“நதிமூலம், ரிஷிமூலம் மட்டுமல்ல தரகு முதலாளிகளுக்கு வரும் நிதிமூலத்தையும் ஆராயக் கூடாது.” அப்படித்தான் இந்திய அரசும் இந்திய ஊடகங்களும் நினைக்கின்றன.
இதற்கு உதாரணம், சக்சேனா. ஹன்ஸ்ராஜ் சக்சேனா. முன்னாள் சன் பிக்சர்சின் தலைமை செயல் அதிகாரியான இவர், சென்ற ஆண்டு கைது செய்யப்பட்டார். சன் பிக்சர்சுக்கு தமிழ்ப் படங்களை வாங்கிய விதத்தில் ஏகப்பட்ட முறைகேடுகளை செய்ததாகவும், பண விஷயத்தில் தயாரிப்பாளர்களை ஏமாற்றியதாகவும் புகார் வந்ததை அடுத்து இந்த கைது நடவடிக்கை அரங்கேறியது. உடனே தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர், பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர்.
இதெல்லாம் பழைய செய்திகள். அனைவரும் அறிந்த தகவல்கள். இதனை தொடர்ந்து காவலர்கள் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாக நீதி மன்றத்தில் இவர் அழுத காட்சி, உருக்கமான புகைப்படமாக நாளிதழ்களில் வெளியாகின. தொடையில் காயம், முக வீக்கம், நடக்க முடியாமல் தடுமாற்றம் என பீம்சிங் படங்களுக்கு இணையான உணர்ச்சிப்பூர்வமான கட்டம், காட்சி ஊடகங்களை நிரப்பின. இவருடன் கைதானவரும், இவருடன் இணைந்து பணிபுரிந்தவருமான அய்யப்பன், தன் இடுப்பில் வேட்டியை கட்ட முடியாமல் கட்டியிருந்தார். செய்தியாளர்கள் முன்பு வாய் விட்டு கதறி அழுதார்.
தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும், இந்தக் கைது நடவடிக்கை நடந்ததால், ‘அம்மாவின்’ வீரம் பக்கம் பக்கமாக புகழப்பட்டது. இனி தமிழ்ச் சினிமா பிழைக்கும்… மாஃபியாக்களின் ஆதிக்கத்தில் இருந்து தமிழ்ச் சினிமாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்திருக்கிறார்…’ என்றெல்லாம் பிரபலங்கள் பேட்டி கொடுத்தார்கள். கடந்த ஆட்சியில் சன் பிக்சர்ஸ் அடித்த கொட்டங்கள் கவர் ஸ்டோரியாக மின்னின.
சில மாதங்கள் கழித்து சக்சேனா, அய்யப்பன், தம்பிதுரை ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தனர். இவர்கள் மூவரையும் உடனடியாக சன் நெட் ஓர்க் பணி நீக்கம் செய்தது. இதன் மூலம், சன் நெட் ஓர்க் புனிதமான நிறுவனம் போலவும், அதன் பெயரைச் சொல்லி சக்சேனா மட்டுமே அடாவடி செய்ததாகவும் ஒரு சித்திரம் உருவானது.
இதுவரை சொல்லப்பட்டவை அனைத்தும் கடந்த ஆண்டு நிகழ்ந்தவை.
இந்த ஆண்டு இதற்கு நேர் மாறாக சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன. ‘அது வேற வாய்… இது நார வாய்…’ என்ற வடிவேலுவின் நகைச்சுவைதான் நினைவுக்கு வருகிறது!
தன்னுடன் சன் பிக்சர்சில் பணியாற்றியவர்களும், தன்னுடன் சேர்ந்து குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டவர்களும், தன்னுடன் சேர்ந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுமான அய்யப்பன், தம்பிதுரை ஆகியோருடன் இணைந்து இப்போது சக்சேனா, தமிழ்ப் படங்களை வெளியிட்டு வருகிறார். எந்த தயாரிப்பாளர் சங்கம் இவர்கள் கைது செய்யப்பட்டதை பட்டாசு வெடித்து கொண்டாடியதோ, அதே கவுன்சிலை சேர்ந்தவர்கள் இப்போது சக்சேனாவுடன் பட வெளியீடு குறித்து பேசி வருகின்றனர்.
