுனியளவிற்கும் தொடர்பில்லை என்பதே உண்மை. ஆனால், செருப்படி வாங்கியது ராமனென்றாலும் அடித்தவர் பெயர் ராமசாமி (பெரியார்) தானே என்று ஆறுதலடையும் மயிலை பார்த்தசாரதிகளைப் போல் உலகெங்கும் உள்ள மதவாதிகள் தங்கள் கொதிப்பை ஆற்றுப்படுத்திக் கொள்கிறார்கள்.

மதவாதிகள் விஞ்ஞானத்தை கண்மூடித்தனமாய் எதிர்த்தாலும் அதன் பலன்களை – செல்போனில் இருந்து விமானம் வரை – பயன்படுத்திக் கொள்ள தயங்குவதில்லை; அதற்காக கூச்சப்படுவதுமில்லை. ‘ஆன மட்டும் கழுத்தைப் பிடிப்பது; ஆகாத மட்டில் காலைப் பிடிப்பது’ என்கிற இவர்களின் இந்த பித்தலாட்டத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது. அது பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய டெமாக்ரடிஸின் காலத்திலிருந்து தொடர்ந்து வருகிறது.

பண்டைய கிரேக்க பொருள்முதல்வாதிகள் துவங்கி இன்றைய ‘கடவுள்’ துகள் வரை விஞ்ஞானம் அடைந்த படிப்படியான வளர்ச்சியை இப்போது ஒரு பருந்துப் பார்வையில் பார்ப்போம்.

சுமார் 2500 வருடங்களுக்கு முன் இந்த பிரபஞ்சத்தின் புதிர்கள் விளக்கப்படவே முடியாதவையென்று கருதி வந்த காலத்தில், உலகம் அணுக்களால் ஆனது என்றும், அவ்வணுக்களை இணைப்பது சூன்யம் என்றும், அணுக்களது சேர்க்கை மற்றும் பிரிவினால் தான் பருப்பொருளில் மாற்றம் வருவதாகவும் கிரேக்கத் தத்துவஞானி டெமாக்ரிட்டஸ் முன்வைத்தார்.

ஏறக்குறைய அதே காலகட்டத்தில் இந்தியாவில் வேதமதத்தை எதிர்க்கும் நாத்திகர்களான சாருவாகர்கள் இந்திய பதிப்பான பார்ப்பன கடவுள் கொள்கை உள்ளிட்ட கருத்து முதல்வாத தத்துவங்களை எதிர்த்துப் போராடுகிறார்கள். சடப்பொருளிலிருந்து தன்மையிலேயே வேறுபட்டதான உயிர்ப்பொருள் எப்படித் தோன்ற முடியும் என்று கேள்வி எழுப்பி, அதன் மூலம் கடவுள் உலகைப் படைத்தார் என்று நிலைநாட்ட முயற்சிக்கிறார்கள் கருத்துமுதல்வாதிகள்.  பசியை ஆற்றப் பயன்படும் அரிசி, புளிக்கவைக்கப் படும்போது தன்மையிலேயே வேறுபட்டதான மதுவாக மாறி போதையூட்டுவதை உதாரணம் காட்டி, பஞ்ச பூதங்கள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் ஒன்று சேரும்போது உயிர் தோன்றுகிறது. இறந்த பின் ஆன்மா என்று எதுவும் எஞ்சியிருப்பதில்லை. உடல் மீண்டும் பஞ்சபூதங்களுடன் கலந்து விடுகிறது என்று வாதாடியிருக்கிறார்கள் சாருவாகர்கள்.  சாருவாகம் என்பது முரணற்ற பொருள்முதல்வாதம். பவுத்தமோ இயங்கியலைப் பேசியது. எரிந்து கொண்டிருக்கும் சுடரைக் காட்டி, சென்ற கணத்தில் நாம் கண்ட சுடரல்ல, இந்தக் கணத்தில் நாம் காண்பது என்று கூறி இயங்கியலை விளக்குகிறது பவுத்த தத்துவம். பஞ்ச பூதங்களால் உலகை விளக்க இவர்களனைவருமே முயன்றனர். அறிவியலும் தொழில் நுட்பமும் வளராத அந்தக் காலத்தில், எளிய நடைமுறை எடுத்துக் காட்டுகள் மூலம், தர்க்க முறையிலும், கோட்பாடாகவுமே பொருள்முதல்வாதத்தை அவர்கள் பேச முடிந்தது.

அதன் பின் மிக நீண்ட காலத்திற்கு தத்துவஞானத் துறையில் எந்த முன்னேற்றமும் இல்லை. நிலவுடமை சமூக அமைப்பின் கீழ் உற்பத்தி சாதனங்களிலும், தொழில் நுட்பத்திலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், தத்துவஞானத்துறையின் குரல்வளை மீது மதபீடங்கள் அமர்ந்திருந்தன. இந்தியாவில் பார்ப்பனீயமும், ஐரோப்பாவில் கிறித்தவமும் அறிவியல் வளர்ச்சியை மறித்து நின்றன.

16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோபர்நிகஸ், டெமாக்ரடிஸுக்கும் முந்தையவரான தாலமி முன்வைத்த புவி மையக் கோட்பாட்டை மறுத்து சூரிய மையக் கோட்பாட்டை முன்வைக்கிறார். இதே கோட்பாட்டை வலியுறுத்திய புரூனோ ரோம் நகரில் திருச்சபையால் தீவைத்து எரிக்கப்படுகிறார். ‘உங்கள் தீர்ப்பைக் கேட்டு நான் அஞ்சுவதைக் காட்டிலும், தீர்ப்பை வழங்கிய நீங்கள்தான் அதிகம் நடுங்குகிறீர்கள்‘ என்று தீர்ப்பு  வழங்கிய நீதிபதிகளை புருனோ எள்ளி நகையாடியதும், மன்னிப்பு கேட்டு உயிர் பிழைக்க வாய்ப்பளிக்கப்பட்டும் அதனை அவர் மறுத்ததும்,  ஐரோப்பிய அறிவுத்துறையினர் மத்தியில் புருனோ மேனியாவாக காட்டுத்தீயாய் பரவி, திருச்சபையை அச்சுறுத்தின. தொலைநோக்கி வழியாக சூரிய மையக்கோட்பாட்டை நிரூபிக்கமுயன்ற குற்றத்துக்காக 32 ஆண்டுகள் வீட்டுச்சிறையில் தள்ளப்படுகிறார் கலீலியோ.

பின்னர் ஹெப்ளர், தனது தொலைநோக்கிச் சோதனைகளின் மூலம் கோபர்நிகஸின் முடிவுகளை உறுதிசெய்ததோடு கோள்களின் இயக்கத்திற்கான விதிகளையும் வகுத்தளிக்கிறார். இந்த ஆய்வு முடிவுகளும் திருச்சபையின் தணிக்கைக் குழுவினால் நீண்டகாலம் முடக்கப்படுகின்றன.

அதன் பின் பேகனும், டெகார்ட்டும் முறையே முன் அனுமானித்துப் பின் தர்க்கித்தலையும், சோதனை அறிவியலையும் வலியுறுத்துகின்றனர். இதனை கணித வடிவத்துடன் இணைத்து அறிவியலாக்கியவன்  நியூட்டன். பருப்பொருட்களின் இயக்கத்திற்கான விதிகளையும் வகுத்தளித்த அவரது காலத்தில் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய ஐயுறவு அப்படியே தான் நீடித்தது.

பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய வானவியலின் தேக்கம் மேலும் உடைபட வேறு சில விஞ்ஞான சாத்தியப்பாடுகள் தேவைப்பட்டன. லவாய்ஸியரின் ஆற்றல் அழிவின்மை விதியும் அணுவைப் பிளக்க முடியும் என்கிற ஜேஜே தாம்சனின் கண்டுபிடிப்பும் பிரபஞ்சத்தின் புதிர்களை அவிழ்க்கும் பாதையில் விஞ்ஞானத்தை வெகு வேகமாக அழைத்துச் சென்றன.

தாம்சனின் மாணவர்களான ரூதர்போர்டும் சாட்விக்கும் அணுமையத்தை எலக்ட்ரான்கள் வட்டப்பாதையில் சுற்றிவருவதாக கண்டறிந்து சொல்கிறார்கள். அதை இன்னும் வளர்த்துச் செல்லும் நீல்ஸ் போர், அந்த சுற்றுப் பாதை நீள்வட்டமாக இருந்தால் தான் சுழற்சியால் ஏற்படும் ஆற்றல் இழப்பை தவிர்க்க முடியும் என்கிறார். அதனைத் தொடர்ந்து விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் அணுவைப் பிளக்க முடியும் என்பது நிறுவப்படுகிறது.

அணுவின் உள்ளே எலக்ட்ரான்கள், மியூவான்கள், டாவோ மற்றும் இவற்றின் எதிர்த்துகள்கள் 3 உட்பட 12 அடிப்படைத் துகள்களும், 4 நான்கு விசைகளும் இருப்பது கண்டறியப்படுகிறது. ஆனால், இந்த பதினாறும் சேர்ந்தாலும் அணுவின் நிறையைக் கணக்கீடு செய்வதில் குறைபாடு இருந்ததால், பதினேழாவதாக ஒன்று இருக்க வேண்டும் என்கிற கருத்தை இந்திய விஞ்ஞான போஸ் முன்வைக்கிறார் – அதை ஐன்ஸ்டீனும் ஒப்புக் கொள்கிறார்.

அதே காலகட்டத்தில் ஒளி மற்றும் வெப்பம் பற்றிய விஞ்ஞானமும் வளர்கிறது. டி பிராக்லி ஒளியானது துகளாகவும் அலையாகவும் பரவுவதாகச் சொல்கிறார். அதே நேரத்தில் காந்தம் மற்றும் மின்சாரத்திற்கிடையிலான தொடர்பை ஃபாரடே சோதனை மூலம் நிரூபிக்க, அவ்விரு விசைகளின் தொடர்பை கணிதச் சூத்திரமாக மாற்றுகிறார் மேக்ஸ்வெல்.

இப்போது பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய புதிரை விளக்கப் போகும் பெருவெடிப்புக் கொள்கையின் முதற்படியான விசை ஒருங்கிணைப்பு கோட்பாடு பிறக்கிறது. அதாவது, மின்விசையும் காந்தவிசையும் இணைந்த மின்காந்த விசை கண்டறியப்படுகிறது. ஒளியும் மின்காந்த அலைகளாக பரவுவதாக ஐன்ஸ்டீன் விளக்குகிறார் – இதிலிருந்து தான் போசான்களுக்கான முன்மொழிவை பெறுகிறார் போஸ்.

1963-ல் ஹிக்ஸ் விசைப்புலம் மற்றும் போசான் துகளைக் கோட்பாட்டு ரீதியில் நிறுவுகிறார் ஹிக்ஸ். தன்னளவில் நிறை பெற்றிராத இந்த போசான்கள் அதிக ஆற்றல்லைப் பெறுமாறு தூண்டப்பட்டால் விசைப்புலம் ஒன்று உருவாகி அப்புலமே அத்துகள்களை ஒருங்கிணைத்து நிறையாக மாற்றும் எனக் கணக்கிட்டார். 70களில் பாகிஸ்தான் விஞ்ஞானி அப்துல் சலாம் மற்றும் வெய்ன்பெர்க்  எலக்ட்ரானை அணுக்கருவுடன் இணைத்து வைத்திருக்கும் விசைகளை ஒருங்கிணைத்துப் புரிந்துகொள்ள விழைகின்றனர். பெருவெடிப்பின் போது இவையனைத்து துகள்களும் ஒன்றாக இருந்துதானே பிரிந்திருக்கும் என கருதினர். எண்பதுகளிலேயே நிறையை வழங்கும் போசானைத் தவிர மற்ற 3 போசான்கள் கண்டறியப்பட்டு விட்ட நிலையில், தற்போது நிறையை வழங்கவல்ல போசானைக் கண்டுபிடிக்க அப்துல் சலாமின் முன்மொழிவு உதவியுள்ளது.

இது தான் பொருட்கள் ஆற்றலை இழந்து நிறை பெற காரணம். 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான பிரபஞ்சத்தில் தோன்றிய துகள்கள் பஞ்சால் உறிஞ்சப்படும் நீரைப் போல நிறையைப் பெற்றது இப்படித்தான். இச்சோதனையின் முடிவு பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்கும் பெருவெடிப்புக் கொள்கையை உறுதி செய்துள்ளது. பொருட்களுக்கு நிறை கிடைத்தது எப்படி என்பது முதல், கோள்கள் உருவானது வரைக்குமான நிகழ்வுகளுக்கு விளக்கம் கிடைத்துள்ளதுடன் இயங்கியலின் விதிகளையும் சரியென்று நிறுவியிருக்கின்றது.

இந்த ஆய்வின் மூலம் துகள்களை ஒருங்கிணைத்துப் புரிந்து கொள்வது சாத்தியமானாலும், ஈர்ப்பு விசைக்குக் காரணமான க்ராவிட்டான் என்ற துகளும், நமது பிரபஞ்சத்தில் கண்டு ஆராயப்படாத 96% கரும்பொருள் மற்றும் கரும் சக்தி பற்றி இன்னமும் விளக்கங்கள் வரவேண்டியுள்ளது – அது சாத்தியப்படும் காலம் மிக அண்மையில் தான் இருக்கிறது.

மதவாதிகள் இதை தங்களது வழமையான குயுக்தியுடனே எதிர்கொள்கிறார்கள் – அதாவது, எதெல்லாம் அறியப்பட்டதோ அதெல்லாம் கடவுளின் துணையால் என்றும் எதெல்லாம் அறியப்படாதததோ அதெல்லாம் சாட்சாத் அந்தக் கடவுளே தானென்றும் சாதிக்கிறார்கள். ஒளியின் கதிர்கள் ஊடுறுவாத இருளின் பலத்தில் வாழும் பரிதாபகரமான நிலையிலேயே ‘கடவுள்’ இருக்கிறார் – விஞ்ஞானம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்தைப் பரவலாக்கி வருகிறது.

_________________________________________________

புதிய கலாச்சாரம், ஆகஸ்டு – 2012
_______________________________________________________

  1. மதவாதிகள் தங்களின் கருத்து முதல்வாதத்தின் தோணியில் தான் பயணிக்கிரார்கள்.அறிவியலுக்கு சாக்கு போக்கு சொல்லி மக்களின் அறியாமையை பயன்படுத்தி நழுவிக்கொள்ள முடியுமே தவிர அறிவியலை வெல்ல முடியாது.
    சாத்தானிடம் இருந்து மக்களை காப்பது கிடக்கட்டும் இனி அறிவியலில் இருந்து தங்களையும் மதத்தையும் காப்பாற்றி கொள்ள் போராட வேண்டியநிலைக்கு வந்து விட்டார்கள் மதவாதிகள்.

  2. //whatever it may be…. All the scientists who have discovered those things have faith in god….. Bye//

    ஐயோ போகாதீங்க நில்லுங்க,santhosh அவர்களே, அறிவியலாளர்கள் அனைவரும் கடவுளை நம்பினார்கள் என்று எப்படி கூறுகிறீர்கள், பெரும்பான்மையான அறிவியலாளர்கள் கடவுள் மறுப்பாளர்கள் என்பது உங்களுக்கு தெரியாதா?
    அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் என்றால் இப்படி இரவு பகல் பாராமல் இந்த கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க அவசியம் இல்லையே, ஏதாவது ஒரு வேதத்தை கரைத்து குடித்து அதன் மூலம் விளக்கம் தேடுவார்களே!
    அவர்கள் கண்டுபிடிப்பு அனைத்தும் கடவுளை லாரியில் அடிபட்ட நாயை போல மாற்றும் போது அவர்கள் தங்கள் கண்டுபிடிப்பை வெளியிடாமலே விட்டிருப்பார்களே

  3. அணுத்துகளைப் பற்றி இவ்வளவு அறிவோடு பேசும் நீங்கள் அணுமின் நிலையத்தை ஆதரித்தால் எவ்வளவு நன்று..
    இப்போது தெரிகிறதா அணுசக்தியின் மகிமை?

    • Mr.Stonemind!!!,
      Here people against Nuclear reactors are due to our incomplete knowledge on it. Like we don’t have technology to destroy the waste from the reactor, also the safety features for the reactors accidents are not appreciable. If any accidents, at present it persist for long time and affect living beings over generations.
      These people never against research, from the research only you can find solution for all reactor related issues. But without those solutions bringing that technology to the public is evil and crime.
      Now you tell do we have to support current reactors or more research to solve existing issues?

      • தேனியில் அமைய உள்ள நீட்டிரீனே ஆய்வுகளத்தை எதிர்ப்பது ஏன்… CERN போல இந்தியாவில் வந்தால் நல்லதுதானே….

        • யோவ், உங்களுக்கு அணு உலைன்னா என்னன்னு தெரியலைன்னு பாத்தா, CERN-ல இருக்குறது என்ன, நியூட்ரினோ-ன்னா என்ன, ஏன் எத்திக்குறாங்க இப்படி எதுவுமே தெரியல.

          அணு காப்பீட்டு மசோதான்னா என்னன்னு கூட தெரியலை, இன்ஸ்சூரன்ஸ்ங்குறீங்க.

          ஏன் எதிர்க்குறாங்கன்னு தெரியாம தான் ஆதரிக்குறீங்களா? எதையாவது தத்து பித்துன்னு உளற வேண்டியது. நீங்க நியூட்ரினோ ஆய்வுகளம் வருவதை ஆதரிக்குறீங்களா எதிர்க்குறீங்களா? ஏன்?

          ஏற்கனவே, கருப்பின மக்களுக்கு நிரந்தர விடுதலையை அகிம்சை வாங்கிக்குடுத்ததுன்னு சொன்னீங்க, அதுக்கு ஆதாரம், தரவுகள் கேட்டதுக்கு ஏரியாவுலேயே ஆளைக் காணும்.

          ஒழுங்கா படிச்சுட்டு வாங்க, இல்லைன்னா படிச்சவங்ககிட்ட கேட்டுட்டு வாங்க, ரெம்ப நாளைக்கு இப்படி அரைகுறையா அழையாதீங்க.

          • அதற்கு பதில் அளித்தாயிற்று…அதை பிராசுரிக்க வில்லையெனில் நான் பொறுப்பல்ல

  4. வினவு வெளியிட்ட மிகச்சிறந்த கட்டுரைகளில் இதுவும் ஒன்று. இது மாதிரியான அறிவியல் மற்றும் கொஞ்சம் அரசியல் கலந்த கட்டுரைகளை நிறைய வெளியிடுங்கள். தமிழ் கூறும் நல்லுலகம் மிகவும் பலனடையும். வாழ்த்துக்கள்.