அத்துடன் ‘சன் பிக்சர்ஸ்’ போல ‘சாக்ஸ் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனத்தையும் இவர் தொடங்கியிருக்கிறார். ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை குறித்து உருவான ‘சாருலதா’ படத்தை தமிழகம் முழுக்க வெளியிட்டது ‘சாக்ஸ் பிக்சர்ஸ்’தான்.
இந்தப் படத்தின் ஆடியோ வெளியீடு சத்யம் திரையரங்கில் நடந்தது. அப்போது பேசிய சக்சேனா, சன் டிவி தன்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டதையும், தனக்கு ஏற்ப்பட்ட துன்பங்களிலிருந்து தான் மீண்டடெழுவதற்கு முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார். அந்த முயற்சின் தொடக்கமே ‘சாக்ஸ் பிக்சர்ஸ்’ எனவும் குறிப்பிட்டார். இந்த பேனரில் மேலும் படங்களை அவர் தயாரிக்கவுள்ளதாகவும், அது தவிர வரும் ஜனவரி 15, தைப்பொங்கல் தினத்தில் புதிய தமிழ் தொலைக்காட்சியை ஆரம்பிக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டார். இத் தொலைக்காட்சிச் சேவை சிறுபடத் தயாரிப்பாளர்களுக்கு உதவும் நோக்கினை முதன்மையாகக் கொண்டிருக்கும் என்றும் திருவாய் மலர்ந்தார்.
அதாவது எந்த சிறு தயாரிப்பாளர்களை சாக்ஸ் அழிக்க முயற்சித்தார் என முன்பு குற்றம்சாட்டப்பட்டாரோ, அதே சிறு தயாரிப்பாளர்களைத்தான் இப்போது ஆதரித்து கரை சேர்க்கும் அவதாரமாக மலர்ந்திருக்கிறார்.
இதையே ‘சுண்டாட்டம்’ பட ஆடியோ வெளியீட்டின்போதும் குறிப்பிட்டிருக்கிறார். தன்னால் தமிழகம் முழுக்க 200 திரையரங்குகளில் ஒரு படத்தை வெளியிட முடியும் என்று சொல்லியிருக்கிறார்.
அதாவது அக்யூஸ்டின் கையில்தான் கஜானா சாவி இப்போதும் இருக்கிறது!
இவையனைத்தையும் தூக்கி சாப்பிடும் விதமாக ஒரு செய்தி, தமிழ்த் திரையுலகம் முழுக்க பரவி வருகிறது. ரஜினியை வைத்து படம் தயாரிக்க இவர் முடிவு செய்திருக்கிறாராம். இதற்காக ரஜினியை அணுகி பேசியிருக்கிறாராம். 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும். நாள் ஒன்றுக்கு ரூபாய் 8 கோடி வீதம், ரூபாய் 240 கோடியை சம்பளமாக தருகிறேன் என தூண்டில் வீசியிருப்பதாகவும், யோசித்து சொல்வதாக ரஜினி சொல்லியிருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.
இதை சாக்ஸ், மறுக்கவில்லை. ‘எல்லா தயாரிப்பாளர்களையும் போல் நானும் ரஜினியை வைத்து படம் தயாரிக்க விரும்புகிறேன்…’ என பட்டும்படாமலும் பதில் சொல்லியிருக்கிறார். ஆனால், ரூ.240 கோடி சம்பளமா என்பதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். ஒருவேளை ரஜினி, இவர் தயாரிப்பில் நடித்தாலும் உண்மையான சம்பளம் வெளியில் தெரியாது என்பதே உண்மை.
இது ஒருபுறம் இருக்கட்டும்.
தலைமை செயல் அதிகாரியாக சன் பிக்சர்சில் பணிபுரிந்த இவர், லட்சங்களில் சம்பளம் வாங்கியவர். சன் டிவிக்கு படம் வாங்கிய வகையில் கமிஷன் அடித்தார் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது உண்டு. மற்றபடி சாதாரண குமாஸ்தாவின் மகன். கலாநிதி மாறனின் கல்லூரி கால நண்பர். பரம்பரை சொத்தெல்லாம் கிடையாது.