  5. நிலவுடமை சமூக அமைப்பின் கீழ் உற்பத்தி சாதனங்களிலும், தொழில் நுட்பத்திலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், தத்துவஞானத்துறையின் குரல்வளை மீது மதபீடங்கள் அமர்ந்திருந்தன. இந்தியாவில் பார்ப்பனீயமும், ஐரோப்பாவில் கிறித்தவமும் அறிவியல் வளர்ச்சியை மறித்து நின்றன ஆம் இது உண்மை தான்!

  6. //எதெல்லாம் அறியப்பட்டதோ அதெல்லாம் கடவுளின் துணையால் என்றும் எதெல்லாம் அறியப்படாதததோ அதெல்லாம் சாட்சாத் அந்தக் கடவுளே தானென்றும் சாதிக்கிறார்கள். ஒளியின் கதிர்கள் ஊடுறுவாத இருளின் பலத்தில் வாழும் பரிதாபகரமான நிலையிலேயே ‘கடவுள்’ இருக்கிறார் – விஞ்ஞானம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்தைப் பரவலாக்கி வருகிறது.//

    ஊரை ஏய்த்து பிழைக்கும் மதவாதிகளுக்கும், அதை நம்பி சாகும் அப்பாவி மக்களுக்கும் உண்மையை புரியவைக்கும் முயற்ச்சி. அருமை.

  7. மதவாதிகள் யாரும் அதற்கு god particle என்று பெயர் வைக்கவில்லை. விஞ்ஞனிகள்தான் வைத்தார்கள்.

  8. நல்ல அறிவியல் தலைப்பை இதை விட கேவலமாக எழுதவே முடியாது. வரிக்கு வரி பதிவு முழுவது அபத்தம், அறிவியல் உண்மைக்கு புறம்பானதை எழுதியிருக்கீங்க. இதையெல்லாம் நீங்க சைடுல போட்டிருக்கும் படத்தில் இருக்கிறவங்க படிச்சா ஒரே சமயத்தில் எல்லோரும் தூக்கு மாட்டிகிட்டு செத்துடுவாங்க. அடிப்படை நேர்மை கூட இல்லை. இந்த யோக்யதையில நீங்க சமூகத்தை காப்பத்தறேன்னு கிளம்பியிருக்கீங்க. கடவுள் இல்லைன்னு உங்களுக்குத் தோணினா அதை சொல்லிட்டு போங்க. விஞ்ஞானி கக்கா போறதுக்கு கக்கூஸ் கட்டினாலும் கடவுள் கக்கா போகாம தவிக்கிறார்னு பதிவு போட்டு உமது அறியாமையை காட்டத் தான் வேண்டுமா?

      • @ Balaji

        \\தோன்றியதிலிருந்து லட்சத்து கோடிக்கோடியில் ஒரு பங்கு விநாடியில் ஹிக்ஸ் போசான் வேறு துகள்களாக மாறிவிடும். அதற்குள் அதைப் படம் பிடித்தாக வேண்டும்.\\ ஹிக்ஸ் போசானை ஒருபோதும் படம் பிடிக்க முடியாது, பிடித்திருந்தால் அதைப் போட்ட இணையதள லிங்கு கொடுக்கவும்.

        \\புரோட்டானை விநாடிக்கு 3 லட்சம் கிமீ வேகத்தில் (ஒளியின் வேகம்) எதிரெதிர் திசையில் மோத விட்டுதான் இது சாத்தியமானது. \\ ஒளியின் வேகத்தில் எந்த துகளும் பயணிக்க முடியாது. முடியவே முடியாது. சற்றேனும் குறைவாகத்தான் இருக்கும்.

        \\பல அணுகுண்டுகள் சேர்ந்து வெடித்தாற்போல நடக்கும் இந்நிகழ்வில் வெளிப்படும் வெப்பத்தை தணிக்க மிகவும் குளிர்ச்சியூட்ட வேண்டி இருக்கும். \\ வெடிக்கும் புள்ளியில் அதீத வெப்பம் தோன்றும், பல அணுகுண்டுகள் சேர்ந்து வெடித்தாற்போல என்பது கேனத் தனம்.

        \\பின்னர் ஹெப்ளர், தனது \\ Kepler என்பதை இப்படித்தான் தமிழில் எழுத முடியுமா?

        \\அணுவைப் பிளக்க முடியும் என்கிற ஜேஜே தாம்சனின் கண்டுபிடிப்பும் \\
        \\ அதனைத் தொடர்ந்து விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் அணுவைப் பிளக்க முடியும் என்பது நிறுவப்படுகிறது.\\ அணுவை எத்தனை பேர்தான்யா பிளப்பார்கள்?

        \\அணுவின் உள்ளே எலக்ட்ரான்கள், மியூவான்கள், டாவோ மற்றும் இவற்றின் எதிர்த்துகள்கள் 3 உட்பட 12 அடிப்படைத் துகள்களும், 4 நான்கு விசைகளும் இருப்பது கண்டறியப்படுகிறது. ஆனால், இந்த பதினாறும் சேர்ந்தாலும் அணுவின் நிறையைக் கணக்கீடு செய்வதில் குறைபாடு இருந்ததால், பதினேழாவதாக ஒன்று இருக்க வேண்டும் என்கிற கருத்தை இந்திய விஞ்ஞான போஸ் முன்வைக்கிறார் – அதை ஐன்ஸ்டீனும் ஒப்புக் கொள்கிறார்.\\ எல்லா கேனத் தனத்தையும் கூட விட்டு விடலாம். இதுபோல ஒரு கேனத் தனம் இருக்குமா? இதில் போஸும் ஐன்ஸ்டீனும் எங்கேயிருந்து ஐயா வந்தார்கள். அவங்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? இது முன்வைக்கப் பட்ட ஆண்டு 1964 , ஐன்ஸ்டீன் செத்து பத்து வருஷம் ஆன பின்பு. \\போஸ் முன்வைக்கிறார் – அதை ஐன்ஸ்டீனும் ஒப்புக் கொள்கிறார்.\\ இவ்வளவு கேனையாகவா இருப்பீர்கள்? அப்போ ஹிக்ஸ் என்று ஒருத்தர் இவங்க ரெண்டு பேத்துக்கும் காபி ஆத்தும் வேலையையா செய்தார்?

        • ஹிக்சு போசானை மாத்திரமல்ல, எலக்ட்ரான், ஏன் போட்டானைக் கூட அப்படியே படம் பிடிப்பது தற்போது சாத்தியமில்லைதான். அதற்கு அறிவியல் முன்னேற்றம் இன்னும் தேவைப்படுகிறது. ஆனால் இத்துகள்களின் வழித்தடங்களை படம் பிடிக்க இயலும். ஒளியின் திசைவேகத்தை விட சிறிது குறைவுதான். ஆனால் பேட்டா கடையில் செருப்புக்கு போடும் டேக் மாதிரி தான் இதுவும் என நினைக்கிறேன். பல அணுகுண்டுகள் என குறிப்பிட்டது தவறுதான். ஆனால் வெப்பநிலையை டிகிரியில் சொல்வதால் அனைவருக்கும் புரிந்து விடுமா என்ன? அணுக்கருக்களின் தனிப்பட்ட துகள்களின் எடையும், மொத்த அணுக்கருவின் எடையும் வித்தியாசமாக இருந்த்தை ஹிக்சு வந்த பிறகுதான் கண்டுபிடித்தார்களா ஐயா
          ?

          • @mani
            \\பல அணுகுண்டுகள் என குறிப்பிட்டது தவறுதான். ஆனால் வெப்பநிலையை டிகிரியில் சொல்வதால் அனைவருக்கும் புரிந்து விடுமா என்ன?\\ ஏன் சூரியனின் மையப் பகுதியில் உள்ளதைப் போல லட்சம் மடங்கு என்பது போல எதையாவது சொல்லலாமே? அணுகுண்டை போட்டா என்ன விளைவு வரும்னு உங்களுக்கே தெரியும், அதெல்லாம் இங்கே வருமா என்ன?

            \\அணுக்கருக்களின் தனிப்பட்ட துகள்களின் எடையும், மொத்த அணுக்கருவின் எடையும் வித்தியாசமாக இருந்த்தை ஹிக்சு வந்த பிறகுதான் கண்டுபிடித்தார்களா ஐயா?\\ என்ன மணி நான் எழுதியதை படிக்காமலேயே கமண்டு போடலாமா? பதினேழாவதாக ஒரு துகளை [ஹிக்ஸ் போஸான்] போசா முன் வைத்தார்? நான் சொன்னது இதைத்தான், நீங்கள் வேறு எதையோ சொல்கிறீர்கள். நான் சொல்வதில் இருக்கும் உண்மையை தாங்கள் ஒருவராவது ஆமாம் சரிதான் என்று ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.

            • சூரியனோட மையப்பகுதி எவ்வளவு சூடா இருக்கும் என யாரும் உணரவில்லை இதுவரை. செர்ன் இல் வந்தது சூரிய மையப்பகுதி போல ஒரு லட்சம் மடங்கு என எழுதி இருக்கலாம். நாகாசாகி குட்டிப்பையன் விழ ஆரம்பித்த போது 4000 டிகிரி செல்சியசு வெப்பநிலை வெளிப்பட்டதாம். இப்போது செர்ன் இல் 1.6 டிரில்லியன் டிகிரி செல்சியசு. ஸ்பெக்ட்ரம் ஊழலில் முதலாளிகள் அடித்த 1.76 லட்சம் கோடிக்கே பூஜ்யத்தை இன்னமும் எண்ணிக் கொண்டிருக்கையில் இது கொஞ்சம் சிரம்ம் என நினைக்கிறேன்.
              மத்தபடி தான் முன்மொழிந்த துகளுக்கு தன்பெயரையே போசு வைத்தார் என எங்காவது சொல்லி இருக்கிறார்களா என்ன‌?

              • @ mani

                \\சூரியனோட மையப்பகுதி எவ்வளவு சூடா இருக்கும் என யாரும் உணரவில்லை இதுவரை. \\ ஐயா, எந்த கிரகத்துல இருந்து வந்தீரு? சூரியனின் மையப் பகுதியில் என்ன வெப்பமுனு ஏகப் பட்ட தளத்துல இருக்கு, படிச்சுப் பாரும். சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் இருக்கும் தூரத்தை எந்த டெயிலர் டேப்பை வச்சு அளந்தான்னு கேட்பீறு போலிருக்கே……..

                \\மத்தபடி தான் முன்மொழிந்த துகளுக்கு தன்பெயரையே போசு வைத்தார் என எங்காவது சொல்லி இருக்கிறார்களா என்ன‌?\\

                மணி, அப்போ எதற்காக ஊரெலாம் ஹிக்ஸ் போஸான்னு பேப்பர், தொலைகாட்சி எல்லாத்திலும் தொடை கிழிய கத்திகிட்டு இருக்காங்க? போஸான் என்ற பெயரைக் கூட சத்யேந்திரநாத் போஸ் வைத்ததில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? எந்த ஒரு முன்மொழிவும், கண்டுபிடிப்பும் அதைக் கண்டுபிடித்த விஞ்ஞானியின் பெயரில் வருவது தொன்று தொட்டு நடந்து வருவதுதான். ஹிக்ஸ் முன்மொழிந்ததால் அதற்குப் பெயர் ஹிக்ஸ் போஸான். அவரே நாமகரணம் சூட்டனும்னு எந்த அவசியமும் இல்லை.

                மணி உம்மோடு வாதிட்டது போதும், இத்தோடு நிறுத்திக் கொள்வோம்.

                • ஒரு நிமிசம்.. உங்களைப் போன்றவர்களுக்கு பத்தின் அடுக்கில் செல்சியசு கணக்கில் சொன்னால் புரிந்து விடுமாயிருக்கும். சாமான்யர்களுக்கு அறிவியலின் அந்த திமிர் மொழியில் எழுத முடியாது. அவர்களுக்கு தெரிந்த உலகத்தில் இருந்து சொல்லி இருக்கிறார்கள். இதை ஏன் எனக்கு விருப்பமான முறையில் எழுதவில்லை என்பதுதான் நீங்கள் வைக்கும் கேள்வி. சரியா சொன்னால் நான் படித்த சயின்சு மேகசின்ல இதைத்தானே சொல்லிருக்காங்க• நீ ஏன் சொந்தமா வேற ஒன்றோட ஒப்பிடுகிறாய் என்ற அடிமைப்புத்தியின் விளைவுதான் இந்த கேள்வி.
                  ஹிக்சை கூட கிக்சு என எழுதி இருக்காலாம். அத விடுங்க• ஹிக்சு முன்மொழிந்த காரணத்தால் ஹிக்சு னு மட்டுமதான பெயர் வைத்திருக்க வேண்டும். என்னத்துக்காக போசான் என்ற பெயரையும் சேர்த்து வைத்திருக்காங்க•

                  • @mani

                    நீங்க நினைக்கிற அளவுக்கு நான் கேனை இல்லை மணி. ஸ்பெல்லிங் தவறு விட்டுத் தள்ளுங்க, போய் புனை சுருட்டு, தவறான தகவல்கள், இது ஏற்கத் தக்கதல்ல. ப்ளீஸ்……. நீங்களும் அதையே திரும்பத் திரும்ப செய்யாதீங்க. போயிட்டு வாங்க.

                    • போசான் என பெயர் ஏன் வந்த்து என்ற என் கேள்விக்கு நீங்கள் செலக்டிவாக பதில் சொல்லாமல் ஓடுகிறீர்களே! இதை உங்களைப் போன்றவர்களிடம் நான் எதிர்பார்க்கவில்லை.

                    • @mani
                      என்னை வச்சு நீர் பிசிக்ஸ் கத்துக்க வேணாம், நல்ல புத்தகமா எடுத்து படியும். தொந்தரவு செயாதீரும்.

                    • @தாஸ் அண்ணே, உங்களுக்கே இயற்பியல் தெரியலைன்னு நான் சொன்னதுக்கு பதில் சொல்லலையே..
                      நீங்க பெரிய பிசிக்ஸ் லார்டு தாண்ணே… அப்படியே இதுக்கு பதில் சொல்லுங்க அண்ணே..

                      எலக்ட்ரானை அணுக்கருவுடன் இணைத்து வைத்திருக்கும் விசை மின்னூட்டங்களுக்கிடையே நிலவும் மின் காந்த விசைதான் – மின் காந்த விசை மட்டும் தானா ? வேற எதுவுமில்லையா?

                      போசான் என பெயர் வர காரணம் என்ன?

                      ஹிக்ஸ் போசான் என்றால் என்ன? அணுவின் மொத்த நிறையானது, அணுத்துகள்களின் நிறையின் கூட்டுத்தொகையை விட அதிகமாக இருக்க காரணம் என்ன?

                      அணுவை பிளக்க முடியும் என்று சொன்ன/கண்டுபிடித்தவர் யார்?

                      கடைசியாக கடவுள் எங்கே எப்படி இருக்கிறார்?

          • @mani
            \\ஆனால் இத்துகள்களின் வழித்தடங்களை படம் பிடிக்க இயலும்.\\ ஹிக்க்ஸ் போசானின் வழித் தடத்தைக் கூட பிடிக்க முடியுமா என்றுதான் நானும் கேட்கிறேன் நண்பரே. அதுவும் முடியாது. அது மற்ற பல துகள்களாகச் சிதைவுறும்[decay], அவற்றின் வழித் தடத்தைத் தான் படம் பிடிக்க இயலும்.

            \\ஒளியின் திசைவேகத்தை விட சிறிது குறைவுதான். ஆனால் பேட்டா கடையில் செருப்புக்கு போடும் டேக் மாதிரி தான் இதுவும் என நினைக்கிறேன்.\\ பட்டா கடையில் ரூ.299.99 என்று போட்டிருந்தால் ரூ.300 என்றுவைத்துக் கொள்ளலாம், ஆனால் இங்கே அது அவ்வாறு வைத்துக் கொண்டால் அது உலக மகா தவறு நண்பரே.

            • அப்போதும் கூட வழித்தடத்தை படமெடுக்க சாத்தியமில்லைதான். அதிலிருந்து பெரும் துகள்களைத்தான் அதுவும் அதன் வழித்தடத்தைத்தான் படமெடுக்க முடியும். இதெல்லாம் டெக்னிக்கல் விசயங்கள். பேசுபொருளின் மையமான விசயத்திற்கு இவற்றை விளக்குவது அவசியமுமில்லாதது என கருதுகிறேன். ஒருவேளை அப்படி படம் பிடிக்க முடியாத இடத்தில் கடவுள் இருக்கலாம் எனக் கருதுகிறீர்களா? – சந்தேகம் தான். கிண்டல் என நினைத்து விடாதீர்கள்.
              உலக மகா தவறு ன்னா எனக்கு புரியல• அந்த ஒரு பைசா மீதம் கொடுத்து விடுவதால் அளவு நிலை மாறி பண்பு எதுவும் மாறி விடுமா – இதுவும் ஒரு சந்தேகம்தான். கேலியோ கிண்டலோ அல்ல‌

              • @mani

                \\உலக மகா தவறு ன்னா எனக்கு புரியல• \\ வினவு மாதிரி அரைகுறையா படிச்சா இது தான் பிரச்சினை மணி. இப்படியெல்லாம் கேள்வி கேட்டுகிட்டு இருந்தீங்கனா உங்க அறியாமை பல்லை இளிப்பது கேவலமாகத் தெரியும். எவனாவது விஞ்ஞானி ஒளியின் வேகத்துல புரோட்டான் போச்சுன்னு எங்கேயாவது சொல்லிப் பார்த்திருகீன்களா? பேட்டா செருப்பு கணக்கெல்லாம் உங்களுக்கே தெரியும்போது அவனுக்குத் தெரியாதா? ஏன் சொல்வதில் அவன் என்ன முட்டாளா? போங்க, சார்பியல் கொள்கையை நல்லா படிங்க புரியும்.