அப்படிப்பட்டவருக்கு இப்போது எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது? சிறு படங்களை தொடர்ச்சியாக வெளியிட ஆரம்பித்திருப்பவர், தனியாக தொலைக்காட்சி ஒன்றை உருவாக்க இருப்பவர், ரஜினியை வைத்து படம் தயாரிக்க விரும்புபவர், இவர்தான். பகிரங்கமாக இதை சொல்லியிருப்பவரும் இவரேதான். இதற்கெல்லாம் மூலதனம் எங்கிருந்து வருகிறது? யார் கொடுக்கிறார்கள்?
சாதாரணமாக ஒரு மாடு வாங்க வேண்டும் என்றால் கூட என்ன சொத்து இருக்கிறது… எப்படி வட்டியுடன் திருப்புவாய், யார் ஜாமீன் கையெழுத்து போடுவார்கள்… என்றெல்லாம் கடன் கொடுப்பவர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்பார்கள். அப்படியிருக்க கோடிக்கணக்கில் எந்த உத்திரவாதத்துடன் யார் இவருக்கு கடன் கொடுக்கிறார்கள்? யார் இவர் சார்பாக ஜாமீன் கையெழுத்து போடுகிறார்கள்?
சன் டிவியால், தான் ஏமாற்றப்பட்டதாக அழுது புலம்புகிறார். ஆனால், இவர் வெளியிடும் அனைத்துப் படங்களின் தொலைக்காட்சி உரிமங்களையும் சன் டிவியே வாங்கியிருக்கிறது. அவ்வளவு ஏன், ‘சாக்ஸ் பிக்சர்ஸ்’ பெருமையுடன் வழங்கும் என்ற லோகோவுடன் ரிலீசான ‘சாருலதா’ படத்தின் சேட்டிலைட் உரிமை சன் டிவியிடம்தான் இருக்கிறது. அப்பட தொடர்பான புரொமோஷன் நிகழ்ச்சிகளும் சன் டிவியில்தான் அதிகளவில் ஒளிபரப்பானது. தவிர, அய்யப்பனின் உறவினர் வில்லனாக நடித்த ‘தடையறத் தாக்க’ படத்தின் தொலைக்காட்சி உரிமத்தையும் அதே சன் டிவிதான் வாங்கியிருக்கிறது.
காங்கிரசு கட்சியின் தலைவியான சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா இப்படித்தான் ரூபாய் 300 கோடிக்கு அதிபதியாகி இருக்கிறார். என்ன தொழிலை அவர் செய்கிறார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், ரூபாய் 50 லட்சம் மூலதனத்தில் அவர் தொடங்கிய தொழில், இப்போது ரூபாய் 300 கோடி மதிப்புள்ளதாக மாறியிருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய வீடு, மனை, நிலம் விற்பனை நிறுவனமான டி.எல்.எஃப்., வதேராவுக்கு நம்பிக்கையின் பேரில் வட்டியில்லாமல் ரூபாய் 65 கோடியை கடனாக கொடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால், இதுபோல் எல்லா நிறுவனங்களுக்கும் எந்தப் பிணையும் இல்லாமல் டி.எல்.எஃப்., ரூபாய் 65 கோடியை வாரி வழங்குமா?
விடை தெரியாத கேள்வி அல்ல. பதில் சொல்ல விருப்பமில்லாத வினா இது.
வதேராவுக்கு எதன் பேரில் டி.எல்.எஃப்., ‘கடன்’ கொடுத்ததோ, அப்படித்தான் சக்சேனாவுக்கும் ‘கடன்’ கிடைக்கிறது போலும். சோனியாவின் மருமகன் என்ற அந்தஸ்து வதேராவுக்கு இருப்பதால் அவரால் குறுகிய காலத்தில் மிகப்பெரும் தொழிலதிபராக உயர முடிந்திருக்கிறது. அவருக்கு உதவிய டி.எல்.எஃப் போன்ற நிறுவனங்கள் பிரதிபலனாக தமது தொழிலை விரிவுபடுத்தியிருக்கின்றன.