                • எப்படி இருந்த ஜெயதேவ் தாஸ் அண்ணன் இப்படி ஆகிட்டாரே 🙁

                  கட்டுரை எழுப்பிய முக்கிய கேள்வியான முதலில் பொருளா அல்லது சிந்தனையா என்ற கேள்வி பக்கமே போகாம இப்படி சில்லறையான விவரப்பிழை பின்னால ஒளிஞ்சுகிட்டு திரிவது என்னமோ போல இருக்கு. அந்த விவரமெல்லாம் சரியா இருந்தா கட்டுரையை அண்ணன் ஒப்புக்குவாரு போல, யாரு கண்டா நாத்திகரா கூட மாறியிருக்கலாம்

                  • @ ஊசி

                    கடவுள் இல்லைன்னு சொல்வதற்கு ஆயிரம் வழிகள் இருக்கு, நீங்க எடுத்துகிட்ட வழி, வாலிப வயோதிக அன்பர்களே….ன்னு சொல்லு மருந்து விக்கிரவனை விட கேவலமானதா இருக்கு. ஒரு கருத்தை சொல்வதற்கு புளுகு மூட்டையா அள்ளி விட வேண்டும். இதை ஏற்றுக் கொள்ளும் நீர் சிறிதளவாவது வெட்கப் பட வேண்டும் அன்பரே.

                    • தாசு அண்ணே அதான் இப்படி எழுதியிருக்கேன்
                      //அந்த விவரமெல்லாம் சரியா இருந்தா கட்டுரையை அண்ணன் ஒப்புக்குவாரு போல, யாரு கண்டா நாத்திகரா கூட மாறியிருக்கலாம்//

                      போகட்டும் நீங்க சுட்டிக்காட்டும் விவரப்பிழை கட்டுரையோட மைய கருத்தான பொருள் முதலா அல்லது கருத்து முதலா என்பதற்கு எந்தவிதமான இடையூறும் செய்யலயே

                      போசு பேரு வச்சாரா? ஆடம் பாம் வெப்பமா, கெப்ளரை ஹெப்ளர்னு எழுதியது இதெல்லாம் ஒரு மேட்டரா? சும்மா விளிம்புல கத்தி சுத்தாம மையத்துக்கு பாயுங்க.

                    • @ ஊசி

                      \\போசு பேரு வச்சாரா? ஆடம் பாம் வெப்பமா, கெப்ளரை ஹெப்ளர்னு எழுதியது இதெல்லாம் ஒரு மேட்டரா? சும்மா விளிம்புல கத்தி சுத்தாம மையத்துக்கு பாயுங்க.\\ இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது சோனியா காந்தின்னு சொன்னாலும் ஏத்துக்கணுமா? இங்கே எழுதியிருப்பவை அதை விட ஆயிரம் மடங்கு கேனத்தனமாக உள்ளது. இதுக்குப் பெயர் தான் அறிவியல் கட்டுரையா? எதை வேண்டுமானாலும் எழுவதற்கு பெயர் அறிவியல் கட்டுரை அல்ல அன்பரே. இதையே இந்த லட்சணத்துல புரிந்து கொண்டு இருக்கும் இந்த கட்டுரையாளர் பிளக்கும் விளக்கம் எந்த லட்சணத்தில் இருக்கும்? உமக்குத் தெரியாத விஷயத்தைப் பத்தி தெரிஞ்சா மாதிரி எதற்கு பில்டப் கொடுக்க வேண்டும், அதிலிருந்து ஏதோ முடிவுக்கு வருவது போல காண்பித்துக் கொள்ள வேண்டும்? ஊசி, உம்மிடமும் வாதிட விருப்பமில்லை. விவாதத்துக்கு இத்தோடு முற்றுப் புள்ளி.

                    • தாஸ் அண்ணே,

                      சோனியா காந்தி இல்ல நல்லி குப்புசாமின்னு சொல்லிட்டு அடுத்த மேட்டருக்கு போலாமே? அதை விட்டுட்டு நீ தப்பா சொல்லிட்ட அதனால பேச மாட்டேன்னு சொல்றது என்ன நியாயம், இல்லாததை இருக்குன்னு ”பொய்” சொல்லும் ஆன்மீக அன்பர்களுடன் நாங்க பேச தயங்குவதில்லையே, விவரம் தப்புன்னா சுட்டிக்காட்டுங்க திருத்திக்கலாம்.

                      கட்டுரையோட மையத்துக்கு வராம டபாய்க்க நீங்க அடிக்கும் ஸ்டன்ட் வொர்க் ஆகலை, அதனால என்னோடயோ மணியோடயோ வேணாம், நீங்க பாட்டுக்கு வானத்தை பாத்து கூட பொருள் முதலா இல்லை கருத்து முதலான்னு சொல்ல்லாமே.

                      மொத்த கருத்திலேயே முரண்பாடு இருக்கும்போது அங்க ஒரு சொட்டை இருக்கு இங்க ஒரு புள்ளி இருக்குன்னு சொல்றது அதெல்லாம் சரியா இருந்தா கட்டுரையோட கருத்தை முழுசா ஏத்துகிறீங்கன்னு அர்த்தம்.

                      ஒரு வேளை அப்புடித்தானா? உங்களை நம்பி ஒரு 700 கமெண்டு வரும்னு காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இரசிகர்களை ஏமாற்றி விடாதே தாசண்ணா…

                    • @ ஊசி

                      அங்க இங்க சொட்டை அப்படின்னு சொன்ன, வினவு ஏதோ கொஞ்சம் உண்மையும் எழுதிட்டதா ஆயிடும். மொத்தமும் புளுகு மூட்டை. . எதைச் சொல்ல எதை விட??? இதுக்கு பதிவு வேற தேவையா? அதை விட உன்னை மாதிரி கொசுவுங்க இங்க எக்கச் சக்கம். கொஞ்சம் இரு……. போயி குட் நைட் வாங்கிகிட்டு வரேன்.

                    • தாசு அண்ணே This is so unlikely of you 🙁 பரவால்ல இந்த கட்டுரை கோணலாவே இருக்கட்டும் இன்னிக்கு புதுசா ஒண்ணு போட்டிருக்காங்க, ‘திராணி’யுடன் அங்கே வந்து சதங்கை கட்டி ஆடுங்க 🙂

                • சார்பியல் கொள்கைல உங்க கண்ணுக்கு ஒளியோட திசைவேகத்துல போற பொருள் காணாம போயிரும்கிறது தான் கண்ணுல பட்டுச்சுன்னா அய்ன்ஸ்டீன் தான் பாவம். சார்பியல் கொள்கைய இதவிட கொச்சையா யாரும் புரிந்துகொள்ள முடியாது. விளிம்புலயே சுத்தி சுத்தி அறிவயல அரசியல இலக்கியத்த அவ்வளவு ஏன குடும்பத்த கூட புரிஞ்சுக்க முடியாது.

        • Dear genius super understanding ,listen did you know about the bose-einstein statics ? this statics will explain motion of mass less and charge particle (like photon and electron) first this statics are discovered by N.S bose and then he send his techies to einstein. Eninstein was expand the statics to explain the motion of photon (Photon not a proton ok )in 1964 peter higgs was assume the higges particle at a same time he want explain the motion ,interaction of the higges particle .The bose einstein statics was did it so now we are called like higgs-boson .please try to read the history of science clearly

      • @ Balaji

        \\ஒளியும் மின்காந்த அலைகளாக பரவுவதாக ஐன்ஸ்டீன் விளக்குகிறார் – \\ இதைச் சொன்னவர் மேக்ஸ்வெல், ஐன்ஸ்டீன் அல்ல.
        \\இதிலிருந்து தான் போசான்களுக்கான முன்மொழிவை பெறுகிறார் போஸ்.\\ பேத்தல்.

        \\விஞ்ஞானி அப்துல் சலாம் மற்றும் வெய்ன்பெர்க் எலக்ட்ரானை அணுக்கருவுடன் இணைத்து வைத்திருக்கும் விசைகளை ஒருங்கிணைத்துப் புரிந்துகொள்ள விழைகின்றனர். \\ எலக்ட்ரானை அணுக்கருவுடன் இணைத்து வைத்திருக்கும் விசை மின்னூட்டங்களுக்கிடையே நிலவும் மின் காந்த விசைதான். [Electromagnetic Force ], ஆனா இவங்க அதையா ஆராய்ச்சி செய்தாங்க?

        \\இது தான் பொருட்கள் ஆற்றலை இழந்து நிறை பெற காரணம். \\ பேத்தல்.

        \\இந்த ஆய்வின் மூலம் துகள்களை ஒருங்கிணைத்துப் புரிந்து கொள்வது சாத்தியமானாலும், ஈர்ப்பு விசைக்குக் காரணமான க்ராவிட்டான் என்ற துகளும், நமது பிரபஞ்சத்தில் கண்டு ஆராயப்படாத 96% கரும்பொருள் மற்றும் கரும் சக்தி பற்றி இன்னமும் விளக்கங்கள் வரவேண்டியுள்ளது – அது சாத்தியப்படும் காலம் மிக அண்மையில் தான் இருக்கிறது.\\ இதென்ன கடலை மிட்டாய் கடையா, இதோ பக்கத்தில்தான் இருக்கு என்பதற்கு? அதெல்லாம் என்னன்னே தெரியாத போது, அதைப் பத்தி இப்போதைக்கு யாரும் உறுதியா எதுவும் சொல்ல முடியாத நிலையில், நீங்க அடிச்சு விடறீங்களே!!

        \\மதவாதிகள் இதை தங்களது வழமையான குயுக்தியுடனே எதிர்கொள்கிறார்கள் – அதாவது, எதெல்லாம் அறியப்பட்டதோ அதெல்லாம் கடவுளின் துணையால் என்றும் எதெல்லாம் அறியப்படாதததோ அதெல்லாம் சாட்சாத் அந்தக் கடவுளே தானென்றும் சாதிக்கிறார்கள். ஒளியின் கதிர்கள் ஊடுறுவாத இருளின் பலத்தில் வாழும் பரிதாபகரமான நிலையிலேயே ‘கடவுள்’ இருக்கிறார் – விஞ்ஞானம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்தைப் பரவலாக்கி வருகிறது.\\ இதுக்கும் கடவுளுக்கும் என்னையா சம்பந்தம். உலருவதர்க்கும் ஒரு அளவு வேண்டாமா?

        • \\விஞ்ஞானி அப்துல் சலாம் மற்றும் வெய்ன்பெர்க் எலக்ட்ரானை அணுக்கருவுடன் இணைத்து வைத்திருக்கும் விசைகளை ஒருங்கிணைத்துப் புரிந்துகொள்ள விழைகின்றனர். \\ எலக்ட்ரானை அணுக்கருவுடன் இணைத்து வைத்திருக்கும் விசை மின்னூட்டங்களுக்கிடையே நிலவும் மின் காந்த விசைதான். [Electromagnetic Force ], ஆனா இவங்க அதையா ஆராய்ச்சி செய்தாங்க?////////////

          அணுவை, அதாவது எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் அடங்கிய பருப்பொருளை பிணைத்து வைத்திருக்கும் விசைகள் (interactions) நான்கு – Strong, Electromagnetic, Weak, Gravitation. இந்த interaction-களை ஒருங்கினத்து புரிந்துகொள்ள விழந்தனர் என்பதையே கட்டுரை குறிக்கிறது.

          எலக்ட்ரானை அணுக்கருவுடன் இணைத்து வைத்திருக்கும் விசை மின்னூட்டங்களுக்கிடையே நிலவும் மின் காந்த விசைதான் – மின் காந்த விசை மட்டும் தான் என்று சொல்வதில் இருந்தே உங்கள் அறிவு விசாலம் புரிகிறது.

          ஒன்றும் இல்லாத இடத்திலிருந்து எப்படி தானாகவே ஒரு பொருள் தோன்ற முடியும், அதனால் கடவுள் அனைத்தையும் படைத்தார் என்பது ஆன்மீகவாதிகளின் வாதம். ஒன்றும் இல்லாத இடத்தில் இருந்து தான் பொருட்கள் தோன்றின, நிறையை பெற்றன என்கிறது Particle Physics. அந்த கருதுகோளிற்கு ஆதாரமாக ஹிக்ஸ் போசான் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு கடவுளை அடித்து நாயைப்போல வீசியுள்ளது தானே?

          உங்களுக்கு எதுக்கு இவ்வளவு ஆத்திரம் வருது பாஸ்? உங்க பிரச்சனை ஹிக்ஸ் போசானா, இல்ல வினவு கட்டுரையா? தெளிவான வாதத்துடன் வாங்க, ஆத்திரப்பட்டு புத்தியில்லாம வராதிங்க பாஸ்.

        • அலையா துகளா என ஒளி பற்றிய புரிதலில் போட்டான் முன்வரைவை முன்வைத்தவர் என்ற முறையில் அய்ன்ஸ்டீன் வருகிறார். மேக்ஸ்வெல் சமன்பாடுகளில் இதற்கான கூறுகள் இருப்பதை கட்டுரை முன்வைக்க தவறி உள்ளது. மின்காந்த விசை மாத்திரம் தான் என்ற தங்களது புரிதல் குறைபாடு உடையது. அப்துஸ் சலாம் ஆய்வுகளில் இது தான் முன்னோடியானது எனக் கருதுகிறேன். மற்றபடி நோபல் பரிசடிப்படையில் எல்லாம் நான் பரிசீலிக்க தயாராகவில்லை. பொருட்கள் ஆற்றலை இழந்து நிறை பெறுவது என்பது இயற்பியலைப் பொறுத்தவலை பினாத்தலா அய்யா?

          • @mani

            \\பொருட்கள் ஆற்றலை இழந்து நிறை பெறுவது என்பது இயற்பியலைப் பொறுத்தவலை பினாத்தலா அய்யா?\\ ஏன் பீச்சுல சுண்டல் விக்கிறான், குழாயில இன்னிக்கு தண்ணீர் வரலை, நாலு நாளா எனக்கு வயித்து வலி எல்லாமே கூட உண்மைதான், அதை இங்கே சொல்லும்போது அதற்க்கான தேவை Relevance இருக்க வேண்டுமல்லவா? இது உண்மைதான், but, அந்த வாக்கியத்தில் அதை சம்பந்தமில்லாமில் உளறியிருக்கிறார்கள்.

            • சம்பந்தம் இருப்பது போலத்தான் எனக்கு படுகிறது. குற்றம் சாட்டுபவர் நீங்களாக இருப்பதால் என்ன சம்பந்தம் இல்லை என எனக்கு விளக்கினால் புரிந்து கொள்ள முடியும்

              • @mani

                \\சம்பந்தம் இருப்பது போலத்தான் எனக்கு படுகிறது.\\ வினவு மேல உங்களுக்கு இருக்கும் பக்தி உங்க கண்ணை மறைக்குது அவ்வளவுதான். என்ன செய்ய ……?? [அதுசரி, அதென்னது தொடர்பு, கொஞ்சம் விளக்குங்களேன்…..]

                • எனக்கு புரியுது. என்ன புரிந்தது எனக் கேட்பதால் சொல்கிறேன். கட்டுரை முழுக்க சொல்லி வந்த விசயத்தில் முத்தாய்ப்பே இந்த வரிகள்தான். எப்படி பொருளுக்கு நிறை வந்த்து என்பதற்கான விளக்கம் முன்னர் தந்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். கடைசி வரை இன்னதுதான் தவறு என கூற மறுக்கும் தங்களது நிலைப்பாடுதான் புரியவில்லை. அறிவியலின் புரியாத பக்கங்களை விட நீங்கள் என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என புரிந்து கொள்வது சிரம்மாக இருக்கிறது

  9. உதாரனமாக முழு அரிவியலும் 100% என்ரால் இதுவரை கன்டுபிடிக்கப்பட்டவை 10% (?) என்ரு வைத்தால் மதவியாபாரிகலிடம் இருப்பது 1% (?) உங்கலுக்கு இவர்கலைமட்டும் மட்டம் தட்ட முடியுமே தவிர 100% அரிவியலைப்படைத்த கனக்கிடமுடியா அரிவாட்ரலைக்கொன்ட கடவுலை குரைகூர முடியாது

    • கொம்பு முளைத்த கடவுள், மனிதன் பாதி மிருகம் பாதியாக இருந்தவன், பிறகு, காத்தாகவும், மழையாகவும், வானமாகவும் மாரி, பின்னர், மனிதனாக அவாதாரம் எடுத்து மலையை குடையாக எடுத்து கண்ணனாகவும், ராமனாகவும், புத்தராகவும், ஏசுவாகவும், மொகமதுவாகவும், மார்க்ஸாகவும், மாவோவாகவும் அவதாரம் எடுத்து, பின்னர் இப்பொழது ஹிக்ஸ் போஸானாக அவதாரம் எடுத்துள்ளான். அக்ரினையாக பிறந்து அக்ரினையாக மடிவானோ, அல்லது மீண்டும் மனிதனாக பிறப்பானோ?

  10. அளப்பறிய ஆற்றல்கொண்ட உங்கள் கடவுளால், இச்சமூகத்திற்கு என்ன பயன் என்பதே இதன் கேள்வி? கடவுள் என்ற பிரம்மை இல்லாமல் மனிதகுலம் எத்தனை தலைமுறைகள் வேண்டுமானாலும் வாழமுடியும், அறிவியலின்றி தற்கால மனிதகுலம் ஒரு வினாடிக்கூட சிந்திக்க முடியாது, வாழ முடியாது. இல்லாத ஒன்றுக்கு, வரிந்துக்கொண்டு செயல்படும் நீங்கள், இத்தனை நன்மையை அளித்த விஞ்ஞானத்திற்கு செலுத்தும் நன்றி என்ன?… விஞ்ஞானமே கூறுகிறது: முதலாளித்துவ சமுதயாத்தில், மதத்தை ஒழிக்க முடியாது. குறைந்தபட்சம், கடவுள் மயக்கத்தில் அறிவியலுக்கு எதிராக பேசாதவரை, உங்கள் மத நம்பிக்கை மக்கள் சமூகத்திற்கு தீங்கிழைக்காது!! இல்லையேல், கடவுள் என்ற பிரம்மையே உங்கள் வாழ்விற்கு அழிவைக்கொண்டுவரும்!!! அதுவும் விஞ்ஞான விதியே!!