ஆனால் அரசியல்வாதிகளின் இத்தகைய ஊழல்கள் வெளிவருவது போல முதலாளிகளின் ஊழல்கள் வெளிவருவதில்லை. அதுதான் சக்சேனா விசயத்திலும் நடக்கிறது. இவருக்கு ஏது இவ்வளவு பணம் என்ற கேள்வியை எந்த ஊடகமும் எழுப்பவில்லை. மேலும் யாருடைய பணம் ரஜினிக்கு 240 கோடி ரூபாய் வருமானமாக போகிறது என்பதும், அவ்வளவு பெரிய பட்ஜெட் படத்தின் வசூலை எப்படி எடுப்பார்கள், இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் கருப்பு பணமாய் மட்டும் செய்யப்படும் மர்மம் எல்லாம் கண்டுபிடிக்க முடியாதவை.
ஆனால் ரஜினி படத்திற்கு கிடைக்கும் விளம்பர வருவாயை மனதில் கொண்டு ஊடகங்கள் அனைத்தும் இது பற்றி கள்ள மௌனம் சாதிக்கும். அதனால்தான் வதேரா கேள்விக்கு உட்படுத்தப்பட்டது போல சக்சேனா விசாரணைக்குள் வரமாட்டார்.
நதிமூலம், ரிஷிமூலம் மட்டுமல்ல தரகு முதலாளிகளுக்கு வரும் நிதிமூலத்தையும் ஆராய வேண்டும். பகிரங்கமாக அம்பலப்படுத்த வேண்டும். அப்போதுதான் கஜானாவின் சாவி திருடர்களிடமே இருக்கும் விந்தையை மக்கள் அறிந்து கொள்வார்கள்.
படிக்க
DLF is a public co and is supposed to release details,a private person need not.Thats the point.
யார்ரா இது இவளோ அறிவான கருத்த சொல்லிருக்கான்னு பாத்தா..நம்ம அறி குமார் அண்ணே !
Blackmoney is there since a longtime,the problem is income tax.If we have transaction tax instead of income tax,we can solve this problem.
Prices of some things ll go up in the near term but in 5-10 years,things ll subsidize.
இதே ரஜினி நடித்த “சிவாஜி” என்ற படம்போல் மேலும் ஒரு படத்தில் மில்லியனில் கருப்பு பணத்தினை வெளிகொண்டு வருவது போல் நடிப்பார் நம் ஆள் வாரவிடுமுறையில் அந்த படத்தினை பார்த்து விட்டு வருவான்.
ராஜ நாரசிம்ம விவேக்
தஞ்சை.
The scheme of ‘NIL’ Ent. Tax for Tamil films was introduced by Karunanidhi only to facilitate his kins like Maran Brothers, sons of Stalin, Azhagiri and Udayanidhi to convert their No.2 into White. there was a media hype by Sun TV & Kalangnar TV that all their releases are super hits. Note that as soon as Jaya came to power they have drawn their shutters. I think they may again venture into some illegal activity as PC is in Finance in Delhi. Rajni may agree because his two daughters lost substantial money by producing films and also due to the unsatiated Greed for money of Rajni’s wife. JAYARAMAN
பிலிம் காட்டுராஙப்பா!
எக்கசக்கமாக பணம் இருக்கு என காட்டிக்கொள்ளும் ஊழல் பேர்வழி சக்ஸேனா. இது உன்மை
எக்கசக்கமாக வசூல் ஆவதாக புருடா விடும் ஃப்ராடு ரஜினிகாந்த். இதுவும் உன்மை
காலாகாலமாக ஊடகங்கள் ரஜினிக்கு ஜால்ரா அடித்துவருகின்றன. ஜாக்கிசானுக்கு அடுத்தபடியாக சம்பளம் இவருக்குத்தான் என்று ஒரு செய்தி வரும். எங்கே ஜாக்கி சான் படத்துக்கு அடுத்தபடியான வசூல் இவர் படத்துக்கு உண்டா என கேளுங்கள் பதில் வராது.
சாக்ஸ் ஒரு கொள்ளையன். ரஜினி ஒரு காமெடியன். இவர்கள் படம் எடுத்தால் அதை முதல்நாள் முதல்காட்சி பார்ப்பவன் மடையன்
உன் வாழ்க்கை உன் கையில்……..