  11. @பாலாஜி அவர்களுக்கு,
    கல்நெஞ்சம் கூறியது மிகச் சரி. எந்த ஒரு உற்பத்தி சக்தியும் பழுதற்று, 100% வளர்ச்சிக்குப்பிறகு இச்சமூகத்திற்கு கொண்டுவரப்படுவதில்லை. செர்ன் ஆய்வுக்கு அணு சக்தியைப் பயன்படுத்தி உள்ளார்கள். இதற்குப் உலகெங்கிலும் உள்ள பிற்போக்கு சக்திகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இது வெடித்தால் ஒரு புல் பூண்டுக்கூட எஞ்சியிருக்காது என்று ஓலமிட்டார்கள், பீதியை கிளப்பினார்கள். இது உண்மை, ஆனால் கட்டுப்படுத்தமுடியாதது அல்ல. இதற்கு பயன்படுத்திய அணு உலையின் சக்தி கூடங்குளம் அணு உலையை விட 1000 மடங்கிற்குமேல் அதிகம். இப்படிப்பட்ட பயங்கரத்தை விஞ்ஞானிகள் 99% நிரூபிக்கப்படாத அணு சக்தியையா பயன்படுத்துவார்கள். அணு விஞ்ஞான முழுமையாக நிரூபிக்கப்பட்டதால்தான், அதை மற்ற ஆய்வுக்கு பயன்படுத்தியுள்ளனர். கூடங்குள அணு உலையைவிட பல நூறு மடங்கு ஆற்றல்கொண்ட அணு சக்தியை அங்கு பயன்படுத்தும்போது, கூடங்குளத்தில் கட்டுப்படுத்த முடியாதா!! அங்கேயும் ஏகாதிபத்திய அரசுகள்தான். இந்த ஆய்வையும் ஏகாதிபத்திய தாசர்கள் மக்கள் நலனிலிருந்த செய்துள்ளார்கள்! கண்டிப்பாக ஏகாதிபத்திய சார்பிலிருந்தே சிந்திக்கப்பட்டிருக்கும்! அவ்வர்க்க நலனிலிருந்து செயல்பட்டாலும், மக்கள் நலனும் கலந்துள்ளது என்பதே உண்மை. அதனால்தான் நாம் ஆதரிக்கிறோம். கூடங்குளப் பிரச்சனையில், பாதுகாப்பு குறைவாக இருக்கவும் நிறைய வாய்ப்பு உள்ளதென்று கருதினால், அதை சரிசெய்யக் கோரி, திறக்கக் கோரவேண்டுமே தவிர, மூடக்கோரக்கூடாது. எந்த ஒரு விஞ்ஞானமும், பயன்பாட்டிற்கு வராமல் முன்னேறியதாக சரித்திரம் நமக்கு காட்டவில்லை. இதை கூறுவதற்கு காரணம், அணு சக்தி அடுத்தகட்ட வளர்ச்சியின் திரவுகோள். இதைத்தான் செர்ன் நமக்கு நிரூபிக்கிறது!! இப்படிப்பட்ட அணுசக்தியை எதிர்த்து மக்களிடம் பிரச்சாரம் செய்வது விஞ்ஞானத்திற்கு எதிராக திரட்டுவதே!! முக்கியமாக இருக்கின்ற உற்பத்தியை கட்டிக்காப்பதிலேதான் போய் முடியும்! இதை நமது தோழர்கள் உணர்வார்கள்!

  12. ///அணு விஞ்ஞான முழுமையாக நிரூபிக்கப்பட்டதால்தான், அதை மற்ற ஆய்வுக்கு பயன்படுத்தியுள்ளனர். கூடங்குள அணு உலையைவிட பல நூறு மடங்கு ஆற்றல்கொண்ட அணு சக்தியை அங்கு பயன்படுத்தும்போது, கூடங்குளத்தில் கட்டுப்படுத்த முடியாதா!!/////

    அணுக்கரு பிளப்பு, அணுக்கரு இணைவு பற்றியோ அல்லது உண்மையில் CERN ஆய்வுமையத்தில் நடத்தியது என்ன என்றோ எதுவும் தெரியாமலேயே ஏன் இப்படி சவடால் அடிக்கிறீர்கள்? தெரியுதோ, தெரியலையோ, நீங்க நம்புற கட்டுக்கதைய இங்க அவுத்து விடாதீங்க.

    CENR ஆய்வில் இரண்டு புரோட்டான் துகளை எதிரெதிரே ஒளியின் வேகத்தில் மோத விடுகிறார்கள். அதில் கண்டுபிடிக்கபட்டது தான் ஹிக்ஸ் போசான்.

    அணுக்கரு பிளப்பில், அணுவின் உட்கருவை பிளக்கிறார்கள், அப்படி பிளக்கும் போது அதில் ஒரு குறிப்பிட்ட ஆற்றல் கதிர்வீச்சாக வெளிப்படுகிறது, இது தான் ஆபத்து.

    அணு உலை ஆபத்தில்லாமல் இருப்பதாக இருந்தால், எதற்காக அணு காப்பீட்டு மசோதா? பாதுகாப்பானது என்றால், எதற்க்காக விபத்து ஏற்பட்டால் இந்த அளவு காசு தான் கொடுப்பேன்னு முரண்டு பிடிக்கனும் ?
    அணு உலையின் அரசியல் பற்றி வினவில் ஏகப்பட்ட கட்டுரைகள் வந்திருக்கு, கிரானைட் நெஞ்சம் தான் அதை படிக்குறதில்லை, நீங்களாவது அத படிச்ச பிறகு உங்க கருத்தை, எதிர் வாதத்தை வைக்ககூடாதா?

    • ///அணு உலை ஆபத்தில்லாமல் இருப்பதாக இருந்தால், எதற்காக அணு காப்பீட்டு மசோதா? பாதுகாப்பானது என்றால், எதற்க்காக விபத்து ஏற்பட்டால் இந்த அளவு காசு தான் கொடுப்பேன்னு முரண்டு பிடிக்கனும் ?//

      ஒரு நிறுவனம் இன்சுரன் நேரடியாக செய்வது இல்லை..ஏதேனும் ஒரு இன்சுரன் நிறுவனதக்கு குறிப்பிட்ட பணம் செலுத்த வேண்டும்.. வருடத்திற்து கோடிக்கண்கில் பீரிமியம் வீதம் 40 வருடத்திற்கு….

      நாற்பது வருடத்திற்கு உங்கள் நிறுவனம் செலுத்த கட்டாயப்படுத்தினால் நீங்கள் என்ன செய்வீர்கள்…

    • http://kalnenjam.blogspot.in/2012/09/blog-post_23.html
      வலைப்பூவில் அணுமின் நிலையத்தில் எத்தனை பேர் இறந்துள்ளனர்…அதன் பாதுகாப்பு அமைப்பு பற்றி கூறியுள்ளேன்…

      விஞ்ஞான்கள் உலகை காக்கப் பிறந்தவர்கள்… Hollywood படங்களைப் போல உலகை அழிக்க வந்தவர்கள் அல்ல.. hollywood பட மாயங்களில் இருந்து விலகி சிந்தித்தால் புரியும்..
      http://kalnenjam.blogspot.in/

  13. நான் பஞ்சாயத்தை கூட்டுகிறேன்…

    முதலில் பொருள், பின்னரே கருத்து என்போரே…

    இக்கட்டுரைப்படி பார்த்தால் முதலில் ஊகம் (அதாவது கருத்து) பின்னரே பொருள் என ஆகிறது.

    எகா : 1967ல் ஹிக்ஸ் போசான் துகள் பற்றி கருத்து கூறுகிறார், தற்போது அதை கண்டறிந்ததாக கூறுகிறார்கள்.

    கூடுதலாக சில‌
    எகா2 : சூரிய மையம் பற்றி கோபர்னிகஸ் கருத்து கூறுகிறார், பின்னர் கலிலீ அதை நிரூபிக்கிறார்.

    எகா3 : பெருவெடிப்பு கொள்கையை முதலில் 1927ல் தெரிவிப்பவர் ஐரோப்பாவை சேர்ந்த‌ ஒரு கதோலிக்க பாதிரியார் ( நாசமாப் போக. பெயர் நினைவுக்கு வர மறுக்கிறது ), பின்னர் அதை 1929ல் ஹார்வேர்ட் பல்கலையின் பேரா.ஹப்பிள் நிரூபிக்கிறார்.

    ஆக கருத்து தான் முதலில்..
    என்ன சொல்லுகிறீர்கள்..

    • ////சூரிய மையம் பற்றி கோபர்னிகஸ் கருத்து கூறுகிறார், பின்னர் கலிலீ அதை நிரூபிக்கிறார்.
      ஆக கருத்து தான் முதலில்./////

      சூரிய மைய்ய கருத்தை கோபர்னிகஸ் சொல்றதுக்கு முன்னாலும், சொன்ன பின்னால் கலிலியோ கண்டுபிடிச்சு நிருபித்த பின்னரும், எப்பவும் சூரியன் தானே சூரிய குடும்பத்தின் மையத்தில் இருந்தது, இருக்கிறது. இனியும் இருக்கும்.

      கோபர்நிகஸ் சொன்ன பின்னாடி அது நமக்கு தெரிய வருகிறது. நமக்கு தெரியாததால் அது அங்கு இல்லைன்னு ஆயிடுமா?

      என்ன கிரகம்டா சாமி, ஆதி(கால)சங்கரன் சொன்னத இன்னுமா புடிச்சுகிட்டு தொங்குறாங்க?
      ஊத்த வாய் சங்கராச்சாரியை இன்னும் ஊருக்குள்ள விட்டு வச்சிருக்கிறதால தான் இப்படிப்பட்ட பிரச்சனையெல்லம் வருது.

      • நீங்கள் கூறியதை வைத்தே கடவுளைப் பற்றியும் ஒரு கருத்திற்கு வரலாம். மனிதனின் கருத்துக்கள் ஒரு பொருளைப் பார்த்துதான் தோன்றுகிறது என்றால், கடவுள் என்ற ஒரு பொருளை பார்த்த பிறகுதானே மனிதனும் கடவுளைப் பற்றிய தெளிவிற்கு வந்திருப்பான்.

        • ஆமாம், நீங்கள் சொல்லுவது சரிதான்.

          இடி, மின்னல், நெருப்பு, புயல், சூரியன்,
          கிரகனம், etc…. போன்ற இயற்கை நிகழ்வுகளை (பொருட்களை) ஆதிகால மனிதனால் விளங்கி கொள்ள முடியாததால் அவற்றை கடவுள் ஆக்கிவிட்டான். ஆதிகால மனிதன் முதலில் இயற்கையைதானே வணங்கினான்?
          இப்பொழுது உள்ள கடவுள் எல்லாம் இடையில் தானே வந்தது?

          ¤ பிறக்கும் குழந்தைக்கு ஒன்றும் தெரியாது, பிறகு இந்த பூமியில் உள்ள பொருட்களை பார்த்து, பார்த்து தானே சிந்தனையை வளர்த்துக் கொள்கிறது.

          ¤ மூளை என்ற ‘பொருளில்’ இருந்து தானே சிந்தனை வரவேண்டும். மூளை இல்லாமல் உங்கள் கடவுளால் கூட சிந்திக்க முடியாது.

          • I dont know why people believing in science should not believe in god,believing in god is essential for using human ability to live in peace with the environment and not by abusing the human brain and live by exploiting the environment.

            @Adapaavi

            Even now,all those natural things are ferocious in nature and man can at best probabilistically estimate their impact.Science is not intuitive and that’s the biggest issue science has with intuition.Intuition is an art which the humanity cannot lose.A microscope ll only magnify things,it wont tell u what happens next.

            We can see this in how weather forecasts fail big time all across the world.Whether it is the tsunami or all the hurricanes that hit america,it is all a sign of the failure of intuition.

            Even this is a capitalistic thing where one wants instant gratification & Immediate results,thats why those scientists sit and punch numbers into the keyboard and do probablistic determination instead of using real factors to do so.

            If man loses intuition,he ll become extinct in no time.

  14. @Jaydevdass

    //எல்லா கேனத் தனத்தையும் கூட விட்டு விடலாம். இதுபோல ஒரு கேனத் தனம் இருக்குமா? இதில் போஸும் ஐன்ஸ்டீனும் எங்கேயிருந்து ஐயா வந்தார்கள். அவங்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? இது முன்வைக்கப் பட்ட ஆண்டு 1964 , ஐன்ஸ்டீன் செத்து பத்து வருஷம் ஆன பின்பு. \\போஸ் முன்வைக்கிறார் – அதை ஐன்ஸ்டீனும் ஒப்புக் கொள்கிறார்//

    What doo u mean by this ?? Boson is NOT invented by BOSE ??
    http://en.wikipedia.org/wiki/Boson
    read this… Don’t be fool CERN is initiated later to practically prove what BOSE and EINSTEIN theoretically proposed.. and its proved also.. And its also proved that people like U (who believe in GOD) are the dumbest among the universe…

    • @ Naan

      \\ஆனால், இந்த பதினாறும் சேர்ந்தாலும் அணுவின் நிறையைக் கணக்கீடு செய்வதில் குறைபாடு இருந்ததால், பதினேழாவதாக ஒன்று இருக்க வேண்டும் என்கிற கருத்தை இந்திய விஞ்ஞான போஸ் முன்வைக்கிறார் – அதை ஐன்ஸ்டீனும் ஒப்புக் கொள்கிறார்.\\

      Hi Naan, do you know how to read Tamil? The above is copied from this post, it says the seventeenth particle [Higgs Boson] was proposed by Bose to Einstein. Is this what you too think? what Bose has to do with this proposal? Vinavu speaks nonsense, and without going through what I have said, you too do the same nonsense. :((

      • ஹிக்சு போசான் என பெயர் வைத்தார் என்றெல்லாமா கட்டுரையில் சொல்லி உள்ளார்கள். நான் படிக்கும் போது அப்படி இருக்கவில்லையே

        • @ mani

          \\ஹிக்சு போசான் என பெயர் வைத்தார் என்றெல்லாமா கட்டுரையில் சொல்லி உள்ளார்கள். நான் படிக்கும் போது அப்படி இருக்கவில்லையே.\\

          மணி, எதையாவது சொன்னா வேறு எதையோ சொல்றீங்களே……….. இந்தக் கட்டுரையில்,

          \\ பதினேழாவதாக ஒன்று இருக்க வேண்டும் என்கிற கருத்தை இந்திய விஞ்ஞான போஸ் முன்வைக்கிறார் – அதை ஐன்ஸ்டீனும் ஒப்புக் கொள்கிறார்.\\

          என்று சொல்லப் பட்டுள்ளது அல்லாவா? அந்த பதினேழாவது கருமாந்திரம் இருக்கிறதல்லாவா, அதை போஸ் ஐந்ச்டீனுக்குச் சொல்லவில்லை. போதுமா?

  15. போஸ் நிறையில் உள்ள வேறுபாட்டை சுட்டிக் காண்பித்தார். ஐன்ஸ்டீனிடம் கடிதம் எழுதினார் என யாரும் கட்டுரையில் சொன்னதாக தெரியவில்லை.

  16. ஜெயதேவ் தாஸ்
    அறிவியலின் வளர்ச்சியின் வரலாற்றை விளக்க கட்டுரை முயன்றுள்ளது. நீங்கள் குறிப்பிடுவதைத் தாண்டியும் சில விபரப் பிழைகளை நானும் கூட சுட்டிக்காட்ட முடியும். என் சிற்ற்றிவுக்கு எட்டிய வரையில் நீங்கள் குறிப்பிடும் தவறுகள் எதுவும் பாரதூரமானது இல்லை எனக் கருதுகிறேன். ஒருவேளை அதுதான் ஆகப் பெரும் தவறு என்று நீங்கள் கருதலாம். அப்படி கருதும் தாங்கள் முதலில் குற்றச்சாட்டை கட்டுரை மீது வைப்பதால் அது ஏன் என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு தங்களிடம் தான் உள்ளது. நிறையை ஆற்றலை இழந்து போசான்கள் பெற்றதை அதற்கு முந்தைய பாராக்கள் எனக்கு உணர்த்துகிறது. ஆனால் உங்களுக்கு உணர்த்தவில்லை என்றால் இன்னும் விளக்கமாக எழுதியிருக்க வேண்டும் என்று கோரலாம். அல்லது சில தகவல்கள் மிஸ்ஸிங் என்று குறிப்பிடலாம். அப்படி குறிப்பிடும் போதும் ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட விசயத்தை விட தாங்கள் குறிப்பிடும் விசயம் ஏன் முக்கியமானது என்பதை குறிப்பிட வேண்டும். அறிவியலின் மாணவர்களுக்கு ஏன் எப்படி என்ற கேள்வி எழும் என்பதால் தான் இதனைக் கூட தங்களிடம் கோருகிறேன்.
    பெரும்பான்மை மக்களுக்கு பத்திரிகைகள் விஞ்ஞானிகளே கடவுளின் துகளை கண்டுபிடித்து விட்டதாக பிரச்சாரம் செய்யும் நாட்களில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குழப்பங்கள் நிறைய மக்களிடம் தூவப்படுகின்றன• அறிவியலின் மொழி கேடுகெட்ட ஈசாப்பின் கதையாக இருக்கிறது. வெகுமக்களது இலக்கியமாக மலர்வதற்கு 2.99 லட்சம் கிமீ மற்றும் 1.6 டிரில்லியன் செல்சியசு கட்டாயம் தடையாகத்தான் இருக்கும் எனக் கருதுகிறேன். இவற்றை விடவும் செறிவான கட்டுரைகள் பிரண்ட்லைனில் மற்றும் சில தமிழ் பத்திரிகைகளில் வந்த்து போல தெரியலாம். அது ஒன்று அறிவியல் பரிச்சயமானவர்களுக்கு அல்லது பொழுதுபோக்கு இலக்கியவாதிகளுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது. இது ஒரு புதிய முயற்சி. தவறுகளை சொல்வதற்கு முன்னால் ஃபைன்மேனின் லெக்சர் சீரியசை ஒருமுறை பார்த்துவிட்டு ஏதாவதொரு இயற்பியல் பேராசிரியருடன் பேசிவிட்டு வாருங்கள். இன்னும் ரெபரன்சு நிறைய தர முடியும். இயற்பியலின் மொழியில் சொன்னால் இட் இஸ் நெக்லிஜிபிள் errors

  17. அறிவியல் தெரிந்தவர்களுக்கு அதை நல்ல தமிழில் எழுதத்தெரியாது. நல்ல தமிழ் தெரிந்தவர்களுக்கு அறிவியல் பற்றி முழுமையான விவரம் தெரியாது. இரண்டும் தெரிந்தவர்களுக்கு அவற்றைப்பற்றி தெரியாதவர்களுக்கு அதை புரியவைக்க வேண்டும் என்ற அக்கறை இருக்காது. இந்நிலையில் யாராவது மெனக்கெட்டு அந்த வேலையை செய்தால் மெத்த படித்த மேதாவிகள் கூக்குரலிட்டு அதையும் கெடுப்பதில் என்ன நியாயம் இருக்கிறது. குறைகள் இருந்தால் இருந்துவிட்டுபோகட்டும். ஒன்றும் தெரியாதிருப்பவர்கள் அரை குறையாகவாவது தெரிந்துகொள்ளட்டும்.மெத்த படித்தவர்கள் ஒதிங்கி நிற்கலாம்.

Leave a Reply to mani பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க